********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (16 நவம்பர் 2011)

Tuesday, November 15, 2011


மிஸ்டர் கழுகு: 'வில்லங்க' விஜி!

ழுகார் உள்ளே நுழையும்போது, 'பொட்டு ரிலீஸ்’ என்ற செய்தி எஸ்.எம்.எஸ். வழியே குதித்து விழுந்தது!
அதையே கழுகாரிடம் சொன்னோம். ''இரண்டு நாட்களாக போலீஸ் வட்டாரத்​தில் கேட்கும்
புலம்பல் இதுதான். 'கோட்டைவிட்டதா போலீஸ்?’ என்று ஆட்சி மேலிடத்தில் இருந்து கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியா​மல் போலீஸ் உயர் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்'' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் கழுகார்!
''மதுரை  மண்டலம் அண்ணன் அழகிரியின் கோட்டை என்றால், அதன் காரியதரிசி பொட்டு சுரேஷ். யார் கலெக்டர், யார் எஸ்.பி. என்பது முதல் யார் யாருக்கு கான்ட்ராக்ட் கொடுக்கலாம் என்பது வரைக்கும் முடிவு எடுக்கும் நபர். தகுதியான பலர் காத்திருக்க, இவரைக் கவனித்துவிட்டு ஈஸியாகப் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் பல்வேறு துறைகளிலும் இருக்கிறார்கள். தவிர, வெளியே வராத பல கிரிமினல் குற்றச்சாட்டுக்களும் இருந்தன. இதை மதுரைப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாவே வெளிப்படையாகத் தாக்கினார்.''
''அதைத்தான் நாடறியுமே!''
''ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் பொட்டு சுரேஷைப் பொறிவைத்துப் பிடித்தார்கள் மதுரை போலீஸ் அதிகாரிகள். எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க், கமிஷனர் கண்ணப்பன், ஏ.டி.எஸ்.பி-யான மயில்வாகனன் ஆகிய மூவர் அணிதான் பொட்டுவைப் பதம் பார்த்தது. 'மதுரை ஜெயிலிலாவது போடுங்கள்’ என்ற பொட்டு தரப்பின் கோரிக்கையை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முத்துக்குமார் நிராகரிக்க, பாளைங்கோட்டையில் அடைக்கப்பட்டார் பொட்டு. அதன் பிறகு, வரிசையாக வழக்குகள் பாய்ந்தன. இதில் எதிலும் அவர் ஜாமீன் வாங்கிவிடக் கூடாது என்பதற்காக குண்டாஸும் பதிவு செய்தார்கள். ஓர் ஆண்டுக்கு வெளியே வர முடியாது என்று போலீஸார் தைரியமாக இருந்தனர்!''
''அதுதான் நிராசையாக ஆகிவிட்டதே?''
''பொட்டு சிறைக்குள் போய் 120 நாட்கள் தாண்டிவிட்டன. 'ஆள் ரொம்ப உடைஞ்சுட்டாராம்’ என்றெல்லாம் சொந்தக் கட்சியினரே பேசிக்கொள்ள, அத்தனை வழக்குகளையும் உடைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார் பொட்டு. 'போலீஸ் நடவடிக்கையில் நிறைய ஓட்டைகள் இருந்ததால், குண்டாஸை ஈஸியாக உடைத்துவிட்டார்கள்’ என்றார் ஒரு தி.மு.க. வக்கீல். நீதிபதிகள் சி.நாகப்பன், டி.சுதந்திரம் ஆகியோர், 'பொட்டு சுரேஷை  குண்டர் சட்டத்தின் கீழ் அடைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி பிறப்பித்த உத்தரவு, ஆவணங்களின் அடிப்படையில் இல்லை... அவை மேம்போக்கானவை என்பது தெரிகிறது.’ என்று சொல்லி போலீஸைத்தான் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். இதுவே ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு கோபத்தைத் தூண்டி உள்ளது.''
''இந்த விவகாரத்தைக் கவனிக்கும் உயர் அதிகாரிகள் கடுமையான ஆட்கள்தானே?''
'மதுரை மாவட்டத்தில் உயர் அதிகாரிகள் சிலரைத் தவிர, 'எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகள் இப்போதும் பொட்டுவுக்கு விசுவாசமாகவே இருக்கிறார்கள்’ என்ற கருத்தும் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விவகாரம் இது. வாரப் பத்திரிகை நிருபர் பாண்டியனைத் தாக்கிய வழக்கில் பொட்டுதான் முதல் குற்றவாளி. ஒருவரைக் கைது செய்தால், அடுத்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், செப்டம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட சுரேஷை 23-ம் தேதிதான் உசிலம்பட்டி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தது போலீஸ். அன்று மாஜிஸ்திரேட் விடுமுறை என்பதால், வாடிப்பட்டி நீதிமன்றத்துக்கு அழைத்துப் போய், பொறுப்பு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். இது தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்ற உத்தரவு இருப்பதைச் சுட்டிக்காட்டிய மாஜிஸ்தி​ரேட், காலதாமதமாகக் கொண்டு​வந்ததால், ரிமாண்ட் செய்ய முடியாது என்று மறுத்து​விட்டார். ஆக, ஜாமீன் வாங்காமலேயே அந்த வழக்கில் பொட்டு வெளியே வந்துவிட்டார். எனவே வழக்குப் போடுவது, கைது செய்வது முக்கியம் அல்ல. அதைக் கடைசி வரைக்கும் காப்பாற்ற போலீஸ் தவறிவிட்டதுதான் பொட்டு ரிலீஸுக்குக் காரணம் என்கிறார்கள். இதே வழக்கில் இரண்டு போலீஸ்காரர்களும் சம்பந்தப்​பட்டு இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற நினைத்த போலீஸ்காரர்கள் பொட்டுவையும் சேர்த்துக் காப்பாற்றி​விட்டார்களாம்!''
''அவர் ஆக்டிவ் பாலிடிக்ஸ் பண்ணு​வாரா?''
''மதுரையில் இப்போது எவருமே ஆக்டிவ் பாலிடிக்ஸ் பண்ணவில்லை. பொட்டு மட்டும் பண்ணுவாரா என்ன?'' என்று சிரித்த கழுகாரைப் பார்த்து நாமும் சிரித்தோம்!
''முதல்வர் ஜெயலலிதாவை மையப்​படுத்தி சர்ச்சை கிளப்பிய சிறுதாவூர் பங்களா விவகாரம் மீண்டும் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டது. மாநிலம் முழுவதும், தி.மு.க. மற்றும்  பலரால் கடந்த ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்களை விசாரிக்க மாவட்டக் குற்றப் பிரிவுடன் இணைந்த தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் வரை பலரும் சிறைக்கு செல்கிறார்கள். இதில் சந்தடியில்லாமல் ஒரு திடுக் வழக்குப் பதிவாகிவிட்டது...''
''என்ன சொல்ல வருகிறீர்?''
''சில தினங்களுக்கு முன்பு காஞ்சி மாவட்டத்தில் இயங்கி வரும் நில அபகரிப்​புப் புகார் தொடர்பான பிரிவுக்கு, சென்னை பாலவாகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்மணி சத்தம் இல்லாமல் வந்து போனார். ஓர் இடத்தையும் குறிப்பிட்ட சர்வே எண்ணையும் புகாரில் தெரிவித்து, இந்த இடம் தன்னிடம் இருந்து சில நபர்களால் மோசடியாக அபகரிக்கப்பட்டதாக அந்த மனுவில் தெரிவித்தார். நில அபகரிப்​புப் புகார் என்றாலே ஆர்வம் காட்டும் போலீஸாரும், முறைப்படி புகாரைப் பதிவு​செய்துகொண்டார்கள். விசார​ணைக்காக எதிர்த் தரப்புக்கு தேதி குறிப்பிட்டு சம்மனையும் ஓர் அதிகாரி மூலம் கொடுத்து அனுப்பினார்களாம்.''
''வந்தாரா எதிர் பார்ட்டி?''
''வருவதாவது...! குறிப்பிட்ட அந்த விலாசத்துக்கு  இரண்டு காவலர்கள் இயந்திரத்தனமாக சம்மனைக் கொண்டுசேர்த்த அடுத்த அரை மணி நேரத்தில், காஞ்சி மாவட்டக் காவல் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சி. சம்பந்தப்பட்ட புகாருக்கு உரிய இடம் வேறு எதுவும் அல்ல; அந்த சிறுதாவூர் பங்களாவேதான்!''
''நீர் உண்மையைத்தான் சொல்கிறீரா?''
''விஷயத்தை முழுமையாகக் கேளும்! அந்த நிலம் யார் பெயரில் உண்டோ... அவருக்குத்தான் காவல் அதிகாரிகள் சம்மன் கொடுத்துள்ளனர். அவர்கள் மூலமாகக் காவல் துறை உயர் வட்டாரத்தில் விசாரிப்பு நடக்கவும்...... சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து காச்மூச்சென்று கத்திவிட்டார்களாம் பெரிய அதிகாரிகள்!''
''ஹையோ... ஹையோ!''
''கேளும்... 'ஏன்யா, எந்தப் புகார் வந்தாலும் முன்னப்பின்ன விசாரிக்காம சம்மனைக் கொண்டு​போய் நீட்டுவீங்களா?’ என்று எழும்பிய கேள்விக்கு போலீஸ் அதிகாரிகளால் சரியான பதில் சொல்ல முடியவில்லையாம். 'சம்பந்தப்பட்ட அந்த பெண்மணியிடம் பேசி விசாரணை செய்து, விஷயம் வெளியே தெரியாதவாறு அடுத்தக் கட்ட விஷயத்தைக் கவனியுங்கள்’ என்று கூடுதல் உத்தரவு வந்ததாம். இதனால், இப்போது இந்த விவகாரத்தில் விஜயலட்சுமியைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போலீஸார், மேலிட உத்தரவுப்படி சத்தம் இல்லாமல் விசாரணை செய்கிறார்கள். இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்கு வரும் 22-ம் தேதி, உரிய ஆவணங்களுடன் வருமாறு விஜயலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணங்களில் போலித்தன்மை இருந்தால், அவர் மீதே கைது நடவடிக்கை எடுக்கலாம். மாறாக அந்த விஜயலட்சுமிக்கு மாற்றுக் கட்சியின் ஆதரவு கிடைத்தால், சிறுதாவூர் மறுபடி தலைப்புச் செய்தி ஆகலாம்.''
''சம்மன் அனுப்பிய அதிகாரிகளை சும்மா விட மாட்டார்களே..?''
''மூன்று பேருக்கு துறைரீதியாக மெமோ கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!
னிமொழிக்கு ஜாமீன் கிடைக்காமல் தொடர்ந்து தள்ளிப்போவதை உள் அர்த்தத்தோடு கவனிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ''நீதிபதி என்ன சொன்னாலும் அதைத் தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் வேலையைத்தான் நமது வழக்கறிஞர்கள் செய்கிறார்கள்'' என்று புலம்பல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன.
சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி, கனிமொழியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தபோதே, ராஜாத்தி அம்மாள் ஆவேசமாகி, 'நம் வழக்கறிஞர்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. டெல்லியையே ஆட்டிப்படைக்கும் எத்தனையோ வல்லமை மிகுந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் அவர்களை வைத்து வாதாடினால்தான் ஜாமீன் சாத்தியமாகும்’ எனக் கருணாநிதியிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தாராம். ஆனால், 'எல்லாம் நல்லபடி நடக்கும்’ எனச் சொல்லி, வழக்கமான சட்டப் போராட்டத்தையே முழுமையாக நம்பி இருந்தார் கருணாநிதி.
''உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு டிசம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைக்கப்பட, ராஜாத்தி அம்மாள் தரப்பு ரொம்பவே கோபமாகிவிட்டது. 'சி.பி.ஐ. தரப்பில் ஆட்சேபனை இல்லாதபோதே ஜாமீன் பெற முடியாதவர்கள், சி.பி.ஐ. ஆட்சேபித்து இருந்தால்... ஜாமீன் விவகாரத்தையே கை கழுவி இருப்பார்கள். தி.மு.க-வின் சில சக்திகள் திட்டமிட்டு கனிமொழியை உள்ளேவைக்கப் பார்க்கின்றன'' என்று  சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
*********************************************************************************
கழுகார் பதில்கள்

எம்.சிவக்குமார், வேதாரண்யம்
 பெட்ரோல் விலை உயர்ந்தால் எல்லா விலையும் உயரும் என்பது ஆட்சியாளர்​களுக்குத் தெரியும். தெரிந்தும் அந்தத் தவறைத் தொடர்ந்து செய்வது ஏன்? மானியம் மூலமாவது பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்தலாமே?
மானியம் என்பது ஏதோ ஆகாயத்தில் இருந்து யாரோ தூக்கிப் போடும் பணம் அல்ல. அதுவும் நம் பணம்தான்!
ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசின் பட்ஜெட்டில் சுமார்  1,50,000 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால்தான் கடும் நிதி நெருக்கடி ஏற்படுவதாக பொருளாதார ஆய் வாளர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில் மேலும் மானியம் கொடுத்தால், இந்த நெருக்கடி இன்னும் அதிகமாகும் என்பது அவர்களது கணிப்பு.
'சர்வதேசக் கச்சா எண்ணெய் சந்தை யில் விலை உயர்வை இந்தியா​வால் கட்டுப்படுத்த முடியாத நிலை. கச்சா எண்ணெய் விலை உயரும்​போது, அதற்கேற்ப பெட்​ரோலியப் பொருட்​களின் விலையை நாம் உயர்த்த வேண்டி உள்ளது’ என்ற விளக்கத்தையே இன்னமும் எத்தனை ஆண்டு களுக்குச் சொல்லிக்கொண்டு இருப்போம். மாற்று எரி பொருள் சக்திகளைத் தேடும் முயற்சிகளில் மற்ற நாடுகள் இறங்கிவிட்டன. இந்தியா அதுபற்றி யோசிக்காததுதான், வருத்தம் தரும் விஷயம்!
 வண்ணை கணேசன், சென்னை 110.
கோஷ்டிப் பூசல்களால் அதிகம் பாதிக்கப்படுவது யாரென்று கூற முடியுமா?
தொண்டர்கள்தான். எந்தப் பக்கத்தை ஆதரிப்பது என்று தெரியாமல் குழம்பிப்போய் இரண்டு பக்​கத்து எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொள்வது அவர்கள்​தானே!
சில மாதங்களுக்கு முன்னால் முக்கியக் கட்சியில் சேர்ந்தார் காமெடி நடிகர் ஒருவர். தனது பேட்டியில் தலைவரின் ஒரு வாரிசு பெயரை மட்டும் சொன்னார். இன்னொரு வாரி​சுக்கு இதனால் கோபம். 'என் பெயரை ஏன் சொல் லலை?’ என்று கோபித்துக்​கொண்டார். அடுத்த பேட்டியில் இரண்டு பேர் பெயர்களையும் சொன்னார். 'அவரு பேரையும் எதுக்கு சொன்னீங்க?’ என்று மூத்தவருக்கு கோபம். 'அவ்வ்வ்வ்வ்வ்வ்...’ என்றார் காமெடி!
 இர.இரபீந்த், இரணியல்
ஜெயலலிதா, கருணாநிதி, கனிமொழி இந்த மூவரில் நேருக்கு நேர் நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்தித்தது யார்?
கருணாநிதி மீதான வழக்கு, விசாரணைக்கே வரவில்லை. அது ஒரு விசாரணைக் கமிஷனோடு முடிந்தது.
ஜெயலலிதா, 109 தடவை இழுத்து இப்போதுதான் பெங்களூருவை நெருங்கி இருக்கிறார்.
கனிமொழிக்கு சிறைக்குள் இருப்பதால் கோர்ட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்ல முடியாது. உங்கள் கேள்விக்கான பதிலை இதில் இருந்து தேடிப் பாருங்கள்!
 பா.சு.மணிவண்ணன், திருப்பூர்.4
அரசியல்வாதிகளைவிட சிறந்த நடிகர்கள் உலகில் வேறு யாராவது இருக்கிறார்களா?
அந்த அரசியல்வாதிகளின் மனைவிகளும் வாரிசுகளும் இருக்கிறார்களே!
உலகமே அதிரக்கூடிய ஊழலில் அரசியல்வாதி கைதானாலும் 'எதுவுமே நடக்காதது மாதிரி’ உட்கார்ந்து பேட்டிகள் கொடுக்கும் சாமர்த்தி​யசாலிகள் அவர்கள்!
 வரதப்பன், சுங்குவார்சத்திரம்
  திருச்சியில் தியாகி சின்னச்சாமிக்கு சிலை வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு முக்கியமானவரா அவர்?
மொழியைக் காக்க தனது உடலைக் கொடுக்கலாம் என்ற எண்ணத்துக்கு வித்திட்ட முதல் தியாகி சின்னச்சாமி. 'இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி, 1965, ஜனவரி 25-ம் நாள் முதல் அது அமலாகும்’ என்ற உத்தரவு வந்தது. அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம் எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வந்துகொண்டு இருந்தார். 'தமிழை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று அவரது காலடியில் போய் சின்னச்சாமி விழுந்தார். 'யாரோ ஒரு பைத்தியக்காரர்’என்று நினைத்து போலீஸ் கைது செய்து 15 நாள் சிறையில் அடைத்தது. விடுதலையான சின்னச்​சாமி விரக்தி​யோடு திருச்சி திரும்பினார்.
அன்றைய 'தினத்தந்தி’ நாளிதழில் ஒரு செய்தி. புத்த மதத்தைக் காப்பாற்ற தாய்லாந்தில் இரண்டு புத்த பிட்சுக்கள் தங்களது உடலுக்குத் தீவைத்து இறந்துபோனதாகச் சொன்னது அந்தச் செய்தி. நாமும் தமிழுக்காக தீ வைத்துக்கொண்டால் என்ன என்று யோசித்து, அதன்படியே தீக்குளித்து இறந்தார். அவரைத் தொடர்ந்து, தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்தார்கள்!
 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி
உ.பி. முதல்வர் மாயாவதியையும் மாநில அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்த ஐ.பி.எஸ். அதிகாரி தேவேந்திர தத் மிஸ்ராவை வலுக்கட்டாயமாக மனநல மருத்துவமனையில் அரசு சேர்த்திருப்பது குறித்து..?
தமிழகம் பரவாயில்லை, இந்த அளவுக்கு நம் மாநிலத்தின் நிலைமை மோசமாகவில்லை என்று திருப்திப்​பட்டுக்கொள்ள வேண்டியது​தான்!
கடந்த வாரத்தில் இன்னொரு சம்பவமும் நடந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் கட்சித் தொண்டர்கள் இரண்டு பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தகவல் வந்தது. உடனே அவரே நேராக அந்தக் காவல் நிலையத்துக்குச் சென்றார். இருவரையும் உடனடியாக விடுதலை செய்யச் சொல்லி உத்தரவும் போட்டு, அதிரடியாகக் கையோடு அழைத்தும் வந்துவிட்டார். உ.பி., மேற்கு வங்கத்துடன் ஒப்பிடும்போது... 'சாந்தி நிலவும் மாநிலம் நம் தமிழ்நாடு’!
 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி
'நாங்கள் எதிர்க் கட்சியாக இருப்போமே தவிர, எதிரிக் கட்சியாக இருக்க விரும்பவில்லை’ என்ற விஜயகாந்த்தின் தடாலடிப் பேச்சு குறித்து?
ஏதோ ஒரு கட்சியாக இருங்கள் என்றுதானே எதிர்பார்க்கிறான் வாக்காளன்!
 'காசி’ யோக அக்ஷயா, கோவை.14
இத்தனை நல்ல மீடியாக்கள் இருந்தும் கடந்த காலங்களில் நடந்த அட்டூழியங்களை அறுதியிட்டு ஒழிக்க இயலவில்லையே ஏன்?
மீடியாக்களால் குற்றம் குறைகளைச் சொல்லத்தான் முடியும். தண்டிக்க வேண்டிய அதிகாரமும் சக்தியும் மக்கள் கையில்.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் ஆயினும் கெடும் - என்கிறார் வள்ளுவர். இடித்து உரைக்கின்றன மீடியாக்கள். முன்னதாகவே உஷாரானால்... அவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் ஆபத்துக்கள் சூழும். எனவே மீடியாக்கள் நினைத்தால், அனைத்து அட்டூழியங்களையும் ஒழித்துவிட முடியும் என்று உங்களைப் போன்ற பொதுமக்கள் சும்மா இருந்துவிடக் கூடாது!
 பா.சு.மணிவண்ணன், திருப்பூர்.4
  கழுகாரின் பதில்கள் விரைவில் புத்தகமாக மலருமா?
தயாராகி வருகிறது. ஜனவரியில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்!
*********************************************************************************
பொங்கலில் புதுக் கட்சி!

பொளந்து கட்டும் போட்டி பா.ம.க.
பா.ம.க-வில் இருந்து அண்மையில் நீக்கப்​பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-வான வேல்முருகனுக்கு ஆதரவாக, பல திசைகளில் இருந்தும் ஆதரவுக் கரங்கள் நீள்கின்றன.  சேலம் வசந்தம் ஹோட்டலில் கடந்த 12-ம் தேதி, முன்னாள் எம்.எல்.ஏ-க்களான காவேரி, காமராஜ் தலைமையில் மாற்றுக் கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய காவேரி எடுத்த எடுப்பிலேயே, '' 'இந்தக் கட்சிக்காரங்களுக்கு (பா.ம.க.தான்) வேற வேலையே கிடையாது. காலையில் தூங்கி எழுந்திருச்சா... ஜாதி... கட்சினு சொல்லி வீட்டுக்கு வந்து உட்கார்ந்துக்கிறாங்க. உங்களுக்கு வேற பொழைப்பே இல்லையாப்பா..?’னு கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில் எங்களையும், அவரது அப்பா ராமதாஸையும் திட்டுவார் அன்புமணி. இன்றைக்கு அவர்தான் அந்தக் கட்சியோட தூண். அப்புறம் எப்படி அந்தக் கட்சி விளங்கும்னு சொல்லுங்க பார்ப்போம்...'' என அதிரடியாக வெடித்தவர் தொடர்ந்து பொரிந்தார். ''இந்தக் கூட்டம் பா.ம.க-வுக்குப் போட்டிக் கூட்டம் கிடையாது. ஏன் தெரியுமா? அப்படி ஒரு கட்சியே இப்போது இல்லை.  இது ஒரு புதிய கட்சி தொடங்குவதற்கு அடித்தளம் போடும் கூட்டம். கொள்கை, கோட்பாடுனு இருந்த பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று பணம் மட்டும்தான் முக்கியம்! ஒவ்வொரு தேர்தலிலும் கோடி கோடியாகப் பணத்தை வாங்கிட்டுத்தானே அப்பனும் மவனும் ஸீட் கொடுக்கிறாங்க. பா.ம.க-வைத் தன்னோட குடும்பமும் வாரிசுகளும் மட்டும்தான் ஆளணும்னு நினைக்கிறார் ராமதாஸ். அதனாலதான், வயசு வித்தியாசம் பார்க்காம எல்லோரும் தன் பையனை 'சின்னய்யா’னு கூப்பிடச் சொல்றாரு. கோ.க.மணி இருக்காரே... அவர் ஒரு கோவில் மணி. மணியை அடிச்சாத்தானே சத்தம் வரும்? அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப். மணியும் காடுவெட்டி குருவும் ராமதாஸுக்குக் கூட்டாளிகள். அதனாலதான், சாதாரண ஸ்கூல் வாத்தியாரா இருந்த மணியோட பையன் இன்னிக்கு சினிமா ஃபைனான்சியராகி இருக்கார். உண்மையைப் பேசினால் எப்பவுமே 'அய்யா’வுக்குப் பிடிக்காது. வேல்முருகனும் உண்மையா இருக்கணும்னு நினைச்சதால்தான், இன்னிக்கு அவர் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிட்டாங்க. வேல்முருகன் தலைமையில் நாம் ஒன்று கூடுவோம். யார் நிஜமான பா.ம.க. என்பதைத் தைலாபுரம் குடும்பத்துக்குக் காட்டுவோம்'' என்று சூட்டைக் கிளப்பினார்.

அடுத்து, தாரமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான காமராஜ் எழுந்து, ''இனி நமது தலைவர் வேல்முருகன்தான். அவரது தலைமையில் நாம் புதிய கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு மாவட்டமாக அவர் வரப்போகிறார். மக்களைச் சந்திக்கப்போகிறார். ராமதாஸ் குடும்பம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றியது என்பதை பா.ம.க-வினரிடமும் பொதுமக்களிடமும் புட்டுப்புட்டுவைக்கப் போகிறார். பா.ம.க-வை பத்தியோ அதனுடைய கொள்கையை பத்தியோ தெரியாமல் இருக்கும் அன்புமணியைவிட எங்கள் வேல்முருகன் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர். இனி பா.ம.க-வும் எங்களுடையதுதான்; மாம்பழச் சின்னமும் எங்களுடையதுதான். அதைக் கைப்பற்றாமல் ஓய மாட்டோம்'' என்று சீறினார்.
முன்னாள் எம்.பி-யான பு.தா.இளங்கோவன், அவரது சகோதரர் பு.தா.அருள்மொழி ஆகியோரை யும்வேல்முருகன் சந்தித்துப் பேசி இருக்கிறார். பு.தா.இளங்கோவனிடம் பேசினோம். ''1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்தும், 1989-ல் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தும், தன்னையும் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் தாண்டி யாரும் தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கக் கூடாது என்பதில் ராமதாஸ் தெளிவாக இருப்பார். அப்படி யாராவது இருந்தால், அவர்களை வெளியேற்றிவிடுவார். அவர் செய்யும் தவறுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ யாராவது சுட்டிக் காட்டினால், அவர்கள் அத்தோடு தொலைந்தார்கள். வேல்முருகனுக்கும் அதுதான் நடந்திருக்கிறது. கட்சிக்காக உழைக்கும் யாரையும் ராமதாஸுக்குப் பிடிக்காது. சுய மரியாதை உள்ள யாரும் அந்தக் கட்சியில் இருக்க மாட்டார்கள். ராமதாஸின் பா.ம.க-வினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டிய நேரம் வந்திருக்கிறது. வேல்முருகனும் நானும் அதைத்தான் பேசி இருக்கிறோம். கூடிய சீக்கிரமே அனைவரையும் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்போம். வரும் 18-ம் தேதிக்குப் பிறகு பூதாகரமாக வெடிக்கப்போகும் விஷயங்களை நீங்களும் பார்க்கத்தானே போகிறீர்கள்...'' என்று பூடகமாகச் சொன்னார்.
வன்னியர் சமுதாய மக்களின் நாயகனாக விளங்கும் வேல்முருகன் என்ன சொல்கிறார்? ''ராமதாஸுக்கு முன்னாடி ஏ.கே.நடராஜன் வன்னியம் சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே நானும் அதில் இணைந்திருந்தேன். இந்த இனத்துக்காக அவர் செய்த துரோகங்களை ஆதாரத்தோடு என்னால் பட்டியல் போட முடியும். புதிய கட்சி தொடங்குவதுபற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள நம் உறவுகள் என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன். தமிழர்களுக்கு நிச்சயமாக தை பிறந்தால் வழி பிறக்கும். நான் ஏற்கெனவே, மாவீரர் தினம், கூடங்குளம் பிரச்னை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக உறுதி கொடுத்திருக்கிறேன். அதற்காக, நேரம் இல்லாமல் அலைந்துகொண்டு இருக்கிறேன். ஆகவே, எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றம், தை மாதத்தில் கண்டிப்பாக நடக்கும்.'' என்று உறுதியாகச் சொன்னார்.
தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு ஊராகப் போய் அதிருப்தியில் இருக்கும் பா.ம.க. நிர்வாகிகளிடமும் பேசுவதற்காக டூர் புரோகிராமைத் தயார் செய்துவிட்டாராம் வேல்முருகன்.
தைலாபுரத்தின் பதிலடியையும் கவனிப்போம்!
கே.ராஜாதிருவேங்கடம், வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார், ஜெ.முருகன் 
 'கொசுவை அடித்தோம்!’
'கடலூர் மாவட்ட பா.ம.க. கட்சி அலுவலகம் எனக்குத்தான் சொந்தம். தைரியம் இருந்தால் ஐயாவோ, மணியோ அல்லது குருவோ இந்த மண்ணில் கால் வைத்துவிட்டு அலுவலகத்தின் சாவியை வாங்கிக்கொள்ளட்டும்’ என வேல்​முருகன் பகிரங்கமாகச் சவால் விட்டிருந்​தார். ராமதாஸ் ஆதரவாளர்களோ கட்சி அலுவ​லகத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி காவல் துறையில் புகார் செய்தனர்.
கடலூரில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் இருக்க, சப் - டிவிஷனல் மாஜிஸ்திரேட் கிரன் குராலா உத்தரவின் பேரில், வட்டாட்சியர் எழிலன் மூலம் பா.ம.க. அலுவல​கத்துக்கு சீல் வைத்தனர். அலுவ​லகத்​தின் ஒரிஜினல் டாக்குமென்டை நீதிமன்​றத்தில் சரண்டர் செய்துவிட்டு சாவியை வாங்கிக்​கொள்​ளுங்கள் என வட்டாட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில்தான், வேல்முருகன் சவாலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என, கடந்த 13-ம் தேதி கடலூர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டி இருந்தார் ராமதாஸ். கூட்டத்துக்கு அவரே தலைமையும் ஏற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் வேல்முருகனைத் திட்டித் தீர்த்தனர். எந்தச் சலனமும் இல்லாமல் கடைசியாக மைக் பிடித்தார் ராமதாஸ். ''இந்தக் கூட்டத்துக்கு நான் வர வேண்டுமா என முதலில் யோசித்தேன். நிர்வாகிகளை மட்டும் அனுப்​பலாம் என நினைத்தேன். ஆனால், அது சரியா வராது என்றுதான் புறப்பட்டு வந்தேன். பிஞ்சிலேயே பழுத்தவர்கள் மக்களுக்குப் பயன்பட மாட்டார்கள் என்றுதான் தூக்கிப் போட்டுவிட்டோம். கொசு கடிச்சா, யாராவது வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போமா? கடிச்சது... தட்டினோம்... விழுந்துடுச்சு. அதுக்​காக வருத்தப்பட வேண்டியது இல்லை. பா.ம.க. ஒரு ஆலமரம். இதில், எந்தப் பறவைகளும் வந்து தங்கலாம்; பழங்களைத் தின்னலாம்...'' என்று எதையோ மறைமுகமாகப் பேசி முடித்தார்.
''கடலூர் மாவட்டப் பொதுக் குழு என்று பெயர் போட்டு​விட்டு பல மாவட்டத்தில் இருந்தும் ஆட்களைக் கொண்டுவந்துட்டாரு ராமதாஸ்'' என்று அங்கே இருந்தவர்களே சொல்லிக்​கொண்டதைக் கவனிக்க முடிந்தது!
க.பூபாலன்
************************************************************************
வைகோ மேடையில் தமிழச்சி!

தேவநேயப் பாவாணர் அரங்கில் சமீபத்தில் நடந்தது, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுடன், தி.மு.க-வின் தமிழச்சி தங்கப்பாண்டியனும் மேடை ஏற... ரசித்துக் கை தட்டியது கூட்டம்.
''என் தந்தையின் நீண்ட நெடுங்கால நண்பர் அண்ணன் வைகோ அவர்களே...''என்று புன்ன கையுடன் ஆரம்பித்த தமிழச்சி, காசி ஆனந்தனின் பல்வேறு கவிதைகளைப் படித்துக் காட்டிக் கூட்டத்தை வசப்படுத்தினார். ''இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது நாம் மௌனமாக இருந்தோம். கை கட்டி வேடிக்கை பார்த்தோம். இந்த உலகத்தில் கை கட்டி வேடிக்கை பார்த்துவிட்டு, கருத்து மட்டும் சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை...'' என்றார் தமிழச்சி.
அடுத்துப் பேசிய காசி ஆனந்தனின் பேச்சில் ஏக சீற்றம். ''வியட்நாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில், இந்தியாவில் புதுக்கவிதை எழுதியவர்களும் இலக்கியம் படைத்தவர்களும் உள்ளார்கள். ஆனால், ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொலை யுண்டு விழுந்த நேரத்தில், யார் ஈழத் தமிழ் மக்களுக் காக எழுதினார்கள்?
எத்தனையோ பெரிய கொடுமைகள் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டன. பெண் உறுப்பில் வெடி குண்டுவைத்து மட்டக்களப்பில் கோணேஸ்வரி சிதைக்கப்பட்டாள். புங்குடு தீவு கண்ணகி கோயிலில் வைத்து, சாரதாம்பாள் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள். இசைப் பிரியாவைச் சிறைப்படுத்திய இன வெறியர்கள், போர்க் கைதிகளை நடத்தும் உலக விதிப்படியா நடத்தினார்கள்? இல்லையே!
அவற்றை எல்லாம் எழுத்தில், கவிதையில், திரைப்படத்தில், சிற்பத்தில் வடிக்கும் காலம் வந் துள்ளது. ஓவியர் சந்தானம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வைத்து வரைந்த படத்தினை மாதிரியாகக்கொண்டு முருகன் என்கின்ற சிற்பி தஞ்சையில் சிலை வடிக்கிறார். அந்த நினைவுச் சின்னம் முள்ளிவாய்க்கால் கொடுமையினை இந்த உலகுக்கு என்றும் பறை சாற்றி நிற்கும். அப்படிப்பட்ட கலைஞனே இன்று இந்த மண்ணுக்குத் தேவை.'' என்று சீறினார்.
அடுத்து மைக் பிடித்த வைகோ, '' 'காந்தித் தாத்தா நல்ல தாத்தா... கருணை உள்ளத் தாத்தா... மாந்தரிலே பெரிய தாத்தா... மகாத்மா காந்தித் தாத்தா’ என்பதுதான் காசி ஆனந்தன் சிறு வயதில் எழுதிய முதல் கவிதை. காலம் எத்தகைய ஒரு பிரளயத்தை அவரின் இதயத்தில் உருவாக்கி இருக்கிறது. சின்ன வயதில் இப்படி எழுதியவர் இப்போது வெளியிட்ட நறுக்குகளில், 'மகாத்மா... கொல்லாதவன் உனக்கு மகாத்மா’ என்று எழுதி இருக்கிறார். என்ன சொல்ல வருகிறார் தெரிகிறதா? கொன்றவர்களைக் கொல்ப வன் எனக்கு மகாத்மா என்கிறார்...'' என்று வைகோ நிறுத்த, விசில் பறந்தது! 
தி.கோபிவிஜய்
படம்: வீ.நாகமணி
*********************************************************************************
எப்படி இருக்கிறது உயர் நீதிமன்றப் பாதுகாப்பு?

சென்னை செக்கப்
திறந்தே கிடக்கும் சத்திரம் போன்று எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் கிடந்தது, சென்னை உயர் நீதிமன்றம். இப்போது கண்காணிப்புகள் நிறைந்த பாதுகாப்புக் கோட்டையாக மாறியுள்ளது.
அனுமதி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, காவலரின் கையப்பம் பெற்றபிறகு வரிசையாகச் செல்லவேண்டும். முதலில் பேக்கேஜ் ஸ்கேனர் கொண்டு உடைமைகள் சோதிக்கப்படுகிறது. பின்பு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவி கொண்டு உடல் சோதனை நடைபெறுகிறது. இதன்பிறகே கோர்ட் வளாகத்துக்குள் நுழையமுடியும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு நீதிமன்ற வளாகம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்டோம்.
விமலா: (உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர்)
பாதுகாப்பு நடைமுறைக்கு மக்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள். காலை 10.30 மணிக்கு வழக்கு இருக்கிறது என்று சொல்லி, 10.20-க்கு அவசரமாக நுழைவதைத் தவிர்த்து  முன்கூட்டியே வருவதற்குப் பழக வேண்டும். கோர்ட்டுக்குள் நுழையும் போது ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்து இருந்தால், செக்கிங் ஃபார்மாலிட்டிக்கு வசதியாக இருக்கும்.
வழக்கு சம்பந்தமாக வருபவர்கள், தங்களுடைய வழக்கு எண் பற்றியும் எந்தக் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு வருவது நல்லது. சென்னை உயர்நீதி மன்றத்தில் இருக்கும் முக்கிய நுழைவாயிலான எஸ்பிளனேட் கேட், மக்கள் உள்ளே வர பயன்படுத்தப்​படுகிறது. மற்ற நுழைவாயில் களான பார் கவுன்சிலிங் கேட், ஆவின் கேட், நார்த் கேட், சௌத் கேட் மற்றும் லீகல் எய்ட் கேட் போன்ற அனைத்து வழிகளிலும் போலீஸ் பாதுகாப்புடன் மெட்டல் டிடெக்டர் பரிசோதனை நடைபெறுகிறது. காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி வரை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விரைவில், உயர்நீதிமன்ற வளாகத்தினுள் 16 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதனால் ஒரு நல்ல பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் நுழையும் இனிய சூழலை ஏற்படுத்தி இருக்கிறது, இந்த மாற்றங்கள்.
பிரசன்னா: (தலைவர், பெண் வழக்கறி​ஞர்கள் அசோசியேஷன்)
இப்போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வரவேற்கப்பட வேண்டியது. வழக்கறிஞர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை, அவர்களின் வாகனத்திற்கு பார் கவுன்சிலின் அனுமதிச்சீட்டு தரப்பட்டுள்ளது. பொது மக்கள் வாகனங்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் பொது மக்கள் தங்கள் பணியை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக வெளியே செல்லமுடிகிறது. இப்போதும் வாதி, பிரதிவாதிகளோடு சேர்ந்து உறவினர்களும், நண்பர்களும் வந்து விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
மோகன கிருஷ்ணன்: (சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர்)
டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு, சென்னையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்​பட்ட பிறகு, சந்தேகத்திற்குரிய நபர்கள் கோர்ட் வளாகத்தினுள் நுழைவது இல்லை. முன்பெல்லாம் கோர்ட் வளாகத்தில் சிலர் தூங்கிக்கொண்டு இருப்பார்கள், கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்ப்பார்கள். அவை எல்லாம் குறைந்துவிட்டது. அதே​போன்று, பொது மக்கள் இங்கே வண்டிகளை நிறுத்திவிட்டு ஷாப்பிங் செல்வதும் நின்று விட்டது. பக்கத்தில் இருக்கும் பழைய திருவள்ளு​வர் புறநகர் பேருந்து நிலையத்தின் காலி இடத்தையும் பார்க்கிங் வசதிக்காகப் பயன்படுத்திக் கொண்டால் கூடுதல் இட வசதி கிடைக்கும்.
அன்பு: (துணை கமிஷனர், பூக்கடை)
கடந்த ஒரு மாத​மாக சென்னை உயர்நீதி மன்றத்​தில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்​புடன் பாதுகாப்புப் பணிகள் செவ்வனே நடைபெறுகிறது. பெண்களுக்கெனத் தனி வரிசையும் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக வரிசையும் இருப்பதால் மிகவும் எளிதாக பரிசோதனை நடைபெறுகிறது. தலைமை நீதிபதி இக்பால், அவ்வப்போது ஸ்பாட் இன்ஸ்பெக்ஷன் செய்கிறார். பாதுகாப்பு காரணமாக தேவையற்ற ஆட்களும், வெளி வாகனங்கள் வருகையும் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த வளாகம் இப்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தாலும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. உள்ளே நுழைவதற்கு வழங்கப்படும் என்ட்ரி பாஸ், திரும்ப வாங்கப்பட்டு பதிவு செய்யப்படுவது இல்லை. ஒரு கேஸ் சம்பந்தமாக ஒன்பது பேர் வருகிறார்கள் என்றால் அனைவரது தகவல்களும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், ஒரே அனுமதி சீட்டில் 9 என்று எழுதிவிட்டு அனைவரும் நுழைகிறார்கள். மேலும் அனுமதிச் சீட்டினை நிரப்புவதற்கான இட வசதி எதுவும் இல்லை என்பதால் மேஜை தேடி அலைகிறார்கள்.
இந்தக் குறைபாடுகளை நீக்க,''டெல்லி, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புகைப்​படத்துடன் அனுமதிச் சீட்டு கம்ப்யூட்டர் மூலம் கொடுப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடு இங்கேயும் கையாளப்பட வேண்டும்'' என்கிறார்கள் நீதிமன்ற ஊழியர்கள்.
அடுத்தகட்டமாக அதுவும் நடைமுறைக்கு வரும் என்றே நம்புவோம்!
ரமா ஆல்பர்ட்
படங்கள்: என்.விவேக், கே.கார்த்திகேயன்
*********************************************************************************
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி

தலைநகரத்தில் நடந்த கொடுமை!
வம்பர் 9-ம் தேதி, காலை 9 மணி.
'பேபால்’ என்ற ஐ.டி. நிறுவனத்தின் வாயிலில் திரண்டு நின்றது 'சேவ் தமிழ்’ இயக்கம்! 'பேபால் நிறுவனம் சாதியத்தை வளர்க்கிறது’ என்று அர்த்தம் தொனிக்கும் பேனரைப் பிடித்திருந்த இயக்கத்தினர், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பொது​மக்களுக்கு துண்ட​றிக்கைகளைக் கொடுத்தனர். இதைக் கேள்விப்பட்டு ஆடிப்போனது பேபால் நிறுவனம்!
என்ன பிரச்னை?
சென்னைக்கு அருகே சோழிங்கநல்லூரில்இருக்கிறது பேபால் ஐ.டி. நிறுவனம். அது தனது ஆண்டு விழாவைக் கொண்டாட இருந்தது. வழக்கமாக இதுபோன்ற விழாக்களுக்கு முன்பு ஊழியர்கள் மத்தியில் குழுக்கள் அமைக்கப்படும். அந்தக் குழுக்களுக்கு இடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் அளிப்பதும் வழக்கம். இந்த ஆண்டும் அப்படி கொண்டாட நினைத்தது பேபால் நிறுவனம். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அந்தக் குழுக்களுக்கு 'அய்யர்ஸ் ஆஃப் தமிழ்நாடு’, 'பானர்ஜீஸ் ஆஃப் வெஸ்ட் பெங்கால்’, 'பட்டேல்ஸ் ஆஃப் குஜராத்’ என்று ஒவ்வொரு மாநிலத்​திலும் உள்ள  சாதிக்களின் பெயர்களை சூட்டியதுதான் பிரச்னை.
இந்தப் பெயர்கள் அடங்கிய பேனர்களை அந்த நிறுவனம் தனது வாயிலில் வைத்திருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் பழைய மகா​பலிபுரம் சாலையில் அந்த பேனரைக் கண்ட 'சேவ் தமிழ்’ இயக்கத்தினர் கொதித்துப் போய் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.
உடனே பதறிப்போன பேபால் நிறுவனம், சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை எல்லாம் அகற்றியது. அதோடு, நிறுவன தரப்பில் இருந்து செக்யூரிட்டி பிரிவின் தலைவர் தமிழ் சேவ் இயக்கத்தினரிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தார். அவரிடம் பேச மறுத்த போராட்ட அமைப்பு, 'ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட் நபர்கள் வரவேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது. ஹெச்.ஆர். கார்ப்பரேட் கம்யூனிகேஷன் அதிகாரியான கிருத்திகா செல்போனில் பேசி இருக்​கிறார். போராட்டக் குழுவோ, 'அவர் நேரில் வந்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அதை பத்திரிகை​களுக்கு செய்தியாகத் தர வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது.
காவல் துறைக்கு தகவல் சொல்லி, லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வந்து சேர்ந்த பின்னரே கிருத்திகா ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்க வந்தார். வரும்போதே மன்னிப்புக் கடிதம் எழுதி வந்திருந்தார். ''குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இன்றியே இந்தப் பெயர்களை வைத்தோம். இந்தியாவில் பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான் இப்படி பெயர் வைத்தோம். அதைத் தவறு என்று உணர்கிறோம். பேபால் நிறுவனம் இதற்காக மன்னிப்புக் கேட்கிறது. குழுக்களுக்கு வைத்தப் பெயர்களை மாற்றி அமைக்​கிறோம்!'' என்று கிருத்திகா சொன்ன பிறகுதான்
சர்ச்சை ஓய்ந்தது!
கவின் மலர், படங்கள்: காயத்ரி
*********************************************************************************
''மனுஷ உயிரு மலிவாப் போயிருச்சா..?''

நாய்க் கடிக்கு நடுங்கும் காஞ்சி மக்கள்
காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 41 பேரைக் கடித்துக் குதறி இருக்கிறது ஒரு நாய். பொதுவாகவே, காஞ்சிபுரம் தெருக்களில் நாய்களின் நடமாட்டம் அதிகம். நகராட்சி அலுவலகத்துக்கு மக்கள் பல முறை மனு கொடுத்தும், நடவடிக்கை எதுவும் இல்லை. இந்த நிலையில்தான், ஆலடித் தோப்பு பிள்ளையார் கோயில் தெருவில் திரிந்த ஒரு நாய்க்கு வெறி பிடித்து கடிக்கத் தொடங்கியிருக்கிறது. நாயிடம் கடிபட்ட அத்தனை பேரும் இப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பாலசுந்தரம், ''வீட்டு வாசல்ல பாவு போடுறதுக்காக நின்னுக்கிட்டு இருந்தேன். அந்த நாய் காலை கடிச்சிடுச்சி. சுதாரிக்கிறதுக்குள்ள, ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது'' என்று சொல்ல, குறுக்கிட்ட ரவி என்பவர், ''இதுல கொடுமை என்னன்னா வெறிநாய் கடித்த விஷயத்தை, எங்க கவுன்சிலர் சுபாஷினிகிட்ட சொன்​னோம். 'நாய்தானே கடிச்சது. போய் டாக்​டரைப் பாருங்க!’ன்னு சாதாரணமா சொல்லிட்​டாங்க. இவங்களுக்கு மனுச உயிரு ரொம்ப மலிவா போயிடுச்சி'' என்றார் ஆதங்கத்துடன்!
அந்த வெறிநாய், மேட்டுத் தெரு, கரிக்கினில் அமர்ந்தவள் தெரு என அடுத்தடுத்த தெருக்களில் திருவிளையாடல்களைத் தொடர்ந்ததில், காஞ்சி நகர மக்களிடம் பெரும் பீதி. சில இளைஞர்கள், தேடுதல் வேட்டை நடத்தி அந்த வெறி நாயைக் கண்டுபிடித்து அடித்துக் கொன்று விட்டார்களாம்.
நாய்க்கடி குறித்து அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட கவுன்சிலர் சுபாஷினியிடம் பேசினோம். ''நகராட்சிக் கூட்டத்துக்குச் செல்வது மட்டும்தான் என்னுடைய வேலை. மற்ற விஷயங்களை என் கணவர்தான் கவனிக்கிறார்.  அதனால், இந்த விவகாரத்தில் எனக்கு ஒன்றும் தெரியாது'' என்றார்.
அவரது கணவர் ரவி, ''நாய் கடித்தவுடன் முதலில் மருத்துவமனைக்குச் செல்லுங்கள், எதற்கு கவுன்சிலரிடம் வருகிறீர்கள் என்றுதான் சொன்னேன். அதைத் தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள். நாயிடம் கடிபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன். அந்தத் தெருவில் தி.மு.க-வினர் அதிகம். அதனால், வேண்டுமென்றே புகார் சொல்கின்றனர்'' என்றார்.
இதுகுறித்துப் பேசிய நகராட்சித் தலைவர் மைதிலி, ''சம்பவம் பற்றி அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். ரெட் கிராஸ் அமைப்புக்கு தகவல் கொடுத்து விட்டோம். காஞ்சிபுரம் நகர் முழுவதும் திரியும் நாய்களைப் பிடிக்க உடனே நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.
வேகமா செய்ங்க!
கிருபாகரன்
************************************************************************
''சிவானந்தம் தனி ராஜ்யம்!''

ஆரணி தி.மு.க.வில் உள்குத்து அமர்க்களம்!
ரணியில் தி.மு.க-வினர் இடையே நடந்து வந்த கோஷ்டி மோதலின் உச்சத்தில், ஒன்றியச் செயலாளர் உள்பட மூவரை தற்காலிகமாக நீக்கி யுள்ளது கட்சித் தலைமை. இதற்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு கோஷ்டி, கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை நீக்கியதற்கு தலைமையைப் பாராட்டி போஸ்டர்களை ஒட்ட... பரபரப்பாக இருக்கிறது ஆரணி!
ஆரணி தி.மு.க. முக்கிய புள்ளிகளிடம் பேசியபோது, ''மேற்கு ஆரணி ஒன்றியச் செயலாளர் சங்கருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-வான சிவானந்தத்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே பனிப்போர்தான். கடந்த சட்டசபைத் தேர்தலில் சிவானந்தம் எம்.எல்.ஏ. ஸீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தார். அதோடு, 'வேறு யாரும் மனு செய்யக் கூடாது’னு கறாரா சொல்லிட்டார். உடனே, மாவட்டச் செயலாளரிடம் சங்கர் கோஷ்டி முறையிட்டது. அவரோ, 'யார் வேண்டுமானாலும் விருப்ப மனு செய்யலாம்’னு சொன்னார். அதன் பிறகு பலர் மனு செய்தார்கள். அந்தத் தேர்தலில் சிவானாந்தம் தோற்றுவிட்டார். உடனே அவர் கூட்டம் போட்டு, 'தனது தோல்விக்கு சங்கரும் அவரது ஆதரவாளர்களும்தான் காரணம். அவர்களை கட்சியைவிட்டு நீக்க வேண்டும்’னு தீர்மானம் போட்டார். அதைத் தலைமைக்கும் அனுப்பினார். உடனே, சங்கர் தன் ஆதரவாளர்களுடன் போட்டிக் கூட்டம் போட்டார். அதற்கு சிவானந்தம் தனது ஆதரவாளர்களுடன் சென்றதால் அங்கே அடிதடி நடந்தது. உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த மோதல் காரணமாக சங்கருக்கு வாய்ப்புக் கொடுக்கலை. அவர் சுயேச்சையாகப் போட்டிடுவேன்னு சொன்னார். உடனே சங்கர் கோஷ்டியைச் சேர்ந்த நாலு பேருக்கு மட்டும் வாய்ப்புக் கொடுத்தாங்க. கடுப்பான சங்கர் சுயேச்சையாக நின்றார். மாவட்டச் செயலாளர் தலையிட்டு அவரை சமாதானம் செய்து, வாபஸ் வாங்க வைத்தார்.
தனக்கு ஸீட் கிடைக்காத காரணத்தால் சங்கர் தேர்தல் வேலைகளை செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார். அவரது ஆதர வாளர்கள் நாலு பேரையும் தோற்கடிக்க சிவானந்தம் முயற்சித்தார். அப்படியும் திருமால் என்பவர் மட்டும் ஜெயித்தார். அவரும் சிவானந்தத்தின் செயலால் திடீரென அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித் தார். அ.தி.மு.க-வும் அவரையே பஞ்சாயத்து யூனியன் தலைவர் வேட்பாளராக அறிவித்தது. கடுமையான போட்டிக்கு பிறகு மேற்கு ஆரணி யூனியன் தலைவர் பதவியை ஒருவழியாக தி.மு.க. கைப்பற்றியது. இதை எல்லாம் அறிந்த தலைமை, சங்கர் உட்பட அவரது ஆதரவாளர்களை தற்காலிகமாக நீக்கியது. அப்புறம் சிவானந்தம் ஆதரவாளர் கள், 'மேற்கு ஆரணி ஒன்றிய தி.மு.க. துரோகிகளை நீக்கிய தலைவர், தளபதி மற்றும் மாவட்ட கழகத்துக்கும் நன்றி நன்றி நன்றி’னு போஸ்டர் அடித்து ஒட்டினர்'' என்றனர்.
சங்கரிடம் பேசியபோது, ''ஆரணியில் சிவானந்தம் தனி சாம்ராஜ்யம் நடத்த நினைக்கிறார். அவரை யாரும் எதிர்த்து கேட்கக் கூடாது. அவரை எதிர்த்து குரல் கொடுப்பதாலேயே என் மீது அவருக்குக் கோபம். சட்டசபை தேர்தலில்கூட அவரை எதிர்த்து நான் விருப்ப மனு கொடுத்தேன் என்பதற்காக தலைமைக்கு என்னைப்பற்றி தவறான தகவல்களை கூறினார். ஆரணியில் அவரும் அவரது தம்பிகளும் செய்த கட்டப் பஞ்சாயத்து காரணமாகதான் அவர் தோல்வி அடைந்தார். அதை எல்லாம்மறைத்துவிட்டு என் மீது குற்றம் சாட்டுகிறார். உள்ளாட்சித் தேர்தலில் என் ஆதரவாளர் ஒருவர் வெற்றி அடைந்தும், அவரது ஆதரவை சிவானந்தம் கேட்கவில்லை. என் ஆதரவாளர் வெறுத்துப்போய் அ.தி.மு.க-வுக்கு தனது ஆதரவை தெரிவித்துவிட்டார். அதற்கு எப்படி நான் பொறுப்பாக முடியும்? விரைவிலேயே தலைவரை பார்த்து என் மீது சொல்லப்பட்ட குற்றச் சாட்டுக்களுக்கு விளக்கம் சொல்லப் போகிறேன்'' என்றார்.
தற்காலிகமாக நீக்கப்பட்ட ஒன்றிய இளைஞர் அணி அமைப் பாளர் பாபுவோ, ''நான் பரம்பரை தி.மு.க-காரன். சிவானந்தம் கட்சிக்கு எப்படி வந்தார் என்பது மற்றவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ... எனக்கு நல்லாவே தெரியும். அவரோ இன்னிக்குஎங்களை தற்காலிகமாக நீக்கியதற்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுறார். போஸ்டர் அடிச்சு ஒட்டி எங்களை கேவலப்படுத்துறதா நினைச்சு கட்சியைத்தான் கேவலப்படுத்தி இருக்கிறார். எந்த ஒரு தீவிர கட்சிக்காரனும் இதுபோல செய்வானா? எங்கள் தரப்பு நியாங்களை தலைவரிடமும் தளபதியிடமும் சொல்லப் போறோம். நிச்சயம் மாற்றம் வரும்'' என்று ஆவேசப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை சிவானந்தத்திடம் கேட்டோம். ''ஆமாம், உண்மைதான். நான்தான் தலைமைக்கு அவர்கள் மீது புகார் அனுப்பினேன். அவர்கள் கட்சிக்கே துரோகம் செய்தவர்கள். தி.மு.க-வில் நின்று ஜெயித்துவிட்டு அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தருகிறவர்களை எப்படி கட்சியில் வைத்துக்கொள்ள முடியும்? தலை மையும் ஆராய்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறது. இன்னும் இதுபோல் சிலர் நீக்கப்பட வேண்டி யவர்கள். அவர்கள் மீதும் தலைமை விரைவில் நடவடிக்கை எடுக்கும்'' என்றவரிடம், ''தலைமை நடவடிக்கை எடுத்திருக்கும்போது நீங்கள் போஸ்டர் அடித்து கொண்டாடியது சரியா?'' என்று கேட்க, ''அவர்கள் மீதுள்ள வெறுப்பில் கட்சிக்காரர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி இருக் கிறார்கள்'' என்று மட்டும் சொன் னார்.
ஆரணியில் நடக்கும் உள்கட்சிப் பூசலை தி.மு.க. தலைமை ஆராயுமா?
- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்
*********************************************************************************
குடிக்கத் தண்ணீர்... கடக்க நடை பாதை!

குறைகளைத் தீர்ப்பாரா வேலூர் மேயர்
வேலூர், மாநகராட்சியானதும் முதல் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்து இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று மேயர் ஆகியிருக்கிறார், கார்த்தியாயினி. புதியவர், துடிப்புடன் செயல்படுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் இவரைத் தேர்வு செய்து இருக்கிறார்கள்.
இப்போது, இவர் முன்னே இருக்கும் பிரச்னைகளைப் பட்டியல் இட்டார்கள் வேலூர் மக்கள். ''சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதிகளில் உள்ள சென்னை - பெங் களூரு தேசிய நெடுஞ்சாலையை, பாதசாரிகள் கடக்கவே முடியாத அளவுக்கு சிரமமாக இருக்கிறது. எப்போதும் அதிவேகமாக போக்குவரத்து இருக்கிறது. அதனால் நொடி நேரம் கவனிக்காமல் சாலையைக் கடந் தாலும் விபத்தில் சிக்கி உயிரிழக்க வேண்டி இருக்கிறது. இப்படி ஏராளமான விபத்துகள் நடந்து பலர் உயிர் இழந்து இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள சாலையிலும், சி.எம்.சி. மருத்துவமனைக்கு எதிரில் உள்ள சாலையிலும்கூட‌ இதே நிலைதான். இந்த இடங்களில் எல்லாம் பாதசாரிகள் சாலைகளைக் கடக்க சுரங்க நடைபாதை அமைக்கவேண்டும். அப்போதுதான், அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தடுக்கப்படும்.
ஏற்கெனவே மக்கள் தொகை அதிகம் உள்ள வேலூர் நகரத்தில் சி.எம்.சி. மருத்துவமனை, ஸ்ரீபுரம் தங்கக் கோயில் போன்ற இடங்களுக்கு மற்ற இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகிறார்கள். அவர்களை மோச மான முறையில் வரவேற்கிறது புதிய மற்றும் பழைய‌ பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகள். அசுத்தத்தில் முதலிடம் வகிக்கும் இந்த கழிப்பறைகள்
முறையற்ற பராமரிப்பில் இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்டகட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் கொடு மையும் நடக்கிறது. இதனை தடுத்து நிறுத்தி சுத்தமாக்க வேண்டும். இவை எல்லா வற்றையும் தாண்டி பல ஆண்டு காலமாக தீர்வுக்கு வராத பிரச்னையாக எங்களை வாட்டி வருகிறது, குடிநீர் பிரச்னை. இதோ தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பி நம்பியே ஏமாந்துபோனோம். இனியாவது குடிக்கத் தண்ணீர் சிக்கலின்றி கிடைக்கவேண்டும்.
பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பதே தெரியவில்லை.  மழைக்காலங்களில் சாலைகளில் கரைபுரண்டு ஓடும் நீரில் கழிவுகளும் சேர்ந்து வருவதால், மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் வாழ வேண்டி இருக்கிறது'' என்று ஒருசேரச் சொன்னார்கள், பொதுஜனங்கள்.
மக்களின் குமுறல்களை மேயர் கார்த்தியாயினியிடம் முன்வைத்தோம்.
''வேலூர் மாநகராட்சியின் முந்தைய நிலை பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. தற்காலிக அடிப்படையில் எதையும் செய்யாமல் நிரந்தரத் தீர்வாக மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க நினைக்கிறேன். அதனால் கொஞ்சம் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. மக்கள் குறைகளை உடனடியாக அறிந்து செயல்படும் விதமாக, எந்த நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் என்னுடைய அலைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் மக்களிடம் கொடுத்து இருக்கிறேன். விரைவில் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வேன்'' என்றார் நம்பிக்கை வார்த்தைகளுடன்.
நம்பிக் காத்திருக்கிறார்கள் மக்கள்.
ரியாஸ், படங்கள்: ச.வெங்கடேசன்
*********************************************************************************
படித்த பள்ளியை தத்து எடுத்த எம்.எல்.ஏ.!

ஆற்காடு அசத்தல்
'தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்திக் காட்டவேண்டும் என்ற நோக்கோடு எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.கே.ஆர்.சீனிவாசன் ஆற்காட்டில் உள்ள‌ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தத்து எடுத்து இருக்கிறார்’ என்று  வாசகர் ஒருவர் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) தகவல் சொல்லவே, விரைந்தோம்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் பேசியபோது, 'இந்தப் பள்ளி 85 ஆண்டு பழைமை வாய்ந்தது. இந்தப் பள்ளியின் பழைய மாணவர்தான், எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்று இருக்கும் வி.கே.ஆர்.சீனிவாசன். வெற்றி பெற்றதும் இந்தப் பள்ளிக்கு முதல் விசிட் செய்து, இந்தப் பள்ளியை தத்து எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுத்திருக்கிறார். இப்போது பள்ளியின் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி, நபார்டு திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. வகுப்பறைகள், மீட்டிங் ஹால் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கும் வேலைகள் முடிந்துவிட்டன.
எங்கள் கழகத்தின் மூலமாக நியமிக்கப்பட்டிருக்கிற ஆசிரியர், காவலாளி மற்றும் துப்புரவுப் பணியாளருக்கான  மாதச் சம்பளத்தை எம்.எல்.ஏ. தன் சொந்தப் பணத்தில் வழங்குகிறார். மேலும் மாணவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் பரிசுகளும் அறிவித்து இருக்கிறார்'' என்று பட்டியல் போட்டார்கள்.
பள்ளியின் சார்பில் பேசியவர்கள், ''ப‌ள்ளியின் சுற்றுச் சுவ‌ர் முழுமையாக‌ அமைக்க‌ப்படுவது நல்ல பாதுகாப்பு. வெளி ஆட்களால் பள்ளிக்குள் சமூகக் குற்றம் நிகழாமல் தடுக்கப்படும். இதுவ‌ரை ப‌ள்ளிக்கு காவ‌லாளி மற்றும் துப்புரவுப் ப‌ணியாள‌ர் இல்லாத குறையும் தீர்ந்துபோனது. சுகாதாரமான கழிப்பறை, சுத்தமான குடிநீர் என முக்கியத் தேவைகளை செய்து கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்கள்.
சீனிவாச‌னைத் தொடர்புகொண்டபோது, ''புர‌ட்சித் த‌லைவி அம்மாவின் ந‌ல்லாட்சியில் ம‌க்க‌ளின் தேவைக‌ள் அனைத்தும் நிறைவேற‌ வேண்டும் என்ற‌ நோக்கோடுதான் எனது பணிகளை சேவை ம‌ன‌ப்பான்மையோடு செய்துவ‌ருகிறேன். அம்மாவின் ஆட்சியில் மாண‌வ‌ மாண‌விக‌ளுக்கென‌ அரிய‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ள் அம‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகின்றன. சிற‌ந்த‌ க‌ல்விச் சேவை செய்ய‌ வேண்டும் என்ற ஆர்வ‌த்தால்தான் ஆற்காடு அர‌சு ஆண்க‌ள் மேல்நிலைப் ப‌ள்ளியை த‌த்து எடுத்தேன். ஏழை மாண‌வ‌ர்களுக்கு வ‌றுமையாலோ வ‌ச‌தி வாய்ப்பு இன்றியோ அவ‌ர்க‌ளின் க‌ல்வி பாதிக்க‌ப்ப‌ட்டுவிட‌க் கூடாது என்ற‌ எண்ண‌த்தில் அவர்களுக்கு மறுப்பின்றி உதவிகள் செய்து வருகிறேன். ‌ஐந்து ஆண்டுகளுக்கு என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்து இப்பள்ளியை தத்து எடுத்திருக்கிறேன். இந்த ஒப்பந்த காலங்களுக்குள் அம்மாவின் ஆசியோடு எந்த தரத்துக்கும் குறை இல்லாத பள்ளியாக இதனை உருவாக்கிக் காட்டுவேன்'' என்றார்.
நாமும் பாராட்டுவோம்.
ரியாஸ்
************************************************************************
பரஞ்சோதி 'இன்' சிவபதி 'அவுட்'

திருச்சி பாலிடிக்ஸ் கலக்கல்
திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் விறுவிறுவென உச்சத்தைத் தொட்டுவிட்டார் பரஞ்சோதி. 'இப்போதைக்கு திருச்சியில் பட்டொளி வீசி பறப்பது பரஞ்சோதியின் கொடிதான்!’ என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார் பரஞ்சோதி. எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்த காரணத்தால் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பரஞ்சோதி வசம் இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சித் தலைவியான ஜெய லலிதாவே போட்டியிட்டதால், வேறு தொகுதி எதுவும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வரானதும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற அலுவலக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் பரஞ்சோதி. அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று பூரித்தார், பரஞ்சோதி.
இதற்கிடையில், எதிர்பாராத வகையில் அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் சிக்கி அகால மரணம் அடையவே, திருச்சி மேற்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. மரியம்பிச்சையின் குடும்பத்தில் இருந்து யாருக்கேனும் வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வந்த சூழலில், பரஞ்சோதிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. பெரும்புள்ளி கே.என்.நேருவை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். வெற்றிக்குப் பரிசாக, திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு தேடி வந்தது. அந்த சந்தோஷத்தில் திளைத்தபோதே, அமைச்சர் பதவியும் தேடி வந்தது. இந்து சமய அற நிலையங்கள், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை பரஞ்சோதிக்கு ஒதுக்கப்பட்டது. இதுவரை அமைச்சர் மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த சிவபதி 'முன்னாள்’ ஆகிவிட, பரஞ்சோதி 'ஆல் இன் ஆல்’ ஆகியிருக்கிறார்!
அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கையோடு, கடந்த 9-ம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவலில் நடந்த மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, லேப்டாப் மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய பரஞ்சோதி, ''தமிழகத்திலேயே ஸ்ரீரங்கத்தில் தான் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே முதன் முறையாக மகளிர் தோட்டக் கல்லூரி திருச்சியில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஸ்ரீரங்கத்தில் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. ஒரு அரசு 50 ஆண்டு காலத்தில் செய்யும் சாதனையை முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த ஐந்து மாதத்திலேயே செய்து முடித்துவிட்டார்'' என்று பேசினார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தி  மற்றும் சிறப்புத் திட்ட அமலாக் கத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு செம காரம். ''சாதாரண தொண்டனை அமைச்சராக்கி அழகு பார்த்த முதல்வர் புரட்சித் தலைவி அம்மா இருக்கும் போயஸ் தோட்டத்தை நோக்கி வணங்குகிறேன்'' என்று பெரிதாக கையெடுத்துக் கும்பிட்டவர்,  ''புரட்சித் தலைவி அம்மாவை வெற்றி பெற வைத்து மீண்டும் அவரை முதல்வர் ஆக்கிய புண்ணிய பூமி இது. எல்லாத் துறைகளிலும் இந்தத் தொகுதி முன்னேறப் போவது உறுதி. தாளிப்பதற்கு வெங்காயம்கூட கொடுக்காதவர் கருணாநிதி. ஆனால், ஏழை வீட்டுப் பெண்களின் தாலிக்கு தங்கம் கொடுப்பவர் நமது முதல்வர். கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பதை போல, பெண்கள், மாணவர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் தினம் ஒரு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் நமது முதல்வர்.
2006-ல் நடந்த விபத்தின் காரணமாக (சட்டமன்றத் தேர்தலை சொல்கிறார்) முதல்வரான கருணாநிதியும், அவரது குடும்பமும் ஏராளமாக சம்பாதித்து விட்டனர். அதன் பயனாக இன்று அவரது மகள் கனிமொழி திகார் சிறையில் இருக்கிறார். செய்த தவறுகளுக்காக கருணாநிதியின் குடும்பம் தண்டனை யின் பிடியில் சிக்கி இருக்கிறது'' என்றார்.
அடுத்து பேசிய திருச்சி எம்.பி-யான குமார், ''லோக்சபாவில் இருக்கும்போது என்னை சந்தித்த பஞ்சாப் எம்.பி. ஒருவர், தமிழகத்தில் எல்லாமே இலவசமாகத் தருகிறார்களாமே... நாங்களும் அங்கேயே வந்துவிடலாம் என்று நினைக்கிறோம்’ என்று சொன்னார். அதற்கு நான், 'நீங்கள் தமிழ் நாட்டுக்கு வர வேண்டும் என்றால், எங்கள் முதல்வர் பிரதமராக ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொன்னேன். அந்த எண்ணம் நிறைவேற மக்களா கிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்'' என்றார்.
பதவி பறிக்கப்பட்ட சிவபதி, ''என்றும் உங்களில் ஒருவனாக இருந்து இந்த மாவட்டத்துக்கும், தொகுதி மக்களுக்கும் நல்ல விஷயங்கள் கிடைக்கப் பாடுபடு வேன்'' என்றார் அடக்கமாக.
திருவானைக்காவலில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், தனது ஆதரவாளர்கள் புடைசூழ சைரன் காரில் வலம் வந்து திருச்சியை சுற்றிச்சுற்றி வந்து கலக்கினார் பரஞ்சோதி.
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************
தஞ்சாவூரை சரி பண்ணுவாங்களா?

சென்னை மாநகராட்சியைப் போலவே தஞ்சாவூர் நகராட் சியை முதன் முறையாக அ.தி.முக. கைப்பற்றி உள்ள நிலையில், 'தஞ்சாவூர் நகரம் முழுக்க விரவிக்கிடக்கும் நிர்வாக மற்றும் சுகாதார சீர்கேடுகளை புதிய நகராட்சித் தலைவராவது தீர்த்து வைப்பாரா?’ என ஏக்கத்தில் உள்ளனர் தஞ்சை நகர மக்கள்!
தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹுமாயுன், 'சோழர் காலத்தில், மிகப் பெரிய பரப்பளவில் சரியாக திட்டமிடப்பட்டு நிர் மாணிக்கப்பட்ட நகரம் தஞ்சாவூர். ஆனால், இன்று மிக மோசமாக இருக்கிறது.  சுற்றுலா மற்றும் வரிகளுடன் போதுமான வருவாய் கிடைத்து வந்தாலும், மக்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளன. பாதாள சாக்கடை திட்டம் அரைகுறையாக இருப்பதால் சாலைகள் மோசமாகிவிட்டன. நெற்களஞ்சிய மண்ணில் குடிநீருக்கும் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது. பல தெருக்களில் குப்பை அள்ளுவதே கிடையாது. சாந்தப்பிள்ளை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டப் பட வேண்டும் என்பது சமூக அக்கறை உள்ளவர்களின் வேண்டுகோள். ஆனால், சில அரசியல்வாதிகளால், கடந்த ஆட்சியில் கீழ்பாலம் கொண்டுவர தீர்மானம் போடப்பட்டது. ஏற்கெனவே, ரயிலடி அருகே உள்ள கீழ்பாலத்தினால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இங்கும் கீழ்பாலம் அமைத்ததால், மக்களுக்கு சிரமம்தான்'' என்று கோரிக்கை வைத்தார்.
அடுத்துப் பேசிய வழக்கறிஞர் சுதாகர், 'முக்கிய பொழுதுபோக்கு இடமான சிவகங்கை பூங்காவில் அநாகரிக காட்சிகளே அதிகம் நடக்கின்றன. உள்ளே இருக்கும் சந்தன மரங்களையே எளிதாக வெட்டிக் கடத்திச் செல்கின்ற அளவுக்குத்தான் பராமரிப்பு உள்ளது. அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் சுகாதாரம் மோசமாக உள்ளது. மழை பெய்தவுடனே சாலைகள் அபாயகரமானதாக மாறிவிட்டன. பழைய பஸ் ஸ்டாண்டில் சுரங்கப் பாதை அமைக்க முயற்சிக்கப்பட்டது. அதுவும் கேட்பார் இன்றி கிடப்பில் போடப்பட்டு விட்டது. பழைய பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தவும் ஒழுங்கு படுத்தவும் வேண்டும்' என்றார்.
இதுபற்றி தஞ்சாவூர் நகராட்சியின் புதிய தலைவர் சாவித்திரி கோபாலிடம் கேட்டபோது, 'சாந்தப்பிள்ளை கேட்டில் நிச்சயம் மேம்பாலம் அமைக்கப்படும். பழைய பேருந்து நிலையத்திலும் மக்கள் போக்குவரத்து வசதிக்காக பாலம் அமைக்க முயற்சிக்கிறோம். கடந்த ஆட்சியில் குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய், முறையாக செல விடப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் நகரம் முழுக்க குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நகரம் முழுக்க குப்பைகளை அள்ள போதுமான அளவுக்கு கருவிகள் வாங்கப்படும். நகர சுகாதாரம் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். பழைய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்துக்காக அருகில் கட்டப்பட உள்ள கலையரங்க இடத்தை பயன்படுத்திக்கொள்வோம். தஞ்சாவூர் நகராட்சியை முதல் முறையாக அ.தி.மு.க. வசம் நம்பிக்கையோடு மக்கள் கொடுத்துள்ளனர். அதை காப்பாற்றுவோம்' என்றார் தெளிவாக.
பார்ப்போம்!
சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்
*********************************************************************************
திவாகரனின் மந்திரப் புன்னகை

கொண்டாடும் டெல்டா அ.தி.மு.க-வினர்
ருணாநிதியின் குடும்ப வாரிசுகள் வாழும் இடங்கள் எல்லாம் தி.மு.க-வின் அதிகார மையங்கள் என வர்ணிக்கப்படும். அதே போல, சசிகலாவின் நெருங்கிய உறவினர்களே அ.தி.மு.க-வின் அதி கார மையங்கள் என அ.தி.மு.க-வின் தொண்டர் கள் பலமாக நம்புகின்றனர். தற்போது, நன்னிலம் ஆர்.காமராஜுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் வாங்கி கொடுத்ததன் மூலம், டெல்டாவின் அ.தி.மு.க. அதிகார மையம் திவாகரன் என நிரூபித்துள்ளார் என் கிறார்கள் அரசியல் விவர புள்ளிகள்!
சசிகலாவின் உடன் பிறந்த தம்பி திவாகரன் 'அமைதியான தோற்றமும், தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளாத குணமும்கொண்டவர்’ என பெயர் எடுத்தாலும், டெல்டாவில் நடக்கும் அத்தனை அரசியல் நிகழ்வுகளுக்கும் அவர் பெயர் ஏதோ ஒரு வகையில் அடிபடும். இந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட முதல் வேட்பாளர்கள் பட்டியல், பின்னர் திருத்தி வெளியிடப்பட்டது. பல வேட்பாளர்கள் மாற்றப்பட்ட போதும், திவாகரன் ஆதரவாளர்களுக்கு மட்டும் ஸீட் கிடைத்தது. டெல்டாவில் பலமாக இருந்த ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை உடைத்து, சிற்றரசு மூலம் முக்குலத்தோர் ஓட்டு வங்கியை அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கச் செய்தார் என்ப தால், திவாகரன் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை உண்டு'' என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.
'தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், மன்னார்குடியில், திவாகரன் சிபாரிசு செய்த வேட்பாளர் சிவா.ராஜா மாணிக்கம் தோல்வியைத் தழுவினார். இதனால், திவாகரன் மீது ஜெயலலிதா மனக்கசப்புகொண்டார். அதன் விளைவாக, திவாகரன் ஆதரவாளர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. மன்னார்குடி குடும் பத்தைக் கண்டுகொள்ளாத வைத்திலிங்கத்துக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. இதனை அடுத்து, 'திவாகரனுக்கு  செல்வாக்கு இருக்கிறதா?’ என்கிற பட்டிமன்றமே டெல்டாவில் நடக்கத் தொடங்கியது.
விட்ட இடத்தைப் பிடிக்க திவாகரன் உள்ளாட்சித் தேர்தலை பயன்படுத்திக் கொண் டார். திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் அ.தி.மு.க-வை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் ஜெயலலிதாவிடம் டெல்டா அ.திமு.க. கோட்டை என நிரூபித்தார். அமைச்சரவை மாற்றத்தில், திவாகரனின் ஆதரவாளரான ஆர்.காமராஜுக்கு உணவுத் துறை கொடுக்கப்பட்டது. பதவியேற்று மன்னார்குடி வந்த ஆர்.காமராஜ், 'பாஸ் மேல் கொண்ட விசுவாசத்துக்குதான் அமைச்சர் பதவி கிடைத்தது’ என நெகிழ்ந்து கண்ணீர்விட்டார். இன்னொரு வகையில், வைத்திலிங்கத்தின் கை டெல்டாவில் உயர்வதை தடுக்கவும் ஆர்.காமராஜுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததாகவும் சொல்கிறார்கள்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபய துல்லாவை தோற்கடித்த ரெங்கசாமி, திருமயம் எம்.எல்.ஏ-வான வைரமுத்து மற்றும் விராலிமலை எம்.எல்.ஏ-வான விஜயபாஸ்கர் ஆகியோரும் அடுத்த மந்திரி சபையில் இடம் பெற திவாகரன் திசையை நோக்கி உள்ளனர்' என பட்டியலிட்டு முடித்தனர் டெல்டா அ.தி.மு.க. நிர்வாகிகள்.
ஆனால், வழக்கம்போல மந்திரப் புன்னகை மட்டுமே வெளிப்படுத்துகிறார் திவாகரன்!
சி.சுரேஷ்
படம். கே.குணசீலன்
*********************************************************************************
சேலம் ஜாமியா மஸ்ஜித்தில் முறைகேடா?

கொந்தளிக்கும் மீட்புக் குழுவினர்
'பொதுச் சொத்தில் இருந்து எவன் ஒருவன் தன் சுயநலத்துக்காக ஒரு ரூபாய் எடுத்தாலும், அவன் இறைவன் முன் பெரிய பாவி’ என்றார் நபிகள் நாயகம். ஆனால், சேலம் ஜாமியா மஸ்ஜித்துக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடிகளை முறையாக கணக்குக் காட்டாமல் முத்தவல்லிகள் கபளீகரம் செய்வதாக குமுறுகிறார்கள், ஜாமியா மஸ்ஜித் உரிமை மீட்புக் குழுவினர்!  
ஜாமியா மஸ்ஜித் உரிமை மீட்புக் குழுவின் தலைவர் நிசாருதீன் நம்மி டம் பேசினார். ''தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபு போர்டில், குறிப்பாக சேலம் வக்ஃபு போர்ட்டுக்குத்தான் சொத்து அதிகம். இங்குள்ள ஜாமியா மஸ்ஜித் மிகப் பழமையான மஸ்ஜித். இதற்குப் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றை நிர்வகிக்க மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி முத்தவல்லி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்படி 1999-ல் நடந்த தேர்தலில் முத்தவல்லியாக நாசர்கான் என்கிற அமான், துணை முத்தவல்லி காதர் உசேன், டிரஸ்டி நூருல்லாகான் போன்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள், ஜாமியா மஸ்ஜித் சொத்துக்களை விற்றும், வாடகையாகக் கிடைக்கும் லட்சக்கணக்கான தொகையையும் முறைகேடு செய்கிறார்கள்.
ஜாமியா மஸ்ஜித்துக்குச் சொந்தமாக சேலத்தில் மட்டும் 200 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கிறது. சில இடங்களில் கடைகளாகவும், வீடுகளாகவும், விளை நிலங்களாகவும் இருக்கின்றன. சில இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு உள்ளது. இதில் இருந்து மாதம்தோறும் பல லட்ச ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முறையான கணக்குகள் காட்டப்படுவதில்லை. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமே உறவு வைத்துக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
இவர்களின் பதவிக் காலம் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தாமல் 13 ஆண்டுகளாக இவர்களே ஜாமியா மஸ்ஜித்தின் முத்தவல்லிகளாக இருக்கிறார்கள். இவர்கள் தி.மு.க-வில் இருப்பதால், யார் கேட்டாலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள். ஆரம்பத்தில், வசதி குறைவாக இருந்த இவர்கள் இன்றோ பல நூறு கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள்'' என்றார் வேதனையாக.
ஜாமியா மஸ்ஜித்தின் உரிமை மீட்புக் குழு உறுப்பினர் பரித் அகமது, ''சேலத்தில் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய சமூகத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள். ஜாமியா மஸ்ஜித்தின் சொத்துக்களை முறையாகப் பராமரித்து ஏழை இஸ்லாமிய மக்களுக்கு உதவிகள் செய்தாலே, அவர்கள் நல்ல நிலையில் இருக்கலாம். ஜாமியா மஸ்ஜித் அருகில்கூட ஏகப்பட்ட இஸ்லாமியர்கள் பரிதாபமான நிலையில்தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு உதவிகள் செய்யாமல், அங்கு குடியிருப்பவர்களைக் காலி செய்ய சொல்லி விட்டு சூப்பர் மஹால் திட்டம் தீட்டுகிறார்கள். இறைவனின் பணத்தை யார் அபகரிக்க நினைத்தாலும் இறைவன் அவர்களைச் சும்மா விடமாட்டார்'' என்றார்.
இதற்கெல்லாம் விளக்கம் சொல்லும் ஜாமியா மஸ்ஜித்தின் முத்தவல்லி நாசர்கான், ''நான் ஜாமியாமஸ்ஜித் பொறுப்புகள் ஏற்ற பிறகுதான் சிறந்த முறையில் செயல்படுத்தி மிகப் பெரிய அளவில் பள்ளிவாசலை கட்டி முடித்திருக்கிறேன். என்னுடைய பீரியடுக்கு முன்பே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் என்று நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், நான் 1999 முதல் 2004 வரைதான் முத்தவல்லி. ஆனால், தேர்தலை நீதிமன்றம் நடத்துவதா? வக்ஃபு போர்டு நடத்துவதா? என்று வழக்கு நடக்கிறது. இந்த நிலையில், 'சேலத்தில் இருக்கும் அனைத்து பள்ளிவாசல்களையும் ஜாமியா மஸ்ஜித்தில் சேர்க்க வேண்டும்’ என ஒவ்வொரு பள்ளிவாசலின் சார் பாகவும் வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளது. இதனால்தான் தேர்தல் நடத்த தாமதம் ஆகிறது.
எனக்கு முன்பு 14 வருடங்கள் தேர்தல் நடை பெறவில்லை. அதற்கு முன்பு 18 ஆண்டுகள் தேர்தல் நடைபெறவில்லை. சேலத்தில் இருக்கும் அனைத்து சமூக மக்களுக்கும் என்னை நன்றாகத் தெரியும். நான் மதநல்லிணக்கத்தைப் பேணி வருகிறேன். எனக்குப் பதவி முக்கியம் இல்லை. முஸ்லிம் மக்களும் அனைத்து சமூக மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இவர்கள் என் மீது குற்றம் சொல்ல காரணம், ஜாமியா மஸ்ஜித்தின் வாடகை தாரர்கள் முறையாக வாடகை தராததைக் கேட்டதற்காகத்தான். இவர்கள் சொல்வதுபோல ஜாமியா மஸ்ஜித்துக்குச் சொந்தமான நிலங்களில் இஸ்லாமிய சமுதாயத் தினரை தவிர, மற்ற சமுதாயத்தினரும் பல வருடங்களாக குடியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் காலி செய்யச் சொல்லி மத நல்லிணக்கத்துக்கு விரோதமாக செயல் படுகிறார்கள்.
வக்ஃபு விதிமுறைப்படி ஒரு ரூபாய்கூட யாருக் கும் கொடுக்கக் கூடாது. ஏழை இஸ்லாமிய குழந்தை களின் கல்விக்கும், திருமணத்துக்கும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மஸ்ஜித்தில் இருந்து உதவிகள் செய்ய வக்ஃபு போர்டிடம் முறையிட்டிருக்கிறேன். ஜாமியா மஸ்ஜித்தின் செலவுகளுக்கும் சரியான கணக்குகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை  இழுப்பது மிகவும் பாவம்'' என்றார்.
சேலம் வக்ஃபு கண்காணிப்பாளர் பீர் முகமது விடம் பேசினோம். ''தற்போது வக்ஃபு போர்டே தேர்தலை நடத்தச் சொல்லி இருக்கிறது.  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் காரணமாக போர்டின் தலைவர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. கூடிய சீக்கிரம் தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகு  ஜாமியா மஸ்ஜித்துக்கு தேர்தல் நடத்தப்படும்'' என்றார்.
வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்
*********************************************************************************
கொட்டும் மழையில் ஈழ முழக்கம்!

பாதியில் முடிந்த கோவை மாநாடு!
ழத்துக்கு எதிராக இலங்கைதான் கோரமுகம் காட்டுகிறது என்றால், இயற்கையுமா வஞ்சனை செய்ய வேண்டும்? கோவையில் எழுச்சியுடன் நடத்தப்பட்ட 'ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மாநாடு’ அடித்து நொறுக்கிய மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது மாபெரும் சோகம்!
இனப் படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் ஈழ ஆதரவு அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து கோவை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 6-ம் தேதி, 'ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ ஒன்றை நடத்தினர். தூக்குக் கயிற்றை நோக்கியிருக்கும் மூன்று பேரை மீட்டெடுப்பதற்கான முயற்சியும் இந்த மாநாட்டின் மற்றொரு நோக்கம். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்க, 'செங்கொடி அரங்க’ மேடையில் எழுச்சியுடன் ஆரம்பமானது மாநாடு. அது மழை வரும் மாலைப்பொழுது என்பதைப் பொருட்படுத்தாமல் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர்.
பழ.நெடுமாறன் தன் சாந்தமான குரலில், ''லட்சக்கணக்கானோர் இனப் படுகொலையில் மாண்டது, இன்னும் பல ஆயிரக்கணக்கான மக்கள் அடிப்படை வாழ்வுரிமைகூட இல்லாமல் முகாம்களில் துன்புற்று வருவது எல்லாம் மாபெரும் துயரம். நம் தமிழர்களை மீட்டெடுப்பது நமது கடமை. அதேபோல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து 'மரண தண்டனை’ என்ற ஒன்றே தூக்கி எறியப்பட வேண்டும்'' என்று அழுத்தமாக சொன்னார்.
மைக்கை இறுகப்பற்றிய புதுக்கோட்டை பாவாணன் முகத்தில் அத்தனை ரௌத்திரம். ''காங்கிரஸை வளர்த்தது மகாத்மா காந்தி. அந்த மனிதர் 'யாரையும் தூக்கில் போடக் கூடாது’ என்று மனிதநேயம் பேசினார். ஆனால், அவர் வளர்த்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி மீது ஏறி அமர்ந்து சொகுசு சவாரி செய்யும் நீங்கள் ஏன் தூக்குத் தண்டனையை தூக்கிக்கொண்டு திரிகிறீர்கள்? யாரைப் பார்த்து 'கொலையாளி’ என்று கொக்கரிக்கிறீர்கள்? அன்று அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தவர்கள்  கொலையாளி அல்லவா? இன்று ஈழத்தில் யுத்தம் உச்சத்தில் இருந்தபோது வேடிக்கைப் பார்த்தபடி நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்தொழித்தவர்கள்  கொலையாளி அல்லவா? எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பேரறிவாளன், முருகன், சாந்தனின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அதே தினத்தில்தான், அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், அப்சலின் தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்காதவர்கள் எங்கள் பிள்ளைகளை சாகடிக்க மட்டும் நாள் குறித்தது என்ன நியாயம்? 'அப்சல் குருவை தூக்கில் போட்டால் காஷ்மீர் பற்றி எரியும்.’ என்று குலாம்நபி ஆசாத் பூச்சாண்டி காட்டினால் நடுங்குகிறீர்கள். எங்கள் பிள்ளைகளை சாவுக்கு தாரைவார்க்க வேண்டிய சூழல் வந்தால் நாங்கள் கைகட்டி நிற்போம் என்று நினைத்தாயோ? பொங்கி எழும் தமிழ்நாடு'' என்று அவர் முடித்தபோது கொட்டிக் கொண்டு இருந்தது மழை.
அடைமழையில்,  நாற்காலிகளையே குடையாகப் பிடித்தபடி 'வானம் வெறிக்கும்’ என்ற நம்பிக்கையில் நின்றது மொத்த கூட்டமும். அடுத்தடுத்து தலைவர் களும் பேச முயற்சித்தார்கள். ஆனால், மழையின் சீற்றம் அதிகரிக்க... மாநாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தலைவர்கள் இறங்கி நடக்க ஆரம்பித்ததும் மேடையின் முன்புறம் கூடிய இன உணர்வுமிகு இளைஞர்கள், 'அணுவும் இல்லை, ஆயுதமும் இல்லை... ஆனாலும் சிறை தகர்ப்போம்! மூவரை காப்போம்! தம்பியே ஓடிவா இந்தத் தம்பிகளைக் காக்கவா!’ என்று மழை மறையும் வரை விண் ணதிர குரல் கொடுத்தது நெகிழ்வான காட்சி.
மறுநாள் 'இதே கோவையில் மீண்டும் மாநாட்டை நடத்துவோம். இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், 2013-ல் இலங்கையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டை கனடா போல் இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் புறக்கணிக்க வேண்டும், இலங்கையில் விரிவாக மேற்கொள்ளப்படும் ராணுவ மயமாக்கல், சிங்களமயமாக்கல் போன்ற இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உலக சமுதாயம்'' போன்ற அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரான அர்ஜுன் சம்பத், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருக்கும் இந்து அமைப்புகளின் தலைவர்களை இலங்கை தமிழர்களைக் காக்கும் நோக்கில் ஒருங்கிணைத்து 'இலங்கை இந்து மக்கள் பாதுகாப்புப் பேரவை’ என்ற ஒன்றை விரைவில் மதுரையில் துவக்குகிறார். அவரிடம் பேசியபோது... ''இலங்கையில் தமிழ் என்கிற  இனம், மொழிக்கு எதிரான அட்டூழியங்கள் மட்டும் நடக்கவில்லை 'இந்து’ என்கிற ஒரு மதத்துக்கு எதிராகவும் நடக்கிறது. இலங்கையை ஆளும் நபர்களை கடந்த 60 ஆண்டுகளாக ஆட்டிவைப்பது அங்கிருக்கும் புத்த குருமார்கள்தான். சுமார் 1,400 இந்து சமய கோயில்கள் அழிக்கப்பட்டு உள்ளன. எனவே, இலங்கை வாழ் தமிழர்களாகிய இந்துக்களை காக்கத்தான் இந்த முயற்சி. அதற்காக அங்கிருக்கும் தமிழர்களாகிய கிறிஸ்தவ மக்கள், இஸ்லாமியர்களின் நலனில் எங்களுக்கு அக்கறை இல்லை என்று தனிச் சாயம் பூச வேண்டாம்'' என்கிறார்.
எஸ்.ஷக்தி
படங்கள்: வி.ராஜேஷ்,
மகா.தமிழ்பிரபாகரன்
*********************************************************************************
அழகப்பச் செட்டியாருக்கு அவமரியாதை?

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சர்ச்சை
'கோடி கொடுத்த கொடைஞன்; கல்விக்காக தனது வீட்டையும் கொடுத்த வள்ளல்’ என்பது உள்பட அழகப்ப செட்டியாருக்கு  பல  புகழாரங்கள் உண்டு. காரைக்குடியில் அவரது பெயரைத் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த 24-வது பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அவரது படத்தை இருட்டடிப்பு செய்ததாக இப்போது சர்ச்சை வெடித்திருக்கிறது!
காரைக்குடியை கல்விக்குடியாக்கிய பெருமை அழகப்ப செட்டியாரையே சேரும். சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைந்திருக்கும் அழகப்பர் கல்வி நிறுவனங்களில், ப்ரீ கே.ஜி முதல் மாஸ்டர் டிகிரி வரை படிக்கலாம். பள்ளிக்கூடங்கள் தவிர மற்ற அனைத்துக் கல்லூரிகளையும் எந்தப் பிரதிபலனும் இல்லாமல் அரசுக்கு எழுதிக் கொடுத்தவர். இந்தக் கல்லூரிகளைத்தான் 25 வருடங்களுக்கு முன்பு அழகப்பா பல்கலைக்கழகமாக மாற்றி பெருமை சேர்த்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தனி மனிதராக இருந்து இப்படி கல்விக்காக அளப்பெரிய சேவைகளை செய்த அழகப்பரின் படத்தை காரைக்குடி பகுதியில் உள்ளவர்கள் தங்களது வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மாட்டி வைத்து, கடவுளாகவே வழிபட்டு வருவதை இன்றைக்கும் பார்க்கலாம். அப்படிப்பட்டவரின் படத்தை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் போடாமல் விட்டால் சும்மா இருப்பார்களா?
நம்மிடம் ஆதங்கத்துடன் பேசிய சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் பழனியப்பன், ''வள்ளல் பெருந்தகை அழகப்ப செட் டியார், பி.எட். கல்லூரிக்குக் கட்டடம் இல்லை என்ற போது, தான் வசித்த வீட்டையே கொடுத்துவிட்டு வெளியேறியவர். கடந்த காலங்களில் பல்கலைக்கழக முகப்பில் அமைந்திருக்கும் அழகப்பரின் சிலையும் சேர்த்து எடுக்கப்பட்ட போட்டோவைத்தான் அழைப்பிதழ்களில் போட்டார்கள். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு வெள்ளி விழா ஆண்டு என்பதாலும், அதற்கு முந்தைய ஆண்டு அழகப்ப செட்டியார் நூற்றாண்டு விழா ஆண்டு என்பதாலும் அழைப்பிதழ்களில் அவரது சிலையுடன் படத்தையும் ஸ்பெஷலாக போட்டிருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு எதிலுமே அழகப்பர் படமும் இல்லை; சிலையும் இல்லை. இப்படி திட்டமிட்டு அவரது படத்தை இருட்டடிப்பு செய்வதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஒரு நிறுவனம் அதை உருவாக்கிய நிறுவனரின் பெயரையும் புகழையும் கால் நூற்றாண்டுக்குள்ளாகவே மறைக்கப் பார்ப்பது கொடுமை இல்லையா? இது குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் முன்கூட்டியே கேள்வி எழுப்பி தவறை திருத்தி இருக்க வேண்டும். அழகப்பரை அவமரியாதை செய்திருக்கும் இந்த விஷமத்தனத்தை கண்டித்து மக்களைத் திரட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அத்துடன், ஆளுநர் ரோசய்யா மற்றும் தமிழக முதல்வருக்கு தந்திகளை அனுப்புவோம்'' என்று படபடத்தார்.
''அழகப்பர் சிலையும் இருப்பதுபோல்தான் முதலில் அழைப்பிதழை ரெடி பண்ணினார்கள். ஆனால், அந்த அழைப்பிதழின் மாதிரி கவர்னர் அலுவலகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு திரும்பி வந்தபோது அழகப்பரின் சிலையை அடித்து அனுப்பி இருந்தார்கள். அதன் பிறகுதான் சிலை இல்லாமல் புதிதாக அழைப்பிதழ் ரெடியானது'' என்று பல்கலைக்கழகத்துக்குளேயே சிலர் முணுமுணுக்கிறார்கள்.
அழகப்பர் படம் இல்லாத அழைப்பிதழை பார்த்துவிட்டு குமுறிய அழகப்ப செட்டியாரின் மகளும்பல்கலைக்கழகத்தின் ஆயுட்கால சிண்டிகேட் உறுப்பினருமான உமையாள் ராமநாதன், 'எங்க அப்பச்சி படத்தை போடாமல் அழைப்பிதழ் அடிச்சிருக்கீங்க... இன்னிக்கி நீங்க சாப்பிடுற சாப்பாடு எங்க அப்பச்சியோடதுனு மறந்துடா தீங்க. படம் போடாததுக்கான காரணத்தை நீங்க சொல்லியே ஆகணும்’ என்று துணை வேந்தர் சுடலைமுத்துவை கண்டித்ததாக சொல்கிறார்கள். மன வருத்தத்துடன் இருந்த உமையாள் ராமநாதன் பட்டமளிப்பு விழாவுக்கு வருவாரா என்பதுகூட கடைசி வரைக்கும் சஸ்பென்ஸாகவே இருந்தது. விழா மேடையில்முன்வரிசையில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததையும் பார்த்துவிட்டு ஆதங்கப்பட்ட அழகப்பர் விசுவாசிகள், ''புரொட்டாகால் காரணத்தைச் சொல்லிச் சொல்லியே கொஞ்சம் கொஞ்சமா ஆச்சியை வெளியே அனுப்பிருவாங்க போலிருக்கு'' என்றார்கள்.
பட்டமளிப்பு விழா முடிந்து சென்னைக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்த உமையாள் ராமநாதனை சந்தித்தபோது, உணர்ச்சிப் பிழம்பாக, ''எங்க அப்பச்சியோட படத்தை ஏன் போடலைனு என்னென்னமோ காரணம் சொன்னாங்க. படம் போட்டு புதிதாக நூத்தம்பது பத்திரிகை அடிச்சுக் கொடுக்குறதா துணை வேந்தர் சொன்னார். கடைசி வரைக்கும் அதையும் கொடுக்கலை. கேட்டா, 'அவகாசம் போதலை’னு சொல்றார். இந்த விஷயத்தில் நாங்கள் மட்டுமல்ல... அழகப்பரை நேசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் வருத்தத்தில் இருக்கு. எதிர்காலத்தில் இதுமாதிரி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை கட்டாயம் செய்வோம்'' என்றார்.
துணை வேந்தர் சுடலைமுத்துவிடம் பேசியபோது, ''வள்ளல் அழகப்பரை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். நான் துணை வேந்தராக வந்ததில் இருந்து, அவருக்காக பாடப்பட்ட வள்ளல் வாழ்த்துப் பாடலை தினமும் காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்தில் ஒலிக்கச் செய்திருக்கிறேன். அழைப்பிதழ் விவகாரம் கவனக் குறைவால் நடந்த தவறுதானே தவிர, இதில் யாருக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை'' என்று சொன்னவர், கவர்னர் அலுவலக வழிகாட்டுதல்படியே அழகப்பரின் படத்தை போடாமல்விட்டதாக சொல்லப்படுவதையும் திட்டவட்டமாக மறுத்தார்.
ஆயிரம் சொன்னாலும் அழகப்பர் விசுவாசி களின் ஆத்திரம் இப்போதைக்கு தனியாது போலிருக் கிறது!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்           
*********************************************************************************
சாதி பார்க்கிறார்களா பேராசிரியர்கள்?

மேலூர் அரசுக் கல்லூரி பரபரப்பு
துரை மாவட்டத்தின் மிகப் பெரிய தாலுக்கா வான மேலூர் வட்டாரத்தில், ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு என்று ஓர் அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. இங்கு  ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டதாக அய்யனார், சுகதேவ், சிவகுருநாதன், சக்தி, ஆண்டி ஆகிய ஐந்து ஆதிதிராவிட மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படவே, விவகாரம் பற்றி எரிகிறது.
'எங்க காலேஜ்ல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகம் படிக்கிறதால, உயர் சாதி மாணவர்களுக்கு ஆதரவா சில பேராசிரி யர்களே செயல்படுவாங்க. 2009-ம் ஆண்டில் பி.ஏ. வரலாறு மாணவர்களுக்கு பாலாஜி என்ற பேராசிரியர் அம்பேத்கர், பெரியார் பற்றிய பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சில மாணவர்கள், 'அம்பேத்கரைப் பத்தியெல்லாம் எதுக்கு பாடம் நடத்துறீங்க’ன்னு பிரச்னை செய்து, பாதியில் நிறுத்த வைச்சிட்டாங்க. உடனே நானும், மற்ற தாழ்த்தப்பட்ட பசங்களும் அந்தச் சம்பவத்தைக் கண்டிச்சி போஸ்டர் ஒட்டுனோம். அதை அந்தப் பசங்க கிழிச்சிப் போட்டாங்க. 'ஏண்டா கிழிச்சீங்க?’ன்னு கேட்டதுக்கு, நாங்க அவங்கள கெட்ட வார்த்தையால திட்டி, அடிச்சதா பொய்ப்புகார் கொடுத்தாங்க. முழுசா விசாரிக்காம என்னையையும் இன்னும் 4 பசங்களையும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. ஆனா, அந்தத் தரப்புல ஒரு பையன் மேல கூட ஒழுங்கு நடவடிக்கை எடுக் கலை' என்றார் எம்.ஏ. மாணவரான அய்யனார்.
மாணவர் சக்தி, 'கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த கல்லூரி ஆண்டுவிழாவில், உயர்சாதி மாணவர்கள் சிலர் சினிமாவில் வரும் சாதிப் பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். கீழே இருந்த அவர்கள் சாதிமாணவர்களும் எழுந்து ஆடியதோடு நில்லாமல் சாதி ரீதியாக கோஷம் போட்டார்கள். உடனே நாங்கள், அந்தப் பாட்டை நிறுத்தச் சொல்லி விழா கமிட்டியில் இருந்த பேராசிரியர்களிடம் புகார் சொன்னோம். அதற்கு அவர்கள், 'நீங்க வேணுமின்னா உங்க சாதிப் பாட்டைப் போட்டுக்கோங்க, யாரு வேணாம்னு சொன்னா’ என்றார் கள். அதையும் சேர்த்து, பிரின்ஸிபல் காளிமுத்து விடம் புகார் செய்தோம். அதற்குள் செமஸ்டர் லீவு வந்தது. அவரும் டிரான்ஸ்ஃபர் ஆகி விட்டதால், நடவடிக்கை எதுவும் இல்லை' என்றார்.
மற்றொரு மாணவரான ஆண்டி, 'காலேஜ்ல குடிக்க நல்ல தண்ணி கிடையாது. லைட், ஃபேன்களும் இல்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகளுக்கான போராட்டங்களில் முதுகலை மாணவர்கள் என்கிற முறையில் நான், அய்யனார், சிவகுருநாதன் 3 பேரும் முன்னே நிப்போம். அதனால அந்தப் பேராசிரியர்களுக்கு எங்க மேல செம கடுப்பு. புதுசா வந்த பிரின்ஸிபல் மேடத்துக்கு கல்லூரியில் இதுவரை நடந்த பிரச்னைகளும், பேராசிரி யர்களின் சாதி மனோபாவமும் முழுசாத் தெரியாது. அதைப் பயன்படுத்திக்கிட்டு கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு என்ற பெயரில் மனோகரன் உள்ளிட்ட ஐந்து பேராசிரியர்கள் எங்களை கட்டம் கட்டிட்டாங்க' என்றார் வேதனையாக.
மாணவர் சுகதேவின் தந்தை நாகேந்திரனோ, 'சஸ்பெண்டான அன்னிக்கே காலேஜ் கொடுத்ததண்டனையைவிட அதிக தண்டனையே நான் என் மகனுக்குக் கொடுத்துட்டேன். அப்போது, 'உங்க பையனை ஏன் நிரந்தரமாக நீக்கக் கூடாது?’ன்னு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்தது. உடனே பதறியடிச்சிக்கிட்டு காலேஜுக்குப் போனோம். மற்ற பசங்களும், அவங்களோட பெற்றோரும் வந்திருந் தாங்க. பசங்க தண்ணியடிச்சாங்க, பிள்ளைங்கள கிண்டல் பண்ணுனாங்க, பேராசிரியர்களை திட்டு னாங்கன்னு பேராசிரியர்கள் எழுதி ரெடியா வைச் சிருந்தாங்க. 'படித்துப் பார்த்தேன் சரி’ என்று ஐந்து பேரும் ஒப்புதல் கையெழுத்துப் போட்டால்தான் சேர்ப்போம்ன்னு சொன்னாங்க. அவங்களோட சதி புரியாம கையெழுத்துப் போட்டதும், டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. இது எந்த விதத்துல நியாயம்?' என்றார் கவலையாக.
இதுபற்றி கல்லூரி முதல்வர் ரூபலா ஜூலியட்டிடம் கேட்டபோது, 'அந்த மாணவர்கள் சொல்வது எல்லாம் பொய். டிஸ்மிஸ் செய்யப்பட்டதுக்கு எதிராக அவர்கள் வழக்குப் போட்டு இருக்கிறார்கள். இந்தப் பிரச்னை கோர்ட்டில் இருப்பதால் வேறு எதுவும் சொல்ல முடியாது' என்றார்.
'இருபாலர் அரசுக் கல்லூரியில் வேலை பார்க்கிறது ரொம்ப கஷ்டம். ஹீரோயிசம் காட்டுறதுக்காக பசங்க எங்களைப் பண்ற கேலியும் கிண்டலும் கொஞ்சம் நஞ்சமல்ல. மொத்தம் 2,000 பேர் படிக்கிறாங்க. ஒருசில பசங்கதான் மற்ற பசங்களையும் கெடுக்கிறாங்க. அடிக்கடி ஸ்டிரைக் பண்றது அது இதுன்னு ரகளை பண்ணிக்கிட்டே இருந்தாங்க. கல்லூரி நலனுக்காக எல்லா துறையின் தலைவர்களும் சேர்ந்து ஒரு ஆலோசனைக் கமிட்டியைப் போட்டு எடுத்த முடிவு இது. பேராசியர்கள் சாதி பார்க்கிறதாச் சொல்றது முழுப் பொய். அப்படிப் பார்த்திருந்தா, ஏற்கெனவே இளங்கலை படிச்சப்ப சாதி மோதலில் ஈடுபட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவரான அய்யனாருக்கு எம்.ஏ. படிப்பில் இடம் கொடுத்திருப்போமா? அந்த மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுத்த பிறகு கல்லூரி அமைதிப் பூங்காவாக மாறிவிட்டது. பயமின்றி வகுப்பறைக்குப் போகிறோம்' என்கிறார்கள் சில பேராசிரியர்கள்.
மாணவர்களோ, 'என்னதான் இருந்தாலும், டிஸ்மிஸ் என்பது ரொம்ப ஓவர். அந்தப் பசங்களோட எதிர்காலம் என்ன ஆகும்னு பேராசிரியர்கள் கொஞ்சம் யோசிக்கணும்'' என்கிறார்கள்.
கே.கே.மகேஷ்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
*********************************************************************************
'கைதுப் படலம் முடியவில்லை!'

பிரகடனம் செய்த ஜெ. பீதியில் தி.மு.க.!
புதிய ஆட்சி அமைந்து முதல் தடவையாகக் கூடியது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு. புதிய முதல் வரைச் சந்திக்கப்போகிறோம் என்ற பதற்றமும் உற்சாகமுமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வந்திருந்தார்கள். கடந்த 13, 14 தேதிகளில் நடந்த மாநாடு, வரும் ஐந்து ஆண்டு காலம் ஆட்சியின் போக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு அடையாளமாக இருந்தது!
''மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் லஞ்சம் பெறுவதோ முறைகேடுகளோ இருக்கக் கூடாது'' என்று தீர்க்கமான குரலில் முதல்வர் ஜெயலலிதா தனது முன்னுரையில் சொன்னார். பல்வேறு விஷயங்களைப் பேசினாலும் அவர் குறிப்பால் உணர்த்த நினைத்தது, தடங்கல் இல்லாத நிர்வாகம்தான்!
இன்று தமிழகத்தைக் கலக்கிக்கொண்டு இருக்கும் நில அபகரிப்புக் கைதுகள் தொடர்பாக, தனது நடவடிக்கைகளை பட்டவர்த்தனமாக முதல்வர் சொல்லியது பல அதிகாரிகளுக்கே திகிலைக் கொடுத்தது!
''தமிழகத்தில் நில அபகரிப்பாளர்கள் மீதான நடவடிக்கை தொடரும்...'' என்று சொன்ன முதல்வர் இது தொடர்பான சில டெக்னிக்கல் விளக்கங் களையும் சொன்னாராம்.
கைதான சிலர் உடனடியாக வெளியே வந்து விடுவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பில் ஈடுபட்டுக் கைதாகிறவர்கள், தற்போதைய நடைமுறைச் சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளைப் பயன்படுத்தித் தப்பிச் செல்கிறார்கள். சட்டத்தில் இருக்கும் சாதக அம்சங்களை வைத்து சில மாதங்களில் ரிலீஸ் ஆகிவிடுகிறார்கள். இதற்காகக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ள பிரிவில் சிறு திருத்தம் கொண்டுவர வேண்டும். தமிழக போலீஸ் துறையின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை சேலம் போலீஸ் கமிஷனர் மாஹாளி, மாநாட்டில் முதல்வரிடம் சொன்னாராம்.
''குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள சட்டப் பிரிவுகளில் குடிசைப் பகுதி நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லி வழக்கு போட வேண்டிருக்கிறது. இதையே நில அபகரிப்பு என்று பொதுவாகத் திருத்தம் செய்தால், எங்களுக்கு உதவியாக இருக்கும். இதேபோல், மிகப் பெரியக் குற்றச் செயல்களில் யாராவது ஈடுபட்டால், உடனே அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயிலில் போட நினைக்கிறோம். ஆனால், இங்கேயும் சட்டச் சிக்கல். அந்த நபர் தொடர் குற்றங்களைச் செய்வது வருவராக இருந்தால் மட்டுமே, அதாவது, ஹேபிச்சுவல் அஃபெண்டர் (லீணீதீவீtuணீறீ ஷீயீயீமீஸீபீமீக்ஷீ) என்று போலீஸ் ரெக்கார்டுகளில் ஏற்கெனவே இருந்தால் மட்டுமே, குண்டர் தடுப்புச் சட்டத்தில் போட முடிகிறது. இதிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும்'' என்றார்.
உடனே முதல்வர் சட்டத் துறை செயலாளரிடம், ''இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?'’ என்று கேட்டார். அவர் சொன்ன விளக்கத்தைப் புரிந்து கொண்டு, ''தேவைப்பட்டால் ஆலோசனை செய்து மாஹாளி சொல்கிற மாற்றங்களைக் கொண்டுவாருங்கள்'’ என்று உத்தரவிட்டார். இதைக் கேட்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் முகங்களில் மகிழ்ச்சி ரேகை பரவியது. அப்போது சில போலீஸ் அதிகாரிகள் அருகில் இருந்த சக அதிகாரிகளிடம்,  ''பெரும்பாலான வழக்குகளில் சரியாக வாதாடத் தெரியாமல் குழப்புகிறவர் தமிழக அரசின் சட்டத் துறையின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அவரிடம் எவ்வளவுதான் ஆதாரங்களை எடுத்துக் கொடுத்தாலும், அவர் அதை சட்டை செய்வதில்லை. டாஸ்மாக் துறைக்கு எதிராகத் தனியார் ஒருவரால் தொடரப்பட்ட சிறு வழக்கில் தேவை இல்லாமல் இவரே நேரில் ஆஜராகி ஆதாரங்களை எடுத்துவைக்காமல் விட்டதன் விளைவு வழக்கு தோற்றுவிட்டது. அவரை மாற்றி வேறு யாரைப் போட்டாலும் சந்தோஷம்'' என்று பேசிக்கொண்டார்களாம்.
ராமநாதபுர மாவட்ட கலெக்டர் அருண் ராய் பேசும்போது, '' எங்கள் மாவட்டத்தில்  1993-ம் ஆண்டு முதல் ஒர் உத்தரவு அமலில் இருக்கிறது. இங்கே மீனவ படகுகளுக்கு ஒரு நாள் காலக்கெடுவுடன் மீன் பிடிக்க டோக்கன் கொடுக்கப்படுகிறது. அதனால், முழுமையாக மீன் பிடிக்க நேரம் இல்லாமல் அவசரக்கோலத்தில் கரைக்குத் திரும்புகிறார்கள். இதனால் மீனவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். முன்பு உத்தரவு போடப்பட்டபோது, விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருந்தது.  இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆனால், அந்த உத்தரவு மட்டும் அப்படியே இருக்கிறது'' என்று குறிப்பிட, அதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட முதல்வர் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரியிடம் விசாரித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய சொன்னார்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பேசும்போது, ''2002-ல் நக்சலைட் நடமாட்டம் இருந்தது. அதன் பிறகு இல்லை'' என்று பேசிக்கொண்டே போக, முதல்வர் ஜெயலலிதாவின் முகம் மாறியது. ஏனென்றால், 2002-ல் முதல்வராக இருந்தவரும் இவர்தான். அந்த எஸ்.பி-யிடம், ''ஏன் 2007, 08, 09 - ம் ஆண்டுகளில்கூட நக்சலைட் நடமாட்டம் இருந்ததாக நோட்டீஸில் பார்த்தேனே? நீங்கள் அதைச் சொல்லவில்லையே...'' என்று கேட்க... அந்த எஸ்.பி. கொஞ்சம் தயங்கி. ''அந்தப் பகுதிகள் தர்மபுரி மாவட்டத்தில் வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை'’ என்று சொல்லவும் அமைதியானார் முதல்வர்.
''நில அபகரிப்புப் புகார்கள் அதிகம் பதிவாகின்றன. அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. நில அபகரிப்புப் புகார் பிரிவை இன்னும் செம்மைபடுத்த வேண்டும்'' என்று பெரும்பாலானவர்கள் பேசினார்கள்.
''நில அபகரிப்புப் புகாரில் இரண்டு தரப்பையும் தீர விசாரித்த பிறகே உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். வழக்கு போடுவதோடு முடிந்து விடாமல் தண்டனை வாங்கிக் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்கும்போது இந்த ஆட்சியின் மீது மக்களின் நம்பிக்கை அதிகமாகும்'' என்று பதில் சொன்னார் ஜெயலலிதா.
''போலீஸ் அதிகாரிகள் தங்களுக்கு வரும் உளவுத் தகவல்களை கலெக்டர்களுடன் பகிர்ந்துகொண்டு முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கை மேற் கொண்டாலே, மாவட்டங்களில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளைச் சமாளித்துவிடலாம்'' என்று இடையில் யோசனை தெரிவித்தார் ஜெயலலிதா.
கடலோர மாவட்டங்களில் இருக்கும் கலெக்டர் கள், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் காணாமல் போவது பற்றியும் இலங்கை கடற்படையால் தாக்கு தலுக்கு உள்ளாவது பற்றியும் குறிப்பிட்டார்கள். ''இப்படி அடிக்கடி ஏற்படும் மீனவப் பிரச்னையால் இப்போது பாதிப்பு இல்லை என்றாலும், வரும் காலங்களில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக உருவெடுக்கலாம். அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். நமது கடலோரப் பாதுகாப்பு படையில் போதுமான அளவுக்கு ரோந்து படகுகள், நவீன கருவிகள் போன்ற வசதிகள் இல்லை. மீனவர்களைத் தேடும் பணியை கடற்படை மட்டுமே செய்வதால், தொய்வு ஏற்படுகிறது. காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு தரும் நிதியில் ஹெலிகாப்டர் போன்றவற்றை நாம் வாங்கலாம்.'' என்று யோசனை தெரிவித்தார்கள். ''அதற்கான நிதி இப்போது நம்மிடம் இல்லை. தேவை ஏற்பட்டால், ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளுங்கள்'' என்றார் ஜெயலலிதா. மாநாட்டின் முடிவில் இதுவே அறிவிப்பாக வெளியானது.
கலெக்டர்கள், எஸ்.பி-கள் மாநாட்டின் முதல் நாளான 13-ம் தேதி முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனைவருக்குமான பொதுவான கூட்டமாக இருந்தது. 14-ம் தேதியன்று காலையில் கலெக்டர்கள், அனைத்துத் துறைச் செயலாளர்கள் கூட்டமும், மதியத்துக்கு மேல் போலீஸ் அதிகாரிகள் கூட்டமும் நடந்தது. இரு நாட்களும் கோட்டையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்ட முதல்வர், முக்கால் மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள், எப்போதும் இல்லாதவாறு மிகவும் கடுமையாக இருந்தன. கோட்டைக்கு உள்ளேயே இருக்கும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவுகூட இல்லாத மாநாட்டுக் கூட்டம் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு, ஜெயலலிதா வந்தபோது எல்லாம் இரு மருங்கிலும் ஓவர் அலெர்ட் காட்டினர். முதல் நாள் ஞாயிறன்று தலைமைச் செயலக ஊழியர்கள் யாரும் வராததால், அவர்கள் தப்பித்தார்கள். மறு நாள் காலையில் வழக்கம்போல, 10 மணி அளவில் எல்லா ஊழியர்களும் வரும்போது, 'முதல்வர் வருகிறார்’ என்று சொல்லி, ஊழியர்களின் நுழைவாயிலை போலீஸார் தடுக்க, பதற்றம் ஏற்பட்டது.
  வழக்கமாக இது போன்ற மாநாடுகளில் அனைத்துப் புகைப்படக்காரர்களும் சில நிமிடங்களாவது படம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இம்முறை குறிப்பிட்ட சில பத்திரிகைகளின் போட்டோ கிராபர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. முதல்வரின் அறிமுக உரையின்போது எப்போதும் நிருபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் இம்முறை அனுமதிக்கப்படவில்லை.
இன்னமும் நில அபகரிப்பு தொடர்பாக ஜெயலலிதா காட்டிவரும் தீவிரம் தி.மு.க. புள்ளி களுக்கு பீதியைக் கிளப்பி இருக்கிறதாம்.
- சூர்யா, எம்.பரக்கத் அலி, இரா.தமிழ்கனல்
அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்
*********************************************************************************
சிதம்பரத்துக்காக காத்திருக்கும் ஆ.ராசா?

தொடங்கியது ஸ்பெக்ட்ரம் விசாரணை
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் எஃப்.ஐ.ஆர்., விசாரணை, கைது, குற்றப்பத்திரிகை, குற்றப்பதிவு, ஜாமீன் மறுப்பு போன்ற நிலைகளைக் கடந்து, கடந்த 11-ம் தேதி நீதிமன்ற விசாரணை டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கு எதிராக வைக்கப் படும் ஆவணங்கள் மற்றும் நேரில் பார்த்த சில காட்சிகளுக்காகவும், 154 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதில் பல வி.ஐ.பி. சாட்சிகளும் அடக்கம். இது தவிர குற்றம் சாட்டப்பட்டவர்களும் பல ஆவணங்களையும் சாட்சியங்களையும் நிறுத்தலாம். இந்த மாதத்தில் மட்டும் 28 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஆ.ராசா எடுத்த எடுப்பிலேயே சாட்சிகள் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடவந்தார். அவரது சார்பில் வழக்கறிஞர்கள் பாலாஜி சுப்பிரமணியம் மற்றும் மனுசர்மா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வழக்கில் விசாரணை முழுமையாக முடிந்த பின்னர்தான் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் குற்றப் பதிவு செய்யப்பட்ட பின்னரும், இந்த வழக்கில் விசாரணை முடியவில்லை. இது சட்டத்திற்குப் புறம்பானது’ என்று சொல்லி இருந்தனர்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக (பி.சி.எல்.) வழக்கறிஞரான பாலாஜி சுப்பிரமணியம், சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசாவின் அட்வகேட் - ஆன் - ரிக்கார்டு. இவர் சார்பில் ஆ.ராசாவுக்காக வாதாட நியமிக்கப்பட்டு இருப்பவர்தான், மூத்த வழக்கறிஞர் சுசில் குமார். அவர், ''ஒரு பக்கம் சி.பி.ஐ. வழக்கு விசாரணை முடியவில்லை என்கிறது. ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பெற்ற மற்ற லூப் டெலிகாம் போன்ற நிறுவனங்கள் மீது விசாரணை தொடர்வதாகச் சொல்கிறது. அந்தக் குற்றச்சாட்டுகளும், குற்றப் பத்திரிகைகளும் வரும் நிலையில் இந்த வழக்கு முற்றுப் பெறாத நிலையில் இருக்கிறது. இந்த சமயத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடப்பது எப்படி? குற்றவியல் நடைமுறைப் பிரிவு 173-ன்படி புலன் விசாரணை முற்றுப் பெற்ற பின்னர்தான் இந்த சம்பிரதாயங்கள் தொடங்க வேண்டும்'' என்றார். ஆனால், இதனை நீதிபதி சைனி ஏற்கவில்லை. அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
முதல் நாள் மூன்று சாட்சிகளிடம் விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சாட்சியிடம்தான் முழு விசாரணை நடந்தது. பவர் கட் ஏற்பட்டதால், இன்வெர்ட்டர் மூலம் லைட்கள், மின் விசிறிகள் இயங்கியதால் ஏக இரைச்சல். என்ன பேசுகிறார்கள் என்பது புரியாமல், பத்திரிகையாளர்களும் வழக்கறிஞர்களும் திணறி னார்கள். அடிக்கடி மின் விசிறியை ஆஃப் செய்து, கேட்க வேண்டிய அளவுக்கு நிலைமை இருந்தது.
முதல் சாட்சியாக வந்தவர் ஆனந்த் சுப்பிரமணியம். மும்பைக்காரான சுப்பிரமணியம், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தொடங்கப்பட்ட கதையைக் கூற, இவர் வந்தார். ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் நிதி சுமார்  900 கோடி வரை 2007 மே, ஜூன் மாதங்களில் ஸ்வான் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டது. இதற்கான நான்கு காசோலைகளில் இவரும் இவரோடு பணியாற்றிய மற்றொருவரும் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். இவர்களிடம், 'ஸ்வான் நிறுவனத்தின் கணக்கு யாருடைய உத்தரவால் தொடங்கப்பட்டது? பணத்தைக் கொடுக்கச் சொன்னது யார்?’ என்று குறுக்கு விசாரணையில் கேட்கப்பட்டது.
ஆனந்த் சுப்பிரமணியத்தைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டெல்லிப் பொது மேலாளர் சேதுராமன் இரண்டாவது சாட்சியாக ஆஜரானார். தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் நீண்ட வருடங்களாக அம்பானிகளோடு இருப்பவர். ஸ்வான் டெலிகாம் உரிமங்களுக்கான விண்ணப்பத்தில் இவர் கையெழுத்து போட்டு இருப்பதால், சாட்சியாக இவர் விசாரிக்கப்பட்டார். இவரும், 'நான் ஸ்வான் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டது உண்மை. ஆனால் ரிலையன்ஸுக்கு அந்த டெலிகாம் வட்டங்களில் உரிமம் இருந்ததா என்பது தெரியாது’ என்றார். முதல் நாள் அரைகுறையாக விசாரிக்கப்பட்ட இவர், கடந்த 14-ம் தேதி மீண்டும் சாட்சியம் அளிக்க வந்தார். அன்றைய தினமும் இவரிடம் மட்டுமே முழு விசாரணை நடைபெற்றது. அதனால், மூன்றாவது சாட்சியாக அழைக்கப்பட்டு இருந்த டி.பி. எடிஸலாட் நிறுவன அதிகாரி வினோத் குமார் புத்திராஜ் இரண்டு நாட்களிலும் விசாரிக்கப்படவில்லை.
ஆ.ராசா சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை மறுப்பதற்கு, ப.சிதம்பரம் விவகாரத்தையே காரணமாகச் சொல்கிறார்கள். சுப்ரீம் கோர்ட், சிதம்பரத்திடம் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடுமா, இல்லையா என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரே, வழக்கை எப்படிக் கொண்டுசெல்வது என்று முடிவு எடுக்க இருக்கிறதாம் ராசா தரப்பு. அதனால்தான் விசாரணையைத் தள்ளிப்போடவும் முயற்சி செய்தார்கள்.
  நீரா ராடியா, ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பா ராவ், தயாளு அம்மாள் ஆகியோர் விரைவில் சாட்சியம் அளிக்க வர இருப்பதால், ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
சரோஜ் கண்பத்
படங்கள்: சிவராம கிருஷ்ணன்
*********************************************************************************
எந்த சீமான் வந்தாலும் காங்கிரஸை அசைக்க முடியாது!

துள்ளலுடன் தொடங்கும் ஞானதேசிகன்!
ருவழியாக தங்கபாலு நீக்​கப்பட்டு, தமிழ்நாடு காங்​கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக நியமனம் செய்யப்​பட்டு இருக்கிறார் ஞானதேசிகன். ஜி.கே.வா​சனின் தீவிர ஆதரவாளர். சால்வை, பூங்கொத்து, வாழ்த்துக்களில் திளைத்துக்​கொண்டு இருந்தவரை ஆழ்வார்​பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.
 ''தேர்தல் மூலம் தேர்வு செய்யாமல், நியமன முறையில் தலைவரை அமர்த்​தும் கலாசாரம் உங்கள் கட்சியில் எப்​போது ஒழியும்?''
''இப்போதும் பல மாநிலங்களில் தேர்தல் மூலமே நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்​படுகிறார்கள். கட்சித் தேர்தலை நடத்துவதற்கு என்றே, தனி அமைப்பைக் கட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறோம். இதற்காக கட்சியின் விதிகளில் மாற்​றமும் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒரு சில காரணங்களால் தேர்தல் நடத்த முடியவில்லை. விரைவில் இங்கும் மாற்றம் வரும்.'' 
''உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸைக் கழற்றி​விட்டு தி.மு.க. தனித்துப் போட்டி​யிட்டது. இது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸோடு தி.மு.க-வுக்கு உரசல்கள் இருப்பதைத்​தானே காட்டுகிறது?''
''மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. அது இப்போதும் தொடர்கிறது. இதற்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் தொடர்பே இல்லை. சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நடக்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் காங்கிரஸ் அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. கனிமொழிக்கு ஜாமீன் கொடுப்பதுபற்றி நீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும். இந்த விஷயத்தில் மத்திய அரசு எதுவுமே செய்ய முடியாது.''
''எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் ஜெயலலிதா​வைச் சந்தித்தது கிடையாது. ஆனால், உங்கள் மகன் திருமணத்தை முன்னிட்டு இரண்டு மாதங்கள் முன்பு அவரை நீங்கள் சந்தித்தீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வதற்கு வசதியாகத்தான் உங்களை நியமனம் செய்திருப்பதாகப் பேசப்படுகிறதே?''
''என் நியமனத்துக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமே இல்லை. விருப்பமானவர்களுக்கு திருமணப் பத்திரிகை கொடுப்பது, அரசியலைத் தாண்டிய விஷயம். அது என் தனிப்பட்ட விருப்பம். இதில் அரசியலைக் கலக்க கூடாது. தமிழகத்தில் எல்லா விஷயங்களையும் அரசியலோடு முடிச்சுப் போடுவது வாடிக்கையாகிவிட்டது. அறிவாலயத்திற்குப் போய் கலைஞரை சந்தித்தால், உடனே தி.மு.க. ஆதரவாளர் என்று முத்திரை குத்துகிறார்கள். எல்லாவற்றையும் அரசியல் கண் கொண்டு பார்க்கும் நிலை தமிழகத்தில் மாற வேண்டும்.''
''ஜெயலலிதாவை சந்திக்க யாருக்குமே வாய்ப்பு கிடைக்காதபோது, உங்களுக்கு மட்டும் தனி மரியாதை எப்படி?''
''காங்கிரஸில் இருந்து பலரும் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு கேட்டு இருக்கலாம். அது எனக்குத் தெரியாது. என் மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும், வரச் சொன்னார்கள். அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தேன். அங்கே அரசியல் எதுவும் பேசப்படவில்லை. என்னை மட்டும் அவர் சந்தித்ததை தனி மரியாதை என்று கருதவில்லை. அப்படி ஒரு  தனித்துவம் எனக்கு இருக்கிறது என்று நீங்கள் கருதினால்  மகிழ்ச்சிதான்.''
''மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ், அண்ணா நூலகம் இடம் மாற்றம் என்று அதிரடி கிளப்பும் தமிழக அரசைப்பற்றி..?''
''காங்கிரஸ் கட்சித் தலைவராக நான் இன்னும் பதவி ஏற்கவில்லை. முறைப்படி அது நடந்த பிறகுதான், என்னுடைய கருத்தைச் சொல்ல முடியும். அதற்கு சில நாட்கள் காத்திருங்கள். நல்லாட்சி யார் நடத்தினாலும் அதை வரவேற்பதும், தவறுகள் செய்யும்போது தட்டிக்கேட்பதும் எதிர்க் கட்சிகளின் கடமை. அதை காங்கிரஸ் நிச்சயம் செய்யும்.''
''நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கும்?''
''(ஜாலியாக...) தேர்தலுக்கு இன்னும் 1,000 நாட்கள் இருக்கின்றன. 999-வது நாளில்தான் கூட்டணி யாருடன் என்​பது அறிவிக்கப்​படும். அதுவரை சஸ்பென்ஸ் நீடிக்கட்டும்...''
''முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்​கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று தமிழகத்தில் கிளம்பியிருக்கும் எழுச்சி பற்றி..?''
''நீதிமன்றமே குற்றவாளிகள் என்று சொல்லிய பிறகு, 'அவர்கள் நிரபராதிகள்’ என்று வைகோ போன் றவர்கள் எப்படிச் சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. அவர்கள் நிரபராதிகள் என்றால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதையும் வைகோ சொல்ல வேண்டும். தூக்குத் தண்டனை என்று நீதிமன்றம் சொல்லி, அதை ஜனாதிபதியும் உறுதி செய்த பிறகு இப்படிக் கருத்து சொல்வது அழகு அல்ல.''
''அடிக்கடி அடிதடி நடக்கும் வன்முறைக் களமாக சத்தியமூர்த்தி பவன் காட்சி அளிக்கிறதே..?''
''அப்படி ஒரு நிலை இனி ஏற்படாத அளவுக்கு என்னுடைய பணிகள் இருக்கும். கட்சியின் தலைமை  அலுவலகம் கோயில் மாதிரி. கோயிலின் புனிதத்தன்மை​யைக் காப்பாற்றுவது போல, சத்தியமூர்த்தி பவன் காப்பாற்றப்படும்.''
''சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சரிவுதானே...?''
''வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தில் சகஜம். இதனை ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கவேண்டும். எந்த சீமான் வந்தாலும் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது. சீமான் நன்றாகப் பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கட்டும்...''
''தங்கபாலு நீக்கத்திற்கு என்னதான் காரணம்? தமிழக காங்கிரஸ் தலைவராக நீங்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால், ஜி.கே.வாசனின் கை ஓங்கியதாகத் தெரிகிறதே?''
''தங்கபாலு ராஜினாமா கடிதம் கொடுத்து இருந்தார். அது, ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றபடி அவர் நீக்கப் படவில்லை. காங்கிரஸின் சின்னம் 'கை’  எப்போதும் ஓங்கிதான் இருக்கும்!''
எம். பரக்கத் அலி, படங்கள்: என்.விவேக்
*********************************************************************************
லோக்கல் சேனலைக் கைப்பற்றுகிறதா அ.தி.மு.க.?

கேபிள் கலாட்டா
ஜெயலலிதா அரசுக்குத் தீர்க்க முடியாத தலைவலிகளில் ஒன்று கேபிள் பிரச்னை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அதிரடியாக அரசு கேபிள் அமலுக்கு வந்தது. உள்ளூர் சேனல்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், சத்தம் இல்லாமல் உள்ளூர் சேனல்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப் பட்டது. இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 20 லோக்கல் சேனல்கள் புற்றீசல்போல முளைத்துவிட்டன!
''இரண்டு மாசத்துக்கு அஞ்சு லட்ச ரூபாய் வரை அட்வான்ஸாக டி.டி வாங்கிட்டு, உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்தாங்க. எந்த வரைமுறையும் இல்லாம, உள்ளூர் சேனல்களுக்கு எப்படி அனுமதி கொடுத்தாங்கன்னு தெரியலை. ஒவ்வொரு சேனலிலும், ஒளிபரப்பும் பாடல் களுக்கு யாருமே காப்பிரைட்ஸ் வாங்கவே இல்லை. அப்படி வாங்காம ஒரு பாட்டை சேனலில் ஒளிபரப்பினா, அடுத்த நாளே வக்கீல் நோட்டீஸ் வந்துடும். ஆனா, இரண்டு நாளைக்கு முன்னாடி சேலத்தில் ஒரு லோக்கல் சேனலில் 'எங்கேயும் எப்போதும்’ படமே முழுசா ஓடி இருக்கு. இதுக்கு யார் அனுமதி கொடுத்தாங்க? இன்னொரு சேனலில் 'சூப்பர் ஸீன்ஸ்’ என்ற பெயரில் 'வேலாயுதம்’ படத்தை மூணு பகுதிகளாப் போட்டு முடிச்சுட்டாங்க. இதை யார் தட்டிக் கேட்க முடியும்? செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என்று மட்டும் தடை விதிச்சிருக்காங்க. இப்படி அனுமதி இல்லாமல் படத்தையும் பாட்டையும் ஒளிபரப்புவதை எப்படி அரசாங்கம் அங்கீகரிக்குது? இதை ஒழுங்குபடுத்தணும். பெரும்பாலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவங்கதான் இப்படிப் புதுசு புதுசா லோக்கல் சேனல்களைத் தொடங்கி இருக்காங்க. ஆளும் கட்சிக்காரங்க என்பதால், லோக்கல் சேனல்களை முழுசா அபகரிக்க நினைக்கிறாங்க. எதிர்த்துக் கேட்க யாரும் இல்லை.
இப்போ மாவட்ட கலெக்டர் மூலமாக டெண்டர் விட்டு யார் அதிக தொகைக்கு கேட்கிறாங்களோ... அவங்களுக்கு உள்ளூர் சேனல் நடத்த அனுமதி கொடுக்கப்போறதா சொல்றாங்க. அதை முன்னாடியே செய்ய வேண்டியதுதானே!'' என்கிறார்கள் முன்பு லோக்கல் சேனல் நடத்தியவர்கள்.
''அரசு கேபிளுக்கு மாதக் கட்டணமாக  70 நிர்ணயம் செஞ்சிருக்காங்க. அதில், சன் டி.வி. வராது என்பதால்... மக்களுக்கு ரொம் பவே அதிருப்தி. 'சன் டி.வி. இல்லைன்னா, கேபிள் கனெக்ஷனே வேண்டாம்’னு பல இடங்களில் மக்கள் சண்டை போட்டாங்க. அதனால், மக்களை சமாதானப்படுத்த அரசு கேபிள் வைச்சிருக்கும் பலர், சொந்தமாக ஒரு டிஷ் வாங்கி அது மூலமாக சன் நெட்வொர்க் இணைப்புகளை அரசு கேபிளில் லிங்க் பண்ணிடுறாங்க. சன் டி.வி-யும் சேர்த்துக் கொடுக்கிறதால் மாதக் கட்டணம் 80-ல் இருந்து  100 வரை ஏரியாவுக்குத் தகுந்த மாதிரி வசூல் பண்றாங்க'' என்கிறார் சேலத்தைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.
அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இதுபற்றிப் பேசினோம். ''இப்போது பரிசோதனை முயற்சியாகத்தான் உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம். சீக்கிரமே அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக டெண்டர் விடப்போகிறோம். யார் அதிகக் கட்டணம் செலுத்தி சேனல் நடத்தத் தயாராக இருக்கிறார்களோ... அவர்களுக்கு அனுமதி கொடுப்போம். ஒரு மாவட்டத்துக்கு 10 சேனல்கள் வரை அனுமதி கொடுக்கப்போகிறோம். உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டால், அவர்கள் விருப்பத்துக்கு எது வேண்டுமானாலும் ஒளிபரப்ப முடியாது. அதற்காக ஏழு விதிமுறை களை வகுத்திருக்கோம். செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என்பதுதான் முதல் விதி. காப்பிரைட் இல்லாமல் பாடல்களையோ, படக் காட்சிகளையோ ஒளிபரப்ப அனுமதி கொடுக்க மாட்டோம். அதனால், யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலைச் செய்ய முடியாது. அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே லோக்கல் சேனலை நடத்த முடியும். அ.தி.மு.க-வினர் மட்டும்தான் லோக்கல் சேனல் நடத்துகிறார்கள் என்பது பொய்யான குற்றச்சாட்டு.
சில இடங்களில் அரசு நிர்ணயித்து இருக்கும் கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கும் தகவல் வந்தது. அப்படி யாராவது வசூலித்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சன் டி.வி. இணைப்பை அரசு கேபிள் வழியாகக் கொடுத்துத் தொழிலைக் காப்பாத்திக்க சிலர் இப்படி செய்கிறார்கள். இனி அப்படி நடக்காது. நாங்களே சன் டி.வி-யோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். விரைவில் அரசு கேபிள் வழியாக சன் டி.வி-யும் கிடைக்கும். இதில் யாரும் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்'' என்றார் தெளிவாக.
சரிதான்!
கே.ராஜாதிருவேங்கடம்
************************************************************************
ராஜீவ் கொலை நடந்த போது எங்கே இருந்தீர்கள்?

வேலூரில் விசாரணை நடத்திய ஜெத்மலானி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் மரண தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் காண, அவ்வப்போது வைகோ முதல் சீமான் வரை பலர், வேலூர் மத்திய சிறைக்கு வந்து போவார்கள். ஆனால், பலரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த 12- தேதி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சிறைக்கு வர... அனைவரும் புருவத்தை உயர்த்தி இருக்கிறார்கள்!
' அனைத்து இந்திய சாய்பாபா பக்தர்கள் மாநாடு’ வேலூரில் கடந்த 12, 13 தேதிகளில் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த கலைவாணன், இந்த மாநாட்டில்ராம்ஜெத்மலானி கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதற்கு ஜெத்மலானியும் சம்மதித்தார். அதன்படி, கடந்த 12-ம் தேதி காலையில்  மாநாட்டைத் துவக்கிவைத்தார் ராம்ஜெத்மலானி. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேலூருக்கு வந்து, 'ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தாங்கள் சந்திக்க வேண்டும்’ என ராம் ஜெத் மலானியிடம் கோரிக்கை வைக்க... 12-ம் தேதி சிறைக்கு வந்து மூவரையும் சந்தித்துப் பேசினார் ஜெத்மலானி.
எப்போதும் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் வேலூர் சிறையில், அன்று அளவுக்கு அதிகமான பாதுகாப்பு. ராம்ஜெத்மலானி மற்றும் வைகோ உள்பட்டவர்கள் சிறைக்குள் சென்று சுமார் 12 நிமிடங்களில் வெளியே வந்துவிட்டனர். பத்திரிகையாளர்களிடம் ராம்ஜெத்மலானி அதிகமாகப் பேசவில்லை. ''மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் அப்பாவிகள், நிச்சயமாக அவர்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன். மற்றபடி என் தொழில் தர்மத்தை மீறி என்னால் எதுவும் பேச இயலாது, நான் இங்கு வந்ததற்கு முக்கியக் காரணம் வைகோதான்!'' என்று மட்டும் அவர் சொல்ல... நிருபர்கள் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தனர். ராம்ஜெத்மலானியோ புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்துவிட்டு சென்னைக்குக் கிளம்பினார்.
''சிறைக்கு உள்ளே என்ன நடந்தது?'' என்று வைகோவிடம் கேட்டோம். ''கிட்டத்தட்ட 21 வருடங்களாக சிறையில் தவிக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை ராம்ஜெத்மலானியிடம் அறிமுகப்படுத்தினேன். அவர் நம் தம்பி களிடம் பொறுமையாகப் பேசினார். 'ராஜீவ் காந்தி படுகொலையான சமயத்தில், நீங்கள் மூவரும் எங்கே இருந்தீர்கள்?’ என அவர் கேட்க, பேரறிவாளன்... 'சினிமாவுக்குச் சென்றதாகவும், மற்ற இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்களது சொந்த வேலைகளில் இருந்ததாகவும்’ கூறினர். பிறகு நான், 'பேரறிவாளன் ஒரு பேராசிரியர்’ என ராம்ஜெத்மலானியிடம் அறிமுகப்படுத்தினேன். முருகனின் ஓவியக் கலையையும், சாந்தனின் எழுத்தாக்கங்களையும் சொன்னேன். அவர்களின் திறமைகளைக் கண்டு ஜெத்மலானி ஆச்சர்யப்பட்டார். சிறைக் கைதிகள் அனைவருக்கும் இவர்கள் மூவரின் மீது உள்ள அன்பையும் பாசத்தையும் புரிந்துகொண்டார். சிறையில் உள்ள மற்றக் கைதிகளுக்கு ஓர் ஆசிரியராகப் பாடங்கள் சொல்லித் தரும் பேரறி வாளனைப் பாராட்டினார். உச்ச நீதிமன்றத்தில், பஞ்சாபைச் சேர்ந்த பக்கர் வழக்கை வாதாடி வருவதை யும், அந்த வழக்கைவிட உங்கள் மீது போட்ட பொய் வழக்கு மிகவும் சுலபமானது, எனவே, உங்களை விடுவிப் பது எனது பொறுப்பு என தைரியம் ஊட்டினார். வழக்கு குறித்த கேள்விகளை மூவரிடமும் தனித் தனியாகப் பேசினார். சிறை அதிகாரிகளும் அவர்கள் மீது பற்றுவைத்து இருப்பதைப் புரிந்துகொண்டார். சென்னைக்கு காரில் திரும்பும்போது என்னிடம் ராம்ஜெத்மலானி சிரித்துக்கொண்டே, 'மூவரும் நிரபராதிகள் என நிரூபிப்பது எனது வேலை. நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என அவர்களிடம் சொல்லுங்கள்’ என்றார். நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் வந்தது, சிறையில் இருக்கும் தம்பிகளுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒன்று மட்டும் நிச்சயம். உண்மையில், அவர்கள் அப்பாவிகள்'' என உணர்ச்சி வசப்பட்டார்.
சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை ராம்ஜெத்மலானி பார்த்துச் சென்று இருப்பது, தமிழ் ஆர்வலர் களிடையே நம்பிக்கையை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது!
கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்
*********************************************************************************
இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!

அதுதான் எலைட்...
ருக்கின்ற டாஸ்மாக் கடைகள் போ​தாது என்று புதிதாக 'எலைட்’ மதுபானக் கடைகளை அறிமுகப்படுத்தப்போகிறது தமிழக அரசு. எலைட் - பணக்காரக் 'குடி’மகன்களுக்காக உயர் ரக மற்றும் வெளி​நாட்டு இறக்குமதி மது பானங்கள் விற்பனை செய்யும் கடை..
கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசு, மது விற்பனையைத் தனது கையில் எடுத்ததில் இருந்தே அதற்கு நல்ல வருமானம்தான். 2004-05-ல்  6,000 கோடி வருவாய் கிடைத்தது. 2010-11-ல், இது  14 ஆயிரம் கோடியைத் தாண்டியது. வரும் ஆண்டில்  16 ஆயிரம் கோடி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், சென்னையில் எட்டு, சேலத்தில் ஒன்பது, கோவையில் 16, மதுரை, திருச்சியில் தலா 12, என மொத்தம் 57 எலைட் மதுபானக் கடைகளைத் திறக்க இருக்கிறது தமிழக அரசு. இங்கு 'காட்ஸ்’, 'ஸ்காட்ச்’, 'பாரடைஸ்’, 'போல்ஸ்’, 'வின்டேஜ்’ உள்ளிட்ட விலை உயர்ந்த உயர் ரக மது பானங்கள் விற்பனை செய்யப்படும். குவாட்டர் பாட்டிலின் விலை குறைந்தபட்சம்  200; ஃபுல் பாட்​டிலின் விலை குறைந்தபட்சம்  2,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசாயன மது பானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கள் வடிக்க அனுமதி தரக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தும் தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமியிடம் பேசினோம். ''ஏற்கெனவே, தெருவுக்கு இரண்டு டாஸ்மாக் கடைகள் சமூகத்தை நாறடிக்கின்றன. பள்ளிக் குழந்தைகள்கூட மதுவைப் பழகிவிட்டனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது போல பல இடங்களில் வீட்டுக்கு வீடு மது பாட்டில் களை விநியோகித்​தனர். இதில் பல பெண்களும்கூட குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.இது போதாது என்று இப்போது எலைட்.அதாவது, மேட்டுக்குடி வர்க்கத்துக்கு ஒரு கடை; இல்லாதவருக்கு ஒரு கடை. ஏற்கெனவே, நாட்டில் நடக்கும் டாஸ்மாக் மோதல்களுக்கு இடையே இப்போது இன்னொரு மோதலாக இது வர்க்கப் பேதத்தை உருவாக்கும். நாங்கள் மது விலக்கு கோரவில்லைஎன்றாலும், ஓர் அரசின் கொள்கை மதுவிலக்கு நோக்கியே இருக்க வேண்டும். அதுவே மக்களுக்கான அரசு. ஆனால், தமிழக அரசு தனது சொந்த மக்களையே கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோ பாய்ஸன் கொடுத்துக் கொல்கிறது. ரஷ்யாவில் உருளைக்கிழங்கில் வோட்கா, சீனாவில் அரிசியில் மவுத்தாய், ஜப்பானில் அரிசியில் சாக்கே, ஸ்காட்லாந்தில் தானியங்களில் ஸ்காட்ச், பிரான்ஸில் திராட்சையில் ஷாம்பெய்ன் என விதம் விதமாகத் தயாரிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் டாஸ்மாக் மது பானங்களை சர்க்கரை ஆலை ரசாயனக் கழிவான மொலாஸஸில் மது தயாரிக்கிறார்கள். அதில் கலக்கப்படும் எரிசாராயத்தால் குடல் வெந்து சாகிறான் தமிழன்!
டாஸ்மாக் மதுபானங்களில் இவ்வளவு கேடு இருப்பதால்தான், உயர்தட்டு மக்களுக்காக எலைட்மதுபானக் கடைகளைத் தமிழக அரசு திறக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது, ஏழைகள் லோக்கல் சரக்கைக் குடித்துவிட்டுச் சாகட்டும். வசதியானவர்கள் மட்டும் தானியங்களாலும் பழ வகையாலும் தயாரிக்கப்பட்டவற்றைக்  குடித்துவிட்டு நன்றாக இருக்கட்டும். இதுதான் தமிழக அரசின் கொள்கை. மொத்தத்தில் தமிழக மக்களுக்கு டாஸ்மாக்கும் தேவை இல்லை; எலைட்டும் தேவை இல்லை. ஏழை, பணக்காரன் என எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களைக்கொண்டு உலகத் தரம் வாய்ந்த, உடல் நலத்துக்குக் கேடு இல்லாத மது பானங்களை அரசு தயாரிக்க வேண்டும். இலங்கை அரசின் பனை, தென்னை மது பானங்கள், இன்று உலகில் பல்வேறு விமான நிலையங்களிலும் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி எங்காவது டாஸ்மாக் மதுபானத்தை இவர்களால் விற்பனை செய்ய முடியுமா? எனவே, அரசு தனது கொள்கை முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்...'' என்கிறார்.
ஆனால், இன்னொரு தரப்பினரோ, ''வாடிக்கையாளர்களுக்கு உரிய மரியாதையை டாஸ்மாக் கடைகள் அளிப்பது இல்லை. பார்களில் கால்வைக்க முடியாத அளவுக்கு நாறிக்கிடக்கின்றன. அதிக விலைக்கு விற்பது, கேட்கும் மதுபானத்தைக் கொடுக்காமல் இருப்பது என நுகர்வோருக்கு உரிய அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறார்கள். இந்த நிலையில், எலைட் மதுபானக் கடைகள் வருகை நியாயமானதே...'' என்கிறார்கள்.
டாஸ்மாக் அதிகாரிகளோ, ''இது அரசின் கொள்கை முடிவு. அதை செயல்படுத்துவது எங்கள் கடமை'' என்கிறார்கள் சின்​சியராக!
இப்படி ஆயிரம் நியாயங்களைக் கற்பித்தாலும், தமிழக அரசின் டாஸ்மாக் கொள்கைகளைப் பார்க்கும்போது, 'இந்த நாடும் நாட்டு மக்களும் எப்படியும் போகட்டும்’ என்ற நினைப்பில் இருக்கிறார்களோ என்னவோ!
டி.எல்.சஞ்சீவிகுமார்
************************************************************************
செய்தியும் சிந்தனையும் - டயல் செய்தால் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுவார்!

*********************************************************************************
கார் வாங்கப் போகிறீர்களா?

*********************************************************************************
கப்சா விட்ட மாஜி மந்திரி!

பட்டம் வாங்காமலேயே 'பி.ஏ.'ன்னு போட்டவர்தானே அவர்!''
ள் மாறாட்ட விவகாரத்தில் சிக்கி, தமிழகக் காவல் துறையினர் கண்ணில் மண் தூவிக்கொண்டு இருக்கும் புதுவைக் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம், இப்போது பதவியில் இருந்து தூக்கப்பட்டு இருக்கிறார். இந்த விவகாரத்தில் புதுவை மக்களின்... குறிப்பாக மாணவர் கள் மற்றும் ஆசிரியர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ரவுண்ட் அடித்தோம்.  
ஆனந்த்(புதுவை சட்டக் கல்லூரி, மூன்றாம் ஆண்டு): ''சட்டப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஓர் அமைச்சர் இப்படிக் கீழ்த்தரமான ஒரு காரியம் செய்ததை, எங்களால் ஏற்கவே முடியவில்லை. உண்மையிலே அவர் தேர்வை நியாயமான முறையில் எழுத நினைத்து இருந்தால், புதுவையில் எழுதி இருக்கலாம். எதற்காகத் திண்டிவனத்தைத் தேர்வு செய்யணும்? எதற்காக ஆசிரியர் ஆதவனின் முகவரியை, அவருடைய முகவரியாகக் கொடுத்தார்? கல்யாணசுந்தரத்துக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடத்துவதற்காக பணத்தைத் தண்ணீராக செலவழிக்கி றார்கள். இது சரி அல்ல. அவரைப் பதவியில் இருந்து நீக்கியது மட்டும் போதாது, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!''
ரஞ்சித் (பாலிடெக்னிக் மாணவர் மூன்றாம் ஆண்டு):
''கல்வித் துறை அமைச்சராக கல்யாண சுந்தரத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்தபோதே, தலையில் அடிச்சுக்கிட்டோம். ஏனென்றால், 8-ம் வகுப்பு ஃபெயி லானவர், ஐந்து கிரிமினல் வழக்கு கள் உள்ளவர், ஹோட்டலில் காபரே டான்ஸ் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். பட்டப் படிப்பு படிக்காமலே, கல்யாணப் பத்திரிகையில் பி.ஏ., என்று போட்டுக்கொண்டவர். இப்படிப் பட்ட ஒருவரை 'தவறான’ காரியங்கள் செய்வதற்கு ஒத்தாசையாகத்தான் முதல்வர் வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!''
பகத்சிங் (முனைவர் பட்ட ஆய்வாளர், புதுவைப் பல்கலைக்கழகம்) :
80 சதவிகிதம் படித்தவர்கள் நிரம்பியுள்ள புதுவையில், 8-ஆம் வகுப்பு முடிக்காத ஒருவரைக் கல்வி அமைச்சர் ஆக்கியது கொடுமை. ரங்கசாமி மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் ரவுடிகளுக்கும் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களுக்கும்தான் இந்த ஆட்சியில் மரியாதை இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட ஜெயராமன் விவகாரத்தில் கல்யாணசுந்தரத்துக்கு தொடர்பு இருப்பதாகச் சொல் கிறார்கள். இதுகுறித்தும் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரங்கசாமி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்ற வேண்டும்!''
சிந்து (பி.காம் முதலாம் ஆண்டு, பாரதிதாசன் கல்லூரி) :
''ஒரு மாணவர் பிட் அடித்தாலோ, ஆள் மாறாட்டம் செய்தாலோ, அவர் களுக்குத் தண்டனை கடுமையாக இருக்கும். இதே தவறினை ஒரு கல்வி அமைச்சர் செய்திருக்கிறார் என்றால், தண்டனை எவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும்? அவர் மீது தவறு இல்லை என்றால், நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்து இருக்கலாமே? எதற்காக ஓடி ஒளிகிறார்? பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மாணவர்களுக்கு எந்த ஒரு நல்ல காரியமோ, திட்டமோ நிறைவேற்றவே இல்லை. அமைச்சர் செய்த காரியத்தால் புதுச்சேரியில் இருக்கும் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் அதிருப்தியில் தலை குனிந்து நிற்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை அமைச்சராக நியமித்த, முதல்வர் ரங்கசாமி இந்தத் தோல்விக்கும் அவமானத்துக்கும் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும்!''
ஜெயராமன் (நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி, ஆசிரியர் சங்கத் தலைவர்) :
புதுச்சேரி மாநிலத்துக்கு என்று நேரு காலத்தில் இருந்து ஒரு தனி மரியாதை இருக்கிறது. அதற்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாகச் சொல்லப்படும் கல்யாணசுந்தரம், இதுவரை ஏன் தன்னிலை விளக்கம் கொடுக்கவில்லை? கல்வித் துறைக்கு ஒரு இளையவர் அமைச்சராகிறார் என்றதும் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன், ஆனால் இப்போது அவமானமாக இருக்கிறது. அந்தந்தத் துறைக்கு  ஏற்றவர்களைத் தேர்ந்து எடுத்தால், எதிர்காலத்திலாவது இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்!''      
               
ராம்ஜி (பெற்றோர் - ஆசிரியர் சங்கம்) :
''அவர் படித்தாரா, படிக்கவில்லையா என்பது முக்கியம் அல்ல. காமராஜர் படிக்காமலே பல சாதனைகள் செய்த வர்தான். ஆனால், ஒருவருக்குத் தனிமனித ஒழுக்கம் முக்கியம். 16 சட்டமன்ற உறுப்பினர்கள்கொண்ட என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவரை நீக்கிவிட்டால், கட்சிக்குக் கெட்ட பெயர், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று முதல்வர் இவ்வளவு காலம் நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஆகியிருக்கலாம். அடுத்து வருபவராவது பெற்றோர்கள் மனம் புரிந்து கல்வித் துறை மீது கவனம் செலுத்துபவராக வரட்டும்!''
சரவணன் (விவசாயி , பாகூர் பகுதி):
''கல்வித் துறை அமைச்சரே இப்படி ஆள்மாறாட்டம் பண்ணுவார்னு எதிர்பார்க்கலை. சமூகக் குற்றங்கள் செய்தவரைக் கட்சியில் சேர்த்து, அமைச்சர் பதவியும் கொடுத்த ரங்கசாமி, இப்போது பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி சரியில்லைன்னுதான் என்.ஆர். காங்கிர ஸுக்கு ஓட்டுப் போட்டோம். இவங்க அதைவிட மோசமாக இருக்கிறார்கள். உடனே ரங்கசாமி சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கட்சி கானல் நீர் போன்று மறைந்தேபோகும்!''
- நா.இள. அறவாழி
ஆ.நந்தகுமார்
*********************************************************************************

********************************************************************************************

மிஸ்டர் கழுகு: 'வில்லங்க' விஜி!

ழுகார் உள்ளே நுழையும்போது, 'பொட்டு ரிலீஸ்’ என்ற செய்தி எஸ்.எம்.எஸ். வழியே குதித்து விழுந்தது!
அதையே கழுகாரிடம் சொன்னோம். ''இரண்டு நாட்களாக போலீஸ் வட்டாரத்​தில் கேட்கும்
புலம்பல் இதுதான். 'கோட்டைவிட்டதா போலீஸ்?’ என்று ஆட்சி மேலிடத்தில் இருந்து கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியா​மல் போலீஸ் உயர் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்'' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் கழுகார்!
''மதுரை  மண்டலம் அண்ணன் அழகிரியின் கோட்டை என்றால், அதன் காரியதரிசி பொட்டு சுரேஷ். யார் கலெக்டர், யார் எஸ்.பி. என்பது முதல் யார் யாருக்கு கான்ட்ராக்ட் கொடுக்கலாம் என்பது வரைக்கும் முடிவு எடுக்கும் நபர். தகுதியான பலர் காத்திருக்க, இவரைக் கவனித்துவிட்டு ஈஸியாகப் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் பல்வேறு துறைகளிலும் இருக்கிறார்கள். தவிர, வெளியே வராத பல கிரிமினல் குற்றச்சாட்டுக்களும் இருந்தன. இதை மதுரைப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாவே வெளிப்படையாகத் தாக்கினார்.''
''அதைத்தான் நாடறியுமே!''
''ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் பொட்டு சுரேஷைப் பொறிவைத்துப் பிடித்தார்கள் மதுரை போலீஸ் அதிகாரிகள். எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க், கமிஷனர் கண்ணப்பன், ஏ.டி.எஸ்.பி-யான மயில்வாகனன் ஆகிய மூவர் அணிதான் பொட்டுவைப் பதம் பார்த்தது. 'மதுரை ஜெயிலிலாவது போடுங்கள்’ என்ற பொட்டு தரப்பின் கோரிக்கையை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முத்துக்குமார் நிராகரிக்க, பாளைங்கோட்டையில் அடைக்கப்பட்டார் பொட்டு. அதன் பிறகு, வரிசையாக வழக்குகள் பாய்ந்தன. இதில் எதிலும் அவர் ஜாமீன் வாங்கிவிடக் கூடாது என்பதற்காக குண்டாஸும் பதிவு செய்தார்கள். ஓர் ஆண்டுக்கு வெளியே வர முடியாது என்று போலீஸார் தைரியமாக இருந்தனர்!''
''அதுதான் நிராசையாக ஆகிவிட்டதே?''
''பொட்டு சிறைக்குள் போய் 120 நாட்கள் தாண்டிவிட்டன. 'ஆள் ரொம்ப உடைஞ்சுட்டாராம்’ என்றெல்லாம் சொந்தக் கட்சியினரே பேசிக்கொள்ள, அத்தனை வழக்குகளையும் உடைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார் பொட்டு. 'போலீஸ் நடவடிக்கையில் நிறைய ஓட்டைகள் இருந்ததால், குண்டாஸை ஈஸியாக உடைத்துவிட்டார்கள்’ என்றார் ஒரு தி.மு.க. வக்கீல். நீதிபதிகள் சி.நாகப்பன், டி.சுதந்திரம் ஆகியோர், 'பொட்டு சுரேஷை  குண்டர் சட்டத்தின் கீழ் அடைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி பிறப்பித்த உத்தரவு, ஆவணங்களின் அடிப்படையில் இல்லை... அவை மேம்போக்கானவை என்பது தெரிகிறது.’ என்று சொல்லி போலீஸைத்தான் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். இதுவே ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு கோபத்தைத் தூண்டி உள்ளது.''
''இந்த விவகாரத்தைக் கவனிக்கும் உயர் அதிகாரிகள் கடுமையான ஆட்கள்தானே?''
'மதுரை மாவட்டத்தில் உயர் அதிகாரிகள் சிலரைத் தவிர, 'எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகள் இப்போதும் பொட்டுவுக்கு விசுவாசமாகவே இருக்கிறார்கள்’ என்ற கருத்தும் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விவகாரம் இது. வாரப் பத்திரிகை நிருபர் பாண்டியனைத் தாக்கிய வழக்கில் பொட்டுதான் முதல் குற்றவாளி. ஒருவரைக் கைது செய்தால், அடுத்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், செப்டம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட சுரேஷை 23-ம் தேதிதான் உசிலம்பட்டி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தது போலீஸ். அன்று மாஜிஸ்திரேட் விடுமுறை என்பதால், வாடிப்பட்டி நீதிமன்றத்துக்கு அழைத்துப் போய், பொறுப்பு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். இது தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்ற உத்தரவு இருப்பதைச் சுட்டிக்காட்டிய மாஜிஸ்தி​ரேட், காலதாமதமாகக் கொண்டு​வந்ததால், ரிமாண்ட் செய்ய முடியாது என்று மறுத்து​விட்டார். ஆக, ஜாமீன் வாங்காமலேயே அந்த வழக்கில் பொட்டு வெளியே வந்துவிட்டார். எனவே வழக்குப் போடுவது, கைது செய்வது முக்கியம் அல்ல. அதைக் கடைசி வரைக்கும் காப்பாற்ற போலீஸ் தவறிவிட்டதுதான் பொட்டு ரிலீஸுக்குக் காரணம் என்கிறார்கள். இதே வழக்கில் இரண்டு போலீஸ்காரர்களும் சம்பந்தப்​பட்டு இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற நினைத்த போலீஸ்காரர்கள் பொட்டுவையும் சேர்த்துக் காப்பாற்றி​விட்டார்களாம்!''
''அவர் ஆக்டிவ் பாலிடிக்ஸ் பண்ணு​வாரா?''
''மதுரையில் இப்போது எவருமே ஆக்டிவ் பாலிடிக்ஸ் பண்ணவில்லை. பொட்டு மட்டும் பண்ணுவாரா என்ன?'' என்று சிரித்த கழுகாரைப் பார்த்து நாமும் சிரித்தோம்!
''முதல்வர் ஜெயலலிதாவை மையப்​படுத்தி சர்ச்சை கிளப்பிய சிறுதாவூர் பங்களா விவகாரம் மீண்டும் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டது. மாநிலம் முழுவதும், தி.மு.க. மற்றும்  பலரால் கடந்த ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்களை விசாரிக்க மாவட்டக் குற்றப் பிரிவுடன் இணைந்த தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் வரை பலரும் சிறைக்கு செல்கிறார்கள். இதில் சந்தடியில்லாமல் ஒரு திடுக் வழக்குப் பதிவாகிவிட்டது...''
''என்ன சொல்ல வருகிறீர்?''
''சில தினங்களுக்கு முன்பு காஞ்சி மாவட்டத்தில் இயங்கி வரும் நில அபகரிப்​புப் புகார் தொடர்பான பிரிவுக்கு, சென்னை பாலவாகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்மணி சத்தம் இல்லாமல் வந்து போனார். ஓர் இடத்தையும் குறிப்பிட்ட சர்வே எண்ணையும் புகாரில் தெரிவித்து, இந்த இடம் தன்னிடம் இருந்து சில நபர்களால் மோசடியாக அபகரிக்கப்பட்டதாக அந்த மனுவில் தெரிவித்தார். நில அபகரிப்​புப் புகார் என்றாலே ஆர்வம் காட்டும் போலீஸாரும், முறைப்படி புகாரைப் பதிவு​செய்துகொண்டார்கள். விசார​ணைக்காக எதிர்த் தரப்புக்கு தேதி குறிப்பிட்டு சம்மனையும் ஓர் அதிகாரி மூலம் கொடுத்து அனுப்பினார்களாம்.''
''வந்தாரா எதிர் பார்ட்டி?''
''வருவதாவது...! குறிப்பிட்ட அந்த விலாசத்துக்கு  இரண்டு காவலர்கள் இயந்திரத்தனமாக சம்மனைக் கொண்டுசேர்த்த அடுத்த அரை மணி நேரத்தில், காஞ்சி மாவட்டக் காவல் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சி. சம்பந்தப்பட்ட புகாருக்கு உரிய இடம் வேறு எதுவும் அல்ல; அந்த சிறுதாவூர் பங்களாவேதான்!''
''நீர் உண்மையைத்தான் சொல்கிறீரா?''
''விஷயத்தை முழுமையாகக் கேளும்! அந்த நிலம் யார் பெயரில் உண்டோ... அவருக்குத்தான் காவல் அதிகாரிகள் சம்மன் கொடுத்துள்ளனர். அவர்கள் மூலமாகக் காவல் துறை உயர் வட்டாரத்தில் விசாரிப்பு நடக்கவும்...... சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து காச்மூச்சென்று கத்திவிட்டார்களாம் பெரிய அதிகாரிகள்!''
''ஹையோ... ஹையோ!''
''கேளும்... 'ஏன்யா, எந்தப் புகார் வந்தாலும் முன்னப்பின்ன விசாரிக்காம சம்மனைக் கொண்டு​போய் நீட்டுவீங்களா?’ என்று எழும்பிய கேள்விக்கு போலீஸ் அதிகாரிகளால் சரியான பதில் சொல்ல முடியவில்லையாம். 'சம்பந்தப்பட்ட அந்த பெண்மணியிடம் பேசி விசாரணை செய்து, விஷயம் வெளியே தெரியாதவாறு அடுத்தக் கட்ட விஷயத்தைக் கவனியுங்கள்’ என்று கூடுதல் உத்தரவு வந்ததாம். இதனால், இப்போது இந்த விவகாரத்தில் விஜயலட்சுமியைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போலீஸார், மேலிட உத்தரவுப்படி சத்தம் இல்லாமல் விசாரணை செய்கிறார்கள். இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்கு வரும் 22-ம் தேதி, உரிய ஆவணங்களுடன் வருமாறு விஜயலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணங்களில் போலித்தன்மை இருந்தால், அவர் மீதே கைது நடவடிக்கை எடுக்கலாம். மாறாக அந்த விஜயலட்சுமிக்கு மாற்றுக் கட்சியின் ஆதரவு கிடைத்தால், சிறுதாவூர் மறுபடி தலைப்புச் செய்தி ஆகலாம்.''
''சம்மன் அனுப்பிய அதிகாரிகளை சும்மா விட மாட்டார்களே..?''
''மூன்று பேருக்கு துறைரீதியாக மெமோ கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!
னிமொழிக்கு ஜாமீன் கிடைக்காமல் தொடர்ந்து தள்ளிப்போவதை உள் அர்த்தத்தோடு கவனிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ''நீதிபதி என்ன சொன்னாலும் அதைத் தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் வேலையைத்தான் நமது வழக்கறிஞர்கள் செய்கிறார்கள்'' என்று புலம்பல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன.
சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி, கனிமொழியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தபோதே, ராஜாத்தி அம்மாள் ஆவேசமாகி, 'நம் வழக்கறிஞர்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. டெல்லியையே ஆட்டிப்படைக்கும் எத்தனையோ வல்லமை மிகுந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் அவர்களை வைத்து வாதாடினால்தான் ஜாமீன் சாத்தியமாகும்’ எனக் கருணாநிதியிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தாராம். ஆனால், 'எல்லாம் நல்லபடி நடக்கும்’ எனச் சொல்லி, வழக்கமான சட்டப் போராட்டத்தையே முழுமையாக நம்பி இருந்தார் கருணாநிதி.
''உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு டிசம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைக்கப்பட, ராஜாத்தி அம்மாள் தரப்பு ரொம்பவே கோபமாகிவிட்டது. 'சி.பி.ஐ. தரப்பில் ஆட்சேபனை இல்லாதபோதே ஜாமீன் பெற முடியாதவர்கள், சி.பி.ஐ. ஆட்சேபித்து இருந்தால்... ஜாமீன் விவகாரத்தையே கை கழுவி இருப்பார்கள். தி.மு.க-வின் சில சக்திகள் திட்டமிட்டு கனிமொழியை உள்ளேவைக்கப் பார்க்கின்றன'' என்று  சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
*********************************************************************************
கழுகார் பதில்கள்

எம்.சிவக்குமார், வேதாரண்யம்
 பெட்ரோல் விலை உயர்ந்தால் எல்லா விலையும் உயரும் என்பது ஆட்சியாளர்​களுக்குத் தெரியும். தெரிந்தும் அந்தத் தவறைத் தொடர்ந்து செய்வது ஏன்? மானியம் மூலமாவது பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்தலாமே?
மானியம் என்பது ஏதோ ஆகாயத்தில் இருந்து யாரோ தூக்கிப் போடும் பணம் அல்ல. அதுவும் நம் பணம்தான்!
ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசின் பட்ஜெட்டில் சுமார்  1,50,000 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால்தான் கடும் நிதி நெருக்கடி ஏற்படுவதாக பொருளாதார ஆய் வாளர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில் மேலும் மானியம் கொடுத்தால், இந்த நெருக்கடி இன்னும் அதிகமாகும் என்பது அவர்களது கணிப்பு.
'சர்வதேசக் கச்சா எண்ணெய் சந்தை யில் விலை உயர்வை இந்தியா​வால் கட்டுப்படுத்த முடியாத நிலை. கச்சா எண்ணெய் விலை உயரும்​போது, அதற்கேற்ப பெட்​ரோலியப் பொருட்​களின் விலையை நாம் உயர்த்த வேண்டி உள்ளது’ என்ற விளக்கத்தையே இன்னமும் எத்தனை ஆண்டு களுக்குச் சொல்லிக்கொண்டு இருப்போம். மாற்று எரி பொருள் சக்திகளைத் தேடும் முயற்சிகளில் மற்ற நாடுகள் இறங்கிவிட்டன. இந்தியா அதுபற்றி யோசிக்காததுதான், வருத்தம் தரும் விஷயம்!
 வண்ணை கணேசன், சென்னை 110.
கோஷ்டிப் பூசல்களால் அதிகம் பாதிக்கப்படுவது யாரென்று கூற முடியுமா?
தொண்டர்கள்தான். எந்தப் பக்கத்தை ஆதரிப்பது என்று தெரியாமல் குழம்பிப்போய் இரண்டு பக்​கத்து எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொள்வது அவர்கள்​தானே!
சில மாதங்களுக்கு முன்னால் முக்கியக் கட்சியில் சேர்ந்தார் காமெடி நடிகர் ஒருவர். தனது பேட்டியில் தலைவரின் ஒரு வாரிசு பெயரை மட்டும் சொன்னார். இன்னொரு வாரி​சுக்கு இதனால் கோபம். 'என் பெயரை ஏன் சொல் லலை?’ என்று கோபித்துக்​கொண்டார். அடுத்த பேட்டியில் இரண்டு பேர் பெயர்களையும் சொன்னார். 'அவரு பேரையும் எதுக்கு சொன்னீங்க?’ என்று மூத்தவருக்கு கோபம். 'அவ்வ்வ்வ்வ்வ்வ்...’ என்றார் காமெடி!
 இர.இரபீந்த், இரணியல்
ஜெயலலிதா, கருணாநிதி, கனிமொழி இந்த மூவரில் நேருக்கு நேர் நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்தித்தது யார்?
கருணாநிதி மீதான வழக்கு, விசாரணைக்கே வரவில்லை. அது ஒரு விசாரணைக் கமிஷனோடு முடிந்தது.
ஜெயலலிதா, 109 தடவை இழுத்து இப்போதுதான் பெங்களூருவை நெருங்கி இருக்கிறார்.
கனிமொழிக்கு சிறைக்குள் இருப்பதால் கோர்ட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்ல முடியாது. உங்கள் கேள்விக்கான பதிலை இதில் இருந்து தேடிப் பாருங்கள்!
 பா.சு.மணிவண்ணன், திருப்பூர்.4
அரசியல்வாதிகளைவிட சிறந்த நடிகர்கள் உலகில் வேறு யாராவது இருக்கிறார்களா?
அந்த அரசியல்வாதிகளின் மனைவிகளும் வாரிசுகளும் இருக்கிறார்களே!
உலகமே அதிரக்கூடிய ஊழலில் அரசியல்வாதி கைதானாலும் 'எதுவுமே நடக்காதது மாதிரி’ உட்கார்ந்து பேட்டிகள் கொடுக்கும் சாமர்த்தி​யசாலிகள் அவர்கள்!
 வரதப்பன், சுங்குவார்சத்திரம்
  திருச்சியில் தியாகி சின்னச்சாமிக்கு சிலை வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு முக்கியமானவரா அவர்?
மொழியைக் காக்க தனது உடலைக் கொடுக்கலாம் என்ற எண்ணத்துக்கு வித்திட்ட முதல் தியாகி சின்னச்சாமி. 'இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி, 1965, ஜனவரி 25-ம் நாள் முதல் அது அமலாகும்’ என்ற உத்தரவு வந்தது. அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம் எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வந்துகொண்டு இருந்தார். 'தமிழை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று அவரது காலடியில் போய் சின்னச்சாமி விழுந்தார். 'யாரோ ஒரு பைத்தியக்காரர்’என்று நினைத்து போலீஸ் கைது செய்து 15 நாள் சிறையில் அடைத்தது. விடுதலையான சின்னச்​சாமி விரக்தி​யோடு திருச்சி திரும்பினார்.
அன்றைய 'தினத்தந்தி’ நாளிதழில் ஒரு செய்தி. புத்த மதத்தைக் காப்பாற்ற தாய்லாந்தில் இரண்டு புத்த பிட்சுக்கள் தங்களது உடலுக்குத் தீவைத்து இறந்துபோனதாகச் சொன்னது அந்தச் செய்தி. நாமும் தமிழுக்காக தீ வைத்துக்கொண்டால் என்ன என்று யோசித்து, அதன்படியே தீக்குளித்து இறந்தார். அவரைத் தொடர்ந்து, தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்தார்கள்!
 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி
உ.பி. முதல்வர் மாயாவதியையும் மாநில அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்த ஐ.பி.எஸ். அதிகாரி தேவேந்திர தத் மிஸ்ராவை வலுக்கட்டாயமாக மனநல மருத்துவமனையில் அரசு சேர்த்திருப்பது குறித்து..?
தமிழகம் பரவாயில்லை, இந்த அளவுக்கு நம் மாநிலத்தின் நிலைமை மோசமாகவில்லை என்று திருப்திப்​பட்டுக்கொள்ள வேண்டியது​தான்!
கடந்த வாரத்தில் இன்னொரு சம்பவமும் நடந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் கட்சித் தொண்டர்கள் இரண்டு பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தகவல் வந்தது. உடனே அவரே நேராக அந்தக் காவல் நிலையத்துக்குச் சென்றார். இருவரையும் உடனடியாக விடுதலை செய்யச் சொல்லி உத்தரவும் போட்டு, அதிரடியாகக் கையோடு அழைத்தும் வந்துவிட்டார். உ.பி., மேற்கு வங்கத்துடன் ஒப்பிடும்போது... 'சாந்தி நிலவும் மாநிலம் நம் தமிழ்நாடு’!
 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி
'நாங்கள் எதிர்க் கட்சியாக இருப்போமே தவிர, எதிரிக் கட்சியாக இருக்க விரும்பவில்லை’ என்ற விஜயகாந்த்தின் தடாலடிப் பேச்சு குறித்து?
ஏதோ ஒரு கட்சியாக இருங்கள் என்றுதானே எதிர்பார்க்கிறான் வாக்காளன்!
 'காசி’ யோக அக்ஷயா, கோவை.14
இத்தனை நல்ல மீடியாக்கள் இருந்தும் கடந்த காலங்களில் நடந்த அட்டூழியங்களை அறுதியிட்டு ஒழிக்க இயலவில்லையே ஏன்?
மீடியாக்களால் குற்றம் குறைகளைச் சொல்லத்தான் முடியும். தண்டிக்க வேண்டிய அதிகாரமும் சக்தியும் மக்கள் கையில்.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் ஆயினும் கெடும் - என்கிறார் வள்ளுவர். இடித்து உரைக்கின்றன மீடியாக்கள். முன்னதாகவே உஷாரானால்... அவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் ஆபத்துக்கள் சூழும். எனவே மீடியாக்கள் நினைத்தால், அனைத்து அட்டூழியங்களையும் ஒழித்துவிட முடியும் என்று உங்களைப் போன்ற பொதுமக்கள் சும்மா இருந்துவிடக் கூடாது!
 பா.சு.மணிவண்ணன், திருப்பூர்.4
  கழுகாரின் பதில்கள் விரைவில் புத்தகமாக மலருமா?
தயாராகி வருகிறது. ஜனவரியில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்!
*********************************************************************************
பொங்கலில் புதுக் கட்சி!

பொளந்து கட்டும் போட்டி பா.ம.க.
பா.ம.க-வில் இருந்து அண்மையில் நீக்கப்​பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-வான வேல்முருகனுக்கு ஆதரவாக, பல திசைகளில் இருந்தும் ஆதரவுக் கரங்கள் நீள்கின்றன.  சேலம் வசந்தம் ஹோட்டலில் கடந்த 12-ம் தேதி, முன்னாள் எம்.எல்.ஏ-க்களான காவேரி, காமராஜ் தலைமையில் மாற்றுக் கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய காவேரி எடுத்த எடுப்பிலேயே, '' 'இந்தக் கட்சிக்காரங்களுக்கு (பா.ம.க.தான்) வேற வேலையே கிடையாது. காலையில் தூங்கி எழுந்திருச்சா... ஜாதி... கட்சினு சொல்லி வீட்டுக்கு வந்து உட்கார்ந்துக்கிறாங்க. உங்களுக்கு வேற பொழைப்பே இல்லையாப்பா..?’னு கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில் எங்களையும், அவரது அப்பா ராமதாஸையும் திட்டுவார் அன்புமணி. இன்றைக்கு அவர்தான் அந்தக் கட்சியோட தூண். அப்புறம் எப்படி அந்தக் கட்சி விளங்கும்னு சொல்லுங்க பார்ப்போம்...'' என அதிரடியாக வெடித்தவர் தொடர்ந்து பொரிந்தார். ''இந்தக் கூட்டம் பா.ம.க-வுக்குப் போட்டிக் கூட்டம் கிடையாது. ஏன் தெரியுமா? அப்படி ஒரு கட்சியே இப்போது இல்லை.  இது ஒரு புதிய கட்சி தொடங்குவதற்கு அடித்தளம் போடும் கூட்டம். கொள்கை, கோட்பாடுனு இருந்த பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று பணம் மட்டும்தான் முக்கியம்! ஒவ்வொரு தேர்தலிலும் கோடி கோடியாகப் பணத்தை வாங்கிட்டுத்தானே அப்பனும் மவனும் ஸீட் கொடுக்கிறாங்க. பா.ம.க-வைத் தன்னோட குடும்பமும் வாரிசுகளும் மட்டும்தான் ஆளணும்னு நினைக்கிறார் ராமதாஸ். அதனாலதான், வயசு வித்தியாசம் பார்க்காம எல்லோரும் தன் பையனை 'சின்னய்யா’னு கூப்பிடச் சொல்றாரு. கோ.க.மணி இருக்காரே... அவர் ஒரு கோவில் மணி. மணியை அடிச்சாத்தானே சத்தம் வரும்? அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப். மணியும் காடுவெட்டி குருவும் ராமதாஸுக்குக் கூட்டாளிகள். அதனாலதான், சாதாரண ஸ்கூல் வாத்தியாரா இருந்த மணியோட பையன் இன்னிக்கு சினிமா ஃபைனான்சியராகி இருக்கார். உண்மையைப் பேசினால் எப்பவுமே 'அய்யா’வுக்குப் பிடிக்காது. வேல்முருகனும் உண்மையா இருக்கணும்னு நினைச்சதால்தான், இன்னிக்கு அவர் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிட்டாங்க. வேல்முருகன் தலைமையில் நாம் ஒன்று கூடுவோம். யார் நிஜமான பா.ம.க. என்பதைத் தைலாபுரம் குடும்பத்துக்குக் காட்டுவோம்'' என்று சூட்டைக் கிளப்பினார்.

அடுத்து, தாரமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான காமராஜ் எழுந்து, ''இனி நமது தலைவர் வேல்முருகன்தான். அவரது தலைமையில் நாம் புதிய கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு மாவட்டமாக அவர் வரப்போகிறார். மக்களைச் சந்திக்கப்போகிறார். ராமதாஸ் குடும்பம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றியது என்பதை பா.ம.க-வினரிடமும் பொதுமக்களிடமும் புட்டுப்புட்டுவைக்கப் போகிறார். பா.ம.க-வை பத்தியோ அதனுடைய கொள்கையை பத்தியோ தெரியாமல் இருக்கும் அன்புமணியைவிட எங்கள் வேல்முருகன் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர். இனி பா.ம.க-வும் எங்களுடையதுதான்; மாம்பழச் சின்னமும் எங்களுடையதுதான். அதைக் கைப்பற்றாமல் ஓய மாட்டோம்'' என்று சீறினார்.
முன்னாள் எம்.பி-யான பு.தா.இளங்கோவன், அவரது சகோதரர் பு.தா.அருள்மொழி ஆகியோரை யும்வேல்முருகன் சந்தித்துப் பேசி இருக்கிறார். பு.தா.இளங்கோவனிடம் பேசினோம். ''1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்தும், 1989-ல் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தும், தன்னையும் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் தாண்டி யாரும் தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கக் கூடாது என்பதில் ராமதாஸ் தெளிவாக இருப்பார். அப்படி யாராவது இருந்தால், அவர்களை வெளியேற்றிவிடுவார். அவர் செய்யும் தவறுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ யாராவது சுட்டிக் காட்டினால், அவர்கள் அத்தோடு தொலைந்தார்கள். வேல்முருகனுக்கும் அதுதான் நடந்திருக்கிறது. கட்சிக்காக உழைக்கும் யாரையும் ராமதாஸுக்குப் பிடிக்காது. சுய மரியாதை உள்ள யாரும் அந்தக் கட்சியில் இருக்க மாட்டார்கள். ராமதாஸின் பா.ம.க-வினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டிய நேரம் வந்திருக்கிறது. வேல்முருகனும் நானும் அதைத்தான் பேசி இருக்கிறோம். கூடிய சீக்கிரமே அனைவரையும் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்போம். வரும் 18-ம் தேதிக்குப் பிறகு பூதாகரமாக வெடிக்கப்போகும் விஷயங்களை நீங்களும் பார்க்கத்தானே போகிறீர்கள்...'' என்று பூடகமாகச் சொன்னார்.
வன்னியர் சமுதாய மக்களின் நாயகனாக விளங்கும் வேல்முருகன் என்ன சொல்கிறார்? ''ராமதாஸுக்கு முன்னாடி ஏ.கே.நடராஜன் வன்னியம் சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே நானும் அதில் இணைந்திருந்தேன். இந்த இனத்துக்காக அவர் செய்த துரோகங்களை ஆதாரத்தோடு என்னால் பட்டியல் போட முடியும். புதிய கட்சி தொடங்குவதுபற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள நம் உறவுகள் என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன். தமிழர்களுக்கு நிச்சயமாக தை பிறந்தால் வழி பிறக்கும். நான் ஏற்கெனவே, மாவீரர் தினம், கூடங்குளம் பிரச்னை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக உறுதி கொடுத்திருக்கிறேன். அதற்காக, நேரம் இல்லாமல் அலைந்துகொண்டு இருக்கிறேன். ஆகவே, எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றம், தை மாதத்தில் கண்டிப்பாக நடக்கும்.'' என்று உறுதியாகச் சொன்னார்.
தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு ஊராகப் போய் அதிருப்தியில் இருக்கும் பா.ம.க. நிர்வாகிகளிடமும் பேசுவதற்காக டூர் புரோகிராமைத் தயார் செய்துவிட்டாராம் வேல்முருகன்.
தைலாபுரத்தின் பதிலடியையும் கவனிப்போம்!
கே.ராஜாதிருவேங்கடம், வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார், ஜெ.முருகன் 
 'கொசுவை அடித்தோம்!’
'கடலூர் மாவட்ட பா.ம.க. கட்சி அலுவலகம் எனக்குத்தான் சொந்தம். தைரியம் இருந்தால் ஐயாவோ, மணியோ அல்லது குருவோ இந்த மண்ணில் கால் வைத்துவிட்டு அலுவலகத்தின் சாவியை வாங்கிக்கொள்ளட்டும்’ என வேல்​முருகன் பகிரங்கமாகச் சவால் விட்டிருந்​தார். ராமதாஸ் ஆதரவாளர்களோ கட்சி அலுவ​லகத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி காவல் துறையில் புகார் செய்தனர்.
கடலூரில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் இருக்க, சப் - டிவிஷனல் மாஜிஸ்திரேட் கிரன் குராலா உத்தரவின் பேரில், வட்டாட்சியர் எழிலன் மூலம் பா.ம.க. அலுவல​கத்துக்கு சீல் வைத்தனர். அலுவ​லகத்​தின் ஒரிஜினல் டாக்குமென்டை நீதிமன்​றத்தில் சரண்டர் செய்துவிட்டு சாவியை வாங்கிக்​கொள்​ளுங்கள் என வட்டாட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில்தான், வேல்முருகன் சவாலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என, கடந்த 13-ம் தேதி கடலூர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டி இருந்தார் ராமதாஸ். கூட்டத்துக்கு அவரே தலைமையும் ஏற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் வேல்முருகனைத் திட்டித் தீர்த்தனர். எந்தச் சலனமும் இல்லாமல் கடைசியாக மைக் பிடித்தார் ராமதாஸ். ''இந்தக் கூட்டத்துக்கு நான் வர வேண்டுமா என முதலில் யோசித்தேன். நிர்வாகிகளை மட்டும் அனுப்​பலாம் என நினைத்தேன். ஆனால், அது சரியா வராது என்றுதான் புறப்பட்டு வந்தேன். பிஞ்சிலேயே பழுத்தவர்கள் மக்களுக்குப் பயன்பட மாட்டார்கள் என்றுதான் தூக்கிப் போட்டுவிட்டோம். கொசு கடிச்சா, யாராவது வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போமா? கடிச்சது... தட்டினோம்... விழுந்துடுச்சு. அதுக்​காக வருத்தப்பட வேண்டியது இல்லை. பா.ம.க. ஒரு ஆலமரம். இதில், எந்தப் பறவைகளும் வந்து தங்கலாம்; பழங்களைத் தின்னலாம்...'' என்று எதையோ மறைமுகமாகப் பேசி முடித்தார்.
''கடலூர் மாவட்டப் பொதுக் குழு என்று பெயர் போட்டு​விட்டு பல மாவட்டத்தில் இருந்தும் ஆட்களைக் கொண்டுவந்துட்டாரு ராமதாஸ்'' என்று அங்கே இருந்தவர்களே சொல்லிக்​கொண்டதைக் கவனிக்க முடிந்தது!
க.பூபாலன்
************************************************************************
வைகோ மேடையில் தமிழச்சி!

தேவநேயப் பாவாணர் அரங்கில் சமீபத்தில் நடந்தது, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுடன், தி.மு.க-வின் தமிழச்சி தங்கப்பாண்டியனும் மேடை ஏற... ரசித்துக் கை தட்டியது கூட்டம்.
''என் தந்தையின் நீண்ட நெடுங்கால நண்பர் அண்ணன் வைகோ அவர்களே...''என்று புன்ன கையுடன் ஆரம்பித்த தமிழச்சி, காசி ஆனந்தனின் பல்வேறு கவிதைகளைப் படித்துக் காட்டிக் கூட்டத்தை வசப்படுத்தினார். ''இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது நாம் மௌனமாக இருந்தோம். கை கட்டி வேடிக்கை பார்த்தோம். இந்த உலகத்தில் கை கட்டி வேடிக்கை பார்த்துவிட்டு, கருத்து மட்டும் சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை...'' என்றார் தமிழச்சி.
அடுத்துப் பேசிய காசி ஆனந்தனின் பேச்சில் ஏக சீற்றம். ''வியட்நாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில், இந்தியாவில் புதுக்கவிதை எழுதியவர்களும் இலக்கியம் படைத்தவர்களும் உள்ளார்கள். ஆனால், ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொலை யுண்டு விழுந்த நேரத்தில், யார் ஈழத் தமிழ் மக்களுக் காக எழுதினார்கள்?
எத்தனையோ பெரிய கொடுமைகள் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டன. பெண் உறுப்பில் வெடி குண்டுவைத்து மட்டக்களப்பில் கோணேஸ்வரி சிதைக்கப்பட்டாள். புங்குடு தீவு கண்ணகி கோயிலில் வைத்து, சாரதாம்பாள் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள். இசைப் பிரியாவைச் சிறைப்படுத்திய இன வெறியர்கள், போர்க் கைதிகளை நடத்தும் உலக விதிப்படியா நடத்தினார்கள்? இல்லையே!
அவற்றை எல்லாம் எழுத்தில், கவிதையில், திரைப்படத்தில், சிற்பத்தில் வடிக்கும் காலம் வந் துள்ளது. ஓவியர் சந்தானம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வைத்து வரைந்த படத்தினை மாதிரியாகக்கொண்டு முருகன் என்கின்ற சிற்பி தஞ்சையில் சிலை வடிக்கிறார். அந்த நினைவுச் சின்னம் முள்ளிவாய்க்கால் கொடுமையினை இந்த உலகுக்கு என்றும் பறை சாற்றி நிற்கும். அப்படிப்பட்ட கலைஞனே இன்று இந்த மண்ணுக்குத் தேவை.'' என்று சீறினார்.
அடுத்து மைக் பிடித்த வைகோ, '' 'காந்தித் தாத்தா நல்ல தாத்தா... கருணை உள்ளத் தாத்தா... மாந்தரிலே பெரிய தாத்தா... மகாத்மா காந்தித் தாத்தா’ என்பதுதான் காசி ஆனந்தன் சிறு வயதில் எழுதிய முதல் கவிதை. காலம் எத்தகைய ஒரு பிரளயத்தை அவரின் இதயத்தில் உருவாக்கி இருக்கிறது. சின்ன வயதில் இப்படி எழுதியவர் இப்போது வெளியிட்ட நறுக்குகளில், 'மகாத்மா... கொல்லாதவன் உனக்கு மகாத்மா’ என்று எழுதி இருக்கிறார். என்ன சொல்ல வருகிறார் தெரிகிறதா? கொன்றவர்களைக் கொல்ப வன் எனக்கு மகாத்மா என்கிறார்...'' என்று வைகோ நிறுத்த, விசில் பறந்தது! 
தி.கோபிவிஜய்
படம்: வீ.நாகமணி
*********************************************************************************
எப்படி இருக்கிறது உயர் நீதிமன்றப் பாதுகாப்பு?

சென்னை செக்கப்
திறந்தே கிடக்கும் சத்திரம் போன்று எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் கிடந்தது, சென்னை உயர் நீதிமன்றம். இப்போது கண்காணிப்புகள் நிறைந்த பாதுகாப்புக் கோட்டையாக மாறியுள்ளது.
அனுமதி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, காவலரின் கையப்பம் பெற்றபிறகு வரிசையாகச் செல்லவேண்டும். முதலில் பேக்கேஜ் ஸ்கேனர் கொண்டு உடைமைகள் சோதிக்கப்படுகிறது. பின்பு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவி கொண்டு உடல் சோதனை நடைபெறுகிறது. இதன்பிறகே கோர்ட் வளாகத்துக்குள் நுழையமுடியும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு நீதிமன்ற வளாகம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்டோம்.
விமலா: (உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர்)
பாதுகாப்பு நடைமுறைக்கு மக்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள். காலை 10.30 மணிக்கு வழக்கு இருக்கிறது என்று சொல்லி, 10.20-க்கு அவசரமாக நுழைவதைத் தவிர்த்து  முன்கூட்டியே வருவதற்குப் பழக வேண்டும். கோர்ட்டுக்குள் நுழையும் போது ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்து இருந்தால், செக்கிங் ஃபார்மாலிட்டிக்கு வசதியாக இருக்கும்.
வழக்கு சம்பந்தமாக வருபவர்கள், தங்களுடைய வழக்கு எண் பற்றியும் எந்தக் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு வருவது நல்லது. சென்னை உயர்நீதி மன்றத்தில் இருக்கும் முக்கிய நுழைவாயிலான எஸ்பிளனேட் கேட், மக்கள் உள்ளே வர பயன்படுத்தப்​படுகிறது. மற்ற நுழைவாயில் களான பார் கவுன்சிலிங் கேட், ஆவின் கேட், நார்த் கேட், சௌத் கேட் மற்றும் லீகல் எய்ட் கேட் போன்ற அனைத்து வழிகளிலும் போலீஸ் பாதுகாப்புடன் மெட்டல் டிடெக்டர் பரிசோதனை நடைபெறுகிறது. காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி வரை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விரைவில், உயர்நீதிமன்ற வளாகத்தினுள் 16 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதனால் ஒரு நல்ல பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் நுழையும் இனிய சூழலை ஏற்படுத்தி இருக்கிறது, இந்த மாற்றங்கள்.
பிரசன்னா: (தலைவர், பெண் வழக்கறி​ஞர்கள் அசோசியேஷன்)
இப்போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வரவேற்கப்பட வேண்டியது. வழக்கறிஞர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை, அவர்களின் வாகனத்திற்கு பார் கவுன்சிலின் அனுமதிச்சீட்டு தரப்பட்டுள்ளது. பொது மக்கள் வாகனங்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் பொது மக்கள் தங்கள் பணியை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக வெளியே செல்லமுடிகிறது. இப்போதும் வாதி, பிரதிவாதிகளோடு சேர்ந்து உறவினர்களும், நண்பர்களும் வந்து விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
மோகன கிருஷ்ணன்: (சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர்)
டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு, சென்னையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்​பட்ட பிறகு, சந்தேகத்திற்குரிய நபர்கள் கோர்ட் வளாகத்தினுள் நுழைவது இல்லை. முன்பெல்லாம் கோர்ட் வளாகத்தில் சிலர் தூங்கிக்கொண்டு இருப்பார்கள், கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்ப்பார்கள். அவை எல்லாம் குறைந்துவிட்டது. அதே​போன்று, பொது மக்கள் இங்கே வண்டிகளை நிறுத்திவிட்டு ஷாப்பிங் செல்வதும் நின்று விட்டது. பக்கத்தில் இருக்கும் பழைய திருவள்ளு​வர் புறநகர் பேருந்து நிலையத்தின் காலி இடத்தையும் பார்க்கிங் வசதிக்காகப் பயன்படுத்திக் கொண்டால் கூடுதல் இட வசதி கிடைக்கும்.
அன்பு: (துணை கமிஷனர், பூக்கடை)
கடந்த ஒரு மாத​மாக சென்னை உயர்நீதி மன்றத்​தில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்​புடன் பாதுகாப்புப் பணிகள் செவ்வனே நடைபெறுகிறது. பெண்களுக்கெனத் தனி வரிசையும் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக வரிசையும் இருப்பதால் மிகவும் எளிதாக பரிசோதனை நடைபெறுகிறது. தலைமை நீதிபதி இக்பால், அவ்வப்போது ஸ்பாட் இன்ஸ்பெக்ஷன் செய்கிறார். பாதுகாப்பு காரணமாக தேவையற்ற ஆட்களும், வெளி வாகனங்கள் வருகையும் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த வளாகம் இப்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தாலும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. உள்ளே நுழைவதற்கு வழங்கப்படும் என்ட்ரி பாஸ், திரும்ப வாங்கப்பட்டு பதிவு செய்யப்படுவது இல்லை. ஒரு கேஸ் சம்பந்தமாக ஒன்பது பேர் வருகிறார்கள் என்றால் அனைவரது தகவல்களும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், ஒரே அனுமதி சீட்டில் 9 என்று எழுதிவிட்டு அனைவரும் நுழைகிறார்கள். மேலும் அனுமதிச் சீட்டினை நிரப்புவதற்கான இட வசதி எதுவும் இல்லை என்பதால் மேஜை தேடி அலைகிறார்கள்.
இந்தக் குறைபாடுகளை நீக்க,''டெல்லி, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புகைப்​படத்துடன் அனுமதிச் சீட்டு கம்ப்யூட்டர் மூலம் கொடுப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடு இங்கேயும் கையாளப்பட வேண்டும்'' என்கிறார்கள் நீதிமன்ற ஊழியர்கள்.
அடுத்தகட்டமாக அதுவும் நடைமுறைக்கு வரும் என்றே நம்புவோம்!
ரமா ஆல்பர்ட்
படங்கள்: என்.விவேக், கே.கார்த்திகேயன்
*********************************************************************************
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி

தலைநகரத்தில் நடந்த கொடுமை!
வம்பர் 9-ம் தேதி, காலை 9 மணி.
'பேபால்’ என்ற ஐ.டி. நிறுவனத்தின் வாயிலில் திரண்டு நின்றது 'சேவ் தமிழ்’ இயக்கம்! 'பேபால் நிறுவனம் சாதியத்தை வளர்க்கிறது’ என்று அர்த்தம் தொனிக்கும் பேனரைப் பிடித்திருந்த இயக்கத்தினர், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பொது​மக்களுக்கு துண்ட​றிக்கைகளைக் கொடுத்தனர். இதைக் கேள்விப்பட்டு ஆடிப்போனது பேபால் நிறுவனம்!
என்ன பிரச்னை?
சென்னைக்கு அருகே சோழிங்கநல்லூரில்இருக்கிறது பேபால் ஐ.டி. நிறுவனம். அது தனது ஆண்டு விழாவைக் கொண்டாட இருந்தது. வழக்கமாக இதுபோன்ற விழாக்களுக்கு முன்பு ஊழியர்கள் மத்தியில் குழுக்கள் அமைக்கப்படும். அந்தக் குழுக்களுக்கு இடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் அளிப்பதும் வழக்கம். இந்த ஆண்டும் அப்படி கொண்டாட நினைத்தது பேபால் நிறுவனம். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அந்தக் குழுக்களுக்கு 'அய்யர்ஸ் ஆஃப் தமிழ்நாடு’, 'பானர்ஜீஸ் ஆஃப் வெஸ்ட் பெங்கால்’, 'பட்டேல்ஸ் ஆஃப் குஜராத்’ என்று ஒவ்வொரு மாநிலத்​திலும் உள்ள  சாதிக்களின் பெயர்களை சூட்டியதுதான் பிரச்னை.
இந்தப் பெயர்கள் அடங்கிய பேனர்களை அந்த நிறுவனம் தனது வாயிலில் வைத்திருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் பழைய மகா​பலிபுரம் சாலையில் அந்த பேனரைக் கண்ட 'சேவ் தமிழ்’ இயக்கத்தினர் கொதித்துப் போய் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.
உடனே பதறிப்போன பேபால் நிறுவனம், சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை எல்லாம் அகற்றியது. அதோடு, நிறுவன தரப்பில் இருந்து செக்யூரிட்டி பிரிவின் தலைவர் தமிழ் சேவ் இயக்கத்தினரிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தார். அவரிடம் பேச மறுத்த போராட்ட அமைப்பு, 'ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட் நபர்கள் வரவேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது. ஹெச்.ஆர். கார்ப்பரேட் கம்யூனிகேஷன் அதிகாரியான கிருத்திகா செல்போனில் பேசி இருக்​கிறார். போராட்டக் குழுவோ, 'அவர் நேரில் வந்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அதை பத்திரிகை​களுக்கு செய்தியாகத் தர வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது.
காவல் துறைக்கு தகவல் சொல்லி, லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வந்து சேர்ந்த பின்னரே கிருத்திகா ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்க வந்தார். வரும்போதே மன்னிப்புக் கடிதம் எழுதி வந்திருந்தார். ''குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இன்றியே இந்தப் பெயர்களை வைத்தோம். இந்தியாவில் பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான் இப்படி பெயர் வைத்தோம். அதைத் தவறு என்று உணர்கிறோம். பேபால் நிறுவனம் இதற்காக மன்னிப்புக் கேட்கிறது. குழுக்களுக்கு வைத்தப் பெயர்களை மாற்றி அமைக்​கிறோம்!'' என்று கிருத்திகா சொன்ன பிறகுதான்
சர்ச்சை ஓய்ந்தது!
கவின் மலர், படங்கள்: காயத்ரி
*********************************************************************************
''மனுஷ உயிரு மலிவாப் போயிருச்சா..?''

நாய்க் கடிக்கு நடுங்கும் காஞ்சி மக்கள்
காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 41 பேரைக் கடித்துக் குதறி இருக்கிறது ஒரு நாய். பொதுவாகவே, காஞ்சிபுரம் தெருக்களில் நாய்களின் நடமாட்டம் அதிகம். நகராட்சி அலுவலகத்துக்கு மக்கள் பல முறை மனு கொடுத்தும், நடவடிக்கை எதுவும் இல்லை. இந்த நிலையில்தான், ஆலடித் தோப்பு பிள்ளையார் கோயில் தெருவில் திரிந்த ஒரு நாய்க்கு வெறி பிடித்து கடிக்கத் தொடங்கியிருக்கிறது. நாயிடம் கடிபட்ட அத்தனை பேரும் இப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பாலசுந்தரம், ''வீட்டு வாசல்ல பாவு போடுறதுக்காக நின்னுக்கிட்டு இருந்தேன். அந்த நாய் காலை கடிச்சிடுச்சி. சுதாரிக்கிறதுக்குள்ள, ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது'' என்று சொல்ல, குறுக்கிட்ட ரவி என்பவர், ''இதுல கொடுமை என்னன்னா வெறிநாய் கடித்த விஷயத்தை, எங்க கவுன்சிலர் சுபாஷினிகிட்ட சொன்​னோம். 'நாய்தானே கடிச்சது. போய் டாக்​டரைப் பாருங்க!’ன்னு சாதாரணமா சொல்லிட்​டாங்க. இவங்களுக்கு மனுச உயிரு ரொம்ப மலிவா போயிடுச்சி'' என்றார் ஆதங்கத்துடன்!
அந்த வெறிநாய், மேட்டுத் தெரு, கரிக்கினில் அமர்ந்தவள் தெரு என அடுத்தடுத்த தெருக்களில் திருவிளையாடல்களைத் தொடர்ந்ததில், காஞ்சி நகர மக்களிடம் பெரும் பீதி. சில இளைஞர்கள், தேடுதல் வேட்டை நடத்தி அந்த வெறி நாயைக் கண்டுபிடித்து அடித்துக் கொன்று விட்டார்களாம்.
நாய்க்கடி குறித்து அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட கவுன்சிலர் சுபாஷினியிடம் பேசினோம். ''நகராட்சிக் கூட்டத்துக்குச் செல்வது மட்டும்தான் என்னுடைய வேலை. மற்ற விஷயங்களை என் கணவர்தான் கவனிக்கிறார்.  அதனால், இந்த விவகாரத்தில் எனக்கு ஒன்றும் தெரியாது'' என்றார்.
அவரது கணவர் ரவி, ''நாய் கடித்தவுடன் முதலில் மருத்துவமனைக்குச் செல்லுங்கள், எதற்கு கவுன்சிலரிடம் வருகிறீர்கள் என்றுதான் சொன்னேன். அதைத் தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள். நாயிடம் கடிபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன். அந்தத் தெருவில் தி.மு.க-வினர் அதிகம். அதனால், வேண்டுமென்றே புகார் சொல்கின்றனர்'' என்றார்.
இதுகுறித்துப் பேசிய நகராட்சித் தலைவர் மைதிலி, ''சம்பவம் பற்றி அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். ரெட் கிராஸ் அமைப்புக்கு தகவல் கொடுத்து விட்டோம். காஞ்சிபுரம் நகர் முழுவதும் திரியும் நாய்களைப் பிடிக்க உடனே நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.
வேகமா செய்ங்க!
கிருபாகரன்
************************************************************************
''சிவானந்தம் தனி ராஜ்யம்!''

ஆரணி தி.மு.க.வில் உள்குத்து அமர்க்களம்!
ரணியில் தி.மு.க-வினர் இடையே நடந்து வந்த கோஷ்டி மோதலின் உச்சத்தில், ஒன்றியச் செயலாளர் உள்பட மூவரை தற்காலிகமாக நீக்கி யுள்ளது கட்சித் தலைமை. இதற்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு கோஷ்டி, கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை நீக்கியதற்கு தலைமையைப் பாராட்டி போஸ்டர்களை ஒட்ட... பரபரப்பாக இருக்கிறது ஆரணி!
ஆரணி தி.மு.க. முக்கிய புள்ளிகளிடம் பேசியபோது, ''மேற்கு ஆரணி ஒன்றியச் செயலாளர் சங்கருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-வான சிவானந்தத்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே பனிப்போர்தான். கடந்த சட்டசபைத் தேர்தலில் சிவானந்தம் எம்.எல்.ஏ. ஸீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தார். அதோடு, 'வேறு யாரும் மனு செய்யக் கூடாது’னு கறாரா சொல்லிட்டார். உடனே, மாவட்டச் செயலாளரிடம் சங்கர் கோஷ்டி முறையிட்டது. அவரோ, 'யார் வேண்டுமானாலும் விருப்ப மனு செய்யலாம்’னு சொன்னார். அதன் பிறகு பலர் மனு செய்தார்கள். அந்தத் தேர்தலில் சிவானாந்தம் தோற்றுவிட்டார். உடனே அவர் கூட்டம் போட்டு, 'தனது தோல்விக்கு சங்கரும் அவரது ஆதரவாளர்களும்தான் காரணம். அவர்களை கட்சியைவிட்டு நீக்க வேண்டும்’னு தீர்மானம் போட்டார். அதைத் தலைமைக்கும் அனுப்பினார். உடனே, சங்கர் தன் ஆதரவாளர்களுடன் போட்டிக் கூட்டம் போட்டார். அதற்கு சிவானந்தம் தனது ஆதரவாளர்களுடன் சென்றதால் அங்கே அடிதடி நடந்தது. உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த மோதல் காரணமாக சங்கருக்கு வாய்ப்புக் கொடுக்கலை. அவர் சுயேச்சையாகப் போட்டிடுவேன்னு சொன்னார். உடனே சங்கர் கோஷ்டியைச் சேர்ந்த நாலு பேருக்கு மட்டும் வாய்ப்புக் கொடுத்தாங்க. கடுப்பான சங்கர் சுயேச்சையாக நின்றார். மாவட்டச் செயலாளர் தலையிட்டு அவரை சமாதானம் செய்து, வாபஸ் வாங்க வைத்தார்.
தனக்கு ஸீட் கிடைக்காத காரணத்தால் சங்கர் தேர்தல் வேலைகளை செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார். அவரது ஆதர வாளர்கள் நாலு பேரையும் தோற்கடிக்க சிவானந்தம் முயற்சித்தார். அப்படியும் திருமால் என்பவர் மட்டும் ஜெயித்தார். அவரும் சிவானந்தத்தின் செயலால் திடீரென அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித் தார். அ.தி.மு.க-வும் அவரையே பஞ்சாயத்து யூனியன் தலைவர் வேட்பாளராக அறிவித்தது. கடுமையான போட்டிக்கு பிறகு மேற்கு ஆரணி யூனியன் தலைவர் பதவியை ஒருவழியாக தி.மு.க. கைப்பற்றியது. இதை எல்லாம் அறிந்த தலைமை, சங்கர் உட்பட அவரது ஆதரவாளர்களை தற்காலிகமாக நீக்கியது. அப்புறம் சிவானந்தம் ஆதரவாளர் கள், 'மேற்கு ஆரணி ஒன்றிய தி.மு.க. துரோகிகளை நீக்கிய தலைவர், தளபதி மற்றும் மாவட்ட கழகத்துக்கும் நன்றி நன்றி நன்றி’னு போஸ்டர் அடித்து ஒட்டினர்'' என்றனர்.
சங்கரிடம் பேசியபோது, ''ஆரணியில் சிவானந்தம் தனி சாம்ராஜ்யம் நடத்த நினைக்கிறார். அவரை யாரும் எதிர்த்து கேட்கக் கூடாது. அவரை எதிர்த்து குரல் கொடுப்பதாலேயே என் மீது அவருக்குக் கோபம். சட்டசபை தேர்தலில்கூட அவரை எதிர்த்து நான் விருப்ப மனு கொடுத்தேன் என்பதற்காக தலைமைக்கு என்னைப்பற்றி தவறான தகவல்களை கூறினார். ஆரணியில் அவரும் அவரது தம்பிகளும் செய்த கட்டப் பஞ்சாயத்து காரணமாகதான் அவர் தோல்வி அடைந்தார். அதை எல்லாம்மறைத்துவிட்டு என் மீது குற்றம் சாட்டுகிறார். உள்ளாட்சித் தேர்தலில் என் ஆதரவாளர் ஒருவர் வெற்றி அடைந்தும், அவரது ஆதரவை சிவானந்தம் கேட்கவில்லை. என் ஆதரவாளர் வெறுத்துப்போய் அ.தி.மு.க-வுக்கு தனது ஆதரவை தெரிவித்துவிட்டார். அதற்கு எப்படி நான் பொறுப்பாக முடியும்? விரைவிலேயே தலைவரை பார்த்து என் மீது சொல்லப்பட்ட குற்றச் சாட்டுக்களுக்கு விளக்கம் சொல்லப் போகிறேன்'' என்றார்.
தற்காலிகமாக நீக்கப்பட்ட ஒன்றிய இளைஞர் அணி அமைப் பாளர் பாபுவோ, ''நான் பரம்பரை தி.மு.க-காரன். சிவானந்தம் கட்சிக்கு எப்படி வந்தார் என்பது மற்றவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ... எனக்கு நல்லாவே தெரியும். அவரோ இன்னிக்குஎங்களை தற்காலிகமாக நீக்கியதற்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுறார். போஸ்டர் அடிச்சு ஒட்டி எங்களை கேவலப்படுத்துறதா நினைச்சு கட்சியைத்தான் கேவலப்படுத்தி இருக்கிறார். எந்த ஒரு தீவிர கட்சிக்காரனும் இதுபோல செய்வானா? எங்கள் தரப்பு நியாங்களை தலைவரிடமும் தளபதியிடமும் சொல்லப் போறோம். நிச்சயம் மாற்றம் வரும்'' என்று ஆவேசப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை சிவானந்தத்திடம் கேட்டோம். ''ஆமாம், உண்மைதான். நான்தான் தலைமைக்கு அவர்கள் மீது புகார் அனுப்பினேன். அவர்கள் கட்சிக்கே துரோகம் செய்தவர்கள். தி.மு.க-வில் நின்று ஜெயித்துவிட்டு அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தருகிறவர்களை எப்படி கட்சியில் வைத்துக்கொள்ள முடியும்? தலை மையும் ஆராய்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறது. இன்னும் இதுபோல் சிலர் நீக்கப்பட வேண்டி யவர்கள். அவர்கள் மீதும் தலைமை விரைவில் நடவடிக்கை எடுக்கும்'' என்றவரிடம், ''தலைமை நடவடிக்கை எடுத்திருக்கும்போது நீங்கள் போஸ்டர் அடித்து கொண்டாடியது சரியா?'' என்று கேட்க, ''அவர்கள் மீதுள்ள வெறுப்பில் கட்சிக்காரர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி இருக் கிறார்கள்'' என்று மட்டும் சொன் னார்.
ஆரணியில் நடக்கும் உள்கட்சிப் பூசலை தி.மு.க. தலைமை ஆராயுமா?
- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்
*********************************************************************************
குடிக்கத் தண்ணீர்... கடக்க நடை பாதை!

குறைகளைத் தீர்ப்பாரா வேலூர் மேயர்
வேலூர், மாநகராட்சியானதும் முதல் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்து இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று மேயர் ஆகியிருக்கிறார், கார்த்தியாயினி. புதியவர், துடிப்புடன் செயல்படுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் இவரைத் தேர்வு செய்து இருக்கிறார்கள்.
இப்போது, இவர் முன்னே இருக்கும் பிரச்னைகளைப் பட்டியல் இட்டார்கள் வேலூர் மக்கள். ''சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதிகளில் உள்ள சென்னை - பெங் களூரு தேசிய நெடுஞ்சாலையை, பாதசாரிகள் கடக்கவே முடியாத அளவுக்கு சிரமமாக இருக்கிறது. எப்போதும் அதிவேகமாக போக்குவரத்து இருக்கிறது. அதனால் நொடி நேரம் கவனிக்காமல் சாலையைக் கடந் தாலும் விபத்தில் சிக்கி உயிரிழக்க வேண்டி இருக்கிறது. இப்படி ஏராளமான விபத்துகள் நடந்து பலர் உயிர் இழந்து இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள சாலையிலும், சி.எம்.சி. மருத்துவமனைக்கு எதிரில் உள்ள சாலையிலும்கூட‌ இதே நிலைதான். இந்த இடங்களில் எல்லாம் பாதசாரிகள் சாலைகளைக் கடக்க சுரங்க நடைபாதை அமைக்கவேண்டும். அப்போதுதான், அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தடுக்கப்படும்.
ஏற்கெனவே மக்கள் தொகை அதிகம் உள்ள வேலூர் நகரத்தில் சி.எம்.சி. மருத்துவமனை, ஸ்ரீபுரம் தங்கக் கோயில் போன்ற இடங்களுக்கு மற்ற இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகிறார்கள். அவர்களை மோச மான முறையில் வரவேற்கிறது புதிய மற்றும் பழைய‌ பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகள். அசுத்தத்தில் முதலிடம் வகிக்கும் இந்த கழிப்பறைகள்
முறையற்ற பராமரிப்பில் இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்டகட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் கொடு மையும் நடக்கிறது. இதனை தடுத்து நிறுத்தி சுத்தமாக்க வேண்டும். இவை எல்லா வற்றையும் தாண்டி பல ஆண்டு காலமாக தீர்வுக்கு வராத பிரச்னையாக எங்களை வாட்டி வருகிறது, குடிநீர் பிரச்னை. இதோ தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பி நம்பியே ஏமாந்துபோனோம். இனியாவது குடிக்கத் தண்ணீர் சிக்கலின்றி கிடைக்கவேண்டும்.
பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பதே தெரியவில்லை.  மழைக்காலங்களில் சாலைகளில் கரைபுரண்டு ஓடும் நீரில் கழிவுகளும் சேர்ந்து வருவதால், மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் வாழ வேண்டி இருக்கிறது'' என்று ஒருசேரச் சொன்னார்கள், பொதுஜனங்கள்.
மக்களின் குமுறல்களை மேயர் கார்த்தியாயினியிடம் முன்வைத்தோம்.
''வேலூர் மாநகராட்சியின் முந்தைய நிலை பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. தற்காலிக அடிப்படையில் எதையும் செய்யாமல் நிரந்தரத் தீர்வாக மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க நினைக்கிறேன். அதனால் கொஞ்சம் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. மக்கள் குறைகளை உடனடியாக அறிந்து செயல்படும் விதமாக, எந்த நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் என்னுடைய அலைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் மக்களிடம் கொடுத்து இருக்கிறேன். விரைவில் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வேன்'' என்றார் நம்பிக்கை வார்த்தைகளுடன்.
நம்பிக் காத்திருக்கிறார்கள் மக்கள்.
ரியாஸ், படங்கள்: ச.வெங்கடேசன்
*********************************************************************************
படித்த பள்ளியை தத்து எடுத்த எம்.எல்.ஏ.!

ஆற்காடு அசத்தல்
'தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்திக் காட்டவேண்டும் என்ற நோக்கோடு எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.கே.ஆர்.சீனிவாசன் ஆற்காட்டில் உள்ள‌ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தத்து எடுத்து இருக்கிறார்’ என்று  வாசகர் ஒருவர் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) தகவல் சொல்லவே, விரைந்தோம்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் பேசியபோது, 'இந்தப் பள்ளி 85 ஆண்டு பழைமை வாய்ந்தது. இந்தப் பள்ளியின் பழைய மாணவர்தான், எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்று இருக்கும் வி.கே.ஆர்.சீனிவாசன். வெற்றி பெற்றதும் இந்தப் பள்ளிக்கு முதல் விசிட் செய்து, இந்தப் பள்ளியை தத்து எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுத்திருக்கிறார். இப்போது பள்ளியின் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி, நபார்டு திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. வகுப்பறைகள், மீட்டிங் ஹால் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கும் வேலைகள் முடிந்துவிட்டன.
எங்கள் கழகத்தின் மூலமாக நியமிக்கப்பட்டிருக்கிற ஆசிரியர், காவலாளி மற்றும் துப்புரவுப் பணியாளருக்கான  மாதச் சம்பளத்தை எம்.எல்.ஏ. தன் சொந்தப் பணத்தில் வழங்குகிறார். மேலும் மாணவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் பரிசுகளும் அறிவித்து இருக்கிறார்'' என்று பட்டியல் போட்டார்கள்.
பள்ளியின் சார்பில் பேசியவர்கள், ''ப‌ள்ளியின் சுற்றுச் சுவ‌ர் முழுமையாக‌ அமைக்க‌ப்படுவது நல்ல பாதுகாப்பு. வெளி ஆட்களால் பள்ளிக்குள் சமூகக் குற்றம் நிகழாமல் தடுக்கப்படும். இதுவ‌ரை ப‌ள்ளிக்கு காவ‌லாளி மற்றும் துப்புரவுப் ப‌ணியாள‌ர் இல்லாத குறையும் தீர்ந்துபோனது. சுகாதாரமான கழிப்பறை, சுத்தமான குடிநீர் என முக்கியத் தேவைகளை செய்து கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்கள்.
சீனிவாச‌னைத் தொடர்புகொண்டபோது, ''புர‌ட்சித் த‌லைவி அம்மாவின் ந‌ல்லாட்சியில் ம‌க்க‌ளின் தேவைக‌ள் அனைத்தும் நிறைவேற‌ வேண்டும் என்ற‌ நோக்கோடுதான் எனது பணிகளை சேவை ம‌ன‌ப்பான்மையோடு செய்துவ‌ருகிறேன். அம்மாவின் ஆட்சியில் மாண‌வ‌ மாண‌விக‌ளுக்கென‌ அரிய‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ள் அம‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகின்றன. சிற‌ந்த‌ க‌ல்விச் சேவை செய்ய‌ வேண்டும் என்ற ஆர்வ‌த்தால்தான் ஆற்காடு அர‌சு ஆண்க‌ள் மேல்நிலைப் ப‌ள்ளியை த‌த்து எடுத்தேன். ஏழை மாண‌வ‌ர்களுக்கு வ‌றுமையாலோ வ‌ச‌தி வாய்ப்பு இன்றியோ அவ‌ர்க‌ளின் க‌ல்வி பாதிக்க‌ப்ப‌ட்டுவிட‌க் கூடாது என்ற‌ எண்ண‌த்தில் அவர்களுக்கு மறுப்பின்றி உதவிகள் செய்து வருகிறேன். ‌ஐந்து ஆண்டுகளுக்கு என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்து இப்பள்ளியை தத்து எடுத்திருக்கிறேன். இந்த ஒப்பந்த காலங்களுக்குள் அம்மாவின் ஆசியோடு எந்த தரத்துக்கும் குறை இல்லாத பள்ளியாக இதனை உருவாக்கிக் காட்டுவேன்'' என்றார்.
நாமும் பாராட்டுவோம்.
ரியாஸ்
************************************************************************
பரஞ்சோதி 'இன்' சிவபதி 'அவுட்'

திருச்சி பாலிடிக்ஸ் கலக்கல்
திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் விறுவிறுவென உச்சத்தைத் தொட்டுவிட்டார் பரஞ்சோதி. 'இப்போதைக்கு திருச்சியில் பட்டொளி வீசி பறப்பது பரஞ்சோதியின் கொடிதான்!’ என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார் பரஞ்சோதி. எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்த காரணத்தால் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பரஞ்சோதி வசம் இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சித் தலைவியான ஜெய லலிதாவே போட்டியிட்டதால், வேறு தொகுதி எதுவும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வரானதும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற அலுவலக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் பரஞ்சோதி. அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று பூரித்தார், பரஞ்சோதி.
இதற்கிடையில், எதிர்பாராத வகையில் அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் சிக்கி அகால மரணம் அடையவே, திருச்சி மேற்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. மரியம்பிச்சையின் குடும்பத்தில் இருந்து யாருக்கேனும் வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வந்த சூழலில், பரஞ்சோதிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. பெரும்புள்ளி கே.என்.நேருவை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். வெற்றிக்குப் பரிசாக, திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு தேடி வந்தது. அந்த சந்தோஷத்தில் திளைத்தபோதே, அமைச்சர் பதவியும் தேடி வந்தது. இந்து சமய அற நிலையங்கள், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை பரஞ்சோதிக்கு ஒதுக்கப்பட்டது. இதுவரை அமைச்சர் மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த சிவபதி 'முன்னாள்’ ஆகிவிட, பரஞ்சோதி 'ஆல் இன் ஆல்’ ஆகியிருக்கிறார்!
அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கையோடு, கடந்த 9-ம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவலில் நடந்த மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, லேப்டாப் மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய பரஞ்சோதி, ''தமிழகத்திலேயே ஸ்ரீரங்கத்தில் தான் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே முதன் முறையாக மகளிர் தோட்டக் கல்லூரி திருச்சியில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஸ்ரீரங்கத்தில் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. ஒரு அரசு 50 ஆண்டு காலத்தில் செய்யும் சாதனையை முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த ஐந்து மாதத்திலேயே செய்து முடித்துவிட்டார்'' என்று பேசினார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தி  மற்றும் சிறப்புத் திட்ட அமலாக் கத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு செம காரம். ''சாதாரண தொண்டனை அமைச்சராக்கி அழகு பார்த்த முதல்வர் புரட்சித் தலைவி அம்மா இருக்கும் போயஸ் தோட்டத்தை நோக்கி வணங்குகிறேன்'' என்று பெரிதாக கையெடுத்துக் கும்பிட்டவர்,  ''புரட்சித் தலைவி அம்மாவை வெற்றி பெற வைத்து மீண்டும் அவரை முதல்வர் ஆக்கிய புண்ணிய பூமி இது. எல்லாத் துறைகளிலும் இந்தத் தொகுதி முன்னேறப் போவது உறுதி. தாளிப்பதற்கு வெங்காயம்கூட கொடுக்காதவர் கருணாநிதி. ஆனால், ஏழை வீட்டுப் பெண்களின் தாலிக்கு தங்கம் கொடுப்பவர் நமது முதல்வர். கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பதை போல, பெண்கள், மாணவர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் தினம் ஒரு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் நமது முதல்வர்.
2006-ல் நடந்த விபத்தின் காரணமாக (சட்டமன்றத் தேர்தலை சொல்கிறார்) முதல்வரான கருணாநிதியும், அவரது குடும்பமும் ஏராளமாக சம்பாதித்து விட்டனர். அதன் பயனாக இன்று அவரது மகள் கனிமொழி திகார் சிறையில் இருக்கிறார். செய்த தவறுகளுக்காக கருணாநிதியின் குடும்பம் தண்டனை யின் பிடியில் சிக்கி இருக்கிறது'' என்றார்.
அடுத்து பேசிய திருச்சி எம்.பி-யான குமார், ''லோக்சபாவில் இருக்கும்போது என்னை சந்தித்த பஞ்சாப் எம்.பி. ஒருவர், தமிழகத்தில் எல்லாமே இலவசமாகத் தருகிறார்களாமே... நாங்களும் அங்கேயே வந்துவிடலாம் என்று நினைக்கிறோம்’ என்று சொன்னார். அதற்கு நான், 'நீங்கள் தமிழ் நாட்டுக்கு வர வேண்டும் என்றால், எங்கள் முதல்வர் பிரதமராக ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொன்னேன். அந்த எண்ணம் நிறைவேற மக்களா கிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்'' என்றார்.
பதவி பறிக்கப்பட்ட சிவபதி, ''என்றும் உங்களில் ஒருவனாக இருந்து இந்த மாவட்டத்துக்கும், தொகுதி மக்களுக்கும் நல்ல விஷயங்கள் கிடைக்கப் பாடுபடு வேன்'' என்றார் அடக்கமாக.
திருவானைக்காவலில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், தனது ஆதரவாளர்கள் புடைசூழ சைரன் காரில் வலம் வந்து திருச்சியை சுற்றிச்சுற்றி வந்து கலக்கினார் பரஞ்சோதி.
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************
தஞ்சாவூரை சரி பண்ணுவாங்களா?

சென்னை மாநகராட்சியைப் போலவே தஞ்சாவூர் நகராட் சியை முதன் முறையாக அ.தி.முக. கைப்பற்றி உள்ள நிலையில், 'தஞ்சாவூர் நகரம் முழுக்க விரவிக்கிடக்கும் நிர்வாக மற்றும் சுகாதார சீர்கேடுகளை புதிய நகராட்சித் தலைவராவது தீர்த்து வைப்பாரா?’ என ஏக்கத்தில் உள்ளனர் தஞ்சை நகர மக்கள்!
தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹுமாயுன், 'சோழர் காலத்தில், மிகப் பெரிய பரப்பளவில் சரியாக திட்டமிடப்பட்டு நிர் மாணிக்கப்பட்ட நகரம் தஞ்சாவூர். ஆனால், இன்று மிக மோசமாக இருக்கிறது.  சுற்றுலா மற்றும் வரிகளுடன் போதுமான வருவாய் கிடைத்து வந்தாலும், மக்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளன. பாதாள சாக்கடை திட்டம் அரைகுறையாக இருப்பதால் சாலைகள் மோசமாகிவிட்டன. நெற்களஞ்சிய மண்ணில் குடிநீருக்கும் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது. பல தெருக்களில் குப்பை அள்ளுவதே கிடையாது. சாந்தப்பிள்ளை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டப் பட வேண்டும் என்பது சமூக அக்கறை உள்ளவர்களின் வேண்டுகோள். ஆனால், சில அரசியல்வாதிகளால், கடந்த ஆட்சியில் கீழ்பாலம் கொண்டுவர தீர்மானம் போடப்பட்டது. ஏற்கெனவே, ரயிலடி அருகே உள்ள கீழ்பாலத்தினால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இங்கும் கீழ்பாலம் அமைத்ததால், மக்களுக்கு சிரமம்தான்'' என்று கோரிக்கை வைத்தார்.
அடுத்துப் பேசிய வழக்கறிஞர் சுதாகர், 'முக்கிய பொழுதுபோக்கு இடமான சிவகங்கை பூங்காவில் அநாகரிக காட்சிகளே அதிகம் நடக்கின்றன. உள்ளே இருக்கும் சந்தன மரங்களையே எளிதாக வெட்டிக் கடத்திச் செல்கின்ற அளவுக்குத்தான் பராமரிப்பு உள்ளது. அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் சுகாதாரம் மோசமாக உள்ளது. மழை பெய்தவுடனே சாலைகள் அபாயகரமானதாக மாறிவிட்டன. பழைய பஸ் ஸ்டாண்டில் சுரங்கப் பாதை அமைக்க முயற்சிக்கப்பட்டது. அதுவும் கேட்பார் இன்றி கிடப்பில் போடப்பட்டு விட்டது. பழைய பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தவும் ஒழுங்கு படுத்தவும் வேண்டும்' என்றார்.
இதுபற்றி தஞ்சாவூர் நகராட்சியின் புதிய தலைவர் சாவித்திரி கோபாலிடம் கேட்டபோது, 'சாந்தப்பிள்ளை கேட்டில் நிச்சயம் மேம்பாலம் அமைக்கப்படும். பழைய பேருந்து நிலையத்திலும் மக்கள் போக்குவரத்து வசதிக்காக பாலம் அமைக்க முயற்சிக்கிறோம். கடந்த ஆட்சியில் குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய், முறையாக செல விடப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் நகரம் முழுக்க குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நகரம் முழுக்க குப்பைகளை அள்ள போதுமான அளவுக்கு கருவிகள் வாங்கப்படும். நகர சுகாதாரம் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். பழைய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்துக்காக அருகில் கட்டப்பட உள்ள கலையரங்க இடத்தை பயன்படுத்திக்கொள்வோம். தஞ்சாவூர் நகராட்சியை முதல் முறையாக அ.தி.மு.க. வசம் நம்பிக்கையோடு மக்கள் கொடுத்துள்ளனர். அதை காப்பாற்றுவோம்' என்றார் தெளிவாக.
பார்ப்போம்!
சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்
*********************************************************************************
திவாகரனின் மந்திரப் புன்னகை

கொண்டாடும் டெல்டா அ.தி.மு.க-வினர்
ருணாநிதியின் குடும்ப வாரிசுகள் வாழும் இடங்கள் எல்லாம் தி.மு.க-வின் அதிகார மையங்கள் என வர்ணிக்கப்படும். அதே போல, சசிகலாவின் நெருங்கிய உறவினர்களே அ.தி.மு.க-வின் அதி கார மையங்கள் என அ.தி.மு.க-வின் தொண்டர் கள் பலமாக நம்புகின்றனர். தற்போது, நன்னிலம் ஆர்.காமராஜுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் வாங்கி கொடுத்ததன் மூலம், டெல்டாவின் அ.தி.மு.க. அதிகார மையம் திவாகரன் என நிரூபித்துள்ளார் என் கிறார்கள் அரசியல் விவர புள்ளிகள்!
சசிகலாவின் உடன் பிறந்த தம்பி திவாகரன் 'அமைதியான தோற்றமும், தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளாத குணமும்கொண்டவர்’ என பெயர் எடுத்தாலும், டெல்டாவில் நடக்கும் அத்தனை அரசியல் நிகழ்வுகளுக்கும் அவர் பெயர் ஏதோ ஒரு வகையில் அடிபடும். இந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட முதல் வேட்பாளர்கள் பட்டியல், பின்னர் திருத்தி வெளியிடப்பட்டது. பல வேட்பாளர்கள் மாற்றப்பட்ட போதும், திவாகரன் ஆதரவாளர்களுக்கு மட்டும் ஸீட் கிடைத்தது. டெல்டாவில் பலமாக இருந்த ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை உடைத்து, சிற்றரசு மூலம் முக்குலத்தோர் ஓட்டு வங்கியை அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கச் செய்தார் என்ப தால், திவாகரன் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை உண்டு'' என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.
'தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், மன்னார்குடியில், திவாகரன் சிபாரிசு செய்த வேட்பாளர் சிவா.ராஜா மாணிக்கம் தோல்வியைத் தழுவினார். இதனால், திவாகரன் மீது ஜெயலலிதா மனக்கசப்புகொண்டார். அதன் விளைவாக, திவாகரன் ஆதரவாளர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. மன்னார்குடி குடும் பத்தைக் கண்டுகொள்ளாத வைத்திலிங்கத்துக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. இதனை அடுத்து, 'திவாகரனுக்கு  செல்வாக்கு இருக்கிறதா?’ என்கிற பட்டிமன்றமே டெல்டாவில் நடக்கத் தொடங்கியது.
விட்ட இடத்தைப் பிடிக்க திவாகரன் உள்ளாட்சித் தேர்தலை பயன்படுத்திக் கொண் டார். திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் அ.தி.மு.க-வை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் ஜெயலலிதாவிடம் டெல்டா அ.திமு.க. கோட்டை என நிரூபித்தார். அமைச்சரவை மாற்றத்தில், திவாகரனின் ஆதரவாளரான ஆர்.காமராஜுக்கு உணவுத் துறை கொடுக்கப்பட்டது. பதவியேற்று மன்னார்குடி வந்த ஆர்.காமராஜ், 'பாஸ் மேல் கொண்ட விசுவாசத்துக்குதான் அமைச்சர் பதவி கிடைத்தது’ என நெகிழ்ந்து கண்ணீர்விட்டார். இன்னொரு வகையில், வைத்திலிங்கத்தின் கை டெல்டாவில் உயர்வதை தடுக்கவும் ஆர்.காமராஜுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததாகவும் சொல்கிறார்கள்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபய துல்லாவை தோற்கடித்த ரெங்கசாமி, திருமயம் எம்.எல்.ஏ-வான வைரமுத்து மற்றும் விராலிமலை எம்.எல்.ஏ-வான விஜயபாஸ்கர் ஆகியோரும் அடுத்த மந்திரி சபையில் இடம் பெற திவாகரன் திசையை நோக்கி உள்ளனர்' என பட்டியலிட்டு முடித்தனர் டெல்டா அ.தி.மு.க. நிர்வாகிகள்.
ஆனால், வழக்கம்போல மந்திரப் புன்னகை மட்டுமே வெளிப்படுத்துகிறார் திவாகரன்!
சி.சுரேஷ்
படம். கே.குணசீலன்
*********************************************************************************
சேலம் ஜாமியா மஸ்ஜித்தில் முறைகேடா?

கொந்தளிக்கும் மீட்புக் குழுவினர்
'பொதுச் சொத்தில் இருந்து எவன் ஒருவன் தன் சுயநலத்துக்காக ஒரு ரூபாய் எடுத்தாலும், அவன் இறைவன் முன் பெரிய பாவி’ என்றார் நபிகள் நாயகம். ஆனால், சேலம் ஜாமியா மஸ்ஜித்துக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடிகளை முறையாக கணக்குக் காட்டாமல் முத்தவல்லிகள் கபளீகரம் செய்வதாக குமுறுகிறார்கள், ஜாமியா மஸ்ஜித் உரிமை மீட்புக் குழுவினர்!  
ஜாமியா மஸ்ஜித் உரிமை மீட்புக் குழுவின் தலைவர் நிசாருதீன் நம்மி டம் பேசினார். ''தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபு போர்டில், குறிப்பாக சேலம் வக்ஃபு போர்ட்டுக்குத்தான் சொத்து அதிகம். இங்குள்ள ஜாமியா மஸ்ஜித் மிகப் பழமையான மஸ்ஜித். இதற்குப் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றை நிர்வகிக்க மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி முத்தவல்லி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்படி 1999-ல் நடந்த தேர்தலில் முத்தவல்லியாக நாசர்கான் என்கிற அமான், துணை முத்தவல்லி காதர் உசேன், டிரஸ்டி நூருல்லாகான் போன்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள், ஜாமியா மஸ்ஜித் சொத்துக்களை விற்றும், வாடகையாகக் கிடைக்கும் லட்சக்கணக்கான தொகையையும் முறைகேடு செய்கிறார்கள்.
ஜாமியா மஸ்ஜித்துக்குச் சொந்தமாக சேலத்தில் மட்டும் 200 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கிறது. சில இடங்களில் கடைகளாகவும், வீடுகளாகவும், விளை நிலங்களாகவும் இருக்கின்றன. சில இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு உள்ளது. இதில் இருந்து மாதம்தோறும் பல லட்ச ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முறையான கணக்குகள் காட்டப்படுவதில்லை. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமே உறவு வைத்துக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
இவர்களின் பதவிக் காலம் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தாமல் 13 ஆண்டுகளாக இவர்களே ஜாமியா மஸ்ஜித்தின் முத்தவல்லிகளாக இருக்கிறார்கள். இவர்கள் தி.மு.க-வில் இருப்பதால், யார் கேட்டாலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள். ஆரம்பத்தில், வசதி குறைவாக இருந்த இவர்கள் இன்றோ பல நூறு கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள்'' என்றார் வேதனையாக.
ஜாமியா மஸ்ஜித்தின் உரிமை மீட்புக் குழு உறுப்பினர் பரித் அகமது, ''சேலத்தில் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய சமூகத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள். ஜாமியா மஸ்ஜித்தின் சொத்துக்களை முறையாகப் பராமரித்து ஏழை இஸ்லாமிய மக்களுக்கு உதவிகள் செய்தாலே, அவர்கள் நல்ல நிலையில் இருக்கலாம். ஜாமியா மஸ்ஜித் அருகில்கூட ஏகப்பட்ட இஸ்லாமியர்கள் பரிதாபமான நிலையில்தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு உதவிகள் செய்யாமல், அங்கு குடியிருப்பவர்களைக் காலி செய்ய சொல்லி விட்டு சூப்பர் மஹால் திட்டம் தீட்டுகிறார்கள். இறைவனின் பணத்தை யார் அபகரிக்க நினைத்தாலும் இறைவன் அவர்களைச் சும்மா விடமாட்டார்'' என்றார்.
இதற்கெல்லாம் விளக்கம் சொல்லும் ஜாமியா மஸ்ஜித்தின் முத்தவல்லி நாசர்கான், ''நான் ஜாமியாமஸ்ஜித் பொறுப்புகள் ஏற்ற பிறகுதான் சிறந்த முறையில் செயல்படுத்தி மிகப் பெரிய அளவில் பள்ளிவாசலை கட்டி முடித்திருக்கிறேன். என்னுடைய பீரியடுக்கு முன்பே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் என்று நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், நான் 1999 முதல் 2004 வரைதான் முத்தவல்லி. ஆனால், தேர்தலை நீதிமன்றம் நடத்துவதா? வக்ஃபு போர்டு நடத்துவதா? என்று வழக்கு நடக்கிறது. இந்த நிலையில், 'சேலத்தில் இருக்கும் அனைத்து பள்ளிவாசல்களையும் ஜாமியா மஸ்ஜித்தில் சேர்க்க வேண்டும்’ என ஒவ்வொரு பள்ளிவாசலின் சார் பாகவும் வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளது. இதனால்தான் தேர்தல் நடத்த தாமதம் ஆகிறது.
எனக்கு முன்பு 14 வருடங்கள் தேர்தல் நடை பெறவில்லை. அதற்கு முன்பு 18 ஆண்டுகள் தேர்தல் நடைபெறவில்லை. சேலத்தில் இருக்கும் அனைத்து சமூக மக்களுக்கும் என்னை நன்றாகத் தெரியும். நான் மதநல்லிணக்கத்தைப் பேணி வருகிறேன். எனக்குப் பதவி முக்கியம் இல்லை. முஸ்லிம் மக்களும் அனைத்து சமூக மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இவர்கள் என் மீது குற்றம் சொல்ல காரணம், ஜாமியா மஸ்ஜித்தின் வாடகை தாரர்கள் முறையாக வாடகை தராததைக் கேட்டதற்காகத்தான். இவர்கள் சொல்வதுபோல ஜாமியா மஸ்ஜித்துக்குச் சொந்தமான நிலங்களில் இஸ்லாமிய சமுதாயத் தினரை தவிர, மற்ற சமுதாயத்தினரும் பல வருடங்களாக குடியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் காலி செய்யச் சொல்லி மத நல்லிணக்கத்துக்கு விரோதமாக செயல் படுகிறார்கள்.
வக்ஃபு விதிமுறைப்படி ஒரு ரூபாய்கூட யாருக் கும் கொடுக்கக் கூடாது. ஏழை இஸ்லாமிய குழந்தை களின் கல்விக்கும், திருமணத்துக்கும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மஸ்ஜித்தில் இருந்து உதவிகள் செய்ய வக்ஃபு போர்டிடம் முறையிட்டிருக்கிறேன். ஜாமியா மஸ்ஜித்தின் செலவுகளுக்கும் சரியான கணக்குகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை  இழுப்பது மிகவும் பாவம்'' என்றார்.
சேலம் வக்ஃபு கண்காணிப்பாளர் பீர் முகமது விடம் பேசினோம். ''தற்போது வக்ஃபு போர்டே தேர்தலை நடத்தச் சொல்லி இருக்கிறது.  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் காரணமாக போர்டின் தலைவர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. கூடிய சீக்கிரம் தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகு  ஜாமியா மஸ்ஜித்துக்கு தேர்தல் நடத்தப்படும்'' என்றார்.
வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்
*********************************************************************************
கொட்டும் மழையில் ஈழ முழக்கம்!

பாதியில் முடிந்த கோவை மாநாடு!
ழத்துக்கு எதிராக இலங்கைதான் கோரமுகம் காட்டுகிறது என்றால், இயற்கையுமா வஞ்சனை செய்ய வேண்டும்? கோவையில் எழுச்சியுடன் நடத்தப்பட்ட 'ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மாநாடு’ அடித்து நொறுக்கிய மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது மாபெரும் சோகம்!
இனப் படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் ஈழ ஆதரவு அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து கோவை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 6-ம் தேதி, 'ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ ஒன்றை நடத்தினர். தூக்குக் கயிற்றை நோக்கியிருக்கும் மூன்று பேரை மீட்டெடுப்பதற்கான முயற்சியும் இந்த மாநாட்டின் மற்றொரு நோக்கம். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்க, 'செங்கொடி அரங்க’ மேடையில் எழுச்சியுடன் ஆரம்பமானது மாநாடு. அது மழை வரும் மாலைப்பொழுது என்பதைப் பொருட்படுத்தாமல் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர்.
பழ.நெடுமாறன் தன் சாந்தமான குரலில், ''லட்சக்கணக்கானோர் இனப் படுகொலையில் மாண்டது, இன்னும் பல ஆயிரக்கணக்கான மக்கள் அடிப்படை வாழ்வுரிமைகூட இல்லாமல் முகாம்களில் துன்புற்று வருவது எல்லாம் மாபெரும் துயரம். நம் தமிழர்களை மீட்டெடுப்பது நமது கடமை. அதேபோல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து 'மரண தண்டனை’ என்ற ஒன்றே தூக்கி எறியப்பட வேண்டும்'' என்று அழுத்தமாக சொன்னார்.
மைக்கை இறுகப்பற்றிய புதுக்கோட்டை பாவாணன் முகத்தில் அத்தனை ரௌத்திரம். ''காங்கிரஸை வளர்த்தது மகாத்மா காந்தி. அந்த மனிதர் 'யாரையும் தூக்கில் போடக் கூடாது’ என்று மனிதநேயம் பேசினார். ஆனால், அவர் வளர்த்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி மீது ஏறி அமர்ந்து சொகுசு சவாரி செய்யும் நீங்கள் ஏன் தூக்குத் தண்டனையை தூக்கிக்கொண்டு திரிகிறீர்கள்? யாரைப் பார்த்து 'கொலையாளி’ என்று கொக்கரிக்கிறீர்கள்? அன்று அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தவர்கள்  கொலையாளி அல்லவா? இன்று ஈழத்தில் யுத்தம் உச்சத்தில் இருந்தபோது வேடிக்கைப் பார்த்தபடி நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்தொழித்தவர்கள்  கொலையாளி அல்லவா? எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பேரறிவாளன், முருகன், சாந்தனின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அதே தினத்தில்தான், அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், அப்சலின் தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்காதவர்கள் எங்கள் பிள்ளைகளை சாகடிக்க மட்டும் நாள் குறித்தது என்ன நியாயம்? 'அப்சல் குருவை தூக்கில் போட்டால் காஷ்மீர் பற்றி எரியும்.’ என்று குலாம்நபி ஆசாத் பூச்சாண்டி காட்டினால் நடுங்குகிறீர்கள். எங்கள் பிள்ளைகளை சாவுக்கு தாரைவார்க்க வேண்டிய சூழல் வந்தால் நாங்கள் கைகட்டி நிற்போம் என்று நினைத்தாயோ? பொங்கி எழும் தமிழ்நாடு'' என்று அவர் முடித்தபோது கொட்டிக் கொண்டு இருந்தது மழை.
அடைமழையில்,  நாற்காலிகளையே குடையாகப் பிடித்தபடி 'வானம் வெறிக்கும்’ என்ற நம்பிக்கையில் நின்றது மொத்த கூட்டமும். அடுத்தடுத்து தலைவர் களும் பேச முயற்சித்தார்கள். ஆனால், மழையின் சீற்றம் அதிகரிக்க... மாநாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தலைவர்கள் இறங்கி நடக்க ஆரம்பித்ததும் மேடையின் முன்புறம் கூடிய இன உணர்வுமிகு இளைஞர்கள், 'அணுவும் இல்லை, ஆயுதமும் இல்லை... ஆனாலும் சிறை தகர்ப்போம்! மூவரை காப்போம்! தம்பியே ஓடிவா இந்தத் தம்பிகளைக் காக்கவா!’ என்று மழை மறையும் வரை விண் ணதிர குரல் கொடுத்தது நெகிழ்வான காட்சி.
மறுநாள் 'இதே கோவையில் மீண்டும் மாநாட்டை நடத்துவோம். இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், 2013-ல் இலங்கையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டை கனடா போல் இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் புறக்கணிக்க வேண்டும், இலங்கையில் விரிவாக மேற்கொள்ளப்படும் ராணுவ மயமாக்கல், சிங்களமயமாக்கல் போன்ற இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உலக சமுதாயம்'' போன்ற அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரான அர்ஜுன் சம்பத், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருக்கும் இந்து அமைப்புகளின் தலைவர்களை இலங்கை தமிழர்களைக் காக்கும் நோக்கில் ஒருங்கிணைத்து 'இலங்கை இந்து மக்கள் பாதுகாப்புப் பேரவை’ என்ற ஒன்றை விரைவில் மதுரையில் துவக்குகிறார். அவரிடம் பேசியபோது... ''இலங்கையில் தமிழ் என்கிற  இனம், மொழிக்கு எதிரான அட்டூழியங்கள் மட்டும் நடக்கவில்லை 'இந்து’ என்கிற ஒரு மதத்துக்கு எதிராகவும் நடக்கிறது. இலங்கையை ஆளும் நபர்களை கடந்த 60 ஆண்டுகளாக ஆட்டிவைப்பது அங்கிருக்கும் புத்த குருமார்கள்தான். சுமார் 1,400 இந்து சமய கோயில்கள் அழிக்கப்பட்டு உள்ளன. எனவே, இலங்கை வாழ் தமிழர்களாகிய இந்துக்களை காக்கத்தான் இந்த முயற்சி. அதற்காக அங்கிருக்கும் தமிழர்களாகிய கிறிஸ்தவ மக்கள், இஸ்லாமியர்களின் நலனில் எங்களுக்கு அக்கறை இல்லை என்று தனிச் சாயம் பூச வேண்டாம்'' என்கிறார்.
எஸ்.ஷக்தி
படங்கள்: வி.ராஜேஷ்,
மகா.தமிழ்பிரபாகரன்
*********************************************************************************
அழகப்பச் செட்டியாருக்கு அவமரியாதை?

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சர்ச்சை
'கோடி கொடுத்த கொடைஞன்; கல்விக்காக தனது வீட்டையும் கொடுத்த வள்ளல்’ என்பது உள்பட அழகப்ப செட்டியாருக்கு  பல  புகழாரங்கள் உண்டு. காரைக்குடியில் அவரது பெயரைத் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த 24-வது பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அவரது படத்தை இருட்டடிப்பு செய்ததாக இப்போது சர்ச்சை வெடித்திருக்கிறது!
காரைக்குடியை கல்விக்குடியாக்கிய பெருமை அழகப்ப செட்டியாரையே சேரும். சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைந்திருக்கும் அழகப்பர் கல்வி நிறுவனங்களில், ப்ரீ கே.ஜி முதல் மாஸ்டர் டிகிரி வரை படிக்கலாம். பள்ளிக்கூடங்கள் தவிர மற்ற அனைத்துக் கல்லூரிகளையும் எந்தப் பிரதிபலனும் இல்லாமல் அரசுக்கு எழுதிக் கொடுத்தவர். இந்தக் கல்லூரிகளைத்தான் 25 வருடங்களுக்கு முன்பு அழகப்பா பல்கலைக்கழகமாக மாற்றி பெருமை சேர்த்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தனி மனிதராக இருந்து இப்படி கல்விக்காக அளப்பெரிய சேவைகளை செய்த அழகப்பரின் படத்தை காரைக்குடி பகுதியில் உள்ளவர்கள் தங்களது வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மாட்டி வைத்து, கடவுளாகவே வழிபட்டு வருவதை இன்றைக்கும் பார்க்கலாம். அப்படிப்பட்டவரின் படத்தை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் போடாமல் விட்டால் சும்மா இருப்பார்களா?
நம்மிடம் ஆதங்கத்துடன் பேசிய சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் பழனியப்பன், ''வள்ளல் பெருந்தகை அழகப்ப செட் டியார், பி.எட். கல்லூரிக்குக் கட்டடம் இல்லை என்ற போது, தான் வசித்த வீட்டையே கொடுத்துவிட்டு வெளியேறியவர். கடந்த காலங்களில் பல்கலைக்கழக முகப்பில் அமைந்திருக்கும் அழகப்பரின் சிலையும் சேர்த்து எடுக்கப்பட்ட போட்டோவைத்தான் அழைப்பிதழ்களில் போட்டார்கள். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு வெள்ளி விழா ஆண்டு என்பதாலும், அதற்கு முந்தைய ஆண்டு அழகப்ப செட்டியார் நூற்றாண்டு விழா ஆண்டு என்பதாலும் அழைப்பிதழ்களில் அவரது சிலையுடன் படத்தையும் ஸ்பெஷலாக போட்டிருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு எதிலுமே அழகப்பர் படமும் இல்லை; சிலையும் இல்லை. இப்படி திட்டமிட்டு அவரது படத்தை இருட்டடிப்பு செய்வதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஒரு நிறுவனம் அதை உருவாக்கிய நிறுவனரின் பெயரையும் புகழையும் கால் நூற்றாண்டுக்குள்ளாகவே மறைக்கப் பார்ப்பது கொடுமை இல்லையா? இது குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் முன்கூட்டியே கேள்வி எழுப்பி தவறை திருத்தி இருக்க வேண்டும். அழகப்பரை அவமரியாதை செய்திருக்கும் இந்த விஷமத்தனத்தை கண்டித்து மக்களைத் திரட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அத்துடன், ஆளுநர் ரோசய்யா மற்றும் தமிழக முதல்வருக்கு தந்திகளை அனுப்புவோம்'' என்று படபடத்தார்.
''அழகப்பர் சிலையும் இருப்பதுபோல்தான் முதலில் அழைப்பிதழை ரெடி பண்ணினார்கள். ஆனால், அந்த அழைப்பிதழின் மாதிரி கவர்னர் அலுவலகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு திரும்பி வந்தபோது அழகப்பரின் சிலையை அடித்து அனுப்பி இருந்தார்கள். அதன் பிறகுதான் சிலை இல்லாமல் புதிதாக அழைப்பிதழ் ரெடியானது'' என்று பல்கலைக்கழகத்துக்குளேயே சிலர் முணுமுணுக்கிறார்கள்.
அழகப்பர் படம் இல்லாத அழைப்பிதழை பார்த்துவிட்டு குமுறிய அழகப்ப செட்டியாரின் மகளும்பல்கலைக்கழகத்தின் ஆயுட்கால சிண்டிகேட் உறுப்பினருமான உமையாள் ராமநாதன், 'எங்க அப்பச்சி படத்தை போடாமல் அழைப்பிதழ் அடிச்சிருக்கீங்க... இன்னிக்கி நீங்க சாப்பிடுற சாப்பாடு எங்க அப்பச்சியோடதுனு மறந்துடா தீங்க. படம் போடாததுக்கான காரணத்தை நீங்க சொல்லியே ஆகணும்’ என்று துணை வேந்தர் சுடலைமுத்துவை கண்டித்ததாக சொல்கிறார்கள். மன வருத்தத்துடன் இருந்த உமையாள் ராமநாதன் பட்டமளிப்பு விழாவுக்கு வருவாரா என்பதுகூட கடைசி வரைக்கும் சஸ்பென்ஸாகவே இருந்தது. விழா மேடையில்முன்வரிசையில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததையும் பார்த்துவிட்டு ஆதங்கப்பட்ட அழகப்பர் விசுவாசிகள், ''புரொட்டாகால் காரணத்தைச் சொல்லிச் சொல்லியே கொஞ்சம் கொஞ்சமா ஆச்சியை வெளியே அனுப்பிருவாங்க போலிருக்கு'' என்றார்கள்.
பட்டமளிப்பு விழா முடிந்து சென்னைக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்த உமையாள் ராமநாதனை சந்தித்தபோது, உணர்ச்சிப் பிழம்பாக, ''எங்க அப்பச்சியோட படத்தை ஏன் போடலைனு என்னென்னமோ காரணம் சொன்னாங்க. படம் போட்டு புதிதாக நூத்தம்பது பத்திரிகை அடிச்சுக் கொடுக்குறதா துணை வேந்தர் சொன்னார். கடைசி வரைக்கும் அதையும் கொடுக்கலை. கேட்டா, 'அவகாசம் போதலை’னு சொல்றார். இந்த விஷயத்தில் நாங்கள் மட்டுமல்ல... அழகப்பரை நேசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் வருத்தத்தில் இருக்கு. எதிர்காலத்தில் இதுமாதிரி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை கட்டாயம் செய்வோம்'' என்றார்.
துணை வேந்தர் சுடலைமுத்துவிடம் பேசியபோது, ''வள்ளல் அழகப்பரை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். நான் துணை வேந்தராக வந்ததில் இருந்து, அவருக்காக பாடப்பட்ட வள்ளல் வாழ்த்துப் பாடலை தினமும் காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்தில் ஒலிக்கச் செய்திருக்கிறேன். அழைப்பிதழ் விவகாரம் கவனக் குறைவால் நடந்த தவறுதானே தவிர, இதில் யாருக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை'' என்று சொன்னவர், கவர்னர் அலுவலக வழிகாட்டுதல்படியே அழகப்பரின் படத்தை போடாமல்விட்டதாக சொல்லப்படுவதையும் திட்டவட்டமாக மறுத்தார்.
ஆயிரம் சொன்னாலும் அழகப்பர் விசுவாசி களின் ஆத்திரம் இப்போதைக்கு தனியாது போலிருக் கிறது!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்           
*********************************************************************************
சாதி பார்க்கிறார்களா பேராசிரியர்கள்?

மேலூர் அரசுக் கல்லூரி பரபரப்பு
துரை மாவட்டத்தின் மிகப் பெரிய தாலுக்கா வான மேலூர் வட்டாரத்தில், ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு என்று ஓர் அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. இங்கு  ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டதாக அய்யனார், சுகதேவ், சிவகுருநாதன், சக்தி, ஆண்டி ஆகிய ஐந்து ஆதிதிராவிட மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படவே, விவகாரம் பற்றி எரிகிறது.
'எங்க காலேஜ்ல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகம் படிக்கிறதால, உயர் சாதி மாணவர்களுக்கு ஆதரவா சில பேராசிரி யர்களே செயல்படுவாங்க. 2009-ம் ஆண்டில் பி.ஏ. வரலாறு மாணவர்களுக்கு பாலாஜி என்ற பேராசிரியர் அம்பேத்கர், பெரியார் பற்றிய பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சில மாணவர்கள், 'அம்பேத்கரைப் பத்தியெல்லாம் எதுக்கு பாடம் நடத்துறீங்க’ன்னு பிரச்னை செய்து, பாதியில் நிறுத்த வைச்சிட்டாங்க. உடனே நானும், மற்ற தாழ்த்தப்பட்ட பசங்களும் அந்தச் சம்பவத்தைக் கண்டிச்சி போஸ்டர் ஒட்டுனோம். அதை அந்தப் பசங்க கிழிச்சிப் போட்டாங்க. 'ஏண்டா கிழிச்சீங்க?’ன்னு கேட்டதுக்கு, நாங்க அவங்கள கெட்ட வார்த்தையால திட்டி, அடிச்சதா பொய்ப்புகார் கொடுத்தாங்க. முழுசா விசாரிக்காம என்னையையும் இன்னும் 4 பசங்களையும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. ஆனா, அந்தத் தரப்புல ஒரு பையன் மேல கூட ஒழுங்கு நடவடிக்கை எடுக் கலை' என்றார் எம்.ஏ. மாணவரான அய்யனார்.
மாணவர் சக்தி, 'கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த கல்லூரி ஆண்டுவிழாவில், உயர்சாதி மாணவர்கள் சிலர் சினிமாவில் வரும் சாதிப் பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். கீழே இருந்த அவர்கள் சாதிமாணவர்களும் எழுந்து ஆடியதோடு நில்லாமல் சாதி ரீதியாக கோஷம் போட்டார்கள். உடனே நாங்கள், அந்தப் பாட்டை நிறுத்தச் சொல்லி விழா கமிட்டியில் இருந்த பேராசிரியர்களிடம் புகார் சொன்னோம். அதற்கு அவர்கள், 'நீங்க வேணுமின்னா உங்க சாதிப் பாட்டைப் போட்டுக்கோங்க, யாரு வேணாம்னு சொன்னா’ என்றார் கள். அதையும் சேர்த்து, பிரின்ஸிபல் காளிமுத்து விடம் புகார் செய்தோம். அதற்குள் செமஸ்டர் லீவு வந்தது. அவரும் டிரான்ஸ்ஃபர் ஆகி விட்டதால், நடவடிக்கை எதுவும் இல்லை' என்றார்.
மற்றொரு மாணவரான ஆண்டி, 'காலேஜ்ல குடிக்க நல்ல தண்ணி கிடையாது. லைட், ஃபேன்களும் இல்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகளுக்கான போராட்டங்களில் முதுகலை மாணவர்கள் என்கிற முறையில் நான், அய்யனார், சிவகுருநாதன் 3 பேரும் முன்னே நிப்போம். அதனால அந்தப் பேராசிரியர்களுக்கு எங்க மேல செம கடுப்பு. புதுசா வந்த பிரின்ஸிபல் மேடத்துக்கு கல்லூரியில் இதுவரை நடந்த பிரச்னைகளும், பேராசிரி யர்களின் சாதி மனோபாவமும் முழுசாத் தெரியாது. அதைப் பயன்படுத்திக்கிட்டு கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு என்ற பெயரில் மனோகரன் உள்ளிட்ட ஐந்து பேராசிரியர்கள் எங்களை கட்டம் கட்டிட்டாங்க' என்றார் வேதனையாக.
மாணவர் சுகதேவின் தந்தை நாகேந்திரனோ, 'சஸ்பெண்டான அன்னிக்கே காலேஜ் கொடுத்ததண்டனையைவிட அதிக தண்டனையே நான் என் மகனுக்குக் கொடுத்துட்டேன். அப்போது, 'உங்க பையனை ஏன் நிரந்தரமாக நீக்கக் கூடாது?’ன்னு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்தது. உடனே பதறியடிச்சிக்கிட்டு காலேஜுக்குப் போனோம். மற்ற பசங்களும், அவங்களோட பெற்றோரும் வந்திருந் தாங்க. பசங்க தண்ணியடிச்சாங்க, பிள்ளைங்கள கிண்டல் பண்ணுனாங்க, பேராசிரியர்களை திட்டு னாங்கன்னு பேராசிரியர்கள் எழுதி ரெடியா வைச் சிருந்தாங்க. 'படித்துப் பார்த்தேன் சரி’ என்று ஐந்து பேரும் ஒப்புதல் கையெழுத்துப் போட்டால்தான் சேர்ப்போம்ன்னு சொன்னாங்க. அவங்களோட சதி புரியாம கையெழுத்துப் போட்டதும், டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. இது எந்த விதத்துல நியாயம்?' என்றார் கவலையாக.
இதுபற்றி கல்லூரி முதல்வர் ரூபலா ஜூலியட்டிடம் கேட்டபோது, 'அந்த மாணவர்கள் சொல்வது எல்லாம் பொய். டிஸ்மிஸ் செய்யப்பட்டதுக்கு எதிராக அவர்கள் வழக்குப் போட்டு இருக்கிறார்கள். இந்தப் பிரச்னை கோர்ட்டில் இருப்பதால் வேறு எதுவும் சொல்ல முடியாது' என்றார்.
'இருபாலர் அரசுக் கல்லூரியில் வேலை பார்க்கிறது ரொம்ப கஷ்டம். ஹீரோயிசம் காட்டுறதுக்காக பசங்க எங்களைப் பண்ற கேலியும் கிண்டலும் கொஞ்சம் நஞ்சமல்ல. மொத்தம் 2,000 பேர் படிக்கிறாங்க. ஒருசில பசங்கதான் மற்ற பசங்களையும் கெடுக்கிறாங்க. அடிக்கடி ஸ்டிரைக் பண்றது அது இதுன்னு ரகளை பண்ணிக்கிட்டே இருந்தாங்க. கல்லூரி நலனுக்காக எல்லா துறையின் தலைவர்களும் சேர்ந்து ஒரு ஆலோசனைக் கமிட்டியைப் போட்டு எடுத்த முடிவு இது. பேராசியர்கள் சாதி பார்க்கிறதாச் சொல்றது முழுப் பொய். அப்படிப் பார்த்திருந்தா, ஏற்கெனவே இளங்கலை படிச்சப்ப சாதி மோதலில் ஈடுபட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவரான அய்யனாருக்கு எம்.ஏ. படிப்பில் இடம் கொடுத்திருப்போமா? அந்த மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுத்த பிறகு கல்லூரி அமைதிப் பூங்காவாக மாறிவிட்டது. பயமின்றி வகுப்பறைக்குப் போகிறோம்' என்கிறார்கள் சில பேராசிரியர்கள்.
மாணவர்களோ, 'என்னதான் இருந்தாலும், டிஸ்மிஸ் என்பது ரொம்ப ஓவர். அந்தப் பசங்களோட எதிர்காலம் என்ன ஆகும்னு பேராசிரியர்கள் கொஞ்சம் யோசிக்கணும்'' என்கிறார்கள்.
கே.கே.மகேஷ்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
*********************************************************************************
'கைதுப் படலம் முடியவில்லை!'

பிரகடனம் செய்த ஜெ. பீதியில் தி.மு.க.!
புதிய ஆட்சி அமைந்து முதல் தடவையாகக் கூடியது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு. புதிய முதல் வரைச் சந்திக்கப்போகிறோம் என்ற பதற்றமும் உற்சாகமுமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வந்திருந்தார்கள். கடந்த 13, 14 தேதிகளில் நடந்த மாநாடு, வரும் ஐந்து ஆண்டு காலம் ஆட்சியின் போக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு அடையாளமாக இருந்தது!
''மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் லஞ்சம் பெறுவதோ முறைகேடுகளோ இருக்கக் கூடாது'' என்று தீர்க்கமான குரலில் முதல்வர் ஜெயலலிதா தனது முன்னுரையில் சொன்னார். பல்வேறு விஷயங்களைப் பேசினாலும் அவர் குறிப்பால் உணர்த்த நினைத்தது, தடங்கல் இல்லாத நிர்வாகம்தான்!
இன்று தமிழகத்தைக் கலக்கிக்கொண்டு இருக்கும் நில அபகரிப்புக் கைதுகள் தொடர்பாக, தனது நடவடிக்கைகளை பட்டவர்த்தனமாக முதல்வர் சொல்லியது பல அதிகாரிகளுக்கே திகிலைக் கொடுத்தது!
''தமிழகத்தில் நில அபகரிப்பாளர்கள் மீதான நடவடிக்கை தொடரும்...'' என்று சொன்ன முதல்வர் இது தொடர்பான சில டெக்னிக்கல் விளக்கங் களையும் சொன்னாராம்.
கைதான சிலர் உடனடியாக வெளியே வந்து விடுவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பில் ஈடுபட்டுக் கைதாகிறவர்கள், தற்போதைய நடைமுறைச் சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளைப் பயன்படுத்தித் தப்பிச் செல்கிறார்கள். சட்டத்தில் இருக்கும் சாதக அம்சங்களை வைத்து சில மாதங்களில் ரிலீஸ் ஆகிவிடுகிறார்கள். இதற்காகக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ள பிரிவில் சிறு திருத்தம் கொண்டுவர வேண்டும். தமிழக போலீஸ் துறையின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை சேலம் போலீஸ் கமிஷனர் மாஹாளி, மாநாட்டில் முதல்வரிடம் சொன்னாராம்.
''குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள சட்டப் பிரிவுகளில் குடிசைப் பகுதி நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லி வழக்கு போட வேண்டிருக்கிறது. இதையே நில அபகரிப்பு என்று பொதுவாகத் திருத்தம் செய்தால், எங்களுக்கு உதவியாக இருக்கும். இதேபோல், மிகப் பெரியக் குற்றச் செயல்களில் யாராவது ஈடுபட்டால், உடனே அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயிலில் போட நினைக்கிறோம். ஆனால், இங்கேயும் சட்டச் சிக்கல். அந்த நபர் தொடர் குற்றங்களைச் செய்வது வருவராக இருந்தால் மட்டுமே, அதாவது, ஹேபிச்சுவல் அஃபெண்டர் (லீணீதீவீtuணீறீ ஷீயீயீமீஸீபீமீக்ஷீ) என்று போலீஸ் ரெக்கார்டுகளில் ஏற்கெனவே இருந்தால் மட்டுமே, குண்டர் தடுப்புச் சட்டத்தில் போட முடிகிறது. இதிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும்'' என்றார்.
உடனே முதல்வர் சட்டத் துறை செயலாளரிடம், ''இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?'’ என்று கேட்டார். அவர் சொன்ன விளக்கத்தைப் புரிந்து கொண்டு, ''தேவைப்பட்டால் ஆலோசனை செய்து மாஹாளி சொல்கிற மாற்றங்களைக் கொண்டுவாருங்கள்'’ என்று உத்தரவிட்டார். இதைக் கேட்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் முகங்களில் மகிழ்ச்சி ரேகை பரவியது. அப்போது சில போலீஸ் அதிகாரிகள் அருகில் இருந்த சக அதிகாரிகளிடம்,  ''பெரும்பாலான வழக்குகளில் சரியாக வாதாடத் தெரியாமல் குழப்புகிறவர் தமிழக அரசின் சட்டத் துறையின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அவரிடம் எவ்வளவுதான் ஆதாரங்களை எடுத்துக் கொடுத்தாலும், அவர் அதை சட்டை செய்வதில்லை. டாஸ்மாக் துறைக்கு எதிராகத் தனியார் ஒருவரால் தொடரப்பட்ட சிறு வழக்கில் தேவை இல்லாமல் இவரே நேரில் ஆஜராகி ஆதாரங்களை எடுத்துவைக்காமல் விட்டதன் விளைவு வழக்கு தோற்றுவிட்டது. அவரை மாற்றி வேறு யாரைப் போட்டாலும் சந்தோஷம்'' என்று பேசிக்கொண்டார்களாம்.
ராமநாதபுர மாவட்ட கலெக்டர் அருண் ராய் பேசும்போது, '' எங்கள் மாவட்டத்தில்  1993-ம் ஆண்டு முதல் ஒர் உத்தரவு அமலில் இருக்கிறது. இங்கே மீனவ படகுகளுக்கு ஒரு நாள் காலக்கெடுவுடன் மீன் பிடிக்க டோக்கன் கொடுக்கப்படுகிறது. அதனால், முழுமையாக மீன் பிடிக்க நேரம் இல்லாமல் அவசரக்கோலத்தில் கரைக்குத் திரும்புகிறார்கள். இதனால் மீனவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். முன்பு உத்தரவு போடப்பட்டபோது, விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருந்தது.  இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆனால், அந்த உத்தரவு மட்டும் அப்படியே இருக்கிறது'' என்று குறிப்பிட, அதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட முதல்வர் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரியிடம் விசாரித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய சொன்னார்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பேசும்போது, ''2002-ல் நக்சலைட் நடமாட்டம் இருந்தது. அதன் பிறகு இல்லை'' என்று பேசிக்கொண்டே போக, முதல்வர் ஜெயலலிதாவின் முகம் மாறியது. ஏனென்றால், 2002-ல் முதல்வராக இருந்தவரும் இவர்தான். அந்த எஸ்.பி-யிடம், ''ஏன் 2007, 08, 09 - ம் ஆண்டுகளில்கூட நக்சலைட் நடமாட்டம் இருந்ததாக நோட்டீஸில் பார்த்தேனே? நீங்கள் அதைச் சொல்லவில்லையே...'' என்று கேட்க... அந்த எஸ்.பி. கொஞ்சம் தயங்கி. ''அந்தப் பகுதிகள் தர்மபுரி மாவட்டத்தில் வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை'’ என்று சொல்லவும் அமைதியானார் முதல்வர்.
''நில அபகரிப்புப் புகார்கள் அதிகம் பதிவாகின்றன. அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. நில அபகரிப்புப் புகார் பிரிவை இன்னும் செம்மைபடுத்த வேண்டும்'' என்று பெரும்பாலானவர்கள் பேசினார்கள்.
''நில அபகரிப்புப் புகாரில் இரண்டு தரப்பையும் தீர விசாரித்த பிறகே உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். வழக்கு போடுவதோடு முடிந்து விடாமல் தண்டனை வாங்கிக் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்கும்போது இந்த ஆட்சியின் மீது மக்களின் நம்பிக்கை அதிகமாகும்'' என்று பதில் சொன்னார் ஜெயலலிதா.
''போலீஸ் அதிகாரிகள் தங்களுக்கு வரும் உளவுத் தகவல்களை கலெக்டர்களுடன் பகிர்ந்துகொண்டு முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கை மேற் கொண்டாலே, மாவட்டங்களில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளைச் சமாளித்துவிடலாம்'' என்று இடையில் யோசனை தெரிவித்தார் ஜெயலலிதா.
கடலோர மாவட்டங்களில் இருக்கும் கலெக்டர் கள், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் காணாமல் போவது பற்றியும் இலங்கை கடற்படையால் தாக்கு தலுக்கு உள்ளாவது பற்றியும் குறிப்பிட்டார்கள். ''இப்படி அடிக்கடி ஏற்படும் மீனவப் பிரச்னையால் இப்போது பாதிப்பு இல்லை என்றாலும், வரும் காலங்களில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக உருவெடுக்கலாம். அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். நமது கடலோரப் பாதுகாப்பு படையில் போதுமான அளவுக்கு ரோந்து படகுகள், நவீன கருவிகள் போன்ற வசதிகள் இல்லை. மீனவர்களைத் தேடும் பணியை கடற்படை மட்டுமே செய்வதால், தொய்வு ஏற்படுகிறது. காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு தரும் நிதியில் ஹெலிகாப்டர் போன்றவற்றை நாம் வாங்கலாம்.'' என்று யோசனை தெரிவித்தார்கள். ''அதற்கான நிதி இப்போது நம்மிடம் இல்லை. தேவை ஏற்பட்டால், ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளுங்கள்'' என்றார் ஜெயலலிதா. மாநாட்டின் முடிவில் இதுவே அறிவிப்பாக வெளியானது.
கலெக்டர்கள், எஸ்.பி-கள் மாநாட்டின் முதல் நாளான 13-ம் தேதி முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனைவருக்குமான பொதுவான கூட்டமாக இருந்தது. 14-ம் தேதியன்று காலையில் கலெக்டர்கள், அனைத்துத் துறைச் செயலாளர்கள் கூட்டமும், மதியத்துக்கு மேல் போலீஸ் அதிகாரிகள் கூட்டமும் நடந்தது. இரு நாட்களும் கோட்டையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்ட முதல்வர், முக்கால் மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள், எப்போதும் இல்லாதவாறு மிகவும் கடுமையாக இருந்தன. கோட்டைக்கு உள்ளேயே இருக்கும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவுகூட இல்லாத மாநாட்டுக் கூட்டம் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு, ஜெயலலிதா வந்தபோது எல்லாம் இரு மருங்கிலும் ஓவர் அலெர்ட் காட்டினர். முதல் நாள் ஞாயிறன்று தலைமைச் செயலக ஊழியர்கள் யாரும் வராததால், அவர்கள் தப்பித்தார்கள். மறு நாள் காலையில் வழக்கம்போல, 10 மணி அளவில் எல்லா ஊழியர்களும் வரும்போது, 'முதல்வர் வருகிறார்’ என்று சொல்லி, ஊழியர்களின் நுழைவாயிலை போலீஸார் தடுக்க, பதற்றம் ஏற்பட்டது.
  வழக்கமாக இது போன்ற மாநாடுகளில் அனைத்துப் புகைப்படக்காரர்களும் சில நிமிடங்களாவது படம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இம்முறை குறிப்பிட்ட சில பத்திரிகைகளின் போட்டோ கிராபர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. முதல்வரின் அறிமுக உரையின்போது எப்போதும் நிருபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் இம்முறை அனுமதிக்கப்படவில்லை.
இன்னமும் நில அபகரிப்பு தொடர்பாக ஜெயலலிதா காட்டிவரும் தீவிரம் தி.மு.க. புள்ளி களுக்கு பீதியைக் கிளப்பி இருக்கிறதாம்.
- சூர்யா, எம்.பரக்கத் அலி, இரா.தமிழ்கனல்
அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்
*********************************************************************************
சிதம்பரத்துக்காக காத்திருக்கும் ஆ.ராசா?

தொடங்கியது ஸ்பெக்ட்ரம் விசாரணை
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் எஃப்.ஐ.ஆர்., விசாரணை, கைது, குற்றப்பத்திரிகை, குற்றப்பதிவு, ஜாமீன் மறுப்பு போன்ற நிலைகளைக் கடந்து, கடந்த 11-ம் தேதி நீதிமன்ற விசாரணை டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கு எதிராக வைக்கப் படும் ஆவணங்கள் மற்றும் நேரில் பார்த்த சில காட்சிகளுக்காகவும், 154 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதில் பல வி.ஐ.பி. சாட்சிகளும் அடக்கம். இது தவிர குற்றம் சாட்டப்பட்டவர்களும் பல ஆவணங்களையும் சாட்சியங்களையும் நிறுத்தலாம். இந்த மாதத்தில் மட்டும் 28 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஆ.ராசா எடுத்த எடுப்பிலேயே சாட்சிகள் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடவந்தார். அவரது சார்பில் வழக்கறிஞர்கள் பாலாஜி சுப்பிரமணியம் மற்றும் மனுசர்மா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வழக்கில் விசாரணை முழுமையாக முடிந்த பின்னர்தான் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் குற்றப் பதிவு செய்யப்பட்ட பின்னரும், இந்த வழக்கில் விசாரணை முடியவில்லை. இது சட்டத்திற்குப் புறம்பானது’ என்று சொல்லி இருந்தனர்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக (பி.சி.எல்.) வழக்கறிஞரான பாலாஜி சுப்பிரமணியம், சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசாவின் அட்வகேட் - ஆன் - ரிக்கார்டு. இவர் சார்பில் ஆ.ராசாவுக்காக வாதாட நியமிக்கப்பட்டு இருப்பவர்தான், மூத்த வழக்கறிஞர் சுசில் குமார். அவர், ''ஒரு பக்கம் சி.பி.ஐ. வழக்கு விசாரணை முடியவில்லை என்கிறது. ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பெற்ற மற்ற லூப் டெலிகாம் போன்ற நிறுவனங்கள் மீது விசாரணை தொடர்வதாகச் சொல்கிறது. அந்தக் குற்றச்சாட்டுகளும், குற்றப் பத்திரிகைகளும் வரும் நிலையில் இந்த வழக்கு முற்றுப் பெறாத நிலையில் இருக்கிறது. இந்த சமயத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடப்பது எப்படி? குற்றவியல் நடைமுறைப் பிரிவு 173-ன்படி புலன் விசாரணை முற்றுப் பெற்ற பின்னர்தான் இந்த சம்பிரதாயங்கள் தொடங்க வேண்டும்'' என்றார். ஆனால், இதனை நீதிபதி சைனி ஏற்கவில்லை. அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
முதல் நாள் மூன்று சாட்சிகளிடம் விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சாட்சியிடம்தான் முழு விசாரணை நடந்தது. பவர் கட் ஏற்பட்டதால், இன்வெர்ட்டர் மூலம் லைட்கள், மின் விசிறிகள் இயங்கியதால் ஏக இரைச்சல். என்ன பேசுகிறார்கள் என்பது புரியாமல், பத்திரிகையாளர்களும் வழக்கறிஞர்களும் திணறி னார்கள். அடிக்கடி மின் விசிறியை ஆஃப் செய்து, கேட்க வேண்டிய அளவுக்கு நிலைமை இருந்தது.
முதல் சாட்சியாக வந்தவர் ஆனந்த் சுப்பிரமணியம். மும்பைக்காரான சுப்பிரமணியம், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தொடங்கப்பட்ட கதையைக் கூற, இவர் வந்தார். ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் நிதி சுமார்  900 கோடி வரை 2007 மே, ஜூன் மாதங்களில் ஸ்வான் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டது. இதற்கான நான்கு காசோலைகளில் இவரும் இவரோடு பணியாற்றிய மற்றொருவரும் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். இவர்களிடம், 'ஸ்வான் நிறுவனத்தின் கணக்கு யாருடைய உத்தரவால் தொடங்கப்பட்டது? பணத்தைக் கொடுக்கச் சொன்னது யார்?’ என்று குறுக்கு விசாரணையில் கேட்கப்பட்டது.
ஆனந்த் சுப்பிரமணியத்தைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டெல்லிப் பொது மேலாளர் சேதுராமன் இரண்டாவது சாட்சியாக ஆஜரானார். தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் நீண்ட வருடங்களாக அம்பானிகளோடு இருப்பவர். ஸ்வான் டெலிகாம் உரிமங்களுக்கான விண்ணப்பத்தில் இவர் கையெழுத்து போட்டு இருப்பதால், சாட்சியாக இவர் விசாரிக்கப்பட்டார். இவரும், 'நான் ஸ்வான் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டது உண்மை. ஆனால் ரிலையன்ஸுக்கு அந்த டெலிகாம் வட்டங்களில் உரிமம் இருந்ததா என்பது தெரியாது’ என்றார். முதல் நாள் அரைகுறையாக விசாரிக்கப்பட்ட இவர், கடந்த 14-ம் தேதி மீண்டும் சாட்சியம் அளிக்க வந்தார். அன்றைய தினமும் இவரிடம் மட்டுமே முழு விசாரணை நடைபெற்றது. அதனால், மூன்றாவது சாட்சியாக அழைக்கப்பட்டு இருந்த டி.பி. எடிஸலாட் நிறுவன அதிகாரி வினோத் குமார் புத்திராஜ் இரண்டு நாட்களிலும் விசாரிக்கப்படவில்லை.
ஆ.ராசா சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை மறுப்பதற்கு, ப.சிதம்பரம் விவகாரத்தையே காரணமாகச் சொல்கிறார்கள். சுப்ரீம் கோர்ட், சிதம்பரத்திடம் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடுமா, இல்லையா என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரே, வழக்கை எப்படிக் கொண்டுசெல்வது என்று முடிவு எடுக்க இருக்கிறதாம் ராசா தரப்பு. அதனால்தான் விசாரணையைத் தள்ளிப்போடவும் முயற்சி செய்தார்கள்.
  நீரா ராடியா, ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பா ராவ், தயாளு அம்மாள் ஆகியோர் விரைவில் சாட்சியம் அளிக்க வர இருப்பதால், ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
சரோஜ் கண்பத்
படங்கள்: சிவராம கிருஷ்ணன்
*********************************************************************************
எந்த சீமான் வந்தாலும் காங்கிரஸை அசைக்க முடியாது!

துள்ளலுடன் தொடங்கும் ஞானதேசிகன்!
ருவழியாக தங்கபாலு நீக்​கப்பட்டு, தமிழ்நாடு காங்​கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக நியமனம் செய்யப்​பட்டு இருக்கிறார் ஞானதேசிகன். ஜி.கே.வா​சனின் தீவிர ஆதரவாளர். சால்வை, பூங்கொத்து, வாழ்த்துக்களில் திளைத்துக்​கொண்டு இருந்தவரை ஆழ்வார்​பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.
 ''தேர்தல் மூலம் தேர்வு செய்யாமல், நியமன முறையில் தலைவரை அமர்த்​தும் கலாசாரம் உங்கள் கட்சியில் எப்​போது ஒழியும்?''
''இப்போதும் பல மாநிலங்களில் தேர்தல் மூலமே நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்​படுகிறார்கள். கட்சித் தேர்தலை நடத்துவதற்கு என்றே, தனி அமைப்பைக் கட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறோம். இதற்காக கட்சியின் விதிகளில் மாற்​றமும் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒரு சில காரணங்களால் தேர்தல் நடத்த முடியவில்லை. விரைவில் இங்கும் மாற்றம் வரும்.'' 
''உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸைக் கழற்றி​விட்டு தி.மு.க. தனித்துப் போட்டி​யிட்டது. இது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸோடு தி.மு.க-வுக்கு உரசல்கள் இருப்பதைத்​தானே காட்டுகிறது?''
''மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. அது இப்போதும் தொடர்கிறது. இதற்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் தொடர்பே இல்லை. சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நடக்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் காங்கிரஸ் அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. கனிமொழிக்கு ஜாமீன் கொடுப்பதுபற்றி நீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும். இந்த விஷயத்தில் மத்திய அரசு எதுவுமே செய்ய முடியாது.''
''எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் ஜெயலலிதா​வைச் சந்தித்தது கிடையாது. ஆனால், உங்கள் மகன் திருமணத்தை முன்னிட்டு இரண்டு மாதங்கள் முன்பு அவரை நீங்கள் சந்தித்தீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வதற்கு வசதியாகத்தான் உங்களை நியமனம் செய்திருப்பதாகப் பேசப்படுகிறதே?''
''என் நியமனத்துக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமே இல்லை. விருப்பமானவர்களுக்கு திருமணப் பத்திரிகை கொடுப்பது, அரசியலைத் தாண்டிய விஷயம். அது என் தனிப்பட்ட விருப்பம். இதில் அரசியலைக் கலக்க கூடாது. தமிழகத்தில் எல்லா விஷயங்களையும் அரசியலோடு முடிச்சுப் போடுவது வாடிக்கையாகிவிட்டது. அறிவாலயத்திற்குப் போய் கலைஞரை சந்தித்தால், உடனே தி.மு.க. ஆதரவாளர் என்று முத்திரை குத்துகிறார்கள். எல்லாவற்றையும் அரசியல் கண் கொண்டு பார்க்கும் நிலை தமிழகத்தில் மாற வேண்டும்.''
''ஜெயலலிதாவை சந்திக்க யாருக்குமே வாய்ப்பு கிடைக்காதபோது, உங்களுக்கு மட்டும் தனி மரியாதை எப்படி?''
''காங்கிரஸில் இருந்து பலரும் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு கேட்டு இருக்கலாம். அது எனக்குத் தெரியாது. என் மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும், வரச் சொன்னார்கள். அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தேன். அங்கே அரசியல் எதுவும் பேசப்படவில்லை. என்னை மட்டும் அவர் சந்தித்ததை தனி மரியாதை என்று கருதவில்லை. அப்படி ஒரு  தனித்துவம் எனக்கு இருக்கிறது என்று நீங்கள் கருதினால்  மகிழ்ச்சிதான்.''
''மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ், அண்ணா நூலகம் இடம் மாற்றம் என்று அதிரடி கிளப்பும் தமிழக அரசைப்பற்றி..?''
''காங்கிரஸ் கட்சித் தலைவராக நான் இன்னும் பதவி ஏற்கவில்லை. முறைப்படி அது நடந்த பிறகுதான், என்னுடைய கருத்தைச் சொல்ல முடியும். அதற்கு சில நாட்கள் காத்திருங்கள். நல்லாட்சி யார் நடத்தினாலும் அதை வரவேற்பதும், தவறுகள் செய்யும்போது தட்டிக்கேட்பதும் எதிர்க் கட்சிகளின் கடமை. அதை காங்கிரஸ் நிச்சயம் செய்யும்.''
''நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கும்?''
''(ஜாலியாக...) தேர்தலுக்கு இன்னும் 1,000 நாட்கள் இருக்கின்றன. 999-வது நாளில்தான் கூட்டணி யாருடன் என்​பது அறிவிக்கப்​படும். அதுவரை சஸ்பென்ஸ் நீடிக்கட்டும்...''
''முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்​கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று தமிழகத்தில் கிளம்பியிருக்கும் எழுச்சி பற்றி..?''
''நீதிமன்றமே குற்றவாளிகள் என்று சொல்லிய பிறகு, 'அவர்கள் நிரபராதிகள்’ என்று வைகோ போன் றவர்கள் எப்படிச் சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. அவர்கள் நிரபராதிகள் என்றால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதையும் வைகோ சொல்ல வேண்டும். தூக்குத் தண்டனை என்று நீதிமன்றம் சொல்லி, அதை ஜனாதிபதியும் உறுதி செய்த பிறகு இப்படிக் கருத்து சொல்வது அழகு அல்ல.''
''அடிக்கடி அடிதடி நடக்கும் வன்முறைக் களமாக சத்தியமூர்த்தி பவன் காட்சி அளிக்கிறதே..?''
''அப்படி ஒரு நிலை இனி ஏற்படாத அளவுக்கு என்னுடைய பணிகள் இருக்கும். கட்சியின் தலைமை  அலுவலகம் கோயில் மாதிரி. கோயிலின் புனிதத்தன்மை​யைக் காப்பாற்றுவது போல, சத்தியமூர்த்தி பவன் காப்பாற்றப்படும்.''
''சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சரிவுதானே...?''
''வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தில் சகஜம். இதனை ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கவேண்டும். எந்த சீமான் வந்தாலும் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது. சீமான் நன்றாகப் பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கட்டும்...''
''தங்கபாலு நீக்கத்திற்கு என்னதான் காரணம்? தமிழக காங்கிரஸ் தலைவராக நீங்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால், ஜி.கே.வாசனின் கை ஓங்கியதாகத் தெரிகிறதே?''
''தங்கபாலு ராஜினாமா கடிதம் கொடுத்து இருந்தார். அது, ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றபடி அவர் நீக்கப் படவில்லை. காங்கிரஸின் சின்னம் 'கை’  எப்போதும் ஓங்கிதான் இருக்கும்!''
எம். பரக்கத் அலி, படங்கள்: என்.விவேக்
*********************************************************************************
லோக்கல் சேனலைக் கைப்பற்றுகிறதா அ.தி.மு.க.?

கேபிள் கலாட்டா
ஜெயலலிதா அரசுக்குத் தீர்க்க முடியாத தலைவலிகளில் ஒன்று கேபிள் பிரச்னை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அதிரடியாக அரசு கேபிள் அமலுக்கு வந்தது. உள்ளூர் சேனல்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், சத்தம் இல்லாமல் உள்ளூர் சேனல்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப் பட்டது. இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 20 லோக்கல் சேனல்கள் புற்றீசல்போல முளைத்துவிட்டன!
''இரண்டு மாசத்துக்கு அஞ்சு லட்ச ரூபாய் வரை அட்வான்ஸாக டி.டி வாங்கிட்டு, உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்தாங்க. எந்த வரைமுறையும் இல்லாம, உள்ளூர் சேனல்களுக்கு எப்படி அனுமதி கொடுத்தாங்கன்னு தெரியலை. ஒவ்வொரு சேனலிலும், ஒளிபரப்பும் பாடல் களுக்கு யாருமே காப்பிரைட்ஸ் வாங்கவே இல்லை. அப்படி வாங்காம ஒரு பாட்டை சேனலில் ஒளிபரப்பினா, அடுத்த நாளே வக்கீல் நோட்டீஸ் வந்துடும். ஆனா, இரண்டு நாளைக்கு முன்னாடி சேலத்தில் ஒரு லோக்கல் சேனலில் 'எங்கேயும் எப்போதும்’ படமே முழுசா ஓடி இருக்கு. இதுக்கு யார் அனுமதி கொடுத்தாங்க? இன்னொரு சேனலில் 'சூப்பர் ஸீன்ஸ்’ என்ற பெயரில் 'வேலாயுதம்’ படத்தை மூணு பகுதிகளாப் போட்டு முடிச்சுட்டாங்க. இதை யார் தட்டிக் கேட்க முடியும்? செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என்று மட்டும் தடை விதிச்சிருக்காங்க. இப்படி அனுமதி இல்லாமல் படத்தையும் பாட்டையும் ஒளிபரப்புவதை எப்படி அரசாங்கம் அங்கீகரிக்குது? இதை ஒழுங்குபடுத்தணும். பெரும்பாலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவங்கதான் இப்படிப் புதுசு புதுசா லோக்கல் சேனல்களைத் தொடங்கி இருக்காங்க. ஆளும் கட்சிக்காரங்க என்பதால், லோக்கல் சேனல்களை முழுசா அபகரிக்க நினைக்கிறாங்க. எதிர்த்துக் கேட்க யாரும் இல்லை.
இப்போ மாவட்ட கலெக்டர் மூலமாக டெண்டர் விட்டு யார் அதிக தொகைக்கு கேட்கிறாங்களோ... அவங்களுக்கு உள்ளூர் சேனல் நடத்த அனுமதி கொடுக்கப்போறதா சொல்றாங்க. அதை முன்னாடியே செய்ய வேண்டியதுதானே!'' என்கிறார்கள் முன்பு லோக்கல் சேனல் நடத்தியவர்கள்.
''அரசு கேபிளுக்கு மாதக் கட்டணமாக  70 நிர்ணயம் செஞ்சிருக்காங்க. அதில், சன் டி.வி. வராது என்பதால்... மக்களுக்கு ரொம் பவே அதிருப்தி. 'சன் டி.வி. இல்லைன்னா, கேபிள் கனெக்ஷனே வேண்டாம்’னு பல இடங்களில் மக்கள் சண்டை போட்டாங்க. அதனால், மக்களை சமாதானப்படுத்த அரசு கேபிள் வைச்சிருக்கும் பலர், சொந்தமாக ஒரு டிஷ் வாங்கி அது மூலமாக சன் நெட்வொர்க் இணைப்புகளை அரசு கேபிளில் லிங்க் பண்ணிடுறாங்க. சன் டி.வி-யும் சேர்த்துக் கொடுக்கிறதால் மாதக் கட்டணம் 80-ல் இருந்து  100 வரை ஏரியாவுக்குத் தகுந்த மாதிரி வசூல் பண்றாங்க'' என்கிறார் சேலத்தைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.
அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இதுபற்றிப் பேசினோம். ''இப்போது பரிசோதனை முயற்சியாகத்தான் உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம். சீக்கிரமே அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக டெண்டர் விடப்போகிறோம். யார் அதிகக் கட்டணம் செலுத்தி சேனல் நடத்தத் தயாராக இருக்கிறார்களோ... அவர்களுக்கு அனுமதி கொடுப்போம். ஒரு மாவட்டத்துக்கு 10 சேனல்கள் வரை அனுமதி கொடுக்கப்போகிறோம். உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டால், அவர்கள் விருப்பத்துக்கு எது வேண்டுமானாலும் ஒளிபரப்ப முடியாது. அதற்காக ஏழு விதிமுறை களை வகுத்திருக்கோம். செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என்பதுதான் முதல் விதி. காப்பிரைட் இல்லாமல் பாடல்களையோ, படக் காட்சிகளையோ ஒளிபரப்ப அனுமதி கொடுக்க மாட்டோம். அதனால், யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலைச் செய்ய முடியாது. அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே லோக்கல் சேனலை நடத்த முடியும். அ.தி.மு.க-வினர் மட்டும்தான் லோக்கல் சேனல் நடத்துகிறார்கள் என்பது பொய்யான குற்றச்சாட்டு.
சில இடங்களில் அரசு நிர்ணயித்து இருக்கும் கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கும் தகவல் வந்தது. அப்படி யாராவது வசூலித்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சன் டி.வி. இணைப்பை அரசு கேபிள் வழியாகக் கொடுத்துத் தொழிலைக் காப்பாத்திக்க சிலர் இப்படி செய்கிறார்கள். இனி அப்படி நடக்காது. நாங்களே சன் டி.வி-யோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். விரைவில் அரசு கேபிள் வழியாக சன் டி.வி-யும் கிடைக்கும். இதில் யாரும் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்'' என்றார் தெளிவாக.
சரிதான்!
கே.ராஜாதிருவேங்கடம்
************************************************************************
ராஜீவ் கொலை நடந்த போது எங்கே இருந்தீர்கள்?

வேலூரில் விசாரணை நடத்திய ஜெத்மலானி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் மரண தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் காண, அவ்வப்போது வைகோ முதல் சீமான் வரை பலர், வேலூர் மத்திய சிறைக்கு வந்து போவார்கள். ஆனால், பலரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த 12- தேதி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சிறைக்கு வர... அனைவரும் புருவத்தை உயர்த்தி இருக்கிறார்கள்!
' அனைத்து இந்திய சாய்பாபா பக்தர்கள் மாநாடு’ வேலூரில் கடந்த 12, 13 தேதிகளில் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த கலைவாணன், இந்த மாநாட்டில்ராம்ஜெத்மலானி கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதற்கு ஜெத்மலானியும் சம்மதித்தார். அதன்படி, கடந்த 12-ம் தேதி காலையில்  மாநாட்டைத் துவக்கிவைத்தார் ராம்ஜெத்மலானி. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேலூருக்கு வந்து, 'ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தாங்கள் சந்திக்க வேண்டும்’ என ராம் ஜெத் மலானியிடம் கோரிக்கை வைக்க... 12-ம் தேதி சிறைக்கு வந்து மூவரையும் சந்தித்துப் பேசினார் ஜெத்மலானி.
எப்போதும் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் வேலூர் சிறையில், அன்று அளவுக்கு அதிகமான பாதுகாப்பு. ராம்ஜெத்மலானி மற்றும் வைகோ உள்பட்டவர்கள் சிறைக்குள் சென்று சுமார் 12 நிமிடங்களில் வெளியே வந்துவிட்டனர். பத்திரிகையாளர்களிடம் ராம்ஜெத்மலானி அதிகமாகப் பேசவில்லை. ''மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் அப்பாவிகள், நிச்சயமாக அவர்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன். மற்றபடி என் தொழில் தர்மத்தை மீறி என்னால் எதுவும் பேச இயலாது, நான் இங்கு வந்ததற்கு முக்கியக் காரணம் வைகோதான்!'' என்று மட்டும் அவர் சொல்ல... நிருபர்கள் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தனர். ராம்ஜெத்மலானியோ புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்துவிட்டு சென்னைக்குக் கிளம்பினார்.
''சிறைக்கு உள்ளே என்ன நடந்தது?'' என்று வைகோவிடம் கேட்டோம். ''கிட்டத்தட்ட 21 வருடங்களாக சிறையில் தவிக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை ராம்ஜெத்மலானியிடம் அறிமுகப்படுத்தினேன். அவர் நம் தம்பி களிடம் பொறுமையாகப் பேசினார். 'ராஜீவ் காந்தி படுகொலையான சமயத்தில், நீங்கள் மூவரும் எங்கே இருந்தீர்கள்?’ என அவர் கேட்க, பேரறிவாளன்... 'சினிமாவுக்குச் சென்றதாகவும், மற்ற இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்களது சொந்த வேலைகளில் இருந்ததாகவும்’ கூறினர். பிறகு நான், 'பேரறிவாளன் ஒரு பேராசிரியர்’ என ராம்ஜெத்மலானியிடம் அறிமுகப்படுத்தினேன். முருகனின் ஓவியக் கலையையும், சாந்தனின் எழுத்தாக்கங்களையும் சொன்னேன். அவர்களின் திறமைகளைக் கண்டு ஜெத்மலானி ஆச்சர்யப்பட்டார். சிறைக் கைதிகள் அனைவருக்கும் இவர்கள் மூவரின் மீது உள்ள அன்பையும் பாசத்தையும் புரிந்துகொண்டார். சிறையில் உள்ள மற்றக் கைதிகளுக்கு ஓர் ஆசிரியராகப் பாடங்கள் சொல்லித் தரும் பேரறி வாளனைப் பாராட்டினார். உச்ச நீதிமன்றத்தில், பஞ்சாபைச் சேர்ந்த பக்கர் வழக்கை வாதாடி வருவதை யும், அந்த வழக்கைவிட உங்கள் மீது போட்ட பொய் வழக்கு மிகவும் சுலபமானது, எனவே, உங்களை விடுவிப் பது எனது பொறுப்பு என தைரியம் ஊட்டினார். வழக்கு குறித்த கேள்விகளை மூவரிடமும் தனித் தனியாகப் பேசினார். சிறை அதிகாரிகளும் அவர்கள் மீது பற்றுவைத்து இருப்பதைப் புரிந்துகொண்டார். சென்னைக்கு காரில் திரும்பும்போது என்னிடம் ராம்ஜெத்மலானி சிரித்துக்கொண்டே, 'மூவரும் நிரபராதிகள் என நிரூபிப்பது எனது வேலை. நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என அவர்களிடம் சொல்லுங்கள்’ என்றார். நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் வந்தது, சிறையில் இருக்கும் தம்பிகளுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒன்று மட்டும் நிச்சயம். உண்மையில், அவர்கள் அப்பாவிகள்'' என உணர்ச்சி வசப்பட்டார்.
சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை ராம்ஜெத்மலானி பார்த்துச் சென்று இருப்பது, தமிழ் ஆர்வலர் களிடையே நம்பிக்கையை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது!
கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்
*********************************************************************************
இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!

அதுதான் எலைட்...
ருக்கின்ற டாஸ்மாக் கடைகள் போ​தாது என்று புதிதாக 'எலைட்’ மதுபானக் கடைகளை அறிமுகப்படுத்தப்போகிறது தமிழக அரசு. எலைட் - பணக்காரக் 'குடி’மகன்களுக்காக உயர் ரக மற்றும் வெளி​நாட்டு இறக்குமதி மது பானங்கள் விற்பனை செய்யும் கடை..
கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசு, மது விற்பனையைத் தனது கையில் எடுத்ததில் இருந்தே அதற்கு நல்ல வருமானம்தான். 2004-05-ல்  6,000 கோடி வருவாய் கிடைத்தது. 2010-11-ல், இது  14 ஆயிரம் கோடியைத் தாண்டியது. வரும் ஆண்டில்  16 ஆயிரம் கோடி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், சென்னையில் எட்டு, சேலத்தில் ஒன்பது, கோவையில் 16, மதுரை, திருச்சியில் தலா 12, என மொத்தம் 57 எலைட் மதுபானக் கடைகளைத் திறக்க இருக்கிறது தமிழக அரசு. இங்கு 'காட்ஸ்’, 'ஸ்காட்ச்’, 'பாரடைஸ்’, 'போல்ஸ்’, 'வின்டேஜ்’ உள்ளிட்ட விலை உயர்ந்த உயர் ரக மது பானங்கள் விற்பனை செய்யப்படும். குவாட்டர் பாட்டிலின் விலை குறைந்தபட்சம்  200; ஃபுல் பாட்​டிலின் விலை குறைந்தபட்சம்  2,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசாயன மது பானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கள் வடிக்க அனுமதி தரக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தும் தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமியிடம் பேசினோம். ''ஏற்கெனவே, தெருவுக்கு இரண்டு டாஸ்மாக் கடைகள் சமூகத்தை நாறடிக்கின்றன. பள்ளிக் குழந்தைகள்கூட மதுவைப் பழகிவிட்டனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது போல பல இடங்களில் வீட்டுக்கு வீடு மது பாட்டில் களை விநியோகித்​தனர். இதில் பல பெண்களும்கூட குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.இது போதாது என்று இப்போது எலைட்.அதாவது, மேட்டுக்குடி வர்க்கத்துக்கு ஒரு கடை; இல்லாதவருக்கு ஒரு கடை. ஏற்கெனவே, நாட்டில் நடக்கும் டாஸ்மாக் மோதல்களுக்கு இடையே இப்போது இன்னொரு மோதலாக இது வர்க்கப் பேதத்தை உருவாக்கும். நாங்கள் மது விலக்கு கோரவில்லைஎன்றாலும், ஓர் அரசின் கொள்கை மதுவிலக்கு நோக்கியே இருக்க வேண்டும். அதுவே மக்களுக்கான அரசு. ஆனால், தமிழக அரசு தனது சொந்த மக்களையே கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோ பாய்ஸன் கொடுத்துக் கொல்கிறது. ரஷ்யாவில் உருளைக்கிழங்கில் வோட்கா, சீனாவில் அரிசியில் மவுத்தாய், ஜப்பானில் அரிசியில் சாக்கே, ஸ்காட்லாந்தில் தானியங்களில் ஸ்காட்ச், பிரான்ஸில் திராட்சையில் ஷாம்பெய்ன் என விதம் விதமாகத் தயாரிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் டாஸ்மாக் மது பானங்களை சர்க்கரை ஆலை ரசாயனக் கழிவான மொலாஸஸில் மது தயாரிக்கிறார்கள். அதில் கலக்கப்படும் எரிசாராயத்தால் குடல் வெந்து சாகிறான் தமிழன்!
டாஸ்மாக் மதுபானங்களில் இவ்வளவு கேடு இருப்பதால்தான், உயர்தட்டு மக்களுக்காக எலைட்மதுபானக் கடைகளைத் தமிழக அரசு திறக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது, ஏழைகள் லோக்கல் சரக்கைக் குடித்துவிட்டுச் சாகட்டும். வசதியானவர்கள் மட்டும் தானியங்களாலும் பழ வகையாலும் தயாரிக்கப்பட்டவற்றைக்  குடித்துவிட்டு நன்றாக இருக்கட்டும். இதுதான் தமிழக அரசின் கொள்கை. மொத்தத்தில் தமிழக மக்களுக்கு டாஸ்மாக்கும் தேவை இல்லை; எலைட்டும் தேவை இல்லை. ஏழை, பணக்காரன் என எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களைக்கொண்டு உலகத் தரம் வாய்ந்த, உடல் நலத்துக்குக் கேடு இல்லாத மது பானங்களை அரசு தயாரிக்க வேண்டும். இலங்கை அரசின் பனை, தென்னை மது பானங்கள், இன்று உலகில் பல்வேறு விமான நிலையங்களிலும் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி எங்காவது டாஸ்மாக் மதுபானத்தை இவர்களால் விற்பனை செய்ய முடியுமா? எனவே, அரசு தனது கொள்கை முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்...'' என்கிறார்.
ஆனால், இன்னொரு தரப்பினரோ, ''வாடிக்கையாளர்களுக்கு உரிய மரியாதையை டாஸ்மாக் கடைகள் அளிப்பது இல்லை. பார்களில் கால்வைக்க முடியாத அளவுக்கு நாறிக்கிடக்கின்றன. அதிக விலைக்கு விற்பது, கேட்கும் மதுபானத்தைக் கொடுக்காமல் இருப்பது என நுகர்வோருக்கு உரிய அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறார்கள். இந்த நிலையில், எலைட் மதுபானக் கடைகள் வருகை நியாயமானதே...'' என்கிறார்கள்.
டாஸ்மாக் அதிகாரிகளோ, ''இது அரசின் கொள்கை முடிவு. அதை செயல்படுத்துவது எங்கள் கடமை'' என்கிறார்கள் சின்​சியராக!
இப்படி ஆயிரம் நியாயங்களைக் கற்பித்தாலும், தமிழக அரசின் டாஸ்மாக் கொள்கைகளைப் பார்க்கும்போது, 'இந்த நாடும் நாட்டு மக்களும் எப்படியும் போகட்டும்’ என்ற நினைப்பில் இருக்கிறார்களோ என்னவோ!
டி.எல்.சஞ்சீவிகுமார்
************************************************************************
செய்தியும் சிந்தனையும் - டயல் செய்தால் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுவார்!

*********************************************************************************
கார் வாங்கப் போகிறீர்களா?

*********************************************************************************
கப்சா விட்ட மாஜி மந்திரி!

பட்டம் வாங்காமலேயே 'பி.ஏ.'ன்னு போட்டவர்தானே அவர்!''
ள் மாறாட்ட விவகாரத்தில் சிக்கி, தமிழகக் காவல் துறையினர் கண்ணில் மண் தூவிக்கொண்டு இருக்கும் புதுவைக் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம், இப்போது பதவியில் இருந்து தூக்கப்பட்டு இருக்கிறார். இந்த விவகாரத்தில் புதுவை மக்களின்... குறிப்பாக மாணவர் கள் மற்றும் ஆசிரியர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ரவுண்ட் அடித்தோம்.  
ஆனந்த்(புதுவை சட்டக் கல்லூரி, மூன்றாம் ஆண்டு): ''சட்டப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஓர் அமைச்சர் இப்படிக் கீழ்த்தரமான ஒரு காரியம் செய்ததை, எங்களால் ஏற்கவே முடியவில்லை. உண்மையிலே அவர் தேர்வை நியாயமான முறையில் எழுத நினைத்து இருந்தால், புதுவையில் எழுதி இருக்கலாம். எதற்காகத் திண்டிவனத்தைத் தேர்வு செய்யணும்? எதற்காக ஆசிரியர் ஆதவனின் முகவரியை, அவருடைய முகவரியாகக் கொடுத்தார்? கல்யாணசுந்தரத்துக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடத்துவதற்காக பணத்தைத் தண்ணீராக செலவழிக்கி றார்கள். இது சரி அல்ல. அவரைப் பதவியில் இருந்து நீக்கியது மட்டும் போதாது, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!''
ரஞ்சித் (பாலிடெக்னிக் மாணவர் மூன்றாம் ஆண்டு):
''கல்வித் துறை அமைச்சராக கல்யாண சுந்தரத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்தபோதே, தலையில் அடிச்சுக்கிட்டோம். ஏனென்றால், 8-ம் வகுப்பு ஃபெயி லானவர், ஐந்து கிரிமினல் வழக்கு கள் உள்ளவர், ஹோட்டலில் காபரே டான்ஸ் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். பட்டப் படிப்பு படிக்காமலே, கல்யாணப் பத்திரிகையில் பி.ஏ., என்று போட்டுக்கொண்டவர். இப்படிப் பட்ட ஒருவரை 'தவறான’ காரியங்கள் செய்வதற்கு ஒத்தாசையாகத்தான் முதல்வர் வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!''
பகத்சிங் (முனைவர் பட்ட ஆய்வாளர், புதுவைப் பல்கலைக்கழகம்) :
80 சதவிகிதம் படித்தவர்கள் நிரம்பியுள்ள புதுவையில், 8-ஆம் வகுப்பு முடிக்காத ஒருவரைக் கல்வி அமைச்சர் ஆக்கியது கொடுமை. ரங்கசாமி மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் ரவுடிகளுக்கும் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களுக்கும்தான் இந்த ஆட்சியில் மரியாதை இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட ஜெயராமன் விவகாரத்தில் கல்யாணசுந்தரத்துக்கு தொடர்பு இருப்பதாகச் சொல் கிறார்கள். இதுகுறித்தும் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரங்கசாமி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்ற வேண்டும்!''
சிந்து (பி.காம் முதலாம் ஆண்டு, பாரதிதாசன் கல்லூரி) :
''ஒரு மாணவர் பிட் அடித்தாலோ, ஆள் மாறாட்டம் செய்தாலோ, அவர் களுக்குத் தண்டனை கடுமையாக இருக்கும். இதே தவறினை ஒரு கல்வி அமைச்சர் செய்திருக்கிறார் என்றால், தண்டனை எவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும்? அவர் மீது தவறு இல்லை என்றால், நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்து இருக்கலாமே? எதற்காக ஓடி ஒளிகிறார்? பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மாணவர்களுக்கு எந்த ஒரு நல்ல காரியமோ, திட்டமோ நிறைவேற்றவே இல்லை. அமைச்சர் செய்த காரியத்தால் புதுச்சேரியில் இருக்கும் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் அதிருப்தியில் தலை குனிந்து நிற்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை அமைச்சராக நியமித்த, முதல்வர் ரங்கசாமி இந்தத் தோல்விக்கும் அவமானத்துக்கும் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும்!''
ஜெயராமன் (நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி, ஆசிரியர் சங்கத் தலைவர்) :
புதுச்சேரி மாநிலத்துக்கு என்று நேரு காலத்தில் இருந்து ஒரு தனி மரியாதை இருக்கிறது. அதற்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாகச் சொல்லப்படும் கல்யாணசுந்தரம், இதுவரை ஏன் தன்னிலை விளக்கம் கொடுக்கவில்லை? கல்வித் துறைக்கு ஒரு இளையவர் அமைச்சராகிறார் என்றதும் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன், ஆனால் இப்போது அவமானமாக இருக்கிறது. அந்தந்தத் துறைக்கு  ஏற்றவர்களைத் தேர்ந்து எடுத்தால், எதிர்காலத்திலாவது இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்!''      
               
ராம்ஜி (பெற்றோர் - ஆசிரியர் சங்கம்) :
''அவர் படித்தாரா, படிக்கவில்லையா என்பது முக்கியம் அல்ல. காமராஜர் படிக்காமலே பல சாதனைகள் செய்த வர்தான். ஆனால், ஒருவருக்குத் தனிமனித ஒழுக்கம் முக்கியம். 16 சட்டமன்ற உறுப்பினர்கள்கொண்ட என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவரை நீக்கிவிட்டால், கட்சிக்குக் கெட்ட பெயர், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று முதல்வர் இவ்வளவு காலம் நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஆகியிருக்கலாம். அடுத்து வருபவராவது பெற்றோர்கள் மனம் புரிந்து கல்வித் துறை மீது கவனம் செலுத்துபவராக வரட்டும்!''
சரவணன் (விவசாயி , பாகூர் பகுதி):
''கல்வித் துறை அமைச்சரே இப்படி ஆள்மாறாட்டம் பண்ணுவார்னு எதிர்பார்க்கலை. சமூகக் குற்றங்கள் செய்தவரைக் கட்சியில் சேர்த்து, அமைச்சர் பதவியும் கொடுத்த ரங்கசாமி, இப்போது பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி சரியில்லைன்னுதான் என்.ஆர். காங்கிர ஸுக்கு ஓட்டுப் போட்டோம். இவங்க அதைவிட மோசமாக இருக்கிறார்கள். உடனே ரங்கசாமி சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கட்சி கானல் நீர் போன்று மறைந்தேபோகும்!''
- நா.இள. அறவாழி
ஆ.நந்தகுமார்
*********************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010