********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (30 நவம்பர் 2011)

Wednesday, November 30, 2011


மிஸ்டர் கழுகு: 'கனி'ந்த நேரம்!

''டெல்லி செய்திகளுக்காகக் காத்திருக்கிறேன். அதனைப் பொறுத்து என்னுடைய வருகை இருக்கும்'' என்று தகவல் அனுப்பினார்
கழுகார். 'கனிமொழிக்கு ஜாமீன்’ என்ற தகவல் திங்கள்கிழமை மதியம் 3.46க்கு நம்மை எட்டிய சில நிமிடங்களிலேயே கழுகாரும் நம் முன்னால் ஆஜர்.
''இன்றைக்கு இரவுதான் கருணாநிதி நிம்மதியாகத் தூங்குவார்!'' என்று சிரித்தார் கழுகார்.
''பெத்த மனம் துடிக்கத்தானே செய்யும்'' என்றோம் நாம்.
''வெள்ளிக்கிழமையே கருணாநிதிக்கு அதிக நம்பிக்கை இருந்தது. 'கனிக்கு ஜாமீன் கிடைச் சிடும்’ என்று அன்று காலையில் இருந்தே கருணாநிதி சொல்லிக்கொண்டு இருந்தாராம். கோபாலபுரம் இல்லத்தில் டி.வி. முன்னால் உட்கார்ந்துகொண்டார். டெல்லியில் இருந்து தகவல் கள் கிடைக்க இரண்டு செல்போன்கள் தயாராக இருந்தன. அறிவாலயத்தில் இன்னும் கூடுதல் ஆர்வம் தலை தூக்கி இருந்தது. சிலர் பட்டாசு பாக்கெட்டுகளுடன் வலம் வந்தார்களாம். 'ஜாமீன்’ என்ற தகவல் கிடைத்ததும்.. அதிரும் வெடி களை போடத் திட்டமாம். ஆனால் அன்று ஆசை, நிராசை ஆனது!''
''அன்றைய தினம் ஜாமீன் கிடைத்துவிடும் என்றார்களே?''
'' டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழிக் காக மட்டும் இல்லாமல், இன்னும் பலர் மீதான மனுக்களும் விசாரணையில் இருந்ததால், ஒவ்வொருவர் மீதான விசாரணைக்குமாக இழுத்து விட்டது என்பதுதான் உண்மை. ஆ.ராசாவின் நெருங்கிய நண்பராகவும் அவரது செயலாளராகவும் இருந்த சித்தார்த்த பெஹூராவின் மனுவை சி.பி.ஐ. கடுமையாக எதிர்த்தது. காலதாமத்துக்கு இதுதான் காரணம்!''
''ஓஹோ!''
''இது போதாது என்று அன்றைய தினம் நீதிபதி அடித்த கமென்ட் ஒன்றும் கருணாநிதியை வருத்தப் படுத்தியது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து பேருக்கு ஜாமீன் கிடைத்தது. 'சுப்ரீம் கோர்ட் ஜாமீன் கொடுத்துவிட்டது’ என்பதையே தங்கள் தரப்புக்கான வலுவான ஆதாரமாகச் சொன்னார்கள். 'குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நம்பிக்கை மோசடி என்ற ஷரத்து உள்ளது. இது மிக மிக முக்கியமான விஷயம். இதை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் எடுத்துக்கொண்டதா எனத் தெரியவில்லை’ என்று சாதாரணமாகச் சொன்னது... 'கனிமொழிக்கு ஜாமீன் கொடுக்க நீதிபதி விரும்பவில்லையோ?’ என்ற தொனியை உருவாக்கியது. இந்த விசாரணையின்போது ராஜாத்தி அம்மாள் டெல்லியில்தான் இருந்தார். 'கனி இன்னைக்கு வெளியே வந்திரும்’ என்று அவரும் நம்பிக்கையோடு இருந் தார். ஆனால் ரிசல்ட் அன்று வராததால்... ராஜாத்தி அப்செட்.''
''அப்புறம்?''
''அடுத்த விமானத்தைப் பிடித்து சென்னைக்கு வந்துவிட்டார் ராஜாத்தி அம்மாள். அன்று கருணாநிதியைச் சந்தித்து தனது வருத்தங்களைப் பதிவு செய்தார். ராஜாத்தி வந்திருப்பது தெரிந்து சில தி.மு.க. பிரமுகர்களும் அவரைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். அன்று மாலையே டெல்லிக்கு ராஜாத்தி சென்றுவிட்டார். திங்கள் கிழமை பாட்டியாலா கோர்ட்டுக்கு ராஜாத்தி சென்றார். அங்கு கனிமொழியும் வந்திருந்தார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான காரசார விவாதம் நடந்துகொண்டு இருந்தபோது அம்மாவும் மகளும் அமைதியாக பாட்டியாலாவில் உட்கார்ந்து இருந்தார்கள். மாலை 4.30 மணிக்கு கிளம்பும் விமானத்தில் சென்னை திரும்ப டிக்கெட் போட்டிருந்தார் ராஜாத்தி. அதனால், அவர் டெல்லி விமான நிலையம் வந்துவிட்டார். ஜாமீன் கிடைத்த தகவலை டி.ஆர்.பாலுதான் முதலில் கனிமொழியின் கணவர் அரவிந்தனுக்கு போனில் சொல்லி இருக்கிறார். உடனே அரவிந்தன், கனிமொழியின் கையைப் பிடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினாராம். ஆனால், கனிமொழி நம்பவில்லையாம். 'நல்லா செக் பண்ணிச் சொல்லுங்க’ என்று கனிமொழி கேட்டார். மிக முக்கியமான நாள் என்பதால், தி.மு.க. எம்.பி.க்கள் சுமார் 10 பேருக்கு மேல் பாட்டியாலா கோர்ட்டில் குவிந்து இருந்தார்கள். இந்தத் தகவல், உடனடியாக ராஜாத்திக்கும் சொல்லப்பட்டது. கிடைத்த மறு கணமே சந்தோஷத்தால் அழ ஆரம்பித்துவிட்டாராம் ராஜாத்தி. அடுத்த போன், கோபாலபுரத்துக்குத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.''
''ஆமாம்! ஆமாம்!''
''டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு அதிகாரப் பூர்வமாக டைப் ஆகி... திகார் சிறைக்கு வருவதற்கான கால அவகாசம் இல்லாததால் அநேகமாக மறு நாள்தான் வெளியே வர முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் அன்றைய தினம் பிரின்டர் ரிப்பேர். அதனால் தீர்ப்பின் நகலை எடுப்பதற்குக் கால தாமதம் ஆனது. '10 நிமிடங்களுக்குள் கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று பாட்டியாலா நீதிபதி ஷைனியும் சொன்னார். ஆனால், பயன் இல்லை. எனக்குக் கிடைத்த தகவல்படி, செவ்வாய்க்கிழமை இரவு ஆகிவிடும் கனிமொழி ரிலீஸ் ஆவதற்கு.
ராஜாத்தி அம்மாள் விமானத்தில் பறந்து கொண் டிருந்த நேரத்தில் கருணாநிதி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். 'கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சிதான்’ என்ற கருணாநிதி, 'ராசாவும் கேட்டுக்கொண்டால், அவருக்கு உதவி செய்யத் தயார்’ என்றார். 'கனிமொழிக்கு புதுப் பதவி கொடுப்பீர்களா?’ என்று ஒரு நிருபர் கேட்டார்...''
''அது கடந்த இதழில் நீர் தந்த தகவலில் உள்ள விஷயமாச்சே?''
''கனிமொழிக்கு ஆதரவான ஆட்கள் சொல்லும் ராஜாத்தி அம்மாளின் நம்பிக்கையைத்தான் சொன் னேன். ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், 'டெல்லியில்தான் தங்க வேண்டும்’ என்பதுமாதிரியான நிபந்தனைகள் விதிக்காதது இவர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. 'கனிமொழிக்கு மரியாதை ஏற்படுத்தும் பதவி வேண்டும்’, 'தமிழகம் முழுவதும் அவரை வைத்து பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்’ என்று சிலர் இப்போதே கிளம்ப ஆரம்பித்துள்ளார்கள். 'இனியும் ராஜாத்தி அம்மாள் சும்மா இருக்க மாட்டார்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். 'என் மகளுக்கு உரிய அங்கீகாரத்தை வாங்கித் தராமல் விட மாட்டேன்’ என்று அவர் சபதம் போட்டா ராம்!''
''தி.மு.க-வில் இனி நிறையத் திடுக்கிடும் திருப்பங் களைப் பார்க்கலாம் என்று சொல்லும்!'' என்ற கழுகார்...
''அடுத்து ஜெயலலலிதா மேட்டருக்கு வருகிறேன்!'' என்றார்.
''ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் அதிகாரப் பூர்வமாக மூன்று நான்கு வாரங்கள் தங்கப்போகிறார். ஜெயலலிதாவுக்கு தேர்தலுக்கு முன்பே முதுகு வலி இருந்ததாம். அந்தச் சமயங்களில் கொடநாட்டில் தங்கியிருந்தவர் ஆயுர்வேதச் சிகிச்சை மேற்கொண்டு அதைச் சரிசெய்திருக்கிறார். கூடவே இதமான வெயிலும் பனியும் கலந்த நேரங்களில் சுத்தமான காற்றை சுவாசித்தபடி பங்களா வளாகத்துக்குள் நடைப்பயிற்சி செய்வார். பாதுகாப்புப் படையினர் புடைசூழ தனது எஸ்டேட்டுக்குள் பேட்டரி கார், ஜீப்பில் வலம் வந்து இதமான சூழலை அனுபவிப்பார். ஆனால் தேர்தலோடு நிலைமையே தலைகீழாக ஆகிவிட்டது. சட்டமன்றத் தேர்தலுக்காக ஓய்வில்லாத சுற்றுப்பயணம், வெற்றி பெற்றதும் முதல்வருக்கான பணிகள், பிரச்னைகள், உள்ளாட்சித் தேர்தலுக்கான சுற்றுப்பயணம் போன்றவை முதல்வருக்கு உடல் களைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அதிலும் சமீபத்தில் பெங்களூருவில் விசாரணைக்காக ஆஜரான நாட்களில் மணிக்கணக்காக அமர்ந்து, மன அழுத்தத்தோடு பதில் சொல்லியதும் அவருக்குச் சற்றே விலகியிருந்த முதுகு வலியை மீண்டும் உருவாக்கிவிட்டது. அதனால் ஆயுர்வேதச் சிகிச்சையும், ஆத்மார்த்தமான நடைப் பயிற்சியும் கொடநாடு பங்களாவில் நிச்சயம் என்கிறார்கள்.''
''உடனடியாகக் கிளம்பும் அளவுக்கு என்ன அவசரம்?''
''ஏ.ஸி. இல்லாமல் ஜெயலலிதாவால் ரொம்ப நேரம்  இருக்க முடியாது. கொடநாடு இயற்கைச் சூழல், ஏ.ஸி. பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளவும் உதவுமே.''
''ஓஹோ!''
''கொடநாடு பங்களாவில் இருந்து முதலமைச்சருக் கான பணிகளை அவர் கவனிப்பார் என்று அரசு அறிவிப்பே வந்திருந்தாலும், கூடவே கட்சி மற்றும் சொந்தப் பணிகளும் நடைபெறும் என்கிறார்கள். குறிப்பாக பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு, ஜெயலலிதா தரப்பில் இருந்து சாட்சிகள் ஆஜராகும் நிலையை எட்டி இருக்கிறது. இதற்காக கட்சி நிர்வாகிகளில் இருந்து புதிய சாட்சிகளை ஆஜர் படுத்தும் வேலைகள்   நடக்கிறதாம். ஜெயலலிதா சொத்து குவித்ததாகக் குற்றம் சாட்டப்படும் கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் பட்டியலை ஆராய்கிறார்கள்.. இதில் காலமானவர்கள், கட்சி மாறியவர்கள், மதில் மேல் பூனை பேர்வழிகளைத் தவிர்த்து இன்றைக்கும் தீவிரமான விசுவாசிகளான சிலர்தான் சாட்சிகளாம்.  இந்த சாட்சிகள் கோர்ட்டில் சொல்லப்போகும் தகவல்கள் குறித்து கவனிக்கப்படுகிறது.  இந்த சாட்சிகள் வழக்கின் போக்கை மாற்றக்கூடுமாம். அந்தக் காலத்தில் பரிசளித்தவர்களையும் ஒன்று சேர்த்து சாட்சியங்களாகப் பதிவு செய்யத் திட்டமிடுகிறார்களாம்.''
''இப்படிப் பார்த்தால், ஜெ. தங்கும் நாட்கள் அதிகமாகலாம் என்று சொல்லும்.''
''அதிகாரிகள் அனைவரையும் கூட்டிவைத்து ஆலோசிக்கும் அளவுக்கான பெரிய கான்ஃபெரன்ஸிங் ஹாலில் துவங்கி பல வித வசதிகள் இப்போது அங்கு உருவாக்கப்பட்டு விட்டது. முதல்வர் இருப்பதால் கொடநாடு ஏரியாவில் செக்யூரிட்டி எந்த அளவுக்கு இருக்கும் என்பது புரியும். பரபர போக்குவரத்துக்காக சாலை விரிவாக்கம், முதல்வர் வந்து இறங்கும் ஹெலிபேடு புனரமைப்பில் ஆரம்பித்து பல்வேறு பணிகள் அசுரகதியில் நடக்கின்றன..''
''இனி அமைச்சர்கள் மாற்றம் கூட அங்கிருந்து தானா?''
''நிம்மதியாக இருப்பவர்கள் வயிற்றில் ஏன் புளியைக் கரைக்கிறீர்?'' என்ற கேள்வியுடன் பறந்தார் கழுகார்!
படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
 
முதல்வர் உத்தரவுக்கே முற்றுப்புள்ளி?
னியார் நிலங்களை மிரட்டி அபகரித்தவர்களின் மீது கடும் நடவடிக்கையை முதல்வர் எடுத்தபடி இருக்க... ராஜபாளையம் நகரத்தின் முக்கிய பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான ஒன்றரைஏக்கர் நிலத்தை சில பெரும் முதலைகளுக்குத் தாரை வார்க்கும் வேலைகள் நடப்பதாக பதற ஆரம்பித்திருக்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள். ''ராஜபாளையம் புறவழிச் சாலை அமைக்கும்போது, எத்தனையோ ஏழை பாழைகள் எல்லாம் தங்கள் நிலங்களை விட்டுத் தர முன்வந்தார்கள். ஆனால், 10 சென்ட் நிலத்தைக்கூட விட்டுத்தர மனமில்லாமல் பொத்திப் பாதுகாத்துக் கொண்டவர்கள்தான், இன்று நகராட்சி நிலத்துக்குக் குறி வைக்கிறார்கள். ராஜபாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான கோபால்சாமி மூலம் இதற்காக அவர்கள் வெயிட்டாக மூவ் நடத்துவதாக ஏரியாவுக்குள் ஒரு தகவல் பரவி இருக்கிறது.
''தேர்தல் முடிஞ்சு ஒருசில மாதத்துக்குள்ளேயே அந்தக் கோடியிலிருந்து இந்தக் கோடிக்கு இவ்ளோ ஸ்பீடா முன்னேறிட்டாரே..?'' என்று புழுங்கும் விசுவாச அ.தி.மு.க-வினர், இந்த நில விவகாரம் தொடர்பாக போயஸ் தோட்டத்தின் காதில் போட்டார்களாம். அதைத் தொடர்ந்து உளவுப் பிரிவின் விசாரணைக்கு உத்தரவானதாகவும்... அந்த விசாரணைக்கே யாரோ இடையில் புகுந்து முற்றுப்புள்ளிபோட முயல்வதாகவும் பேச்சு பரவிக் கிடக்கிறது. ''எங்க எம்.எல்.ஏ-வுக்கு ராமரும் ஃப்ரெண்டு... ராவணனும் ஃப்ரெண்டு. இப்படியெல்லாம் சொல்லி யாரும் தோட்டத்தின் கோபத்தை அவர் பக்கம் திருப்ப முடியாது'' என்று சிலுத்துக்கொண்டு சொல்கிறார்களாம் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள். ''நகராட்சியின் சேர்மனாக இருக்கும் தனலட்சுமியையும் (இவரும் அ.தி.மு.க.) இந்த விஷயத்தில் சைலன்ட் ஆக்கிவிட்டார்களோ என்று பயமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில்கூட கைவைக்க முடியாத அந்த அரசாங்க நிலத்தை அடைவதற்காக யாரையும் வளைக்கத் தயாராக இருக்கும் ஒரு பெரிய மனிதர், 'படகு கார்' ரேஞ்சுக்கு பரபரப்பாக நடத்தும் உபசரிப்பின் மகிமை அப்படிப்பட்டது'' என்று டென்ஷனாகிறார்கள் ஊருக்குள். 
 'தந்தையும் தம்பியும்’
சென்னை தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் டிசம்பர் 2-ம் தேதி, 'தந்தையும் தம்பியும்’ என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடக்கும் இந்த விழாவில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, புத்தகத்தை வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில், தி.மு.க-வில் சர்ச்சையை ஏற்படுத்திய பரிதி இளம்வழுதி, பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இது, அரசியல் பார்வையாளர்களை உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கிறது.
*********************************************************************************
கழுகார் பதில்கள்

கோதை ஜெயராமன், மீஞ்சூர்
 தி.மு.க. நடத்தும் பொதுக் கூட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்கும் குஷ்பூ, அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்பைக் கைப்பற்றுவாரா?
இன்னும் சில மாதங்களில் உங்களின் கேள்விக்கு விடை கிடைக்கும்!
கால் உடைந்த நிலையில்கூட கலெக்டர் அலுவலகத்துக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தார். கடும் மழையிலும் ஸ்டாலினுடன் போராட்டங்களில் கலந்து கொண்டார். கனிமொழியை வரவேற்று அழைத்து வர டெல்லிக்கு அவரைப் போகச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறார் கருணாநிதி. டெல்லி மீடியாக்களும், தமிழகப் பத்திரிக்கைகளும் தி.மு.க. நிலைப்பாடு பற்றிக் கருத்துக் கேட்டால், குஷ்பூ மட்டும்தான் தயக்கம் இல்லாமல் பதில் சொல்கிறார். எனவே, அவருக்கு தகுதிக் குறை எதுவும் இல்லை என்று இப்போது சிலர் நினைக்கிறார்கள்!
 கே.ஏ.என்.சிவம், பெங்களூரு.43
கலைஞரை நன்றாக ஓய்வெடுக்கச் சொல்லும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தன் கட்சித் தலைவரையும் நன்றாக ஓய்வெடுக்கச் சொல்லலாமே?
அவரிடம் நேரடியாகச் சொல்ல முடியாததைத்தான் கருணாநிதிக்குச் சொல்வதைப் போலச் சொல்கிறாரோ என்னவோ?
 போடி.எஸ்.சையது முகமது, சென்னை.93
1,339 கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டாரே முதல்வர்?
'தயக்கம் இல்லாமல், தெளிவாகப் பதில் அளித்தார் ஜெயலலிதா’ என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா சொல்லி விட்டார். ஆனால், அவை அனைத்தும் சரியான பதில்கள்தானா என்பதை நீதிபதி மல்லிகார்ஜூனய்யாதான் சொல்ல வேண்டும்!
 அ.குணசேகரன், புவனகிரி
சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை என்றால்?
ஆ.ராசாவுக்கு எவ்வளவு என்பதை ஷைனி தான் சொல்ல வேண்டும். ஸ்பெக்ட்ரம் வழக்கின் ஆழ அகலங்களை, அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அதன் அப்பீல் மனுக்களை பரிசீலனை செய்யும் டெல்லி உயர் நீதிமன்றம், இந்த வழக்கை மேற்பார்வை செய்யும் உச்ச நீதிமன்றம்... ஆகிய மூன்றுமே மிக மிகக் கறாராக அணுகி வருகின்றன. ஒன்றின் கவனக்குறைவை இன்னொன்று சரிசெய்கிறது. வழக்கத்துக்கு மாறாக உச்ச நீதிமன்றத்தையே, அதற்குக் கீழ் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி விமர்சித்துள்ளார். எனவே, வழக்கு விசாரணையின் போக்கு சரியாகவே இருப்பதாகத் தோன்றுகிறது இப்போதைக்கு!
 என்.காளிதாஸ், அண்ணாமலை நகர்
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடம் ஒதுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதே?
வரவேற்கத்தக்க அறிவிப்பு இது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் படிப்பைப் பாதியில்விட்ட பிள்ளைகள் அதிகம். எனவே, கருணை அடிப்படையிலான திட்டம் இது. ஆனால் 25 சதவிகித இடங்களைத் தனியார் பள்ளிகள் ஒதுக்கீடு செய்கிறதா என்பதை அரசு அதிகாரிகள் இதய சுத்தியோடு கண்காணிக்க வேண்டும். இதிலும் லஞ்சம் தலைதூக்கி சும்மா ஒப்புக்குச் செயல்பட ஆரம்பித்தால், இந்தத் திட்டத்தின் நோக்கமே சிதைந்துபோகும்!
எஸ்.ஏ.காதர், விழுப்புரம்
இப்போதைக்கு முதல்வர் ஜெயலலிதாவின் பலம் எது? பயம் எது?
பலம் - தமிழகம்! பயம் - கர்நாடகம்!
 ஜி.அர்ஜூனன், திருப்பூர்.7
'ஏழைகள் வீட்டுக்குச் சென்று சாப்பிடாத வரை அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது’ என்கிறாரே ராகுல்?
ஏழைகள் வீட்டுக்குச் சென்று ஒருவேளை சாப்பிடுவதால் மட்டுமே அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது ராகுல்!
தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தனது குருநாதரான கோபால கிருஷ்ண கோகலேவைச் சந்தித்தார். 'நான் தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறேன்’ என்றார். 'அதற்கு முன் இந்தியா முழுக்க பயணம் செய். இந்திய மக்கள் அனைவரையும் மனதால் படி’ என்று கோகலே உத்தரவிட்டார். ஓர் ஆண்டுக்கு மேல் இந்தியாவின் அத்தனை பகுதிகளுக்கும் சென்று பார்த்தார். பேசினார். பழகினார். சாதாரண மோகன்தாஸ், மகாத்மாவாக உருவானது அப்படித்தான். ஒருவேளை சாப்பிடுவதால், ஒருவேளை பப்ளிசிட்டி கிடைக்கலாம். பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது!
 டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.1
இந்தியாவின் எந்த முதல்வர் நிம்மதியாக இருக்கிறார்?
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நினைத்தால்தான் பொறாமையாக இருக்கிறது. தனது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவரை பக்கத்து மாநிலப் போலீஸ் தேடியபோதும், அவரிடம் பதற்றம் இல்லை. தன்னைச் சந்தித்துவிட்டு வெளியே போன ஒருவரைத் தனது வீட்டு வாசலிலேயே ஒரு கும்பல் வெட்டிக் கொன்றபோதும் பதற்றம் இல்லை. இத்தகைய 'நிம்மதி மனோபாவம்’... பாவம் எந்த முதல்வருக்கும் இல்லை!
 பொன்.ராஜ்குமார், ஊத்தங்கால்
டேம் - 999 படம் பார்த்தீர்களா?
இன்னும் இல்லை! தமிழர்களின் உணர்வைப் புண்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அந்தப் படம் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் வருந்தத்தக்க ஒரு விஷயம், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக் என்ற ஆங்கிலேயர் கொச்சைப்படுத்தப்படுவதுதான். ஏதோ ஒரு மேயர், பணம் சம்பாதிப்பதற்காக... பலமற்ற ஓர் அணையைக் கட்டியதாகவும் அது சிதைந்ததால் இரண்டு லட்சம் பேர் இறந்ததாகவும் படத்தில் ஒரு காட்சி வருகிறதாம். தென்னகத்தின் வளத்துக்காக தனது பல்லாண்டு கால வாழ்க்கையைப் பணயம்வைத்துக் கட்டிய அணை அது. பல ஆயிரம் கி.மீட்டருக்கு அப்பால் இருந்த பென்னி குக் என்ற மனிதனுக்கு இருந்த உணர்ச்சி, இந்தியாவுக்குள், அதுவும் தமிழகத்துக்குப் பக்கத்தில் இருப்பவர்களுக்கு இல்லாமல்​போனதுதான் வேதனை!
 மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்
ஜெயலலிதாவின் ஆட்சி செல்லும் வேகத்தின் அளவு என்ன?
இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். மின் கட்டணம் உயர்த்தப்பட்டதும் உம் வீட்டு மீட்டர் பாக்ஸ் காட்டும்!
*********************************************************************************
இலவசம் வேண்டாம்... தண்ணீர் சேகரியுங்கள்!

மிழகம் முழுவதும் நல்ல மழை பொழிந்து ஏரி, குளம், அணைகள் எல்லாமே நிரம்பி வழிகின்றன. உபரி நீர் எப்போதும் போலவே வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. யாருக்கும் பயன்​படாமல் கடலில் சென்று சேரும் தண்​ணீரைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்​கள்.  கோடை காலம் வந்துவிட்டால், இந்தத் தண்ணீருக்காகத்தானே விவசாயிகள் போராட வேண்டி இருக்கிறது. இந்தத் தண்ணீருக்காகத்தானே மக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் மறியல் செய்யவேண்டி இருக்கிறது.
தொழிற்சாலைகள் அமைப்பதற்கு பல்வேறு வகைகளிலும் உதவி புரியும் அரசு, விவசாயிகளுக்காக எந்த ஒரு புதிய திட்​டமும் இயற்றுவது இல்லை. காமராஜர் காலத்துக்குப் பிறகு புதிதாக குளம், குட்டை, ஏரிகள் எதுவுமே வெட்டப்படவில்லை என்பது​தான் உண்மை.
நீர் சேகரிப்புக்காக இருந்த ஏரி, குளம் போன்றவற்றில் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டன. அவற்றை மீட்பது உடனே முடியும் காரியமும் இல்லை. ஆனால், அரசு நிலத்தில் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்க முடியுமே. மன்னர் காலத்தில் மட்டுமே நடந்துவந்த இதுபோன்ற நல்ல காரியத்தை ஜெயலலிதா அரசு நடைமுறைப்படுத்தலாமே? வீணாகும் உபரி நீரை சேகரித்து வைத்தால், எதிர்காலத்தில் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் எந்த ஓர் அண்டை மாநிலத்திடமும் கையேந்த வேண்டிய நிலை வராதே. இலவசங்களை அளிப்பது போன்ற குறுகிய காலத் திட்டங்களை கைவிட்டுவிட்டு, நீர் ஆதாரம் பெருக்கும் நீண்ட காலத் திட்டத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்!
- பாலசுந்தரம், சென்னை.
*********************************************************************************
சசிகலா பேரைச் சொல்லி அடாவடி வசூல்?!

கோயம்பேடு பார்க்கிங் கொள்ளை
'கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வண்டிகளை நிறுத்துவதற்காக வசூல் செய்யப்படும் கட்ட ணத்தில் பகல் கொள்ளை நடக்கிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் (044-42890005) அலறவே, நேரடி விசிட் செய்தோம்.
சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் இரண்டு லட்சம் பயணிகள் வரை வந்து செல்கின்றனர். இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக, இரண்டு அடுக்கு டூ வீலர் பார்க்கிங் செயல் பட்டு வருகிறது. இதுபோக, தற்காலிக பார்க் கிங் வசதியும் உண்டு. சில மாதங்களுக்கு முன்புவரை இங்கு, மூன்று மணி நேரம் கார் நிறுத்த ஐந்து ரூபாயும், டூவீலர் நிறுத்த மூன்று ரூபாயும், சைக்கிள் நிறுத்த இரண்டு ரூபாயும் கட்டணமாக  வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது கன்னாபின்னாவென்று கட்டணத்தை உயர்த்தி இருப்பதுதான் பயணிகளை மிரள வைத்திருக்கிறது.
பயணிகள் சிலரிடம் பேசினோம். ''இப்போது மூன்று மணி நேரம் பைக் நிறுத்த 10 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் நிறுத்த வேண்டுமென்றால் 20 ரூபாயும் வசூல் செய்கிறார்கள்.  மறுநாள், ஐந்து நிமிடம் தாமத மாக வந்து வண்டியை எடுத்தால்கூட, இன்னொரு 20 ரூபாயையும் சேர்த்துப் பிடுங்குகின்றனர். 'மூன்று மணி நேரம் பைக் நிறுத்த ஐந்து ரூபாய் என்றுதானே சி.எம்.டி.ஏ. கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது, நீங்கள் 10 ரூபாய் வசூல் செய்கிறீர்களே?’ என்று பொதுமக்கள் யாராவது கேள்வி கேட்டால், அவர்களுக்கு அந்த இடத்திலேயே சரமாரியாக அடி விழுகிறது. 'இது சின்னம்மா பார்க்கிங். நாங்க சொல்றதுதான் ரேட்’னு மிரட்டுறாங்க.
ரெண்டு மூணு நாள் ஊருக்கு போய்ட்டு வந்தா 100 ரூபாய் தண்டம் அழ வேண்டி இருக்கு. இங்க வேலை பார்க்குற ஊழியர்களின் அராஜகமும் தாங்க முடியலை. வண்டியை பார்க்கிங் செய்த ஒருவரின் டோக்கன் காணாமல் போய்விட்டால், சம்பந்தப்பட்ட நபர் முறையான ஆவணங்களைக் காட்டிவிட்டு தன் வண்டியை எடுத்துச் செல்லலாம் என்பதுதான் நடைமுறை. ஆனால் இப்போது யாராவது டோக்கன் தொலைந்து விட்டது என்று சொன்னால், வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு, 300 ரூபாய் ஃபைன் கொடுத்தால்தான் வண்டியைக் கொடுப்போம் என்று மிரட்டி வாங்குகிறார்கள். கார் பார்கிங்கிலும் இதே கொடுமைதான். மூன்று மணி நேர கார் பார்க்கிங் செய்வதற்கு 50 ரூபாய் வசூல் செய்கின்றனர். அதனால் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி அடிதடிக் காட்சிகள் அரங்கேறுகின்றன. சில நாட்களுக்கு முன் கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய முஸ்லிம் பிரமுகர் ஒருவரை பார்க்கிங் ஆட்கள் நையப் புடைத்து, 16 தையல் போடும் அளவுக்கு தாக்கினார்கள். உடனே ஜமாத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் திரண்டுவந்து முற்றுகை நடத்தி பிரச்னை செய்துவிட்டார்கள். இங்கு நடக்கும் அராஜகங்கள் குறித்து காவல்துறையில் பலமுறை புகார் கொடுத்துவிடோம். ஆனாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை'' என்று ஆவேசப்பட்டனர்.
பயணிகள் சவாரிக்காக காத் திருந்த ஆட்டோ டிரைவர்கள் சிலர், ''இத்தனை வருஷமா ஆட்டோ உள்ள வர்றதுக்கு காசு கிடையாது. ஆனா இப்ப எங்ககிட்டயே பத்து ரூபாய் பிடுங்கிட்டுத்தான் வெளியே அனுப்புறாங்க. அதுக்கு டோக்கனும் கொடுக்கிறதில்லை. இங்கே சம்பளத்துக்கு ஆட்களைப் போட்டு சி.எம்.டி.ஏ-வே கட்டணம் வசூல் செய்வது மாதிரி தெரியும். ஆனா அது உண்மை இல்லை. மன்னார்குடி மகாதேவனுக்கு வேண்டப்பட்ட கெங்கவராஜன் வசம்தான் பார்க்கிங் உரிமை இருக்கிறது. அவரது உறவினரான திலிப் என்பவர் நிர்வகித்து வருகிறார். இதனால்தான் காவல் துறை மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நமக்கு ஏன் வம்பு என்று கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதனால் அ.தி.மு.க-வுக்குத்தான் கெட்ட பெயர். முதல்வர் ஜெயலலிதா உடனடியாக இதில் தலையிட்டு, நியாயமான கட்டணம் வசூல் செய்ய உத்தரவிட  வேண்டும்'' என்று சொன்னார்கள்.
பார்க்கிங் நிர்வாகி திலிப்பை சந்தித்து புகார்கள் குறித்து கேட் டோம். ''கோயம்பேடு பார்க்கிங்கை நடத்துவது சி.எம்.டி.ஏ-தான். நாங்கள் சி.எம்.டிஏ-விடம் சம்பளம் வாங்கும் தற்காலிக ஊழியர்கள் மட்டுமே. டோக்கனில் குறிப்பிடப் பட்டுள்ள கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. சசிகலா, மகாதேவன் பேரைச் சொல்லி நாங்கள் மிரட்டுவதாக கூறுவதில் துளியும் உண்மை கிடையாது. மற்றபடி எதுவாக இருந்தாலும் சி.எம்.டிஏ அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளுங்கள்'' என்றார்.
சி.எம்டி.ஏ. கண்காணிப்புப் பொறியாளர் நாராயணனின் கவனத்துக்கு மொத்த பிரச்னை களையும் கொண்டு சென்றோம்
''அதிகக் கட்டணம் வசூல் செய்யப் படுகிறதா?' என்று ஆச்சர்யத்துடன் கேட்ட வர், உடனே அலுவலர்களை அனுப்பி சோதனை நடத்துகிறேன். நானும் தீவிரமாக கண்காணிக்கிறேன். தவறு நடப்பது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.
பார்க்கலாம்!
தி.கோபிவிஜய்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
*********************************************************************************
''தங்கச்சியா நெனைச்சா, ஆசையை எப்படித் தீர்த்துக்கிறது?''

காக்கிகளிடம் மாட்டிய இருளர் பெண்கள்
ற்பழிப்புப் புகாரில் காக்கிகள் மாட்டுவது புதிதல்ல. ஆனால் இந்த முறை நான்கு இருளர் இனப் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் விவகாரம் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறது.
திருக்கோவிலூர் அருகேயுள்ள தி.மண்டபம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை, 'ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும்’ என்று, கடந்த 22-ம் தேதி மதியம் போலீஸார் அழைத்துப் போனார்கள். மீண்டும் இரவு 8 மணியளவில் காசி வீட்டுக்கு வந்த போலீஸார், காசியின் அப்பா முருகன், அம்மா வள்ளி, மனைவி லட்சுமி, சகோதரிகள் ராதிகா, வைகேஸ்வரி, தம்பி வெள்ளிக்கண்ணு, தம்பி மனைவி கார்த்திகா ஆகிய ஏழு பேரையும் வம்படியாக ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். விசாரணை முடிந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், சங்கராபுரம் ரோட்டில் உள்ள தைலம் தோப்புக்குள் வண்டியை விட்டிருக்கிறார்கள். அங்கு வள்ளி மற்றும் ஆண்களைத் தவிர்த்து மற்ற நான்கு பெண்களையும் கீழே இறங்கச் சொல்லி தோப்புக்குள் இழுத்துப் போய், நான்கு காவலர்களும் பலாத்காரம் செய்ததாக செய்தி பரவி உள்ளது. இதில் லட்சுமி 3 மாத கர்ப்பிணி. இந்த விவகாரம்தான் தமிழகத்தைச் சூடாக்கி இருக்கிறது.
நான்கு பெண்களையும்  புகார் கொடுக்க அழைத்து வந்த பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கச் செயலாளர் பூபதியிடம் பேசினோம். ''தோப்புல இறக்கி விட்டு, தவறான நோக்கத்துல நெருங்கின போலீஸிடம், 'நாங்க உங்க தங்கச்சி மாதிரி. எங்கள விட்டுடுங்க’ன்னு எவ்வளவோ கெஞ்சி இருக்காங்க. அதுக்கு போலீஸ்காரங்க, 'உங்கள தங்கச்சியா நெனைச்சா எங்க ஆசையை எப்படித் தீர்த்துக்கிறது. வந்து படுங்கடி’னு மோசமா பேசி இருக்காங்க. அரை மணி நேரம் மிருகம் மாதிரி நடந்து... அவங்கள நாசமாக்கிட்டுத்தான் ஓய்ஞ்சிருக்காங்க. ராத்திரி முழுக்க அவங்களை அங்கேயே வைச்சிருந்து மறுநாள் விடியகாலம் அஞ்சு மணிக்குத்தான் வீட்டுல விட்டுருக்காங்க. மறுநாள் நான்கு பெண்களும் இல்லாதப்ப போலீஸ்காரங்க வந்து, வீட்டில இருந்த பொருட்களை எல்லாம் உடைச்சிருக்காங்க. 10 பவுன் நகையையும், 2,000 பணத்தையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க. வீட்டுக்குத் திரும்பி வந்தவங்க, போலீஸுக்கு பயந்துக்கிட்டு, உளுந்தூர்பேட்டையில இருக்கிற லட்சுமியோட அப்பா வீட்டுக்குப் போயிட்டாங்க. அதுக்குப் பிறகுதான் என்னைப் பார்த்தாங்க'' என்றார்.
அடுத்துப் பேசிய பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் விழுப்புரம்வட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ''நாங்க புகார் கொடுத்ததும், அந்த நான்கு பெண்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பச் சொன்னோம். ஆனா, அவங்க அதைச் செய்யாம, அந்தப் பெண்களை ராத்திரி முழுக்க ஒரு தனி அறையில வைச்சு மிரட்டியிருக்காங்க. அதனால, 'எங்க உறவினர்களை வெளியே விடணும்னுதான் நாங்க அப்படி பொய் சொன்னோம்’னு சொல்லிட்டாங்க. அப்புறம் எங்க சங்க செயலாளர் பூபதி அந்தப் பெண்களிடம் தனியா பேசின துக்கு அப்புறமாதான், போலீஸ்காரங்க மிரட்டினது எங்களுக்குத் தெரிய வந்தது. இந்த வழக்கு சம்பந்தமா சி.பி.ஐ. விசாரணை வேணும்னு போராட இருக்கிறோம்'' என்றார்.
இருளர் சங்கத்தின் திண்டிவனம் வட்ட ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் பிரபா கல்விமணியிடம் பேசினோம். ''போலீஸ்காரங்களுக்கு ஒரு கேஸும் இல்லைன்னா, இருளரில் ஒருத்தரை பிடிச்சுட்டுப் போய், 'பொய் கேஸ்’ போடுறது வழக்கம். 1996-ம் ஆண்டு 'அத்தியூர் விஜயா’ பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு, அந்த நிலைமை கொஞ்சம் குறைஞ்சது. ஆனா, இப்போ திரும்பவும் இருளர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிடுச்சு. அந்த நான்கு பெண்களில் ஒருவருக்கு 17 வயசுதான். அந்த பெண்ணிடம் மட்டும் மூணு போலீஸ்காரங்க மிருகத்தனமாக நடந்திருக்காங்க. அனைத்துக் கட்சியினரையும் அழைச்சு ஒரு கூட்டம் போட்டோம். அதில், டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் போட்டு இருக்கிறோம். அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.
விழுப்புரம் எஸ்.பி. பாஸ்கரனிடம் பேசினோம். ''லட்சுமியோட கணவன் ஒரு பெரிய திருடன். ஒரு டாக்டர் வீட்டுலேயும் கலெக்டர் ஆபீஸ்ல வேலை செய்கிற ஒருத்தரோட வீட்டுலேயும் நகை திருடி இருக்கார். அதோட மதிப்பு ஐந்தரை லட்ச ரூபாய். அதோட, ஒரு கோயில் உண்டியலிலும் பத்தாயிரம் ரூபாய் திருடி இருக்கிறான். அதனாலதான் அவரை கைது செஞ்சாங்க. புகார் சொன்ன பெண்களிடம் நான் பேசினப்ப... 'கணவரை மீட்கத்தான் பொய் சொன்னோம்’, 'எங்களை போலீஸ்காரங்க பாலியல் பலாத்காரம் செஞ்சாங்க’ என்று மாத்தி மாத்திப் பேசுறாங்க. இப்போ திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் விசாரணை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. மத்தபடி நாங்க யாருமே அந்தப் பெண்களை மிரட்டவில்லை'' என்றார்.
போராட்டம் தீவிரம் அடைந்தபிறகே, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெண் தலைமையில் நடக்கும் ஆட்சியிலும், தமிழகப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே!
- அற்புதராஜ்
படங்கள்: ஜெ. முருகன்
*********************************************************************************
'குடி' மகன்களுக்காக ஒரு திடீர் பாலம்!

புதுவை அதிர்ச்சி
'ஆற்றைக் கடந்து செல்வதற்குப் பாலம் வேண்டும்’ என்று  எத்தனையோ கிராம மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், புதுவைக்கான தமிழக எல்லையில், 'குடி’மகன்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே ஒரு பாலம் அமைத்து கிர்ர்ரடிக்க வைத்திருக்கிறார்கள்!
புதுச்சேரி எல்லைப் பகுதியான ஆராச்சிக் குப்பத்தில் ஒரு சாராயக் கடையை ஏலம் எடுத்து, நடத்தி வருகிறார் புதுவையைச் சேர்ந்த சேதுராமன். இவர், புதுச்சேரி மாநில ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். இந்தக் கடைக்கு சாராயம் குடிக்க வருபவர்களில் புதுவை மக்களின் எண்ணிக்கை குறைவு. தமிழகப் பகுதியான கடலூர் மாவட்ட கிராமங்களான வெளிச்செம்மண்டலம், கோண்டூர், சாவடி உள்ளிட்ட கிராமத்தினர்தான் அதிகம். காரணம், அங்கு சரக்கு விலை குறைவாக இருப்பதுதான் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை. தமிழகக் குடிமகன்கள் வருகையால், அவரது சாராயக் கடைக்கு செம வருமானம். இதனால், சேதுராமன் காட்டில் பண மழை!
கடலூர் மாவட்டக் கிராமங்களில் இருந்து சாராயக் கடை இருக்கும் ஆராச்சிக் குப்பத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் குறுக்கே இருக்கும் தென்பெண்ணை ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இத்தனை நாட்களாக ஆறு வறண்டு கிடந்ததால், எந்தத் தடையுமின்றி, ஆற்றைக் கடந்து சென்று, தங்களது 'கடமை’யைச் செவ்வனே ஆற்றி வந்தனர் குடிமகன்கள். சமீபத்தில் பெய்த கன மழையால் அதற்கும் வந்தது சோதனை. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட... குடிமகன்கள் ஆற்றைக் கடந்து சென்று  சரக்கடிக்க முடியாமல் தடுமாற... சரக்கு விற்பனையில் தள்ளாட்டம்.
இத்தனை நாட்களாக கல்லா கட்டியவர்கள் மனசு தாங்குமா? உடனே, குடிமகன்களின் நலன்(?) கருதி சில லட்சங்கள் செலவு செய்து ஆற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டர் நீளத் துக்கு மரப்பாலம் அமைத்து விட்டனர். அப்புறமென்ன... குடிமகன்களுக்குக் கொண் டாட்டம்தான். இப்போது எந்தத் தடையுமின்றி ஆராச்சிக்குப்பத்துக்குச் சென்று சரக்கடித்து விட்டு வருகிறார்கள்.
அதுசரி, இதற்கு முன்பும் ஆற்றில் வெள்ளம் வந்திருக்குமே... அப்போது என்ன செய்தார்களாம்? ரொம்ப சிம்பிள். ஒரு பரிசல் தயார் செய்து வைத்திருந்தார்களாம். ஆனால் வாடிக்கை யாளர்கள் ஆற்றுத் தண்ணீரில் வரும்போது, ஏகத்துக்கும் தள்ளாடி நிறைய வில்லங்கத்தை ஏற்படுத்தினார்களாம். ஆற்றில் விழுந்து ஒரு சில குடிமகன்கள் தங்களது உயிரைத் தியாகம்(!) செய்யும் சம்பவங்களும் நடைபெற்றதாம். கோடை காலத்தில் ஆற்றைக் கடக்கும் குடிமகன்களுக்கு, ஆற்று மணல் சுடுவதால், செம்மண்ணை  ஆற்றின் குறுக்கே கொட்டி பாதை அமைத்து இருந்தார்களாம். 
சிலர் முன்வந்து இப்போது அமைத்திருக்கும் இந்த பாலம் இப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுகுறித்துப் பேசும் கடலூர் மாவட்ட ரீடர்ஸ் நலச் சங்க அமைப்பாளர் பால்கி, ''காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை. புதுவையிலும் விடுமுறைதான். ஆனால், ஆராச்சிக் குப்பத்தில் மட்டும் விதிமுறையை மீறி கடையைத் திறந்து வைத்திருப்பார்கள். அன்று ஒரு நாள் மட்டும் லட்சக்கணக்கில் கல்லா கட்டுவார்கள். ஒரிஜினல் சரக்கு என்று டூப்ளிகேட்டைக் கொடுத்து ஏமாற்றி விடுவார்கள்.
வாடிக்கையாளர்களுக்காக தனியார் ஒருவர் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்ததும் பல்வேறு எதிர்ப்புக்குரல் எழுந்தன. அதனால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், 'நவம்பர் 24-ம் தேதிக்குள் மரப்பாலத்தை அகற்ற வேண்டும்’ என்று சாராயக் கடை முதலாளி சேதுராமனுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். அந்த நோட்டீஸை அவர் கொஞ்சமும் மதிக்கவில்லை. காலக்கெடு முடிந்த பின்னரும் பாலத்தை அப்படியேதான் வைத்திருந்தனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீண்டும் வந்து, அந்தப் பாதையில்  முட்செடிளை போட்டும், பள்ளம் தோண்டியும் தடை ஏற்படுத்தி விட்டுப் போய் இருக்கிறார்கள். ஆனால், இப்போதும் அந்த மரப்பாலத்தில் சென்று குடிமகன்கள் சென்று வருகின்றனர். சாராயக் கடை முதலாளி சேதுராமனும் கல்லாவை நிரப்பிக் கொண்டுதான் இருக்கிறார். அவசரத்துக்காகப் போடப்பட்ட பாலம் காரணமாக பல ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போராட்டத்தில் இறங்கப் போகிறோம்'' என்றார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க சேதுராமனிடம் செல்போனில் பேசினோம். ''அந்தப் பாலத்தை நான் கட்டவில்லை. அதுக்காக பொதுப்பணித் துறையில் இருந்து எனக்கு நோட்டீஸும் வரவில்லை. எனக்கும் அந்தப் பாலத்துக்கும் எந்த சந்பந்தமும் இல்லை'' என்று அவசர அவசரமாக பதில் சொல்லிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதவல்லியிடம் பேசினோம். ''அனுமதி வாங்காமல் அந்த இடத்தில் மரப்பாலம் கட்டி இருக்கிறார்கள். இதுதொடர்பாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரச்னைக்கு உரிய அந்த மரப் பாலத்தை உடனடியாக அகற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் கறாராக.
எல்லையில் பாலம் அமைப்பது பல்வேறு சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என்பதால், உடனடித் தீர்வு அவசியம்.
-  க.பூபாலன்
  படங்கள்: ஜெ.முருகன்
*********************************************************************************
மீண்டும் மீண்டும் கைதாகும் கலைவாணன்

பாளை to திருவாரூர்... திருவாரூர் to பாளை..
.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றதுமே வரிசையாக தி.மு.க. பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பொட்டு சுரேஷ், திருவாரூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் என்று வரிசையாக 15 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது. இதில் சிலரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது. அதில் ஒருவர் பூண்டி கலைவாணன். நீதிமன்ற உத்தரவைப் பார்த்து அவர் சந்தோஷம் அடைவதற்கு முன்பே அடுத்த சிக்கல் வந்துவிட்டது.
'சமச்சீர் பாடப் புத்தகங்களை உடனே வழங்க வேண்டும்’ என, தி.மு.க. சார்பில் தமிழகம் முழுக்க  கடந்த ஜூலை 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் முடிந்து  புறப்பட்ட சிலர், தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறினர். மஞ்சக்கொல்லை என்கிற இடத்தில் அந்தப் பேருந்து, லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதில் விஜய் என்ற மாணவன் உயிர் இழந்தார். அன்று இரவு, மன்னார்குடியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுடன் காரில் வந்து கொண்டிருந்த கலைவாணனை வழிமறித்து கைது செய்தது, காவல் துறை. காரணம் இல்லாமல்  கைது செய்யப்படுவதாக ஸ்டாலின் உள்பட தி.மு.க-வினர் சாலை மறியல் நடத்தினர். ஸ்டாலினும் கைது செய்யப்பட்டதாக தமிழகம் முழுக்க தகவல் பரவியது. கடைசியில், 'கலைவாணன் மட்டும்தான் கைது’ எனக் கூறி ஸ்டாலின் உள்ளிட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதுபற்றி 7.8.2011 தேதியிட்ட ஜூ.வி.யில், 'ஸ்டாலின் கைதுக்கு காரணம் திவாகரனா? - சிக்கலில் டெல்டா போலீஸ்’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டோம்.
2004-ம் ஆண்டு கொரடாச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் பதிவான கோபிசம்பத் என்பவரது கொலை வழக்கு, மாணவர் விஜய் மரணத்துக்கு கலைவாணனின் தூண்டுதல் காரணம் என்ற வழக்கு மற்றும் திருத்துறைப்பூண்டி ரமேஷ் என்பவர் கொடுத்த, 'கலைவாணன் உள்ளிட்ட பலர் தன்னுடைய கடையை அடித்து உடைத்தனர்’ போன்ற வழக்குகள் அடிப்படையில், கலைவாணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி திருவாரூர் கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கலைவாணன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கலைவாணனின் மனைவி சிந்தனை, சென்னை உயர் நீதிமன்றத்தில்ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். கடந்த 23-ம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன் மற்றும் சுதந்திரம் ஆகியோர், 'வழக்கின் தன்மைகளைப் பார்க்கும் போதும் கலைவாணனை குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழ் சிறையில் அடைக்கத் தேவை இல்லை. சாதாரண சட்டங்களின் அடிப் படையில் அவர் மீதான வழக்கை விசாரிக்கலாம்' என்று சொல்லி அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தனர்.
இதையடுத்து, கடந்த 24-ம் தேதி காலை பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வந்த கலைவாணனை, கண் கொத்திப் பாம்பாக காத்திருந்த திருவாரூர் போலீஸ் மீண்டும் கைது செய்தது. திருவிடைவாசல் அருகே அத்திக் கடையைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவர் கொடுத்திருந்த நில அபகரிப்பு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை யினர் தெரிவித்தனர்.
கொலை மிரட்டல் உட்பட ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அன்று மாலையே திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், 15 நாள் நீதிமன்றக் காவலில் கலைவாணனை வைக்க உத்தரவிட, மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்களில் ஒருவரான கார்த்தி, 'இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டதும், உடனே அவசர அவசரமாக இந்த வழக்கை ஜோடித்து இருக்கிறார்கள். தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைப்பதன் மூலம் கழகத்தை பலவீனப்படுத்திவிட முடியாது. மாணவர் விஜய் மரணமடைந்ததும் ஸ்டாலின் உள்பட அனைவரும் வருத்தம் தெரிவித்தோம். அது ஒரு விபத்து. பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் சம்பந்தமே இல்லாமல் கலைவாணன் பெயர் சேர்க்கப்பட்டது. சட்ட மன்றத் தேர்தலில் திருவாரூர் மாவட்டம் தி.மு.க-வின் கோட்டை என்பதை நிரூபித்ததால் ஜெயலலிதாவின் கோபம் இப்படி வெளிப்படுகிறது' என்றார்.
- சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்
*********************************************************************************
குரல் வளையை அறுத்து... மூளையை சிதைத்து!

கேபிள் சேகர் கொடூர கொலை
ளும் கட்சியான அ.தி.மு.க-வின் பகுதிச் செயலாளர் ஒருவர் பட்டப்பகலில், படு பயங்கரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மக்களை பீதியில் உறையச் செய்துள்ளது!
திருச்சி, பொன்மலை பகுதி அ.தி.மு.க. செயலாளரான 'கேபிள்’ சேகர் என்பவர்தான் இப்படி படுகொலை செய்யப்பட்டவர். நவம்பர் 25-ம் தேதி யன்று இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்கள். இடுப்பில் வெட்டி.. கல்லீரல் மற்றும் கிட்னியை சேதப்படுத்தியும், தலையில் வெட்டி... மூளையைச் சிதைத்தும் கொடூரமாக கொன்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, அவரை மடக்கியவுடன் முதலில் குரல் வளையை அறுத்து, சத்தம் போட்டு கத்த முடியாமல் செய்துவிட்டு, அதன் பிறகே உடலை வெட்டிச் சின்னா பின்னமாக்கியுள்ளனர். சேகரின் எதிரிகள் கைதேர்ந்த கூலிப்படையை ஏவி, அவரை போட்டுத்தள்ளியதாக சந்தேகிக்கிறது காவல்துறை.
48 வயதான 'கேபிள்’ சேகர் அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசி. அவரது மனைவி கயல்விழியும் திருச்சி மாநகராட்சியில் 29-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். படிப்படியாக முன்னேறி, கட்சியில் பகுதிச் செயலாளராக உயர்ந்த சேகரின் கடந்த காலம் அவ்வளவு நல்லவிதமாக இல்லை.
''பொன்மலை, அரியமங்கலம் பகுதிகளில் கோலோச்சிய 'பன்றி’ பெரியசாமி என்ற பிரபல தாதாவின் தம்பிதான் இந்த சேகர். ஆரம்ப காலத்தில்... கள்ளச் சாராயம், கட்டப் பஞ்சாயத்து போன்ற விவகாரமானதொழில்களில் பெரியசாமி ஈடுபட்டபோது, அவருக்குப் பக்கபலமாக இருந்தவர் சேகர். அண்ணனுக்காக அடிதடிகளில் இறங்கி, சில கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளிலும் சிக்கியிருந்தார். அண்ணன் மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்கள் அனைத்தையும் சேகர் கைவசப்படுத்திக்கொண்டு, நீச்சல் குளத்துடன் கூடிய மாளிகையைக் கட்டி சுகபோகமாக வாழ ஆரம்பித்தார். இவரின் மூன்று பிள்ளைகளும் கொடைக்கானல் மற்றும் ஊட்டி கான்வென்ட்களில் படித்து வருகின்றனர். ஆனால், இவர் இவ்வளவு சுகபோகத்துடன் வாழக் காரணமாக இருந்த அண்ணன் பெரியசாமியின் குடும்பத்தினர் குடிசை வீடுகளில் இருக்கிறார்கள். அவரது மூன்று மகன்களுக்கும் படிப்பு இல்லை.  நேரிலும், சேகருக்கு வேண்டிய முக்கியப் பிரமுகர்கள் மூலமும், தங்களது தந்தை சேர்த்த சொத்தில் கொஞ்ச மாவது பங்கிட்டுத் தருமாறு பெரியசாமியின் குடும்பத்தினர் சில ஆண்டுகளாகவே கேட்டு வந்துள்ளனர். அவர்களை அலட்சியப்படுத்தியதால், சேகர்மீது கோபத்தில் இருந்தனர்' என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர். அதனால் பெரியசாமி குடும்பத்தினர் மீது சந்தேகக் கண் பதித்து விசாரணையை நகர்த்தி வருகிறது, இந்தக் கொலை பற்றி துப்புத் துலக்க அமைக்கப்பட்ட மூன்று தனிப்படைகளில் ஒன்று.
25-ம் தேதி காலை விஷமிகளால் வெட்டப்பட்டு குற்றுயிராக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சேகரை காப்பாற்றுவதற்காக  ஓடோடி வந்தவர்கள் சேகரின் அண்ணன் மகன் லோகநாதன் மற்றும் தங்கமணி ஆகியோர்தானாம். அதனால், அவர்கள் மீது மட்டும் சந்தேகப் பார்வையை நிலைகுத்தி நிறுத்தாமல், வேறு சில கோணங்களிலும் போலீஸ் விசாரணையை நகர்த்தி வருகிறது.
மாநகராட்சியின் கோட்டத் தலைவர் பதவியை கவுன்சிலராக இருக்கும் தனது மனைவி கைப்பற்ற வேண்டும் என்று சேகர் பகீரதப் பிரயத்தனம் செய்து வந்தாராம். ஆனால், அந்த வாய்ப்பு அவருக்குகைகூடவில்லை. தனது மனைவிக்கு கோட்டத் தலைவர் பதவி வழங்கப்படாததால் கோபமான சேகர், மாநகர அ.தி.மு.க. நிர்வாகிகளை தரக்குறைவாக பேசிவிட்டு வெளியேறினாராம். 'தனது மனைவியைக் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, மாநகராட்சி இடைத்தேர்தலில் தன்னைப் புறக்கணிக்கும் மாநகர நிர்வாகிகளுக்கு பாடம் புகட்டுவேன்’ என தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறி வந்தாராம். ஒரு வேளை சேகர் அப்படிச் செய்தால், 29-வது வார்டில் அ.தி.மு.க-வுக்கு நிச்சயம் நெருக்கடி ஏற்படும். மாநகர நிர்வாகிகள் பலரின் பதவி பறிபோகும். அதனால், சேகரின் கொலையில் அரசியல் பின்னணி இருக்குமா எனவும் போலீஸ் விசாரித்து வருகிறது.
இது தவிர சமீபகாலமாக அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி சர்ச்சைக்குரிய இடங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாகவும், ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள பெரும் புள்ளிகள் சிலருடன் தொழில் ரீதியாகப் போட்டி போட்டு இடங்களை வாங்கி வந்ததால் தொழில் போட்டியில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் எனவும் போலீஸ் சந்தேகிக்கிறது.
பகுதிச் செயலாளர், தொழில் அதிபர் என சேகர் பல அவதாரம் எடுத்த பிறகு, ஆரம்பகாலத்தில் பக்க பலமாக இருந்த பலரையும் கழற்றி விட்டு விட்டாராம் சேகர். அதனால், அதிருப்தியில் இருந்த அவரின் முன்னாள் அடியாட்கள் சிலரும் இந்தக் கொலையின் பின்னணியில் இருக்கலாம் என்றும் போலீஸ் கருதுகிறது.
இதுபற்றி, திருச்சி மாநகர அ.தி.மு.க. செயலாளரான மனோகரனிடம் பேசினோம். 'கழகத்தின் தூணாக சேகர் இருந்தார். அவரது கொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை' என்றார்.
மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் பேசினோம். 'இந்தக் கொலையைப் பற்றி துப்பு துலக்க உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளேன். குற்றவாளிகளை விரைவில் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்' என்றார்.
உறவு, கட்சி, நட்பு, தொழில் என்று நாலாபுறமும் சேகருக்கு எதிரிகள் இருந்திருக்கிறார்கள். உண்மையான கொலையாளிகளை போலீஸ்தான் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்.
அ. சாதிக்பாட்சா
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************
வீரபாண்டியாருக்கு அடுத்த அட்டாக்!

பொங்கி எழுந்த விவசாயிகள்
முதல் இன்னிங்ஸில் சேலம் பிரிமீயர் மில் அபகரிப்பு, அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்குகளில் சிறைக்குப்போய் உடல் நலம் குன்றி விடுதலையான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இப்போது அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்!
'வீரபாண்டியாருக்குச் சொந்தமான வி.எஸ்.ஏ. இன்ஜினீயரிங் கல்லூரிக்காக எங்களது விவசாய நிலங்களை அவர் மிரட்டிப் பறித்துவிட்டார்’ என்று இரண்டு விவசாயிகள் மாவட்ட எஸ்.பி-யான முத்துசாமியிடம் புகார் கொடுத்து இருப்பதையடுத்து,  சேலம் ஏரியாவில் மீண்டும் திகுதிகு.
எஸ்.பி. அலுவலகத்துக்கு தன் தந்தையோடு வந்திருந்த அருணாசலம், ''நாங்க சங்ககிரியை அடுத்த ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவங்க. எங்க அப்பா பேர் முத்து. சேலம் டு கோவை மெயின் ரோட்டில் உத்தமசோழபுரத்தில் என் அப்பாவுக்குப் பாத்தியப்பட்ட வம்சாவழி சொத்து 2.48 ஏக்கர் நிலம் இருக்குது. நாங்க கூட்டுக் குடும்பமாத்தான் இருக்கோம். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் 2006-ல் எங்க அப்பாவை அமைச்சரோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே, 'மெயின் ரோட்டில் இருக்கிற உன் நிலத்தை எனக்குக் கொடுத்துடு. அங்க ஐ.டி. பூங்கா வருது. உன் நிலத்தை அரசு எடுத்துக்கிட்டா, வெறும் 50 ஆயிரம் ரூபாய்தான் தருவாங்க. நான் ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் தரேன்’னு வீரபாண்டியார் சொன்னார். 'ஒரு ஏக்கர் 50 லட்சத்துக்குப் போகுது. அதனால், எங்க பரம்பரைச் சொத்தான நிலத்தை விற்க மாட்டோம்’னு அப்பா சொல்லிட்டார். கோபப்பட்ட அமைச்சர்... என் அப்பாவைத் திட்டி, அனுப்பிட்டார். அதற்குப் பிறகு அமைச்சரின் உதவியாளர் சேகரும், அவரது மாமனார் பெருமாளும் தொடர்ந்து எங்களை மிரட்டினாங்க.
ஒரு மாதத்துக்குப் பிறகு சேகர் எங்களை வலுக்கட்டாயமா காரில் ஏத்திக்கிட்டு, ஐ.டி. பூங்கா பொருளாளர்னு சொல்லப்பட்ட செங்கோட கவுண்டர் வீட்டுக்குப் கூட்டிட்டுப் போனார். அவர், 'அமைச்சர் உங்களுக்கு 6 லட்சம்தான் கொடுக்கச் சொன்னார். நான் 10 லட்சமாத் தரேன்’னு சொல்லி இரண்டு லட்சம் ரூபாயை முன்பணமா கொடுத்துட்டு, 'கையெழுத்தைப் போட்டுட்டு ஓடிப் போயிடு... இல்லைன்னா உயிரோட இருக்க மாட்டீங்க’னு மிரட்டி அனுப்பிட்டார்.
அடுத்து 2007 பிப்ரவரி 8-ம் தேதி சேகர் அடியாட்களுடன் வந்து எங்களை மறுபடியும் காரில் தூக்கிட்டுப் போய் சேலத்தில் உள்ள பிரபலமான பஸ் உரிமையாளரின் ஆபிஸில் விட்டாங்க. அங்கு இருந்த உரிமையாளரும் செங்கோட கவுண்டரும் சேர்ந்து என் அப்பாவின் கையில் 13 லட்சம் பணத்தைக் கொடுத்தாங்க. அதன் பிறகு, எங்களை வீரபாண்டியார் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய், அங்க  ரெடியா இருந்த பத்திரப் பதிவாளர் முன்னிலையில் எங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க.
இதைப்பற்றி அப்போ கொண்டலாம்பட்டி ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் போனப்ப, இன்ஸ்பெக்டர் புகாரை வாங்கி படிச்சு பார்த்துட்டு, 'உங்களைக் கொலை கேஸில் உள்ளே தள்ளிடுவேன். ஒழுங்கா திரும்பிப் பார்க்காம ஓடிப் போயிடுங்க. மறுபடியும் ஸ்டேஷனுக்கு வந்தா நானே சுட்டுத் தள்ளிடுவேன்... யார் மேல் கேஸ் கொடுக்கிற...’னு திட்டி அனுப்பிட்டார். கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு மேல் நாங்க எதுவும் செய்ய முடியாம தவிச்சோம். இப்போ அம்மா ஆட்சி வந்துடுச்சு. அவங்கதான் எங்க நிலத்தை மீட்டுத் தரணும்'' என்றார் கண்ணீரோடு.
இதே மாதிரி சேலம் உத்தமசோழபுரம் சிரஸ்தாரர் காடு பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி, ''என் குடும்பச் சூழ்நிலை காரணமாக பணம் தேவைப்பட்டது. அப்போது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர் 6,000 ரூபாய் கொடுத்துட்டு என் நிலத்தின் மீது பவர் எழுதி வாங்கிட்டார். பிறகு எனக்கு தெரியாமலே சவுந்தரராஜன் என்பவருக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுத்துட்டாங்க. 'வாங்கிய பணத்தை வட்டியோடு தந்துவிடுகிறேன். என் நிலத்தின் பட்டாவைக் கொடுத்துடுங்க’ன்னு கெஞ்சினேன். ஆனா, என்னை மிரட்டி துரத்திட்டாங்க. என் இடம் இப்போ அமைச்சரோட கல்லூரியில்தான் இருக்குது. அதை மீட்டுக்கொடுக்கத்தான் புகார் கொடுத்து இருக்கிறேன்'' என்றார்.
வீரபாண்டி ஆறுமுகத்திடம் புகார் குறித்துப் பேசினொம். ''கல்லூரிக்கு இடத்தை சரியான முறையில்தான் வாங்கி இருக்கிறோம். பணம் பறிப்பதற்காகவும், பப்ளிசிட்டிக்காவும் இதுபோன்று புகார் செய்கிறார்கள். சட்டப்படி இந்த வழக்கை சந்திப்போம்'' என்றார்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ராஜா, ''அ.தி.மு.க. வக்கீல் ஒருவர்தான் தன் ஆட்களைத் தூண்டிவிட்டு இப்படிச் செய்றார். நாங்க அந்த நிலங்களை முறைப்படி வாங்கி இருக்கிறோம். ரூரல் பார்ட்டிக்கு காவல் துறை சப்போர்ட் செய்கிறது. ஆனா கோர்ட், சட்டம், நீதி எல்லாம் இருக்கு. எல்லாத்தையும் நீதிமன்றத்தில் பார்த்துக்கலாம்'' என்றார்.
மாவட்ட எஸ்.பி.முத்துசாமியைத் தொடர்புகொண்ட போது, ''அருணாசலம் என்பவரும், சின்னதம்பி என்பவரும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின் மீது புகார் கொடுத்துள்ளார்கள். விசாரித்துக் கொண்டு இருக்கிறோம். தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.
வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்
*********************************************************************************
தினந்தோறும் நில அதிர்வு!

உயிர் பயத்தில் கோவை மலை மக்கள்
நில அதிர்வுபற்றி செய்தியைப் படித்தாலே நமக்குப் பதறுகிறது. ஆனால், 'கோவையில் குறுந்தமலை அடிவாரத்தில் மருதூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நில அதிர்வுகளுடனே வாழ்கிறார்கள்’ என்று கேள்விப் பட்டுப் அங்கு சென்றோம்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்த மருதூர் ஊராட்சியில் மொத்தம் ஒன்பது கிராமங் கள்! இவை பசுமைக்குப் பேர் போனவை என்பதால், இந்தப் பகுதிக்கு, 'க்ரீன் லேண்ட்’ என்ற பெயரும் உண்டு. கடந்த சில ஆண்டு களுக்கு முன், 'கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகிறோம்’ என்று சிலர் கல்குவாரிகளைத் தொடங்கியதுமே  பிரச்னைகளும் தொடங்கி விட்டன. செழித்து விளங்கிய விவசாயம் அடியோடு சிதைந்துவிட்டது. கரிமலையை முழுமையாகக் குடைந்து எடுத்து, அப்படி ஒரு மலை இருந்த சுவடே தெரியாத அளவுக்கு அழித்துவிட்டனர்.
கல்குவாரியின் அபாயத்தைத் தாமதமாகவே புரிந்துகொண்ட மலைவாழ் மக்கள், அதற்குப் பிறகு தொடர் போராட்டங்கள் நடத்தினார்கள். அதனால், வரிசையாக பல குவாரிகள் இழுத்து மூடப்பட்டன. ஆனால், மக்களின் எதிர்ப்புக் குரலை மீறி, சிலருக்குப் பணம் கொடுத்து சிக்கல் இல்லாமல் நடந்து வருகிறது 'வெங்கடேஸ்வரா ப்ளூ மெட்டல்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான குவாரிகள்.
மலையின் ஒரு பகுதியில் குடையத் தொடங்கிய இவர்களின் பயணம், இன்று பூமியின் ஆழத்தை நோக்கிப் பயணிக்கிறது. பாறைகளைப் பெயர்த்து எடுப்பதற்காக, ஆழத்தில் வெடி வைக்கிறார்கள். அதனால், குவாரியைச் சுற்றி உள்ள அத்தனை கிராமங்களிலும் நிலம் அதிர்கிறது. பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு, இடியும் நிலையில் இருக்கின்றன. இதுகுறித்து, அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும்  நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த ஊராட்சியைச் சேர்ந்த மாணிக்கம், 'கடந்த மூணு வருஷமா நாங்க பயந்து பயந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். வீடுகள் எல்லாம் இடிஞ்சு விழுற நிலையில் இருக்குது. ஊராட்சித் தலைவர்கிட்ட பல முறை சொல்லியாச்சு, மனுவும் கொடுத்தாச்சு. ஆனா அந்த கல்குவாரியோட முதலாளி தயவில்தான் ஊராட்சித் தலைவர் ரங்கராசு ஜெயிச்சார். அதனால, இதைக் கண்டுக்கவே மாட்டேங்கிறார். ஒவ்வொரு முறை வெடி வெடிக்கிறப்பவும் உயிர் போயிட்டு திரும்பி  வர்ற மாதிரி இருக்கும். தினமும் பூமி அதிர்ச்சியைத் தாங்கிக்கிட்டு இருக்கோம். வெடி வெடிக்கிறப்போ பிள்ளைகள் பதறுவதைப் பார்க்க முடியலை. எப்போ இந்தப் பிரச்னைக்குத் தீர்வு வரும்னு தெரியலைங்க...'' என்றார் பரிதாபமாக.
கல்குவாரிக்கு மிகஅருகில் வசிக்கும் பாரதியாரிடம் பேசினோம். 'ஆரம்பத்தில் மலையை மட்டும்தான் குடைஞ்சாங்க. இப்ப குவாரியைச் சுத்தி உள்ள புறம்போக்கு நிலத்தில் எல்லாம் ரோடு போட்டுக்கிட்டு என்னென்னவோ செய்றாங்க. இவங்களுக்கு யார் இதுக்கெல்லாம் அதிகாரம் கொடுத் தாங்கன்னு தெரியலை. ஒவ்வொரு முறை வெடிக்கிற போதும், பாறைகள் தெறிக்கும். இந்தப் பகுதியில் இருக்கிற வீடுகள் மேல பல தடவை விழுந்து சேதாரமாயிருக்கு. உடனே 2000, 3000னு ரூபாயைக் கொடுத்து பாதிக்கப்பட்டவங்க வாயை அடைச்சிடுவாங்க. மக்களும் அப்பாவித் தனமா கொடுக்கிறதை வாங்கிக்கிட்டு, உயிரைப் பத்தி கவலைப்படாம இருக்காங்க. எனக்கும் பல முறை பணம் கொடுக்க வந்தாங்க. நான் வேண்டாம்னு மறுத்துட்டேன்'' என்று ஆதங்கத்தோடு கோபப்பட்டார்.
மக்களின் பிரச்னையை ஊராட்சித் தலைவர் ரங்கராசுவிடம் கேட்டோம். 'வெடிக்கிறப்ப நில அதிர்வு ஏற்படுவது சகஜம்தான். அதனால பெருசா எந்தப் பிரச்னையும் இல்லை. ஊர் மக்கள் இது விஷயமா என்கிட்ட மனு எதுவும் கொடுக்கலை. ஒரு வேளை கொடுத்தால், என்ன பண்ண முடியுமோ அதைக் கண்டிப்பா செய்வேன். என் ஊர் மக்களுக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப்போறேன்'' என்றார்.             
பிரச்னைக்கு உரியதாகச் சொல்லப்படும், 'வெங்கடேஸ்வரா ப்ளூ மெட்டல்ஸ்’ நிறுவன  அதிபர் நந்தகுமாரைத் தொடர்புகொண்டோம். 'இந்த மாதிரி எந்தப் பிரச்னையும் வரக் கூடாதுனு, குவாரியைச் சுத்தி உள்ள 100 ஏக்கர் நிலத்தையும் நானே வாங்கிட்டேன். எங்க குவாரியைப் பத்தி சொல்லப்பட்ட எல்லாமே பொய். எங்க குவாரியைச் சுற்றி சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு, எந்த ஊருமே இல்லை. இந்தக் குவாரியில் எல்லாமே விதிமுறைப்படித்தான் நடக்கிறது'' என்றார்.
ஆனால், அந்தக் குவாரியில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள்ளேயே கிராமம் இருப்பதைப் பார்க்க முடிந்தது. இந்த விவகாரத்தை கலெக்டர் பார்வைக்கு நாம் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என்றே நம்புவோம்.
- ம.முரளிதரன்
************************************************************************
பெண்களை அலறவைக்கும் 'பல்சர்' கொள்ளையர்கள்

கதிகலங்கும் காரைக்குடி!
டந்த இரண்டு மாதங்களாக நடக்கும் தொடர் கொள்ளை மற்றும் செயின் அறுப்பு சம்பவங்களால் மிரண்டு கிடக்கிறது காரைக்குடி. மூன்று பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று 'பல்சர் பைக்’கில் வந்து பட்டப் பகலிலிலேயே பெண்களிடம் செயினை பறித்துக் கொண்டு பறப்பதால் 'பல்சர் பைக்’கைக் கண்டாலே பதறி ஓடுகிறார்கள் பெண்கள்!
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை குறிவைத்து அவ்வப்போது கொள்ளை நடக்கும். அண்மையில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிலும் கைவரிசை காட்டியது ஒரு கும்பல். வழக்கமாக, இது இன்னாரின் கைவரிசை என கண்டுபிடித்து, கொள்ளையரைப் பிடித்து​விடும் காரைக்​குடி போலீஸ். ஆனால், இந்த முறை போலீசுக்கே அல்வாதான். டி.டி.நகர், ஆறுமுகம் நகர், கே.கே.நகர், பாரி நகர் என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் பட்டப்பகலி​லேயே, பூட்டிய வீடுகளை உடைத்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு ஓடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கடந்த வாரம் ஐந்து பேரைக் கைது செய்தது போலீஸ். தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் ரெக்கவரி செக்ஷனில் வேலை பார்த்த இந்தக் கும்பலின் தலைவன், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அந்த நிதி நிறுவனத்தின் மேனேஜர் வீட்டிலேயே நகைகளை கொள்ளை அடித்திருக்கிறான். பிறகு அந்த நிதி நிறுவனத்திலேயே, அதே நகைகளை கொண்டுபோய் அடகு வைத்த வேடிக்கையும் நடந்திருக்கிறது.    இதற்கிடையில்தான், 'பல்சர்’ கும்பலின் அட்டகாசத்தால் வெளியில் தனியாக நடமாட முடியாத அளவுக்கு அரண்டு கிடக்கிறார்கள் மக்கள். இந்தக் கும்பல், டூ-வீலரில் வரும் பெண்களை மோதுவது போல் 'பைக்’கை நேருக்கு நேராய் கொண்டு வருகிறார்கள். பதற்றத்தில் பெண்கள் நிலை​தடுமாறி சரியும் போது, கழுத்​தில் இருக்கும் செயினை அறுத்துக் கொண்டு அதே வேகத்தில் எஸ்கேப் ஆகிறார்கள்.
கடந்த வாரம், தனியாகப் போய்க் கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு பின்னால் 'பைக்’கில் வந்த மூன்று பேர் முதுகில் தட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். யாரோ ஜொள்ளகள் என நினைத்து அந்த மாணவி ஹாஸ்டலுக்குத் சென்று விட்டார். அங்கு போன பிறகுதான், கழுத்தில் இருந்த நான்கு பவுன் செயினை அந்தக் கும்பல் அறுத்துக் கொண்டு போன விஷயமே அவருக்குத் தெரிந்திருக்கிறது. இதேபோல், காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. பள்ளி ஆசிரியரான சித்ரா, பள்ளியிலிருந்து ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 'பல்சர்’ கொள்ளையர் ஸ்கூட்டியை எட்டி உதைத்து சித்ராவை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த நான்கு பவுன் செயினை உருவிக் கொண்டு பறந்திருக்கிறார்கள். இதற்கு அடுத்த நாளே, நியூ டவுனில் காலை 10 மணிக்கு ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்த மீனாட்சி ஆச்சி என்பவரை 'பல்சர்’ கும்பல் பின்னந் தலையில் அடித்து நிலைதடுமாற வைத்து, ஆறு பவுன் செயினை அபேஸ் பண்ணிக் கொண்டு சிட்டாய் பறந்திருக்கிறது.
இது எல்லாவற்றையும் விட இன்னொரு வேதனையான சம்பவமும் நடந்திருக்கிறது. காரைக்குடி நகர தி.மு.க. இளைஞரணி செயலாளரின் அம்மா காளிமுத்து. கடந்த 19-ம் தேதி மாலை வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார் காளிமுத்து. அவரை பின் தொடர்ந்து வந்த 'பல்சர்’ கொள்ளையர், ''ஏம்மா... பட்டப் பகல்ல சங்கிலியை அறுத்துக்கிட்டு போறாங்க. அவனுகள பிடிக்கிறதுக்கு நாங்க என்ன பாடுபட்டுக்கிட்டு இருக்கோம் தெரியுமா? நீ பாட்டுக்கு பகுமானமா போய்க்கிட்டு இருக்கே... கழுத்துல கெடக்குற சங்கிலியை கழட்டி இந்தப் பேப்பர்ல மடிச்சு வெச்சுக்கிட்டுப் போம்மா'' என்று சொல்லி இருக்கிறார்கள். அப்பாவியான காளிமுத்துவும் அவர்கள் சொன்னதை நம்பி செயினை கழற்றி அவர்கள் கொடுத்த பேப்பரில் மடித்திருக்கிறார். பத்திரமாய் மடித்துத் தருவதாக சொல்லி, செயினையும் பேப்பரையும் வாங்கி மடித்தவர்கள், ஒரு பொட்டலத்தையும் கையில் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். வீட்டுக்குப் போய் பொட்டலத்தை பிரித்துப் பார்த்தால், அதில் ஒன்றும் இல்லை. அலறியடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டதும் அன்று இரவே காரைக்குடிக்கு கிளம்பி வந்த சிவகங்கை எஸ்.பி-யான பன்னீர்செல்வம், நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து போனார். இதன் பிறகு, நகரின் முக்கிய பகுதிகளில் செக் போஸ்ட்டுகள் அமைத்து,  'பல்சர்’ கொள்ளையருக்கு வலை விரித்திருக்கிறது போலீஸ். அதையும் தாண்டி கடந்த 24-ம் தேதி இரவு பள்ளத்தூரில் லலிதா பேங்கர்ஸ் என்ற நகைக்கடையை உடைத்து ஒரு கிலோ தங்கத்தையும்  25 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது கொள்ளைக் கும்பல்!
தொடர் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து காரைக்குடி டி.எஸ்.பி-யான மங்களேஸ்வரனிடம் பேசினோம். ''யாரோ வெளியூர் பயலுக 'பல்சர்’ல வந்து கைவரிசை காட்டுறாங்க. இதுவரைக்கும் ஆறு இடங்களில் செயினை அறுத்திருக்காங்க. இப்போ ஜெயிலில் இருந்து வெளியே வந்த சிலர் மீது சந்தேகம் இருக்கிறது. இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து இருக்கிறோம். கூடிய சீக்கிரம் கொள்ளையரைப் பிடிச்சிருவோம்'' என்றார்.
காரைக்குடி மக்களுக்கு நிம்மதியை மீட்டுத் தரவேண்டியது பே£லீஸ் கடமை!
குள.சண்முகசுந்தரம்,  படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்     
*********************************************************************************
மோசடி செய்தாரா காங்கிரஸ் எம்.பி.?

நெல்லை பரபரப்பு
நில மோசடிப் புகார்கள் தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளை அச்சுறுத்திக் கோண்டிருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் மீது பண மோசடிப் புகார் எழுந்துள்ளது.
நெல்லை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யான எஸ்.எஸ்.ராமசுப்புதான் அவர். மோசடிப் புகார் கொடுத்திருக்கும் திருநாவுக்​கரசை சந்தித்துப் பேசினோம். ''நெல்லை எம்.பி-யான ராமசுப்புவுக்கு, ஆலங்குளத்தில் பெட்ரோல் பங்க் இருக்கிறது. அதில் எனது உறவினர் அருணாசலம் மேனேஜராக இருந்தார். சில மாதங்களுக்கு முன் எனக்குச் சொந்தமான ஒரு இடத்தை விற்றேன். அந்த சமயத்தில் என்னை சந்தித்த அருணாசலம், 'எம்.பி-க்கு உடனே 15 லட்சம் பணம் தேவைப்படுது. மாதாமாதம் தவறாமல் வட்டி கொடுத்துவிடுவார். அசலையும் சீக்கிரம் திருப்பித் தருவார். நிலம் விற்ற பணத்தை எம்.பி-க்கு குடுங்க’ என்று கேட்டார்.
நானும் ராமசுப்புவை சந்தித்தேன். அவரும் அவரது மனைவியும் 'சீக்கிரம் திருப்பிக் கொடுத்துடுவோம்’ என்று உறுதி சொன்னதால் 12 லட்சத்து 50 ஆயிரத்தை, கடந்த ஜூன் மாதம் ஆறு செக்குகளாகக் கொடுத்தேன். இன்றுவரை வட்டி, அசல் எதுவுமே வரவில்லை.  எம்.பி. வீட்டுக்கும் நானே சென்று  கேட்டேன். 'எதற்காக அடிக்கடி வீட்டுக்கு வந்து தொல்லை கொடுக்குற? ஒரு எம்.பி. வீட்டுக்கு வந்து கடனை திருப்பிக் கேட்குற அளவுக்குப் பெரிய ஆளாயிட்டியா? உன்னோட பணத்தைத் தர முடியாது. முடிஞ்சதை செஞ்சுக்கோ’ என்றதோடு கொலை மிரட்டலும் விடுத்தார். மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளரிடம் புகார் செய்தேன். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று படபடத்தார்.
இந்த குற்றச்சாட்டு பற்றி ராமசுப்பு எம்.பி-யிடம் கேட்டதற்கு, ''புகார் கொடுத்திருக் கும் திருநாவுக்கரசு என்பவரை நான் பார்த்ததே கிடையாது. அருணாசலம் என்னிடம் 15 வருடங்களாக மேனேஜராக இருந்தவன். நான் எம்.பி. ஆன பிறகு அடிக்கடி டெல்லி சென்று விடுவதால் பெட்ரோல் பங்க் நிர்வாகம் முழுவதையும் அவன்தான் கவனித்தான். நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டுபிடித்ததால், அவனை நீக்கி விட்டேன்.
அந்த ஆத்திரத்தில், அவனது உறவினரான திருநாவுக்​கரசு​வுடன் சேர்ந்து கொண்டு இப்படி ஒரு மோசடித் திட்டத்தை செயல் படுத்துகிறான். உள்ளூரில் எனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலரும் இதற்கு பின்னணியில் இருக் கிறார்கள். என் மீதான புகாரில் துளியும் உண்மை இல்லை'' என்று அழுத்தமாகச் சொன்னார்.
அருணாசலத்தைத் தொடர்பு​கொண்டோம். நேரில் வரச் சொன்னவர், திடுமென மனம் மாறி நம்மிடம் பேசுவதை தவிர்த்து, செல்போனையும் ஆஃப் செய்துவிட்டார்.
இதுபற்றி, நெல்லை எஸ்.பி-யான விஜயேந்திர பிதரியிடம் கேட்டதற்கு, ''திருநாவுக்கரசு கொடுத்திருக்கும் ஆவணங்களை பரிசீலித்து வருகி றோம். தீர விசாரித்த பிறகே உண்மை யைக் கண்டறிய முடியும்'' என்றார்.
ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
*********************************************************************************
யாருடைய நலனுக்காக புதிய நெடுஞ்சாலை?

குமரி கொந்தளிப்பு
நாகர்கோவிலில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு பல்வேறு பணி நிமிர்த்தமாக தினமும் ஆயிரக்கணக் கானோர் சென்று வருகிறார்கள். அந்த தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், அதில் பயணிப்போர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, முழி பிதுங்குகிறார்கள். அந்த பிரச்னையைத் தீர்ப்பதற்காக போடப்பட்ட புதிய நெடுஞ்சாலைத் திட்டம்தான் மக்களை கொதிப்படைய செய்திருக்கிறது.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த களியங்காடு, நட்டாலம், திருவிதாங்கோடு, பள்ளியாடி, வாழ்வச்ச கோஷ்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தத் திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராட்டக் குழுவின் செயலாளர் ஹரிகுமார், ''இப்போ பயன்பாட்டுல இருக்குற தேசிய நெடுஞ் சாலையின் அகலம் 120 அடி. சாலையின் இரண்டு பக்கத்திலேயும் சில அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செஞ்சு, வணிக ஸ்தலங்களையும், கல்வி நிறுவனங்களையும் நடத்திட்டு வர்றாங்க. அதனால அது 40 அடி சாலையா சுருங்கிப் போச்சு. அந்த சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி,  விரிவுபடுத்தாமல் புதிய சாலை அமைகிறாங்க.
 
கன்னியாகுமரியில இருந்து விழிஞ்ஞம் வரை பல கோடி ரூபா செலவு பண்ணி மேற்குக் கடற்கரைச் சாலை போட்டிருக்காங்க. அதேபோல, ஆரல்வாய் மொழியில இருந்து நெடுமங்காடு வரை மலையடிசாலை இருக்குது. அதனை திருவனந்தபுரம் வரைக்கும் விரிவுபடுத்தினாலே அருமையான சாலை கிடைக்கும். இப்ப உருவா குற புதிய பாதையின் பின்னணியிலும் அரசியல்வாதிங்க தலையீடு இருக்குது. நெடுஞ்சாலை வந்துட்டா, அதையட்டிய தங்களின் நிலத்தோட மதிப்பு கூடும்னு கணக்குப்போட்டு, அதிகாரிகளை கைக்குள்ள போட்டுக்கிட்டு, நெடுஞ்சாலைக்கான பாதையை வடிவமைச்சு இருக்காங்க. பொது மக்களின் கருத்துகளைக் கேட்காமலே நிலம் கையகப்படுத்த தொடர்ந்து அறிவிப்பு வந்துட்டு இருக்கு. ஏதோ சிலரின் லாபத்துக்காக  அப்பாவி மக்களோட நிலத்தைக் கேட்பது எந்த விதத்தில் நியாயம்?' என்று கொதித்தார். 
களியங்காடு பகுதியைச் சேர்ந்த சுந்தரமணி, 'இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தால, 1800 வீடுகள் இடிபடப் போகுது. 69 பாசனக் குளங்களும், கிட்டத்தட்ட 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும் அழியப்போகுது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக தென்னை, ரப்பர் வாழை மரங்களும் போகப் போகுது'' என்றார் வேதனையுடன். 
இந்த விவகாரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''எதிர்ப்பாளர்கள் சொல்கின்ற மாற்றுப் பாதைகள் இரண்டும் தேசிய நெடுஞ்சாலை கிடையாது. இதில் யாருக்காகவும் நெடுஞ்சாலைத் துறை கரிசனம் காட்டவில்லை. ஏற்கெனவே இருக்கும் சாலையை விரிவுபடுத்தினால், இதைவிட பல மடங்கு மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் புதிய சாலை போடுவதாக முடிவெடுத்தோம். எதிர்ப்பாளர்கள் சொல்கிற அளவுக்கெல்லாம் வீடுகளுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் பாதிப்பு இல்லை. சில நூறு வீடுகள்தான் இடிபடுகிறது'' என்று விளக்கம் அளித்தார்.
அரசு என்ன சொல்லப் போகிறது?
என்.சுவாமிநாதன், பி.கே.ராஜ்குமார்
படங்கள்: ரா.ராம்குமார்
*********************************************************************************
சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தி, அதை விற்கிறார் சோனியா காந்தி!

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு
'பரிசுத்தமான லட்சியங்களுக்கு விரோத​மாக நமது செயல்கள் உள்ளன. உலகை மாற்ற வேண்டும் என்றால், நிறுவன அதிகார வர்க்கத்தை மாற்ற வேண்டும். சொற்ப மனிதர்கள் உலகின் தலைவிதியை நிர்ணயிக்க அனுமதிக்கக் கூடாது’ - மூன்றாம் உலக நாடுகளுக்கு நிதி உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள், அந்த நாடுகளை எவ்வாறு மீளாத கடனாளியாக... அடிமையாக மாற்றின என்பதைக் குற்ற உணர்வுடன் 'ஒரு பொருளாதார அடிமையின் வாக்குமூலம்’ புத்தகத்தில் பதிவு செய்து இருப்பார் ஜான் பெர்கின்ஸ். மத்திய அரசு எடுக்கும் முடிவுகளைப் பார்த்தால், இந்தியாவும் இப்படிச் சிக்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது!
சில்லறை வணிகத்தில் 51 சதவிகிதம் அன்னிய முதலீட்டை எதிர்த்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அலைகள். முதல்வர்கள் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி மட்டும் இன்றி, கேரளாவை ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் எஃப்.டி.ஐ. சட்டத்துக்கு அகாலிதளம் தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தோம். இவர், நாடாளுமன்றத்தில் எஃப்.டி.ஐ. குறித்த விசாரணை நடத்திய நிலைக் குழுத் தலைவராகவும் இருந்து அறிக்கை கொடுத்தவர்.
''இந்தக் கொள்கையை ஏற்று முதலில் அனுமதி கொடுத்தது பி.ஜே.பி. தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சி​தானே. இப்போது நீங்களே எதிர்ப்பது ஏன்?''
''நாங்கள் ஒற்றை பிராண்டில் 26 சதவிகிதம் கொடுத்தது உண்மை. ஆனால், அது ஒரு பரிட்சார்த்த ரீதியாகவே கொடுக்கப்பட்டது. அதில் கிடைத்த அனுபவத்துக்குப் பிறகு, இதைத் தொடர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தோம். சிங்கிள் பிராண்ட் என்று அனுமதி வாங்கிவிட்டு, பின்னர் மல்டி பிராண்ட் வியாபாரங்களை நடத்தினார்கள். அதனால் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதை அறிந்து, இதில் நேரடி அன்னிய முதலீடு தேவை இல்லை என்று 2009-ம் ஆண்டு வர்த்தகத் துறை சார்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவில் அறிக்கை கொடுத்திருக்கிறோம்.''
''இந்த அனுமதி மூலம் பணவீக்கம் கட்டுக்குள் வந்து மந்த நிலையில் இருக்கும் அன்னிய முதலீடு மேலும் அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறதே?''    
''அது உண்மை அல்ல. நம்முடைய சந்தை நிலைமையும் வேலை வாய்ப்புகளும்தான் பறிபோகும். உணவு உற்பத்தியுடன், உணவு சாராத மற்ற உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நுகர்வோர்கள் துன்பத்துக்கு ஆளாகப்போகிறார்கள். வால்மார்ட், கேர் ஃபோர் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நாடுகளில், சிறு கடைக்காரர்கள், சிறு சிறு உற்பத்தியாளர்கள், மொத்தமாக நுகர்வோர்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண விவசாயிக்கு இன்றைய தினம் அரசு கொடுக்கும் குறைந்தபட்ச விலையே சரியாகப் போய்ச் சேராத நிலையில், இந்த அன்னிய கம்பெனிகள் என்ன கொடுத்துவிடுவார்கள்?''
''உள்ளூர் உற்பத்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பது நல்லதுதானே?''
''அதைக் கண்காணிக்க முடியாது, கட்டாயமும் இல்லை. செருப்பு, தொடங்கி ஆடைகள் வரை எங்கு விலை குறைவாக கிடைக்கிறதோ, அந்த நாடுகளில் இருந்து வாங்கிவந்து இங்கே விற்பார்கள். சில்லறை வணிகம் அனுமதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் இதுதான் நடக்கிறது. இந்த ஆபத்தான சந்தை நமக்கு தேவை இல்லை. இந்த நேரடி அன்னிய முதலீடு நம்முடைய பழக்கவழக்கங்களை மாற்றும். குறிப்பாக குழந்தைகளின் மனோபாவம் மாறும். அவர்களுடைய உணவு, பழக்க வழக்கங்கள், உடை, அணிகலன்களின் எல்லாம் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களால் ஆதிக்கம் பெறும். மோகம் அதிகரிக்கும். இதில் எந்தப் பலனும் இல்லை என்பதுதான் உண்மை.''
ந்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நம்ம ஊர் ஆட்களிடம் பேசினோம்.
வெள்ளையன் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர், 
''மகாத்மா காந்தி ரத்தம் சிந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். சோனியா காந்தி அதை மீண்டும் அன்னியருக்கே விற்கிறார். அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு பல்வேறு நியாயங்களை அடுக்கினாலும், அவர்கள் இங்கே கால் ஊன்றி ஏகபோகம் அடைந்த பிறகு, சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை கிட்டத்தட்ட தங்களின் அடிமைகள் ஆக்கிவிடுவார்கள்.
சிமென்ட், மணல் விலையில் கொள்ளை அடிப்பதுபோல அன்னிய நிறுவனங்கள் சிண்டிகேட் போட்டு பொருட்களின் விலையை உயர்த்தி விடுவார்கள். ஆன்லைன் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முடியாததுபோல் அப்போது விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் திராணி நம் தலைவர்களுக்கு இருக்காது. இதற்கு உதாரணம், கோக், பெப்ஸி போன்ற பானங்கள்தான். அவை வளர்ந்ததும், உள்ளூர்க் குளிர் பானங்கள் அனைத்துமே அழிந்துவிட்டன. நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி புரிய அன்னிய நிறுவனங்கள் ஒன்றும் சேவை அமைப்புகள் அல்ல. அவர்கள் நம் நாட்டுக்கு கொள்ளை அடிக்கத்தான் வருகிறார்கள். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவன் இந்தியனே அல்ல.''
விக்கிரமராஜா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர்,
''இந்தியாவில் நேரடியாக சில்லறை வணிகத்தில் இருப்பவர்கள் ஏழு கோடிப் பேர். இவர்களைச் சார்ந்து இருப்பவர்கள் 21 கோடிப் பேர். ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு சில்லறை வணிகத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆனால், 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. எப்படி? 28 கோடி பேரின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு 40 லட்சம் பேருக்கு அன்னியனிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் வேலை வாய்ப்பா?
மத்திய அரசு சொல்வதுபோல, அமெரிக்கா, சீனா, இந்தோனேஷியாவில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதற்கு காரணமே இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள்தான். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, இந்தியாவுக்கு மட்டும் பெரிதாகப் பாதிப்பு ஏற்படவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று, நம் நாட்டு மக்களின் பணம் நமது தேசிய வங்கிகளில் இருந்தது. இன்னொன்று சில்லறை வணிகத்தில் பல கோடிப் பேர் இருந்ததால் தொழில் நிலைத்தது. எனவே, எக்காரணம்கொண்டும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது.''
தேசிகன் அறங்காவலர், கன்ஸ்யூமர் கவுன்சில் ஆஃப் இந்தியா,
''உலகம் முழுவதும் பல நாடுகள் திவால் ஆகி வருகின்றன. பொருளாதார வீழ்ச்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. மேற்கு நாடுகள் எல்லாம் சுதாரித்துக்கொண்டு தங்களது முடிவை மாற்றிக்கொள்ள முனைகின்றன. ஆனால், மத்திய அரசோ அன்னிய முதலீடு என்கிற முதலையிடம் மக்கள் தலையை நுழைக்கிறது.
கோயில் வாசலில் பூ வாங்கி வைத்துக்கொள்ளும் நிலைமை மாறி, சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் அநியாய விலை கொடுத்துப் பூ வாங்கும் நிலை ஏற்படும். அன்னிய நிறுவனங்கள் நம் நாட்டிலேயே பொருளை  உற்பத்தி செய்தால் மட்டுமே, நம் நாட்டுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், அவை இங்கே இருக்கும் பொருட்களை அடிமட்ட விலைக்கு வாங்கிப் பதுக்கிவைத்து கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்யும். இதனால் நம் நாட்டுக்கு எந்த லாபமும் இல்லை. இது நம்மைப் பகடைக்காய்களாக்கி அன்னிய நிறுவனங்கள் நடத்தும் சூதாட்டத்துக்கே வழி வகுக்கும்.''
சின்னசாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்,
''10 ஏக்கரில் விவசாயம் செய்பவன்கூட சிறு விவசாயிதான். ஏனெனில், உரம், மின்சாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் அவனுக்கு இருக்கிறது. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் 90 சதவிகிதம் சிறு விவசாயிகள்தான். இனி அன்னிய நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்வார்கள்; நல்ல விலை கொடுப்பதாக ஆசை காட்டுவார்கள். அப்படியே நல்ல விலை கொடுக்கவும் செய்வார்கள். இப்படி செய்யும்போது, இதர உள்நாட்டு முதலாளிகள் பராம்பரியத் தொழிலைவிட்டு அழிந்துபோவார்கள். படிப்படியாக மொத்த விவசாயிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த பின்பு, அன்னிய நிறுவனங்கள் திடீர் என்று கொள்முதல் விலையைக் குறைத்துவிடுவார்கள். விவசாயிகளுக்கு வேறு வழி இருக்காது. அதனால், அடிமாட்டு விலைக்குத்தான் பொருளை விற்க வேண்டும்.
அடுத்த தாக்குதல் இன்னும் அபாயகரமானது. தாங்கள் கொடுக்கும் விதையைத்தான் நட வேண்டும்; நாங்கள் சொல்லும் பயிரைத்தான் வளர்க்க வேண்டும் என்று மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் திணிப்பார்கள். மத்திய அரசின் இந்த முடிவு விவசாயிகளை நடுத்தெருவுக்குத்தான் கொண்டுவரும். இதனால் நாட்டுக்குத்தான் கேடு!''
    - சரோஜ் கண்பத், டி.எல்.சஞ்சீவிகுமார்   

காங்கிரஸிலும் எதிர்ப்பு!

எதிர்க் கட்சித் தலைவரான ஜோஷி மட்டுமல்ல ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் இதற்கு எதிர்ப்பு வந்துள்ளது. இந்த எஃப்.டி.ஐ-யை அனுமதி அளிக்கும் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது எதிரொலித்​தது. சோனியா காந்தியின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ராகுல் காந்திக்கு நெருக்கமான ஜெயராம் ரமேஷ், வீரப்ப மொய்லி, முகில் வாஸ்னிக் போன்ற காங்​கிரஸ் அமைச்சர்களும் தி.மு.க. அமைச்சர் மு.க.அழகிரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் தினேஷ் திரிவேதி போன்றவர்களும் தங்கள் கட்சி சார்பில் இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
*********************************************************************************
''அட்டாக் வெளியே வர... அரசே வழி அமைத்துக் கொடுத்தது!

மகிழ்ச்சியில் சொல்லும் 'பாண்டி' வக்கீல்!
ஜூலை மாதம் தி.மு.க. நிர்வாகிகள் குண்டர் சட்டத்தில் கைதான சீஸன் என்றால், இது விடுதலை சீஸன்!
 பொட்டு சுரேஷ், பூண்டி கலைவாணனைத் தொடர்ந்து மதுரை ஜெயராமன், அட்டாக் பாண்டி, வி.கே.குருசாமி, ஒச்சுபாலு, குடமுருட்டி சேகர் ஆகியோர் விடுதலையாகி இருக்கிறார்கள்.( பூண்டி கலைவாணனை மற்றொரு ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்திருப்பது வேறு விஷயம்!)
விடுதலையான குடமுருட்டி சேகர் மீது குண்டாஸைத் தவிர்த்து மற்ற ஐந்து வழக்குகள், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராமன் மீது நான்கு வழக்குகள், கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் வி.கே.குருசாமி மீது ஐந்து வழக்குகள், பகுதிச் செயலாளர் ஒச்சுபாலு மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் எல்லாம் விடுதலையானதுகூட மதுரையில் அதிர்வை ஏற்படுத்தவில்லை.
ஆனால், 'அட்டாக்’ பாண்டி விஷயம் அப்படியா..?
கடந்த தி.மு.க. ஆட்சி யிலேயே என்கவுன்ட்டர் செய்யத் திட்டமிடப்பட்டு தப்பி ஓடியவர். ஊர் அறிந்த அதிரடிப் புள்ளி.  ஏற் கெனவே தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் உள்ளே போனவர். 2009-ம் ஆண்டு ஜெயம் நிதி நிறுவன அதிபர் அசோக் குமாரைக் கடத்திச் சென்று  1.20 கோடி கேட்டு மிரட்டிய வழக்கு, அதே ஆண்டில் நிதி நிறுவனம் தொடர்பாக அனந்தகிருஷ்ணன் என்பவரை மிரட்டிய வழக்கு, 24.2.10 அன்று அருப்புக்கோட்டை வந்த கே.பி.என். டிரா வல்ஸ் பஸ்சில் அட்டாக் பாண்டிக்காக இரண்டு துப்பாக்கிகள், 27 புல்லட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு  வழக்கு போன்ற வலுவான வழக்குகளும் இருந்தன.
ஆனால் 'அட்டாக்’ மீதான குண்டாஸ் வழக்கை உடைத்து எப்படி வெளியே கொண்டு வந்தார் அவரது வழக்கறிஞர் சதீஷ் பாபு?
அவரையே கேட்டோம். 'சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்களைக் கட்டுப்படுத்தவும் 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் குண்டர் தடுப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய அரசு உத்தரவிடும்போது, சம்பந்தப்பட்ட நபர் அந்த முடிவை எதிர்த்து அரசிடம் முறையீடு செய்யலாம். அந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ அரசுக்கு உரிமை உண்டு என்றாலும்கூட, அந்த நடவடிக்கையைக் காலதாமதம் இன்றிச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டுள்ளது. காரணம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21-வது ஷரத்தில் கீழ் கூறப்பட்டுள்ள தனி மனித உரிமை!
28.7.11 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட அட்டாக் பாண்டி, அதனை ரத்து செய்யும்படி 6.8.11 அன்று அரசிடம் அப்பீல் செய்தார். வெறும் மூன்று நாட்களில் பதில் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர், அந்தத் துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கிட்டத்தட்ட 25 நாட்கள் இழுத்தடித்து, கடைசியில் 30.8.11 அன்று அப்பீலை நிராகரித்து இருக்கிறார்கள். இது தனி மனித உரிமையை மீறும் செயல் என்று நாங்கள் வாதிட்டோம். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டது. 'அட்டாக்’ பாண்டி மட்டும் அல்ல, மற்ற நான்கு பேரையும்கூட அதே விஷயத்துக்காகத்தான் நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. ஓர் உண்மையைச் சொல்லவா? அட்டாக் பாண்டி அப்பீல் விஷயத்தில், அரசு மூன்று நாட்களில் முடிவு எடுத்திருந்தால், குண்டர் சட்டத்தில் இருந்து அவரை வெளியே எடுக்கச் சிரமப்பட்டு இருப்போம். நல்லவேளை, அரசே அதை எளிதாக்கிவிட்டது' என்றார் சிரித்தபடியே.
'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, 300-க்கும் அதிகமானோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில், அரிசி கடத்தல், சாராய வியாபாரி, ரௌடிகளின் அப்பீல் மனுக்களை உடனே நிராகரித்திருக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தி.மு.க-வின் அதிகாரமிக்க நபர்களின் அப்பீல் மனுக்களை மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தினார்கள்?' என்பது போலீஸாருக்கே புரியாத புதிராக இருக்கிறது.
'குண்டாஸில் இருந்து விடுவிக்கப் பட்ட பூண்டி கலைவாணன் மீது மற்றொரு வழக்குப் பாய்ந்தது போல, மதுரை புள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறதா?' என்று விசாரித்தோம். 'இங்கே இருக்கிற கமிஷனரும் சரி, எஸ்.பி-யும் சரி. பொய் வழக்கு ஜோடித்து ஒருவரை உள்ளே தள்ள உடன்பட மாட்டார்கள். உண்மையிலேயே ஏதாவது புகார் வந்து, அந்தப் புகாரில் உண்மை இருந்தால் மட்டுமே நடவடிக்கை இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
போலீஸார் கொடுத்த துணிச்சலில்தான் மதுரைப் புள்ளிகள் மீது புகார் கொடுக்கப் பலர் முன்வந்தார் கள். இப்போது, அந்தப் புள்ளிகள் வரிசையாக விடுதலையாகி விட்டதால், புகார் கொடுத்தவர்கள் பயத்தில் இருக்கிறார்கள். இதுபற்றி போலீஸ் எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க்கிடம் கேட்டோம். 'குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது கோர்ட் நடவடிக்கை. அதுபற்றி கருத்துச் சொல்லக் கூடாது. ஆனால், வெளியே வந்தவர்களால் புகார்தாரர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.'' என்றார்.
எல்லா விஷயத்திலும் நீதிமன்றத்துக்குப் போய்த் தோற்கும் தமிழக அரசு, குண்டர் தடுப்புச் சட்ட விஷயத்திலும் குட்டு வாங்கி இருப்பதாகவே கருதுகின்றன எதிர்க் கட்சிகள்!
கே.கே.மகேஷ்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து
 அரசு வழக்கறிஞர்கள் காரணமா?
'அரசு வழக்கறிஞர்களாக இருப்பவர்களில் பலபேருக்கு வாதத் திறமை இல்லாததால், கிரிமினல்கள் எல்லாம் ஈஸியாய் வழக்குகளை உடைத்துக்கொண்டு வெளியில் வந்துவிடுகிறார்கள்’ என்று புலம்புகிறார்கள், மதுரை அ.தி.மு.க. வழக்கறிஞர்கள். இது குறித்துப் பேசுகிறார், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணித் துணைச் செயலாளர் ரவிக்குமார்.
''கட்சியில் தகுதி வாய்ந்த சீனியர் வழக்கறிஞர்கள் பலர் இருந்தும் ஜூனியர்கள் பலரை அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு சிபாரிசு செய்திருக்கிறார்கள். சிலருக்கு கட்சி உறுப்பினர் கார்டுகூட இல்லை. கேட்டால், 'மேலிடத்து பிரஷர்’ என்கிறார்கள். திறமையற்ற அரசு வழக்கறிஞர்களால் வழக்குகள் ஊத்திக்கொள்வதால் அரசுக்கு கெட்ட பெயர். அம்மா அவர்கள் மக்கள் விரோத சக்திகளை அடக்க நினைக்கிறார்கள். ஆனால், பெரிய பெரிய வழக்கில் சிக்கியவர்கள் எல்லாம் சர்வ சாதாரணமாய் வழக்குகளை உடைத்துக்கொண்டு வருவதைப் பார்த்தால், இவற்றில் உள்குத்து இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.
இங்கு உள்ள அரசு வழக்கறிஞர்கள் திறமையானவர்களாக இருந்தால், வாரம் தவறாமல் ஸ்டேட் பி.பி. எதற்காக மதுரைக்கு வருகிறார். வாதத் திறமை இல்லாததால் பல பேர், 'கேஸ் கட்டு இன்னும் கைக்கு வரவில்லை, ஸ்டேட் பி.பி. ஆஜராகிறார்’ என்று காரணங்களைச் சொல்லி வாய்தா வாங்குகிறார்கள். இந்த நியமனங்கள் சரியில்லை என அ.தி.மு.க. வக்கீல்கள் 36 பேர் கையெழுத்திட்ட புகார் மனுவை அம்மாவின் பார்வைக்கும் சட்டத் துறை செயலர், சட்ட அமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பிவைச்சோம். புகார் குறித்து விசாரிப்பதாக, சட்டத் துறை செயலரிடம் இருந்து 10 நாட்களுக்கு முன்பு பதில் வந்தது. ஆனாலும், இது வரை நடவடிக்கை இல்லை'' என்றார்.
தொடர்ந்து பேசிய மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வேல்முருகன், ''கடந்த வாரம், ஒரு பி.பி-யின் நடவடிக்கையைப் பார்த்து, 'உங்களுக்கு பெர்சனல் வேலை ஏதாவது இருந்தால் பார்க்கப் போங்கள்’ என்று வேதனைப்பட்டுச் சொன்னார் ஒரு நீதிபதி. 'அரசு வழக்கறிஞர்கள் தேவையற்ற கால தாமதம் செய்வதால் வழக்குகளை முடிக்க முடியவில்லை’ என நீதிபதிகள் தரப்பில் இருந்து தலைமை நீதிபதியிடமே புகார் செய்யப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்பதற்காக, நாங்கள் இதைச் சொல்லவில்லை. தொடர்ந்து அரசின் வழக்குகள் தோற்று, அதனால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்ற கவலையில் சொல்கிறோம். மதுரையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை மறுபரிசீலனை செய்து, தகுதியான நபர்களை அந்தப் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்'' என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொன்ன மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளரும், மதுரை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான தமிழ்ச்செல்வன், ''வழக்கறிஞர் அணியில் பொறுப்பில் உள்ள நபர்களுக்குத்தான் அரசு வழக்கறிஞர் பதவிகளை அம்மா கொடுத்திருக்காங்க. கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டி இருந்ததால் ஜூனியர்கள் சிலருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்களும் திறமையானவர்களே. அரசுத் தரப்பு வழக்குகளில் பின்னடைவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தப் பின்னடைவிற்கு அவர்கள் மட்டுமே காரணம் இல்லை. எனக்குத் தெரிந்து அரசு வழக்கறிஞர்கள் யார் மீதும் கிரிமினல் வழக்குகள் இல்லை. அப்படியே இருந்தாலும் கட்சிப் போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக தி.மு.க. அரசால் போடப்பட்ட பொய் வழக்குகளாகத்தான் இருக்கும்'' என்கிறார்.
குள.சண்முகசுந்தரம்
************************************************************************
சித்ரவதை செய்யப்பட்டாரா கிஷன்ஜி?

வரவர ராவ் சொன்னதை மறுக்கும் விஜயகுமார்!
மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆணிவேர்களில் ஒன்று வெட்டப்பட்டுவிட்டது. அந்த இயக்கத்தை வழிநடத்தியதாகச் சொல்லப்பட்டு வந்த கிஷன்ஜி, கொல்லப்பட்டு இருக்கிறார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் நுண்​ணறிவுப் பிரிவின் தலைவர் படேல் சுதாகர் ரெட்டி, இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சாருகுரி ராஜ்குமார் என்கிற ஆசாத் ஆகியோர் வரிசையில், கிஷன்ஜியின் மரணத்தையும் அவரது தோழர்கள் வருத்த ரேகை படரச் சொல்கிறார்கள்.
ஆந்திரப் பிரதேசத்தின் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள பெடப்பள்ளி எனும் ஊரில்தான் பிறந்தார் முல்லோஜுலா கோடீஸ்வர ராவ். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட நினைத்து நக்ஸல் இயக்கத்தில் சேர்ந்தார். 1980-களில் 'மக்கள் போர்க் குழு’ ஒன்றை உருவாக்கியதில், இவரின் பங்கு அதிகம். அதன்பிறகு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தோடு தான் துவக்கிய அந்தக் குழுவை இணைத்துக்கொண்டு மாவோயிஸ்ட்டாக மாறினார். அப்போது அவருடைய பெயர் கிஷன்ஜியாக மாறியது!
மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும், அதன் படைகளுக்குத் தலைவராகவும் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர். 2010-ல் சில்டாவில் துணை ராணுவப் படையின் மீது நடத்திய தாக்குதல் இவரது திட்டம்தான். அதே வருடம் லால்கர் கொந்தளிப்புக்கும் இவரே காரணகர்த்தா.
ஜங்கல்மகால் வனத்தில் வசித்துக்கொண்டு பல காலமாக இயக்கத்தை வளர்த்தெடுத்துப் போராடி வந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை அன்று, கூட்டு அதிரடி படை போலீஸாரால் 'என்கவுன்ட் டர்’ பொறி வைக்கப்பட்டது. குறி... கிஷன்ஜி! இது முதன் முறை அல்ல... 1977, 1985 ஆகிய வருடங்களில் இவரை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க முயற்சிகள் நடந்தும் எல்லாப் பொறிகளில் இருந்தும் கிஷன்ஜி தப்பித்தார்.
மேற்கு வங்கத்தின் புரிசூல் கிராமத்தில் போலீஸ் படைகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிஷன்ஜி கொல்லப்பட்டார். அங்கே ஏ.கே.47 ரக துப்பாக்கி கிடந்தது. துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்படுவதற்கு முன்பாக, அருகில் இருக்கும் கோசாய்பந்த் கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்து அவரது மடிக்கணினி, சில கடிதங்கள்,  90,000 மற்றும் தானியங்கி ஆயுதங்​களுக்குத் தேவையான 60 கார்ட்ரிஜ்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
''பக்காவாக பிளான் செய்து இந்த என்கவுன்ட்டர் வெற்றிகரமாக. நிறைவேற்றப்பட்டது'' என்று கூட்டு அதிரடிப்படை மார்தட்டிக்கொள்ளும் அதே வேளையில், ''இது ஒரு போலி மோதல். அவரைக் கைது செய்து, சித்ரவதைக்கு உள்ளாக்கிய பிறகே அவரைக் கொன்றிருக்கிறார்கள்.'' என்று வெடித்திருக்கிறார் கிஷன்ஜியுடன்  நெருங்கிப் பழகிய வரவர ராவ். அவரைத் தொடர்புகொண்டபோது, ''ஆரம்பத்தில் கிஷன்ஜியையும் மற்ற தோழர்களையும் ஆயிரக்கணக்கான அதிரடிப்படை போலீஸார் சுற்றி வளைத்ததாகவும், பிறகு எப்படியோ அவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாயின. அரசு சொல்வதுபோல கிஷன்ஜி, ஜார்க்கண்ட் மாநிலத்துக்குத் தப்பி ஓடியிருந்தால், எப்படி மேற்கு வங்க அரசு அவரைக் கொலை செய்ய முடியும்? எப்படி அதிரடிப் படையினரால் பாஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்தின் ஜார்கரம் காட்டில் அவரைக் கொல்ல முடிந்தது? இந்த போலீஸ் படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் படி, 'திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை’ என்று வழக்குத் தொடர வேண்டும்'' என்கிறார் வரவர ராவ். ''உடம்பில் ஓர் இடம்கூட பாக்கி இல்லாமல் ஏகப்பட்ட காயங்கள். அவை நிச்சயமாக என்கவுன்ட்டரின்போது ஏற்பட்ட வையாக இருக்க முடியாது'' என்றும் இவர் சொல்கிறார். 
கிஷன்ஜியின் உறவுக்காரப் பெண் தீபா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மேற்கு வங்க அரசு அவரது  உடலை அவரின் சொந்த ஊருக்கு அனுப்பியது. எப்போதும் இல்லாமல் கடந்த சில நாட்களாக பெடப்பள்ளியின் குறுகலான பிராமண வீதியில் பரபரப்பும், துக்கமும் சூழ்ந்துள்ளது. அங்குதான் கிஷன்ஜியின் தாயார் 80 வயதான மதுரம்மா இருக்கிறார். மகனின் மரணச் செய்தியைக் கேட்டு சோகத்தில் துவண்டு விட்டார் அவர். கிஷன்ஜிக்கு ஓர் அண்ணனும், ஒரு தம்பியும் இருக்கின்றனர். தம்பி மல்லோஜுலா வேணுகோபால் ராவ், கிஷன்ஜியைப் போலவே மாவோயிஸ்ட். அண்ணன் ஆஞ்சநேயுலு கூட்டுறவு வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர். முதலில் இந்தச் செய்தியை தங்களின் தாய்க்குச் சொல்லாமல் மறைத்தார்களாம். பிறகு பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவராய் தங்களின் வீடு நோக்கி வர, மதுரம்மா என்ன என்று கேட்க, பிறகே உண்மை வெளிவந்திருக்கிறது.
''நீ எங்கேயோ இருந்து பல தாய்மாருங்களோட கண்ணீரைத் துடைச்சுட்டு இருப்பேன்னு நினைச்சேன். 33 வருஷமா உன்னைப் பார்க்கவே முடியலை. நீ இல்லைங்கிற செய்தியைத் தாங்க முடியலப்பா'' என்று தழுதழுத்தார் மதுரம்மா. மேலும், 'இதுபற்றி சரியான நியாயம் வழங்க வேண்டும்’ என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதமும் எழுதி இருக்கிறார்.
ஜின்டால் நிறுவனத்துக்கு பழங்குடியினரின் 5,000 ஏக்கர் நிலங்களைத் தாரை வார்த்திருக்கிற மாநில அரசுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கும் வேளையில், இந்தச் சம்பவம் நடந்திருப்பதுதான் பலத்த சந்தேகங்களைக் கிளப்பி உள்ளது. 
- ந.வினோத்குமார்
 
கிஷன்ஜியின் என்கவுன்ட்டர்  குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவரான விஜய குமாரிடம் கருத்துக் கேட்டோம்.
''சமீபத்தில், போலீஸில் சரண்டரான மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவல்கள் கிஷன்ஜியைப் பிடிக்க மிகவும் பயன்பட்டன.  முன்பெல்லாம் கிஷன்ஜி எங்கே போனாலும், அவருடன் 10பேர் கொண்ட இரண்டு குழுவினர் பாதுகாப்புக் காகச் செல்வார்கள். ஆனால், தற்போதைய போலீஸ் நடவடிக் கையால் அந்தக் குழுவினர் கிஷன்ஜியுடன் போகவில்லை. தனி நபராகத்தான் நடமாடினார். எப்படி சந்தனக் கடத்தல் வீரப்பன், கடைசிக் காலகட்டத்தில் பலரையும் கைவிட்டு, விரல்விட்டு  எண்ணக்கூடிய சில ஆட்களுடன் நடமாடினாரோ, அதேபோல், கிஷன்ஜியும் தனிமைப்படுத்தப்பட்டார்.
மேற்கு வங்காள எஸ்.பி-யான பிரவீன் குமாரின் உளவுப் பிரிவினர், அங்குள்ள கூடுதல் எஸ்.பி. ஒருவர், எங்களது உதவி கமாண்டர்கள் இருவர் மற்றும் அதிரடிப் படை வீரர்கள் இந்த கூட்டு நடவடிக்கையில் பங்குபெற்றனர்.
மாவோயிஸ்ட் இயக்கத்தில் நம்பர் 3 என்று அழைக்கப்படுகிறவர் கிஷன்ஜி. மத்தியக் குழு, பொலிட் ஃபீரோ இரண்டிலும் முக்கியமானவர். சுமார் 34 வருடங்களாக  அவர் வெளியே வரவே இல்லை. அவ்வப்போது பத்திரிகைகளுக்கு மட்டும் பேட்டி கொடுத்தார். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, அவரைப் பேட்டி தர வேண்டாம் என்று இயக்க மேலிடம் சொல்லிவிட்டது. முன்பு செல்போன் வைத்திருந்தார். பிறகு அதையும் தவிர்த்துவிட்டார். கடந்த இரண்டு மாதங்களாகவே, அவர் கடைசியாக தங்கியிருந்த கிராமம் தவிர, சுற்றிலும் உள்ள கிராமங்களில் எங்களது கூட்டு படையினர் தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தினர். எப்படியும் அவர் வெளியே வருவார் என்று எதிர்பார்த்தோம். மேற்கு வங்காளம் - ஜார்கண்ட் மாநிலங் களில் எல்லையோரத்தில் உள்ள கிராமத்தில் இருந்த அவர் இரவில் கிளம்பி சில கி.மீ. தொலைவில் உள்ள ஜார்கண்ட் மாநில எல்லையோரக் கிராமத்துக்குச் சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.  அதற்குள் மாட்டிக்கொண்டுவிட்டார். அவருடன் இருந்த சிலர் எங்கள் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பு மோதலில் அவர்களும் கொல்லப்பட்டனர். இதற்காக, பழிவாங்கும் நோக்குடன் எங்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தக்கூடும். அதை எப்படிச் சமாளிப்பது என்கிற உத்தியும் எங்களுக்குத் தெரியும். என்னுடைய வீரர்களுக்கு நான் சொல்லிவரும் வாசகங்கள்... அரெஸ்ட் பண்ணுங்கள். முடிந்த வரை சரண்டர் பண்ணப் பாருங்கள். இரண்டும் முடியாமல் போனால், சுட்டுக் கொன்றுவிடுங்கள்...'' என்கிறார்.
விஜயகுமாரின் அதிரடி ஆபரேஷன்களுக்கு உடன் தோள் கொடுத்து வருகிறவர் ஐ.ஜி-யான சுக்லா. இவரும் தமிழ்நாடு கேடரைச் சேர்ந்தவர்!
- ஆர்.பி.
*********************************************************************************
செய்தியும் சிந்தனையும் - டயல் செய்தால் இயக்குநர் ரா.பார்த்திபன் பேசுவார்!

*********************************************************************************
பிரளயத்தைக் கிளப்பிய பிரமாணப் பத்திரம்!

ஜூ.வி-யைப் படித்துவிட்டு சீறிய முதல்வர்
மிழக மீனவர்களுக்கு முப்படைப் பாதுகாப்பு வழங்கக் கோரும் பொதுநல வழக்கில், 'எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்திய - இலங்கை ஐ.எம்.பி.எல். எல்லையில் ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு மீன் பிடிக்கத் தடை விதிக்க வேண்டும்’ என்று துணிச்சலாக பதில் மனு தாக்கல் செய்தார் இந்தியக் கடலோரக் காவல் படை ஐ.ஜி-யான மூர்த்தி. இந்த விவகாரம் இப்போது பாராளுமன்றம் வரைக்கும் பற்றி எரிகிறது!
வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில், கடலோரக் காவல் படை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் குறித்து கடந்த 27.11.11 ஜூ.வி. இதழில் 'எல்லை தாண்டும் மீனவர் லைசென்ஸ் ரத்து - மத்திய அரசு 'தைரிய’ அஃபிடவிட்’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். ஜூ.வி-யில் வந்த செய்தியைப் படித்துவிட்டு முதல்வர் தொடங்கி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பதறிவிட்டார்கள். மத்திய கேபினெட் செயலர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலர், கடலோரக் காவல் படைத் துணை இயக்குநர், வெளியுறவுத் துறை செயலர் இவர்​களோடு தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர் மனுதாரர்​களாகச் சேர்த்திருந்தார் ஸ்டாலின். மத்திய அரசின் ஐந்து துறைகளின் சார்பில்தான் கடலோரக் காவல் படை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. நவம்பர் 16-ம் தேதியே இந்தப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும், விஷயம் வெளியில் தெரியாததால் யாருக்கும் இதன் தாக்கம் தெரியவில்லை. தலைமைச் செயலாளரை வழக்கில் சேர்த்திருந்தும் முதல்வருக்கே கூட இந்த விவரங்கள் சரிவர எடுத்துச் சொல்லப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய அவசரக் கடிதத்தில், 'கட​லோரக் காவல் படையின் இந்தக் குதர்க்கமான, மூர்க்கத்தனமான, விபரீதமான நிலைப்பாட்டில் இருந்து நான் முற்றிலும் மாறுபடுகிறேன். எல்லைப் பிரச்னைகள் இல்லாமல் இருநாட்டு மீனவர்களும் பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ஆக்கபூர்வமாக விவாதிக்கையில், கடலோரக் காவல் படை இப்படி ஒரு கண்டனத்துக்கு உரிய நிலைப்பாட்டை எடுத்திருப்பது வியப்பு அளிக்கிறது. இந்த நிலைப்பாட்டைச் செயல்படுத்தினால், இந்திய மீனவர்கள் பிழைப்பை இழந்து வறுமையில் வாட வேண்டிய சூழல் வரும். எனவே, ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுவதற்கு முன்னதாக, கடலோரக் காவல் படை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தாங்கள் உத்தரவிடவேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்.
''பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுப்போம்'' என்று சொன்ன தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, பாராளுமன்றத்திலும் இந்தப் பிரச்னையை கிளப்பப்போவதாகச் சொன்னார். விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், பொன்.ராதாகிருஷ்ணன் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தகிக்க வைத்திருக்கிறது, இந்தப் பிரமாணப் பத்திர விவகாரம்.
'இலங்கை அரசின் ஏஜென்ட் போல செயல்படுகிறது மத்திய அரசு. இதைப் பார்த்தால், இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ மேல். தமிழக மீனவர்களும் இந்தியக் குடிமக்கள் என்ற உணர்வு மத்திய அரசுக்கு இருக்குமானால் பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெறவேண்டும்’ என்று சீறி இருக்கிறார் விஜயகாந்த். 'இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்கத் துப்பில்லாத கடலோரக் காவல் படை இப்படி ஒரு விபரீதமான பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி இருக்கிறது. பிரமாண வாக்குமூலத்தை திரும்பப்பெற ஆணையிடுவதோடு, கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், விதைக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கும் அதன் எதிர்கால விளைவு​களுக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்’  என்கிறது வைகோவின் சூடான அறிக்கை.
பொதுநல வழக்கு போட்டிருக்கும் வழக்கறிஞர் ஸ்டாலினிடம் பேசினோம். ''நீதிபதிகள் அக்டோபர் 14-ம் தேதி, 'இன்னும் 10 நாட்களுக்குள் இந்திய மீனவர்கள்... குறிப்பாக தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும் அதைத் தாண்டிய சர்வதேசக் கடல் பிராந்தியத்திலும் அச்சமின்றி பாதுகாப்புடன் மீன் பிடிப்பதற்கு கடலோரக் காவல் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதை இந்தியக் கப்பற் படை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’ என்று பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதனால்தான், இப்போதும் தாக்குதல் தொடர்கிறது. இந்த லட்சணத்தில்தான் மத்திய அரசு, தமிழக மீனவர்கள் பிரச்னையில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை அஃபிடவிட் மூலம் அம்பலப்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசின் முக்கியமான ஐந்து துறைகளின் அதிகாரிகளை வழக்கில் பார்ட்டியாகச் சேர்த்திருக்கிறோம். எனவே, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னையில் மத்திய அரசைக் கலந்து ஆலோசிக்காமல் இந்த அஃபிடவிட் தாக்கல் செய்திருக்க முடியாது. 'எங்களுக்​குத் தெரியாது’ என்று பிரதமரோ, மற்றவர்களோ சொன்னால், அது ஏமாற்று வேலை. பேரறிவாளன், சாந்தன், முருகன் சம்பந்தப்பட்ட வழக்காக இருந்தால், மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்குமா? பத்திரிகை செய்தியைப் படித்துவிட்டே நமது முதல்வர் உடனடியாக ரியாக்ட் பண்ணுகிறார். ஆனால், இவ்வளவு நடந்தும் மத்திய அரசிடம் இருந்து மழுப்பலாகக்கூட பதில் இல்லையே... அப்படியானால் என்ன அர்த்தம்?
தமிழக அரசியல் கட்சிகளின் இந்த கோபமும் ஆத்திரமும் வெறும் அறிக்கையோடு நின்றுவிடக் கூடாது. டிசம்பர் 8-ம் தேதி இந்த வழக்கின் மறு விசாரணை நடக்கிறது. அப்போது, தங்களையும் மனுதாரர்களாக சேர்த்துக்கொள்ளும்படி அனைத்துக் கட்சிகளும் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக தமிழக முதல்வர், 'மீனவர்களுக்கு நாங்கள் தடை விதிக்க மாட்டோம். எல்லை தாண்டும் மீனவர்களின் லைசென்ஸை ரத்து செய்யவும் மாட்டோம். நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக மீனவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என ஆணித்தரமாக வலியுறுத்தி இடைக்கால மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர், 'கச்சத் தீவை மீட்பேன்’ என்று சொன்னதில் அர்த்தம் இருக்கும்'' என்று தீர்க்கமாகச் சொல்கிறார் ஸ்டாலின்.
முதல்வரின் அடுத்த நடவடிக்கை என்ன?
குள.சண்முகசுந்தரம்,
   படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
*********************************************************************************
''ராமதாஸின் அறக்கட்டளையையும் சேர்க்க வேண்டும்!''

பிரச்னையைக் கிளப்பும் வன்னியர் நல வாரியம்!
சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கொடுத்திருக்கும் ஒரு தீர்ப்பு, டாக்டர் ராமதாஸை நிச்சயம் கதிகலங்கச் செய்​திருக்கும்!
'தமிழகம் முழுவதும் இருக்கும் வன்னியர் சமூகத்துக்குச் சொந்தமான அறக்கட்டளைகளை ஒன்று சேர்த்து வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும்’ என்று வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவரான சி.என்.ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது.
வன்னியர் சங்கத்தின் ஆரம்ப காலப் பொதுச் செயலாளராக இருந்து, பா.ம.க. துவக்கப்பட்ட காலத்தில் அதில் முக்கிய அங்கம் வகித்து, பின்னர் தனி இயக்கம் கண்டவர் சி.என்.ராமமூர்த்தி. அவரிடம் பேசினோம்.
''வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக எங்களது முன்னோர்கள் உயில் மூலமாகஎழுதிவைத்த சொத்துக்கள் கல்வி நிலையங்களாகவும், திருமண மண்டபங்களாகவும், பல்வேறு அறக்கட்டளைகளாகவும் உள்ளன. அதன் பலன்கள் அனைத்தும் உரிய நபர்களுக்குப் போய்ச் சேராமல், சில தனி நபர்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்தச் சொத்துக்களை எல்லாம் ஒருங்கிணைத்து சட்ட ரீதியான பாதுகாப்பான வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களது இயக்கத்தின் முக்கியமான கொள்கை. முஸ்லிம்களுக்காக வக்ஃபு வாரியம் இருப்பது போல, இந்த வாரியம் வன்னியர்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 76 வன்னியர் அறக்கட்டளைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது மருத்துவர் ராமதாஸின் 'வன்னியர் கல்வி அறக்கட்டளை’. உறுப்பினராக 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தியது மட்டும்தான் அந்த அறக்கட்டளையில் மருத்துவர் ராமதாஸின் பங்களிப்பு. உலகமெங்கும் இருக்கும் வன்னியர் இன மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை வாங்கித்தான் இந்த அறக்கட்டளைக்குச் சொத்துக்கள் வாங்கப்பட்டன. அறக்கட்டளைக்குச் சொந்தமாக தற்போது திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக் குப்பத்தில் 'சரஸ்வதி ராமதாஸ்’ என்ற பெயரில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அறக்கட்டளைக்குச் சொந்தமாக 1,500 ஏக்கர் பரப்பளவு நிலம் இருக்கிறது. அறக்கட்டளையில் ராமதாஸ் நிர்வாக அறங்காவலராகவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். 
இவை தவிர சென்னை வேப்பேரியில் இருக்கும் செங்கல்வராய நாயகர் அறக்கட்டளை, நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கந்தசாமி கண்டர் அறக்கட்டளை, மகாபலிபுரத்தில் இருக்கும் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை ஆகிய வன்னியர் அறக்கட்டளைகளுக்கும் கோடிக்​கணக்கில் சொத்துக்கள் இருக்கின்றன. இப்படி வன்னியர் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான மொத்தச் சொத்துக்களையும் கணக்கிட்டால், ஐந்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்.
இவை அனைத்தையும் சேர்த்து வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற எங்களது போராட்டம் ஒரு பக்கம் தொடர்ந்து வந்தது.
கடந்த 2001 மார்ச் மாதத்தில், சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரியானசந்திரசேகரைத் தனி அலுவலராகக்கொண்டு,'வன்னியர் பொதுச் சொத்து நிறுவனம்’ அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ அது செயல்​படாமலேயே முடங்கியது. அடுத்து 2009 மார்ச் மாதத்தில் அப்போதைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தானத்தை ஸ்பெஷல் ஆபீஸராகக்கொண்டு 'வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்’ அமைத்து, அரசு உத்தரவு பிறப்பித்தது. அது தொடர்பான மசோதாவும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதிகாரிகளை நியமித்து, அலுவலகமும் திறந்து நிதி ஒதுக்கிப் பணிகள் ஜரூராக நடந்து வந்த வேளையில், தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தார் ராமதாஸ். 'வாரியம் அமைக்கும் பணிகளைக் கைவிட வேண்டும்’ என்ற எழுதப்படாத ஒப்பந்தத்தின் பேரிலேயே, அந்தக் கூட்டணி அமைந்தது. அதன் பின்னர் வாரியப் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.
அதனையடுத்து, 'வாரியம் அமைக்க வேண்டும்’ என்று 18 முறை கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தோம். அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியில், கடந்த நவம்பர் 18-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனு மூலம், எங்களது கோரிக்கைக்குத் தீர்வு கிடைத்து இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வாரியப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதும், 'வன்னியர்கள் பொதுச் சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு அப்போது எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்தோம்.  'நான் ஆட்சிக்கு வந்ததும், இதை நிச்சயம் நடைமுறைக்குக் கொண்டுவருகிறேன்’ என்று உறுதி அளித்தார். நீதிமன்றத் தீர்ப்பும் வந்திருக்கும் சூழ்நிலையில், அவர் உடனடியாக வாரியத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவார் என்று நம்புகிறோம்'' என்றார்.
பா.ம.க. தரப்பில் இது குறித்துப் பேசியபோது, ''ஆரம்ப காலத்தில் இருந்து பா.ம.க-வை எதிர்ப்பதையே முழு நேரப் பணியாக செய்து வருபவர் சி.என்.ராமமூர்த்தி. அவருக்கு எங்கள் மருத்துவர் ஐயாவின் வன்னியர் கல்வி அறக்கட்டளை பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. அது வன்னிய சமூக மூதாதையர்களின் சொத்துக்களைக்கொண்ட அறக்கட்டளை அல்ல. மருத்துவர் ஐயா தனது சொந்த முயற்சியில் ஆரம்பித்த அறக்கட்டளை. ஐயா மீது பேரபிமானம்கொண்ட வன்னியச் சொந்தங்கள் அதற்கு நிதி கொடுத்து உதவி இருக்கிறார்கள். வன்னிய மக்களின் நலனுக்காகவே அந்த கல்வி அறக்கட்டளை இயங்கி வருகிறது. வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர் யாராவது தன் சொந்த முயற்சியில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி இருந்தால்கூட, அதனைக் கையகப்படுத்தி வாரியத்தில் சேர்க்க வேண்டும் என்று ராமமூர்த்தி சொல்வார் போலிருக்கிறது. வாரியத்தை முடக்குவதற்காகவே ஐயா தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தார் என்று சொல்வதும் அபாண்டமான குற்றச்சாட்டு'' என்கிறார்கள்.
வன்னிய அறக்கட்டளை விவகாரத்தில் கிளைமாக்ஸ் நெருங்குகிறது!
ஆர்.லோகநாதன்
படம்: வி.செந்தில்குமார்
*********************************************************************************
தீர்ப்பில் தள்ளாடும் தகவல் ஆணையம்!

ஆணையத்தின் மீது அடுக்கடுக்காய் வழக்குகள்!
'தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மூன்று தகவல் ஆணையர்கள் நியமனம் செல்லாது’ என்று அதிர்ச்சித் தீர்ப்பு அளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
அரசு அலுவலங்களில் ஒளிவுமறைவு இல்லாத செயல்பாடும், லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்டுக் கிடைக்காமல் போனால், தகவல் ஆணையங்களில் மேல்முறையீடு செய்ய லாம். இதற்காகவே இந்திய அளவில் மத்தியத் தகவல் ஆணையமும் மாநிலத் தகவல் ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன. தகவல் தரவில்லை என்றால் அதிகபட்சமாக  25,000 அபராதம் விதிக்கப்படும். இத்தகைய அதிகாரம் கொண்டது தகவல் ஆணையங்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் தகவல் ஆணையத்துக்கு, ஏ.ராமையா, சி.மனோகரன், ஏ.ஆறுமுக நயினார் ஆகிய மூவர் நியமிக்கப்பட்டனர். சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வந்த அன்றுதான் இதற்கான உத்தரவு வெளியானது. இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இந்த நியமனம் செல்லாது’ என்றது.
''தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நாளில், இந்த நியமனம் நடந்துள்ளது. மாநில முதல்வர், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவர் அடங்கிய குழுதான், மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும். இந்த நியமனத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் கருத்தைக் கேட்காமலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றாமலும் நியமனம் செய்யப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தகவல் அறியும் உரிமை ஆர்வலரான கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ''தகவல் ஆணையங்கள், தேர்தல் கமிஷனைப் போலவே தன்னாட்சி அதிகாரம்கொண்ட ஓர் அமைப்பு. அறிவியல், சட்டம், இதழியல், சமூக சேவை, நிர்வாகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், இங்கே அரசியல் புகுந்து விளை யாடுகிறது. வெளிப்படையான ஊழல் அற்ற அமைப்பு உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் சட்டமே கொண்டுவரப்பட்டது. ஆனால், இதன் ஆணையர்கள் நியமனம்கூட வெளிப்படையாக நடைபெறவில்லை. ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். கருணாநிதியின் செயலாளராக இருந்த டி.ஆர்.ராமசாமி, தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ஸ்ரீபதி போன்றவர்கள் தகவல் ஆணையர்களாக இருக்கிறார்கள். 2008-ல் தகவல் ஆணையர்களாக சாரதா நம்பி ஆரூரான், டி.சீனிவாசன், டி.ஆர்.ராமசாமி மற்றும் பெருமாள்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கான கூட்டம் 11.4.2008-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டம் நடப்பதற்கு 10 நாட்களுக்குள்தான் டி.ஆர்.ராமசாமியும் பெருமாள்சாமியும் விண்ணப்பிக்கிறார்கள். டி.சீனிவாசன், சாரதாநம்பி ஆரூரான் ஆகியோர் முதல் நாள்தான் விண்ணப்பித்தார்கள். அவர்களுக்குப் பதவி தர வேண்டும் என்பதற்காகவே, அவசர அவசரமாக விண்ணப்பங்களை அரசு வாங்கியது. ஒரு வழக்கு தொடர்பாக சீனிவாசன் என்னிடம் பேசியபோது, 'தகவல் ஆணையர் பதவிக்காக நான் விண்ணப்பிக்கவே இல்லை. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்குத்தான் விண்ணப்பித்தேன். அந்த பயோ-டேட்டாவை வைத்து என்னைத் தேர்வு செய்துவிட்டார்கள். பெருமாள்சாமியும், சாரதாநம்பி ஆரூரானும் வேறு பதவிகளுக்குத்தான் விண்ணப்பம் கொடுத்தார்கள்’ என்றும் சொன்னார். இப்படிப்பட்டவர்களை தகவல் ஆணையத்தில் நியமித்தால், அங்கே வரும் மேல்முறையீட்டு மனுக்களை எப்படி விசாரிப்பார்கள். இனிமேலாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அறிந்தவர்களையும், சமூக ஆர்வலர்களையும் நியமிக்க வேண்டும்'' என்றார். 
இந்த வழக்கை, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். 'தகவல் ஆணையர் தேர்வு நடவடிக்கைகள் தொடர்பான கோப்பு ஒரு நாளிலேயே பிரிவு அலுவலர் தொடங்கி முதல்வர் வரை சென்றிருக்கிறது. ஆணையர்கள் தேர்வுக்கான கூட்டம் 1.3.11 அன்று நடந்தது. எதிர்க் கட்சித் தலைவரின் (ஜெயலலிதா) ஆலோசனையைப் பெறவில்லை. கூட்டத்தை வேறு தேதிக்குத் தள்ளிவைக்கும்படி எதிர்க் கட்சித் தலைவர் கருத்துத் தெரிவித்து இருந்தார். ஆனாலும் ஆணையர்கள் நியமனம் செய்து அன்றே அதற்கான ஆணையை வெளியிட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைக் கருத்தில்கொள்ளாமல் அன்றே கவர்னரின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். இந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்யும்போது, ராமையா அரசுப் பதவியில் இருந்தார் என்றும் தேர்வுக் கூட்டம் நடந்த அன்றுதான் அவருக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்றும் மனுதாரர் கூறினார். இப்படி நடந்திருப்பது சட்டப்படி குற்றம். இதனை எல்லாம் பார்க்கும்போது, மூன்று பேர் நியமனத்திலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை எனவே, மூன்று பேரின் நியமன உத்தரவு சட்ட விரோதமாகவும், நடைமுறைக்கு முரணாகவும் உள்ளது’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
''தகவல் அறியும் சட்டத்தில் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உள்ள விதிமுறைகள்தான் இந்த மூன்று பேர் நியமனத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. நியமனத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, மாறிவிட்ட அரசுகளின் நிலைப்பாட்டைப் பார்க்கக் கூடாது'' என்கிறார்கள் இந்த மூன்று பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்.
தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் தகவல்களைப் பெறுவதைவிட... நல்ல ஆணையர்களைப் பெறுவது கஷ்டமாகி விட்டது!
எம்.பரக்கத் அலி
ஸ்ரீபதிக்கு சிக்கல் இல்லை!
தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக கடந்த 2010-ல் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'அவருடைய நியமனம் செல்லும்’ என்றது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், 'ஸ்ரீபதி தேர்வுக்காக நடந்த கூட்டத்திற்கு எதிர்க் கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களைக் கூறி அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே, அவர் இல்லாமல் எடுத்த முடிவை சட்ட விரோதம் என்று குற்றம் சாட்ட முடியாது’ என்றும் சொன்னது.
**********************************************************************************
கடை வாசலில் கடை!

ரங்கநாதன் தெருவில் தொடரும் ரவுசு!
'ஒரு காலத்துல ரங்கநாதன் தெருவுல பிளாட்பாரத்துல கடை வைச்சிருக்கிறவங்களை காலி பண்ணச் சொல்லி, கடை முதலாளிகள் தொல்லை கொடுத்துட்டு இருந்தாங்க. ஆனா இன்னைக்கு சீல் வைக்கப்பட்ட பெரிய கடைக்காரங்களே, பிளாட்பாரத்தில் கடை போட்டு வியாபாரம் பண்ணிட்டு இருக்காங்க. நிலைமையைப் பார்த் தீங்களா..?’ - தி.நகர் ஏரியாவில் குடியிருக்கும் நண்பர் ஒருவர் பெருமூச்சுடன் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
நிலைமையை அறிந்துகொள்ள ரங்கநாதன் தெருவுக்குக் கிளம்பினோம். சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு வெளியே கடைகள் முளைத்திருந்தன. சில துணிக் கடைகள் தங்களது வேறு கிளைகளில் இருந்து துணிகளைக் கொண்டுவந்து மூடப்பட்ட கதவுகளுக்கு வெளியில்வைத்து வியாபாரம் செய்துகொண்டு இருந்தார்கள். சீல் வைக்கப்பட்ட ரத்னா ஸ்டோர்ஸ் வாசலில் ஒரு பெரிய போர்டு... அதில், 'ரத்னா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடை பின்புறம் இயங்குகிறது’ என அம்புக் குறி போட்டு வழி காட்டுகிறது. பின் பக்கம் உள்ள குடோனில் வியாபாரம் ஜோராக நடக்கிறது. சரவணா ஸ்டோர்ஸிலும் இதே ஸ்டைலில்தான் வியாபாரம் நடக்கிறது.
ரங்கநாதன் தெருவில் விதி மீறல்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த 'டிராஃபிக்’ ராமசாமி, ''விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டி இருப்பதால்தான், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சீல் வைச்சு இருக்காங்க. விதிமுறைகளுக்கு உட்பட்டு அதை எப்படிச் சரிபண்ணலாம்னு யாருமே யோசிக்க மாட்டேங்கிறாங்க. குறுக்கு வழியில் எப்படிக் கடையைத் திறக்கலாம் என்பதில்தான் குறியா இருக்காங்க. வியாபாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக பொருட்களை ரோட்டில் போட்டு விற்கும் அளவுக்கு இறங்கி வந்துட்டாங்கன்னா பார்த் துக்கோங்க. பிளாட்ஃபார்ம் என்பது எதுக்காக? மக்கள் நடந்து போவதற்கான நடை பாதை. அங்கே போய்க் கடை போடுறதை என்னன்னு சொல்றது? மாநகராட்சியும், காவல் துறையும் உடனடியாக் களம் இறங்கி, பொதுமக்களுக்கு இடையூறு தரும் நடைபாதைக் கடைகளை எடுக்கணும். கடை வைச்சிருக்கிறவங்களை நான் குறை சொல்ல விரும்பலை. அது அவங்களோட தொழில். ஆனா நீங்க பணம் சம்பாதிக்கிறதுக்காக மக்களை சிரமப்பட வைக்காதீங்க'' என்றார் வருத்தத்தோடு.
ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளரான ரத்னம் நாடாரிடம் பேசினோம். ''நாங்க பிளாட்ஃபார்மில் வியாபாரம் பண்றது கிடையாது. எங்களுக்கு அந்த அவசியமும் இல்லை. எங்ககிட்ட வேலை பார்த்த 200 பேரை சொந்த ஊருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பிட்டோம். அவங்க வேற எங்காவது வேலைக்குப் போயிட்டாங்கன்னா... எங்களால் திரும்பவும் ஆட்களைத் தேடிப்பிடிக்க முடியாது. அதனால் பிரச்னை முடியும் வரை எப்போதும் போல அவங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதா சொல்லிட்டேன். ஊரில் இருந்து திரும்பி வரும்போது, அதுக்கும் பணம் கொடுத்துடுறேன்னு சொல்லித்தான் அனுப்பி வைச்சிருக்கேன். எங்களைப் போல பெரிய நிறுவனங்கள் எல்லாமே இதே போலத்தான் ஆட்களை அனுப்பி இருக்காங்க. சின்னக் கடைக்காரங்க அப்படிச் செய்ய முடியாது. அவங்க நிலைமைதான் ரொம்ப பரிதாபம். 30-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வரும்னு சொல்லி இருக்காங்க. அதுக்காகத்தான் காத்திருக்கோம். நீதிமன்றத் தீர்ப்பைப் பார்த்துட்டுத்தான் அடுத்த கட்டத்தைப் பத்தி யோசிக்க முடியும். ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுட்டுக் காத்திருக்கோம்'' என்று சொன்னார்.
தமிழர் தொழில் இயக்க மாநிலத் தலைவர் முத்து குமாரிடம் பேசினோம். ''எங்களுக்குத் தெரிஞ்சு, பெரிய கடைக்காரங்க யாரும் பிளாட்பாரத்தில் வியாபாரம் பண்ணவில்லை. சீல் வைக்கப்பட்டு இருக்கும் கடைக்கு வெளியே வேறு யாராவது கடை போட்டு இருக்கலாம். வெளிநாடுகளில் எல்லாம் வணிக மையங்களுக்கு என்றே தனியாக ஒரு ஏரியா இருக்கிறது. அதைப் போல ரங்கநாதன் தெருவையும் சென்னையின் வணிக மையமாக அறிவிக்கணும். பாரீஸ் கார்னர், சௌகார்பேட்டைன்னு சென்னையின் பல இடங்களில் விதிகளை மீறிக் கட்டடம் கட்டி இருக்காங்க. அதெல்லாம் யார் கண்ணுக்கும் தெரியாது. ரங்கநாதன் தெருவில் தமிழன் மட்டும்தான் வியாபாரம் பண்றான். அதனால்தான், தமிழனுக்கு மட்டும் பிரச்னை வருது. நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வரப்போகுதுன்னு பார்த்துட்டு, அடுத்த கட்டமா தொடர் போராட்டங்கள் நடத்த இருக்கோம்...'' என்கிறார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் என்ன சொல்கிறார்? ''நீதிமன்றத் தீர்ப்புக்காகத்தான் காத்திருக் கோம். 30-ம் தேதி தீர்ப்பு வந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு பண்ணப்போறோம். சீல் வெச்ச கடைகளில் இருந்து யாரும் எந்த பொருளையும் எடுத்திருக்க முடியாது. வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து வியாபாரம் பண்றாங்களான்னு தெரியலை. அப்படிப் போக்குவரத்துக்கு இடையூறாக கடை வைச்சிருந்தா, கண்டிப்பா நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்துவோம்'' என்று உறுதியாகச் சொன்னார்.
நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது?
கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்,
எஸ்.அனுசத்யா                                                                                                                             
*********************************************************************************
விசாரணையில் விஞ்ஞானிகள்!

செல்போன் ஆராய்ச்சியைத் துருவும் சி.பி.ஐ.
''செல்போன் தொழில்நுட்பத்தில் நவீன ஆய்வு  நடந்திருந் தால், நம்நாடு இந்தத் துறையில் பெரிய வளர்ச்சி கண்டிருக்கும். ஆனால், அதைச் செய்யாமல்  20 கோடியை ஊழல் செய்து ஏப்பம்விட்டு இருக்கிறார்கள் சில விஞ்ஞானிகள்'' என்ற தகவல் கசிந்த நிலையில், அதை விசாரிக்கத் தொடங்கினோம். ''இந்தக் குற்றச்சாட்டைப் பதிவுசெய்து விசாரிக்கத் தொடங்கிவிட்டோம்...'' என்கிறது சி.பி.ஐ.!  
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் சென்னை தரமணி பகுதியில் நுண்ணலை பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சமீர்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் உள்ள பாகங்களை சிறிய அளவில் வடிவமைக்கும் ஆய்வை ஸ்பெஷலாக செய்வதற்காக புதியதாக மின்னணு வடிமைப்பு மையத்தை (இ.டி.சி) துவக்கினார்கள். அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா தொழில் நுட்ப நிறுவனமும் இந்தமையத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், எதிர்பாரத வகையில் இந்த செல்போன் ஆராய்ச்சியில் ஏற்பட்ட சுணக்கம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பி உள்ளது.
சி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் சில சந்தேகங்களைப் பட்டியலிட்டார்கள்.
''36 மாதங்களில் முடிய வேண்டிய ஆராய்ச்சி, மூன்று ஆண்டுகளைக் கடந்தும், அங்குள்ள விஞ்ஞானிகள் இழுத்தடித்து வந்தனர். இந்த மையத்திற்கென வெறும் கட்டடம் மட்டும்தான் இருந்ததே தவிர வேறு எந்த ஆய்வும் நடந்ததாக தெரியவில்லை. இந்த நிலையில், ஆய்வு மையத்தின் வருடாந்திர செலவுகளைக் கவனித்த மத்திய கணக்குத் தணிக்கையாளர், சில கேள்விகளைத் தனது அறிக்கையில் எழுப்பினார். அதை வைத்துத்​தான் நாங்கள் எங்களது விசாரணையைத் தொடங்கினோம்'' என்கிறார்கள்.
சென்னை சி.பி.ஐ-யின் லஞ்ச ஊழல்தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஆய்வு மையம் தொடர்புடைய முக்கிய​மானவர்களில் 13 விஞ்ஞானிகளின் பின்னணிகளை அலசி இருக்கிறார்கள். இதை தெரிந்துகொண்டு,  மின்சாரம் சரிவர இல்லாமல் பெயரளவில் நடந்துவந்த ஆய்வு மையத்திற்கு மாதம்  40 ஆயிரம் செலவில் டீசல் வாங்கி ஜெனரேட்டர் மூலம் மின்சார வசதியை அவசரகோலத்தில் செய்திருக்கிறார்கள். இதுதான் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு முதல் சந்தேகம். ஆய்வுக்கூட கட்டடத்தை முறையாக கட்டாததால், சி.எம்.டி.ஏ-விடம் அப்ரூவல் கிடைக்கவில்லையாம். அதனால்தான், முழுமையான மின்இணைப்பு கிடைக்காமல் அரைகுறையாக ஆய்வு மையம் இயங்கி வந்ததாம். இதுமாதிரி கிடைத்த  சில ஆதாரங்களை வைத்து சமீர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் கருணாகரன், கே.ஆர். கினி, மின்னனு வடிமைப்புக் மையத்தின் திட்ட இயக்குனரும் விஞ்ஞானியுமான ஸ்ரீதர் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ.. அதோடு, இந்த வழக்கில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை இயக்குனரும் பேராசிரியருமான மாதவன் சுவாமிநாதன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மத்திய உளவுத் துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். ''இந்த மையத்தின் ஆய்வுப் பணிக்காக மத்திய அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில் 20 கோடி வரை முறைகேடுகள் நடைபெற்று இருக்கலாம் என்கிறார்கள். இங்கு உள்ள விஞ்ஞானிகள் அமெரிக்கா விசிட் போன வகையில் சுமார் 40 லட்சம் வரை செலவு செய்தனர். ஆனால், அங்கு கற்றுக்கொண்ட தகவல்கள் எதையும் முறையாகப் பதிவுசெய்யவில்லை. அதே போல், அமெரிக்காவில் இருந்து மாதவன் சுவாமிநாதன் போன்ற சிலர் இங்கே வந்துபோய் இருக்கிறார்கள். இந்த வகையிலும் தாராளமாக செலவு செய்திருக்கிறார்கள். ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகங்கள் இந்த மையத்துடன் கைகோத்து ஆய்வில் மாணவர்களை ஈடுபடுத்த முன்வந்தும் அவர்களை ஒதுக்கிவிட்டு, சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றுடன் கைகோக்க ஒரு விஞ்ஞானி தீவிரமாக செயல்பட்டி​ருக்கிறார். அதுபற்றியும் விசாரிக்கிறோம். இன்னொரு விஞ்ஞானி பகுதி நேர ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார். அவருக்கு இங்கு உள்ள இன்னொருவரின் ஆதரவும் உண்டு. சென்னையில் உள்ள சில தனியார் நிறுவன அதிகாரிகளும் இங்கு வந்து சென்றுள்ளார்கள். அது மாதிரி யாராவது இன்ஃப்ளூயன்ஸ் செய்த காரணத்தால் திட்ட​மிட்டு ஆய்வை கால தாமதம் செய்தார்களா என்றும் விசாரிக்கிறோம். அதே நேரத்தில், ஆகாஷ் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மோடம் என்கிற கருவி வடிவமைப்பில் முறைகேடு தொடர்பாக கே.ஆர்.கினி, கருணாகரன் இருவரும் ஏற்கெனவே  கைதாகி விட்டார்​கள். மற்றொரு விஞ்ஞானியான ஸ்ரீதர் மட்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு தற்போது வந்துபோகிறார். மாதவன் சுவாமி​நாதனையும் விரைவில் அழைக்க உள்ளோம். இலவசப் பயிற்சிதான் அமெரிக்காவில் நடந்ததாகவும், ஆனால்... இங்கே இருந்து சென்ற ஒவ்வொருவரின் தலைக்கும் தலா 50 ஆயிரம் டாலர் சார்ஜ் செய்தது யார் என்றும் விசாரிக்கிறோம். மாதவனிடம் விரிவாக விசாரித்து முடித்த பிறகுதான், மற்ற விவரங்கள் தெரியவரும்'' என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் சகோதரர்தான் மாதவன் சுவாமிநாதன். சென்னை மையத்தில் நடைபெற்று வந்த ஆய்வுகள்பற்றி டெல்லியில் உள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் உயர் அதிகாரிகள் சிலர் அதிருப்தி காட்டிய நேரத்தில் பெரிய இடத்தில் இருந்து வந்த பிரஷர் காரணமாக, ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளனரா என்கிற கோணத்திலும் சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது. டெல்லியில் இந்த நிதி ஒதுக்கீட்டுப் பின்னணியில் செயல்பட்டவர்களையும் விரைவில் சி.பி.ஐ. தனது வளையத்துக்குள் கொண்டு வர திட்டம் இட்டுள்ளது.
விஞ்ஞானிகள் தரப்பில் விளக்கம் கேட்க தொடர்பு​ கொண்டும், பதில் அளிக்க அவர்கள் தயாராக இல்லை. பதில் கொடுத்தால் வெளியிட நாம் தயாராகவே இருக்கிறோம். ''அந்த ஆய்வு மையத்தில் நடந்து வந்த ஆய்வு பற்றி டெல்லி அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்களின் கருத்துக்களைக் கேட்காமல், தன்னிச்சையாக சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்குத் தகுந்த பதிலை சட்டப்படி உணர்த்துவோம்'' என்று இந்த விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லி வருவதாகச் சொல்கிறார்கள்.
கனிஷ்கா, படம்: வீ.நாகமணி
*********************************************************************************
முற்றுப்புள்ளியை நெருங்கும் முத்துக்குமார் கொலை!

'நாம் தமிழர்’ கட்சி உருவாகக் காரணமான புதுக்கோட்டை முத்துக்குமாரின் கொலை வழக்கில், ஏழு மாதங்களுக்குப் பிறகு குற்றவாளிகளைக் கைது செய்து முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார்!
முத்துக்குமாரின் பிறந்த ஊர் மதுரை. விடுதலைப் புலிகளின் தீவிரமான ஆதரவாளர். இதற்காகப் பல முறை சிறைக்கும் சென்றவர். மதுரையைவிட்டு கடந்த 1990-ல் புதுக்கோட்டைக்கு வந்தவர், வட​காட்டைச் சேர்ந்த கரு.காளிமுத்து என்பவரது வீட்டில் தங்கினார். அங்கு இருந்தபடியே தமிழ் ஈழத்துக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்து கொண்டார். கடந்த 2010 பிப்ரவரி 21-ம் தேதி கரு.காளிமுத்து​வின் மகள் மாதரசியைத் திருமணம் செய்தார். இடையில் சீமானுடைய நெருக்கம், அதன் பிறகு நாம் தமிழர் கட்சி உதயம் என அவரது தமிழ் ஈழ உணர்வுப் பயணம் நீண்டது.
இந்த சூழலில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரவு புதுக்கோட்டையில் வைத்து ஒரு கும்பல் முத்துக்குமாரை வெட்டிக் கொலை செய்தது. கொலை செய்தவர்கள் பயன்படுத்திய கார், திருமயம் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்தது. அதைக் கண்டுபிடித்த பிறகும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திணறியது காவல் துறை. 'இந்தக் கொலைக்கான காரணத்தையும், குற்றவாளிகளையும் உடனே கண்டுபிடிக்க வேண்டும்’ என சீமான் பல முறை ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனாலும், காவல் துறை அக்கறை எடுக்காததால், சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி மனு கொடுக்கப்பட்டது. கடந்த மே மாதம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் வந்ததும், 15 குழுக்களாகப் பிரிந்து இதைப் பலமாக விசாரித்தனர்.  இதன்படி,  கொலைக் குற்றவாளிகள் என, முத்துக்குமாரின் நண்பர் கரூர் மாவட்டம் கருப்பத்தூரைச் சேர்ந்த கோபால், சிவகங்கையைச் சேர்ந்த சுரேஷ் பாண்டியன், கரூர் மாவட்டம் சூரியனூரைச் சேர்ந்த ஷக்தி ஆகியோரை இப்போது  கைது செய்திருக்கிறார்கள்.
குற்றவாளிகளைப் பிடித்த சி.பி.சி.ஐ.டி போலீ​ஸாரிடம் பேசினோம். ''முத்துக்குமாருக்கு சென்னையை சேர்ந்த பாஸ்கர் நெருங்கிய நண்பர். இருவருமே ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்தபோது, பணப் பிரச்னை வந்து, அது பகையாக மாறியது. அதனால்தான், கூலிப்படை மூலம் முத்துக்குமாரை கொலை செய்து இருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட  நால்வரையும் பிடித்துவிட்டோம்'' என்றார்கள். 
இந்தக் கைது குறித்து கருத்து கேட்பதற்காக மாதரசியை சந்திக்கச் சென்றோம். அவர் சென்னையில் படிப்பதால், அவள் தந்தை கரு.காளிமுத்து நம்மிடம் பேசினார். ''முத்துக்குமாருக்கு தமிழின உணர்வு அதிகம் இருந்ததால்தான், என் மகளைக் கல்யாணம் செய்து கொடுத்தேன். வீட்டோட மாப்பிள்ளையா வைத்துக்கொண்டோம். அவரை எங்க வீட்டு பிள்ளை போலத்தான் நடத்தினோம். அவர் கொலைக்குப் பிறகு  எங்க குடும்பம் நிலைகுலைஞ்சுடுச்சு. இப்ப கைது செய்த யாரையுமே எங்களுக்குத் தெரியாது. ஏன்னா, அவர் இறக்கிற வரைக்கும் எங்க வீட்டுக்கு யாரையுமே கூட்டிட்டு வரலை. இப்பக் கைது செய்தவங்களைப் பத்தி என் மகள்கிட்டயும் கேட்டேன். அவளுக்கும் இவங்களைத் தெரியலை. இந்தப் படுபாதகத்தை செய்த யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனை அனுபவித்தே ஆகணும்'' என்றார் கலங்கிய கண்களோடு.
முத்துக்குமாரோடு நெருங்கிப் பழகிய சிலரிடம் பேசினோம், ''வீரப்பனுக்கு உதவி செய்ததாக முத்துக்குமார் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் இருந்தபோதுதான் வேறு வழக்கில் உள்ளே இருந்த கோபால், ஷக்தி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முத்துக்குமாரின் நண்பர் பாஸ்கர், ஒரு விதவைப் பெண்ணைத் திருமணம் செய்ய நினைத்தார். அவர் வீட்டில் உள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடம் முத்துக்குமார் பேசியும் எடுபடவில்லை. அதன் பிறகு, 'நீ யாரைத் திருமணம் செய்தாலும், உனது பெற்றோரின் சம்மதத்தோடு செய். மீறிச் செய்தால் நான் உனது திருமணத்துக்கு வர மாட்டேன்’ என்று முத்துக்குமார் சொல்லி​விட்​டார். அதையும் மீறி பாஸ்கர், அந்த விதவைப் பெண்ணைத் திருமணம் செய்துவிட்டார். தான் சொன்​னது மாதிரியே  திருமணத்துக்கு முத்துக்குமார் செல்லவில்லை. அவரது பெற்றோரும் சகோதரியும் மட்டும் சென்று வந்தனர். அதற்கு பிறகு நடந்த முத்துக்குமாரின் திருமணத்துக்கு பாஸ்கரும் வரவில்லை. அதன் பிறகு முத்துக்குமாரைப் பற்றி பாஸ்கர் அவதூறு கிளப்பினார். அதோடு அவர்களது நட்பு முடிந்துவிட்டது. அப்படிப்பட்டவரா இந்தக் கொலையைச் செய்தார்!'' என ஆச்சர்யப்பட்டனர். கோபால், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்கிறார்கள். சாதி அமைப்பில் தீவிரமாக இருக்கிறார் ஷக்தி.   கடந்த 2008-ல் பரோலில் வெளியில் வந்த சுரேஷ் பாண்டியன் அதோடு தப்பிவிட்டாராம். தற்போதுகூட மிகுந்த சிரமத்துக்கு இடையில்தான் சுரேஷ் பாண்டியனை மடக்கி இருக்கிறார்கள். சி.பி.சி.ஐ.டியிடம் பேசிய கோபால் முன்னுக்குப் பின் முரணாகவே பேசுகிறார் என்றும் தகவல்கள் கசிகின்றன.
சி.பி.சி.ஐ.டி-யின் டி.எஸ்.பி-யான மலைச்சாமியிடம் விளக்கம் கேட்டோம். ''தற்போது நடந்த முதல் கட்ட விசாரணையில் முழுத் தகவல்கள் கிடைக்கவில்லை.  அடுத்தக் கட்ட விசாரணையில் முழுவதும் தெரிந்துவிடும்'' என்றார்.
சாதி, அரசியல், பணம்... மூன்றும் இணைந்த கொலைச் சம்பவமாக இது இருக்கலாம்!
வீ.மாணிக்கவாசகம்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், பா.காளிமுத்து


********************************************************************************************

மிஸ்டர் கழுகு: 'கனி'ந்த நேரம்!

''டெல்லி செய்திகளுக்காகக் காத்திருக்கிறேன். அதனைப் பொறுத்து என்னுடைய வருகை இருக்கும்'' என்று தகவல் அனுப்பினார்
கழுகார். 'கனிமொழிக்கு ஜாமீன்’ என்ற தகவல் திங்கள்கிழமை மதியம் 3.46க்கு நம்மை எட்டிய சில நிமிடங்களிலேயே கழுகாரும் நம் முன்னால் ஆஜர்.
''இன்றைக்கு இரவுதான் கருணாநிதி நிம்மதியாகத் தூங்குவார்!'' என்று சிரித்தார் கழுகார்.
''பெத்த மனம் துடிக்கத்தானே செய்யும்'' என்றோம் நாம்.
''வெள்ளிக்கிழமையே கருணாநிதிக்கு அதிக நம்பிக்கை இருந்தது. 'கனிக்கு ஜாமீன் கிடைச் சிடும்’ என்று அன்று காலையில் இருந்தே கருணாநிதி சொல்லிக்கொண்டு இருந்தாராம். கோபாலபுரம் இல்லத்தில் டி.வி. முன்னால் உட்கார்ந்துகொண்டார். டெல்லியில் இருந்து தகவல் கள் கிடைக்க இரண்டு செல்போன்கள் தயாராக இருந்தன. அறிவாலயத்தில் இன்னும் கூடுதல் ஆர்வம் தலை தூக்கி இருந்தது. சிலர் பட்டாசு பாக்கெட்டுகளுடன் வலம் வந்தார்களாம். 'ஜாமீன்’ என்ற தகவல் கிடைத்ததும்.. அதிரும் வெடி களை போடத் திட்டமாம். ஆனால் அன்று ஆசை, நிராசை ஆனது!''
''அன்றைய தினம் ஜாமீன் கிடைத்துவிடும் என்றார்களே?''
'' டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழிக் காக மட்டும் இல்லாமல், இன்னும் பலர் மீதான மனுக்களும் விசாரணையில் இருந்ததால், ஒவ்வொருவர் மீதான விசாரணைக்குமாக இழுத்து விட்டது என்பதுதான் உண்மை. ஆ.ராசாவின் நெருங்கிய நண்பராகவும் அவரது செயலாளராகவும் இருந்த சித்தார்த்த பெஹூராவின் மனுவை சி.பி.ஐ. கடுமையாக எதிர்த்தது. காலதாமத்துக்கு இதுதான் காரணம்!''
''ஓஹோ!''
''இது போதாது என்று அன்றைய தினம் நீதிபதி அடித்த கமென்ட் ஒன்றும் கருணாநிதியை வருத்தப் படுத்தியது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து பேருக்கு ஜாமீன் கிடைத்தது. 'சுப்ரீம் கோர்ட் ஜாமீன் கொடுத்துவிட்டது’ என்பதையே தங்கள் தரப்புக்கான வலுவான ஆதாரமாகச் சொன்னார்கள். 'குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நம்பிக்கை மோசடி என்ற ஷரத்து உள்ளது. இது மிக மிக முக்கியமான விஷயம். இதை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் எடுத்துக்கொண்டதா எனத் தெரியவில்லை’ என்று சாதாரணமாகச் சொன்னது... 'கனிமொழிக்கு ஜாமீன் கொடுக்க நீதிபதி விரும்பவில்லையோ?’ என்ற தொனியை உருவாக்கியது. இந்த விசாரணையின்போது ராஜாத்தி அம்மாள் டெல்லியில்தான் இருந்தார். 'கனி இன்னைக்கு வெளியே வந்திரும்’ என்று அவரும் நம்பிக்கையோடு இருந் தார். ஆனால் ரிசல்ட் அன்று வராததால்... ராஜாத்தி அப்செட்.''
''அப்புறம்?''
''அடுத்த விமானத்தைப் பிடித்து சென்னைக்கு வந்துவிட்டார் ராஜாத்தி அம்மாள். அன்று கருணாநிதியைச் சந்தித்து தனது வருத்தங்களைப் பதிவு செய்தார். ராஜாத்தி வந்திருப்பது தெரிந்து சில தி.மு.க. பிரமுகர்களும் அவரைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். அன்று மாலையே டெல்லிக்கு ராஜாத்தி சென்றுவிட்டார். திங்கள் கிழமை பாட்டியாலா கோர்ட்டுக்கு ராஜாத்தி சென்றார். அங்கு கனிமொழியும் வந்திருந்தார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான காரசார விவாதம் நடந்துகொண்டு இருந்தபோது அம்மாவும் மகளும் அமைதியாக பாட்டியாலாவில் உட்கார்ந்து இருந்தார்கள். மாலை 4.30 மணிக்கு கிளம்பும் விமானத்தில் சென்னை திரும்ப டிக்கெட் போட்டிருந்தார் ராஜாத்தி. அதனால், அவர் டெல்லி விமான நிலையம் வந்துவிட்டார். ஜாமீன் கிடைத்த தகவலை டி.ஆர்.பாலுதான் முதலில் கனிமொழியின் கணவர் அரவிந்தனுக்கு போனில் சொல்லி இருக்கிறார். உடனே அரவிந்தன், கனிமொழியின் கையைப் பிடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினாராம். ஆனால், கனிமொழி நம்பவில்லையாம். 'நல்லா செக் பண்ணிச் சொல்லுங்க’ என்று கனிமொழி கேட்டார். மிக முக்கியமான நாள் என்பதால், தி.மு.க. எம்.பி.க்கள் சுமார் 10 பேருக்கு மேல் பாட்டியாலா கோர்ட்டில் குவிந்து இருந்தார்கள். இந்தத் தகவல், உடனடியாக ராஜாத்திக்கும் சொல்லப்பட்டது. கிடைத்த மறு கணமே சந்தோஷத்தால் அழ ஆரம்பித்துவிட்டாராம் ராஜாத்தி. அடுத்த போன், கோபாலபுரத்துக்குத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.''
''ஆமாம்! ஆமாம்!''
''டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு அதிகாரப் பூர்வமாக டைப் ஆகி... திகார் சிறைக்கு வருவதற்கான கால அவகாசம் இல்லாததால் அநேகமாக மறு நாள்தான் வெளியே வர முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் அன்றைய தினம் பிரின்டர் ரிப்பேர். அதனால் தீர்ப்பின் நகலை எடுப்பதற்குக் கால தாமதம் ஆனது. '10 நிமிடங்களுக்குள் கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று பாட்டியாலா நீதிபதி ஷைனியும் சொன்னார். ஆனால், பயன் இல்லை. எனக்குக் கிடைத்த தகவல்படி, செவ்வாய்க்கிழமை இரவு ஆகிவிடும் கனிமொழி ரிலீஸ் ஆவதற்கு.
ராஜாத்தி அம்மாள் விமானத்தில் பறந்து கொண் டிருந்த நேரத்தில் கருணாநிதி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். 'கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சிதான்’ என்ற கருணாநிதி, 'ராசாவும் கேட்டுக்கொண்டால், அவருக்கு உதவி செய்யத் தயார்’ என்றார். 'கனிமொழிக்கு புதுப் பதவி கொடுப்பீர்களா?’ என்று ஒரு நிருபர் கேட்டார்...''
''அது கடந்த இதழில் நீர் தந்த தகவலில் உள்ள விஷயமாச்சே?''
''கனிமொழிக்கு ஆதரவான ஆட்கள் சொல்லும் ராஜாத்தி அம்மாளின் நம்பிக்கையைத்தான் சொன் னேன். ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், 'டெல்லியில்தான் தங்க வேண்டும்’ என்பதுமாதிரியான நிபந்தனைகள் விதிக்காதது இவர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. 'கனிமொழிக்கு மரியாதை ஏற்படுத்தும் பதவி வேண்டும்’, 'தமிழகம் முழுவதும் அவரை வைத்து பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்’ என்று சிலர் இப்போதே கிளம்ப ஆரம்பித்துள்ளார்கள். 'இனியும் ராஜாத்தி அம்மாள் சும்மா இருக்க மாட்டார்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். 'என் மகளுக்கு உரிய அங்கீகாரத்தை வாங்கித் தராமல் விட மாட்டேன்’ என்று அவர் சபதம் போட்டா ராம்!''
''தி.மு.க-வில் இனி நிறையத் திடுக்கிடும் திருப்பங் களைப் பார்க்கலாம் என்று சொல்லும்!'' என்ற கழுகார்...
''அடுத்து ஜெயலலலிதா மேட்டருக்கு வருகிறேன்!'' என்றார்.
''ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் அதிகாரப் பூர்வமாக மூன்று நான்கு வாரங்கள் தங்கப்போகிறார். ஜெயலலிதாவுக்கு தேர்தலுக்கு முன்பே முதுகு வலி இருந்ததாம். அந்தச் சமயங்களில் கொடநாட்டில் தங்கியிருந்தவர் ஆயுர்வேதச் சிகிச்சை மேற்கொண்டு அதைச் சரிசெய்திருக்கிறார். கூடவே இதமான வெயிலும் பனியும் கலந்த நேரங்களில் சுத்தமான காற்றை சுவாசித்தபடி பங்களா வளாகத்துக்குள் நடைப்பயிற்சி செய்வார். பாதுகாப்புப் படையினர் புடைசூழ தனது எஸ்டேட்டுக்குள் பேட்டரி கார், ஜீப்பில் வலம் வந்து இதமான சூழலை அனுபவிப்பார். ஆனால் தேர்தலோடு நிலைமையே தலைகீழாக ஆகிவிட்டது. சட்டமன்றத் தேர்தலுக்காக ஓய்வில்லாத சுற்றுப்பயணம், வெற்றி பெற்றதும் முதல்வருக்கான பணிகள், பிரச்னைகள், உள்ளாட்சித் தேர்தலுக்கான சுற்றுப்பயணம் போன்றவை முதல்வருக்கு உடல் களைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அதிலும் சமீபத்தில் பெங்களூருவில் விசாரணைக்காக ஆஜரான நாட்களில் மணிக்கணக்காக அமர்ந்து, மன அழுத்தத்தோடு பதில் சொல்லியதும் அவருக்குச் சற்றே விலகியிருந்த முதுகு வலியை மீண்டும் உருவாக்கிவிட்டது. அதனால் ஆயுர்வேதச் சிகிச்சையும், ஆத்மார்த்தமான நடைப் பயிற்சியும் கொடநாடு பங்களாவில் நிச்சயம் என்கிறார்கள்.''
''உடனடியாகக் கிளம்பும் அளவுக்கு என்ன அவசரம்?''
''ஏ.ஸி. இல்லாமல் ஜெயலலிதாவால் ரொம்ப நேரம்  இருக்க முடியாது. கொடநாடு இயற்கைச் சூழல், ஏ.ஸி. பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளவும் உதவுமே.''
''ஓஹோ!''
''கொடநாடு பங்களாவில் இருந்து முதலமைச்சருக் கான பணிகளை அவர் கவனிப்பார் என்று அரசு அறிவிப்பே வந்திருந்தாலும், கூடவே கட்சி மற்றும் சொந்தப் பணிகளும் நடைபெறும் என்கிறார்கள். குறிப்பாக பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு, ஜெயலலிதா தரப்பில் இருந்து சாட்சிகள் ஆஜராகும் நிலையை எட்டி இருக்கிறது. இதற்காக கட்சி நிர்வாகிகளில் இருந்து புதிய சாட்சிகளை ஆஜர் படுத்தும் வேலைகள்   நடக்கிறதாம். ஜெயலலிதா சொத்து குவித்ததாகக் குற்றம் சாட்டப்படும் கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் பட்டியலை ஆராய்கிறார்கள்.. இதில் காலமானவர்கள், கட்சி மாறியவர்கள், மதில் மேல் பூனை பேர்வழிகளைத் தவிர்த்து இன்றைக்கும் தீவிரமான விசுவாசிகளான சிலர்தான் சாட்சிகளாம்.  இந்த சாட்சிகள் கோர்ட்டில் சொல்லப்போகும் தகவல்கள் குறித்து கவனிக்கப்படுகிறது.  இந்த சாட்சிகள் வழக்கின் போக்கை மாற்றக்கூடுமாம். அந்தக் காலத்தில் பரிசளித்தவர்களையும் ஒன்று சேர்த்து சாட்சியங்களாகப் பதிவு செய்யத் திட்டமிடுகிறார்களாம்.''
''இப்படிப் பார்த்தால், ஜெ. தங்கும் நாட்கள் அதிகமாகலாம் என்று சொல்லும்.''
''அதிகாரிகள் அனைவரையும் கூட்டிவைத்து ஆலோசிக்கும் அளவுக்கான பெரிய கான்ஃபெரன்ஸிங் ஹாலில் துவங்கி பல வித வசதிகள் இப்போது அங்கு உருவாக்கப்பட்டு விட்டது. முதல்வர் இருப்பதால் கொடநாடு ஏரியாவில் செக்யூரிட்டி எந்த அளவுக்கு இருக்கும் என்பது புரியும். பரபர போக்குவரத்துக்காக சாலை விரிவாக்கம், முதல்வர் வந்து இறங்கும் ஹெலிபேடு புனரமைப்பில் ஆரம்பித்து பல்வேறு பணிகள் அசுரகதியில் நடக்கின்றன..''
''இனி அமைச்சர்கள் மாற்றம் கூட அங்கிருந்து தானா?''
''நிம்மதியாக இருப்பவர்கள் வயிற்றில் ஏன் புளியைக் கரைக்கிறீர்?'' என்ற கேள்வியுடன் பறந்தார் கழுகார்!
படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
 
முதல்வர் உத்தரவுக்கே முற்றுப்புள்ளி?
னியார் நிலங்களை மிரட்டி அபகரித்தவர்களின் மீது கடும் நடவடிக்கையை முதல்வர் எடுத்தபடி இருக்க... ராஜபாளையம் நகரத்தின் முக்கிய பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான ஒன்றரைஏக்கர் நிலத்தை சில பெரும் முதலைகளுக்குத் தாரை வார்க்கும் வேலைகள் நடப்பதாக பதற ஆரம்பித்திருக்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள். ''ராஜபாளையம் புறவழிச் சாலை அமைக்கும்போது, எத்தனையோ ஏழை பாழைகள் எல்லாம் தங்கள் நிலங்களை விட்டுத் தர முன்வந்தார்கள். ஆனால், 10 சென்ட் நிலத்தைக்கூட விட்டுத்தர மனமில்லாமல் பொத்திப் பாதுகாத்துக் கொண்டவர்கள்தான், இன்று நகராட்சி நிலத்துக்குக் குறி வைக்கிறார்கள். ராஜபாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான கோபால்சாமி மூலம் இதற்காக அவர்கள் வெயிட்டாக மூவ் நடத்துவதாக ஏரியாவுக்குள் ஒரு தகவல் பரவி இருக்கிறது.
''தேர்தல் முடிஞ்சு ஒருசில மாதத்துக்குள்ளேயே அந்தக் கோடியிலிருந்து இந்தக் கோடிக்கு இவ்ளோ ஸ்பீடா முன்னேறிட்டாரே..?'' என்று புழுங்கும் விசுவாச அ.தி.மு.க-வினர், இந்த நில விவகாரம் தொடர்பாக போயஸ் தோட்டத்தின் காதில் போட்டார்களாம். அதைத் தொடர்ந்து உளவுப் பிரிவின் விசாரணைக்கு உத்தரவானதாகவும்... அந்த விசாரணைக்கே யாரோ இடையில் புகுந்து முற்றுப்புள்ளிபோட முயல்வதாகவும் பேச்சு பரவிக் கிடக்கிறது. ''எங்க எம்.எல்.ஏ-வுக்கு ராமரும் ஃப்ரெண்டு... ராவணனும் ஃப்ரெண்டு. இப்படியெல்லாம் சொல்லி யாரும் தோட்டத்தின் கோபத்தை அவர் பக்கம் திருப்ப முடியாது'' என்று சிலுத்துக்கொண்டு சொல்கிறார்களாம் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள். ''நகராட்சியின் சேர்மனாக இருக்கும் தனலட்சுமியையும் (இவரும் அ.தி.மு.க.) இந்த விஷயத்தில் சைலன்ட் ஆக்கிவிட்டார்களோ என்று பயமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில்கூட கைவைக்க முடியாத அந்த அரசாங்க நிலத்தை அடைவதற்காக யாரையும் வளைக்கத் தயாராக இருக்கும் ஒரு பெரிய மனிதர், 'படகு கார்' ரேஞ்சுக்கு பரபரப்பாக நடத்தும் உபசரிப்பின் மகிமை அப்படிப்பட்டது'' என்று டென்ஷனாகிறார்கள் ஊருக்குள். 
 'தந்தையும் தம்பியும்’
சென்னை தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் டிசம்பர் 2-ம் தேதி, 'தந்தையும் தம்பியும்’ என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடக்கும் இந்த விழாவில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, புத்தகத்தை வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில், தி.மு.க-வில் சர்ச்சையை ஏற்படுத்திய பரிதி இளம்வழுதி, பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இது, அரசியல் பார்வையாளர்களை உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கிறது.
*********************************************************************************
கழுகார் பதில்கள்

கோதை ஜெயராமன், மீஞ்சூர்
 தி.மு.க. நடத்தும் பொதுக் கூட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்கும் குஷ்பூ, அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்பைக் கைப்பற்றுவாரா?
இன்னும் சில மாதங்களில் உங்களின் கேள்விக்கு விடை கிடைக்கும்!
கால் உடைந்த நிலையில்கூட கலெக்டர் அலுவலகத்துக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தார். கடும் மழையிலும் ஸ்டாலினுடன் போராட்டங்களில் கலந்து கொண்டார். கனிமொழியை வரவேற்று அழைத்து வர டெல்லிக்கு அவரைப் போகச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறார் கருணாநிதி. டெல்லி மீடியாக்களும், தமிழகப் பத்திரிக்கைகளும் தி.மு.க. நிலைப்பாடு பற்றிக் கருத்துக் கேட்டால், குஷ்பூ மட்டும்தான் தயக்கம் இல்லாமல் பதில் சொல்கிறார். எனவே, அவருக்கு தகுதிக் குறை எதுவும் இல்லை என்று இப்போது சிலர் நினைக்கிறார்கள்!
 கே.ஏ.என்.சிவம், பெங்களூரு.43
கலைஞரை நன்றாக ஓய்வெடுக்கச் சொல்லும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தன் கட்சித் தலைவரையும் நன்றாக ஓய்வெடுக்கச் சொல்லலாமே?
அவரிடம் நேரடியாகச் சொல்ல முடியாததைத்தான் கருணாநிதிக்குச் சொல்வதைப் போலச் சொல்கிறாரோ என்னவோ?
 போடி.எஸ்.சையது முகமது, சென்னை.93
1,339 கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டாரே முதல்வர்?
'தயக்கம் இல்லாமல், தெளிவாகப் பதில் அளித்தார் ஜெயலலிதா’ என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா சொல்லி விட்டார். ஆனால், அவை அனைத்தும் சரியான பதில்கள்தானா என்பதை நீதிபதி மல்லிகார்ஜூனய்யாதான் சொல்ல வேண்டும்!
 அ.குணசேகரன், புவனகிரி
சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை என்றால்?
ஆ.ராசாவுக்கு எவ்வளவு என்பதை ஷைனி தான் சொல்ல வேண்டும். ஸ்பெக்ட்ரம் வழக்கின் ஆழ அகலங்களை, அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அதன் அப்பீல் மனுக்களை பரிசீலனை செய்யும் டெல்லி உயர் நீதிமன்றம், இந்த வழக்கை மேற்பார்வை செய்யும் உச்ச நீதிமன்றம்... ஆகிய மூன்றுமே மிக மிகக் கறாராக அணுகி வருகின்றன. ஒன்றின் கவனக்குறைவை இன்னொன்று சரிசெய்கிறது. வழக்கத்துக்கு மாறாக உச்ச நீதிமன்றத்தையே, அதற்குக் கீழ் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி விமர்சித்துள்ளார். எனவே, வழக்கு விசாரணையின் போக்கு சரியாகவே இருப்பதாகத் தோன்றுகிறது இப்போதைக்கு!
 என்.காளிதாஸ், அண்ணாமலை நகர்
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடம் ஒதுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதே?
வரவேற்கத்தக்க அறிவிப்பு இது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் படிப்பைப் பாதியில்விட்ட பிள்ளைகள் அதிகம். எனவே, கருணை அடிப்படையிலான திட்டம் இது. ஆனால் 25 சதவிகித இடங்களைத் தனியார் பள்ளிகள் ஒதுக்கீடு செய்கிறதா என்பதை அரசு அதிகாரிகள் இதய சுத்தியோடு கண்காணிக்க வேண்டும். இதிலும் லஞ்சம் தலைதூக்கி சும்மா ஒப்புக்குச் செயல்பட ஆரம்பித்தால், இந்தத் திட்டத்தின் நோக்கமே சிதைந்துபோகும்!
எஸ்.ஏ.காதர், விழுப்புரம்
இப்போதைக்கு முதல்வர் ஜெயலலிதாவின் பலம் எது? பயம் எது?
பலம் - தமிழகம்! பயம் - கர்நாடகம்!
 ஜி.அர்ஜூனன், திருப்பூர்.7
'ஏழைகள் வீட்டுக்குச் சென்று சாப்பிடாத வரை அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது’ என்கிறாரே ராகுல்?
ஏழைகள் வீட்டுக்குச் சென்று ஒருவேளை சாப்பிடுவதால் மட்டுமே அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது ராகுல்!
தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தனது குருநாதரான கோபால கிருஷ்ண கோகலேவைச் சந்தித்தார். 'நான் தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறேன்’ என்றார். 'அதற்கு முன் இந்தியா முழுக்க பயணம் செய். இந்திய மக்கள் அனைவரையும் மனதால் படி’ என்று கோகலே உத்தரவிட்டார். ஓர் ஆண்டுக்கு மேல் இந்தியாவின் அத்தனை பகுதிகளுக்கும் சென்று பார்த்தார். பேசினார். பழகினார். சாதாரண மோகன்தாஸ், மகாத்மாவாக உருவானது அப்படித்தான். ஒருவேளை சாப்பிடுவதால், ஒருவேளை பப்ளிசிட்டி கிடைக்கலாம். பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது!
 டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.1
இந்தியாவின் எந்த முதல்வர் நிம்மதியாக இருக்கிறார்?
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நினைத்தால்தான் பொறாமையாக இருக்கிறது. தனது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவரை பக்கத்து மாநிலப் போலீஸ் தேடியபோதும், அவரிடம் பதற்றம் இல்லை. தன்னைச் சந்தித்துவிட்டு வெளியே போன ஒருவரைத் தனது வீட்டு வாசலிலேயே ஒரு கும்பல் வெட்டிக் கொன்றபோதும் பதற்றம் இல்லை. இத்தகைய 'நிம்மதி மனோபாவம்’... பாவம் எந்த முதல்வருக்கும் இல்லை!
 பொன்.ராஜ்குமார், ஊத்தங்கால்
டேம் - 999 படம் பார்த்தீர்களா?
இன்னும் இல்லை! தமிழர்களின் உணர்வைப் புண்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அந்தப் படம் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் வருந்தத்தக்க ஒரு விஷயம், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக் என்ற ஆங்கிலேயர் கொச்சைப்படுத்தப்படுவதுதான். ஏதோ ஒரு மேயர், பணம் சம்பாதிப்பதற்காக... பலமற்ற ஓர் அணையைக் கட்டியதாகவும் அது சிதைந்ததால் இரண்டு லட்சம் பேர் இறந்ததாகவும் படத்தில் ஒரு காட்சி வருகிறதாம். தென்னகத்தின் வளத்துக்காக தனது பல்லாண்டு கால வாழ்க்கையைப் பணயம்வைத்துக் கட்டிய அணை அது. பல ஆயிரம் கி.மீட்டருக்கு அப்பால் இருந்த பென்னி குக் என்ற மனிதனுக்கு இருந்த உணர்ச்சி, இந்தியாவுக்குள், அதுவும் தமிழகத்துக்குப் பக்கத்தில் இருப்பவர்களுக்கு இல்லாமல்​போனதுதான் வேதனை!
 மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்
ஜெயலலிதாவின் ஆட்சி செல்லும் வேகத்தின் அளவு என்ன?
இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். மின் கட்டணம் உயர்த்தப்பட்டதும் உம் வீட்டு மீட்டர் பாக்ஸ் காட்டும்!
*********************************************************************************
இலவசம் வேண்டாம்... தண்ணீர் சேகரியுங்கள்!

மிழகம் முழுவதும் நல்ல மழை பொழிந்து ஏரி, குளம், அணைகள் எல்லாமே நிரம்பி வழிகின்றன. உபரி நீர் எப்போதும் போலவே வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. யாருக்கும் பயன்​படாமல் கடலில் சென்று சேரும் தண்​ணீரைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்​கள்.  கோடை காலம் வந்துவிட்டால், இந்தத் தண்ணீருக்காகத்தானே விவசாயிகள் போராட வேண்டி இருக்கிறது. இந்தத் தண்ணீருக்காகத்தானே மக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் மறியல் செய்யவேண்டி இருக்கிறது.
தொழிற்சாலைகள் அமைப்பதற்கு பல்வேறு வகைகளிலும் உதவி புரியும் அரசு, விவசாயிகளுக்காக எந்த ஒரு புதிய திட்​டமும் இயற்றுவது இல்லை. காமராஜர் காலத்துக்குப் பிறகு புதிதாக குளம், குட்டை, ஏரிகள் எதுவுமே வெட்டப்படவில்லை என்பது​தான் உண்மை.
நீர் சேகரிப்புக்காக இருந்த ஏரி, குளம் போன்றவற்றில் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டன. அவற்றை மீட்பது உடனே முடியும் காரியமும் இல்லை. ஆனால், அரசு நிலத்தில் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்க முடியுமே. மன்னர் காலத்தில் மட்டுமே நடந்துவந்த இதுபோன்ற நல்ல காரியத்தை ஜெயலலிதா அரசு நடைமுறைப்படுத்தலாமே? வீணாகும் உபரி நீரை சேகரித்து வைத்தால், எதிர்காலத்தில் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் எந்த ஓர் அண்டை மாநிலத்திடமும் கையேந்த வேண்டிய நிலை வராதே. இலவசங்களை அளிப்பது போன்ற குறுகிய காலத் திட்டங்களை கைவிட்டுவிட்டு, நீர் ஆதாரம் பெருக்கும் நீண்ட காலத் திட்டத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்!
- பாலசுந்தரம், சென்னை.
*********************************************************************************
சசிகலா பேரைச் சொல்லி அடாவடி வசூல்?!

கோயம்பேடு பார்க்கிங் கொள்ளை
'கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வண்டிகளை நிறுத்துவதற்காக வசூல் செய்யப்படும் கட்ட ணத்தில் பகல் கொள்ளை நடக்கிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் (044-42890005) அலறவே, நேரடி விசிட் செய்தோம்.
சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் இரண்டு லட்சம் பயணிகள் வரை வந்து செல்கின்றனர். இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக, இரண்டு அடுக்கு டூ வீலர் பார்க்கிங் செயல் பட்டு வருகிறது. இதுபோக, தற்காலிக பார்க் கிங் வசதியும் உண்டு. சில மாதங்களுக்கு முன்புவரை இங்கு, மூன்று மணி நேரம் கார் நிறுத்த ஐந்து ரூபாயும், டூவீலர் நிறுத்த மூன்று ரூபாயும், சைக்கிள் நிறுத்த இரண்டு ரூபாயும் கட்டணமாக  வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது கன்னாபின்னாவென்று கட்டணத்தை உயர்த்தி இருப்பதுதான் பயணிகளை மிரள வைத்திருக்கிறது.
பயணிகள் சிலரிடம் பேசினோம். ''இப்போது மூன்று மணி நேரம் பைக் நிறுத்த 10 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் நிறுத்த வேண்டுமென்றால் 20 ரூபாயும் வசூல் செய்கிறார்கள்.  மறுநாள், ஐந்து நிமிடம் தாமத மாக வந்து வண்டியை எடுத்தால்கூட, இன்னொரு 20 ரூபாயையும் சேர்த்துப் பிடுங்குகின்றனர். 'மூன்று மணி நேரம் பைக் நிறுத்த ஐந்து ரூபாய் என்றுதானே சி.எம்.டி.ஏ. கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது, நீங்கள் 10 ரூபாய் வசூல் செய்கிறீர்களே?’ என்று பொதுமக்கள் யாராவது கேள்வி கேட்டால், அவர்களுக்கு அந்த இடத்திலேயே சரமாரியாக அடி விழுகிறது. 'இது சின்னம்மா பார்க்கிங். நாங்க சொல்றதுதான் ரேட்’னு மிரட்டுறாங்க.
ரெண்டு மூணு நாள் ஊருக்கு போய்ட்டு வந்தா 100 ரூபாய் தண்டம் அழ வேண்டி இருக்கு. இங்க வேலை பார்க்குற ஊழியர்களின் அராஜகமும் தாங்க முடியலை. வண்டியை பார்க்கிங் செய்த ஒருவரின் டோக்கன் காணாமல் போய்விட்டால், சம்பந்தப்பட்ட நபர் முறையான ஆவணங்களைக் காட்டிவிட்டு தன் வண்டியை எடுத்துச் செல்லலாம் என்பதுதான் நடைமுறை. ஆனால் இப்போது யாராவது டோக்கன் தொலைந்து விட்டது என்று சொன்னால், வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு, 300 ரூபாய் ஃபைன் கொடுத்தால்தான் வண்டியைக் கொடுப்போம் என்று மிரட்டி வாங்குகிறார்கள். கார் பார்கிங்கிலும் இதே கொடுமைதான். மூன்று மணி நேர கார் பார்க்கிங் செய்வதற்கு 50 ரூபாய் வசூல் செய்கின்றனர். அதனால் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி அடிதடிக் காட்சிகள் அரங்கேறுகின்றன. சில நாட்களுக்கு முன் கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய முஸ்லிம் பிரமுகர் ஒருவரை பார்க்கிங் ஆட்கள் நையப் புடைத்து, 16 தையல் போடும் அளவுக்கு தாக்கினார்கள். உடனே ஜமாத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் திரண்டுவந்து முற்றுகை நடத்தி பிரச்னை செய்துவிட்டார்கள். இங்கு நடக்கும் அராஜகங்கள் குறித்து காவல்துறையில் பலமுறை புகார் கொடுத்துவிடோம். ஆனாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை'' என்று ஆவேசப்பட்டனர்.
பயணிகள் சவாரிக்காக காத் திருந்த ஆட்டோ டிரைவர்கள் சிலர், ''இத்தனை வருஷமா ஆட்டோ உள்ள வர்றதுக்கு காசு கிடையாது. ஆனா இப்ப எங்ககிட்டயே பத்து ரூபாய் பிடுங்கிட்டுத்தான் வெளியே அனுப்புறாங்க. அதுக்கு டோக்கனும் கொடுக்கிறதில்லை. இங்கே சம்பளத்துக்கு ஆட்களைப் போட்டு சி.எம்.டி.ஏ-வே கட்டணம் வசூல் செய்வது மாதிரி தெரியும். ஆனா அது உண்மை இல்லை. மன்னார்குடி மகாதேவனுக்கு வேண்டப்பட்ட கெங்கவராஜன் வசம்தான் பார்க்கிங் உரிமை இருக்கிறது. அவரது உறவினரான திலிப் என்பவர் நிர்வகித்து வருகிறார். இதனால்தான் காவல் துறை மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நமக்கு ஏன் வம்பு என்று கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதனால் அ.தி.மு.க-வுக்குத்தான் கெட்ட பெயர். முதல்வர் ஜெயலலிதா உடனடியாக இதில் தலையிட்டு, நியாயமான கட்டணம் வசூல் செய்ய உத்தரவிட  வேண்டும்'' என்று சொன்னார்கள்.
பார்க்கிங் நிர்வாகி திலிப்பை சந்தித்து புகார்கள் குறித்து கேட் டோம். ''கோயம்பேடு பார்க்கிங்கை நடத்துவது சி.எம்.டி.ஏ-தான். நாங்கள் சி.எம்.டிஏ-விடம் சம்பளம் வாங்கும் தற்காலிக ஊழியர்கள் மட்டுமே. டோக்கனில் குறிப்பிடப் பட்டுள்ள கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. சசிகலா, மகாதேவன் பேரைச் சொல்லி நாங்கள் மிரட்டுவதாக கூறுவதில் துளியும் உண்மை கிடையாது. மற்றபடி எதுவாக இருந்தாலும் சி.எம்.டிஏ அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளுங்கள்'' என்றார்.
சி.எம்டி.ஏ. கண்காணிப்புப் பொறியாளர் நாராயணனின் கவனத்துக்கு மொத்த பிரச்னை களையும் கொண்டு சென்றோம்
''அதிகக் கட்டணம் வசூல் செய்யப் படுகிறதா?' என்று ஆச்சர்யத்துடன் கேட்ட வர், உடனே அலுவலர்களை அனுப்பி சோதனை நடத்துகிறேன். நானும் தீவிரமாக கண்காணிக்கிறேன். தவறு நடப்பது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.
பார்க்கலாம்!
தி.கோபிவிஜய்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
*********************************************************************************
''தங்கச்சியா நெனைச்சா, ஆசையை எப்படித் தீர்த்துக்கிறது?''

காக்கிகளிடம் மாட்டிய இருளர் பெண்கள்
ற்பழிப்புப் புகாரில் காக்கிகள் மாட்டுவது புதிதல்ல. ஆனால் இந்த முறை நான்கு இருளர் இனப் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் விவகாரம் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறது.
திருக்கோவிலூர் அருகேயுள்ள தி.மண்டபம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை, 'ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும்’ என்று, கடந்த 22-ம் தேதி மதியம் போலீஸார் அழைத்துப் போனார்கள். மீண்டும் இரவு 8 மணியளவில் காசி வீட்டுக்கு வந்த போலீஸார், காசியின் அப்பா முருகன், அம்மா வள்ளி, மனைவி லட்சுமி, சகோதரிகள் ராதிகா, வைகேஸ்வரி, தம்பி வெள்ளிக்கண்ணு, தம்பி மனைவி கார்த்திகா ஆகிய ஏழு பேரையும் வம்படியாக ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். விசாரணை முடிந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், சங்கராபுரம் ரோட்டில் உள்ள தைலம் தோப்புக்குள் வண்டியை விட்டிருக்கிறார்கள். அங்கு வள்ளி மற்றும் ஆண்களைத் தவிர்த்து மற்ற நான்கு பெண்களையும் கீழே இறங்கச் சொல்லி தோப்புக்குள் இழுத்துப் போய், நான்கு காவலர்களும் பலாத்காரம் செய்ததாக செய்தி பரவி உள்ளது. இதில் லட்சுமி 3 மாத கர்ப்பிணி. இந்த விவகாரம்தான் தமிழகத்தைச் சூடாக்கி இருக்கிறது.
நான்கு பெண்களையும்  புகார் கொடுக்க அழைத்து வந்த பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கச் செயலாளர் பூபதியிடம் பேசினோம். ''தோப்புல இறக்கி விட்டு, தவறான நோக்கத்துல நெருங்கின போலீஸிடம், 'நாங்க உங்க தங்கச்சி மாதிரி. எங்கள விட்டுடுங்க’ன்னு எவ்வளவோ கெஞ்சி இருக்காங்க. அதுக்கு போலீஸ்காரங்க, 'உங்கள தங்கச்சியா நெனைச்சா எங்க ஆசையை எப்படித் தீர்த்துக்கிறது. வந்து படுங்கடி’னு மோசமா பேசி இருக்காங்க. அரை மணி நேரம் மிருகம் மாதிரி நடந்து... அவங்கள நாசமாக்கிட்டுத்தான் ஓய்ஞ்சிருக்காங்க. ராத்திரி முழுக்க அவங்களை அங்கேயே வைச்சிருந்து மறுநாள் விடியகாலம் அஞ்சு மணிக்குத்தான் வீட்டுல விட்டுருக்காங்க. மறுநாள் நான்கு பெண்களும் இல்லாதப்ப போலீஸ்காரங்க வந்து, வீட்டில இருந்த பொருட்களை எல்லாம் உடைச்சிருக்காங்க. 10 பவுன் நகையையும், 2,000 பணத்தையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க. வீட்டுக்குத் திரும்பி வந்தவங்க, போலீஸுக்கு பயந்துக்கிட்டு, உளுந்தூர்பேட்டையில இருக்கிற லட்சுமியோட அப்பா வீட்டுக்குப் போயிட்டாங்க. அதுக்குப் பிறகுதான் என்னைப் பார்த்தாங்க'' என்றார்.
அடுத்துப் பேசிய பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் விழுப்புரம்வட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ''நாங்க புகார் கொடுத்ததும், அந்த நான்கு பெண்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பச் சொன்னோம். ஆனா, அவங்க அதைச் செய்யாம, அந்தப் பெண்களை ராத்திரி முழுக்க ஒரு தனி அறையில வைச்சு மிரட்டியிருக்காங்க. அதனால, 'எங்க உறவினர்களை வெளியே விடணும்னுதான் நாங்க அப்படி பொய் சொன்னோம்’னு சொல்லிட்டாங்க. அப்புறம் எங்க சங்க செயலாளர் பூபதி அந்தப் பெண்களிடம் தனியா பேசின துக்கு அப்புறமாதான், போலீஸ்காரங்க மிரட்டினது எங்களுக்குத் தெரிய வந்தது. இந்த வழக்கு சம்பந்தமா சி.பி.ஐ. விசாரணை வேணும்னு போராட இருக்கிறோம்'' என்றார்.
இருளர் சங்கத்தின் திண்டிவனம் வட்ட ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் பிரபா கல்விமணியிடம் பேசினோம். ''போலீஸ்காரங்களுக்கு ஒரு கேஸும் இல்லைன்னா, இருளரில் ஒருத்தரை பிடிச்சுட்டுப் போய், 'பொய் கேஸ்’ போடுறது வழக்கம். 1996-ம் ஆண்டு 'அத்தியூர் விஜயா’ பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு, அந்த நிலைமை கொஞ்சம் குறைஞ்சது. ஆனா, இப்போ திரும்பவும் இருளர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிடுச்சு. அந்த நான்கு பெண்களில் ஒருவருக்கு 17 வயசுதான். அந்த பெண்ணிடம் மட்டும் மூணு போலீஸ்காரங்க மிருகத்தனமாக நடந்திருக்காங்க. அனைத்துக் கட்சியினரையும் அழைச்சு ஒரு கூட்டம் போட்டோம். அதில், டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் போட்டு இருக்கிறோம். அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.
விழுப்புரம் எஸ்.பி. பாஸ்கரனிடம் பேசினோம். ''லட்சுமியோட கணவன் ஒரு பெரிய திருடன். ஒரு டாக்டர் வீட்டுலேயும் கலெக்டர் ஆபீஸ்ல வேலை செய்கிற ஒருத்தரோட வீட்டுலேயும் நகை திருடி இருக்கார். அதோட மதிப்பு ஐந்தரை லட்ச ரூபாய். அதோட, ஒரு கோயில் உண்டியலிலும் பத்தாயிரம் ரூபாய் திருடி இருக்கிறான். அதனாலதான் அவரை கைது செஞ்சாங்க. புகார் சொன்ன பெண்களிடம் நான் பேசினப்ப... 'கணவரை மீட்கத்தான் பொய் சொன்னோம்’, 'எங்களை போலீஸ்காரங்க பாலியல் பலாத்காரம் செஞ்சாங்க’ என்று மாத்தி மாத்திப் பேசுறாங்க. இப்போ திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் விசாரணை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. மத்தபடி நாங்க யாருமே அந்தப் பெண்களை மிரட்டவில்லை'' என்றார்.
போராட்டம் தீவிரம் அடைந்தபிறகே, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெண் தலைமையில் நடக்கும் ஆட்சியிலும், தமிழகப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே!
- அற்புதராஜ்
படங்கள்: ஜெ. முருகன்
*********************************************************************************
'குடி' மகன்களுக்காக ஒரு திடீர் பாலம்!

புதுவை அதிர்ச்சி
'ஆற்றைக் கடந்து செல்வதற்குப் பாலம் வேண்டும்’ என்று  எத்தனையோ கிராம மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், புதுவைக்கான தமிழக எல்லையில், 'குடி’மகன்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே ஒரு பாலம் அமைத்து கிர்ர்ரடிக்க வைத்திருக்கிறார்கள்!
புதுச்சேரி எல்லைப் பகுதியான ஆராச்சிக் குப்பத்தில் ஒரு சாராயக் கடையை ஏலம் எடுத்து, நடத்தி வருகிறார் புதுவையைச் சேர்ந்த சேதுராமன். இவர், புதுச்சேரி மாநில ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். இந்தக் கடைக்கு சாராயம் குடிக்க வருபவர்களில் புதுவை மக்களின் எண்ணிக்கை குறைவு. தமிழகப் பகுதியான கடலூர் மாவட்ட கிராமங்களான வெளிச்செம்மண்டலம், கோண்டூர், சாவடி உள்ளிட்ட கிராமத்தினர்தான் அதிகம். காரணம், அங்கு சரக்கு விலை குறைவாக இருப்பதுதான் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை. தமிழகக் குடிமகன்கள் வருகையால், அவரது சாராயக் கடைக்கு செம வருமானம். இதனால், சேதுராமன் காட்டில் பண மழை!
கடலூர் மாவட்டக் கிராமங்களில் இருந்து சாராயக் கடை இருக்கும் ஆராச்சிக் குப்பத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் குறுக்கே இருக்கும் தென்பெண்ணை ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இத்தனை நாட்களாக ஆறு வறண்டு கிடந்ததால், எந்தத் தடையுமின்றி, ஆற்றைக் கடந்து சென்று, தங்களது 'கடமை’யைச் செவ்வனே ஆற்றி வந்தனர் குடிமகன்கள். சமீபத்தில் பெய்த கன மழையால் அதற்கும் வந்தது சோதனை. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட... குடிமகன்கள் ஆற்றைக் கடந்து சென்று  சரக்கடிக்க முடியாமல் தடுமாற... சரக்கு விற்பனையில் தள்ளாட்டம்.
இத்தனை நாட்களாக கல்லா கட்டியவர்கள் மனசு தாங்குமா? உடனே, குடிமகன்களின் நலன்(?) கருதி சில லட்சங்கள் செலவு செய்து ஆற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டர் நீளத் துக்கு மரப்பாலம் அமைத்து விட்டனர். அப்புறமென்ன... குடிமகன்களுக்குக் கொண் டாட்டம்தான். இப்போது எந்தத் தடையுமின்றி ஆராச்சிக்குப்பத்துக்குச் சென்று சரக்கடித்து விட்டு வருகிறார்கள்.
அதுசரி, இதற்கு முன்பும் ஆற்றில் வெள்ளம் வந்திருக்குமே... அப்போது என்ன செய்தார்களாம்? ரொம்ப சிம்பிள். ஒரு பரிசல் தயார் செய்து வைத்திருந்தார்களாம். ஆனால் வாடிக்கை யாளர்கள் ஆற்றுத் தண்ணீரில் வரும்போது, ஏகத்துக்கும் தள்ளாடி நிறைய வில்லங்கத்தை ஏற்படுத்தினார்களாம். ஆற்றில் விழுந்து ஒரு சில குடிமகன்கள் தங்களது உயிரைத் தியாகம்(!) செய்யும் சம்பவங்களும் நடைபெற்றதாம். கோடை காலத்தில் ஆற்றைக் கடக்கும் குடிமகன்களுக்கு, ஆற்று மணல் சுடுவதால், செம்மண்ணை  ஆற்றின் குறுக்கே கொட்டி பாதை அமைத்து இருந்தார்களாம். 
சிலர் முன்வந்து இப்போது அமைத்திருக்கும் இந்த பாலம் இப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுகுறித்துப் பேசும் கடலூர் மாவட்ட ரீடர்ஸ் நலச் சங்க அமைப்பாளர் பால்கி, ''காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை. புதுவையிலும் விடுமுறைதான். ஆனால், ஆராச்சிக் குப்பத்தில் மட்டும் விதிமுறையை மீறி கடையைத் திறந்து வைத்திருப்பார்கள். அன்று ஒரு நாள் மட்டும் லட்சக்கணக்கில் கல்லா கட்டுவார்கள். ஒரிஜினல் சரக்கு என்று டூப்ளிகேட்டைக் கொடுத்து ஏமாற்றி விடுவார்கள்.
வாடிக்கையாளர்களுக்காக தனியார் ஒருவர் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்ததும் பல்வேறு எதிர்ப்புக்குரல் எழுந்தன. அதனால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், 'நவம்பர் 24-ம் தேதிக்குள் மரப்பாலத்தை அகற்ற வேண்டும்’ என்று சாராயக் கடை முதலாளி சேதுராமனுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். அந்த நோட்டீஸை அவர் கொஞ்சமும் மதிக்கவில்லை. காலக்கெடு முடிந்த பின்னரும் பாலத்தை அப்படியேதான் வைத்திருந்தனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீண்டும் வந்து, அந்தப் பாதையில்  முட்செடிளை போட்டும், பள்ளம் தோண்டியும் தடை ஏற்படுத்தி விட்டுப் போய் இருக்கிறார்கள். ஆனால், இப்போதும் அந்த மரப்பாலத்தில் சென்று குடிமகன்கள் சென்று வருகின்றனர். சாராயக் கடை முதலாளி சேதுராமனும் கல்லாவை நிரப்பிக் கொண்டுதான் இருக்கிறார். அவசரத்துக்காகப் போடப்பட்ட பாலம் காரணமாக பல ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போராட்டத்தில் இறங்கப் போகிறோம்'' என்றார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க சேதுராமனிடம் செல்போனில் பேசினோம். ''அந்தப் பாலத்தை நான் கட்டவில்லை. அதுக்காக பொதுப்பணித் துறையில் இருந்து எனக்கு நோட்டீஸும் வரவில்லை. எனக்கும் அந்தப் பாலத்துக்கும் எந்த சந்பந்தமும் இல்லை'' என்று அவசர அவசரமாக பதில் சொல்லிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதவல்லியிடம் பேசினோம். ''அனுமதி வாங்காமல் அந்த இடத்தில் மரப்பாலம் கட்டி இருக்கிறார்கள். இதுதொடர்பாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரச்னைக்கு உரிய அந்த மரப் பாலத்தை உடனடியாக அகற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் கறாராக.
எல்லையில் பாலம் அமைப்பது பல்வேறு சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என்பதால், உடனடித் தீர்வு அவசியம்.
-  க.பூபாலன்
  படங்கள்: ஜெ.முருகன்
*********************************************************************************
மீண்டும் மீண்டும் கைதாகும் கலைவாணன்

பாளை to திருவாரூர்... திருவாரூர் to பாளை..
.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றதுமே வரிசையாக தி.மு.க. பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பொட்டு சுரேஷ், திருவாரூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் என்று வரிசையாக 15 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது. இதில் சிலரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது. அதில் ஒருவர் பூண்டி கலைவாணன். நீதிமன்ற உத்தரவைப் பார்த்து அவர் சந்தோஷம் அடைவதற்கு முன்பே அடுத்த சிக்கல் வந்துவிட்டது.
'சமச்சீர் பாடப் புத்தகங்களை உடனே வழங்க வேண்டும்’ என, தி.மு.க. சார்பில் தமிழகம் முழுக்க  கடந்த ஜூலை 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் முடிந்து  புறப்பட்ட சிலர், தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறினர். மஞ்சக்கொல்லை என்கிற இடத்தில் அந்தப் பேருந்து, லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதில் விஜய் என்ற மாணவன் உயிர் இழந்தார். அன்று இரவு, மன்னார்குடியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுடன் காரில் வந்து கொண்டிருந்த கலைவாணனை வழிமறித்து கைது செய்தது, காவல் துறை. காரணம் இல்லாமல்  கைது செய்யப்படுவதாக ஸ்டாலின் உள்பட தி.மு.க-வினர் சாலை மறியல் நடத்தினர். ஸ்டாலினும் கைது செய்யப்பட்டதாக தமிழகம் முழுக்க தகவல் பரவியது. கடைசியில், 'கலைவாணன் மட்டும்தான் கைது’ எனக் கூறி ஸ்டாலின் உள்ளிட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதுபற்றி 7.8.2011 தேதியிட்ட ஜூ.வி.யில், 'ஸ்டாலின் கைதுக்கு காரணம் திவாகரனா? - சிக்கலில் டெல்டா போலீஸ்’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டோம்.
2004-ம் ஆண்டு கொரடாச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் பதிவான கோபிசம்பத் என்பவரது கொலை வழக்கு, மாணவர் விஜய் மரணத்துக்கு கலைவாணனின் தூண்டுதல் காரணம் என்ற வழக்கு மற்றும் திருத்துறைப்பூண்டி ரமேஷ் என்பவர் கொடுத்த, 'கலைவாணன் உள்ளிட்ட பலர் தன்னுடைய கடையை அடித்து உடைத்தனர்’ போன்ற வழக்குகள் அடிப்படையில், கலைவாணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி திருவாரூர் கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கலைவாணன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கலைவாணனின் மனைவி சிந்தனை, சென்னை உயர் நீதிமன்றத்தில்ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். கடந்த 23-ம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன் மற்றும் சுதந்திரம் ஆகியோர், 'வழக்கின் தன்மைகளைப் பார்க்கும் போதும் கலைவாணனை குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழ் சிறையில் அடைக்கத் தேவை இல்லை. சாதாரண சட்டங்களின் அடிப் படையில் அவர் மீதான வழக்கை விசாரிக்கலாம்' என்று சொல்லி அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தனர்.
இதையடுத்து, கடந்த 24-ம் தேதி காலை பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வந்த கலைவாணனை, கண் கொத்திப் பாம்பாக காத்திருந்த திருவாரூர் போலீஸ் மீண்டும் கைது செய்தது. திருவிடைவாசல் அருகே அத்திக் கடையைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவர் கொடுத்திருந்த நில அபகரிப்பு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை யினர் தெரிவித்தனர்.
கொலை மிரட்டல் உட்பட ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அன்று மாலையே திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், 15 நாள் நீதிமன்றக் காவலில் கலைவாணனை வைக்க உத்தரவிட, மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்களில் ஒருவரான கார்த்தி, 'இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டதும், உடனே அவசர அவசரமாக இந்த வழக்கை ஜோடித்து இருக்கிறார்கள். தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைப்பதன் மூலம் கழகத்தை பலவீனப்படுத்திவிட முடியாது. மாணவர் விஜய் மரணமடைந்ததும் ஸ்டாலின் உள்பட அனைவரும் வருத்தம் தெரிவித்தோம். அது ஒரு விபத்து. பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் சம்பந்தமே இல்லாமல் கலைவாணன் பெயர் சேர்க்கப்பட்டது. சட்ட மன்றத் தேர்தலில் திருவாரூர் மாவட்டம் தி.மு.க-வின் கோட்டை என்பதை நிரூபித்ததால் ஜெயலலிதாவின் கோபம் இப்படி வெளிப்படுகிறது' என்றார்.
- சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்
*********************************************************************************
குரல் வளையை அறுத்து... மூளையை சிதைத்து!

கேபிள் சேகர் கொடூர கொலை
ளும் கட்சியான அ.தி.மு.க-வின் பகுதிச் செயலாளர் ஒருவர் பட்டப்பகலில், படு பயங்கரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மக்களை பீதியில் உறையச் செய்துள்ளது!
திருச்சி, பொன்மலை பகுதி அ.தி.மு.க. செயலாளரான 'கேபிள்’ சேகர் என்பவர்தான் இப்படி படுகொலை செய்யப்பட்டவர். நவம்பர் 25-ம் தேதி யன்று இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்கள். இடுப்பில் வெட்டி.. கல்லீரல் மற்றும் கிட்னியை சேதப்படுத்தியும், தலையில் வெட்டி... மூளையைச் சிதைத்தும் கொடூரமாக கொன்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, அவரை மடக்கியவுடன் முதலில் குரல் வளையை அறுத்து, சத்தம் போட்டு கத்த முடியாமல் செய்துவிட்டு, அதன் பிறகே உடலை வெட்டிச் சின்னா பின்னமாக்கியுள்ளனர். சேகரின் எதிரிகள் கைதேர்ந்த கூலிப்படையை ஏவி, அவரை போட்டுத்தள்ளியதாக சந்தேகிக்கிறது காவல்துறை.
48 வயதான 'கேபிள்’ சேகர் அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசி. அவரது மனைவி கயல்விழியும் திருச்சி மாநகராட்சியில் 29-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். படிப்படியாக முன்னேறி, கட்சியில் பகுதிச் செயலாளராக உயர்ந்த சேகரின் கடந்த காலம் அவ்வளவு நல்லவிதமாக இல்லை.
''பொன்மலை, அரியமங்கலம் பகுதிகளில் கோலோச்சிய 'பன்றி’ பெரியசாமி என்ற பிரபல தாதாவின் தம்பிதான் இந்த சேகர். ஆரம்ப காலத்தில்... கள்ளச் சாராயம், கட்டப் பஞ்சாயத்து போன்ற விவகாரமானதொழில்களில் பெரியசாமி ஈடுபட்டபோது, அவருக்குப் பக்கபலமாக இருந்தவர் சேகர். அண்ணனுக்காக அடிதடிகளில் இறங்கி, சில கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளிலும் சிக்கியிருந்தார். அண்ணன் மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்கள் அனைத்தையும் சேகர் கைவசப்படுத்திக்கொண்டு, நீச்சல் குளத்துடன் கூடிய மாளிகையைக் கட்டி சுகபோகமாக வாழ ஆரம்பித்தார். இவரின் மூன்று பிள்ளைகளும் கொடைக்கானல் மற்றும் ஊட்டி கான்வென்ட்களில் படித்து வருகின்றனர். ஆனால், இவர் இவ்வளவு சுகபோகத்துடன் வாழக் காரணமாக இருந்த அண்ணன் பெரியசாமியின் குடும்பத்தினர் குடிசை வீடுகளில் இருக்கிறார்கள். அவரது மூன்று மகன்களுக்கும் படிப்பு இல்லை.  நேரிலும், சேகருக்கு வேண்டிய முக்கியப் பிரமுகர்கள் மூலமும், தங்களது தந்தை சேர்த்த சொத்தில் கொஞ்ச மாவது பங்கிட்டுத் தருமாறு பெரியசாமியின் குடும்பத்தினர் சில ஆண்டுகளாகவே கேட்டு வந்துள்ளனர். அவர்களை அலட்சியப்படுத்தியதால், சேகர்மீது கோபத்தில் இருந்தனர்' என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர். அதனால் பெரியசாமி குடும்பத்தினர் மீது சந்தேகக் கண் பதித்து விசாரணையை நகர்த்தி வருகிறது, இந்தக் கொலை பற்றி துப்புத் துலக்க அமைக்கப்பட்ட மூன்று தனிப்படைகளில் ஒன்று.
25-ம் தேதி காலை விஷமிகளால் வெட்டப்பட்டு குற்றுயிராக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சேகரை காப்பாற்றுவதற்காக  ஓடோடி வந்தவர்கள் சேகரின் அண்ணன் மகன் லோகநாதன் மற்றும் தங்கமணி ஆகியோர்தானாம். அதனால், அவர்கள் மீது மட்டும் சந்தேகப் பார்வையை நிலைகுத்தி நிறுத்தாமல், வேறு சில கோணங்களிலும் போலீஸ் விசாரணையை நகர்த்தி வருகிறது.
மாநகராட்சியின் கோட்டத் தலைவர் பதவியை கவுன்சிலராக இருக்கும் தனது மனைவி கைப்பற்ற வேண்டும் என்று சேகர் பகீரதப் பிரயத்தனம் செய்து வந்தாராம். ஆனால், அந்த வாய்ப்பு அவருக்குகைகூடவில்லை. தனது மனைவிக்கு கோட்டத் தலைவர் பதவி வழங்கப்படாததால் கோபமான சேகர், மாநகர அ.தி.மு.க. நிர்வாகிகளை தரக்குறைவாக பேசிவிட்டு வெளியேறினாராம். 'தனது மனைவியைக் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, மாநகராட்சி இடைத்தேர்தலில் தன்னைப் புறக்கணிக்கும் மாநகர நிர்வாகிகளுக்கு பாடம் புகட்டுவேன்’ என தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறி வந்தாராம். ஒரு வேளை சேகர் அப்படிச் செய்தால், 29-வது வார்டில் அ.தி.மு.க-வுக்கு நிச்சயம் நெருக்கடி ஏற்படும். மாநகர நிர்வாகிகள் பலரின் பதவி பறிபோகும். அதனால், சேகரின் கொலையில் அரசியல் பின்னணி இருக்குமா எனவும் போலீஸ் விசாரித்து வருகிறது.
இது தவிர சமீபகாலமாக அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி சர்ச்சைக்குரிய இடங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாகவும், ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள பெரும் புள்ளிகள் சிலருடன் தொழில் ரீதியாகப் போட்டி போட்டு இடங்களை வாங்கி வந்ததால் தொழில் போட்டியில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் எனவும் போலீஸ் சந்தேகிக்கிறது.
பகுதிச் செயலாளர், தொழில் அதிபர் என சேகர் பல அவதாரம் எடுத்த பிறகு, ஆரம்பகாலத்தில் பக்க பலமாக இருந்த பலரையும் கழற்றி விட்டு விட்டாராம் சேகர். அதனால், அதிருப்தியில் இருந்த அவரின் முன்னாள் அடியாட்கள் சிலரும் இந்தக் கொலையின் பின்னணியில் இருக்கலாம் என்றும் போலீஸ் கருதுகிறது.
இதுபற்றி, திருச்சி மாநகர அ.தி.மு.க. செயலாளரான மனோகரனிடம் பேசினோம். 'கழகத்தின் தூணாக சேகர் இருந்தார். அவரது கொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை' என்றார்.
மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் பேசினோம். 'இந்தக் கொலையைப் பற்றி துப்பு துலக்க உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளேன். குற்றவாளிகளை விரைவில் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்' என்றார்.
உறவு, கட்சி, நட்பு, தொழில் என்று நாலாபுறமும் சேகருக்கு எதிரிகள் இருந்திருக்கிறார்கள். உண்மையான கொலையாளிகளை போலீஸ்தான் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்.
அ. சாதிக்பாட்சா
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************
வீரபாண்டியாருக்கு அடுத்த அட்டாக்!

பொங்கி எழுந்த விவசாயிகள்
முதல் இன்னிங்ஸில் சேலம் பிரிமீயர் மில் அபகரிப்பு, அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்குகளில் சிறைக்குப்போய் உடல் நலம் குன்றி விடுதலையான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இப்போது அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்!
'வீரபாண்டியாருக்குச் சொந்தமான வி.எஸ்.ஏ. இன்ஜினீயரிங் கல்லூரிக்காக எங்களது விவசாய நிலங்களை அவர் மிரட்டிப் பறித்துவிட்டார்’ என்று இரண்டு விவசாயிகள் மாவட்ட எஸ்.பி-யான முத்துசாமியிடம் புகார் கொடுத்து இருப்பதையடுத்து,  சேலம் ஏரியாவில் மீண்டும் திகுதிகு.
எஸ்.பி. அலுவலகத்துக்கு தன் தந்தையோடு வந்திருந்த அருணாசலம், ''நாங்க சங்ககிரியை அடுத்த ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவங்க. எங்க அப்பா பேர் முத்து. சேலம் டு கோவை மெயின் ரோட்டில் உத்தமசோழபுரத்தில் என் அப்பாவுக்குப் பாத்தியப்பட்ட வம்சாவழி சொத்து 2.48 ஏக்கர் நிலம் இருக்குது. நாங்க கூட்டுக் குடும்பமாத்தான் இருக்கோம். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் 2006-ல் எங்க அப்பாவை அமைச்சரோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே, 'மெயின் ரோட்டில் இருக்கிற உன் நிலத்தை எனக்குக் கொடுத்துடு. அங்க ஐ.டி. பூங்கா வருது. உன் நிலத்தை அரசு எடுத்துக்கிட்டா, வெறும் 50 ஆயிரம் ரூபாய்தான் தருவாங்க. நான் ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் தரேன்’னு வீரபாண்டியார் சொன்னார். 'ஒரு ஏக்கர் 50 லட்சத்துக்குப் போகுது. அதனால், எங்க பரம்பரைச் சொத்தான நிலத்தை விற்க மாட்டோம்’னு அப்பா சொல்லிட்டார். கோபப்பட்ட அமைச்சர்... என் அப்பாவைத் திட்டி, அனுப்பிட்டார். அதற்குப் பிறகு அமைச்சரின் உதவியாளர் சேகரும், அவரது மாமனார் பெருமாளும் தொடர்ந்து எங்களை மிரட்டினாங்க.
ஒரு மாதத்துக்குப் பிறகு சேகர் எங்களை வலுக்கட்டாயமா காரில் ஏத்திக்கிட்டு, ஐ.டி. பூங்கா பொருளாளர்னு சொல்லப்பட்ட செங்கோட கவுண்டர் வீட்டுக்குப் கூட்டிட்டுப் போனார். அவர், 'அமைச்சர் உங்களுக்கு 6 லட்சம்தான் கொடுக்கச் சொன்னார். நான் 10 லட்சமாத் தரேன்’னு சொல்லி இரண்டு லட்சம் ரூபாயை முன்பணமா கொடுத்துட்டு, 'கையெழுத்தைப் போட்டுட்டு ஓடிப் போயிடு... இல்லைன்னா உயிரோட இருக்க மாட்டீங்க’னு மிரட்டி அனுப்பிட்டார்.
அடுத்து 2007 பிப்ரவரி 8-ம் தேதி சேகர் அடியாட்களுடன் வந்து எங்களை மறுபடியும் காரில் தூக்கிட்டுப் போய் சேலத்தில் உள்ள பிரபலமான பஸ் உரிமையாளரின் ஆபிஸில் விட்டாங்க. அங்கு இருந்த உரிமையாளரும் செங்கோட கவுண்டரும் சேர்ந்து என் அப்பாவின் கையில் 13 லட்சம் பணத்தைக் கொடுத்தாங்க. அதன் பிறகு, எங்களை வீரபாண்டியார் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய், அங்க  ரெடியா இருந்த பத்திரப் பதிவாளர் முன்னிலையில் எங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க.
இதைப்பற்றி அப்போ கொண்டலாம்பட்டி ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் போனப்ப, இன்ஸ்பெக்டர் புகாரை வாங்கி படிச்சு பார்த்துட்டு, 'உங்களைக் கொலை கேஸில் உள்ளே தள்ளிடுவேன். ஒழுங்கா திரும்பிப் பார்க்காம ஓடிப் போயிடுங்க. மறுபடியும் ஸ்டேஷனுக்கு வந்தா நானே சுட்டுத் தள்ளிடுவேன்... யார் மேல் கேஸ் கொடுக்கிற...’னு திட்டி அனுப்பிட்டார். கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு மேல் நாங்க எதுவும் செய்ய முடியாம தவிச்சோம். இப்போ அம்மா ஆட்சி வந்துடுச்சு. அவங்கதான் எங்க நிலத்தை மீட்டுத் தரணும்'' என்றார் கண்ணீரோடு.
இதே மாதிரி சேலம் உத்தமசோழபுரம் சிரஸ்தாரர் காடு பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி, ''என் குடும்பச் சூழ்நிலை காரணமாக பணம் தேவைப்பட்டது. அப்போது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர் 6,000 ரூபாய் கொடுத்துட்டு என் நிலத்தின் மீது பவர் எழுதி வாங்கிட்டார். பிறகு எனக்கு தெரியாமலே சவுந்தரராஜன் என்பவருக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுத்துட்டாங்க. 'வாங்கிய பணத்தை வட்டியோடு தந்துவிடுகிறேன். என் நிலத்தின் பட்டாவைக் கொடுத்துடுங்க’ன்னு கெஞ்சினேன். ஆனா, என்னை மிரட்டி துரத்திட்டாங்க. என் இடம் இப்போ அமைச்சரோட கல்லூரியில்தான் இருக்குது. அதை மீட்டுக்கொடுக்கத்தான் புகார் கொடுத்து இருக்கிறேன்'' என்றார்.
வீரபாண்டி ஆறுமுகத்திடம் புகார் குறித்துப் பேசினொம். ''கல்லூரிக்கு இடத்தை சரியான முறையில்தான் வாங்கி இருக்கிறோம். பணம் பறிப்பதற்காகவும், பப்ளிசிட்டிக்காவும் இதுபோன்று புகார் செய்கிறார்கள். சட்டப்படி இந்த வழக்கை சந்திப்போம்'' என்றார்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ராஜா, ''அ.தி.மு.க. வக்கீல் ஒருவர்தான் தன் ஆட்களைத் தூண்டிவிட்டு இப்படிச் செய்றார். நாங்க அந்த நிலங்களை முறைப்படி வாங்கி இருக்கிறோம். ரூரல் பார்ட்டிக்கு காவல் துறை சப்போர்ட் செய்கிறது. ஆனா கோர்ட், சட்டம், நீதி எல்லாம் இருக்கு. எல்லாத்தையும் நீதிமன்றத்தில் பார்த்துக்கலாம்'' என்றார்.
மாவட்ட எஸ்.பி.முத்துசாமியைத் தொடர்புகொண்ட போது, ''அருணாசலம் என்பவரும், சின்னதம்பி என்பவரும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின் மீது புகார் கொடுத்துள்ளார்கள். விசாரித்துக் கொண்டு இருக்கிறோம். தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.
வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்
*********************************************************************************
தினந்தோறும் நில அதிர்வு!

உயிர் பயத்தில் கோவை மலை மக்கள்
நில அதிர்வுபற்றி செய்தியைப் படித்தாலே நமக்குப் பதறுகிறது. ஆனால், 'கோவையில் குறுந்தமலை அடிவாரத்தில் மருதூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நில அதிர்வுகளுடனே வாழ்கிறார்கள்’ என்று கேள்விப் பட்டுப் அங்கு சென்றோம்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்த மருதூர் ஊராட்சியில் மொத்தம் ஒன்பது கிராமங் கள்! இவை பசுமைக்குப் பேர் போனவை என்பதால், இந்தப் பகுதிக்கு, 'க்ரீன் லேண்ட்’ என்ற பெயரும் உண்டு. கடந்த சில ஆண்டு களுக்கு முன், 'கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகிறோம்’ என்று சிலர் கல்குவாரிகளைத் தொடங்கியதுமே  பிரச்னைகளும் தொடங்கி விட்டன. செழித்து விளங்கிய விவசாயம் அடியோடு சிதைந்துவிட்டது. கரிமலையை முழுமையாகக் குடைந்து எடுத்து, அப்படி ஒரு மலை இருந்த சுவடே தெரியாத அளவுக்கு அழித்துவிட்டனர்.
கல்குவாரியின் அபாயத்தைத் தாமதமாகவே புரிந்துகொண்ட மலைவாழ் மக்கள், அதற்குப் பிறகு தொடர் போராட்டங்கள் நடத்தினார்கள். அதனால், வரிசையாக பல குவாரிகள் இழுத்து மூடப்பட்டன. ஆனால், மக்களின் எதிர்ப்புக் குரலை மீறி, சிலருக்குப் பணம் கொடுத்து சிக்கல் இல்லாமல் நடந்து வருகிறது 'வெங்கடேஸ்வரா ப்ளூ மெட்டல்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான குவாரிகள்.
மலையின் ஒரு பகுதியில் குடையத் தொடங்கிய இவர்களின் பயணம், இன்று பூமியின் ஆழத்தை நோக்கிப் பயணிக்கிறது. பாறைகளைப் பெயர்த்து எடுப்பதற்காக, ஆழத்தில் வெடி வைக்கிறார்கள். அதனால், குவாரியைச் சுற்றி உள்ள அத்தனை கிராமங்களிலும் நிலம் அதிர்கிறது. பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு, இடியும் நிலையில் இருக்கின்றன. இதுகுறித்து, அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும்  நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த ஊராட்சியைச் சேர்ந்த மாணிக்கம், 'கடந்த மூணு வருஷமா நாங்க பயந்து பயந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். வீடுகள் எல்லாம் இடிஞ்சு விழுற நிலையில் இருக்குது. ஊராட்சித் தலைவர்கிட்ட பல முறை சொல்லியாச்சு, மனுவும் கொடுத்தாச்சு. ஆனா அந்த கல்குவாரியோட முதலாளி தயவில்தான் ஊராட்சித் தலைவர் ரங்கராசு ஜெயிச்சார். அதனால, இதைக் கண்டுக்கவே மாட்டேங்கிறார். ஒவ்வொரு முறை வெடி வெடிக்கிறப்பவும் உயிர் போயிட்டு திரும்பி  வர்ற மாதிரி இருக்கும். தினமும் பூமி அதிர்ச்சியைத் தாங்கிக்கிட்டு இருக்கோம். வெடி வெடிக்கிறப்போ பிள்ளைகள் பதறுவதைப் பார்க்க முடியலை. எப்போ இந்தப் பிரச்னைக்குத் தீர்வு வரும்னு தெரியலைங்க...'' என்றார் பரிதாபமாக.
கல்குவாரிக்கு மிகஅருகில் வசிக்கும் பாரதியாரிடம் பேசினோம். 'ஆரம்பத்தில் மலையை மட்டும்தான் குடைஞ்சாங்க. இப்ப குவாரியைச் சுத்தி உள்ள புறம்போக்கு நிலத்தில் எல்லாம் ரோடு போட்டுக்கிட்டு என்னென்னவோ செய்றாங்க. இவங்களுக்கு யார் இதுக்கெல்லாம் அதிகாரம் கொடுத் தாங்கன்னு தெரியலை. ஒவ்வொரு முறை வெடிக்கிற போதும், பாறைகள் தெறிக்கும். இந்தப் பகுதியில் இருக்கிற வீடுகள் மேல பல தடவை விழுந்து சேதாரமாயிருக்கு. உடனே 2000, 3000னு ரூபாயைக் கொடுத்து பாதிக்கப்பட்டவங்க வாயை அடைச்சிடுவாங்க. மக்களும் அப்பாவித் தனமா கொடுக்கிறதை வாங்கிக்கிட்டு, உயிரைப் பத்தி கவலைப்படாம இருக்காங்க. எனக்கும் பல முறை பணம் கொடுக்க வந்தாங்க. நான் வேண்டாம்னு மறுத்துட்டேன்'' என்று ஆதங்கத்தோடு கோபப்பட்டார்.
மக்களின் பிரச்னையை ஊராட்சித் தலைவர் ரங்கராசுவிடம் கேட்டோம். 'வெடிக்கிறப்ப நில அதிர்வு ஏற்படுவது சகஜம்தான். அதனால பெருசா எந்தப் பிரச்னையும் இல்லை. ஊர் மக்கள் இது விஷயமா என்கிட்ட மனு எதுவும் கொடுக்கலை. ஒரு வேளை கொடுத்தால், என்ன பண்ண முடியுமோ அதைக் கண்டிப்பா செய்வேன். என் ஊர் மக்களுக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப்போறேன்'' என்றார்.             
பிரச்னைக்கு உரியதாகச் சொல்லப்படும், 'வெங்கடேஸ்வரா ப்ளூ மெட்டல்ஸ்’ நிறுவன  அதிபர் நந்தகுமாரைத் தொடர்புகொண்டோம். 'இந்த மாதிரி எந்தப் பிரச்னையும் வரக் கூடாதுனு, குவாரியைச் சுத்தி உள்ள 100 ஏக்கர் நிலத்தையும் நானே வாங்கிட்டேன். எங்க குவாரியைப் பத்தி சொல்லப்பட்ட எல்லாமே பொய். எங்க குவாரியைச் சுற்றி சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு, எந்த ஊருமே இல்லை. இந்தக் குவாரியில் எல்லாமே விதிமுறைப்படித்தான் நடக்கிறது'' என்றார்.
ஆனால், அந்தக் குவாரியில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள்ளேயே கிராமம் இருப்பதைப் பார்க்க முடிந்தது. இந்த விவகாரத்தை கலெக்டர் பார்வைக்கு நாம் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என்றே நம்புவோம்.
- ம.முரளிதரன்
************************************************************************
பெண்களை அலறவைக்கும் 'பல்சர்' கொள்ளையர்கள்

கதிகலங்கும் காரைக்குடி!
டந்த இரண்டு மாதங்களாக நடக்கும் தொடர் கொள்ளை மற்றும் செயின் அறுப்பு சம்பவங்களால் மிரண்டு கிடக்கிறது காரைக்குடி. மூன்று பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று 'பல்சர் பைக்’கில் வந்து பட்டப் பகலிலிலேயே பெண்களிடம் செயினை பறித்துக் கொண்டு பறப்பதால் 'பல்சர் பைக்’கைக் கண்டாலே பதறி ஓடுகிறார்கள் பெண்கள்!
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை குறிவைத்து அவ்வப்போது கொள்ளை நடக்கும். அண்மையில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிலும் கைவரிசை காட்டியது ஒரு கும்பல். வழக்கமாக, இது இன்னாரின் கைவரிசை என கண்டுபிடித்து, கொள்ளையரைப் பிடித்து​விடும் காரைக்​குடி போலீஸ். ஆனால், இந்த முறை போலீசுக்கே அல்வாதான். டி.டி.நகர், ஆறுமுகம் நகர், கே.கே.நகர், பாரி நகர் என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் பட்டப்பகலி​லேயே, பூட்டிய வீடுகளை உடைத்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு ஓடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கடந்த வாரம் ஐந்து பேரைக் கைது செய்தது போலீஸ். தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் ரெக்கவரி செக்ஷனில் வேலை பார்த்த இந்தக் கும்பலின் தலைவன், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அந்த நிதி நிறுவனத்தின் மேனேஜர் வீட்டிலேயே நகைகளை கொள்ளை அடித்திருக்கிறான். பிறகு அந்த நிதி நிறுவனத்திலேயே, அதே நகைகளை கொண்டுபோய் அடகு வைத்த வேடிக்கையும் நடந்திருக்கிறது.    இதற்கிடையில்தான், 'பல்சர்’ கும்பலின் அட்டகாசத்தால் வெளியில் தனியாக நடமாட முடியாத அளவுக்கு அரண்டு கிடக்கிறார்கள் மக்கள். இந்தக் கும்பல், டூ-வீலரில் வரும் பெண்களை மோதுவது போல் 'பைக்’கை நேருக்கு நேராய் கொண்டு வருகிறார்கள். பதற்றத்தில் பெண்கள் நிலை​தடுமாறி சரியும் போது, கழுத்​தில் இருக்கும் செயினை அறுத்துக் கொண்டு அதே வேகத்தில் எஸ்கேப் ஆகிறார்கள்.
கடந்த வாரம், தனியாகப் போய்க் கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு பின்னால் 'பைக்’கில் வந்த மூன்று பேர் முதுகில் தட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். யாரோ ஜொள்ளகள் என நினைத்து அந்த மாணவி ஹாஸ்டலுக்குத் சென்று விட்டார். அங்கு போன பிறகுதான், கழுத்தில் இருந்த நான்கு பவுன் செயினை அந்தக் கும்பல் அறுத்துக் கொண்டு போன விஷயமே அவருக்குத் தெரிந்திருக்கிறது. இதேபோல், காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. பள்ளி ஆசிரியரான சித்ரா, பள்ளியிலிருந்து ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 'பல்சர்’ கொள்ளையர் ஸ்கூட்டியை எட்டி உதைத்து சித்ராவை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த நான்கு பவுன் செயினை உருவிக் கொண்டு பறந்திருக்கிறார்கள். இதற்கு அடுத்த நாளே, நியூ டவுனில் காலை 10 மணிக்கு ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்த மீனாட்சி ஆச்சி என்பவரை 'பல்சர்’ கும்பல் பின்னந் தலையில் அடித்து நிலைதடுமாற வைத்து, ஆறு பவுன் செயினை அபேஸ் பண்ணிக் கொண்டு சிட்டாய் பறந்திருக்கிறது.
இது எல்லாவற்றையும் விட இன்னொரு வேதனையான சம்பவமும் நடந்திருக்கிறது. காரைக்குடி நகர தி.மு.க. இளைஞரணி செயலாளரின் அம்மா காளிமுத்து. கடந்த 19-ம் தேதி மாலை வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார் காளிமுத்து. அவரை பின் தொடர்ந்து வந்த 'பல்சர்’ கொள்ளையர், ''ஏம்மா... பட்டப் பகல்ல சங்கிலியை அறுத்துக்கிட்டு போறாங்க. அவனுகள பிடிக்கிறதுக்கு நாங்க என்ன பாடுபட்டுக்கிட்டு இருக்கோம் தெரியுமா? நீ பாட்டுக்கு பகுமானமா போய்க்கிட்டு இருக்கே... கழுத்துல கெடக்குற சங்கிலியை கழட்டி இந்தப் பேப்பர்ல மடிச்சு வெச்சுக்கிட்டுப் போம்மா'' என்று சொல்லி இருக்கிறார்கள். அப்பாவியான காளிமுத்துவும் அவர்கள் சொன்னதை நம்பி செயினை கழற்றி அவர்கள் கொடுத்த பேப்பரில் மடித்திருக்கிறார். பத்திரமாய் மடித்துத் தருவதாக சொல்லி, செயினையும் பேப்பரையும் வாங்கி மடித்தவர்கள், ஒரு பொட்டலத்தையும் கையில் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். வீட்டுக்குப் போய் பொட்டலத்தை பிரித்துப் பார்த்தால், அதில் ஒன்றும் இல்லை. அலறியடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டதும் அன்று இரவே காரைக்குடிக்கு கிளம்பி வந்த சிவகங்கை எஸ்.பி-யான பன்னீர்செல்வம், நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து போனார். இதன் பிறகு, நகரின் முக்கிய பகுதிகளில் செக் போஸ்ட்டுகள் அமைத்து,  'பல்சர்’ கொள்ளையருக்கு வலை விரித்திருக்கிறது போலீஸ். அதையும் தாண்டி கடந்த 24-ம் தேதி இரவு பள்ளத்தூரில் லலிதா பேங்கர்ஸ் என்ற நகைக்கடையை உடைத்து ஒரு கிலோ தங்கத்தையும்  25 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது கொள்ளைக் கும்பல்!
தொடர் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து காரைக்குடி டி.எஸ்.பி-யான மங்களேஸ்வரனிடம் பேசினோம். ''யாரோ வெளியூர் பயலுக 'பல்சர்’ல வந்து கைவரிசை காட்டுறாங்க. இதுவரைக்கும் ஆறு இடங்களில் செயினை அறுத்திருக்காங்க. இப்போ ஜெயிலில் இருந்து வெளியே வந்த சிலர் மீது சந்தேகம் இருக்கிறது. இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து இருக்கிறோம். கூடிய சீக்கிரம் கொள்ளையரைப் பிடிச்சிருவோம்'' என்றார்.
காரைக்குடி மக்களுக்கு நிம்மதியை மீட்டுத் தரவேண்டியது பே£லீஸ் கடமை!
குள.சண்முகசுந்தரம்,  படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்     
*********************************************************************************
மோசடி செய்தாரா காங்கிரஸ் எம்.பி.?

நெல்லை பரபரப்பு
நில மோசடிப் புகார்கள் தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளை அச்சுறுத்திக் கோண்டிருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் மீது பண மோசடிப் புகார் எழுந்துள்ளது.
நெல்லை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யான எஸ்.எஸ்.ராமசுப்புதான் அவர். மோசடிப் புகார் கொடுத்திருக்கும் திருநாவுக்​கரசை சந்தித்துப் பேசினோம். ''நெல்லை எம்.பி-யான ராமசுப்புவுக்கு, ஆலங்குளத்தில் பெட்ரோல் பங்க் இருக்கிறது. அதில் எனது உறவினர் அருணாசலம் மேனேஜராக இருந்தார். சில மாதங்களுக்கு முன் எனக்குச் சொந்தமான ஒரு இடத்தை விற்றேன். அந்த சமயத்தில் என்னை சந்தித்த அருணாசலம், 'எம்.பி-க்கு உடனே 15 லட்சம் பணம் தேவைப்படுது. மாதாமாதம் தவறாமல் வட்டி கொடுத்துவிடுவார். அசலையும் சீக்கிரம் திருப்பித் தருவார். நிலம் விற்ற பணத்தை எம்.பி-க்கு குடுங்க’ என்று கேட்டார்.
நானும் ராமசுப்புவை சந்தித்தேன். அவரும் அவரது மனைவியும் 'சீக்கிரம் திருப்பிக் கொடுத்துடுவோம்’ என்று உறுதி சொன்னதால் 12 லட்சத்து 50 ஆயிரத்தை, கடந்த ஜூன் மாதம் ஆறு செக்குகளாகக் கொடுத்தேன். இன்றுவரை வட்டி, அசல் எதுவுமே வரவில்லை.  எம்.பி. வீட்டுக்கும் நானே சென்று  கேட்டேன். 'எதற்காக அடிக்கடி வீட்டுக்கு வந்து தொல்லை கொடுக்குற? ஒரு எம்.பி. வீட்டுக்கு வந்து கடனை திருப்பிக் கேட்குற அளவுக்குப் பெரிய ஆளாயிட்டியா? உன்னோட பணத்தைத் தர முடியாது. முடிஞ்சதை செஞ்சுக்கோ’ என்றதோடு கொலை மிரட்டலும் விடுத்தார். மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளரிடம் புகார் செய்தேன். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று படபடத்தார்.
இந்த குற்றச்சாட்டு பற்றி ராமசுப்பு எம்.பி-யிடம் கேட்டதற்கு, ''புகார் கொடுத்திருக் கும் திருநாவுக்கரசு என்பவரை நான் பார்த்ததே கிடையாது. அருணாசலம் என்னிடம் 15 வருடங்களாக மேனேஜராக இருந்தவன். நான் எம்.பி. ஆன பிறகு அடிக்கடி டெல்லி சென்று விடுவதால் பெட்ரோல் பங்க் நிர்வாகம் முழுவதையும் அவன்தான் கவனித்தான். நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டுபிடித்ததால், அவனை நீக்கி விட்டேன்.
அந்த ஆத்திரத்தில், அவனது உறவினரான திருநாவுக்​கரசு​வுடன் சேர்ந்து கொண்டு இப்படி ஒரு மோசடித் திட்டத்தை செயல் படுத்துகிறான். உள்ளூரில் எனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலரும் இதற்கு பின்னணியில் இருக் கிறார்கள். என் மீதான புகாரில் துளியும் உண்மை இல்லை'' என்று அழுத்தமாகச் சொன்னார்.
அருணாசலத்தைத் தொடர்பு​கொண்டோம். நேரில் வரச் சொன்னவர், திடுமென மனம் மாறி நம்மிடம் பேசுவதை தவிர்த்து, செல்போனையும் ஆஃப் செய்துவிட்டார்.
இதுபற்றி, நெல்லை எஸ்.பி-யான விஜயேந்திர பிதரியிடம் கேட்டதற்கு, ''திருநாவுக்கரசு கொடுத்திருக்கும் ஆவணங்களை பரிசீலித்து வருகி றோம். தீர விசாரித்த பிறகே உண்மை யைக் கண்டறிய முடியும்'' என்றார்.
ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
*********************************************************************************
யாருடைய நலனுக்காக புதிய நெடுஞ்சாலை?

குமரி கொந்தளிப்பு
நாகர்கோவிலில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு பல்வேறு பணி நிமிர்த்தமாக தினமும் ஆயிரக்கணக் கானோர் சென்று வருகிறார்கள். அந்த தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், அதில் பயணிப்போர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, முழி பிதுங்குகிறார்கள். அந்த பிரச்னையைத் தீர்ப்பதற்காக போடப்பட்ட புதிய நெடுஞ்சாலைத் திட்டம்தான் மக்களை கொதிப்படைய செய்திருக்கிறது.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த களியங்காடு, நட்டாலம், திருவிதாங்கோடு, பள்ளியாடி, வாழ்வச்ச கோஷ்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தத் திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராட்டக் குழுவின் செயலாளர் ஹரிகுமார், ''இப்போ பயன்பாட்டுல இருக்குற தேசிய நெடுஞ் சாலையின் அகலம் 120 அடி. சாலையின் இரண்டு பக்கத்திலேயும் சில அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செஞ்சு, வணிக ஸ்தலங்களையும், கல்வி நிறுவனங்களையும் நடத்திட்டு வர்றாங்க. அதனால அது 40 அடி சாலையா சுருங்கிப் போச்சு. அந்த சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி,  விரிவுபடுத்தாமல் புதிய சாலை அமைகிறாங்க.
 
கன்னியாகுமரியில இருந்து விழிஞ்ஞம் வரை பல கோடி ரூபா செலவு பண்ணி மேற்குக் கடற்கரைச் சாலை போட்டிருக்காங்க. அதேபோல, ஆரல்வாய் மொழியில இருந்து நெடுமங்காடு வரை மலையடிசாலை இருக்குது. அதனை திருவனந்தபுரம் வரைக்கும் விரிவுபடுத்தினாலே அருமையான சாலை கிடைக்கும். இப்ப உருவா குற புதிய பாதையின் பின்னணியிலும் அரசியல்வாதிங்க தலையீடு இருக்குது. நெடுஞ்சாலை வந்துட்டா, அதையட்டிய தங்களின் நிலத்தோட மதிப்பு கூடும்னு கணக்குப்போட்டு, அதிகாரிகளை கைக்குள்ள போட்டுக்கிட்டு, நெடுஞ்சாலைக்கான பாதையை வடிவமைச்சு இருக்காங்க. பொது மக்களின் கருத்துகளைக் கேட்காமலே நிலம் கையகப்படுத்த தொடர்ந்து அறிவிப்பு வந்துட்டு இருக்கு. ஏதோ சிலரின் லாபத்துக்காக  அப்பாவி மக்களோட நிலத்தைக் கேட்பது எந்த விதத்தில் நியாயம்?' என்று கொதித்தார். 
களியங்காடு பகுதியைச் சேர்ந்த சுந்தரமணி, 'இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தால, 1800 வீடுகள் இடிபடப் போகுது. 69 பாசனக் குளங்களும், கிட்டத்தட்ட 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும் அழியப்போகுது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக தென்னை, ரப்பர் வாழை மரங்களும் போகப் போகுது'' என்றார் வேதனையுடன். 
இந்த விவகாரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''எதிர்ப்பாளர்கள் சொல்கின்ற மாற்றுப் பாதைகள் இரண்டும் தேசிய நெடுஞ்சாலை கிடையாது. இதில் யாருக்காகவும் நெடுஞ்சாலைத் துறை கரிசனம் காட்டவில்லை. ஏற்கெனவே இருக்கும் சாலையை விரிவுபடுத்தினால், இதைவிட பல மடங்கு மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் புதிய சாலை போடுவதாக முடிவெடுத்தோம். எதிர்ப்பாளர்கள் சொல்கிற அளவுக்கெல்லாம் வீடுகளுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் பாதிப்பு இல்லை. சில நூறு வீடுகள்தான் இடிபடுகிறது'' என்று விளக்கம் அளித்தார்.
அரசு என்ன சொல்லப் போகிறது?
என்.சுவாமிநாதன், பி.கே.ராஜ்குமார்
படங்கள்: ரா.ராம்குமார்
*********************************************************************************
சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தி, அதை விற்கிறார் சோனியா காந்தி!

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு
'பரிசுத்தமான லட்சியங்களுக்கு விரோத​மாக நமது செயல்கள் உள்ளன. உலகை மாற்ற வேண்டும் என்றால், நிறுவன அதிகார வர்க்கத்தை மாற்ற வேண்டும். சொற்ப மனிதர்கள் உலகின் தலைவிதியை நிர்ணயிக்க அனுமதிக்கக் கூடாது’ - மூன்றாம் உலக நாடுகளுக்கு நிதி உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள், அந்த நாடுகளை எவ்வாறு மீளாத கடனாளியாக... அடிமையாக மாற்றின என்பதைக் குற்ற உணர்வுடன் 'ஒரு பொருளாதார அடிமையின் வாக்குமூலம்’ புத்தகத்தில் பதிவு செய்து இருப்பார் ஜான் பெர்கின்ஸ். மத்திய அரசு எடுக்கும் முடிவுகளைப் பார்த்தால், இந்தியாவும் இப்படிச் சிக்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது!
சில்லறை வணிகத்தில் 51 சதவிகிதம் அன்னிய முதலீட்டை எதிர்த்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அலைகள். முதல்வர்கள் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி மட்டும் இன்றி, கேரளாவை ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் எஃப்.டி.ஐ. சட்டத்துக்கு அகாலிதளம் தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தோம். இவர், நாடாளுமன்றத்தில் எஃப்.டி.ஐ. குறித்த விசாரணை நடத்திய நிலைக் குழுத் தலைவராகவும் இருந்து அறிக்கை கொடுத்தவர்.
''இந்தக் கொள்கையை ஏற்று முதலில் அனுமதி கொடுத்தது பி.ஜே.பி. தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சி​தானே. இப்போது நீங்களே எதிர்ப்பது ஏன்?''
''நாங்கள் ஒற்றை பிராண்டில் 26 சதவிகிதம் கொடுத்தது உண்மை. ஆனால், அது ஒரு பரிட்சார்த்த ரீதியாகவே கொடுக்கப்பட்டது. அதில் கிடைத்த அனுபவத்துக்குப் பிறகு, இதைத் தொடர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தோம். சிங்கிள் பிராண்ட் என்று அனுமதி வாங்கிவிட்டு, பின்னர் மல்டி பிராண்ட் வியாபாரங்களை நடத்தினார்கள். அதனால் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதை அறிந்து, இதில் நேரடி அன்னிய முதலீடு தேவை இல்லை என்று 2009-ம் ஆண்டு வர்த்தகத் துறை சார்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவில் அறிக்கை கொடுத்திருக்கிறோம்.''
''இந்த அனுமதி மூலம் பணவீக்கம் கட்டுக்குள் வந்து மந்த நிலையில் இருக்கும் அன்னிய முதலீடு மேலும் அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறதே?''    
''அது உண்மை அல்ல. நம்முடைய சந்தை நிலைமையும் வேலை வாய்ப்புகளும்தான் பறிபோகும். உணவு உற்பத்தியுடன், உணவு சாராத மற்ற உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நுகர்வோர்கள் துன்பத்துக்கு ஆளாகப்போகிறார்கள். வால்மார்ட், கேர் ஃபோர் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நாடுகளில், சிறு கடைக்காரர்கள், சிறு சிறு உற்பத்தியாளர்கள், மொத்தமாக நுகர்வோர்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண விவசாயிக்கு இன்றைய தினம் அரசு கொடுக்கும் குறைந்தபட்ச விலையே சரியாகப் போய்ச் சேராத நிலையில், இந்த அன்னிய கம்பெனிகள் என்ன கொடுத்துவிடுவார்கள்?''
''உள்ளூர் உற்பத்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பது நல்லதுதானே?''
''அதைக் கண்காணிக்க முடியாது, கட்டாயமும் இல்லை. செருப்பு, தொடங்கி ஆடைகள் வரை எங்கு விலை குறைவாக கிடைக்கிறதோ, அந்த நாடுகளில் இருந்து வாங்கிவந்து இங்கே விற்பார்கள். சில்லறை வணிகம் அனுமதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் இதுதான் நடக்கிறது. இந்த ஆபத்தான சந்தை நமக்கு தேவை இல்லை. இந்த நேரடி அன்னிய முதலீடு நம்முடைய பழக்கவழக்கங்களை மாற்றும். குறிப்பாக குழந்தைகளின் மனோபாவம் மாறும். அவர்களுடைய உணவு, பழக்க வழக்கங்கள், உடை, அணிகலன்களின் எல்லாம் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களால் ஆதிக்கம் பெறும். மோகம் அதிகரிக்கும். இதில் எந்தப் பலனும் இல்லை என்பதுதான் உண்மை.''
ந்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நம்ம ஊர் ஆட்களிடம் பேசினோம்.
வெள்ளையன் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர், 
''மகாத்மா காந்தி ரத்தம் சிந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். சோனியா காந்தி அதை மீண்டும் அன்னியருக்கே விற்கிறார். அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு பல்வேறு நியாயங்களை அடுக்கினாலும், அவர்கள் இங்கே கால் ஊன்றி ஏகபோகம் அடைந்த பிறகு, சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை கிட்டத்தட்ட தங்களின் அடிமைகள் ஆக்கிவிடுவார்கள்.
சிமென்ட், மணல் விலையில் கொள்ளை அடிப்பதுபோல அன்னிய நிறுவனங்கள் சிண்டிகேட் போட்டு பொருட்களின் விலையை உயர்த்தி விடுவார்கள். ஆன்லைன் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முடியாததுபோல் அப்போது விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் திராணி நம் தலைவர்களுக்கு இருக்காது. இதற்கு உதாரணம், கோக், பெப்ஸி போன்ற பானங்கள்தான். அவை வளர்ந்ததும், உள்ளூர்க் குளிர் பானங்கள் அனைத்துமே அழிந்துவிட்டன. நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி புரிய அன்னிய நிறுவனங்கள் ஒன்றும் சேவை அமைப்புகள் அல்ல. அவர்கள் நம் நாட்டுக்கு கொள்ளை அடிக்கத்தான் வருகிறார்கள். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவன் இந்தியனே அல்ல.''
விக்கிரமராஜா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர்,
''இந்தியாவில் நேரடியாக சில்லறை வணிகத்தில் இருப்பவர்கள் ஏழு கோடிப் பேர். இவர்களைச் சார்ந்து இருப்பவர்கள் 21 கோடிப் பேர். ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு சில்லறை வணிகத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆனால், 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. எப்படி? 28 கோடி பேரின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு 40 லட்சம் பேருக்கு அன்னியனிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் வேலை வாய்ப்பா?
மத்திய அரசு சொல்வதுபோல, அமெரிக்கா, சீனா, இந்தோனேஷியாவில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதற்கு காரணமே இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள்தான். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, இந்தியாவுக்கு மட்டும் பெரிதாகப் பாதிப்பு ஏற்படவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று, நம் நாட்டு மக்களின் பணம் நமது தேசிய வங்கிகளில் இருந்தது. இன்னொன்று சில்லறை வணிகத்தில் பல கோடிப் பேர் இருந்ததால் தொழில் நிலைத்தது. எனவே, எக்காரணம்கொண்டும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது.''
தேசிகன் அறங்காவலர், கன்ஸ்யூமர் கவுன்சில் ஆஃப் இந்தியா,
''உலகம் முழுவதும் பல நாடுகள் திவால் ஆகி வருகின்றன. பொருளாதார வீழ்ச்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. மேற்கு நாடுகள் எல்லாம் சுதாரித்துக்கொண்டு தங்களது முடிவை மாற்றிக்கொள்ள முனைகின்றன. ஆனால், மத்திய அரசோ அன்னிய முதலீடு என்கிற முதலையிடம் மக்கள் தலையை நுழைக்கிறது.
கோயில் வாசலில் பூ வாங்கி வைத்துக்கொள்ளும் நிலைமை மாறி, சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் அநியாய விலை கொடுத்துப் பூ வாங்கும் நிலை ஏற்படும். அன்னிய நிறுவனங்கள் நம் நாட்டிலேயே பொருளை  உற்பத்தி செய்தால் மட்டுமே, நம் நாட்டுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், அவை இங்கே இருக்கும் பொருட்களை அடிமட்ட விலைக்கு வாங்கிப் பதுக்கிவைத்து கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்யும். இதனால் நம் நாட்டுக்கு எந்த லாபமும் இல்லை. இது நம்மைப் பகடைக்காய்களாக்கி அன்னிய நிறுவனங்கள் நடத்தும் சூதாட்டத்துக்கே வழி வகுக்கும்.''
சின்னசாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்,
''10 ஏக்கரில் விவசாயம் செய்பவன்கூட சிறு விவசாயிதான். ஏனெனில், உரம், மின்சாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் அவனுக்கு இருக்கிறது. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் 90 சதவிகிதம் சிறு விவசாயிகள்தான். இனி அன்னிய நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்வார்கள்; நல்ல விலை கொடுப்பதாக ஆசை காட்டுவார்கள். அப்படியே நல்ல விலை கொடுக்கவும் செய்வார்கள். இப்படி செய்யும்போது, இதர உள்நாட்டு முதலாளிகள் பராம்பரியத் தொழிலைவிட்டு அழிந்துபோவார்கள். படிப்படியாக மொத்த விவசாயிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த பின்பு, அன்னிய நிறுவனங்கள் திடீர் என்று கொள்முதல் விலையைக் குறைத்துவிடுவார்கள். விவசாயிகளுக்கு வேறு வழி இருக்காது. அதனால், அடிமாட்டு விலைக்குத்தான் பொருளை விற்க வேண்டும்.
அடுத்த தாக்குதல் இன்னும் அபாயகரமானது. தாங்கள் கொடுக்கும் விதையைத்தான் நட வேண்டும்; நாங்கள் சொல்லும் பயிரைத்தான் வளர்க்க வேண்டும் என்று மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் திணிப்பார்கள். மத்திய அரசின் இந்த முடிவு விவசாயிகளை நடுத்தெருவுக்குத்தான் கொண்டுவரும். இதனால் நாட்டுக்குத்தான் கேடு!''
    - சரோஜ் கண்பத், டி.எல்.சஞ்சீவிகுமார்   

காங்கிரஸிலும் எதிர்ப்பு!

எதிர்க் கட்சித் தலைவரான ஜோஷி மட்டுமல்ல ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் இதற்கு எதிர்ப்பு வந்துள்ளது. இந்த எஃப்.டி.ஐ-யை அனுமதி அளிக்கும் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது எதிரொலித்​தது. சோனியா காந்தியின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ராகுல் காந்திக்கு நெருக்கமான ஜெயராம் ரமேஷ், வீரப்ப மொய்லி, முகில் வாஸ்னிக் போன்ற காங்​கிரஸ் அமைச்சர்களும் தி.மு.க. அமைச்சர் மு.க.அழகிரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் தினேஷ் திரிவேதி போன்றவர்களும் தங்கள் கட்சி சார்பில் இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
*********************************************************************************
''அட்டாக் வெளியே வர... அரசே வழி அமைத்துக் கொடுத்தது!

மகிழ்ச்சியில் சொல்லும் 'பாண்டி' வக்கீல்!
ஜூலை மாதம் தி.மு.க. நிர்வாகிகள் குண்டர் சட்டத்தில் கைதான சீஸன் என்றால், இது விடுதலை சீஸன்!
 பொட்டு சுரேஷ், பூண்டி கலைவாணனைத் தொடர்ந்து மதுரை ஜெயராமன், அட்டாக் பாண்டி, வி.கே.குருசாமி, ஒச்சுபாலு, குடமுருட்டி சேகர் ஆகியோர் விடுதலையாகி இருக்கிறார்கள்.( பூண்டி கலைவாணனை மற்றொரு ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்திருப்பது வேறு விஷயம்!)
விடுதலையான குடமுருட்டி சேகர் மீது குண்டாஸைத் தவிர்த்து மற்ற ஐந்து வழக்குகள், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராமன் மீது நான்கு வழக்குகள், கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் வி.கே.குருசாமி மீது ஐந்து வழக்குகள், பகுதிச் செயலாளர் ஒச்சுபாலு மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் எல்லாம் விடுதலையானதுகூட மதுரையில் அதிர்வை ஏற்படுத்தவில்லை.
ஆனால், 'அட்டாக்’ பாண்டி விஷயம் அப்படியா..?
கடந்த தி.மு.க. ஆட்சி யிலேயே என்கவுன்ட்டர் செய்யத் திட்டமிடப்பட்டு தப்பி ஓடியவர். ஊர் அறிந்த அதிரடிப் புள்ளி.  ஏற் கெனவே தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் உள்ளே போனவர். 2009-ம் ஆண்டு ஜெயம் நிதி நிறுவன அதிபர் அசோக் குமாரைக் கடத்திச் சென்று  1.20 கோடி கேட்டு மிரட்டிய வழக்கு, அதே ஆண்டில் நிதி நிறுவனம் தொடர்பாக அனந்தகிருஷ்ணன் என்பவரை மிரட்டிய வழக்கு, 24.2.10 அன்று அருப்புக்கோட்டை வந்த கே.பி.என். டிரா வல்ஸ் பஸ்சில் அட்டாக் பாண்டிக்காக இரண்டு துப்பாக்கிகள், 27 புல்லட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு  வழக்கு போன்ற வலுவான வழக்குகளும் இருந்தன.
ஆனால் 'அட்டாக்’ மீதான குண்டாஸ் வழக்கை உடைத்து எப்படி வெளியே கொண்டு வந்தார் அவரது வழக்கறிஞர் சதீஷ் பாபு?
அவரையே கேட்டோம். 'சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்களைக் கட்டுப்படுத்தவும் 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் குண்டர் தடுப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய அரசு உத்தரவிடும்போது, சம்பந்தப்பட்ட நபர் அந்த முடிவை எதிர்த்து அரசிடம் முறையீடு செய்யலாம். அந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ அரசுக்கு உரிமை உண்டு என்றாலும்கூட, அந்த நடவடிக்கையைக் காலதாமதம் இன்றிச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டுள்ளது. காரணம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21-வது ஷரத்தில் கீழ் கூறப்பட்டுள்ள தனி மனித உரிமை!
28.7.11 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட அட்டாக் பாண்டி, அதனை ரத்து செய்யும்படி 6.8.11 அன்று அரசிடம் அப்பீல் செய்தார். வெறும் மூன்று நாட்களில் பதில் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர், அந்தத் துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கிட்டத்தட்ட 25 நாட்கள் இழுத்தடித்து, கடைசியில் 30.8.11 அன்று அப்பீலை நிராகரித்து இருக்கிறார்கள். இது தனி மனித உரிமையை மீறும் செயல் என்று நாங்கள் வாதிட்டோம். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டது. 'அட்டாக்’ பாண்டி மட்டும் அல்ல, மற்ற நான்கு பேரையும்கூட அதே விஷயத்துக்காகத்தான் நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. ஓர் உண்மையைச் சொல்லவா? அட்டாக் பாண்டி அப்பீல் விஷயத்தில், அரசு மூன்று நாட்களில் முடிவு எடுத்திருந்தால், குண்டர் சட்டத்தில் இருந்து அவரை வெளியே எடுக்கச் சிரமப்பட்டு இருப்போம். நல்லவேளை, அரசே அதை எளிதாக்கிவிட்டது' என்றார் சிரித்தபடியே.
'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, 300-க்கும் அதிகமானோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில், அரிசி கடத்தல், சாராய வியாபாரி, ரௌடிகளின் அப்பீல் மனுக்களை உடனே நிராகரித்திருக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தி.மு.க-வின் அதிகாரமிக்க நபர்களின் அப்பீல் மனுக்களை மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தினார்கள்?' என்பது போலீஸாருக்கே புரியாத புதிராக இருக்கிறது.
'குண்டாஸில் இருந்து விடுவிக்கப் பட்ட பூண்டி கலைவாணன் மீது மற்றொரு வழக்குப் பாய்ந்தது போல, மதுரை புள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறதா?' என்று விசாரித்தோம். 'இங்கே இருக்கிற கமிஷனரும் சரி, எஸ்.பி-யும் சரி. பொய் வழக்கு ஜோடித்து ஒருவரை உள்ளே தள்ள உடன்பட மாட்டார்கள். உண்மையிலேயே ஏதாவது புகார் வந்து, அந்தப் புகாரில் உண்மை இருந்தால் மட்டுமே நடவடிக்கை இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
போலீஸார் கொடுத்த துணிச்சலில்தான் மதுரைப் புள்ளிகள் மீது புகார் கொடுக்கப் பலர் முன்வந்தார் கள். இப்போது, அந்தப் புள்ளிகள் வரிசையாக விடுதலையாகி விட்டதால், புகார் கொடுத்தவர்கள் பயத்தில் இருக்கிறார்கள். இதுபற்றி போலீஸ் எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க்கிடம் கேட்டோம். 'குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது கோர்ட் நடவடிக்கை. அதுபற்றி கருத்துச் சொல்லக் கூடாது. ஆனால், வெளியே வந்தவர்களால் புகார்தாரர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.'' என்றார்.
எல்லா விஷயத்திலும் நீதிமன்றத்துக்குப் போய்த் தோற்கும் தமிழக அரசு, குண்டர் தடுப்புச் சட்ட விஷயத்திலும் குட்டு வாங்கி இருப்பதாகவே கருதுகின்றன எதிர்க் கட்சிகள்!
கே.கே.மகேஷ்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து
 அரசு வழக்கறிஞர்கள் காரணமா?
'அரசு வழக்கறிஞர்களாக இருப்பவர்களில் பலபேருக்கு வாதத் திறமை இல்லாததால், கிரிமினல்கள் எல்லாம் ஈஸியாய் வழக்குகளை உடைத்துக்கொண்டு வெளியில் வந்துவிடுகிறார்கள்’ என்று புலம்புகிறார்கள், மதுரை அ.தி.மு.க. வழக்கறிஞர்கள். இது குறித்துப் பேசுகிறார், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணித் துணைச் செயலாளர் ரவிக்குமார்.
''கட்சியில் தகுதி வாய்ந்த சீனியர் வழக்கறிஞர்கள் பலர் இருந்தும் ஜூனியர்கள் பலரை அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு சிபாரிசு செய்திருக்கிறார்கள். சிலருக்கு கட்சி உறுப்பினர் கார்டுகூட இல்லை. கேட்டால், 'மேலிடத்து பிரஷர்’ என்கிறார்கள். திறமையற்ற அரசு வழக்கறிஞர்களால் வழக்குகள் ஊத்திக்கொள்வதால் அரசுக்கு கெட்ட பெயர். அம்மா அவர்கள் மக்கள் விரோத சக்திகளை அடக்க நினைக்கிறார்கள். ஆனால், பெரிய பெரிய வழக்கில் சிக்கியவர்கள் எல்லாம் சர்வ சாதாரணமாய் வழக்குகளை உடைத்துக்கொண்டு வருவதைப் பார்த்தால், இவற்றில் உள்குத்து இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.
இங்கு உள்ள அரசு வழக்கறிஞர்கள் திறமையானவர்களாக இருந்தால், வாரம் தவறாமல் ஸ்டேட் பி.பி. எதற்காக மதுரைக்கு வருகிறார். வாதத் திறமை இல்லாததால் பல பேர், 'கேஸ் கட்டு இன்னும் கைக்கு வரவில்லை, ஸ்டேட் பி.பி. ஆஜராகிறார்’ என்று காரணங்களைச் சொல்லி வாய்தா வாங்குகிறார்கள். இந்த நியமனங்கள் சரியில்லை என அ.தி.மு.க. வக்கீல்கள் 36 பேர் கையெழுத்திட்ட புகார் மனுவை அம்மாவின் பார்வைக்கும் சட்டத் துறை செயலர், சட்ட அமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பிவைச்சோம். புகார் குறித்து விசாரிப்பதாக, சட்டத் துறை செயலரிடம் இருந்து 10 நாட்களுக்கு முன்பு பதில் வந்தது. ஆனாலும், இது வரை நடவடிக்கை இல்லை'' என்றார்.
தொடர்ந்து பேசிய மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வேல்முருகன், ''கடந்த வாரம், ஒரு பி.பி-யின் நடவடிக்கையைப் பார்த்து, 'உங்களுக்கு பெர்சனல் வேலை ஏதாவது இருந்தால் பார்க்கப் போங்கள்’ என்று வேதனைப்பட்டுச் சொன்னார் ஒரு நீதிபதி. 'அரசு வழக்கறிஞர்கள் தேவையற்ற கால தாமதம் செய்வதால் வழக்குகளை முடிக்க முடியவில்லை’ என நீதிபதிகள் தரப்பில் இருந்து தலைமை நீதிபதியிடமே புகார் செய்யப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்பதற்காக, நாங்கள் இதைச் சொல்லவில்லை. தொடர்ந்து அரசின் வழக்குகள் தோற்று, அதனால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்ற கவலையில் சொல்கிறோம். மதுரையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை மறுபரிசீலனை செய்து, தகுதியான நபர்களை அந்தப் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்'' என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொன்ன மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளரும், மதுரை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான தமிழ்ச்செல்வன், ''வழக்கறிஞர் அணியில் பொறுப்பில் உள்ள நபர்களுக்குத்தான் அரசு வழக்கறிஞர் பதவிகளை அம்மா கொடுத்திருக்காங்க. கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டி இருந்ததால் ஜூனியர்கள் சிலருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்களும் திறமையானவர்களே. அரசுத் தரப்பு வழக்குகளில் பின்னடைவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தப் பின்னடைவிற்கு அவர்கள் மட்டுமே காரணம் இல்லை. எனக்குத் தெரிந்து அரசு வழக்கறிஞர்கள் யார் மீதும் கிரிமினல் வழக்குகள் இல்லை. அப்படியே இருந்தாலும் கட்சிப் போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக தி.மு.க. அரசால் போடப்பட்ட பொய் வழக்குகளாகத்தான் இருக்கும்'' என்கிறார்.
குள.சண்முகசுந்தரம்
************************************************************************
சித்ரவதை செய்யப்பட்டாரா கிஷன்ஜி?

வரவர ராவ் சொன்னதை மறுக்கும் விஜயகுமார்!
மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆணிவேர்களில் ஒன்று வெட்டப்பட்டுவிட்டது. அந்த இயக்கத்தை வழிநடத்தியதாகச் சொல்லப்பட்டு வந்த கிஷன்ஜி, கொல்லப்பட்டு இருக்கிறார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் நுண்​ணறிவுப் பிரிவின் தலைவர் படேல் சுதாகர் ரெட்டி, இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சாருகுரி ராஜ்குமார் என்கிற ஆசாத் ஆகியோர் வரிசையில், கிஷன்ஜியின் மரணத்தையும் அவரது தோழர்கள் வருத்த ரேகை படரச் சொல்கிறார்கள்.
ஆந்திரப் பிரதேசத்தின் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள பெடப்பள்ளி எனும் ஊரில்தான் பிறந்தார் முல்லோஜுலா கோடீஸ்வர ராவ். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட நினைத்து நக்ஸல் இயக்கத்தில் சேர்ந்தார். 1980-களில் 'மக்கள் போர்க் குழு’ ஒன்றை உருவாக்கியதில், இவரின் பங்கு அதிகம். அதன்பிறகு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தோடு தான் துவக்கிய அந்தக் குழுவை இணைத்துக்கொண்டு மாவோயிஸ்ட்டாக மாறினார். அப்போது அவருடைய பெயர் கிஷன்ஜியாக மாறியது!
மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும், அதன் படைகளுக்குத் தலைவராகவும் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர். 2010-ல் சில்டாவில் துணை ராணுவப் படையின் மீது நடத்திய தாக்குதல் இவரது திட்டம்தான். அதே வருடம் லால்கர் கொந்தளிப்புக்கும் இவரே காரணகர்த்தா.
ஜங்கல்மகால் வனத்தில் வசித்துக்கொண்டு பல காலமாக இயக்கத்தை வளர்த்தெடுத்துப் போராடி வந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை அன்று, கூட்டு அதிரடி படை போலீஸாரால் 'என்கவுன்ட் டர்’ பொறி வைக்கப்பட்டது. குறி... கிஷன்ஜி! இது முதன் முறை அல்ல... 1977, 1985 ஆகிய வருடங்களில் இவரை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க முயற்சிகள் நடந்தும் எல்லாப் பொறிகளில் இருந்தும் கிஷன்ஜி தப்பித்தார்.
மேற்கு வங்கத்தின் புரிசூல் கிராமத்தில் போலீஸ் படைகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிஷன்ஜி கொல்லப்பட்டார். அங்கே ஏ.கே.47 ரக துப்பாக்கி கிடந்தது. துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்படுவதற்கு முன்பாக, அருகில் இருக்கும் கோசாய்பந்த் கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்து அவரது மடிக்கணினி, சில கடிதங்கள்,  90,000 மற்றும் தானியங்கி ஆயுதங்​களுக்குத் தேவையான 60 கார்ட்ரிஜ்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
''பக்காவாக பிளான் செய்து இந்த என்கவுன்ட்டர் வெற்றிகரமாக. நிறைவேற்றப்பட்டது'' என்று கூட்டு அதிரடிப்படை மார்தட்டிக்கொள்ளும் அதே வேளையில், ''இது ஒரு போலி மோதல். அவரைக் கைது செய்து, சித்ரவதைக்கு உள்ளாக்கிய பிறகே அவரைக் கொன்றிருக்கிறார்கள்.'' என்று வெடித்திருக்கிறார் கிஷன்ஜியுடன்  நெருங்கிப் பழகிய வரவர ராவ். அவரைத் தொடர்புகொண்டபோது, ''ஆரம்பத்தில் கிஷன்ஜியையும் மற்ற தோழர்களையும் ஆயிரக்கணக்கான அதிரடிப்படை போலீஸார் சுற்றி வளைத்ததாகவும், பிறகு எப்படியோ அவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாயின. அரசு சொல்வதுபோல கிஷன்ஜி, ஜார்க்கண்ட் மாநிலத்துக்குத் தப்பி ஓடியிருந்தால், எப்படி மேற்கு வங்க அரசு அவரைக் கொலை செய்ய முடியும்? எப்படி அதிரடிப் படையினரால் பாஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்தின் ஜார்கரம் காட்டில் அவரைக் கொல்ல முடிந்தது? இந்த போலீஸ் படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் படி, 'திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை’ என்று வழக்குத் தொடர வேண்டும்'' என்கிறார் வரவர ராவ். ''உடம்பில் ஓர் இடம்கூட பாக்கி இல்லாமல் ஏகப்பட்ட காயங்கள். அவை நிச்சயமாக என்கவுன்ட்டரின்போது ஏற்பட்ட வையாக இருக்க முடியாது'' என்றும் இவர் சொல்கிறார். 
கிஷன்ஜியின் உறவுக்காரப் பெண் தீபா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மேற்கு வங்க அரசு அவரது  உடலை அவரின் சொந்த ஊருக்கு அனுப்பியது. எப்போதும் இல்லாமல் கடந்த சில நாட்களாக பெடப்பள்ளியின் குறுகலான பிராமண வீதியில் பரபரப்பும், துக்கமும் சூழ்ந்துள்ளது. அங்குதான் கிஷன்ஜியின் தாயார் 80 வயதான மதுரம்மா இருக்கிறார். மகனின் மரணச் செய்தியைக் கேட்டு சோகத்தில் துவண்டு விட்டார் அவர். கிஷன்ஜிக்கு ஓர் அண்ணனும், ஒரு தம்பியும் இருக்கின்றனர். தம்பி மல்லோஜுலா வேணுகோபால் ராவ், கிஷன்ஜியைப் போலவே மாவோயிஸ்ட். அண்ணன் ஆஞ்சநேயுலு கூட்டுறவு வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர். முதலில் இந்தச் செய்தியை தங்களின் தாய்க்குச் சொல்லாமல் மறைத்தார்களாம். பிறகு பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவராய் தங்களின் வீடு நோக்கி வர, மதுரம்மா என்ன என்று கேட்க, பிறகே உண்மை வெளிவந்திருக்கிறது.
''நீ எங்கேயோ இருந்து பல தாய்மாருங்களோட கண்ணீரைத் துடைச்சுட்டு இருப்பேன்னு நினைச்சேன். 33 வருஷமா உன்னைப் பார்க்கவே முடியலை. நீ இல்லைங்கிற செய்தியைத் தாங்க முடியலப்பா'' என்று தழுதழுத்தார் மதுரம்மா. மேலும், 'இதுபற்றி சரியான நியாயம் வழங்க வேண்டும்’ என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதமும் எழுதி இருக்கிறார்.
ஜின்டால் நிறுவனத்துக்கு பழங்குடியினரின் 5,000 ஏக்கர் நிலங்களைத் தாரை வார்த்திருக்கிற மாநில அரசுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கும் வேளையில், இந்தச் சம்பவம் நடந்திருப்பதுதான் பலத்த சந்தேகங்களைக் கிளப்பி உள்ளது. 
- ந.வினோத்குமார்
 
கிஷன்ஜியின் என்கவுன்ட்டர்  குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவரான விஜய குமாரிடம் கருத்துக் கேட்டோம்.
''சமீபத்தில், போலீஸில் சரண்டரான மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவல்கள் கிஷன்ஜியைப் பிடிக்க மிகவும் பயன்பட்டன.  முன்பெல்லாம் கிஷன்ஜி எங்கே போனாலும், அவருடன் 10பேர் கொண்ட இரண்டு குழுவினர் பாதுகாப்புக் காகச் செல்வார்கள். ஆனால், தற்போதைய போலீஸ் நடவடிக் கையால் அந்தக் குழுவினர் கிஷன்ஜியுடன் போகவில்லை. தனி நபராகத்தான் நடமாடினார். எப்படி சந்தனக் கடத்தல் வீரப்பன், கடைசிக் காலகட்டத்தில் பலரையும் கைவிட்டு, விரல்விட்டு  எண்ணக்கூடிய சில ஆட்களுடன் நடமாடினாரோ, அதேபோல், கிஷன்ஜியும் தனிமைப்படுத்தப்பட்டார்.
மேற்கு வங்காள எஸ்.பி-யான பிரவீன் குமாரின் உளவுப் பிரிவினர், அங்குள்ள கூடுதல் எஸ்.பி. ஒருவர், எங்களது உதவி கமாண்டர்கள் இருவர் மற்றும் அதிரடிப் படை வீரர்கள் இந்த கூட்டு நடவடிக்கையில் பங்குபெற்றனர்.
மாவோயிஸ்ட் இயக்கத்தில் நம்பர் 3 என்று அழைக்கப்படுகிறவர் கிஷன்ஜி. மத்தியக் குழு, பொலிட் ஃபீரோ இரண்டிலும் முக்கியமானவர். சுமார் 34 வருடங்களாக  அவர் வெளியே வரவே இல்லை. அவ்வப்போது பத்திரிகைகளுக்கு மட்டும் பேட்டி கொடுத்தார். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, அவரைப் பேட்டி தர வேண்டாம் என்று இயக்க மேலிடம் சொல்லிவிட்டது. முன்பு செல்போன் வைத்திருந்தார். பிறகு அதையும் தவிர்த்துவிட்டார். கடந்த இரண்டு மாதங்களாகவே, அவர் கடைசியாக தங்கியிருந்த கிராமம் தவிர, சுற்றிலும் உள்ள கிராமங்களில் எங்களது கூட்டு படையினர் தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தினர். எப்படியும் அவர் வெளியே வருவார் என்று எதிர்பார்த்தோம். மேற்கு வங்காளம் - ஜார்கண்ட் மாநிலங் களில் எல்லையோரத்தில் உள்ள கிராமத்தில் இருந்த அவர் இரவில் கிளம்பி சில கி.மீ. தொலைவில் உள்ள ஜார்கண்ட் மாநில எல்லையோரக் கிராமத்துக்குச் சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.  அதற்குள் மாட்டிக்கொண்டுவிட்டார். அவருடன் இருந்த சிலர் எங்கள் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பு மோதலில் அவர்களும் கொல்லப்பட்டனர். இதற்காக, பழிவாங்கும் நோக்குடன் எங்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தக்கூடும். அதை எப்படிச் சமாளிப்பது என்கிற உத்தியும் எங்களுக்குத் தெரியும். என்னுடைய வீரர்களுக்கு நான் சொல்லிவரும் வாசகங்கள்... அரெஸ்ட் பண்ணுங்கள். முடிந்த வரை சரண்டர் பண்ணப் பாருங்கள். இரண்டும் முடியாமல் போனால், சுட்டுக் கொன்றுவிடுங்கள்...'' என்கிறார்.
விஜயகுமாரின் அதிரடி ஆபரேஷன்களுக்கு உடன் தோள் கொடுத்து வருகிறவர் ஐ.ஜி-யான சுக்லா. இவரும் தமிழ்நாடு கேடரைச் சேர்ந்தவர்!
- ஆர்.பி.
*********************************************************************************
செய்தியும் சிந்தனையும் - டயல் செய்தால் இயக்குநர் ரா.பார்த்திபன் பேசுவார்!

*********************************************************************************
பிரளயத்தைக் கிளப்பிய பிரமாணப் பத்திரம்!

ஜூ.வி-யைப் படித்துவிட்டு சீறிய முதல்வர்
மிழக மீனவர்களுக்கு முப்படைப் பாதுகாப்பு வழங்கக் கோரும் பொதுநல வழக்கில், 'எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்திய - இலங்கை ஐ.எம்.பி.எல். எல்லையில் ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு மீன் பிடிக்கத் தடை விதிக்க வேண்டும்’ என்று துணிச்சலாக பதில் மனு தாக்கல் செய்தார் இந்தியக் கடலோரக் காவல் படை ஐ.ஜி-யான மூர்த்தி. இந்த விவகாரம் இப்போது பாராளுமன்றம் வரைக்கும் பற்றி எரிகிறது!
வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில், கடலோரக் காவல் படை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் குறித்து கடந்த 27.11.11 ஜூ.வி. இதழில் 'எல்லை தாண்டும் மீனவர் லைசென்ஸ் ரத்து - மத்திய அரசு 'தைரிய’ அஃபிடவிட்’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். ஜூ.வி-யில் வந்த செய்தியைப் படித்துவிட்டு முதல்வர் தொடங்கி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பதறிவிட்டார்கள். மத்திய கேபினெட் செயலர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலர், கடலோரக் காவல் படைத் துணை இயக்குநர், வெளியுறவுத் துறை செயலர் இவர்​களோடு தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர் மனுதாரர்​களாகச் சேர்த்திருந்தார் ஸ்டாலின். மத்திய அரசின் ஐந்து துறைகளின் சார்பில்தான் கடலோரக் காவல் படை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. நவம்பர் 16-ம் தேதியே இந்தப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும், விஷயம் வெளியில் தெரியாததால் யாருக்கும் இதன் தாக்கம் தெரியவில்லை. தலைமைச் செயலாளரை வழக்கில் சேர்த்திருந்தும் முதல்வருக்கே கூட இந்த விவரங்கள் சரிவர எடுத்துச் சொல்லப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய அவசரக் கடிதத்தில், 'கட​லோரக் காவல் படையின் இந்தக் குதர்க்கமான, மூர்க்கத்தனமான, விபரீதமான நிலைப்பாட்டில் இருந்து நான் முற்றிலும் மாறுபடுகிறேன். எல்லைப் பிரச்னைகள் இல்லாமல் இருநாட்டு மீனவர்களும் பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ஆக்கபூர்வமாக விவாதிக்கையில், கடலோரக் காவல் படை இப்படி ஒரு கண்டனத்துக்கு உரிய நிலைப்பாட்டை எடுத்திருப்பது வியப்பு அளிக்கிறது. இந்த நிலைப்பாட்டைச் செயல்படுத்தினால், இந்திய மீனவர்கள் பிழைப்பை இழந்து வறுமையில் வாட வேண்டிய சூழல் வரும். எனவே, ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுவதற்கு முன்னதாக, கடலோரக் காவல் படை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தாங்கள் உத்தரவிடவேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்.
''பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுப்போம்'' என்று சொன்ன தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, பாராளுமன்றத்திலும் இந்தப் பிரச்னையை கிளப்பப்போவதாகச் சொன்னார். விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், பொன்.ராதாகிருஷ்ணன் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தகிக்க வைத்திருக்கிறது, இந்தப் பிரமாணப் பத்திர விவகாரம்.
'இலங்கை அரசின் ஏஜென்ட் போல செயல்படுகிறது மத்திய அரசு. இதைப் பார்த்தால், இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ மேல். தமிழக மீனவர்களும் இந்தியக் குடிமக்கள் என்ற உணர்வு மத்திய அரசுக்கு இருக்குமானால் பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெறவேண்டும்’ என்று சீறி இருக்கிறார் விஜயகாந்த். 'இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்கத் துப்பில்லாத கடலோரக் காவல் படை இப்படி ஒரு விபரீதமான பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி இருக்கிறது. பிரமாண வாக்குமூலத்தை திரும்பப்பெற ஆணையிடுவதோடு, கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், விதைக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கும் அதன் எதிர்கால விளைவு​களுக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்’  என்கிறது வைகோவின் சூடான அறிக்கை.
பொதுநல வழக்கு போட்டிருக்கும் வழக்கறிஞர் ஸ்டாலினிடம் பேசினோம். ''நீதிபதிகள் அக்டோபர் 14-ம் தேதி, 'இன்னும் 10 நாட்களுக்குள் இந்திய மீனவர்கள்... குறிப்பாக தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும் அதைத் தாண்டிய சர்வதேசக் கடல் பிராந்தியத்திலும் அச்சமின்றி பாதுகாப்புடன் மீன் பிடிப்பதற்கு கடலோரக் காவல் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதை இந்தியக் கப்பற் படை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’ என்று பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதனால்தான், இப்போதும் தாக்குதல் தொடர்கிறது. இந்த லட்சணத்தில்தான் மத்திய அரசு, தமிழக மீனவர்கள் பிரச்னையில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை அஃபிடவிட் மூலம் அம்பலப்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசின் முக்கியமான ஐந்து துறைகளின் அதிகாரிகளை வழக்கில் பார்ட்டியாகச் சேர்த்திருக்கிறோம். எனவே, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னையில் மத்திய அரசைக் கலந்து ஆலோசிக்காமல் இந்த அஃபிடவிட் தாக்கல் செய்திருக்க முடியாது. 'எங்களுக்​குத் தெரியாது’ என்று பிரதமரோ, மற்றவர்களோ சொன்னால், அது ஏமாற்று வேலை. பேரறிவாளன், சாந்தன், முருகன் சம்பந்தப்பட்ட வழக்காக இருந்தால், மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்குமா? பத்திரிகை செய்தியைப் படித்துவிட்டே நமது முதல்வர் உடனடியாக ரியாக்ட் பண்ணுகிறார். ஆனால், இவ்வளவு நடந்தும் மத்திய அரசிடம் இருந்து மழுப்பலாகக்கூட பதில் இல்லையே... அப்படியானால் என்ன அர்த்தம்?
தமிழக அரசியல் கட்சிகளின் இந்த கோபமும் ஆத்திரமும் வெறும் அறிக்கையோடு நின்றுவிடக் கூடாது. டிசம்பர் 8-ம் தேதி இந்த வழக்கின் மறு விசாரணை நடக்கிறது. அப்போது, தங்களையும் மனுதாரர்களாக சேர்த்துக்கொள்ளும்படி அனைத்துக் கட்சிகளும் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக தமிழக முதல்வர், 'மீனவர்களுக்கு நாங்கள் தடை விதிக்க மாட்டோம். எல்லை தாண்டும் மீனவர்களின் லைசென்ஸை ரத்து செய்யவும் மாட்டோம். நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக மீனவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என ஆணித்தரமாக வலியுறுத்தி இடைக்கால மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர், 'கச்சத் தீவை மீட்பேன்’ என்று சொன்னதில் அர்த்தம் இருக்கும்'' என்று தீர்க்கமாகச் சொல்கிறார் ஸ்டாலின்.
முதல்வரின் அடுத்த நடவடிக்கை என்ன?
குள.சண்முகசுந்தரம்,
   படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
*********************************************************************************
''ராமதாஸின் அறக்கட்டளையையும் சேர்க்க வேண்டும்!''

பிரச்னையைக் கிளப்பும் வன்னியர் நல வாரியம்!
சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கொடுத்திருக்கும் ஒரு தீர்ப்பு, டாக்டர் ராமதாஸை நிச்சயம் கதிகலங்கச் செய்​திருக்கும்!
'தமிழகம் முழுவதும் இருக்கும் வன்னியர் சமூகத்துக்குச் சொந்தமான அறக்கட்டளைகளை ஒன்று சேர்த்து வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும்’ என்று வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவரான சி.என்.ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது.
வன்னியர் சங்கத்தின் ஆரம்ப காலப் பொதுச் செயலாளராக இருந்து, பா.ம.க. துவக்கப்பட்ட காலத்தில் அதில் முக்கிய அங்கம் வகித்து, பின்னர் தனி இயக்கம் கண்டவர் சி.என்.ராமமூர்த்தி. அவரிடம் பேசினோம்.
''வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக எங்களது முன்னோர்கள் உயில் மூலமாகஎழுதிவைத்த சொத்துக்கள் கல்வி நிலையங்களாகவும், திருமண மண்டபங்களாகவும், பல்வேறு அறக்கட்டளைகளாகவும் உள்ளன. அதன் பலன்கள் அனைத்தும் உரிய நபர்களுக்குப் போய்ச் சேராமல், சில தனி நபர்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்தச் சொத்துக்களை எல்லாம் ஒருங்கிணைத்து சட்ட ரீதியான பாதுகாப்பான வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களது இயக்கத்தின் முக்கியமான கொள்கை. முஸ்லிம்களுக்காக வக்ஃபு வாரியம் இருப்பது போல, இந்த வாரியம் வன்னியர்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 76 வன்னியர் அறக்கட்டளைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது மருத்துவர் ராமதாஸின் 'வன்னியர் கல்வி அறக்கட்டளை’. உறுப்பினராக 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தியது மட்டும்தான் அந்த அறக்கட்டளையில் மருத்துவர் ராமதாஸின் பங்களிப்பு. உலகமெங்கும் இருக்கும் வன்னியர் இன மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை வாங்கித்தான் இந்த அறக்கட்டளைக்குச் சொத்துக்கள் வாங்கப்பட்டன. அறக்கட்டளைக்குச் சொந்தமாக தற்போது திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக் குப்பத்தில் 'சரஸ்வதி ராமதாஸ்’ என்ற பெயரில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அறக்கட்டளைக்குச் சொந்தமாக 1,500 ஏக்கர் பரப்பளவு நிலம் இருக்கிறது. அறக்கட்டளையில் ராமதாஸ் நிர்வாக அறங்காவலராகவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். 
இவை தவிர சென்னை வேப்பேரியில் இருக்கும் செங்கல்வராய நாயகர் அறக்கட்டளை, நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கந்தசாமி கண்டர் அறக்கட்டளை, மகாபலிபுரத்தில் இருக்கும் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை ஆகிய வன்னியர் அறக்கட்டளைகளுக்கும் கோடிக்​கணக்கில் சொத்துக்கள் இருக்கின்றன. இப்படி வன்னியர் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான மொத்தச் சொத்துக்களையும் கணக்கிட்டால், ஐந்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்.
இவை அனைத்தையும் சேர்த்து வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற எங்களது போராட்டம் ஒரு பக்கம் தொடர்ந்து வந்தது.
கடந்த 2001 மார்ச் மாதத்தில், சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரியானசந்திரசேகரைத் தனி அலுவலராகக்கொண்டு,'வன்னியர் பொதுச் சொத்து நிறுவனம்’ அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ அது செயல்​படாமலேயே முடங்கியது. அடுத்து 2009 மார்ச் மாதத்தில் அப்போதைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தானத்தை ஸ்பெஷல் ஆபீஸராகக்கொண்டு 'வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்’ அமைத்து, அரசு உத்தரவு பிறப்பித்தது. அது தொடர்பான மசோதாவும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதிகாரிகளை நியமித்து, அலுவலகமும் திறந்து நிதி ஒதுக்கிப் பணிகள் ஜரூராக நடந்து வந்த வேளையில், தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தார் ராமதாஸ். 'வாரியம் அமைக்கும் பணிகளைக் கைவிட வேண்டும்’ என்ற எழுதப்படாத ஒப்பந்தத்தின் பேரிலேயே, அந்தக் கூட்டணி அமைந்தது. அதன் பின்னர் வாரியப் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.
அதனையடுத்து, 'வாரியம் அமைக்க வேண்டும்’ என்று 18 முறை கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தோம். அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியில், கடந்த நவம்பர் 18-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனு மூலம், எங்களது கோரிக்கைக்குத் தீர்வு கிடைத்து இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வாரியப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதும், 'வன்னியர்கள் பொதுச் சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு அப்போது எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்தோம்.  'நான் ஆட்சிக்கு வந்ததும், இதை நிச்சயம் நடைமுறைக்குக் கொண்டுவருகிறேன்’ என்று உறுதி அளித்தார். நீதிமன்றத் தீர்ப்பும் வந்திருக்கும் சூழ்நிலையில், அவர் உடனடியாக வாரியத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவார் என்று நம்புகிறோம்'' என்றார்.
பா.ம.க. தரப்பில் இது குறித்துப் பேசியபோது, ''ஆரம்ப காலத்தில் இருந்து பா.ம.க-வை எதிர்ப்பதையே முழு நேரப் பணியாக செய்து வருபவர் சி.என்.ராமமூர்த்தி. அவருக்கு எங்கள் மருத்துவர் ஐயாவின் வன்னியர் கல்வி அறக்கட்டளை பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. அது வன்னிய சமூக மூதாதையர்களின் சொத்துக்களைக்கொண்ட அறக்கட்டளை அல்ல. மருத்துவர் ஐயா தனது சொந்த முயற்சியில் ஆரம்பித்த அறக்கட்டளை. ஐயா மீது பேரபிமானம்கொண்ட வன்னியச் சொந்தங்கள் அதற்கு நிதி கொடுத்து உதவி இருக்கிறார்கள். வன்னிய மக்களின் நலனுக்காகவே அந்த கல்வி அறக்கட்டளை இயங்கி வருகிறது. வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர் யாராவது தன் சொந்த முயற்சியில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி இருந்தால்கூட, அதனைக் கையகப்படுத்தி வாரியத்தில் சேர்க்க வேண்டும் என்று ராமமூர்த்தி சொல்வார் போலிருக்கிறது. வாரியத்தை முடக்குவதற்காகவே ஐயா தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தார் என்று சொல்வதும் அபாண்டமான குற்றச்சாட்டு'' என்கிறார்கள்.
வன்னிய அறக்கட்டளை விவகாரத்தில் கிளைமாக்ஸ் நெருங்குகிறது!
ஆர்.லோகநாதன்
படம்: வி.செந்தில்குமார்
*********************************************************************************
தீர்ப்பில் தள்ளாடும் தகவல் ஆணையம்!

ஆணையத்தின் மீது அடுக்கடுக்காய் வழக்குகள்!
'தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மூன்று தகவல் ஆணையர்கள் நியமனம் செல்லாது’ என்று அதிர்ச்சித் தீர்ப்பு அளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
அரசு அலுவலங்களில் ஒளிவுமறைவு இல்லாத செயல்பாடும், லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்டுக் கிடைக்காமல் போனால், தகவல் ஆணையங்களில் மேல்முறையீடு செய்ய லாம். இதற்காகவே இந்திய அளவில் மத்தியத் தகவல் ஆணையமும் மாநிலத் தகவல் ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன. தகவல் தரவில்லை என்றால் அதிகபட்சமாக  25,000 அபராதம் விதிக்கப்படும். இத்தகைய அதிகாரம் கொண்டது தகவல் ஆணையங்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் தகவல் ஆணையத்துக்கு, ஏ.ராமையா, சி.மனோகரன், ஏ.ஆறுமுக நயினார் ஆகிய மூவர் நியமிக்கப்பட்டனர். சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வந்த அன்றுதான் இதற்கான உத்தரவு வெளியானது. இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இந்த நியமனம் செல்லாது’ என்றது.
''தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நாளில், இந்த நியமனம் நடந்துள்ளது. மாநில முதல்வர், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவர் அடங்கிய குழுதான், மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும். இந்த நியமனத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் கருத்தைக் கேட்காமலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றாமலும் நியமனம் செய்யப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தகவல் அறியும் உரிமை ஆர்வலரான கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ''தகவல் ஆணையங்கள், தேர்தல் கமிஷனைப் போலவே தன்னாட்சி அதிகாரம்கொண்ட ஓர் அமைப்பு. அறிவியல், சட்டம், இதழியல், சமூக சேவை, நிர்வாகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், இங்கே அரசியல் புகுந்து விளை யாடுகிறது. வெளிப்படையான ஊழல் அற்ற அமைப்பு உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் சட்டமே கொண்டுவரப்பட்டது. ஆனால், இதன் ஆணையர்கள் நியமனம்கூட வெளிப்படையாக நடைபெறவில்லை. ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். கருணாநிதியின் செயலாளராக இருந்த டி.ஆர்.ராமசாமி, தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ஸ்ரீபதி போன்றவர்கள் தகவல் ஆணையர்களாக இருக்கிறார்கள். 2008-ல் தகவல் ஆணையர்களாக சாரதா நம்பி ஆரூரான், டி.சீனிவாசன், டி.ஆர்.ராமசாமி மற்றும் பெருமாள்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கான கூட்டம் 11.4.2008-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டம் நடப்பதற்கு 10 நாட்களுக்குள்தான் டி.ஆர்.ராமசாமியும் பெருமாள்சாமியும் விண்ணப்பிக்கிறார்கள். டி.சீனிவாசன், சாரதாநம்பி ஆரூரான் ஆகியோர் முதல் நாள்தான் விண்ணப்பித்தார்கள். அவர்களுக்குப் பதவி தர வேண்டும் என்பதற்காகவே, அவசர அவசரமாக விண்ணப்பங்களை அரசு வாங்கியது. ஒரு வழக்கு தொடர்பாக சீனிவாசன் என்னிடம் பேசியபோது, 'தகவல் ஆணையர் பதவிக்காக நான் விண்ணப்பிக்கவே இல்லை. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்குத்தான் விண்ணப்பித்தேன். அந்த பயோ-டேட்டாவை வைத்து என்னைத் தேர்வு செய்துவிட்டார்கள். பெருமாள்சாமியும், சாரதாநம்பி ஆரூரானும் வேறு பதவிகளுக்குத்தான் விண்ணப்பம் கொடுத்தார்கள்’ என்றும் சொன்னார். இப்படிப்பட்டவர்களை தகவல் ஆணையத்தில் நியமித்தால், அங்கே வரும் மேல்முறையீட்டு மனுக்களை எப்படி விசாரிப்பார்கள். இனிமேலாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அறிந்தவர்களையும், சமூக ஆர்வலர்களையும் நியமிக்க வேண்டும்'' என்றார். 
இந்த வழக்கை, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். 'தகவல் ஆணையர் தேர்வு நடவடிக்கைகள் தொடர்பான கோப்பு ஒரு நாளிலேயே பிரிவு அலுவலர் தொடங்கி முதல்வர் வரை சென்றிருக்கிறது. ஆணையர்கள் தேர்வுக்கான கூட்டம் 1.3.11 அன்று நடந்தது. எதிர்க் கட்சித் தலைவரின் (ஜெயலலிதா) ஆலோசனையைப் பெறவில்லை. கூட்டத்தை வேறு தேதிக்குத் தள்ளிவைக்கும்படி எதிர்க் கட்சித் தலைவர் கருத்துத் தெரிவித்து இருந்தார். ஆனாலும் ஆணையர்கள் நியமனம் செய்து அன்றே அதற்கான ஆணையை வெளியிட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைக் கருத்தில்கொள்ளாமல் அன்றே கவர்னரின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். இந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்யும்போது, ராமையா அரசுப் பதவியில் இருந்தார் என்றும் தேர்வுக் கூட்டம் நடந்த அன்றுதான் அவருக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்றும் மனுதாரர் கூறினார். இப்படி நடந்திருப்பது சட்டப்படி குற்றம். இதனை எல்லாம் பார்க்கும்போது, மூன்று பேர் நியமனத்திலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை எனவே, மூன்று பேரின் நியமன உத்தரவு சட்ட விரோதமாகவும், நடைமுறைக்கு முரணாகவும் உள்ளது’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
''தகவல் அறியும் சட்டத்தில் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உள்ள விதிமுறைகள்தான் இந்த மூன்று பேர் நியமனத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. நியமனத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, மாறிவிட்ட அரசுகளின் நிலைப்பாட்டைப் பார்க்கக் கூடாது'' என்கிறார்கள் இந்த மூன்று பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்.
தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் தகவல்களைப் பெறுவதைவிட... நல்ல ஆணையர்களைப் பெறுவது கஷ்டமாகி விட்டது!
எம்.பரக்கத் அலி
ஸ்ரீபதிக்கு சிக்கல் இல்லை!
தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக கடந்த 2010-ல் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'அவருடைய நியமனம் செல்லும்’ என்றது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், 'ஸ்ரீபதி தேர்வுக்காக நடந்த கூட்டத்திற்கு எதிர்க் கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களைக் கூறி அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே, அவர் இல்லாமல் எடுத்த முடிவை சட்ட விரோதம் என்று குற்றம் சாட்ட முடியாது’ என்றும் சொன்னது.
**********************************************************************************
கடை வாசலில் கடை!

ரங்கநாதன் தெருவில் தொடரும் ரவுசு!
'ஒரு காலத்துல ரங்கநாதன் தெருவுல பிளாட்பாரத்துல கடை வைச்சிருக்கிறவங்களை காலி பண்ணச் சொல்லி, கடை முதலாளிகள் தொல்லை கொடுத்துட்டு இருந்தாங்க. ஆனா இன்னைக்கு சீல் வைக்கப்பட்ட பெரிய கடைக்காரங்களே, பிளாட்பாரத்தில் கடை போட்டு வியாபாரம் பண்ணிட்டு இருக்காங்க. நிலைமையைப் பார்த் தீங்களா..?’ - தி.நகர் ஏரியாவில் குடியிருக்கும் நண்பர் ஒருவர் பெருமூச்சுடன் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
நிலைமையை அறிந்துகொள்ள ரங்கநாதன் தெருவுக்குக் கிளம்பினோம். சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு வெளியே கடைகள் முளைத்திருந்தன. சில துணிக் கடைகள் தங்களது வேறு கிளைகளில் இருந்து துணிகளைக் கொண்டுவந்து மூடப்பட்ட கதவுகளுக்கு வெளியில்வைத்து வியாபாரம் செய்துகொண்டு இருந்தார்கள். சீல் வைக்கப்பட்ட ரத்னா ஸ்டோர்ஸ் வாசலில் ஒரு பெரிய போர்டு... அதில், 'ரத்னா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடை பின்புறம் இயங்குகிறது’ என அம்புக் குறி போட்டு வழி காட்டுகிறது. பின் பக்கம் உள்ள குடோனில் வியாபாரம் ஜோராக நடக்கிறது. சரவணா ஸ்டோர்ஸிலும் இதே ஸ்டைலில்தான் வியாபாரம் நடக்கிறது.
ரங்கநாதன் தெருவில் விதி மீறல்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த 'டிராஃபிக்’ ராமசாமி, ''விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டி இருப்பதால்தான், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சீல் வைச்சு இருக்காங்க. விதிமுறைகளுக்கு உட்பட்டு அதை எப்படிச் சரிபண்ணலாம்னு யாருமே யோசிக்க மாட்டேங்கிறாங்க. குறுக்கு வழியில் எப்படிக் கடையைத் திறக்கலாம் என்பதில்தான் குறியா இருக்காங்க. வியாபாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக பொருட்களை ரோட்டில் போட்டு விற்கும் அளவுக்கு இறங்கி வந்துட்டாங்கன்னா பார்த் துக்கோங்க. பிளாட்ஃபார்ம் என்பது எதுக்காக? மக்கள் நடந்து போவதற்கான நடை பாதை. அங்கே போய்க் கடை போடுறதை என்னன்னு சொல்றது? மாநகராட்சியும், காவல் துறையும் உடனடியாக் களம் இறங்கி, பொதுமக்களுக்கு இடையூறு தரும் நடைபாதைக் கடைகளை எடுக்கணும். கடை வைச்சிருக்கிறவங்களை நான் குறை சொல்ல விரும்பலை. அது அவங்களோட தொழில். ஆனா நீங்க பணம் சம்பாதிக்கிறதுக்காக மக்களை சிரமப்பட வைக்காதீங்க'' என்றார் வருத்தத்தோடு.
ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளரான ரத்னம் நாடாரிடம் பேசினோம். ''நாங்க பிளாட்ஃபார்மில் வியாபாரம் பண்றது கிடையாது. எங்களுக்கு அந்த அவசியமும் இல்லை. எங்ககிட்ட வேலை பார்த்த 200 பேரை சொந்த ஊருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பிட்டோம். அவங்க வேற எங்காவது வேலைக்குப் போயிட்டாங்கன்னா... எங்களால் திரும்பவும் ஆட்களைத் தேடிப்பிடிக்க முடியாது. அதனால் பிரச்னை முடியும் வரை எப்போதும் போல அவங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதா சொல்லிட்டேன். ஊரில் இருந்து திரும்பி வரும்போது, அதுக்கும் பணம் கொடுத்துடுறேன்னு சொல்லித்தான் அனுப்பி வைச்சிருக்கேன். எங்களைப் போல பெரிய நிறுவனங்கள் எல்லாமே இதே போலத்தான் ஆட்களை அனுப்பி இருக்காங்க. சின்னக் கடைக்காரங்க அப்படிச் செய்ய முடியாது. அவங்க நிலைமைதான் ரொம்ப பரிதாபம். 30-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வரும்னு சொல்லி இருக்காங்க. அதுக்காகத்தான் காத்திருக்கோம். நீதிமன்றத் தீர்ப்பைப் பார்த்துட்டுத்தான் அடுத்த கட்டத்தைப் பத்தி யோசிக்க முடியும். ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுட்டுக் காத்திருக்கோம்'' என்று சொன்னார்.
தமிழர் தொழில் இயக்க மாநிலத் தலைவர் முத்து குமாரிடம் பேசினோம். ''எங்களுக்குத் தெரிஞ்சு, பெரிய கடைக்காரங்க யாரும் பிளாட்பாரத்தில் வியாபாரம் பண்ணவில்லை. சீல் வைக்கப்பட்டு இருக்கும் கடைக்கு வெளியே வேறு யாராவது கடை போட்டு இருக்கலாம். வெளிநாடுகளில் எல்லாம் வணிக மையங்களுக்கு என்றே தனியாக ஒரு ஏரியா இருக்கிறது. அதைப் போல ரங்கநாதன் தெருவையும் சென்னையின் வணிக மையமாக அறிவிக்கணும். பாரீஸ் கார்னர், சௌகார்பேட்டைன்னு சென்னையின் பல இடங்களில் விதிகளை மீறிக் கட்டடம் கட்டி இருக்காங்க. அதெல்லாம் யார் கண்ணுக்கும் தெரியாது. ரங்கநாதன் தெருவில் தமிழன் மட்டும்தான் வியாபாரம் பண்றான். அதனால்தான், தமிழனுக்கு மட்டும் பிரச்னை வருது. நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வரப்போகுதுன்னு பார்த்துட்டு, அடுத்த கட்டமா தொடர் போராட்டங்கள் நடத்த இருக்கோம்...'' என்கிறார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் என்ன சொல்கிறார்? ''நீதிமன்றத் தீர்ப்புக்காகத்தான் காத்திருக் கோம். 30-ம் தேதி தீர்ப்பு வந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு பண்ணப்போறோம். சீல் வெச்ச கடைகளில் இருந்து யாரும் எந்த பொருளையும் எடுத்திருக்க முடியாது. வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து வியாபாரம் பண்றாங்களான்னு தெரியலை. அப்படிப் போக்குவரத்துக்கு இடையூறாக கடை வைச்சிருந்தா, கண்டிப்பா நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்துவோம்'' என்று உறுதியாகச் சொன்னார்.
நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது?
கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்,
எஸ்.அனுசத்யா                                                                                                                             
*********************************************************************************
விசாரணையில் விஞ்ஞானிகள்!

செல்போன் ஆராய்ச்சியைத் துருவும் சி.பி.ஐ.
''செல்போன் தொழில்நுட்பத்தில் நவீன ஆய்வு  நடந்திருந் தால், நம்நாடு இந்தத் துறையில் பெரிய வளர்ச்சி கண்டிருக்கும். ஆனால், அதைச் செய்யாமல்  20 கோடியை ஊழல் செய்து ஏப்பம்விட்டு இருக்கிறார்கள் சில விஞ்ஞானிகள்'' என்ற தகவல் கசிந்த நிலையில், அதை விசாரிக்கத் தொடங்கினோம். ''இந்தக் குற்றச்சாட்டைப் பதிவுசெய்து விசாரிக்கத் தொடங்கிவிட்டோம்...'' என்கிறது சி.பி.ஐ.!  
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் சென்னை தரமணி பகுதியில் நுண்ணலை பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சமீர்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் உள்ள பாகங்களை சிறிய அளவில் வடிவமைக்கும் ஆய்வை ஸ்பெஷலாக செய்வதற்காக புதியதாக மின்னணு வடிமைப்பு மையத்தை (இ.டி.சி) துவக்கினார்கள். அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா தொழில் நுட்ப நிறுவனமும் இந்தமையத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், எதிர்பாரத வகையில் இந்த செல்போன் ஆராய்ச்சியில் ஏற்பட்ட சுணக்கம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பி உள்ளது.
சி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் சில சந்தேகங்களைப் பட்டியலிட்டார்கள்.
''36 மாதங்களில் முடிய வேண்டிய ஆராய்ச்சி, மூன்று ஆண்டுகளைக் கடந்தும், அங்குள்ள விஞ்ஞானிகள் இழுத்தடித்து வந்தனர். இந்த மையத்திற்கென வெறும் கட்டடம் மட்டும்தான் இருந்ததே தவிர வேறு எந்த ஆய்வும் நடந்ததாக தெரியவில்லை. இந்த நிலையில், ஆய்வு மையத்தின் வருடாந்திர செலவுகளைக் கவனித்த மத்திய கணக்குத் தணிக்கையாளர், சில கேள்விகளைத் தனது அறிக்கையில் எழுப்பினார். அதை வைத்துத்​தான் நாங்கள் எங்களது விசாரணையைத் தொடங்கினோம்'' என்கிறார்கள்.
சென்னை சி.பி.ஐ-யின் லஞ்ச ஊழல்தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஆய்வு மையம் தொடர்புடைய முக்கிய​மானவர்களில் 13 விஞ்ஞானிகளின் பின்னணிகளை அலசி இருக்கிறார்கள். இதை தெரிந்துகொண்டு,  மின்சாரம் சரிவர இல்லாமல் பெயரளவில் நடந்துவந்த ஆய்வு மையத்திற்கு மாதம்  40 ஆயிரம் செலவில் டீசல் வாங்கி ஜெனரேட்டர் மூலம் மின்சார வசதியை அவசரகோலத்தில் செய்திருக்கிறார்கள். இதுதான் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு முதல் சந்தேகம். ஆய்வுக்கூட கட்டடத்தை முறையாக கட்டாததால், சி.எம்.டி.ஏ-விடம் அப்ரூவல் கிடைக்கவில்லையாம். அதனால்தான், முழுமையான மின்இணைப்பு கிடைக்காமல் அரைகுறையாக ஆய்வு மையம் இயங்கி வந்ததாம். இதுமாதிரி கிடைத்த  சில ஆதாரங்களை வைத்து சமீர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் கருணாகரன், கே.ஆர். கினி, மின்னனு வடிமைப்புக் மையத்தின் திட்ட இயக்குனரும் விஞ்ஞானியுமான ஸ்ரீதர் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ.. அதோடு, இந்த வழக்கில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை இயக்குனரும் பேராசிரியருமான மாதவன் சுவாமிநாதன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மத்திய உளவுத் துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். ''இந்த மையத்தின் ஆய்வுப் பணிக்காக மத்திய அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில் 20 கோடி வரை முறைகேடுகள் நடைபெற்று இருக்கலாம் என்கிறார்கள். இங்கு உள்ள விஞ்ஞானிகள் அமெரிக்கா விசிட் போன வகையில் சுமார் 40 லட்சம் வரை செலவு செய்தனர். ஆனால், அங்கு கற்றுக்கொண்ட தகவல்கள் எதையும் முறையாகப் பதிவுசெய்யவில்லை. அதே போல், அமெரிக்காவில் இருந்து மாதவன் சுவாமிநாதன் போன்ற சிலர் இங்கே வந்துபோய் இருக்கிறார்கள். இந்த வகையிலும் தாராளமாக செலவு செய்திருக்கிறார்கள். ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகங்கள் இந்த மையத்துடன் கைகோத்து ஆய்வில் மாணவர்களை ஈடுபடுத்த முன்வந்தும் அவர்களை ஒதுக்கிவிட்டு, சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றுடன் கைகோக்க ஒரு விஞ்ஞானி தீவிரமாக செயல்பட்டி​ருக்கிறார். அதுபற்றியும் விசாரிக்கிறோம். இன்னொரு விஞ்ஞானி பகுதி நேர ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார். அவருக்கு இங்கு உள்ள இன்னொருவரின் ஆதரவும் உண்டு. சென்னையில் உள்ள சில தனியார் நிறுவன அதிகாரிகளும் இங்கு வந்து சென்றுள்ளார்கள். அது மாதிரி யாராவது இன்ஃப்ளூயன்ஸ் செய்த காரணத்தால் திட்ட​மிட்டு ஆய்வை கால தாமதம் செய்தார்களா என்றும் விசாரிக்கிறோம். அதே நேரத்தில், ஆகாஷ் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மோடம் என்கிற கருவி வடிவமைப்பில் முறைகேடு தொடர்பாக கே.ஆர்.கினி, கருணாகரன் இருவரும் ஏற்கெனவே  கைதாகி விட்டார்​கள். மற்றொரு விஞ்ஞானியான ஸ்ரீதர் மட்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு தற்போது வந்துபோகிறார். மாதவன் சுவாமி​நாதனையும் விரைவில் அழைக்க உள்ளோம். இலவசப் பயிற்சிதான் அமெரிக்காவில் நடந்ததாகவும், ஆனால்... இங்கே இருந்து சென்ற ஒவ்வொருவரின் தலைக்கும் தலா 50 ஆயிரம் டாலர் சார்ஜ் செய்தது யார் என்றும் விசாரிக்கிறோம். மாதவனிடம் விரிவாக விசாரித்து முடித்த பிறகுதான், மற்ற விவரங்கள் தெரியவரும்'' என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் சகோதரர்தான் மாதவன் சுவாமிநாதன். சென்னை மையத்தில் நடைபெற்று வந்த ஆய்வுகள்பற்றி டெல்லியில் உள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் உயர் அதிகாரிகள் சிலர் அதிருப்தி காட்டிய நேரத்தில் பெரிய இடத்தில் இருந்து வந்த பிரஷர் காரணமாக, ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளனரா என்கிற கோணத்திலும் சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது. டெல்லியில் இந்த நிதி ஒதுக்கீட்டுப் பின்னணியில் செயல்பட்டவர்களையும் விரைவில் சி.பி.ஐ. தனது வளையத்துக்குள் கொண்டு வர திட்டம் இட்டுள்ளது.
விஞ்ஞானிகள் தரப்பில் விளக்கம் கேட்க தொடர்பு​ கொண்டும், பதில் அளிக்க அவர்கள் தயாராக இல்லை. பதில் கொடுத்தால் வெளியிட நாம் தயாராகவே இருக்கிறோம். ''அந்த ஆய்வு மையத்தில் நடந்து வந்த ஆய்வு பற்றி டெல்லி அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்களின் கருத்துக்களைக் கேட்காமல், தன்னிச்சையாக சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்குத் தகுந்த பதிலை சட்டப்படி உணர்த்துவோம்'' என்று இந்த விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லி வருவதாகச் சொல்கிறார்கள்.
கனிஷ்கா, படம்: வீ.நாகமணி
*********************************************************************************
முற்றுப்புள்ளியை நெருங்கும் முத்துக்குமார் கொலை!

'நாம் தமிழர்’ கட்சி உருவாகக் காரணமான புதுக்கோட்டை முத்துக்குமாரின் கொலை வழக்கில், ஏழு மாதங்களுக்குப் பிறகு குற்றவாளிகளைக் கைது செய்து முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார்!
முத்துக்குமாரின் பிறந்த ஊர் மதுரை. விடுதலைப் புலிகளின் தீவிரமான ஆதரவாளர். இதற்காகப் பல முறை சிறைக்கும் சென்றவர். மதுரையைவிட்டு கடந்த 1990-ல் புதுக்கோட்டைக்கு வந்தவர், வட​காட்டைச் சேர்ந்த கரு.காளிமுத்து என்பவரது வீட்டில் தங்கினார். அங்கு இருந்தபடியே தமிழ் ஈழத்துக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்து கொண்டார். கடந்த 2010 பிப்ரவரி 21-ம் தேதி கரு.காளிமுத்து​வின் மகள் மாதரசியைத் திருமணம் செய்தார். இடையில் சீமானுடைய நெருக்கம், அதன் பிறகு நாம் தமிழர் கட்சி உதயம் என அவரது தமிழ் ஈழ உணர்வுப் பயணம் நீண்டது.
இந்த சூழலில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரவு புதுக்கோட்டையில் வைத்து ஒரு கும்பல் முத்துக்குமாரை வெட்டிக் கொலை செய்தது. கொலை செய்தவர்கள் பயன்படுத்திய கார், திருமயம் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்தது. அதைக் கண்டுபிடித்த பிறகும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திணறியது காவல் துறை. 'இந்தக் கொலைக்கான காரணத்தையும், குற்றவாளிகளையும் உடனே கண்டுபிடிக்க வேண்டும்’ என சீமான் பல முறை ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனாலும், காவல் துறை அக்கறை எடுக்காததால், சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி மனு கொடுக்கப்பட்டது. கடந்த மே மாதம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் வந்ததும், 15 குழுக்களாகப் பிரிந்து இதைப் பலமாக விசாரித்தனர்.  இதன்படி,  கொலைக் குற்றவாளிகள் என, முத்துக்குமாரின் நண்பர் கரூர் மாவட்டம் கருப்பத்தூரைச் சேர்ந்த கோபால், சிவகங்கையைச் சேர்ந்த சுரேஷ் பாண்டியன், கரூர் மாவட்டம் சூரியனூரைச் சேர்ந்த ஷக்தி ஆகியோரை இப்போது  கைது செய்திருக்கிறார்கள்.
குற்றவாளிகளைப் பிடித்த சி.பி.சி.ஐ.டி போலீ​ஸாரிடம் பேசினோம். ''முத்துக்குமாருக்கு சென்னையை சேர்ந்த பாஸ்கர் நெருங்கிய நண்பர். இருவருமே ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்தபோது, பணப் பிரச்னை வந்து, அது பகையாக மாறியது. அதனால்தான், கூலிப்படை மூலம் முத்துக்குமாரை கொலை செய்து இருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட  நால்வரையும் பிடித்துவிட்டோம்'' என்றார்கள். 
இந்தக் கைது குறித்து கருத்து கேட்பதற்காக மாதரசியை சந்திக்கச் சென்றோம். அவர் சென்னையில் படிப்பதால், அவள் தந்தை கரு.காளிமுத்து நம்மிடம் பேசினார். ''முத்துக்குமாருக்கு தமிழின உணர்வு அதிகம் இருந்ததால்தான், என் மகளைக் கல்யாணம் செய்து கொடுத்தேன். வீட்டோட மாப்பிள்ளையா வைத்துக்கொண்டோம். அவரை எங்க வீட்டு பிள்ளை போலத்தான் நடத்தினோம். அவர் கொலைக்குப் பிறகு  எங்க குடும்பம் நிலைகுலைஞ்சுடுச்சு. இப்ப கைது செய்த யாரையுமே எங்களுக்குத் தெரியாது. ஏன்னா, அவர் இறக்கிற வரைக்கும் எங்க வீட்டுக்கு யாரையுமே கூட்டிட்டு வரலை. இப்பக் கைது செய்தவங்களைப் பத்தி என் மகள்கிட்டயும் கேட்டேன். அவளுக்கும் இவங்களைத் தெரியலை. இந்தப் படுபாதகத்தை செய்த யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனை அனுபவித்தே ஆகணும்'' என்றார் கலங்கிய கண்களோடு.
முத்துக்குமாரோடு நெருங்கிப் பழகிய சிலரிடம் பேசினோம், ''வீரப்பனுக்கு உதவி செய்ததாக முத்துக்குமார் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் இருந்தபோதுதான் வேறு வழக்கில் உள்ளே இருந்த கோபால், ஷக்தி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முத்துக்குமாரின் நண்பர் பாஸ்கர், ஒரு விதவைப் பெண்ணைத் திருமணம் செய்ய நினைத்தார். அவர் வீட்டில் உள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடம் முத்துக்குமார் பேசியும் எடுபடவில்லை. அதன் பிறகு, 'நீ யாரைத் திருமணம் செய்தாலும், உனது பெற்றோரின் சம்மதத்தோடு செய். மீறிச் செய்தால் நான் உனது திருமணத்துக்கு வர மாட்டேன்’ என்று முத்துக்குமார் சொல்லி​விட்​டார். அதையும் மீறி பாஸ்கர், அந்த விதவைப் பெண்ணைத் திருமணம் செய்துவிட்டார். தான் சொன்​னது மாதிரியே  திருமணத்துக்கு முத்துக்குமார் செல்லவில்லை. அவரது பெற்றோரும் சகோதரியும் மட்டும் சென்று வந்தனர். அதற்கு பிறகு நடந்த முத்துக்குமாரின் திருமணத்துக்கு பாஸ்கரும் வரவில்லை. அதன் பிறகு முத்துக்குமாரைப் பற்றி பாஸ்கர் அவதூறு கிளப்பினார். அதோடு அவர்களது நட்பு முடிந்துவிட்டது. அப்படிப்பட்டவரா இந்தக் கொலையைச் செய்தார்!'' என ஆச்சர்யப்பட்டனர். கோபால், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்கிறார்கள். சாதி அமைப்பில் தீவிரமாக இருக்கிறார் ஷக்தி.   கடந்த 2008-ல் பரோலில் வெளியில் வந்த சுரேஷ் பாண்டியன் அதோடு தப்பிவிட்டாராம். தற்போதுகூட மிகுந்த சிரமத்துக்கு இடையில்தான் சுரேஷ் பாண்டியனை மடக்கி இருக்கிறார்கள். சி.பி.சி.ஐ.டியிடம் பேசிய கோபால் முன்னுக்குப் பின் முரணாகவே பேசுகிறார் என்றும் தகவல்கள் கசிகின்றன.
சி.பி.சி.ஐ.டி-யின் டி.எஸ்.பி-யான மலைச்சாமியிடம் விளக்கம் கேட்டோம். ''தற்போது நடந்த முதல் கட்ட விசாரணையில் முழுத் தகவல்கள் கிடைக்கவில்லை.  அடுத்தக் கட்ட விசாரணையில் முழுவதும் தெரிந்துவிடும்'' என்றார்.
சாதி, அரசியல், பணம்... மூன்றும் இணைந்த கொலைச் சம்பவமாக இது இருக்கலாம்!
வீ.மாணிக்கவாசகம்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், பா.காளிமுத்து


0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010