********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

Health Tips




ஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்! 


நீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர்கள்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு நாம் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும்?

கல்லீரலை நேசிக்க வேண்டுமா? எதற்காக? முழுமையாக அறியாத ஒன்றை எவ்வாறு நேசிக்க இயலும்? என்பது போன்ற பதிலே பெரும்பாலும் பெறப்படும்.

ஒரு நபர் ஒன்றை நேசிக்க வேண்டும் எனில் அதனால் ஏதாவது உபயோகம் அவருக்கு இருக்க வேண்டும் அல்லது அதனால் இவர் நேசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலே மனப்பூர்வமான நேசம் அதன் மீது அவருக்கு வைக்க இயலும். அந்த வகையில் நோக்கினால் ஒரு மனிதனைப் பொறுத்தவரை அவன் அவனது கல்லீரலை வாழ்நாள் முழுவதும் மிகுந்த அக்கறையுடன் நேசிக்க வேண்டும்.

எதற்காகக் கல்லீரலை நேசிக்க வேண்டும்?. இதற்கான பதிலைக் கல்லீரலே நம்மிடம் பட்டியல் இட்டால்...? இதோ கல்லீரல் பேசுகிறது:

ஹலோ, நான் தான் உங்கள் கல்லீரல்.... நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை ஒன்பது விதத்தில் விவரிக்கப்போகிறேன். கவனமாகக் கேளுங்கள். அதன் பின் நீங்களும் என்னை நேசிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யுங்கள்.

1) நான் உங்களுக்குத் தேவையான இரும்பு சத்துக்களையும் இதர வைட்டமின்களையும் சேமித்து வைக்கிறேன்.

நானின்றி நீங்கள் தொடர்ந்து செயல்படக்கூடிய சக்தியை பெற மாட்டீர்கள்.

மனிதன் ஆரோக்கியமாக வாழத்தேவையான சக்திகள் இரும்பு சத்துக்களிலும் வைட்டமின்களிலும் நிறைந்துக் காணப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?. எனவே நானின்றி நீங்கள் தொடர்ந்து செயல்படக்கூடிய சக்தியைப் பெற மாட்டீர்கள்.

2) நீங்கள் உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கச் செய்யும் பித்தநீரை (Bile) நானே உற்பத்தி செய்கிறேன்.

இது இல்லையேல் நீங்கள் உட்கொள்ளும் உணவு ஜீரணிக்காமல் (அதிலிருந்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல்) வீணாகிவிடும். இப்பொழுது நான் இல்லையெனில் உங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள். உணவு சாப்பிட இயலாமல், வாழ்நாள் முழுவதும் குளுக்கோஸை உடலினுள் செலுத்திக் கொண்டு வாழ்வதை எந்த மனிதனாவது விரும்புவானா?

3) நீங்கள் உட்கொள்ளும் உணவிலுள்ள விஷத்தன்மை கொண்ட ஆல்கஹால் போன்ற இதர தீமையான இரசாயன திரவங்களின் அமிலங்களை நானே சுத்தப்படுத்துகின்றேன்.

இது போன்ற ஆபத்தான விஷ அமிலங்கள் சில நேரம் மது போன்ற போதைப் பொருட்கள் மூலமும் அல்லது சாதாரண மருந்துகள் அதிக அளவில் உபயோகிப்பதன் மூலமும் உடலில் தேங்குகின்றன.

நான் இவற்றை முறையாக அகற்றவில்லையெனில் இவற்றால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

4) நான் உங்கள் உடல் இயங்கத் தேவையான சக்திகளை (சர்க்கரை - Sugar குளுகோஸ், கார்போஹைட்ரேட் - Carbohydrates, கொழுப்பு சத்து - Fat போன்றவைகளை..) ஒரு மின்கலன் (Battery) போல் உங்கள் தேவைக்கேற்ப சேமித்து வைக்கிறேன்.

நான் இவ்வாறு செய்யாவிடில் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்து அளவில் குறைந்து அதனால் நினைவிழந்து கோமா (Coma) வரை கூட செல்ல நேரிடும் என்பதை நீங்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

நான் என் பணியை முறையாகச் செய்திருக்காவிட்டால் ஒருவேளை இன்று நீங்கள் உங்கள் படுக்கையிலிருந்தே எழுந்திருக்க இயலாது.

5) நீங்கள் பிறக்கும் முன்பே உங்கள் முறையான இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தை நானே உருவாக்குகிறேன்.

நானில்லையேல் நீங்கள் இவ்வுலகில் உயிருடன் இருந்திருக்கவே மாட்டீர்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

6) உங்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புதிய புரோட்டீன்களை (Proteins-புரதச் சத்துகள்) நானே தயாரிக்கின்றேன்.

நானின்றி உங்கள் உடல் வளர்ச்சி பெற்றிருக்க முடியாது.

7) நான் நீங்கள் சுவாசிக்கும் காற்றிலிருந்து வெளியேற்றப்படும் புகைகள் போன்ற நச்சுப்பொருட்களையும் அகற்றுகின்றேன்.

நானில்லையேல், இது போன்ற கலப்பான தூய்மையற்ற காற்றின் விஷத் தன்மையினாலேயே உங்களுக்கு கேடு ஏற்பட்டிருக்கும்.

8) நான் இரத்த உறைவுக் காரணிகளை (Clotting Factors) உருவாக்குகின்றேன். இதன் மூலமே உங்களுக்கு ஏதும் காயம் ஏற்படும் போது அந்த இடத்தில் இரத்தம் உறைந்து ஒரு தடுப்பை அது ஏற்படுத்தி தொடர்ந்து இரத்தம் வெளியேறாமல் நின்று விடுகிறது.

உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டு தொடர்ந்து இரத்தம் நிற்காமல் ஓடினால் அதனால் நீங்கள் மரணித்து விடுவீர்கள் என்பதை நான் தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை தானே?

9) நான் உங்களைத் தாக்கும் ஃப்ளூ என்ற ஜலதோஷம் ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்க அல்லது அதனை வலுவிழக்கச் செய்கிறேன்.

இவ்வாறு நான் செய்யாமல் இருந்தால் மனிதர்கள் அறிந்த மற்றும் அறியாத அனைத்து அற்பக் கிருமிகளின் தாக்குதலும் உங்களை நோயாளியாக்கி முடக்கி வைத்து இருக்கும்.

இதுவெல்லாம் நான் உங்கள் மீதுள்ள நேசத்தினால் செய்கின்றேன். ஆனால், நீங்கள் என்னை அதே போல் நேசிக்கின்றீர்களா?

நான் உங்களை நேசிக்காமல் இருந்து விட்டால் எத்தனை பாரிய ஆபத்திற்கு நீங்கள் உள்ளாவீர்களோ அதே அளவிற்கான ஆபத்தை நீங்கள் என்னை நேசிக்காமல் இருப்பதனாலும் அடைவதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளும் உள்ளன.

என்னை நீங்களும் நேசிக்க வேண்டும் என்றதும், வெறுமனே எப்பொழுதாவது என்னை மனதில் நினைத்துக் கொண்டு "நானும் என் கல்லீரலை நேசிக்கிறேன்" என்று கூறினால் என்னை நேசித்து விட்டதாக ஆக முடியாது. உங்களை நேசிக்கும் முகமாக எந்நேரமும் மேலே பட்டியலிட்டது போன்ற முக்கியமான சில வேலைகளை நான் செய்வது போன்று நீங்களும் சில காரியங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் நீங்களும் என்னை நேசிக்கின்றீர்கள் என்று பொருள். இல்லையேல் அது உங்களுக்குத் தான் ஆபத்தாக முடியும்.

என்னை நீங்கள் நேசிக்கும் விதமாக நடக்க சில எளிமையான வழிகளை உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன். கவனமாகக் கேளுங்கள் :

1) ஆபத்தில்லை எனக் கருதிக்கொண்டு பீர் (Beer) போன்ற ஆல்கஹால் கலந்த மது பானங்களில் என்னை மூழ்கடிக்காதீர்கள்.

சில நேரங்களில் ஒரே ஒரு முறை சிறிதளவு இவற்றை அருந்துவதும் கூட உங்களுக்கு அபாயமானதாக முடியும்.

2) எல்லா அலோபதி மருந்துகளும் வேதி (chemicals) அமிலங்கள் கலந்தனவையே. ஆகையால் மருத்துவர் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். நீங்களாவே எந்த ஆலோசனையுமின்றிக் கலந்து உட்கொள்ளும் சில மருந்துகள் கலவையினால், ஏதேனும் தீய நச்சுத்தன்மை உருவாகி, அது என்னை பாதிக்கச் செய்து விடலாம்.

3) நான் மிகவும் எளிதாக காயம் ஏற்படுத்தப் படுகிறேன். இந்த காயத்தின் வடுக்கள் (Cirhossis) நிரந்தரமானவை.

மருந்துகள் சில நேரங்களில் தவிர்க்கமுடியாதவையே. ஆயினும் பல நேரங்களில் அது தேவையற்றவை என்பதை கவனத்தில் கொண்டு மருந்துக்களை உபயோகிக்க வேண்டும்.

4) ஏரோசால் (Aerosol) போன்ற நச்சுத்தன்மை கலந்த தூவி (Spray)களை உபயோகித்து நீங்கள் சுத்தப்படுத்தும் போது அதைச் சுவாசிக்கவும் செய்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொண்டு வீட்டை எப்பொழுதும் போதிய காற்றோடமுடையதாக வையுங்கள், அல்லது முகத்தில் திரை (mask) அணிவது அவசியம்.

இதே போல் மூட்டைப் பூச்சிக் கொல்லி மருந்துகள், பெயின்ட் போன்ற ஏனைய இரசாயன ஸ்ப்ரேக்களையும் உபயோகிக்கும் போது அவற்றை சுவாசிக்காமல் இருக்க கவனம் செலுத்துங்கள்.

5) தாவரங்களுக்கு உபயோகிக்கப் படும் இதர பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிக்கும் போதும் கையுறை மற்றும் காலுறைகள் அணிந்திருப்பது அவசியம். ஏனெனில், இவை தோல்கள் மூலமும் உடலில் நுழைந்துப் பலச் செல்களை(உயிரணுக்களை)யும் தாக்கி அழித்து விடுகின்றன.

அதே போன்று இவை அனைத்தும் காற்றில் கலந்துவிடும் விஷம் கலந்த இரசாயனப்பொருட்கள் என்பதை நினைவில் நிறுத்தி இவற்றை உபயோகிக்கும் போது முகம், தலை போன்ற ஏனைய பாகங்களையும் மாஸ்க், தொப்பிகள் போன்றவை அணிந்து மறைத்திருப்பது நினைவில் வைக்கப் படவேண்டிய ஒன்றாகும்.

6) அதிக அளவில் அதிகமான கொழுப்புச் சத்து கலந்த உணவுகளை உட்கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான கொலெஸ்ட்ரோலைச் சரியான அளவில் நான் உருவாக்கிக் கொள்கிறேன். இதனைக் குறித்து விரிவாக சத்தியமார்க்கம்.காம் தளத்தினர் வெளியிட்டுள்ள கொல்லுமோ கொலெஸ்ட்ரோல் என்றப் பதிவினைக் கவனமாகப் படித்துப் பாருங்கள்.

எனக்குச் சிறிது ஓய்வு கொடுங்கள். சரியான அளவில் சத்தான உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள். நீங்கள் சரியான அளவில் உணவை உட்கொண்டீர்களானால் மட்டுமே நானும் சரியாக உங்களுக்குச் சேவை செய்ய இயலும்.

முதலாகவும் இறுதியாகவும் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை… :

சாதாரணமாக நான் எனது கஷ்டங்களை உங்களுக்கு எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. அவ்வாறு சொல்லவும் மாட்டேன். எனக்கு ஏதாவது பிரச்சனை எனில், என்னால் இயன்றவரை அதைத் தாங்கிக் கொள்வேன். இவ்வாறு இருப்பதால் நீங்கள் நான் ஆரோக்கியமாகத் தான் இருப்பதாக நினைத்துக் கொள்வீர்கள். ஆனால் அது எனது மற்றும் உங்களது இறுதி நேரமாகவும் ஆகிவிடும் வாய்ப்புகள் உண்டு.

நினைவில் வைக்கவும் : நான் ஒருபோதும் குறைப்பட்டுக் கொள்வதில்லை. அதனாலேயே நான் திருப்தியாளனாக உள்ளேன் எனத் தவறாக எடை போடாதீர்கள். என்னை அதிகமாக இரசாயன திரவங்கள் மூலமும் அமிலங்கள் மூலமும் பாதிக்கச் செய்தால் நான் செயலாற்ற இயலாதவாறு பாதிப்புக்குள்ளாவேன். அதனை நான் உங்களுக்கு உடனே தெரிவிக்காமல் இருப்பதனால் அதன் மூலம் உங்கள் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து விளையலாம். இதுவே நீங்கள் பெறும் எனது ஒரே எச்சரிக்கை அறிவிப்பாகவும் இருக்கலாம்.

எனவே இத்தகைய சூழலிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள எனது கீழ்கண்ட ஆலோசனையைச் செவிமடுங்கள் :

1. மருத்துவ ஆலோசகரிடம் என்னை முறையாக குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

2. விசேஷ இரத்தப் பரிசோதனைகள் (blood screen test) மூலம் எனது ஆரோக்கிய நிலையை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

3. நான் எப்பொழுதும் மிருதுவாக மென்மையாக இருப்பின் அது நல்லது. கடினமாகவோ அல்லது வீக்கமாக இருப்பது ஏதோ கோளாறு அல்லது அபாயம் என்னில் நிகழ்ந்துள்ளது என்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

4. உங்கள் மருத்துவர் ஏதேனும் இது போன்று சந்தேகத்தைப் பரிசோதனையின் போது உணர்ந்தால் மீயொலி (Ultrasound) அல்லது கணினி உடற்கூறாய்வு (CT Scan) எனும் இதர பரிசோதனை மூலம் மேலதிக உதவி பெறலாம்.

5. உங்கள் உயிர் நீங்கள் என்னை நடத்தும் விதத்தில் தான் நிலைத்து இருக்கிறது.


அன்பர்களே.. இப்பொழுது உங்கள் மீதான நேசத்தில் நான் உங்களுக்குச் செய்யும் உதவிகளின் முக்கியத்துவத்தினைக் குறித்து உணர்ந்திருப்பீர்கள். தயவு செய்து நீங்களும் என்னை நல்ல முறையில் நேசத்துடனும் அக்கறையோடு பேணி நடத்துங்கள்.


உங்கள் வாழ்க்கை எனது ஆரோக்கியத்தில் தான் உள்ளது.

இப்படிக்கு,
உங்களை நேசிக்கும் உங்கள் கல்லீரல்.



வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
4. இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
5. வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
6. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.
இவை மட்டுமல்லாமல் வாழைப்பழத் தோல், உடலில் தேய்த்துக் கொண்டால் கொசுக்களை விரட்டமுடியும் என்றும் சருமத்தில் உண்டாகும் மருக்களிலிருந்து விடுதலை பெறமுடியும் என்றும், கால் புதையணி (Shoe) பளபளப்பாக்கப் பயன்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
எது எப்படியோ இறைவனின் பல்வேறு அருட்கொடைகளில் ஒன்றான வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.


கற்ப மூலிகை - கரிசலாங்கண்ணி 


மூலிகைகள் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.  ஒவ்வொரு மூலிகையும் ஒரு வித மருத்துவத் தன்மையுடன் காணப்படும்.  இந்த மூலிகைகள் அனைத்தும் இயற்கை அன்னையின் கொடையே.  மூலிகைகளின் சொர்க்க பூமியாக கருதப்படும் ஆசிய கண்டத்தில்தான் பல மருத்துவ முறைகள் தோன்றின.  குறிப்பாக இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையில் வளரும் மூலிகைகள் மருத்துவக் குணம் மிகுந்தவையாக இருக்கின்றன.  இத்தகைய சிறப்பு வாய்ந்த மூலிகைகளுள் மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் காமதேனு தான் கற்ப மூலிகைகள்.  உடலை நோய் அணுகாதபடி காத்து என்றும் இளமையுடனும், புத்துணர்வுடனும் திளைக்கச் செய்யும் மூலிகைகள் இவையே.  இந்த மூலிகைகளுள் கரிசலாங்கண்ணிக்கு சிறப்பிடம் உண்டு.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட பல்லவர் காலத்தில் கரிசலாங்கண்ணி பயிரிட மக்கள் அரசிடம் அனுமதி வாங்கி வந்துள்ளனர்.  இந்த கரிசலாங்கண்ணி பயிரிட்டு வளர்த்து, விற்று கண்ணிக்காணம் என்ற வரி செலுத்தி வந்துள்ளனர்.  இது பற்றி பல்லவர் கால செப்பேடுகள் தெரிவிக்கின்றன.  ஏன் கரிசலாங்கண்ணியை பயிரிட வரி வாங்கினார்கள் என்றால், இது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மருந்தாக இருந்து வந்துள்ளது.
மேலும் இதில்  இரும்புச்சத்தும், தாமிரச் சத்தும் நிறைந்துள்ளது.
இயற்கையின் கொடையான இந்த கரிசலாங்கண்ணி எத்தகைய மருத்துவக் குணம் கொண்டது என்பதை இதிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம்.
கரிசலாங்கண்ணிக்கு கரிசாலை, கைகேசி, கையாந்தரை, தேகராசம் என பல பெயர்கள் உண்டு.  இதில் மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என இருவகை உண்டு.
வெள்ளை கரிசலாங்கண்ணி இரும்புச்சத்து அதிகம் கொண்டவை.  மஞ்சள் கரிசலாங் கண்ணி தாமிரச் சத்து அதிகம் கொண்டவை.   தமிழ் மருத்துவத்தில் வெள்ளை கரிசலாங் கண்ணியே அதிகம் பயன்படுத்தப் படுகிறது.
குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை
யுறற்பாண்டு பன்னோ யொழிய- நிரச்சொன்ன
மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்து
கையாற் தகரையொத்தக் கால்
-அகத்தியர் குணபாடம்
பொருள் - குரலறுப்பு நோய், காமாலை, குட்டம், வீக்கம், பாண்டு, பல்நோய் ஆகியவற்றை போக்கும் உடலுக்கு பொற்சாயலைக் கொடுக்கும்.  உடலுக்கு பலம் கொடுக்கும்.
இரும்புச்சத்து அதிகமுள்ள மூலிகைகளில் கரிசலாங்கண்ணியும் ஒன்று.
இரத்த சோகை நீங்க
உடலின் இரும்புச் சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து போகும்.  இதனால் உடல் சோர்வடையும்.  இரத்த சோகை மனிதர்களை ஆட்டிப்படைக்கும் ஒருகொடிய நோயாகும். இந்த ரத்த சோகை மற்ற நோய்களுக்கு நுழைவு வாசலாகவும் அமையும்.
இரத்த சோகையுள்ளவர்கள் கரிசலாங் கண்ணியை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும்.  இதனால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  இரத்தச் சோகை நீங்கும்.
கல்லீரல் பலப்பட
உடலின் செயல்பாடுகளை தூண்டுவதும், செயல் படுத்துவதும் கல்லீரலின் முக்கிய பணியாகும்.  கல்லீரல் நன்கு செயல்பட்டால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும்.  மது பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் எளிதில் பாதிப்படையும்.  இதனால் இவர்களின் கண்கள், மூளை, உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும்.  கல்லீரல் பாதிப்பால் உடலில் பித்தம் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்துவிடுவதால் காமாலை நோய் உண்டாகிறது.  கல்லீரல் பாதிப்பே உடலின் பாதிப்பாகும்.  கல்லீரலைப் பலப்படுத்த கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.
கரிசலாங்கண்ணியின் சமூலத்தை (இலை, வேர், காய், பூ) நிழலில் உலர்த்தி பொடித்து அதனை கஷாயம் செய்தோ அல்லது தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதிப்பு குறையும்.  தற்போது சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கரிசலாங்கண்ணி மாத்திரை கிடைக்கிறது.  பல ஆங்கில மருத்துவர்களும் இதை பரிந்துரைக்கின்றனர்.
காமாலை வந்தால் காலனுக்கு கொண்டாட்டம் என்பார்கள்.  அந்த காலனை விரட்டி, காமாலையை அகற்ற கரிசலாங்கண்ணி சிறந்த மருந்து.
இரத்தத்தை சுத்தப்படுத்த
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது.  இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது.    இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.  இவற்றை  அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம்.  அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.
கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத் தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.
கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும்.  மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும்.
ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும்.
மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு.
குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்த நோய்களைப் போக்கும்.
கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும்.  கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.  இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.
கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும்.  இதையே  “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.    இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும்.  கண்ணுக்கு மை அழகு என்ற பழமொழி, அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கயத்துக்கும் சிறந்ததாகும்.  இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
கரிசலாங்கண்ணி பொடி    - 50 கிராம்
திரிபலா பொடி        - 50 கிராம்
பிரம்மி பொடி        - 50 கிராம்
வல்லாரை            - 50 கிராம்
கீழாநெல்லி            - 50 கிராம்
எடுத்து பொடியாக்கி,  அதனுடன் தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
முடி உதிர்வதைத் தடுக்க
கரிசலாங்கண்ணி தலை முடியை கருமையாக்கும். முடி உதிர்வதைத் தடுக்கும்.
கரிசாலைச்சாறு    - 250 மி.கி.
கறிவேப்பிலை சாறு    - 100 மி.கி.
மருதோன்றிச் சாறு    - 10 மி.கி.
ராமிச்சம்         - 10 கிராம்
கார்கோல்        - 10 கிராம்
கருஞ்சீரகம்        - 10 கிராம்
சீரகம்         - 5 கிராம்
செம்பருத்திப் பூ    - 10 கிராம் (உலராத)
இவற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து வந்தால், உடல் சூடு குறையும். முடி கறுமையாகும். கூந்தல் நீண்டு வளரும்.
நன்றி-ஹெல்த் சாய்ஸ்

மாதுளையின் மகத்துவம்!


உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது மாதுளம் பழம். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற பழமாக விளங்கும் மாதுளம் பழத்தின் சாறு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாதுளம் பழச்சாறு தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுப்படும் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதய நோயாளிகளுக்கும் நல்லது என்றும் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி மாதுளம்பழம், ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகவும் செயல்படுகிறது என்றும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது.
சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மாதுளம் பழச்சாறு கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில், மாதுளம் பழச்சாறு குடித்த நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் மட்டுமின்றி, ஒட்டு மொத்த உடல் பாதுகாப்பு கிடைத்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நடைப்பயிற்சி அவசியம் ஏன்?


நமது இயல்பு வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அத்தியாவசிய, அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.


கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவில் நமது உணவு தனம மாதலையும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.


எனவே, நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை.


ஆனாலும் இவைகளை போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர, அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம்.


இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன.


எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்திற்கு மாற்றாக நடைபயணம், நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நமது உயிர் உயரி உணர்வுகளைப் பெற நடை அவசியம் தேவை.
நடைபயிற்சியால் நமது உடல் இரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன் உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன் நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது.


நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது எவ்வயதிலும் நடக்கலாம் எவரும் நடக்கலாம் எப்போதும் நடக்கலாம் நடை ஒரு உடம்பின் ஒரு இயல்பான இயக்கம். அதன் அருமையை பெருமையை உடனடியாக உணர்வோம் அறிவோம் நடக்கத் தொடங்குவோம்.


பிற விளையாட்டுகள், பயிற்சிகள் நடைப்பயிற்சி, பயணம் ஓர் ஒப்பீடு
"ஆபத்தில்லா ஆரோக்கிய பயிற்சியை நாம் நாட வேண்டும். பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, குதிரையேற்றம் போன்ற விளையாட்டுகளை சிறுவயதில் விளையாடினாலும் வயதானபின் வேலைக்கு சென்ற பின் பலரும் மறந்தே விடுகின்றன.


பலரின் கூட்டணி இருந்தால் மட்டுமே இவைகளை விளையாட இயலும். பாதியில் நிறுத்த இயலாது வெப்ப கலோரி, சக்தி அதிகம் செலவழியும். உடலுக்கு ஊறுதரும் ஆபத்து மிகுந்துள்ளது. அதற்கான கருவிகள் மைதானம் தேவை. அதற்கான கோச் தேவை. நினைத்த இடத்தில் விளையாட இயலாது மேலும் இவைகள் போட்டியாகவே விளையாடப்படுகின்றன அதற்கான வேகமும், முனைப்பும் அதிகரிக்கும் சமயம் ஆபத்து அதிகரிக்கிறது. ஆரோக்கியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.


நீச்சல், ஜிம், வேக ஓட்டம், மெது ஓட்டம் பளு தூக்குதல், தோட்ட வேலை, ஏரோபிக்ஸ் பயிற்சிகள், நாட்டியம், குதிரையேற்றம், சைக்கிள் விடுதல், கடின உழைப்பு போன்றவைகள் மிகச் சிறந்த பயிற்சிகள். இவைகளிலும் மிதமான வெப்ப கலோரி, உடல் சக்தி செலவழிகின்றன சில பயிற்சிகளில் கருவிகளும் தேவைப்படுகின்றன சில நேரங்களில் வழிநடத்தும் மாஸ்டர்கள் தேவை. அதற்கேற்ற இடம், சூழல், கருவிகள், பொருளாதாரம் தேவைப்படுகின்றன தினமும் தொடர்வதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது வயது அதிகரித்தவர்கள் இப்பயிற்சிகள் சிலவற்றை தொட இயலவில்லை.


மேற்சொன்னவைகள் விளையாட்டு பயிற்சிகள் என்ற முறையில் வருகின்றன வாழ்நாள் முழுவதும் ஓட இயலுமா? நமது உடல் அமைப்பு அப்படி அமைந்துள்ளதா? வாழ்நாள் முழுவதும் தினமும் விளையாடுவோர் குறைவு. குழந்தை சிறுவர்களாக இருக்கும் சமயம் நமக்கு நாமே கூட விளையாடுகிறோம். துள்ளி ஓடுகிறோம். பெரியவர்களானதும் தினசரி விளையாட இயலவில்லை. வேலைப் பணிகள் நிமித்தம் சிரமப்படுகிறோம்.


ஆனால் வாழ்நாள் முழுவதும் நடக்கலாம். அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடைவல்லுனர்கள். நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம்.
75 மில்லியன் அன்பர்கள் நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் கடைப்பிடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நடைப்பயிற்சி ஆபத்து இல்லாப் பயிற்சி எனலாம்.


நடைப்பயிற்சிக்கு வழிநடத்தும் வல்லுநர்கள் தேவை இல்லை.
நடைப்பயிற்சிக்கு தனியான மைதானம், இடம் தேவை இல்லை.
நடை நமது வாழ்வின் ஓர் அங்கம். வாழ்நாள் முழுவதும் அதன் முழுப் பயனை நுகர வேண்டும். அனுபவிக்க வேண்டும்.


சென்னையில் காலையில் காரில் பவனி வந்து கடற்கரையில் அதிகாலையில் நடப்பவர்கள் ஏராளம். காலை நடைகாட்சி திருவிழாபோல் இருக்கும். சென்னை, கோவை, மதுரை போன்ற பல ஊர்களிலும் காலையில் ஏராளமானோர் நடக்கப் பழகிவிட்டனர். கூட்டணியாகவும், தனியாகவும் கிளப் மூலமாகவும் நடக்கின்றனர்.


பல மருத்துவ வல்லுனர்கள் மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர். வலியுறுத்துகின்றனர். பலருடைய வாழ்வில் காலையில் நடையும் அருகம்புல் பானமும் பிரிக்க இயலாத அளவிற்கு ஒன்றிவிட்டன. ஆரோக்கியத்தின் அருமையை அவர்கள் ரசிக்கின்றனர். ருசிக்கின்றனர். நாமும் அதற்குத் தயாராவோம்.



உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்!

'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால், 10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.
நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.
இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.
இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்.. உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..
இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.
இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.
மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.
இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
வாழைப்பூ
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
வாழைத்தண்டு
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.
வாழைக்காய்
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.
பாகற்காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
சேப்பங்கிழங்கு
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.
பீட்ரூட்
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.
வெண்டைக்காய்
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.
கோவைக்காய்
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.
முருங்கைக் காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.
சுண்டைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.
சுரைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
குடைமிளகாய்
வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.
சௌசௌ
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
அவரைக்காய்
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.
காரட்
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
கொத்தவரங்காய்
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
கத்தரி பிஞ்சு
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.



இஞ்சி

இஞ்சி என்பது மதில் எனப் புரிகிறது. நம் உடம்பையும் அனைத்து வகை பிணியில் இருந்து அரணாக கோட்டை மதில் போல் இருந்து காப்பதால் இதற்கு இஞ்சி என பெயர் வந்தது. சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை. இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பலமருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.
சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும்.  சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
இது மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும்.  இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.
இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளிரின் கருப்பைவலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி. பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.
இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து, பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும். இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
அது என்ன இஞ்சி இடுப்பழகி என ஒரு குரல் கேட்கிறது. தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.
எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.


வெந்தயம் தரும் வனப்பு

1.வெந்தயத்தை உணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன் படுத்தலாம்.               [1 வது வகை பொடி]ஒரு கரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து [பொன் கலரில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து, பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
2. [2 வது வகை பொடி] கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.
அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு பாட்டிலில் போட்டு வைத்து
 கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.
3. வயிறு உப்புசமாகவோ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2வது] வகை பொடியை 1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.
4. தினமும் காலையில் [1வது] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட் சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான் குடிக்கனும்.
5. பேதி போகும்போது மோரில் [1வது] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.
6. முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1வது] வகை பொடி + சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
7. சிலருக்கு் வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். அந்த சமயம் [1 வது வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை எடுத்து செல்லவும்.
8. ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன், கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் தோசை ஊற்றி [நல்லெண்ணெய்] காலை உணவாக சாப்பிட்டால் பி.பி, சுகர் நன்றாக குறையும்
9.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு் கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.
10.வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கி,மிளகாய்பொடி,மஞ்சள்பொடி, பெருங்காயதூள்,உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில் போட்டு கலந்து நீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளி சட்னி, வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி சூப்பர்.
11. எந்த வகை ஊறுகாய்க்கும் [2 வது வகை] பொடி சேர்க்கவும்.
12. 3 டம்ளர் இட்லி அரிசி, 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின் நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன் கலரில் இருக்கும். வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.
13. 3 டம்ளர் புழுங்கல் அரிசியுடன்,1/2 டம்ளர் உளுந்ந்து, 1/2 டம்ளர் வெந்தயம் இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்ல பூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித சட்னியும் சுவையாக இருக்கும். நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம். எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பது நல்லது.
14. தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.
15.மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
16.வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
17.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்
18.பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்
19.அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.
20.பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.





ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்... 

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.
இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும். உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.
அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.
ஆவாரம்பூ குடிநீர்
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”
என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.
இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
துளசி குடிநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வல்லாரை குடிநீர்
எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.
இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.
காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.
இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
கரிசாலை குடிநீர்
“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”
என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.
வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.
கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.
இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
சீரகக் குடிநீர்
சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.
சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.
இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.
ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.
கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.
சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.
மாம்பட்டைக் குடிநீர்
மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
நெல்லிப்பட்டைக் குடிநீர்
நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.
இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
ஆடாதோடைக் குடிநீர்
ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,
சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.
வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.
சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.


      
பசியைத் தூண்டும் புடலங்காய்...


   நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர்.  இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என பலவற்றை வளர்த்து அதன் பயன்களை முழுமையாகப் பெற்று வந்தனர். அதனால் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன்  வாழ்ந்தனர்.  ஆனால் தற்போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளங்களை அமைத்துவிட்டோம்.  தோட்டம் ஏற்படுத்தி மேற்கண்ட செடி கொடிகளை வளர்ப்பதற்கு யாருக்கும் பொறுமையும் இல்லை.  நேரமும் இல்லை.

இப்படி நம் வீட்டில் விளைந்த இயற்கையான காய்கறிகளை உதறிவிட்டு செயற்கை ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய் கறிகளை வாங்கி உண்ண வேண்டிய  சூழ்நிலையில் உள்ளோம்.  இதனால் நோயின் பிடியில்  சிக்கி அன்றாடம் மருந்து மாத்திரைகளுடன் அலைகின்றோம்.   காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நேரடியாகக் கிடைக்கின்றன.
இத்தகைய காய்களில் நாம் அனைவரும் அறிந்த புடலங்காய் பற்றியும் அதன் மருத்துவப் பயன் பற்றியும் அறிந்துகொள்வோம்.

இன்றும் கிராமங்களில் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும், பந்தல் போட்டு வளர்க்கப்படும் கொடி வகைதான் புடலை.  இதன் காய் நன்கு நீண்டு காணப்படும்.

புடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது  சுவை மிகுந்த காயாகும்.  இதனை தென்னிந்தியாவில் உணவில் அதிகம் சேர்க்கின்றனர்.

புடலையில், இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. இவற்றில் கொத்துப்புடல் மட்டுமே உணவாகப் பயன்படுகிறது.

இதனை புடல், சோத்தனி, புடவல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் காய் மட்டுமே உணவாகப் பயன்படுத்தப் படுகிறது.

புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல.  பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும்.  அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

புடலங்காயின் பயன்கள்

*உடலுக்கு வலு கொடுக்கும்.  தேகம் மெலிந்து  இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.

* குடல் புண்ணை ஆற்றும்.  வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.

* மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

* சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.

*விந்துவைக் கெட்டிப்படுத்தும்.  ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும்.  உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.

* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும்.  கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.

* கண் பார்வையைத் தூண்டும்.

* இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..

இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட புடலங்காயை அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமே.

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010