********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (05 அக்டோபர் 2011)

Tuesday, October 4, 2011



மும்முனைப் போட்டியில் மூச்சுத்திணறும் மதுரை!

பரபரக்கும் மஸ்டர் ரோல் ஊழல்
சென்னைக்கு அடுத்தபடியாகக் கடும் போட்டியில் இருக்கிறது, மதுரை மாநகராட்சி.
தொடர்ந்து மூன்று முறையாக மதுரை மாநகராட்சியை கைப்பற்றிய தி.மு.க-வின் சார்பாகக் களத்தில் நிற்கிறார் முன்னாள் கவுன்சிலர் பாக்யநாதன். 'இப்ப ஜெயிக்கலைன்னா பிறகு எப்ப?’ என்று மூர்க்கத்தனமாக முண்டாசு கட்டுகிறார், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பா. 'எங்க கேப்டன் பிறந்து வளர்ந்த ஊரை நாங்க விட்டுக் குடுப்பமாக்கும்?’ என்று வீறாப்புடன் விறைக்கிறார் தே.மு.தி.க-வின் கவியரசு. இவர்களைத் தவிர, 'மக்​களே... எங்களுக்கும் ஒரு சான்ஸ் குடுக்கலாம்ல...’ என்ற கெஞ்சலோடு ம.தி.மு.க-வின் பாஸ்கர சேதுபதி, காங்கிரஸின் சிலுவை (பரிதாபம்ங்க!), பி.ஜே.பி-யின் டாக்டர் ராஜேந்திரன், புதிய தமிழகத்தின் அன்பரசன், விடுதலைச் சிறுத்தைகளின் பசும்பொன், ஐ.ஜே.கே-யின் ஈஸ்வரி உள்ளிட்டோரும் கைகூப்புகிறார்கள்!
கடந்த காலத்தில் யார் யாரோ செய்து விட்டுப் போயிருக்கும் 'நல்ல’ காரியங்களுக்காக மதுரை மக்களிடம் சொல்லடி படவேண்டிய கட்டாயம் பாக்யநாதனுக்கு. 'சிரிப்பைக்கூட சிக்கன​மாகத்தான் பயன்படுத்துவார்’ என்று சொந்தக் கட்சியினரே கமென்ட் அடிப்பதும், வேட்பாளர் தேர்வில் அதிருப்தியில் இருக்கும் தி.மு.க-வினர் பலர் பட்டும் படாமல் களத்தில் நிற்பதும் இவருக்கு பலவீனம். 'வியூகப் புலி’ என்று வர்ணிக்கப்படும் அழகிரிக்கு, எந்தப் பக்கம் போனாலும் கேட் போடுகிறது ஆளும் கட்சி.
கவுன்சிலர் வேட்பாளர்கள் தேர்வில் உச்சகட்டக் குழப்பம் அ.தி.மு.க-வில்! இதை​எல்லாம் சரி செய்வதெற்கே செல்லப்பா​வுக்கு நேரம் போதவில்லை. ''இவரைத் தலைதூக்க விடலாமா?'' என கோஷ்டித் தலைகள் சில கொம்பு சிலுப்புவதையும் பார்க்க முடிகிறது. கடந்த 2001-ல் ஆளும் கட்சியாக இருந்தும் உள்ளடி வேலைகளால் மதுரை மேயர், துணை மேயர் இரண்டு பதவிகளையும் கோட்டை விட்டது அ.தி.மு.க! ''இம்முறை அப்படி ஏதாவது நடந்தால்..?'' என்று முன்கூட்டியே எச்சரித்திருக்கிறாராம் ஜெயலலிதா. எனவே, செல்லப்பாவின் வெற்றியில்தான் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதய​குமார் உள்ளிட்டவர்களின் கௌரவமும் அடங்கி இருக்கிறது.
அதிகாரத்தில் இருக்கும்போது மதுரைக்கு செய்து கொடுத்த திட்டங்களைச் சொல்லி மக்களை சந்திக்கிறது தி.மு.க. திட்டங்களில் நடந்திருக்கும் ஊழல்களைச் சொல்லி வேட்டு வைக்கிறது அ.தி.மு.க. ''மதுரை மாநகராட்சியில் ஏகத்தும் ஊழல் செய்திருக்கும் தி.மு.க-காரர்கள் துப்புரவுப்பணியாளர்களின் சம்பளத்தையும் விட்டு வைக்கலை. துப்புரவுப் பணிகளுக்காக சுமார் 1,200 பேரை தற்காலிகப் பணியில் சேர்த்ததா கணக்குச் சொல்றாங்க. ஆனால், 800 பேர்கூட பணியில் இல்லை. ஒரே பெயரை இரண்டு இடங்களில் மஸ்டர் ரோலில் எழுதி, பணத்தை எடுத்து இருக்கிறார்கள். வேலை பார்த்தவர்களுக்கு கொடுத்த பணத்திலும் தலைக்கு இவ்வளவு என்று பறித்திருக்கிறார்கள்.
ரிங்க் ரோடு டோல் கேட் வசூல் 2001-ல் தினசரி  2 லட்சமாக இருந்தது. இப்போது  1.5 லட்சமா குறைஞ்சது எப்படின்னு தெரியலை. இந்த ரோட்டை பராமரிப்பதற்கு வருஷத்துக்கு  1.5 கோடியை அழகிரியின் நிழல் பிரமுகர் ஒருவரின் நிறுவனத்துக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், அங்கே எந்த விதமான பராமரிப்பு பணியும் நடக்கவேயில்லை. இப்படி ஏகப்பட்ட ஊழல்கள் எங்ககிட்ட சிக்கியிருக்கு. எல்லாத்தையும் தினம் ஒன்றாக எடுத்து விடுவோம். கல்லாறு குடிநீர் திட்டம், வைகையில் இரு புறமும் பூங்கா அமைக்கிறது உட்பட ஏகப்பட்ட திட்டங்கள் கை​வசம் இருக்கு. மதுரைக்குள் அம்மா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை​
க¬​ளப்பார்த்து​விட்டு, 'அ.தி.மு.க- தான் நமக்கு பாதுகாப்பா இருக் கும்’னு மக்கள் நம்புறாங்க. இதெல்​லாமே எங்களை ஜெயிக்க வைக்கும்!'' என்கிறார் ராஜன் செல்​லப்பா.
பாக்யநாதனோ, ''இப்ப அ.தி.மு.க-காரங்க அசுர பலத்தோட நிக்கிறதா நெனைக்கிறாங்க. மக்கள் சக்தி அதையெல்லாம் மாயை ஆக்கிவிடும். இதற்கு முன் ஆட்சியில் இருந்தப்ப மதுரைக்குள்ளயே வராம இருந்த ஜெயலலிதா, செல்லூர் ரயில்வே மேம்​பாலப் பணிகளை முடக்​கிப் போட்டதை மக்கள் மறந்திருப்பாங்களா? சென்ட்ரல் மார்க்கெட் விரிவாக்கம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், ஜி.ஹெச். விரிவாக்கம், மதுரை உயர் நீதிமன்றக் கிளை என தி.மு.க. அரசின் சாதனைகளை அடுக்கலாமே! இது மாதிரி ஏதாவது ஒரு திட்டத்தை அவங்க நிறைவேத்துனதா சொல்ல முடியுமா? ஆட்சியில் அவங்க பலமா இருக்கலாம். ஆனா, செய்திருக்கும் சாதனைகளால் நாங்க வலிமையா நிற்கிறோம். யார் ஜெயிக்கிறாங்கன்னு பொறுத்திருந்து பாருங்க...'' என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.
ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிராம் இங்கே தனித்து நின்று 37 ஆயிரம் வாக்குகள் வாங்கி இருப்பது ஊடுபயிராக நிற்கும் தே.மு.தி.க. கவியரசுக்கு நல்ல உரம்! அந்த நம்பிக்கையில், ''மதுரையோட இண்டு இடுக்கெல்லாம் கேப்டனுக்குத் தெரியும். 'சின்ன வயசுல நான் பார்த்தது மாதிரியே எந்த முன்னேற்றமும் இல்லாம இருக்குப்பா மதுரை. அதை டெவலப் பண்ற வேலையை உன்னைய வெச்சுத்தான் செய்யப் போறேன்’னு சொல்லித்தான் கேப்டன் என்னைய இங்க நிறுத்தியிருக்கார்...'' என்று கவிபாடுகிறார் கவியரசு!
தொட்டதைத் தொடரத் துடிக்கும் தி.மு.க., எப்போதோ விட்டதைப் பிடிக்கத் துடிக்கும் அ.தி.மு.க., பிள்ளையார் சுழிபோடப் பிரயாசைப்படும் தே.மு.தி.க. - மும்முனை போட்டியில் மூச்சுத் திணறுகிறது கூடல் மாநகரம்!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
*********************************************************************************
ரவுண்ட் வரும் ராமதாஸ் மேயர்கள்!

பா.ம.க. ரிப்போர்ட்!
தேர்தல் பெருவெள்ளம் வரும்போதெல்லாம்... சகோதரர் அல்லது சகோதரியின் தோள் மீது அமர்ந்து பாதுகாப்பாகக் கரையேறுவதுதான் டாக்டர் ராமதாஸின் வழக்கம். ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு திராவிடக் கட்சிகளும் தனித்தே களமிறங்கிவிட... தவித்து நின்றவருக்கு 'நடிகர்’ தலைமையிலான கூட்டணிக்குச் செல்லவும் சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை. விளைவு, ஆங்காங்கே சில கட்சிகளின் நட்புடன் தனியாகத் தேர்தலை சந்திக்கிறார். தேர்தல் களத்தில் பதறி நிற்கும் பா.ம.க. வேட்பாளர்களின் ப்ரொஃபைல் இனி...
 ராஜேந்திரன் - கோவை: பா.ம.க-வின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் ராஜேந்திரன்தான் அங்கே மேயர் வேட்பாளர். ''ஒன்பது வருஷமா கட்சியில இருக்கேன். மருத்துவர் அறிவிக்கிற எல்லாப் போராட்டத்திலேயும் கலந்துக்குவேன். தொடர் விசுவாசியா இருக்கிற எனக்கு அவர் கொடுத்திருக்கிற பெரிய அங்கீகாரம் இது. ஒருவேளை ஜெயிச்சு கோவை மேயராயிட்டேன்னா, மேயருக்கு ஒதுக்குற பங்களாவுல குடியேறமாட்டேன், மேயருக்கான காரை யூஸ் பண்ண மாட்டேன். இப்ப எப்படியிருக்கேனோ... இதே மாதிரியேதான் மேயரான பிறகும் இருப்பேனுங்க!'' என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார் இவர்.
குருசோபனா - தூத்துக்குடி:  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் எம்.ஏ. படித்துவருகிறார் குருசோபனா. இந்த மாணவிதான் பா.ம.க-வின் மேயர் வேட்பாளர். இவரது கணவர் கிறிஸ்டி மாநகர பா.ம.க. செயலாளராக இருக்கிறார். ''கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரா இருக்கேன். நாட்டு நடப்பு தெரியும். தூத்துக்குடி மாநகராட்சிக்கு என்னென்ன செய்யணும்னு தெரியும். படிச்சவங்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுக்கணும். அப்பத்தான் வளர்ச்சி கிடைக்கும்!'' என்கிறார் குருசோபனா. நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இவர். கணவர் கிறிஸ்டியோ மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதனால் இரண்டு சமுதாயங்களின் ஆதரவும் கிடைக்கும் என நம்பு​கிறார்கள்.
அருள் - சேலம்:  கட்சி ஆரம்பித்ததில் இருந்தே கட்சியில் இருக்கிறார் அருள். படிப்படியாக முன்னேறியவர். அன்புமணியின் ஆசி இருப்பதால் நீண்ட காலமாக மாநில இளைஞர் அணிச் செயலாளராக இருக்கிறார். 2001-ல் சேலம் மாநகர மேயருக்குப் போட்டியிட்டுத் தோற்ற அனுபவம் கொண்டவர். சேலம் மாநகராட்சி வன்னியர் பெல்ட் என்பது இவருக்குத் தைரியம் தந்திருக்கிறது.
மற்ற திராவிடக் கட்சிகள் வன்னியர் இல்லாதவர்களுக்கு ஸீட் கொடுத்திருப்பதால், 'திராவிடக் கட்சிகள் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் தன்னை ஆதரிப்பார்கள்’ என்பது அருளின் கணக்கு!
சண்முகப்பிரியா - நெல்லை: நெல்லைக்கான வேட்பாளரை இறுதி செய்ய பா.ம.க. திணறிவிட்டது. செலவை நினைத்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. இதனால், மாவட்டச் செயலாளரான லியோன் தங்கராஜின் மனைவி சண்முகப்பிரியாவை களம் இறக்கி இருக்கிறார்கள். கட்சிக்கும் மக்களுக்கும் துளியும் அறிமுகம் இல்லாதவர். 'ஜான் பாண்டியனின் 'தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துடன்’ கூட்டணி அமைத்து, பா.ம.க. தேர்தலை சந்திப்பது மட்டுமே இவர்களுக்கு லேசான தெம்பு தருகிறது!
வெண்ணிலா மகேந்திரன் - வேலூர்: வேலூர் தொகுதி பா.ம.க. வேட்பாளராக முதலில் அறிவிக்கப்​பட்டவர் லீலாவதி. ஆனால், வேலூர் மாநகராட்சியின் வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் இல்லாத காரணத்தால், இவருக்கு பதிலாக தொரப்பாடியைச் சேர்ந்த வெண்ணிலா மகேந்திரன் வேட்பாளர் ஆனார். தன் பெயரை வேட்பாளராக அறிவித்ததும் அவருக்கு மயக்கம் வராத குறைதான். 'யாருப்பா அந்த வெண்ணிலா?’ என்று மேயர் வேட்பாளரின் முகத்தைப் பார்க்க, கட்சி அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் மாநகர நிர்வாகிகள்.
ரமேஷ் (எ) ராமச்சந்திரன் - மதுரை:  கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வில்லாபுரம் ஆர்.கே.ரமேஷை வேட்பாளராக அறிவித்தது தலைமை. தி.மு.க-வில் வளர்ந்து பா.ம.க-வுக்குள் வந்தவர் இந்த ரமேஷ். மதுரைக்குள் கணிசமாக இருக்கும் பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இவரை டிக் செய்தாராம் ராமதாஸ். ஆனால், போட்டியிட மறுத்தார் ரமேஷ். ஆனாலும் வேறு நபர்கள் கிடைக்காததால் ரமேஷ் தலையிலேயே விடிந்துவிட்டது.
அருள்மொழி - ஈரோடு: பா.ம.க-வின் ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருக்கிறார். தலைமையோடு நெருக்கத்தில் இருப்பதால், வேட்பாளராக இழுத்து விட்டிருக்கிறார்கள். பி.பி. அக்ரஹாரம் பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்திருக்கிறார். இதன் மூலம் அந்த வட்டாரத்தில் பரிச்சயமாகி இருக்கிறாரே தவிர, டோட்டல் மாநகராட்சிக்கும் அறிமுக​மான மனிதரல்ல. ஈரோடு மாவட்டத்தின் பவானி, அந்தியூர் போன்ற தொகுதிகளில்தான் வன்னியர்கள் அதிகம் வசிக்​கிறார்கள். ஆனால், மாநகராட்சி எல்லைக்குள் வன்னியர்​கள் மைனாரிட்டிதான். அருள்மொழியின் முகத்தில் ஒரு கலவரம் தெரியத்தான் செய்கிறது.
வடிவேல் கவுண்டர் - திருப்பூர்: கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் வடிவேல் கவுண்டரை விட்டால், திருப்பூர் வட்டாரத்தில் பா.ம.க-வுக்கு வேறு ஆளில்லை என்பது நிதர்சனம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பரமத்தி வேலூர் தொகுதியில் போட்டியிட்டுத் தனியரசுவிடம் தோற்றவர். அடிக்கடி போராட்டங்களை நடத்துவதால், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரிச்சயமானவர்தான் வடிவேல். ஓரளவு வசதியானவராகவும் இருப்பது, தலைமைக்கு வசதியாகிவிட்டது. ஆனாலும் 'மறுபடியும் முதல்ல இருந்தா?’ என்று செலவை நினைத்து இவர் கலங்குவதாகத் தகவல்!
ஜூ.வி. டீம்
*************************************************************************
நேத்து ஒரு ஆள்.. இன்னைக்கு 29 பேர்... நாளைக்கு..?

கேள்விகளால் தூபம் போடும் விஜயகாந்த்
முதல் ஆளாக, மயிலை மாங்கொல்லையில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்​துக்குப் புறப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாகனம், கடந்த நான்காவது நாளில் செப்டம்பர் 30-ம் தேதி நாகை மாவட்டத்துக்குள் நுழைந்தது. அவரது பிரசாரம், முந்தைய பயணங்களில் இருந்து முற்றிலும் மாறானதாக இருக்கிறது. கடந்த காலத் தேர்தல் களம் தந்த அனுபவம் இந்த முறை அவரைப் பக்குவப்படுத்தி இருக்கிறது. பிரசாரத்தில் முன்புபோல் அதிக​மாகத் தனிநபர் தாக்குதல்கள் இல்லாமல், நச்சென்று விஷயத்துக்கு வருகிறார். தங்களை தனித்துக் களம் இறக்கிவிட்ட அ.தி.மு.க-வைக்கூட இலைமறைவு காய்மறைவாகத்தான் சாடுகிறார்.
மயிலாடுதுறையில்தான் முதல் பாயின்ட். அங்கு போட்டியிடும் அலமேலுவுக்கு ஆதரவாக வாக்குக் கேட்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பகல் முழுக்க வெளுத்து வாங்கிய வெயில், மாலையில் மறைய, அவர் வருவதற்கு அரை மணிக்கு முன்பு இருந்து அடித்துத் துவைத்தது மழை! இருந்தாலும், கடை ஓரங்களில் ஒண்டி அவ்வப்போது நனைந்துகொண்டு நின்றார்கள் தொண்டர்கள்.
மழையின் இரைச்சலைத் தாண்டி மேடையில் பேசிய விஜயகாந்த், ''ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்...'' என்ற அறிமுகத்தோடு வாளை வீச ஆரம்பித்தார். அவரது வீச்சு இன்றைய நாட்டு நடப்பை எடுத்துச் சொன்னது. ''ஒருத்தன் குடும்பத்தோடு வண்டியில் போனால்... வீட்டுக்குப் போய் திரும்பிப் பார்த்தா... அவன் மட்டும்தான் இருக்கான். மத்தவங்க வழியிலயே எங்காச்சும் விழுந்துடறாங்க. அந்த நிலைமையில்தான் இருக்கு ரோடு. ரெண்டு பேர் வண்டியில் போனா, ரோடு இருக்கிற நிலையில் ஒருத்தன் பாக்கெட்டில் இருக்கிற செல்போன் அடுத்தவன் பாக்கெட்டுக்குப் போயிடுது. ரோடுகளைப் பராமரிக்கிறது உள்ளாட்சியில் இருக்கிறவங்களோட வேலை. ஆனா, அவற்றை அவங்க செய்யலை. ஆனா, எங்கக் கட்சிகாரங்க இதை எல்லாம் நிச்சயமா சரியா செய்வாங்க. அவங்​களும் சரி, எங்களோட கூட்டணியில இருக்கிற கம்யூனிஸ்ட் தோழர்களும் சரி... லஞ்சம் வாங்க மாட்டாங்க. அதனால், எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்க. நாங்க எல்லாத்தையும் சரி செய்றோம்...'' என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
கூடவே, ''மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்பதில் நான் தெளிவா இருக்கேன். தெய்வம் நேராக வராது. ஏதோ ஒரு மனித ரூபத்தில் வரும். நாங்க ஏன் தனித்து நிற்கிறோம்? இதைக் கூட்டம் போட்டு சொல்ல வேண்டியதில்லை. நடப்பதை எல்லாம் மக்களே பார்த்துக்கொண்டு இருக்காங்க. ஒரு விஷயத்தை உங்ககிட்ட சொல்​லணும்... திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கு, அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே நடிக்குது...'' என்று அவர் அழுத்திச் சொன்ன அழுத்தத்தைப் புரிந்துகொண்ட கூட்டம் ஆர்ப்பரிக்க... இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்...
''சுதந்திரம் அடைந்து 63 வருஷங்கள் ஆகியும் இன்னும் மக்களுக்கு நல்லவங்க யார்? கெட்டவங்க யார்?னு தெரியலை. இதைத் தெரியாமலே வாக்களிக்கிறாங்க. சென்ற தேர்தலில் நான் மட்டும் சட்டசபைக்குப் போனேன். இப்போ எங்கள் ஆட்கள் 29 பேர்... அடுத்த தேர்தலில் என்ன ஆகும் என்பதை மக்கள்கிட்டயே விட்டுடறேன். அது அவங்க கையிலதான் இருக்கு...'' என்று சொல்லி, தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரியபடி, அடுத்த பாயின்ட்டுக்குக் கிளம்பினார் விஜயகாந்த். அன்று பேசிய நாகையின் நான்கு இடங்களிலும் இந்த விஷயங்களையே அழுத்தமாகப் பதியவைத்தார்.
அவரைப்போலவே வரிந்துகட்ட ஆரம்பித்து​விட்டார்கள் அவரது எம்.எல்.ஏ-க்கள். மணல்மேடு அருகே வரதம்பட்டு என்ற ஊரில் நத்தைத்தோப்பு காலனி மக்கள், ஆற்றைக் கடந்து செல்லத் தாங்களாகவே ஒரு மரப் பாலம் அமைத்து பயன்படுத்துகிறார்கள். பாதுகாப்பு இல்லாத அந்தப் பாலத்தில் இதுவரை ஐந்து பேர் ஆற்றில் விழுந்து இறந்துவிட்டனர். இந்நிலையில், கடந்த 28-ம் தேதி இரவு குணசேகரன் என்பவரும் ஆற்றில் விழுந்து இறந்துபோக... ஆத்திரமான மக்கள் சாலை மறியலில் இறங்கினர். ஆற்றைக் கடக்கத் தங்களுக்கு ஒரு பாலம் அவசியம் வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. இது தெரிந்ததும், அங்கு சென்ற மயிலாடுதுறை தே.மு.தி.க. எம்.எல்.ஏ-வான அருட்செல்வன் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து சாலை மறியலில் இறங்கினார். அரசு அதிகாரிகள், விரைவில் பாலம் கட்டித்தருவதாக உத்தரவாதம் கொடுத்ததை அடுத்தே மறியல் வாபஸ் ஆனது.
ஆகக்கூடி ஏதோ முடிவு எடுத்திருக்கிறார்கள் தே.மு.தி.க-வினர். உள்ளாட்சித் தேர்தல் முடிந்து சட்டசபை ஆரம்பிக்கும்போது அதன் ரகசியம் தெரியும்!
கரு.முத்து
படம்: ந.வசந்தகுமார்
*********************************************************************************
யாருய்யா மேயர் வேட்பாளர்?

கோவை காங்கிரஸ் கலாட்டா
ள்ளாட்சித் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்ததுமே... கோவை மாவட்​டத்தில் காங்கிரஸ் கோஷ்டிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி அமர்ந்து ஆலோசனை செய்தனர். 'அட, என்ன ஆச்சர்யம்!’ எனக் கதர்ச் சட்டைத் தொண்டர்கள் தொடையைக் கிள்ளிக்கொள்ள... அடுத்த நிமிடமே இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள். அதாவது மோதலைத் தொடங்கிவிட்டார்கள்.
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக, தனது ஆதரவாளரான பச்சைமுத்துவை டிக் செய்தார் தங்கபாலு. பச்சைமுத்துவும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். உடனே, சிலுப்பிக்கொண்டு பிரபு கோஷ்டியைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னையனும் மனுத் தாக்கல் செய்யவே, நிலவரம் கலவரமாகிவிட்டது.
பச்சைமுத்துவிடம் பேசிய​போது, ''கோவை மாநகர் மாவட்டத்துக்கான உள்ளாட்​சித் தேர்தல் ஒருங்கிணைப்பாளரா என்னைக் கட்சித் தலைமை நியமித்தது. அதன்படி, அத்தனை கோஷ்டித் தலைவர்களையும் வரவழைச்சு ஒரே இடத்தில் உட்கார வெச்சதே பெரிய சாதனை. இந்த நிலையில, மாநகராட்சிக்கான வேட்பாளரா என்னைத் தேர்ந்தெடுத்தார் தலைவர். 100 வார்டுகளுக்கான கவுன்சிலர் வேட்பாளர்களும் உறுதியாச்சு. அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை வாங்க சென்னைக்குப் போய்ட்டு, கோவைக்கு வந்தவன் நேரா வீட்டுக்குக்கூட போகலை. நள்ளிரவில் சின்னையன் வீட்டுக்குப் போய் ஆசீர்வாதம் வாங்கினேன். அவரும், 'ரொம்ப சந்தோஷம்பா. எனக்கும் வயசாகிடுச்சு. அதனால, அக்டோபர் 2-ம் தேதியில் இருந்து பொது வாழ்க்கையில் ஓய்வெடுக்கப் போறேன். உனக்கு என் வாழ்த்துகள்’னு சொன்னார். உச்சி குளிர்ந்து திரும்பின என் தலையில், அதே மனுஷன் அடுத்த நாள், மனுத் தாக்கல் செய்து, சுத்தியலால் அடிச்சுட்டார். 'என்ன இப்படிப் பண்ணிட்டாரு?’னு யோசிச்சப்பதான், 'இதற்குப் பின்னாடி மாஜி மத்திய அமைச்சர் பிரபு இருப்பது தெரிஞ்சது. விருப்ப மனுவுக்குப் பணம் கட்டுற டைம் முடிஞ்ச பிறகு கடைசியா தன்னோட பெயர்ல ஒரு மனுவைப் போட்டிருக்கார் சின்னையன். தலைவராக இருக்கிற தைரியத்துல இப்படி நடந்திருக்கு. இங்கே நடக்குற கூத்தைப் பார்த்துட்டு தலைவர் தங்கபாலு, 'நீ நகர்ந்துக்கப்பா. இதைவிட நல்லா வாய்ப்புகள் காத்திருக்குது’னு சொல்லிட்டார். நானும் மனுவை வாபஸ் வாங்கிட்டேன். இப்படிக் குழப்படி பண்றதுக்கு பதிலா என்கிட்டே நேரடியா சொல்லியிருந்தா, நான் வேட்பு மனுத் தாக்கல் பண்ணியிருக்கவே மாட்டேன். பொய்யா பேசி, பொய்யா நடக்குறப்பதான் ஒருத்தனோட அழிவு ஆரம்பமாகுது. சின்னையன் இதை உணரணும்...'' என்று சூடாகச் சொன்னார்.
சின்னையனிடம் கேட்டபோது, ''தலைமை யாரை கைகாட்டுதோ அவங்கதான் வேட்பாளர். இப்படி இருக்க... பச்சைமுத்து என் மேலே வருத்தப்படுறது என்ன நியாயம்? அந்த ராத்திரி நேரத்தில் அவர் வந்தப்ப, அவரோட மனசு நோகக் கூடாதுன்னு வாழ்த்துச் சொல்லி அனுப்பினேன். இது தப்பா?'' என்றார்.
பச்சைமுத்து ஆதரவாளர்கள் தவிர, சின்னை​யனுக்கு எதிராக ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டி ஆதரவாளர்களும் முழுமூச்சாகக் களம் இறங்கி இருக்கிறார்​களாம்.  ஆக, மறுபடியும் வடிவேலு காமெடிதான்!
எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்
*********************************************************************************
மதுரை பிட்ஸ்

விழி பிதுங்கும் ஓ.பி.எஸ்.! 
மொத்தக் கட்சியின் உள்ளாட்சி உள்குத்துப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் ஓ.பி.எஸ். தொகுதியிலேயே இப்போது உள்குத்து! அ.தி.மு.க. சார்பில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் பழனிராஜ். இவர் மீது புகார் கணைகள் தோட்டம் வரை செல்லவே... அவருக்கு கல்தா கொடுத்துவிட்டு, நகரச் செயலாளரான பாலமுருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கொதித்துப் போன பழனிராஜ், தனது ஆதரவாளர்களுடன் சென்று சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்துவிட்டார். இவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று ஓ.பி.எஸ். விழிபிதுங்கிய நிலையில் அவருக்கு இன்னொரு அதிர்ச்சி. 'நாங்கதானே உங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சோம். எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதா?’ என்று அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர் சேதுராமனும் சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்துவிட்டார். இரண்டு பக்கம் மண்டையிடியாக புலம்பித் தவிக்கிறார் ஓ.பி.எஸ்.!
'அவர் அம்மா ஆளு’
2002-ம் ஆண்டு ஆண்டிபட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது தேனி கலெக்டராக இருந்தவர் அதுல் ஆனந்த். அந்த நேரத்தில் ஆளும் கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுவதாக அதுல் ஆனந்த் மீது தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் கொடுத்தது. 'கலெக்டர் வேலையைவிட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வேலையை பக்காவாகச் செய்து வருகிறார்’ என்று கருணாநிதியே அவரை குற்றம்சாட்டினார். அவரைத்தான் இப்போது தேனி மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமித்துள்ளது தேர்தல் ஆணையம். ''அப்பவே ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட்ட இவரிடம் என்ன நியாயம் கிடைக்கப் போகிறது?'' என்று தி.மு.க. வட்டாரத்தில் இப்போதே புலம்பல் கேட்க ஆரம்பித்து விட்டது!
 ரகசிய எஸ்.எம்.எஸ்.!
உசிலம்பட்டி ஏரியாவாசிகள் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு ஏலம் விட்டுக் காசு பார்த்ததைத் தொடர்ந்து போலீஸார் பலரைக் கைது செய்தது. கைதுப் படலம் தொடர்ந்தும் வருகிறது. இதனால் உஷாரான உசிலம்பட்டிக்காரர்கள் செல்போன் எஸ்.எம்.எஸ்-களில் சங்கேத பாஷையில் பதவியை ஏலம் விட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்!
  'நல்லா கொடுத்தீங்க பரிசு!’
சிவகங்கை நகராட்சியின் சிட்டிங் சேர்மன் காங்கிரஸின் நாகராஜன். இம்முறை தனித்துப் போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சேர்மன் பதவியைப் பிடிக்க ஏகத்துக்கும் போட்டி. ப.சி. மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரும் வசந்த் டி.வி-யின் நிருபருமான பிரபாகரன் எப்படியும் தனக்கு ஸீட் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார். ஏனெனில், ப.சி-யின் பிறந்த நாளை முன்னிட்டு பாட்டுக் கச்சேரி, ஆர்க்கெஸ்ட்ரா என சிவகங்கையை அமர்க்களப்படுத்தியவர் இவர். அதனால், அப்போதே கட்டாயம் ஏதாவது செய்கிறேன் என்று வாக்கு கொடுத்து இருந்தாராம் கார்த்தி. ஆனால், இப்போது ஸீட் சிட்டிங் சேர்மன் நாகராஜனுக்கே சென்றுவிட்டதில் அப்செட் ஆன பிரபாகரன், '20 வருஷமா உங்களுக்கு விசுவாசமா இருந்ததுக்கு நல்லா கொடுத்தீங்க பரிசு...’ என்று கார்த்தியிடம் நேரடியாக ஆவேசப்பட்டு சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்துவிட்டார்!
 மதுரையில் நீதி கேட்கும் திருநங்கை!
தனது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் அப்செட்டில் இருக்கிறார் மதுரை மேயர் பதவிக்கு சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்த திருநங்கையான பாரதி கண்ணம்மா. வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் அழகுராஜா என்று இருப்பதுதான் தள்ளுபடிக்குக் காரணமாம். ''சமூக நலத் துறையால் வழங்கப்பட்ட திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டையில் எனது பெயர் அழகுராஜா என்கிற பாரதி கண்ணம்மா என்று தெளிவாக இருக்கிறது. மேலும், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு திருநங்கைகள் போட்டியிட விரும்பினால், அவர்களின் பாலினப் பதிவுகளைக் கொண்டு முடிவு செய்வதைத் தவிர்த்து விருப்பத்தின் அடிப்படையில் முடிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதை எல்லாம் எடுத்துச் சொல்லியும் எனது மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள். இதை சும்மா விடப்போவது இல்லை. வழக்குப் போட்டு நியாயம் கேட்பேன்...'' என்று பொங்குகிறார் பாரதி கண்ணம்மா!
 'இந்த ஏரியாவுலேயே பெரிய ஆளு இவர்!’
தி.மு.க-வின் மாநில மகளிரணித் தலைவியான நூர்ஜகான் பேகம்தான் திண்டுக்கல் நகராட்சி தலைவர் வேட்பாளர். இவரை நிறுத்தியதில் உள்ளூர் உடன்பிறப்புகளுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும், அதை வெளிக்காட்ட முடியவில்லை. இதனால், நூர்ஜகானை வெறுப்பேற்ற நினைத்தவர்கள் வலியச் அவரிடம் சென்று, 'அக்கா, வாங்க கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ஒரு ரவுண்டு பார்த்துட்டு வந்துடலாம்’ என்று அழைத்துச் சென்றார்கள். அப்பாவியான நூர்ஜகானை கட்சியின் அல்லுசில்லுகளிடம் எல்லாம் அழைத்துச் சென்று 'இந்த ஏரியாவுல பெரிய ஆளு இவரு...’ அறிமுகப்படுத்தி எல்லோருக்கும் நூர்ஜகானின் செலவிலேயே சால்வை போட வைத்தனர். இப்படியே இரண்டு நாட்களில் 300 சால்வைகள் போணியாகிவிட்டதாம். செலவைக் கண்டு மிரண்டுபோன நூர்ஜகான் இப்போது யாராவது தனக்கு சால்வை போர்த்த வந்தால்கூட டர்ராகி விடுகிறாராம்!
********************************************************************************
டெல்டா கலாட்டா!

பெட்ரோமாக்ஸ் லைட்டுதான் வேணுமா?

சீர்காழி நகராட்சியில் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட, பல மனுக்கள் வந்திருக்க... அவற்றில் தேடிப்பிடித்து காயத்ரி என்பவரின் மனுவை ஓகே செய்தது காங்கிரஸ் தலைமை. ஆனால், கடைசிவரை காங்கிரஸ் வேட்பாளர் மனுத் தாக்கல் செய்ய வரவேயில்லை. காரணம், 'அவங்களுக்கு இங்க ஓட்டே இல்லையாம்’. ஓட்டு இல்லாதவர் ஏன் ஸீட் கேட்டாராம்? தெரியவில்லை. எப்படியும் பெயரைச் சேர்த்துவிடலாம் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார்களாம். ஆனால், முடியவில்லை. இந்த அமளிதுமளியால், மாற்று வேட்பாளரைக்கூட போடவில்லை. இதனால் சீர்காழி நகராட்சிக்கு காங்கிரஸ் வேட்பாளர் யாரும் போட்டியிடவில்லை. தேர்தல் செலவு மிச்சம்!
என் வழி, தனி வழி!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியில் ஸீட் கொடுக்காததால், வேதாரண்யம் தொகுதியின் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. வேதரத்தினம், தனித்துப் போட்டியிட்டு 42,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் சமயத்தில், 'திரும்பவும் கட்சியில் சேர்ந்து விடலாமா?’ என்று தன் ஆதரவாளர்களை அழைத்துக் கருத்துக் கேட்டார். 'நாம் இந்தத் தேர்தலையும் தனித்து நின்றே சமாளிப்போம்’ என்று ஒட்டுமொத்த ஆதரவாளர்களும் சொல்லிவிட்டார்களாம். அவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து... வேதாரண்யத்தைச் சுற்றி இருக்கும் 10 ஊராட்சிகளில் தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்குத் தனது ஆதரவாளர்களை சுயேச்சையாக நிறுத்தி இருக்கிறார். வேதாரண்யம் நகராட்சியின் ஆறு வார்டுகளிலும் அவரது ஆதரவாளர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
 வடை போச்சே...
மயிலாடுதுறை நகராட்சிக்கு தே.மு.தி.க. வேட்பாளராக அலமேலு என்பவர் அறிவிக்கப்பட்டு அவரும் களத்தில் இறங்கிவிட்டார். இந்த நிலையில் தே.மு.தி.க-வோடு திடீர் கூட்டணி கண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்பட்டது. ஆனாலும், கடைசி நாள் வரை அந்தக் கட்சியில் இருந்து போட்டியிட ஆர்வம் காட்டி யாரும் வரவில்லை. அதனால், தாம் முன்மொழிந்து, தலைமை அறிவித்த அலமேலுவையே வேட்பாளராக்கிவிட்டார், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான அருட்செல்வன். ம்... காம்ரேட்களுக்கு கூட்டணியும் பேசத் தெரியலை, கொடுத்ததையும் வாங்கத் தெரியலை!
 சொந்தக் கட்சியே சூனியம் வெச்சிரும்...
தொடர்ந்து 20 வருடங்களாக தஞ்சாவூர் நகராட்சியை தி.மு.க. தக்கவைத்து வருகிறது. ஸ்டாலின் ஆதரவாளர்கள் நிரம்பிய இத்தொகுதியில் தஞ்சாவூர் தி.மு.க. நகர்மன்ற வேட்பாளராக கனகவள்ளி அறிவிக்கப்படவே, தி.மு.க-வினருக்கு பெரும் அதிர்ச்சி. காரணம்? தி.மு.க. மாநில மகளிரணி அமைப்பாளரான கார்ல் மார்க்ஸின் மருமகள்தான் கனகவள்ளி. கார்ல் மார்க்ஸ்,  கனிமொழியின் தீவிர  ஆதரவாளர். சமீபத்தில் ராஜாத்தி அம்மாளோடு திகார் சிறைச்சாலைக்குச் சென்று கனிமொழியின் நலம் விசாரித்து வந்தார். பழனிமாணிக்கம், உபயதுல்லா ஆகியோரைத் தாண்டி கார்ல் மார்க்ஸ் ஸீட் வாங்கியது உள்கட்சிக்குள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 'தி.மு.க-வின் கோட்டை உட்கட்சி பூசலினாலேயே தகர்க்கப்படக்கூடும்’ என முணுமுணுக்கின்றனர் தி.மு.க. உடன்பிறப்புகள்!
 பம்பரமய்யா பம்பரம்!
பெரம்பலூர் வீதிகளில், 'பம்பரமய்யா பம்பரம்... எல்லோருக்கும் வந்தனம்!’ என்ற 'ஈசன்’ திரைப்படப் பாடல் எதிரொலிக்கிறது. ஒரத்தநாடு கோபி கலைக்குழுவில் உள்ள பேராசிரியை கலையரசியை பாடுவதற்கு ஏற்பாடு செய்திருப்பவர் பெரம்பலூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும், ம.தி.மு.க-வின் மாவட்ட துணைச் செயலாளர் துரைராஜ். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரத்தையே துவங்காத நிலையில், 'பம்பரமய்யா பம்பரம்’ என்ற நாட்டுப்புறப் பாடலுக்கு இடையில் பெரம்பலூரை ஒரு ரவுண்ட் அடித்து முடித்து விட்டார் துரைராஜ்.
 அப்படிப்போடு அருவாளை...
வேதாரண்யம் நகராட்சியின் 15-வது வார்டு உறுப்பினராக சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் அகஸ்தியம்பள்ளி கொள்ளைக்காட்டைச் சேர்ந்த மோகன். இவர் போட்டியிடப் போகும் வார்டுக்கு உட்பட்ட ஆறுமுக கட்டளை, பயத்தவரன்காடு, குமரன்காடு, கூத்ததேவன்காடு ஆகிய இடங்களுக்கு போய் 'நான் கவுன்சிலரா போட்டியிடப் போகிறேன். எனக்கு உங்க கையில் இருக்கிற காசுல ஏதாவது கொடுத்து உதவுங்கள்’ என்று கேட்டு அவர்களிடமிருந்து, ஒன்று... இரண்டு... ஐந்து... பத்து என்று வாங்கி  1,783 ரூபாய் சேர்த்தார். பிறகு தன் ஆதரவாளர்களுடன் போய் ஜாம்ஜாமென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். டெபாசிட் கட்டிய ஆயிரம் ரூபாய் போக மீதமிருந்த 783 ரூபாயில், நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துவிட்டாராம்.
 நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு...
தனித்துக் களமிறங்கும் முடிவை எடுத்துவிட்ட தி.மு.க. தலைமை, ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு மட்டும் சில வார்டுகளை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்கள். அதன்படி சீர்காழி நகராட்சியின் 19-வது வார்டுக்குப் போட்டியிடும் மூ.மு.க. வேட்பாளர் குமார் தன் மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப் படுத்திய விதம் தி.மு.க-வி னரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது. நகராட்சி தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடும் இறைஎழில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, நகராட்சி வாசலில் வைத்து அவருக்கும், தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் சீர்காழி நகரசெயலாளர் ஆகியோருக்கும் ஆளுயர மாலை, மலர்க்கிரீடம் என்று அணிவித்து அசத்தி விட்டார். நல்ல கூட்டாளிதான்....
 நேரம் நல்ல நேரமடி...
'செத்தாலும் இப்பத்தான் சாகணும்’ என்று சொல்கிறார்கள் வாக்காளர்கள். இப்போது யார் செத்தாலும் போட்டியிடும் அத்தனை வேட்பாளர்களும் மாலையோடு வரிசைகட்டி வந்துவிடுகிறார்கள். 'எப்படி செத்தாங்க? என்ன ஆச்சு?’ என்று ஆதரவாக விசாரித்து செலவுக்குப் பணமும் கொடுக்கிறார்களாம். அதனால், 'இப்ப செத்தா மோட்சம்தான்டா’ என்று பெருமூச்சு விடுகிறார்கள் பெரிசுகள்.
*********************************************************************************
புதுவை பிட்ஸ்!

விழுப்புரம் ஏலம்  விடும் கொடுமை!
விழுப்புரம் மாவட்டத்தில் புத்திராம் பட்டு, பொன்னங்குப்பம், காடகனூர் ஆகிய ஊர்களில் பஞ்சாயத்துப் பொறுப்புகளை ஏலம் விடும் தகவல் காதுக்கு வர... புத்திராம்பட்டுக்கு முதலில் சென்று, பகுதி மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.
''எங்க ஊர்ல கடந்த 22-ம் தேதி நைட் பன்னெண்டு மணிக்கு திடீர்னு ஊர் கூட்டம் கூட்டினாங்க. அதில் பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ஏலம் விட்டு, 'தே.மு.தி.க. சார்புல ஒருத்தர் போட்டியிடப் போகிறார். அவருக்குத்தான் ஓட்டுப் போடணும்’னாங்க. 500 ஓட்டுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் வாங்கியிருக்காங்க.
அதேமாதிரி கவுன்சிலர் பதவியையும் ஒருவர் ஏலத்தில் எடுத்திருக்காரு. இப்படி ஏலம் எடுத்தவங்களுக்கு மட்டும்தான் நாங்க ஓட்டு போடணும். அதை மீறிட்டா, ஊர் குத்தம்னு சொல்லி எங்கள ஊரை விட்டு ஒதுக்கி வெச்சிருவாங்க!'' என்றனர் அசால்ட்டாக!
இதே நிலைமைதான்,செஞ்சி அருகே பொன்னங்குப்பத்தில் நடந்துள்ளது. காடகனூரிலும் இதே நிலைதான். நம் தேவைகளை நிறைவேற்ற ஒரு நல்லவரைத் தேர்ந்தெடுக்கத்தான் தேர்தல்! அதையும் 'ஏலம்’ போட்டு ஜனநாயகத்தைக் கொலை செய்ய லாமா?
 கடுக்காய் கொடுத்தார்!
திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் மாலை 6 மணி வாக்கில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் செய்யப் போவதாகக் கடந்த 28-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று வேறு மாவட்டத்தில் பிரசாரம் செய்த விஜயகாந்த் திருவண்ணாமலை வந்து சேரவே இரவு 12 மணி ஆனதால், நேராக ஹோட்டலுக்குச் சென்று விட்டார். ''மறுநாள் நிச்சயமாகப் பிரசாரம் செய்வார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், கடுக்காய் கொடுத்துவிட்டுப் பேசாமலேயே கிளம்பிவிட்டார் கேப்டன்!'' என்று புலம்புகின்றனர், தே.தி.மு.க-வினர் சிலர்.
முதல்நாள் வரமுடியாமல் போகும் இடங்களுக்கு மறுநாள் காலையிலாவது சென்றால்தான் தலைவர்களுக்கு நல்லது!
 விஜயகாந்த் உஷார் !
கடந்த 28-ம் தேதி தே.மு.தி.க மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சியின் வேலூர் மேயர் வேட்பாளரான லதாவை ஆதரித்து, விஜயகாந்த் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பேசினார். அப்போது, ''இங்கு மேயர் வேட்பாளராகப் போட்டியிடும் வேட்பாளர் லதாவை ஆதரியுங்கள்...'' என்று சொன்னவர் உடனே, வேட்பாளரைப் பார்த்து, ''அம்மா! லதாதானே உங்க பேரு?'' என சந்தேகமாகக் கேட்க... வேட்பாளரும் சிரித்துக்கொண்டே ''ஆமாம்...'' என்றார். பின்னர் தனது ஃபேவரைட் சிரிப்புடன் விஜயகாந்த் பேச ஆரம்பித்தார்!
 அமைச்சர் பேச்சு... அ.தி.மு.க-வினர் புலம்பல்!
கடந்த 29-ம் தேதி மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் அறிமுகக் கூட்டம், வேலூர் நாதன் மகாலில் நடந்தது. விழாவின் நாயகனாக அமைச்சர் விஜய். ஏற்கெனவே 'கவுன்சிலர் பதவிகளுக்குப் பணம் கேட்கிறார் அமைச்சர்’ என்ற குற்றச்சாட்டு வேலூர் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் நிலவ... அமைச்சரின் பேச்சு மேலும் அவர்களைச் சூடாக்கியது.
''நம்ம கட்சி நிர்வாகிகளுக்கு எல்லாம் சொல்லிக்கிறேன். கவுன்சிலர் ஸீட் கிடைக்காதவங்க எல்லாம் வருத்தப்படக்கூடாது. சில பேரு என் வீட்டு முன்னாடி வந்து தீக்குளிக்கப் போறதா சொல்லிக்கிட்டு இருக்காங்களாம். ஏய்யா, மண்ணெண்ணெய் விக்கிற விலைக்கு நீங்க தீக்குளிச்சுதான் ஆகணுமா?'' என்றவர், சுதாரித்துக்கொண்டு, ''அது அப்படியில்லை! உயிரோட மதிப்பு உங்களுக்குத் தெரியாதா? இனியும் யாராவது தற்கொலை செய்தீங்கன்னா, நல்லா இருக்காது!'' என்று பேசினார்.
கூட்டம் முடிந்து கிளம்பிய ர.ரத்தங்கள், ''ஏய்யா, அமைச்சருக்கு மண்ணெண்ணெய் விலைதான் பெருசா? கட்சிக்காரங்களை மதிக்கவே மாட்டாரா?'' என புலம்பியபடியே கலைந்தனர்.
 கடலூர் தே.மு.தி.க. கடமுடா!
உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க-வுடன் இணைந்து செயல் படுகிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். அந்தந்த மாவட்டத் தலைமையில் வார்டு பங்கீடு சம்பந்தமாகப் பேசி முடிவு செய்து வருகின்றனர்.
கடலூர் நகர மன்றத் தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. ஆனால், ஏற்கெனவே தே.மு.தி.க-வின் வி.சி.சண்முகம் என்பவ ருக்கு அது ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கினார்கள். தனசேகரன்தான் வேட்பாளர். ஆனால், இதை உள்ளூர் தே.மு.தி.க-வினர் ஏற்கவில்லை. 50 பெண்கள் திரண்டு தே.மு.தி.க. அலுவலகத்தின் முன்னால் தீக்குளிக்க முயன்றனர். அதோடு, திடீரென மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தை சிலர் முற்றுகையிட்டு சேர், மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தர்மபாலன் உள்ளிட்ட சொந்தக் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட தர்மபாலன், ''24 வருடமா இந்தப் பகுதியில் கேப்டனுக்கு மன்றம் ஆரம்பித்து செயல்பட்டு வருகிறேன். திருச்சி, மதுரை, சென்னை என்று பல இடங்களுக்குப் பொதுக் கூட்டங்களுக்காக சொந்தச் செலவில் தொண்டர்களை அழைத்துப் போனேன். கடந்த உள்ளாட்சித் தேர்தலில்கூட தே.மு.தி.க. சார்பில் இந்த வார்டில் போட்டியிட்டுத் தோற்றேன். கட்சிக்காக உண்மையாக உழைக்கிறவனுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்றுதான் கேட்டேன். அதைக்கூட மாவட்ட நிர்வாகம் மறுத்து விட்டதே!'' என்றார் நொந்துபோய்.
*********************************************************************************
புற்று நோயாளிகளுக்கு நல்ல செய்தி

வலியை விரட்டும் நவீன அறுவை சிகிச்சை!
புற்று நோய் தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுத்தால், தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி (Intrathecal drug delivery)சிஸ்டம் என்ற கருவிகொண்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் ஃபங்ஷனல் நியூரோசர்ஜன் டாக்டர்
ஆர்.ராமநாராயண் நம்மிடம் பேசினார்.
''வலி மேலாண்மை என்பதை உலக சுகாதார நிறுவனம் நான்கு படிகளாகப் பிரிக்கிறது. முதலாவது வலியைக் கண்டறிந்து அதற்கு (குரோசின் போன்ற) வலி நிவாரண மாத்திரைகளை அளிப்பது. சில உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட்கள் அளிப்பதும் முதல் வகையே. இரண்டாவது, மனோதத்துவ ரீதியான சிகிச்சை மற்றும் ப்ரூஃபின் போன்ற கொஞ்சம் டோஸ் அதிகமான மாத்திரைகளை அளிப்பது.
இதற்கும் சரியாகவில்லை என்றால் மார்ஃபின் அல்லது பென்டனைல் போன்ற அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் கொடுப்பது மூன்றாவது வகை. இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு நல்ல வலி நிவாரணத்தை அளிக்கும். ஆனால், சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மரணம்கூட ஏற்படலாம். இந்தியாவில் இந்த மூன்று முறைகள்தான் கையாளப்பட்டு வருகின்றன.
இப்போது முதன் முறையாக வலி மேலாண்மை எனப்படும் நான்காவது வழியைக் கையாள்கிறோம். நமது உடலில் ஓர் உள்ளார்ந்த வலி கட்டுப்பாட்டு அமைப்பானது, மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றி அமைந்துள்ளது. எந்த ஒரு வலியும் இதன் மூலமாகப் பயணம் செய்து மூளையை அடையும்போதுதான், வலியை உணர்வோம். வலியை சமாளிக்க மார்ஃபின் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரை உடனடியாக வேலை செய்யாது. வயிற்றில் கரைந்து, ரத்தத்தில் கலந்து, நரம்பு மண்டலத்தை அடையச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு மைக்ரோ கிராம் அளவு மார்பின் முதுகுத்தண்டு வடத்தை அடைந்தால் போதும், நோயாளி வலி நிவாரணத்தை உணர்வார். ஆனால், 200 மைக்ரோ கிராம் மருந்து எடுத்தால்தான், அதில் 1 மைக்ரோகிராம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள திரவத்தைச் சென்றடையும். ஆனால், ஒருவரால் அதிகபட்சமாக 40 மைக்ரோ கிராம் மார்ஃபின்தான் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கே பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.
இப்போது மருந்தை நேரடியாக முதுகுத் தண்டுவடத் திரவத்தில் சேர்ப்பதால், அதிகப்படியான மார்ஃபின் எடுப்பது தேவை இல்லாமல் போய்விடுகிறது. இந்தச் செயல் அத்தனை எளிதானது அல்ல. முதுகுத் தண்டுவடத்துக்குள் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. அதனால்தான், சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, இடுப்புப் பகுதி மரத்துப்போவதற்காக கர்ப்பிணிகளுக்கு முதுகை வளைத்து ஊசி குத்துவார்கள். முதுகுத் தண்டு வடத்தை அடைந்து மருந்தை செலுத்தினாலும், அதன் பலன் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் முதுகை வளைத்து மருந்து செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, இதயத்துக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்துவது போன்று நோயாளியின் வயிற்றின் தோலுக்கு அடியில் ஒரு சிறிய கருவியைப் பொருத்துவோம். இதில் திரவ நிலையில் மார்ஃபின் இருக்கும். இந்த கருவியின் முனை முதுகுத் தண்டுவடத்தில் இணைத்து அறுவைசிகிச்சை செய்யப்படும். இந்த கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியே எதுவும் தெரியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், நோயாளிக்கு வலி உணர்வே இருக்காது. இந்தக் கருவியில் 40 மி.லி. மருந்து நிரப்பப்படும். இதுவே சுமார் மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும். மருந்து காலியானதும் அந்தக் கருவியை வெளியே எடுக்காமலே, மீண்டும் நிரப்பிக்கொள்ள முடியும். மேலும் தேவைக்கேற்ப டோஸ் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
எல்லா விதப் புற்று நோயாளிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், வலியை உணரவில்லை என்றால், அவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்வார்கள் என்று பரிந்துரைக் கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இப்போது இதனைப் பொருத்துகிறோம். வெளிநாடுகளில் புற்றுநோயாளிகளைக் காட்டிலும் முதுகு வலிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கின்றனர். இந்தியாவில் இப்போதுதான் இந்தக் கருவி இறக்குமதி ஆகியுள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், எல்லா நோயாளிகளும் இந்த சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு அரசு வரிவிலக்கு அளித்தால், கொடுமையான வலியால் அவதிப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள்...'' என்று கேட்டுக் கொண்டார்.
அரசு மனம் வைக்கட்டும்!
பா.பிரவீன்குமார்
************************************************************************
மிஸ்டர் கழுகு: மின்வெட்டு 'அணு' மர்மம்?

ழுகார் நம் முன்னால் ஆஜரான நேரம்... முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை ஒன்று நமது மெயிலில் வந்து விழுந்தது!
''மின்வெட்டு தொடர்பான அறிக்கையோ..?'' என்று கேட்டார் கழுகார். ''அதே!'' என்றோம்.
''விடாது கருப்பு கதைதான்! தி.மு.க. ஆட்சிக்கு எதிராக எந்த விஷயம் அதிகமான சலனங்களை ஏற்படுத்தியதோ... அதுவே இந்த ஆட்சிக்கும் தலைவலியாக மாறிக்கொண்டு இருக்கிறது. நகரம், கிராமம் என எல்லாப் பகுதிகளிலும் மின்தடை போட்டுத் தாக்குகிறது. இதை முதல்வர் கவனத்துக்கு மிகத் தாமதமாகவே அதிகாரிகள் கொண்டுசென்றனர். 'ஏன் இதை முன்கூட்டி எனக்குச் சொல்லவில்லை?’ என்று முதல்வர் கோபப்பட்டாராம். அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் அழைக்கப்பட்டு முதல்வரின் அவசர ஆலோசனையில் இருந்துள்ளார்!''
''என்ன சொன்னார்களாம் அதிகாரிகள்?''
''அரசாங்கம் சொல்லும் காரணத்தைப் பார்த்தீர், அல்லவா? தமிழ் நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தின் குறிப்பிட்ட அளவு ஆந்திர மாநிலம் ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் இருந்து வருகிறது. அதற்குத் தேவையான நிலக்கரி சிங்கரேனி சுரங்கத்தில் இருந்து வருகிறது. ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால், அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி வரவில்லை. இதனால் மின்சாரத் தயாரிப்பும் குறைகிறது என்பது அதிகாரிகள் சொன்ன காரணம். ஒரிஸ்ஸாவில் இருந்தும் நமக்கு மின்சாரம் வருகிறது. அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கு இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் குறைந்ததாகவும் சொல்கிறார்கள். சுமார் 1,026 மெகாவாட் மின்சார வரத்து குறைவதாக அதிகாரிகள் சொன்னார்கள். 'உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் மின்வெட்டு இருக்கக் கூடாது’ என்று கறாராகச் சொல்லி இருக்கிறாராம் முதல்வர்!''
''சில அதிகாரிகள் வேண்டும் என்றே இந்த மின்வெட்டை உருவாக்கியதாக ஒரு திக் தகவல் காதில் விழுந்ததே?''
''இந்த சந்தேகக் கேள்வி பலராலும் பரப்பி வைக்கப் படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். முதல்வரும் அப்போராட்டத்தை ஆதரித்து மத்திய அரசுக்கு தனது எதிர்ப்புக் கருத்தை
பதிவு செய்தார். இதில் மேல்மட்ட அதிகாரிகள் சிலருக்கு உடன்பாடு இல்லையாம். 'பார்த்தீர்களா! நாடு முழுவதும் மின்வெட்டு வந்துவிட்டது. இதற்காகத்தான் கூடங்குளம் அணுமின் நிலையம் வர வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். அது வந்தால்தான் தமிழகத்தின் மின்தேவை பூர்த்தியாகும்!’ என்று அவர்கள் மறைமுகப் பிரசாரத்தில் இறங்கி உள்ளார்களாம். அவர்களின் கைங்கர்யம் இதில் இருக்கலாம் என்ற அடிப்படையில்தான் திக் தகவல் பரவியிருக்கிறது. எதுவாக இருந்தாலும் ஆட்சிக்குக் கெட்ட பெயர்தான்.''
''ம்...''
''மின் துறை அதிகாரிகளை அழைத்துப் பேசியது மாதிரியே இன்னொரு முக்கியத் துறையின் அதிகாரிகளையும் முதல்வர் சந்தித்தார். சந்தித்துப் பேசினார் என்பதைவிட... பாய்ந்தார் என்பதுதான் சரி! பல ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர் விவகாரம் அது. தமிழகம் முழுவதும் பரவலாகச் செய்ய வேண்டிய பணி. இந்தப் பணிகளுக்கான டெண்டர் ஒன்று இரண்டு முறை அல்ல... ஐந்து முறைக்கு மேல் விட்டுவிட்டார்கள். ஆனால், ஆளைத் தேர்ந்தெடுக்கவில்லை. எல்லாமே 'மேல்படி’ விவகாரம்தான். 'அவருக்கு இவ்வளவு... இவருக்கு இவ்வளவு... மூன்றாமவருக்கு அவ்வளவு...’ என்று பேசிப் பேசியே டெண்டர் போட்டவர்கள் அனைவரையும் தெறித்து ஓட வைத்துவிட்டார்களாம். இது எப்படியோ முதல்வர் கவனத்துக்குப் போனது. உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து ஒரு ரவுண்ட் டோஸ் விட்டார். அடுத்து, அந்தத் துறையின் மந்திரியைத் தேடி இருக்கிறார்கள். அவசர நேரத்தில் ஆளைக் காணோம். 'அடுத்த ரெண்டு நாளில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். யார் இந்த டீலிங்கை முடிவுசெய்தது என்ற தகவல் உடனடியாக வந்தாக வேண்டும்’ என்று முதல்வர் கறார் காட்டினார். தேர்தல் முடிந்ததும் அந்த மந்திரிக்கு சிக்கல் வரலாம். அவர் பாவம், யாரை காட்டிக் கொடுப்பார்? அதோடு...''
''அதையும் சொல்லிவிடும்!''
''தனக்கு முறையாகத் தகவல்கள் வந்து சேரவில்லை என்றும் முதல்வர் வருத்தப்பட்டுள்ளார். நிழல் மனிதர்களின் ஆதிக்கம் தலையெடுப்பது குறித்து உளவுத் துறை தன்னை சரியாக அலர்ட் செய்ய வில்லை என்று புழுங்கிவிட்டாராம். உளவுத் துறை ஏ.டி.ஜி.பி-யான ராஜேந்திரன் மாற்றப்பட்டதற்கு இப்போது இந்தக் காரணத்தையும் சொல்கிறார்கள். அதோடு, 'பொதுமக்கள் கருத்து எதுவானாலும், தயங்காமல் நேரடியாக அதை என்னிடம் கொண்டுவாருங்கள்’ என்று சொல்லி இருக்கிறாராம் புதுசாக உளவுத் துறைக்கு வந்துள்ள டி.ஐ.ஜி-யான பொன்மாணிக்கவேலிடம்...'' என்று சொல்லிவிட்டு, தி.மு.க. பக்கம் வந்தார் கழுகார்!
''முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் வரிசையாகப் பாயப் போகின்றன என்று முன்பே சொன்னேன். நீரும் 'ரெய்டு வாரம்’ என்று போட்டிருந்தீர். அதை அடுத்து பொன்முடி, தா.மோ.அன்பரசன் வீடுகளில் ரெய்டுகள் நடந்தன. மொத்தம் 17 முன்னாள் அமைச்சர்கள் மீது இந்த வழக்குகள் பாயப் போகின்றன. 'அக்டோபர் 20-ம் தேதி, அம்மா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்னால் இந்த ரெய்டுகள் நடக்குமாம். அதற்குள் ஸ்டாலினையும் குறிவைத்து ஏக இக்கட்டில் ஆழ்த்தும் போலீஸ்!’ என்று கோட்டையில் பேச்சு. திருச்சி மேற்கு தி.மு.க. வேட்பாளரும், கடலூர் சிறையில் இருப்பவருமான கே.என்.நேரு மீது இன்னொரு வழக்கும் தயாராகி வருகிறது.''
''அது என்ன?''
''கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் என பல்லாயிரம் பேரை நியமித்தார்கள். அதை மையமாக வைத்துத்தான் இந்த வழக்கு இருக்குமாம். இப்படியே போனால், நேரு இப்போதைக்கு வெளியில் வர முடியாது. அது இருக்கட்டும்... வெளியே வந்திருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் வருத்தத்தைச் சொல்லவா..?''
''இதற்கெல்லாமா கேட்டுக் கொண்டிருப்பது?''
''ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். ஆனாலும், 30-ம் தேதி தி.மு.க. முப்பெரும் விழா என்றதும் அண்ணா அறிவாலயத்தில் முதல் வரிசையில் ஆஜரானார். அக்கூட்டத்தில் பேசிய கருணாநிதியின் பேச்சைக் கேட்டு அதிகமாக வருத்தம் அடைந்தாராம் வீரபாண்டியார். ஜெயலலிதாவை விமர்சித்துக்கொண்டே வந்த கருணாநிதி, பொன்முடியின் கைதை மட்டுமே விலாவாரியாகக் கண்டித்துப் பேசினாராம். 'தம்பி பொன்முடி, தம்பி பொன்முடி...’ என்றார் உருக்கமாக. 'பொன்முடி மட்டும்தான் கைதானாரா? நாங்கள் சிக்கலை எதிர்கொள்ளவில்லையா? எங்களை எல்லாம் தலைவருக்கு மறந்தே போச்சா?’ என்று கர்ஜித் தாராம் வீரபாண்டியார்.''
''தலைவரிடமா... தன் ஆதர வாளர்களிடமா?''
''கருணாநிதியிடம் சொன்ன தாகத் தகவல் இல்லை. தன்னை சந்திக்க வந்தவர்களிடம்தான் வருத்தப்பட்டுப் புலம்பி இருக்கிறார்! கூடவே, அழகிரியின் வருத்ததையும் கேளும்! அவர் முப்பெரும் விழாவுக்கு சென்னை வரவில்லை. மதுரையில் உட்கார்ந்து ஏதோ படம் பார்த்துக்கொண்டு இருந்ததாகச் சொல்கிறார்கள். 'முறைப்படி எனக்கு அழைப்பு வரவில்லை’ என்று சொல்லிவிட்டாராம் அழகிரி. ஸ்டாலின் வராததற்குக் காரணம் வைரல் ஃபீவர் என்கிறார்கள். மூன்று நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் தங்கிவிட்டு ரிலீஸ் ஆகி இருக்கிறார். 'உள்ளாட்சிப் பிரசாரத்துக்கு உன்னைத்தான் நம்பி இருக்கேன். நீ உடம்பை நல்லா பார்த்துக்கோ’ என்று பதறிப் போனாராம் கருணாநிதி!''
''கருணாநிதி டெல்லி செல்வதாகச் சொல்கிறார்களே?''
''எப்போது வேண்டுமானாலும் அவர் கிளம்பலாம்! கனிமொழியை அவர் டெல்லி சென்று பார்த்து 100 நாட்களுக்கு மேல் ஆகப் போகின்றன. இப்ப வந்திடுவார்... உடனே வந்திடு வார்... என்று சிலர் தப்பான 'ஹோப்' கொடுத்ததால், கருணாநிதியின் பயணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. டெல்லி போனால், பிரதமர் மற்றும் சோனியாவைப் பார்த்தாலும் சிக்கல்... பார்க்காவிட்டாலும் பல பேச்சுகள் வரும். அதனால்தான் கருணாநிதி தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தள்ளி வைத்திருந்தார். ராஜாத்தி அம்மாளோ, மகள் பற்றிய கவலையில் தொடர்ந்து டெல்லியிலே தங்கி விட்டார். அவர் கருணாநிதியிடம் சமீப காலமாகச் சரியாகப் பேசக்கூட இல்லை என்கிறார்கள். அந்தக் கோபத்தை நீடிக்க விடக்கூடாது என்று, டெல்லி செல்ல கருணாநிதி திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். கனிமொழியின் பெயில் மனு அக்டோபர் 17-ம் தேதிதான் விசாரணைக்கு வரப் போகிறது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த மாதம் 2ஜி விவகாரம் அசுர வேகம் எடுத்து, சிலபல தடாலடிகள் அரங்கேறிவிடும் போல...'' என்ற கழுகார்,
''காங்கிரஸின் நிலைமை டெல்லியில் மிகப் பரிதாபம். 'தற்கொலைப் பாதையை நோக்கிப் போகிறது அரசு. சீக்கிரமே தேர்தல் வரும்' என்று பி.ஜே.பி. தலைவர்கள் சொல்ல ஆரம்பித்திருப்பது, வழக்கமான பூச்சாண்டி அரசியலாகத் தோன்றவில்லை!'' என்றபடியே கழுகார் விட்டார் ஜூட்!
 
சிதம்பர ரகசிய தேக்கடி விசிட்!
டெல்லியில் 'பிரணாப் புயல்’ வீசி அடங்கிய(?) பிறகு தேக்கடிக்கு குடும்பத்தோடு காஷ§வல் டிரஸ்ஸில் ஓய்வுக்கு வந்தார் ப.சிதம்பரம்!
'சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது 2ஜி விவகாரத்தில் காட்டப்பட்ட மந்தநிலையே இவ்வளவு ஊழலுக்கும் காரணம்’ என பிரணாப் அமைச்சகம் அனுப்பிய கடிதம், ப.சி-யை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டதாம். சோனியாவின் அவசரத் தலையீட்டால் உள்கட்சி எதிரிகள் அடங்குவது போல் தெரிந்தாலும், வேறு திசையிலிருந்து குடைச்சலைக் கூட்டவே செய்வார்கள் என்று நினைக்கிறாராம் சிதம்பரம்.
டெல்லியில் இருந்து மனைவி நளினியுடன் 1-ம் தேதி காலை சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார் ப.சி. அங்கு தயாராக இருந்த மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி, பேத்தி ஆகியோருடன் காலை 8.30 விமானம் மூலம் மதுரையை அடைந்தார். இவரது வருகை மதுரை, தேனி போலீஸாருக்குத் தாமதமாகவே தெரிவிக்கப்பட்டது. அவசரகதியாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். மதியம் 12.30 மணிக்கு குமுளியை அடைந்த சிதம்பரத்தின் முகம் வழக்கமான கலகலப்பைத் தொலைத்திருந்தது. அதிகாரிகள் வரவேற்பை இறுக்கத்தோடு ஏற்றுக் கொண்டவர் தேக்கடி நீர்த் தேக்கத்தின் நடுவில் உள்ள கேரளா சுற்றுலாத் துறைக்கு சொந்தமான ஆரணி நிவாஸ் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் குடும்பத்துடன் தேக்கடியில் படகு சவாரி சென்றார். பலத்த பாதுகாப்புடன் குமுளியில் உள்ள தனியார் ஸ்பைசஸ் பேலஸ் ஹோட்டலில் இரவு தங்கியது சிதம்பரம் குடும்பம்.
அமைச்சரைப் பேட்டி காணக் காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு நல்ல முகம் காட்டவில்லை போலீஸ்! மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தரப்பில், ''தனது ராஜினாமா கடிதத்தைக் கட்சித் தலைமையிடம் சிதம்பரம் கொடுத்திருக்கிறார். அதை ஏற்காத சோனியா, 'இந்த நேரத்தில் ராஜினாமா என்றால் 2ஜி ஊழலில் காங்கிரஸுக்கும் பங்கு இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் இன்னும் உரக்கக் கத்தும்’ என்றார். இருந்தும் மனவலி தீராமல்தான் குடும்பத்தோடு சில விஷயங்களைப் பேசி முடிக்க சிதம்பரம் சுற்றுலா கிளம்பினார்...'' என்று கூறப்படுகிறது.
*********************************************************************************
கழுகார் பதில்கள்

ஆ.முருகநாதன், சேலம்.
 அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவன் நான். ஆனால், இதைப்பற்றி பேசினாலே என் நண்பர்கள் கிண்டல் செய்கிறார்களே?
உயிரற்ற மீன்கள்தான் அருவி பாயும் திசையில் செல்லும். நீங்கள் அறிவுள்ள மீன் அதுபற்றிக் கவலைப்படாதீர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர் என்பதால், உங்களுக்கு தேல்ஸ் பற்றித் தெரிந்திருக்கும்! சாக்ரடீஸுக்கு முன்பு கிரேக்கத்தில் வாழ்ந்த வானியல் அறிஞன். ஒரு நாள் அவர் சிறு கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். ஒரு பெண், அவரைத் தூக்கிவிட்டுக் காப்பாற்றினாள். 'உங்கள் காலுக்குக் கீழே இருக்கும் சிறு கிணறுகூட உங்களது கண்ணுக்குத் தெரியவில்லை. எட்டாத உயரத்தில் இருக்கும் வானத்தை எப்படி ஆராய்ச்சி செய்வீர்கள்?’ என்று அவள் கேலி செய்தாள். ஆனால், அதைப்பற்றி தேல்ஸ் கவலைப்படவில்லை. தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். விண்மீன்கள், சூரியகிரகணம், திசைகள் பற்றி அதற்குப் பிறகுதான் கண்டுபிடித்துச் சொன்னார் தேல்ஸ். சூரியனின் கோள அளவைச் சொன்னவரும் அவர்தான். ஒரு ஆண்டுக்கு 365 நாள் என்று வரையறுத்ததும் அவரே. எனவே கிண்டலை உரமாக எடுத்துக்கொள்ளுங்கள்!
கி.சுதா, ப.வேலூர்.
மனசாட்சி உள்ள அரசியலின் நல் இலக்கணம் என்ன?
எவரையும் வஞ்சிக்காமல், எவர் மீதும் பொறாமைப்​படாமல் இருப்பது!
 இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.
  ராஜீவ் காந்தி செய்த தவறுகள் என்ன?
போபர்ஸ் ஆயுத பேர ஊழலில் அவர் மீது விழுந்த கறை இன்று வரை துடைக்கப்படவில்லை. இத்தாலிய தரகர் குவாத்ரோச்சியைக் காப்பாற்ற சி.பி.ஐ. இதுவரை துடிப்பது அவருக்கு களங்கம் கற்பிப்பதாக இருக்கிறது!
பெரும்பான்மை ஈழத் தமிழர்க்கு ஒப்புதல் இல்லாத ஒப்பந்தம் ஒன்றை ஜெயவர்த்தனாவுடன் போட்டார் ராஜீவ். அந்தக் குறைபாடு உடைய அறிக்கையைக்கூட அமல்படுத்த இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்தவில்லை. இந்த விஷயம் குறித்து இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய ராணுவத் தளபதிகளே நிறைய எழுதி உள்ளார்கள். முதல் விஷயம், அந்தக் காலத்து 'இந்து’ பத்திரிகையில் ஆதாரபூர்வமாக வெளிவந்தன.
 பி.ராமையா, பல்லடம்.
நம் மக்களிடம் விழிப்பு உணர்வு எவ்வாறு உள்ளது?
இலவச கலர் டி.வி-யை நல்ல விலைக்கு விற்றது மாதிரி... 'கிரைண்டர் கொடுத்தால் எவ்வளவுக்கு எடுப்பீர்கள்?’ என்று இப்போதே சிலர் விசாரிக்கும் அளவுக்கு விழிப்பு உணர்வு வளர்ந்துள்ளது!
 எஸ்.பவதாரிணி, ஆலத்தம்பாடி.
அடுத்த விக்கெட் அஞ்சாநெஞ்சனா? தளபதியா?
இடையில் இன்னும் பல விக்கெட்டுகள் பாக்கி உள்ளன!
 கோம்பை. எஸ்.ரவீந்திரன், சேலம்-5.
  வீட்டுவசதி வாரிய இடங்களை முதலமைச்சர் கொடுப்பது அவருக்கு உள்ள சிறப்பு உரிமை என்கிறாரே கருணாநிதி?
சிறப்பு உரிமை இருக்கலாம். ஏற்கெனவே வீட்டுவசதி வாரியத்தில் மனை வாங்கியவர்க்கு மறுபடியும் கொடுப்பது, ஏற்கெனவே சொந்த வீடுகள் இருப்பவர்களுக்குக் கொடுப்பதும் விதியை மீறிய செயல். முதலமைச்சரே அதைச் செய்யக் கூடாது. 'சமூக சேவகர்’ என்ற கோட்டா உண்மையில் சேவை செய்பவர்களுக்குத்தான். யாருக்கெல்லாம் வீடு, மனை கொடுக்க வேண்டுமோ அவர்கள் அனைவரையும் 'சமூக சேவகர்’ என்று சொல்லித் தாரை வார்த்திருக்கிறார்கள். இது தவறானது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியிலும் இவை நடந்துள்ளன. கடந்த தி.மு.க. ஆட்சியில் அதிகம் நடந்துள்ளன. இதில்தான் அவர்களுக்குள் போட்டியே!
 தேவிகா ஜெயக்குமார், ஆனைமலை.
'அதிகாரம் மிக்கவர்களை குற்றவாளி ஆக்க முடியாது’ என்கிறாரே முன்னாள் நிதி அமைச்சர் ஜஸ்வந்த்சிங்?
ஸ்பெக்ட்ரம் முதல் பெங்களூரூ வரை அதைத்தானே பார்க்கிறோம்!
 கி.இளங்கோ, சீலநாயக்கன்பட்டி.
  தூக்கிலிட நாள் குறிக்கப்பட்ட பிறகு எதற்காக தனிமைச் சிறை? 40, 50 காவலர்கள் பாதுகாவல் ஏன்? வாழும் சில நாட்கள் மற்றவர்களிடம் பேசுவதற்கு அனுமதி வழங்காத கொடூரச் சிறைவிதிகள் அவமானம் இல்லையா?
எப்போதோ வகுக்கப்பட்டவை இந்த விதிகள். உடலில் சிறு காயம் இருந்தால், அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் தூக்கிலிட மாட்டார்கள். எனவே, அத்தகைய காயத்தை மற்ற கைதிகள் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் தனிமையில் வைக்கிறார்கள். தூக்கில் இடுவதே கொடூரம். அதில் விதிமுறைகள் மட்டும் எப்படி சரியானதாக இருக்கும்?
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
  விசாரணை கமிஷன் அறிக்கைகள் என்னவாகின்றன?
சட்டமன்ற, நாடாளுமன்ற நூலகங்களில் தூங்குகின்றன. 'குறிப்பிட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்கிறது’ என்று ஒரு ஃபைல் எழுதி கையெழுத்துப் போடுவதோடு கடமை முடிந்துவிடும். கொள்கை அளவில் ஏற்கிறேன் என்றாலே, 'செயல்படுத்தும் நிலைமையில் இல்லை’ என்று அர்த்தம். எல்லா விசாரணை கமிஷன்களின் கதையும் அதுதான். அதனால்தான் எந்தப் பிரச்னையையும் அமுக்க... 'கல்லைப் போடு இல்லேன்னா கமிஷனைப் போடு’ என்கிறார்கள்!
 சி.பி.கணேசன், பேராவூரணி.
தமிழக காவல் துறையின் சமீபத்திய செயல்பாடு சிறப்பா? மிடுக்கா?
இரண்டாகவும் இல்லை. திருட்டு குறைந்திருந்தால் சிறப்பாக இருப்பதாகச் சொல்லலாம். குற்றங்கள் குறைந்திருந்தால் மிடுக்கானவர்கள் என்று பாராட்டலாம். எல்லா இடங்களிலும் 'லத்தி’ மட்டும் சுழல்வதால் 'துடுக்கு’ என்று மட்டும் சொல்லலாம். அதுவும் அப்பாவிப் போராட்டக்காரர்கள் மீது மட்டுமே அவை பாய்கின்றன!
*********************************************************************************
கோஷ்டிப் பூசலில் குழம்பிய ஜன்பத் இல்லம்... ரேஸ்கோர்ஸ் வீடு!

டெல்லி காட்சிகள்!
பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சோனியா காந்தி ஆகிய நால்வருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம், இப்போது நாட்டுக்கே தெரிந்துவிட்டது. முதல் மூவருக்குள் யார் நண்பன்... யார் எதிரி என்று தெரியாத அளவுக்கு வெட்டுக்குத்துகள் கமுக்கமாகவே நடந்துவந்தன. அது, இப்போது மீடியாக்களுக்கு முன்பு வெளிப்படையாகவே நடந்தது. 'எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை!’ என்று பிரணாப், சிதம்பரம் இருவரும் சேர்ந்தே சொன்னாலும் 'நிறையப் பிரச்னைகள் இருக்கின்றன’ என்பதை அவர்கள் முகங்களே காட்டிக் கொடுத்தன. இத்தகைய அவமானம் இதுவரை எந்த ஆட்சிக்குமே நடந்ததில்லை!
ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் பதற்றத்துடன் டெல்லி திரும்புகிறார். உடல் நலமின்றிப் படுத்திருந்த சோனியா காந்தியை முதலில் ப.சிதம்பரம் சென்று சந்திக்கிறார். அடுத்து பிரணாப் முகர்ஜி போய்ப் பார்க்கிறார். பின்னர் கொல்கத்தா சென்ற பிரணாப் அவசரமாக டெல்லி திரும்பி மீண்டும் சோனியாவை சந்திக்கிறார். அப்போது நான்கு பக்கக் கடிதத்தை சோனியாவிடம் கொடுக்கிறார். 'நியூயார்க்கில் பிரதமரை சந்தித்தபோது அவரிடமும் இந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டேன்’ என்கிறார் பிரணாப். இந்த சந்திப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் சோனியாவின் வீட்டுக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் செல்கிறார். இவரைத்தான் 'இந்தியாவின் வருங்காலப் பிரதமர்’ என்று டெல்லிப் பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். இப்படி இந்தியாவின் அனைத்து தலைமைத் தலைகளும் சோனியாவை நோக்கி குவியக் காரணமாக நடந்தது, அந்த கோஷ்டி மோதல்!
இதை அம்பலப்படுத்தியது ஓர் அறிக்கை. மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் பி.ஜி.எஸ்.ராவ், பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குநர் வினி மகாஜனுக்கு ஓர் அறிக்கையைக் கொடுக்கிறார். அதில், '2ஜி அலைக்கற்றையை ஏலம் மூலம் விற்பனை செய்யலாம் என்று அப்போதைய நிதித் துறை அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஊழலே நடந்திருக்காது!’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்கிறது அந்த அறிக்கை. கடந்த மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட அறிக்கை அது. இதைத் தனக்கான ஆதாரமாகக் கொண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினார் சுப்பிரமணியன் சுவாமி. ''ப.சிதம்பரத்துக்கும் இந்த முறைகேட்டில் பங்கு இருக்கிறது என்று நான் சொல்லி வருகிறேன். ஆனால், சி.பி.ஐ. கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதோ ஆதாரம்!'' என்று கர்ஜிக்க ஆரம்பித்தார் சுவாமி. 'சி.பி.ஐ-யின் செயல்பாடுகளில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன’ என்றார் பிரசாந்த் பூஷண். மத்திய அரசு தரப்பு, பதில் சொல்ல முடியாமல் சுப்ரீம் கோர்ட்டில் திணறியது.
ப.சிதம்பரத்தின் மீது நிதி அமைச்சகம் குறை கூறும் அறிக்கையைத் தயார் செய்கிறது என்றால், அவர் மீது பிரணாப் முகர்ஜிக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா? ப.சி-யின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கிறாரா பிரணாப்? என்று பத்திரிகைகள் கொக்கி போட ஆரம்பித்தன. சிதம்பரத்தைச் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே பிரணாப் இந்த அறிக்கையை லீக் செய்ததாகவும் தகவல் பரவியது. ''மன்மோகன் சிங் பிரதமர் நாற்காலியில் இருந்து இறங்கினால், அந்த இடம் தனக்குத்தான் என்று பிரணாப் நினைத்தார். ஆனால், அவருக்குக் கொடுக்க மனம் இல்லாத சோனியா அதை ப.சிதம்பரத்துக்குத் தரப்போகிறார். அதைத் தடுப்பதற்கான தந்திரம்தான் இது!'' என்று டெல்லிவாலாக்கள் காரணமும் சொன்னார்கள். பிரணாப் அலுவலகத்தில் ரகசிய மைக் பொருத்தப்பட்டதாக முன்பே வெளியான சர்ச்சைக்கும் இது காரணமாகச் சொல்லப்பட்டது. அந்த மைக் விவகாரத்துக்குப் பிறகுதான் சிதம்பரம் மீது பிரணாப் கோபமானதாகவும் சொல்லப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டில்  சுவாமி, பிரசாந்த் பூஷண் ஆகிய இருவரது வாதங்களுக்கும் பதில் சொல்ல அவகாசம் கேட்டார் மத்திய அரசின் வழக்கறிஞர் பி.பி.ராவ். இதைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதிக்கு இந்த விசாரணை தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் இந்த விவகாரத்தை முடித்துவிட வேண்டும் என்பதற்காகவே சோனியாவை ஒவ்வொருவராகப் போய் சந்தித்தார்கள்!
இதை தனிப்பட்ட பிரணாப், சிதம்பரம் மோதலாக இல்லாமல் இந்த ஆட்சிக்கு வரப் போகும் கெட்டபெயராக சோனியா நினைத்தார். அதனால்தான் உடனடியாக ரியாக்ஷன் காட்டும்படி மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு மேலிடத்தில் இருந்து சிக்னல் தரப்பட்டது. ''இப்போது வெளியாகி இருக்கும் குறிப்புகளுக்கு உயிரே கிடையாது. கிரிமினல் இன்வால்மென்ட் இருப்பது பற்றி எதுவும் இதில் குறிப்பிடவில்லை. இதைக் குப்பையில்தான் போடவேண்டும்!'' என்றார். அப்போதே சிதம்பரத்தைக் காப்பாற்ற மத்திய அரசு முடிவு செய்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது!
பிரணாப் முகர்ஜியிடம் கடிதம் கேட்டார் சோனியா. நாலு பக்க அளவில் தயாரிக்கப்பட்ட அந்தக் கடிதத்தில், ''2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்பெக்ட்​ரம் விவகாரத்தில் ஏராளமான தகவல்கள் ஊடகங்களில் வெளியாக ஆரம்பித்தன. எனவே, அரசு பிரதிநிதிகளின் பயன்பாட்டுக்காக ஒரு ஃபைல் தயாரிக்கப்பட்டது. அதுதான் பிரதமர் அலுவலகத்துக்கு மார்ச் 25-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஃபைலில் எழுதப்பட்டவை என்னுடைய கருத்துகளோ விளக்கங்களோ அல்ல...'' என்று பிரணாப் கூறி இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு பிரதமர் வீட்டுக்கு சோனியா காந்தி சென்று பேசினார். ''ஆட்சிக்கு மிகப் பெரிய கெட்ட பெயர் இதனால் வரப் போகிறது. எனவே, இந்தப் பிரச்னையை இத்தோடு முடித்துவிட வேண்டும்!'' என்று சோனியா கறாராகச் சொல்ல... பிரணாப், சிதம்பரம் இருவரும் கூட்டாகப் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவானது.
''மார்ச் 25-ம் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் அனுப்பிய அறிக்கையில் இருக்கும் தகவல்கள், பொருள் விளக்கங்கள் என்னுடைய கருத்துகளுக்கு உட்பட்டதல்ல. 2007 - 2008-ல் ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு 2003-ல் டிராய் கொடுத்துள்ள சிபாரிசின்படி எடுக்கப்பட்ட முடிவாகும்...'' என்று பிரணாப் அறிக்கை கொடுக்க சிதம்பரம் முகத்தில் புன்முறுவல் வந்தது. ''எங்களைப் பொறுத்த வரை இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது!'' என்று சிதம்பரம் சொன்னார்.
விவகாரம் முடிந்துவிட்டதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்!
சரோஜ் கண்பத்
************************************************************************
ஸ்பெக்ட்ரம் ஃபைல் கிழித்தது யார்?

டெல்லி களவு காட்சிகள்!
'ஸ்பெக்ட்ரம் வழக்கு ஸ்வாகா ஆகிறதா?’ என்று டெல்லியில் கிளம்பிய ஒரு பகீர் சந்தேகத்தை, சில இதழ்களுக்கு முன் சொல்லி இருந்தோம். இப்போது இந்த சந்தேகம் சுப்ரீம் கோர்ட்டுக்கே வந்திருப்பதுதான் அதிர்ச்சி க்ளைமாக்ஸ்!
ஆ.ராசா, கனிமொழி, ப.சிதம்பரம், சுப்பிரமணியன் சுவாமி, சி.பி.ஐ., பிரணாப் முகர்ஜி, நீதிபதிகள் ஜி.எஸ்..சிங்வி, ஏ.கே.கங்குலி, பிரசாந்த் பூஷண், சி.ஏ.ஜி., நீதிபதி ஓ.பி.சைனி, சுரேஷ்குமார் பல்சானியா, நாடாளுமன்றம், ஆர்.கே.சந்தோலியா, நீரா ராடியா, ஜெ.பி.சி., சாக்கோ (நாடாளுமன்றக் கூட்டுக்குழுத் தலைவர்), ஷாகித் உஸ்மான் பால்வா, மன்மோகன் சிங், அனில் அம்பானி, தயாநிதி மாறன்... என்று குற்றம் சாட்டப்பட்டவர்களும், அதைத் தோண்டித் துருவுபவர்களுமாக, தினம் தினம் இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஜி வழக்கு வட்டத்தில் கூடிக்கொண்டே போகிறது! இந்த பிரமாண்ட மனித சஞ்சாரத்துக்கு நடுவே சில கறுப்பு சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி!
காந்தி நினைவு நாளான அக்-2-ம் தேதி டெல்லியில் ஒரு வித்தியாசமான காட்சி. பிரதமர், சோனியா, கபில்சிபல் ஆகியோருடன் பி.ஜே.பி. தலைவர் அத்வானியும், சுஷ்மா சுவராஜும் இருக்கிறார்கள். இவர்களுடன் சுப்பிரமணியன் சுவாமியும் இருக்கிறார். 'இதுவித்தியாச மான காட்சியா... விஷயமுள்ள காட்சியா! என்று டெல்லி பத்திரிகை யாளர்கள் கிண்டலடித்தார்கள்!
  இந்த விவகாரத்தில், 'யாருக்கு என்ன நோக்கம்? எதற்காக ஊழல் செய்தார்கள்? பணம் எங்கே? எப்படி ஊழல் செய்தார்கள்? யார் யார் ஊழல் செய்தார்கள்? யாருடைய புகார்? பொது நலன் வழக்கு எதற்கு? யார் இன்ஃபார்மர்கள்? ஊழலில் யார் யாருக்குப் பங்கு? இதில் பிரதமரின் ரோல் என்ன? நிதியமைச்சர் யார் பக்கம்? சுவாமியின் பின்னணி என்ன? ராசாவின் பணம் எங்கே? யார் வழக்கைப் பதிவு செய்தார்கள்? கருணாநிதி ஏன் புலம்புகிறார்? சோனியா இந்த விவகாரத்தில் கெஸ்ட் ரோலா... முக்கிய ரோலா... நோ ரோலா? எப்படியெல்லாம் புலனாய்வு செய்கிறார்கள்? ஏன் முன்னுக்குப் பின் முரணமாகக் குழப்புகிறார்கள்? ஏன் வழக்குப் பதிவில் திடீர் தாமதங்கள்?’ - இப்படி எத்தனையோ கேள்விகள் இன்னமும் வெறும் கேள்விகளாகவே இருக்கின்றன!
இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்தப்  புது ரகசியம் வெளியே வந்திருக்கிறது.
சுப்பிரமணியன் சுவாமி, 13 பக்கங்கள் கொண்ட ஆவணத்தைத் தாக்கல் செய்தார். ''மிக முக்கியமான ஆதாரங்கள் இவை!'' என்றும் சொன்னார். அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ. வக்கீல், ''இது புதிய தகவல் அல்ல. நிதி அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட 500 பக்க ஆவணங்களில் இருப்பதுதான்!'' என்று சொன்னார். ''இந்த ஆவணங்களை நீங்கள் ஆய்வு செய்தீர்களா?'' என்று கேட்ட நீதிபதிகள், அந்த 500 பக்க ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொன்னார்கள்.  மறுநாளே  சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
இந்த நிதித் துறை ஆவணத்தில் உள்ளவை பெரும்பாலும் சுப்பாராவ் என்பவர் நிதித் துறை செயலாளராக இருந்த​போது எழுதப்பட்டவை.  தொலைத் தொடர்புத் துறைக்கு ஸ்பெக்ட்ரம் விலையை மறுபரிசீலனை செய்யக் கோரி சுப்பாராவ் எழுதிய கடிதங்களும் இதில் உண்டு. டெலிகாம் நிதி கமிஷன் கூட்டத்தை, அமைச்சராக இருந்த ஆ.ராசா தள்ளி வைத்துக்கொண்டே போனது குறித்து சுப்பாராவ் ஏற்கெனவே சி.பி.ஐ-க்கு வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதே சுப்பாராவ் பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகியும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 2ஜி விவகாரத்தில் நிதித் துறையின் ஆலோசனைகளையும், தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளையும் நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்திடம் அவ்வப்போது தெரிவித்த தாகவும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் நிதி அமைச்சகம், தொலைத் தொடர்புத் துறையை வலியுறுத்த முடியாமல் போனது என்றும் சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணங்கள் இப்போது சுப்ரீம் கோர்ட் வசம் இருக்கின்றன. இவற்றை வரிசையாகப் பார்த்து வந்த நீதிபதிகள், திடீரென சில இடங்களில் அதிர்ச்சிக்கு ஆளானார்களாம். ''இதில் சில பக்கங் களைக் காணவில்லையே?'' என்று கேட்டனர். அதற்கு சி.பி.ஐ. வக்கீலால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
''காணாமல் போன பக்கங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும்!'' என்று உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள். அந்தப் பக்கங்கள் அரசு கோப்பிலிருந்து திட்டமிட்டே கிழித்து எடுக்கப்பட்டதா... அதில் என்ன விதமான தகவல்கள் இருந்தன... ஏன் அவற்றைக் காணவில்லை... இது யாரைக் காப்பாற்றுவதற்காக என்பதுதான் இப்போது சுப்ரீம் கோர்ட் போட்டுக் குடையும் ரகசியம். ''இந்த விஷயத்தில் சி.பி.ஐ. ஆரம்பத்தில் சரியாகவே நடந்து கொண்டது. ஆனால், போகப் போக தனது நடவடிக்கைகளின் வீரியத்தைக் குறைத்துக் கொண்டது. சிவசங்கரன் வாக்குமூலம் மற்றும், அனில் அம்பானி நிறுவனத் தொடர்புகள் குறித்து முரண்பாடான தகவல்களை சி.பி.ஐ. சொல்வதைப் பார்த்தாலே, அவர்கள் கைகள் மறுபடியும் கட்டப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. முக்கியமாக, பிரதமர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரை கோர்ட்டுக்கு இழுக்க, ஆ.ராசா வேலைகளைத் துவங்கியது முதல் சி.பி.ஐ-யின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு விட்டது!'' என்று சுவாமி தரப்பில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில் தொலைத் தொடர்புத் துறை ஊழல் கண்காணிப்புப் பிரிவிலும் இரண்டு கோப்புகள் மாயமானதாகத் தகவல் பரவி உள்ளது. கடைசியாக அந்தக் கோப்புகள் யார் வசம் இருந்தன என்று தேடும் காரியத்தைத் தொடங்கி இருக்கிறார்களாம். ''அதை வைத்திருந்த அதிகாரி சில மாதங்களுக்கு முன்னால் ஓய்வு பெற்றுவிட்டார்!'' என்கிறார்கள். ''இது ஸ்பெக்ட்ரம் தொடர்பானவை அல்ல. வேறு வழக்கு தொடர்பானவை!'' என்று  சிலர் சொல்வதையும் ஏற்க முடியவில்லை. எப்படிப் பார்த்தாலும் சில முக்கியக் கோப்புகளைக் காணவில்லை என்பது உறுதி.
''ஆ.ராசா, கனிமொழி ஆகிய இருவரை மட்டும் மாட்டிவிட்டு... மற்றவர்களைக் காப்பாற்ற டெல்லி மேலிடம் முடிவெடுத்து விட்டதா?'' என்று தி.மு.க.  தரப்புக் குரல்கள் டெல்லியில் கேட்க ஆரம்பித்துள்ளன. இந்த ஃபைல்கள் காணாமல் போன மேட்டரை பி.ஜே.பி-யும் கையில் எடுக்கப் போகிறது. அடுத்த கட்ட விசாரணையில் சுப்ரீம் கோர்ட் என்னவெல்லாம் கேட்டு சாட்டையை சொடுக்கப் போகிறதோ?
சரோஜ் கண்பத்    
*********************************************************************************
நம்பிக் கெட்டவன் நான்!

கருணாநிதியின் சுயவிமர்சனம்!
கருணாநிதி குடும்பத்தினர் பங்கேற்காமல் ஆச்சர்யத்தோடு நடந்து முடிந்திருக்கிறது தி.மு.க-வின் முப்பெரும் விழா! ஒவ்வொரு வருடமும் பெரியார், அண்ணா பிறந்தநாள், தி.மு.க. உதயமான நாள் ஆகியவற்றை முப்பெரும் விழாவாக தி.மு.க. கொண்டாடும். இந்த ஆண்டு அந்த விழாவுக்கு செப்டம்பர் 17-ம் தேதி வேலூரில் நடத்த தேதி குறித்தனர். ஆனால், செப்டம்பர் 15-ம் தேதி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. தேதி குறிக்க... விழாவை 30-ம் தேதிக்கு மாற்றியதோடு, இடத்தை சென்னைக்கும் மாற்றிவிட்டது தி.மு.க.!
விழாவில் அறிவாலயம் கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தும், உயிர்ப்பில்லை. நில அபகரிப்பு புகாரில் வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, மதுரை என்று சிறைச்சாலைகளுக்குள் வி.ஐ.பி-க்கள் வாசம் செய்வதால்தான் இந்த கலகலப்பு மிஸ்ஸிங். விதிவிலக்கு - வீரபாண்டி ஆறுமுகம் உட்பட ஒரு சில தலைகள் மட்டுமே. முதலில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் பள்ளி அளவில் முதல் பரிசு பெற்ற எல்.கே.ஜி. மாணவன் ஆல்வின் ஆண்டோ கைதட்டல்களை அள்ளினான்.  ''தமிழே... நீ வளர்த்த செம்மொழியில் நானும் பேசுகிறேன்...'' என்று சொல்லி பாரதிதாசனின் பாடலைப் பாடியவன் தொடர்ந்து, ''பூட்டப்பட்ட இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில் வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!’ என்று பாட... நடப்பு அரசியலோடு ஒத்துப்போக, கலகலத்தது அரங்கம்.
சுப.வீரபாண்டியனுக்கு 'பெரியார் விருது’ம், ஆர்.எஸ்.பாரதிக்கு 'அண்ணா விருது’ம், உமாமகேஸ்​வரிக்கு 'பாவேந்தர் விருது’ம், முகமது சகிக்கு 'கலைஞர் விருது’ம் வழங்கப்பட்டன. சுப.வீரபாண்டியனின் தந்தை இராம.சுப்பையாவும் பல ஆண்டுகளுக்கு முன்பு இதே பெரியார் விருதை கருணாநிதி கையால் பெற்றார். இப்போது அவரது மகனும் அதே விருதை வாங்கி இருக்கிறார். 'அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தைக் கபளீகரம் செய்த ஜெயலலிதா மீது நில அபகரிப்பு வழக்குத் தொடர்ந்து அந்த நிலத்தை மீட்டவர்’ என்று ஆர்.எஸ்.பாரதிக்கு கொடுக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில் எழுதி இருந்தனர். இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டியதற்காகவும், கமிஷனர் முத்துக்கருப்பனுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளானதற்காகவும் முகமது சகிக்கும் விருது வழங்கப்பட்டன.
முதலில், சற்குண பாண்டியன் பேச்சை ஆரம்பித்தாலும், பொளந்து கட்டியது அடுத்து வந்த பரிதி இளம்வழுதிதான். ''சட்டசபைத் தேர்தலில் நாம் தோற்றோம் என்பதைவிட, வெற்றியைத் திருட்டுக் கொடுத்தோம். வெற்றி நகை திருடு போவதற்கு சிலர் உதவியாக இருந்தார்கள். அந்த வெற்றி எங்கேயும் போய்விடவில்லை. அடகுக்​கடையில்தான் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதை மீட்டெடுத்துவிடுவோம். 20-ம் தேதி வரப் போகிறது. பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜர் ஆவார். இந்த வழக்கு அதிகபட்சம் ஜனவரியில் முடிவுக்கு வரும். தை பிறந்தால் வழி பிறக்கும். எப்படி முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கினோரோ... அதுபோல இப்போது யாராவது ஒருவர் வருவார். அதற்கு இப்போதே கட்சிக்குள் போட்டி நடக்கிறது. அடுத்த சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்றப் போவது கலைஞர்தான்!'' என்று ஒரே போடு போட்டார்.
துரைமுருகன் மைக்கை கர்சிப்பால் துடைத்து​விட்டுப் பேச ஆரம்பித்தார். ''மைனாரிட்டி ஆட்சியைத்தான் நடத்தினோம். ஆனால், மெஜாரிட்டியான திட்டங்களைக் கொண்டுவந்தோம். எங்களைத் தேடி வந்த கூட்டணிக் கட்சிகளை கடைசி வரையில் அரவணைத்துச் சென்றோம். நம்பி வந்த கூட்டணிக் கட்சிகளை மூன்றே மாதத்தில் கழற்றிவிட்டது மெஜாரிட்டி அரசு. கூட்டணிக் கட்சியினர் பேச நினைத்தை எல்லாம் நாங்கள் பேச நினைத்தோம். எங்களைப் பேசவே விடவில்லை. இப்போது அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி இருக்கிறார்கள். அதற்காக மெஜாரிட்டி சர்க்காருக்கு நன்றி!'' என்று நையாண்டி செய்தார்.
இறுதியாகப் பேசிய கருணாநிதி, ''தி.மு.க-தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று லட்சக்கணக்கான மக்கள் சொன்னதை நம்பிக் கெட்டவன் நான். 'தி.மு.க. தோற்றுவிட்டதா?’ என்று மக்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு சரித்திரப் பிரசித்தி பெற்ற தோல்வியை சந்தித்திருக்கிறோம். அதிலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஏதோ தவறு செய்துவிட்டோமே என்று மக்கள் வருந்துகிறார்கள். ஜனநாயகத்தின் விளையாட்டை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இந்தத் தோல்வி தமிழக மக்களைத் தாண்டி ஈழத் தமிழர்கள் வரையில் பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு விடிவு காலம் வரும். என் உயிர் தமிழ்த் தாயின் மடியில்தான் போகும். தி.மு.க. பட்ட மரமாகாது. பழுத்த மரமாகவே இருக்கும். அதை யாரும் அழிக்க முடியாது. என் உயிரைப் பணயமாகவைத்து நடக்கும் போராட்டத்தில் நாம் நிச்சயம் வெல்வோம்!'' என்றது அவரது கரகர குரல்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் எப்படியும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்பதால்தான் முப்பெரும் விழாவின் தேதியை மாற்றினார் கருணாநிதி. ஆனால், அவர் நினைத்தபடி ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும் சி.பி.ஐ. பிடி இறுகியிருக்கிறது. உடல்நலக் குறைவால் ஸ்டாலின் வரவில்லை. அவர் வராததால் துர்க்காவும் வரவில்லை. மத்திய அமைச்சர் அழகிரியும் வரவில்லை. தயாநிதியையும் காணோம். தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், செல்வி என முன் வரிசையை எப்போதும் பிடிக்கும் குடும்பத்தினர் யாரும் வராமல் வித்தியாசமான விழாவாக முடிந்தது முப்பெரும் விழா!
எம்.பரக்கத் அலி
படங்கள்: வி.செந்தில்குமார்
*********************************************************************************
நகராட்சித் தலைவர்... முந்துவது யார்?

15 நகரங்கள் பரபர ரிப்போர்!
கிட்டத்தட்ட முக்கியமான கட்சிகள் அனைத்தும் தனித்து நிற்பதால், இந்த உள்ளாட்சித் தேர்தலைத் தங்களது சுய பலத்துக்கான உரை கல்லாகப் பார்க்கின்றன ஒவ்வொரு கட்சியும். ஒரே கட்சியைச் சேர்ந்த வர்களே பங்காளிகளாக, அண்ணன் தம்பிகளே எதிராளிகளாக மாறி நிற்க... தேர்தல் பிரசாரம் தூள் பறக்கிறது. பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் இடையில்தான் நேரடிப் போட்டி நிலவு கிறது. இச்சூழலில், தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 நகராட்சிகளைப் பல்ஸ் பிடித்துப் பார்த்தோம். இதோ அந்த ரிப்போர்ட்...


அரக்கோணம்:  இங்கு அ.தி.மு.க. வேட்பாளர் பவானி கருணாகரன். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்த இவரை மக்கள் 'ஆஹா ஓஹோ’ என்று கொண்டாடாவிட்டாலும், பெரிய குற்றச்சாட்டுகளில் சிக்காதவர். இவருக்கு எதிராக நிற்பவர், அரக்கோணம் நகராட்சியின் முன்னாள் தலைவரான தி.மு.க-வின் மனோகரன். பதவியில் இருந்த காலத்தில் மனோகரன் எதையும் சாதித்துவிடவில்லை என்பது மக்களின் எண்ணம். அ.தி.மு.க-வின் செல்வாக்கும் இருப்பதால் வாய்ப்பு பவானி கருணாகரனுக்கே.

சிதம்பரம்:  சிட்டிங் சேர்மனான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுஜியா பேகம், மீண்டும் வேட்பாளர். இவரை எதிர்த்து நிற்பவர் அ.தி.மு.க. நகரச் செயலாளரான தோப்பு சுந்தரின் மனைவி நிர்மலா. கடந்த ஆட்சி சமயத்தில் தி.மு.க-வினர் ஆதிக்கம் செலுத்தியதால், பகுஜியா பேகத்தால் மக்களுக்கு எதையுமே செய்ய முடியவில்லை. இது அவருக்கு மைனஸ். இந்நிலையில், தோப்பு சுந்தருக்கு மக்களிடம் பிரபலம் அதிகம் உள்ளது. கூடவே, சிறுபான்மையினர் வாக்குகளும் அவர் மனைவிக்கு ப்ளஸ். ஆகவே, போட்டியில் தற்போது முன்னிலையில் இருப்பது நிர்மலாதான்.

பொள்ளாச்சி: அ.தி.மு.க. பெல்ட்டான இந்தப் பகுதியில் எம்.எல்.ஏ., எம்.பி. என்று அத்தனை பேரும் அ.தி.மு.க. புள்ளிகள்தான். ஆகவே, வலுவாக இருக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளரான தம்பி (எ) கிருஷ்ணகுமார். இவருக்கு சற்றே கலக்கம் கொடுப்பவர் தி.மு.க-வின் செல்வராஜ். இருவருமே அந்தந்தக் கட்சிகளின் நகரச் செயலாளர்கள் என்பதால், மக்கள் மத்தியில் அறிமுகம் உண்டு. தே.மு.தி.க-வுக்குப் பரவலாக இருக்கும் செல்வாக்கு அ.தி.மு.க-வின் வாக்குகளை சிதறடித்தாலும்கூட கிருஷ்ணகுமாரின் கரமே ஓங்கி நிற்கிறது.

நாமக்கல்:  நாமக்கல் நகராட்சியில் பிரதானமான ஆறு கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆனால், கடும் போட்டி, தி.மு.க-வின் செல்வராஜுக்கும், அ.தி.மு.க-வின் கரிகாலனுக்கும்தான். செல்வராஜ் சிட்டிங் சேர்மன். இருந்தும், நகராட்சியின் மேம்பாட்டுக்காக சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிதாக எதுவும் செய்யவில்லை. குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை போன்றவற்றை ஆரம்பித்து இன்னும் முடிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி இருக்கிறது. அ.தி.மு.க. கரிகாலன் நாமக்கல் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். பொதுமக்களிடம் நன்றாகப் பழக்கூடியவர். சிட்டிங் சேர்மன் மீது உள்ள அதிருப்தி இவரின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்துவிடும்.

புதுக்கோட்டை:  அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கார்த்திக் தொண்டை மான், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கட்சிக்கும் தேர்தலுக்கும் புதியவர். ஸீட் கேட்டுக் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் உட்கட்சிப் புள்ளிகள் இவருக்கு எதிராக வேலை பார்ப்பது பலவீனம். இருந்தும், குடும்ப செல் வாக்கும், நற்பெயரும் இவருக்குக் கைகொடுக்கும். தி.மு.க. தரப்பில் நகர்மன்றத் துணைத் தலைவராக இருந்த நைனாமுகமது போட்டியிடுகிறார். தி.மு.க-விலேயே ரகுபதி தரப்பில் ஸீட் கேட்டு மறுக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அந்தப் பகுதியில் இருக்கும் குடிநீர் பிரச்னை போன்றவற்றை தீர்த்துவைக்கக் காட்டிய முனைப்பு இவரது கையை உயர்த்துகிறது. ஆனாலும் கார்த்திக் தொண்டைமானே கரைசேர்வார்.

சிவகங்கை: முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மந்தக்காளை அ.தி.மு.க. வேட்பாளர். அகமுடையார் மெஜாரிட்டியாக வசிக்கும் சிவகங்கையில், கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த மந்தக்காளை வேட்பாளரானது அ.தி.மு.க-விலேயே பலருக்கு அதிருப்தி. தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் நகரச் செயலாளர் ஆனந்துக்கு கட்சி செல்வாக்கைத் தவிர தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை. ம.தி.மு.க. வேட்பாளராக நிற்கும் வக்கீல் கார்கண்ணனுக்கும் இங்கு ஓரளவுக்கு செல்வாக்கு உண்டு. இவருக்கு விழும் ஓட்டுகள் ஆனந்துக்கு ஆப்புவைக்கலாம். அதேபோல், மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிடும் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனனை 'தங்கமான ஆளுங்க’ என்று மாற்றுக் கட்சிக்காரர்களே சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. மார்க்சிஸ்ட் வேட்பாளர்களுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவினாலும் சிவகங்கை மக்கள் ஆளைப் பார்த்து ஓட்டுப் போட்டால் ஜெயம் அர்ச்சுனனுக்கே!

தஞ்சாவூர்: தி.மு.க. வேட்பாளர் கனகவள்ளி, மாநில மகளிர் அணி அமைப்பாளரான கார்ல் மார்க்ஸின் மருமகளாவார். கனிமொழியின் தீவிர ஆதரவாளரான கார்ல் மார்க்ஸ், பழனிமாணிக்கம், உபயதுல்லா ஆகியோரைத் தாண்டி மருமகளுக்கு ஸீட் வாங்கியதில் உள்கட்சிக்குள் அதிருப்தி அதிகம். ஏற்கெனவே, இரண்டு முறை நகராட்சித் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கோபாலின் மனைவி சாவித்திரிதான் இப்போது வேட்பாளர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றி இருப்பதால் சாவித்திரிக்கு ஆளும் கட்சியின் பலம் அதிகம். மொத்தத்தில் தி.மு.க-வின் கோட்டை, இந்தத் தேர்தலில் உட்கட்சிப் பூசலால் தகர்க்கப்படக்கூடும். தஞ்சையில். கூட்டிக்கழித்துப் பார்த்தால் சாவித்திரியே சாதிப்பார்.

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்கு அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் பாஸ்கர் போட்டியிடுகிறார். மக்களிடம் அறிமுகமான புள்ளி. வக்கீலான இவருக்கு நல்ல பேரும் உண்டு. பள்ளி கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நட்பு எக்ஸ்ட்ரா பலம். தி.மு.க. சார்பில் முன்னாள் நகரச் செயலாளர் சக்கரை போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் உள்ள மருதூர் பகுதியில் மூன்று முறை கவுன்சிலராக இருந்தவர். தேர்தலுக்காக அதிகம் செலவு செய்ய தி.மு.க. வேட்பாளர் தரப்பு விருப்பப்படவில்லை என்று தகவல் வருகிறது. ஆக வக்கீலுக்கே வெற்றி என்கிறார்கள்.

திண்டிவனம்:  திண்டிவனத்தில் அ.தி.மு.க. சார்பில் நிற்கிறார் கே.வி.என்.வெங்கடேசன். நகரச் செயலாளரான இவர் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆனால், இப்பகுதியில் முதலியார் சமுதாயத்தினர் அதிகம். ஆனாலும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊர் திண்டிவனம் என்பதால், அந்த செல்வாக்கில் ஓரளவுக்கு வாக்குகள் வாங்கலாம். சில பகுதிகளில் இவருக்கு எதிர்ப்பும் இருக்கிறது. தி.மு.க. சார்பில் நிற்கும் நகரச் செயலாளரான கபிலன், முதலியார் இனத்தைச் சேர்ந்தவர். இவர் மீது புகார்கள் எதுவும் இல்லை. இவர் வெற்றி பெற்றால் ஆச்சர்யம் இல்லை!

விருதுநகர்:  இங்கே போட்டி அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இடையில்தான். காங்கிரஸ் சார்பில் சிட்டிங் சேர்மன் கார்த்திகா கரிக்கோல்ராஜ். அ.தி.மு.க-வில் எதிர்த்து நிற்பது 'ஹிப்பி’ மாரியப்பனின் மனைவி சாந்தி. விருதுநகரைப் பொறுத்த வரை நாடார் சமுதாயத்தினரே வெற்றியாளரை நிர்ணயிப்பார்கள். அதனால், முக்கியமான 4 வேட்பாளர்களும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். அ.தி.மு.க-வின் சாந்தியின் கணவர் ஹிப்பி மாரியப்பன் நாடார்களுக்கு மட்டுமின்றி, அனைத்து சமுதாயத்தினருக்கும் நன்கு அறிமுகமானவர். சிட்டிங் சேர்மன் என்பதால் கார்த்திகா கரிக்கோல்ராஜ் மீது மக்களுக்கு நிறைய வருத்தங்கள் உள்ளன. அதுமட்டும் இன்றி நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் ரத்தினவேலு தலைமையிலான நகர் நல அமைப்பு, கார்த்திகாவுக்குக் குடைச்சலைக் கொடுத்து வருகிறது. மொத்தத்தில் அ.தி.மு.க-வே வெற்றியின் கதவைத் தட்டும்.

தர்மபுரி: தர்மபுரி நகராட்சியைக் கைப்பற்றுவதில் நேரடி போட்டி தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையில்தான். வேட்பாளராக முன்னாள் நகரச் செயலாளர் கந்தசாமி அறிவிக்கப்பட்டதும் கிளம்பிய உட்கட்சி அதிருப்தி, தி.மு.க. தலைமையின் தலையீட்டால் முழுமையாக சரி செய்யப்பட்டுவிட்டது. அ.தி.மு.க வேட்பாளரான சுமதி, தைரியமானவர். அதேநேரம், முன்னாள் நகரவைத் தலைவரான எஸ்.ஆர்.வெற்றிவேல், நகரச் செயலாளர் குருநாதன் ஆகியோர் ஸீட் கிடைக்காத வருத்தத்தில் சுயேச்சையாக மனு செய்துள்ளனர். இதுவே சுமதிக்கு லேசாக அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் வெற்றிவேலுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அவரது ஆதரவு கிடைத்தால் சுமதி சேர்மன் ஆகலாம். இன்றைய நிலையில் தி.மு.க. முன்னணியில் இருக்கிறது.

திருவண்ணாமலை: நகர்மன்றத் தலைவராக இருக்கும் தி.மு.க. ஸ்ரீதரனுக்கே மீண்டும் ஸீட். அ.தி.மு.க. தரப்பு வேட்பாளராக தெற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளரான பாலச்சந்தர் நிற்கிறார். முதல் முறையாகக் களம் காணும் பாலச்சந்தருக்கு கட்சி பலம் இருந்தாலும், மக்கள் மத்தியில் அறிமுகமே இல்லை. மாறாக, ஸ்ரீதரன் மக்களிடம் அறிமுகமானவர். மக்கள் எளிதில் சந்திக்கக் கூடியவர். இரண்டு முறையாக நகரமன்றத் தலைவராக இருப்பது, அனைத்துக் கட்சிக்காரர்களையும் அரவணைத்துச் செல்வது, ஓரளவு மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்துள்ளது போன்றவை அவருக்கு கைகொடுக்கும். ஆனால், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலைகள் முழுமை அடையாதது போன்றவை அவருக்கு மைனஸ். இருவரும் முதலியார் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், போட்டி மிகவும் பலமாகவே இருக்கிறது. இருந்தாலும், தி.மு.க-வுக்கு சாதகமாகவே தெரிகிறது.

கரூர்: தி.மு.க-வின் 'தாந்தோணி’ ரவி, அ.தி.மு.க-வின் 'தமிழ்நாடு’ செல்வம்... இருவருக்கும்தான் போட்டி. ஏற்கெனவே ஒரு முறை ரவி நகர் மன்றத் தலைவராக இருந்தவர். இப்போதும் கவுன்சிலராக இருக்கிறார். மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதில் முன்னால் நிற்பவர் என்ற பெயர் உண்டு. செல்வம், கடந்த 35 வருடங்களாக கட்சியில் இருக்கிறார். கட்சி சீனியர்களுக்கு இவர் நன்கு அறிமுகம். இவர் மீது எந்தப் புகாரும் இல்லை. இனாம் கரூர் தலைவராக இருந்தவர். பண பலம் இல்லாதது, பொது மக்களிடம் அதிகமான அறிமுகம் இல்லாதது இவரது பலவீனம். ஆனாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முயற்சியால் கரூர் அ.தி.மு.க. வசமாகும் என்கிறார்கள்.

திண்டுக்கல்: தி.மு.க. சார்பாக மாநில மகளிர் அணி தலைவர் நூர்ஜஹான் பேகம் களம் இறங்கி இருக்கிறார். மாநிலப் பொறுப்பில் இருந்தாலும் உள்ளூருக்குள் இவருக்கு செல்வாக்கு இல்லை. கூடவே உட்கட்சி புள்ளிகளின் அதிருப்தியும் அதிகம்... இவருக்கு நெருக்கடி தரும் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் மருதராஜ். முன்னாள் உப்பு வாரியத் தலைவரான இவருக்கு பல முறை வாய்ப்புக் கிடைத்தும் அவர் ஜெயிச்சதே இல்லை... என்ற நெகடிவ் சென்டிமென்ட்டும் உண்டு. கூடவே, திண்டுக்கல் நகராட்சித் தலைவர் பதவியில் அ.தி.மு.க. உட்கார்ந்ததே கிடையாது என்பது இன்னொரு சென்டிமென்ட். ஆனாலும், தி.மு.க-வில் இருக்கும் உட்கட்சிப் பிரச்னையால்... மருதராஜுக்கே வாய்ப்பு இருக்கலாம் என்கிறார்கள்.

செங்கோட்டை:  அ.தி.மு.க. வேட்பாளரான மோகனகிருஷ்ணனுக்கு கட்சிரீதியாக செல்வாக்கு இல்லாவிட்டாலும், தான் நடத்தும் பள்ளி வாயிலாக மக்களிடம் அறிமுகமானவர். கூடவே, இந்தப் பகுதியில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு அதிகம். தி.மு.க. வேட்பாளராக சிட்டிங் சேர்மன் ரஹீம் மீண்டும் வேட்பாளராகி இருக்கிறார். கணிசமான திட்டங்களைச் செயல்படுத்தியவர். ஆனாலும், சில ஊழல் குற்றச்சாட்டுகள், கவுன்சிலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் போன்றவற்றில் இவரது தலை உருட்டப்பட்டதால் அதுவே மைனஸ். இஸ்லாமியர் சமுதாய வாக்குகள் இவருக்கு நம்பிக்கையைக் கொடுத்தாலும் செங்கோட்டையைப் பிடிக்கப்போவது மோகனகிருஷ்ணன் என்றே தெரிகிறது.
ஜூ.வி. டீம்.
*********************************************************************************
கமாடிட்டியிலும் கலக்கலாம்!

*********************************************************************************
இப்ப மட்டும் என்ன திடீர் கரிசனம்?

கருணாநிதி நிதியை வாங்காத வாச்சாத்தி!
FOLLOW - UP
ந்திய நீதி வரலாற்றி​லேயே மிக நீண்ட இழுபறிக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்த வழக்கு என்றால் அது தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராம பலாத்கார வழக்குதான். கடந்த 29.9.11 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதே தினம், முன்னால் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி தானாகவே முன்வந்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா  15 ஆயிரத்தை நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். இதை முகத்தில் அறைந்தாற்போல வாச்சாத்தி மக்கள் மறுத்துவிட்டனர். காரணம், அறிய அங்கு சென்று விசாரித்தோம்.
கோபம் கொப்பளிக்க அம்மக்கள் நம்மிடம் பேசினார்கள்.  ''ஒன்றல்ல, இரண்டல்ல... 19 ஆண்டு​கள்... அப்போதெல்லாம் எங்களுக்கு நடந்த இந்தக் கொடுமை இவர்களுக்கு தெரிய​வில்லையா? ஆட்சிப் பீடத்தில் இருந்தபோது கண்டுகொள்ளாதவர்களுக்கு இப்போது மட்டும் என்ன திடீர் கரிசனம்!'' என்று மக்கள் முகம் சிவந்து கூக்குரலிட்டனர். அதன் பிறகு நாம் கேட்ட கேள்விகளுக்கு, ''உங்களுக்கு கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், இந்தத் தீர்ப்புக்காக இவ்வளவு காலமும் முன்னின்று போராடிய 'மலைவாழ் மக்கள் சங்க’ மாநிலத் தலைவர் சண்முகத்திடம் பேசுங்கள்...'' என்றனர்.
அப்படியே சண்முகத்தை தொடர்புகொண்டோம். அவர், ''சம்பவம் நடந்தது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில். அன்று தொடங்கி இப்போது தீர்ப்பு வெளியானது வரையிலும் இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தச் சலனமும் காட்டாத அரசியல் தலைவர் ஜெயலலிதா மட்டும்தான். இது ஒருபுறம் இருக்க, சம்பவத்துக்குப் பிறகு தி.மு.க-வும் ஆட்சிப் பீடம் ஏறியது அவர்களிடமும் பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. 'தனி நீதிமன்றம் அமைத்து வழக்கை விரைவாக நடத்த வேண்டும்’ என்றுகூட கோரிக்கை வைத்தோம். அந்த அரசோ இதைக் காதில்கூட வாங்கவில்லை. உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகும்கூட, 'தனி நீதிமன்றம் அமைக்க இயலாது. சி.பி.ஐ-க்கு அரசு தரப்பில் வழக்கறிஞர்களை மட்டும் நியமிக்கிறோம்.’ என்று கழன்றுகொண்டது. ஆக நீதியை விரைவுபடுத்தும் வாய்ப்பிருந்தும் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் யாரும் அக்கறையே காட்டவில்லை. இந்த வழக்குக்காக நாங்கள் பட்ட அவமானங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் அளவே கிடையாது. சட்டம் மட்டுமே அந்த மக்களுக்கு துணையாக நின்று இந்த நீதியை பெற்றுத் தந்திருக்கிறது. வழக்கின் ஆரம்பக் கட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனதும், சட்ட உதவியோடு கடும் முயற்சி செய்து சுமார்  1.50 கோடியை நிவாரணமாகப் பெற்றனர் வாச்சாத்தி மக்கள். ஆனாலும், ஒவ்வொரு பாதிப்புக்கும் ஏற்றவகையில் சட்டம் நிர்ணயித்துள்ள நிவாரணத் தொகையை கணக்கிட்டால், இன்னும் சில கோடி ரூபாய் அந்த மக்களுக்குத் தர வேண்டி இருக்கும். அதுக்கான முயற்சியை தொடர்ந்து நாங்கள் செய்து வருகிறோம். இதற்கிடையில், எந்தத் தலைவர்களின் அனுதாபத்தையும் வாச்சாத்தி மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சட்டம் சொல்லுவதை மட்டும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றி​னாலே அந்த மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்!'' என்றார் தீர்க்கமாக.
''இந்த  சம்பவத்தில் இதுவரை வெளிவராத தகவல்கள் எதுவும் உண்டா?'' என்று அவரிடம் கேட்டோம். அதற்கு, ''முக்கியமான சில விஷயங்களை சொல்கிறேன். சம்பவத்துக்குப் பிறகு 1992 ஆகஸ்ட் 1-ல், சேலம் சிறை மைதானத்தில் அடையாள அணிவகுப்பு நடத்த சி.பி.ஐ. ஏற்பாடு செய்தது. ஆனால், அதை சீர்குலைக்க நடந்த முயற்சிகள் ஏராளம். அன்றைய ஆளும் கட்சிப் பிரமுகர்கள், பல்வேறு அச்சுறுத்தல்களை பரப்பினர். அதாவது, 'அடையாள அணிவகுப்புக்கு நீங்கள் சென்றால் வனத் துறை அதிகாரிகள் அங்கேயேவைத்து உங்களுக்கு தாலி கட்டிவிடுவார்கள். அதற்குப் பிறகு உங்களை கடத்திச் சென்று கொல்லவும் தயங்கமாட்டார்கள். தப்பினாலும் அவர்கள் வீட்டில் இரண்டாம்தாரமாகத்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்.  10 ஆயிரம் வாங்கித் தருகிறோம், இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிடுங்கள்’ என்றெல்லாம் கிராமத்துப் பெண்களிடம் மிரட்டினர். குழம்பிய இந்தப் பெண்களுக்காக, முன்னால் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வான அண்ணாமலை உள்ளிட்டவர்கள்தான் தைரியம் தந்தனர். பிறகே, அரூர் போலீஸில் இந்த மிரட்டலைப் புகாராகப் பதிவு செய்தனர் பெண்கள். அதன் பிறகும் அணிவகுப்பு ஏற்பாடுகள் ரத்தாகிவிட்டதாக ஊத்தங்கரையின் அன்றைய மாஜிஸ்ட்ரேட் பெயரில் போலி அறிக்கையை கசியவிட்டு குழப்பம் விளைவித்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு அணிவகுப்பு ஏற்பாடு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் நடந்த அணிவகுப்பில் ஒரே நேரத்தில் 1,500 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் அடையாளம் காட்ட வந்த பெண்களை, கேலியும் கிண்டலும் செய்ததால், அன்றும் ஏற்பாடுகள் ரத்தானது. உயர் நீதிமன்ற தலையீட்டின் பிறகே அக்டோபர் 10 முதல் 16-ம் தேதி வரை சேலம் சிறை வளாகத்தில் பெரிய அறை ஒன்றில் 50, 50 பேர்களாக நிறுத்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில்தான், 11 பேரை பெண்கள் அடையாளம் காட்டினர். இந்த அடையாளம் காட்டும் முயற்சிக்கே எத்தனை முட்டுக்கட்டைகள் போடப்பட்டன என்பதை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்போது எல்லாம் இம்மக்களுக்கு உதவிகள் செய்ய வராதவர்கள் இப்போது மட்டும் ஏன் வர வேண்டும். அதனால்தான் பொதுமக்கள் இந்தச் சலுகையை உதாசீனப்படுத்தினார்கள்!'' என்றார்.
எஸ்.ராஜாசெல்லம்
************************************************************************
ஜோஷி இப்படிப் பேசலாமா?

ஆதங்கப்படும் ஈழத் தமிழர்கள்
'ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களை அழிக்க காங்கிரஸ் அரசுதான் துணை புரிந்தது!’ என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க... இந்திய எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யிடம் நியாயம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் பிரிட்டன் ஈழத் தமிழர்கள். அடுத்து, பி.ஜே.பி. ஆட்சிக்கு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், அவர்களாவது தமிழர்களின் நியாயத் துக்காக நிற்க வேண்டும் என்பதை உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் டெல்லிக்கு வந்த 'பிரித்தானிய தமிழர் பேரவை’யின் தலைவர்களில் ஒருவரான பத்மநாதன் தலைமையிலான குழுவினர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் பி.ஜே.பி-யின் முன்னணித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்டி.ராஜா, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலரையும் சந்தித்துப் பேசினர்.
இதற்கிடையில், இலங்கை வருமாறு சுஷ்மா சுவராஜுக்கு அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்திருந்தது. 'போர் பாதிப்புகளை சுதந்திரமாகப் பார்வையிட வெளிநாட்டு ஊடகங்கள், தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு மறுக்கும் நிலையில்... சுஷ்மா அங்கு சென்றால் போர்க் குற்றம் சாட்டப்படும் அரசுக்கு ஆதரவாக அமைந்துவிடும்’ என்று பிரிட்டன் தமிழர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதை ஏற்றுக்கொண்ட சுஷ்மா, உடனே இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்துவிட்டார்.
ஆனால், பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, திடீரென இலங்கைக்குப் பயணம் செய்தார். சிங்கள இன வெறியர்களால் பெரிதாகக் கொண்டாடப்படும் 'அனகாரிக தர்மபாலா’ என்ற புத்த மார்க்கவாதியின் நினைவு நிகழ்வில் ஜோஷி விரிவுரை ஆற்றினார். இலங்கை பிரதமர் ஜெயரத்ன, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் உள்பட பலருடனும் பேசினார்.
பின்னர் பேசிய ஜோஷி, ''வன்முறை நீங்கிய அமைதி தவழும் நாடாக இலங்கை மாற வேண்டும். அதற்கு ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என அனைத்து இலங்கையர்களும் பணியாற்ற வேண்டும்!'' என்கிறபடி கருத்து வெளியிட, புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு! ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இருந்து ஆதரவுக் குரல் கொடுத்துவரும் இந்து ஆதரவு அமைப்புகள் தனி ஈழ நாட்டுக்கு ஆதரவளித்து வந்த நிலையில்... ஜோஷியின் கொழும்புப் பேச்சு புலம்பெயர் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
''ஏதோ ஒரு காரணத்துக்காக ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களைக் கருவறுத்துக் கொன்றதற்குகாங்கிரஸ் கட்சி துணையாக நின்றது. படுகொலைக்கு எதிராகவும், ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும் நடந்துகொண்ட பி.ஜே.பி., இப்போது காங்கிரஸ் வழியிலேயே செல்கிறதா? கட்சியின் நிலைப் பாட்டுக்கு மாறாக மூத்த தலைவரான ஜோஷி பேசலாமா?'' என அடுத்தடுத்து கேள்விகளை அள்ளி வீசுகிறார்கள், பிரிட்டன் தமிழர்கள். பி.ஜே.பி. மூத்த தலைவர்களை சந்தித்துவிட்டுச் சென்ற பிரித்தானிய தமிழர் பேரவையின் பத்மநாதனிடம் நாம் இதுபற்றி கேட்டோம்.
''இலங்கைத் தீவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு முன்பே, ஈழத் தமிழருக்கு தனியான அரசு செயல்பட்டது. சிங்களர்களின் கையில் அதிகாரம் வந்ததும் தமிழரின் அரசாட்சி பறிபோனது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி ஆட்சி என அமைதி முறையில் தமிழர்கள் போராடினர். எதையுமே தர சிங்களத் தரப்பு முன்வரவில்லை. அன்று முதல் இன்று வரை திட்டமிட்ட இனப் படுகொலைகளை நடத்திவருகிறது. ஈழத் தமிழர்களை எங்களின் பாரம்பரியப் பிரதேசங்களைவிட்டு அகற்றி, அந்த நிலத்தை இலங்கை அரசு தனதாக்கிக்கொண்டு வருகிறது. புத்த மதத்தைப் பின்பற்றாத தமிழ் மக்களின் நிலங்களில், புத்த சின்னங்களை அமைத்து, ஈழத்தை சிங்கள பவுத்தமயமாக்கி வருகிறார்கள். இது ஒரு முழுமையான இன அழிப்பு. போர் முடிந்த பிறகும் ஈழத்தில் தமிழர்களின் துன்பம் தீரவில்லை. ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், இலங்கை அரசு செய்த இனப் படுகொலை, போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக சுதந்திரமான விசாரணைக் குழு வேண்டும் என்கிறார், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன். ஐரோப்பிய நாடாளுமன்றமும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியாவும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆறரை கோடி தமிழ் மக்களும் வாழும் பாரதத்தை ஆளப் போகிறவர்கள், இதை முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும். வரலாற்றில் இருந்த தனி ஈழ அரசையும் மீட்டுத்தர வேண்டும். ஈழத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அவாவும் இதுதான்!'' என்று முடித்தார் பத்மநாதன்.
இரா.தமிழ்க்கனல்
************************************************************************
ஆட்சிக்கு கெட்ட சகுனமா?

தஞ்சை கோயிலுக்கு இடி மேல் இடி
மிழகத்தின் பெருமைமிகு அடையாளங்களில் தஞ்சை பெரிய கோயிலும் ஒன்று. தொல்லியல் துறை இந்தக் கோயிலை பராமரித்து வரும் நிலையில்... இரண்டாவது முறையாகக் கோயில் மீது இடி விழுந்திருக்கவே, மக்கள் பதறிப் போய் இருக்கிறார்கள். 'நமது பாரம்பரியச் சின்னத்தின் பாதுகாப்பு இவ்வளவுதானா?’ என்பதுதான் மக்கள் கேட்கும் கேள்வி.
தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்​காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய​கோயில், 'லாக்கிங் சிஸ்டம்’ எனப்படும் கல்லோடு கல் பிணைத்துக்கொள்ளும் முறையில் நுட்பமாகக் கட்டப்பட்டது. அதனால்தான் எவ்வித சேதாரமும் இல்லாமல் தாக்குப்பிடித்து வருகிறது. சமீபத்தில் இதன் 1,000-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கடந்த நவம்பர் 28, 2010 அன்று தஞ்சை பெரிய​கோயில் கேரளாந்தன் கோபுர நுழைவு வாயிலுக்கு அடுத்து உள்ள ராஜராஜன் கோபுரத்தை இடி ஒன்று தாக்கியது. கோபுரத்தில் இருந்த ஐந்து கலசங்களில் ஒன்று முழுமையாகச் சிதறியது. உடனே பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு புதிய கலசம் பொருத்தப்பட்டது. இது குறித்து கடந்த 12.12.2010 ஜூ.வி-யில் 'கலசத்தைத் தாக்கிய இடி... கலங்கடிக்கும் சர்ச்சைகள்’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அப்போதைய தஞ்சை கலெக்டராக இருந்த சண்முகம், 'பாது​காப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். பெரிய கோயிலின் பாதுகாப்புக்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்​படும்’ என உறுதி அளித்தார். அப்படிச் சொல்லி ஒரு வருடம்கூட முடியாத நிலையில், கடந்த 29-ம் தேதி பெரிய கோயிலில் உள்ள வாகன மண்டபத்தின் மேல்பகுதியில் இடி விழுந்து, சுவர் சேதமடைந்தது. 'பாரம்பரியச் சின்னத்தைப் பாதுகாக்கும் லட்சணம் இதுதானா?’ என்று கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது குறித்துப் பேசும் தஞ்சை வழக்கறிஞர் ஜீவக்குமார், 'தொல்லியல் துறையின் அலட்சியப்போக்கினால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கெனவே தஞ்சை அரண்மனை வளாகத்தில் கலைக் கூடத்துக்கு அருகில் உள்ள ஆயுதக் கோபுரத்தின் மேல் இடி விழுந்திருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு அடுக்குகள் கொண்ட அக்கோபுரம் இடி தாக்கியதில் சேதம் அடைந்தது. அப்போது அதிகாரிகள், 'இடிதாங்கி புதுப்பித்து வைக்கப்படும்!’ என்றனர். பிறகு தஞ்சை பெரியகோயில் ராஜராஜன் கோபுரத்தின் மேல் இடி விழுந்தது. அதற்கு அதிகாரிகள், 'இடிதாங்கி சரியாக இல்லை’ என்று காரணம் சொல்லி கேரளாந்தன் நுழைவு வாயில் மற்றும் மூலஸ்தான கோபுரம் ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார்  25 லட்சம் செலவில் இடிதாங்கிகளைப் பொருத்தினர். இனி இடி தாக்குதல் இருக்காது எனவும் உறுதி அளித்தனர். பிறகு எப்படி இப்போது கோயில் மீது இடி தாக்கியது? ஆயிரம் ஆண்டுகளாகப் புயல், மழை என அனைத்து கால மாற்றங்களையும் சந்தித்து கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோயிலை முழுமையான அக்கறையோடு பாதுகாக்க வேண்டும்!'' என்றார்.
''இடி தாங்கிகளின் உண்மைத் தன்மையை சோதிக்க வேண்டும்'' என பேச ஆரம்பித்த முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், 'ஆன்மிக ரீதியாகக் கோயிலின் மேல் இடி விழுவது என்பது ஓர் எச்சரிக்கை அறிகுறி. உடனே கும்பாபிஷேகம் நடத்தி சாந்தி அடைய வைக்க வேண்டும். 1,000-வது ஆண்டு விழாவின்போது சில பெண்கள் தூய்மைக் குறைவாக வந்திருக்க வாய்ப்புண்டு. அதனால் முறையாக ஆகம பூஜைகள் நடத்த வேண்டும்...'' என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில் சில விஷமிகள், 'ஆட்சியாள​ருக்​கும் தஞ்சை பெரிய கோயிலுக்கும் தொடர்பு உண்டு. ராஜராஜன் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்களை பிரகதீஸ்வரர் முன் தண்டிப்பார்.அதனால்தான் ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தஞ்சை பெரிய கோயிலின் பக்கம் தலை வைத்துக்கூடப் படுப்பதில்லை. மூடநம்பிக்கையை உடைக்கும் பகுத்தறிவாளர் கருணாநிதி கடந்த வருடம் பெரிய கோயில் விழாவில் பட்டாடை உடுத்திவந்து கலந்து கொண்டார். அவரை எச்சரிக்கும் விதமாக அதற்கு சில நாட்களுக்கு முன் பெரிய கோயிலில் இடி விழுந்தும், அதைப் புறக்கணித்தார். அதனால்தான் எதிர்க் கட்சியாக சட்டமன்றத்தில் அமர முடியாத நிலை ஏற்பட்டது. முன்பு எட்டாவது உலகத் தமிழ் மாநாடு தஞ்சாவூரில் நடந்தபோதுகூட ஜெயலலிதா பெரிய கோயிலை எட்டிப் பார்க்காமல் தெளிவாக இருந்தார். ஆனால், இப்போது இடி விழுந்திருப்பது ஜெயலலிதா ஆட்சிக்கு கெட்ட சகுனம்தான். ஆட்சிக்கு ஆபத்து வருவதால் கவனமாக இருக்கவேண்டும்!' என்று பரபரப்பைக் கிளப்பி வருகிறார்கள்.
பெரியகோயிலின் பாதுகாப்பு குறித்து தஞ்சை கலெக்டர் பாஸ்கரனிடம் கேட்டபோது, 'அது தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளதால், அவர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்...'' என்று சொன்னார்.
தஞ்சை பெரிய கோயிலை பராமரிக்கும் தொல்லியல் துறை அலுவலகத்துக்குச் சென்று தகவல் கேட்டோம். ''ஆணையர் யாரிடமும் பேச மாட்டார். இப்போது வெளியூரில் இருக்கிறார். அவரது செல்போன் நம்பரையும் கொடுக்கக்கூடாது என உத்தரவிட்டு இருக்கிறார்!'' என்றனர் அலுவலக உதவியாளர்கள்.
இப்படிக் கறாரும் கண்டிப்புமாக இருப்பவர் கோயில் பாதுகாப்பிலும் கொஞ்சம் அக்கறையாக இருக்கலாமே!
சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்
*********************************************************************************
10-ம் வகுப்பு பாஸ் பண்ணாத புதுச்சேரி அமைச்சர் புலம்பல்!

வதந்தியைக் கிளப்பியே வறுக்கிறாங்கய்யா!
பி.எம்.எல்.கல்யாணசுந்தரம்... இன்றைய தேதிக்கு புதுச்சேரி அரசியலில் சர்ச்சைக்​குரிய நபர் இவர்தான். ரங்கசாமி தலைமையிலான அமைச்சர​வையில் இவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்தே சர்ச்சைகளுக்குக் குறைவில்லை!
'முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனவர், புதுச்சேரி அமைச்சரவையில் ரங்கசாமிக்கு அடுத்த முக்கிய இடத்தைப் பிடித்தது எப்படி?’ என்பதில் ஆரம்பித்து, இவர் மீது உள்ள கிரிமினல் வழக்குகள் பற்றியும், 10-ம் வகுப்புக்கூட படிக்காத ஒருவர் எப்படி கல்வி அமைச்சராக இருக்க முடியும் என்பது வரை ஏராளமான சர்ச்சைகள். இதனை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது, லேட்டஸ்ட் குற்றச்சாட்டு. 10-ம் வகுப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தார் என்பதுதான் அது.
34 வயதான கல்யாணசுந்தரம், கடந்த 1992-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து, 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்றிலும் தேர்ச்சி பெற்றவர், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தோல்வி அடைந்தார். இத்துடன் படிப்பை நிறுத்திக்கொண்டார். 19 ஆண்டுகளுக்குப் பின், கல்வி அமைச்சர் ஆனதும், 'பத்தாவது கூட படிக்காத ஒருவர் கல்வி அமைச்சரா?’ என்று சர்ச்சை எழுந்தவுடன்தான் பாதியிலேயே விட்ட படிப்பைத் தொடர நினைத்தார். இந்த ஆண்டு 10-ம் வகுப்புக்கான தனித்தேர்வு எழுதுவதற்காக இவர் தேர்வு செய்த இடம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருக்கும் தாகூர் மெட்ரிகுலேஷன் பள்ளி. தனித் தேர்வுக்கு விண்ணப்பித்தவருக்கு 1077190 என்ற எண் கொண்ட ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
கடந்த 29-ம் தேதி கல்யாணசுந்தரம் அறிவியல் தேர்வு எழுதினார். புதுச்சேரி அமைச்​சர் திண்டிவனம் பள்ளியில் தேர்வு எழுதும் தகவல் பரவி, மறுநாள் வெள்ளிக்​கிழமை,  சமூக அறிவியல் தேர்வு எழுதவும் பள்ளிக்கு வருவார் என்று எதிர்பார்த்து பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் காத்துக்கிடந்தனர். ஆனால், அன்றைய தினம் அமைச்சர் தேர்வு எழுத வரவில்லை. இதற்கிடையில், அன்று பகல் 11 மணிக்கு 'அமைச்சர் கல்யாணசுந்தரத்துக்கு பதிலாக வேறொருவர் ஆள்மாறாட்டம் செய்து சமூக அறிவியல் தேர்வு எழுதுகிறார்’ என்று ஒரு தகவல் பரவியது. இது தொடர்பாக, தலைமையாசியர் ராஜலட்சுமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ''அமைச்சர் இங்கு தேர்வு எழுத வரவில்லை. ஆள்மாறாட்டமும் நடக்கவில்லை...'' என்று கோபமாகக் கூறினார். அதற்குள் ஆள்மாறாட்டம் சம்பந்தமாக தமிழக அரசுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் தெரியவரவே, அந்தப் பள்ளிக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினர்.
அந்த விசாரணையின் முதல் கட்டத்திலேயே, கல்யாணசுந்தரம், ஹால் டிக்கெட் பெறுவதற்குத் தனது சொந்த முகவரியைக் கொடுக்காமல், திண்டிவனத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் முகவரியைக் கொடுத்துள்ளார் என்று தெரியவர... ''ஹால் டிக்கெட் பெறவே போலி முகவரி கொடுத்தவர், ஏன் ஆள்மாறாட்டம் செய்திருக்க மாட்டார்?'' என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வலுவாக எழுந்தது. உடனே, 'அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலக வேண்டும்’ என்று காங்கிரஸார் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் இறங்கி விட்டனர்.
இந்த ஆள்மாறாட்டக் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சரை சந்தித்துப் பேசினோம். ''என்னை அரசியலில் வீழ்த்த முடியாத, மக்கள் செல்வாக்கை இழந்த என் அரசியல் எதிரிகளால் என்மீது சுமத்தப்படும் அவதூறு குற்றச்சாட்டு இது!
அன்றைய சூழலில் படிப்பைத் தொடர முடியவில்லை. அமைச்சர் பொறுப்பு ஏற்றவுடன் என் கல்வித் தகுதி பற்றி விமர்சித்து வந்ததால், மீண்டும் படிப்பைத் தொடர நினைத்தேன். சென்னை திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு படிப்பிலும் சேர்ந்துள்ளேன். இருந்தாலும், முறையாக 10, மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வு எழுதி பட்டப் படிப்பை முடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன்தான் வயதையும், பணிச் சுமையையும் பொருட்படுத்தாமல் தனித்தேர்வுக்கு விண்ணப்பித்தேன். புத்தகங்கள் வாங்கிப் படித்து, கடந்த 29-ம் தேதி அறிவியல் தேர்வை எழுதினேன். அதில் நிச்சயம் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவேன். ஆனால், 30-ம் தேதி கவர்னருடன் முக்கியக் கூட்டம் இருந்ததால், தேர்வு எழுதச் செல்லவில்லை. அதுவே எனக்கு வருத்தம். இதில், 'ஆள்மாறாட்டம் செய்தேன்’ என்று வேறு குற்றம் சுமத்துகிறார்கள். புதுச்சேரியில் தேர்வு எழுதினால் அனைவருக்கும் தெரியும், தேவையில்லாத பரபரப்பு ஏற்படும் என்ற காரணத்தால்தான் திண்டிவனம் சென்றேன். நான் வகிப்பது ஒரு பொறுப்புள்ள பதவி என்பதால், நேர்மையாகத் தேர்வு எழுதித்தான் வெற்றி பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறேன். இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகளை என் தொகுதி மக்கள் துணையுடன் முறியடிப்பேன்!'' என்றார் வேகமாக.
இந்த விஷயம் குறித்து, தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, ''நடந்த விஷயங்கள் என் கவனத்துக்கு வந்தவுடன், எனது துறை அதிகாரிகளிடம் உடனடியாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளேன். மேலும் 29-ம் தேதி நடைபெற்ற அறிவியல் தேர்வுக்கான விடைத்தாளையும் கைப்பற்றி, அது சம்பந்தப்பட்டவரின் கையெழுத்துதானா என்றும் ஆய்வு செய்யப்படும். தவறு நடந்திருந்தால், உறுதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை பாயும்!'' என்றார்.
நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை...
டி.கலைச்செல்வன், படங்கள்: ஜெ.முருகன்
*********************************************************************************
தப்பு செய்தாரா ஜமுனா மகன்?

ல்யாணம் என்ற போர்வையில் ஒரு பெண்ணை ஏமாற்றியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டில், பிரபல சித்த மருத்துவர் டாக்டர் ஜமுனாவின் மகன் முரளி கிருஷ்ண பாரதி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதுதான் சென்னையில் ஹாட்.
மருத்துவர்கள் வட்டாரத்தில் பரபரப்புத் தீயைப் பற்ற வைத்திருக்கும் இந்த விவகாரம் குறித்து, தாம்பரம் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரியிடம் பேசினோம்.
''தாம்பரம் சானடோரியத்தைச் சேர்ந்த டாக்டர் ஜமுனா, அதே பகுதியில் கார்த்திக் கருவாக்கம் என்ற பெயரில் ஒரு மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மகனான முரளி கிருஷ்ண பாரதி எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.டி. இறுதியாண்டு படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் எம்.டி.எஸ் படித்து வந்த பிரேமா என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 11.9.11 அன்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் மக்கள் குறை தீர்ப்பு நிகழ்வின்போது ஒரு புகார் கொடுத்தார். அதில், 'ஒரு முறை பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள்என்னைக் கேலி செய்தபோது முரளி கிருஷ்ண பாரதி எனக்கு ஆதரவாக இருந்தார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. நாங்கள் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தோம். விரைவில் என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அழுது அடம்பிடித்தேன். இதனால் வேறு வழியில்லாமல் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு என்னை அழைத்துச் சென்று தாலி காட்டினார். அதன் பிறகுதான் எனக்கு அவரின் இன்னொரு முகம் தெரிய ஆரம்பித்தது. இடியாக வந்தது இன்னோர் அதிர்ச்சி.
முரளி கிருஷ்ண பாரதிக்கு 2001-ம் ஆண்டு அகிலா என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2002-ல் வரதட்சணைக் கொடுமை வழக்கில் சிறைக்குப் போய் இருக்கிறார். 2006-ல் இருவருக்கும் விவாகரத்து ஆகி இருக்கிறது. இது எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து என் வாழ்க்கையைச் சீரழித்து விட்டார். இது போதாது என்று இப்போது என்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணைக் கரம் பிடிக்க இருக்கிறார். வரும் 6-ம் தேதி என் கணவர் முரளி கிருஷ்ண பாரதிக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என்று கோரி இருந்தார்.
மேலதிகாரிகளின் மேற்பார்வை​யில் இந்த புகார் மனுவின் உண்மைத்தன்மை குறித்து தீவிர விசார​னை செய்தேன். முரளி கிருஷ்ண பாரதியைக் கடந்த 28-ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தோம். இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் துணிச்சலுடன் புகார் கொடுத்த பிரேமாவைப் பாராட்டுகிறோம்...'' என்றார் அக்கறையாக.
அந்தப் பெண்ணிடம் நாம் பேசியபோது, ''எனக்கு தாலி கட்டிய கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்தார். அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. அதனால் வேறு வழியில்லாமல்தான் புகார் கொடுத்தேன். நான் அவர் மீது வைத்துள்ள அன்பு மாறாதது. அவர் மனம் திருந்தி என்னை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தால், எனது புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு அவரோடு வாழத் தயாராக இருக்கிறேன். மற்றபடி என் கணவர் சிறையில் கஷ்டப்படுவது எனக்கு வேதனைதான்!'' என்று மெல்லிய குரலில் பேசினார்.
இதுகுறித்து டாக்டர் ஜமுனாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டோம். போனை எடுத்த அவரது உதவியாளர், ''மேடம் வெளியே போய் இருக்காங்க. வந்ததும் நீங்க பேசிய விவரத்தை சொல்கிறேன்...'' என்றார். சிறிது நேரம் கழித்து டாக்டர் ஜமுனாவின் இளைய மகன் டாக்டர் கார்த்திக் நம்மைத் தொடர்பு கொண்டு, ''அம்மாவுக்கு மன உளைச்சல். உடல் நிலையும் சரி இல்லை. தூங்கிட்டு இருக்காங்க. இப்போதைக்கு அவங்க இதுகுறித்துப் பேசும் மனநிலையில் இல்லை. என் அண்ணன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் துளியும் உண்மை கிடையாது. நீதிமன்றத்தில் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு, அதன் பிறகு அனைத்து மீடியாவையும் அழைத்து விரிவாக விளக்கம் கொடுப்போம்...'' என்று வருத்தம் மேலிடக் கூறினார்.
இதனிடையே மீண்டும் நம்மைத் தொடர்பு கொண்ட தாம்பரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், ''இன்னொரு பெண்ணையும் காதல் என்ற பெயரில் முரளி கிருஷ்ண பாரதி ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. நாங்கள் அவரைக் கைது செய்த விஷயம் கேள்விப்பட்டு, அந்தப் பெண் கண்ணீர் மல்க நன்றி கூறியிருக்கிறார்!'' என்றார்.படித்தவன் பாவம் செய்தால் என்னவாகும் என்று பாரதி சொல்லி வைத்திருப்பதை இவர் படித்தது இல்லையோ?
தி.கோபிவிஜய்
************************************************************************
ஐ.நா. பேரைச் சொல்லி... ஒரு அடேங்கப்பா மோசடி?

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவ​தாக இதுவரை சில டிராவல்ஸ் கம்பெனிகள் மோசடி செய்து அவ்வப்​போது செய்திகளில் அடிபடும். ஆனால், இப்போது மனித உரிமை அமைப்பு என்ற பெயரால்  ஒரு கும்பலும், இதே வித்தையைக் காட்டி ஆட்டையைப் போட்ட விவகாரம் அம்பலமாகி உள்ளது!
கடந்த 30-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த 11 இளைஞர்கள், ''ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைக் கழகம் என்ற அமைப்பை நடத்தி வந்த அந்திரியாஸ், மெர்சி ஆகியோர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி எங்களை ஏமாற்றிவிட்டார்கள். நாங்கள் கொடுத்த பணத்தைப் பெற்றுத் தாருங்கள்!’ என்று கண்ணீர் புகார் கொடுத்தனர்.
பணம் கொடுத்தவர்களில் ஒருவரான ஸ்டாலின் சகாயராஜ் நம்மிடம் பேசினார். ''என் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் ராரா முத்திரக்கோட்டை. பிளஸ் டூ முடிச்சுட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தேன். என் நண்பர் ஒருவர், 'சென்னையில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைக் கழகம்னு ஒரு அமைப்பு இருக்கு. அவங்க வெளிநாட்டுக்கு ஆள் எடுத்து வேலைக்கு அனுப்புறாங்க’னு சொன்னார். அதை நம்பி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னைக்கு வந்தேன். ஆழ்வார்திருநகர் இணைப்பில் உள்ள அந்தக் கழகத்தின் அலுவலகத்தில் அதன் நிறுவனர் அந்திரியாஸ் போபன் ஜாக்ஸனையும், செயலாளர் மெர்சியையும் (அந்திரியாஸின் மனைவி) பார்த்தேன். தமிழக செயலாளர் ரெக்ஸ் என்பவரும் அவர்களோடு இருந்தார். 'எங்க அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்றது. எங்களுக்கு உலகம் முழுவதும் தொடர்பு இருக்கு. ஐ.நா. மூலமாக நிறையப் பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி உள்ளோம். உங்களை லண்டனுக்கு வேலைக்கு அனுப்புறோம். மாசம்  4 லட்சம் சம்பளம். உங்களை லண்டன் அனுப்ப  6 லட்சம் செலவாகும்’ என்று சொன்னார்கள். 'லண்டன் வேலை... லட்சத்தில் சம்பளம்’ என்று சொன்னதும் எனக்குப் பயங்கர சந்தோஷம். உடனடியாக ஊருக்குச் சென்று எனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடனாகப் பணம் பெற்று, 23.7.2010 அன்று செயலாளர் மெர்சியின் வங்கிக் கணக்கில் (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எண்: 31202082906)  2 லட்சத்தை டெபாசிட் செய்தேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம்  3,55,000 வரை கொடுத்தேன். ஒவ்வொரு மாதமும் என்னை சென்னை வரச் சொன்ன அந்திரியாஸ், நிறைய பேப்பரில் கையெழுத்து வாங்கினார். கடந்த ஏப்ரல் மாதம் வரை அவரது அலுவலகத்துக்கு வந்து போனேன். மே மாதம் வந்தபோது, அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சியில் உறைந்து, அக்கம் பக்கத்தில் விசாரித்தேன். யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அலுவலகத்தைக் காலி செய்துகொண்டு ஓடிவிட்டார்கள் என்றனர். அந்த அலுவலகத்தில் இருந்த அனைவரது மொபைல் எண்கள் எல்லாம் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தன. அதன் பிறகு மேலும் விசாரித்தபோது, அந்தக் கும்பல் என்னைப்போல நூற்றுக்கணக்கான அப்பாவிகளிடம், ஐக்கிய நாடுகள் சபையின் பேரைச் சொல்லி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் ஏமாற்றி ஏப்பம்விட்டது தெரிய வந்தது. இப்போது எங்கள் மாவட்டத்தைச் சார்ந்த 11 பேர் மட்டும் புகார் கொடுத்துள்ளோம். இந்தச் செய்தி உங்கள் பத்திரிகையில் வரும்போது, அந்த கும்பலின் போலி முகத்தைப் புரிந்துகொண்டு மற்ற மாவட்டங்களில் இருந்தும் புற்றீசல்களாகப் புகார் கொடுக்க வருவார்கள்...'' என்று சோகத்துடன் சொன்னார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைக் கழகம் அமைப்பை நடத்தி வந்த அந்திரியாஸ், மெர்சி ஆகியோரின் மொபைல் எண்களுக்கு நாமும் பல முறை தொடர்புகொண்டோம். தொடர்ந்து சுவிட்ச் ஆஃப்! அவர்களைப்பற்றி விசாரித்தபோது கணவன் மனைவி இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இந்த மோசடி விவகாரத்தை நம்முடைய  கவனத்துக்குக் கொண்டுவந்த 'மனித உரிமை’ ஆர்வலர்  ராமகிருஷ்ணன், ''ஒரு மாநிலத்துக்குப் போய், தினுசு தினுசாக பல தில்லாலங்கடிக் கதைகளை அவிழ்த்துவிட்டு, மொத்தமாக லபக்கிய பின் அடுத்த மாநிலத்துக்கு எஸ்கேப் ஆவதுதான் இந்த ஜோடிகளின் கிரிமினல் வரலாறு. இந்தியாவில் பல மாநில காவல் துறையில் இவர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்தாலே, இவர்கள் எப்பேர்ப்பட்ட கில்லாடிகள் என்பது தெரிய வரும். மனித உரிமை அமைப்பு என்பது சமூகத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் வல்லமை படைத்தது. அப்படிப்பட்ட ஒரு அமைப்பின் பெயரில் இப்படி மெகா மோசடி செய்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து, கடுமையாக தண்டிக்க வேண்டும். மேலும், அனைத்து மனித உரிமை அமைப்புகளையும் அரசு தீவிரமாக கண்காணித்தால்தான், இதுபோன்ற மோசடிகள் நடைபெறாமல் தடுக்க முடியும்!'' என்றார்.
ஐ.நா-வுக்கே அல்வாவா!
தி.கோபிவிஜய், படம்: ச.இரா.ஸ்ரீதர்
*********************************************************************************
தடகள வீரர்கள் என்றால் இளக்காரமா?

ஆதங்கத்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்
'தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால்,   1 கோடி பரிசு என்றும், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றால்  5 லட்சம், வெள்ளி வென்றால்
 3 லட்சம், வெண்கலம் வென்றால்  2 லட்சம்’ என்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்து இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்து முடிந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை அள்ளி வந்த தமிழக வீரர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை எதுவுமே வழங்கப்படவில்லை’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) தகவல் வரவே விசாரணையில் இறங்கினோம்.
தங்கம் வென்ற விளையாட்டு வீரர் ஒருவர் பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசினார். ''ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு  3 கோடியும், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு 1 கோடியும் பரிசு அறிவித்து, அதை ஒரே மாதத்தில் வீரர்களிடம் கொடுத்து பெருமை தேடிக்கொண்டார், அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி. ஆனால், உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஜார்க்கண்டில் நடந்து முடிந்த தேசிய விளை​யாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்​கங்கள் வென்ற வீரர்களுக்கு இது வரை தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படவே இல்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிகளை அள்ளி வீசுவதிலும், அதை உடனடியாக வீரர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் முனைப்புக் காட்டும் தமிழக அரசு, தமிழ்​நாட்டுக்​காகப் பதக்கம் வென்ற எங்களைப் போன்ற தடகள வீரர்களைப் புறக்கணிக்கிறார்கள், இளக்காரமாகப் பார்க்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?'' என்று ஆதங்கப்பட்டவர், ''கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போட்டியில் 14 தமிழக வீரர்கள் தங்கப் பதக்கத்தையும், 12 பேர் வெள்ளிப் பதக்கத்தையும், 27 பேர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். இந்த வீரர்களுக்குப் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும், வீரர்களின் பரிசுத்தொகையில் 15 சதவிகிதம் வழங்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள்நெருங்கி வரும் வேளையிலும் கடந்த ஆண்டு வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரையிலும் பரிசு கொடுக்க​வில்லை என்பது வேதனையாக இருக்கிறது...'' என்றார் வருத்தத்துடன்.
அதையடுத்துப் பேசிய பயிற்சியாளர் ஒருவரும் பெயரை மறைத்துப் பேசினார். ''தற்போது பொறுப்பு ஏற்று இருக்கும் அ.தி.மு.க. அரசிடம் இது குறித்துப் பல முறை நினைவூட்டல் செய்தும், பரிசுத் தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். 'ஏன் இத்தனை காலதாமதம்’ என்று கேட்டால், 'பரிசு வென்றவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை சரிபார்த்து வருகிறோம் என்கிறார்கள். தமிழக அணிக்காக ஒருவர் விளையாடப்போகிறார் என்றால், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை போட்டிகளுக்கு அழைத்துச் செல்லுவதற்கு முன்பே அல்லவா சரிபார்க்க வேண்டும். இப்போது சரிபார்க்கிறேன் என்று சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றிருக்கும் முக்கால்வாசி பேர் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். கடன் வாங்கி பயிற்சி மேற்கொள்பவர்கள்தான் அதிகம். இந்த இளம் வயதினருக்கு அவ்வப்போது பரிசுத் தொகையை கொடுத்து உற்சாகப்படுத்தி​னால்தானே அவர்கள் ஆர்வமுடன் அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயாராக முடியும். மற்ற மாநிலங்களில் எல்லாம் விளையாட்டு வீரர்களுக்கு அரசு தரப்பில் இருந்து கூடுதலாக பரிசுத் தொகையும், நிறைய நிறுவனங்களின் அரவணைப்பும், பரிசும் கிடைக்கிறது. அதனால்தான் பிற மாநிலத்தில் விளையாட்டு வீரர்கள் அதிக உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்கள். இங்கே வெற்றி பெற்றால்கூட அரசிடம் இருந்து மரியாதையும் பரிசும் கிடைக்கவில்லை எனும்போது, மனம் நொந்துபோகும் பெற்றோர்கள் தொடர்ந்து விளையாட பிள்ளைகளை அனுமதிப்பதில்லை. ஒலிம்பிக்கில் தமிழர்கள் சாதிக்கவேண்டும் என்றால், இந்த நிலையில் இருக்கும் வெற்றி வீரர்களை ஊக்குவித்தால்தான் நடக்கும். இனியாவது அரசு உடனடியாக செயலில் இறங்கவேண்டும்!'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஊக்கத்தொகை இன்னமும் வழங்கப்படாத காரணம் குறித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் மேரி ராஜாத்தியிடம் பேசினோம். ''அரசாங்​கம் மாறியதால் பரிசுத் தொகை வழங்குவதில் தாமதமாகியுள்ளது. விரைவில் கொடுத்துவிடுவோம்!'' என்றார்.
பள்ளிக்கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இந்த தாமதம் குறித்துப் பேசினோம். ''உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை காரணமாக தற்போது பரிசு வழங்க​முடி​யாத நிலை இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் நிச்சயமாகக்  கொடுக்கப்படும்!'' என்றார்.
சொல்வதை உடனே செயலில் அரசு காட்ட​வேண்டும்!
சார்லஸ்
************************************************************************

********************************************************************************************


மும்முனைப் போட்டியில் மூச்சுத்திணறும் மதுரை!

பரபரக்கும் மஸ்டர் ரோல் ஊழல்
சென்னைக்கு அடுத்தபடியாகக் கடும் போட்டியில் இருக்கிறது, மதுரை மாநகராட்சி.
தொடர்ந்து மூன்று முறையாக மதுரை மாநகராட்சியை கைப்பற்றிய தி.மு.க-வின் சார்பாகக் களத்தில் நிற்கிறார் முன்னாள் கவுன்சிலர் பாக்யநாதன். 'இப்ப ஜெயிக்கலைன்னா பிறகு எப்ப?’ என்று மூர்க்கத்தனமாக முண்டாசு கட்டுகிறார், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பா. 'எங்க கேப்டன் பிறந்து வளர்ந்த ஊரை நாங்க விட்டுக் குடுப்பமாக்கும்?’ என்று வீறாப்புடன் விறைக்கிறார் தே.மு.தி.க-வின் கவியரசு. இவர்களைத் தவிர, 'மக்​களே... எங்களுக்கும் ஒரு சான்ஸ் குடுக்கலாம்ல...’ என்ற கெஞ்சலோடு ம.தி.மு.க-வின் பாஸ்கர சேதுபதி, காங்கிரஸின் சிலுவை (பரிதாபம்ங்க!), பி.ஜே.பி-யின் டாக்டர் ராஜேந்திரன், புதிய தமிழகத்தின் அன்பரசன், விடுதலைச் சிறுத்தைகளின் பசும்பொன், ஐ.ஜே.கே-யின் ஈஸ்வரி உள்ளிட்டோரும் கைகூப்புகிறார்கள்!
கடந்த காலத்தில் யார் யாரோ செய்து விட்டுப் போயிருக்கும் 'நல்ல’ காரியங்களுக்காக மதுரை மக்களிடம் சொல்லடி படவேண்டிய கட்டாயம் பாக்யநாதனுக்கு. 'சிரிப்பைக்கூட சிக்கன​மாகத்தான் பயன்படுத்துவார்’ என்று சொந்தக் கட்சியினரே கமென்ட் அடிப்பதும், வேட்பாளர் தேர்வில் அதிருப்தியில் இருக்கும் தி.மு.க-வினர் பலர் பட்டும் படாமல் களத்தில் நிற்பதும் இவருக்கு பலவீனம். 'வியூகப் புலி’ என்று வர்ணிக்கப்படும் அழகிரிக்கு, எந்தப் பக்கம் போனாலும் கேட் போடுகிறது ஆளும் கட்சி.
கவுன்சிலர் வேட்பாளர்கள் தேர்வில் உச்சகட்டக் குழப்பம் அ.தி.மு.க-வில்! இதை​எல்லாம் சரி செய்வதெற்கே செல்லப்பா​வுக்கு நேரம் போதவில்லை. ''இவரைத் தலைதூக்க விடலாமா?'' என கோஷ்டித் தலைகள் சில கொம்பு சிலுப்புவதையும் பார்க்க முடிகிறது. கடந்த 2001-ல் ஆளும் கட்சியாக இருந்தும் உள்ளடி வேலைகளால் மதுரை மேயர், துணை மேயர் இரண்டு பதவிகளையும் கோட்டை விட்டது அ.தி.மு.க! ''இம்முறை அப்படி ஏதாவது நடந்தால்..?'' என்று முன்கூட்டியே எச்சரித்திருக்கிறாராம் ஜெயலலிதா. எனவே, செல்லப்பாவின் வெற்றியில்தான் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதய​குமார் உள்ளிட்டவர்களின் கௌரவமும் அடங்கி இருக்கிறது.
அதிகாரத்தில் இருக்கும்போது மதுரைக்கு செய்து கொடுத்த திட்டங்களைச் சொல்லி மக்களை சந்திக்கிறது தி.மு.க. திட்டங்களில் நடந்திருக்கும் ஊழல்களைச் சொல்லி வேட்டு வைக்கிறது அ.தி.மு.க. ''மதுரை மாநகராட்சியில் ஏகத்தும் ஊழல் செய்திருக்கும் தி.மு.க-காரர்கள் துப்புரவுப்பணியாளர்களின் சம்பளத்தையும் விட்டு வைக்கலை. துப்புரவுப் பணிகளுக்காக சுமார் 1,200 பேரை தற்காலிகப் பணியில் சேர்த்ததா கணக்குச் சொல்றாங்க. ஆனால், 800 பேர்கூட பணியில் இல்லை. ஒரே பெயரை இரண்டு இடங்களில் மஸ்டர் ரோலில் எழுதி, பணத்தை எடுத்து இருக்கிறார்கள். வேலை பார்த்தவர்களுக்கு கொடுத்த பணத்திலும் தலைக்கு இவ்வளவு என்று பறித்திருக்கிறார்கள்.
ரிங்க் ரோடு டோல் கேட் வசூல் 2001-ல் தினசரி  2 லட்சமாக இருந்தது. இப்போது  1.5 லட்சமா குறைஞ்சது எப்படின்னு தெரியலை. இந்த ரோட்டை பராமரிப்பதற்கு வருஷத்துக்கு  1.5 கோடியை அழகிரியின் நிழல் பிரமுகர் ஒருவரின் நிறுவனத்துக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், அங்கே எந்த விதமான பராமரிப்பு பணியும் நடக்கவேயில்லை. இப்படி ஏகப்பட்ட ஊழல்கள் எங்ககிட்ட சிக்கியிருக்கு. எல்லாத்தையும் தினம் ஒன்றாக எடுத்து விடுவோம். கல்லாறு குடிநீர் திட்டம், வைகையில் இரு புறமும் பூங்கா அமைக்கிறது உட்பட ஏகப்பட்ட திட்டங்கள் கை​வசம் இருக்கு. மதுரைக்குள் அம்மா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை​
க¬​ளப்பார்த்து​விட்டு, 'அ.தி.மு.க- தான் நமக்கு பாதுகாப்பா இருக் கும்’னு மக்கள் நம்புறாங்க. இதெல்​லாமே எங்களை ஜெயிக்க வைக்கும்!'' என்கிறார் ராஜன் செல்​லப்பா.
பாக்யநாதனோ, ''இப்ப அ.தி.மு.க-காரங்க அசுர பலத்தோட நிக்கிறதா நெனைக்கிறாங்க. மக்கள் சக்தி அதையெல்லாம் மாயை ஆக்கிவிடும். இதற்கு முன் ஆட்சியில் இருந்தப்ப மதுரைக்குள்ளயே வராம இருந்த ஜெயலலிதா, செல்லூர் ரயில்வே மேம்​பாலப் பணிகளை முடக்​கிப் போட்டதை மக்கள் மறந்திருப்பாங்களா? சென்ட்ரல் மார்க்கெட் விரிவாக்கம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், ஜி.ஹெச். விரிவாக்கம், மதுரை உயர் நீதிமன்றக் கிளை என தி.மு.க. அரசின் சாதனைகளை அடுக்கலாமே! இது மாதிரி ஏதாவது ஒரு திட்டத்தை அவங்க நிறைவேத்துனதா சொல்ல முடியுமா? ஆட்சியில் அவங்க பலமா இருக்கலாம். ஆனா, செய்திருக்கும் சாதனைகளால் நாங்க வலிமையா நிற்கிறோம். யார் ஜெயிக்கிறாங்கன்னு பொறுத்திருந்து பாருங்க...'' என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.
ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிராம் இங்கே தனித்து நின்று 37 ஆயிரம் வாக்குகள் வாங்கி இருப்பது ஊடுபயிராக நிற்கும் தே.மு.தி.க. கவியரசுக்கு நல்ல உரம்! அந்த நம்பிக்கையில், ''மதுரையோட இண்டு இடுக்கெல்லாம் கேப்டனுக்குத் தெரியும். 'சின்ன வயசுல நான் பார்த்தது மாதிரியே எந்த முன்னேற்றமும் இல்லாம இருக்குப்பா மதுரை. அதை டெவலப் பண்ற வேலையை உன்னைய வெச்சுத்தான் செய்யப் போறேன்’னு சொல்லித்தான் கேப்டன் என்னைய இங்க நிறுத்தியிருக்கார்...'' என்று கவிபாடுகிறார் கவியரசு!
தொட்டதைத் தொடரத் துடிக்கும் தி.மு.க., எப்போதோ விட்டதைப் பிடிக்கத் துடிக்கும் அ.தி.மு.க., பிள்ளையார் சுழிபோடப் பிரயாசைப்படும் தே.மு.தி.க. - மும்முனை போட்டியில் மூச்சுத் திணறுகிறது கூடல் மாநகரம்!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
*********************************************************************************
ரவுண்ட் வரும் ராமதாஸ் மேயர்கள்!

பா.ம.க. ரிப்போர்ட்!
தேர்தல் பெருவெள்ளம் வரும்போதெல்லாம்... சகோதரர் அல்லது சகோதரியின் தோள் மீது அமர்ந்து பாதுகாப்பாகக் கரையேறுவதுதான் டாக்டர் ராமதாஸின் வழக்கம். ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு திராவிடக் கட்சிகளும் தனித்தே களமிறங்கிவிட... தவித்து நின்றவருக்கு 'நடிகர்’ தலைமையிலான கூட்டணிக்குச் செல்லவும் சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை. விளைவு, ஆங்காங்கே சில கட்சிகளின் நட்புடன் தனியாகத் தேர்தலை சந்திக்கிறார். தேர்தல் களத்தில் பதறி நிற்கும் பா.ம.க. வேட்பாளர்களின் ப்ரொஃபைல் இனி...
 ராஜேந்திரன் - கோவை: பா.ம.க-வின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் ராஜேந்திரன்தான் அங்கே மேயர் வேட்பாளர். ''ஒன்பது வருஷமா கட்சியில இருக்கேன். மருத்துவர் அறிவிக்கிற எல்லாப் போராட்டத்திலேயும் கலந்துக்குவேன். தொடர் விசுவாசியா இருக்கிற எனக்கு அவர் கொடுத்திருக்கிற பெரிய அங்கீகாரம் இது. ஒருவேளை ஜெயிச்சு கோவை மேயராயிட்டேன்னா, மேயருக்கு ஒதுக்குற பங்களாவுல குடியேறமாட்டேன், மேயருக்கான காரை யூஸ் பண்ண மாட்டேன். இப்ப எப்படியிருக்கேனோ... இதே மாதிரியேதான் மேயரான பிறகும் இருப்பேனுங்க!'' என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார் இவர்.
குருசோபனா - தூத்துக்குடி:  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் எம்.ஏ. படித்துவருகிறார் குருசோபனா. இந்த மாணவிதான் பா.ம.க-வின் மேயர் வேட்பாளர். இவரது கணவர் கிறிஸ்டி மாநகர பா.ம.க. செயலாளராக இருக்கிறார். ''கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரா இருக்கேன். நாட்டு நடப்பு தெரியும். தூத்துக்குடி மாநகராட்சிக்கு என்னென்ன செய்யணும்னு தெரியும். படிச்சவங்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுக்கணும். அப்பத்தான் வளர்ச்சி கிடைக்கும்!'' என்கிறார் குருசோபனா. நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இவர். கணவர் கிறிஸ்டியோ மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதனால் இரண்டு சமுதாயங்களின் ஆதரவும் கிடைக்கும் என நம்பு​கிறார்கள்.
அருள் - சேலம்:  கட்சி ஆரம்பித்ததில் இருந்தே கட்சியில் இருக்கிறார் அருள். படிப்படியாக முன்னேறியவர். அன்புமணியின் ஆசி இருப்பதால் நீண்ட காலமாக மாநில இளைஞர் அணிச் செயலாளராக இருக்கிறார். 2001-ல் சேலம் மாநகர மேயருக்குப் போட்டியிட்டுத் தோற்ற அனுபவம் கொண்டவர். சேலம் மாநகராட்சி வன்னியர் பெல்ட் என்பது இவருக்குத் தைரியம் தந்திருக்கிறது.
மற்ற திராவிடக் கட்சிகள் வன்னியர் இல்லாதவர்களுக்கு ஸீட் கொடுத்திருப்பதால், 'திராவிடக் கட்சிகள் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் தன்னை ஆதரிப்பார்கள்’ என்பது அருளின் கணக்கு!
சண்முகப்பிரியா - நெல்லை: நெல்லைக்கான வேட்பாளரை இறுதி செய்ய பா.ம.க. திணறிவிட்டது. செலவை நினைத்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. இதனால், மாவட்டச் செயலாளரான லியோன் தங்கராஜின் மனைவி சண்முகப்பிரியாவை களம் இறக்கி இருக்கிறார்கள். கட்சிக்கும் மக்களுக்கும் துளியும் அறிமுகம் இல்லாதவர். 'ஜான் பாண்டியனின் 'தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துடன்’ கூட்டணி அமைத்து, பா.ம.க. தேர்தலை சந்திப்பது மட்டுமே இவர்களுக்கு லேசான தெம்பு தருகிறது!
வெண்ணிலா மகேந்திரன் - வேலூர்: வேலூர் தொகுதி பா.ம.க. வேட்பாளராக முதலில் அறிவிக்கப்​பட்டவர் லீலாவதி. ஆனால், வேலூர் மாநகராட்சியின் வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் இல்லாத காரணத்தால், இவருக்கு பதிலாக தொரப்பாடியைச் சேர்ந்த வெண்ணிலா மகேந்திரன் வேட்பாளர் ஆனார். தன் பெயரை வேட்பாளராக அறிவித்ததும் அவருக்கு மயக்கம் வராத குறைதான். 'யாருப்பா அந்த வெண்ணிலா?’ என்று மேயர் வேட்பாளரின் முகத்தைப் பார்க்க, கட்சி அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் மாநகர நிர்வாகிகள்.
ரமேஷ் (எ) ராமச்சந்திரன் - மதுரை:  கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வில்லாபுரம் ஆர்.கே.ரமேஷை வேட்பாளராக அறிவித்தது தலைமை. தி.மு.க-வில் வளர்ந்து பா.ம.க-வுக்குள் வந்தவர் இந்த ரமேஷ். மதுரைக்குள் கணிசமாக இருக்கும் பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இவரை டிக் செய்தாராம் ராமதாஸ். ஆனால், போட்டியிட மறுத்தார் ரமேஷ். ஆனாலும் வேறு நபர்கள் கிடைக்காததால் ரமேஷ் தலையிலேயே விடிந்துவிட்டது.
அருள்மொழி - ஈரோடு: பா.ம.க-வின் ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருக்கிறார். தலைமையோடு நெருக்கத்தில் இருப்பதால், வேட்பாளராக இழுத்து விட்டிருக்கிறார்கள். பி.பி. அக்ரஹாரம் பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்திருக்கிறார். இதன் மூலம் அந்த வட்டாரத்தில் பரிச்சயமாகி இருக்கிறாரே தவிர, டோட்டல் மாநகராட்சிக்கும் அறிமுக​மான மனிதரல்ல. ஈரோடு மாவட்டத்தின் பவானி, அந்தியூர் போன்ற தொகுதிகளில்தான் வன்னியர்கள் அதிகம் வசிக்​கிறார்கள். ஆனால், மாநகராட்சி எல்லைக்குள் வன்னியர்​கள் மைனாரிட்டிதான். அருள்மொழியின் முகத்தில் ஒரு கலவரம் தெரியத்தான் செய்கிறது.
வடிவேல் கவுண்டர் - திருப்பூர்: கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் வடிவேல் கவுண்டரை விட்டால், திருப்பூர் வட்டாரத்தில் பா.ம.க-வுக்கு வேறு ஆளில்லை என்பது நிதர்சனம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பரமத்தி வேலூர் தொகுதியில் போட்டியிட்டுத் தனியரசுவிடம் தோற்றவர். அடிக்கடி போராட்டங்களை நடத்துவதால், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரிச்சயமானவர்தான் வடிவேல். ஓரளவு வசதியானவராகவும் இருப்பது, தலைமைக்கு வசதியாகிவிட்டது. ஆனாலும் 'மறுபடியும் முதல்ல இருந்தா?’ என்று செலவை நினைத்து இவர் கலங்குவதாகத் தகவல்!
ஜூ.வி. டீம்
*************************************************************************
நேத்து ஒரு ஆள்.. இன்னைக்கு 29 பேர்... நாளைக்கு..?

கேள்விகளால் தூபம் போடும் விஜயகாந்த்
முதல் ஆளாக, மயிலை மாங்கொல்லையில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்​துக்குப் புறப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாகனம், கடந்த நான்காவது நாளில் செப்டம்பர் 30-ம் தேதி நாகை மாவட்டத்துக்குள் நுழைந்தது. அவரது பிரசாரம், முந்தைய பயணங்களில் இருந்து முற்றிலும் மாறானதாக இருக்கிறது. கடந்த காலத் தேர்தல் களம் தந்த அனுபவம் இந்த முறை அவரைப் பக்குவப்படுத்தி இருக்கிறது. பிரசாரத்தில் முன்புபோல் அதிக​மாகத் தனிநபர் தாக்குதல்கள் இல்லாமல், நச்சென்று விஷயத்துக்கு வருகிறார். தங்களை தனித்துக் களம் இறக்கிவிட்ட அ.தி.மு.க-வைக்கூட இலைமறைவு காய்மறைவாகத்தான் சாடுகிறார்.
மயிலாடுதுறையில்தான் முதல் பாயின்ட். அங்கு போட்டியிடும் அலமேலுவுக்கு ஆதரவாக வாக்குக் கேட்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பகல் முழுக்க வெளுத்து வாங்கிய வெயில், மாலையில் மறைய, அவர் வருவதற்கு அரை மணிக்கு முன்பு இருந்து அடித்துத் துவைத்தது மழை! இருந்தாலும், கடை ஓரங்களில் ஒண்டி அவ்வப்போது நனைந்துகொண்டு நின்றார்கள் தொண்டர்கள்.
மழையின் இரைச்சலைத் தாண்டி மேடையில் பேசிய விஜயகாந்த், ''ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்...'' என்ற அறிமுகத்தோடு வாளை வீச ஆரம்பித்தார். அவரது வீச்சு இன்றைய நாட்டு நடப்பை எடுத்துச் சொன்னது. ''ஒருத்தன் குடும்பத்தோடு வண்டியில் போனால்... வீட்டுக்குப் போய் திரும்பிப் பார்த்தா... அவன் மட்டும்தான் இருக்கான். மத்தவங்க வழியிலயே எங்காச்சும் விழுந்துடறாங்க. அந்த நிலைமையில்தான் இருக்கு ரோடு. ரெண்டு பேர் வண்டியில் போனா, ரோடு இருக்கிற நிலையில் ஒருத்தன் பாக்கெட்டில் இருக்கிற செல்போன் அடுத்தவன் பாக்கெட்டுக்குப் போயிடுது. ரோடுகளைப் பராமரிக்கிறது உள்ளாட்சியில் இருக்கிறவங்களோட வேலை. ஆனா, அவற்றை அவங்க செய்யலை. ஆனா, எங்கக் கட்சிகாரங்க இதை எல்லாம் நிச்சயமா சரியா செய்வாங்க. அவங்​களும் சரி, எங்களோட கூட்டணியில இருக்கிற கம்யூனிஸ்ட் தோழர்களும் சரி... லஞ்சம் வாங்க மாட்டாங்க. அதனால், எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்க. நாங்க எல்லாத்தையும் சரி செய்றோம்...'' என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
கூடவே, ''மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்பதில் நான் தெளிவா இருக்கேன். தெய்வம் நேராக வராது. ஏதோ ஒரு மனித ரூபத்தில் வரும். நாங்க ஏன் தனித்து நிற்கிறோம்? இதைக் கூட்டம் போட்டு சொல்ல வேண்டியதில்லை. நடப்பதை எல்லாம் மக்களே பார்த்துக்கொண்டு இருக்காங்க. ஒரு விஷயத்தை உங்ககிட்ட சொல்​லணும்... திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கு, அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே நடிக்குது...'' என்று அவர் அழுத்திச் சொன்ன அழுத்தத்தைப் புரிந்துகொண்ட கூட்டம் ஆர்ப்பரிக்க... இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்...
''சுதந்திரம் அடைந்து 63 வருஷங்கள் ஆகியும் இன்னும் மக்களுக்கு நல்லவங்க யார்? கெட்டவங்க யார்?னு தெரியலை. இதைத் தெரியாமலே வாக்களிக்கிறாங்க. சென்ற தேர்தலில் நான் மட்டும் சட்டசபைக்குப் போனேன். இப்போ எங்கள் ஆட்கள் 29 பேர்... அடுத்த தேர்தலில் என்ன ஆகும் என்பதை மக்கள்கிட்டயே விட்டுடறேன். அது அவங்க கையிலதான் இருக்கு...'' என்று சொல்லி, தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரியபடி, அடுத்த பாயின்ட்டுக்குக் கிளம்பினார் விஜயகாந்த். அன்று பேசிய நாகையின் நான்கு இடங்களிலும் இந்த விஷயங்களையே அழுத்தமாகப் பதியவைத்தார்.
அவரைப்போலவே வரிந்துகட்ட ஆரம்பித்து​விட்டார்கள் அவரது எம்.எல்.ஏ-க்கள். மணல்மேடு அருகே வரதம்பட்டு என்ற ஊரில் நத்தைத்தோப்பு காலனி மக்கள், ஆற்றைக் கடந்து செல்லத் தாங்களாகவே ஒரு மரப் பாலம் அமைத்து பயன்படுத்துகிறார்கள். பாதுகாப்பு இல்லாத அந்தப் பாலத்தில் இதுவரை ஐந்து பேர் ஆற்றில் விழுந்து இறந்துவிட்டனர். இந்நிலையில், கடந்த 28-ம் தேதி இரவு குணசேகரன் என்பவரும் ஆற்றில் விழுந்து இறந்துபோக... ஆத்திரமான மக்கள் சாலை மறியலில் இறங்கினர். ஆற்றைக் கடக்கத் தங்களுக்கு ஒரு பாலம் அவசியம் வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. இது தெரிந்ததும், அங்கு சென்ற மயிலாடுதுறை தே.மு.தி.க. எம்.எல்.ஏ-வான அருட்செல்வன் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து சாலை மறியலில் இறங்கினார். அரசு அதிகாரிகள், விரைவில் பாலம் கட்டித்தருவதாக உத்தரவாதம் கொடுத்ததை அடுத்தே மறியல் வாபஸ் ஆனது.
ஆகக்கூடி ஏதோ முடிவு எடுத்திருக்கிறார்கள் தே.மு.தி.க-வினர். உள்ளாட்சித் தேர்தல் முடிந்து சட்டசபை ஆரம்பிக்கும்போது அதன் ரகசியம் தெரியும்!
கரு.முத்து
படம்: ந.வசந்தகுமார்
*********************************************************************************
யாருய்யா மேயர் வேட்பாளர்?

கோவை காங்கிரஸ் கலாட்டா
ள்ளாட்சித் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்ததுமே... கோவை மாவட்​டத்தில் காங்கிரஸ் கோஷ்டிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி அமர்ந்து ஆலோசனை செய்தனர். 'அட, என்ன ஆச்சர்யம்!’ எனக் கதர்ச் சட்டைத் தொண்டர்கள் தொடையைக் கிள்ளிக்கொள்ள... அடுத்த நிமிடமே இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள். அதாவது மோதலைத் தொடங்கிவிட்டார்கள்.
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக, தனது ஆதரவாளரான பச்சைமுத்துவை டிக் செய்தார் தங்கபாலு. பச்சைமுத்துவும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். உடனே, சிலுப்பிக்கொண்டு பிரபு கோஷ்டியைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னையனும் மனுத் தாக்கல் செய்யவே, நிலவரம் கலவரமாகிவிட்டது.
பச்சைமுத்துவிடம் பேசிய​போது, ''கோவை மாநகர் மாவட்டத்துக்கான உள்ளாட்​சித் தேர்தல் ஒருங்கிணைப்பாளரா என்னைக் கட்சித் தலைமை நியமித்தது. அதன்படி, அத்தனை கோஷ்டித் தலைவர்களையும் வரவழைச்சு ஒரே இடத்தில் உட்கார வெச்சதே பெரிய சாதனை. இந்த நிலையில, மாநகராட்சிக்கான வேட்பாளரா என்னைத் தேர்ந்தெடுத்தார் தலைவர். 100 வார்டுகளுக்கான கவுன்சிலர் வேட்பாளர்களும் உறுதியாச்சு. அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை வாங்க சென்னைக்குப் போய்ட்டு, கோவைக்கு வந்தவன் நேரா வீட்டுக்குக்கூட போகலை. நள்ளிரவில் சின்னையன் வீட்டுக்குப் போய் ஆசீர்வாதம் வாங்கினேன். அவரும், 'ரொம்ப சந்தோஷம்பா. எனக்கும் வயசாகிடுச்சு. அதனால, அக்டோபர் 2-ம் தேதியில் இருந்து பொது வாழ்க்கையில் ஓய்வெடுக்கப் போறேன். உனக்கு என் வாழ்த்துகள்’னு சொன்னார். உச்சி குளிர்ந்து திரும்பின என் தலையில், அதே மனுஷன் அடுத்த நாள், மனுத் தாக்கல் செய்து, சுத்தியலால் அடிச்சுட்டார். 'என்ன இப்படிப் பண்ணிட்டாரு?’னு யோசிச்சப்பதான், 'இதற்குப் பின்னாடி மாஜி மத்திய அமைச்சர் பிரபு இருப்பது தெரிஞ்சது. விருப்ப மனுவுக்குப் பணம் கட்டுற டைம் முடிஞ்ச பிறகு கடைசியா தன்னோட பெயர்ல ஒரு மனுவைப் போட்டிருக்கார் சின்னையன். தலைவராக இருக்கிற தைரியத்துல இப்படி நடந்திருக்கு. இங்கே நடக்குற கூத்தைப் பார்த்துட்டு தலைவர் தங்கபாலு, 'நீ நகர்ந்துக்கப்பா. இதைவிட நல்லா வாய்ப்புகள் காத்திருக்குது’னு சொல்லிட்டார். நானும் மனுவை வாபஸ் வாங்கிட்டேன். இப்படிக் குழப்படி பண்றதுக்கு பதிலா என்கிட்டே நேரடியா சொல்லியிருந்தா, நான் வேட்பு மனுத் தாக்கல் பண்ணியிருக்கவே மாட்டேன். பொய்யா பேசி, பொய்யா நடக்குறப்பதான் ஒருத்தனோட அழிவு ஆரம்பமாகுது. சின்னையன் இதை உணரணும்...'' என்று சூடாகச் சொன்னார்.
சின்னையனிடம் கேட்டபோது, ''தலைமை யாரை கைகாட்டுதோ அவங்கதான் வேட்பாளர். இப்படி இருக்க... பச்சைமுத்து என் மேலே வருத்தப்படுறது என்ன நியாயம்? அந்த ராத்திரி நேரத்தில் அவர் வந்தப்ப, அவரோட மனசு நோகக் கூடாதுன்னு வாழ்த்துச் சொல்லி அனுப்பினேன். இது தப்பா?'' என்றார்.
பச்சைமுத்து ஆதரவாளர்கள் தவிர, சின்னை​யனுக்கு எதிராக ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டி ஆதரவாளர்களும் முழுமூச்சாகக் களம் இறங்கி இருக்கிறார்​களாம்.  ஆக, மறுபடியும் வடிவேலு காமெடிதான்!
எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்
*********************************************************************************
மதுரை பிட்ஸ்

விழி பிதுங்கும் ஓ.பி.எஸ்.! 
மொத்தக் கட்சியின் உள்ளாட்சி உள்குத்துப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் ஓ.பி.எஸ். தொகுதியிலேயே இப்போது உள்குத்து! அ.தி.மு.க. சார்பில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் பழனிராஜ். இவர் மீது புகார் கணைகள் தோட்டம் வரை செல்லவே... அவருக்கு கல்தா கொடுத்துவிட்டு, நகரச் செயலாளரான பாலமுருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கொதித்துப் போன பழனிராஜ், தனது ஆதரவாளர்களுடன் சென்று சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்துவிட்டார். இவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று ஓ.பி.எஸ். விழிபிதுங்கிய நிலையில் அவருக்கு இன்னொரு அதிர்ச்சி. 'நாங்கதானே உங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சோம். எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதா?’ என்று அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர் சேதுராமனும் சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்துவிட்டார். இரண்டு பக்கம் மண்டையிடியாக புலம்பித் தவிக்கிறார் ஓ.பி.எஸ்.!
'அவர் அம்மா ஆளு’
2002-ம் ஆண்டு ஆண்டிபட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது தேனி கலெக்டராக இருந்தவர் அதுல் ஆனந்த். அந்த நேரத்தில் ஆளும் கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுவதாக அதுல் ஆனந்த் மீது தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் கொடுத்தது. 'கலெக்டர் வேலையைவிட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வேலையை பக்காவாகச் செய்து வருகிறார்’ என்று கருணாநிதியே அவரை குற்றம்சாட்டினார். அவரைத்தான் இப்போது தேனி மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமித்துள்ளது தேர்தல் ஆணையம். ''அப்பவே ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட்ட இவரிடம் என்ன நியாயம் கிடைக்கப் போகிறது?'' என்று தி.மு.க. வட்டாரத்தில் இப்போதே புலம்பல் கேட்க ஆரம்பித்து விட்டது!
 ரகசிய எஸ்.எம்.எஸ்.!
உசிலம்பட்டி ஏரியாவாசிகள் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு ஏலம் விட்டுக் காசு பார்த்ததைத் தொடர்ந்து போலீஸார் பலரைக் கைது செய்தது. கைதுப் படலம் தொடர்ந்தும் வருகிறது. இதனால் உஷாரான உசிலம்பட்டிக்காரர்கள் செல்போன் எஸ்.எம்.எஸ்-களில் சங்கேத பாஷையில் பதவியை ஏலம் விட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்!
  'நல்லா கொடுத்தீங்க பரிசு!’
சிவகங்கை நகராட்சியின் சிட்டிங் சேர்மன் காங்கிரஸின் நாகராஜன். இம்முறை தனித்துப் போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சேர்மன் பதவியைப் பிடிக்க ஏகத்துக்கும் போட்டி. ப.சி. மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரும் வசந்த் டி.வி-யின் நிருபருமான பிரபாகரன் எப்படியும் தனக்கு ஸீட் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார். ஏனெனில், ப.சி-யின் பிறந்த நாளை முன்னிட்டு பாட்டுக் கச்சேரி, ஆர்க்கெஸ்ட்ரா என சிவகங்கையை அமர்க்களப்படுத்தியவர் இவர். அதனால், அப்போதே கட்டாயம் ஏதாவது செய்கிறேன் என்று வாக்கு கொடுத்து இருந்தாராம் கார்த்தி. ஆனால், இப்போது ஸீட் சிட்டிங் சேர்மன் நாகராஜனுக்கே சென்றுவிட்டதில் அப்செட் ஆன பிரபாகரன், '20 வருஷமா உங்களுக்கு விசுவாசமா இருந்ததுக்கு நல்லா கொடுத்தீங்க பரிசு...’ என்று கார்த்தியிடம் நேரடியாக ஆவேசப்பட்டு சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்துவிட்டார்!
 மதுரையில் நீதி கேட்கும் திருநங்கை!
தனது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் அப்செட்டில் இருக்கிறார் மதுரை மேயர் பதவிக்கு சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்த திருநங்கையான பாரதி கண்ணம்மா. வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் அழகுராஜா என்று இருப்பதுதான் தள்ளுபடிக்குக் காரணமாம். ''சமூக நலத் துறையால் வழங்கப்பட்ட திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டையில் எனது பெயர் அழகுராஜா என்கிற பாரதி கண்ணம்மா என்று தெளிவாக இருக்கிறது. மேலும், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு திருநங்கைகள் போட்டியிட விரும்பினால், அவர்களின் பாலினப் பதிவுகளைக் கொண்டு முடிவு செய்வதைத் தவிர்த்து விருப்பத்தின் அடிப்படையில் முடிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதை எல்லாம் எடுத்துச் சொல்லியும் எனது மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள். இதை சும்மா விடப்போவது இல்லை. வழக்குப் போட்டு நியாயம் கேட்பேன்...'' என்று பொங்குகிறார் பாரதி கண்ணம்மா!
 'இந்த ஏரியாவுலேயே பெரிய ஆளு இவர்!’
தி.மு.க-வின் மாநில மகளிரணித் தலைவியான நூர்ஜகான் பேகம்தான் திண்டுக்கல் நகராட்சி தலைவர் வேட்பாளர். இவரை நிறுத்தியதில் உள்ளூர் உடன்பிறப்புகளுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும், அதை வெளிக்காட்ட முடியவில்லை. இதனால், நூர்ஜகானை வெறுப்பேற்ற நினைத்தவர்கள் வலியச் அவரிடம் சென்று, 'அக்கா, வாங்க கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ஒரு ரவுண்டு பார்த்துட்டு வந்துடலாம்’ என்று அழைத்துச் சென்றார்கள். அப்பாவியான நூர்ஜகானை கட்சியின் அல்லுசில்லுகளிடம் எல்லாம் அழைத்துச் சென்று 'இந்த ஏரியாவுல பெரிய ஆளு இவரு...’ அறிமுகப்படுத்தி எல்லோருக்கும் நூர்ஜகானின் செலவிலேயே சால்வை போட வைத்தனர். இப்படியே இரண்டு நாட்களில் 300 சால்வைகள் போணியாகிவிட்டதாம். செலவைக் கண்டு மிரண்டுபோன நூர்ஜகான் இப்போது யாராவது தனக்கு சால்வை போர்த்த வந்தால்கூட டர்ராகி விடுகிறாராம்!
********************************************************************************
டெல்டா கலாட்டா!

பெட்ரோமாக்ஸ் லைட்டுதான் வேணுமா?

சீர்காழி நகராட்சியில் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட, பல மனுக்கள் வந்திருக்க... அவற்றில் தேடிப்பிடித்து காயத்ரி என்பவரின் மனுவை ஓகே செய்தது காங்கிரஸ் தலைமை. ஆனால், கடைசிவரை காங்கிரஸ் வேட்பாளர் மனுத் தாக்கல் செய்ய வரவேயில்லை. காரணம், 'அவங்களுக்கு இங்க ஓட்டே இல்லையாம்’. ஓட்டு இல்லாதவர் ஏன் ஸீட் கேட்டாராம்? தெரியவில்லை. எப்படியும் பெயரைச் சேர்த்துவிடலாம் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார்களாம். ஆனால், முடியவில்லை. இந்த அமளிதுமளியால், மாற்று வேட்பாளரைக்கூட போடவில்லை. இதனால் சீர்காழி நகராட்சிக்கு காங்கிரஸ் வேட்பாளர் யாரும் போட்டியிடவில்லை. தேர்தல் செலவு மிச்சம்!
என் வழி, தனி வழி!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியில் ஸீட் கொடுக்காததால், வேதாரண்யம் தொகுதியின் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. வேதரத்தினம், தனித்துப் போட்டியிட்டு 42,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் சமயத்தில், 'திரும்பவும் கட்சியில் சேர்ந்து விடலாமா?’ என்று தன் ஆதரவாளர்களை அழைத்துக் கருத்துக் கேட்டார். 'நாம் இந்தத் தேர்தலையும் தனித்து நின்றே சமாளிப்போம்’ என்று ஒட்டுமொத்த ஆதரவாளர்களும் சொல்லிவிட்டார்களாம். அவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து... வேதாரண்யத்தைச் சுற்றி இருக்கும் 10 ஊராட்சிகளில் தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்குத் தனது ஆதரவாளர்களை சுயேச்சையாக நிறுத்தி இருக்கிறார். வேதாரண்யம் நகராட்சியின் ஆறு வார்டுகளிலும் அவரது ஆதரவாளர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
 வடை போச்சே...
மயிலாடுதுறை நகராட்சிக்கு தே.மு.தி.க. வேட்பாளராக அலமேலு என்பவர் அறிவிக்கப்பட்டு அவரும் களத்தில் இறங்கிவிட்டார். இந்த நிலையில் தே.மு.தி.க-வோடு திடீர் கூட்டணி கண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்பட்டது. ஆனாலும், கடைசி நாள் வரை அந்தக் கட்சியில் இருந்து போட்டியிட ஆர்வம் காட்டி யாரும் வரவில்லை. அதனால், தாம் முன்மொழிந்து, தலைமை அறிவித்த அலமேலுவையே வேட்பாளராக்கிவிட்டார், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான அருட்செல்வன். ம்... காம்ரேட்களுக்கு கூட்டணியும் பேசத் தெரியலை, கொடுத்ததையும் வாங்கத் தெரியலை!
 சொந்தக் கட்சியே சூனியம் வெச்சிரும்...
தொடர்ந்து 20 வருடங்களாக தஞ்சாவூர் நகராட்சியை தி.மு.க. தக்கவைத்து வருகிறது. ஸ்டாலின் ஆதரவாளர்கள் நிரம்பிய இத்தொகுதியில் தஞ்சாவூர் தி.மு.க. நகர்மன்ற வேட்பாளராக கனகவள்ளி அறிவிக்கப்படவே, தி.மு.க-வினருக்கு பெரும் அதிர்ச்சி. காரணம்? தி.மு.க. மாநில மகளிரணி அமைப்பாளரான கார்ல் மார்க்ஸின் மருமகள்தான் கனகவள்ளி. கார்ல் மார்க்ஸ்,  கனிமொழியின் தீவிர  ஆதரவாளர். சமீபத்தில் ராஜாத்தி அம்மாளோடு திகார் சிறைச்சாலைக்குச் சென்று கனிமொழியின் நலம் விசாரித்து வந்தார். பழனிமாணிக்கம், உபயதுல்லா ஆகியோரைத் தாண்டி கார்ல் மார்க்ஸ் ஸீட் வாங்கியது உள்கட்சிக்குள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 'தி.மு.க-வின் கோட்டை உட்கட்சி பூசலினாலேயே தகர்க்கப்படக்கூடும்’ என முணுமுணுக்கின்றனர் தி.மு.க. உடன்பிறப்புகள்!
 பம்பரமய்யா பம்பரம்!
பெரம்பலூர் வீதிகளில், 'பம்பரமய்யா பம்பரம்... எல்லோருக்கும் வந்தனம்!’ என்ற 'ஈசன்’ திரைப்படப் பாடல் எதிரொலிக்கிறது. ஒரத்தநாடு கோபி கலைக்குழுவில் உள்ள பேராசிரியை கலையரசியை பாடுவதற்கு ஏற்பாடு செய்திருப்பவர் பெரம்பலூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும், ம.தி.மு.க-வின் மாவட்ட துணைச் செயலாளர் துரைராஜ். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரத்தையே துவங்காத நிலையில், 'பம்பரமய்யா பம்பரம்’ என்ற நாட்டுப்புறப் பாடலுக்கு இடையில் பெரம்பலூரை ஒரு ரவுண்ட் அடித்து முடித்து விட்டார் துரைராஜ்.
 அப்படிப்போடு அருவாளை...
வேதாரண்யம் நகராட்சியின் 15-வது வார்டு உறுப்பினராக சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் அகஸ்தியம்பள்ளி கொள்ளைக்காட்டைச் சேர்ந்த மோகன். இவர் போட்டியிடப் போகும் வார்டுக்கு உட்பட்ட ஆறுமுக கட்டளை, பயத்தவரன்காடு, குமரன்காடு, கூத்ததேவன்காடு ஆகிய இடங்களுக்கு போய் 'நான் கவுன்சிலரா போட்டியிடப் போகிறேன். எனக்கு உங்க கையில் இருக்கிற காசுல ஏதாவது கொடுத்து உதவுங்கள்’ என்று கேட்டு அவர்களிடமிருந்து, ஒன்று... இரண்டு... ஐந்து... பத்து என்று வாங்கி  1,783 ரூபாய் சேர்த்தார். பிறகு தன் ஆதரவாளர்களுடன் போய் ஜாம்ஜாமென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். டெபாசிட் கட்டிய ஆயிரம் ரூபாய் போக மீதமிருந்த 783 ரூபாயில், நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துவிட்டாராம்.
 நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு...
தனித்துக் களமிறங்கும் முடிவை எடுத்துவிட்ட தி.மு.க. தலைமை, ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு மட்டும் சில வார்டுகளை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்கள். அதன்படி சீர்காழி நகராட்சியின் 19-வது வார்டுக்குப் போட்டியிடும் மூ.மு.க. வேட்பாளர் குமார் தன் மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப் படுத்திய விதம் தி.மு.க-வி னரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது. நகராட்சி தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடும் இறைஎழில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, நகராட்சி வாசலில் வைத்து அவருக்கும், தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் சீர்காழி நகரசெயலாளர் ஆகியோருக்கும் ஆளுயர மாலை, மலர்க்கிரீடம் என்று அணிவித்து அசத்தி விட்டார். நல்ல கூட்டாளிதான்....
 நேரம் நல்ல நேரமடி...
'செத்தாலும் இப்பத்தான் சாகணும்’ என்று சொல்கிறார்கள் வாக்காளர்கள். இப்போது யார் செத்தாலும் போட்டியிடும் அத்தனை வேட்பாளர்களும் மாலையோடு வரிசைகட்டி வந்துவிடுகிறார்கள். 'எப்படி செத்தாங்க? என்ன ஆச்சு?’ என்று ஆதரவாக விசாரித்து செலவுக்குப் பணமும் கொடுக்கிறார்களாம். அதனால், 'இப்ப செத்தா மோட்சம்தான்டா’ என்று பெருமூச்சு விடுகிறார்கள் பெரிசுகள்.
*********************************************************************************
புதுவை பிட்ஸ்!

விழுப்புரம் ஏலம்  விடும் கொடுமை!
விழுப்புரம் மாவட்டத்தில் புத்திராம் பட்டு, பொன்னங்குப்பம், காடகனூர் ஆகிய ஊர்களில் பஞ்சாயத்துப் பொறுப்புகளை ஏலம் விடும் தகவல் காதுக்கு வர... புத்திராம்பட்டுக்கு முதலில் சென்று, பகுதி மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.
''எங்க ஊர்ல கடந்த 22-ம் தேதி நைட் பன்னெண்டு மணிக்கு திடீர்னு ஊர் கூட்டம் கூட்டினாங்க. அதில் பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ஏலம் விட்டு, 'தே.மு.தி.க. சார்புல ஒருத்தர் போட்டியிடப் போகிறார். அவருக்குத்தான் ஓட்டுப் போடணும்’னாங்க. 500 ஓட்டுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் வாங்கியிருக்காங்க.
அதேமாதிரி கவுன்சிலர் பதவியையும் ஒருவர் ஏலத்தில் எடுத்திருக்காரு. இப்படி ஏலம் எடுத்தவங்களுக்கு மட்டும்தான் நாங்க ஓட்டு போடணும். அதை மீறிட்டா, ஊர் குத்தம்னு சொல்லி எங்கள ஊரை விட்டு ஒதுக்கி வெச்சிருவாங்க!'' என்றனர் அசால்ட்டாக!
இதே நிலைமைதான்,செஞ்சி அருகே பொன்னங்குப்பத்தில் நடந்துள்ளது. காடகனூரிலும் இதே நிலைதான். நம் தேவைகளை நிறைவேற்ற ஒரு நல்லவரைத் தேர்ந்தெடுக்கத்தான் தேர்தல்! அதையும் 'ஏலம்’ போட்டு ஜனநாயகத்தைக் கொலை செய்ய லாமா?
 கடுக்காய் கொடுத்தார்!
திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் மாலை 6 மணி வாக்கில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் செய்யப் போவதாகக் கடந்த 28-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று வேறு மாவட்டத்தில் பிரசாரம் செய்த விஜயகாந்த் திருவண்ணாமலை வந்து சேரவே இரவு 12 மணி ஆனதால், நேராக ஹோட்டலுக்குச் சென்று விட்டார். ''மறுநாள் நிச்சயமாகப் பிரசாரம் செய்வார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், கடுக்காய் கொடுத்துவிட்டுப் பேசாமலேயே கிளம்பிவிட்டார் கேப்டன்!'' என்று புலம்புகின்றனர், தே.தி.மு.க-வினர் சிலர்.
முதல்நாள் வரமுடியாமல் போகும் இடங்களுக்கு மறுநாள் காலையிலாவது சென்றால்தான் தலைவர்களுக்கு நல்லது!
 விஜயகாந்த் உஷார் !
கடந்த 28-ம் தேதி தே.மு.தி.க மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சியின் வேலூர் மேயர் வேட்பாளரான லதாவை ஆதரித்து, விஜயகாந்த் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பேசினார். அப்போது, ''இங்கு மேயர் வேட்பாளராகப் போட்டியிடும் வேட்பாளர் லதாவை ஆதரியுங்கள்...'' என்று சொன்னவர் உடனே, வேட்பாளரைப் பார்த்து, ''அம்மா! லதாதானே உங்க பேரு?'' என சந்தேகமாகக் கேட்க... வேட்பாளரும் சிரித்துக்கொண்டே ''ஆமாம்...'' என்றார். பின்னர் தனது ஃபேவரைட் சிரிப்புடன் விஜயகாந்த் பேச ஆரம்பித்தார்!
 அமைச்சர் பேச்சு... அ.தி.மு.க-வினர் புலம்பல்!
கடந்த 29-ம் தேதி மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் அறிமுகக் கூட்டம், வேலூர் நாதன் மகாலில் நடந்தது. விழாவின் நாயகனாக அமைச்சர் விஜய். ஏற்கெனவே 'கவுன்சிலர் பதவிகளுக்குப் பணம் கேட்கிறார் அமைச்சர்’ என்ற குற்றச்சாட்டு வேலூர் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் நிலவ... அமைச்சரின் பேச்சு மேலும் அவர்களைச் சூடாக்கியது.
''நம்ம கட்சி நிர்வாகிகளுக்கு எல்லாம் சொல்லிக்கிறேன். கவுன்சிலர் ஸீட் கிடைக்காதவங்க எல்லாம் வருத்தப்படக்கூடாது. சில பேரு என் வீட்டு முன்னாடி வந்து தீக்குளிக்கப் போறதா சொல்லிக்கிட்டு இருக்காங்களாம். ஏய்யா, மண்ணெண்ணெய் விக்கிற விலைக்கு நீங்க தீக்குளிச்சுதான் ஆகணுமா?'' என்றவர், சுதாரித்துக்கொண்டு, ''அது அப்படியில்லை! உயிரோட மதிப்பு உங்களுக்குத் தெரியாதா? இனியும் யாராவது தற்கொலை செய்தீங்கன்னா, நல்லா இருக்காது!'' என்று பேசினார்.
கூட்டம் முடிந்து கிளம்பிய ர.ரத்தங்கள், ''ஏய்யா, அமைச்சருக்கு மண்ணெண்ணெய் விலைதான் பெருசா? கட்சிக்காரங்களை மதிக்கவே மாட்டாரா?'' என புலம்பியபடியே கலைந்தனர்.
 கடலூர் தே.மு.தி.க. கடமுடா!
உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க-வுடன் இணைந்து செயல் படுகிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். அந்தந்த மாவட்டத் தலைமையில் வார்டு பங்கீடு சம்பந்தமாகப் பேசி முடிவு செய்து வருகின்றனர்.
கடலூர் நகர மன்றத் தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. ஆனால், ஏற்கெனவே தே.மு.தி.க-வின் வி.சி.சண்முகம் என்பவ ருக்கு அது ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கினார்கள். தனசேகரன்தான் வேட்பாளர். ஆனால், இதை உள்ளூர் தே.மு.தி.க-வினர் ஏற்கவில்லை. 50 பெண்கள் திரண்டு தே.மு.தி.க. அலுவலகத்தின் முன்னால் தீக்குளிக்க முயன்றனர். அதோடு, திடீரென மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தை சிலர் முற்றுகையிட்டு சேர், மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தர்மபாலன் உள்ளிட்ட சொந்தக் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட தர்மபாலன், ''24 வருடமா இந்தப் பகுதியில் கேப்டனுக்கு மன்றம் ஆரம்பித்து செயல்பட்டு வருகிறேன். திருச்சி, மதுரை, சென்னை என்று பல இடங்களுக்குப் பொதுக் கூட்டங்களுக்காக சொந்தச் செலவில் தொண்டர்களை அழைத்துப் போனேன். கடந்த உள்ளாட்சித் தேர்தலில்கூட தே.மு.தி.க. சார்பில் இந்த வார்டில் போட்டியிட்டுத் தோற்றேன். கட்சிக்காக உண்மையாக உழைக்கிறவனுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்றுதான் கேட்டேன். அதைக்கூட மாவட்ட நிர்வாகம் மறுத்து விட்டதே!'' என்றார் நொந்துபோய்.
*********************************************************************************
புற்று நோயாளிகளுக்கு நல்ல செய்தி

வலியை விரட்டும் நவீன அறுவை சிகிச்சை!
புற்று நோய் தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுத்தால், தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி (Intrathecal drug delivery)சிஸ்டம் என்ற கருவிகொண்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் ஃபங்ஷனல் நியூரோசர்ஜன் டாக்டர்
ஆர்.ராமநாராயண் நம்மிடம் பேசினார்.
''வலி மேலாண்மை என்பதை உலக சுகாதார நிறுவனம் நான்கு படிகளாகப் பிரிக்கிறது. முதலாவது வலியைக் கண்டறிந்து அதற்கு (குரோசின் போன்ற) வலி நிவாரண மாத்திரைகளை அளிப்பது. சில உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட்கள் அளிப்பதும் முதல் வகையே. இரண்டாவது, மனோதத்துவ ரீதியான சிகிச்சை மற்றும் ப்ரூஃபின் போன்ற கொஞ்சம் டோஸ் அதிகமான மாத்திரைகளை அளிப்பது.
இதற்கும் சரியாகவில்லை என்றால் மார்ஃபின் அல்லது பென்டனைல் போன்ற அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் கொடுப்பது மூன்றாவது வகை. இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு நல்ல வலி நிவாரணத்தை அளிக்கும். ஆனால், சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மரணம்கூட ஏற்படலாம். இந்தியாவில் இந்த மூன்று முறைகள்தான் கையாளப்பட்டு வருகின்றன.
இப்போது முதன் முறையாக வலி மேலாண்மை எனப்படும் நான்காவது வழியைக் கையாள்கிறோம். நமது உடலில் ஓர் உள்ளார்ந்த வலி கட்டுப்பாட்டு அமைப்பானது, மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றி அமைந்துள்ளது. எந்த ஒரு வலியும் இதன் மூலமாகப் பயணம் செய்து மூளையை அடையும்போதுதான், வலியை உணர்வோம். வலியை சமாளிக்க மார்ஃபின் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரை உடனடியாக வேலை செய்யாது. வயிற்றில் கரைந்து, ரத்தத்தில் கலந்து, நரம்பு மண்டலத்தை அடையச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு மைக்ரோ கிராம் அளவு மார்பின் முதுகுத்தண்டு வடத்தை அடைந்தால் போதும், நோயாளி வலி நிவாரணத்தை உணர்வார். ஆனால், 200 மைக்ரோ கிராம் மருந்து எடுத்தால்தான், அதில் 1 மைக்ரோகிராம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள திரவத்தைச் சென்றடையும். ஆனால், ஒருவரால் அதிகபட்சமாக 40 மைக்ரோ கிராம் மார்ஃபின்தான் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கே பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.
இப்போது மருந்தை நேரடியாக முதுகுத் தண்டுவடத் திரவத்தில் சேர்ப்பதால், அதிகப்படியான மார்ஃபின் எடுப்பது தேவை இல்லாமல் போய்விடுகிறது. இந்தச் செயல் அத்தனை எளிதானது அல்ல. முதுகுத் தண்டுவடத்துக்குள் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. அதனால்தான், சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, இடுப்புப் பகுதி மரத்துப்போவதற்காக கர்ப்பிணிகளுக்கு முதுகை வளைத்து ஊசி குத்துவார்கள். முதுகுத் தண்டு வடத்தை அடைந்து மருந்தை செலுத்தினாலும், அதன் பலன் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் முதுகை வளைத்து மருந்து செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, இதயத்துக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்துவது போன்று நோயாளியின் வயிற்றின் தோலுக்கு அடியில் ஒரு சிறிய கருவியைப் பொருத்துவோம். இதில் திரவ நிலையில் மார்ஃபின் இருக்கும். இந்த கருவியின் முனை முதுகுத் தண்டுவடத்தில் இணைத்து அறுவைசிகிச்சை செய்யப்படும். இந்த கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியே எதுவும் தெரியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், நோயாளிக்கு வலி உணர்வே இருக்காது. இந்தக் கருவியில் 40 மி.லி. மருந்து நிரப்பப்படும். இதுவே சுமார் மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும். மருந்து காலியானதும் அந்தக் கருவியை வெளியே எடுக்காமலே, மீண்டும் நிரப்பிக்கொள்ள முடியும். மேலும் தேவைக்கேற்ப டோஸ் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
எல்லா விதப் புற்று நோயாளிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், வலியை உணரவில்லை என்றால், அவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்வார்கள் என்று பரிந்துரைக் கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இப்போது இதனைப் பொருத்துகிறோம். வெளிநாடுகளில் புற்றுநோயாளிகளைக் காட்டிலும் முதுகு வலிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கின்றனர். இந்தியாவில் இப்போதுதான் இந்தக் கருவி இறக்குமதி ஆகியுள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், எல்லா நோயாளிகளும் இந்த சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு அரசு வரிவிலக்கு அளித்தால், கொடுமையான வலியால் அவதிப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள்...'' என்று கேட்டுக் கொண்டார்.
அரசு மனம் வைக்கட்டும்!
பா.பிரவீன்குமார்
************************************************************************
மிஸ்டர் கழுகு: மின்வெட்டு 'அணு' மர்மம்?

ழுகார் நம் முன்னால் ஆஜரான நேரம்... முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை ஒன்று நமது மெயிலில் வந்து விழுந்தது!
''மின்வெட்டு தொடர்பான அறிக்கையோ..?'' என்று கேட்டார் கழுகார். ''அதே!'' என்றோம்.
''விடாது கருப்பு கதைதான்! தி.மு.க. ஆட்சிக்கு எதிராக எந்த விஷயம் அதிகமான சலனங்களை ஏற்படுத்தியதோ... அதுவே இந்த ஆட்சிக்கும் தலைவலியாக மாறிக்கொண்டு இருக்கிறது. நகரம், கிராமம் என எல்லாப் பகுதிகளிலும் மின்தடை போட்டுத் தாக்குகிறது. இதை முதல்வர் கவனத்துக்கு மிகத் தாமதமாகவே அதிகாரிகள் கொண்டுசென்றனர். 'ஏன் இதை முன்கூட்டி எனக்குச் சொல்லவில்லை?’ என்று முதல்வர் கோபப்பட்டாராம். அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் அழைக்கப்பட்டு முதல்வரின் அவசர ஆலோசனையில் இருந்துள்ளார்!''
''என்ன சொன்னார்களாம் அதிகாரிகள்?''
''அரசாங்கம் சொல்லும் காரணத்தைப் பார்த்தீர், அல்லவா? தமிழ் நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தின் குறிப்பிட்ட அளவு ஆந்திர மாநிலம் ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் இருந்து வருகிறது. அதற்குத் தேவையான நிலக்கரி சிங்கரேனி சுரங்கத்தில் இருந்து வருகிறது. ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால், அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி வரவில்லை. இதனால் மின்சாரத் தயாரிப்பும் குறைகிறது என்பது அதிகாரிகள் சொன்ன காரணம். ஒரிஸ்ஸாவில் இருந்தும் நமக்கு மின்சாரம் வருகிறது. அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கு இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் குறைந்ததாகவும் சொல்கிறார்கள். சுமார் 1,026 மெகாவாட் மின்சார வரத்து குறைவதாக அதிகாரிகள் சொன்னார்கள். 'உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் மின்வெட்டு இருக்கக் கூடாது’ என்று கறாராகச் சொல்லி இருக்கிறாராம் முதல்வர்!''
''சில அதிகாரிகள் வேண்டும் என்றே இந்த மின்வெட்டை உருவாக்கியதாக ஒரு திக் தகவல் காதில் விழுந்ததே?''
''இந்த சந்தேகக் கேள்வி பலராலும் பரப்பி வைக்கப் படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். முதல்வரும் அப்போராட்டத்தை ஆதரித்து மத்திய அரசுக்கு தனது எதிர்ப்புக் கருத்தை
பதிவு செய்தார். இதில் மேல்மட்ட அதிகாரிகள் சிலருக்கு உடன்பாடு இல்லையாம். 'பார்த்தீர்களா! நாடு முழுவதும் மின்வெட்டு வந்துவிட்டது. இதற்காகத்தான் கூடங்குளம் அணுமின் நிலையம் வர வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். அது வந்தால்தான் தமிழகத்தின் மின்தேவை பூர்த்தியாகும்!’ என்று அவர்கள் மறைமுகப் பிரசாரத்தில் இறங்கி உள்ளார்களாம். அவர்களின் கைங்கர்யம் இதில் இருக்கலாம் என்ற அடிப்படையில்தான் திக் தகவல் பரவியிருக்கிறது. எதுவாக இருந்தாலும் ஆட்சிக்குக் கெட்ட பெயர்தான்.''
''ம்...''
''மின் துறை அதிகாரிகளை அழைத்துப் பேசியது மாதிரியே இன்னொரு முக்கியத் துறையின் அதிகாரிகளையும் முதல்வர் சந்தித்தார். சந்தித்துப் பேசினார் என்பதைவிட... பாய்ந்தார் என்பதுதான் சரி! பல ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர் விவகாரம் அது. தமிழகம் முழுவதும் பரவலாகச் செய்ய வேண்டிய பணி. இந்தப் பணிகளுக்கான டெண்டர் ஒன்று இரண்டு முறை அல்ல... ஐந்து முறைக்கு மேல் விட்டுவிட்டார்கள். ஆனால், ஆளைத் தேர்ந்தெடுக்கவில்லை. எல்லாமே 'மேல்படி’ விவகாரம்தான். 'அவருக்கு இவ்வளவு... இவருக்கு இவ்வளவு... மூன்றாமவருக்கு அவ்வளவு...’ என்று பேசிப் பேசியே டெண்டர் போட்டவர்கள் அனைவரையும் தெறித்து ஓட வைத்துவிட்டார்களாம். இது எப்படியோ முதல்வர் கவனத்துக்குப் போனது. உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து ஒரு ரவுண்ட் டோஸ் விட்டார். அடுத்து, அந்தத் துறையின் மந்திரியைத் தேடி இருக்கிறார்கள். அவசர நேரத்தில் ஆளைக் காணோம். 'அடுத்த ரெண்டு நாளில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். யார் இந்த டீலிங்கை முடிவுசெய்தது என்ற தகவல் உடனடியாக வந்தாக வேண்டும்’ என்று முதல்வர் கறார் காட்டினார். தேர்தல் முடிந்ததும் அந்த மந்திரிக்கு சிக்கல் வரலாம். அவர் பாவம், யாரை காட்டிக் கொடுப்பார்? அதோடு...''
''அதையும் சொல்லிவிடும்!''
''தனக்கு முறையாகத் தகவல்கள் வந்து சேரவில்லை என்றும் முதல்வர் வருத்தப்பட்டுள்ளார். நிழல் மனிதர்களின் ஆதிக்கம் தலையெடுப்பது குறித்து உளவுத் துறை தன்னை சரியாக அலர்ட் செய்ய வில்லை என்று புழுங்கிவிட்டாராம். உளவுத் துறை ஏ.டி.ஜி.பி-யான ராஜேந்திரன் மாற்றப்பட்டதற்கு இப்போது இந்தக் காரணத்தையும் சொல்கிறார்கள். அதோடு, 'பொதுமக்கள் கருத்து எதுவானாலும், தயங்காமல் நேரடியாக அதை என்னிடம் கொண்டுவாருங்கள்’ என்று சொல்லி இருக்கிறாராம் புதுசாக உளவுத் துறைக்கு வந்துள்ள டி.ஐ.ஜி-யான பொன்மாணிக்கவேலிடம்...'' என்று சொல்லிவிட்டு, தி.மு.க. பக்கம் வந்தார் கழுகார்!
''முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் வரிசையாகப் பாயப் போகின்றன என்று முன்பே சொன்னேன். நீரும் 'ரெய்டு வாரம்’ என்று போட்டிருந்தீர். அதை அடுத்து பொன்முடி, தா.மோ.அன்பரசன் வீடுகளில் ரெய்டுகள் நடந்தன. மொத்தம் 17 முன்னாள் அமைச்சர்கள் மீது இந்த வழக்குகள் பாயப் போகின்றன. 'அக்டோபர் 20-ம் தேதி, அம்மா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்னால் இந்த ரெய்டுகள் நடக்குமாம். அதற்குள் ஸ்டாலினையும் குறிவைத்து ஏக இக்கட்டில் ஆழ்த்தும் போலீஸ்!’ என்று கோட்டையில் பேச்சு. திருச்சி மேற்கு தி.மு.க. வேட்பாளரும், கடலூர் சிறையில் இருப்பவருமான கே.என்.நேரு மீது இன்னொரு வழக்கும் தயாராகி வருகிறது.''
''அது என்ன?''
''கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் என பல்லாயிரம் பேரை நியமித்தார்கள். அதை மையமாக வைத்துத்தான் இந்த வழக்கு இருக்குமாம். இப்படியே போனால், நேரு இப்போதைக்கு வெளியில் வர முடியாது. அது இருக்கட்டும்... வெளியே வந்திருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் வருத்தத்தைச் சொல்லவா..?''
''இதற்கெல்லாமா கேட்டுக் கொண்டிருப்பது?''
''ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். ஆனாலும், 30-ம் தேதி தி.மு.க. முப்பெரும் விழா என்றதும் அண்ணா அறிவாலயத்தில் முதல் வரிசையில் ஆஜரானார். அக்கூட்டத்தில் பேசிய கருணாநிதியின் பேச்சைக் கேட்டு அதிகமாக வருத்தம் அடைந்தாராம் வீரபாண்டியார். ஜெயலலிதாவை விமர்சித்துக்கொண்டே வந்த கருணாநிதி, பொன்முடியின் கைதை மட்டுமே விலாவாரியாகக் கண்டித்துப் பேசினாராம். 'தம்பி பொன்முடி, தம்பி பொன்முடி...’ என்றார் உருக்கமாக. 'பொன்முடி மட்டும்தான் கைதானாரா? நாங்கள் சிக்கலை எதிர்கொள்ளவில்லையா? எங்களை எல்லாம் தலைவருக்கு மறந்தே போச்சா?’ என்று கர்ஜித் தாராம் வீரபாண்டியார்.''
''தலைவரிடமா... தன் ஆதர வாளர்களிடமா?''
''கருணாநிதியிடம் சொன்ன தாகத் தகவல் இல்லை. தன்னை சந்திக்க வந்தவர்களிடம்தான் வருத்தப்பட்டுப் புலம்பி இருக்கிறார்! கூடவே, அழகிரியின் வருத்ததையும் கேளும்! அவர் முப்பெரும் விழாவுக்கு சென்னை வரவில்லை. மதுரையில் உட்கார்ந்து ஏதோ படம் பார்த்துக்கொண்டு இருந்ததாகச் சொல்கிறார்கள். 'முறைப்படி எனக்கு அழைப்பு வரவில்லை’ என்று சொல்லிவிட்டாராம் அழகிரி. ஸ்டாலின் வராததற்குக் காரணம் வைரல் ஃபீவர் என்கிறார்கள். மூன்று நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் தங்கிவிட்டு ரிலீஸ் ஆகி இருக்கிறார். 'உள்ளாட்சிப் பிரசாரத்துக்கு உன்னைத்தான் நம்பி இருக்கேன். நீ உடம்பை நல்லா பார்த்துக்கோ’ என்று பதறிப் போனாராம் கருணாநிதி!''
''கருணாநிதி டெல்லி செல்வதாகச் சொல்கிறார்களே?''
''எப்போது வேண்டுமானாலும் அவர் கிளம்பலாம்! கனிமொழியை அவர் டெல்லி சென்று பார்த்து 100 நாட்களுக்கு மேல் ஆகப் போகின்றன. இப்ப வந்திடுவார்... உடனே வந்திடு வார்... என்று சிலர் தப்பான 'ஹோப்' கொடுத்ததால், கருணாநிதியின் பயணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. டெல்லி போனால், பிரதமர் மற்றும் சோனியாவைப் பார்த்தாலும் சிக்கல்... பார்க்காவிட்டாலும் பல பேச்சுகள் வரும். அதனால்தான் கருணாநிதி தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தள்ளி வைத்திருந்தார். ராஜாத்தி அம்மாளோ, மகள் பற்றிய கவலையில் தொடர்ந்து டெல்லியிலே தங்கி விட்டார். அவர் கருணாநிதியிடம் சமீப காலமாகச் சரியாகப் பேசக்கூட இல்லை என்கிறார்கள். அந்தக் கோபத்தை நீடிக்க விடக்கூடாது என்று, டெல்லி செல்ல கருணாநிதி திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். கனிமொழியின் பெயில் மனு அக்டோபர் 17-ம் தேதிதான் விசாரணைக்கு வரப் போகிறது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த மாதம் 2ஜி விவகாரம் அசுர வேகம் எடுத்து, சிலபல தடாலடிகள் அரங்கேறிவிடும் போல...'' என்ற கழுகார்,
''காங்கிரஸின் நிலைமை டெல்லியில் மிகப் பரிதாபம். 'தற்கொலைப் பாதையை நோக்கிப் போகிறது அரசு. சீக்கிரமே தேர்தல் வரும்' என்று பி.ஜே.பி. தலைவர்கள் சொல்ல ஆரம்பித்திருப்பது, வழக்கமான பூச்சாண்டி அரசியலாகத் தோன்றவில்லை!'' என்றபடியே கழுகார் விட்டார் ஜூட்!
 
சிதம்பர ரகசிய தேக்கடி விசிட்!
டெல்லியில் 'பிரணாப் புயல்’ வீசி அடங்கிய(?) பிறகு தேக்கடிக்கு குடும்பத்தோடு காஷ§வல் டிரஸ்ஸில் ஓய்வுக்கு வந்தார் ப.சிதம்பரம்!
'சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது 2ஜி விவகாரத்தில் காட்டப்பட்ட மந்தநிலையே இவ்வளவு ஊழலுக்கும் காரணம்’ என பிரணாப் அமைச்சகம் அனுப்பிய கடிதம், ப.சி-யை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டதாம். சோனியாவின் அவசரத் தலையீட்டால் உள்கட்சி எதிரிகள் அடங்குவது போல் தெரிந்தாலும், வேறு திசையிலிருந்து குடைச்சலைக் கூட்டவே செய்வார்கள் என்று நினைக்கிறாராம் சிதம்பரம்.
டெல்லியில் இருந்து மனைவி நளினியுடன் 1-ம் தேதி காலை சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார் ப.சி. அங்கு தயாராக இருந்த மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி, பேத்தி ஆகியோருடன் காலை 8.30 விமானம் மூலம் மதுரையை அடைந்தார். இவரது வருகை மதுரை, தேனி போலீஸாருக்குத் தாமதமாகவே தெரிவிக்கப்பட்டது. அவசரகதியாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். மதியம் 12.30 மணிக்கு குமுளியை அடைந்த சிதம்பரத்தின் முகம் வழக்கமான கலகலப்பைத் தொலைத்திருந்தது. அதிகாரிகள் வரவேற்பை இறுக்கத்தோடு ஏற்றுக் கொண்டவர் தேக்கடி நீர்த் தேக்கத்தின் நடுவில் உள்ள கேரளா சுற்றுலாத் துறைக்கு சொந்தமான ஆரணி நிவாஸ் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் குடும்பத்துடன் தேக்கடியில் படகு சவாரி சென்றார். பலத்த பாதுகாப்புடன் குமுளியில் உள்ள தனியார் ஸ்பைசஸ் பேலஸ் ஹோட்டலில் இரவு தங்கியது சிதம்பரம் குடும்பம்.
அமைச்சரைப் பேட்டி காணக் காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு நல்ல முகம் காட்டவில்லை போலீஸ்! மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தரப்பில், ''தனது ராஜினாமா கடிதத்தைக் கட்சித் தலைமையிடம் சிதம்பரம் கொடுத்திருக்கிறார். அதை ஏற்காத சோனியா, 'இந்த நேரத்தில் ராஜினாமா என்றால் 2ஜி ஊழலில் காங்கிரஸுக்கும் பங்கு இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் இன்னும் உரக்கக் கத்தும்’ என்றார். இருந்தும் மனவலி தீராமல்தான் குடும்பத்தோடு சில விஷயங்களைப் பேசி முடிக்க சிதம்பரம் சுற்றுலா கிளம்பினார்...'' என்று கூறப்படுகிறது.
*********************************************************************************
கழுகார் பதில்கள்

ஆ.முருகநாதன், சேலம்.
 அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவன் நான். ஆனால், இதைப்பற்றி பேசினாலே என் நண்பர்கள் கிண்டல் செய்கிறார்களே?
உயிரற்ற மீன்கள்தான் அருவி பாயும் திசையில் செல்லும். நீங்கள் அறிவுள்ள மீன் அதுபற்றிக் கவலைப்படாதீர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர் என்பதால், உங்களுக்கு தேல்ஸ் பற்றித் தெரிந்திருக்கும்! சாக்ரடீஸுக்கு முன்பு கிரேக்கத்தில் வாழ்ந்த வானியல் அறிஞன். ஒரு நாள் அவர் சிறு கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். ஒரு பெண், அவரைத் தூக்கிவிட்டுக் காப்பாற்றினாள். 'உங்கள் காலுக்குக் கீழே இருக்கும் சிறு கிணறுகூட உங்களது கண்ணுக்குத் தெரியவில்லை. எட்டாத உயரத்தில் இருக்கும் வானத்தை எப்படி ஆராய்ச்சி செய்வீர்கள்?’ என்று அவள் கேலி செய்தாள். ஆனால், அதைப்பற்றி தேல்ஸ் கவலைப்படவில்லை. தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். விண்மீன்கள், சூரியகிரகணம், திசைகள் பற்றி அதற்குப் பிறகுதான் கண்டுபிடித்துச் சொன்னார் தேல்ஸ். சூரியனின் கோள அளவைச் சொன்னவரும் அவர்தான். ஒரு ஆண்டுக்கு 365 நாள் என்று வரையறுத்ததும் அவரே. எனவே கிண்டலை உரமாக எடுத்துக்கொள்ளுங்கள்!
கி.சுதா, ப.வேலூர்.
மனசாட்சி உள்ள அரசியலின் நல் இலக்கணம் என்ன?
எவரையும் வஞ்சிக்காமல், எவர் மீதும் பொறாமைப்​படாமல் இருப்பது!
 இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.
  ராஜீவ் காந்தி செய்த தவறுகள் என்ன?
போபர்ஸ் ஆயுத பேர ஊழலில் அவர் மீது விழுந்த கறை இன்று வரை துடைக்கப்படவில்லை. இத்தாலிய தரகர் குவாத்ரோச்சியைக் காப்பாற்ற சி.பி.ஐ. இதுவரை துடிப்பது அவருக்கு களங்கம் கற்பிப்பதாக இருக்கிறது!
பெரும்பான்மை ஈழத் தமிழர்க்கு ஒப்புதல் இல்லாத ஒப்பந்தம் ஒன்றை ஜெயவர்த்தனாவுடன் போட்டார் ராஜீவ். அந்தக் குறைபாடு உடைய அறிக்கையைக்கூட அமல்படுத்த இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்தவில்லை. இந்த விஷயம் குறித்து இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய ராணுவத் தளபதிகளே நிறைய எழுதி உள்ளார்கள். முதல் விஷயம், அந்தக் காலத்து 'இந்து’ பத்திரிகையில் ஆதாரபூர்வமாக வெளிவந்தன.
 பி.ராமையா, பல்லடம்.
நம் மக்களிடம் விழிப்பு உணர்வு எவ்வாறு உள்ளது?
இலவச கலர் டி.வி-யை நல்ல விலைக்கு விற்றது மாதிரி... 'கிரைண்டர் கொடுத்தால் எவ்வளவுக்கு எடுப்பீர்கள்?’ என்று இப்போதே சிலர் விசாரிக்கும் அளவுக்கு விழிப்பு உணர்வு வளர்ந்துள்ளது!
 எஸ்.பவதாரிணி, ஆலத்தம்பாடி.
அடுத்த விக்கெட் அஞ்சாநெஞ்சனா? தளபதியா?
இடையில் இன்னும் பல விக்கெட்டுகள் பாக்கி உள்ளன!
 கோம்பை. எஸ்.ரவீந்திரன், சேலம்-5.
  வீட்டுவசதி வாரிய இடங்களை முதலமைச்சர் கொடுப்பது அவருக்கு உள்ள சிறப்பு உரிமை என்கிறாரே கருணாநிதி?
சிறப்பு உரிமை இருக்கலாம். ஏற்கெனவே வீட்டுவசதி வாரியத்தில் மனை வாங்கியவர்க்கு மறுபடியும் கொடுப்பது, ஏற்கெனவே சொந்த வீடுகள் இருப்பவர்களுக்குக் கொடுப்பதும் விதியை மீறிய செயல். முதலமைச்சரே அதைச் செய்யக் கூடாது. 'சமூக சேவகர்’ என்ற கோட்டா உண்மையில் சேவை செய்பவர்களுக்குத்தான். யாருக்கெல்லாம் வீடு, மனை கொடுக்க வேண்டுமோ அவர்கள் அனைவரையும் 'சமூக சேவகர்’ என்று சொல்லித் தாரை வார்த்திருக்கிறார்கள். இது தவறானது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியிலும் இவை நடந்துள்ளன. கடந்த தி.மு.க. ஆட்சியில் அதிகம் நடந்துள்ளன. இதில்தான் அவர்களுக்குள் போட்டியே!
 தேவிகா ஜெயக்குமார், ஆனைமலை.
'அதிகாரம் மிக்கவர்களை குற்றவாளி ஆக்க முடியாது’ என்கிறாரே முன்னாள் நிதி அமைச்சர் ஜஸ்வந்த்சிங்?
ஸ்பெக்ட்ரம் முதல் பெங்களூரூ வரை அதைத்தானே பார்க்கிறோம்!
 கி.இளங்கோ, சீலநாயக்கன்பட்டி.
  தூக்கிலிட நாள் குறிக்கப்பட்ட பிறகு எதற்காக தனிமைச் சிறை? 40, 50 காவலர்கள் பாதுகாவல் ஏன்? வாழும் சில நாட்கள் மற்றவர்களிடம் பேசுவதற்கு அனுமதி வழங்காத கொடூரச் சிறைவிதிகள் அவமானம் இல்லையா?
எப்போதோ வகுக்கப்பட்டவை இந்த விதிகள். உடலில் சிறு காயம் இருந்தால், அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் தூக்கிலிட மாட்டார்கள். எனவே, அத்தகைய காயத்தை மற்ற கைதிகள் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் தனிமையில் வைக்கிறார்கள். தூக்கில் இடுவதே கொடூரம். அதில் விதிமுறைகள் மட்டும் எப்படி சரியானதாக இருக்கும்?
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
  விசாரணை கமிஷன் அறிக்கைகள் என்னவாகின்றன?
சட்டமன்ற, நாடாளுமன்ற நூலகங்களில் தூங்குகின்றன. 'குறிப்பிட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்கிறது’ என்று ஒரு ஃபைல் எழுதி கையெழுத்துப் போடுவதோடு கடமை முடிந்துவிடும். கொள்கை அளவில் ஏற்கிறேன் என்றாலே, 'செயல்படுத்தும் நிலைமையில் இல்லை’ என்று அர்த்தம். எல்லா விசாரணை கமிஷன்களின் கதையும் அதுதான். அதனால்தான் எந்தப் பிரச்னையையும் அமுக்க... 'கல்லைப் போடு இல்லேன்னா கமிஷனைப் போடு’ என்கிறார்கள்!
 சி.பி.கணேசன், பேராவூரணி.
தமிழக காவல் துறையின் சமீபத்திய செயல்பாடு சிறப்பா? மிடுக்கா?
இரண்டாகவும் இல்லை. திருட்டு குறைந்திருந்தால் சிறப்பாக இருப்பதாகச் சொல்லலாம். குற்றங்கள் குறைந்திருந்தால் மிடுக்கானவர்கள் என்று பாராட்டலாம். எல்லா இடங்களிலும் 'லத்தி’ மட்டும் சுழல்வதால் 'துடுக்கு’ என்று மட்டும் சொல்லலாம். அதுவும் அப்பாவிப் போராட்டக்காரர்கள் மீது மட்டுமே அவை பாய்கின்றன!
*********************************************************************************
கோஷ்டிப் பூசலில் குழம்பிய ஜன்பத் இல்லம்... ரேஸ்கோர்ஸ் வீடு!

டெல்லி காட்சிகள்!
பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சோனியா காந்தி ஆகிய நால்வருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம், இப்போது நாட்டுக்கே தெரிந்துவிட்டது. முதல் மூவருக்குள் யார் நண்பன்... யார் எதிரி என்று தெரியாத அளவுக்கு வெட்டுக்குத்துகள் கமுக்கமாகவே நடந்துவந்தன. அது, இப்போது மீடியாக்களுக்கு முன்பு வெளிப்படையாகவே நடந்தது. 'எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை!’ என்று பிரணாப், சிதம்பரம் இருவரும் சேர்ந்தே சொன்னாலும் 'நிறையப் பிரச்னைகள் இருக்கின்றன’ என்பதை அவர்கள் முகங்களே காட்டிக் கொடுத்தன. இத்தகைய அவமானம் இதுவரை எந்த ஆட்சிக்குமே நடந்ததில்லை!
ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் பதற்றத்துடன் டெல்லி திரும்புகிறார். உடல் நலமின்றிப் படுத்திருந்த சோனியா காந்தியை முதலில் ப.சிதம்பரம் சென்று சந்திக்கிறார். அடுத்து பிரணாப் முகர்ஜி போய்ப் பார்க்கிறார். பின்னர் கொல்கத்தா சென்ற பிரணாப் அவசரமாக டெல்லி திரும்பி மீண்டும் சோனியாவை சந்திக்கிறார். அப்போது நான்கு பக்கக் கடிதத்தை சோனியாவிடம் கொடுக்கிறார். 'நியூயார்க்கில் பிரதமரை சந்தித்தபோது அவரிடமும் இந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டேன்’ என்கிறார் பிரணாப். இந்த சந்திப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் சோனியாவின் வீட்டுக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் செல்கிறார். இவரைத்தான் 'இந்தியாவின் வருங்காலப் பிரதமர்’ என்று டெல்லிப் பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். இப்படி இந்தியாவின் அனைத்து தலைமைத் தலைகளும் சோனியாவை நோக்கி குவியக் காரணமாக நடந்தது, அந்த கோஷ்டி மோதல்!
இதை அம்பலப்படுத்தியது ஓர் அறிக்கை. மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் பி.ஜி.எஸ்.ராவ், பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குநர் வினி மகாஜனுக்கு ஓர் அறிக்கையைக் கொடுக்கிறார். அதில், '2ஜி அலைக்கற்றையை ஏலம் மூலம் விற்பனை செய்யலாம் என்று அப்போதைய நிதித் துறை அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஊழலே நடந்திருக்காது!’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்கிறது அந்த அறிக்கை. கடந்த மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட அறிக்கை அது. இதைத் தனக்கான ஆதாரமாகக் கொண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினார் சுப்பிரமணியன் சுவாமி. ''ப.சிதம்பரத்துக்கும் இந்த முறைகேட்டில் பங்கு இருக்கிறது என்று நான் சொல்லி வருகிறேன். ஆனால், சி.பி.ஐ. கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதோ ஆதாரம்!'' என்று கர்ஜிக்க ஆரம்பித்தார் சுவாமி. 'சி.பி.ஐ-யின் செயல்பாடுகளில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன’ என்றார் பிரசாந்த் பூஷண். மத்திய அரசு தரப்பு, பதில் சொல்ல முடியாமல் சுப்ரீம் கோர்ட்டில் திணறியது.
ப.சிதம்பரத்தின் மீது நிதி அமைச்சகம் குறை கூறும் அறிக்கையைத் தயார் செய்கிறது என்றால், அவர் மீது பிரணாப் முகர்ஜிக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா? ப.சி-யின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கிறாரா பிரணாப்? என்று பத்திரிகைகள் கொக்கி போட ஆரம்பித்தன. சிதம்பரத்தைச் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே பிரணாப் இந்த அறிக்கையை லீக் செய்ததாகவும் தகவல் பரவியது. ''மன்மோகன் சிங் பிரதமர் நாற்காலியில் இருந்து இறங்கினால், அந்த இடம் தனக்குத்தான் என்று பிரணாப் நினைத்தார். ஆனால், அவருக்குக் கொடுக்க மனம் இல்லாத சோனியா அதை ப.சிதம்பரத்துக்குத் தரப்போகிறார். அதைத் தடுப்பதற்கான தந்திரம்தான் இது!'' என்று டெல்லிவாலாக்கள் காரணமும் சொன்னார்கள். பிரணாப் அலுவலகத்தில் ரகசிய மைக் பொருத்தப்பட்டதாக முன்பே வெளியான சர்ச்சைக்கும் இது காரணமாகச் சொல்லப்பட்டது. அந்த மைக் விவகாரத்துக்குப் பிறகுதான் சிதம்பரம் மீது பிரணாப் கோபமானதாகவும் சொல்லப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டில்  சுவாமி, பிரசாந்த் பூஷண் ஆகிய இருவரது வாதங்களுக்கும் பதில் சொல்ல அவகாசம் கேட்டார் மத்திய அரசின் வழக்கறிஞர் பி.பி.ராவ். இதைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதிக்கு இந்த விசாரணை தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் இந்த விவகாரத்தை முடித்துவிட வேண்டும் என்பதற்காகவே சோனியாவை ஒவ்வொருவராகப் போய் சந்தித்தார்கள்!
இதை தனிப்பட்ட பிரணாப், சிதம்பரம் மோதலாக இல்லாமல் இந்த ஆட்சிக்கு வரப் போகும் கெட்டபெயராக சோனியா நினைத்தார். அதனால்தான் உடனடியாக ரியாக்ஷன் காட்டும்படி மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு மேலிடத்தில் இருந்து சிக்னல் தரப்பட்டது. ''இப்போது வெளியாகி இருக்கும் குறிப்புகளுக்கு உயிரே கிடையாது. கிரிமினல் இன்வால்மென்ட் இருப்பது பற்றி எதுவும் இதில் குறிப்பிடவில்லை. இதைக் குப்பையில்தான் போடவேண்டும்!'' என்றார். அப்போதே சிதம்பரத்தைக் காப்பாற்ற மத்திய அரசு முடிவு செய்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது!
பிரணாப் முகர்ஜியிடம் கடிதம் கேட்டார் சோனியா. நாலு பக்க அளவில் தயாரிக்கப்பட்ட அந்தக் கடிதத்தில், ''2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்பெக்ட்​ரம் விவகாரத்தில் ஏராளமான தகவல்கள் ஊடகங்களில் வெளியாக ஆரம்பித்தன. எனவே, அரசு பிரதிநிதிகளின் பயன்பாட்டுக்காக ஒரு ஃபைல் தயாரிக்கப்பட்டது. அதுதான் பிரதமர் அலுவலகத்துக்கு மார்ச் 25-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஃபைலில் எழுதப்பட்டவை என்னுடைய கருத்துகளோ விளக்கங்களோ அல்ல...'' என்று பிரணாப் கூறி இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு பிரதமர் வீட்டுக்கு சோனியா காந்தி சென்று பேசினார். ''ஆட்சிக்கு மிகப் பெரிய கெட்ட பெயர் இதனால் வரப் போகிறது. எனவே, இந்தப் பிரச்னையை இத்தோடு முடித்துவிட வேண்டும்!'' என்று சோனியா கறாராகச் சொல்ல... பிரணாப், சிதம்பரம் இருவரும் கூட்டாகப் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவானது.
''மார்ச் 25-ம் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் அனுப்பிய அறிக்கையில் இருக்கும் தகவல்கள், பொருள் விளக்கங்கள் என்னுடைய கருத்துகளுக்கு உட்பட்டதல்ல. 2007 - 2008-ல் ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு 2003-ல் டிராய் கொடுத்துள்ள சிபாரிசின்படி எடுக்கப்பட்ட முடிவாகும்...'' என்று பிரணாப் அறிக்கை கொடுக்க சிதம்பரம் முகத்தில் புன்முறுவல் வந்தது. ''எங்களைப் பொறுத்த வரை இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது!'' என்று சிதம்பரம் சொன்னார்.
விவகாரம் முடிந்துவிட்டதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்!
சரோஜ் கண்பத்
************************************************************************
ஸ்பெக்ட்ரம் ஃபைல் கிழித்தது யார்?

டெல்லி களவு காட்சிகள்!
'ஸ்பெக்ட்ரம் வழக்கு ஸ்வாகா ஆகிறதா?’ என்று டெல்லியில் கிளம்பிய ஒரு பகீர் சந்தேகத்தை, சில இதழ்களுக்கு முன் சொல்லி இருந்தோம். இப்போது இந்த சந்தேகம் சுப்ரீம் கோர்ட்டுக்கே வந்திருப்பதுதான் அதிர்ச்சி க்ளைமாக்ஸ்!
ஆ.ராசா, கனிமொழி, ப.சிதம்பரம், சுப்பிரமணியன் சுவாமி, சி.பி.ஐ., பிரணாப் முகர்ஜி, நீதிபதிகள் ஜி.எஸ்..சிங்வி, ஏ.கே.கங்குலி, பிரசாந்த் பூஷண், சி.ஏ.ஜி., நீதிபதி ஓ.பி.சைனி, சுரேஷ்குமார் பல்சானியா, நாடாளுமன்றம், ஆர்.கே.சந்தோலியா, நீரா ராடியா, ஜெ.பி.சி., சாக்கோ (நாடாளுமன்றக் கூட்டுக்குழுத் தலைவர்), ஷாகித் உஸ்மான் பால்வா, மன்மோகன் சிங், அனில் அம்பானி, தயாநிதி மாறன்... என்று குற்றம் சாட்டப்பட்டவர்களும், அதைத் தோண்டித் துருவுபவர்களுமாக, தினம் தினம் இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஜி வழக்கு வட்டத்தில் கூடிக்கொண்டே போகிறது! இந்த பிரமாண்ட மனித சஞ்சாரத்துக்கு நடுவே சில கறுப்பு சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி!
காந்தி நினைவு நாளான அக்-2-ம் தேதி டெல்லியில் ஒரு வித்தியாசமான காட்சி. பிரதமர், சோனியா, கபில்சிபல் ஆகியோருடன் பி.ஜே.பி. தலைவர் அத்வானியும், சுஷ்மா சுவராஜும் இருக்கிறார்கள். இவர்களுடன் சுப்பிரமணியன் சுவாமியும் இருக்கிறார். 'இதுவித்தியாச மான காட்சியா... விஷயமுள்ள காட்சியா! என்று டெல்லி பத்திரிகை யாளர்கள் கிண்டலடித்தார்கள்!
  இந்த விவகாரத்தில், 'யாருக்கு என்ன நோக்கம்? எதற்காக ஊழல் செய்தார்கள்? பணம் எங்கே? எப்படி ஊழல் செய்தார்கள்? யார் யார் ஊழல் செய்தார்கள்? யாருடைய புகார்? பொது நலன் வழக்கு எதற்கு? யார் இன்ஃபார்மர்கள்? ஊழலில் யார் யாருக்குப் பங்கு? இதில் பிரதமரின் ரோல் என்ன? நிதியமைச்சர் யார் பக்கம்? சுவாமியின் பின்னணி என்ன? ராசாவின் பணம் எங்கே? யார் வழக்கைப் பதிவு செய்தார்கள்? கருணாநிதி ஏன் புலம்புகிறார்? சோனியா இந்த விவகாரத்தில் கெஸ்ட் ரோலா... முக்கிய ரோலா... நோ ரோலா? எப்படியெல்லாம் புலனாய்வு செய்கிறார்கள்? ஏன் முன்னுக்குப் பின் முரணமாகக் குழப்புகிறார்கள்? ஏன் வழக்குப் பதிவில் திடீர் தாமதங்கள்?’ - இப்படி எத்தனையோ கேள்விகள் இன்னமும் வெறும் கேள்விகளாகவே இருக்கின்றன!
இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்தப்  புது ரகசியம் வெளியே வந்திருக்கிறது.
சுப்பிரமணியன் சுவாமி, 13 பக்கங்கள் கொண்ட ஆவணத்தைத் தாக்கல் செய்தார். ''மிக முக்கியமான ஆதாரங்கள் இவை!'' என்றும் சொன்னார். அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ. வக்கீல், ''இது புதிய தகவல் அல்ல. நிதி அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட 500 பக்க ஆவணங்களில் இருப்பதுதான்!'' என்று சொன்னார். ''இந்த ஆவணங்களை நீங்கள் ஆய்வு செய்தீர்களா?'' என்று கேட்ட நீதிபதிகள், அந்த 500 பக்க ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொன்னார்கள்.  மறுநாளே  சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
இந்த நிதித் துறை ஆவணத்தில் உள்ளவை பெரும்பாலும் சுப்பாராவ் என்பவர் நிதித் துறை செயலாளராக இருந்த​போது எழுதப்பட்டவை.  தொலைத் தொடர்புத் துறைக்கு ஸ்பெக்ட்ரம் விலையை மறுபரிசீலனை செய்யக் கோரி சுப்பாராவ் எழுதிய கடிதங்களும் இதில் உண்டு. டெலிகாம் நிதி கமிஷன் கூட்டத்தை, அமைச்சராக இருந்த ஆ.ராசா தள்ளி வைத்துக்கொண்டே போனது குறித்து சுப்பாராவ் ஏற்கெனவே சி.பி.ஐ-க்கு வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதே சுப்பாராவ் பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகியும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 2ஜி விவகாரத்தில் நிதித் துறையின் ஆலோசனைகளையும், தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளையும் நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்திடம் அவ்வப்போது தெரிவித்த தாகவும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் நிதி அமைச்சகம், தொலைத் தொடர்புத் துறையை வலியுறுத்த முடியாமல் போனது என்றும் சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணங்கள் இப்போது சுப்ரீம் கோர்ட் வசம் இருக்கின்றன. இவற்றை வரிசையாகப் பார்த்து வந்த நீதிபதிகள், திடீரென சில இடங்களில் அதிர்ச்சிக்கு ஆளானார்களாம். ''இதில் சில பக்கங் களைக் காணவில்லையே?'' என்று கேட்டனர். அதற்கு சி.பி.ஐ. வக்கீலால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
''காணாமல் போன பக்கங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும்!'' என்று உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள். அந்தப் பக்கங்கள் அரசு கோப்பிலிருந்து திட்டமிட்டே கிழித்து எடுக்கப்பட்டதா... அதில் என்ன விதமான தகவல்கள் இருந்தன... ஏன் அவற்றைக் காணவில்லை... இது யாரைக் காப்பாற்றுவதற்காக என்பதுதான் இப்போது சுப்ரீம் கோர்ட் போட்டுக் குடையும் ரகசியம். ''இந்த விஷயத்தில் சி.பி.ஐ. ஆரம்பத்தில் சரியாகவே நடந்து கொண்டது. ஆனால், போகப் போக தனது நடவடிக்கைகளின் வீரியத்தைக் குறைத்துக் கொண்டது. சிவசங்கரன் வாக்குமூலம் மற்றும், அனில் அம்பானி நிறுவனத் தொடர்புகள் குறித்து முரண்பாடான தகவல்களை சி.பி.ஐ. சொல்வதைப் பார்த்தாலே, அவர்கள் கைகள் மறுபடியும் கட்டப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. முக்கியமாக, பிரதமர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரை கோர்ட்டுக்கு இழுக்க, ஆ.ராசா வேலைகளைத் துவங்கியது முதல் சி.பி.ஐ-யின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு விட்டது!'' என்று சுவாமி தரப்பில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில் தொலைத் தொடர்புத் துறை ஊழல் கண்காணிப்புப் பிரிவிலும் இரண்டு கோப்புகள் மாயமானதாகத் தகவல் பரவி உள்ளது. கடைசியாக அந்தக் கோப்புகள் யார் வசம் இருந்தன என்று தேடும் காரியத்தைத் தொடங்கி இருக்கிறார்களாம். ''அதை வைத்திருந்த அதிகாரி சில மாதங்களுக்கு முன்னால் ஓய்வு பெற்றுவிட்டார்!'' என்கிறார்கள். ''இது ஸ்பெக்ட்ரம் தொடர்பானவை அல்ல. வேறு வழக்கு தொடர்பானவை!'' என்று  சிலர் சொல்வதையும் ஏற்க முடியவில்லை. எப்படிப் பார்த்தாலும் சில முக்கியக் கோப்புகளைக் காணவில்லை என்பது உறுதி.
''ஆ.ராசா, கனிமொழி ஆகிய இருவரை மட்டும் மாட்டிவிட்டு... மற்றவர்களைக் காப்பாற்ற டெல்லி மேலிடம் முடிவெடுத்து விட்டதா?'' என்று தி.மு.க.  தரப்புக் குரல்கள் டெல்லியில் கேட்க ஆரம்பித்துள்ளன. இந்த ஃபைல்கள் காணாமல் போன மேட்டரை பி.ஜே.பி-யும் கையில் எடுக்கப் போகிறது. அடுத்த கட்ட விசாரணையில் சுப்ரீம் கோர்ட் என்னவெல்லாம் கேட்டு சாட்டையை சொடுக்கப் போகிறதோ?
சரோஜ் கண்பத்    
*********************************************************************************
நம்பிக் கெட்டவன் நான்!

கருணாநிதியின் சுயவிமர்சனம்!
கருணாநிதி குடும்பத்தினர் பங்கேற்காமல் ஆச்சர்யத்தோடு நடந்து முடிந்திருக்கிறது தி.மு.க-வின் முப்பெரும் விழா! ஒவ்வொரு வருடமும் பெரியார், அண்ணா பிறந்தநாள், தி.மு.க. உதயமான நாள் ஆகியவற்றை முப்பெரும் விழாவாக தி.மு.க. கொண்டாடும். இந்த ஆண்டு அந்த விழாவுக்கு செப்டம்பர் 17-ம் தேதி வேலூரில் நடத்த தேதி குறித்தனர். ஆனால், செப்டம்பர் 15-ம் தேதி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. தேதி குறிக்க... விழாவை 30-ம் தேதிக்கு மாற்றியதோடு, இடத்தை சென்னைக்கும் மாற்றிவிட்டது தி.மு.க.!
விழாவில் அறிவாலயம் கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தும், உயிர்ப்பில்லை. நில அபகரிப்பு புகாரில் வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, மதுரை என்று சிறைச்சாலைகளுக்குள் வி.ஐ.பி-க்கள் வாசம் செய்வதால்தான் இந்த கலகலப்பு மிஸ்ஸிங். விதிவிலக்கு - வீரபாண்டி ஆறுமுகம் உட்பட ஒரு சில தலைகள் மட்டுமே. முதலில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் பள்ளி அளவில் முதல் பரிசு பெற்ற எல்.கே.ஜி. மாணவன் ஆல்வின் ஆண்டோ கைதட்டல்களை அள்ளினான்.  ''தமிழே... நீ வளர்த்த செம்மொழியில் நானும் பேசுகிறேன்...'' என்று சொல்லி பாரதிதாசனின் பாடலைப் பாடியவன் தொடர்ந்து, ''பூட்டப்பட்ட இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில் வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!’ என்று பாட... நடப்பு அரசியலோடு ஒத்துப்போக, கலகலத்தது அரங்கம்.
சுப.வீரபாண்டியனுக்கு 'பெரியார் விருது’ம், ஆர்.எஸ்.பாரதிக்கு 'அண்ணா விருது’ம், உமாமகேஸ்​வரிக்கு 'பாவேந்தர் விருது’ம், முகமது சகிக்கு 'கலைஞர் விருது’ம் வழங்கப்பட்டன. சுப.வீரபாண்டியனின் தந்தை இராம.சுப்பையாவும் பல ஆண்டுகளுக்கு முன்பு இதே பெரியார் விருதை கருணாநிதி கையால் பெற்றார். இப்போது அவரது மகனும் அதே விருதை வாங்கி இருக்கிறார். 'அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தைக் கபளீகரம் செய்த ஜெயலலிதா மீது நில அபகரிப்பு வழக்குத் தொடர்ந்து அந்த நிலத்தை மீட்டவர்’ என்று ஆர்.எஸ்.பாரதிக்கு கொடுக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில் எழுதி இருந்தனர். இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டியதற்காகவும், கமிஷனர் முத்துக்கருப்பனுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளானதற்காகவும் முகமது சகிக்கும் விருது வழங்கப்பட்டன.
முதலில், சற்குண பாண்டியன் பேச்சை ஆரம்பித்தாலும், பொளந்து கட்டியது அடுத்து வந்த பரிதி இளம்வழுதிதான். ''சட்டசபைத் தேர்தலில் நாம் தோற்றோம் என்பதைவிட, வெற்றியைத் திருட்டுக் கொடுத்தோம். வெற்றி நகை திருடு போவதற்கு சிலர் உதவியாக இருந்தார்கள். அந்த வெற்றி எங்கேயும் போய்விடவில்லை. அடகுக்​கடையில்தான் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதை மீட்டெடுத்துவிடுவோம். 20-ம் தேதி வரப் போகிறது. பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜர் ஆவார். இந்த வழக்கு அதிகபட்சம் ஜனவரியில் முடிவுக்கு வரும். தை பிறந்தால் வழி பிறக்கும். எப்படி முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கினோரோ... அதுபோல இப்போது யாராவது ஒருவர் வருவார். அதற்கு இப்போதே கட்சிக்குள் போட்டி நடக்கிறது. அடுத்த சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்றப் போவது கலைஞர்தான்!'' என்று ஒரே போடு போட்டார்.
துரைமுருகன் மைக்கை கர்சிப்பால் துடைத்து​விட்டுப் பேச ஆரம்பித்தார். ''மைனாரிட்டி ஆட்சியைத்தான் நடத்தினோம். ஆனால், மெஜாரிட்டியான திட்டங்களைக் கொண்டுவந்தோம். எங்களைத் தேடி வந்த கூட்டணிக் கட்சிகளை கடைசி வரையில் அரவணைத்துச் சென்றோம். நம்பி வந்த கூட்டணிக் கட்சிகளை மூன்றே மாதத்தில் கழற்றிவிட்டது மெஜாரிட்டி அரசு. கூட்டணிக் கட்சியினர் பேச நினைத்தை எல்லாம் நாங்கள் பேச நினைத்தோம். எங்களைப் பேசவே விடவில்லை. இப்போது அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி இருக்கிறார்கள். அதற்காக மெஜாரிட்டி சர்க்காருக்கு நன்றி!'' என்று நையாண்டி செய்தார்.
இறுதியாகப் பேசிய கருணாநிதி, ''தி.மு.க-தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று லட்சக்கணக்கான மக்கள் சொன்னதை நம்பிக் கெட்டவன் நான். 'தி.மு.க. தோற்றுவிட்டதா?’ என்று மக்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு சரித்திரப் பிரசித்தி பெற்ற தோல்வியை சந்தித்திருக்கிறோம். அதிலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஏதோ தவறு செய்துவிட்டோமே என்று மக்கள் வருந்துகிறார்கள். ஜனநாயகத்தின் விளையாட்டை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இந்தத் தோல்வி தமிழக மக்களைத் தாண்டி ஈழத் தமிழர்கள் வரையில் பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு விடிவு காலம் வரும். என் உயிர் தமிழ்த் தாயின் மடியில்தான் போகும். தி.மு.க. பட்ட மரமாகாது. பழுத்த மரமாகவே இருக்கும். அதை யாரும் அழிக்க முடியாது. என் உயிரைப் பணயமாகவைத்து நடக்கும் போராட்டத்தில் நாம் நிச்சயம் வெல்வோம்!'' என்றது அவரது கரகர குரல்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் எப்படியும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்பதால்தான் முப்பெரும் விழாவின் தேதியை மாற்றினார் கருணாநிதி. ஆனால், அவர் நினைத்தபடி ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும் சி.பி.ஐ. பிடி இறுகியிருக்கிறது. உடல்நலக் குறைவால் ஸ்டாலின் வரவில்லை. அவர் வராததால் துர்க்காவும் வரவில்லை. மத்திய அமைச்சர் அழகிரியும் வரவில்லை. தயாநிதியையும் காணோம். தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், செல்வி என முன் வரிசையை எப்போதும் பிடிக்கும் குடும்பத்தினர் யாரும் வராமல் வித்தியாசமான விழாவாக முடிந்தது முப்பெரும் விழா!
எம்.பரக்கத் அலி
படங்கள்: வி.செந்தில்குமார்
*********************************************************************************
நகராட்சித் தலைவர்... முந்துவது யார்?

15 நகரங்கள் பரபர ரிப்போர்!
கிட்டத்தட்ட முக்கியமான கட்சிகள் அனைத்தும் தனித்து நிற்பதால், இந்த உள்ளாட்சித் தேர்தலைத் தங்களது சுய பலத்துக்கான உரை கல்லாகப் பார்க்கின்றன ஒவ்வொரு கட்சியும். ஒரே கட்சியைச் சேர்ந்த வர்களே பங்காளிகளாக, அண்ணன் தம்பிகளே எதிராளிகளாக மாறி நிற்க... தேர்தல் பிரசாரம் தூள் பறக்கிறது. பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் இடையில்தான் நேரடிப் போட்டி நிலவு கிறது. இச்சூழலில், தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 நகராட்சிகளைப் பல்ஸ் பிடித்துப் பார்த்தோம். இதோ அந்த ரிப்போர்ட்...


அரக்கோணம்:  இங்கு அ.தி.மு.க. வேட்பாளர் பவானி கருணாகரன். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்த இவரை மக்கள் 'ஆஹா ஓஹோ’ என்று கொண்டாடாவிட்டாலும், பெரிய குற்றச்சாட்டுகளில் சிக்காதவர். இவருக்கு எதிராக நிற்பவர், அரக்கோணம் நகராட்சியின் முன்னாள் தலைவரான தி.மு.க-வின் மனோகரன். பதவியில் இருந்த காலத்தில் மனோகரன் எதையும் சாதித்துவிடவில்லை என்பது மக்களின் எண்ணம். அ.தி.மு.க-வின் செல்வாக்கும் இருப்பதால் வாய்ப்பு பவானி கருணாகரனுக்கே.

சிதம்பரம்:  சிட்டிங் சேர்மனான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுஜியா பேகம், மீண்டும் வேட்பாளர். இவரை எதிர்த்து நிற்பவர் அ.தி.மு.க. நகரச் செயலாளரான தோப்பு சுந்தரின் மனைவி நிர்மலா. கடந்த ஆட்சி சமயத்தில் தி.மு.க-வினர் ஆதிக்கம் செலுத்தியதால், பகுஜியா பேகத்தால் மக்களுக்கு எதையுமே செய்ய முடியவில்லை. இது அவருக்கு மைனஸ். இந்நிலையில், தோப்பு சுந்தருக்கு மக்களிடம் பிரபலம் அதிகம் உள்ளது. கூடவே, சிறுபான்மையினர் வாக்குகளும் அவர் மனைவிக்கு ப்ளஸ். ஆகவே, போட்டியில் தற்போது முன்னிலையில் இருப்பது நிர்மலாதான்.

பொள்ளாச்சி: அ.தி.மு.க. பெல்ட்டான இந்தப் பகுதியில் எம்.எல்.ஏ., எம்.பி. என்று அத்தனை பேரும் அ.தி.மு.க. புள்ளிகள்தான். ஆகவே, வலுவாக இருக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளரான தம்பி (எ) கிருஷ்ணகுமார். இவருக்கு சற்றே கலக்கம் கொடுப்பவர் தி.மு.க-வின் செல்வராஜ். இருவருமே அந்தந்தக் கட்சிகளின் நகரச் செயலாளர்கள் என்பதால், மக்கள் மத்தியில் அறிமுகம் உண்டு. தே.மு.தி.க-வுக்குப் பரவலாக இருக்கும் செல்வாக்கு அ.தி.மு.க-வின் வாக்குகளை சிதறடித்தாலும்கூட கிருஷ்ணகுமாரின் கரமே ஓங்கி நிற்கிறது.

நாமக்கல்:  நாமக்கல் நகராட்சியில் பிரதானமான ஆறு கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆனால், கடும் போட்டி, தி.மு.க-வின் செல்வராஜுக்கும், அ.தி.மு.க-வின் கரிகாலனுக்கும்தான். செல்வராஜ் சிட்டிங் சேர்மன். இருந்தும், நகராட்சியின் மேம்பாட்டுக்காக சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிதாக எதுவும் செய்யவில்லை. குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை போன்றவற்றை ஆரம்பித்து இன்னும் முடிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி இருக்கிறது. அ.தி.மு.க. கரிகாலன் நாமக்கல் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். பொதுமக்களிடம் நன்றாகப் பழக்கூடியவர். சிட்டிங் சேர்மன் மீது உள்ள அதிருப்தி இவரின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்துவிடும்.

புதுக்கோட்டை:  அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கார்த்திக் தொண்டை மான், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கட்சிக்கும் தேர்தலுக்கும் புதியவர். ஸீட் கேட்டுக் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் உட்கட்சிப் புள்ளிகள் இவருக்கு எதிராக வேலை பார்ப்பது பலவீனம். இருந்தும், குடும்ப செல் வாக்கும், நற்பெயரும் இவருக்குக் கைகொடுக்கும். தி.மு.க. தரப்பில் நகர்மன்றத் துணைத் தலைவராக இருந்த நைனாமுகமது போட்டியிடுகிறார். தி.மு.க-விலேயே ரகுபதி தரப்பில் ஸீட் கேட்டு மறுக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அந்தப் பகுதியில் இருக்கும் குடிநீர் பிரச்னை போன்றவற்றை தீர்த்துவைக்கக் காட்டிய முனைப்பு இவரது கையை உயர்த்துகிறது. ஆனாலும் கார்த்திக் தொண்டைமானே கரைசேர்வார்.

சிவகங்கை: முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மந்தக்காளை அ.தி.மு.க. வேட்பாளர். அகமுடையார் மெஜாரிட்டியாக வசிக்கும் சிவகங்கையில், கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த மந்தக்காளை வேட்பாளரானது அ.தி.மு.க-விலேயே பலருக்கு அதிருப்தி. தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் நகரச் செயலாளர் ஆனந்துக்கு கட்சி செல்வாக்கைத் தவிர தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை. ம.தி.மு.க. வேட்பாளராக நிற்கும் வக்கீல் கார்கண்ணனுக்கும் இங்கு ஓரளவுக்கு செல்வாக்கு உண்டு. இவருக்கு விழும் ஓட்டுகள் ஆனந்துக்கு ஆப்புவைக்கலாம். அதேபோல், மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிடும் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனனை 'தங்கமான ஆளுங்க’ என்று மாற்றுக் கட்சிக்காரர்களே சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. மார்க்சிஸ்ட் வேட்பாளர்களுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவினாலும் சிவகங்கை மக்கள் ஆளைப் பார்த்து ஓட்டுப் போட்டால் ஜெயம் அர்ச்சுனனுக்கே!

தஞ்சாவூர்: தி.மு.க. வேட்பாளர் கனகவள்ளி, மாநில மகளிர் அணி அமைப்பாளரான கார்ல் மார்க்ஸின் மருமகளாவார். கனிமொழியின் தீவிர ஆதரவாளரான கார்ல் மார்க்ஸ், பழனிமாணிக்கம், உபயதுல்லா ஆகியோரைத் தாண்டி மருமகளுக்கு ஸீட் வாங்கியதில் உள்கட்சிக்குள் அதிருப்தி அதிகம். ஏற்கெனவே, இரண்டு முறை நகராட்சித் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கோபாலின் மனைவி சாவித்திரிதான் இப்போது வேட்பாளர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றி இருப்பதால் சாவித்திரிக்கு ஆளும் கட்சியின் பலம் அதிகம். மொத்தத்தில் தி.மு.க-வின் கோட்டை, இந்தத் தேர்தலில் உட்கட்சிப் பூசலால் தகர்க்கப்படக்கூடும். தஞ்சையில். கூட்டிக்கழித்துப் பார்த்தால் சாவித்திரியே சாதிப்பார்.

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்கு அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் பாஸ்கர் போட்டியிடுகிறார். மக்களிடம் அறிமுகமான புள்ளி. வக்கீலான இவருக்கு நல்ல பேரும் உண்டு. பள்ளி கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நட்பு எக்ஸ்ட்ரா பலம். தி.மு.க. சார்பில் முன்னாள் நகரச் செயலாளர் சக்கரை போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் உள்ள மருதூர் பகுதியில் மூன்று முறை கவுன்சிலராக இருந்தவர். தேர்தலுக்காக அதிகம் செலவு செய்ய தி.மு.க. வேட்பாளர் தரப்பு விருப்பப்படவில்லை என்று தகவல் வருகிறது. ஆக வக்கீலுக்கே வெற்றி என்கிறார்கள்.

திண்டிவனம்:  திண்டிவனத்தில் அ.தி.மு.க. சார்பில் நிற்கிறார் கே.வி.என்.வெங்கடேசன். நகரச் செயலாளரான இவர் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆனால், இப்பகுதியில் முதலியார் சமுதாயத்தினர் அதிகம். ஆனாலும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊர் திண்டிவனம் என்பதால், அந்த செல்வாக்கில் ஓரளவுக்கு வாக்குகள் வாங்கலாம். சில பகுதிகளில் இவருக்கு எதிர்ப்பும் இருக்கிறது. தி.மு.க. சார்பில் நிற்கும் நகரச் செயலாளரான கபிலன், முதலியார் இனத்தைச் சேர்ந்தவர். இவர் மீது புகார்கள் எதுவும் இல்லை. இவர் வெற்றி பெற்றால் ஆச்சர்யம் இல்லை!

விருதுநகர்:  இங்கே போட்டி அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இடையில்தான். காங்கிரஸ் சார்பில் சிட்டிங் சேர்மன் கார்த்திகா கரிக்கோல்ராஜ். அ.தி.மு.க-வில் எதிர்த்து நிற்பது 'ஹிப்பி’ மாரியப்பனின் மனைவி சாந்தி. விருதுநகரைப் பொறுத்த வரை நாடார் சமுதாயத்தினரே வெற்றியாளரை நிர்ணயிப்பார்கள். அதனால், முக்கியமான 4 வேட்பாளர்களும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். அ.தி.மு.க-வின் சாந்தியின் கணவர் ஹிப்பி மாரியப்பன் நாடார்களுக்கு மட்டுமின்றி, அனைத்து சமுதாயத்தினருக்கும் நன்கு அறிமுகமானவர். சிட்டிங் சேர்மன் என்பதால் கார்த்திகா கரிக்கோல்ராஜ் மீது மக்களுக்கு நிறைய வருத்தங்கள் உள்ளன. அதுமட்டும் இன்றி நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் ரத்தினவேலு தலைமையிலான நகர் நல அமைப்பு, கார்த்திகாவுக்குக் குடைச்சலைக் கொடுத்து வருகிறது. மொத்தத்தில் அ.தி.மு.க-வே வெற்றியின் கதவைத் தட்டும்.

தர்மபுரி: தர்மபுரி நகராட்சியைக் கைப்பற்றுவதில் நேரடி போட்டி தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையில்தான். வேட்பாளராக முன்னாள் நகரச் செயலாளர் கந்தசாமி அறிவிக்கப்பட்டதும் கிளம்பிய உட்கட்சி அதிருப்தி, தி.மு.க. தலைமையின் தலையீட்டால் முழுமையாக சரி செய்யப்பட்டுவிட்டது. அ.தி.மு.க வேட்பாளரான சுமதி, தைரியமானவர். அதேநேரம், முன்னாள் நகரவைத் தலைவரான எஸ்.ஆர்.வெற்றிவேல், நகரச் செயலாளர் குருநாதன் ஆகியோர் ஸீட் கிடைக்காத வருத்தத்தில் சுயேச்சையாக மனு செய்துள்ளனர். இதுவே சுமதிக்கு லேசாக அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் வெற்றிவேலுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அவரது ஆதரவு கிடைத்தால் சுமதி சேர்மன் ஆகலாம். இன்றைய நிலையில் தி.மு.க. முன்னணியில் இருக்கிறது.

திருவண்ணாமலை: நகர்மன்றத் தலைவராக இருக்கும் தி.மு.க. ஸ்ரீதரனுக்கே மீண்டும் ஸீட். அ.தி.மு.க. தரப்பு வேட்பாளராக தெற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளரான பாலச்சந்தர் நிற்கிறார். முதல் முறையாகக் களம் காணும் பாலச்சந்தருக்கு கட்சி பலம் இருந்தாலும், மக்கள் மத்தியில் அறிமுகமே இல்லை. மாறாக, ஸ்ரீதரன் மக்களிடம் அறிமுகமானவர். மக்கள் எளிதில் சந்திக்கக் கூடியவர். இரண்டு முறையாக நகரமன்றத் தலைவராக இருப்பது, அனைத்துக் கட்சிக்காரர்களையும் அரவணைத்துச் செல்வது, ஓரளவு மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்துள்ளது போன்றவை அவருக்கு கைகொடுக்கும். ஆனால், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலைகள் முழுமை அடையாதது போன்றவை அவருக்கு மைனஸ். இருவரும் முதலியார் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், போட்டி மிகவும் பலமாகவே இருக்கிறது. இருந்தாலும், தி.மு.க-வுக்கு சாதகமாகவே தெரிகிறது.

கரூர்: தி.மு.க-வின் 'தாந்தோணி’ ரவி, அ.தி.மு.க-வின் 'தமிழ்நாடு’ செல்வம்... இருவருக்கும்தான் போட்டி. ஏற்கெனவே ஒரு முறை ரவி நகர் மன்றத் தலைவராக இருந்தவர். இப்போதும் கவுன்சிலராக இருக்கிறார். மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதில் முன்னால் நிற்பவர் என்ற பெயர் உண்டு. செல்வம், கடந்த 35 வருடங்களாக கட்சியில் இருக்கிறார். கட்சி சீனியர்களுக்கு இவர் நன்கு அறிமுகம். இவர் மீது எந்தப் புகாரும் இல்லை. இனாம் கரூர் தலைவராக இருந்தவர். பண பலம் இல்லாதது, பொது மக்களிடம் அதிகமான அறிமுகம் இல்லாதது இவரது பலவீனம். ஆனாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முயற்சியால் கரூர் அ.தி.மு.க. வசமாகும் என்கிறார்கள்.

திண்டுக்கல்: தி.மு.க. சார்பாக மாநில மகளிர் அணி தலைவர் நூர்ஜஹான் பேகம் களம் இறங்கி இருக்கிறார். மாநிலப் பொறுப்பில் இருந்தாலும் உள்ளூருக்குள் இவருக்கு செல்வாக்கு இல்லை. கூடவே உட்கட்சி புள்ளிகளின் அதிருப்தியும் அதிகம்... இவருக்கு நெருக்கடி தரும் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் மருதராஜ். முன்னாள் உப்பு வாரியத் தலைவரான இவருக்கு பல முறை வாய்ப்புக் கிடைத்தும் அவர் ஜெயிச்சதே இல்லை... என்ற நெகடிவ் சென்டிமென்ட்டும் உண்டு. கூடவே, திண்டுக்கல் நகராட்சித் தலைவர் பதவியில் அ.தி.மு.க. உட்கார்ந்ததே கிடையாது என்பது இன்னொரு சென்டிமென்ட். ஆனாலும், தி.மு.க-வில் இருக்கும் உட்கட்சிப் பிரச்னையால்... மருதராஜுக்கே வாய்ப்பு இருக்கலாம் என்கிறார்கள்.

செங்கோட்டை:  அ.தி.மு.க. வேட்பாளரான மோகனகிருஷ்ணனுக்கு கட்சிரீதியாக செல்வாக்கு இல்லாவிட்டாலும், தான் நடத்தும் பள்ளி வாயிலாக மக்களிடம் அறிமுகமானவர். கூடவே, இந்தப் பகுதியில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு அதிகம். தி.மு.க. வேட்பாளராக சிட்டிங் சேர்மன் ரஹீம் மீண்டும் வேட்பாளராகி இருக்கிறார். கணிசமான திட்டங்களைச் செயல்படுத்தியவர். ஆனாலும், சில ஊழல் குற்றச்சாட்டுகள், கவுன்சிலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் போன்றவற்றில் இவரது தலை உருட்டப்பட்டதால் அதுவே மைனஸ். இஸ்லாமியர் சமுதாய வாக்குகள் இவருக்கு நம்பிக்கையைக் கொடுத்தாலும் செங்கோட்டையைப் பிடிக்கப்போவது மோகனகிருஷ்ணன் என்றே தெரிகிறது.
ஜூ.வி. டீம்.
*********************************************************************************
கமாடிட்டியிலும் கலக்கலாம்!

*********************************************************************************
இப்ப மட்டும் என்ன திடீர் கரிசனம்?

கருணாநிதி நிதியை வாங்காத வாச்சாத்தி!
FOLLOW - UP
ந்திய நீதி வரலாற்றி​லேயே மிக நீண்ட இழுபறிக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்த வழக்கு என்றால் அது தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராம பலாத்கார வழக்குதான். கடந்த 29.9.11 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதே தினம், முன்னால் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி தானாகவே முன்வந்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா  15 ஆயிரத்தை நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். இதை முகத்தில் அறைந்தாற்போல வாச்சாத்தி மக்கள் மறுத்துவிட்டனர். காரணம், அறிய அங்கு சென்று விசாரித்தோம்.
கோபம் கொப்பளிக்க அம்மக்கள் நம்மிடம் பேசினார்கள்.  ''ஒன்றல்ல, இரண்டல்ல... 19 ஆண்டு​கள்... அப்போதெல்லாம் எங்களுக்கு நடந்த இந்தக் கொடுமை இவர்களுக்கு தெரிய​வில்லையா? ஆட்சிப் பீடத்தில் இருந்தபோது கண்டுகொள்ளாதவர்களுக்கு இப்போது மட்டும் என்ன திடீர் கரிசனம்!'' என்று மக்கள் முகம் சிவந்து கூக்குரலிட்டனர். அதன் பிறகு நாம் கேட்ட கேள்விகளுக்கு, ''உங்களுக்கு கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், இந்தத் தீர்ப்புக்காக இவ்வளவு காலமும் முன்னின்று போராடிய 'மலைவாழ் மக்கள் சங்க’ மாநிலத் தலைவர் சண்முகத்திடம் பேசுங்கள்...'' என்றனர்.
அப்படியே சண்முகத்தை தொடர்புகொண்டோம். அவர், ''சம்பவம் நடந்தது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில். அன்று தொடங்கி இப்போது தீர்ப்பு வெளியானது வரையிலும் இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தச் சலனமும் காட்டாத அரசியல் தலைவர் ஜெயலலிதா மட்டும்தான். இது ஒருபுறம் இருக்க, சம்பவத்துக்குப் பிறகு தி.மு.க-வும் ஆட்சிப் பீடம் ஏறியது அவர்களிடமும் பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. 'தனி நீதிமன்றம் அமைத்து வழக்கை விரைவாக நடத்த வேண்டும்’ என்றுகூட கோரிக்கை வைத்தோம். அந்த அரசோ இதைக் காதில்கூட வாங்கவில்லை. உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகும்கூட, 'தனி நீதிமன்றம் அமைக்க இயலாது. சி.பி.ஐ-க்கு அரசு தரப்பில் வழக்கறிஞர்களை மட்டும் நியமிக்கிறோம்.’ என்று கழன்றுகொண்டது. ஆக நீதியை விரைவுபடுத்தும் வாய்ப்பிருந்தும் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் யாரும் அக்கறையே காட்டவில்லை. இந்த வழக்குக்காக நாங்கள் பட்ட அவமானங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் அளவே கிடையாது. சட்டம் மட்டுமே அந்த மக்களுக்கு துணையாக நின்று இந்த நீதியை பெற்றுத் தந்திருக்கிறது. வழக்கின் ஆரம்பக் கட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனதும், சட்ட உதவியோடு கடும் முயற்சி செய்து சுமார்  1.50 கோடியை நிவாரணமாகப் பெற்றனர் வாச்சாத்தி மக்கள். ஆனாலும், ஒவ்வொரு பாதிப்புக்கும் ஏற்றவகையில் சட்டம் நிர்ணயித்துள்ள நிவாரணத் தொகையை கணக்கிட்டால், இன்னும் சில கோடி ரூபாய் அந்த மக்களுக்குத் தர வேண்டி இருக்கும். அதுக்கான முயற்சியை தொடர்ந்து நாங்கள் செய்து வருகிறோம். இதற்கிடையில், எந்தத் தலைவர்களின் அனுதாபத்தையும் வாச்சாத்தி மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சட்டம் சொல்லுவதை மட்டும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றி​னாலே அந்த மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்!'' என்றார் தீர்க்கமாக.
''இந்த  சம்பவத்தில் இதுவரை வெளிவராத தகவல்கள் எதுவும் உண்டா?'' என்று அவரிடம் கேட்டோம். அதற்கு, ''முக்கியமான சில விஷயங்களை சொல்கிறேன். சம்பவத்துக்குப் பிறகு 1992 ஆகஸ்ட் 1-ல், சேலம் சிறை மைதானத்தில் அடையாள அணிவகுப்பு நடத்த சி.பி.ஐ. ஏற்பாடு செய்தது. ஆனால், அதை சீர்குலைக்க நடந்த முயற்சிகள் ஏராளம். அன்றைய ஆளும் கட்சிப் பிரமுகர்கள், பல்வேறு அச்சுறுத்தல்களை பரப்பினர். அதாவது, 'அடையாள அணிவகுப்புக்கு நீங்கள் சென்றால் வனத் துறை அதிகாரிகள் அங்கேயேவைத்து உங்களுக்கு தாலி கட்டிவிடுவார்கள். அதற்குப் பிறகு உங்களை கடத்திச் சென்று கொல்லவும் தயங்கமாட்டார்கள். தப்பினாலும் அவர்கள் வீட்டில் இரண்டாம்தாரமாகத்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்.  10 ஆயிரம் வாங்கித் தருகிறோம், இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிடுங்கள்’ என்றெல்லாம் கிராமத்துப் பெண்களிடம் மிரட்டினர். குழம்பிய இந்தப் பெண்களுக்காக, முன்னால் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வான அண்ணாமலை உள்ளிட்டவர்கள்தான் தைரியம் தந்தனர். பிறகே, அரூர் போலீஸில் இந்த மிரட்டலைப் புகாராகப் பதிவு செய்தனர் பெண்கள். அதன் பிறகும் அணிவகுப்பு ஏற்பாடுகள் ரத்தாகிவிட்டதாக ஊத்தங்கரையின் அன்றைய மாஜிஸ்ட்ரேட் பெயரில் போலி அறிக்கையை கசியவிட்டு குழப்பம் விளைவித்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு அணிவகுப்பு ஏற்பாடு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் நடந்த அணிவகுப்பில் ஒரே நேரத்தில் 1,500 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் அடையாளம் காட்ட வந்த பெண்களை, கேலியும் கிண்டலும் செய்ததால், அன்றும் ஏற்பாடுகள் ரத்தானது. உயர் நீதிமன்ற தலையீட்டின் பிறகே அக்டோபர் 10 முதல் 16-ம் தேதி வரை சேலம் சிறை வளாகத்தில் பெரிய அறை ஒன்றில் 50, 50 பேர்களாக நிறுத்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில்தான், 11 பேரை பெண்கள் அடையாளம் காட்டினர். இந்த அடையாளம் காட்டும் முயற்சிக்கே எத்தனை முட்டுக்கட்டைகள் போடப்பட்டன என்பதை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்போது எல்லாம் இம்மக்களுக்கு உதவிகள் செய்ய வராதவர்கள் இப்போது மட்டும் ஏன் வர வேண்டும். அதனால்தான் பொதுமக்கள் இந்தச் சலுகையை உதாசீனப்படுத்தினார்கள்!'' என்றார்.
எஸ்.ராஜாசெல்லம்
************************************************************************
ஜோஷி இப்படிப் பேசலாமா?

ஆதங்கப்படும் ஈழத் தமிழர்கள்
'ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களை அழிக்க காங்கிரஸ் அரசுதான் துணை புரிந்தது!’ என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க... இந்திய எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யிடம் நியாயம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் பிரிட்டன் ஈழத் தமிழர்கள். அடுத்து, பி.ஜே.பி. ஆட்சிக்கு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், அவர்களாவது தமிழர்களின் நியாயத் துக்காக நிற்க வேண்டும் என்பதை உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் டெல்லிக்கு வந்த 'பிரித்தானிய தமிழர் பேரவை’யின் தலைவர்களில் ஒருவரான பத்மநாதன் தலைமையிலான குழுவினர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் பி.ஜே.பி-யின் முன்னணித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்டி.ராஜா, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலரையும் சந்தித்துப் பேசினர்.
இதற்கிடையில், இலங்கை வருமாறு சுஷ்மா சுவராஜுக்கு அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்திருந்தது. 'போர் பாதிப்புகளை சுதந்திரமாகப் பார்வையிட வெளிநாட்டு ஊடகங்கள், தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு மறுக்கும் நிலையில்... சுஷ்மா அங்கு சென்றால் போர்க் குற்றம் சாட்டப்படும் அரசுக்கு ஆதரவாக அமைந்துவிடும்’ என்று பிரிட்டன் தமிழர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதை ஏற்றுக்கொண்ட சுஷ்மா, உடனே இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்துவிட்டார்.
ஆனால், பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, திடீரென இலங்கைக்குப் பயணம் செய்தார். சிங்கள இன வெறியர்களால் பெரிதாகக் கொண்டாடப்படும் 'அனகாரிக தர்மபாலா’ என்ற புத்த மார்க்கவாதியின் நினைவு நிகழ்வில் ஜோஷி விரிவுரை ஆற்றினார். இலங்கை பிரதமர் ஜெயரத்ன, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் உள்பட பலருடனும் பேசினார்.
பின்னர் பேசிய ஜோஷி, ''வன்முறை நீங்கிய அமைதி தவழும் நாடாக இலங்கை மாற வேண்டும். அதற்கு ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என அனைத்து இலங்கையர்களும் பணியாற்ற வேண்டும்!'' என்கிறபடி கருத்து வெளியிட, புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு! ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இருந்து ஆதரவுக் குரல் கொடுத்துவரும் இந்து ஆதரவு அமைப்புகள் தனி ஈழ நாட்டுக்கு ஆதரவளித்து வந்த நிலையில்... ஜோஷியின் கொழும்புப் பேச்சு புலம்பெயர் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
''ஏதோ ஒரு காரணத்துக்காக ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களைக் கருவறுத்துக் கொன்றதற்குகாங்கிரஸ் கட்சி துணையாக நின்றது. படுகொலைக்கு எதிராகவும், ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும் நடந்துகொண்ட பி.ஜே.பி., இப்போது காங்கிரஸ் வழியிலேயே செல்கிறதா? கட்சியின் நிலைப் பாட்டுக்கு மாறாக மூத்த தலைவரான ஜோஷி பேசலாமா?'' என அடுத்தடுத்து கேள்விகளை அள்ளி வீசுகிறார்கள், பிரிட்டன் தமிழர்கள். பி.ஜே.பி. மூத்த தலைவர்களை சந்தித்துவிட்டுச் சென்ற பிரித்தானிய தமிழர் பேரவையின் பத்மநாதனிடம் நாம் இதுபற்றி கேட்டோம்.
''இலங்கைத் தீவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு முன்பே, ஈழத் தமிழருக்கு தனியான அரசு செயல்பட்டது. சிங்களர்களின் கையில் அதிகாரம் வந்ததும் தமிழரின் அரசாட்சி பறிபோனது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி ஆட்சி என அமைதி முறையில் தமிழர்கள் போராடினர். எதையுமே தர சிங்களத் தரப்பு முன்வரவில்லை. அன்று முதல் இன்று வரை திட்டமிட்ட இனப் படுகொலைகளை நடத்திவருகிறது. ஈழத் தமிழர்களை எங்களின் பாரம்பரியப் பிரதேசங்களைவிட்டு அகற்றி, அந்த நிலத்தை இலங்கை அரசு தனதாக்கிக்கொண்டு வருகிறது. புத்த மதத்தைப் பின்பற்றாத தமிழ் மக்களின் நிலங்களில், புத்த சின்னங்களை அமைத்து, ஈழத்தை சிங்கள பவுத்தமயமாக்கி வருகிறார்கள். இது ஒரு முழுமையான இன அழிப்பு. போர் முடிந்த பிறகும் ஈழத்தில் தமிழர்களின் துன்பம் தீரவில்லை. ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், இலங்கை அரசு செய்த இனப் படுகொலை, போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக சுதந்திரமான விசாரணைக் குழு வேண்டும் என்கிறார், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன். ஐரோப்பிய நாடாளுமன்றமும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியாவும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆறரை கோடி தமிழ் மக்களும் வாழும் பாரதத்தை ஆளப் போகிறவர்கள், இதை முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும். வரலாற்றில் இருந்த தனி ஈழ அரசையும் மீட்டுத்தர வேண்டும். ஈழத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அவாவும் இதுதான்!'' என்று முடித்தார் பத்மநாதன்.
இரா.தமிழ்க்கனல்
************************************************************************
ஆட்சிக்கு கெட்ட சகுனமா?

தஞ்சை கோயிலுக்கு இடி மேல் இடி
மிழகத்தின் பெருமைமிகு அடையாளங்களில் தஞ்சை பெரிய கோயிலும் ஒன்று. தொல்லியல் துறை இந்தக் கோயிலை பராமரித்து வரும் நிலையில்... இரண்டாவது முறையாகக் கோயில் மீது இடி விழுந்திருக்கவே, மக்கள் பதறிப் போய் இருக்கிறார்கள். 'நமது பாரம்பரியச் சின்னத்தின் பாதுகாப்பு இவ்வளவுதானா?’ என்பதுதான் மக்கள் கேட்கும் கேள்வி.
தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்​காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய​கோயில், 'லாக்கிங் சிஸ்டம்’ எனப்படும் கல்லோடு கல் பிணைத்துக்கொள்ளும் முறையில் நுட்பமாகக் கட்டப்பட்டது. அதனால்தான் எவ்வித சேதாரமும் இல்லாமல் தாக்குப்பிடித்து வருகிறது. சமீபத்தில் இதன் 1,000-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கடந்த நவம்பர் 28, 2010 அன்று தஞ்சை பெரிய​கோயில் கேரளாந்தன் கோபுர நுழைவு வாயிலுக்கு அடுத்து உள்ள ராஜராஜன் கோபுரத்தை இடி ஒன்று தாக்கியது. கோபுரத்தில் இருந்த ஐந்து கலசங்களில் ஒன்று முழுமையாகச் சிதறியது. உடனே பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு புதிய கலசம் பொருத்தப்பட்டது. இது குறித்து கடந்த 12.12.2010 ஜூ.வி-யில் 'கலசத்தைத் தாக்கிய இடி... கலங்கடிக்கும் சர்ச்சைகள்’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அப்போதைய தஞ்சை கலெக்டராக இருந்த சண்முகம், 'பாது​காப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். பெரிய கோயிலின் பாதுகாப்புக்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்​படும்’ என உறுதி அளித்தார். அப்படிச் சொல்லி ஒரு வருடம்கூட முடியாத நிலையில், கடந்த 29-ம் தேதி பெரிய கோயிலில் உள்ள வாகன மண்டபத்தின் மேல்பகுதியில் இடி விழுந்து, சுவர் சேதமடைந்தது. 'பாரம்பரியச் சின்னத்தைப் பாதுகாக்கும் லட்சணம் இதுதானா?’ என்று கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது குறித்துப் பேசும் தஞ்சை வழக்கறிஞர் ஜீவக்குமார், 'தொல்லியல் துறையின் அலட்சியப்போக்கினால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கெனவே தஞ்சை அரண்மனை வளாகத்தில் கலைக் கூடத்துக்கு அருகில் உள்ள ஆயுதக் கோபுரத்தின் மேல் இடி விழுந்திருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு அடுக்குகள் கொண்ட அக்கோபுரம் இடி தாக்கியதில் சேதம் அடைந்தது. அப்போது அதிகாரிகள், 'இடிதாங்கி புதுப்பித்து வைக்கப்படும்!’ என்றனர். பிறகு தஞ்சை பெரியகோயில் ராஜராஜன் கோபுரத்தின் மேல் இடி விழுந்தது. அதற்கு அதிகாரிகள், 'இடிதாங்கி சரியாக இல்லை’ என்று காரணம் சொல்லி கேரளாந்தன் நுழைவு வாயில் மற்றும் மூலஸ்தான கோபுரம் ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார்  25 லட்சம் செலவில் இடிதாங்கிகளைப் பொருத்தினர். இனி இடி தாக்குதல் இருக்காது எனவும் உறுதி அளித்தனர். பிறகு எப்படி இப்போது கோயில் மீது இடி தாக்கியது? ஆயிரம் ஆண்டுகளாகப் புயல், மழை என அனைத்து கால மாற்றங்களையும் சந்தித்து கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோயிலை முழுமையான அக்கறையோடு பாதுகாக்க வேண்டும்!'' என்றார்.
''இடி தாங்கிகளின் உண்மைத் தன்மையை சோதிக்க வேண்டும்'' என பேச ஆரம்பித்த முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், 'ஆன்மிக ரீதியாகக் கோயிலின் மேல் இடி விழுவது என்பது ஓர் எச்சரிக்கை அறிகுறி. உடனே கும்பாபிஷேகம் நடத்தி சாந்தி அடைய வைக்க வேண்டும். 1,000-வது ஆண்டு விழாவின்போது சில பெண்கள் தூய்மைக் குறைவாக வந்திருக்க வாய்ப்புண்டு. அதனால் முறையாக ஆகம பூஜைகள் நடத்த வேண்டும்...'' என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில் சில விஷமிகள், 'ஆட்சியாள​ருக்​கும் தஞ்சை பெரிய கோயிலுக்கும் தொடர்பு உண்டு. ராஜராஜன் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்களை பிரகதீஸ்வரர் முன் தண்டிப்பார்.அதனால்தான் ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தஞ்சை பெரிய கோயிலின் பக்கம் தலை வைத்துக்கூடப் படுப்பதில்லை. மூடநம்பிக்கையை உடைக்கும் பகுத்தறிவாளர் கருணாநிதி கடந்த வருடம் பெரிய கோயில் விழாவில் பட்டாடை உடுத்திவந்து கலந்து கொண்டார். அவரை எச்சரிக்கும் விதமாக அதற்கு சில நாட்களுக்கு முன் பெரிய கோயிலில் இடி விழுந்தும், அதைப் புறக்கணித்தார். அதனால்தான் எதிர்க் கட்சியாக சட்டமன்றத்தில் அமர முடியாத நிலை ஏற்பட்டது. முன்பு எட்டாவது உலகத் தமிழ் மாநாடு தஞ்சாவூரில் நடந்தபோதுகூட ஜெயலலிதா பெரிய கோயிலை எட்டிப் பார்க்காமல் தெளிவாக இருந்தார். ஆனால், இப்போது இடி விழுந்திருப்பது ஜெயலலிதா ஆட்சிக்கு கெட்ட சகுனம்தான். ஆட்சிக்கு ஆபத்து வருவதால் கவனமாக இருக்கவேண்டும்!' என்று பரபரப்பைக் கிளப்பி வருகிறார்கள்.
பெரியகோயிலின் பாதுகாப்பு குறித்து தஞ்சை கலெக்டர் பாஸ்கரனிடம் கேட்டபோது, 'அது தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளதால், அவர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்...'' என்று சொன்னார்.
தஞ்சை பெரிய கோயிலை பராமரிக்கும் தொல்லியல் துறை அலுவலகத்துக்குச் சென்று தகவல் கேட்டோம். ''ஆணையர் யாரிடமும் பேச மாட்டார். இப்போது வெளியூரில் இருக்கிறார். அவரது செல்போன் நம்பரையும் கொடுக்கக்கூடாது என உத்தரவிட்டு இருக்கிறார்!'' என்றனர் அலுவலக உதவியாளர்கள்.
இப்படிக் கறாரும் கண்டிப்புமாக இருப்பவர் கோயில் பாதுகாப்பிலும் கொஞ்சம் அக்கறையாக இருக்கலாமே!
சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்
*********************************************************************************
10-ம் வகுப்பு பாஸ் பண்ணாத புதுச்சேரி அமைச்சர் புலம்பல்!

வதந்தியைக் கிளப்பியே வறுக்கிறாங்கய்யா!
பி.எம்.எல்.கல்யாணசுந்தரம்... இன்றைய தேதிக்கு புதுச்சேரி அரசியலில் சர்ச்சைக்​குரிய நபர் இவர்தான். ரங்கசாமி தலைமையிலான அமைச்சர​வையில் இவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்தே சர்ச்சைகளுக்குக் குறைவில்லை!
'முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனவர், புதுச்சேரி அமைச்சரவையில் ரங்கசாமிக்கு அடுத்த முக்கிய இடத்தைப் பிடித்தது எப்படி?’ என்பதில் ஆரம்பித்து, இவர் மீது உள்ள கிரிமினல் வழக்குகள் பற்றியும், 10-ம் வகுப்புக்கூட படிக்காத ஒருவர் எப்படி கல்வி அமைச்சராக இருக்க முடியும் என்பது வரை ஏராளமான சர்ச்சைகள். இதனை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது, லேட்டஸ்ட் குற்றச்சாட்டு. 10-ம் வகுப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தார் என்பதுதான் அது.
34 வயதான கல்யாணசுந்தரம், கடந்த 1992-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து, 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்றிலும் தேர்ச்சி பெற்றவர், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தோல்வி அடைந்தார். இத்துடன் படிப்பை நிறுத்திக்கொண்டார். 19 ஆண்டுகளுக்குப் பின், கல்வி அமைச்சர் ஆனதும், 'பத்தாவது கூட படிக்காத ஒருவர் கல்வி அமைச்சரா?’ என்று சர்ச்சை எழுந்தவுடன்தான் பாதியிலேயே விட்ட படிப்பைத் தொடர நினைத்தார். இந்த ஆண்டு 10-ம் வகுப்புக்கான தனித்தேர்வு எழுதுவதற்காக இவர் தேர்வு செய்த இடம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருக்கும் தாகூர் மெட்ரிகுலேஷன் பள்ளி. தனித் தேர்வுக்கு விண்ணப்பித்தவருக்கு 1077190 என்ற எண் கொண்ட ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
கடந்த 29-ம் தேதி கல்யாணசுந்தரம் அறிவியல் தேர்வு எழுதினார். புதுச்சேரி அமைச்​சர் திண்டிவனம் பள்ளியில் தேர்வு எழுதும் தகவல் பரவி, மறுநாள் வெள்ளிக்​கிழமை,  சமூக அறிவியல் தேர்வு எழுதவும் பள்ளிக்கு வருவார் என்று எதிர்பார்த்து பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் காத்துக்கிடந்தனர். ஆனால், அன்றைய தினம் அமைச்சர் தேர்வு எழுத வரவில்லை. இதற்கிடையில், அன்று பகல் 11 மணிக்கு 'அமைச்சர் கல்யாணசுந்தரத்துக்கு பதிலாக வேறொருவர் ஆள்மாறாட்டம் செய்து சமூக அறிவியல் தேர்வு எழுதுகிறார்’ என்று ஒரு தகவல் பரவியது. இது தொடர்பாக, தலைமையாசியர் ராஜலட்சுமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ''அமைச்சர் இங்கு தேர்வு எழுத வரவில்லை. ஆள்மாறாட்டமும் நடக்கவில்லை...'' என்று கோபமாகக் கூறினார். அதற்குள் ஆள்மாறாட்டம் சம்பந்தமாக தமிழக அரசுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் தெரியவரவே, அந்தப் பள்ளிக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினர்.
அந்த விசாரணையின் முதல் கட்டத்திலேயே, கல்யாணசுந்தரம், ஹால் டிக்கெட் பெறுவதற்குத் தனது சொந்த முகவரியைக் கொடுக்காமல், திண்டிவனத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் முகவரியைக் கொடுத்துள்ளார் என்று தெரியவர... ''ஹால் டிக்கெட் பெறவே போலி முகவரி கொடுத்தவர், ஏன் ஆள்மாறாட்டம் செய்திருக்க மாட்டார்?'' என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வலுவாக எழுந்தது. உடனே, 'அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலக வேண்டும்’ என்று காங்கிரஸார் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் இறங்கி விட்டனர்.
இந்த ஆள்மாறாட்டக் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சரை சந்தித்துப் பேசினோம். ''என்னை அரசியலில் வீழ்த்த முடியாத, மக்கள் செல்வாக்கை இழந்த என் அரசியல் எதிரிகளால் என்மீது சுமத்தப்படும் அவதூறு குற்றச்சாட்டு இது!
அன்றைய சூழலில் படிப்பைத் தொடர முடியவில்லை. அமைச்சர் பொறுப்பு ஏற்றவுடன் என் கல்வித் தகுதி பற்றி விமர்சித்து வந்ததால், மீண்டும் படிப்பைத் தொடர நினைத்தேன். சென்னை திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு படிப்பிலும் சேர்ந்துள்ளேன். இருந்தாலும், முறையாக 10, மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வு எழுதி பட்டப் படிப்பை முடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன்தான் வயதையும், பணிச் சுமையையும் பொருட்படுத்தாமல் தனித்தேர்வுக்கு விண்ணப்பித்தேன். புத்தகங்கள் வாங்கிப் படித்து, கடந்த 29-ம் தேதி அறிவியல் தேர்வை எழுதினேன். அதில் நிச்சயம் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவேன். ஆனால், 30-ம் தேதி கவர்னருடன் முக்கியக் கூட்டம் இருந்ததால், தேர்வு எழுதச் செல்லவில்லை. அதுவே எனக்கு வருத்தம். இதில், 'ஆள்மாறாட்டம் செய்தேன்’ என்று வேறு குற்றம் சுமத்துகிறார்கள். புதுச்சேரியில் தேர்வு எழுதினால் அனைவருக்கும் தெரியும், தேவையில்லாத பரபரப்பு ஏற்படும் என்ற காரணத்தால்தான் திண்டிவனம் சென்றேன். நான் வகிப்பது ஒரு பொறுப்புள்ள பதவி என்பதால், நேர்மையாகத் தேர்வு எழுதித்தான் வெற்றி பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறேன். இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகளை என் தொகுதி மக்கள் துணையுடன் முறியடிப்பேன்!'' என்றார் வேகமாக.
இந்த விஷயம் குறித்து, தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, ''நடந்த விஷயங்கள் என் கவனத்துக்கு வந்தவுடன், எனது துறை அதிகாரிகளிடம் உடனடியாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளேன். மேலும் 29-ம் தேதி நடைபெற்ற அறிவியல் தேர்வுக்கான விடைத்தாளையும் கைப்பற்றி, அது சம்பந்தப்பட்டவரின் கையெழுத்துதானா என்றும் ஆய்வு செய்யப்படும். தவறு நடந்திருந்தால், உறுதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை பாயும்!'' என்றார்.
நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை...
டி.கலைச்செல்வன், படங்கள்: ஜெ.முருகன்
*********************************************************************************
தப்பு செய்தாரா ஜமுனா மகன்?

ல்யாணம் என்ற போர்வையில் ஒரு பெண்ணை ஏமாற்றியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டில், பிரபல சித்த மருத்துவர் டாக்டர் ஜமுனாவின் மகன் முரளி கிருஷ்ண பாரதி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதுதான் சென்னையில் ஹாட்.
மருத்துவர்கள் வட்டாரத்தில் பரபரப்புத் தீயைப் பற்ற வைத்திருக்கும் இந்த விவகாரம் குறித்து, தாம்பரம் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரியிடம் பேசினோம்.
''தாம்பரம் சானடோரியத்தைச் சேர்ந்த டாக்டர் ஜமுனா, அதே பகுதியில் கார்த்திக் கருவாக்கம் என்ற பெயரில் ஒரு மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மகனான முரளி கிருஷ்ண பாரதி எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.டி. இறுதியாண்டு படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் எம்.டி.எஸ் படித்து வந்த பிரேமா என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 11.9.11 அன்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் மக்கள் குறை தீர்ப்பு நிகழ்வின்போது ஒரு புகார் கொடுத்தார். அதில், 'ஒரு முறை பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள்என்னைக் கேலி செய்தபோது முரளி கிருஷ்ண பாரதி எனக்கு ஆதரவாக இருந்தார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. நாங்கள் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தோம். விரைவில் என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அழுது அடம்பிடித்தேன். இதனால் வேறு வழியில்லாமல் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு என்னை அழைத்துச் சென்று தாலி காட்டினார். அதன் பிறகுதான் எனக்கு அவரின் இன்னொரு முகம் தெரிய ஆரம்பித்தது. இடியாக வந்தது இன்னோர் அதிர்ச்சி.
முரளி கிருஷ்ண பாரதிக்கு 2001-ம் ஆண்டு அகிலா என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2002-ல் வரதட்சணைக் கொடுமை வழக்கில் சிறைக்குப் போய் இருக்கிறார். 2006-ல் இருவருக்கும் விவாகரத்து ஆகி இருக்கிறது. இது எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து என் வாழ்க்கையைச் சீரழித்து விட்டார். இது போதாது என்று இப்போது என்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணைக் கரம் பிடிக்க இருக்கிறார். வரும் 6-ம் தேதி என் கணவர் முரளி கிருஷ்ண பாரதிக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என்று கோரி இருந்தார்.
மேலதிகாரிகளின் மேற்பார்வை​யில் இந்த புகார் மனுவின் உண்மைத்தன்மை குறித்து தீவிர விசார​னை செய்தேன். முரளி கிருஷ்ண பாரதியைக் கடந்த 28-ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தோம். இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் துணிச்சலுடன் புகார் கொடுத்த பிரேமாவைப் பாராட்டுகிறோம்...'' என்றார் அக்கறையாக.
அந்தப் பெண்ணிடம் நாம் பேசியபோது, ''எனக்கு தாலி கட்டிய கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்தார். அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. அதனால் வேறு வழியில்லாமல்தான் புகார் கொடுத்தேன். நான் அவர் மீது வைத்துள்ள அன்பு மாறாதது. அவர் மனம் திருந்தி என்னை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தால், எனது புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு அவரோடு வாழத் தயாராக இருக்கிறேன். மற்றபடி என் கணவர் சிறையில் கஷ்டப்படுவது எனக்கு வேதனைதான்!'' என்று மெல்லிய குரலில் பேசினார்.
இதுகுறித்து டாக்டர் ஜமுனாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டோம். போனை எடுத்த அவரது உதவியாளர், ''மேடம் வெளியே போய் இருக்காங்க. வந்ததும் நீங்க பேசிய விவரத்தை சொல்கிறேன்...'' என்றார். சிறிது நேரம் கழித்து டாக்டர் ஜமுனாவின் இளைய மகன் டாக்டர் கார்த்திக் நம்மைத் தொடர்பு கொண்டு, ''அம்மாவுக்கு மன உளைச்சல். உடல் நிலையும் சரி இல்லை. தூங்கிட்டு இருக்காங்க. இப்போதைக்கு அவங்க இதுகுறித்துப் பேசும் மனநிலையில் இல்லை. என் அண்ணன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் துளியும் உண்மை கிடையாது. நீதிமன்றத்தில் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு, அதன் பிறகு அனைத்து மீடியாவையும் அழைத்து விரிவாக விளக்கம் கொடுப்போம்...'' என்று வருத்தம் மேலிடக் கூறினார்.
இதனிடையே மீண்டும் நம்மைத் தொடர்பு கொண்ட தாம்பரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், ''இன்னொரு பெண்ணையும் காதல் என்ற பெயரில் முரளி கிருஷ்ண பாரதி ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. நாங்கள் அவரைக் கைது செய்த விஷயம் கேள்விப்பட்டு, அந்தப் பெண் கண்ணீர் மல்க நன்றி கூறியிருக்கிறார்!'' என்றார்.படித்தவன் பாவம் செய்தால் என்னவாகும் என்று பாரதி சொல்லி வைத்திருப்பதை இவர் படித்தது இல்லையோ?
தி.கோபிவிஜய்
************************************************************************
ஐ.நா. பேரைச் சொல்லி... ஒரு அடேங்கப்பா மோசடி?

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவ​தாக இதுவரை சில டிராவல்ஸ் கம்பெனிகள் மோசடி செய்து அவ்வப்​போது செய்திகளில் அடிபடும். ஆனால், இப்போது மனித உரிமை அமைப்பு என்ற பெயரால்  ஒரு கும்பலும், இதே வித்தையைக் காட்டி ஆட்டையைப் போட்ட விவகாரம் அம்பலமாகி உள்ளது!
கடந்த 30-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த 11 இளைஞர்கள், ''ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைக் கழகம் என்ற அமைப்பை நடத்தி வந்த அந்திரியாஸ், மெர்சி ஆகியோர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி எங்களை ஏமாற்றிவிட்டார்கள். நாங்கள் கொடுத்த பணத்தைப் பெற்றுத் தாருங்கள்!’ என்று கண்ணீர் புகார் கொடுத்தனர்.
பணம் கொடுத்தவர்களில் ஒருவரான ஸ்டாலின் சகாயராஜ் நம்மிடம் பேசினார். ''என் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் ராரா முத்திரக்கோட்டை. பிளஸ் டூ முடிச்சுட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தேன். என் நண்பர் ஒருவர், 'சென்னையில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைக் கழகம்னு ஒரு அமைப்பு இருக்கு. அவங்க வெளிநாட்டுக்கு ஆள் எடுத்து வேலைக்கு அனுப்புறாங்க’னு சொன்னார். அதை நம்பி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னைக்கு வந்தேன். ஆழ்வார்திருநகர் இணைப்பில் உள்ள அந்தக் கழகத்தின் அலுவலகத்தில் அதன் நிறுவனர் அந்திரியாஸ் போபன் ஜாக்ஸனையும், செயலாளர் மெர்சியையும் (அந்திரியாஸின் மனைவி) பார்த்தேன். தமிழக செயலாளர் ரெக்ஸ் என்பவரும் அவர்களோடு இருந்தார். 'எங்க அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்றது. எங்களுக்கு உலகம் முழுவதும் தொடர்பு இருக்கு. ஐ.நா. மூலமாக நிறையப் பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி உள்ளோம். உங்களை லண்டனுக்கு வேலைக்கு அனுப்புறோம். மாசம்  4 லட்சம் சம்பளம். உங்களை லண்டன் அனுப்ப  6 லட்சம் செலவாகும்’ என்று சொன்னார்கள். 'லண்டன் வேலை... லட்சத்தில் சம்பளம்’ என்று சொன்னதும் எனக்குப் பயங்கர சந்தோஷம். உடனடியாக ஊருக்குச் சென்று எனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடனாகப் பணம் பெற்று, 23.7.2010 அன்று செயலாளர் மெர்சியின் வங்கிக் கணக்கில் (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எண்: 31202082906)  2 லட்சத்தை டெபாசிட் செய்தேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம்  3,55,000 வரை கொடுத்தேன். ஒவ்வொரு மாதமும் என்னை சென்னை வரச் சொன்ன அந்திரியாஸ், நிறைய பேப்பரில் கையெழுத்து வாங்கினார். கடந்த ஏப்ரல் மாதம் வரை அவரது அலுவலகத்துக்கு வந்து போனேன். மே மாதம் வந்தபோது, அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சியில் உறைந்து, அக்கம் பக்கத்தில் விசாரித்தேன். யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அலுவலகத்தைக் காலி செய்துகொண்டு ஓடிவிட்டார்கள் என்றனர். அந்த அலுவலகத்தில் இருந்த அனைவரது மொபைல் எண்கள் எல்லாம் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தன. அதன் பிறகு மேலும் விசாரித்தபோது, அந்தக் கும்பல் என்னைப்போல நூற்றுக்கணக்கான அப்பாவிகளிடம், ஐக்கிய நாடுகள் சபையின் பேரைச் சொல்லி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் ஏமாற்றி ஏப்பம்விட்டது தெரிய வந்தது. இப்போது எங்கள் மாவட்டத்தைச் சார்ந்த 11 பேர் மட்டும் புகார் கொடுத்துள்ளோம். இந்தச் செய்தி உங்கள் பத்திரிகையில் வரும்போது, அந்த கும்பலின் போலி முகத்தைப் புரிந்துகொண்டு மற்ற மாவட்டங்களில் இருந்தும் புற்றீசல்களாகப் புகார் கொடுக்க வருவார்கள்...'' என்று சோகத்துடன் சொன்னார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைக் கழகம் அமைப்பை நடத்தி வந்த அந்திரியாஸ், மெர்சி ஆகியோரின் மொபைல் எண்களுக்கு நாமும் பல முறை தொடர்புகொண்டோம். தொடர்ந்து சுவிட்ச் ஆஃப்! அவர்களைப்பற்றி விசாரித்தபோது கணவன் மனைவி இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இந்த மோசடி விவகாரத்தை நம்முடைய  கவனத்துக்குக் கொண்டுவந்த 'மனித உரிமை’ ஆர்வலர்  ராமகிருஷ்ணன், ''ஒரு மாநிலத்துக்குப் போய், தினுசு தினுசாக பல தில்லாலங்கடிக் கதைகளை அவிழ்த்துவிட்டு, மொத்தமாக லபக்கிய பின் அடுத்த மாநிலத்துக்கு எஸ்கேப் ஆவதுதான் இந்த ஜோடிகளின் கிரிமினல் வரலாறு. இந்தியாவில் பல மாநில காவல் துறையில் இவர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்தாலே, இவர்கள் எப்பேர்ப்பட்ட கில்லாடிகள் என்பது தெரிய வரும். மனித உரிமை அமைப்பு என்பது சமூகத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் வல்லமை படைத்தது. அப்படிப்பட்ட ஒரு அமைப்பின் பெயரில் இப்படி மெகா மோசடி செய்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து, கடுமையாக தண்டிக்க வேண்டும். மேலும், அனைத்து மனித உரிமை அமைப்புகளையும் அரசு தீவிரமாக கண்காணித்தால்தான், இதுபோன்ற மோசடிகள் நடைபெறாமல் தடுக்க முடியும்!'' என்றார்.
ஐ.நா-வுக்கே அல்வாவா!
தி.கோபிவிஜய், படம்: ச.இரா.ஸ்ரீதர்
*********************************************************************************
தடகள வீரர்கள் என்றால் இளக்காரமா?

ஆதங்கத்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்
'தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால்,   1 கோடி பரிசு என்றும், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றால்  5 லட்சம், வெள்ளி வென்றால்
 3 லட்சம், வெண்கலம் வென்றால்  2 லட்சம்’ என்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்து இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்து முடிந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை அள்ளி வந்த தமிழக வீரர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை எதுவுமே வழங்கப்படவில்லை’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) தகவல் வரவே விசாரணையில் இறங்கினோம்.
தங்கம் வென்ற விளையாட்டு வீரர் ஒருவர் பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசினார். ''ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு  3 கோடியும், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு 1 கோடியும் பரிசு அறிவித்து, அதை ஒரே மாதத்தில் வீரர்களிடம் கொடுத்து பெருமை தேடிக்கொண்டார், அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி. ஆனால், உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஜார்க்கண்டில் நடந்து முடிந்த தேசிய விளை​யாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்​கங்கள் வென்ற வீரர்களுக்கு இது வரை தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படவே இல்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிகளை அள்ளி வீசுவதிலும், அதை உடனடியாக வீரர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் முனைப்புக் காட்டும் தமிழக அரசு, தமிழ்​நாட்டுக்​காகப் பதக்கம் வென்ற எங்களைப் போன்ற தடகள வீரர்களைப் புறக்கணிக்கிறார்கள், இளக்காரமாகப் பார்க்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?'' என்று ஆதங்கப்பட்டவர், ''கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போட்டியில் 14 தமிழக வீரர்கள் தங்கப் பதக்கத்தையும், 12 பேர் வெள்ளிப் பதக்கத்தையும், 27 பேர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். இந்த வீரர்களுக்குப் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும், வீரர்களின் பரிசுத்தொகையில் 15 சதவிகிதம் வழங்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள்நெருங்கி வரும் வேளையிலும் கடந்த ஆண்டு வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரையிலும் பரிசு கொடுக்க​வில்லை என்பது வேதனையாக இருக்கிறது...'' என்றார் வருத்தத்துடன்.
அதையடுத்துப் பேசிய பயிற்சியாளர் ஒருவரும் பெயரை மறைத்துப் பேசினார். ''தற்போது பொறுப்பு ஏற்று இருக்கும் அ.தி.மு.க. அரசிடம் இது குறித்துப் பல முறை நினைவூட்டல் செய்தும், பரிசுத் தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். 'ஏன் இத்தனை காலதாமதம்’ என்று கேட்டால், 'பரிசு வென்றவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை சரிபார்த்து வருகிறோம் என்கிறார்கள். தமிழக அணிக்காக ஒருவர் விளையாடப்போகிறார் என்றால், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை போட்டிகளுக்கு அழைத்துச் செல்லுவதற்கு முன்பே அல்லவா சரிபார்க்க வேண்டும். இப்போது சரிபார்க்கிறேன் என்று சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றிருக்கும் முக்கால்வாசி பேர் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். கடன் வாங்கி பயிற்சி மேற்கொள்பவர்கள்தான் அதிகம். இந்த இளம் வயதினருக்கு அவ்வப்போது பரிசுத் தொகையை கொடுத்து உற்சாகப்படுத்தி​னால்தானே அவர்கள் ஆர்வமுடன் அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயாராக முடியும். மற்ற மாநிலங்களில் எல்லாம் விளையாட்டு வீரர்களுக்கு அரசு தரப்பில் இருந்து கூடுதலாக பரிசுத் தொகையும், நிறைய நிறுவனங்களின் அரவணைப்பும், பரிசும் கிடைக்கிறது. அதனால்தான் பிற மாநிலத்தில் விளையாட்டு வீரர்கள் அதிக உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்கள். இங்கே வெற்றி பெற்றால்கூட அரசிடம் இருந்து மரியாதையும் பரிசும் கிடைக்கவில்லை எனும்போது, மனம் நொந்துபோகும் பெற்றோர்கள் தொடர்ந்து விளையாட பிள்ளைகளை அனுமதிப்பதில்லை. ஒலிம்பிக்கில் தமிழர்கள் சாதிக்கவேண்டும் என்றால், இந்த நிலையில் இருக்கும் வெற்றி வீரர்களை ஊக்குவித்தால்தான் நடக்கும். இனியாவது அரசு உடனடியாக செயலில் இறங்கவேண்டும்!'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஊக்கத்தொகை இன்னமும் வழங்கப்படாத காரணம் குறித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் மேரி ராஜாத்தியிடம் பேசினோம். ''அரசாங்​கம் மாறியதால் பரிசுத் தொகை வழங்குவதில் தாமதமாகியுள்ளது. விரைவில் கொடுத்துவிடுவோம்!'' என்றார்.
பள்ளிக்கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இந்த தாமதம் குறித்துப் பேசினோம். ''உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை காரணமாக தற்போது பரிசு வழங்க​முடி​யாத நிலை இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் நிச்சயமாகக்  கொடுக்கப்படும்!'' என்றார்.
சொல்வதை உடனே செயலில் அரசு காட்ட​வேண்டும்!
சார்லஸ்
************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010