********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (19 நவம்பர் 2011)

Saturday, November 19, 2011


மிஸ்டர் கழுகு: 'ஷாக்'லலிதா!

ஜெயா டி.வி-யில் முதல்வர் ஜெயலலிதா அடுத்தடுத்து அதிர்ச்சிக் குண்டு களை வீசியபோது உள்ளே வந்த கழுகார், நம்மோடு அமர்ந்து பேச்சைக் கவனித்தார். அவர்
'வணக்கம்’ சொல்லி முடித்ததும்தான் நம்மை உற்றுக் கவனித்தார்!
''மத்திய அரசை நோக்கி 'நிதி போதலை' என்று அம்மாவின் சத்தம் அதிகமாக இருக்கிறதே?'' என்ற கேள்வியுடன்  கச்சேரியை ஆரம்பித்தோம்.
''கஜானா அண்டாவை ஒட்டுமொத்தமாகக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார் கருணாநிதி. ஒன்றும் இல்லாத பாத்திரத்தில் கரண்டியைத் துழாவினால்... சத்தம் வரத்தானே செய்யும்’ என்று இரண்டு வாரத்துக்கு முன்பு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது'' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் கழுகார்.
''தமிழ்நாட்டின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்பது விவரம் அறிந்தவர்களுக்கு கொஞ்சம் முன்கூட்டியே தெரியும். கருணாநிதி ஆட்சியில் இருந்து விலகும்போது தமிழ்நாட்டுக்கு இருந்த கடன் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. அவருக்கு 'கடனாநிதி’ என்று தலைப்பிட்டே உமது குழுமப் பத்திரிக்கை ஒரு கட்டுரை வெளியிட்டது. அந்த நிலைமை நாளாவட்டத்தில் முற்றிப் போனது. அரசியல் போட்டிக்காக எத்தனையோ புதிய புதிய திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அவற்றை முழுமையாக இன்னமும் அமல்படுத்த முடியாததற்கும் காரணம் இந்த நிதி நெருக்கடிதான். அதிகாரிகளைச் சுற்றிவைத்துக்கொண்டு புதிய திட்டத் தொடக்க விழாவுக்கு தேதி குறிக்க முதல்வர் நினைக்கிறார். ஆனால் 'நிதி ஆதாரத்தை எங்கே இருந்து பெறுவது?’ என்று கேட்டால், அதற்கு நிதித் துறை தரப்பில் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த யதார்த்த நிலைமைதான் முதல்வரின் கோபத்துக்கும் கொந்தளிப்புக்கும் காரணம்!''
''அதற்காக..? புது ஆட்சி வந்து வயிற்றில் பால் வார்க்கும் என்று பார்த்தால், இப்படியா மக்கள் தலையில் மொத்தமாக சுமையைத் தூக்கிப் போடு வது?''
''துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே கதைதான்... வேறு வழி இல்லை என்று கோட்டை வட்டாரத்து அதிகாரிகள் சொல்கிறார்கள். அன்று காலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக் கூடியது. இதில்தான் இந்த முடிவு களைப் பற்றிச் சொன்னார் முதல்வர். இந்த அறிவிப்பை வெளியிட்டால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி வரும் என்று தெரியும். எனவேதான் அவர் இந்த மேட்டரை யாருக்கும் லீக் செய்யாமல் 'ஜெயா டி.வி.யில் நானே மக்களுக்குப் பேசுகிறேன். மக்களுக்கு நாமே தெளிவாக முதலில் சொன்னதாக இருக்கட்டும். மற்ற கட்சிகள் இதைக் கண்டித்த பிறகு, நாம் சப்பைக் கட்டு விளக்கம் சொல்வதாக இருக்கக் கூடாது’ என்றாராம் முதல்வர்.''
''முதல்வர் இப்படி மக்களை நோக்கி டி.வி.யில் ஸ்பெஷலாகப் பேசுவது நடந்து உள்ளதா?''
''பொதுவாக இப்படி நடப்பது இல்லைதான். ஆனால், ஜெயலலிதா ரொம்ப உஷாராக இருக்கிறார் என்பது தெரிகிறது. பேருந்துக் கட்டணத்தையும் பால் விலையையும் உயர்த்தி இருக்கிறார் முதல்வர். மின் கட்டணத்தை அரசாங்கம் நினைத்தால் மட்டுமே உயர்த்த முடியாது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துக்கேட்பு நடத்தித் தான் உயர்த்த வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. எனவேதான் அதில் உடனடியாகக் கை வைக்கவில்லை யாம்!''
''அப்பாடி... தப்பித்தான் தமிழன்! ஆனால், மொத்தமாக மத்திய அரசை அல்லவா காய்ச்சி எடுக்கிறார், ஜெய லலிதா?''
''மத்திய அரசுக்கும் ஜெயலலி தாவுக்குமான நட்பு சரியாக இல்லை. ஒரு தடவை டெல்லி சென்று சந்திப்பு நடத்திய பிறகு இரண்டு தரப்புக்கும் வேறு எந்த தகவல் பரிமாற்றத் தொடர்பும் இல்லை. 'சோனியா தன்னை உதாசீனப்படுத்துகிறார்’ என்று முதல்வர் நினைக்கிறார். 'திட்டக் குழுவில் இருந்தோ மத்திய அரசிடம் இருந்தோ எந்தவித நிதி உதவியும் கிடைக்கவில்லை. ஆனால், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க அரசுக்கு மட்டும் 21,614 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு நிதித் தொகுப்பு உதவி வழங்கி உள்ளது. இதில் இருந்து காங்கிரஸ் அல்லாத கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான மத்தியக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய அரசு புறக்கணிப்பது தெளிவாகத் தெரிகிறது’ என்று பாய்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு ஜெயலலிதா செல்லவில்லை. அவரது உரையை அமைச்சர் பன்னீர் செல்வம் டெல்லியில் 'பிராக்ஸி'யாக வாசித்தார். அதன் சாரமும் இப்படித்தான் காரமாக இருந்தது.''
''டெல்லி பக்கம் விசாரித்தீரா... அவர்களுக்கு ஜெயலலிதா மீது என்ன கோபமாம்?''
''மூவர் தூக்கு, கூடங்குளம் ஆகிய இரண்டு பிரச்னைகளிலும் மத்திய அரசுக்கு விரோதமான நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்ததும் கோபமாக இருக்கலாம். மூவர் தூக்கு விஷயத்திலாவது ஜெயலலிதா பல்டி அடித்துவிட்டார். ஆனால், கூடங்குளம் மேட்டரில் போராட்டக்காரர்களை அடக்க மாநில அரசாங்கம் சரியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்ற கோபம் மன்மோகன் வட்டாரத்துக்கு இருக்கிறதாம். 'ஜெயலலிதாவுக்குச் செய்யும் உதவிகள், பிற்பாடு  பி.ஜே.பி.க்குதான் சாதகமாகப் போய் முடியும்’ என்று சோனியா, மன்மோகன் நம்புவதாகச் சொல்கிறார்கள். அதனால் தான் நிதி விஷயங்களில் கருணை பொங்கவில்லை என்று கேள்வி!''
''இவர்களுக்கு நடுவில் சிக்கியது மக்கள்தானா?'' என்று நாம் கேட்க... ''அதே... அதே!'' என்ற கழுகார்,
''அமைச்சரவையின் அடுத்த மாற்றம் தயாராகி வருகிறதாம். முக்கியமான இரண்டு தலைகள் உருளக்கூடும்'' என்று சொல்லிச் சென்றார்!
படங்கள்: சு.குமரேசன்,
வீ.நாகமணி 
 கார்டனுக்கே ரீசார்ஜ் தந்த சாமி?!
'கார்டன் பேரைச் சொல்லுவேன்... கை நிறைய அள்ளுவேன்... ரீசார்ஜில் கில்லாடி இந்த சாமி!' என்று கூவாத குறைதான். விமான ஏரியாவின் வட்டாரப் போக்குவரத்துக்கு முக்கிய பொறுப்பாக இருக்கும் இவர், கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்கவுமே தன் துறை விஷயங்களில் தலையிட்டு டிரான்ஸ்பர் உள்ளிட்ட விவகாரங்களில் கலக்கி, உலுக்குகிறாராம்.
கடந்த ஆட்சியில் அமைச்சர் நேருவுடன் இருந்த படு நெருக்கத்தை வைத்தே பலவித விளையாட்டுகள் நடத்தி வந்த இவர், இப்போது தோட்டத்துக்கு நெருக்கமான ஒரு நிழல் மனிதரின் பேரைச் சொல்லி மிரட்டல் ராஜாங்கத்தைத் தொடருகிறாராம். ''போக்குவரத்துத் துறைக்குள் வேலை நடக்கணும்னா இவர்கிட்டே ஒரு தடவை காசு கொடுத்தா மட்டும் போதாது. குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பத் திரும்ப கொடுத்து ரீசார்ஜ் பண்ணிகிட்டே இருக்கணும். அப்பதான் கிடைச்ச பலன் நிலைக்கும். இல்லாட்டி, முடிச்சுக் கொடுத்த வேலையை மறுபடி ரிவர்ஸ் அடிச்சு, கிடைச்ச பலனை பாதியிலேயே பறிச்சிடுவாரு'' என்று கடுப்பான குரல்கள் கேட்கின்றன.
ஆட்டம் பொறுக்க முடியாமல் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸிடம் போட்டுக் கொடுத்தாராம் சக அதிகாரி ஒருவர். ஏனோ இதுவரை நடவடிக்கை இல்லை. ''எந்த ஆட்சி வந்தாலும் பெரிய இடத்துல என் பவரை தக்க வைக்கிறது எப்படினு எனக்குத் தெரியும். நான் கார்டனுக்கே ரீசார்ஜ் பண்ணிட்டேன்ல'' என்று கொக்கரிக்கிறராம் இந்த சாமி.
 இது ஞானதேசிகன் புகழ்!
வத்தலகுண்டு ஒன்றியம் 1-வது வார்டுக்கு சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அரிவேந்திரன் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைய... அங்கே தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இப்போது அங்கே வரும் 24-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் யாருமே மனு தாக்கல் செய்யவில்லை. கொடுமை என்ன தெரியுமா? இந்த 1-வது வார்டுக்குள் கணவாய்பட்டி என்கிற ஊர் வருகிறது. இது தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ஞானதேசிகனின் சொந்த ஊர்.
 தலைவர்களைக் கலங்கவைத்த படம்!
ஈழப் பிரச்னையை அடிப்படையாகவைத்து 'காற்றுக் கென்ன வேலி’ படம் இயக்கிய புகழேந்தி தங்கராஜ், இப்போது  'உச்சிதனை முகர்ந்தால்’ என்ற படத்தை எடுத்துள்ளார். பார்ப்பவர்கள் அனைவரையும் கலங்கவைக்கிற அந்தப் படம், கடந்த 16-ம் தேதி வைகோ, சீமான்,
சி. மகேந்திரன், பெ.மணியரசன், பேராசிரியர் சரஸ்வதி போன்ற முக்கிய மனிதர்களுக்கு  சென்னையில் திரையிட்டுக்  காண்பிக்கப்பட்டது. படம் பார்த்த அனைவருமே கலங்கிப் போனார்களாம்.
2009 மார்ச் 1-ம் தேதி கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பில் சிங்களப் படையின் கும்பல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட புனிதவதி எனும் ஈழச் சிறுமியின் கதைதான் இந்தப் படம். ஈழச் சிறுமியாக நடித்த நீநிகா என்ற சிறுமியை, எல்லா தலைவர்களும் நேரில் பார்த்தபோது, அவர் நடிப்புக்காக உணர்ச்சிவசப்பட்டு பாராட்டினார்கள். அங்கேயும் ஒரு 'அரசியல்'... மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலும் வைகோவும் சீமானும் பேசிக்கொள்ளவே இல்லை!
ஸ்டாலினை உருகவைத்த ஜோதி!
மாவட்டச் செயலாளர்களே தங்கள் இல்லத் திருமணத்திற்கு ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என்று தேதி கேட்டுக் காத்திருக்கும் நிலையில் சாதாரண தி.மு.க. தொண்டர் ஒருவரின் திருமணத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் ஸ்டாலின். மாற்றுத் திறனாளியான ஜோதி, தி.மு.க. உறுப்பினர். மேனகா என்கிற பெண்ணை மணமுடிக்க முடிவானதும்...  ஸ்டாலினிடம் போனார். ''மணமுடித்தபின் மனைவியுடன் வந்து உங்களைச் சந்தித்து ஆசி வாங்க வேண்டும்'' என்று சொல்ல.. சரி என்றார் ஸ்டாலின். வீட்டுக்கு வந்து ஆசி வாங்கிய ஜோதி, ஸ்டாலின் காலில் விழ.. அவருடைய ஊன்று கோலைப் பிடித்து 'வேண்டாம்' என்று பதறித்  தடுத்தார். தொடர்ச்சி சர்ப்ரைஸாக ஜோதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திடீரெனப் போய் வாழ்த்து சொன்னார்.
*********************************************************************************
கழுகார் பதில்கள்

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி
 கருணாநிதி - அரசியல் மேடையில், இலக்கிய மேடையில், திருமண மேடையில், ஆய்வரங்க மேடையில்... ஒப்பிடுங்களேன்?
'தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால் தீயைத் தாண்டி இருக்கிறேன்’ என்று கொதிப்பார் அரசியல் மேடைகளில். 'குடிசைதான் ஒரு புறத்தில்... கூரிய வாள் மறுபுறத்தில்’ என்று கொஞ்சுவார் இலக்கிய மேடைகளில். 'இது என்ன வாழ்த்தாளர் பட்டியலா? அல்லது வாக்காளர் பட்டியலா?’ என்று அழைப்பிதழில் உள்ள பெயர்களைப் பார்த்து கிண்டலுடன் தொடங்குவார் திருமண மேடைகளில். 'பிரசாரம் இல்லாத இலக்கியத்தால் என்ன பயன்?’ என்று அவர் கோவை மேடையில் வைத்த விமர்சனம் ஆய்வாளர்களால் பதில் சொல்ல முடியாத ஆய்வாகவே அமையும்!
இவை எல்லாமே ஒரு காலத்தில். இப்போது கருணாநிதி, இலக்கியம் மற்றும் ஆய்வரங்க மேடைகளில் பங்கேற்பது இல்லை. மற்ற இரண்டு மேடைகளின் பேச்சுக்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. எல்லாமே அவர் விடும் அறிக்கைகளின் நீட்சியாகவே ஆகிவிட்டன!
 கே.கே.வெங்கடேசன், வேலூர்.1
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் கூட்டணிவைத்தது மாதிரி தெரிகிறதே?
'மிடாஸ்’ விவகாரத்தில் கூட்டணி ஏற்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆனது தெரியும். இது இரண்டு தலைமைகளுக்குள் ஏற்பட்டது. இப்போது அது இரண்டு கட்சித் தொண்டர்களுக்கு மத்தியிலும் ஏற்பட்டுவிட்டது. அதற்கு இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்...
அருப்புக்கோட்டை நகர சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களை வைத்திருக்கும் அ.தி.மு.க. தான் துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றி இருக்க வேண்டும். ஆனால் தி.மு.க. வென்றுவிட்டது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றிய சேர்மன் பதவிக்குப் போட்டியிட்ட சசிகலாவின் உறவினர் இளவரசியின் தம்பி அண்ணாத்துரையை வெற்றி பெறவைக்க... தி.மு.க. புள்ளிகளே லாஜிக்காக வேலை பார்த்து இருக்கிறார்கள். இத்தகைய கூட்டணி இரண்டு கட்சிகளுக்குமே ஆரோக்கியமானது அல்ல!
 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்
தற்போது அரசியலில் எதற்கு மதிப்பு அதிகம்?
புகார் மனுக்களுக்குத்தான் மதிப்பு அதிகம்! முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க. புள்ளிகள் மீது நான் ஒரு புகார் வைத்திருக்கிறேன் என்று  சொன்னாலே... உங்கள் செல்வாக்கு உயர்ந்துவிடும்!
 பேரலை கொண்டான், கருப்பம்புலம்
பொட்டு சுரேஷை கோர்ட் விடுதலை செய்துவிட்டதே?
ஓர் அரசாங்கம் தோற்றுப்போயிருக்கிறது என்று அர்த்தம். ஒருவரைக் கைது செய்வதோடு போலீஸ் கடமை முடிந்துவிடுவது இல்லை. குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும். அதைச் செய்யத் தவறி இருக்கிறார்கள். அரசியல் சிபாரிசுகளால் அரசு வழக்கறிஞர்களாக, திறமையற்ற, தகுதியற்ற, வாதாடத் தெரியாத மனிதர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவதும் ஒரு முக்கியக் காரணம்!
 மணி.சுதந்திரக்குமார், சென்னை.112
புதிய தலைவர் ஞானதேசிகனால் தமிழக காங்கிரஸ் வளருமா?
ஞானதேசிகன் நல்ல மனிதர். திறமையான வக்கீல். காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மைத் தொண்டர்களின் ஆதரவைப் பெற்ற ஜி.கே.வாசனின் நம்பிக்கை​யைப் பெற்றவர். இம்மூன்றும் அவரது தகுதிகள். ஆனால், காங்கிரஸை வளர்க்க இது போதாது.
'தமிழகத்தில் கட்சி வளர்வதைவிட, தமிழகத்தில் எந்தக் கூட்டணியு​டனாவது சேர்ந்து 10 எம்.பி.க்​கள் வந்தால் போதும்’ என்று நினைக்கும் டெல்லித் தலைமையின் எண்ணங்கள் மாறாத வரை ஞானதேசிகன் மட்டும் அல்ல... ஜி.கே.வாசனைத் தலைவராகப் போட்டாலும் கட்சி வளராது!
 கே.ஏ.என்.சிவம், பெங்களூரு
ஒரு வழக்கில் குறைந்தபட்சம் எத்தனை வாய்தா வாங்க முடியும்?
பெங்களூருவில் இருக்கும் உமக்குத்தான் தெரியும்!
 எம்.செல்லையா, சாத்தூர்
பயணக் கட்டுரை எழுதியவர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்?
ராகுல்ஜி எனப்படும் ராகுல சாங்கிருத்தியாயன். அவர் எழுதிய 'வால்காவில் இருந்து கங்கை வரை’,  'ஊர் சுற்றிப் புராணம்’  இரண்டு புத்தகங்களையும் படியுங்கள்!
எல்லா வசதிகளும் இருக்கும் இந்தக் காலத்தில் பயணக் கட்டுரைகள் எழுதுவது பெரிய விஷயம் அல்ல. வசதி, வாய்ப்புகள் குறைவான எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் மேற்கு வங்காளத்தில் இருந்து கிளம்பி... கையில் காசு இருந்தால் ரயில் ஏறி...  இல்லாவிட்டால் நடைப் பயணமாகவே வந்து... அவர் எழுதிய வரலாறு மலைப்பைத் தரும். அவர் நன்றாக வைத்தியம் பார்ப்பார். முடி வெட்டுவார். தான் செல்லும் பகுதியில் இந்தத் தொழிலைப் பார்த்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்துப் பயணமானார். இந்தியத் தத்துவ மரபுகள் தொடர்பாக அவர் எழுதிய ஆய்வு நூல்கள்தான் உலகில் நம் முகத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்தன. சென்னைக்கு அருகில் இருக்கும் திருமழிசைப் பகுதியைப் பற்றி ராகுல்ஜி எழுதிய கட்டுரையில் இருக்கும் பல செய்திகள் இங்கே இருப்பவர்களுக்கே தெரியாது.
ஊர் சுற்ற நினைப்பவர்கள் முதலில் புல்லாங்குழல் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர். அதைப் போல ரம்மியமான பொழுதுபோக்கு வேறு என்ன இருக்க முடியும்?
 வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை.61
இந்தியாவுக்குள் நடக்கும் அனைத்துத் தீவிரவாதச் செயல்களையும் ஊக்குவிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஜிலானியை 'அமைதியின் மறு உருவம்’ என்கிறாரே நமது பிரதமர்?
அப்படிச் சொன்னாலாவது அமைதியாக இருப்பாரா என்ற ஆதங்கம்தான்!
 நென்மேலி ஆர்.நந்தகுமார், திருவண்ணாமலை
ஆள்மாறாட்ட புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை நேரில் சந்தித்தால்... என்ன கேட்பீர்கள்?
ஒன்பதாம் வகுப்பு வரையாவது ஒழுங்காகப் படித்துத்தான் பாஸ் செய்தீர்களா?
*********************************************************************************
சிதம்பரம் பதவியில் நீடிப்பது கோர்ட் கையில் இருக்கிறது!

சுதர்சன நாச்சியப்பன் சுளீர்
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையைக் கலைத்துவிட்டு, ப.சிதம்பரம் மீண்டும் காங்கிரஸுக்குத் தாவிய​போது அவருக்காக சிவகங்கை நாடாளு​ மன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்தவர் சுதர்சன நாச்சியப்பன். அவர்தான் திடீரென இப்போது சிதம்பரத்திற்கு எதிராக சீறுகிறார்.
''திடீரென சிதம்பரத்துக்கு எதிராக ஏன் இந்த ஆவேசம்?''
''2004-ம் ஆண்டு நான் தொகுதியை விட்டுச் சென்றபோது காங்கிரஸ் கட்சி 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கிற மாதிரி தொகுதியை வைச்சிருந்தேன். இப்போது இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கும் நிலை. கடந்த ஏழு வருஷத்தில் சிதம்பரம் செய்த சாதனை இது மட்டும்தான். உள்துறை அமைச்சரின் தொகுதியில் ஒரு நகராட்சி சேர்மனுக்குக்கூட ஆளை நிறுத்த முடியாத அளவுக்கு, காங்கிரஸை முடமாக்கிப் போட்டிருக்காங்க. ஜெயிக்கக்கூடிய ஆட்க ளுக்கும் 'கை’ சின்னம் கொடுக்காததால், அவர்கள் எல்லாம் சுயேச்சையாக நின்று ஜெயித்திருக்கிறார்கள். சிதம்பரத்தின் சொந்த ஊரிலேயே காங்கிரஸுக்கு நான்காவது இடம். இதுதான் இந்த மாவட்டத்தில் அப்பா வும் மகனும் கட்சி வளர்த்த லட்சணம். இனியும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், அது கட்சிக்கும் தலைமைக்கும் செய்த துரோகம் ஆகிவிடும் இங்கே காங்கிரஸ் கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டிய சூழல் வந்திருக்கு. அந்த நல்ல காரியத்தைச் செய்வதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட அன்னை சோனியாவிடம் வாய்ப்புக் கேட் பேன். நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி; அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டேன்.''
''அடிக்கடி தொகுதிக்கு சிதம்பரம் வந்து போகிறார்​தானே?''
''நிதித் துறை, உள்துறைன்னு இரண்டு முக்கியமான பொறுப்புகளைச் சிதம்பரத் துக்குக் கொடுத்தோம். ஆனால், என்னு டைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே குறியாய் இருந்தார். இந்தத் தொகுதி வளர்ச்சியில் அவர் அக்கறை காட் டவே இல்லை. எனது காலத்தில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்புதல் வாங்கிக் கொடுத்தேன். அந்தச் சாலையை மேற்கொண்டு விரிவுபடுத்துவதற்கான எந்த முயற்சியையும் சிதம்பரம் எடுக்கவில்லை. இதேபோல் தொண்டி - மதுரைச் சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு டி.ஆர்.பாலு மூலம் முயற்சி எடுத்தேன். அதற்கான கோப்பில் நிதி அமைச்சர் என்ற முறையில் சிதம்பரம் கையெழுத்துப் போட வேண்டும். ஆனால், அதற்கு மறுத்தார். அதனால், திட்டக் குழுத் துணைத் தலைவரும் டி.ஆர்.பாலுவும் மட்டுமே கையெழுத்துப் போட்டு அந்தத் திட்டத்துக்கு அப்ரூவல் கொடுத்தார்கள். திருச்சி - மானாமதுரை பிராட்கேஜ் பாதையை நான் கொண்டுவந்தேன். அதில் இயக்கப்பட்ட ரயில்களைக்கூட சிதம்பரத்தால் முழுமையாக இயக்கவைக்க முடியவில்லை. தனக்கு இணக்கமான தி.மு.க. ஆட்சி இருந்தபோதே சாதிக்காதவரா, விரோதியாக நினைக்கும் ஜெயலலிதா ஆட்சி யில் சாதிக்கப்போகிறார்?''
''தொகுதி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதால் சிதம்பரத்திற்கு என்ன லாபம்?''
''சிவகங்கையை சிங்கப் பூராக்கும் எனது கனவுத் திட்டத்துக்கு உறுதுணையா இருப்பார்னு நினைச்​​சுத்தான் இவருக்கு எனது தொகுதியை விட்டுக் கொடுத்தேன். ஆனால், தொகுதியை வளரவேவிடவில்லை. சிதம்பரமும் அவரது மகனும் இன்னமும் ஜமீன்தார் நினைப்பிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் தொகுதியை காபி எஸ்டேட் மாதிரியும் மக்களை ஓட்டுப் போடும் ஏ.டி.எம். மெஷின் மாதிரியும் பார்க்கிறார்கள். இனி அவர்களின் ராஜ்யம் இங்கே எடுபடாது.''
''காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்களும் முயற்சி செய்தீர்கள். அதற்கு சிதம்பரம் ஏதாவது தடங்கல் ஏற்படுத்தி, அந்த ஆதங்கத்தில் இப்படி அவருக்கு எதிராக சீறுகிறீர்களா?''
''இவங்க போடுற முட்டுக்கட்டை எல்லாம் நாம பார்க்காததா? நான் மூன்று முறை காங்கிரஸ் தலைவராக வர இருந்தபோதும் முட்டுக்கட்டை போட்டவர் சிதம்பரம்தான். எனக்கு மத்திய அமைச்​சராகும் வாய்ப்பு வந்தபோதும் தட்டிவிட்டார். இரண்டாவது முறையாக நான் ராஜ்ய சபாவுக்குப் போய்விடக் கூடாது என்பதிலும் முனைப்போடு இருந்தார். ஆனால், எனக்குத் தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இந்த முடிவுக்கு வரவில்லை. தலைவராக வந்திருந்தாலும் இதே முடிவைத்தான் எடுத்திருப்பேன். ஒருவேளை, தலைவராக வராவிட்டால் நமக்குப் போட்டியாக வர மாட்டான் என சிதம்பரம் நினைத்திருக்கலாம். அவரது நினைப்பு பொய்யாகப் போகிறது''
''பிரதமர் வேட்பாளர் என்கிற அளவுக்குப் பேசப்படும் சிதம்பரத்தை எதிர்த்து உங்களால் சாதித்துவிட முடியுமா?''
''முதலில் உள்துறை அமைச்சர் பதவியை அவர் பாதுகாத்துக்கொள்ளட்டும்; அப்புறம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம். அவர் பதவியில் நீடிப்பதே சுப்ரீம் கோர்ட் கையில்தான் இருக்கு. எப்படி இருந்தாலும் இனி சிதம்பரத்திற்கு சிவகங்கையில் வேலை இல்லை. அவரும் அவரது பையனும் வெளிநாட்டில் இருக்கும் தொழில் முதலீடுகளைக் கவனிக்கப் போகட்டும். காங்கிரஸ் கட்சியையும் தொண்டனையும் நாங்க பத்திரமாப் பாத்துக்குவோம்'' - புழுக்கத்தை எல்லாம் பொலபொலவென கொட்டித் தீர்த்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட்டார் நாச்சியப்பன்.
  - குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ் 
*********************************************************************************
சங்கரன்கோவில் முன்னோட்டம்!

ஆயுத்தமாகும் ஆளும்கட்சி.. மல்லுக்கட்டும் ம.தி.மு.க... இன்னும் யோசிக்கும் தி.மு.க...
திருச்சி இடைத்தேர்தல் சூடு ஆறுவதற்கு முன்பாக இன்னும் ஓர் இடைத்தேர்தல்.  சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்று அமைச் சராக இருந்த கருப்பசாமியின் மறைவு காரணமாக, அங்கே இடைத் தேர்தல் வரப்போகிறது. அதற்கான அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே ஆளும் கட்சி தன் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. கௌரவப் பிரச்னையாக நினைத்து ம.தி.மு.க-வும் பம்பரமாகப் போட்டியிடத் தயார்.
ரிசர்வ் தொகுதியான சங்கரன்கோவிலில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும்  இல்லை. விவசாயத்தை நம்பி வாழும் மக்களே அதிகம். அதுவும் வானம் பார்த்த பூமி. இதனால், கேரளாவுக்குக் கூலி வேலை செய்யப் பெரும்பாலானோர் போய்விடுவார்கள். தி.மு.க-வும் அதி.மு.க-வும் இந்தத் தொகுதியைக் கைப்பற்றினாலும், அமைச்சர் வாய்ப்புகளைப் பெற்றாலும் பெரிய தொழில் வாய்ப்புகள் இங்கு வரவில்லை என்பது மக்களின் மாபெரும் குறை. இந்த நிலையில்தான் இடைத்தேர்தல்... 
அ.தி.மு.க-வை வெற்றித் தொகுதியாக மாற்ற அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டப் பயனாளிகளுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றைக் கொடுக்கும் நிகழ்ச்சியை குருவி குளத்தில் தொடங்கிவைத்துப் பேசிய அவர், ''கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் குடும்பத்துக்காகவே சிந்தித்தனர். இன்றைய முதல்வர் அம்மாவோ மக்களுக்காக சிந்திக்கிறார். மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்பதற்காக நிறைய திட்டங்களைச் செயல்படுத்துகிறார். அம்மாவுக்கு நீங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' எனத் தேர்தல் பிரசாரத்தையே தொடங்கிவிட்டார். சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மாடு, ஆடுகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து இலவசத் திட்டங்களையும் உடனே செயல்படுத்தும்படி உத்தரவு.
அ.தி.மு.க. சார்பில் ஸீட் கேட்டு பலரும் மேலிடத்துக்கு தங்கள் பயோ-டேட்டாவை அனுப்பத் தொடங்கிவிட்டனர். கருப்பசாமியின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அரசியலில் இறங்க ஆர்வம் காட்டவில்லை. மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெய்சங்கர், ஆசிரியர் பிரபா கரன் ஆகியோர் ஸீட் வாங்க தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். பிரபாகரன் கட்சிக்குப் புதியவராக  இருந்தும், மேலிட நிர்வாகிகள் சிலர் வழியாக 'மூவ்’ செய்வதால், அவருக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். அமைச்சர் கருப்பசாமியின் உறவினரான எஸ்.கே.கருப்பசாமியும் ஸீட் கேட்கிறார்.
இதனிடையே, இந்தத் தொகுதியில் பல்வேறு கிராமங்களிலும் ம.தி.மு.க-வுக்கு செல்வாக்கு அதிகம். இந்தச் சூழலில், 'சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் நிச்சயமாகப் போட்டியிடுவோம்’ என வைகோ அறிவித்து இருப்பதால் ஆளும் கட்சி இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு இருக்கிறது. 
குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட மைப்பாறை கிராமத்தில் கடந்த 14-ம் தேதி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தைக் கூட்டினார் வைகோ.
''இது தேர்தல் வேலைகளுக்கான முன்னேற்பாடா?'' என வைகோவிடம் கேட்டதற்கு, ''மாநிலம் முழுவதும் எங்கள் கட்சியின் அமைப்புகளைப் பலப்படுத்தி வருகிறேன். 'கட்சியின் வேகத்துக்கு ஏற்ப செயல்பட முடியாத நிர்வாகிகள் பொறுப்புகளில் இருந்து நீக்கப் படுவார்கள்’ என்பதைப் பல முறை தெரிவித்து இருக் கிறேன். கட்சியைப் பலப்படுத்துவதுதான் முதல் நோக்கம். அதற்காகவே இத்தகைய கூட்டங்கள்... நாங்கள் எப்போதும் மக்களின் நலனை முன்வைத்து செயல்படுவோமே தவிர, என்றைக்கும் தேர்தலை மனதில்வைத்து செயல்பட மாட்டோம்'' என்றார் திட்டவட்டமாக.
ம.தி.மு.க-விலும் ஸீட் கேட்கும் முடிவில் பலரும் வரிசையில் நிற்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ-வான சதன் திருமலைக்குமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். தவிர, மாவட்ட துணைச் செயலாளரான மாரியப்பன், கவிஞர் மணிவேந்தன் ஆகியோர் பெயர்களும் பட்டியலில் இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல்களிலும் தி.மு.க. தோற்று துவண்டுவிட்டதால், தொண்டர்கள் சோர்ந்திருக்கின்றனர். தங்கவேலு எம்.பி-யாகிவிட்டதால், அவருக்கு மாற்றாக சரியான வேட்பாளர் கிடைக்காமல் அந்தக் கட்சியினர் திணறுகிறார்கள். ஆளும் கட்சியை எதிர்த்து இடைத்தேர்தலில் ஜெயிப்பது எளிது அல்ல என்பதைப் புரிந்துவைத்திருக்கும் பலர், 'தங்கள் பெயரைக் கட்சி மேலிடம் பரிந்துரைக்காமல் இருந்தாலே நல்லது’ என்கிற எண்ணத்தில் இருக்கி றார்கள். இருப்பினும், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் துரை, கடந்த முறை போட்டியிட்டு கருப்பசாமியிடம் தோற்ற உமா மகேஸ்வரி, மகளிர் அணியைச் சேர்ந்த சீனியம்மாள் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிபடுகின்றன. இன்னொரு பக்கம், 'தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை’ என தெரிவித்துவிட்டு இடைத்தேர்தலையே தி.மு.க. புறக்கணித்துவிடும் என்கிற பேச்சும் பலமாக அடிபடுகிறது.
ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
*********************************************************************************
ஒரு விளையாட்டுச் சங்கம் சூதாட்டக் கிளப் ஆகிறதா?

அருண் பாண்டியன் மீது அதிரடி குற்றச்சாட்டு
'விளையாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சங்கம், சூதாட்டக் கிளப்பாக மாறிக்கொண்டு இருக்கிறது. உடனே, அதைத் தடுத்து நிறுத்துங்கள்...’ - ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044 - 42890005) இப்படி ஒரு கதறல் ஒலிக்கவே, அங்கு விரைந்தோம்.
பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் விளையாட்டுக்காக 1960-களில் ஆரம்பிக்கப்பட்டது, தமிழ்நாடு பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் அசோசி யேஷன்’. இந்தச் சங்கத்தில்தான் சர்ச்சைகள் புற்றீசலாகப் பறக்கின்றன. நடிகரும் தே.மு.தி.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வாக இருக்கும் அருண் பாண்டியன் சங்கத்தின் தலைவராக இருப்பதால், விவகாரம் வேறு மாதிரியாக கிளம்பி இருக்கிறது.
சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர், 'பெயர் வேண்டாம்’ என்ற நிபந்தனையோடு பேசினார்கள். ''இதே சங்கம் முன்பு மயிலாப்பூரில் இருந்தபோது லாபத்தில்தான் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அது லாயிட்ஸ் ரோட்டுக்கு மாற்றப்பட்டது. அதில் இருந்தே நஷ்டம்தான்! அதோடு, சங்கத்தின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள். அடுக்குமாடிக் கட்டடத்தில் இரண்டு தளங்களை வாடகைக்கு எடுத்து சங்கம் செயல்படுகிறது. மாத வாடகை  1.67 லட்சம். சங்க செலவுகளைச் சேர்த்து மாதத்துக்கு 4 லட்சம் ஆகிறது. இதை சமாளிக்கத்தான் சீட்டு ஆடுவதற்கு தனியாக கான்ட்ராக்ட் விட்டனர். பில்லியர்ட்ஸ் விளையாட வருபவர்கள், ரிலாக்ஸ் செய்துகொண்டு பாரில் மது அருந்துவார்கள். அப்படியே சீட்டும் விளையாடுவார்கள். ஆனால், பந்தயத்துக்குப் பணம் கட்ட மாட்டார்கள்.
ஆனால், இப்போது சீட்டு ஆட்டத்தைக் கான்ட் ராக்ட் எடுத்து இருப்பவர்கள், பணத்தை வைத்து  சூதாட்டம் நடத்துகின்றனர். இதற்காக அவர்கள் வாரத்துக்கு  50,000 சங்கத்துக்குக் கொடுக்கிறார்கள்.
 5,000 வரை பணம் கட்டி சீட்டு விளையாடுபவர்களுக்கு தனியாகஒரு ஹாலும்,  50,000 வரைசூதாடுபவர்​களுக்கு ஸ்பெஷலாக ஓர் அறையும் ஒதுக்கி இருக்கின்றனர். பணப் பரி​மாற்றத்துக்கு டோக்கன் சிஸ்டம். சங்கத்தின் பெரும்பாலான உறுப்பி​னர்கள் சீட்டு ஆடுவதில்லை. ஆடு​கிறவர்கள் பெரும்பாலும் தற்காலிக உறுப்பினர்கள்தான். இரண்டு வருடத்தில் மட்டும் சுமார் 250 தற்காலிக உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்நூக்கர், பில்லியர்ட்ஸ் விளையாட்டுகளைப் பற்றி அடிப்படை அறிவு கிடையாது. சங்கத்தில் உள்ள பார், கேன்டீன், ஸ்நூக்கர் போன்றவற்றுக்கு சங்கத்தின் பணியாளர்களே வேலை செய்ய, சீட்டு ஆடுவதற்காகத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வெளி ஆட்களை நியமித்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் சங்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கரை வேட்டிகளும் பணக்கார புள்ளிகளும்தான் இங்கு வந்து சீட்டு ஆடுகிறார்கள். தினமும் லட்சக்கணக்கில் பணம் புழங்குகிறது. நஷ்டத்தில் இருந்து சங்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அனைத்துத் தவறுகளையும் அனுமதிக்கிறார்கள்'' என்றார்கள்.
ஸ்நூக்கர், பில்லியர்ட்ஸ் ஆடிக்கொண்டு இருந்த சிலரிடம் பேசி​னோம். ''ஸ்நூக்கர் விளையாடத் தெரிந்தவர்களும் ஆர்வம் கொண்டவர்களுமே இங்கு உறுப்பினராக முடியும். ஆறு மாதம் ஸ்நூக்கர் ஆடிய பிறகே, அவரை உறுப்பினர் ஆக்குவார்கள். சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ரொம்பவும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே ஸ்நூக்கர் ஆடினார்கள்.  இப்போது சுமார் 700  உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பணக்கார விளையாட்டான இதை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட சங்கம், அந்தத் தடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. ஆண்டுக்கு ஓரிரு முறை ஏதோ பேருக்கு போட்டிகளை நடத்தி முடிக்கிறார்கள். சென்னையில் எங்கேயும் ஸ்நூக்கர் அசோஸியேஷன் இல்லை. சீரழிக்கப்படும் இந்தச் சங்கத்தில் அரசாங்கம் தலையிட்டுத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்கள் ஆதங்கத்துடன்.
சங்கம் செயல்படும் கட்டடத்துக்குப் போனோம். இரண்டாவது மாடியில் 'பார்’ மற்றும் சூதாட்டக் கிளப் இருந்தன. இரண்டு நாட்களுக்கு முன்பு, அங்கே பார் ஊழியர்களுக்கும் சூதாட்டக் கிளப்பின் ஊழியர்களுக்கும் தகராறு நடந்து கத்திக்குத்து வரை போனதாம். அதை மூடி மறைத்துவிட்டார்களாம்.
சங்கத்துக்கு அடிக்கடி வந்து போகும் உறுப்பினர் கள் சிலர் நம்மிடம், ''2003-ம் ஆண்டுதான் நடிகர் அருண் பாண்டியன் இங்கே உறுப்பினர் ஆனார். கடந்த ஆண்டு அவர் தலைவரான பிறகுதான் பிரச்னை தொடங்கியது. சங்கத்துக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காகவே எதையும் அவர் கண்டுகொள்வது கிடையாது. இப்போது எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார் என்பதால், அவரிடம் கேள்வி கேட்க அஞ்சுகிறார்கள். சூதாட்டக் கிளப்புக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருவதால், போலீஸ்காரர்களும் இதைக் கண்டுகொள்வதே இல்லை. பணம் கட்டி சூதாட்டம் நடப்பதை போலீஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குப் பின்னாலும் பணம் விளையாடுகிறது'' என்றார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அருண் பாண்டியனிடம் பேசியபோது, ''யாரோ உங்களிடம் தவறான தகவல்களைச் சொல்லி இருக்கிறார்கள். தற்காலிக உறுப்பினர்களாக யாரையும் சேர்க்கவில்லை. பணம் வைத்து சீட்டும் ஆடப்படவில்லை'' என்றார்.
இதுபற்றி, ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமாரிடம் பேசினோம். ''இதுகுறித்து விசாரிக்கிறேன்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கலாமா?
எம்.பரக்கத் அலி
************************************************************************
பாரதி வீட்டுக்குப் பூட்டு!

புதுவை பரிதாபம்
மிழுக்கு மட்டுமல்ல, தமிழனுக்கும் பெருமை மிகு அடையாளம், பாரதியார். புதுவை​யில் அவர் வசித்த வீடு அரசுடை​மை ஆக்கப்​பட்டு, நினை​வகமாக மாற்றப்பட்டது. கடந்த பல மாதங்களாகவே இந்த நினைவகம் பூட்டுப் போட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-42890005) புகார் வரவே, விரைந்து சென்றோம்.
அந்தப் பகுதி தமிழ் ஆர்வலர்கள்  வருத்தத்​துடன் நம்மிடம் பேசினார்கள். ''ஆங்கிலேயர் ஆட்சியின்போது தமிழகப் போலீஸாரின் பிடியில் இருந்து தப்பி 1908-ம் ஆண்டு புதுவைக்கு வந்தார் பாரதியார். அதன் பிறகு 1918 வரை இங்குதான் வசித்தார். அவர் வசித்த வீடு இந்திய விடுதலைக்குப் பிறகு அரசுடைமை ஆக்கப்பட்டு, நினைவு நூலகமாகவும், காட்சிக் கூடமாகவும் மாற்றப்பட்டது.
பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் உட்பட பலரும் அந்த இல்லத்துக்குச் சென்று பார்வை​யிட்டு வந்தனர். இந்த இல்லம் பராமரிக்கப்பட்டதன் நோக்கம் மக்கள் அனைவரும் பாரதியாரின் பெருமைகளை அறிய வேண்டும் என்பதுதான். ஆனால், பராமரிப்புப் பணிகளை செய்கிறோம் என்று கூறி, புதுவை அரசு பல மாதங்​களாக அந்த இல்லத்தை முடக்கி வைத்துள்ளது. ஆனால், அங்கு எந்த ஒரு பராமரிப்பு வேலைகளும் நடக்கவில்லை.
இங்கு இருந்த பாரதியார் படங்களும், புத்தகங்களும் பாரதிதாசன் நினைவு இல்லத்தில் இருப்பதாகஅறிவிப்பு பலகை வைத்து இருக்கிறார்கள். ஆனால், அங்கு பாரதியாரின் புத்தகங்கள் மட்டுமே ஒரு சிறிய அறையில் உள்ளதே தவிர, அவரது படங்கள் இல்லை. பாரதிதாசனின் புத்தகங்கள் மற்றும் புகைப்படங்கள் வைக்கவே அந்த இல்லத்தில் போதிய இடவசதி இல்லை. அங்கே போய் பாரதியாரின் புத்தகங்களை சிறிய அறையில் கண்துடைப்புக்காக வைத்துள்ளார்கள்.
புதுவை அரசின் வருவாயில் சுற்று​லாத் துறையின் பங்கு பிரதான​​மானது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணி​கள் இங்கு வருகின்றனர். சுற்று​லாப் பயணிகளைஊக்குவிப்​ பதற்காக சுற்றுலாத் தலங் களை புதுப்பிப்பதற்காக அரசு கோடிக்கணக்கில்செலவி டுகிறது. ஆனால், பல மாதங்​களாக மூடியே கிடக்கும் பாரதியாரின் நினைவு இல்லத்தை சீரமைத்து, செயல்படுத்த மட்டும் ஏனோ தயங்குகிறது.
பொதுவாக ஒரு பெரிய தலைவரின் பெயரில் ஒரு அரசியல் கட்சியோ, இயக்கமோ இருக்கும். அவர்கள் தங்களது தலைவரின் வரலாற்றை பாதுகாக்கப் போராடுவார்கள். ஆனால், பாரதியாரின் பெயரில் அரசியல் கட்சியோ, இயக்கமோ இல்லை. அதனால்தான் கேட்பார் யாரும் இல்லாமல் அனாதையாகி விட்டார் பாரதியார். ஆன்மிகவாதி அரவிந்தரை புதுவைக்கு அழைத்து வந்ததே பாரதியார்தான். அரவிந்தருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் புதுவை அரசு, பாரதியை மட்டும் புறந்தள்ளுகிறது.
இந்த இல்லத்துக்கு மட்டும் அல்ல, புதுவையில் பாரதியாருக்காகக் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்துக்கும் இதே நிலைதான். கடந்த 2006-ம் ஆண்டு அரியாங்குப்பத்தில் கட்டப்பட்ட பாரதியார் மணி மண்டபத்தில், இப்போது இருப்பது பாரதியார் சிலை மட்டுமே. அங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. பராமரிப்பு இல்லாததால் இரவு நேரங்களில் அந்த மண்டபம் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவிடுகிறது. பாரதியாரின் புத்தகங்களையும், படங்களையும் இங்கேயாவது வைக்கலாம்...'' என்று சொன்னார்கள்.
பாரதியார் மணி மண்டபத்தைப் பார்வையிட ஆர்வமாக வந்து ஏமாற்றத்தில் இருந்த மாணவர்களிடம் பேசினோம். ''நாங்க கும்பகோணத்துல இருந்து வந்து இருக்கோம். பாரதியார் நினைவு இல்லத்துக்குப் போனா அது பூட்டி இருந்துச்சு.  உள்ள ஒண்ணுமே இல்லையாம்...'' என்கிறார்கள் வெறுமையுடன்!
இதுகுறித்து கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குனர் சந்தானகிருஷ்ணனிடம் பேசினோம். ''பாரதியார் வசித்த வீடு 100 ஆண்டுகள் பழமையானது. இந்த இல்லத்தின் சுவர்கள் பாழடைந்துவிட்டன. மேலும், அங்கு இடப்பற்றாக்குறை நிலவுகிறது.  இதை எல்லாம் சரி செய்யத்தான் நினைவு இல்லத்தைப் பூட்டி வைத்துள்ளோம். அங்கே  80 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப் பட்டு உள்ளது. நிதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். நிதி வரவில்லை என்பதால் பணிகள் நடக்கவில்லை. நிதி கிடைத்ததும் பணிகள் துவங்கும். மற்றபடி பாரதியாரின் புகைப்படங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் பாதுகாப்புடன் உள்ளன. பாரதியார் மணிமண்டபத்திலும் வேலைகள் பாதியில் நிற்கின்றன. விரைவில் அதுவும் சீரமைக்கப்படும்...'' என்றார்!
அதுசரி, அதிகாரிகள் அடித்துப் பிடித்து வேலை பார்க்க பாரதியார் அரசியல் தலைவரா என்ன? ஒரு  தமிழ் கவிஞன்தானே!                   
ஆ.நந்தகுமார் படங்கள்: ஜெ.முருகன்
*********************************************************************************
புரளி கிளப்பும் மர்ம மனிதன்

பதற்றத்தில் வேலூர்
டந்த 14-ம் தேதி. வேலூர் கலெக்டர் அலுவலகம் கதிகலங்கி நின்றது. காரணம், வெடிகுண்டு மிரட்டல்.
ஐந்து மாடிகளைக் கொண்ட இரண்டு அடுக்குக் கட்டடம், வேலூர் கலெக்டர் அலுவலகம். சுமார் 1,400 பணியாளர்களைக் கொண்டது. சம்பவத்தன்று பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மனுக்கள் வாங்கும் நாள் என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகம். அன்று மாலை வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. நடந்த சம்பவம் பற்றிப் பேசுகிறார், வேலூர் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். ''திங்கட்கிழமை மாலை 4.20 மணிக்கு டி.எஸ்.பி. அலுவலகத் துக்கு போனில் பேசியவர், 'கலெக்டர் ஆபீஸ்ல குண்டு வைச்சிருக்கோம்... இன்னும் ஒரு மணி நேரத்தில் கண்டிப்பா வெடிக்கும்’ என்று சொல்லி விட்டு உடனே போனை வைத்துவிட்டான். எங்களுக்கு பெரும் அதிர்ச்சி. என்ன செய்வது என்று நாங்கள் முடிவு செய்வதற்குள் மறுபடியும் இரண்டு முறை அவனே போன் செய்து, 'கண்டிப்பாக வெடிகுண்டு வெடிக்கும். உங்களால் முடிஞ்சதை நீங்க பண்ணிக்கோங்க’ என்று சொல்லி கட் செய்துவிட்டான். உடனே வெடிகுண்டு பரிசோதனைக்காக கலெக்​டர் ஆபீஸ்க்குப் போனோம். அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களிடம் பக்குவமாக நிலைமையைச் சொல்லி, அவர்களைப் பத்திரமாக வெளியேற்றினோம். வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பரிசோதனை செய்தபிறகே, வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது. வேலூர் மாவட்ட ஆட்சியரும், வேலூர் எஸ்.பி-யும் சென்னையில் நடந்த முதல்வர் மாநாட்டில் கலந்து கொண்ட நேரத்தில் வந்த மிரட்டலால் நாங்கள் பதறிப் போனது உண்மைதான். ஆனால் இந்த சூழலில் மக்கள் பதறியடித்து ஓடுவதால்தான் இழப்பு அதிகம் ஏற்படும் என்பதால் நிலைமையைப் பக்குவமாக கையாண்டு சிக்கலைத் தவிர்த்தோம்'' என்று படபடப் பாகப் பேசினார்.
இதுகுறித்து விசாரணை நடத்திவரும் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்,  ''சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் நம்பரை சோதித்தபோது, அவன் கொடுத்திருப்பது பொய்யான முகவரி என்பது தெரிந்தது. அவன்தான் வழக்கமாக 100, 101 போன்ற எண்களுக்கு போன் செய்து தவறான தகவல்களைச் சொல்லி வருகிறான் என்பதையும் கண்டு பிடித்து இருக்கிறோம். விரைவில் அவனைப் பிடித்துவிடுவோம்'' என்றார்.
''இதுபோன்று புரளி கிளப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்'' என்று எச்சரிக்கை செய்துள்ள வேலூர் எஸ்.பி. கயல்விழி, அந்த மர்ம மனிதனைப் பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்​ளாராம்.
மக்களைப் பதறவைக்கும் மர்ம மனிதன் பிடிபட்டால்தான், வேலூர் மக்கள் நிம்மதி அடைவார்கள்.

கே.ஏ.சசிகுமார்
படங்கள் : ச.வெங்கடேசன் 
*********************************************************************************
பணம் ஒதுக்கியாச்சு... கட்டடம் என்னாச்சு?

வேலூர் பள்ளி வேதனை
ரு பக்கம் சமச்சீர்க் கல்வி வெற்றி விழா என்ற பெயரில் தி.மு.க-வினர் வரிந்து கட்டிக்கொண்டு தமிழகம் எங்கும் பொதுக் கூட்டம் போட... வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மொணவூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கட்டட வசதி இல்லாமல், மரத்தடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டு இருக்கின்றனர். 'பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு கான்ட்ராக்ட் எடுத்தவர் சசிகுமார். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் நகராட்சி சேர்மன் விஜயலட்சுமியின் மகன். அதனால்தான் இந்தத் தாமதம்’ எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கு கின்றார் அ.தி.மு.க. சத்துவாச்சாரி நகர துணை செயலாளரான ஆர்.பி.ரமேஷ்.
''பள்ளிக்கூடத்தில் போன வருஷம் சத்துவாச்​சாரியைச் சேர்ந்த சசிகுமார் கட்டடத்தைக் கட்டத் தொடங்கினார். ஆனா, ரெண்டு மாசம்தான்... அதுக்குப் பிறகு எதுவும் நடக்கலை. சசிகுமாரும் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. மழைக் காலத்தில், குழந்தைகள் ரொம்பக் கஷ்டப்படுறாங்க. அதனால்தான், கலெக்டரிடம் புகார் செஞ்சேன். ஸ்கூல் பக்கத்தில் இலங்கை அகதிகள் முகாமும் இருக்குது, அங்கிருந்தும் 40 புள்ளைங்க இங்கு வந்து படிக்கிறாங்க. இது மட்டுமில்லாம, சத்துவாச்சாரி பகுதியில் உள்ள அரசுப் பூங்கா நிலங்களை சசிகுமாரின் அப்பா ஆர்.பி.ஏழுமலையும் அவர்களது உறவினர்களும் சேர்ந்து வித்துட்டாங்க. இது சம்பந்தமாவும் புகார் கொடுத்து இருக்கேன். கலெக்டர்தான் நல்ல தீர்வைக் கொடுக்கணும்!'' என்றார் ஆர்.பி.ரமேஷ்.
மேல்மொணவூர் பள்ளியைப் பார்வையிட்டோம். நம்மிடம் பேசிய பெயர் கூற விரும்பாத ஆசிரியர்ஒருவர், ''இந்த ஸ்கூலில் 430 பையன்களும், பெண்களும் படிக்கிறார்கள். 2008-ம் ஆண்டில் இது உயர்நிலைப் பள்ளியாக மாறியது. நபார்டு மூலமாக போன வருடம் அக்டோபர் மாதம் 85 லட்சம் செலவில் கட்டடப் பணிகளைத் துவக்கினார்கள். ஆனால், தி.மு.க ஆட்சி மாறியதும் அப்படியே நின்றுபோனது. இங்கு 12 வகுப்பு அறைகளும், அறிவியல் அறைகளும் கட்டுவதாகத் திட்டம். இங்கு படிக்கும் மாணவர்களின் 10-ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் 82 விழுக்காடு. படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு அறை இல்லாமல் இருந்தால் எப்படிப் படிப்பார்கள்? நாங்களும் உயர் அதிகாரிகளிடம் நிலை​மையைத் தெரிவித்தோம். அவர்கள் சென்ற வாரம் வந்து பார்த்துவிட்டுப் போனதோடு சரி. அரசுதான் மாணவர்களின் எதிர்காலத்தைப்பற்றித் தீர்மானிக்க வேண்டும்'' என்றார் வேதனையுடன்.
சசிகுமாரிடம் பேசினோம். ''எங்க அப்பா​வுக்கு மூணு மாசமா உடல் நிலை சரியில்லை. அதனால்தான் பணிகள் ஆரம்பிக்க வில்லை. இப்போ வேலைகளை தொடங்கிட்டோம். கூடிய சீக்கிரமே முடிச்சிடுவோம்'' என்று  சொன்னார்.
வேலூர் மாவட்டக் கலெக்டர் நாகராஜ​னிடம் விஷயத்தைச் சொன்னோம். ''உடனே பள்ளியின் நிலவரத்தைப் பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதி சொல்லி இருக்கிறார்.
கல்வியோடு விளையாடுவதை அரசியல்வாதிகள் எப்போது நிறுத்தப் போகிறார்கள்?
கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்.
*********************************************************************************
மீண்டும் தொடங்கி விட்டதா கடத்தல் தொழில்?

நாகை கடலோர அதிர்ச்சி!
நாகை கடலோரப் பகுதியில் முற்றிலும் தடுக்கப்பட்டு இருந்த கடத்தல், மீண்டும் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கி விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.
சம்பவம் 1:
கடந்த 11-ம் தேதி அதிகாலையில் வேளாங் கண்ணிக்கு அருகேயுள்ள பரவை கிராமத்தில் உள்ள சோதனைச் சாவடியில் சுங்கத்துறை அலுவலர்கள், வாகனச் சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர். அதிவேகமாக வந்த (டி.என்.51 இ 6639) சுமோ காரில், ஒரு தங்க பிஸ்கட் 100 கிராம் எடையில், 156 பிஸ்கட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு சுமார்  4.5 கோடி என்று கூறப்படுகிறது. விசாரணையில், கோடியக் கரையைச் சேர்ந்த ஆனந்த் என்பவர்தான், இந்தக் கடத்தலுக்குப் பின்னணியில் இருக்கிறார் என்பது தெரிந்து, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ராஜீவ் கொலைச் சதியில் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையின் போது தூக்கு மாட்டி இறந்துபோன, கோடியக்கரை மிராசுதார் சண்முகத்தின் மகன்தான் இந்த ஆனந்த். உடனே இந்த விவகாரத்துக்காக ஆனந்த் மற்றும் கோடியக்காடு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வேதையனையும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
சம்பவம் 2:
வேதாரண்யம் டி.எஸ்.பி-யான குணசேகரன் தலைமையில் போலீஸ் படை, தேத்தாக்குடி தெற்கு கிராமத்துக்கு கடந்த 13-ம் தேதி சென்றது. அங்குள்ள காந்தி நகரில் வசிக்கும் ஆல்பர்ட் குரூஸ் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த போலீஸ் படை, வீட்டை சல்லடையாக சலித்தனர். பரணில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஒரு பாலிதீன் பையைக் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் 2005-10 என்று அந்தப் பையின் மேல்பக்கம் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பைக்குள் இருந்தது, 885 கிராம் ஹெராயின். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சுமார்  80 லட்சம். இலங்கை அகதியான ஆல்பர்ட் குரூஸ், 1989-ம் ஆண்டு இந்தியா வந்து, தேத்தாக்குடி கிராமத்தில் தங்கியவன். அதே கிராமத்தைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணை, திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி இருக்கிறான். இவனுடன் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று விசாரணை நீண்டு வருகிறது.
இந்த இரண்டு சம்பவங்களும் காட்டுவது என்ன?
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான மயிலாடுதுறையைச் சேர்ந்த இராம.சிவசங்கர்,  ''நாகை மாவட்டம் நீண்ட கடற்கரையைக் கொண்டது. அதனால், பல்வேறு குற்றங்கள் கடலோரத்தை மைய மாகக் கொண்டே நடக்கும். இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கும் நாகை மாவட்டம் கோடியக்கரைக்கும் இடையே 15 கடல் மைல் தூரம்தான். அதனால்தான் எல்லை தெரியாமல் மீன்பிடிக்கப் போகும் வேதாரண்யம் மீனவர்கள், இலங்கை  ராணுவத்தினரால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். இந்த குறைந்த தூரம் கடத்தல்காரர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. ராஜீவ் கொலைக்கு முன்பு, இலங்கை - கோடியக்கரை இடையே படகுப் போக்குவரத்து மிகவும் சாதாரணமாக நடந்துவந்தது. இலங்கையில் இருந்து தங்கம், வெள்ளி, கிராம்பு போன்ற பொருட்களைக் கடத்தி வருவார்கள். அரிசி, துணி, மருந்து, பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை இங்கிருந்து கடத்திச் செல்வார்கள். அதனால், கோடியக்கரை பகுதியில் பல திடீர் பணக்காரர்கள் உருவானார்கள். ராஜீவ் கொலைக்குப் பிறகு, நாகை கடலோரப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதனால், கடத்தலுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. இப்போது, தங்க பிஸ்கட் மற்றும் போதை பவுடர் சிக்கி இருப்பதைப் பார்த்தால், கடத்தல் தொழில் மீண்டும் தலையெடுத்துவிட்டது என்றே தெரிகிறது. மாபெரும் குற்றங்கள் நிகழும் முன்பே மத்திய, மாநில அரசுகள் உடனே கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்'' என்றார்.
''தமிழக கடலோரத்தில், ராமேஸ்வரம் பகுதியில் மட்டும் கண்காணிப்பு இன்னமும் கடுமையாக இருக் கிறது. அதனால் கடத்தல் புள்ளிகள், கண்காணிப்பு குறைவாக இருக்கும் கோடியக்கரை பகுதியை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். முன்பு இந்தத் தொழிலில் இருந்த ஆட்களையே மீண்டும் பயன்படுத்துகிறார்கள். அப்படித்தான் ஆனந்த் களம் இறக்கப்பட்டு உள்ளார். அதேபோல், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அகதி டிலோ என்பவன் இரண்டு மாதங்களுக்கு முன் ஹெராயின் பாக்கெட்டை, ஆல்பர்ட் குருஸிடம் கொடுத்து வைத்திருக்கிறான். இதுபற்றி, எங்களுக்கு ரகசிய தகவல் வரவே, நடவடிக்கையில் இறங்கினோம்'' என்கிறது போலீஸ் வட்டாரம். 
நாகை மாவட்ட எஸ்.பி. ராமரிடம் பேசினோம். ''போலீஸார் மிகவும் விழிப்போடு கண்காணித்து வருகின்றனர். அதனால்தான், ஹெராயினைக் கைப் பற்ற முடிந்தது.  தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இலங்கையில் இருந்து இந்திய ராணுவத்தின் கடற்படை, சுங்கத் துறை, கடலோர காவல்படை இவை மூன்றையும் தாண்டி ஊருக்குள் வருவது குறித்து, நாங்களும் தீவிரமாக விசாரித்து வருகிறோம். எல்லா துறைகளும் இணைந்து, கடத்தலைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பாதுகாப்பு பலமாகவே இருக்கிறது'' என்றார்.
கடலோரப் பகுதி அமைதியாக இருந்தால்தான், நாட்டு மக்கள் பாதுகாப்புடன் நிம்மதியாக இருக்க முடியும்!
கரு.முத்து
************************************************************************
தே.மு.தி.க-வுக்கு அதிர்ச்சி... பா.ம.க-வுக்கு பேரதிர்ச்சி!

மதுரை ஏரியாவில் 'அம்மா' வைத்தியம்
ள்ளாட்சித் தேர்தல் முடிவு கொடுத்த அதிர்ச்சி போதாது என்று, தேனி மாவட்ட தே.மு.தி.க. செயலாளரும் கூடலூர் நகராட்சியின் தலைவருமான அருண்குமார் இன்னொரு அதிர்ச்சியை விஜயகாந்துக்குக் கொடுத்துவிட்டார்.
அருண்குமார் விஜயகாந்த்தின் தீவிர விசுவாசி யாக இருந்தவர். விஜயகாந்த்தின் 53-வது பிறந்த நாளை முன்னிட்டு 53 ஜோடிகளுக்கு சொந்தப் பணத்தில்  20 லட்சம் செலவு செய்து இலவசத் திருமணம் நடத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவி, கம்பம் இடைத் தேர்தல் வேட்பாளர் என கட்சி இவருக்கு அங்கீ காரம் கொடுத்தது. இந்த நிலையில்தான் கூடலூர் நகராட்சி சேர்மன் பதவிக்கு நின்று வெற்றி பெற்று விஜயகாந்த்திடம் சபாஷ் வாங்கினார். ஆனால், நகராட்சியின் முதல் மன்றக் கூட்டமே நடக்காத நிலையில், திடீரெனக் கட்சி மாறிவிட்டார் அருண்குமார்.
இதுகுறித்து தே.மு.தி.க. கட்சியினரிடம் விசாரித்தோம். ''சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கேப்டன் எடுத்த எடுப்பிலேயே, அருண்குமாரை கை காட்டி எழுந்தரிக்கச் சொன் னார். 'தேனி மாவட்டத்தில் 35 நிர்வாகிகள் இருக் காங்க. ஆனால், 19 பேரை மட்டும்தான் கூட்டிட்டு வந்து இருக்கீங்க. நைட்டு 8 மணிக்கு மேல் கட்சி நிர்வாகிகள் போன் போட்டா எடுக்குறது இல்லை. அப்படியே எடுத்தாலும் மதிச்சுப் பேசுறது இல்லை. நீ எப்படி ஜெயிச்சேன்னு எனக்குத் தெரியும். ஜெயிச்சா மட்டும் போதுமா? நீ பணக்காரன்னா அதை உன்னோட வெச்சுக்கோ. உன்னை நம்பி என் கட்சி இல்லை...'' என்று ஒருமையில் பேசி இருக்கிறார்.
இதைக் கேட்டு மனம் உடைந்துப் போன அருண்குமார் கண்கலங்கி வெளியேறினார். அதன்பின்பு அவர் அ.தி.மு.க-வின் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ-வான தங்கதமிழ்செல்வனிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். 'இனி ஒரு நொடிப் பொழுதுகூட தே.மு.தி.க-வில் இருக்க நான் விரும்பவில்லை. அம்மாகிட்ட நேரம் வாங்கிக் கொடுங்க’ என்று கேட்டிருக்கிறார்.
தங்கதமிழ்செல்வன் இதுதொடர்பாக தோட் டத்துக்கு தகவல் அனுப்பியதும், முதலில் அனுமதி கிடைக்கவில்லை. அதன்பிறகு என்ன நினைச் சாங்களோ தெரியலை... அருண்குமாரை கூட்டிட்டு வரச் சொல்லி சேர்த்துக்கிட்டாங்க'' என்றார்கள்.
ஆனால், இன்னொரு தரப்பினரோ, ''சமீபத்தில் இவரது குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் பல கோடி மதிப்புள்ள ஹெராயினை போலீசார் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக இவரது உறவினர்களை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே அருண்குமார் அ.தி.மு.க-வில் சரண்டர் ஆனார்...'' என்கிறார்கள்!
அருண்குமாரிடம் பேசினோம் ''என்னை பல வகையில் காயப்படுத்தி விட்டார்கள். பழையவிஷயங்களைப் பேசி யார் மனதையும் நான் புண்படுத்த விரும்பவில்லை. எனது உழைப்புக்கு தே.மு.தி.க-வில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பலவகைகளிலும் அவமானப்படுத்தப் பட்டேன்; புறக் கணிக்கப் பட்டேன். அதனால், அக் கட்சியில் இருந்து வெளியேறி விட் டேன். மற்றபடி நான் யார் மீதும் குறை சொல்ல விரும்ப வில்லை. எது நியாயம் என்பது அவரவர் மனசாட்சிக்குத் தெரியும். போதைப் பொருள் பிடிபட்டது, வழக் குக்குப் பயந்து கட்சி மாறினேன் என்பது எல்லாம் கட்டுக் கதை. பாரம்பரியமான எங்கள் குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கவே சிலர் இப்படி கிளப்பி விடு கிறார்கள்'' என்றார் விரக்தியுடன்.
தே.மு.தி.க-வுக்கு அதிர்ச்சி என்றால் பா.ம.க-வுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. தமிழகத்தில் 10 மாநகராட்சி களுக்கும் மேயர் வேட்பாளர்களை பா.ம.க. நிறுத்தியது. ஒன்பது இடங்களில் பா.ம.க. வேட்பாளர்கள் வேட்பு மனுவையாவது தாக்கல் செய்தார்கள். மதுரையில் அதுவும் இல்லை. இத்தனைக்கும் இங்கே கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வில்லாபுரம் ரமேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். 'சொந்தப் பிரச்னை காரணமாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வில்லை’ என்று சொன்ன ரமேஷை இப்போது அ.தி.மு.க-வில் இழுத்துப் போட்டிருக்கிறார் மேயர் ராஜன் செல்லப்பா. ரமேஷ் மாத்திரமல்ல, பா.ம.க-வின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், துணைச் செயலாளர் வல்லத்தரசு, தலைவர் பொற்கை பாண்டியன், மாணவரணி மாவட்டத் தலைவர் சோமசுந்தரம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பாண்டி காமாட்சி, தலைமை செயற்குழு உறுப்பினர் பழக்கடை சண்முகம் உள்ளிட்ட மதுரை பா.ம.க. கூடாரமே இப்போது அ.தி.மு.க-வில் ஐக்கியம். இதில் பழக்கடை சண்முகம், ராமதாஸின் நெருங்கிய உறவினர். இவர்கள் அனைவரும் கடந்த 15-ம் தேதி ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க-வில் ஐக்கியமானர்கள்.
பா.ம.க-வினரோடு சேர்ந்து மதுரை மாநகராட்சியின் சுயேச்சை கவுன்சிலர்களான மணி, மோகன், ஷாலினி தேவி, காதர் அம்மாள், ராமசுப்பிரமணியன், ஹமீதா பேகம், சந்தியா ஆகிய ஏழுபேரையும் அ.தி.மு.க-வில் ஐக்கியப்படுத்தி இருக்கிறார் ராஜன் செல்லப்பா. இதில், ஷாலினி தேவியின் கணவர் சந்திரன் கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வில் ஸீட் கிடைக்காததால் சுயேச்சையாக நின்று கவுன்சிலரா னவர். இந்தமுறை இவரது மனைவிக்கு ஸீட் மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக களம் இறக்கி ஜெயிக்க வைத்தார். மாரியும் அ.தி.மு.க-வில் ஸீட் கிடைக்காமல் சுயேச்சையாக ஜெயித்தவர்தான். காதர் அம்மாளும் ராமசுப்பிரமணியனும் தி.மு.க. சுயேச்சைகள். சந்தியா காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்து வெற்றி பெற்றவர். மற்ற இருவரும் அக்மார்க் சுயேச்சைகள். இந்த இழுப்பு படலத்தைப் பார்த்து விட்டு தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரும் சபலப்பட்டுக் கிடக்கிறார்களாம்.!
குள.சண்முகசுந்தரம்,
இரா.முத்துநாகு
************************************************************************
'முதலைப்பட்டி பஸ் நிலையம் வேண்டாம்!'

எதிர்க்கும் நாமக்கல் மக்கள்!
நாமக்கல்லின் மையப் பகுதியில் இருக்கும் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பதால், நகருக்கு வெளியே முதலைப் பட்டி என்ற இடத்தில் புதிய பஸ் நிலையம்  அமைக்கப்படுகிறது. இதற்கு நகர மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர்.
இதுபற்றி பொதுமக்களிடம் விசாரித்த போது. ''என் பேர் அமுதா. நான் இந்த பஸ் நிலையத்துக்குப் பக்கத்தில்தான் சுய தொழில் செய்கிறேன். வீடும் பக்கத்திலேயே இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கும் இந்த பஸ் நிலையம்தான் வசதி. இப்போது சிட்டியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முதலைப்பட்டியில் பஸ் நிலையம் அமைக்கப் போகிறார்களாம். இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு இது சரியில்லை. வீட்டில் இருந்து வேலைக்கு வர இரண்டு பஸ் மாறி வர வேண்டும். மார்க்கெட், அரசு மருத்துவமனை, கல்லூரிகள் எல்லாம் இங்குதான் பக்கத்தில் இருக்கின்றன. கிராமத்து மக்களுக்கும் இதுதான் தோதாக இருக்கிறது. ரிங் ரோடு அமைத்து லாரிகளை சிட்டிக்குள் உள்ளே வராமல் தடுத்தாலே முழுமையாக போக்குவரத்தைக் கட்டுப்படுத்தலாம். அதைவிட்டு, தேவையில்லாமல் இப்படி முடிவெடுத்து இருக்கிறார்கள்'' என்று கவலைப்பட்டார்.
 
தமிழ்நாடு வணிகர்கள் சங்கங் களின் பேரவையின் நாமக்கல் மாவட்ட தலைவர் பழனி யப்பன், ''இப்போது இருக்கிற பஸ் நிலையத்தை சுற்றிதான் காவல் நிலை யம், மருத்துவமனை, அரசு குடியிருப்பு, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக மையங்கள் எல்லாம் செயல்படுகின்றன.  கோயிலுக்கோ, அவசரமாக மருத்துவமனைக்குப் போவ தற்கோ இங்கிருந்து சுலபமாக போய் வரலாம். முதலைப்பட்டியில் புதிய பஸ் நிலையத்தை அமைப்பதை விட, இருக்கும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்தால் போதும்... போக்குவரத்துப் பிரச்னையை சமாளிக்க முடியும்'' என்றார்.
காங்கிரஸ் பிரமுகரான வாசு சீனிவாசன், ''நாமக்கல் பஸ் நிலையம் அரசியல்வாதிகளின் சுய நலத்துக்காகத்தான் மாற்றப்படுகிறது. கடந்த தி.மு.க. அரசு கொண்டுவந்த நல்ல திட்டங்களையே மாற்றும் இந்த அரசு, வேண்டும் என்றே பஸ் நிலையத்தைப் மாற்ற தீர்மானத்தைப் போட்டிருக்கிறது. இதைத் தவிர, தற்போது ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. நகராட்சித் தலைவர் கரிகாலன் உடனே இதை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் என்ன? அதுவும் பொங்கலூர் பழனிச்சாமியின் சம்பந்தி இடத்தின் நடுவில் பாதை அமைத்து அவசர அவசரமாக செயல்படுத்துவதன் நோக்கம் என்ன? நாமக்கல்லில் தி.மு.க., அ.தி.மு.க. என்ற பாகுபாடு இல்லாமல் கைகோத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுக்கிறார்கள். இவர்களின் நிலங்களும், நாமக்கல்லில் இருக்கும் முக்கிய அரசியல்வாதிகளின் நிலங்களும் அந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. அந்த நிலங்களின் மதிப்பு அதிகரிக்கவும், அவற்றில் லாட்ஜுகள் மற்றும் கடைகளைக் கட்டி வாடகைக்குவிடும் நோக்கத்தில்தான் பஸ் நிலையத்தை அங்கு கொண்டுசெல்கிறார்கள். இது பொதுமக்களுக்கு எதிரான திட்டம்தான்'' என்றார்.
நகராட்சித் தலைவர் கரிகாலன் என்ன சொல்கிறார்? ''இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது கடந்த ஆட்சியின்போதே நிறைவேற்றப்பட்ட திட்டம். ஆகவே, கலெக்டரிடமே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்'' என்றார் 'பொறுப்பாக!’
நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் நம்மிடம், ''சேலம் மெயின் ரோட்டை ஒட்டியே புதிய பஸ் நிலையம் வரப்போகிறது. நகராட்சியின் எல்லைக் குள்தான் இது வருகிறது. இதனால், நகராட்சிக்கு எந்த வருமான இழப்பும் வராது. நாமக்கல்லின் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டு இருப்பதால், இதுமாதிரியான பகுதிகளில், எதிர்காலத்தைக் கருதி டிராஃபிக் இல்லாத நகரமாக உருவாக்க இந்தத் திட்டம் வாய்ப்பாக இருக்கும். பஸ் நிலையத்தை நகருக்கு வெளியே கொண்டுபோனால் ரூட் பஸ்கள் உள்ளே வராது. சேலத்தில் இருந்து திருச்சிக்கு, மதுரையில் இருந்து பெங்களூருக்குப் போகிறவர் கள் நகரின் வெளியிலேயே போய் விடுவார்கள். அதனால், போக்குவரத்து நெரிசலும் குறையும். முதலைப்பட்டியில் இரண்டு சர்வே எண்களில் 16 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமாக இருக்கிறது. தனியார் நிலத்தை எடுத் தால் பல பிரச்னைகள் கிளம்பும். அதற்காகத்தான் அரசு நிலத்தை நகராட்சி தீர்மானம் போட்டிருக்கிறது. அதைக் கலெக்டரால் மாற்ற முடியாது.
தற்போது புதியதாக அமைந்துள்ள நகராட்சி மன்றத்தில் கேன்சல் செய்தாலும், அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. ரிங் ரோடு என்பது புதிதாக உருவாக்க வேண்டிய திட்டம். சேலம் ரோடு, சேந்தமங்கலம் ரோடு, துறையூர் ரோடு, திருச்சி ரோடு, ,மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு என ஆறு ரோடுகளையும் இணைக்க வேண்டும். அதற்காக நிலங்களை முதலில் சர்வே செய்து நிலங்களைக் கையகப்படுத்திய பிறகே நிறைவேற்ற முடியும். அதற்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும். ஆகவே, நாமக்கல் மக்களின் எதிர்கால நன்மையை கருத்தில்கொண்டுதான் புதிய பஸ் நிலையத்தை அமைக்கிறோம்'' என்றார்.
வீ.கே.ரமேஷ்
படங்கள்:   மகா.தமிழ்பிரபாகரன்
*********************************************************************************
செய்வீங்களா வேலுச்சாமியண்ணா!

கோவை துயரத்தை விளக்கும் கடிதம்
டித்து நொறுக்கிய மழையால் அலங் கோலமாகிக் கிடக்கிறது கோவை மாநகரம். எங்கும் சகதிக் காடுகள், குப்பை மேடுகள், தொற்று நோய்கள்... இந்தக் கொடுமைகளைப் பார்த்து கோவை மாநகரின் குடிமகனான வெள்ளிங்கிரி, மேயர் செ.ம.வேலுசாமிக்கு குமுறித் தள்ளிய கடுதாசியின் ஜெராக்ஸ் நம்மிடமும் சிக்கி யது. மேயரையும் மட்டுமின்றி, படிக்கும் எல்லோரையும் வார்த்தைகளால் துவைத்துக் காய வைத்திருக்கிறார் வெள்ளிங்கிரி. சாம்பிள் இதோ... 
வணக்கத்துக்குரிய மேயருக்கு!
வெள்ளிங்கிரி வைக்கிறான் வணக்கமுங்க. காலங்காலமா கட்சியில் கட்டங்கட்டப்பட்டுக் கிடந்த உங்க மேலே சமீப காலமா தெய்வத் தாயாம் முதல்வரம்மாவோட அருள் அமோகமா விழுந் திருக்குனு பத்திரிக்கையில் படிச்சேனுங்க. அடுத்து எந்த எறக்கமும் வந்துடாம மேயர் சமூகம் இதே ஏத்தத்தோட வாழணும்னு வாழ்த்துகள்!
நான் கடுதாசி போட்ட காரணமே வேறேங்க... ஏதோ சுனாமி வந்து சுருட்டிட்டுப் போன மாதிரி கிடக்குதுங்க கோவை சிட்டி. எந்த வீதியில் இறங்குனாலும் பள்ளம், மேடும்... ஒட்டுக்க நாலு தூறல் பெய்ஞ்சா தெப்பக்குளத்துக்குள் தேர் விட்டமாதிரி கார், பைக்குங்க மிதக்குதுங்க. சீர்மிகு கோவை மாநகரோட ரோடுங்க நாசமாப் போயி கிடக்குறதை நான் சொல்லித்தான் உங்களுக்கு வெளங்கோணும்னு அவசியம் இல்லிங்க. மழை ஓஹோன்னு பெய்ஞ்சப்ப, முழங்காலுக்கு மேலே வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கிட்டு நீங்க ஊர் சுத்தி வந்த போட்டோக்களை பேப்பர்ல பார்த்தேனுங்க.ஆஹா, புது மேயர் பவுசு காட்டாம சகதிக்குள்ளே சலாம் போடுறாரேன்னு சந்தோஷப்பட்டாலும், உங்க பக்கத்தில் நிக்கிற பேர்வழிங்களை பார்க்கிறப்ப அடி வயிறு பத்திக்கிட்டு எரியுதுங்ணா. போன அஞ்சு வருஷமா அதே ஏரியாவோட கவுன்சிலரா இருந்து ரோடு போடுறதுக்காக ஒரு கருங்கல்லைக்கூட தூக்கிப் போடாத ஆளுங்க, உங்களோட நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுக்கு கிறாங்க.  வாங்குன ஓட்டுக்கு ஓரளவாச்சும் உழைச்சிருந்தா ஒவ்வொரு வார்டுலயும் இம்புட்டு சேதாரம் இருந்திருக்காதுங்க. உதாரணமா ஒண்ணு சொல்றேனுங்க, வேளாண்மைப் பல்கலை பக்கத்துல பாப்பநாயக்கன்புதூர்னு ஒரு ஏரியா இருக்குங்க. அங்கே பல வீதிகள்ள பாதாளச் சாக்கடை கட்ட குழிதோண்டிட்டுப் போயி ரெண்டு மாசமாவுதுங்க. நடக்கக்கூட வழியில் லாம அந்த ஏரியா நாறிப்போய் கிடக்குதுங்க. வூட்டுக்கு வெளியில் ஒருத்தனும் நிம்மதியா போய் வரமுடியலை. பள்ளிப் புள்ளைங்க பாதி பேர் அதில் புரண்டு எந்திரிச்சுதான் போகுதுங்க. மளிகைக் கடைக்கு கடலை மாவு வாங்கப் போன எங்க ஆயா, குழியில் குப்புற விழுந்து மூச்சுப் பேச்சில்லாம போயிடுச்சு. அட! அவசரத்துக்கு ஆம்புலன்ஸ்கூட வந்து போக முடியலிங்ணா. இப்படி சிட்டி முழுக்க ஒவ்வொரு வீதியிலேயும் ஆயிரத்தெட்டுப் பிரச்னை இருக்கு துங்ணா. மழைத் தண்ணியில் படை பரிவாரத்தோட நீங்க சுத்தி வந்ததெல்லாம் சரிதானுங்க. வேட்டிய மாத்துன கையோட இந்த மேட்டரையும் கொஞ்சம் நீங்க யோசிக்கோணும்.
சொன்னா கேவலமுங்க! 'ஆய்’ இருக்கப் போயி ரயில்ல அடிபட்டு அகால மரண மாகுற கொடுமை கோயமுத்தூர்லதான் நடக்குதுங்ணா. அதுவும் புறநகர்ல இல்லிங்ணா... நம்ம சிட்டியில் வடகோவை, ரத்தினபுரி, பீளமேடு பக்கமாதான் இந்த குரூரம். வூட்டுல கக்கூஸ் இல்லாத ஏழைங்க, பொதுக்கழிப்பிடம் இல்லாம கண்ணுமண்ணு தெரியாம கருக்கல்ல ரயில்வே லைனைத் தாண்டி ஒதுங்குறாங்க. அப்படி அவசரமா ஓடுறப்ப, ஹாரன் அடிக்காம ரயில் வர்றதால அடிபட்டு செத்துப் போறாங்க. மூச்சுக்கு முன்னூறு வாட்டி கோவையை 'சிட்டி... சிட்டி!’னு பெருமையா பேசிக்குறோமுங்க. ஆனா, அந்த சிட்டிக் குள்ளேதான் இந்தக் கேவலங்க. இதை எப்போ மாத்தப்போறீங்கணா? இன்னொரு மேட்டர் இருக்குதுங்கணா... வெளியூர் ஆளுங்க வந்து போனா 'ஒன்ஸ்’ அடிக்க முடியாம அவஸ்தைப்படுறாங்க. சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுலேயும், காந்திபுரம் சிட்டி பஸ் ஸ்டாண்டுலேயும் யூரின் போக உருப்படியா ஒரு இடம் இல்லைங்க. இருக்குற டாய்லெட்டுல மூணு ரூபா, நாலு ரூபானு கொடுத்துப்போறாங்கண்ணா... இதனால சுகாதாரம் சீரழிஞ்சு கெடக்குதுங்க. 'யூரினுக்கு மூணு ரூபாயா?’-னு கேட்டா 'நடு ரோட்டுல போயேன், காசே கிடையாது’னு வாய்க் கொழுப்பு பேசுறாங்க குத்தகைக்காரங்க. இந்தப் பழையை கேடுகளை புது மேயர் நீங்க கவனிக்கோணுமுங்ணா.
கசங்குன பால் கவர், வெங்காய சருகு, மீந்து போன சட்னின்னு உங்க வூட்டுக் குப்பையை ரெண்டு நாளா வெளியில கொட்டாம வெச்சிருந்தீங்கன்னா, அடிக்கிற கப்புல சித்தம் கலங்கிப்போவும். ஆனா, பாருங்க சிட்டி முழுக்க அள்ளுறதுக்கு ஆள் இல்லாம வாரக்கணக்குல குவிஞ்சு கெடக்குதுங்ணா குப்பை. ஒரு மழை அடிச்சுதுன்னா, நாம கொட்டிட்டு வந்த குப்பை, அடுத்த வூட்டுக் குப்பையையும் ஜோடி சேர்த்துக்கிட்டு, மறுபடியும் நம்ம வூட்டு வாசலுக்கே மெதந்து வந்து சேருதுங்ணா. அப்புறம் காய்ச்சல், கழிச்சல்னு நோவு வராம இருக்குமாங்ணா?
இன்னொண்ணும் சிட்டியைப் போட்டு ஆட்டுதுங்ணா. அது... டெரரான ட்ராஃபிக்தானுங்கணா... உருப்படியான பாலம், அகலமான ரோடுனு எதுவும் இல்லாம போனதால சந்து பொந்துலகூட காரும், பைக்கும் முட்டி மோதிக்கிட்டு கெடக்குதுங்ணா. மனசுல தில்லும், தைரியுமும் இருந்தா நீங்களும் துணை மேயரும் ஒருவாட்டி நம்ம மேட்டுப்பாளையம் ரோடுல பைக்ல போய்ப் பாருங்ணா... அரை கிலோ மீட்டர் தாண்டுறதுக்குள்ளே போங்க, ஆயுசுல பாதி போனா மாதிரி இருக்கும். ரெண்டு கிலோ மீட்டர் தாண்டி இருக்கிற எங்க மாமன் வூட்டுக்கு நடந்து போன 40 நிமிஷமுங்க. ஆனா, பைக்குல போக ஒன்றரை மணி நேரமாகுதுங்க.
சென்னையில் முதல்வர் அம்மா நடத்துன மாநாடுக்குப் போயிட்டு வந்த நம்ம கலெக்டர் 'கோவை மாநகரை சீர்படுத்த உலகத் தரத்தில் சாலைகள் வரப்போகுது, உக்கடத்தில் மேம்பாலம்அமையப்போகுது’னு பேட்டி கொடுத்திருக்காருங்ணா. இப்படி ஆயிரம் பேட்டியைப் பார்த்த நாங்க ஆயிரத்தொண்ணா இதையும் எடுத்துக்குறோமுங்க. ஆனா, புது மேயர் உங்களுக்கு நான் எழுதுற இந்த முதல் கடுதாசிய, சிட்டி மனுஷங்களோட உயிர் கடுதாசியா எடுத்துக்கோணும்னு வேண்டி விரும்பிக் கேட்டுக்குறேனுங்க. கடுதாசிக்கானப் பதிலை உங்க செயல்ல காட்டுங்ணா!
ரொம்ப எதிர்பார்ப்புடன்,
வெள்ளிங்கிரி
************************************************************************
கொள்ளையர்கள் காரில் 'அட்வகேட்' ஸ்டிக்கர்!

போலி வக்கீல்கள் உஷார்
'போலி வக்கீல்கள் தொல்லை தாங்கமுடியவில்லை. அவர்களிடம் இருந்து அப்பாவி மக்களையும் நீதித் துறையையும் காப்பாற்றுங்கள்’ என்று மதுரையில் உள்ள தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகி கள், மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த 9-ம் தேதி காரைக்குடி அருகே, 'அட்வகேட்’ ஸ்டிக் கரை ஒட்டிய காரில் சென்று வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேர் போலீஸில் சிக்கினார்கள். மதுரை யிலும் இப்படி பலர் வக்கீல்கள் போர்வையில் சட்ட விரோதக் காரியங்களில் ஈடுபடுவதாக சொல்லித்தான் புகார் கொடுத்திருக்கிறது, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம். அதன் இணைச் செயலாளர் அட்வகேட் முத்துக் குமாரிடம் பேசினோம். ''மதுரை நீதிமன்றங்களில் அசல் வக்கீல்களை விட போலி வக்கீல் கள் நடமாட்டம்தான் அதிகம். வெள்ளைச் சட்டையும் கறுப்புப் பேன்ட்டும் மாட்டிக் கொண்டு வட்டம் போடும் இவர்களிடம் வக்கீலுக்கான அடையாள அட்டை இருக்காது. ஆனால், மனித உரிமை அல்லது நுகர்வோர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு அமைப்பில் இருப்பதாக பக்காவாக விசிட்டிங் கார்டு வைத் திருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு, கோர்ட்டுக்கு வரும் அப்பாவிகளுக்கு வலை விரித்து, கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள். 'எனக்கு எஸ்.பி-யை தெரியும், கமிஷனரைத் தெரியும், இந்த விஷயத்தை பைசா செலவில் லாமல் முடிச்சுக் குடுக்குறேன்’னு இவங்க சொல்வதை அப்பாவி ஜனங்கள் அப்படியே நம்புகிறார்கள். போலீஸ் ஸ்டேஷன்களிலும் இவர்களின் வண்டவாளம் தெரியாமலேயே ராஜமரியாதை கொடுக்கிறார்கள். இவர்கள் சர்வ சாதாரணமாய் உதவிக் கமிஷனர், துணை கமிஷனருக்கும் பேசுவதாக நடிப்பதால் போலீஸும் பயப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரை யில் கிருஷ்ணமூர்த்தி என்ற போலி வக்கீலை அண்ணாநகர்போலீஸார் கைது செய்தார்கள். இவர் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே வக்கீலாக பிராக்டீஸ் செய்து ரிட் மனுக்களையும் பொதுநல வழக்குகளையும் மதுரை உயர் நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்திருக்கிறார். சென்னை ஹை கோர்ட் டில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மதுரையில் நாங்கள் ஊர்வலம் போனபோது, டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியின் கேம்ப் ஆபீஸிற்குள் எங்களோடு வந்த யாரோ சிலர் கல்லை எடுத்து வீசவே, டி.ஐ.ஜி. டென்ஷன் ஆனார். கல் எறிந்தது யார் என்று விசாரித்த போதுதான்  கிருஷ்ணமூர்த்தி எங்களிடம் சிக்கினார். அவரை நாங்களே போலீஸில் ஒப்படைச்சோம். ஆனால், அவரை உடனே வெளியில் விட்டுருச்சு போலீஸ். அதுக்குப் பிறகு போராட்டம் நடத்தித்தான் கிருஷ்ணமூர்த்தியை மறுபடியும் பிடிக்க வைத்தோம். அந்த கேஸ்ல 45 நாள் உள்ளே இருந்த கிருஷ்ணமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டுக்குப் போய் பெயில் வாங்கினார்.
இப்படித்தான் கரிமேடு போலீஸ் ஸ்டேஷனில் பெண் வக்கீல் ஒருவர் கொடுத்த புகாரை எதிர்த்து ஆஜரான போலி வக்கீலை உட்கார வைத்துப் பேசிய போலீஸார், பெண் வக்கீலை நிற்க வைத்து பேசி இருக்கிறார்கள். அந்தாளு போலின்னு எங்காளுங்க நிரூபிச்ச பிறகுதான், பெண் வக்கீலை மிரட்டுனதா கேஸ் போட்டு போலியை உள்ளே தள்ளுனாங்க. நாகர்கோவிலில் இருந்து வந்த ஒரு காதல் ஜோடி, போலி வக்கீல்னு தெரியாம ஒருத்தரிடம் சரணடைஞ்சிருக்கு. மைனரான அந்தப் பெண்ணை தனது பாதுகாப்பில் வைச்சிருக்கிறதாச் சொல்லி, பையனை மட்டும் ஊருக்கு அனுப்பியிருக்கிறார். பிறகு அந்த டுபாக்கூர் வக்கீலும் அவரது நண்பர்களும் அந்தப் பெண்ணை பலாத்காரம் பண்ணிருக்காங்க. இன்னொரு கேஸ்ல, காதல் ஜோடிக்கு அடைக்கலம் குடுக்குறதா சொல்லிட்டு, அந்தப் பெண்ணோட அப்பாவுக்கு போனை போட்டு, 'உங்க மகள் எங்க கஸ்டடியிலதான் இருக்கிறார்,  50 ஆயிரத்தைக் கொடுத்துட்டு கூட்டிட்டுப் போங்க’ன்னு சொல்லி காட்டிக் கொடுத்திருக்கான் ஒரு டுபாக்கூர் வக்கீல். இதெல்லாம் எங்கள் கவனத்துக்கு வந்த சில சாம்பிள் சம்பவங்கள் மட்டுமே. கவனத்துக்கு வராமல் நிறைய மோசடிகள் நடக்குது. வக்கீல் தொழிலுக்கு சம்பந்தமில்லாத பலர் ஷேர் ஆட்டோ, கார், டூ வீலர், சரக்கு வேன், லாரிகளில் அட்வகேட் ஸ்டிக்கரை ஒட்டிக்கிட்டு திரிவதைப் பார்த்தால் கேவலமாவும் ஆத்திரமாவும் இருக்குது. மதுரைக்குள் மட்டுமே 100 பேருக்கு மேல இருக்காங்க. போலீஸ்தான் அவங்களப் பிடிக்கணும். அதனால் தான் கமிஷனர்கிட்ட மனு குடுத்துருக்கோம்.
வாகனங்களில் அட்வகேட் ஸ்டிக்கர் ஒட்டுகிறவர்கள், தாங்கள் வக்கீலாகப் பதிவு செய்ததற்கான எண்ட்ரோல்மென்ட் நம்பரையும் எழுத வேண்டும். அத்தனை வழக்கறிஞர்களுக்கும் வழக்கறிஞர் சங்கத்தின் அடையாளம் அட்டை வழங்கவேண்டும்.  இரண்டு முறைக்கு மேல் சிக்கும் போலி வக்கீல்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யணும்'' என்று கோரிக்கை வைத்தார்.
இந்தப் பிரச்னை குறித்துப் பேசிய போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், ''காய்கறி வண்டிகளில் கூட, 'அட்வகேட்’ ஸ்டிக் கரைப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. போலி வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் நேற்றே சர்க்குலர் போய்விட்டது. போலீஸ் நடவடிக்கையைப் பொறுத்திருந்து பாருங்கள்'' என்று சஸ்பென்ஸ் வைக்கிறார். 
பார்க்கலாம். 
    - குள.சண்முகசுந்தரம்
  படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
   எஸ்.சாய் தர்மராஜ்
*********************************************************************************
கலெக்டர்கள் மாநாட்டில் மனம்திறந்த முதல்வர்

பூண்டி நீர்த்தேக்கம்... எவ்வளவு ரம்மியமான இடம்!
ச்சர்யம்... கலகலப்பு... உஷ்ணம் பறக்கும் விவாதம் என கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், கலெக்டர்கள் - போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடந்து முடிந்து​விட்டது!
கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த மாநாட் டில் இடையிடையே அமைச்சர்களின் குறுக்கீடு, கருணாநிதியின் நையாண்டி என்று களை கட்டும். இப்போது அப்படி எதுவும் குறிப்பிட்டு சொல்லும் படியாக இல்லை. கடந்த காலங்களில் மாநாட்டு மேடையில் முதல்வர், அமைச்சர்களுடன் தலைமைச் செய லாளர் மட்டுமே அமர்ந்திருப்பது வழக்கம். போலீஸ் மீது ஜெயலலிதாவுக்குத் தனி பாசம் என்பதால் என்னவோ டி.ஜி.பி. ராமானுஜம் மட்டும் மேடையில் இருந்தார். அமைச்சர்கள் யாரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம். மாநாட்டை ஒன் வுமன் ஆர்மியாக நடத்தியவர் முதல்வர்தானாம். அப்படி என்றால், என்னதான் நடந்தது அந்த மாநாட்டில்? கலெக்டர்கள், துறை செயலாளர்கள், போலீஸ் அதிகாரிகள் என்று பல தரப்பிலும் பேசியபோது கிடைத்த சுவாரஸ்யமான கதம்பம் இதோ...
''சிறுவர்கள் வழி தவறி தீய செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக காவல் துறையில் 'பாய்ஸ் கிளப்’ உள்ளது. அங்குள்ள ஸ்கவுட் மாஸ்டர் களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும். அதோடு இங்கு சிறுவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்... சிறுமிகளையும் சேர்க்கலாம்'' என்றார் சென்னைக் கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரை கண்ணன். அவரை குறுக்கிட்ட முதல்வர், ''சிறுமிகளுக்கு தனியாக 'கேர்ள்ஸ் கிளப்’பைத் தொடங்குங்கள். செலவை அரசு ஏற்கும்'' என்றாராம். அடுத்துப் பேசிய டி.ஜி.பி-யான லத்திகா சரண், ''போலீஸ் வேலைக்குத் தேர்வாகும் போலீஸ்காரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி ஏழு மாதங்களில் இருந்து ஐந்து மாதங்களாகக் குறைக்கப்பட்டுவிட்டன. போதுமான பயிற்சி அளிக்க வேண்டும் என்றால், ஏழு மாதப் பயிற்சி அவசியம்'' என்று சொல்ல முதல்வர் குறித்துக்கொண்டார்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் பாதிப்புகள்பற்றி திருச்சி டி.ஐ.ஜி-யான அமல்ராஜ் பேசினார். ''நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால், அங்கே குடித்துவிட்டு வண்டியை ஓட்டுகிறார்கள். இதனால், சாலை விபத்துகள் அதிகமாகிவிட்டன. குடித்துவிட்டு இப்படி வாகனம் ஓட்டியதாக 5,000-க்கும் மேல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் இருக்கிற டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றலாம். குடித்துவிட்டு ஓட்டுபவர்களின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும். விபத்துக்குள்ளாகும் அப்பாவிகளுக்குத் தரப்படும் நிதியையும் உயர்த்த வேண்டும். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் தேட தனி நீதிமன்றம் அமைக்கலாம்'' என்றபோது நல்ல ரெஸ்பான்ஸ். உடனே ஜெயலலிதா, ''நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தி​னாலும், வேறு எங்காவதும் குடித்துவிட்டு ஓட்டுவார்கள். இதுபற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம்'' என்றவர், அமல்ராஜின் பேச்சுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸைப் பார்த்துவிட்டு, ''விபத்தில் காயம் அடையும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி உயர்த்தி வழங்கலாமா?'' என்று எல்லோரையும் பார்த்து முதல்வர் கேட்க... எல்லோரும் கோரஸாக 'ஓகே’ என்றார்கள்.
கடலோரப் பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி​-யான லாலாம் சங்கா பேசும்போது, ''உங்களின் முந்தைய ஆட்சியில்தான் கடலோரப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதியை பாதுகாப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மணல் பகுதியில் ஓடக் கூடிய ஆற்றல் படைத்த வாகனங்கள் நம்மிடம் இல்லை'' என்றார். மாநாடு முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வாகனங்கள் வாங்குவதற்காக ஜெயலலிதா  1.56 கோடியை ஒதுக்கீடு செய்தது ஆச்சர்யம்!
அடுத்து மைக் பிடித்த சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி-யான டோக்ரா, ''முன்பு நீங்கள் கொண்டுவந்த சிறைச்சாலைகளில் வீடியோ கான்ஃபெரன்ஸிங் முறைக்கு நல்ல பலன் கிடைக்கிறது. ரிமாண்டுக்காக கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது இதன் மூலம் குறைவதால், சுமார்  300 கோடிக்கு மேல் மிச்சமாகி இருக்கிறது. இன்னும் பல நீதிமன்றங்களில், சிறைச்சாலைகளில்  வீடியோ கான்ஃபெரன்ஸிங் முறை இல்லை. இதனைக் கொண்டுவந்தால், மேலும் பல கோடிகள் அரசுக்கு மிச்சமாகும்'' என்றார். அரசுக்கு வருவாய் இழப்பைத் தடுக்க யோசனை சொன்னதால், அவருடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார் முதல்வர்.
''சிறுவன் தில்சன் கொலை வழக்கில் முதல்வரே நேரடியாக அக்கறை எடுத்துக்கொண்டார். அதனாலேயே குற்றவாளி விரைவாகக் கைது செய்யப்பட்டார். குற்றவாளிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களை டேட்டாவில் உருவாக்கி, அதை ஒரு வருடம் மட்டுமே பராமரிக்க முடியும். இதனை மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்'' என்றார் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி-யான சேகர்.
போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா பேசும் போது, பவர் பாயின்ட் பிரசன்டேஷன் மூலம் சென்னை போக்குவரத்துப் பிரச்னையை விளக்கினார். ''முக்கிய இடங்களில் பாதசாரிகள் சாலைகளைக் கடப்பதற்கு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு சிரமாக இருப்பதால் இதன் பயன்பாடு குறைவாகிவிட்டது. சில இடங்களில் மட்டும்தான் லிஃப்ட் வசதி இருக்கிறது. படிக்கட்டுகளுக்குப் பதிலாக சரிவான பாதையை போட்டு நடை மேம்பாலம் அமைக்கலாம். மெட்ரோ ரயில் வருவதால் மல்டிலெவல் பார்க்கிங் வசதி செய்யலாம், பள்ளி அலுவலக நேர மாற்றம் செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களை வைத்திருப்பவர்களுக்கு வரி விதிக்கலாம். இவற்றைச் செய்தால் போக்குவரத்துப் பிரச்னையை சமாளிக்க முடியும்'' என்று சொல்லி அதுபற்றி வரைபடத்தையும் கணினியில் காட்டி விளக்கினார்.
மதுரை எஸ்.பி. ஆஸ்ரா கார்க், ''திருமங்கலம் இடைத்தேர்தல் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது. அதனால்தான், கடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மிகவும் பதற்றமான மாவட்டம் என்று தேர்தல் கமிஷன் கருதியது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், தேர்தலை அமைதியாக நடத்திக் காட்டி தேர்தல் கமிஷனின் பாராட்டைப் பெற்றோம். நில அபகரிப்பு வழக்கில் மதுரையில்  10 கோடி மதிப்புள்ள நிலங்களைக் கைப்பற்றித் திருப்பி ஒப்படைத்து இருக்கிறோம். நில அபகரிப்புப் புகார் பிரிவு தொடங்கப்பட்டதால் மக்களி டையே அரசுக்கு நல்ல வரவேற்பு'' என்றார். 
வடக்கு மண்டல் ஐ.ஜி-யான சைலேந்திரபாபு, ''ஆம்னி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானபோது பயணிகள் வெளியே வர முடியாத நிலை உருவானது. ஆம்னி பஸ்களில் ஸ்பீடு கன்ட்ரோல் இல்லை. இதுபோன்ற காரணங்களால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. அவசர வழி, ஸ்பீடு கன்ட்ரோல் போன்றவற்றை அமல்படுத்த போக்குவரத்துக் காவல் துறை நடவடிக்கை எடுத்தால் விபத்துகளைக் குறைக்க லாம்'' என்றார்.
திருவள்ளூர் கலெக்டர் ஆசிஸ் சட்டர்ஜி பேசும்போது, ''எங்கள் மாவட்டத்தில் இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்தைப் பார்க்க நிறைய பேர் வருகிறார்கள். நீர்த்தேக்கத்தைச் சுற்றி கேளிக்கை பூங்கா அமைத்து அணையில் படகு சவாரிவிட்டால், அது சுற்றுலாத் தலமாக மாறும்'' என்றதும், முதல்வர் குறுக்கிட்டு, ''நான் பள்ளிப் பருவத்தில் அந்த இடத்துக்கு பிக்னிக் வந்திருக்கிறேன். ரொம்ப ரம்மியமான இடம்.'' என்றார். பொதுப் பணித் துறை செயலாளர் சாய்குமார் குறுக்கிட்டு ''அணையின் பாதுகாப்புக் கருதி அங்கே படகு சவாரிவிட முடியாது. அணையை ஒட்டியிருக்கும் பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்கு கேளிக்கை பூங்கா அமைக்கலாம்'' என்று ஆலோசனை கொடுத்தார்.
திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ பேசும்போது, ''முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களின் நிதி உதவிகள் ஸ்மார்ட் கார்டு மூலம் பயனாளிகளுக்கு வழங்குவதால், மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதில் ஓர் ஊரில் பிரச்னை ஏற்பட்டது. அதனை சாதுரியமாகத் தீர்த்தோம்.'' என்றார். முதல்வரின் தனிப் பிரிவுக்கு வந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக ஜெயஸ்ரீக்கு, ஜெயலலிதா விருது கொடுத்தார்.
சென்னை கலெக்டராகப் பொறுப்பு வகிக்கும் டி.ஆர்.ஓ-வான அண்ணாமலை துறைரீதியாக எதுவும் பேசாமல், ''முதல்வர் அலுவலகம் பக்கத்திலேயே இருக்கிறது. மாநகராட்சி கமிஷனரும் அருகிலேயே இருக்கிறார். போலீஸ் கமிஷனர் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையை பார்த்துக்கொள்கிறார். இதை எல்லாம் தாண்டி கலெக்டர் அலுவலகத்துக்கு அருகிலேயே முதல்வர் இருக்கிறார் என்பதால், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தங்கமான முதல்வர் கைகளில் தமிழ்நாடு இருக்கிறது.'' என்று சொன்னபோது ஜெயலலிதா உட்பட எல்லோரும் சிரித்துவிட்டார்கள். ''நான் சென்னை மாவட்டத்துக்கு மட்டும் முதல்வர் இல்லை. தமிழகத்துக்கும் சேர்த்துத்தான்.'' என்று ஜெயலலிதா சொல்ல... மீண்டும் சிரிப்பலை!
மதுரை கலெக்டர் சகாயம் பேசும்போது, 'உத்தப்புரம் பிரச்னை ஏற்பட்ட காலத்தில் இருந்து அதை நாங்கள் சமாளித்து வந்தோம். எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது. அங்கே அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால், பிரச்னையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம்
திண்டுக்கல் கலெக்டர் நாகராஜன் பேசும்போது பேச்சுக்குப் பேச்சு 'அம்மா’ என்று உருகினார். ''எங்கள் மாவட்டத்தில் பெரிய அளவில் பிரச்னை எதுவும் இல்லை. சட்டம் - ஒழுங்கு அமைதியாக இருக்கிறது'' என்று சொல்வதற்கு பதில் ''இல்லை'' என்று அவர் சொல்ல, அதை ஜெயலலிதா திருத்தினார்.
''வணிக வரித் துறை மூலம் அரசுக்குப் பெருமளவில் வருவாய் கிடைக்கிறது. ஆனால், அதை நம்மால் முறையாக வசூலிக்க முடியாத அளவுக்கு சில தடங்கல்கள் இருக்கின்றன. வணிக வரி செலுத்தாமல் கோடிக்கணக்கில் பொருட்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு செக் போஸ்ட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலும் மின்சார வசதி, கேமரா போன்றவை இல்லை. செக் போஸ்ட்களை நவீனப்படுத்தினால் பெரும்பாலான குற்றங்களைத் தடுப்பதோடு வரி ஏய்ப்பவர்களையும் தடுக்க முடியும்'' என்று பெரும்பாலான கலெக்டர்கள் கருத்துச் சொன்னார்கள். இதை முதல்வர் குறித்துக்கொண்டார். மாநாடு முடிந்த பிறகு சுமார்  79 கோடி அளவுக்கு செக் போஸ்ட்களில் கட்டமைப்புகளை உருவாக்க நிதி ஒதுக்கி அறிவித்திருக்கிறார்.
பெரம்பலூரில் இருந்து பிரித்து அரியலூர் மாவட்டத்தை 2001-ல் தி.மு.க. அரசு கொண்டுவந்தது. அதன் பிறகு அதை அ.தி.மு.க. அரசு மாற்றியது. 2006-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. மீண்டும் அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியது. இப்போது மீண்டும் அரியலூரை பெரம்பலூருடன் இணைக்கப்போவதாக பேச்சுகள் கிளம்பி இருக்கின்றன. கலெக்டர் மாநாட்டிலும் இதுபற்றி பேசப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு எதிர்ப்புக் கிளம்பும் என்பதாலேயே பெரம்பலூருக்கும் அரியலூருக்கும் மார்க்கெட், பாலம் போன்ற அறிவிப்புகளை அரசு வெளியிட்டு இருக்கிறதாம்.
  நக்ஸலைட்டுகள் விடுதலைப் புலிகள் நடமாட்டம், மதத் தீவிரவாதிகளின் செயல்பாடுகள்பற்றி எல்லாம் மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாம். பெரியகுளம் காட்டுப் பகுதியில் நக்ஸலைட்டுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு முகாம் அமைத்ததை நினைவுபடுத்தி, அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதுபற்றியும் விவாதிக்கப்பட்டது!
எம். பரக்கத் அலி
படங்கள்: சு.குமரேசன், 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************
குறிவைக்கப்படும் குடும்பம்?

''முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் மகள் செல்வி நடத்தும் டெலிகாம் நிறுவனம் எனக்குப் பணம் தர வேண்டும். அதைக் கேட்டால், பல்வேறு மட்டங்களில் இருந்தும் எனக்குக் கொலை மிரட்டல்கள் வருகின்றன...'' எனக் கடந்த 11-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் திவிவேதி  என்ற சாஃப்ட்வேர் நிறுவன அதிபர் அதிரடிப் புகார் கொடுக்க... கோபாலபுர ஏரியாவில் புதிய கிடுகிடுப்பு!

புகார் கொடுத்துள்ள சஞ்சீவ் குமார் திவிவேதி யிடம் பேசினோம். ''2009-ம் ஆண்டு தமிழகத்தில் பிரபல மான இரண்டு வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த   இருவர்  என்னைச் சந்தித்து, 'ஐஸ் டெலிகாம்’ என்ற கம்பெனியின் வர்த்தகம் குறித்துப் பேசினார்கள். பிறகு சென்னை கோட்டூர்புரம், ரஞ்சித் ரோட்டில் உள்ள ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி
ஷ்யாமைச் சந்திக்க அழைத்துச் சென்றனர். அந்த நிறுவனம் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் மகள் செல்விக்குச் சொந்தமானது என்பதை அவர்கள் கூறிதான் அறிந்துகொண்டேன். தங்களது நிறுவனமும் இந்த ஐஸ் டெலிகாம் நிறுவனமும் இணைந்து, 3ஜி மற்றும் 4ஜி மொபைல் டவர்கள் மற்றும் நெட்வொர்க்கிங் பணிகள் நிறைவேற்றுவதற்காக  3,250 கோடிக்கு தென் மாநில டெண்டரைப் பெற்று இருப்பதாகக் கூறினர். தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பெயரைச் சொல்லி...  நாடு முழுவதும் இதுபோல  40 ஆயிரம் கோடிக்கு  ஒப்பந்தம் பெற்று இருப்பதாகவும் கூறினார்கள்.
எனக்கு சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு உண்டு. என் மூலமாக கூடுதல் விலை வைத்து, அந்தத் தென் மாநில டெண்டரை
 4,000 கோடிக்கு விற்க முடிவெடுத்தனர். இதற்கு, கமிஷன் தொகையாக எனக்கு
 60 கோடி தருவதாகச் சொன்னார்கள். அதற்கான கடிதமும் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, உரிய நிறுவனங்களுடன் பேசி ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்தேன். என் அழைப்பை ஏற்று, மொபைல் போன் டவர் நிறுவும் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சென்னைக்கு வந்தனர். அவர்கள் என் விருந்தினர்களாக ஸ்டார் ஹோட்டல்களில் தங்கினர். ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் ஷ்யாம் மற்றும் சிலரோடு அவர்களைச் சந்திக்கவைத்தேன். வெளிநாட்டினர் தங்கியது உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் நானே கவனித்துக்கொண்டேன்.
இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு கையெழுத்து ஆவதற்கு முன், 2ஜி பிரச்னை பெரிதாகி இந்திய அரசியலையே பரபரக்கவைத்தது. அதோடு, ஆ.ராசாவும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், செல்வி மற்றும் ஷ்யாம் உள்ளிட்ட அனைவரும் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டதுடன், தொகை அளிக்கப்படாத பில்களை என்னிடம் விட்டுச் சென்றுவிட்டனர்.
ஷ்யாம் மற்றும் செல்வியை சந்திக்க பலமுறை நான் முயன்றும் முடியவில்லை. டெல்லிக்குச் சென்று ஆ.ராசாவை நண்பர் ஒருவர் மூலம் சந்தித்தபோது, அவரும் கை விரித்துவிட்டார். ஒருவழியாக கனிமொழியைச் சந்தித்தேன். பிரச்னையை முடித்துத் தருவதாக அவர் கூறினார். ஆனால் அதன் பிறகு பல ரவுடிகள் என்னைத் தேடி வந்து மிரட்டினர். இதனால், என் குடும்பத்தினரை பீகாருக்கு அனுப்பிவைக்கும் சூழல் ஏற்பட்டது. இப்போது நான் தனியாகவே வாழ்கிறேன். கடந்த ஒரு வருடமாகவே தி.மு.க-வினரிடம் இருந்து எனக்குத் தொடர்ந்து கடுமையான மிரட்டல்கள் வருகின்றன. எனவேதான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.
எனது சாஃப்ட்வேர் நிறுவனத்தைக்கூட கவனிக்காமல் இவர்களுக்காக இரவு பகலாக அலைந்தேன். அதனால் என்னுடைய சொந்த நிறுவனத்திலும் நஷ்டம் ஏற்பட்டு, இப்போது நான் குடும்பச் செலவை சமாளிக்கவே திண்டாடுகிறேன். ஆனால், நான் செலவு செய்த தொகையைக் கொடுக்கக்கூட இவர்களுக்கு மனது இல்லையே...'' என விரக்தியுடன் முடித்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க செல்வியைத் தொடர்புகொண்டபோது, ''சஞ்சீவ்குமார் திவிவேதி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. மேலும், ஐஸ் டெலிகாம் நிறுவனத்துடன் எனக்கு எந்த விதமான வணிகத் தொடர்புகளும் கிடையாது. அப்படி இருக்க யாரோ சிலரின் பேச்சுக்களை நம்பிக்கொண்டு என் மீது அபாண்டக் குற்றச்சாட்டை அள்ளி வீசுகிறார் அந்த மனிதர். எனது பெயருக்கு களங்கம் கற்பிக்க முயன்ற காரணத்துக்காக, வழக்கறிஞர் மூலமாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அந்த நோட்டீஸில் உள்ளதுதான் என் கருத்து'' என்றார்.
செல்வியின் வழக்கறிஞர் ரவீந்திரன் சஞ்சீவ்குமாருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், ''எனது கட்சிக்காரர் செல்விக்கு அந்தப் புகாரில் குறிப்பிடப் பட்டுள்ள நபர்களுடன் எந்தவிதமான வணிக தொடர்புகளும் கிடையாது. பொய்ப் புகாரை வாபஸ் பெறாவிட்டால், சட்டரீதியாகக் கடும் நடவடிக்கை எடுப்போம்'' என்று கூறியுள்ளார்.
''ஐஸ் டெலிகாம் நிறுவனத்துடன் தனக்கு வணிகத் தொடர்பு இல்லை என்று செல்வி கூறுகி றாரே?'' என சஞ்சீவ்குமார் திவிவேதியிடம் மீண்டும் கேட்டபோது, ''அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஷ்யாமுடன் செல்விக்கு நன்கு அறிமுகம் உண்டு. இன்னொரு நபரின் பெயரில் அந்த நிறுவனத்தை நடத்துவது செல்விதான்'' என்றார் உறுதியாக.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்கு சஞ்சீவ்குமார் திவிவேதியை அழைத்த போலீஸார், அவரிடம் ஆடியோ வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்களாம்.

'கைதுப் படலம் முடியவில்லை’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறியது சரிதான். 'மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் இளைய மருமகன் விவேக் ரத்னவேலு விரைவில் போலீஸ் வளையத்துக்குள் வரலாம்’ என்று ஒரு தகவல் கசியவே, விசாரணையில் இறங்கினோம்.
சென்னை சூளைமேட்டில் இருக்கும் சித்ரா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமை யாளர் கோவிந்தராஜன், அழகிரி மருமகன் மீது சென்னை போலீஸில் புகார் கொடுத்து இருக்கிறார்.
கொந்தளிப்பில் இருக்கிறார் கோவிந்த ராஜன்... ''20 ஆண்டுகளாகக் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2008-ம் ஆண்டு பெருங் குடி டோல்கேட் அருகில் 27 கிரவுண்டு நிலம் வாங்கினேன். அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் இளைய மருமகன் விவேக் ரத்னவேலு தலைமையில் அடியாட்கள் என் நிலத்தில் நுழைந்து, செக்யூரிட்டி ஆட்களை அடித்து விரட்டினார்கள். எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்கள். உடனடியாக துரைப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன், என் நிலத்தில் அவரது ஆட்களை நிறுத்தி இருந் தார். நான் எனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் மன்னனை சந்தித்தேன். அப்போது, 'அந்த இடத்தில் விவேக் ரத்னவேலு ஒரு ஸ்டார் ஹோட்டல் கட்டப்போகிறார். அதனால் நாங்க கொடுப்பதை வாங்கிக்கிட்டுப் போயிடு’ என்று மிரட்டினார். அடுத்து தி.நகர் ரெஸிடென்சி ஹோட்டலில் தங்கி இருந்த விவேக் ரத்னவேலு, பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ' 10 கோடி கொடுத்தால், நிலத்தைக் கொடுத்துடுறேன்’ என்று சொன்னார். நான் 'அவ்வளவு முடியாது. ஐந்து கோடியை... அதுவும் மாதம் ஒரு கோடி என ஐந்து மாதங்களில் தருகிறேன்’ என்று கூறினேன். 
அதற்கு சம்மதித்தவர், மறுநாளே என் அலுவலகத் துக்கு வந்து ஒரு கோடி பெற்றுக் கொண்டார். அன்றே அவரது ஆட்களும் என் நிலத்தில் இருந்து வெளியேறினார்கள். ஆனால், இரண்டாம் நாளே மீண்டும் அவரது அடியாட்கள் என் நிலத்தில் புகுந்தனர். திரும்பவும் அவரைச் சந்தித்தேன். 'உடனே, மூன்று கோடி வேண்டும். இல்லாவிட்டால் உன் நிலம் உனக்குக் கிடைக்காது’ என்றார். வட்டிக்கு கடன் வாங்கி  1.35 கோடி கொடுத்தேன். மீதி  1.65 கோடிக்கு விவேக் ரத்னவேலுவின் பினாமியான ரபீக்கிடம் நான் கடன் வாங்கியதுபோல ஒரு புரோநோட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு என் நிலத்தை என்னிடம் ஒப்படைத்தார்.
சில நாட்கள் கழித்து  1.65 கோடியை பணமாகக் கொடுக்கச் சென்றபோது, 'பணம் ஏன் லேட்?’ என்று கேட்டு என்னை சிறைவைத்தவர், சூளைமேட்டில் இருக்கும்  50 லட்சம் மதிப்புள்ள எனது பிளாட்டை அவருடன் இருக்கும் ஆனந்த் என்பவர் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டார். எனது நிலத்தில் சுமார்  1 கோடி மதிப்புக்குக் கட்டடத் தளவாடங்கள் இருந்தன. அதையும் விற்றுவிட்டார்கள். தொடர்ந்து விவேக் ரத்னவேலுவால் பிரச்னை வரும் என்று பயந்து, நான் அந்த இடத்தை விற்றுவிட்டேன். 
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விவேக் ரத்னவேலு, அவருடன் இருக்கும் பயஸ், ரபீக், பெருமாள் உடை யார் உட்பட ஏழு பேர் மீது கடந்த ஜூலை மாதம் சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகார் அனுப்பினேன். கைதுக்குப் பயந்து அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் இங்கே வருவார் என்கிறார்கள். அவர் என்னிடம் பறித்த பணத்துக்காக மட்டும் அல்ல... அவர் செய்த அடாவடிக்கும் சேர்த்து கூண்டில் ஏறி பதில் சொல்லியே ஆக வேண்டும்'' என்கிறார் கோபமாக.
விவேக் ரத்னவேலுவைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். இயலவில்லை. அவர் விளக்கம் அளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம். மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனும் பேசத் தயாராக இல்லை. விவேக் ரத்னவேலுவுக்கு நெருக்கமானவராக சொல்லப்படும் பெருமாள் உடையாரிடம் பேசியபோது, ''விவேக் ரத்னவேலு யார் என்றே எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த்ததுகூட இல்லை. அந்தப் புகாருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது'' என்றார்.
சென்னை போலீஸ் கமிஷனர்  திரிபாதியிடம் பேசினோம். ''கோவிந்தராஜன் கொடுத்த புகாரை விசாரணைக்காக அடையாறு துணை ஆணையருக்கு அனுப்பி இருக்கிறோம். விசாரணையில் தவறு செய்திருப்பது தெரியவந்தால், கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும்'' என்றார்.
தி.கோபிவிஜய்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
 

துரை மாட்டுத்தாவணி அருகே இருக்கும் அழகிரிக்குச் சொந்தமான 'தயா சைபர் பார்க்’ என்ற கட்டடம் ஆக்கிரமிப்புச் சிக்கலில் மாட்டி இருக்கிறது. சுமார் 1.20 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் கட்டடத்துக்காக மாநகராட்சியின் எட்டு சென்ட் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது என்பது குற்றச்சாட்டு.
இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையருக்கு, ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதினார் கலெக்டர் சகாயம். அப்போது, 'மாநகராட்சி அனுமதி பெற்று உள்ளோம்’ என்று அழகிரி தரப்பில் சொன்னார்கள். ஆனால், அனுமதி கொடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த மாநகராட்சி தற்போது அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பி, 15 நாட்களுக்குள் பதில் சொல்லியாக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் உள்ளூர்த் திட்டக் குழுமத்திடம் அப்ரூவல் வாங்கியதற்கு மாறாகவும், சில கட்டுமானப் பணிகளை செய்து இருக்கிறார்களாம். அதுவும் சிக்கல் ஏற்படுத்தும் என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்!
   - குள.சண்முகசுந்தரம்
************************************************************************
'வளர்ப்பு மகன்' வி.என்.சுதாகரனின் பினாமியா?

போலீஸ் பிடியில் ரித்தீஷ் பேட்டி
'நாயகன்’ படத்தில்போலீஸ் வேடம் போட்டு எதிரி​களைப் பந்தாடியவர், ராமநாதபுரம் எம்.பி-யான ஜே.கே.ரித்தீஷ். கடந்த புதன் கிழமை விடிந்தும் விடியாத காலை 4 மணிக்கு 40-க்கும் மேற்பட்ட நிஜ போலீஸ் பிடியில் தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த பாப்பான்குழி என்ற இடத்தில் மூன்று சகோதரர்களுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் இடத்தை, கடந்த 2008-ல் வாங்கியிருக்கிறார் ரித்தீஷ். 'எங்கள் மூன்று பேருக்கும் சம பங்குள்ள இடம். எனது இரண்டு சகோதரர்களிடம் இருந்து விற்பனைப் பத்திரம் மூலம் நேரடியாக வாங்கிய ரித்தீஷ், எனக்குச் சொந்தமான 90 சென்ட் இடத்தை பவர் ஆஃப் அட்டர்னி பெற்றது போன்று போலி ஆவணம் தயார் செய்து அபகரித்துக்கொண்டார்’ என்று சாமிக்கண்ணு என்பவர், மாவட்ட நில அபகரிப்புப் பிரிவில் புகார் தந்தார்.
இது குறித்து விசாரிப்பதற்காக காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில்  40 பேர் கொண்ட குழு, சென்னை மயிலாப்பூரில் உள்ள ரித்தீஷ் வீட்டுக்குச் சென்றார்கள்.  ரித்தீஷை எழுப்பி விசாரணைக்கு அழைத்ததும், ''இன்று தளபதியின் அப்பாயின்மென்ட் இருக்கிறது, சந்திப்பு முடிந்ததும் நானே வருகிறேன்'' என்று நழுவப் பார்த்திருக்கிறார். ஆனால் போலீஸார், ''சிம்பிள் விசாரணைதான்...'' என்று விடாப்பிடியாக நின்றதும் சம்மதம் சொல்லி குளிக்கக் கிளம்பி இருக்கிறார். 
''சார் அதெல்லாம் வேண்டாம். அலுவலகத்தில் எல்லா வசதியும் இருக்கிறது, உடனே கிளம்புங்கள்'' என்று கடுமை காட்டத் தொடங்கியதும்தான் நிலைமையை உணர்ந்திருக்கிறார் ரித்திஷ். உடனே மனைவி மற்றும் ஆதரவாளர்களிடம், 'எதுவும் நடக்கும். எல்லாருக்கும் தகவல் தந்துடுங்க’ என்று கிளம்பி, அவரது வாகனத்தில் ஏற முயன்றார். அதைத் தடுத்து தங்கள் வண்டியிலேயே ஏறச் சொன்னார்கள். தூங்காத கண்கள், கசங்கிய சட்டையுடன் ரித்தீஷ், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வந்தபோது சரியாக 7.20. அதற்குள் ரித்தீஷ் கைது பற்றி தகவல் பரவவே, பத்திரிகையாளர்களும் கட்சிக்காரர்களும் காவல் அலுவலகத்தை முற்றுகை இட்டனர். வழக்கறிஞர்களை மட்டுமே ரித்தீஷை சந்திக்க அனுமதித்தது போலீஸ். சரியாக 10.15 மணிக்கு ரித்தீஷைக் கைது செய்து இருப்பதாக அறிவித்து, 11 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ரித்தீஷ் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்த கையோடு, 'குற்றவியல் நடைமுறைச் சட்டம் 197-ன்படி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒருவரைக் கைது செய்வதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் அது பின்பற்றப்படவில்லை’ என வாதம் செய்யத் துவங்கினர். அரசு வழக்கறிஞர் கவிதா, 'தேவை இல்லை’ என்று மறுத்தார். ரித்தீஷ் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான் விசாரணையை அடுத்த இரண்டு தினங்களுக்குத் தள்ளிவைத்த நீதிபதி சையது அப்துல் மாலிக், 15 நாட்கள் ரிமாண்ட் செய்வதாக அறிவித்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சென்னை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால் முதல் வகுப்பு மற்றும் பெப்டிக் அல்சர் சிகிச்சை குறித்து வைக்கப்பட்ட கோரிக்கையை, உரியவர்களுக்குப் பரிந்துரைப்ப தாக கூறினார். சரியாக 1 மணிக்கு ரித்தீஷை ஏற்றிக் கொண்டு வேலூர் நோக்கிப் பறந்தது போலீஸ் வேன்.
முன்னதாக சில நிமிடங்கள் ரித்தீஷிடம் பேசி னோம். ''இது ஜெயலலிதா அரசின் பழி வாங்கும் போக்கு. இதை நான் எதிர்பார்த்தேன். உண்மையாச் சொல்லணும்னா, இது லேட். அவங்க எனக்குத் தேதி குறிச்சு ரொம்ப நாள் ஆச்சு. தலைவர், தளபதி என்று முன்னணித் தலைவர்களையே இந்த அம்மா வழக்குப் போட்டு முடக்கப் பார்க்கும்போது, நான் எந்த மூலைக்கு? காலை நாலு மணிக்கு வந்து வீட்டைத் தட்ட வேண்டிய அவசியம் என்ன? விசாரணைன்னு கூப்பிட்டா... வராம ஓடவா போறேன்? உண்மையில் அந்த நிலத்தை நான் உரிய வழியில்தான் வாங்கினேன் என்பதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது'' என்றவரிடம்,  ''உங்களுக்கும் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனுக்கும் இருந்த பழக்கத்தின் காரணமாகத்தான் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது, நீங்கள் அவரது பினாமியாகச் செயல்பட்டீர்கள் என்கிறார்களே?'' என்று கேட்டோம்.
''அய்யய்யோ அப்படி எல்லாம்இல்லீங்க. அவருக்கும் எனக்கும் 1998 வரை பழக்கம் இருந்தது உண்மை. நாங்கள் நல்ல நண்பர்கள்தான். ஆனால் அதற்குப் பிறகு அவருடன் தொடர்பே இல்லை. அதற்கும் இந்த வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினரை காலையில் பல் துலக்கக்கூட விடாமல் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் காவல் துறையை தமிழ்நாட்டில் மட்டும்தான் பார்க்க முடியும்'' என்று சிரித்தபடி கிளம்பினார்.
ரித்தீஷ் தரப்பில் பேசிய வழக்கறிஞர் சி.வி.எம்.எழிலரசன், ''மூவருக்கும் சேர்த்துப் பணம் கொடுத்துவிட்டோம். நிலத்தைப் பதிவு செய்த நேரத்தில் சாமிக்கண்ணு வெளியூரில் இருந்ததால், இரண்டு பேருக்குரிய பங்கை மட்டும் நேரடி விற்பனையாகப் பதிவு செய்யப்பட்டது. விடுபட்ட 1.33 ஏக்கரை, சாமிக்கண்ணுவே பவர் ஆஃப் அட்டர்னி மூலம் மாற்றித் தந்தார். அதற்கு அவர் கேட்ட கூடுதலான பணம் கொடுக்கவில்லை. அதனால் பழிவாங்கும் நோக்கில் புகார் கொடுத்து இருக்கிறார். சட்டப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்'' என்றார்.
- எஸ்.கிருபாகரன்
படங்கள்: ஆனந்தஜோதி
*********************************************************************************
முருகன் நிரபராதியா?

கேள்விகள் எழுப்பும் காங்கிரஸ் பிரமுகர்
ஜூ.வி.யில் வெளிவந்த முருகனின் தொடருக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஒன்று இது!
அன்னை இந்திரா, ஐயா மூப்பனார் மக்கள் நல்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.குப்பு சாமி (செய்யார்) நமக்கு எழுதி இருக்கிறார்...
''உலகத்தை உலுக்கும் வகையில் இந்திய மண்ணில் நிகழ்ந்த படுகொலைகள் மூன்று. முறையே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி. முதன்மை மரணங்கள் இரண்டும் தனி மனிதனைச் சார்ந்தவை. ராஜீவ் காந்தியின் படுகொலை மட்டும் மிகவும் பயங்கரமானது. அதில் இறந்தவர் களின் எண்ணிக்கை மட்டும் 18. அதில் 10-க்கும் மேற்பட்டோர் இந்தியப் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள்!
ஓர் அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத் தாலோ, அவருக்கு மரணத்தை ஏற்படுத்தினாலோ, அந்தக் குற்றவாளிக்கு மிக உயர்ந்த தண்டனையைத் தரலாம் என்பது நமது அரசியல் சட்டத்தின் சாரம்.  ராஜீவ் காந்தியின் மரணத்தை மட்டும் பிரித்துப் பார்க்காமல், 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளின் மரணங்களையும் அவர் களது குடும்ப உறுப்பினர்கள் படும் அவலங்களையும் உற்றுநோக்குவது நமது தலையாய கடமை.
வேதங்கள் ஓதி சாத்தானை விரட்டுவது இந்து மத ஐதீகம். ராஜீவ் காந்தி கொலையாளி முருகனே, 'கயிறே, என் கதை கேள்!’ தொடரில் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து கேள்விகளைக் கேட்பது அதற்குச் சமமானது. முதன்மையாகக் கேள்விகளைத் தொடுக்கும், முருகனின் சுயசரிதையை அறிவது நமது கடமை. முருகன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறு உணவகம் நடத்தியவரின் மகன். அவரது மூத்த சகோதரி ஓர் ஆசிரியர். அவருக்கு மூன்று தங்கைகள் உண்டு. இவரது மூத்த சகோதரர் விடுதலைப் புலி அமைப்பைச் சார்ந்தவர். அவர் 1987-ல் நடந்த ராணுவத் தாக்குதலில் இறந்துபோக, புலிகள் அமைப்பில் முருகனும் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முத்துராஜா என்பவர் மூலம் பாக்கியநாதனைத் தொடர்புகொண்டு அவரது சகோதரி நளினியைக் காதலித்து, இந்தியத் தலைவரின் படுகொலைக்கு தமிழ் பெண்ணைப் பயன்படுத்தியதன் மூலம், உலக அளவில் தமிழக அரசியல் தலைவர்களைத் தலை குனியவைத்தவர்தான் முருகன். இவரும் இவரது மனைவி நளினியும் நிரபராதி என்றால், ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்பு திருப்பதி சென்று மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தியதன் மூலம்தானே அவர் 'மொட்டை முருகன்’ ஆனார். 'கொடூரக் காட்டுமிராண்டித்தனமான தடா சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்பாவிகளாகிய எங்களை அதிகாரிகள் பலிகடா ஆக்குகிறார்கள்’ என்கிறார். பல கோடி மக்கள் வாழும் இந்திய நாட்டில் உங்கள் மீது மட்டும் சி.பி.ஐ. பழி சுமத்த. அவர்களுக்கு நீங்கள் என்ன பகையாளிகளா?
இயற்கைக் காற்றினை சுவாசித்து காட் டாற்று நீரை அள்ளிப் பருகி கானகத்தில் உயிர் வாழுகின்ற சித்தர்களைப் போன்று தனது செல்வங்களை எல்லாம் காங்கிரஸ் கட்சி வளர்ச் சிக்கு செலவழித்த, ஊழலுக்கு அப்பாற்பட்ட காங்கிரஸ் தியாகிகளும், இங்கு வாழ்கின்றனர் என்பதை முருகன் மறுக்க வேண்டாம்.'' என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் குப்புசாமி!
படம்: சொ.பாலசுப்ரமணியன்
************************************************************************
செய்தியும் சிந்தனையும் - டயல் செய்தால் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுவார்!

*********************************************************************************
அடியாட்களைக் கொண்டு மிரட்டினாரா அண்ணாச்சி?

சிக்கவைத்த டிரஸ்ட்
நில மோசடிப் புகார் உள்ளிட்ட பல வழக்குகளில் தி.மு.க. மாஜி மந்திரிகள் பலர் கம்பி எண்ணிக்கொண்டு இருக்க, பல புகார்கள் கிளம்பிய நிலையிலும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். மட்டும் எப்படியோ தப்பிவந்தார். இப்போது குமாரபாளையத்தில் இருந்து அவர் மீது ஒரு நில மோசடி வழக்கு திடீரெனப் பாய்ந்து இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர், பிரபல ஸ்பின்னிங் மில் அதிபர் ஜே.கே.கே. நடராஜன். பள்ளி மற்றும் கல்லூரிகளையும் நடத்திவரும் நடராஜன், அவரது தாயார் ரங்கம்மாள் பெயரில் டிரஸ்ட் ஒன்று தொடங்கி நிர்வகித்து வந்தார். நடராஜன் - தனலட்சுமி தம்பதிக்குக் குழந்தை இல்லாததால், அவரது அண்ணன் மகள் செந்தாமரையை தத்து எடுத்து வளர்த்து வந்தார். மகள் செந்தாமரைக்கு திருப்பூர் தொழிலதிபர் கிருஷ்ணராஜைத் திருமணம்செய்து​வைத்து, ராஜபாளையம் அழகப்பா காட்டன் மில்லை நிர்வகிக்கும் பொறுப்​பை மகள், மருமகனிடம் ஒப்படைத்தார்.
நடராஜன் இறந்த சில நாட்களில் ராஜபாளையம் சப்-ரிஜிஸ்தார் அலுவலகத்தில் ஓர் உயிலைப் பதிவு செய்தார் செந்தாமரை. அதில், 300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அடங்கிய ரங்கம்மாள் டிரஸ்ட்டின் நிர்வாக இயக்குனராக வளர்ப்பு மகள் செந்தாமரையை, தொழிலதிபர் நடராஜன் நியமித்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், 'அந்த உயில் போலியானது. செந்தாமரை அவரது கணவர் கிருஷ்ணராஜ் மற்றும் கார் டிரைவர் பழனி முருகன் ஆகியோர்போலியாக ஓர் உயிலைத் தயாரித்து மோசடி செய்துள்ளனர்’ என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸில் புகார் செய்தார் நடராஜனின் மனைவி தனலட்சுமி.
அவரிடம் பேசினோம். ''ரங்கம்மாள் டிரஸ்ட்டை என் கணவர் நடராஜனும் நானும்தான் ஆரம்பித்தோம். ஆரம்பம் முதலே வேறு யாரும் அந்த டிரஸ்ட்டில் மெம்பராக இல்லை. உயில் தொடர்பாக பிரச்னை வந்தவுடன்தான், கார் டிரைவர் பழனிமுருகன் மூலம் இந்த விஷயத்தில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலையிட்டார். இன்று வரை அவர் டிரஸ்ட் மெம்பராகத் தொடர்வதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
விருதுநகரில் இருந்து ஏராளமான அடியாட்​களைக் கொண்டுவந்து மிரட்டுவது, பொய் வழக்குப் போடுவது என்று பல பிரச்னைகள் செய்தனர். உயிருக்குப் பயந்து பங்களாவைவிட்டு வெளியேறி, இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். இந்தப் பிரச்னையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். தலையிடவில்லை என்றால், பிரச்னை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். எங்கள் கல்வி நிறுவனங்களின் சொத்துக்களை ஈரோடு வங்கி​யில் அடமானம் வைத்து  20 கோடி கடன் வாங்கியிருக்கிறார் செந்தாமரை. அப்போதே போலீஸில் புகார் செய்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். இப்போது நாமக்கல் போலீஸார், வளர்ப்பு மகள் செந்தாமரை, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். மற்றும் பழனிமுருகன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இனிமேலாவது நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய செந்தாமரை, ''எங்க அம்மா (அப்படித்தான் அழைக்கிறார்)தனலெட்சுமிக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. சொத்துக்கு ஆசைப்பட்டு சில உறவினர்கள்தான் அம்மாவைத் தூண்டிவிடுகிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆருக்கும் அப்பாவுக்கும் தொழில்ரீதியாக நல்ல நட்பு உண்டு. அதனால் நல்லபடியாக டிரஸ்ட்டைக் கவனிக்க வேண்டும் என்றுதான் அப்பாவே, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரை நியமித்தார். ஆனால் அவர் இரண்டு வருடங்கள் மட்டுமே மெம்பராக இருந்தார். சர்ச்சை எழுந்ததுமே விலகிவிட்டார். உயில் பிரச்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் உள்ளது. டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் என்ற அடிப்படை உரிமையில்தான், கடன் வாங்கி இருக்கிறேன். மொத்தமே  3 கோடி வாங்கி,
 1 கோடியை அடைத்தும்​விட்டேன். அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாகத்தான் முன்னாள் அமைச்சரை உள்ளே இழுத்து வழக்கு போட்டுள்ளார்கள்'' என்றார்.
முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்​சந்திரனைத் தொடர்பு கொண்டபோது, ''எனக்கும் நடராஜனுக்கும் நீண்ட காலப் பழக்கம். அந்த அடிப்படையில்தான் அந்த டிரஸ்ட்டில் மெம்பராக நியமித்திருந்தார். நடராஜன் இறந்த பிறகு யார் வாரிசு என்பதில் பிரச்னை ஏற்பட்டது. செந்தாமரை மற்றும் தனலட்சுமியிடம் சமாதானம் பேசினேன். ஆனால் தனலட்சுமியம்மாள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்குப் பிறகு பல அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் பஞ்சாயத்துப் பேசியும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. அதனால் டிரஸ்ட்டில் இருந்து நான் விலகிவிட்டேன்'' என்றார்.
இப்போது நாமக்கல் போலீஸார் விருதுநகரில் முகாமிட்டு அண்ணாச்சியின் வீடு மற்றும் ஸ்பின்னிங் மில்லில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நலப் பணியாளர்களுக்காக தி.மு.க. நடத்திய போராட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. ''கைது பயத்தில்தான் ஆப்சென்ட் ஆகிவிட்டார்'' என்று பீதியைக் கிளப்பியபடி விருதுநகரில் வலம் வருகிறது போலீஸ்!
- எம்.கார்த்தி, வீ.கே.ரமேஷ்.
படங்கள்: க. தனசேகரன்.
*********************************************************************************
ஆச்சார்யாவுக்கு முட்டுக்கட்டை!

சொத்துக் குவிப்பு வழக்கில் 'திடுக்' திருப்பம்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர், 74 வயதான அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா. வாய்தா மேல் வாய்தா வாங்கி 14 ஆண்டு​களாக இழுத்தடிக்கும் இந்த வழக்கில், இப்போது ஆச்சார்யா மீதே ஒரு குற்றச்சாட்டு.
கடந்த மாதம் ஐந்தாவது முறையாக கர்நாடகத்தின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் ஆச்சார்யா. அந்த விவகாரத்தையே ஆயுதமாக மாற்றி இருக்கிறார்கள் ஜெயலலிதா விசுவாசிகள். ஆச்சார்யாவை ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கர்நாடக கவர்னர் பரத்வாஜ்க்கு மனு அனுப்பி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்கள்.
இந்த மனுவை அளித்தவர்பெங்களூ​ ருவைச் சேர்ந்த வழக்கறிஞர் தேவதாஸ். ''ஜெயல​லிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா, சமீபத்தில் கர்நாடகத்தின் அட்வகேட் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். அட்வகேட் ஜெனரலாகவும், கிரிமினல் வழக்குகளில் அரசுத் தரப்பு வக்கீலாகவும் ஒரே சமயத்தில் அவர் செயல்படுகிறார்.
அட்வகேட் ஜெனரல் என்பவர் அந்த மாநில விவகாரங்களில்தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஆச்சார்யாவோ கர்நாடகத்தை ஆட்டுவிக்கும் எடியூரப்பா, குமாரசாமி, லோக் ஆயுக்தா வழக்குகளில் ஆஜராகாமல் வேறு மாநில வழக்கான ஜெயலலிதாவின் வழக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால் கர்நாடகத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யாவுக்கு அதிக வேலைப் பளு இருப்பதால், அவரை ஜெயலலிதாவின் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நலன் கருதி கவர்னரிடம் மனு அளித்திருக்கிறேன். கவர்னர் இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்'' என்று அழுத்தமாகச் சொன்னார்.
      இந்த விவகாரம் குறித்து ஆச்சார்யாவிடம் பேசினோம். ''ஓ... அப்படியா? இந்த பெட்டிஷன் பற்றி எனக்கு இன்னும் எந்தத் தகவலும் வரவில்லை. என் மீது பெட்டிஷன் கொடுத்த நண்பர், முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் என்னை ஸ்பெஷல் அரசுத் தரப்பு வக்கீலாக சுப்ரீம் கோர்ட்தான் நியமித்தது. இதில் என்னை ஆஜராகக் கூடாது என்று சொல்லும் அதிகாரம் கவர்னருக்குக் கிடையாது.  மேலும் அட்வகேட் ஜெனரலாக இருப்பவர் மற்ற வழக்குகளிலும், ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஆஜராகக் கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. இது அந்த வழக்கைத் தாமதப்படுத்தும் முயற்சியே. இந்த வழக்கில் இதுவரை வாங்கிய வாய்தா போதாதா? ஜெயலலிதா வழக்கை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன், கடைசி வரை போராடுவேன்'' என்றார் ஆவேசமாக.
ஜெ. வழக்கு முடியாது போலிருக்கிறதே!
இரா.வினோத், படம்: சு.குமரேசன்               
*********************************************************************************
ஆறு பள்ளிகளுக்குப் பறிபோகிறதா, அங்கீகாரம்?

கல்விக் கட்டணத்தில் அதிரடி நடவடிக்கை
ரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக, கல்விக் கட்டணம் வசூல் செய்ததாக, சென்னையில் ஆறு மெட்ரிக் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய பள்ளிக் கல்விக் கட்டணக் குழுத் தலைவர் நீதிபதி சிங்காரவேலு பரிந்துரை செய்துள்ளார் என்பதுதான் இப்போதைய கல்வித் துறை பரபரப்பு.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''சுமார் 300 பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக புகார் செய் யப்பட்டது. அதில் ஆறு பள்ளிகளுக்குத்தான் 'ஷோகாஸ்’ நோட்டீஸ் அனுப்பினர். அதற்குப் பள்ளிகள் உரிய விளக்கம் கொடுத்த பின்புதான், அடுத்த நடவடிக்கை எடுப்பார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் வசூல் செய்கிறார்களா என்பதை அறிய, அரசு ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்தால்தான் இதுபோன்ற பிரச்னைகள் எழாது. தவிர, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகமும், மெட்ரிக் பள்ளி இயக்குனரகமும் இதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
இந்தக் குற்றத்தைச் செய்யும் பள்ளி நிர்வா கத்துக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கப்படும் என்பதை அரசு தெளிவாகச் சொன்னால்தான், இந்த சட்டம் முழுமையாகப் பயன் தரும். பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்வதைவிட அரசே அந்தப் பள்ளியை ஏற்று நடத்த வேண்டும்'' என்றார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர்
செ. அருமைநாதன், 'பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தால், அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். இந்தக் காரணத்தைச் சொல்லியே, புகார் கொடுக்கும் பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் மிரட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு. மேலும், அடுத்து எந்த ஸ்கூலில் பிள்ளைகளைச் சேர்ப்பது என்ற குழப்பமும் ஏற்படும். எனவே, பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக, கூடுதலாகக் கட்டணம் வாங்கும் பள்ளி நிர்வாகிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கலாம். அவர்களுக்கு அபராதமோ அல்லது சிறைத் தண்டனையோ தரலாம். அப்போதுதான், மற்ற பள்ளி களில் கூடுதலாகக் கட்டணம் வாங்க மாட்டார்கள்' என்று ஆலோசனை சொன்னார்.
பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகையில், ''ஆறு பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் சொல்லும் விளக்கத்தைப் பொறுத்து, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறி அதிகக் கட்டணம்  வசூலிக்கும் பள்ளிகள் நிச்சயம் தண்டனைக்கு உள்ளாகும்'' என்றார் உறுதியாக.
பல ஆண்டுகளாக இருந்துவரும் பிரச்னைக்கு ஓர் அழுத்தமான முற்றுப்புள்ளி விழுந்தால் நல்லது!
நாச்சியாள், சி.காவேரி மாணிக்கம்


********************************************************************************************

மிஸ்டர் கழுகு: 'ஷாக்'லலிதா!

ஜெயா டி.வி-யில் முதல்வர் ஜெயலலிதா அடுத்தடுத்து அதிர்ச்சிக் குண்டு களை வீசியபோது உள்ளே வந்த கழுகார், நம்மோடு அமர்ந்து பேச்சைக் கவனித்தார். அவர்
'வணக்கம்’ சொல்லி முடித்ததும்தான் நம்மை உற்றுக் கவனித்தார்!
''மத்திய அரசை நோக்கி 'நிதி போதலை' என்று அம்மாவின் சத்தம் அதிகமாக இருக்கிறதே?'' என்ற கேள்வியுடன்  கச்சேரியை ஆரம்பித்தோம்.
''கஜானா அண்டாவை ஒட்டுமொத்தமாகக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார் கருணாநிதி. ஒன்றும் இல்லாத பாத்திரத்தில் கரண்டியைத் துழாவினால்... சத்தம் வரத்தானே செய்யும்’ என்று இரண்டு வாரத்துக்கு முன்பு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது'' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் கழுகார்.
''தமிழ்நாட்டின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்பது விவரம் அறிந்தவர்களுக்கு கொஞ்சம் முன்கூட்டியே தெரியும். கருணாநிதி ஆட்சியில் இருந்து விலகும்போது தமிழ்நாட்டுக்கு இருந்த கடன் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. அவருக்கு 'கடனாநிதி’ என்று தலைப்பிட்டே உமது குழுமப் பத்திரிக்கை ஒரு கட்டுரை வெளியிட்டது. அந்த நிலைமை நாளாவட்டத்தில் முற்றிப் போனது. அரசியல் போட்டிக்காக எத்தனையோ புதிய புதிய திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அவற்றை முழுமையாக இன்னமும் அமல்படுத்த முடியாததற்கும் காரணம் இந்த நிதி நெருக்கடிதான். அதிகாரிகளைச் சுற்றிவைத்துக்கொண்டு புதிய திட்டத் தொடக்க விழாவுக்கு தேதி குறிக்க முதல்வர் நினைக்கிறார். ஆனால் 'நிதி ஆதாரத்தை எங்கே இருந்து பெறுவது?’ என்று கேட்டால், அதற்கு நிதித் துறை தரப்பில் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த யதார்த்த நிலைமைதான் முதல்வரின் கோபத்துக்கும் கொந்தளிப்புக்கும் காரணம்!''
''அதற்காக..? புது ஆட்சி வந்து வயிற்றில் பால் வார்க்கும் என்று பார்த்தால், இப்படியா மக்கள் தலையில் மொத்தமாக சுமையைத் தூக்கிப் போடு வது?''
''துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே கதைதான்... வேறு வழி இல்லை என்று கோட்டை வட்டாரத்து அதிகாரிகள் சொல்கிறார்கள். அன்று காலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக் கூடியது. இதில்தான் இந்த முடிவு களைப் பற்றிச் சொன்னார் முதல்வர். இந்த அறிவிப்பை வெளியிட்டால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி வரும் என்று தெரியும். எனவேதான் அவர் இந்த மேட்டரை யாருக்கும் லீக் செய்யாமல் 'ஜெயா டி.வி.யில் நானே மக்களுக்குப் பேசுகிறேன். மக்களுக்கு நாமே தெளிவாக முதலில் சொன்னதாக இருக்கட்டும். மற்ற கட்சிகள் இதைக் கண்டித்த பிறகு, நாம் சப்பைக் கட்டு விளக்கம் சொல்வதாக இருக்கக் கூடாது’ என்றாராம் முதல்வர்.''
''முதல்வர் இப்படி மக்களை நோக்கி டி.வி.யில் ஸ்பெஷலாகப் பேசுவது நடந்து உள்ளதா?''
''பொதுவாக இப்படி நடப்பது இல்லைதான். ஆனால், ஜெயலலிதா ரொம்ப உஷாராக இருக்கிறார் என்பது தெரிகிறது. பேருந்துக் கட்டணத்தையும் பால் விலையையும் உயர்த்தி இருக்கிறார் முதல்வர். மின் கட்டணத்தை அரசாங்கம் நினைத்தால் மட்டுமே உயர்த்த முடியாது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துக்கேட்பு நடத்தித் தான் உயர்த்த வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. எனவேதான் அதில் உடனடியாகக் கை வைக்கவில்லை யாம்!''
''அப்பாடி... தப்பித்தான் தமிழன்! ஆனால், மொத்தமாக மத்திய அரசை அல்லவா காய்ச்சி எடுக்கிறார், ஜெய லலிதா?''
''மத்திய அரசுக்கும் ஜெயலலி தாவுக்குமான நட்பு சரியாக இல்லை. ஒரு தடவை டெல்லி சென்று சந்திப்பு நடத்திய பிறகு இரண்டு தரப்புக்கும் வேறு எந்த தகவல் பரிமாற்றத் தொடர்பும் இல்லை. 'சோனியா தன்னை உதாசீனப்படுத்துகிறார்’ என்று முதல்வர் நினைக்கிறார். 'திட்டக் குழுவில் இருந்தோ மத்திய அரசிடம் இருந்தோ எந்தவித நிதி உதவியும் கிடைக்கவில்லை. ஆனால், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க அரசுக்கு மட்டும் 21,614 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு நிதித் தொகுப்பு உதவி வழங்கி உள்ளது. இதில் இருந்து காங்கிரஸ் அல்லாத கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான மத்தியக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய அரசு புறக்கணிப்பது தெளிவாகத் தெரிகிறது’ என்று பாய்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு ஜெயலலிதா செல்லவில்லை. அவரது உரையை அமைச்சர் பன்னீர் செல்வம் டெல்லியில் 'பிராக்ஸி'யாக வாசித்தார். அதன் சாரமும் இப்படித்தான் காரமாக இருந்தது.''
''டெல்லி பக்கம் விசாரித்தீரா... அவர்களுக்கு ஜெயலலிதா மீது என்ன கோபமாம்?''
''மூவர் தூக்கு, கூடங்குளம் ஆகிய இரண்டு பிரச்னைகளிலும் மத்திய அரசுக்கு விரோதமான நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்ததும் கோபமாக இருக்கலாம். மூவர் தூக்கு விஷயத்திலாவது ஜெயலலிதா பல்டி அடித்துவிட்டார். ஆனால், கூடங்குளம் மேட்டரில் போராட்டக்காரர்களை அடக்க மாநில அரசாங்கம் சரியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்ற கோபம் மன்மோகன் வட்டாரத்துக்கு இருக்கிறதாம். 'ஜெயலலிதாவுக்குச் செய்யும் உதவிகள், பிற்பாடு  பி.ஜே.பி.க்குதான் சாதகமாகப் போய் முடியும்’ என்று சோனியா, மன்மோகன் நம்புவதாகச் சொல்கிறார்கள். அதனால் தான் நிதி விஷயங்களில் கருணை பொங்கவில்லை என்று கேள்வி!''
''இவர்களுக்கு நடுவில் சிக்கியது மக்கள்தானா?'' என்று நாம் கேட்க... ''அதே... அதே!'' என்ற கழுகார்,
''அமைச்சரவையின் அடுத்த மாற்றம் தயாராகி வருகிறதாம். முக்கியமான இரண்டு தலைகள் உருளக்கூடும்'' என்று சொல்லிச் சென்றார்!
படங்கள்: சு.குமரேசன்,
வீ.நாகமணி 
 கார்டனுக்கே ரீசார்ஜ் தந்த சாமி?!
'கார்டன் பேரைச் சொல்லுவேன்... கை நிறைய அள்ளுவேன்... ரீசார்ஜில் கில்லாடி இந்த சாமி!' என்று கூவாத குறைதான். விமான ஏரியாவின் வட்டாரப் போக்குவரத்துக்கு முக்கிய பொறுப்பாக இருக்கும் இவர், கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்கவுமே தன் துறை விஷயங்களில் தலையிட்டு டிரான்ஸ்பர் உள்ளிட்ட விவகாரங்களில் கலக்கி, உலுக்குகிறாராம்.
கடந்த ஆட்சியில் அமைச்சர் நேருவுடன் இருந்த படு நெருக்கத்தை வைத்தே பலவித விளையாட்டுகள் நடத்தி வந்த இவர், இப்போது தோட்டத்துக்கு நெருக்கமான ஒரு நிழல் மனிதரின் பேரைச் சொல்லி மிரட்டல் ராஜாங்கத்தைத் தொடருகிறாராம். ''போக்குவரத்துத் துறைக்குள் வேலை நடக்கணும்னா இவர்கிட்டே ஒரு தடவை காசு கொடுத்தா மட்டும் போதாது. குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பத் திரும்ப கொடுத்து ரீசார்ஜ் பண்ணிகிட்டே இருக்கணும். அப்பதான் கிடைச்ச பலன் நிலைக்கும். இல்லாட்டி, முடிச்சுக் கொடுத்த வேலையை மறுபடி ரிவர்ஸ் அடிச்சு, கிடைச்ச பலனை பாதியிலேயே பறிச்சிடுவாரு'' என்று கடுப்பான குரல்கள் கேட்கின்றன.
ஆட்டம் பொறுக்க முடியாமல் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸிடம் போட்டுக் கொடுத்தாராம் சக அதிகாரி ஒருவர். ஏனோ இதுவரை நடவடிக்கை இல்லை. ''எந்த ஆட்சி வந்தாலும் பெரிய இடத்துல என் பவரை தக்க வைக்கிறது எப்படினு எனக்குத் தெரியும். நான் கார்டனுக்கே ரீசார்ஜ் பண்ணிட்டேன்ல'' என்று கொக்கரிக்கிறராம் இந்த சாமி.
 இது ஞானதேசிகன் புகழ்!
வத்தலகுண்டு ஒன்றியம் 1-வது வார்டுக்கு சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அரிவேந்திரன் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைய... அங்கே தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இப்போது அங்கே வரும் 24-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் யாருமே மனு தாக்கல் செய்யவில்லை. கொடுமை என்ன தெரியுமா? இந்த 1-வது வார்டுக்குள் கணவாய்பட்டி என்கிற ஊர் வருகிறது. இது தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ஞானதேசிகனின் சொந்த ஊர்.
 தலைவர்களைக் கலங்கவைத்த படம்!
ஈழப் பிரச்னையை அடிப்படையாகவைத்து 'காற்றுக் கென்ன வேலி’ படம் இயக்கிய புகழேந்தி தங்கராஜ், இப்போது  'உச்சிதனை முகர்ந்தால்’ என்ற படத்தை எடுத்துள்ளார். பார்ப்பவர்கள் அனைவரையும் கலங்கவைக்கிற அந்தப் படம், கடந்த 16-ம் தேதி வைகோ, சீமான்,
சி. மகேந்திரன், பெ.மணியரசன், பேராசிரியர் சரஸ்வதி போன்ற முக்கிய மனிதர்களுக்கு  சென்னையில் திரையிட்டுக்  காண்பிக்கப்பட்டது. படம் பார்த்த அனைவருமே கலங்கிப் போனார்களாம்.
2009 மார்ச் 1-ம் தேதி கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பில் சிங்களப் படையின் கும்பல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட புனிதவதி எனும் ஈழச் சிறுமியின் கதைதான் இந்தப் படம். ஈழச் சிறுமியாக நடித்த நீநிகா என்ற சிறுமியை, எல்லா தலைவர்களும் நேரில் பார்த்தபோது, அவர் நடிப்புக்காக உணர்ச்சிவசப்பட்டு பாராட்டினார்கள். அங்கேயும் ஒரு 'அரசியல்'... மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலும் வைகோவும் சீமானும் பேசிக்கொள்ளவே இல்லை!
ஸ்டாலினை உருகவைத்த ஜோதி!
மாவட்டச் செயலாளர்களே தங்கள் இல்லத் திருமணத்திற்கு ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என்று தேதி கேட்டுக் காத்திருக்கும் நிலையில் சாதாரண தி.மு.க. தொண்டர் ஒருவரின் திருமணத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் ஸ்டாலின். மாற்றுத் திறனாளியான ஜோதி, தி.மு.க. உறுப்பினர். மேனகா என்கிற பெண்ணை மணமுடிக்க முடிவானதும்...  ஸ்டாலினிடம் போனார். ''மணமுடித்தபின் மனைவியுடன் வந்து உங்களைச் சந்தித்து ஆசி வாங்க வேண்டும்'' என்று சொல்ல.. சரி என்றார் ஸ்டாலின். வீட்டுக்கு வந்து ஆசி வாங்கிய ஜோதி, ஸ்டாலின் காலில் விழ.. அவருடைய ஊன்று கோலைப் பிடித்து 'வேண்டாம்' என்று பதறித்  தடுத்தார். தொடர்ச்சி சர்ப்ரைஸாக ஜோதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திடீரெனப் போய் வாழ்த்து சொன்னார்.
*********************************************************************************
கழுகார் பதில்கள்

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி
 கருணாநிதி - அரசியல் மேடையில், இலக்கிய மேடையில், திருமண மேடையில், ஆய்வரங்க மேடையில்... ஒப்பிடுங்களேன்?
'தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால் தீயைத் தாண்டி இருக்கிறேன்’ என்று கொதிப்பார் அரசியல் மேடைகளில். 'குடிசைதான் ஒரு புறத்தில்... கூரிய வாள் மறுபுறத்தில்’ என்று கொஞ்சுவார் இலக்கிய மேடைகளில். 'இது என்ன வாழ்த்தாளர் பட்டியலா? அல்லது வாக்காளர் பட்டியலா?’ என்று அழைப்பிதழில் உள்ள பெயர்களைப் பார்த்து கிண்டலுடன் தொடங்குவார் திருமண மேடைகளில். 'பிரசாரம் இல்லாத இலக்கியத்தால் என்ன பயன்?’ என்று அவர் கோவை மேடையில் வைத்த விமர்சனம் ஆய்வாளர்களால் பதில் சொல்ல முடியாத ஆய்வாகவே அமையும்!
இவை எல்லாமே ஒரு காலத்தில். இப்போது கருணாநிதி, இலக்கியம் மற்றும் ஆய்வரங்க மேடைகளில் பங்கேற்பது இல்லை. மற்ற இரண்டு மேடைகளின் பேச்சுக்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. எல்லாமே அவர் விடும் அறிக்கைகளின் நீட்சியாகவே ஆகிவிட்டன!
 கே.கே.வெங்கடேசன், வேலூர்.1
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் கூட்டணிவைத்தது மாதிரி தெரிகிறதே?
'மிடாஸ்’ விவகாரத்தில் கூட்டணி ஏற்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆனது தெரியும். இது இரண்டு தலைமைகளுக்குள் ஏற்பட்டது. இப்போது அது இரண்டு கட்சித் தொண்டர்களுக்கு மத்தியிலும் ஏற்பட்டுவிட்டது. அதற்கு இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்...
அருப்புக்கோட்டை நகர சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களை வைத்திருக்கும் அ.தி.மு.க. தான் துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றி இருக்க வேண்டும். ஆனால் தி.மு.க. வென்றுவிட்டது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றிய சேர்மன் பதவிக்குப் போட்டியிட்ட சசிகலாவின் உறவினர் இளவரசியின் தம்பி அண்ணாத்துரையை வெற்றி பெறவைக்க... தி.மு.க. புள்ளிகளே லாஜிக்காக வேலை பார்த்து இருக்கிறார்கள். இத்தகைய கூட்டணி இரண்டு கட்சிகளுக்குமே ஆரோக்கியமானது அல்ல!
 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்
தற்போது அரசியலில் எதற்கு மதிப்பு அதிகம்?
புகார் மனுக்களுக்குத்தான் மதிப்பு அதிகம்! முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க. புள்ளிகள் மீது நான் ஒரு புகார் வைத்திருக்கிறேன் என்று  சொன்னாலே... உங்கள் செல்வாக்கு உயர்ந்துவிடும்!
 பேரலை கொண்டான், கருப்பம்புலம்
பொட்டு சுரேஷை கோர்ட் விடுதலை செய்துவிட்டதே?
ஓர் அரசாங்கம் தோற்றுப்போயிருக்கிறது என்று அர்த்தம். ஒருவரைக் கைது செய்வதோடு போலீஸ் கடமை முடிந்துவிடுவது இல்லை. குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும். அதைச் செய்யத் தவறி இருக்கிறார்கள். அரசியல் சிபாரிசுகளால் அரசு வழக்கறிஞர்களாக, திறமையற்ற, தகுதியற்ற, வாதாடத் தெரியாத மனிதர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவதும் ஒரு முக்கியக் காரணம்!
 மணி.சுதந்திரக்குமார், சென்னை.112
புதிய தலைவர் ஞானதேசிகனால் தமிழக காங்கிரஸ் வளருமா?
ஞானதேசிகன் நல்ல மனிதர். திறமையான வக்கீல். காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மைத் தொண்டர்களின் ஆதரவைப் பெற்ற ஜி.கே.வாசனின் நம்பிக்கை​யைப் பெற்றவர். இம்மூன்றும் அவரது தகுதிகள். ஆனால், காங்கிரஸை வளர்க்க இது போதாது.
'தமிழகத்தில் கட்சி வளர்வதைவிட, தமிழகத்தில் எந்தக் கூட்டணியு​டனாவது சேர்ந்து 10 எம்.பி.க்​கள் வந்தால் போதும்’ என்று நினைக்கும் டெல்லித் தலைமையின் எண்ணங்கள் மாறாத வரை ஞானதேசிகன் மட்டும் அல்ல... ஜி.கே.வாசனைத் தலைவராகப் போட்டாலும் கட்சி வளராது!
 கே.ஏ.என்.சிவம், பெங்களூரு
ஒரு வழக்கில் குறைந்தபட்சம் எத்தனை வாய்தா வாங்க முடியும்?
பெங்களூருவில் இருக்கும் உமக்குத்தான் தெரியும்!
 எம்.செல்லையா, சாத்தூர்
பயணக் கட்டுரை எழுதியவர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்?
ராகுல்ஜி எனப்படும் ராகுல சாங்கிருத்தியாயன். அவர் எழுதிய 'வால்காவில் இருந்து கங்கை வரை’,  'ஊர் சுற்றிப் புராணம்’  இரண்டு புத்தகங்களையும் படியுங்கள்!
எல்லா வசதிகளும் இருக்கும் இந்தக் காலத்தில் பயணக் கட்டுரைகள் எழுதுவது பெரிய விஷயம் அல்ல. வசதி, வாய்ப்புகள் குறைவான எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் மேற்கு வங்காளத்தில் இருந்து கிளம்பி... கையில் காசு இருந்தால் ரயில் ஏறி...  இல்லாவிட்டால் நடைப் பயணமாகவே வந்து... அவர் எழுதிய வரலாறு மலைப்பைத் தரும். அவர் நன்றாக வைத்தியம் பார்ப்பார். முடி வெட்டுவார். தான் செல்லும் பகுதியில் இந்தத் தொழிலைப் பார்த்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்துப் பயணமானார். இந்தியத் தத்துவ மரபுகள் தொடர்பாக அவர் எழுதிய ஆய்வு நூல்கள்தான் உலகில் நம் முகத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்தன. சென்னைக்கு அருகில் இருக்கும் திருமழிசைப் பகுதியைப் பற்றி ராகுல்ஜி எழுதிய கட்டுரையில் இருக்கும் பல செய்திகள் இங்கே இருப்பவர்களுக்கே தெரியாது.
ஊர் சுற்ற நினைப்பவர்கள் முதலில் புல்லாங்குழல் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர். அதைப் போல ரம்மியமான பொழுதுபோக்கு வேறு என்ன இருக்க முடியும்?
 வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை.61
இந்தியாவுக்குள் நடக்கும் அனைத்துத் தீவிரவாதச் செயல்களையும் ஊக்குவிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஜிலானியை 'அமைதியின் மறு உருவம்’ என்கிறாரே நமது பிரதமர்?
அப்படிச் சொன்னாலாவது அமைதியாக இருப்பாரா என்ற ஆதங்கம்தான்!
 நென்மேலி ஆர்.நந்தகுமார், திருவண்ணாமலை
ஆள்மாறாட்ட புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை நேரில் சந்தித்தால்... என்ன கேட்பீர்கள்?
ஒன்பதாம் வகுப்பு வரையாவது ஒழுங்காகப் படித்துத்தான் பாஸ் செய்தீர்களா?
*********************************************************************************
சிதம்பரம் பதவியில் நீடிப்பது கோர்ட் கையில் இருக்கிறது!

சுதர்சன நாச்சியப்பன் சுளீர்
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையைக் கலைத்துவிட்டு, ப.சிதம்பரம் மீண்டும் காங்கிரஸுக்குத் தாவிய​போது அவருக்காக சிவகங்கை நாடாளு​ மன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்தவர் சுதர்சன நாச்சியப்பன். அவர்தான் திடீரென இப்போது சிதம்பரத்திற்கு எதிராக சீறுகிறார்.
''திடீரென சிதம்பரத்துக்கு எதிராக ஏன் இந்த ஆவேசம்?''
''2004-ம் ஆண்டு நான் தொகுதியை விட்டுச் சென்றபோது காங்கிரஸ் கட்சி 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கிற மாதிரி தொகுதியை வைச்சிருந்தேன். இப்போது இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கும் நிலை. கடந்த ஏழு வருஷத்தில் சிதம்பரம் செய்த சாதனை இது மட்டும்தான். உள்துறை அமைச்சரின் தொகுதியில் ஒரு நகராட்சி சேர்மனுக்குக்கூட ஆளை நிறுத்த முடியாத அளவுக்கு, காங்கிரஸை முடமாக்கிப் போட்டிருக்காங்க. ஜெயிக்கக்கூடிய ஆட்க ளுக்கும் 'கை’ சின்னம் கொடுக்காததால், அவர்கள் எல்லாம் சுயேச்சையாக நின்று ஜெயித்திருக்கிறார்கள். சிதம்பரத்தின் சொந்த ஊரிலேயே காங்கிரஸுக்கு நான்காவது இடம். இதுதான் இந்த மாவட்டத்தில் அப்பா வும் மகனும் கட்சி வளர்த்த லட்சணம். இனியும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், அது கட்சிக்கும் தலைமைக்கும் செய்த துரோகம் ஆகிவிடும் இங்கே காங்கிரஸ் கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டிய சூழல் வந்திருக்கு. அந்த நல்ல காரியத்தைச் செய்வதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட அன்னை சோனியாவிடம் வாய்ப்புக் கேட் பேன். நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி; அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டேன்.''
''அடிக்கடி தொகுதிக்கு சிதம்பரம் வந்து போகிறார்​தானே?''
''நிதித் துறை, உள்துறைன்னு இரண்டு முக்கியமான பொறுப்புகளைச் சிதம்பரத் துக்குக் கொடுத்தோம். ஆனால், என்னு டைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே குறியாய் இருந்தார். இந்தத் தொகுதி வளர்ச்சியில் அவர் அக்கறை காட் டவே இல்லை. எனது காலத்தில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்புதல் வாங்கிக் கொடுத்தேன். அந்தச் சாலையை மேற்கொண்டு விரிவுபடுத்துவதற்கான எந்த முயற்சியையும் சிதம்பரம் எடுக்கவில்லை. இதேபோல் தொண்டி - மதுரைச் சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு டி.ஆர்.பாலு மூலம் முயற்சி எடுத்தேன். அதற்கான கோப்பில் நிதி அமைச்சர் என்ற முறையில் சிதம்பரம் கையெழுத்துப் போட வேண்டும். ஆனால், அதற்கு மறுத்தார். அதனால், திட்டக் குழுத் துணைத் தலைவரும் டி.ஆர்.பாலுவும் மட்டுமே கையெழுத்துப் போட்டு அந்தத் திட்டத்துக்கு அப்ரூவல் கொடுத்தார்கள். திருச்சி - மானாமதுரை பிராட்கேஜ் பாதையை நான் கொண்டுவந்தேன். அதில் இயக்கப்பட்ட ரயில்களைக்கூட சிதம்பரத்தால் முழுமையாக இயக்கவைக்க முடியவில்லை. தனக்கு இணக்கமான தி.மு.க. ஆட்சி இருந்தபோதே சாதிக்காதவரா, விரோதியாக நினைக்கும் ஜெயலலிதா ஆட்சி யில் சாதிக்கப்போகிறார்?''
''தொகுதி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதால் சிதம்பரத்திற்கு என்ன லாபம்?''
''சிவகங்கையை சிங்கப் பூராக்கும் எனது கனவுத் திட்டத்துக்கு உறுதுணையா இருப்பார்னு நினைச்​​சுத்தான் இவருக்கு எனது தொகுதியை விட்டுக் கொடுத்தேன். ஆனால், தொகுதியை வளரவேவிடவில்லை. சிதம்பரமும் அவரது மகனும் இன்னமும் ஜமீன்தார் நினைப்பிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் தொகுதியை காபி எஸ்டேட் மாதிரியும் மக்களை ஓட்டுப் போடும் ஏ.டி.எம். மெஷின் மாதிரியும் பார்க்கிறார்கள். இனி அவர்களின் ராஜ்யம் இங்கே எடுபடாது.''
''காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்களும் முயற்சி செய்தீர்கள். அதற்கு சிதம்பரம் ஏதாவது தடங்கல் ஏற்படுத்தி, அந்த ஆதங்கத்தில் இப்படி அவருக்கு எதிராக சீறுகிறீர்களா?''
''இவங்க போடுற முட்டுக்கட்டை எல்லாம் நாம பார்க்காததா? நான் மூன்று முறை காங்கிரஸ் தலைவராக வர இருந்தபோதும் முட்டுக்கட்டை போட்டவர் சிதம்பரம்தான். எனக்கு மத்திய அமைச்​சராகும் வாய்ப்பு வந்தபோதும் தட்டிவிட்டார். இரண்டாவது முறையாக நான் ராஜ்ய சபாவுக்குப் போய்விடக் கூடாது என்பதிலும் முனைப்போடு இருந்தார். ஆனால், எனக்குத் தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இந்த முடிவுக்கு வரவில்லை. தலைவராக வந்திருந்தாலும் இதே முடிவைத்தான் எடுத்திருப்பேன். ஒருவேளை, தலைவராக வராவிட்டால் நமக்குப் போட்டியாக வர மாட்டான் என சிதம்பரம் நினைத்திருக்கலாம். அவரது நினைப்பு பொய்யாகப் போகிறது''
''பிரதமர் வேட்பாளர் என்கிற அளவுக்குப் பேசப்படும் சிதம்பரத்தை எதிர்த்து உங்களால் சாதித்துவிட முடியுமா?''
''முதலில் உள்துறை அமைச்சர் பதவியை அவர் பாதுகாத்துக்கொள்ளட்டும்; அப்புறம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம். அவர் பதவியில் நீடிப்பதே சுப்ரீம் கோர்ட் கையில்தான் இருக்கு. எப்படி இருந்தாலும் இனி சிதம்பரத்திற்கு சிவகங்கையில் வேலை இல்லை. அவரும் அவரது பையனும் வெளிநாட்டில் இருக்கும் தொழில் முதலீடுகளைக் கவனிக்கப் போகட்டும். காங்கிரஸ் கட்சியையும் தொண்டனையும் நாங்க பத்திரமாப் பாத்துக்குவோம்'' - புழுக்கத்தை எல்லாம் பொலபொலவென கொட்டித் தீர்த்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட்டார் நாச்சியப்பன்.
  - குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ் 
*********************************************************************************
சங்கரன்கோவில் முன்னோட்டம்!

ஆயுத்தமாகும் ஆளும்கட்சி.. மல்லுக்கட்டும் ம.தி.மு.க... இன்னும் யோசிக்கும் தி.மு.க...
திருச்சி இடைத்தேர்தல் சூடு ஆறுவதற்கு முன்பாக இன்னும் ஓர் இடைத்தேர்தல்.  சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்று அமைச் சராக இருந்த கருப்பசாமியின் மறைவு காரணமாக, அங்கே இடைத் தேர்தல் வரப்போகிறது. அதற்கான அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே ஆளும் கட்சி தன் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. கௌரவப் பிரச்னையாக நினைத்து ம.தி.மு.க-வும் பம்பரமாகப் போட்டியிடத் தயார்.
ரிசர்வ் தொகுதியான சங்கரன்கோவிலில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும்  இல்லை. விவசாயத்தை நம்பி வாழும் மக்களே அதிகம். அதுவும் வானம் பார்த்த பூமி. இதனால், கேரளாவுக்குக் கூலி வேலை செய்யப் பெரும்பாலானோர் போய்விடுவார்கள். தி.மு.க-வும் அதி.மு.க-வும் இந்தத் தொகுதியைக் கைப்பற்றினாலும், அமைச்சர் வாய்ப்புகளைப் பெற்றாலும் பெரிய தொழில் வாய்ப்புகள் இங்கு வரவில்லை என்பது மக்களின் மாபெரும் குறை. இந்த நிலையில்தான் இடைத்தேர்தல்... 
அ.தி.மு.க-வை வெற்றித் தொகுதியாக மாற்ற அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டப் பயனாளிகளுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றைக் கொடுக்கும் நிகழ்ச்சியை குருவி குளத்தில் தொடங்கிவைத்துப் பேசிய அவர், ''கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் குடும்பத்துக்காகவே சிந்தித்தனர். இன்றைய முதல்வர் அம்மாவோ மக்களுக்காக சிந்திக்கிறார். மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்பதற்காக நிறைய திட்டங்களைச் செயல்படுத்துகிறார். அம்மாவுக்கு நீங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' எனத் தேர்தல் பிரசாரத்தையே தொடங்கிவிட்டார். சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மாடு, ஆடுகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து இலவசத் திட்டங்களையும் உடனே செயல்படுத்தும்படி உத்தரவு.
அ.தி.மு.க. சார்பில் ஸீட் கேட்டு பலரும் மேலிடத்துக்கு தங்கள் பயோ-டேட்டாவை அனுப்பத் தொடங்கிவிட்டனர். கருப்பசாமியின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அரசியலில் இறங்க ஆர்வம் காட்டவில்லை. மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெய்சங்கர், ஆசிரியர் பிரபா கரன் ஆகியோர் ஸீட் வாங்க தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். பிரபாகரன் கட்சிக்குப் புதியவராக  இருந்தும், மேலிட நிர்வாகிகள் சிலர் வழியாக 'மூவ்’ செய்வதால், அவருக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். அமைச்சர் கருப்பசாமியின் உறவினரான எஸ்.கே.கருப்பசாமியும் ஸீட் கேட்கிறார்.
இதனிடையே, இந்தத் தொகுதியில் பல்வேறு கிராமங்களிலும் ம.தி.மு.க-வுக்கு செல்வாக்கு அதிகம். இந்தச் சூழலில், 'சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் நிச்சயமாகப் போட்டியிடுவோம்’ என வைகோ அறிவித்து இருப்பதால் ஆளும் கட்சி இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு இருக்கிறது. 
குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட மைப்பாறை கிராமத்தில் கடந்த 14-ம் தேதி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தைக் கூட்டினார் வைகோ.
''இது தேர்தல் வேலைகளுக்கான முன்னேற்பாடா?'' என வைகோவிடம் கேட்டதற்கு, ''மாநிலம் முழுவதும் எங்கள் கட்சியின் அமைப்புகளைப் பலப்படுத்தி வருகிறேன். 'கட்சியின் வேகத்துக்கு ஏற்ப செயல்பட முடியாத நிர்வாகிகள் பொறுப்புகளில் இருந்து நீக்கப் படுவார்கள்’ என்பதைப் பல முறை தெரிவித்து இருக் கிறேன். கட்சியைப் பலப்படுத்துவதுதான் முதல் நோக்கம். அதற்காகவே இத்தகைய கூட்டங்கள்... நாங்கள் எப்போதும் மக்களின் நலனை முன்வைத்து செயல்படுவோமே தவிர, என்றைக்கும் தேர்தலை மனதில்வைத்து செயல்பட மாட்டோம்'' என்றார் திட்டவட்டமாக.
ம.தி.மு.க-விலும் ஸீட் கேட்கும் முடிவில் பலரும் வரிசையில் நிற்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ-வான சதன் திருமலைக்குமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். தவிர, மாவட்ட துணைச் செயலாளரான மாரியப்பன், கவிஞர் மணிவேந்தன் ஆகியோர் பெயர்களும் பட்டியலில் இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல்களிலும் தி.மு.க. தோற்று துவண்டுவிட்டதால், தொண்டர்கள் சோர்ந்திருக்கின்றனர். தங்கவேலு எம்.பி-யாகிவிட்டதால், அவருக்கு மாற்றாக சரியான வேட்பாளர் கிடைக்காமல் அந்தக் கட்சியினர் திணறுகிறார்கள். ஆளும் கட்சியை எதிர்த்து இடைத்தேர்தலில் ஜெயிப்பது எளிது அல்ல என்பதைப் புரிந்துவைத்திருக்கும் பலர், 'தங்கள் பெயரைக் கட்சி மேலிடம் பரிந்துரைக்காமல் இருந்தாலே நல்லது’ என்கிற எண்ணத்தில் இருக்கி றார்கள். இருப்பினும், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் துரை, கடந்த முறை போட்டியிட்டு கருப்பசாமியிடம் தோற்ற உமா மகேஸ்வரி, மகளிர் அணியைச் சேர்ந்த சீனியம்மாள் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிபடுகின்றன. இன்னொரு பக்கம், 'தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை’ என தெரிவித்துவிட்டு இடைத்தேர்தலையே தி.மு.க. புறக்கணித்துவிடும் என்கிற பேச்சும் பலமாக அடிபடுகிறது.
ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
*********************************************************************************
ஒரு விளையாட்டுச் சங்கம் சூதாட்டக் கிளப் ஆகிறதா?

அருண் பாண்டியன் மீது அதிரடி குற்றச்சாட்டு
'விளையாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சங்கம், சூதாட்டக் கிளப்பாக மாறிக்கொண்டு இருக்கிறது. உடனே, அதைத் தடுத்து நிறுத்துங்கள்...’ - ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044 - 42890005) இப்படி ஒரு கதறல் ஒலிக்கவே, அங்கு விரைந்தோம்.
பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் விளையாட்டுக்காக 1960-களில் ஆரம்பிக்கப்பட்டது, தமிழ்நாடு பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் அசோசி யேஷன்’. இந்தச் சங்கத்தில்தான் சர்ச்சைகள் புற்றீசலாகப் பறக்கின்றன. நடிகரும் தே.மு.தி.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வாக இருக்கும் அருண் பாண்டியன் சங்கத்தின் தலைவராக இருப்பதால், விவகாரம் வேறு மாதிரியாக கிளம்பி இருக்கிறது.
சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர், 'பெயர் வேண்டாம்’ என்ற நிபந்தனையோடு பேசினார்கள். ''இதே சங்கம் முன்பு மயிலாப்பூரில் இருந்தபோது லாபத்தில்தான் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அது லாயிட்ஸ் ரோட்டுக்கு மாற்றப்பட்டது. அதில் இருந்தே நஷ்டம்தான்! அதோடு, சங்கத்தின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள். அடுக்குமாடிக் கட்டடத்தில் இரண்டு தளங்களை வாடகைக்கு எடுத்து சங்கம் செயல்படுகிறது. மாத வாடகை  1.67 லட்சம். சங்க செலவுகளைச் சேர்த்து மாதத்துக்கு 4 லட்சம் ஆகிறது. இதை சமாளிக்கத்தான் சீட்டு ஆடுவதற்கு தனியாக கான்ட்ராக்ட் விட்டனர். பில்லியர்ட்ஸ் விளையாட வருபவர்கள், ரிலாக்ஸ் செய்துகொண்டு பாரில் மது அருந்துவார்கள். அப்படியே சீட்டும் விளையாடுவார்கள். ஆனால், பந்தயத்துக்குப் பணம் கட்ட மாட்டார்கள்.
ஆனால், இப்போது சீட்டு ஆட்டத்தைக் கான்ட் ராக்ட் எடுத்து இருப்பவர்கள், பணத்தை வைத்து  சூதாட்டம் நடத்துகின்றனர். இதற்காக அவர்கள் வாரத்துக்கு  50,000 சங்கத்துக்குக் கொடுக்கிறார்கள்.
 5,000 வரை பணம் கட்டி சீட்டு விளையாடுபவர்களுக்கு தனியாகஒரு ஹாலும்,  50,000 வரைசூதாடுபவர்​களுக்கு ஸ்பெஷலாக ஓர் அறையும் ஒதுக்கி இருக்கின்றனர். பணப் பரி​மாற்றத்துக்கு டோக்கன் சிஸ்டம். சங்கத்தின் பெரும்பாலான உறுப்பி​னர்கள் சீட்டு ஆடுவதில்லை. ஆடு​கிறவர்கள் பெரும்பாலும் தற்காலிக உறுப்பினர்கள்தான். இரண்டு வருடத்தில் மட்டும் சுமார் 250 தற்காலிக உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்நூக்கர், பில்லியர்ட்ஸ் விளையாட்டுகளைப் பற்றி அடிப்படை அறிவு கிடையாது. சங்கத்தில் உள்ள பார், கேன்டீன், ஸ்நூக்கர் போன்றவற்றுக்கு சங்கத்தின் பணியாளர்களே வேலை செய்ய, சீட்டு ஆடுவதற்காகத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வெளி ஆட்களை நியமித்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் சங்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கரை வேட்டிகளும் பணக்கார புள்ளிகளும்தான் இங்கு வந்து சீட்டு ஆடுகிறார்கள். தினமும் லட்சக்கணக்கில் பணம் புழங்குகிறது. நஷ்டத்தில் இருந்து சங்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அனைத்துத் தவறுகளையும் அனுமதிக்கிறார்கள்'' என்றார்கள்.
ஸ்நூக்கர், பில்லியர்ட்ஸ் ஆடிக்கொண்டு இருந்த சிலரிடம் பேசி​னோம். ''ஸ்நூக்கர் விளையாடத் தெரிந்தவர்களும் ஆர்வம் கொண்டவர்களுமே இங்கு உறுப்பினராக முடியும். ஆறு மாதம் ஸ்நூக்கர் ஆடிய பிறகே, அவரை உறுப்பினர் ஆக்குவார்கள். சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ரொம்பவும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே ஸ்நூக்கர் ஆடினார்கள்.  இப்போது சுமார் 700  உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பணக்கார விளையாட்டான இதை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட சங்கம், அந்தத் தடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. ஆண்டுக்கு ஓரிரு முறை ஏதோ பேருக்கு போட்டிகளை நடத்தி முடிக்கிறார்கள். சென்னையில் எங்கேயும் ஸ்நூக்கர் அசோஸியேஷன் இல்லை. சீரழிக்கப்படும் இந்தச் சங்கத்தில் அரசாங்கம் தலையிட்டுத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்கள் ஆதங்கத்துடன்.
சங்கம் செயல்படும் கட்டடத்துக்குப் போனோம். இரண்டாவது மாடியில் 'பார்’ மற்றும் சூதாட்டக் கிளப் இருந்தன. இரண்டு நாட்களுக்கு முன்பு, அங்கே பார் ஊழியர்களுக்கும் சூதாட்டக் கிளப்பின் ஊழியர்களுக்கும் தகராறு நடந்து கத்திக்குத்து வரை போனதாம். அதை மூடி மறைத்துவிட்டார்களாம்.
சங்கத்துக்கு அடிக்கடி வந்து போகும் உறுப்பினர் கள் சிலர் நம்மிடம், ''2003-ம் ஆண்டுதான் நடிகர் அருண் பாண்டியன் இங்கே உறுப்பினர் ஆனார். கடந்த ஆண்டு அவர் தலைவரான பிறகுதான் பிரச்னை தொடங்கியது. சங்கத்துக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காகவே எதையும் அவர் கண்டுகொள்வது கிடையாது. இப்போது எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார் என்பதால், அவரிடம் கேள்வி கேட்க அஞ்சுகிறார்கள். சூதாட்டக் கிளப்புக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருவதால், போலீஸ்காரர்களும் இதைக் கண்டுகொள்வதே இல்லை. பணம் கட்டி சூதாட்டம் நடப்பதை போலீஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குப் பின்னாலும் பணம் விளையாடுகிறது'' என்றார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அருண் பாண்டியனிடம் பேசியபோது, ''யாரோ உங்களிடம் தவறான தகவல்களைச் சொல்லி இருக்கிறார்கள். தற்காலிக உறுப்பினர்களாக யாரையும் சேர்க்கவில்லை. பணம் வைத்து சீட்டும் ஆடப்படவில்லை'' என்றார்.
இதுபற்றி, ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமாரிடம் பேசினோம். ''இதுகுறித்து விசாரிக்கிறேன்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கலாமா?
எம்.பரக்கத் அலி
************************************************************************
பாரதி வீட்டுக்குப் பூட்டு!

புதுவை பரிதாபம்
மிழுக்கு மட்டுமல்ல, தமிழனுக்கும் பெருமை மிகு அடையாளம், பாரதியார். புதுவை​யில் அவர் வசித்த வீடு அரசுடை​மை ஆக்கப்​பட்டு, நினை​வகமாக மாற்றப்பட்டது. கடந்த பல மாதங்களாகவே இந்த நினைவகம் பூட்டுப் போட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-42890005) புகார் வரவே, விரைந்து சென்றோம்.
அந்தப் பகுதி தமிழ் ஆர்வலர்கள்  வருத்தத்​துடன் நம்மிடம் பேசினார்கள். ''ஆங்கிலேயர் ஆட்சியின்போது தமிழகப் போலீஸாரின் பிடியில் இருந்து தப்பி 1908-ம் ஆண்டு புதுவைக்கு வந்தார் பாரதியார். அதன் பிறகு 1918 வரை இங்குதான் வசித்தார். அவர் வசித்த வீடு இந்திய விடுதலைக்குப் பிறகு அரசுடைமை ஆக்கப்பட்டு, நினைவு நூலகமாகவும், காட்சிக் கூடமாகவும் மாற்றப்பட்டது.
பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் உட்பட பலரும் அந்த இல்லத்துக்குச் சென்று பார்வை​யிட்டு வந்தனர். இந்த இல்லம் பராமரிக்கப்பட்டதன் நோக்கம் மக்கள் அனைவரும் பாரதியாரின் பெருமைகளை அறிய வேண்டும் என்பதுதான். ஆனால், பராமரிப்புப் பணிகளை செய்கிறோம் என்று கூறி, புதுவை அரசு பல மாதங்​களாக அந்த இல்லத்தை முடக்கி வைத்துள்ளது. ஆனால், அங்கு எந்த ஒரு பராமரிப்பு வேலைகளும் நடக்கவில்லை.
இங்கு இருந்த பாரதியார் படங்களும், புத்தகங்களும் பாரதிதாசன் நினைவு இல்லத்தில் இருப்பதாகஅறிவிப்பு பலகை வைத்து இருக்கிறார்கள். ஆனால், அங்கு பாரதியாரின் புத்தகங்கள் மட்டுமே ஒரு சிறிய அறையில் உள்ளதே தவிர, அவரது படங்கள் இல்லை. பாரதிதாசனின் புத்தகங்கள் மற்றும் புகைப்படங்கள் வைக்கவே அந்த இல்லத்தில் போதிய இடவசதி இல்லை. அங்கே போய் பாரதியாரின் புத்தகங்களை சிறிய அறையில் கண்துடைப்புக்காக வைத்துள்ளார்கள்.
புதுவை அரசின் வருவாயில் சுற்று​லாத் துறையின் பங்கு பிரதான​​மானது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணி​கள் இங்கு வருகின்றனர். சுற்று​லாப் பயணிகளைஊக்குவிப்​ பதற்காக சுற்றுலாத் தலங் களை புதுப்பிப்பதற்காக அரசு கோடிக்கணக்கில்செலவி டுகிறது. ஆனால், பல மாதங்​களாக மூடியே கிடக்கும் பாரதியாரின் நினைவு இல்லத்தை சீரமைத்து, செயல்படுத்த மட்டும் ஏனோ தயங்குகிறது.
பொதுவாக ஒரு பெரிய தலைவரின் பெயரில் ஒரு அரசியல் கட்சியோ, இயக்கமோ இருக்கும். அவர்கள் தங்களது தலைவரின் வரலாற்றை பாதுகாக்கப் போராடுவார்கள். ஆனால், பாரதியாரின் பெயரில் அரசியல் கட்சியோ, இயக்கமோ இல்லை. அதனால்தான் கேட்பார் யாரும் இல்லாமல் அனாதையாகி விட்டார் பாரதியார். ஆன்மிகவாதி அரவிந்தரை புதுவைக்கு அழைத்து வந்ததே பாரதியார்தான். அரவிந்தருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் புதுவை அரசு, பாரதியை மட்டும் புறந்தள்ளுகிறது.
இந்த இல்லத்துக்கு மட்டும் அல்ல, புதுவையில் பாரதியாருக்காகக் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்துக்கும் இதே நிலைதான். கடந்த 2006-ம் ஆண்டு அரியாங்குப்பத்தில் கட்டப்பட்ட பாரதியார் மணி மண்டபத்தில், இப்போது இருப்பது பாரதியார் சிலை மட்டுமே. அங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. பராமரிப்பு இல்லாததால் இரவு நேரங்களில் அந்த மண்டபம் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவிடுகிறது. பாரதியாரின் புத்தகங்களையும், படங்களையும் இங்கேயாவது வைக்கலாம்...'' என்று சொன்னார்கள்.
பாரதியார் மணி மண்டபத்தைப் பார்வையிட ஆர்வமாக வந்து ஏமாற்றத்தில் இருந்த மாணவர்களிடம் பேசினோம். ''நாங்க கும்பகோணத்துல இருந்து வந்து இருக்கோம். பாரதியார் நினைவு இல்லத்துக்குப் போனா அது பூட்டி இருந்துச்சு.  உள்ள ஒண்ணுமே இல்லையாம்...'' என்கிறார்கள் வெறுமையுடன்!
இதுகுறித்து கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குனர் சந்தானகிருஷ்ணனிடம் பேசினோம். ''பாரதியார் வசித்த வீடு 100 ஆண்டுகள் பழமையானது. இந்த இல்லத்தின் சுவர்கள் பாழடைந்துவிட்டன. மேலும், அங்கு இடப்பற்றாக்குறை நிலவுகிறது.  இதை எல்லாம் சரி செய்யத்தான் நினைவு இல்லத்தைப் பூட்டி வைத்துள்ளோம். அங்கே  80 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப் பட்டு உள்ளது. நிதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். நிதி வரவில்லை என்பதால் பணிகள் நடக்கவில்லை. நிதி கிடைத்ததும் பணிகள் துவங்கும். மற்றபடி பாரதியாரின் புகைப்படங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் பாதுகாப்புடன் உள்ளன. பாரதியார் மணிமண்டபத்திலும் வேலைகள் பாதியில் நிற்கின்றன. விரைவில் அதுவும் சீரமைக்கப்படும்...'' என்றார்!
அதுசரி, அதிகாரிகள் அடித்துப் பிடித்து வேலை பார்க்க பாரதியார் அரசியல் தலைவரா என்ன? ஒரு  தமிழ் கவிஞன்தானே!                   
ஆ.நந்தகுமார் படங்கள்: ஜெ.முருகன்
*********************************************************************************
புரளி கிளப்பும் மர்ம மனிதன்

பதற்றத்தில் வேலூர்
டந்த 14-ம் தேதி. வேலூர் கலெக்டர் அலுவலகம் கதிகலங்கி நின்றது. காரணம், வெடிகுண்டு மிரட்டல்.
ஐந்து மாடிகளைக் கொண்ட இரண்டு அடுக்குக் கட்டடம், வேலூர் கலெக்டர் அலுவலகம். சுமார் 1,400 பணியாளர்களைக் கொண்டது. சம்பவத்தன்று பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மனுக்கள் வாங்கும் நாள் என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகம். அன்று மாலை வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. நடந்த சம்பவம் பற்றிப் பேசுகிறார், வேலூர் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். ''திங்கட்கிழமை மாலை 4.20 மணிக்கு டி.எஸ்.பி. அலுவலகத் துக்கு போனில் பேசியவர், 'கலெக்டர் ஆபீஸ்ல குண்டு வைச்சிருக்கோம்... இன்னும் ஒரு மணி நேரத்தில் கண்டிப்பா வெடிக்கும்’ என்று சொல்லி விட்டு உடனே போனை வைத்துவிட்டான். எங்களுக்கு பெரும் அதிர்ச்சி. என்ன செய்வது என்று நாங்கள் முடிவு செய்வதற்குள் மறுபடியும் இரண்டு முறை அவனே போன் செய்து, 'கண்டிப்பாக வெடிகுண்டு வெடிக்கும். உங்களால் முடிஞ்சதை நீங்க பண்ணிக்கோங்க’ என்று சொல்லி கட் செய்துவிட்டான். உடனே வெடிகுண்டு பரிசோதனைக்காக கலெக்​டர் ஆபீஸ்க்குப் போனோம். அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களிடம் பக்குவமாக நிலைமையைச் சொல்லி, அவர்களைப் பத்திரமாக வெளியேற்றினோம். வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பரிசோதனை செய்தபிறகே, வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது. வேலூர் மாவட்ட ஆட்சியரும், வேலூர் எஸ்.பி-யும் சென்னையில் நடந்த முதல்வர் மாநாட்டில் கலந்து கொண்ட நேரத்தில் வந்த மிரட்டலால் நாங்கள் பதறிப் போனது உண்மைதான். ஆனால் இந்த சூழலில் மக்கள் பதறியடித்து ஓடுவதால்தான் இழப்பு அதிகம் ஏற்படும் என்பதால் நிலைமையைப் பக்குவமாக கையாண்டு சிக்கலைத் தவிர்த்தோம்'' என்று படபடப் பாகப் பேசினார்.
இதுகுறித்து விசாரணை நடத்திவரும் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்,  ''சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் நம்பரை சோதித்தபோது, அவன் கொடுத்திருப்பது பொய்யான முகவரி என்பது தெரிந்தது. அவன்தான் வழக்கமாக 100, 101 போன்ற எண்களுக்கு போன் செய்து தவறான தகவல்களைச் சொல்லி வருகிறான் என்பதையும் கண்டு பிடித்து இருக்கிறோம். விரைவில் அவனைப் பிடித்துவிடுவோம்'' என்றார்.
''இதுபோன்று புரளி கிளப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்'' என்று எச்சரிக்கை செய்துள்ள வேலூர் எஸ்.பி. கயல்விழி, அந்த மர்ம மனிதனைப் பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்​ளாராம்.
மக்களைப் பதறவைக்கும் மர்ம மனிதன் பிடிபட்டால்தான், வேலூர் மக்கள் நிம்மதி அடைவார்கள்.

கே.ஏ.சசிகுமார்
படங்கள் : ச.வெங்கடேசன் 
*********************************************************************************
பணம் ஒதுக்கியாச்சு... கட்டடம் என்னாச்சு?

வேலூர் பள்ளி வேதனை
ரு பக்கம் சமச்சீர்க் கல்வி வெற்றி விழா என்ற பெயரில் தி.மு.க-வினர் வரிந்து கட்டிக்கொண்டு தமிழகம் எங்கும் பொதுக் கூட்டம் போட... வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மொணவூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கட்டட வசதி இல்லாமல், மரத்தடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டு இருக்கின்றனர். 'பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு கான்ட்ராக்ட் எடுத்தவர் சசிகுமார். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் நகராட்சி சேர்மன் விஜயலட்சுமியின் மகன். அதனால்தான் இந்தத் தாமதம்’ எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கு கின்றார் அ.தி.மு.க. சத்துவாச்சாரி நகர துணை செயலாளரான ஆர்.பி.ரமேஷ்.
''பள்ளிக்கூடத்தில் போன வருஷம் சத்துவாச்​சாரியைச் சேர்ந்த சசிகுமார் கட்டடத்தைக் கட்டத் தொடங்கினார். ஆனா, ரெண்டு மாசம்தான்... அதுக்குப் பிறகு எதுவும் நடக்கலை. சசிகுமாரும் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. மழைக் காலத்தில், குழந்தைகள் ரொம்பக் கஷ்டப்படுறாங்க. அதனால்தான், கலெக்டரிடம் புகார் செஞ்சேன். ஸ்கூல் பக்கத்தில் இலங்கை அகதிகள் முகாமும் இருக்குது, அங்கிருந்தும் 40 புள்ளைங்க இங்கு வந்து படிக்கிறாங்க. இது மட்டுமில்லாம, சத்துவாச்சாரி பகுதியில் உள்ள அரசுப் பூங்கா நிலங்களை சசிகுமாரின் அப்பா ஆர்.பி.ஏழுமலையும் அவர்களது உறவினர்களும் சேர்ந்து வித்துட்டாங்க. இது சம்பந்தமாவும் புகார் கொடுத்து இருக்கேன். கலெக்டர்தான் நல்ல தீர்வைக் கொடுக்கணும்!'' என்றார் ஆர்.பி.ரமேஷ்.
மேல்மொணவூர் பள்ளியைப் பார்வையிட்டோம். நம்மிடம் பேசிய பெயர் கூற விரும்பாத ஆசிரியர்ஒருவர், ''இந்த ஸ்கூலில் 430 பையன்களும், பெண்களும் படிக்கிறார்கள். 2008-ம் ஆண்டில் இது உயர்நிலைப் பள்ளியாக மாறியது. நபார்டு மூலமாக போன வருடம் அக்டோபர் மாதம் 85 லட்சம் செலவில் கட்டடப் பணிகளைத் துவக்கினார்கள். ஆனால், தி.மு.க ஆட்சி மாறியதும் அப்படியே நின்றுபோனது. இங்கு 12 வகுப்பு அறைகளும், அறிவியல் அறைகளும் கட்டுவதாகத் திட்டம். இங்கு படிக்கும் மாணவர்களின் 10-ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் 82 விழுக்காடு. படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு அறை இல்லாமல் இருந்தால் எப்படிப் படிப்பார்கள்? நாங்களும் உயர் அதிகாரிகளிடம் நிலை​மையைத் தெரிவித்தோம். அவர்கள் சென்ற வாரம் வந்து பார்த்துவிட்டுப் போனதோடு சரி. அரசுதான் மாணவர்களின் எதிர்காலத்தைப்பற்றித் தீர்மானிக்க வேண்டும்'' என்றார் வேதனையுடன்.
சசிகுமாரிடம் பேசினோம். ''எங்க அப்பா​வுக்கு மூணு மாசமா உடல் நிலை சரியில்லை. அதனால்தான் பணிகள் ஆரம்பிக்க வில்லை. இப்போ வேலைகளை தொடங்கிட்டோம். கூடிய சீக்கிரமே முடிச்சிடுவோம்'' என்று  சொன்னார்.
வேலூர் மாவட்டக் கலெக்டர் நாகராஜ​னிடம் விஷயத்தைச் சொன்னோம். ''உடனே பள்ளியின் நிலவரத்தைப் பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதி சொல்லி இருக்கிறார்.
கல்வியோடு விளையாடுவதை அரசியல்வாதிகள் எப்போது நிறுத்தப் போகிறார்கள்?
கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்.
*********************************************************************************
மீண்டும் தொடங்கி விட்டதா கடத்தல் தொழில்?

நாகை கடலோர அதிர்ச்சி!
நாகை கடலோரப் பகுதியில் முற்றிலும் தடுக்கப்பட்டு இருந்த கடத்தல், மீண்டும் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கி விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.
சம்பவம் 1:
கடந்த 11-ம் தேதி அதிகாலையில் வேளாங் கண்ணிக்கு அருகேயுள்ள பரவை கிராமத்தில் உள்ள சோதனைச் சாவடியில் சுங்கத்துறை அலுவலர்கள், வாகனச் சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர். அதிவேகமாக வந்த (டி.என்.51 இ 6639) சுமோ காரில், ஒரு தங்க பிஸ்கட் 100 கிராம் எடையில், 156 பிஸ்கட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு சுமார்  4.5 கோடி என்று கூறப்படுகிறது. விசாரணையில், கோடியக் கரையைச் சேர்ந்த ஆனந்த் என்பவர்தான், இந்தக் கடத்தலுக்குப் பின்னணியில் இருக்கிறார் என்பது தெரிந்து, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ராஜீவ் கொலைச் சதியில் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையின் போது தூக்கு மாட்டி இறந்துபோன, கோடியக்கரை மிராசுதார் சண்முகத்தின் மகன்தான் இந்த ஆனந்த். உடனே இந்த விவகாரத்துக்காக ஆனந்த் மற்றும் கோடியக்காடு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வேதையனையும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
சம்பவம் 2:
வேதாரண்யம் டி.எஸ்.பி-யான குணசேகரன் தலைமையில் போலீஸ் படை, தேத்தாக்குடி தெற்கு கிராமத்துக்கு கடந்த 13-ம் தேதி சென்றது. அங்குள்ள காந்தி நகரில் வசிக்கும் ஆல்பர்ட் குரூஸ் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த போலீஸ் படை, வீட்டை சல்லடையாக சலித்தனர். பரணில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஒரு பாலிதீன் பையைக் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் 2005-10 என்று அந்தப் பையின் மேல்பக்கம் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பைக்குள் இருந்தது, 885 கிராம் ஹெராயின். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சுமார்  80 லட்சம். இலங்கை அகதியான ஆல்பர்ட் குரூஸ், 1989-ம் ஆண்டு இந்தியா வந்து, தேத்தாக்குடி கிராமத்தில் தங்கியவன். அதே கிராமத்தைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணை, திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி இருக்கிறான். இவனுடன் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று விசாரணை நீண்டு வருகிறது.
இந்த இரண்டு சம்பவங்களும் காட்டுவது என்ன?
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான மயிலாடுதுறையைச் சேர்ந்த இராம.சிவசங்கர்,  ''நாகை மாவட்டம் நீண்ட கடற்கரையைக் கொண்டது. அதனால், பல்வேறு குற்றங்கள் கடலோரத்தை மைய மாகக் கொண்டே நடக்கும். இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கும் நாகை மாவட்டம் கோடியக்கரைக்கும் இடையே 15 கடல் மைல் தூரம்தான். அதனால்தான் எல்லை தெரியாமல் மீன்பிடிக்கப் போகும் வேதாரண்யம் மீனவர்கள், இலங்கை  ராணுவத்தினரால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். இந்த குறைந்த தூரம் கடத்தல்காரர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. ராஜீவ் கொலைக்கு முன்பு, இலங்கை - கோடியக்கரை இடையே படகுப் போக்குவரத்து மிகவும் சாதாரணமாக நடந்துவந்தது. இலங்கையில் இருந்து தங்கம், வெள்ளி, கிராம்பு போன்ற பொருட்களைக் கடத்தி வருவார்கள். அரிசி, துணி, மருந்து, பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை இங்கிருந்து கடத்திச் செல்வார்கள். அதனால், கோடியக்கரை பகுதியில் பல திடீர் பணக்காரர்கள் உருவானார்கள். ராஜீவ் கொலைக்குப் பிறகு, நாகை கடலோரப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதனால், கடத்தலுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. இப்போது, தங்க பிஸ்கட் மற்றும் போதை பவுடர் சிக்கி இருப்பதைப் பார்த்தால், கடத்தல் தொழில் மீண்டும் தலையெடுத்துவிட்டது என்றே தெரிகிறது. மாபெரும் குற்றங்கள் நிகழும் முன்பே மத்திய, மாநில அரசுகள் உடனே கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்'' என்றார்.
''தமிழக கடலோரத்தில், ராமேஸ்வரம் பகுதியில் மட்டும் கண்காணிப்பு இன்னமும் கடுமையாக இருக் கிறது. அதனால் கடத்தல் புள்ளிகள், கண்காணிப்பு குறைவாக இருக்கும் கோடியக்கரை பகுதியை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். முன்பு இந்தத் தொழிலில் இருந்த ஆட்களையே மீண்டும் பயன்படுத்துகிறார்கள். அப்படித்தான் ஆனந்த் களம் இறக்கப்பட்டு உள்ளார். அதேபோல், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அகதி டிலோ என்பவன் இரண்டு மாதங்களுக்கு முன் ஹெராயின் பாக்கெட்டை, ஆல்பர்ட் குருஸிடம் கொடுத்து வைத்திருக்கிறான். இதுபற்றி, எங்களுக்கு ரகசிய தகவல் வரவே, நடவடிக்கையில் இறங்கினோம்'' என்கிறது போலீஸ் வட்டாரம். 
நாகை மாவட்ட எஸ்.பி. ராமரிடம் பேசினோம். ''போலீஸார் மிகவும் விழிப்போடு கண்காணித்து வருகின்றனர். அதனால்தான், ஹெராயினைக் கைப் பற்ற முடிந்தது.  தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இலங்கையில் இருந்து இந்திய ராணுவத்தின் கடற்படை, சுங்கத் துறை, கடலோர காவல்படை இவை மூன்றையும் தாண்டி ஊருக்குள் வருவது குறித்து, நாங்களும் தீவிரமாக விசாரித்து வருகிறோம். எல்லா துறைகளும் இணைந்து, கடத்தலைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பாதுகாப்பு பலமாகவே இருக்கிறது'' என்றார்.
கடலோரப் பகுதி அமைதியாக இருந்தால்தான், நாட்டு மக்கள் பாதுகாப்புடன் நிம்மதியாக இருக்க முடியும்!
கரு.முத்து
************************************************************************
தே.மு.தி.க-வுக்கு அதிர்ச்சி... பா.ம.க-வுக்கு பேரதிர்ச்சி!

மதுரை ஏரியாவில் 'அம்மா' வைத்தியம்
ள்ளாட்சித் தேர்தல் முடிவு கொடுத்த அதிர்ச்சி போதாது என்று, தேனி மாவட்ட தே.மு.தி.க. செயலாளரும் கூடலூர் நகராட்சியின் தலைவருமான அருண்குமார் இன்னொரு அதிர்ச்சியை விஜயகாந்துக்குக் கொடுத்துவிட்டார்.
அருண்குமார் விஜயகாந்த்தின் தீவிர விசுவாசி யாக இருந்தவர். விஜயகாந்த்தின் 53-வது பிறந்த நாளை முன்னிட்டு 53 ஜோடிகளுக்கு சொந்தப் பணத்தில்  20 லட்சம் செலவு செய்து இலவசத் திருமணம் நடத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவி, கம்பம் இடைத் தேர்தல் வேட்பாளர் என கட்சி இவருக்கு அங்கீ காரம் கொடுத்தது. இந்த நிலையில்தான் கூடலூர் நகராட்சி சேர்மன் பதவிக்கு நின்று வெற்றி பெற்று விஜயகாந்த்திடம் சபாஷ் வாங்கினார். ஆனால், நகராட்சியின் முதல் மன்றக் கூட்டமே நடக்காத நிலையில், திடீரெனக் கட்சி மாறிவிட்டார் அருண்குமார்.
இதுகுறித்து தே.மு.தி.க. கட்சியினரிடம் விசாரித்தோம். ''சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கேப்டன் எடுத்த எடுப்பிலேயே, அருண்குமாரை கை காட்டி எழுந்தரிக்கச் சொன் னார். 'தேனி மாவட்டத்தில் 35 நிர்வாகிகள் இருக் காங்க. ஆனால், 19 பேரை மட்டும்தான் கூட்டிட்டு வந்து இருக்கீங்க. நைட்டு 8 மணிக்கு மேல் கட்சி நிர்வாகிகள் போன் போட்டா எடுக்குறது இல்லை. அப்படியே எடுத்தாலும் மதிச்சுப் பேசுறது இல்லை. நீ எப்படி ஜெயிச்சேன்னு எனக்குத் தெரியும். ஜெயிச்சா மட்டும் போதுமா? நீ பணக்காரன்னா அதை உன்னோட வெச்சுக்கோ. உன்னை நம்பி என் கட்சி இல்லை...'' என்று ஒருமையில் பேசி இருக்கிறார்.
இதைக் கேட்டு மனம் உடைந்துப் போன அருண்குமார் கண்கலங்கி வெளியேறினார். அதன்பின்பு அவர் அ.தி.மு.க-வின் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ-வான தங்கதமிழ்செல்வனிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். 'இனி ஒரு நொடிப் பொழுதுகூட தே.மு.தி.க-வில் இருக்க நான் விரும்பவில்லை. அம்மாகிட்ட நேரம் வாங்கிக் கொடுங்க’ என்று கேட்டிருக்கிறார்.
தங்கதமிழ்செல்வன் இதுதொடர்பாக தோட் டத்துக்கு தகவல் அனுப்பியதும், முதலில் அனுமதி கிடைக்கவில்லை. அதன்பிறகு என்ன நினைச் சாங்களோ தெரியலை... அருண்குமாரை கூட்டிட்டு வரச் சொல்லி சேர்த்துக்கிட்டாங்க'' என்றார்கள்.
ஆனால், இன்னொரு தரப்பினரோ, ''சமீபத்தில் இவரது குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் பல கோடி மதிப்புள்ள ஹெராயினை போலீசார் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக இவரது உறவினர்களை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே அருண்குமார் அ.தி.மு.க-வில் சரண்டர் ஆனார்...'' என்கிறார்கள்!
அருண்குமாரிடம் பேசினோம் ''என்னை பல வகையில் காயப்படுத்தி விட்டார்கள். பழையவிஷயங்களைப் பேசி யார் மனதையும் நான் புண்படுத்த விரும்பவில்லை. எனது உழைப்புக்கு தே.மு.தி.க-வில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பலவகைகளிலும் அவமானப்படுத்தப் பட்டேன்; புறக் கணிக்கப் பட்டேன். அதனால், அக் கட்சியில் இருந்து வெளியேறி விட் டேன். மற்றபடி நான் யார் மீதும் குறை சொல்ல விரும்ப வில்லை. எது நியாயம் என்பது அவரவர் மனசாட்சிக்குத் தெரியும். போதைப் பொருள் பிடிபட்டது, வழக் குக்குப் பயந்து கட்சி மாறினேன் என்பது எல்லாம் கட்டுக் கதை. பாரம்பரியமான எங்கள் குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கவே சிலர் இப்படி கிளப்பி விடு கிறார்கள்'' என்றார் விரக்தியுடன்.
தே.மு.தி.க-வுக்கு அதிர்ச்சி என்றால் பா.ம.க-வுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. தமிழகத்தில் 10 மாநகராட்சி களுக்கும் மேயர் வேட்பாளர்களை பா.ம.க. நிறுத்தியது. ஒன்பது இடங்களில் பா.ம.க. வேட்பாளர்கள் வேட்பு மனுவையாவது தாக்கல் செய்தார்கள். மதுரையில் அதுவும் இல்லை. இத்தனைக்கும் இங்கே கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வில்லாபுரம் ரமேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். 'சொந்தப் பிரச்னை காரணமாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வில்லை’ என்று சொன்ன ரமேஷை இப்போது அ.தி.மு.க-வில் இழுத்துப் போட்டிருக்கிறார் மேயர் ராஜன் செல்லப்பா. ரமேஷ் மாத்திரமல்ல, பா.ம.க-வின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், துணைச் செயலாளர் வல்லத்தரசு, தலைவர் பொற்கை பாண்டியன், மாணவரணி மாவட்டத் தலைவர் சோமசுந்தரம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பாண்டி காமாட்சி, தலைமை செயற்குழு உறுப்பினர் பழக்கடை சண்முகம் உள்ளிட்ட மதுரை பா.ம.க. கூடாரமே இப்போது அ.தி.மு.க-வில் ஐக்கியம். இதில் பழக்கடை சண்முகம், ராமதாஸின் நெருங்கிய உறவினர். இவர்கள் அனைவரும் கடந்த 15-ம் தேதி ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க-வில் ஐக்கியமானர்கள்.
பா.ம.க-வினரோடு சேர்ந்து மதுரை மாநகராட்சியின் சுயேச்சை கவுன்சிலர்களான மணி, மோகன், ஷாலினி தேவி, காதர் அம்மாள், ராமசுப்பிரமணியன், ஹமீதா பேகம், சந்தியா ஆகிய ஏழுபேரையும் அ.தி.மு.க-வில் ஐக்கியப்படுத்தி இருக்கிறார் ராஜன் செல்லப்பா. இதில், ஷாலினி தேவியின் கணவர் சந்திரன் கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வில் ஸீட் கிடைக்காததால் சுயேச்சையாக நின்று கவுன்சிலரா னவர். இந்தமுறை இவரது மனைவிக்கு ஸீட் மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக களம் இறக்கி ஜெயிக்க வைத்தார். மாரியும் அ.தி.மு.க-வில் ஸீட் கிடைக்காமல் சுயேச்சையாக ஜெயித்தவர்தான். காதர் அம்மாளும் ராமசுப்பிரமணியனும் தி.மு.க. சுயேச்சைகள். சந்தியா காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்து வெற்றி பெற்றவர். மற்ற இருவரும் அக்மார்க் சுயேச்சைகள். இந்த இழுப்பு படலத்தைப் பார்த்து விட்டு தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரும் சபலப்பட்டுக் கிடக்கிறார்களாம்.!
குள.சண்முகசுந்தரம்,
இரா.முத்துநாகு
************************************************************************
'முதலைப்பட்டி பஸ் நிலையம் வேண்டாம்!'

எதிர்க்கும் நாமக்கல் மக்கள்!
நாமக்கல்லின் மையப் பகுதியில் இருக்கும் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பதால், நகருக்கு வெளியே முதலைப் பட்டி என்ற இடத்தில் புதிய பஸ் நிலையம்  அமைக்கப்படுகிறது. இதற்கு நகர மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர்.
இதுபற்றி பொதுமக்களிடம் விசாரித்த போது. ''என் பேர் அமுதா. நான் இந்த பஸ் நிலையத்துக்குப் பக்கத்தில்தான் சுய தொழில் செய்கிறேன். வீடும் பக்கத்திலேயே இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கும் இந்த பஸ் நிலையம்தான் வசதி. இப்போது சிட்டியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முதலைப்பட்டியில் பஸ் நிலையம் அமைக்கப் போகிறார்களாம். இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு இது சரியில்லை. வீட்டில் இருந்து வேலைக்கு வர இரண்டு பஸ் மாறி வர வேண்டும். மார்க்கெட், அரசு மருத்துவமனை, கல்லூரிகள் எல்லாம் இங்குதான் பக்கத்தில் இருக்கின்றன. கிராமத்து மக்களுக்கும் இதுதான் தோதாக இருக்கிறது. ரிங் ரோடு அமைத்து லாரிகளை சிட்டிக்குள் உள்ளே வராமல் தடுத்தாலே முழுமையாக போக்குவரத்தைக் கட்டுப்படுத்தலாம். அதைவிட்டு, தேவையில்லாமல் இப்படி முடிவெடுத்து இருக்கிறார்கள்'' என்று கவலைப்பட்டார்.
 
தமிழ்நாடு வணிகர்கள் சங்கங் களின் பேரவையின் நாமக்கல் மாவட்ட தலைவர் பழனி யப்பன், ''இப்போது இருக்கிற பஸ் நிலையத்தை சுற்றிதான் காவல் நிலை யம், மருத்துவமனை, அரசு குடியிருப்பு, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக மையங்கள் எல்லாம் செயல்படுகின்றன.  கோயிலுக்கோ, அவசரமாக மருத்துவமனைக்குப் போவ தற்கோ இங்கிருந்து சுலபமாக போய் வரலாம். முதலைப்பட்டியில் புதிய பஸ் நிலையத்தை அமைப்பதை விட, இருக்கும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்தால் போதும்... போக்குவரத்துப் பிரச்னையை சமாளிக்க முடியும்'' என்றார்.
காங்கிரஸ் பிரமுகரான வாசு சீனிவாசன், ''நாமக்கல் பஸ் நிலையம் அரசியல்வாதிகளின் சுய நலத்துக்காகத்தான் மாற்றப்படுகிறது. கடந்த தி.மு.க. அரசு கொண்டுவந்த நல்ல திட்டங்களையே மாற்றும் இந்த அரசு, வேண்டும் என்றே பஸ் நிலையத்தைப் மாற்ற தீர்மானத்தைப் போட்டிருக்கிறது. இதைத் தவிர, தற்போது ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. நகராட்சித் தலைவர் கரிகாலன் உடனே இதை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் என்ன? அதுவும் பொங்கலூர் பழனிச்சாமியின் சம்பந்தி இடத்தின் நடுவில் பாதை அமைத்து அவசர அவசரமாக செயல்படுத்துவதன் நோக்கம் என்ன? நாமக்கல்லில் தி.மு.க., அ.தி.மு.க. என்ற பாகுபாடு இல்லாமல் கைகோத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுக்கிறார்கள். இவர்களின் நிலங்களும், நாமக்கல்லில் இருக்கும் முக்கிய அரசியல்வாதிகளின் நிலங்களும் அந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. அந்த நிலங்களின் மதிப்பு அதிகரிக்கவும், அவற்றில் லாட்ஜுகள் மற்றும் கடைகளைக் கட்டி வாடகைக்குவிடும் நோக்கத்தில்தான் பஸ் நிலையத்தை அங்கு கொண்டுசெல்கிறார்கள். இது பொதுமக்களுக்கு எதிரான திட்டம்தான்'' என்றார்.
நகராட்சித் தலைவர் கரிகாலன் என்ன சொல்கிறார்? ''இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது கடந்த ஆட்சியின்போதே நிறைவேற்றப்பட்ட திட்டம். ஆகவே, கலெக்டரிடமே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்'' என்றார் 'பொறுப்பாக!’
நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் நம்மிடம், ''சேலம் மெயின் ரோட்டை ஒட்டியே புதிய பஸ் நிலையம் வரப்போகிறது. நகராட்சியின் எல்லைக் குள்தான் இது வருகிறது. இதனால், நகராட்சிக்கு எந்த வருமான இழப்பும் வராது. நாமக்கல்லின் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டு இருப்பதால், இதுமாதிரியான பகுதிகளில், எதிர்காலத்தைக் கருதி டிராஃபிக் இல்லாத நகரமாக உருவாக்க இந்தத் திட்டம் வாய்ப்பாக இருக்கும். பஸ் நிலையத்தை நகருக்கு வெளியே கொண்டுபோனால் ரூட் பஸ்கள் உள்ளே வராது. சேலத்தில் இருந்து திருச்சிக்கு, மதுரையில் இருந்து பெங்களூருக்குப் போகிறவர் கள் நகரின் வெளியிலேயே போய் விடுவார்கள். அதனால், போக்குவரத்து நெரிசலும் குறையும். முதலைப்பட்டியில் இரண்டு சர்வே எண்களில் 16 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமாக இருக்கிறது. தனியார் நிலத்தை எடுத் தால் பல பிரச்னைகள் கிளம்பும். அதற்காகத்தான் அரசு நிலத்தை நகராட்சி தீர்மானம் போட்டிருக்கிறது. அதைக் கலெக்டரால் மாற்ற முடியாது.
தற்போது புதியதாக அமைந்துள்ள நகராட்சி மன்றத்தில் கேன்சல் செய்தாலும், அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. ரிங் ரோடு என்பது புதிதாக உருவாக்க வேண்டிய திட்டம். சேலம் ரோடு, சேந்தமங்கலம் ரோடு, துறையூர் ரோடு, திருச்சி ரோடு, ,மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு என ஆறு ரோடுகளையும் இணைக்க வேண்டும். அதற்காக நிலங்களை முதலில் சர்வே செய்து நிலங்களைக் கையகப்படுத்திய பிறகே நிறைவேற்ற முடியும். அதற்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும். ஆகவே, நாமக்கல் மக்களின் எதிர்கால நன்மையை கருத்தில்கொண்டுதான் புதிய பஸ் நிலையத்தை அமைக்கிறோம்'' என்றார்.
வீ.கே.ரமேஷ்
படங்கள்:   மகா.தமிழ்பிரபாகரன்
*********************************************************************************
செய்வீங்களா வேலுச்சாமியண்ணா!

கோவை துயரத்தை விளக்கும் கடிதம்
டித்து நொறுக்கிய மழையால் அலங் கோலமாகிக் கிடக்கிறது கோவை மாநகரம். எங்கும் சகதிக் காடுகள், குப்பை மேடுகள், தொற்று நோய்கள்... இந்தக் கொடுமைகளைப் பார்த்து கோவை மாநகரின் குடிமகனான வெள்ளிங்கிரி, மேயர் செ.ம.வேலுசாமிக்கு குமுறித் தள்ளிய கடுதாசியின் ஜெராக்ஸ் நம்மிடமும் சிக்கி யது. மேயரையும் மட்டுமின்றி, படிக்கும் எல்லோரையும் வார்த்தைகளால் துவைத்துக் காய வைத்திருக்கிறார் வெள்ளிங்கிரி. சாம்பிள் இதோ... 
வணக்கத்துக்குரிய மேயருக்கு!
வெள்ளிங்கிரி வைக்கிறான் வணக்கமுங்க. காலங்காலமா கட்சியில் கட்டங்கட்டப்பட்டுக் கிடந்த உங்க மேலே சமீப காலமா தெய்வத் தாயாம் முதல்வரம்மாவோட அருள் அமோகமா விழுந் திருக்குனு பத்திரிக்கையில் படிச்சேனுங்க. அடுத்து எந்த எறக்கமும் வந்துடாம மேயர் சமூகம் இதே ஏத்தத்தோட வாழணும்னு வாழ்த்துகள்!
நான் கடுதாசி போட்ட காரணமே வேறேங்க... ஏதோ சுனாமி வந்து சுருட்டிட்டுப் போன மாதிரி கிடக்குதுங்க கோவை சிட்டி. எந்த வீதியில் இறங்குனாலும் பள்ளம், மேடும்... ஒட்டுக்க நாலு தூறல் பெய்ஞ்சா தெப்பக்குளத்துக்குள் தேர் விட்டமாதிரி கார், பைக்குங்க மிதக்குதுங்க. சீர்மிகு கோவை மாநகரோட ரோடுங்க நாசமாப் போயி கிடக்குறதை நான் சொல்லித்தான் உங்களுக்கு வெளங்கோணும்னு அவசியம் இல்லிங்க. மழை ஓஹோன்னு பெய்ஞ்சப்ப, முழங்காலுக்கு மேலே வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கிட்டு நீங்க ஊர் சுத்தி வந்த போட்டோக்களை பேப்பர்ல பார்த்தேனுங்க.ஆஹா, புது மேயர் பவுசு காட்டாம சகதிக்குள்ளே சலாம் போடுறாரேன்னு சந்தோஷப்பட்டாலும், உங்க பக்கத்தில் நிக்கிற பேர்வழிங்களை பார்க்கிறப்ப அடி வயிறு பத்திக்கிட்டு எரியுதுங்ணா. போன அஞ்சு வருஷமா அதே ஏரியாவோட கவுன்சிலரா இருந்து ரோடு போடுறதுக்காக ஒரு கருங்கல்லைக்கூட தூக்கிப் போடாத ஆளுங்க, உங்களோட நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுக்கு கிறாங்க.  வாங்குன ஓட்டுக்கு ஓரளவாச்சும் உழைச்சிருந்தா ஒவ்வொரு வார்டுலயும் இம்புட்டு சேதாரம் இருந்திருக்காதுங்க. உதாரணமா ஒண்ணு சொல்றேனுங்க, வேளாண்மைப் பல்கலை பக்கத்துல பாப்பநாயக்கன்புதூர்னு ஒரு ஏரியா இருக்குங்க. அங்கே பல வீதிகள்ள பாதாளச் சாக்கடை கட்ட குழிதோண்டிட்டுப் போயி ரெண்டு மாசமாவுதுங்க. நடக்கக்கூட வழியில் லாம அந்த ஏரியா நாறிப்போய் கிடக்குதுங்க. வூட்டுக்கு வெளியில் ஒருத்தனும் நிம்மதியா போய் வரமுடியலை. பள்ளிப் புள்ளைங்க பாதி பேர் அதில் புரண்டு எந்திரிச்சுதான் போகுதுங்க. மளிகைக் கடைக்கு கடலை மாவு வாங்கப் போன எங்க ஆயா, குழியில் குப்புற விழுந்து மூச்சுப் பேச்சில்லாம போயிடுச்சு. அட! அவசரத்துக்கு ஆம்புலன்ஸ்கூட வந்து போக முடியலிங்ணா. இப்படி சிட்டி முழுக்க ஒவ்வொரு வீதியிலேயும் ஆயிரத்தெட்டுப் பிரச்னை இருக்கு துங்ணா. மழைத் தண்ணியில் படை பரிவாரத்தோட நீங்க சுத்தி வந்ததெல்லாம் சரிதானுங்க. வேட்டிய மாத்துன கையோட இந்த மேட்டரையும் கொஞ்சம் நீங்க யோசிக்கோணும்.
சொன்னா கேவலமுங்க! 'ஆய்’ இருக்கப் போயி ரயில்ல அடிபட்டு அகால மரண மாகுற கொடுமை கோயமுத்தூர்லதான் நடக்குதுங்ணா. அதுவும் புறநகர்ல இல்லிங்ணா... நம்ம சிட்டியில் வடகோவை, ரத்தினபுரி, பீளமேடு பக்கமாதான் இந்த குரூரம். வூட்டுல கக்கூஸ் இல்லாத ஏழைங்க, பொதுக்கழிப்பிடம் இல்லாம கண்ணுமண்ணு தெரியாம கருக்கல்ல ரயில்வே லைனைத் தாண்டி ஒதுங்குறாங்க. அப்படி அவசரமா ஓடுறப்ப, ஹாரன் அடிக்காம ரயில் வர்றதால அடிபட்டு செத்துப் போறாங்க. மூச்சுக்கு முன்னூறு வாட்டி கோவையை 'சிட்டி... சிட்டி!’னு பெருமையா பேசிக்குறோமுங்க. ஆனா, அந்த சிட்டிக் குள்ளேதான் இந்தக் கேவலங்க. இதை எப்போ மாத்தப்போறீங்கணா? இன்னொரு மேட்டர் இருக்குதுங்கணா... வெளியூர் ஆளுங்க வந்து போனா 'ஒன்ஸ்’ அடிக்க முடியாம அவஸ்தைப்படுறாங்க. சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுலேயும், காந்திபுரம் சிட்டி பஸ் ஸ்டாண்டுலேயும் யூரின் போக உருப்படியா ஒரு இடம் இல்லைங்க. இருக்குற டாய்லெட்டுல மூணு ரூபா, நாலு ரூபானு கொடுத்துப்போறாங்கண்ணா... இதனால சுகாதாரம் சீரழிஞ்சு கெடக்குதுங்க. 'யூரினுக்கு மூணு ரூபாயா?’-னு கேட்டா 'நடு ரோட்டுல போயேன், காசே கிடையாது’னு வாய்க் கொழுப்பு பேசுறாங்க குத்தகைக்காரங்க. இந்தப் பழையை கேடுகளை புது மேயர் நீங்க கவனிக்கோணுமுங்ணா.
கசங்குன பால் கவர், வெங்காய சருகு, மீந்து போன சட்னின்னு உங்க வூட்டுக் குப்பையை ரெண்டு நாளா வெளியில கொட்டாம வெச்சிருந்தீங்கன்னா, அடிக்கிற கப்புல சித்தம் கலங்கிப்போவும். ஆனா, பாருங்க சிட்டி முழுக்க அள்ளுறதுக்கு ஆள் இல்லாம வாரக்கணக்குல குவிஞ்சு கெடக்குதுங்ணா குப்பை. ஒரு மழை அடிச்சுதுன்னா, நாம கொட்டிட்டு வந்த குப்பை, அடுத்த வூட்டுக் குப்பையையும் ஜோடி சேர்த்துக்கிட்டு, மறுபடியும் நம்ம வூட்டு வாசலுக்கே மெதந்து வந்து சேருதுங்ணா. அப்புறம் காய்ச்சல், கழிச்சல்னு நோவு வராம இருக்குமாங்ணா?
இன்னொண்ணும் சிட்டியைப் போட்டு ஆட்டுதுங்ணா. அது... டெரரான ட்ராஃபிக்தானுங்கணா... உருப்படியான பாலம், அகலமான ரோடுனு எதுவும் இல்லாம போனதால சந்து பொந்துலகூட காரும், பைக்கும் முட்டி மோதிக்கிட்டு கெடக்குதுங்ணா. மனசுல தில்லும், தைரியுமும் இருந்தா நீங்களும் துணை மேயரும் ஒருவாட்டி நம்ம மேட்டுப்பாளையம் ரோடுல பைக்ல போய்ப் பாருங்ணா... அரை கிலோ மீட்டர் தாண்டுறதுக்குள்ளே போங்க, ஆயுசுல பாதி போனா மாதிரி இருக்கும். ரெண்டு கிலோ மீட்டர் தாண்டி இருக்கிற எங்க மாமன் வூட்டுக்கு நடந்து போன 40 நிமிஷமுங்க. ஆனா, பைக்குல போக ஒன்றரை மணி நேரமாகுதுங்க.
சென்னையில் முதல்வர் அம்மா நடத்துன மாநாடுக்குப் போயிட்டு வந்த நம்ம கலெக்டர் 'கோவை மாநகரை சீர்படுத்த உலகத் தரத்தில் சாலைகள் வரப்போகுது, உக்கடத்தில் மேம்பாலம்அமையப்போகுது’னு பேட்டி கொடுத்திருக்காருங்ணா. இப்படி ஆயிரம் பேட்டியைப் பார்த்த நாங்க ஆயிரத்தொண்ணா இதையும் எடுத்துக்குறோமுங்க. ஆனா, புது மேயர் உங்களுக்கு நான் எழுதுற இந்த முதல் கடுதாசிய, சிட்டி மனுஷங்களோட உயிர் கடுதாசியா எடுத்துக்கோணும்னு வேண்டி விரும்பிக் கேட்டுக்குறேனுங்க. கடுதாசிக்கானப் பதிலை உங்க செயல்ல காட்டுங்ணா!
ரொம்ப எதிர்பார்ப்புடன்,
வெள்ளிங்கிரி
************************************************************************
கொள்ளையர்கள் காரில் 'அட்வகேட்' ஸ்டிக்கர்!

போலி வக்கீல்கள் உஷார்
'போலி வக்கீல்கள் தொல்லை தாங்கமுடியவில்லை. அவர்களிடம் இருந்து அப்பாவி மக்களையும் நீதித் துறையையும் காப்பாற்றுங்கள்’ என்று மதுரையில் உள்ள தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகி கள், மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த 9-ம் தேதி காரைக்குடி அருகே, 'அட்வகேட்’ ஸ்டிக் கரை ஒட்டிய காரில் சென்று வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேர் போலீஸில் சிக்கினார்கள். மதுரை யிலும் இப்படி பலர் வக்கீல்கள் போர்வையில் சட்ட விரோதக் காரியங்களில் ஈடுபடுவதாக சொல்லித்தான் புகார் கொடுத்திருக்கிறது, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம். அதன் இணைச் செயலாளர் அட்வகேட் முத்துக் குமாரிடம் பேசினோம். ''மதுரை நீதிமன்றங்களில் அசல் வக்கீல்களை விட போலி வக்கீல் கள் நடமாட்டம்தான் அதிகம். வெள்ளைச் சட்டையும் கறுப்புப் பேன்ட்டும் மாட்டிக் கொண்டு வட்டம் போடும் இவர்களிடம் வக்கீலுக்கான அடையாள அட்டை இருக்காது. ஆனால், மனித உரிமை அல்லது நுகர்வோர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு அமைப்பில் இருப்பதாக பக்காவாக விசிட்டிங் கார்டு வைத் திருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு, கோர்ட்டுக்கு வரும் அப்பாவிகளுக்கு வலை விரித்து, கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள். 'எனக்கு எஸ்.பி-யை தெரியும், கமிஷனரைத் தெரியும், இந்த விஷயத்தை பைசா செலவில் லாமல் முடிச்சுக் குடுக்குறேன்’னு இவங்க சொல்வதை அப்பாவி ஜனங்கள் அப்படியே நம்புகிறார்கள். போலீஸ் ஸ்டேஷன்களிலும் இவர்களின் வண்டவாளம் தெரியாமலேயே ராஜமரியாதை கொடுக்கிறார்கள். இவர்கள் சர்வ சாதாரணமாய் உதவிக் கமிஷனர், துணை கமிஷனருக்கும் பேசுவதாக நடிப்பதால் போலீஸும் பயப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரை யில் கிருஷ்ணமூர்த்தி என்ற போலி வக்கீலை அண்ணாநகர்போலீஸார் கைது செய்தார்கள். இவர் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே வக்கீலாக பிராக்டீஸ் செய்து ரிட் மனுக்களையும் பொதுநல வழக்குகளையும் மதுரை உயர் நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்திருக்கிறார். சென்னை ஹை கோர்ட் டில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மதுரையில் நாங்கள் ஊர்வலம் போனபோது, டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியின் கேம்ப் ஆபீஸிற்குள் எங்களோடு வந்த யாரோ சிலர் கல்லை எடுத்து வீசவே, டி.ஐ.ஜி. டென்ஷன் ஆனார். கல் எறிந்தது யார் என்று விசாரித்த போதுதான்  கிருஷ்ணமூர்த்தி எங்களிடம் சிக்கினார். அவரை நாங்களே போலீஸில் ஒப்படைச்சோம். ஆனால், அவரை உடனே வெளியில் விட்டுருச்சு போலீஸ். அதுக்குப் பிறகு போராட்டம் நடத்தித்தான் கிருஷ்ணமூர்த்தியை மறுபடியும் பிடிக்க வைத்தோம். அந்த கேஸ்ல 45 நாள் உள்ளே இருந்த கிருஷ்ணமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டுக்குப் போய் பெயில் வாங்கினார்.
இப்படித்தான் கரிமேடு போலீஸ் ஸ்டேஷனில் பெண் வக்கீல் ஒருவர் கொடுத்த புகாரை எதிர்த்து ஆஜரான போலி வக்கீலை உட்கார வைத்துப் பேசிய போலீஸார், பெண் வக்கீலை நிற்க வைத்து பேசி இருக்கிறார்கள். அந்தாளு போலின்னு எங்காளுங்க நிரூபிச்ச பிறகுதான், பெண் வக்கீலை மிரட்டுனதா கேஸ் போட்டு போலியை உள்ளே தள்ளுனாங்க. நாகர்கோவிலில் இருந்து வந்த ஒரு காதல் ஜோடி, போலி வக்கீல்னு தெரியாம ஒருத்தரிடம் சரணடைஞ்சிருக்கு. மைனரான அந்தப் பெண்ணை தனது பாதுகாப்பில் வைச்சிருக்கிறதாச் சொல்லி, பையனை மட்டும் ஊருக்கு அனுப்பியிருக்கிறார். பிறகு அந்த டுபாக்கூர் வக்கீலும் அவரது நண்பர்களும் அந்தப் பெண்ணை பலாத்காரம் பண்ணிருக்காங்க. இன்னொரு கேஸ்ல, காதல் ஜோடிக்கு அடைக்கலம் குடுக்குறதா சொல்லிட்டு, அந்தப் பெண்ணோட அப்பாவுக்கு போனை போட்டு, 'உங்க மகள் எங்க கஸ்டடியிலதான் இருக்கிறார்,  50 ஆயிரத்தைக் கொடுத்துட்டு கூட்டிட்டுப் போங்க’ன்னு சொல்லி காட்டிக் கொடுத்திருக்கான் ஒரு டுபாக்கூர் வக்கீல். இதெல்லாம் எங்கள் கவனத்துக்கு வந்த சில சாம்பிள் சம்பவங்கள் மட்டுமே. கவனத்துக்கு வராமல் நிறைய மோசடிகள் நடக்குது. வக்கீல் தொழிலுக்கு சம்பந்தமில்லாத பலர் ஷேர் ஆட்டோ, கார், டூ வீலர், சரக்கு வேன், லாரிகளில் அட்வகேட் ஸ்டிக்கரை ஒட்டிக்கிட்டு திரிவதைப் பார்த்தால் கேவலமாவும் ஆத்திரமாவும் இருக்குது. மதுரைக்குள் மட்டுமே 100 பேருக்கு மேல இருக்காங்க. போலீஸ்தான் அவங்களப் பிடிக்கணும். அதனால் தான் கமிஷனர்கிட்ட மனு குடுத்துருக்கோம்.
வாகனங்களில் அட்வகேட் ஸ்டிக்கர் ஒட்டுகிறவர்கள், தாங்கள் வக்கீலாகப் பதிவு செய்ததற்கான எண்ட்ரோல்மென்ட் நம்பரையும் எழுத வேண்டும். அத்தனை வழக்கறிஞர்களுக்கும் வழக்கறிஞர் சங்கத்தின் அடையாளம் அட்டை வழங்கவேண்டும்.  இரண்டு முறைக்கு மேல் சிக்கும் போலி வக்கீல்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யணும்'' என்று கோரிக்கை வைத்தார்.
இந்தப் பிரச்னை குறித்துப் பேசிய போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், ''காய்கறி வண்டிகளில் கூட, 'அட்வகேட்’ ஸ்டிக் கரைப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. போலி வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் நேற்றே சர்க்குலர் போய்விட்டது. போலீஸ் நடவடிக்கையைப் பொறுத்திருந்து பாருங்கள்'' என்று சஸ்பென்ஸ் வைக்கிறார். 
பார்க்கலாம். 
    - குள.சண்முகசுந்தரம்
  படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
   எஸ்.சாய் தர்மராஜ்
*********************************************************************************
கலெக்டர்கள் மாநாட்டில் மனம்திறந்த முதல்வர்

பூண்டி நீர்த்தேக்கம்... எவ்வளவு ரம்மியமான இடம்!
ச்சர்யம்... கலகலப்பு... உஷ்ணம் பறக்கும் விவாதம் என கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், கலெக்டர்கள் - போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடந்து முடிந்து​விட்டது!
கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த மாநாட் டில் இடையிடையே அமைச்சர்களின் குறுக்கீடு, கருணாநிதியின் நையாண்டி என்று களை கட்டும். இப்போது அப்படி எதுவும் குறிப்பிட்டு சொல்லும் படியாக இல்லை. கடந்த காலங்களில் மாநாட்டு மேடையில் முதல்வர், அமைச்சர்களுடன் தலைமைச் செய லாளர் மட்டுமே அமர்ந்திருப்பது வழக்கம். போலீஸ் மீது ஜெயலலிதாவுக்குத் தனி பாசம் என்பதால் என்னவோ டி.ஜி.பி. ராமானுஜம் மட்டும் மேடையில் இருந்தார். அமைச்சர்கள் யாரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம். மாநாட்டை ஒன் வுமன் ஆர்மியாக நடத்தியவர் முதல்வர்தானாம். அப்படி என்றால், என்னதான் நடந்தது அந்த மாநாட்டில்? கலெக்டர்கள், துறை செயலாளர்கள், போலீஸ் அதிகாரிகள் என்று பல தரப்பிலும் பேசியபோது கிடைத்த சுவாரஸ்யமான கதம்பம் இதோ...
''சிறுவர்கள் வழி தவறி தீய செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக காவல் துறையில் 'பாய்ஸ் கிளப்’ உள்ளது. அங்குள்ள ஸ்கவுட் மாஸ்டர் களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும். அதோடு இங்கு சிறுவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்... சிறுமிகளையும் சேர்க்கலாம்'' என்றார் சென்னைக் கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரை கண்ணன். அவரை குறுக்கிட்ட முதல்வர், ''சிறுமிகளுக்கு தனியாக 'கேர்ள்ஸ் கிளப்’பைத் தொடங்குங்கள். செலவை அரசு ஏற்கும்'' என்றாராம். அடுத்துப் பேசிய டி.ஜி.பி-யான லத்திகா சரண், ''போலீஸ் வேலைக்குத் தேர்வாகும் போலீஸ்காரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி ஏழு மாதங்களில் இருந்து ஐந்து மாதங்களாகக் குறைக்கப்பட்டுவிட்டன. போதுமான பயிற்சி அளிக்க வேண்டும் என்றால், ஏழு மாதப் பயிற்சி அவசியம்'' என்று சொல்ல முதல்வர் குறித்துக்கொண்டார்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் பாதிப்புகள்பற்றி திருச்சி டி.ஐ.ஜி-யான அமல்ராஜ் பேசினார். ''நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால், அங்கே குடித்துவிட்டு வண்டியை ஓட்டுகிறார்கள். இதனால், சாலை விபத்துகள் அதிகமாகிவிட்டன. குடித்துவிட்டு இப்படி வாகனம் ஓட்டியதாக 5,000-க்கும் மேல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் இருக்கிற டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றலாம். குடித்துவிட்டு ஓட்டுபவர்களின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும். விபத்துக்குள்ளாகும் அப்பாவிகளுக்குத் தரப்படும் நிதியையும் உயர்த்த வேண்டும். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் தேட தனி நீதிமன்றம் அமைக்கலாம்'' என்றபோது நல்ல ரெஸ்பான்ஸ். உடனே ஜெயலலிதா, ''நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தி​னாலும், வேறு எங்காவதும் குடித்துவிட்டு ஓட்டுவார்கள். இதுபற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம்'' என்றவர், அமல்ராஜின் பேச்சுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸைப் பார்த்துவிட்டு, ''விபத்தில் காயம் அடையும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி உயர்த்தி வழங்கலாமா?'' என்று எல்லோரையும் பார்த்து முதல்வர் கேட்க... எல்லோரும் கோரஸாக 'ஓகே’ என்றார்கள்.
கடலோரப் பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி​-யான லாலாம் சங்கா பேசும்போது, ''உங்களின் முந்தைய ஆட்சியில்தான் கடலோரப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதியை பாதுகாப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மணல் பகுதியில் ஓடக் கூடிய ஆற்றல் படைத்த வாகனங்கள் நம்மிடம் இல்லை'' என்றார். மாநாடு முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வாகனங்கள் வாங்குவதற்காக ஜெயலலிதா  1.56 கோடியை ஒதுக்கீடு செய்தது ஆச்சர்யம்!
அடுத்து மைக் பிடித்த சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி-யான டோக்ரா, ''முன்பு நீங்கள் கொண்டுவந்த சிறைச்சாலைகளில் வீடியோ கான்ஃபெரன்ஸிங் முறைக்கு நல்ல பலன் கிடைக்கிறது. ரிமாண்டுக்காக கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது இதன் மூலம் குறைவதால், சுமார்  300 கோடிக்கு மேல் மிச்சமாகி இருக்கிறது. இன்னும் பல நீதிமன்றங்களில், சிறைச்சாலைகளில்  வீடியோ கான்ஃபெரன்ஸிங் முறை இல்லை. இதனைக் கொண்டுவந்தால், மேலும் பல கோடிகள் அரசுக்கு மிச்சமாகும்'' என்றார். அரசுக்கு வருவாய் இழப்பைத் தடுக்க யோசனை சொன்னதால், அவருடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார் முதல்வர்.
''சிறுவன் தில்சன் கொலை வழக்கில் முதல்வரே நேரடியாக அக்கறை எடுத்துக்கொண்டார். அதனாலேயே குற்றவாளி விரைவாகக் கைது செய்யப்பட்டார். குற்றவாளிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களை டேட்டாவில் உருவாக்கி, அதை ஒரு வருடம் மட்டுமே பராமரிக்க முடியும். இதனை மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்'' என்றார் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி-யான சேகர்.
போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா பேசும் போது, பவர் பாயின்ட் பிரசன்டேஷன் மூலம் சென்னை போக்குவரத்துப் பிரச்னையை விளக்கினார். ''முக்கிய இடங்களில் பாதசாரிகள் சாலைகளைக் கடப்பதற்கு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு சிரமாக இருப்பதால் இதன் பயன்பாடு குறைவாகிவிட்டது. சில இடங்களில் மட்டும்தான் லிஃப்ட் வசதி இருக்கிறது. படிக்கட்டுகளுக்குப் பதிலாக சரிவான பாதையை போட்டு நடை மேம்பாலம் அமைக்கலாம். மெட்ரோ ரயில் வருவதால் மல்டிலெவல் பார்க்கிங் வசதி செய்யலாம், பள்ளி அலுவலக நேர மாற்றம் செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களை வைத்திருப்பவர்களுக்கு வரி விதிக்கலாம். இவற்றைச் செய்தால் போக்குவரத்துப் பிரச்னையை சமாளிக்க முடியும்'' என்று சொல்லி அதுபற்றி வரைபடத்தையும் கணினியில் காட்டி விளக்கினார்.
மதுரை எஸ்.பி. ஆஸ்ரா கார்க், ''திருமங்கலம் இடைத்தேர்தல் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது. அதனால்தான், கடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மிகவும் பதற்றமான மாவட்டம் என்று தேர்தல் கமிஷன் கருதியது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், தேர்தலை அமைதியாக நடத்திக் காட்டி தேர்தல் கமிஷனின் பாராட்டைப் பெற்றோம். நில அபகரிப்பு வழக்கில் மதுரையில்  10 கோடி மதிப்புள்ள நிலங்களைக் கைப்பற்றித் திருப்பி ஒப்படைத்து இருக்கிறோம். நில அபகரிப்புப் புகார் பிரிவு தொடங்கப்பட்டதால் மக்களி டையே அரசுக்கு நல்ல வரவேற்பு'' என்றார். 
வடக்கு மண்டல் ஐ.ஜி-யான சைலேந்திரபாபு, ''ஆம்னி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானபோது பயணிகள் வெளியே வர முடியாத நிலை உருவானது. ஆம்னி பஸ்களில் ஸ்பீடு கன்ட்ரோல் இல்லை. இதுபோன்ற காரணங்களால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. அவசர வழி, ஸ்பீடு கன்ட்ரோல் போன்றவற்றை அமல்படுத்த போக்குவரத்துக் காவல் துறை நடவடிக்கை எடுத்தால் விபத்துகளைக் குறைக்க லாம்'' என்றார்.
திருவள்ளூர் கலெக்டர் ஆசிஸ் சட்டர்ஜி பேசும்போது, ''எங்கள் மாவட்டத்தில் இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்தைப் பார்க்க நிறைய பேர் வருகிறார்கள். நீர்த்தேக்கத்தைச் சுற்றி கேளிக்கை பூங்கா அமைத்து அணையில் படகு சவாரிவிட்டால், அது சுற்றுலாத் தலமாக மாறும்'' என்றதும், முதல்வர் குறுக்கிட்டு, ''நான் பள்ளிப் பருவத்தில் அந்த இடத்துக்கு பிக்னிக் வந்திருக்கிறேன். ரொம்ப ரம்மியமான இடம்.'' என்றார். பொதுப் பணித் துறை செயலாளர் சாய்குமார் குறுக்கிட்டு ''அணையின் பாதுகாப்புக் கருதி அங்கே படகு சவாரிவிட முடியாது. அணையை ஒட்டியிருக்கும் பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்கு கேளிக்கை பூங்கா அமைக்கலாம்'' என்று ஆலோசனை கொடுத்தார்.
திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ பேசும்போது, ''முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களின் நிதி உதவிகள் ஸ்மார்ட் கார்டு மூலம் பயனாளிகளுக்கு வழங்குவதால், மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதில் ஓர் ஊரில் பிரச்னை ஏற்பட்டது. அதனை சாதுரியமாகத் தீர்த்தோம்.'' என்றார். முதல்வரின் தனிப் பிரிவுக்கு வந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக ஜெயஸ்ரீக்கு, ஜெயலலிதா விருது கொடுத்தார்.
சென்னை கலெக்டராகப் பொறுப்பு வகிக்கும் டி.ஆர்.ஓ-வான அண்ணாமலை துறைரீதியாக எதுவும் பேசாமல், ''முதல்வர் அலுவலகம் பக்கத்திலேயே இருக்கிறது. மாநகராட்சி கமிஷனரும் அருகிலேயே இருக்கிறார். போலீஸ் கமிஷனர் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையை பார்த்துக்கொள்கிறார். இதை எல்லாம் தாண்டி கலெக்டர் அலுவலகத்துக்கு அருகிலேயே முதல்வர் இருக்கிறார் என்பதால், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தங்கமான முதல்வர் கைகளில் தமிழ்நாடு இருக்கிறது.'' என்று சொன்னபோது ஜெயலலிதா உட்பட எல்லோரும் சிரித்துவிட்டார்கள். ''நான் சென்னை மாவட்டத்துக்கு மட்டும் முதல்வர் இல்லை. தமிழகத்துக்கும் சேர்த்துத்தான்.'' என்று ஜெயலலிதா சொல்ல... மீண்டும் சிரிப்பலை!
மதுரை கலெக்டர் சகாயம் பேசும்போது, 'உத்தப்புரம் பிரச்னை ஏற்பட்ட காலத்தில் இருந்து அதை நாங்கள் சமாளித்து வந்தோம். எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது. அங்கே அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால், பிரச்னையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம்
திண்டுக்கல் கலெக்டர் நாகராஜன் பேசும்போது பேச்சுக்குப் பேச்சு 'அம்மா’ என்று உருகினார். ''எங்கள் மாவட்டத்தில் பெரிய அளவில் பிரச்னை எதுவும் இல்லை. சட்டம் - ஒழுங்கு அமைதியாக இருக்கிறது'' என்று சொல்வதற்கு பதில் ''இல்லை'' என்று அவர் சொல்ல, அதை ஜெயலலிதா திருத்தினார்.
''வணிக வரித் துறை மூலம் அரசுக்குப் பெருமளவில் வருவாய் கிடைக்கிறது. ஆனால், அதை நம்மால் முறையாக வசூலிக்க முடியாத அளவுக்கு சில தடங்கல்கள் இருக்கின்றன. வணிக வரி செலுத்தாமல் கோடிக்கணக்கில் பொருட்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு செக் போஸ்ட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலும் மின்சார வசதி, கேமரா போன்றவை இல்லை. செக் போஸ்ட்களை நவீனப்படுத்தினால் பெரும்பாலான குற்றங்களைத் தடுப்பதோடு வரி ஏய்ப்பவர்களையும் தடுக்க முடியும்'' என்று பெரும்பாலான கலெக்டர்கள் கருத்துச் சொன்னார்கள். இதை முதல்வர் குறித்துக்கொண்டார். மாநாடு முடிந்த பிறகு சுமார்  79 கோடி அளவுக்கு செக் போஸ்ட்களில் கட்டமைப்புகளை உருவாக்க நிதி ஒதுக்கி அறிவித்திருக்கிறார்.
பெரம்பலூரில் இருந்து பிரித்து அரியலூர் மாவட்டத்தை 2001-ல் தி.மு.க. அரசு கொண்டுவந்தது. அதன் பிறகு அதை அ.தி.மு.க. அரசு மாற்றியது. 2006-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. மீண்டும் அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியது. இப்போது மீண்டும் அரியலூரை பெரம்பலூருடன் இணைக்கப்போவதாக பேச்சுகள் கிளம்பி இருக்கின்றன. கலெக்டர் மாநாட்டிலும் இதுபற்றி பேசப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு எதிர்ப்புக் கிளம்பும் என்பதாலேயே பெரம்பலூருக்கும் அரியலூருக்கும் மார்க்கெட், பாலம் போன்ற அறிவிப்புகளை அரசு வெளியிட்டு இருக்கிறதாம்.
  நக்ஸலைட்டுகள் விடுதலைப் புலிகள் நடமாட்டம், மதத் தீவிரவாதிகளின் செயல்பாடுகள்பற்றி எல்லாம் மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாம். பெரியகுளம் காட்டுப் பகுதியில் நக்ஸலைட்டுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு முகாம் அமைத்ததை நினைவுபடுத்தி, அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதுபற்றியும் விவாதிக்கப்பட்டது!
எம். பரக்கத் அலி
படங்கள்: சு.குமரேசன், 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************
குறிவைக்கப்படும் குடும்பம்?

''முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் மகள் செல்வி நடத்தும் டெலிகாம் நிறுவனம் எனக்குப் பணம் தர வேண்டும். அதைக் கேட்டால், பல்வேறு மட்டங்களில் இருந்தும் எனக்குக் கொலை மிரட்டல்கள் வருகின்றன...'' எனக் கடந்த 11-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் திவிவேதி  என்ற சாஃப்ட்வேர் நிறுவன அதிபர் அதிரடிப் புகார் கொடுக்க... கோபாலபுர ஏரியாவில் புதிய கிடுகிடுப்பு!

புகார் கொடுத்துள்ள சஞ்சீவ் குமார் திவிவேதி யிடம் பேசினோம். ''2009-ம் ஆண்டு தமிழகத்தில் பிரபல மான இரண்டு வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த   இருவர்  என்னைச் சந்தித்து, 'ஐஸ் டெலிகாம்’ என்ற கம்பெனியின் வர்த்தகம் குறித்துப் பேசினார்கள். பிறகு சென்னை கோட்டூர்புரம், ரஞ்சித் ரோட்டில் உள்ள ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி
ஷ்யாமைச் சந்திக்க அழைத்துச் சென்றனர். அந்த நிறுவனம் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் மகள் செல்விக்குச் சொந்தமானது என்பதை அவர்கள் கூறிதான் அறிந்துகொண்டேன். தங்களது நிறுவனமும் இந்த ஐஸ் டெலிகாம் நிறுவனமும் இணைந்து, 3ஜி மற்றும் 4ஜி மொபைல் டவர்கள் மற்றும் நெட்வொர்க்கிங் பணிகள் நிறைவேற்றுவதற்காக  3,250 கோடிக்கு தென் மாநில டெண்டரைப் பெற்று இருப்பதாகக் கூறினர். தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பெயரைச் சொல்லி...  நாடு முழுவதும் இதுபோல  40 ஆயிரம் கோடிக்கு  ஒப்பந்தம் பெற்று இருப்பதாகவும் கூறினார்கள்.
எனக்கு சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு உண்டு. என் மூலமாக கூடுதல் விலை வைத்து, அந்தத் தென் மாநில டெண்டரை
 4,000 கோடிக்கு விற்க முடிவெடுத்தனர். இதற்கு, கமிஷன் தொகையாக எனக்கு
 60 கோடி தருவதாகச் சொன்னார்கள். அதற்கான கடிதமும் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, உரிய நிறுவனங்களுடன் பேசி ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்தேன். என் அழைப்பை ஏற்று, மொபைல் போன் டவர் நிறுவும் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சென்னைக்கு வந்தனர். அவர்கள் என் விருந்தினர்களாக ஸ்டார் ஹோட்டல்களில் தங்கினர். ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் ஷ்யாம் மற்றும் சிலரோடு அவர்களைச் சந்திக்கவைத்தேன். வெளிநாட்டினர் தங்கியது உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் நானே கவனித்துக்கொண்டேன்.
இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு கையெழுத்து ஆவதற்கு முன், 2ஜி பிரச்னை பெரிதாகி இந்திய அரசியலையே பரபரக்கவைத்தது. அதோடு, ஆ.ராசாவும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், செல்வி மற்றும் ஷ்யாம் உள்ளிட்ட அனைவரும் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டதுடன், தொகை அளிக்கப்படாத பில்களை என்னிடம் விட்டுச் சென்றுவிட்டனர்.
ஷ்யாம் மற்றும் செல்வியை சந்திக்க பலமுறை நான் முயன்றும் முடியவில்லை. டெல்லிக்குச் சென்று ஆ.ராசாவை நண்பர் ஒருவர் மூலம் சந்தித்தபோது, அவரும் கை விரித்துவிட்டார். ஒருவழியாக கனிமொழியைச் சந்தித்தேன். பிரச்னையை முடித்துத் தருவதாக அவர் கூறினார். ஆனால் அதன் பிறகு பல ரவுடிகள் என்னைத் தேடி வந்து மிரட்டினர். இதனால், என் குடும்பத்தினரை பீகாருக்கு அனுப்பிவைக்கும் சூழல் ஏற்பட்டது. இப்போது நான் தனியாகவே வாழ்கிறேன். கடந்த ஒரு வருடமாகவே தி.மு.க-வினரிடம் இருந்து எனக்குத் தொடர்ந்து கடுமையான மிரட்டல்கள் வருகின்றன. எனவேதான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.
எனது சாஃப்ட்வேர் நிறுவனத்தைக்கூட கவனிக்காமல் இவர்களுக்காக இரவு பகலாக அலைந்தேன். அதனால் என்னுடைய சொந்த நிறுவனத்திலும் நஷ்டம் ஏற்பட்டு, இப்போது நான் குடும்பச் செலவை சமாளிக்கவே திண்டாடுகிறேன். ஆனால், நான் செலவு செய்த தொகையைக் கொடுக்கக்கூட இவர்களுக்கு மனது இல்லையே...'' என விரக்தியுடன் முடித்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க செல்வியைத் தொடர்புகொண்டபோது, ''சஞ்சீவ்குமார் திவிவேதி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. மேலும், ஐஸ் டெலிகாம் நிறுவனத்துடன் எனக்கு எந்த விதமான வணிகத் தொடர்புகளும் கிடையாது. அப்படி இருக்க யாரோ சிலரின் பேச்சுக்களை நம்பிக்கொண்டு என் மீது அபாண்டக் குற்றச்சாட்டை அள்ளி வீசுகிறார் அந்த மனிதர். எனது பெயருக்கு களங்கம் கற்பிக்க முயன்ற காரணத்துக்காக, வழக்கறிஞர் மூலமாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அந்த நோட்டீஸில் உள்ளதுதான் என் கருத்து'' என்றார்.
செல்வியின் வழக்கறிஞர் ரவீந்திரன் சஞ்சீவ்குமாருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், ''எனது கட்சிக்காரர் செல்விக்கு அந்தப் புகாரில் குறிப்பிடப் பட்டுள்ள நபர்களுடன் எந்தவிதமான வணிக தொடர்புகளும் கிடையாது. பொய்ப் புகாரை வாபஸ் பெறாவிட்டால், சட்டரீதியாகக் கடும் நடவடிக்கை எடுப்போம்'' என்று கூறியுள்ளார்.
''ஐஸ் டெலிகாம் நிறுவனத்துடன் தனக்கு வணிகத் தொடர்பு இல்லை என்று செல்வி கூறுகி றாரே?'' என சஞ்சீவ்குமார் திவிவேதியிடம் மீண்டும் கேட்டபோது, ''அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஷ்யாமுடன் செல்விக்கு நன்கு அறிமுகம் உண்டு. இன்னொரு நபரின் பெயரில் அந்த நிறுவனத்தை நடத்துவது செல்விதான்'' என்றார் உறுதியாக.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்கு சஞ்சீவ்குமார் திவிவேதியை அழைத்த போலீஸார், அவரிடம் ஆடியோ வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்களாம்.

'கைதுப் படலம் முடியவில்லை’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறியது சரிதான். 'மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் இளைய மருமகன் விவேக் ரத்னவேலு விரைவில் போலீஸ் வளையத்துக்குள் வரலாம்’ என்று ஒரு தகவல் கசியவே, விசாரணையில் இறங்கினோம்.
சென்னை சூளைமேட்டில் இருக்கும் சித்ரா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமை யாளர் கோவிந்தராஜன், அழகிரி மருமகன் மீது சென்னை போலீஸில் புகார் கொடுத்து இருக்கிறார்.
கொந்தளிப்பில் இருக்கிறார் கோவிந்த ராஜன்... ''20 ஆண்டுகளாகக் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2008-ம் ஆண்டு பெருங் குடி டோல்கேட் அருகில் 27 கிரவுண்டு நிலம் வாங்கினேன். அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் இளைய மருமகன் விவேக் ரத்னவேலு தலைமையில் அடியாட்கள் என் நிலத்தில் நுழைந்து, செக்யூரிட்டி ஆட்களை அடித்து விரட்டினார்கள். எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்கள். உடனடியாக துரைப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன், என் நிலத்தில் அவரது ஆட்களை நிறுத்தி இருந் தார். நான் எனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் மன்னனை சந்தித்தேன். அப்போது, 'அந்த இடத்தில் விவேக் ரத்னவேலு ஒரு ஸ்டார் ஹோட்டல் கட்டப்போகிறார். அதனால் நாங்க கொடுப்பதை வாங்கிக்கிட்டுப் போயிடு’ என்று மிரட்டினார். அடுத்து தி.நகர் ரெஸிடென்சி ஹோட்டலில் தங்கி இருந்த விவேக் ரத்னவேலு, பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ' 10 கோடி கொடுத்தால், நிலத்தைக் கொடுத்துடுறேன்’ என்று சொன்னார். நான் 'அவ்வளவு முடியாது. ஐந்து கோடியை... அதுவும் மாதம் ஒரு கோடி என ஐந்து மாதங்களில் தருகிறேன்’ என்று கூறினேன். 
அதற்கு சம்மதித்தவர், மறுநாளே என் அலுவலகத் துக்கு வந்து ஒரு கோடி பெற்றுக் கொண்டார். அன்றே அவரது ஆட்களும் என் நிலத்தில் இருந்து வெளியேறினார்கள். ஆனால், இரண்டாம் நாளே மீண்டும் அவரது அடியாட்கள் என் நிலத்தில் புகுந்தனர். திரும்பவும் அவரைச் சந்தித்தேன். 'உடனே, மூன்று கோடி வேண்டும். இல்லாவிட்டால் உன் நிலம் உனக்குக் கிடைக்காது’ என்றார். வட்டிக்கு கடன் வாங்கி  1.35 கோடி கொடுத்தேன். மீதி  1.65 கோடிக்கு விவேக் ரத்னவேலுவின் பினாமியான ரபீக்கிடம் நான் கடன் வாங்கியதுபோல ஒரு புரோநோட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு என் நிலத்தை என்னிடம் ஒப்படைத்தார்.
சில நாட்கள் கழித்து  1.65 கோடியை பணமாகக் கொடுக்கச் சென்றபோது, 'பணம் ஏன் லேட்?’ என்று கேட்டு என்னை சிறைவைத்தவர், சூளைமேட்டில் இருக்கும்  50 லட்சம் மதிப்புள்ள எனது பிளாட்டை அவருடன் இருக்கும் ஆனந்த் என்பவர் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டார். எனது நிலத்தில் சுமார்  1 கோடி மதிப்புக்குக் கட்டடத் தளவாடங்கள் இருந்தன. அதையும் விற்றுவிட்டார்கள். தொடர்ந்து விவேக் ரத்னவேலுவால் பிரச்னை வரும் என்று பயந்து, நான் அந்த இடத்தை விற்றுவிட்டேன். 
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விவேக் ரத்னவேலு, அவருடன் இருக்கும் பயஸ், ரபீக், பெருமாள் உடை யார் உட்பட ஏழு பேர் மீது கடந்த ஜூலை மாதம் சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகார் அனுப்பினேன். கைதுக்குப் பயந்து அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் இங்கே வருவார் என்கிறார்கள். அவர் என்னிடம் பறித்த பணத்துக்காக மட்டும் அல்ல... அவர் செய்த அடாவடிக்கும் சேர்த்து கூண்டில் ஏறி பதில் சொல்லியே ஆக வேண்டும்'' என்கிறார் கோபமாக.
விவேக் ரத்னவேலுவைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். இயலவில்லை. அவர் விளக்கம் அளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம். மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனும் பேசத் தயாராக இல்லை. விவேக் ரத்னவேலுவுக்கு நெருக்கமானவராக சொல்லப்படும் பெருமாள் உடையாரிடம் பேசியபோது, ''விவேக் ரத்னவேலு யார் என்றே எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த்ததுகூட இல்லை. அந்தப் புகாருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது'' என்றார்.
சென்னை போலீஸ் கமிஷனர்  திரிபாதியிடம் பேசினோம். ''கோவிந்தராஜன் கொடுத்த புகாரை விசாரணைக்காக அடையாறு துணை ஆணையருக்கு அனுப்பி இருக்கிறோம். விசாரணையில் தவறு செய்திருப்பது தெரியவந்தால், கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும்'' என்றார்.
தி.கோபிவிஜய்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
 

துரை மாட்டுத்தாவணி அருகே இருக்கும் அழகிரிக்குச் சொந்தமான 'தயா சைபர் பார்க்’ என்ற கட்டடம் ஆக்கிரமிப்புச் சிக்கலில் மாட்டி இருக்கிறது. சுமார் 1.20 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் கட்டடத்துக்காக மாநகராட்சியின் எட்டு சென்ட் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது என்பது குற்றச்சாட்டு.
இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையருக்கு, ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதினார் கலெக்டர் சகாயம். அப்போது, 'மாநகராட்சி அனுமதி பெற்று உள்ளோம்’ என்று அழகிரி தரப்பில் சொன்னார்கள். ஆனால், அனுமதி கொடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த மாநகராட்சி தற்போது அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பி, 15 நாட்களுக்குள் பதில் சொல்லியாக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் உள்ளூர்த் திட்டக் குழுமத்திடம் அப்ரூவல் வாங்கியதற்கு மாறாகவும், சில கட்டுமானப் பணிகளை செய்து இருக்கிறார்களாம். அதுவும் சிக்கல் ஏற்படுத்தும் என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்!
   - குள.சண்முகசுந்தரம்
************************************************************************
'வளர்ப்பு மகன்' வி.என்.சுதாகரனின் பினாமியா?

போலீஸ் பிடியில் ரித்தீஷ் பேட்டி
'நாயகன்’ படத்தில்போலீஸ் வேடம் போட்டு எதிரி​களைப் பந்தாடியவர், ராமநாதபுரம் எம்.பி-யான ஜே.கே.ரித்தீஷ். கடந்த புதன் கிழமை விடிந்தும் விடியாத காலை 4 மணிக்கு 40-க்கும் மேற்பட்ட நிஜ போலீஸ் பிடியில் தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த பாப்பான்குழி என்ற இடத்தில் மூன்று சகோதரர்களுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் இடத்தை, கடந்த 2008-ல் வாங்கியிருக்கிறார் ரித்தீஷ். 'எங்கள் மூன்று பேருக்கும் சம பங்குள்ள இடம். எனது இரண்டு சகோதரர்களிடம் இருந்து விற்பனைப் பத்திரம் மூலம் நேரடியாக வாங்கிய ரித்தீஷ், எனக்குச் சொந்தமான 90 சென்ட் இடத்தை பவர் ஆஃப் அட்டர்னி பெற்றது போன்று போலி ஆவணம் தயார் செய்து அபகரித்துக்கொண்டார்’ என்று சாமிக்கண்ணு என்பவர், மாவட்ட நில அபகரிப்புப் பிரிவில் புகார் தந்தார்.
இது குறித்து விசாரிப்பதற்காக காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில்  40 பேர் கொண்ட குழு, சென்னை மயிலாப்பூரில் உள்ள ரித்தீஷ் வீட்டுக்குச் சென்றார்கள்.  ரித்தீஷை எழுப்பி விசாரணைக்கு அழைத்ததும், ''இன்று தளபதியின் அப்பாயின்மென்ட் இருக்கிறது, சந்திப்பு முடிந்ததும் நானே வருகிறேன்'' என்று நழுவப் பார்த்திருக்கிறார். ஆனால் போலீஸார், ''சிம்பிள் விசாரணைதான்...'' என்று விடாப்பிடியாக நின்றதும் சம்மதம் சொல்லி குளிக்கக் கிளம்பி இருக்கிறார். 
''சார் அதெல்லாம் வேண்டாம். அலுவலகத்தில் எல்லா வசதியும் இருக்கிறது, உடனே கிளம்புங்கள்'' என்று கடுமை காட்டத் தொடங்கியதும்தான் நிலைமையை உணர்ந்திருக்கிறார் ரித்திஷ். உடனே மனைவி மற்றும் ஆதரவாளர்களிடம், 'எதுவும் நடக்கும். எல்லாருக்கும் தகவல் தந்துடுங்க’ என்று கிளம்பி, அவரது வாகனத்தில் ஏற முயன்றார். அதைத் தடுத்து தங்கள் வண்டியிலேயே ஏறச் சொன்னார்கள். தூங்காத கண்கள், கசங்கிய சட்டையுடன் ரித்தீஷ், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வந்தபோது சரியாக 7.20. அதற்குள் ரித்தீஷ் கைது பற்றி தகவல் பரவவே, பத்திரிகையாளர்களும் கட்சிக்காரர்களும் காவல் அலுவலகத்தை முற்றுகை இட்டனர். வழக்கறிஞர்களை மட்டுமே ரித்தீஷை சந்திக்க அனுமதித்தது போலீஸ். சரியாக 10.15 மணிக்கு ரித்தீஷைக் கைது செய்து இருப்பதாக அறிவித்து, 11 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ரித்தீஷ் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்த கையோடு, 'குற்றவியல் நடைமுறைச் சட்டம் 197-ன்படி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒருவரைக் கைது செய்வதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் அது பின்பற்றப்படவில்லை’ என வாதம் செய்யத் துவங்கினர். அரசு வழக்கறிஞர் கவிதா, 'தேவை இல்லை’ என்று மறுத்தார். ரித்தீஷ் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான் விசாரணையை அடுத்த இரண்டு தினங்களுக்குத் தள்ளிவைத்த நீதிபதி சையது அப்துல் மாலிக், 15 நாட்கள் ரிமாண்ட் செய்வதாக அறிவித்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சென்னை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால் முதல் வகுப்பு மற்றும் பெப்டிக் அல்சர் சிகிச்சை குறித்து வைக்கப்பட்ட கோரிக்கையை, உரியவர்களுக்குப் பரிந்துரைப்ப தாக கூறினார். சரியாக 1 மணிக்கு ரித்தீஷை ஏற்றிக் கொண்டு வேலூர் நோக்கிப் பறந்தது போலீஸ் வேன்.
முன்னதாக சில நிமிடங்கள் ரித்தீஷிடம் பேசி னோம். ''இது ஜெயலலிதா அரசின் பழி வாங்கும் போக்கு. இதை நான் எதிர்பார்த்தேன். உண்மையாச் சொல்லணும்னா, இது லேட். அவங்க எனக்குத் தேதி குறிச்சு ரொம்ப நாள் ஆச்சு. தலைவர், தளபதி என்று முன்னணித் தலைவர்களையே இந்த அம்மா வழக்குப் போட்டு முடக்கப் பார்க்கும்போது, நான் எந்த மூலைக்கு? காலை நாலு மணிக்கு வந்து வீட்டைத் தட்ட வேண்டிய அவசியம் என்ன? விசாரணைன்னு கூப்பிட்டா... வராம ஓடவா போறேன்? உண்மையில் அந்த நிலத்தை நான் உரிய வழியில்தான் வாங்கினேன் என்பதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது'' என்றவரிடம்,  ''உங்களுக்கும் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனுக்கும் இருந்த பழக்கத்தின் காரணமாகத்தான் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது, நீங்கள் அவரது பினாமியாகச் செயல்பட்டீர்கள் என்கிறார்களே?'' என்று கேட்டோம்.
''அய்யய்யோ அப்படி எல்லாம்இல்லீங்க. அவருக்கும் எனக்கும் 1998 வரை பழக்கம் இருந்தது உண்மை. நாங்கள் நல்ல நண்பர்கள்தான். ஆனால் அதற்குப் பிறகு அவருடன் தொடர்பே இல்லை. அதற்கும் இந்த வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினரை காலையில் பல் துலக்கக்கூட விடாமல் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் காவல் துறையை தமிழ்நாட்டில் மட்டும்தான் பார்க்க முடியும்'' என்று சிரித்தபடி கிளம்பினார்.
ரித்தீஷ் தரப்பில் பேசிய வழக்கறிஞர் சி.வி.எம்.எழிலரசன், ''மூவருக்கும் சேர்த்துப் பணம் கொடுத்துவிட்டோம். நிலத்தைப் பதிவு செய்த நேரத்தில் சாமிக்கண்ணு வெளியூரில் இருந்ததால், இரண்டு பேருக்குரிய பங்கை மட்டும் நேரடி விற்பனையாகப் பதிவு செய்யப்பட்டது. விடுபட்ட 1.33 ஏக்கரை, சாமிக்கண்ணுவே பவர் ஆஃப் அட்டர்னி மூலம் மாற்றித் தந்தார். அதற்கு அவர் கேட்ட கூடுதலான பணம் கொடுக்கவில்லை. அதனால் பழிவாங்கும் நோக்கில் புகார் கொடுத்து இருக்கிறார். சட்டப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்'' என்றார்.
- எஸ்.கிருபாகரன்
படங்கள்: ஆனந்தஜோதி
*********************************************************************************
முருகன் நிரபராதியா?

கேள்விகள் எழுப்பும் காங்கிரஸ் பிரமுகர்
ஜூ.வி.யில் வெளிவந்த முருகனின் தொடருக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஒன்று இது!
அன்னை இந்திரா, ஐயா மூப்பனார் மக்கள் நல்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.குப்பு சாமி (செய்யார்) நமக்கு எழுதி இருக்கிறார்...
''உலகத்தை உலுக்கும் வகையில் இந்திய மண்ணில் நிகழ்ந்த படுகொலைகள் மூன்று. முறையே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி. முதன்மை மரணங்கள் இரண்டும் தனி மனிதனைச் சார்ந்தவை. ராஜீவ் காந்தியின் படுகொலை மட்டும் மிகவும் பயங்கரமானது. அதில் இறந்தவர் களின் எண்ணிக்கை மட்டும் 18. அதில் 10-க்கும் மேற்பட்டோர் இந்தியப் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள்!
ஓர் அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத் தாலோ, அவருக்கு மரணத்தை ஏற்படுத்தினாலோ, அந்தக் குற்றவாளிக்கு மிக உயர்ந்த தண்டனையைத் தரலாம் என்பது நமது அரசியல் சட்டத்தின் சாரம்.  ராஜீவ் காந்தியின் மரணத்தை மட்டும் பிரித்துப் பார்க்காமல், 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளின் மரணங்களையும் அவர் களது குடும்ப உறுப்பினர்கள் படும் அவலங்களையும் உற்றுநோக்குவது நமது தலையாய கடமை.
வேதங்கள் ஓதி சாத்தானை விரட்டுவது இந்து மத ஐதீகம். ராஜீவ் காந்தி கொலையாளி முருகனே, 'கயிறே, என் கதை கேள்!’ தொடரில் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து கேள்விகளைக் கேட்பது அதற்குச் சமமானது. முதன்மையாகக் கேள்விகளைத் தொடுக்கும், முருகனின் சுயசரிதையை அறிவது நமது கடமை. முருகன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறு உணவகம் நடத்தியவரின் மகன். அவரது மூத்த சகோதரி ஓர் ஆசிரியர். அவருக்கு மூன்று தங்கைகள் உண்டு. இவரது மூத்த சகோதரர் விடுதலைப் புலி அமைப்பைச் சார்ந்தவர். அவர் 1987-ல் நடந்த ராணுவத் தாக்குதலில் இறந்துபோக, புலிகள் அமைப்பில் முருகனும் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முத்துராஜா என்பவர் மூலம் பாக்கியநாதனைத் தொடர்புகொண்டு அவரது சகோதரி நளினியைக் காதலித்து, இந்தியத் தலைவரின் படுகொலைக்கு தமிழ் பெண்ணைப் பயன்படுத்தியதன் மூலம், உலக அளவில் தமிழக அரசியல் தலைவர்களைத் தலை குனியவைத்தவர்தான் முருகன். இவரும் இவரது மனைவி நளினியும் நிரபராதி என்றால், ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்பு திருப்பதி சென்று மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தியதன் மூலம்தானே அவர் 'மொட்டை முருகன்’ ஆனார். 'கொடூரக் காட்டுமிராண்டித்தனமான தடா சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்பாவிகளாகிய எங்களை அதிகாரிகள் பலிகடா ஆக்குகிறார்கள்’ என்கிறார். பல கோடி மக்கள் வாழும் இந்திய நாட்டில் உங்கள் மீது மட்டும் சி.பி.ஐ. பழி சுமத்த. அவர்களுக்கு நீங்கள் என்ன பகையாளிகளா?
இயற்கைக் காற்றினை சுவாசித்து காட் டாற்று நீரை அள்ளிப் பருகி கானகத்தில் உயிர் வாழுகின்ற சித்தர்களைப் போன்று தனது செல்வங்களை எல்லாம் காங்கிரஸ் கட்சி வளர்ச் சிக்கு செலவழித்த, ஊழலுக்கு அப்பாற்பட்ட காங்கிரஸ் தியாகிகளும், இங்கு வாழ்கின்றனர் என்பதை முருகன் மறுக்க வேண்டாம்.'' என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் குப்புசாமி!
படம்: சொ.பாலசுப்ரமணியன்
************************************************************************
செய்தியும் சிந்தனையும் - டயல் செய்தால் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுவார்!

*********************************************************************************
அடியாட்களைக் கொண்டு மிரட்டினாரா அண்ணாச்சி?

சிக்கவைத்த டிரஸ்ட்
நில மோசடிப் புகார் உள்ளிட்ட பல வழக்குகளில் தி.மு.க. மாஜி மந்திரிகள் பலர் கம்பி எண்ணிக்கொண்டு இருக்க, பல புகார்கள் கிளம்பிய நிலையிலும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். மட்டும் எப்படியோ தப்பிவந்தார். இப்போது குமாரபாளையத்தில் இருந்து அவர் மீது ஒரு நில மோசடி வழக்கு திடீரெனப் பாய்ந்து இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர், பிரபல ஸ்பின்னிங் மில் அதிபர் ஜே.கே.கே. நடராஜன். பள்ளி மற்றும் கல்லூரிகளையும் நடத்திவரும் நடராஜன், அவரது தாயார் ரங்கம்மாள் பெயரில் டிரஸ்ட் ஒன்று தொடங்கி நிர்வகித்து வந்தார். நடராஜன் - தனலட்சுமி தம்பதிக்குக் குழந்தை இல்லாததால், அவரது அண்ணன் மகள் செந்தாமரையை தத்து எடுத்து வளர்த்து வந்தார். மகள் செந்தாமரைக்கு திருப்பூர் தொழிலதிபர் கிருஷ்ணராஜைத் திருமணம்செய்து​வைத்து, ராஜபாளையம் அழகப்பா காட்டன் மில்லை நிர்வகிக்கும் பொறுப்​பை மகள், மருமகனிடம் ஒப்படைத்தார்.
நடராஜன் இறந்த சில நாட்களில் ராஜபாளையம் சப்-ரிஜிஸ்தார் அலுவலகத்தில் ஓர் உயிலைப் பதிவு செய்தார் செந்தாமரை. அதில், 300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அடங்கிய ரங்கம்மாள் டிரஸ்ட்டின் நிர்வாக இயக்குனராக வளர்ப்பு மகள் செந்தாமரையை, தொழிலதிபர் நடராஜன் நியமித்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், 'அந்த உயில் போலியானது. செந்தாமரை அவரது கணவர் கிருஷ்ணராஜ் மற்றும் கார் டிரைவர் பழனி முருகன் ஆகியோர்போலியாக ஓர் உயிலைத் தயாரித்து மோசடி செய்துள்ளனர்’ என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸில் புகார் செய்தார் நடராஜனின் மனைவி தனலட்சுமி.
அவரிடம் பேசினோம். ''ரங்கம்மாள் டிரஸ்ட்டை என் கணவர் நடராஜனும் நானும்தான் ஆரம்பித்தோம். ஆரம்பம் முதலே வேறு யாரும் அந்த டிரஸ்ட்டில் மெம்பராக இல்லை. உயில் தொடர்பாக பிரச்னை வந்தவுடன்தான், கார் டிரைவர் பழனிமுருகன் மூலம் இந்த விஷயத்தில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலையிட்டார். இன்று வரை அவர் டிரஸ்ட் மெம்பராகத் தொடர்வதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
விருதுநகரில் இருந்து ஏராளமான அடியாட்​களைக் கொண்டுவந்து மிரட்டுவது, பொய் வழக்குப் போடுவது என்று பல பிரச்னைகள் செய்தனர். உயிருக்குப் பயந்து பங்களாவைவிட்டு வெளியேறி, இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். இந்தப் பிரச்னையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். தலையிடவில்லை என்றால், பிரச்னை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். எங்கள் கல்வி நிறுவனங்களின் சொத்துக்களை ஈரோடு வங்கி​யில் அடமானம் வைத்து  20 கோடி கடன் வாங்கியிருக்கிறார் செந்தாமரை. அப்போதே போலீஸில் புகார் செய்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். இப்போது நாமக்கல் போலீஸார், வளர்ப்பு மகள் செந்தாமரை, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். மற்றும் பழனிமுருகன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இனிமேலாவது நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய செந்தாமரை, ''எங்க அம்மா (அப்படித்தான் அழைக்கிறார்)தனலெட்சுமிக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. சொத்துக்கு ஆசைப்பட்டு சில உறவினர்கள்தான் அம்மாவைத் தூண்டிவிடுகிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆருக்கும் அப்பாவுக்கும் தொழில்ரீதியாக நல்ல நட்பு உண்டு. அதனால் நல்லபடியாக டிரஸ்ட்டைக் கவனிக்க வேண்டும் என்றுதான் அப்பாவே, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரை நியமித்தார். ஆனால் அவர் இரண்டு வருடங்கள் மட்டுமே மெம்பராக இருந்தார். சர்ச்சை எழுந்ததுமே விலகிவிட்டார். உயில் பிரச்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் உள்ளது. டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் என்ற அடிப்படை உரிமையில்தான், கடன் வாங்கி இருக்கிறேன். மொத்தமே  3 கோடி வாங்கி,
 1 கோடியை அடைத்தும்​விட்டேன். அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாகத்தான் முன்னாள் அமைச்சரை உள்ளே இழுத்து வழக்கு போட்டுள்ளார்கள்'' என்றார்.
முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்​சந்திரனைத் தொடர்பு கொண்டபோது, ''எனக்கும் நடராஜனுக்கும் நீண்ட காலப் பழக்கம். அந்த அடிப்படையில்தான் அந்த டிரஸ்ட்டில் மெம்பராக நியமித்திருந்தார். நடராஜன் இறந்த பிறகு யார் வாரிசு என்பதில் பிரச்னை ஏற்பட்டது. செந்தாமரை மற்றும் தனலட்சுமியிடம் சமாதானம் பேசினேன். ஆனால் தனலட்சுமியம்மாள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்குப் பிறகு பல அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் பஞ்சாயத்துப் பேசியும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. அதனால் டிரஸ்ட்டில் இருந்து நான் விலகிவிட்டேன்'' என்றார்.
இப்போது நாமக்கல் போலீஸார் விருதுநகரில் முகாமிட்டு அண்ணாச்சியின் வீடு மற்றும் ஸ்பின்னிங் மில்லில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நலப் பணியாளர்களுக்காக தி.மு.க. நடத்திய போராட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. ''கைது பயத்தில்தான் ஆப்சென்ட் ஆகிவிட்டார்'' என்று பீதியைக் கிளப்பியபடி விருதுநகரில் வலம் வருகிறது போலீஸ்!
- எம்.கார்த்தி, வீ.கே.ரமேஷ்.
படங்கள்: க. தனசேகரன்.
*********************************************************************************
ஆச்சார்யாவுக்கு முட்டுக்கட்டை!

சொத்துக் குவிப்பு வழக்கில் 'திடுக்' திருப்பம்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர், 74 வயதான அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா. வாய்தா மேல் வாய்தா வாங்கி 14 ஆண்டு​களாக இழுத்தடிக்கும் இந்த வழக்கில், இப்போது ஆச்சார்யா மீதே ஒரு குற்றச்சாட்டு.
கடந்த மாதம் ஐந்தாவது முறையாக கர்நாடகத்தின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் ஆச்சார்யா. அந்த விவகாரத்தையே ஆயுதமாக மாற்றி இருக்கிறார்கள் ஜெயலலிதா விசுவாசிகள். ஆச்சார்யாவை ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கர்நாடக கவர்னர் பரத்வாஜ்க்கு மனு அனுப்பி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்கள்.
இந்த மனுவை அளித்தவர்பெங்களூ​ ருவைச் சேர்ந்த வழக்கறிஞர் தேவதாஸ். ''ஜெயல​லிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா, சமீபத்தில் கர்நாடகத்தின் அட்வகேட் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். அட்வகேட் ஜெனரலாகவும், கிரிமினல் வழக்குகளில் அரசுத் தரப்பு வக்கீலாகவும் ஒரே சமயத்தில் அவர் செயல்படுகிறார்.
அட்வகேட் ஜெனரல் என்பவர் அந்த மாநில விவகாரங்களில்தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஆச்சார்யாவோ கர்நாடகத்தை ஆட்டுவிக்கும் எடியூரப்பா, குமாரசாமி, லோக் ஆயுக்தா வழக்குகளில் ஆஜராகாமல் வேறு மாநில வழக்கான ஜெயலலிதாவின் வழக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால் கர்நாடகத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யாவுக்கு அதிக வேலைப் பளு இருப்பதால், அவரை ஜெயலலிதாவின் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நலன் கருதி கவர்னரிடம் மனு அளித்திருக்கிறேன். கவர்னர் இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்'' என்று அழுத்தமாகச் சொன்னார்.
      இந்த விவகாரம் குறித்து ஆச்சார்யாவிடம் பேசினோம். ''ஓ... அப்படியா? இந்த பெட்டிஷன் பற்றி எனக்கு இன்னும் எந்தத் தகவலும் வரவில்லை. என் மீது பெட்டிஷன் கொடுத்த நண்பர், முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் என்னை ஸ்பெஷல் அரசுத் தரப்பு வக்கீலாக சுப்ரீம் கோர்ட்தான் நியமித்தது. இதில் என்னை ஆஜராகக் கூடாது என்று சொல்லும் அதிகாரம் கவர்னருக்குக் கிடையாது.  மேலும் அட்வகேட் ஜெனரலாக இருப்பவர் மற்ற வழக்குகளிலும், ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஆஜராகக் கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. இது அந்த வழக்கைத் தாமதப்படுத்தும் முயற்சியே. இந்த வழக்கில் இதுவரை வாங்கிய வாய்தா போதாதா? ஜெயலலிதா வழக்கை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன், கடைசி வரை போராடுவேன்'' என்றார் ஆவேசமாக.
ஜெ. வழக்கு முடியாது போலிருக்கிறதே!
இரா.வினோத், படம்: சு.குமரேசன்               
*********************************************************************************
ஆறு பள்ளிகளுக்குப் பறிபோகிறதா, அங்கீகாரம்?

கல்விக் கட்டணத்தில் அதிரடி நடவடிக்கை
ரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக, கல்விக் கட்டணம் வசூல் செய்ததாக, சென்னையில் ஆறு மெட்ரிக் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய பள்ளிக் கல்விக் கட்டணக் குழுத் தலைவர் நீதிபதி சிங்காரவேலு பரிந்துரை செய்துள்ளார் என்பதுதான் இப்போதைய கல்வித் துறை பரபரப்பு.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''சுமார் 300 பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக புகார் செய் யப்பட்டது. அதில் ஆறு பள்ளிகளுக்குத்தான் 'ஷோகாஸ்’ நோட்டீஸ் அனுப்பினர். அதற்குப் பள்ளிகள் உரிய விளக்கம் கொடுத்த பின்புதான், அடுத்த நடவடிக்கை எடுப்பார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் வசூல் செய்கிறார்களா என்பதை அறிய, அரசு ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்தால்தான் இதுபோன்ற பிரச்னைகள் எழாது. தவிர, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகமும், மெட்ரிக் பள்ளி இயக்குனரகமும் இதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
இந்தக் குற்றத்தைச் செய்யும் பள்ளி நிர்வா கத்துக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கப்படும் என்பதை அரசு தெளிவாகச் சொன்னால்தான், இந்த சட்டம் முழுமையாகப் பயன் தரும். பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்வதைவிட அரசே அந்தப் பள்ளியை ஏற்று நடத்த வேண்டும்'' என்றார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர்
செ. அருமைநாதன், 'பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தால், அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். இந்தக் காரணத்தைச் சொல்லியே, புகார் கொடுக்கும் பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் மிரட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு. மேலும், அடுத்து எந்த ஸ்கூலில் பிள்ளைகளைச் சேர்ப்பது என்ற குழப்பமும் ஏற்படும். எனவே, பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக, கூடுதலாகக் கட்டணம் வாங்கும் பள்ளி நிர்வாகிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கலாம். அவர்களுக்கு அபராதமோ அல்லது சிறைத் தண்டனையோ தரலாம். அப்போதுதான், மற்ற பள்ளி களில் கூடுதலாகக் கட்டணம் வாங்க மாட்டார்கள்' என்று ஆலோசனை சொன்னார்.
பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகையில், ''ஆறு பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் சொல்லும் விளக்கத்தைப் பொறுத்து, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறி அதிகக் கட்டணம்  வசூலிக்கும் பள்ளிகள் நிச்சயம் தண்டனைக்கு உள்ளாகும்'' என்றார் உறுதியாக.
பல ஆண்டுகளாக இருந்துவரும் பிரச்னைக்கு ஓர் அழுத்தமான முற்றுப்புள்ளி விழுந்தால் நல்லது!
நாச்சியாள், சி.காவேரி மாணிக்கம்


0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010