********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (08 அக்டோபர் 2011)

Friday, October 7, 2011


நகராட்சித் தலைவர்... முந்துவது யார்?

15 நகரங்கள் பரபர ரிப்போர்ட்!
'சட்டமன்றத் தேர்தலில் அளித்த அமோக ஆதரவை மீண்டும் தாருங் கள்!’ - என்கிறது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கை... மாஜி
முதல்வரான கருணாநிதியோ, 'கடந்த தேர்தலில் செய்த தவறை மறுபடியும் செய்துவிடாதீர்கள்’ என்று கூக்குரல் கொடுக் கிறார்... 'மக்களே, இந்தத் தேர்தலிலும் உங்களோடுதான் கூட்டணி!’ என சத்தம் கொடுக்கிறது கேப்டன் குரல்... இப்படித்தான் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் பிரசார அலை ஆர்ப்பரித்துக்கொண்டு இருக்கிறது. இந்தத்  திருவிழா கலகலப்புகளுக்கு இடையில், 15 நகராட்சிகளின் ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்...
உதகை: உதகை நகராட்சியில் கடுமையான போட்டி அ.தி.மு.க-வுக்கும்,  காங்கிரஸுக்கும்தான். உதகை சுற்றுவட்டாரத்தில் கதர் கட்சிக்கு எப்போதும் நிலையான செல்வாக்கு உண்டு. அந்த நம்பிக்கையில்தான் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் சேர்மன் லலிதாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. அ.தி.மு.க-வின் சத்தியபாமாவுக்கு ஆளும் கட்சியும், அமைச்சர் புத்திசந்திரனின் தீவிர பிரசாரமும் எக்ஸ்ட்ரா பலம். படுகர் சமுதாயத்தின் வாக்குகள் இரண்டு கட்சிகளுக்கும் சாதகமாக அமையும். காந்தல் பகுதியைச் சேர்ந்த மக்களின் காங்கிரஸ் விசுவாசம் லலிதாவுக்கு ஆறுதல்தான். என்றாலும், அங்கே தி.மு.க-வுக்கும் செல்வாக்கு உண்டு. இவற்றைப் பார்க்கும்போது காங்கிரஸ் முண்டி நெருங்கினாலும், முடிவில் சத்தியபாமா கையில்தான் கனி!
ஒட்டன்சத்திரம்: தேர்வு நிலைப் பேரூராட்சியாக இருந்த ஒட்டன்சத்திரம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலைச் சந்திக்கிறது. திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளரான கண்ணன் இங்கு வேட்பாளர். கடந்த முறை இவரது மனைவி உமா மகேஸ்வரி பேரூராட்சி தலைவியாக இருந்தபோது கண்ணன்தான் ஆக்டிங் தலைவர்! அந்த வெறுப்பால் உள்ளூரில் இவர் மேல் கொஞ்சம் அதிருப்தி இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் பழனியம்மாள், செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் ஆதரவும் இவருக்கு அதிகம். மொத்தத்தில் இந்த சந்தை நகரத்தை பழனியம்மாளே ஆள்வார் என்கிறார்கள்
தேவகோட்டை: தங்கள் வசம் உள்ள தேவகோட்டை நகராட்சியை தக்கவைக்க முன்னாள் சேர்மனான ஜான்சி ராணியைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது காங்கிரஸ். பதவியில் இருந்தபோது நற்பெயர் சம்பாதித்திருந்தாலும், இப்போது கட்சி பலம் இல்லாமல் தடுமாறுகிறார் ஜான்சி. தி.மு.க. சார்பிலோ  தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளரான ரூசோவின் மனைவியும், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளருமான ஜோன்ஸ் ரூசோ நிற்கிறார். கணவரின் தனிப்பட்ட செல்வாக்கும், சாதிய பின்னணியும் ஜோன்ஸுக்கு பக்க பலம். அ.தி.மு.க. வேட்பாளரான சுமித்ராவுக்கு அரசியல் பாரம்பரியம் இருந்தாலும், சொந்தக் கட்சிக்குள் நடக்கும் குஸ்திகளை சமாளிக்க முடியவில்லை. அதிகார தோரணைகொண்ட கள்ளர் சமூகத்தின் ஓட்டுகளை மற்ற வேட்பாளர்கள் பிரிக்கலாம். ஆனால், முக்குலத்தோர் அல்லாதவர்களில் பெரும்பகுதியினர் ஜோன்ஸை ஆதரிப்பதால் அவருக்கே வாய்ப்பு அதிகம்!
ராமநாதபுரம்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் எஸ்.கே.ஜி.சேகர் மாவட்ட அவைத் தலைவர் பொறுப்பு வகிக்கிறார். கோஷ்டி அரசியல் மற்றும் வம்பு வழக்குகளில் சிக்காதவர். சேகருக்கு ஒரே மைனஸ் - மாவட்ட தி.மு.க-வுக்கே 'ஏ.டி.எம்’ ஆக திகழும் ரித்தீஷின் ஆதரவில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் நாகநாத சேதுபதியை சமாளிப்பதுதான். இதுமட்டும் இல்லாமல், இவருக்குக் கிடைக்க வேண்டிய அகமுடையர் சமூக வாக்குகளை பி.ஜே.பி-யின் வேட் பாளர் துரைகண்ணன் பிரிக்கிறார். தி.மு.க-வின் நாகநாத சேதுபதி, ஒருகாலத்தில் அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் ரித்தீஷ§க்காக முகாம் மாறினார். ஆகவே, இவருக்கு எதிராக சொந்தக் கட்சியினரே முழு எதிர்ப்பு வேலைகளில் இறங்கி இருக்கிறார்களாம். எனவே, இம்முறை எஸ்.கே.ஜி.சேகர் வெற்றியை தொட்டு விடுவார் என்றே தெரிகிறது.
கும்பகோணம்: கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பெரும்பான்மை யான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியபோதும், கும்பகோணத்தில் தி.மு.க. வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியது. ஆக இந்த உள்ளாட்சித் தேர்தலில் விட்டதைப் பிடிக்க நினைக்கிறார்கள். கோ.சி.மணி, எம்.எல்.ஏ. அன்பழகன், தற்போதைய தி.மு.க நகர்மன்றத் தலைவர் தமிழழகன் ஆகிய தரப்பினருக்கு ஸீட் கொடுக்காமல், பெரிதும் அறிமுகமாகாத புவனேஸ்வரி என்பவரை களம் இறக்கி உள்ளது தி.மு.க. விளைவு, உட்கட்சி பூசல் உச்சத்தில் நிலவுகிறது. அ.தி.மு.க. தரப்பில் கும்பகோணம் நகரச் செயலாளர் சேகரின் மனைவி ரெத்னா போட்டியிடுகிறார். பரவலாக அறியப்பட்ட நபரான சேகர் பண பலத்திலும் போட்டியிடக்கூடியவர் என்பதால் கும்பகோணம் நகராட்சி அ.தி.மு.க. வசமாகலாம்.
நாகப்பட்டினம்: தற்போது அ.தி.மு.க-வின் கையில் இருக்கிறது இந்த நகராட்சி. தற்போதைய தலைவர் சந்திரமோகனின் மனைவி மஞ்சுளா, தி.மு.க. நகரச் செயலாளர் போலீஸ் பன்னீரின் மனைவி தங்கப்பிள்ளை ஆகிய இரண்டு பேருக்கும் இடையேதான் கடுமையான போட்டி. நாகூரில் உள்ள 10 வார்டுகளும் நாகப்பட்டினத்தில் உள்ள 10 வார்டுகளும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவானவை. அதேபோல், மீனவர் ஏரியாவான நம்பியார் நகர், டாட்டா நகர் ஆகியவையும் அ.தி.மு.க-வுக்கே ஆதரவாக அமையும். தி.மு.க. தரப்பிலோ கீரைக்கொல்லைத் தெரு, வ.உ.சி தெரு, முகம்மதியர் தெரு, ஹவுசிங் யூனிட் ஆகிய ஏரியாக்களில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட வார்டுகள் தங்களுக்கு ஆதரவாக அமைகின்றன என்கிறார்கள். இருந்தாலும், ஸீட் மறுக்கப்பட்ட நாலைந்து சிட்டிங் கவுன்சிலர்கள் கொஞ்சம் முறுக்கிக்கொண்டு இருப்பது தி.மு.க-வுக்கு பின்ன டைவு.  மீனவ மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆதரவோடு மஞ்சுளா சந்திரமோகனின் அ.தி.மு.க. கொடிதான் நகராட்சியில் பறக்கும் போலிருக்கிறது.
தாம்பரம்: இந்த நகராட்சி 1986 முதலே தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வசமே இருந்து வருகிறது. முன்னாள் சபாநாயகர் முனு.ஆதியின் மகன் ஆதி.மாறன் தி.மு.க. சார்பில் இங்கு நிற்கிறார். ஆனால், அவருக்கு எதிராக வாய்ப்பு கிடைக்காத தி.மு.க. கூட்டம் வெகுண்டு எழுந்திருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் கரிகாலன், சுற்றுச்சூழல் அமைச்சர் சின்னையாவின் வலதுகரமாம். இவருக்கும் தொடக்கத்தில், உட்கட்சி அதிருப்தியாளர்களின் குடைச்சல் டார்ச்சரைக் கொடுத்தது. தற்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த நகராட்சியில் தி.மு.க-வைவிட தாங்கள் பெற்ற அதிக வாக்குகளும்,  முஸ்லிம்கள் ஆதரவும் தாம்பரத்தில் அ.தி.மு.க-வின் கரங்களையே உயர்த்திக் காட்டுகிறது.
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நகராட்சி கோவில் பட்டிதான். அ.தி.மு.க வேட்பாளரான ஜான்சிராணி அக்கட்சியின் அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டியனின் மனைவி. அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வி.ஆர்.எஸ். கொடுத்தவர். ஒரு பஸ் கம்பெனியின் உரிமையாளராக இருப்பதால் வசதி வாய்ப்புக்குக் குறைவில்லை. தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு பலம். அதே நேரத்தில், இவரை எதிர்க்கும் ம.தி.மு.க-வின் முப்பிடாதியும் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஓட்டுகள் பிரியும் வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க. சார்பில் இந்துமதிகௌதம் போட்டியிடுகிறார். பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவர்.  பெருவாரியாக உள்ள நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதே சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. இவையெல்லாம் இவருக்கு பிளஸ் பாயின்ட். பரமக்குடி பிரச்னையால் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் தலித் மக்கள், 'ஓட்டு சிதறாமல் இருக்க தி.மு.க-வையே ஆதரிக்க வேண்டும்’ என்கிற நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால், இப்போதைய நிலவரப்படி தி.மு.க-வே கோவில்பட்டியை பார்சல் செய்யும் என்று தெரிகிறது.
குடியாத்தம்: 145 வருட பழைமையும், டெல்லி செங் கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி தயாரித்த ஊர் என்ற பெருமையும் உள்ள குடியாத்தம் மும்முனை போட்டியில் களை கட்டிக்கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க. ஏற்கெனவே தலைவர் பதவியை அனுப வித்து வரும் நிலையில், தி.மு.க-வின் கவிதாபாபு அ.தி.மு.க-வின் அமுதா சிவ பிரகாசத்தை எதிர்த்து நிற்கிறார். கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. கூட்டணி ஓரளவு வாக்குகளைப் பிரித்தாலும் செல்வாக்கில்  மீண்டும் அ.தி.மு.க-வே கைப்பற்றும் நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. போதாதக் குறைக்குத் தி.மு.க-வில் உட்கட்சி பூசல் வேறு. ஆக கவிதாபாபுவை எளிதாக அமுதா வீழ்த்திவிடுவார் என்று மார்தட்டிக்கொண்டு வேலை செய்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். பில்டிங் கான்டிராக்டரான இவர் கள்ளக்குறிச்சியில் சிமென்ட் கடை நடத்தி வருகிறார்.  இவருக்கு அப்பகுதி எம்.எல்.ஏ-வின் ஆதரவு உள்ளது. தே.மு.தி.க-வில் இருந்து தி.மு.க-வுக்குத் தாவிய சுப்புராயலு தி.மு.க. வேட்பாளர். கள்ளக்குறிச்சியில் நகைக்கடை வைத்திருக்கும் இவர் ஃபைனான்ஸ் தொழிலும் செய்கிறார். இந்தத் தொழில் மூலம் பொதுமக்களிடம் இவருக்கு அதிருப்திகள் இருந்தபோதும், இவரால் பணம் வாரி இறைக்க முடியும். இதன் மூலம் ஓரளவு வாக்குகள் வாங்குவார், ஆனாலும், சேர்மன் பதவி அ.தி.மு.க-வுக்குதான் கிடைக்குமாம்.
தென்காசி: அ.தி.மு.க-வின் வேட்பாளர் பானுவுக்கு செல்லும் இடங்களில் அமோக வரவேற்பு... பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் இவருக்கு ஆதரவு கொடுப்பது என முடிவு செய்திருப்பது பிளஸ். தி.மு.க-வின் சீதாலட்சுமி, கடந்த ஆட்சியில் இந்தப் பகுதிக்கு கிடைத்து இருக்கும் நலத் திட்டங்களை எடுத்துக் கூறி பிரசாரம் செய்கிறார். இது தவிர, அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் உள்குத்து விவகாரம் கடைசி நேரத்தில் தனக்குக் கைகொடுக்கும் என்பது இவரது நம்பிக்கை. காங்கிரஸின் சிவகாமிக்கு ஆதரவாக ச.ம.க-வின் லோக்கல் நிர்வாகிகள் பிஸியாக வேலை செய்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி பானுவின் கைகளுக்கே தென்காசி நகராட்சி போகும்.
திருச்செங்கோடு: தி.மு.க. சார்பில் சிட்டிங் சேர்மனான நடேசனே வேட்பாளர். தொடந்து மூன்று முறை நகராட்சி சேர்மனாக  இருந்தும் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பது கணிசமான மக்களின் குற்றச் சாட்டு. நான்காவது முறையாக சேர்மனாகும் ஆசையில் இருந்த நடேசனை  நில அபகரிப்பு வழக்குகளில் உள்ளே தூக்கி வைத்துவிட்டார்கள். இவருக்குப் பதிலாக இவரது மனைவிதான் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்து வருகிறார். இது போதாதென்று நடேசனுக்கு போட்டியாக தி.மு.க-வைச் சேர்ந்த மாஜி கவுன்சிலர் சரவணன் சுயேச்சையாக நிற்கிறார். இவர் பின்னால் சேரும் உ.பி. படை நடேசன் தரப்பை கிலியில் ஆழ்த்தியுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் பொன்சரஸ்வதி. தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்னை இவருக்கு சாதகம். வசதியான குடும்பத்தை சார்ந்தவர், கட்சி செல்வாக்கு இதெல் லாம் அவருக்கு சேர்மன் வாய்ப்பை அள்ளித்தரும் வாய்ப்பு அதிகம்.
மேட்டூர்:  தி.மு.க-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபால் இங்கு வேட்பாளர். கட்சிக் காரர்களாகவே இருந்தாலும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்ய அனுமதிக்கமாட்டார்.  ரவுடியிஸம், கட்டப்பஞ்சாயத்துகளில் கால் வைக்காத அரசியல்வாதி. மக்கள் மத்தியில் செல்வாக்கும் அதிகம். இதெல்லாம் இவரது கையை உயர்த்திப் பிடிக்கின்றன. அ.தி.மு.க. வேட்பாளர் லலிதா சரவணனும் கட்சிக்காரர்கள், பொதுமக்களிடம் அறிமுகமானவர்தான். கட்சியின் செல்வாக்கு இருப்பதுடன், இந்த தொகுதியில் இருக்கும் வன்னியர் சமுதாய வாக்குகளை வளைக்க சைலன்டாக முயற்சி செய்கிறாராம். மொத்தத்தில் இருவரில் யாராக இருந்தாலும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பார்கள்.
கோபிச்செட்டிப் பாளையம்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் தற்போதைய நகர்மன்றத் தலைவர் ரேவதி தேவி. தி.மு.க-வில் புதுமுகம் சத்யா. இதுவரையிலும் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை தி.மு.க. கைப் பற்றியதே இல்லை. இந்த முறையும் சீனியர் அல்லாத புதுமுகம் என்பதால் அக்கட்சியினர் சோர்ந்து கிடக்கிறார்கள். அதுவும் தற்போது நகர் மன்றத் துணைத் தலைவராய் உள்ள மோகனாம்பாளுக்குத்தான் ஸீட் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் இல்லை என்பதால் அவர்கள் தரப்பு சத்யாவுக்கு எதிராய் போர்க் கொடி தூக்கியுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் ரேவதி தேவிக்கு பக்கபலமாய் இருப்பவர் அமைச்சர் செங்கோட்டையன். அ.தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோதே வெற்றி பெற்ற ரேவதி தேவிக்கே இப்போதும் வாய்ப்பு அதிகம்.
உடுமலைப்பேட்டை: உடுமலை நகராட்சியின் அ.தி.மு.க. வேட்பாளரான ஷோபனா, நகரச் செயலாளர் சண்முகத்தின் மகள். மக்களுக்கு இவர் அறிமுகமில்லை என்றாலும், மாஜி அமைச் சர் பொள்ளாச்சி ஜெயராமனின் ஆதரவும், கட்சி செல்வாக்கும் கைகொடுக்கிறது. தி.மு.க. வேட் பாளரான சித்திரைச்செல்வி சிட்டிங் கவுன்சிலராக இருந்தும் வெகுஜன அறிமுகமில்லை. இதுபோக, கடந்த ஐந்தாண்டுகள் இந்நகராட்சியின் சேர்மனாக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த வேலுச்சாமி மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, சித்திரைச்செல்வியை அதிர வைத்திருக்கிறது. ஆக ஷோபனா எளிதில் வென்று விடலாம் என்கிறார்கள்.
ஜூ.வி.டீம்
*******************************************************************************************
நாலு பேரால் குழம்பும் நெல்லை!

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லை மாநகராட்சியை நான்கு பெரிய கட்சிகளும் கலக்கிக் கொண்டிருப்பதால், நெல்லை நகரம் செம ஹாட்!
அ.தி.மு.க. சார்பில் களம் இறக்கி விடப்பட்ட விஜிலா சத்யானந்த், 'மக்களுக்கு அம்மா மீது இருக்கும் நம்பிக்கையும், தி.மு.க-வினர் மீதான வெறுப்பும் எங்களை ஜெயிக்க வைக்கும்’ என்ற நம்பிக்கையுடன் வாக்கு சேகரித்து வருகிறார். இவர் பிள்¬ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் சி.எஸ்.ஐ. கிறிஸ்துவர் என்பதும் ப்ளஸ்.
கோஷ்டிப் பூசலில் சிக்கியுள்ள நெல்லை அ.தி.மு.க-வில், விஜிலா சத்யானந்த் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதால், கட்சியினர் ஆர்வமாகத் தேர்தல் வேலை செய்கிறார்கள். நெல்லை எம்.எல்.ஏ-வும் மாநகர மாவட்டச் செயலாளருமான நயினார் நாகேந்திரனிடம், 'மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டியது உங்க பொறுப்பு’ என ஜெயலலிதா சொல்லி இருப்பதால் ஜரூராக வேலை நடக்கிறது.
விஜிலா சத்யானந்த், ''நெல்லையில் நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை அதிகரித்துப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவிக்கிறார்கள். இதற்கு இணைப்பு சாலைகள்தான் தீர்வாக இருக்கும். நாங்கள் வெற்றி பெற்றதும் இணைப்பு சாலைகள் அமைக்கும் பணியை உடனே செயல்படுத்துவோம். குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கப் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத்தை மேம்படுத்தத் திட்டங்கள் கொண்டு வருவோம். மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவோம்...'' என வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை மக்கள் வெகுவாக கவனிக்கிறார்கள்.
இவரை எதிர்க்கும் தி.மு.க வேட்பாளர் அமுதா, 'படித்தவர்கள் அதிகம் வசிக்கும் இந்த மாநகராட்சியைக் கைப்பற்றப் போவது நாங்கள்தான்!’ என நம்பிக்கையுடன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். கடந்த முறை மாநகராட்சியில் பொறுப்பில் இருந்த தி.மு.க-வினர் மீது மக்களுக்கு நிறைய அதிருப்தி இருக்கிறது. அதை எல்லாம் போக்கக் கடுமையாக போராட வேண்டிய கட்டாயம் அமுதாவுக்கு. மேலப்​பாளையம் மற்றும் பாளையங்கோட்டையின் பல பகுதிகளில் குடிநீர் இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள். ''தாமிரபரணியில் இருந்து பல மாவட்டங்களுக்குக் குடிநீர் செல்கிறது. ஆனால், கரையோரம் வசிக்கும் நாங்கள் குடிநீருக்குத் திண்டாடுறோம்...'' என மக்கள் அங்கலாய்ப்பது தி.மு.க-வுக்கு எதிர்மறை விளை​வை ஏற்படுத்தி இருக்கிறது.
'தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டும்’ என்பதில் தி.மு.க-வின் மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தீவிரம் காட்டி வருகிறார். மூன்று வழக்குகளில் சிக்கிச் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வந்திருப்பது உடன்பிறப்புகளை உற்சாகம் அடைய வைத்திருக்கிறது.
கைச் சின்னத்தில் போட்டியிடும் ஜூலியட் பிரேமலதா அரசியலுக்கு புதியவர் என்றாலும்... நெல்லை தொகுதியின் எம்.பி-யான ராமசுப்பு, முன்னாள் எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோரின் ஆசியுடன் களம் இறங்கி உள்ளார். சி.எஸ்.ஐ. நாடார்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்துக் களம் இறங்கி இருக்கும் இவர், ''மத்திய அரசின் திட்டங்கள் நெல்லைக்கு வந்து சேரப் பாலமாகச் செயல்படுவேன். மாநகராட்சிப் பள்ளிகளை, மாடல் ஸ்கூல் ஆக்க நடவடிக்​கை எடுப்பேன். குளிரூட்டப்பட்ட வேளாண் வணிக வளாகம் அமைப்பேன்!'' என்று சொல்லி வாக்கு கேட்கிறார்.
ம.தி.மு.க சார்பில் போட்டி​யிடும் மகேஸ்வரி நட​ராஜனுக்கு ஆதரவாக ஏற்கெனவே நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரித்த நிலையில் வைகோவும் களம் இறங்கி இருப்பதால் தொண்டர்களிடம் உற்சாகம் கூடியிருக்கிறது. இந்த தேர்தலில் புதிய வியூகம் அமைத்​திருக்கும் வைகோ, அரசியல் பிரமுகர்அல்லாத அந்தந்தப் பகுதி வி.ஐ.பி-களை கொண்டு தங்களுடைய மேயர் வேட்பாளரை அறிமுகம் செய்ய வைக்கிறார். அத்​துடன், 'ம.தி.மு.க ஜெயித்​தால் ஊழலற்ற நிர்வாகம் தருவோம். அதற்காக ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி எந்த தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்’ என்கிற பிரசாரத்துக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது.
தே.மு.தி.க சார்பில் மேயர் வேட்பாளரை நிறுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிப்போனது, மாவட்ட நிர்வாகிகளுக்கு! மேலிடத்தால் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாநகராட்சியை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கியது, கட்சித் தலைமை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியில் வேட்பாளர் கிடைக்காததால் தே.மு.தி.க-விடமே அந்த இடத்தை கொடுத்துவிட்டு காம்ரேட்டுகள் ஒதுங்கிக் கொண்டனர். இதற்கிடையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சீதாலட்சுமியும் போட்டியிட மறுத்துவிடவே, அவசரம் அவசரமாக கண்ணம்மாள் என்பவரை வேட்பாளர் ஆக்கி இருக்கிறார்கள்.
கட்சிக்கும் மக்களுக்கும் கொஞ்சமும் அறிமுகம் இல்லாதவர். அதனால் கட்சியினரின் வேலைகளில் வேகம் இல்லை. விஜய்காந்த், பிரேமலதா ஆகியோர் பிரசாரம் செய்த பின்னரும் கூட, உற்சாகம் இல்லாமல் சோர்ந்து கிடக்கிறார்கள் தே.மு.தி.க. தொண்டர்கள். கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டுகள் கேட்ட வார்டுகளை தே.மு.தி.க-வினர் விட்டுக் கொடுக்காததில் இரு தரப்புக்குமே வருத்தம். அதனால் இன்னமும் ஸ்டார்ட் ஆகாத நிலையில்தான் இருக்கிறது விஜயகாந்த் வண்டி.
இதுதவிர, ஐ.ஜே.கே-யின் ஷகிலா, பா.ம.க-வின் சண்முகபிரியா ஆகியோர், 'தி.மு.க., அதி.மு.க. ஆகிய கட்சிகளை நம்பிக் கெட்டுப் போகாதீங்க. இந்த ஒரு முறையாவது எங்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன்’ என கெஞ்சிப் பார்க்கிறார்கள். ஆனால், வாக்களர்களிடம் பரிதாபம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற வெறியுடன் தி.மு.க., சவால் விட்டு உழைக்கும் அ.தி.மு.க., கணிசமான வாக்கு​களைக் கவரக் காத்திருக்கும் ம.தி.மு.க., சாதி ஓட்டுகளை நம்பி நிற்கும் காங்​கிரஸ் கட்சிகளுக்குள் குழப்பத்தில் இருக்கிறார்கள் நெல்லை வாக்காளர்கள்!
ஆண்டனி ராஜ்
************************************************************************
மேயரைத் தீர்மானிக்கும் பவர் கட்!

கோவை கும்மாங்குத்து!
வெறும் 72 வார்டுகளுடன் இருந்த கோவை மாநக​ராட்சி, தற்போது 100 வார்டுகளுடன் செஞ்சுரி அடித்திருக்கிறது. இங்கு மாநக​ராட்சியின் மேயர் பதவிக்குப் பிரதான கட்சிகள் எல்லாம் களத்தில் நிற்கின்றன. ஆனாலும், பலப்பரீட்சை... அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இடையேதான். தே.மு.தி.க-வின் ஆதர​வுடன் களம் இறங்கியிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றிக்​கான முனைப்பில் ஈடுபட்டு இருக்கிறது.
ஆளும் கட்சியின் வேட்பாளரான மாஜி அமைச்சர் செ.ம.வேலுசாமிக்கு கட்சி மற்றும் ஜெயலலிதாவின் செல்வாக்கே பெரிய நம்பிக்கை. ஆனால், கோவை அ.தி.மு.க-வைப் புரட்டி எடுக்கும் கோஷ்டிப் பூசலோ, அந்த நம்பிக்கைக்கு எதிராகக் கிலியைக் கிளப்பி இருக்கிறது. குறிப்பாக, மலரவன் எம்.எல்.ஏ. குழு தன்னை வாரிவிட்டு விடுமோ என்ற சந்தேகம் செ.ம.வேலுசாமிக்கு. இருந்தும், தலைமையின் உத்தரவின்படி வேலுசாமிக்காக மலரவன் மளமளவென உழைக்கத் தொடங்கிவிட்டார். அவரது ஆதரவுப்பட்டாளமோ இன்னமும் முறுக்கிக்கொண்டு இருக்கிறது. பிரசாரத்​தில் பரபரப்பாகச் சுழலும் வேலுசாமியிடம் பேசியபோது, ''கடந்த அஞ்சு வருஷமா இந்த மாநகராட்சியைச் சீரழித்தது காங்கிரஸின் மேயர். மக்களின் இந்த ஆத்திர​மே என் வெற்றிக்கு அஸ்திவாரம் போடும்.   ஒரு மணிநேரம் மழை பெஞ்சா போதும்... நாலு நாளைக்கு கோவை சிட்டி முழுக்க எல்லா ரோடு​களிலும் தண்ணீர் தேங்கிக்கிடக்கும். இதை எல்லாம் தாண்டி, ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்துக்காக வந்த மெகா ஃபண்டில் முறைகேடு நடந்திருப்பது தெரிகிறது. அதனால், கோவை மக்கள் காங்கிரஸ் மீது ரொம்ப கடுப்போட இருக்காங்க. இதுவும், அம்மாவோட ஆசியும் நிச்சயம் என்னை மேயர் ஆக்கும்!''என்கிறார்.
கோவையில் நாயுடு சமுதாயம் அதிகம். தி.மு.க. வேட்பாளரும், சிட்டிங் துணை மேயருமான கார்த்திக், இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர். கட்சிக்காரர்களை அரவணைத்துச் செல்வது, பொதுமக்களிடம் பொறுமையுடன் ரியாக்ட் செய்வது, தனி அணி அமைத்து சொந்த கட்சிக்குள்ளேயே குழப்படி செய்யாமல் இருப்பது போன்ற விஷயங்கள் மூலம் செ.ம.வேலுசாமியைவிட பல படிகள் முன்னிலையில் இருக்கிறார் கார்த்திக். அவரிடம் பேசினோம். ''ஒரு மாநகராட்சி நிர்வாகம் அஞ்சு வருஷத்துல செஞ்சு முடிக்க வேண்டிய சாதனைப் பணிகளை செம்மொழி மாநாடு மூலமா கோவைக்கு செய்து முடித்துவிட்டார் எங்க தலைவர். கோவை மாநகரவாசிகள் இவற்றை மறக்கவே மாட்டாங்க. விரிவுபடுத்தப்பட்ட சாலைகளின் நடுவே பளிச் விளக்குகள், சிறு பூங்காக்கள், மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்வுனு நிறைய செய்யப்பட்டிருக்கு. ஐந்து வருஷத்தில் மாநகராட்சியில் மிகுந்த பொறுப்போட தி.மு.க. செயல்பட்ட விதம் மக்களுக்குத் தெரியும். மின் வெட்டு பிரச்னை கோவையில் ரொம்பவே அதிகம்... பல ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் இதனால் ரொம்ப கஷ்டப்படுறாங்க. இந்த அதிருப்தி நிச்சயம் தேர்தலில் தெரியும்!'' என்கிறார் அழுத்தமாக. இவரது நம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக, தேர்தல் நடக்கும் ஒன்பது மாநகராட்சிகளில், தனக்கு சாதகமாக முடிவு வரும் என்று அறிவாலயம் டிக் செய்திருப்பதில் கோவையும் ஒன்று.
இரண்டு மெகா கட்சிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ரேஸில் வேகம் காட்டிக்கொண்டு இருக்கிறார் மார்க்சிஸ்ட் வேட்பாள​ரான சிவஞானம். காட்​டன் மில் மற்றும் மோட்டார் தொழிற்சாலைகள் கணிசமாக கோவையில் இருப்பதால், தொழிற்சங்​கங்களின் எண்ணிக்கை அதிகம். இச்சங்கங்களின் பெரிய ஓட்டு வங்கி இரு கம்யூனிஸ்ட்களுக்கும் கைகொடுக்கும். அதில் பாதி ஆதரவை மார்க்சிஸ்ட் பெற்றிருப்பதோடு, தே.மு.தி.க-வின் ஆதரவோடும் சுறுசுறுப்பாக வலம் வருகிறது. இதை எல்லாம் தாண்டி இம்மாநகராட்சியில் தலித்களின் வாக்கு வங்கியும் கணிசமாக இருக்கிறது. சிவஞானம் தலித் விடுதலைப் போராளி. 'தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ என்ற அமைப்பின் கோவை மாவட்டச் செயலாளரும் அவர்தான். ஆகவே, தலித் மக்களின் வாக்குகள் இவருக்கு கூடுதல் பலம். ''அதிகாரம் மற்றும் பண பலத்தோட ஆட்டம் போடுற பெரிய கட்சிகளின் மேல் மக்களுக்குக் கடுமையான வெறுப்பு இருக்கிறது. இது எங்களுக்கு பெரிய சாதகம். மேயராகும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், கோவை மாநகரில் அடிப்படை வசதிகளை சீரமைப்பேன். கூடவே, எல்லா சமுதாயத்துக்கும் சமமான மரியாதையும், உரிமையும் வழங்கப் போராடுவேன்!'' என்கிறார்.
ம.தி.மு.க-வின் சார்பில் போட்டியிடும் அர்ஜுன்ராஜ், வைகோவின் பிரசாரத்தை நம்பி இருக்கிறார். நகரில் இவர்களுக்குக் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சின்னையனும் நம்பிக்கையோடு பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார்.
ஆக, கோவை மாநகராட்சியின் 'வணக்கத்துக்குரிய’ மேயராகப் போவது இந்நாள் முதல்வரின் வேட்பாளரா அல்லது முன்னாள் முதல்வரின் வேட்பாளரா என்பதுதான் ஒரே கேள்வி!
எஸ்.ஷக்தி
படங்கள்: வி.ராஜேஷ்
*********************************************************************************
உயிரைப் பறித்ததா கவுன்சிலர் ஸீட்?

காரைக்குடி அ.தி.மு.க. களேபரம்!
காரைக்குடி நகர அ.தி.மு.க. செயலாள​ராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம். ஆனால் கட்சி உள்குத்து காரணமாக  பதவியை பறிகொடுத்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றுப்போனவர், இந்தத் தேர்தலிலும் அதே வார்டில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். ஆனால் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்றதும் இடிந்து போய், நெஞ்சு வலியால் துடித்திருக்கிறார். அடுத்து நடந்ததை மீனாட்சி சுந்தரத்தின் இரண்டாவது மனைவி நாகஜோதி பதறியபடி சொன்னார். ''உன் பெயர் லிஸ்ட்ல இருக்குதுன்னு எம்.எல்.ஏ. சொன்னதை நம்பி தேர்தல் வேலையை ஆரம்பிச்சிட்டார். ஆனா, காசுக்கு ஆசைப்பட்டு இவருக்கு ஸீட் குடுக்காம இன்னொருத்தருக்குக் குடுத்துட்டாங்க. தகவல் தெரிஞ்சதும் அழுதார். ஆறுதலா பேசி படுக்க வெச்சேன். திடீர்னு ராத்திரி ரெண்டு மணிக்கு நெஞ்சு வலியில துடிக்க ஆரம்பிச்சிட்டார்.
ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு மாவட்டச் செயலாளர் முருகானந்தம், கற்பகம், எம்.எல்.ஏ-வான சோழன் பழனிச்சாமின்னு ஒவ்வொருத்தருக்கா போன் போட்டேன். எல்லாருமே, 'வாரோம்’னு சொன்னாங்க. ஆனா, அடுத்த நாள் ஆவி அடங்கி வீட்டுக்கு தூக்கியாந்ததுக்கு அப்புறம்தான் வந்தாங்க. மாவட்ட அவைத் தலைவர் காளி​தாஸ்தான் எம் புருஷனுக்கு ஸீட் கொடுக்காமப் பறிச்சிட்டார்...'' என்று அழுதுபுரண்டார்.
இதுகுறித்து மாவட்ட அவைத் தலைவரும் முன்னாள் நகரச் செயலாளருமான காளிதாஸிடம் பேசினோம். ''மீனாட்சி சுந்தரத்தின் மரணத்துக்கு என்மீது குற்றம் சொல்வது நியாயமில்லை. நான் நகரச் செயலாளராக இருந்த காலத்தில் மூன்று முறை அவருக்கு ஸீட் கொடுத்திருக்கிறேன். நான் விசாரித்த வரை அவருக்கு இரண்டு கிட்னியும் பழுதானதால்தான் இறந்துட்டதா சொல்றாங்க. அதனால் அவரது மரணத்துக்கு காரணம் கட்சி என்பதை ஏற்கமுடியாது!'' என்றார்.
டீக்கடை நடத்திய ஓ.பி.எஸ்-ஸை முதலமைச்சராக்கி அழகு பார்த்த அதே அ.தி.மு.க-தான், டீக்கடைக்காரரான மீனாட்சி சுந்தரத்தின் உயிரை கவுன்​சிலர் ஸீட்டுக்காக காவு வாங்கி இருக்கிறது!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்
*********************************************************************************
எங்கள் கட்சி வளர்ந்து வருகிறது...

சிரிக்காமல் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்!
ள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உற்சாகப் பிரசாரத்தில் இருக்கிறார். அவரை சந்தித்தோம்.
''உள்ளாட்சித் தேர்தலில் பெரியதாக உங்கள் கட்சி கூட்டணி வைக்கவில்லையே?''
''கடந்த சட்டசபை தேர்தலில் எடுத்த நிலைப்பாடுதான் இப்போதும். எங்கள் கட்சி யின் கோட்பாடுகளை ஏற்று எந்தக் கட்சி கூட்டணிக்கு தாமாக முன்வருமோ... அந்தக் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம். அதன்படி, உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளோம்.''
''பிரதான கட்சிகள் எல்லாம் தனித்துப் போட்டி யிடுவது குறித்து?''
''அவை எல்லாம் அந்தக் கட்சிகள் தாமாக எடுத்த முடிவு அல்ல. கடந்தசட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகள் வைத்துக்கொண்ட கூட்டணிகள் எல்லாம் சுயநலம், துரோகம் உட்படப் பல்வேறு காரணங்களால் சிதைந்துபோனது. அதனால், தனித்தனியாகப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். எல்லாக் கட்சிகளும் தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அப்போதுதான் அவரவர் சுயபலம், பலவீனம் தெரியும். ஆனால், அ.தி.மு.க. கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து, அதன் மூலம் அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த பின்பு, இப்போது அந்தக் கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்துவது அரசியலுக்கு அழகு அல்ல.
அதேபோல், தி.மு.க-வும் தனது கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணிக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி அமைக்கவில்லை என்றால், ஐந்து தொகுதிகளைக்கூட அக்கட்சி வென்று இருக்க முடியாது. அந்த அளவுக்கு தி.மு.க. மீது மக்களுக்கு அவ்வளவு வெறுப்பு...''
''தமிழகத்தில் பி.ஜே.பி. பலவீனமாக இருக்கும் நிலையில், எதை சாதிக்க முடியும் என்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடு கிறீர்கள்?''
''தமிழகத்தில் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்று சொல்வது தவறு. சட்டசபையில் எங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததை வைத்து, கட்சியின் வளர்ச்சியை கணக்கிடக் கூடாது. 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாங்கள் வாங்கிய ஓட்டு சதவிகிதம் 2.2. கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் வாங்கிய ஓட்டு சதவிகிதம் 2.69. ஆகவே, எங்கள் கட்சி வளர்ச்சிப் பாதையில் மேல்நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது. ஒரு முறை எங்கள் கையில் நிர்வாகத்தை ஒப்படைத்தால், எங்களின் மக்கள் பிரதிநிதிகள் தூய்மையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு கடைசி வரை அந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வோம். அதற்கு உதாரணங்கள் பல. கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளம் பஞ்சாயத்துத் தலைவராக தொடர்ந்து 10 ஆண்டுகளாக இருந்த சந்திரகுமார், இப்போது மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவராக தொடர்ந்து 15 ஆண்டுகள் இருந்த ஜெயசீலன், அங்கு நான்காவது முறையாகப் போட்டியிடுகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக 10 ஆண்டுகள் இருந்த தர்மராஜ் அங்கு மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். அதனால்தான் சொல்கிறேன், ஒரு முறை ஆட்சி பொறுப்பை கொடுத்துப் பாருங்கள். மக்கள் சேவையில் எங்கள் நேர்மையையும், அரசியலில் எங்கள் தூய்மையையும் நிரூபிக்கிறோம். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் எங்கள் கட்சி தமிழகத்தின் பிரதான கட்சியாக, திராவிட கழகங்களுக்கு மாற்று சக்தியாக பலம் பெறும்!''
''முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து உங்கள் கட்சியின் விமர்சனம் என்ன?''
''தமிழகத்துக்கு துணிச்சலான முடிவு எடுக்கக்கூடிய ஓர் அரசு தேவை. அப்படி ஓர் அரசாங்கத்தை ஜெயலலிதா சர்வ தகுதியுடன் நடத்தி வருகிறார். ஆனால், அவர் செய்த பல விஷயங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. உதாரணத்துக்கு, பெரும்பான்மையோர் விரும்புகிறார்கள் என்பதற்காக மட்டுமே சட்டசபையில் முதல் நாள் ஒன்று பேசிவிட்டு, மறுநாளே அதை மறுத்து ராஜீவ் கொலையாளிகள் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் போடுகிறார். இதை நாங்கள் ஏற்கவில்லை.''
''அப்படியானால், மூவரின் தூக்குத் தண்டனையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?''
''அப்படி சொல்லவில்லை. காங்கிரஸ் அரசு சுயநல அரசியல் காரணங்களுக்காக இவ்வளவு ஆண்டுகள் காலம் தாழ்த்திவிட்டு, இப்போது மூவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது. மத்திய அரசின் இந்தத் தவறுக்கு அந்த அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். எங்களைப் பொறுத்த வரை அப்சல்குருவை முதலில் தூக்கிலிடுங்கள். மூவரின் தூக்குத் தண்டனையைப்பற்றி அப்புறம் யோசிக்கலாம்!''
''நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க., உங்கள் கட்சியோடு கூட்டணி வைக்குமா?''
''மோடியுடன் ஜெயலலிதா நல்லுறவு பாராட்டி வருவதால், இப்படி ஓர் எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது.  காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளால் பாராட்டப்பட்ட திறமையான முதல்வர் மோடி. அப்படி ஒருவருடன் ஜெயலலிதா நல்லுறவு பேணுவது இயல்பான ஒன்றுதான். மற்றபடி கூட்டணி நிலைப்பாடு குறித்து உங்களது முதல் கேள்வியிலேயே பதில் அளித்து விட்டேன்.''
டி.எல்.சஞ்சீவிகுமார்
************************************************************************
தெற்கு சிப்ஸ்

தேம்பி அழுத வைகோ!
 
ம.தி.மு.க-வின் மதுரை மேயர் வேட்பாளரான பாஸ்கர சேதுபதிக்காக நாராயணபுரத்தில் கடந்த 3-ம் தேதி வாக்குக் கேட்டார் வைகோ. ''உங்களுக்காக உயிரையும் கொடுப்போம் என்று சிலர் நடிப்பார்கள். அவர்கள் எல்லாம் உங்களது ரத்தத்தை குடிப்பதற்காக வேஷம் போடுகிறார்கள். ஆனால், என்னுடைய தம்பிமார்கள் ஏழைகளின் உயிர் காக்க கடந்த ஓராண்டில் மட்டும் 85,000 யூனிட் ரத்தம் தானமாகக் கொடுத்திருக்கிறார்கள்!'' என்று பேசிக்கொண்டே வந்த வைகோ, திடீரென உணர்ச்சிவசப்பட்டு, ''தம்பி பாஸ்கர சேதுபதி தனது சொத்துகளை விற்று தேர்தலில் நிற்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்னு தெரியலியே!'' என்று சொல்லி தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.  பிரசார வேனுக்குள் அமர்ந்த பிறகும் அழுகையை அடக்க முடியவில்லையாம்!                          
வருதப்பா 'கொலை’!
மதுரை மாநகராட்சியின் 43-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக நிற்கிறார் ராஜு. இவருக்கு 'குலையுடன் கூடிய தென்னை மரம்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் ராஜுவுக்காக பிரசாரம் செய்கிறவர்கள், ''உங்களுக்காக உழைத்திட அண்ணன் ராஜுவுக்கு 'கொலையுடன் கூடிய தென்னை மரம்’ சின்னத்தில் வாக்களியுங்கள்!'' என்று சொல்லி மேற்கொண்டும் பீதியைக் கிளப்புகிறார்கள்!                                               
ஆணிமுத்துக்கு அம்மா கொடுத்த ஆஃபர்?
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த ஆணிமுத்து சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டார். அதனால் இவர் அம்மாவின் கோபத்தை தணிப்பதற்காக போயஸ் கார்டன் வீட்டு வாசலில் போய் தினமும் கண்ணில் படும்படியாக நின்றாராம். தினமும் இவர் நிற்பதைப் பார்த்த ஜெயலலிதா, ''எதற்காக இங்கே வந்து நிற்கிறீர்கள்? தேர்தலில் போட்டி யிட விருப்ப மனு கொடுத்திருக்கிறீர்களா?'' என்று கேட்டாராம். ''இல்லை!'' என்று ஆணிமுத்து தலையை ஆட்டவும், ''மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு
மனு குடுங்க!'' என்று சொன்னாராம் ஜெ. அதே வேகத்துடன் ஊருக்கு வந்த ஆணிமுத்து கட்சியில் மனு கொடுத்துவிட்டு இப்போது வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார். ''ஜெயிச்சு கவுன்சிலர் ஆகிட்டேன்னா அம்மா எனக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைக் குடுத்துருவாங்க!'' என்று பெருமை யடிக்கிறார் ஆணிமுத்து.
 ஈ.வி.கே.எஸ். கொடுத்த பூஸ்ட்!
காரைக்குடி நகராட்சித் தேர்தலில் தி.மு.க-விடம் காங்கிரஸை அடகுவைத்து விட்டதாக சொல்லி பிரச்னையைக் கிளப்பிய இளைஞர் காங்கிரஸ்காரர்கள், சிதம்பரம் கோஷ்டியை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருக்க வந்தார்கள். அப்போது, ''உண்ணாவிரதம் வேண்டாம். நீங்கள் ஊருக்குப் போங்கள் உங்களுக்கு கட்சியின் அங்கீகாரக் கடிதம் கொடுக்கப்படும்!'' என்று சொன்னாராம் தங்கபாலு. அப்போது இளைஞர் காங்கிரஸாருக்கு ஆதரவாக வந்து சமாதானம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ''இங்கே உண்ணாவிரதம் இருந்து எதுவும் ஆகப்போவதில்லை. நீங்கள் திட்டமிட்டபடி சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுங்கள். நான் வந்து உங்களுக்காக பிரசாரம் செய்கிறேன்!'' என்றாராம். இதனிடையே செல்வபெருந்தகை கோஷ்டியினரின் நெருக் கடியை சமாளிக்கமுடியாமல் உண்ணாவிரதத்தை கைவிட்டு காரைக்குடி திரும்பிய காங்கிரஸ் பார்ட்டிகள், வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கிவிட்டு அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் - வம்பு வளர்ப்பதற்கு!
 இலவசங்கள் என்னாச்சு அண்ணாச்சி?                   
அருப்புக்கோட்டை ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வான வைகைச் செல்வன், ''என்னை ஜெயிக்க வைத்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூவாயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை இலவசமாகத் தருவேன்!'' என்று வாக்குறுதியும் சில இடங்களில் டோக்கனும் கொடுத்திருந்தாராம். டோக்கன் சமாசாரத்தை அவர் மறந்துவிட்டாலும் மக்கள் மறக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டு கேட்டுவரும் அ.தி.மு.க-வினரிடம், ''இந்த டோக்கனுக்கு முதல்ல பதில் சொல்லுங்க...'' என்று ஏடாகூடமாய் கேள்வி கேட்கிறார்களாம். இதனை கையில் எடுத்திருக்கும் தி.மு.க-காரர்கள், 'உஷாரய்யா... உஷாரு’ என நோட்டீஸ் அடித்துக் கொடுக்கவே,  அ.தி.மு.க-வினருக்கும் தி.மு.க-வினருக்கும் மோதலாகி விஷயம் போலீஸ் வரை போயிருக்கிறது.
 ஆளும் கட்சி டி.வி. நிருபருக்கு ஆர்டர்!
தேர்தல் பிரசாரங்கள், தேர்தல் விதிமுறை மீறல்கள், வாக்குப் பதிவு உள்ளிட்ட விஷயங்கள் தேர்தல் கமிஷனால் வீடியோ எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட பி.ஆர்.ஓ-க்களிடம் இந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் பதற்றமான 200 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்து வது, வீடியோ எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒட்டுமொத்த ஆர்டரும் ஆளும் கட்சி டி.வி. நிருபருக்கு வழங்கப் பட்டுள்ளதாம். ''இந்த வேலையை ஆளும் கட்சி ஆட்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் கட்சியினர் அத்துமீறி நடப்பதை எப்படி படம் பிடிப்பார்கள்? அப்படியே படம் பிடித்தாலும் தங்கள் வசதிக்கு ஏற்ப திருத்தி விட்டால் என்ன செய்வது?'' என்று வழக்கமாக இந்த வேலைகளை செய்து கொடுக்கும் வீடியோகிராபர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
 வாய்க்கு ருசியான வாக்குறுதி
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குறுதி பட்டியல் சுவாரஸ்யமாகப் போகிறது. அருப்புக்கோட்டை அருகிலுள்ள பாலையம்பட்டி பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடும் தி.மு.க-வைச் சேர்ந்த திருமால், ''என்னை ஜெயிக்க வைத்தால் அனைத்து வீடுக ளுக்கும் மூன்று மாத கேபிள் கட்டணத்தை நானே செலுத்தி விடுகிறேன்!'' என்கிறார். அருப்புக்கோட்டை நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரான முகமது இஸ்மாயில் ''தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கிலோ ஆட்டுக்கறி வீதம் மூன்று நாட்களுக்கு இலவசமாகக் கொடுப்பேன்!'' என்று வாய்க்கு ருசியான வாக்குறுதியை கொடுத்து ஓட்டுக் கேட்டு வருகிறார்.
*********************************************************************************
கொங்கு பிட்ஸ்

உள்ளாட்சி கலாட்டா...
ஸ்டாலின் விட்ட டோஸ்! 
டந்த 10 ஆண்டுகளாக ஓசூர் நகராட்சியின் துணைத் தலைவராக இருந்த தி.மு.க-வின் மாதேஸ்வரன், உள்ளூர் உள்குத்துகளைத் தாண்டி நகராட்சித் தலைவர் பதவிக்கு ஸீட் வாங்கிவிட்டார். என்ன மாயமோ தெரியவில்லை... இதுவரை வேட்டி கிழியாத குறையாக அடித்துக்கொண்டு இருந்த அந்த ஊரின் உடன்பிறப்புகள் ஒன்று திரண்டு மாதேஸ்வரனுக்காகப் பிரசாரம் செய்து வருகிறார்கள். என்ன விசேஷம் என்று கேட்டால், ''எல்லாம் தளபதி விட்ட டோஸ்... 'இப்படி ஆளாளுக்கு தனிக் கோஷ்டி சேர்த்து ஆட்டம் போட்டதால்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் எதிர்க் கட்சியாகக்கூட உட்கார முடியாமப் போச்சு. நான் கைகாட்டுன வேட்பாளர்களை ஜெயிக்க வைக்கலைன்னா உங்க எல்லாருடைய பதவியும் காலி...’னு நேரில் கூப்பிட்டே கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். அதனாலதான் இந்த ஒற்றுமை. அதுவும் இல்லாம இங்கே மத்தக் கட்சியின் வேட்பாளருடன் ஒப்பிட்டால், எங்க வேட்பாளர்தான் சீனியர். கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் ஈஸியா ஜெயிச்சிடலாம். அதனால, வெற்றிக் கனியை பறிச்சு தளபதிகிட்ட ஒப்படைப்போம்...'' என்கிறார்கள்.
வேட்பாளர் மாதேஸ்வரனோ, 'கட்சிகளைத் தாண்டின மனுஷன் நான். கட்சியின் வண்ணங்களைப் பார்க்காதீர்... வேட்பாளரின் எண்ணங்களைப் பார்த்து ஓட்டுப் போடுங்க...’ என்று பிரசாரம் செய்து வருகிறார்!

'அம்மா’ கிஃப்ட்!
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய, அ.தி.மு.க. தலைமை பல விதிமுறைகளை  வகுத்து இருந்தது. அதில் ஒன்று, ஐந்து வருடங்களுக்கு மேல் கட்சி உறுப்பினராக இருந்து களப்பணி செய்திருக்க வேண்டும் என்பது. ஆனால், சேலம் மாநகராட்சி 17-வது வார்டு கவுன்சிலராக மணிகண்டன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் கட்சிக்கு வந்து ஏழே மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் எப்படி இந்த வாய்ப்பு என்று வாய் பிளக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
''சேலம் அ.தி.மு.க-வில் பலரும்  கடந்த ஐந்து வருடங்களாக வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தார்கள்.  சமீபத்தில்கூட, அம்மா மாதிரி ஒருத்தருக்கு சேலை கட்டிவிட்டு தி.மு.க-காரங்க கேவலமா நடந்தப்பகூட எங்க கட்சியினர் எந்த ரியாக்ஷனையும் காட்டலை. ஆனா, மணிகண்டன் கடந்த பிப்ரவரி மாதம்தான் கட்சிக்குள் வந்தார். எப்படி அரசியல் செய்தால் முன்னுக்கு வரலாம் என்பதை சரியாகக் கணித்த மணிகண்டன், வந்ததில் இருந்தே வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து அரசியல் செய்தார். பாரப்பட்டி சுரேஷ் தொடர்புடைய ஆறு பேர் கொலை வழக்கை கையில் எடுத்து பல உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்தார். இது அம்மா கவனத்துக்குச் சென்றதால்தான் இந்த வாய்ப்பு...'' என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
     'அம்மா’ பயம்!
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளரும்கூட. அந்த மாவட்ட அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் உச்சத்தில் இருக்கிறது. நமக்கேன் வம்பு என்று இதைக் கண்டும் காணாததுபோல் இருந்த அமைச்சரிடம் 'உட்கட்சிப் பிரச்னையால நம்ம கட்சி இங்கே தோற்றால் உங்க பதவிக்கு வேட்டு வெச்சுடுவாங்க அம்மா!’ என்று ரத்தத்தின் ரத்தங்கள் காதைக் கடிக்க... முனுசாமிக்கோ உதறலே வந்துவிட்டது. வார்டு கவுன்சிலர் கூப்பிட்டால்கூட பொறுப்பாக பிரசாரத்துக்குப் போகிறார் மனுஷர்!   
அட்டாக் ஆகாயத்தாமரை!
பாலிடிக்ஸ் பண்ணுவதற்கு இந்து மக்கள் கட்சிக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? கோவை மேயர் வேட்பாளர் பதவிக்கு தன் பங்குக்கு ராம்குமார் (எ) பொட்டு ராம்ஜி என்பவரை நிறுத்தி இருக்கிறது. தோள் வரை புரளும் தலைமுடி, நெற்றியில் பளீர் பொட்டுடன் தெலுங்குப் பட ஆசாமி போல நிற்கிறார் ராம்ஜி. ''உங்க தேர்தல் வாக்குறுதி என்ன பாஸ்?'' என்று கேட்டால், ''மாநகர்ல இருக்குற குளங்களை மூடியிருக்கிற ஆகாயத் தாமரைகளை அட்டாக் பண்ணி அழிப்பேன். அந்த ஆபரேஷனுக்கு பெயர் 'அட்டாக் ஆகாயத் தாமரை’. குளக்கரையில குப்பைக் கொட்டுறவங்க மேலே செம ஆக்ஷன் பாயும் வகையில சட்டம் கொண்டுவருவேன்!'' என்று விறைப்பாக தலைமுடி கோதுகிறார்!
 திட்டுனது மம்முட்டிதானா?
ஊட்டியில் உள்ளாட்சிப் பிரசாரத்தில் ஈடுபடும் அ.தி.மு.க-வினர் சிலர், 'நம்ம பிரசாரத்துக்கு ஒரு கிளாமர் அப்பீல் கொடுப்போமே!’ என்று ரகளையாக யோசிக்க... சட்டென்று மலையாள பட ஷூட்டிங்குக்காக ஊட்டி வந்திருக்கும் மம்முட்டியின் ஞாபகம் அவர்களுக்கு வந்தது. உடனே, அடித்துப்பிடித்து அவரது மொபைல் நம்பரை வாங்கி போன் போட்டு, 'எந்தானு மம்முட்டி சாரே, சுகந்தன்னே! இவிடெ உள்ளாட்சித் தேர்தல் எலெக்ஷன் பிஸியாயிட்டுப் போயி. ஒரு திவஸம் எங்களுக்கு வேண்டி பிரசாரம் செய்ய நிங்ஙளோட கால்ஷீட் கிட்டுமோ!’ என்று கெக்கேபிக்கே மலையாளத்தில் கேட்டுள்ளார்கள். எதிர்முனையில் இருந்த வந்த வசவுகள் தலைமுறைகள் தாண்டியதாம்! 'திட்டியது மம்முட்டிதானா இல்லை ராங் நம்பரா?’ என்று தலையை பிய்த்துக்கொள்கிறார்கள் கட்சியினர்!
*********************************************************************************
மிஸ்டர் கழுகு: திருச்சி ஜெயிக்கலேன்னா திரும்பி வரக்கூடாது!

கறார் ஜெ... கதறும் மந்திரிகள்
ழுகார் உள்ளே நுழைந்ததும் அவல் பொரி நீட்டினோம். ''நான்தான் பூஜையில் கலந்து கொண்டேனே... அப்புறம் என்ன?'' என்றார். ''இருந்தாலும் உமக்குப் பிடிக்குமே என்பதால் ரெண்டாவது ரவுண்ட்!'' என்று சொன்னதை ரசித்தபடி, ஒரு பிடி அள்ளி வாயில் போட்டார்.
 ''கார்டனில் கூட சரஸ்வதி பூஜையும் விஜயதசமிவைபவமும் விமரிசையாக நடந்தது. ஆனால், முதல்வர் முகத்தில்தான் லேசான வருத்த ரேகைகள்!'' என்று அவல் பொரியில் இருந்தே மேட்டரை ஆரம்பித்தார்!
''திருச்சி இடைத்தேர்தலை வைத்துதான் இந்த வருத்த ரேகைகளாம்! சில நாட்களுக்கு முன்பு, முதல்வரின் டேபிளில் தனியார் ஏஜென்சி எடுத்த சர்வே முடிவுகள், உளவுத் துறையினர் எடுத்த சர்வே விவரங்கள் எல்லாம் வைக்கப்பட்டதாம். இரண்டையும் ஆர்வமாகத் திருப்பி இருக்கிறார்.  பொதுவாகக் கிடைத்த ஒரு தகவல் -  திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் வேலை செய்யும் மந்திரிகள் பலரது நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்பதுதானாம். பெரும்படையாக அமைச்சர்களில் முக்கியமானவர்கள்  திருச்சியில் முகாம் போட்டிருக்கிறார்கள். 'வெள்ளை வேட்டி மடிப்பு கலையாமல் காரில் வலம் வருவது, ஒருசிலர் வாக்காளர்களின் கால்களில் விழுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதோடு சரி! மற்றபடி, தீவிரமாக இன்னும் பிரசாரத்தில் இறங்கவில்லை’ என்கிறதாம் அந்த அறிக்கை. இதைப் படித்ததும், முக்கிய  அமைச்சர்களை அழைத்து வறுத்தெடுத்தாராம் முதல்வர். 'நீங்கள் நுனிப்புல்தான் மேய்கிறீர்கள். இன்னும் ராஜதந்திரமாகச் செயல்படவே ஆரம்பிக்கவில்லை’ என்று கோபப்பட்டாராம். 'திருச்சித் தேர்தலில் ஜெயிக்கலேன்னா, நீங்க திரும்பி சென்னைக்கே வர வேண்டாம் என்று அம்மா சொல்லிட்டாங்க’ என்று மேல்மட்டத்தில் வலம் வருபவர்கள் ரகசியத்தை அவிழ்க்க... கேள்விப்பட்டு, மந்திரிகள் அனைவரும் கதற ஆரம்பித்து​விட்டனராம்!'' 
''ஏதோ சர்வே முடிவுகள் என்றீரே... அது என்ன?''
''கூட்டிக் கழித்துப்பார்த்தால், 'தேர்தல் கூட்டணிக் கணக்குப்படியும் நேர்மையாக வாக்குப்பதிவு நடந்தாலும், தி.மு.க. பக்கம் வெற்றிக்காற்று வீசலாம்’ என்கிறதாம் சர்வே. 'மாநிலத்தில் ஆளும் கட்சி. இங்கேயும் அதே கட்சி எம்.எல்.ஏ. இருந்தால், நன்றாக இருக்கும் என்கிற கோணத்தில் மக்கள் பார்த்தால் மட்டுமே அ.தி.மு.க-வுக்குச் சாதகம் ஆகலாம்’ என்கிறதாம் அந்த சர்வே. இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்கள், கடைசி நேரத்தில் செய்யப்போகும் பிரசார யுக்திக்கும் பலன் இருக்கும்.''
''இப்படி மையமாக ரிசல்ட் வந்தால், முதல்வருக்கு கோபம் வரத்தானே செய்யும்?''
''இடைத்தேர்தல் வியூகம் பற்றி முக்கியமான ஆலோசனைகள் நடப்பது, திருச்சியில் இருக்கும் ஒரு ஹோட்டலில். புது பஸ்ஸ்டாண்டுக்கு அருகில்தான் அது  உள்ளது. இந்த ஹோட்டலில்தான் ஓ.பன்னீர்ச்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர் மந்திரிகள் தங்கி இருக்கிறார்கள். இந்த ஹோட்டலின் உரிமையாளர், தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் நெருங்கிய உறவினர். அதாவது ஆளும் கட்சிக்கு எதிராக நிற்கும் வேட்பாளருக்கு உறவினர்.  காஞ்சனா ஹோட்டல் அபகரிப்பு புகாரில் நேருவுடன் அந்த ஹோட்டலின் உரிமையாளர் பெயரும் உண்டு. மு.க.ஸ்டாலின் எப்போது திருச்சி வந்தாலும் அந்த ஹோட்டலில் இருந்துதான் சாப்பாடு போகும். இப்படிப்பட்ட ஹோட்டலில் இவர்கள் தங்கலாமா என்று ஆளும்கட்சியினரே பொரும ஆரம்பித்துள்ளனர். அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலருக்குக்கூட இந்த ஹோட்டலில் இருந்து சாப்பாடு போவதாக உள்ளூர் கட்சிப் பிரமுகர்கள் பொருமுகிறார்கள். 'தி.மு.க-வின் நம்பிக்கையைப் பெற்ற ஹோட்டலில் அ.தி.மு.க-வின் சீனியர் அமைச்சர்கள் தங்கித் தேர்தல் ஆலோசனை நடத்து​வது எந்தவகையில் நியாயம்? விஷயம் லீக் ஆகாதா? திருச்சியில் வேறு ஹோட்டலே இல்லையா?' என்றும் வினா எழுப்புகிறார்கள்.'' 
''முக்கிய முடிவுகள் உடனுக்குடன் தி.மு.க-வுக்குப் போகும் என்று சந்தேகப்படுகிறார்களா?''
''அப்படித்தான் வைத்துக்கொள்ளும்! அ.தி.மு.க. அமைச்சர்களில் பலரும் ஜெயலலிதா பலமுறை சொல்லியும் இன்னும் காரை விட்டு இறங்கி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று ஓட்டு சேகரிப்​பதில் இறங்கவில்லையாம். காரில் இருந்தபடியே பூத் வாசலில் நிற்பவர்களிடம் சிறிது பேசிவிட்டு, விருட்டென்று கிளம்பி விடுகிறார்களாம். பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுப்பதை மட்டுமே வேலையாக செய்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, இது சம்பந்தமாகவும் சில அமைச்சர்களுக்கு டோஸ் விட்டதாகவும் சொல்கிறார்கள். 
'கடந்த தேர்தலில் நேரு தோற்றது சுமார் 7 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான். இதே தொகுதியில் அதற்கு முந்தைய முறை தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் நின்ற செந்தூரேஸ்வரன் வாங்கிய ஓட்டுகள் சுமார் 13 ஆயிரம். இந்தத் தேர்தலில் அந்த ஓட்டுகள் நமக்கு எப்படி விழும்? அதைக் கவர நாம் என்ன செய்துள்ளோம்? நமது விசுவாசிகளைக் கருவியாக வைத்து இந்த வாக்கு வங்கியை  இதுவரை ஏன்  உடைக்கவில்லை? அதேபோல், முஸ்லிம்கள் சுமார் 25 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில், நேரு மீது புகார் சொல்லும்  பிட் நோட்டீஸ்களை அதிகமாக விநியோகம் செய்தது முஸ்லிம்கள்தான். தேர்தல் நாளன்றும் வாக்காளர்களை ஓட்டுப்போட அழைத்துவந்ததும் இவர்கள்தான். இப்படி பம்பரமாக வேலை பார்த்த முஸ்லிம் அமைப்பினர், இந்த முறை நம் கூட்டணியில் இல்லை. அந்த 25 ஆயிரம் வாக்குகளைக் கவர என்ன உருப்படியான நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?’ என்றும் முதல்வர் கேட்டதாகச் சொல்கிறார்கள். அதோடு, இந்தத் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் கிறிஸ்துவர்களும் இருக்கிறார்களாம். இந்த சிறுபான்மையினர் ஓட்டுகளைக் கவரும் ஐடியா எதையும் இதுவரை எந்த அமைச்சரும் பேச முன்வராததும் ஜெயலலிதாவுக்கு எரிச்சலாம்...'' 
''ரொம்பக் கஷ்டம்தான்...''
''இதையும் கேளும்! உள்ளாட்சித் தேர்தலில் ஸீட் தரப்பட்டதில் அ.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரனுக்கும் தொகுதி எம்.பி-யான குமாருக்கும் பனிப்போர். மனோகரன் வீடுகூட மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, பரபரப்பானது. கட்சியின் சீனியரான பரஞ்சோதி ஜெயித்தால், முக்கிய பதவியில் அமர்வார் என்பதால், பரஞ்சோதியை பிடிக்காத கட்சிப் பிரமுகர்கள் பலரும் மெத்தனமாக வேலை செய்து வருவதும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 'இதைத் தெரிந்துகொண்டு அமைச்சர்கள் அதட்டி வேலை வாங்காதது ஏன்?’ என்றும் முதல்வர் வருந்தியதாகச் சொல்கிறார்கள்.
முதல்வர் கேட்ட இன்னொரு கேள்வி - 'தொகுதியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக ஓட்டுகள் உள்ளனவே... அவர்களின் ஓட்டு யாருக்குப் போகும்?' என்பதாம். வழக்கம்போலவே சரியான பதில் சொல்லமுடியவில்லையாம் அமைச்சர்களால்! பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் அமைப்பினர் இங்கே ரகசிய பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் பிரசாரத்தில் ஒரு செய்தியை லீக் செய்கிறார்களாம். 'அக்டோபர் 30 வரைக்கும் ஜான்பாண்டியனைச் செயல்பட விடாமல் போலீஸ் முடக்கி விட்டது’ என்பதுதான் அது. இப்படி ஒரு தகவலே பல அமைச்சர்களுக்குத் தெரியவில்லையாம். காங்கிரஸ் கட்சிக்கென்று சில ஆயிரம் ஓட்டுகள் இங்கே உள்ளன. யாருக்குப் போடுவது என்று இதுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை. தொகுதியில் உள்ள கோஷ்டிகளை வைத்து அந்த ஓட்டுகளை அ.தி.மு.க. பக்கம் கவரவும் எந்த நடவடிக்கையும் அமைச்சர்கள் எடுக்காததும் ஜெயலலிதாவுக்கு வருத்தமாம்.''
''தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேல் என்கிறார்களே? அவை யாருக்கு விழும்?''
''இதே கவலைதான் ஜெயலலிதாவுக்கு. அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு தரப்பிலும் முத்தரையர், ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் நிற்கிறார்கள். முக்குலத்தோரை ஒருங்கிணைக்கும் வகையில் சசிகலாவின் அண்ணி இளவரசியின் இரண்டாவது மருமகன் ராஜராஜனை பிரசாரத்தில் இறக்கியிருக்கிறார்கள். சிங்கப்பூரில் ஹோட்டல் பிசினஸ் நடத்திவருகிற இவர், இப்போது திருச்சியில் முகாம் அடித்துள்ளார். அமைச்சர்கள் தரும் பணத்தை வைத்து இவர்தான் தேர்தல் பணிக்குப் பிரித்துத் தருகிறாராம். தாடியுடன் வலம்வரும் இவரைச் சுற்றிலும் முக்குலத்தோர் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. இது மட்டும்தான் அ.தி.மு.க-வுக்கு நம்பிக்கை தருகிறது.''
''திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. பலம் எப்படி?''
''சிறைக்குள்  இருக்கும் நேருவை இங்கே மீண்டும் நிறுத்தியதற்கு பதிலாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரை நிறுத்த எதிர்க் கோஷ்டியினர் தயாரானார்கள். அதை மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை. இந்தத் தேர்தலில் நேரு ஒருவேளை ஜெயித்தால், அவரின் ஆதிக்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கொடிகட்டி பறக்கும் என்பதைக் கணித்து, அவரின் எதிர்க் கோஷ்டியினர் கொஞ்சம் அடக்கி வாசிப்பதும் தெரிகிறது. ஸ்டாலின் வருகை, கருணாநிதியின் பொதுக்கூட்டம், ஜெயலலிதாவின் பிரசாரம் இதை எல்லாம் வைத்து நிலைமை எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்!'' என்று மொத்தமும் இடைத்தேர்தல் தகவலாகவே கொட்டிவிட்டுப் பறந்தார் கழுகார்!
படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்

திடீரென நுழைந்த ரஜினி!
நீண்ட இடைவெளிக்குப் பின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ரஜினி. மகள் சௌந்தர்யாவின் மாமனார் ராம்குமார்-ஹேமா தம்பதியின் சஷ்டியப்தபூர்த்தி விழா சமீபத்தில் நடந்தது. சொந்தங்கள் அனைவரும் குழுமி இருக்க... திடீரென உள்ளே நுழைந்தார் ரஜினி. அனைவரும் பரபரப்புடன் எழ... எல்லோருக்கும் அருகில் சென்று, 'நல்லா இருக்கீங்களா?’ என்று உற்சாகத்துடன் கேட்டாராம். சிகிச்சையின் களைப்பு முழுசாக நீங்காமல், முகத்தில் மட்டும் லேசான மாற்றம் இருந்ததாம்.

அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி!
'தி.மு.க-வா? அ.தி.மு.க-வா?’ என்பதுதான் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் பரபரப்பு. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் சின்னக்கம்பாளையம் பேரூராட்சியில், இரண்டு கழகங்களும் கூட்டணி அமைத்து நாற்காலியைப் பிடித்துவிட்டன என்று குமுறுகிறார்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர்!
''15 வார்டுகள் உள்ள இந்தப் பேரூராட்சியில், அ.தி.மு.க-வுக்குத் தலைவர் பதவி - 8 வார்டுகள், தி.மு.க-வுக்கு துணைத் தலைவர் பதவி - 7 வார்டுகள் என இரு தரப்பும் உடன்பாடு செய்துகொண்டனர். மாற்று வேட்பாளர்களை வாபஸ் பெறவும் செய்துவிட்டனர். ஆனால், எங்கள் கட்சி முடியாது என சொல்லிவிட்டது. இந்த நிலையில், எங்கள் வேட்பாளர்களான சின்னகண்ணு, மகுடீஸ்வரி இருவரும் போட்டியில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு, அவர்களது கையெழுத்துகளையும் யாரோ மோசடியாகப் போட்டுள்ளனர். இதன் மூலம், அவர்களின் திட்டம் நிறைவேறிவிட்டது. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் இந்த செயல்பாட்டுக்கு அதிகாரிகளும் உடந்தை!'' என ஆவேசப்படும் தோழர்கள் - கலெக்டருக்கும், மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் புகார்களைத் தட்டிவிட்டுள்ளனர். அய்யர் என்ன செய்வாரோ?
*********************************************************************************
கழுகார் பதில்கள்

ஆர்.சுந்தரமூர்த்தி, விழுப்புரம்.
 'எனக்கு மறதி நோய் இருக்கிறது’ என்கிறாரே ப.சிதம்பரம்?
ஏற்கெனவே வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறதி உலகப் பிரசித்தம்! இப்போது உள்துறை அமைச்சருக்கும் மறதி நோய் என்றால்... இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
மத்திய அமைச்சர்கள் கபில்சிபலும் சல்மான் குர்ஷித்தும் என்ன பேசுகிறார்கள் என்றே யாருக்கும் தெரியவில்லை. போன வாரம் சொன்னதை இந்த வாரம் மறுத்துக் கொண்டு... எல்லாரையும் குழப்புகிறார்கள். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மொத்த கேபினெட்டுக்கும் ஏதாவது ஒரு முழுமையான ஹெல்த் செக் அப் செய்தால் நல்லது!
 வாசுதேவன், கும்பகோணம்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்  2,645 கோடி இழப்பு என்று மத்திய தொலைத் தொடர்புத்துறையின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்யும் தணிக்கைக் குழு அறிவித்துள்ளது.  1.76 லட்சம் கோடி என்று மத்திய தணிக்கைக் குழு ஏற்கெனவே சொன்னது தவறானதா?
எதுசரி, எது தவறு என்பதை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சொல்லட்டும். அதுவரைக்கும் காத்திருப்போம்!
ஆனால், 'முரசொலி'யில், ' 1.76 லட்சம் கோடி என்று முதலில் சொல்லிவிட்டு... இப்போது  2,645 கோடி என்று சொல்கிறார்களே' என்று சமீபத்தில் வந்த செய்தியைப் ( 29.9.11 _ பக்கம் 9) படித்தபோது எழுந்த அதிர்ச்சி இருக்கிறதே..! அதில்,
'இந்த சிறிய தொகையை மத்திய கணக்குத் தணிக்கைக் குழு  1.76 லட்சம் கோடி என்று உயர்த்தி தில்லுமுல்லு செய்துள்ளது’ என்கிறது முரசொலி.  2,645 கோடியைச் 'சிறிய தொகை’ என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் என்னமாக வளர்ந்திருக்கிறார்கள்!
 சுரேஷ்குமார், சிதம்பரம்.
பிரணாப் முகர்ஜியும் சிதம்பரமும் கட்டிப் பிடிக்காத குறையாக இணைந்து நின்று அளித்த பேட்டியை வைத்து 'சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு புகார் புஸ்வாணம் ஆகிவிட்டது’ என்று சொல்லலாமா?
பிரணாப், சிதம்பரம் ஆகியோர் இடையிலான மோதல் வேண்டுமானால் முடிந்திருக்கலாம். ஆனால், சுவாமியும் ஆ.ராசாவும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அப்படியேதான் இருக்கின்றன.
தங்கள் குடும்பத்துக்குள் ஒற்றுமை ஏற்பட்டதும், 'ஸ்பெக்ட்ரம் விவகாரம் இத்தோடு முடிந்துவிட்டது’ என்று டெல்லி சென்ற கருணாநிதி இரண்டு ஆண்டுக்கு முன்னால் சொன்னார். அப்புறம் என்ன ஆச்சு? அதேமாதிரி ஸ்டேட்மென்ட்தான் இதுவும்!
 அல்லிராஜ், கோவை-15.
சுதந்திர பாலஸ்தீனம் சாத்தியமா (அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி!)?
பாலஸ்தீனத்தின் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது பற்றி ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றி உள்ள பல தீர்மானங்களை மீறும் விதமாக உள்ளன, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய நடவடிக்கைகள். 'பாலஸ்தீனம் உருவாவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வேன்’ என்று கடந்த ஆண்டு உறுதி அளித்த ஒபாமா... இப்போது, 'வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுப்பேன்’ என்று பேசி இருப்பது அமெரிக்காவில் வரப் போகும் அதிபர் தேர்தலை மனதில் கொண்டுதான். கடுமையான பொருளாதார நெருக்கடியும் யூதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிதி மூலதனத்தின் தயவும்தான் இப்படி அவரைப் பேச வைத்துள்ளது. சுதந்திர பாலஸ்தீனம் சாத்தியம்தான். அமெரிக்காவின் எதிர்ப்பையும் சமாளிக்க இன்னும் கூடுதல் காலம் ஆகலாம்!
 என்.பாண்டித்துரை, திருவாடனை.
தமிழர்களைப் பிரிப்பது சாதியா? மதமா? அரசியலா?
கொள்கை மாறும்போது கட்சிகளை மாற்றிக் கொள்ளலாம். மனம் மாறும்போது மதங்களை மாற்றலாம். ஆனால், மாற்ற முடியாதது சாதி மட்டும்தான். தமிழர்களை பிரிப்பதிலும் சிதைப்பதிலும் முன்னால் நிற்பது சாதிகளே!
 முருகேசபூபதி, சிவகங்கை.
மரண தண்டனையை ஒழித்தால் குற்றங்கள் அதிகமாகி விடாதா?
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் கூட, 'மரண தண்டனையை ஒழிப்பதால் குற்றங்கள் அதிகமாகிவிடாது’ என்று சொல்கிறார். சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரையில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்...
'ஒரு காலத்தில் இங்கிலாந்தில் சிறு திருட்டு, பிக்பாக்கெட் குற்றங்களுக்கே மக்கள் கூட்டத்தின் முன் மரண தண்டனை விதிக்கப்பட்டன. பெரும் கூட்டத்தைத் திரட்டி, அவர்கள் கண் முன்னே அந்த மரண தண்டனை விதித்தால் அதை நேரில் பார்த்தவர்கள் திருந்துவார்கள் என்று நினைத்தார்கள். அப்படி ஒரு முறை தூக்கிலிட்ட சம்பவம் நடந்தபோது, கூட்டத்தினர் தூக்கு சம்பவத்தை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் 63 பேரிடம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதாக காவல் துறைக்கு புகார்கள் வந்தன’ என்கிறார் நீதிபதி.
மனித உரிமையாளர்கள் எதிர்ப்பது மரண தண்டனை​யைத்தான். மற்ற தண்டனைகளை அல்ல. 'குற்றவாளிகள் அனைவரையும் வெளியே திறந்துவிடுங்கள்’ என்று யாரும் சொல்லவில்லை!
 ஜெகன்.மோ, ராசிபுரம்.
நரேந்திர மோடி - ராகுல் மோதல்தான் அடுத்த மோதல் ஜோடியா? நிலைமை யாருக்குச் சாதகமாக உள்ளது?
பிரதமர் பதவியில் ஆர்வம் கூடிவிட்ட நரேந்திர மோடியைத் தடுக்கும் சக்திகள் பி.ஜே.பி-யிலேயே அதிகம் இருக்கின்றன. அந்தப் பதவியில் அதிக ஆர்வம் காட்டாத ராகுலைக் கொண்டுவரவோ, காங்கிரஸ் சக்திகள் துடிக்கின்றன. தான் மருத்துவமனையில் இருக்கும்போது கட்சியைக் கவனித்துக் கொள்ள ராகுல் தலைமையில் நால்வர் குழுவை சோனியா நியமித்தார். அந்தக் குழு ஒரு முறை கூட சந்தித்துக் கொள்ளவில்லையாம்.
எனவே, நரேந்திரமோடி_ ராகுல் மோதல் வருமா என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது!
 எம்.ஜெகன்ஜி, சென்னை-110.
ஆற்காடு வீராசாமி என்ன பண்ணுகிறார்?
அவரை ஞாபகம் வைத்துக் கேட்பதற்கு நீங்கள் ஒருவராவது இருக்கிறீர்களே? சமீபத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். முப்பெரும் விழா மேடையிலும் இருந்தார். மற்றபடி அதிகமாக வெளிவரத்து இல்லை. இப்போதைக்கு உம்மைப் போல அவரும் ஓர் அரசியல் பார்வையாளர் மட்டுமே. 45 ஆண்டுகால ஆக்டிவ் பாலிடிக்ஸை இப்படி அமைதி ஆக்கியது உடல் நிலை மட்டுமல்ல... உள்கட்சி உதாசீனமும்தான்!
*********************************************************************************
ஏழைத் தொழிலாளிகள் என்றால் இளக்காரமா?


கோவை, திருப்பூர், மாவட்டங் களைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளர்கள், கூலி உயர்வுக்காகக் கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். இதனால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சோமனூர், சூலூர், பல்லடம், அவிநாசி, தெக்கலூர் போன்ற பல இடங்களில் தொழிலாளிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அனைத்து வியாபாரிகளும் கடை அடைப்புப் போராட்டங்கள் நடத்தினார்கள். பத்திரிகைகள் ஆதரவாக எழுதுகின்றன.  ஆனால், இதுவரை அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. 'வாங்கும் கூலி வயிற்றுக்கே போதவில்லை’ என்றுதான் அவர்கள் தெருவுக்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு நியாயமாக வழங்கவேண்டிய கூலியைக் கொடுக்க, உரிமையாளர்களுக்கு ஏனோ இன்னமும் மனம் வரவில்லை.
எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அவ்வப்போது சம்பள உயர்வு பெற்றுக் கொள்கிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் சம்பள உயர்வுடன் அகவிலைப்படி உயர்வு பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், இரவு பகல் பாராது உழைத்து வாழும் இந்த மக்களுக்கு நியாயம் பெற்றுத்தர மட்டும் இதுவரை அரசு ஆக்கபூர்வமாகச் செயலாற்றவில்லை.
போராட்டம் நடத்துவது ஏழைத் தொழிலாளர்கள் என்பதால் தானே அரசு இன்னமும் தூக்கத்தில் இருக்கிறது! இனியாவது அந்தத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும்!
டி.எஸ்.ரகுநாதன், கோவை.
*********************************************************************************
சுவாமி சொல்லும் 2ஜி மர்மங்கள்!

'2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்' என்று விடாப்பிடியாகப் போர்க் குரல் கொடுத்துவரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரணியன் சுவாமி, சென்னையில் முகாமிட்டிருந்தார்.
அவரை சந்தித்தபோது, ''2008-ம் வருடம் ஏப்ரல் 21-ம் தேதியன்று, நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், 'நாம் இருவரும் விலை நிர்ணயம் தொடர்பாக ஆய்வு நடத்தி சில முடிவுகளை எடுத்துவிட்டுப் பிறகு அதை பிரதமரிடம் சமர்ப்பிக்கலாம்' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதையே, பிரதமரும் கூட ஒரு பிரஸ் மீட்டில், 'இரண்டு அமைச்சர்களும் கூட்டாக வந்து சொன்னார்கள்’ என்று பேசி இருக்கிறார். அப்படியென்றால், இருவரும் கூட்டாக உட்கார்ந்து பேசித்தான் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரே குற்றத்தை செய்த இருவரில் ஆ.ராசா ஜெயிலில் இருக்க... ப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி? இவரையும் சி.பி.ஐ. விசாரித்தால் கண்டிப்பாகப் பல உண்மைகள் வெளிவரும்...'' என்றவரிடம்,
''சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஃபைலில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் என்று புகார் கிளம்பி யுள்ளதே?''
''அதற்கு முழுப் பொறுப்பையும் சிதம்பரம் சார்ந்த துறையினர்தான் ஏற்க வேண்டும். ஏதோ சந்தேகத் தின் பேரில் நீதிமன்றம் அந்த ஃபைல்களைக் கேட்டு வாங்கிப் பார்த்தபோது, சில பக்கங்கள் மிஸ்ஸிங். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் விலை நிர்ணயம் தொடர்பாக நான்கு முறை மீட்டிங் நடத்தி இருக்கிறார்கள். அந்த மீட்டிங்குகளின் பேச்சுகள் அனைத்தும் மினிட்ஸ் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மூன்று மீட்டிங்கின் விவரங்கள் மாயமாக மறைந்துவிட்டன. ஒரே ஒரு மீட்டிங் தொடர்பான மினிட்ஸ் மட்டும் எனக்குக் கிடைத்தது. அதைத்தான் கோர்ட்டில் நான் சமர்ப்பித்து இருக்கிறேன். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் கூட்டாக விலை நிர்ணயம் செய்தார்கள் என்பதை உறுதி செய்யும் முக்கிய ஆவணம் அது!''
''நிதித் துறையின் துணை செயலாளர் ராவ், 'ஸ்பெக்ட்ரம் ஊழலை சிதம்பரம் நினைத்திருந்தால், அப்போதே தடுத்திருக் கலாம்' என்று எழுதியிருக்கிறாரே? நிதித் துறை அமைச்சர் பிரணாப்புக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லையா?''
''ராவ் பெயரில் வெளியான ஆதாரத்தைக் குறிப்பு, கருத்து, கடிதம், ஆவணம் என்றெல்லாம் குறிப்பிடக் கூடாது. அது, பக்காவான ஆபீஸ் மெமோரண்டம். பிரதமர் செயலர், கேபினெட் செயலர், தொலைத் தொடர்புத் துறை செயலர், நிதி செயலர் என்று பலரும் உட்கார்ந்து தயார் செய்து, கீழ் நிலை அதிகாரியான ராவ் பெயரில் அப்படிப் பதிவாகி இருக்கிறது. இப்படித்தான் அரசு ஃபைல்களில் வழக்க மாகப் பதிவாகும். அதுதான் இந்த விவகாரத்திலும் நடந்திருக்கிறது. பிரணாப் முகர்ஜி தரப்பில்கூட, 'அந்தக் கருத்து என்னுடையது அல்ல. ஆனால், ஆதாரங்கள் என்னுடையது' என்றுதான் சொல்லப்படுகிறது. சிதம்பரம் தடுத்திருக்கலாம் என்பது பல துறைத் தலைவர்களின் கருத்து, அது ராவின் தனிப்பட்ட கருத்து அல்ல.''
''சிதம்பரம் விவகாரத்தில் நீங்கள் மிகவும் தீவிரமாக இருப்பதற்குக் குறிப்பிட்ட, தனிப்பட்ட காரணங்கள் ஏதாவது உண்டா?''
''இதில் என்ன தனிப்பட்ட காரணம் இருந்துவிட முடியும்? ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா குற்றவாளி என்றால், சிதம்பரமும் குற்றவாளி என்கிறேன் நான். உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நான் ஒரு மணி நேரம் வாதம் பண்ணினேன். ஆனால், சிதம்பரம் தரப்பில் 16 மணி நேரம் வாதம் செய்து, மேலும் அவகாசம் கேட் டார்கள். அக்டோபர் 10-ம் தேதியுடன் வாதத்தை முடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். அடுத்து, நான் பதில் கொடுப்பேன். எனக்கு அப்போதும் அரை மணி நேரம் போதும். இதேபோல், பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சக குற்றவாளியாக ப.சிதம்பரத்தைச் சேர்க்கச் சொல்லி நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்ற வழக்கு முடிவைப் பொறுத்து, இந்த வழக்கு விசாரணை நடக்கும்.
இது தவிர, இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். 'பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கும்,  சீன ராணுவத்திடம் இருந்து தளவாடங்களை வாங்கும் பிசினஸில் ஈடுபட் டுள்ள இன்னொரு கம்பெனிக்கும்  லைசென்ஸ் தரக் கூடாது’ என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஒரு கடிதத்தை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அனுப்பியிருக்கிறார். ஆ.ராசாவிடமும் இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், இவர்கள் கேட்கவில்லை. இதையும் நான் அடித்துச் சொல்கிறேன். இது தேசத்துரோகம் அல்லவா!''
''ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தைத் தொடர்ந்து வேறு யார் சிக்குவார்கள்?''
''சோனியாவின் மருமகன் வதேரா சிக்கலாம்! அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் நான் தீவிரமாக இருப்பதால், சோனியா பொய் வழக்குகளை என் மீது ஏவப் பார்க்கிறார். கடந்த ஜூலையில் நான் ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரை, மத மோதலைத் தூண்டிவிடும் வகையில் இருப்பதாக டெல்லியில் இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொறுத்திருந்து பாருங்கள்! இந்த பொய் வழக்குகளை நான் தவிடு பொடி ஆக்குவேன்!''
ஆர்.பி.
************************************************************************
பரஞ்சோதிக்காக 17 அமைச்சர்கள்.. நேருவுக்காக 'எக்ஸ்பர்ட்' டீம்

திருச்சி செம ஹாட் மச்சி!
திருச்சி மேற்குத் தொகுதியில் அனல் பறக்கிறது.  தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு தரப்பிலும் சீனியர்கள் வந்து குவிந்திருப்பதால் எங்கு பார்த்தாலும், முன்னாள் அமைச்சரோ, இந்நாள் அமைச்சரோ... 'அன்பான வாக்காளப் பெருமக்களே’ என்று வாசலுக்கு வந்து நிற்கிறார்கள். தேர்தல் புண்ணியத்தில் தீபாவளி வருவதற்கு முன்னரே பண்டிகைக்கான கொண்டாட்டம் மக்கள் முகத்தில் இருந்தாலும் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிப்பதுதான் பரிதாபம்.
'தேர்தலில் நின்றால் ஜாமீனில் வெளியே வந்து விடலாம்’ என்று தலைமையிடம் வற்புறுத்தித்தான் ஸீட் பெற்றார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்று 'விட்டேனா பார்’ என்று அடுத்தடுத்து அவர் மீது வழக்குகளை பாய்ச்சி வருகிறார்கள் ஆட்சியாளர்கள்.
ஏற்கெனவே நேரு மீது 'கலைஞர் அறிவாலயம்’ நில அபகரிப்பு வழக்கு, ஈரோட்டைச் சேர்ந்தகருணாநிதி கொடுத்த நில அபகரிப்பு வழக்கு, காஞ்சனா ஹோட்டல் அபகரிப்பு வழக்கு, கல்லூரிக்காக ஏரி நிலத்தை ஆக்கிரமித்த வழக்கு போன்றவை இருக்கிறது. அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர்,  'தங்களது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பங்கு கேட்டு மிரட்டினார்; திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தினார்’ என்று கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த லேரோஸ் முராய்ஸ் என்பவர் கொடுத்த வழக்கு புதிதாய் முளைத்திருக்கிறது. இந்நிலையில், அக்டோபர் 4-ம் தேதி கலைஞர் அறிவாலயம் வழக்கு மற்றும் ஈரோடு கருணாநிதி வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் நேருவுக்கு ஜாமீன் வழங்கியது. மற்ற வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தால்கூட, அடுத்தடுத்து வழக்குகள் பாய்ச்சப்படும் என்பதே நிதர்சனம்.
தி.மு.க. நிர்வாகிகள் பம்பரமாக சுழன்றுதான் தேர்தல் வேலை செய்கிறார்கள். நேருவின் எதிர் கோஷ்டிகளாக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வராஜ், திருச்சி சிவா ஆகியோரும் நேருவுக்காக  வாக்குக் கேட்டு அலைகிறார்கள்.  'தேர்தல் எக்ஸ்பர்ட்’ என்று ஸ்டாலினால் சொல்லப்படும்  எ.வ.வேலு தலைமையிலான 10 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு, வீக் பாயின்ட்டைக் கண்டு பிடித்து, அங்கு களப்பணியில் ஆட்களை இறக்கி விடுகிறது.  நேரு சிறையில் இருப்பது போன்ற கிராபிக்ஸ் செய்யப்பட்ட படத்தை அச்சடித்து வீடு வீடாகக் கொடுத்து பரிதாபம் தேட நினைக்கிறார்கள். அதுவும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. 'நேரு வெளியில் வராவிட்டால்கூட பரவாயில்லை. ஜெயித்தால் சிறையில் இருந்தே வென்றார் என்று பெயர் தட்டலாம். தோற்றால் சிறையில் இருந்ததால் தோற்றார் என்று சொல்லலாம்’ என்பதாகவே தி.மு.க-வினர் மன ஓட்டம் இருக்கிறது.
அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதிக்காக 17 அமைச்சர்கள் கொண்ட பெரிய படையே தொகுதியில் வேலை செய்கிறது. இந்தப் படைக்கு தலைமை ஓ.பன்னீர்செல்வம். 21 வார்டுகளைக்கொண்ட தொகுதியில், வார்டுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 'இந்த தேர்தலில் தோல்வியுற்றால் அதைவிட பெரிய அவமானம் எதுவும் இல்லை. அம்மாவும் சும்மா விட மாட்டார்’ என்பதால், அசுரத்தனமாக வேலை செய்கிறார்கள். அமைச்சர்கள் கோகுல இந்திரா, உதயகுமார் ஆகியோரின் பிரசாரம்தான் மக்களை பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் உரிமையாக நுழைந்து குசலம் விசாரித்து கோகுல இந்திரா நடத்தும் திண்ணை பிரசாரம் பெண்கள் மத்தியில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகிறது.ஜெயலலிதா ஆட்சியின் சாதனை களை புத்தகமாகவே அடித்து பிரசாரம் செய்கிறார் உதய குமார். தளபதிகள் தொகுதிகளைக் கலக் குவது போதாது என்று தலைமைகளும் தொகுதிப் பக்கம் விரை வில் வர இருக்கிறார்கள். அக்டோபர் 9-ம் தேதி திருச்சிக்கு வருகிறார், ஜெயலலிதா. 'அவர் பேசிவிட்டுப் போனதும் பதிலடி கொடுக்கலாம்’ என்ற நினைப்பில் அதற்கு அடுத்த நாள் புத்தூர் நால் ரோட்டில் கருணாநிதி பேசுகிறார்.
ஆக, இடைத் தேர்தல் செம சூடு மச்சி!
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
 ''மேலிடத்து உத்தரவு?''
இடைத் தேர்தல் பணிக்காக திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் செல்வகணபதி அறைகளில் நடத்தப்பட்ட ரெய்டு ஏரியாவில் பரபர டாக்! அக்டோபர் 5-ம் தேதி காலையில், திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் அதிகாரியான ஆர்.டி.ஓ. சம்பத் தலைமையிலான படை இந்த சோதனையை நடத்தியது. சோதனையில் பணமோ, பொருட்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை!
ரெய்டு பற்றி எ.வ.வேலு, ''காலை 6.50-க்கு நான் தங்கி இருந்த அறைக்கதவு படபடவென்று தட்டப்பட்டது. என்னவோ ஏதோன்னு திறந்து பார்த்தேன். 10-க்கும் மேற்பட்டவர்கள் என் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்தார்கள். பாத்ரூம் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்கள். பக்கத்து அறையில் தங்கி இருந்த செல்வகணபதியின் அறையிலும் அதே போன்று சோதனை. எங்களது காரையும் விட்டு வைக்கவில்லை. 'ஏன் இந்த சோதனை?’ என்று கேட்டதற்கு மேலிடத்து உத்தரவு என்று சொன்னார்கள். இதே இடைத் தேர்தல் பணிக்காக அ.தி.மு.க. அமைச்சர்கள் 20 பேர் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் எல்லாம் சோதனை நடத்தியதாக தகவல் இல்லையே? நடப்பதைப் பார்த்தால் தேர்தல் பணிகள் நடுநிலையாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை'' என்று படபடத்தார்.
ஆர்.டி.ஓ. சம்பத் இதற்கு என்ன பதில் சொல்கிறார்? ''இன்று காலையில் எனது மொபைல் போனுக்கு, ' சங்கம் ஹோட்டல் அறை எண் 207 மற்றும் 208-ல் லட்சக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது’ என்று தகவல் வந்தது. அந்த அறையில் யார் தங்கி இருக்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. அங்கு சென்ற பின்னரே அந்த அறைகளில் எ.வ.வேலுவும், செல்வகணபதியும் தங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை'' என்று விளக்கம் சொன்னார்.                                                                     
*********************************************************************************
''செய்த தப்பை திருத்திக்க திருச்சிக்கு மட்டும் வாய்ப்பு!''

மேற்கில் முறுக்கும் குஷ்பு!
டந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் 'ஸ்டார் அட்ராக்ஷன்’ இருவர்தான். ஒருவர் வடிவேலு; இன்னொருவர் குஷ்பு. தேர்தல் தோல்வியை அடுத்து நடை பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களால், 'அந்தக் கடையை அப்பவே மூடிட்டேனே’ என்று வடிவேலு ஷட்டரை குளோஸ் பண்ண... தீவிரப் பிரசார பீரங்கியாக மீண்டும் முழங்க வந்துவிட்டார் குஷ்பு. திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேருவுக்கு ஆதரவாகத் தொகுதி முழுக்கக் கடந்த 5-ம் தேதியில் இருந்து ரவுண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டார்.
மாலை 5 மணிக்கு பஞ்சப்பூரில் இருந்து குஷ்பு பிரசாரத்தை ஆரம்பிக்க, 'குஷ்பு வர்றாங்கடோய்’ என்று கூட்டம் எகிறி அடிக்க ஆரம்பித்தது.
'' 'சின்னதம்பி’ திரைப்படம் மூலம் உங்களை சிந்திக்க வைத்தவர். 'மன்னன்’ திரைப்படம் மூலம் உங்கள் மனம் கவர்ந்தவர். கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளர் குஷ்பு உங்கள் மத்தியில் உரையாற்றப் போகிறார். அக்கா, குஷ்பு வர்றாங்கக்கா... அண்ணே, குஷ்பு வர்றாங்கண்ணே...'' என்று ஒருவர் 'மைக்’கில் கட்டியம் கூறியவாறு செல்ல... கூடி இருக்கும் மக்கள் மத்தியில் பேசத் தொடங்குகிறார் குஷ்பு. 'பளிச்’ சிரிப்போடு நிதானமாக இருக்கிறது அவரது பேச்சு.
''அனைவருக்கும் வணக்கம். அஞ்சு மாசத்துலேயே திரும்பவும் உங்களை சந்திக்க வாய்ப்பு வரும்னு நான் எதிர்பார்க்கலை. உண்மையில் துயரத்துடன்தான் உங்களை நான் சந்திக்கிறேன். தொகுதி எம்.எல்.ஏ-வா இருந்த அண்ணன்(!) மரியம்பிச்சை இறந்ததுக்கு அப்புறம் நடக்குற எலெக்ஷன்ல உங்களை சந்திக்கி றேன். அவர் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவரா இருந் தாலும், அவரது இறப்புக்காகக் கட்டாயம் இரங்கல் சொல்லணும்...'' என்று முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கிறார்.
''தேர்தல் ரிசல்ட் வந்த உடனே, 'தமிழ்நாட்டு மக்கள் என்ன தப்பு செஞ்சிருக்காங்கன்னு இந்த அஞ்சு வருஷத்துல புரிஞ்சுக்குவாங்க’ன்னு நான் சொன்னேன். அஞ்சு வருஷம் இல்ல... அஞ்சு மாசத்துலேயே புரிஞ்சுக்கிட்டாங்க. தப்பு செஞ்ச துக்கு அப்புறம் அதை திருத்திக்கிறதுதான் புத்திசாலித்தனம். நான் சினிமாவுக்கு புதுசா வரும்போது நிறையத் தப்புகள் செஞ்சேன். தமிழ் தெரியாது. தமிழ்நாட்டுக்கு ஏத்தமாதிரி எப்படி டிரெஸ் போட்டுக்கணும்னு தெரியாது. எனக்கு ஒவ்வொண்ணா சொல்லி, கத்துக்கொடுத்தாங்க. அதுபோல தமிழக வாக்காளர்கள் கடந்த தேர்தலில் ஒரு தப்பு செஞ்சுட்டாங்க. அந்தத் தப்பைத் திருத்திக்கிறதுக்கு திருச்சி மக்களுக்கு மட்டும்தான் ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.
ஜெயலலிதா அம்மா ஜெயிக்கிறதுக்கு முன்னாடி நிறைய விஷயங்கள் சொல்லி இருந் தாங்க. கரன்ட் கட்டால தமிழகம் இருட்டுல தவிக்கு துன்னு சொன்னாங்க. தி.மு.க. ஆட்சியில ஒரு மணி நேரம்தான் கரன்ட் கட். ஆனா, இப்போ? சொல்றது மூணு மணி நேரம். சொல்லாம ஐந்து மணி நேரம். எல்லாமே உங்களுக்குத் தெரியும்...'' என்றதும் கரன்ட் கட்டால் அவஸ்தைப்படும் மக்கள் கைதட்டி வரவேற்பு கொடுக்கிறார்கள்.
''இந்த அஞ்சு மாசத்துல நாம எவ்வளவு இழந் திருக்கோம். நான் ஒவ்வொண்ணா சொல்றேன். பூண்டு, புளி, பருப்பு, காய்ஞ்ச மிளகா எல்லாமே 40 ரூபா, 50 ரூபான்னு விலை ஏறி இருக்கு. அஞ்சு மாசத்துலேயே இவ்வளவு விலை ஏற்றம்னா... அஞ்சு வருஷத்துல என்ன ஆகும்?
பெரிய திட்டங்கள் எதையும் கொண்டு வரல. ஒரே ஒரு மாற்றம்தான் கொண்டு வந்திருக்காங்க. தலைவர் கலைஞர் ஆட்சியில கட்டின புதிய தலைமைச் செயலகத்துக்குப் போக மாட்டேன்னு, பழைய கோட்டைக்கே போயிருக்காங்க. இதனால மக்களோட வரிப்பணம் எத்தனை கோடி நஷ்டம்?
தினம் பேப்பரைப் பார்த்தா முன்னாள் அமைச்சர் கைது, இந்த எம்.எல்.ஏ. கைது, அந்த எம்.பி. கைதுன்னு செய்தி வருது. இந்த சாதனை தவிர வேறு எந்த சாதனையும் அ.தி.மு.க. ஆட்சியில செய்யலை. தி.மு.க. ஆட்சியில சட்டம் ஒழுங்கு இல்லை. நான் ஆட்சிக்கு வந்த உடனே எல்லாம் சரியாகும்னு சொன்னாங்க. பதவி ஏத்ததும், செயின் திருடர்களும் கொள்ளைக்காரங்களும் ஆந்திரா ஓடிட்டாங்கன்னு சொன்னாங்க. ஆனா, இந்த அஞ்சு மாசத்துல எத்தனை வீட்டுல கொள்ளை, எத்தனை கொலை நடந்திருக்குதுன்னு உங்களுக்கே தெரியும். விசாரணைக்கு கூட்டிட்டுப் போனவங்கள்ல எட்டு பேர் இறந்து போயிட்டாங்க. எம்.எல்.ஏ. வீட்டுலேயே கொள்ளை நடக்குது. அதைக்கூட கண்டுபிடிக்கலை.
தமிழ்நாட்டுல மீண்டும் தி.மு.க. ஆட்சி நிச்சயம் வரும். இப்போதைக்கு திருச்சி மேற்குத் தொகுதியில போட்டியிடுற கே.என்.நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட்டு அவரை சட்டசபைக்கு அனுப்பி வையுங்க. உங்களோட எல்லாக் குறைகளையும் அவர்கிட்ட சொல்லுங்க. சட்டசபையில உங்களுக்காக அவர் பேசுவார். ஜெயிச்சதுக்கு அப்புறமா மீண்டும் உங்களை சந்திக்கிறேன். நன்றி!'' என்று குஷ்பு பேசி முடிக்க... 'அக்கா... அக்கா...’ என்று பிரசார வேனை சூழ்ந்து கொள்கிறார்கள் பெண்கள். அவர்களுக்குப் புன்னகையுடன் கையசைத்துவிட்டு, நகர்கிறார்.
''உங்கள் சகோதரி, திராவிட இயக்கத்தின் பிரசார பீரங்கி குஷ்புவின் வேண்டுகோளை நிராகரித்து விடாதீர்கள்...'' என்று மைக் செட் அலற... அடுத்த ஸ்பாட்டை நோக்கி நகர்கிறது வேன். 'அப்படின்னா வடிவேலு வரமாட்டாரா?’ என்றபடி நகர்கிறது கூட்டம்.
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************
சஞ்சீவ் பட் சொல்வது உண்மையா?

''நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றார் முதல்வர்!''
குஜராத் மாநிலத்தில் கொலை பயத்தோடு இருப்பவர் சாதாரண மனிதர் அல்ல; ஒரு போலீஸ் அதிகாரி! 
இந்தக் கதையைப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு ப்ளாஷ்பேக்..!
குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கடந்த 2002-ம் ஆண்டு தீ வைக்கப்பட்டது. இதற்கு மத தீவிரவாத அமைப்புகள்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது. ''அவள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். நான் கத்தியை எடுத்து அவள் வயிற்றைக் குத்திக் கிழித்தேன். என் கையை உள்ளேவிட்டு சிசுவை வெளியே எடுத்து, அதன் கால்களைப் பிடித்து தரையில் ஒரே அடி போட்டேன். செத்துப் போனது. அவளும் செத்துப் போனாள்!'' என்று அந்த வன்முறையில் ஈடுபட்ட அடியாள் ஒருவன் பெருமையாக 'தெஹல்கா’ இதழுக்கு அளித்த பேட்டியே அந்த கோர தாண்டவத்தின் அதிர்ச்சி சாம்பிள்!
அந்த ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பிப்ரவரி 27, 2002-ல் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் காவல் துறையின் அனைத்து உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ''முஸ்லிம்களுக்கு எதிரான தங்களின் கோபத்தை இந்துக்கள் தீர்த்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு பாடத்தைக் கற்பிக்கட்டும்...'' என்று சொல்லி போலீஸாரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன. அப்போது மாநில உளவுப் பிரிவில் துணை ஆணையராக இருந்தார் சஞ்சீவ் பட்!
அவர்தான் இப்போது உயிர்பயத்துடன் இருக்கிறார்.
அகமதாபாத்காரர் இந்த சஞ்சீவ் பட். ஐ.ஐ.டி-யில் படித்து, ஐ.பி.எஸ். பணிக்கு நேரடியாகத் தேர்வு பெற்றவர். 1988-வது பேட்ச் ஐ.பி.எஸ். ஆன இவருக்கு இப்போது வயது 47. வேலைக்குச் சேர்ந்த காலத்தில் இருந்தே இவரின் பணி வரைபடம் சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கிறது.
1990-ல் ஜாம்நகரில் இவர் வேலையில் சேர்ந்தபோது, ஜம்ஜோத்பூர் என்ற இடத்தில் ஏற்பட்டவன்முறையைக் கட்டுப்படுத்த அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சில விவசாயிகளை இவர் அடிக்க, அதில் ஒருவர் மரணமடைந்தார். அந்த வழக்கு  நிலுவையில் இருக்கிறது. 1996-ல் ராஜஸ்தான் வழக்கறிஞர் ஒருவரை போதைப் பொருள் கடத்தலில் சிக்கவைக்க முயற்சித்ததாகவும் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. 2002-ல் நரேந்திர மோடியின் 'கௌரவ் யாத்ரா’ தொடர்பாக சில ரகசியங்களைக் கசியவிட்டு தன் உயர் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டி நின்றதாகவும், படிநிலை விசாரணைகள் முடிந்து இரண்டு மாதங்கள் சபர்மதி சிறையில் வைக்கப்பட்டார். சில காலத்துக்குப் பிறகு அதே சிறைக்கு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அப்போது, தங்கள் கைகளையும், தலையையும் சுவரில் மோதச் செய்து கைதிகள் போராடினார்கள். 'சஞ்சீவ் பட் இந்தச் சிறையில் இருந்து மாற்றப்பட வேண்டும்’ என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். கைதிகள் சிலர் தற்கொலைக்கும் முயன்றார்கள். அந்த அளவுக்கு சஞ்சீவ் பட், டார்ச்சர் செய்ததாக புகார்கள் கிளம்பின.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் சஞ்வீவ் பட் ஒரு மனு தாக்கல் செய்தார். 'குஜராத் கலவரத்தின்போது போலீஸாரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மோடி உத்தரவிட்டார்’ என்று கூறினார் சஞ்சீவ் பட். இத்தனை வருடங்கள் கழித்து இப்போது ஏன் மோடியின் மீது குற்றம் சுமத்துகிறார் என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் இந்த வழக்கில் முதல் முக்கியமான நேரடி சாட்சி இவர் மட்டுமே.
சில நாட்களுக்கு முன்னர் திடீரென இவருக்குக் கீழ் பணியாற்றிய கே.டி.பந்த் என்ற கான்ஸ்டபிள், 'குஜராத் கலவரத்தின்போது மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் நானும் இருந்தேன் என்று இந்த மனுவில் கையெழுத்திடு என்று சஞ்சீவ் பட் தன்னைக் கட்டாயப்படுத்தினார்...’ என்று போலீஸில் புகார் அளித்தார். இவராக புகார் கொடுத்தாரா அல்லது கொடுக்க வைக்கப்பட்டாரா என்பதுதான் புதிர்.
அந்தப் புகாரின் அடிப்படையில்தான் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார் சஞ்சீவ் பட். இதைத் தொடர்ந்து சஞ்சீவ் பட்டின் வீட்டில் போலீஸாரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அகமதாபாத் மாஜிஸ்திரேட், அவரை போலீஸ் காவலில் வைக்க அனுமதி மறுத்தார். அதை எதிர்த்து குஜராத் மாநில அரசு, அகமதாபாத் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய, அக்டோபர் 7-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டது நீதிமன்றம். இப்போது சஞ்சீவுக்கு ஆதரவாக குஜராத் கலவரங்களின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தர போராடிக் கொண்டிருக்கும் டீஸ்டா செடல்வாடா, மல்லிகா சாராபாய் போன்றவர்கள் களத்தில் குதித்து இருக்கிறார்கள். 'மோடி ரொம்ப நல்லவர்’ என்று முன்பு பேசிய அண்ணா ஹஜாரேவும் இப்போது சஞ்சீவுக்கு ஆதரவாக இருக்கிறார். 'என் கணவருக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு மோடிதான் பொறுப்பு’ என்று ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார் சஞ்சீவின் மனைவி ஸ்வேதா.
60 கோடி செலவழித்து மோடி நடத்திய உண்ணாவிரதம் மீதான விமர்சனம் அடங்குவதற்குள் சஞ்சீவ் பட் விவகாரம் தீப்பற்றி எரிகிறது. இந்த முறை மோடிக்கு சிக்கல்தானா?
ந.வினோத்குமார்
************************************************************************
போலீஸைப் பார்த்ததும் செல்போனைத் தேடிய எம்.ஆர்.கே.!

முட்டத்தில் நடந்த ரெய்டு!
நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நேரு, பொன்முடி என பலர் வரிசையாகக் கைதாக... தானும் கைதாகலாம் என்ற எதிர்பார்ப்புடன்தான் இருந்தார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். ஆனாலும்கூட தனது சாமர்த்தியத்தாலும், கடலூர் மாவட்ட போலீஸ் உதவியுடனும் தனக்கு எதிராக வந்த புகார்களை எல்லாம் தெரிந்துகொண்டு, சம்பந்தபட்டவர்களிடம் பேசி, அவற்றைத் தவிடு​பொடியாக்கி... கைதுப் படலத்தில் இருந்து தப்பித்து வந்ததாக தி.மு.க.வினர் சொல்லி வந்தார்கள்!
இந்த நிலையில்தான் திடீரென எம்.ஆர்.கே-யின் சொத்து விவரங்களைக் கணக்கெடுக்கத் தொடங்கினர், விஜிலென்ஸ் துறையினர். ஏற்கெனவே எம்.ஆர்.கே மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்க, இப்போது இந்த ரெய்டா என்று சிலர் ஆச்சர்யப்பட்டனர்.
கடந்த 4.10.2011 அன்று காலை சரியாக 7 மணிக்கு, எம்.ஆர்.கே-வின் சென்னை பாலவாக்கம் வீடு, மாயவரத்தில் உள்ள தங்கை கணவரான லிங்கம் வீடு, காட்டுமன்னார்கோவில் ஜவுளிக்கடை, இன்ஜினீயரிங் மற்றும் பி.எட். கல்லூரிகள், முட்டத்தில் இருக்கும் அவரது சித்தப்பா தெய்வசிகாமணி வீடு, சிதம்பரத்தில் அக்காள் மகன் செந்தில்குமார் வீடு, நண்பர்களான வடலூர் சிவக்குமார், ஸ்ரீமுஷ்ணம் தங்க ஆனந்தன் வீடு என மொத்தம் 11 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. ஒரு டீமுக்கு ஐந்து முதல் ஏழு பேர் என்று பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு டீமுக்கும் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் ரெய்டுக்கு ஏற்பாடானது. அதன்படி, முதல் நாளே சம்பந்தப்பட்ட இடங்களை நோட்டமிட்டனர்.
திருச்சி இடைத்தேர்தல் வேலையாகச் சென்று​வந்து, 4-ம் தேதி காலை 6 மணிக்கு முட்டம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் படுத்திருந்தார் எம்.ஆர்.கே.! தூங்கிக் கொண்டு இருந்த அவரை, காலை 7 மணிக்கு எழுப்பி, ''உங்கள் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம்...'' என்றது, டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைலையில் வந்த போலீஸ் டீம். ஒன்றும் புரியாமல் நின்றவர் செல்போனை தேடினார். அதுவும் போலீஸ் வசம் இருந்தது. அந்த செல்போனைக்கூட கையில் தராமல், வீட்டில் உள்ள அனைத்தையும் தங்கள் வசம் கொண்டுவந்தனர். ரெய்டு சம்பவம் மாவட்டத்தில் உள்ள கட்சிக்காரர்களுக்குக் காட்டுத் தீயாகப் பரவ... கடலூரில் இருந்து வழக்கறிஞர் அணி உடனடியாக முட்டம் கிராமத்துக்குச் சென்றது. அதற்கு எந்தப் பலனும் இல்லை. வீட்டு வாசலைத் தாண்டி யாருக்கும் அனுமதி இல்லை. அதற்குள் கட்சிக்காரர்கள் சுமார் 200 பேர் வீட்டின் முன் திரண்டுநின்று, ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர்.
பிற்பகல் 1.55 மணி வரை இந்த சோதனை தொடர்ந்தது. வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சொத்துகளின் டாக்குமென்ட்​களை எல்லாம் சோதனையிட்ட போலீஸார், அவற்றை வரிசையாக டைப் செய்து வைத்துக்கொண்டனர். சோதனை முடிந்து வெளியில் வந்தவர்கள் மேம்​போக்காக, ''எதுவும் சிக்கவில்லை!'' என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றனர்.
''லேட்டாக வந்தால் எப்படி சிக்கும்? முன்​னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராகக் கைது ஆனபோதே இங்கேயும் இதுபோல் நடக்கும் என்று தெரிந்து எல்லாத்தையும் எப்படி செய்யணுமோ அப்படி செய்துவிட்டார்! இவர் என்ன விவரம் தெரியாதவரா?'' என்று நக்கல் அடித்தனர் கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள்!
அப்போது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ''இது அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. நாங்கள் வைத்திருக்கும் சொத்துகளுக்கு சட்டப்பூர்​வமாக எங்கள் அப்பா காலத்தில் இருந்தே முறையாக வருமான வரி செலுத்தி வருகிறோம். திடீரென எதையும் நாங்கள் வாங்கவில்லை. உறவினர்கள் பெயரிலும் எதையும் வாங்கவில்லை! உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை! இது திடீர் நடவடிக்கை அல்ல... ஒரு மாதமாக 'இப்போ நடக்​கும், அப்போ நடக்கும்’ என்று இருந்ததுதான்!'' என்றும் சொன்​னார்.
வெளியில் வந்த விஜிலென்ஸ் டீம் அதிகாரி ஒருவரிடம் தனியே பேசி​னோம். ''விஜிலென்ஸ் சோதனை என்பது திடீரென செய்யப்பட்டு, ஆவணங்களைக் கைப்பற்றுவது அல்ல. குறைந்தது மூன்று மாதங்​களுக்கும் மேலாக கவனிப்போம். எங்கு சோதனை செய்யப்பட இருக்கிறதோ அந்த இடத்தையும், சம்பந்தபட்ட நபர்கள் பற்றியும் குழு அமைத்து முழுமையான தகவல்களை சேகரித்த பின்புதான் சோதனையில் இறங்குவோம். இதுவும் அப்படித்தான் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபற்றி உடனடியாக நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. மொத்தம் 11 இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. பல விவரங்கள் அதில் உள்ளன. சாதாரண மக்களுக்கே தெரியும், எம்.ஆர்.கே-வுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி வந்தது என்று. எங்களுக்கா தெரியாது? அதற்கு எல்லாம் அவர் பதில் சொல்லியே தீரவேண்டிய நிலை வரும்!'' என்றார், அந்த அதிகாரி.
க.பூபாலன்,
படங்கள்: எஸ்.தேவராஜன்
*********************************************************************************
ஈழத்தமிழர்களை விடுதலை செய்த ஜெ.!

மகிழ்ச்சியில் திளைக்கும் அகதிகள்!
செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் இருந்த இலங்கைத் தமிழர்கள் 15 பேரை விடுதலை செய்துள்ளது தமிழக அரசு. பல ஆண்டுகளாக அடைபட்டுக்கிடந்தவர்கள், கடந்த 2-ம் தேதி சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிவிட்டனர். மகிழ்ச்சியுடன் வெளியே வந்த அவர்களை வரவேற்க, உறவினர்கள் காத்திருந்தனர்.
தங்களை விடுதலை செய்யக்கோரி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் பல முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கடந்த ஜனவரி 27-ம் தேதி தொடங்கிய போராட்டத்தில் 10-வது நாளிலேயே பலருக்கு உடல்நலம் பாதிக்கப்​பட்டது. விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால், உண்ணா​விரதத்​தைக் கைவிட்டனர். ஆனால், வழக்கம்போல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. க்யூ பிரிவு போலீசுக்கும், தலைமைச் செயலகத்துக்கும் மனு அனுப்பிக்கொண்டே இருந்தனர். ஆனால், அப்போது இருந்த ஆட்சியாளர்கள் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவே இல்லை.
சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வர் ஜெயலலிதா தங்களது கோரிக்​கைகளுக்கு செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கையோடு, செப்டம்பர் 5-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். அதிகாரிகளும் வழக்கம்போல் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இலங்கைத் தமிழர்கள் இந்த முறை ஏமாறவில்லை. உடல் நிலை பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள், உயிரைப் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். பதற்றம் அடைந்த அதிகாரிகள், 'இந்தமுறை நிச்சயம் விடுதலை செய்து விடுவோம்’ என்று, எழுதிக் கொடுக்காத குறையாக உறுதி அளித்தனர். இதையடுத்து, 14-வது நாளில் போராட்டத்தைக் கைவிட்டனர்.
'இலங்கைக்குச் செல்லக் கூடாது. வழக்குகள் முடியும் வரை தமிழகத்தில் தங்கி இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள உறவினர்களின் முகவரியைக் கொடுக்க வேண்டும்’ என்ற நிபந்தனைகள் விதிக்கப்​பட்டு, 15 பேர் மட்டும் கடந்த 2-ம் தேதி விடுதலை செய்யப்​பட்டனர். இன்னும் 31 பேர் முகாமில் இருக்​கிறார்கள். 
முகாமில் இருந்து வெளியே வந்த இலங்கைத் தமிழர்களைச் சந்தித்தோம்.
''பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்தது மற்றும் சிறு குற்றத்துக்காக இந்த முகாமில் அடைக்கப்பட்டு இருந்த 15 பேருக்கு மட்டுமே இப்போது ஜாமீன் கிடைத்துள்ளது. நாங்கள் உழைத்துதான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். இங்​குள்ள பெரும்பாலோரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கையில் இருந்து முறைப்​படி இந்தியா வந்து தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கியுள்ளனர். நாங்கள் இல்லாததால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாங்கள் வெளியில் வந்தால்தான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். அதனால்தான் போராட்டத்தைத் தொடர்ந்தோம். தமிழக அரசின் கருணையால் நாங்கள் இப்போது விடுதலையாகி இருக்கிறோம்!'' என, மகிழ்ச்சியுடன் கூறினர்.
க்யூ பிரிவு அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசினார். ''இலங்கையில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 25,000 பேர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்து இருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 114 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல் செய்தவர்கள் மட்டுமே செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள்தான், தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி அடிக்கடி போராடு​கின்றனர். சிறப்பு முகாம்களில் உள்ளவர்களின் குற்றப் பின்னணி, முகாமில் அவர்களின் நடவடிக்கை, குடும்பச் சூழல் போன்றவற்றை கருத்தில்கொண்டு சிலரை விடுவிக்க அரசுக்கு பரிந்துரை செய்தோம். அதனால்தான், தமிழக அரசு அவர்களை விடுதலை செய்து உள்ளது!'' என்றார்.
சில மாதத்துக்கு முன், பூந்தமல்லி சிறப்பு முகாமில் நான்கு இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். விடுதலை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அமலன் என்பவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இப்போது, அவரும் விடுதலை ஆகிவிட்டார். செங்கல்பட்டு மற்றும்  பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருக்கும் 34 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
பா.ஜெயவேல்
************************************************************************
நுழைந்தவர் தலையைத் தட்டிய தூக்குக் கயிறு!

தூங்கா நகரில் தூங்காநிலைப் போராட்டம்!
துரை நகரம் தூங்காமல் இருப்பது புதிதல்ல. ஆனால், பிழைப்​புக்காவோ, பொழுது​போக்குக்காகவோ அல்லாமல் ஒரே ஒரு கோரிக்கைக்காக முழு இரவும் மக்கள் கொட்டக் கொட்ட விழித்திருந்தது புதுமை! முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் கோரிக்கை!
அக்டோபர் 1-ம் தேதி மாலை6 மணிக்கு ஆரம்பித்த இந்தத் தூங்கா​நிலைப் போராட்டம்மறுநாள் காலை 6 மணி வரை தொடர்ந்தது. போராட் டம் நடந்த இறையியல் கல்லூரி மைதானத்தின் நுழைவாயிலை அடைந்தபோதே அதிர்ச்சி. தூக்கு மேடையையே நுழைவாயிலாக அமைத்து, உள்ளே வரு​வோரின் தலையை லேசாக உரசியபடி பயமுறுத்திக் கொண்டிருந்தது, ஒரு பெரிய தூக்குக் கயிறு!
தூக்குத் தண்டனைக்கு எதிராக சுமார் 30 பேர் இங்கே கண்டன உரை நிகழ்த்தினர். மைதானத்தில் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பலர் திரண்டு இருந்ததைக் கண்டு, ஈழப் பிரச்னை, அமைதிப்படை, ராஜீவ் கொலை, 3 தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என சுருக்கமாக, சுருக்கென வரலாற்றைச் சொன்னார் பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன்.
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் பங்கேற்ற வெற்றி செங்கொடி என்ற பெண், 'மரண தண்டனை பெற்றவர்களைத் தூக்கிலிடாமல் விட்டால், அவர்களால் இந்த சமுதாயத்துக்கு, நாட்டுக்குக் கேடு விளையும் என்று சொல்பவர்களே! எங்கள் இயக்கத்தின் தலைவர் தியாகுவை தூக்கிலிடாததால், யாருக்கு என்ன கேடு வந்துவிட்டது? நல்ல பல நூல்கள்தானே கிடைத்தது?' என்று கேட்டார்.
'இந்தியாவில் சட்டப்படியான மரண தண்டனைகள் படிப்படியாகக் குறைந்துவிட்டன. ஆனால், சட்டவிரோத மரண தண்டனைகள் அதிகரித்துவிட்டன. சட்டத்தால் கொல்கிறது, துப்பாக்கியால் கொல்கிறது, அணு உலையாலும் கொல்கிறது. மொத்தத்தில் கொலைகார அரசு இது!' என்றார் தியாகு வேதனையாக.
'இந்தப் போராட்டத்தின் தொடக்கம் ஆகஸ்ட் 11-ம் நாள். 3 தமிழர்களின் கருணை மனுக்கள் அன்றுதான் தள்ளுபடி செய்யப்பட்டன. இப்போது உயர் நீதிமன்ற தடை உத்தரவு மற்றும் தமிழக சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் அவர்களின் தூக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரச்னை முடிந்துவிடவில்லை. இப்போதும்கூட தூக்குத் தண்டனையை எதிர்நோக்கித்தான் இருக்கிறார்கள் அவர்கள். அவர்களை மீட்கும் வரை நாம் தூங்கக்கூடாது என்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காகத்தான் இந்தத் தூங்காநிலைப் போராட்டம்!'' என்றார் கொளத்தூர் மணி.
அடுத்துப் பேசிய நாஞ்சில் சம்பத், 'ராஜீவ் கொலைக்குப் பின்னால் இருக்கிற மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படவில்லை. ஜெயின் கமிஷன் விசாரணை முற்றுப் பெறவில்லை.
ஆனால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், மனநோயாளியைப் போல பேசி வருகிறார். 'சிறைச்சாலைக்குள் சென்று இந்த 3 தமிழர்களையும் கொல்ல வேண்டும்’ என்று வெளிப்படையாகவே பேசுகிறார். காவல் துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப் பேசுவதற்கு என் கையிலும் ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. 'இவர்களை எல்லாம் கொல்ல வேண்டும்’ என்று நான் பேசினால், சட்டம் என்னைக் கைது செய்யாமல் விட்டுவிடுமா?'' என்று முடித்தார்.
உறங்காநிலைப் போராட்டம் முடித்து மக்கள் சாரை சாரையாகப் கிளம்பியபோது, கீழ் வானம் வெளுத்து இருந்தது.
கே.கே.மகேஷ்,  ரா.அண்ணாமலை
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
 தாக்கினாரா ஹென்றி டிஃபேன்?
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த வல்லரசு என்ற வாலிபரை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஹென்றி டிஃபேன் கழுத்தைப் பிடித்துத் தள்ள... பிரச்னை ஆனது. இது சம்பந்தமாக எஸ்.எஸ்.காலனி போலீஸார் ஹென்றி டிஃபேன், அவரது மகள் அனிதா, மருமகன் பிரதீப் உட்பட நான்கு பேர் மீது கொலைமுயற்சி வழக்குப் போட்டுள்ளனர்.
இதுகுறித்து வல்லரசு, ''கடந்த வாரம் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் கண்காணிப்பகம் சார்பில் ஒரு ஆர்ப்​பாட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போதே ஹென்றி டிஃபேனின் மருமகன் பிரதீப் என்​னைக் கேவலமாகத் திட்டினார். நான் ஒதுங்கி வந்துவிட்டேன். இந்த நிலையில், இந்தப் போராட்டத்துக்கு வந்தபோது பிரதீப், என் பைக்கை எட்டி உதைத்து, என்னைத் தாக்கினார். இதுபற்றி டிஃபேனிடன் புகார் செய்யச் சென்றபோது, அவரும் என்னைத் திட்டினார். அவரது மகள் அனிதா செருப்பால் அடித்தார். கூட இருந்த சிலரும் கொலைவெறியுடன் தாக்கினர்!'' என்றார்.
புகார் குறித்து ஹென்றி டிஃபேனிடம் கேட்டபோது, ''எங்கள் நிறுவனத்தில் வின்சென்ட் என்ற வக்கீலிடம் உதவியாளராக இருந்து நீக்கப்பட்டவர், வல்லரசு. நீக்கிய பிறகு எதற்காக நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கும், தூங்காநிலைப் போராட்டத்துக்கும் வருகிறார் என்றே புரியவில்லை! அவரை நான் கையைப் பிடித்து வெளியே தள்ளியது மட்டும்தான் உண்மை. தாக்கவில்லை!'' என்றார்.
*********************************************************************************
அங்கே நடந்ததை எப்போது விசாரிப்பீர்கள்!

மாதேஸ்வரன்... மேட்டூர்... பண்ணாரி...
வாச்சாத்தியைத் தொடர்ந்து அடுத்த பூகம்பம்..
வாச்சாத்தி சம்பவம் நடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே குற்றவாளி​களைக் கண்டறிய அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது, வன்முறையில் ஈடுபட்ட 269பேருடன் மேலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து நிறுத்தப்​பட்டனர். பாலியல் குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட பெண்கள் மிகச்சரியாகவே அடையாளம் காட்டினார்கள். இதற்கு 10 ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் அந்தப் பெண் துல்லியமாக அடையாளம் காட்டினார். ''இப்ப இல்லீங்கய்யா... எப்ப கேட்டீங்கன்னாலும் அடையாளம் காட்டுவோம். வாழ்க்கையை சீரழிச்சவங்களை எப்படிங்கய்யா மறக்க முடியும்?'' என்று நீதிபதி அசோக்குமாரிடம் சொன்னார் ஒரு பெண்.
ஆம். வாச்சாத்தி பயங்கரம் மற்றவர்களுக்கு ஒரு சம்பவம்; அவர்களுக்கோ வாழ்க்கையில் மறக்கவே முடியாத களங்கம்!
நீதிமன்றத் தீர்ப்பு வெளியான அன்று வாச்சாத்தி பெண்களைப் பாலியல் வன்முறைக்குஆளாக்கியவர்கள் மட்டும் தண்டனைக்கு ஆளாகவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களும் இன்னொரு முறை தண்டனைக்கு ஆளானார்கள். இப்போது அவர்கள் வயதாகி, தாய்மை ஸ்தானத்தில் இருக்கின்றனர். அவர்களுடைய பிள்ளைகள், 'தன் தாயும் மானபங்கப்படுத்தப்பட்டவள்’ என்ற உண்மையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
இன்றைய வாச்சாத்தி தீர்ப்புக்காக, அந்த மக்கள் மிகப் பெரிய விலை கொடுத்து இருக்கிறார்கள். வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த 269 அரசு அலுவலர்களை எதிர்த்து 19 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். சம்பவம் நடந்தது 1992 ஜூன் 20, 21, 22 தேதிகளில். ஆனால் விஷயம் வெளியே தெரியவே ஒரு மாதம் ஆனது.   
சந்தனக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மூன்று நாட்கள் கோரத் தாண்டவம் ஆடினார்கள் அதிகாரிகள். 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் என 133 பேர் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். சிறுமிகள் உட்பட 18 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தனர். தமிழகமே கொந்தளித்தது. ஆனால், காவல் துறையும் தமிழக அரசும் வாச்சாத்தி மக்களை முற்றிலுமாக வஞ்சித்தன. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் போராடித்தான் சி.பி.ஐ. விசாரணையைப் பெற்றார்கள். இதுவரை உள்ளூர் காவல் துறை, முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யப்படாத விசித்திரமான இந்த வழக்கில், சி.பி.ஐ. 1996-ல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல்​செய்தது. அப்போது தொடங்கி வழக்கை முறியடிக்க என்னென்ன உபாயங்கள் உண்டோ அவ்வளவையும் கையாண்டார்கள்.  ஒரு முறை நீதிபதியே தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று சி.பி.ஐ-யிடம் சொன்னார்.
''முத்துமாரப்பன் ஓர் உதாரணம். வனத் துறையைச் சேர்ந்த இவர், அடையாள அணி​வகுப்பு நடப்பதற்கு ஓரிரு நாட்கள் முன் பாதிக்​கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா இரண்டு லட்சம் என்று பேரம் பேசினார். மக்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் அவ்வளவையும் நிர்மூலமாக்கினார்கள். மக்கள் அசையவில்லை. பொய் வழக்குகள் போட்டு அலைக்கழித்தார்கள். ஆயுதங்களோடு வந்து மிரட்டினார்கள். மக்கள் அசையவில்லை!'' என்கிறார் போராட்டக் குழுவைச் சேர்ந்தவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான டில்லி பாபு.
வாச்சாத்தி வழக்கு முக்கியமான இரண்டு பலவீனங்களை சுட்டிக்​காட்டி இருக்கிறது.
இந்தியக் காடுகளில் என்ன நடக்கிறது? காடுகளில் வெளி​யாட்கள், குறிப்பாக அரசப் படைகள் புகுந்தால் என்ன ஆகும்? நம்முடைய அதிகார வர்க்கம் என்ன நினைக்கிறது என்றால், நாட்டின் எல்லா அதிகாரங்களும் தமக்கானவை என்று நினைக்கிறது. ஆனால், காட்டின் மீதான முதல் உரிமை, காட்டிலேயே வாழும் பழங்குடிகளுக்குத்தான். இந்த உரிமைகள் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்பதே முதல் விஷயம்.
அடுத்ததாக, இந்த வழக்கில் நீதி வழங்க 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் பல அதிகாரிகள் பதவி உயர்வோடு தங்கள் முழுப் பணிக் காலத்தையும் முடித்துவிட்டார்கள். 54 பேர் இறந்துவிட்டனர். பாதிக்கப்பட்டோர் 33 பேர் எந்த நியாயத்தையும் பெறாமலே இறந்து​விட்டனர்.
இதுகுறித்துப் பேசும் மனித உரிமைச் செயல்​பாட்டாளர் ச.பால முருகன், ''வீரப்பன் தேடுதல் வேட்டை நடந்த மாதேஸ்வரன் மலை முகாம், மேட்டூர் முகாம், பண்ணாரி முகாம்களில் விசார​ணைக்கு அழைக்கப்பட்ட அத்தனை பேருமே சித்ரவதையை எதிர்​கொண்டார்கள். நூற்​றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். அனேகமாக, எல்லாப் பெண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்​பட்டனர். இதற்காக ஒரு தனிநபர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை. குறைந்தபட்சம், அவர்கள் மீது வழக்குகூட பதிவு​செய்யப்படவில்லை. ஆனால், அவர்கள் அத்தனை பேரும் அரசால் கௌரவிக்கப்பட்டனர். என்ன மாதிரியான சட்ட அமைப்பில் நாம் இருக்கிறோம் என்பதற்கு ஓர் உதாரணம் இது!'' என்று ஆவேசப்படுகிறார்.
உச்ச நீதிமன்றம், 'வன்முறைகளிலேயே கொடூரமானது அரச வன்முறை’ என்று சொல்கிறது. ஆனால், அரச வன்முறையை யார், எப்படி, எவ்வளவு காலகட்டத்துக்குள் விசாரிப்பது? தண்டிக்கும் அதிகாரமிக்க ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். குடிமக்கள் மீதான அரச வன்முறையைக் கட்டவிழ்த்து​விடுபவர்கள் மீது உயர்ந்தபட்ச தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். வாச்சாத்தி அதற்கான தொடக்கப்​புள்ளியாக அமையட்டும்!
சமஸ்
************************************************************************
கத்தி ஆன ஸ்பூன்... மரம் ஏறிய கைதிகள்...

'அட்டாக்' சிறைக்குள் 'அட்டாக்'!
க்டோபர் 4-ம் தேதி... திருச்சி மத்திய சிறையில் கைதிகள் சிலர் திடீரென மரத்தின் மேல் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்த, ஒவ்வொரு நிமிடமும் அது தீவிரமாகி அடுத்த கட்டத்துக்குப் போக... 'விருமாண்டி’ படம் போல பெரும் கலவரம் மூண்டுவிடுமோ என்று 'திக்...திக்’ இதயத்துடன் தவித்தனர் கைதிகளின் உறவினர்கள். அது மட்டுமின்றி, அதே சிறையில் தி.மு.க. பிரமுகர்கள் லால்குடி எம்.எல்.ஏ-வான சௌந்தர பாண்டியன், கே.சி.பழனிசாமி, பகுதிச் செயலாளர் காஜாமலை விஜய், மாவட்டத் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், அட்டாக் பாண்டி உள்ளிட்டோர்  அடைக்கப்பட்டு இருக்க... அப்புறம் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காதா என்ன!
தண்டனை பெற்ற மற்றும் விசாரணைக் கைதிகள் 2,000-க்கும் அதிகமானோர்  அடைக்கப்பட்டு இருக்கும் திருச்சி சிறையில், 1-ம் பிளாக்கில் குண்டாஸ் கைதி களும், 6 மற்றும் 7-ம் பிளாக்கில் தண்டனைக் கைதி களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் கோரிக்கை என்ற பெயரில் களேபரப்படுத்திவிட்டனர். அன்றைய தினம் காலையில் 1-ம் பிளாக்கில் வார்டன்கள் சோதனை நடத்தியபோதே, கைதி ஒருவரது அறையில் கிடந்த ஸ்பூனை கைப்பற்றினர். அது தொடர்பாகக் கைதிகளுக்கும் வார்டன் களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கடைசியில் தடியடியில் முடிய... சில கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது. மதன் என்ற கைதிக்கு மட்டும் படுகாயம்! இதனால், ஆத்திரம் அடைந்த கைதிகள், சிறை வளாகத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தினர். 19-க்கும் மேற்பட்ட கைதிகள் மரத்தின் மீது ஏறி நின்றுகொண்டு, 'கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்று மிரட்டினர். விவரத்தைக் கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு நாம் விரைந்தோம். கைதிகளின் போராட்டத்தை பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் இருந்து நன்றாகப் பார்க்க முடிந்தது. காரணம், மரங்கள் காம்பவுண்ட் சுவரைவிட உயரமாக இருந்ததுதான். மரத்தின் மீது ஏறி நின்ற கைதிகள் தட்டு மற்றும் கரண்டிகளை தட்டி கூச்சலிட்டுக்கொண்டு இருந்தனர். நமது புகைப்படக்காரரின் கேமராவைக் கண்டதும் உற்சாகமானவர்கள், ''ஜெயிலில் சாப்பாடு சரியில்லை... காலையில் இருந்தே நாங்கள் சாப்பிடவில்லை...'' என்று கத்தினர். மேற்கொண்டு பேச முற்பட்டபோது, கண்காணிப்புக் கோபுரத்தில் இருந்த காவலர்கள், துப்பாக்கியை நீட்டிப் பிடித்தபடி, ''யாரும் அருகில் நிற்க வேண்டாம்...'' என்று எச்சரிக்கை விடுத்ததால், அங்கிருந்து அகன்றோம்.
தொடர்ந்து போராட்டம் தீவிரமாக, ஆர்.டி.ஓ-வான சம்பத், தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். துணை கமிஷனர் ஜெயபாண்டியனும் உள்ளே சென்றார். ''எங்களைத் தாக்கிய வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கோரஸாக சொன்னார்கள் கைதிகள். ''உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று அதிகாரிகள் உறுதி சொன்ன பின்னரே... கைதி கள் போராட்டத்தைக் கைவிட்டனர். சிறைக் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜுவிடம் பேசினோம். ''நான் இங்க மாற்றலாகி வந்து ரெண்டு வாரம்தான் ஆகுது. கைதிகளுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கணும். அப்பதான் நாம சொல்றதைக் காது கொடுத்து கேட்பாங்க. அதுபோல ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கணும்னு எதிர்பார்ப்பேன். குண்டாஸ் கைதிகள் எந்த ஒழுங்குக்கும் கட்டுப்படறதில்லை. முட்டை ரவியின் கூட்டாளிகள் கிட்டத்தட்ட 50 பேர் குண்டாஸ்ல இருக்காங்க. அவங் களோட ஆட்டம்தான் ஜாஸ்தி. சில சிறைகளில் சினிமா பார்க்க, தியேட்டர் அமைச்சிருப்பாங்க. மாசத்துக்கு ஒரு தடவை சினிமா போடுவாங்க. திருச்சி சிறையில் அது மாதிரி எதுவும் இல்லை. அதனால், அந்தக் கைதிகள் தங்களோட அறையில் இருக்குற டி.வி-யில் சினிமா பார்க்க அனுமதிக்கணும்னு கேட்டுக் கிட்டு இருந்தாங்க. அதில், சில பிரச் னைகள் வந்ததால், டி.வி-யை எடுக்கச் சொல்லிட்டேன். அதுபோல, எந்த ஒழுங்கும் இல்லாம அடுத்த பிளாக் பகுதிகளுக்குப் போய் சுத்திக்கிட்டு இருப்பாங்க. அதுக்கும் தடை போட் டேன். அன்னிக்கு காலையில் 1-ம் பிளாக்கில் வார்டன்கள் சோதனை செஞ்சாங்க. அப்ப ஒரு ஸ்பூனோட முனையை, கூராக்கி கத்தி மாதிரி செஞ்சு வெச்சிருந்ததைக் கண்டு பிடிச்சாங்க. அதை எடுத்துட்டு போகக் கூடாதுன்னு கைதிங்க பிரச்னை பண்ணினாங்க. மதன், சுரேஷ் உட்பட பத்து பதினைஞ்சு கைதிங்க முரட்டுத்தனமா வார்டனைகளைத் தாக்க... தற்காப்புக்காக வார்டன்களும் பதிலுக்குத் தாக்கினாங்க. இதுதான் பிரச்னை. கைதி மதனுக்கும் மத்தவங்களும் பெருசா அடி இல்லை. லேசான காயம்தான்...'' என்று விளக்கம் கொடுத்தார்.
இருப்பினும், கைதிகள் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் ரகளை யில் ஈடுபடலாம் என்பதே உண்மை நிலை!
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************

********************************************************************************************

நகராட்சித் தலைவர்... முந்துவது யார்?

15 நகரங்கள் பரபர ரிப்போர்ட்!
'சட்டமன்றத் தேர்தலில் அளித்த அமோக ஆதரவை மீண்டும் தாருங் கள்!’ - என்கிறது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கை... மாஜி
முதல்வரான கருணாநிதியோ, 'கடந்த தேர்தலில் செய்த தவறை மறுபடியும் செய்துவிடாதீர்கள்’ என்று கூக்குரல் கொடுக் கிறார்... 'மக்களே, இந்தத் தேர்தலிலும் உங்களோடுதான் கூட்டணி!’ என சத்தம் கொடுக்கிறது கேப்டன் குரல்... இப்படித்தான் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் பிரசார அலை ஆர்ப்பரித்துக்கொண்டு இருக்கிறது. இந்தத்  திருவிழா கலகலப்புகளுக்கு இடையில், 15 நகராட்சிகளின் ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்...
உதகை: உதகை நகராட்சியில் கடுமையான போட்டி அ.தி.மு.க-வுக்கும்,  காங்கிரஸுக்கும்தான். உதகை சுற்றுவட்டாரத்தில் கதர் கட்சிக்கு எப்போதும் நிலையான செல்வாக்கு உண்டு. அந்த நம்பிக்கையில்தான் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் சேர்மன் லலிதாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. அ.தி.மு.க-வின் சத்தியபாமாவுக்கு ஆளும் கட்சியும், அமைச்சர் புத்திசந்திரனின் தீவிர பிரசாரமும் எக்ஸ்ட்ரா பலம். படுகர் சமுதாயத்தின் வாக்குகள் இரண்டு கட்சிகளுக்கும் சாதகமாக அமையும். காந்தல் பகுதியைச் சேர்ந்த மக்களின் காங்கிரஸ் விசுவாசம் லலிதாவுக்கு ஆறுதல்தான். என்றாலும், அங்கே தி.மு.க-வுக்கும் செல்வாக்கு உண்டு. இவற்றைப் பார்க்கும்போது காங்கிரஸ் முண்டி நெருங்கினாலும், முடிவில் சத்தியபாமா கையில்தான் கனி!
ஒட்டன்சத்திரம்: தேர்வு நிலைப் பேரூராட்சியாக இருந்த ஒட்டன்சத்திரம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலைச் சந்திக்கிறது. திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளரான கண்ணன் இங்கு வேட்பாளர். கடந்த முறை இவரது மனைவி உமா மகேஸ்வரி பேரூராட்சி தலைவியாக இருந்தபோது கண்ணன்தான் ஆக்டிங் தலைவர்! அந்த வெறுப்பால் உள்ளூரில் இவர் மேல் கொஞ்சம் அதிருப்தி இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் பழனியம்மாள், செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் ஆதரவும் இவருக்கு அதிகம். மொத்தத்தில் இந்த சந்தை நகரத்தை பழனியம்மாளே ஆள்வார் என்கிறார்கள்
தேவகோட்டை: தங்கள் வசம் உள்ள தேவகோட்டை நகராட்சியை தக்கவைக்க முன்னாள் சேர்மனான ஜான்சி ராணியைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது காங்கிரஸ். பதவியில் இருந்தபோது நற்பெயர் சம்பாதித்திருந்தாலும், இப்போது கட்சி பலம் இல்லாமல் தடுமாறுகிறார் ஜான்சி. தி.மு.க. சார்பிலோ  தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளரான ரூசோவின் மனைவியும், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளருமான ஜோன்ஸ் ரூசோ நிற்கிறார். கணவரின் தனிப்பட்ட செல்வாக்கும், சாதிய பின்னணியும் ஜோன்ஸுக்கு பக்க பலம். அ.தி.மு.க. வேட்பாளரான சுமித்ராவுக்கு அரசியல் பாரம்பரியம் இருந்தாலும், சொந்தக் கட்சிக்குள் நடக்கும் குஸ்திகளை சமாளிக்க முடியவில்லை. அதிகார தோரணைகொண்ட கள்ளர் சமூகத்தின் ஓட்டுகளை மற்ற வேட்பாளர்கள் பிரிக்கலாம். ஆனால், முக்குலத்தோர் அல்லாதவர்களில் பெரும்பகுதியினர் ஜோன்ஸை ஆதரிப்பதால் அவருக்கே வாய்ப்பு அதிகம்!
ராமநாதபுரம்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் எஸ்.கே.ஜி.சேகர் மாவட்ட அவைத் தலைவர் பொறுப்பு வகிக்கிறார். கோஷ்டி அரசியல் மற்றும் வம்பு வழக்குகளில் சிக்காதவர். சேகருக்கு ஒரே மைனஸ் - மாவட்ட தி.மு.க-வுக்கே 'ஏ.டி.எம்’ ஆக திகழும் ரித்தீஷின் ஆதரவில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் நாகநாத சேதுபதியை சமாளிப்பதுதான். இதுமட்டும் இல்லாமல், இவருக்குக் கிடைக்க வேண்டிய அகமுடையர் சமூக வாக்குகளை பி.ஜே.பி-யின் வேட் பாளர் துரைகண்ணன் பிரிக்கிறார். தி.மு.க-வின் நாகநாத சேதுபதி, ஒருகாலத்தில் அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் ரித்தீஷ§க்காக முகாம் மாறினார். ஆகவே, இவருக்கு எதிராக சொந்தக் கட்சியினரே முழு எதிர்ப்பு வேலைகளில் இறங்கி இருக்கிறார்களாம். எனவே, இம்முறை எஸ்.கே.ஜி.சேகர் வெற்றியை தொட்டு விடுவார் என்றே தெரிகிறது.
கும்பகோணம்: கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பெரும்பான்மை யான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியபோதும், கும்பகோணத்தில் தி.மு.க. வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியது. ஆக இந்த உள்ளாட்சித் தேர்தலில் விட்டதைப் பிடிக்க நினைக்கிறார்கள். கோ.சி.மணி, எம்.எல்.ஏ. அன்பழகன், தற்போதைய தி.மு.க நகர்மன்றத் தலைவர் தமிழழகன் ஆகிய தரப்பினருக்கு ஸீட் கொடுக்காமல், பெரிதும் அறிமுகமாகாத புவனேஸ்வரி என்பவரை களம் இறக்கி உள்ளது தி.மு.க. விளைவு, உட்கட்சி பூசல் உச்சத்தில் நிலவுகிறது. அ.தி.மு.க. தரப்பில் கும்பகோணம் நகரச் செயலாளர் சேகரின் மனைவி ரெத்னா போட்டியிடுகிறார். பரவலாக அறியப்பட்ட நபரான சேகர் பண பலத்திலும் போட்டியிடக்கூடியவர் என்பதால் கும்பகோணம் நகராட்சி அ.தி.மு.க. வசமாகலாம்.
நாகப்பட்டினம்: தற்போது அ.தி.மு.க-வின் கையில் இருக்கிறது இந்த நகராட்சி. தற்போதைய தலைவர் சந்திரமோகனின் மனைவி மஞ்சுளா, தி.மு.க. நகரச் செயலாளர் போலீஸ் பன்னீரின் மனைவி தங்கப்பிள்ளை ஆகிய இரண்டு பேருக்கும் இடையேதான் கடுமையான போட்டி. நாகூரில் உள்ள 10 வார்டுகளும் நாகப்பட்டினத்தில் உள்ள 10 வார்டுகளும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவானவை. அதேபோல், மீனவர் ஏரியாவான நம்பியார் நகர், டாட்டா நகர் ஆகியவையும் அ.தி.மு.க-வுக்கே ஆதரவாக அமையும். தி.மு.க. தரப்பிலோ கீரைக்கொல்லைத் தெரு, வ.உ.சி தெரு, முகம்மதியர் தெரு, ஹவுசிங் யூனிட் ஆகிய ஏரியாக்களில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட வார்டுகள் தங்களுக்கு ஆதரவாக அமைகின்றன என்கிறார்கள். இருந்தாலும், ஸீட் மறுக்கப்பட்ட நாலைந்து சிட்டிங் கவுன்சிலர்கள் கொஞ்சம் முறுக்கிக்கொண்டு இருப்பது தி.மு.க-வுக்கு பின்ன டைவு.  மீனவ மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆதரவோடு மஞ்சுளா சந்திரமோகனின் அ.தி.மு.க. கொடிதான் நகராட்சியில் பறக்கும் போலிருக்கிறது.
தாம்பரம்: இந்த நகராட்சி 1986 முதலே தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வசமே இருந்து வருகிறது. முன்னாள் சபாநாயகர் முனு.ஆதியின் மகன் ஆதி.மாறன் தி.மு.க. சார்பில் இங்கு நிற்கிறார். ஆனால், அவருக்கு எதிராக வாய்ப்பு கிடைக்காத தி.மு.க. கூட்டம் வெகுண்டு எழுந்திருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் கரிகாலன், சுற்றுச்சூழல் அமைச்சர் சின்னையாவின் வலதுகரமாம். இவருக்கும் தொடக்கத்தில், உட்கட்சி அதிருப்தியாளர்களின் குடைச்சல் டார்ச்சரைக் கொடுத்தது. தற்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த நகராட்சியில் தி.மு.க-வைவிட தாங்கள் பெற்ற அதிக வாக்குகளும்,  முஸ்லிம்கள் ஆதரவும் தாம்பரத்தில் அ.தி.மு.க-வின் கரங்களையே உயர்த்திக் காட்டுகிறது.
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நகராட்சி கோவில் பட்டிதான். அ.தி.மு.க வேட்பாளரான ஜான்சிராணி அக்கட்சியின் அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டியனின் மனைவி. அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வி.ஆர்.எஸ். கொடுத்தவர். ஒரு பஸ் கம்பெனியின் உரிமையாளராக இருப்பதால் வசதி வாய்ப்புக்குக் குறைவில்லை. தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு பலம். அதே நேரத்தில், இவரை எதிர்க்கும் ம.தி.மு.க-வின் முப்பிடாதியும் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஓட்டுகள் பிரியும் வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க. சார்பில் இந்துமதிகௌதம் போட்டியிடுகிறார். பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவர்.  பெருவாரியாக உள்ள நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதே சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. இவையெல்லாம் இவருக்கு பிளஸ் பாயின்ட். பரமக்குடி பிரச்னையால் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் தலித் மக்கள், 'ஓட்டு சிதறாமல் இருக்க தி.மு.க-வையே ஆதரிக்க வேண்டும்’ என்கிற நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால், இப்போதைய நிலவரப்படி தி.மு.க-வே கோவில்பட்டியை பார்சல் செய்யும் என்று தெரிகிறது.
குடியாத்தம்: 145 வருட பழைமையும், டெல்லி செங் கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி தயாரித்த ஊர் என்ற பெருமையும் உள்ள குடியாத்தம் மும்முனை போட்டியில் களை கட்டிக்கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க. ஏற்கெனவே தலைவர் பதவியை அனுப வித்து வரும் நிலையில், தி.மு.க-வின் கவிதாபாபு அ.தி.மு.க-வின் அமுதா சிவ பிரகாசத்தை எதிர்த்து நிற்கிறார். கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. கூட்டணி ஓரளவு வாக்குகளைப் பிரித்தாலும் செல்வாக்கில்  மீண்டும் அ.தி.மு.க-வே கைப்பற்றும் நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. போதாதக் குறைக்குத் தி.மு.க-வில் உட்கட்சி பூசல் வேறு. ஆக கவிதாபாபுவை எளிதாக அமுதா வீழ்த்திவிடுவார் என்று மார்தட்டிக்கொண்டு வேலை செய்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். பில்டிங் கான்டிராக்டரான இவர் கள்ளக்குறிச்சியில் சிமென்ட் கடை நடத்தி வருகிறார்.  இவருக்கு அப்பகுதி எம்.எல்.ஏ-வின் ஆதரவு உள்ளது. தே.மு.தி.க-வில் இருந்து தி.மு.க-வுக்குத் தாவிய சுப்புராயலு தி.மு.க. வேட்பாளர். கள்ளக்குறிச்சியில் நகைக்கடை வைத்திருக்கும் இவர் ஃபைனான்ஸ் தொழிலும் செய்கிறார். இந்தத் தொழில் மூலம் பொதுமக்களிடம் இவருக்கு அதிருப்திகள் இருந்தபோதும், இவரால் பணம் வாரி இறைக்க முடியும். இதன் மூலம் ஓரளவு வாக்குகள் வாங்குவார், ஆனாலும், சேர்மன் பதவி அ.தி.மு.க-வுக்குதான் கிடைக்குமாம்.
தென்காசி: அ.தி.மு.க-வின் வேட்பாளர் பானுவுக்கு செல்லும் இடங்களில் அமோக வரவேற்பு... பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் இவருக்கு ஆதரவு கொடுப்பது என முடிவு செய்திருப்பது பிளஸ். தி.மு.க-வின் சீதாலட்சுமி, கடந்த ஆட்சியில் இந்தப் பகுதிக்கு கிடைத்து இருக்கும் நலத் திட்டங்களை எடுத்துக் கூறி பிரசாரம் செய்கிறார். இது தவிர, அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் உள்குத்து விவகாரம் கடைசி நேரத்தில் தனக்குக் கைகொடுக்கும் என்பது இவரது நம்பிக்கை. காங்கிரஸின் சிவகாமிக்கு ஆதரவாக ச.ம.க-வின் லோக்கல் நிர்வாகிகள் பிஸியாக வேலை செய்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி பானுவின் கைகளுக்கே தென்காசி நகராட்சி போகும்.
திருச்செங்கோடு: தி.மு.க. சார்பில் சிட்டிங் சேர்மனான நடேசனே வேட்பாளர். தொடந்து மூன்று முறை நகராட்சி சேர்மனாக  இருந்தும் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பது கணிசமான மக்களின் குற்றச் சாட்டு. நான்காவது முறையாக சேர்மனாகும் ஆசையில் இருந்த நடேசனை  நில அபகரிப்பு வழக்குகளில் உள்ளே தூக்கி வைத்துவிட்டார்கள். இவருக்குப் பதிலாக இவரது மனைவிதான் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்து வருகிறார். இது போதாதென்று நடேசனுக்கு போட்டியாக தி.மு.க-வைச் சேர்ந்த மாஜி கவுன்சிலர் சரவணன் சுயேச்சையாக நிற்கிறார். இவர் பின்னால் சேரும் உ.பி. படை நடேசன் தரப்பை கிலியில் ஆழ்த்தியுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் பொன்சரஸ்வதி. தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்னை இவருக்கு சாதகம். வசதியான குடும்பத்தை சார்ந்தவர், கட்சி செல்வாக்கு இதெல் லாம் அவருக்கு சேர்மன் வாய்ப்பை அள்ளித்தரும் வாய்ப்பு அதிகம்.
மேட்டூர்:  தி.மு.க-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபால் இங்கு வேட்பாளர். கட்சிக் காரர்களாகவே இருந்தாலும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்ய அனுமதிக்கமாட்டார்.  ரவுடியிஸம், கட்டப்பஞ்சாயத்துகளில் கால் வைக்காத அரசியல்வாதி. மக்கள் மத்தியில் செல்வாக்கும் அதிகம். இதெல்லாம் இவரது கையை உயர்த்திப் பிடிக்கின்றன. அ.தி.மு.க. வேட்பாளர் லலிதா சரவணனும் கட்சிக்காரர்கள், பொதுமக்களிடம் அறிமுகமானவர்தான். கட்சியின் செல்வாக்கு இருப்பதுடன், இந்த தொகுதியில் இருக்கும் வன்னியர் சமுதாய வாக்குகளை வளைக்க சைலன்டாக முயற்சி செய்கிறாராம். மொத்தத்தில் இருவரில் யாராக இருந்தாலும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பார்கள்.
கோபிச்செட்டிப் பாளையம்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் தற்போதைய நகர்மன்றத் தலைவர் ரேவதி தேவி. தி.மு.க-வில் புதுமுகம் சத்யா. இதுவரையிலும் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை தி.மு.க. கைப் பற்றியதே இல்லை. இந்த முறையும் சீனியர் அல்லாத புதுமுகம் என்பதால் அக்கட்சியினர் சோர்ந்து கிடக்கிறார்கள். அதுவும் தற்போது நகர் மன்றத் துணைத் தலைவராய் உள்ள மோகனாம்பாளுக்குத்தான் ஸீட் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் இல்லை என்பதால் அவர்கள் தரப்பு சத்யாவுக்கு எதிராய் போர்க் கொடி தூக்கியுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் ரேவதி தேவிக்கு பக்கபலமாய் இருப்பவர் அமைச்சர் செங்கோட்டையன். அ.தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோதே வெற்றி பெற்ற ரேவதி தேவிக்கே இப்போதும் வாய்ப்பு அதிகம்.
உடுமலைப்பேட்டை: உடுமலை நகராட்சியின் அ.தி.மு.க. வேட்பாளரான ஷோபனா, நகரச் செயலாளர் சண்முகத்தின் மகள். மக்களுக்கு இவர் அறிமுகமில்லை என்றாலும், மாஜி அமைச் சர் பொள்ளாச்சி ஜெயராமனின் ஆதரவும், கட்சி செல்வாக்கும் கைகொடுக்கிறது. தி.மு.க. வேட் பாளரான சித்திரைச்செல்வி சிட்டிங் கவுன்சிலராக இருந்தும் வெகுஜன அறிமுகமில்லை. இதுபோக, கடந்த ஐந்தாண்டுகள் இந்நகராட்சியின் சேர்மனாக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த வேலுச்சாமி மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, சித்திரைச்செல்வியை அதிர வைத்திருக்கிறது. ஆக ஷோபனா எளிதில் வென்று விடலாம் என்கிறார்கள்.
ஜூ.வி.டீம்
*******************************************************************************************
நாலு பேரால் குழம்பும் நெல்லை!

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லை மாநகராட்சியை நான்கு பெரிய கட்சிகளும் கலக்கிக் கொண்டிருப்பதால், நெல்லை நகரம் செம ஹாட்!
அ.தி.மு.க. சார்பில் களம் இறக்கி விடப்பட்ட விஜிலா சத்யானந்த், 'மக்களுக்கு அம்மா மீது இருக்கும் நம்பிக்கையும், தி.மு.க-வினர் மீதான வெறுப்பும் எங்களை ஜெயிக்க வைக்கும்’ என்ற நம்பிக்கையுடன் வாக்கு சேகரித்து வருகிறார். இவர் பிள்¬ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் சி.எஸ்.ஐ. கிறிஸ்துவர் என்பதும் ப்ளஸ்.
கோஷ்டிப் பூசலில் சிக்கியுள்ள நெல்லை அ.தி.மு.க-வில், விஜிலா சத்யானந்த் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதால், கட்சியினர் ஆர்வமாகத் தேர்தல் வேலை செய்கிறார்கள். நெல்லை எம்.எல்.ஏ-வும் மாநகர மாவட்டச் செயலாளருமான நயினார் நாகேந்திரனிடம், 'மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டியது உங்க பொறுப்பு’ என ஜெயலலிதா சொல்லி இருப்பதால் ஜரூராக வேலை நடக்கிறது.
விஜிலா சத்யானந்த், ''நெல்லையில் நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை அதிகரித்துப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவிக்கிறார்கள். இதற்கு இணைப்பு சாலைகள்தான் தீர்வாக இருக்கும். நாங்கள் வெற்றி பெற்றதும் இணைப்பு சாலைகள் அமைக்கும் பணியை உடனே செயல்படுத்துவோம். குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கப் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத்தை மேம்படுத்தத் திட்டங்கள் கொண்டு வருவோம். மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவோம்...'' என வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை மக்கள் வெகுவாக கவனிக்கிறார்கள்.
இவரை எதிர்க்கும் தி.மு.க வேட்பாளர் அமுதா, 'படித்தவர்கள் அதிகம் வசிக்கும் இந்த மாநகராட்சியைக் கைப்பற்றப் போவது நாங்கள்தான்!’ என நம்பிக்கையுடன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். கடந்த முறை மாநகராட்சியில் பொறுப்பில் இருந்த தி.மு.க-வினர் மீது மக்களுக்கு நிறைய அதிருப்தி இருக்கிறது. அதை எல்லாம் போக்கக் கடுமையாக போராட வேண்டிய கட்டாயம் அமுதாவுக்கு. மேலப்​பாளையம் மற்றும் பாளையங்கோட்டையின் பல பகுதிகளில் குடிநீர் இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள். ''தாமிரபரணியில் இருந்து பல மாவட்டங்களுக்குக் குடிநீர் செல்கிறது. ஆனால், கரையோரம் வசிக்கும் நாங்கள் குடிநீருக்குத் திண்டாடுறோம்...'' என மக்கள் அங்கலாய்ப்பது தி.மு.க-வுக்கு எதிர்மறை விளை​வை ஏற்படுத்தி இருக்கிறது.
'தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டும்’ என்பதில் தி.மு.க-வின் மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தீவிரம் காட்டி வருகிறார். மூன்று வழக்குகளில் சிக்கிச் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வந்திருப்பது உடன்பிறப்புகளை உற்சாகம் அடைய வைத்திருக்கிறது.
கைச் சின்னத்தில் போட்டியிடும் ஜூலியட் பிரேமலதா அரசியலுக்கு புதியவர் என்றாலும்... நெல்லை தொகுதியின் எம்.பி-யான ராமசுப்பு, முன்னாள் எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோரின் ஆசியுடன் களம் இறங்கி உள்ளார். சி.எஸ்.ஐ. நாடார்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்துக் களம் இறங்கி இருக்கும் இவர், ''மத்திய அரசின் திட்டங்கள் நெல்லைக்கு வந்து சேரப் பாலமாகச் செயல்படுவேன். மாநகராட்சிப் பள்ளிகளை, மாடல் ஸ்கூல் ஆக்க நடவடிக்​கை எடுப்பேன். குளிரூட்டப்பட்ட வேளாண் வணிக வளாகம் அமைப்பேன்!'' என்று சொல்லி வாக்கு கேட்கிறார்.
ம.தி.மு.க சார்பில் போட்டி​யிடும் மகேஸ்வரி நட​ராஜனுக்கு ஆதரவாக ஏற்கெனவே நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரித்த நிலையில் வைகோவும் களம் இறங்கி இருப்பதால் தொண்டர்களிடம் உற்சாகம் கூடியிருக்கிறது. இந்த தேர்தலில் புதிய வியூகம் அமைத்​திருக்கும் வைகோ, அரசியல் பிரமுகர்அல்லாத அந்தந்தப் பகுதி வி.ஐ.பி-களை கொண்டு தங்களுடைய மேயர் வேட்பாளரை அறிமுகம் செய்ய வைக்கிறார். அத்​துடன், 'ம.தி.மு.க ஜெயித்​தால் ஊழலற்ற நிர்வாகம் தருவோம். அதற்காக ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி எந்த தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்’ என்கிற பிரசாரத்துக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது.
தே.மு.தி.க சார்பில் மேயர் வேட்பாளரை நிறுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிப்போனது, மாவட்ட நிர்வாகிகளுக்கு! மேலிடத்தால் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாநகராட்சியை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கியது, கட்சித் தலைமை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியில் வேட்பாளர் கிடைக்காததால் தே.மு.தி.க-விடமே அந்த இடத்தை கொடுத்துவிட்டு காம்ரேட்டுகள் ஒதுங்கிக் கொண்டனர். இதற்கிடையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சீதாலட்சுமியும் போட்டியிட மறுத்துவிடவே, அவசரம் அவசரமாக கண்ணம்மாள் என்பவரை வேட்பாளர் ஆக்கி இருக்கிறார்கள்.
கட்சிக்கும் மக்களுக்கும் கொஞ்சமும் அறிமுகம் இல்லாதவர். அதனால் கட்சியினரின் வேலைகளில் வேகம் இல்லை. விஜய்காந்த், பிரேமலதா ஆகியோர் பிரசாரம் செய்த பின்னரும் கூட, உற்சாகம் இல்லாமல் சோர்ந்து கிடக்கிறார்கள் தே.மு.தி.க. தொண்டர்கள். கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டுகள் கேட்ட வார்டுகளை தே.மு.தி.க-வினர் விட்டுக் கொடுக்காததில் இரு தரப்புக்குமே வருத்தம். அதனால் இன்னமும் ஸ்டார்ட் ஆகாத நிலையில்தான் இருக்கிறது விஜயகாந்த் வண்டி.
இதுதவிர, ஐ.ஜே.கே-யின் ஷகிலா, பா.ம.க-வின் சண்முகபிரியா ஆகியோர், 'தி.மு.க., அதி.மு.க. ஆகிய கட்சிகளை நம்பிக் கெட்டுப் போகாதீங்க. இந்த ஒரு முறையாவது எங்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன்’ என கெஞ்சிப் பார்க்கிறார்கள். ஆனால், வாக்களர்களிடம் பரிதாபம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற வெறியுடன் தி.மு.க., சவால் விட்டு உழைக்கும் அ.தி.மு.க., கணிசமான வாக்கு​களைக் கவரக் காத்திருக்கும் ம.தி.மு.க., சாதி ஓட்டுகளை நம்பி நிற்கும் காங்​கிரஸ் கட்சிகளுக்குள் குழப்பத்தில் இருக்கிறார்கள் நெல்லை வாக்காளர்கள்!
ஆண்டனி ராஜ்
************************************************************************
மேயரைத் தீர்மானிக்கும் பவர் கட்!

கோவை கும்மாங்குத்து!
வெறும் 72 வார்டுகளுடன் இருந்த கோவை மாநக​ராட்சி, தற்போது 100 வார்டுகளுடன் செஞ்சுரி அடித்திருக்கிறது. இங்கு மாநக​ராட்சியின் மேயர் பதவிக்குப் பிரதான கட்சிகள் எல்லாம் களத்தில் நிற்கின்றன. ஆனாலும், பலப்பரீட்சை... அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இடையேதான். தே.மு.தி.க-வின் ஆதர​வுடன் களம் இறங்கியிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றிக்​கான முனைப்பில் ஈடுபட்டு இருக்கிறது.
ஆளும் கட்சியின் வேட்பாளரான மாஜி அமைச்சர் செ.ம.வேலுசாமிக்கு கட்சி மற்றும் ஜெயலலிதாவின் செல்வாக்கே பெரிய நம்பிக்கை. ஆனால், கோவை அ.தி.மு.க-வைப் புரட்டி எடுக்கும் கோஷ்டிப் பூசலோ, அந்த நம்பிக்கைக்கு எதிராகக் கிலியைக் கிளப்பி இருக்கிறது. குறிப்பாக, மலரவன் எம்.எல்.ஏ. குழு தன்னை வாரிவிட்டு விடுமோ என்ற சந்தேகம் செ.ம.வேலுசாமிக்கு. இருந்தும், தலைமையின் உத்தரவின்படி வேலுசாமிக்காக மலரவன் மளமளவென உழைக்கத் தொடங்கிவிட்டார். அவரது ஆதரவுப்பட்டாளமோ இன்னமும் முறுக்கிக்கொண்டு இருக்கிறது. பிரசாரத்​தில் பரபரப்பாகச் சுழலும் வேலுசாமியிடம் பேசியபோது, ''கடந்த அஞ்சு வருஷமா இந்த மாநகராட்சியைச் சீரழித்தது காங்கிரஸின் மேயர். மக்களின் இந்த ஆத்திர​மே என் வெற்றிக்கு அஸ்திவாரம் போடும்.   ஒரு மணிநேரம் மழை பெஞ்சா போதும்... நாலு நாளைக்கு கோவை சிட்டி முழுக்க எல்லா ரோடு​களிலும் தண்ணீர் தேங்கிக்கிடக்கும். இதை எல்லாம் தாண்டி, ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்துக்காக வந்த மெகா ஃபண்டில் முறைகேடு நடந்திருப்பது தெரிகிறது. அதனால், கோவை மக்கள் காங்கிரஸ் மீது ரொம்ப கடுப்போட இருக்காங்க. இதுவும், அம்மாவோட ஆசியும் நிச்சயம் என்னை மேயர் ஆக்கும்!''என்கிறார்.
கோவையில் நாயுடு சமுதாயம் அதிகம். தி.மு.க. வேட்பாளரும், சிட்டிங் துணை மேயருமான கார்த்திக், இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர். கட்சிக்காரர்களை அரவணைத்துச் செல்வது, பொதுமக்களிடம் பொறுமையுடன் ரியாக்ட் செய்வது, தனி அணி அமைத்து சொந்த கட்சிக்குள்ளேயே குழப்படி செய்யாமல் இருப்பது போன்ற விஷயங்கள் மூலம் செ.ம.வேலுசாமியைவிட பல படிகள் முன்னிலையில் இருக்கிறார் கார்த்திக். அவரிடம் பேசினோம். ''ஒரு மாநகராட்சி நிர்வாகம் அஞ்சு வருஷத்துல செஞ்சு முடிக்க வேண்டிய சாதனைப் பணிகளை செம்மொழி மாநாடு மூலமா கோவைக்கு செய்து முடித்துவிட்டார் எங்க தலைவர். கோவை மாநகரவாசிகள் இவற்றை மறக்கவே மாட்டாங்க. விரிவுபடுத்தப்பட்ட சாலைகளின் நடுவே பளிச் விளக்குகள், சிறு பூங்காக்கள், மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்வுனு நிறைய செய்யப்பட்டிருக்கு. ஐந்து வருஷத்தில் மாநகராட்சியில் மிகுந்த பொறுப்போட தி.மு.க. செயல்பட்ட விதம் மக்களுக்குத் தெரியும். மின் வெட்டு பிரச்னை கோவையில் ரொம்பவே அதிகம்... பல ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் இதனால் ரொம்ப கஷ்டப்படுறாங்க. இந்த அதிருப்தி நிச்சயம் தேர்தலில் தெரியும்!'' என்கிறார் அழுத்தமாக. இவரது நம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக, தேர்தல் நடக்கும் ஒன்பது மாநகராட்சிகளில், தனக்கு சாதகமாக முடிவு வரும் என்று அறிவாலயம் டிக் செய்திருப்பதில் கோவையும் ஒன்று.
இரண்டு மெகா கட்சிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ரேஸில் வேகம் காட்டிக்கொண்டு இருக்கிறார் மார்க்சிஸ்ட் வேட்பாள​ரான சிவஞானம். காட்​டன் மில் மற்றும் மோட்டார் தொழிற்சாலைகள் கணிசமாக கோவையில் இருப்பதால், தொழிற்சங்​கங்களின் எண்ணிக்கை அதிகம். இச்சங்கங்களின் பெரிய ஓட்டு வங்கி இரு கம்யூனிஸ்ட்களுக்கும் கைகொடுக்கும். அதில் பாதி ஆதரவை மார்க்சிஸ்ட் பெற்றிருப்பதோடு, தே.மு.தி.க-வின் ஆதரவோடும் சுறுசுறுப்பாக வலம் வருகிறது. இதை எல்லாம் தாண்டி இம்மாநகராட்சியில் தலித்களின் வாக்கு வங்கியும் கணிசமாக இருக்கிறது. சிவஞானம் தலித் விடுதலைப் போராளி. 'தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ என்ற அமைப்பின் கோவை மாவட்டச் செயலாளரும் அவர்தான். ஆகவே, தலித் மக்களின் வாக்குகள் இவருக்கு கூடுதல் பலம். ''அதிகாரம் மற்றும் பண பலத்தோட ஆட்டம் போடுற பெரிய கட்சிகளின் மேல் மக்களுக்குக் கடுமையான வெறுப்பு இருக்கிறது. இது எங்களுக்கு பெரிய சாதகம். மேயராகும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், கோவை மாநகரில் அடிப்படை வசதிகளை சீரமைப்பேன். கூடவே, எல்லா சமுதாயத்துக்கும் சமமான மரியாதையும், உரிமையும் வழங்கப் போராடுவேன்!'' என்கிறார்.
ம.தி.மு.க-வின் சார்பில் போட்டியிடும் அர்ஜுன்ராஜ், வைகோவின் பிரசாரத்தை நம்பி இருக்கிறார். நகரில் இவர்களுக்குக் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சின்னையனும் நம்பிக்கையோடு பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார்.
ஆக, கோவை மாநகராட்சியின் 'வணக்கத்துக்குரிய’ மேயராகப் போவது இந்நாள் முதல்வரின் வேட்பாளரா அல்லது முன்னாள் முதல்வரின் வேட்பாளரா என்பதுதான் ஒரே கேள்வி!
எஸ்.ஷக்தி
படங்கள்: வி.ராஜேஷ்
*********************************************************************************
உயிரைப் பறித்ததா கவுன்சிலர் ஸீட்?

காரைக்குடி அ.தி.மு.க. களேபரம்!
காரைக்குடி நகர அ.தி.மு.க. செயலாள​ராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம். ஆனால் கட்சி உள்குத்து காரணமாக  பதவியை பறிகொடுத்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றுப்போனவர், இந்தத் தேர்தலிலும் அதே வார்டில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். ஆனால் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்றதும் இடிந்து போய், நெஞ்சு வலியால் துடித்திருக்கிறார். அடுத்து நடந்ததை மீனாட்சி சுந்தரத்தின் இரண்டாவது மனைவி நாகஜோதி பதறியபடி சொன்னார். ''உன் பெயர் லிஸ்ட்ல இருக்குதுன்னு எம்.எல்.ஏ. சொன்னதை நம்பி தேர்தல் வேலையை ஆரம்பிச்சிட்டார். ஆனா, காசுக்கு ஆசைப்பட்டு இவருக்கு ஸீட் குடுக்காம இன்னொருத்தருக்குக் குடுத்துட்டாங்க. தகவல் தெரிஞ்சதும் அழுதார். ஆறுதலா பேசி படுக்க வெச்சேன். திடீர்னு ராத்திரி ரெண்டு மணிக்கு நெஞ்சு வலியில துடிக்க ஆரம்பிச்சிட்டார்.
ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு மாவட்டச் செயலாளர் முருகானந்தம், கற்பகம், எம்.எல்.ஏ-வான சோழன் பழனிச்சாமின்னு ஒவ்வொருத்தருக்கா போன் போட்டேன். எல்லாருமே, 'வாரோம்’னு சொன்னாங்க. ஆனா, அடுத்த நாள் ஆவி அடங்கி வீட்டுக்கு தூக்கியாந்ததுக்கு அப்புறம்தான் வந்தாங்க. மாவட்ட அவைத் தலைவர் காளி​தாஸ்தான் எம் புருஷனுக்கு ஸீட் கொடுக்காமப் பறிச்சிட்டார்...'' என்று அழுதுபுரண்டார்.
இதுகுறித்து மாவட்ட அவைத் தலைவரும் முன்னாள் நகரச் செயலாளருமான காளிதாஸிடம் பேசினோம். ''மீனாட்சி சுந்தரத்தின் மரணத்துக்கு என்மீது குற்றம் சொல்வது நியாயமில்லை. நான் நகரச் செயலாளராக இருந்த காலத்தில் மூன்று முறை அவருக்கு ஸீட் கொடுத்திருக்கிறேன். நான் விசாரித்த வரை அவருக்கு இரண்டு கிட்னியும் பழுதானதால்தான் இறந்துட்டதா சொல்றாங்க. அதனால் அவரது மரணத்துக்கு காரணம் கட்சி என்பதை ஏற்கமுடியாது!'' என்றார்.
டீக்கடை நடத்திய ஓ.பி.எஸ்-ஸை முதலமைச்சராக்கி அழகு பார்த்த அதே அ.தி.மு.க-தான், டீக்கடைக்காரரான மீனாட்சி சுந்தரத்தின் உயிரை கவுன்​சிலர் ஸீட்டுக்காக காவு வாங்கி இருக்கிறது!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்
*********************************************************************************
எங்கள் கட்சி வளர்ந்து வருகிறது...

சிரிக்காமல் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்!
ள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உற்சாகப் பிரசாரத்தில் இருக்கிறார். அவரை சந்தித்தோம்.
''உள்ளாட்சித் தேர்தலில் பெரியதாக உங்கள் கட்சி கூட்டணி வைக்கவில்லையே?''
''கடந்த சட்டசபை தேர்தலில் எடுத்த நிலைப்பாடுதான் இப்போதும். எங்கள் கட்சி யின் கோட்பாடுகளை ஏற்று எந்தக் கட்சி கூட்டணிக்கு தாமாக முன்வருமோ... அந்தக் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம். அதன்படி, உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளோம்.''
''பிரதான கட்சிகள் எல்லாம் தனித்துப் போட்டி யிடுவது குறித்து?''
''அவை எல்லாம் அந்தக் கட்சிகள் தாமாக எடுத்த முடிவு அல்ல. கடந்தசட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகள் வைத்துக்கொண்ட கூட்டணிகள் எல்லாம் சுயநலம், துரோகம் உட்படப் பல்வேறு காரணங்களால் சிதைந்துபோனது. அதனால், தனித்தனியாகப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். எல்லாக் கட்சிகளும் தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அப்போதுதான் அவரவர் சுயபலம், பலவீனம் தெரியும். ஆனால், அ.தி.மு.க. கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து, அதன் மூலம் அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த பின்பு, இப்போது அந்தக் கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்துவது அரசியலுக்கு அழகு அல்ல.
அதேபோல், தி.மு.க-வும் தனது கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணிக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி அமைக்கவில்லை என்றால், ஐந்து தொகுதிகளைக்கூட அக்கட்சி வென்று இருக்க முடியாது. அந்த அளவுக்கு தி.மு.க. மீது மக்களுக்கு அவ்வளவு வெறுப்பு...''
''தமிழகத்தில் பி.ஜே.பி. பலவீனமாக இருக்கும் நிலையில், எதை சாதிக்க முடியும் என்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடு கிறீர்கள்?''
''தமிழகத்தில் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்று சொல்வது தவறு. சட்டசபையில் எங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததை வைத்து, கட்சியின் வளர்ச்சியை கணக்கிடக் கூடாது. 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாங்கள் வாங்கிய ஓட்டு சதவிகிதம் 2.2. கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் வாங்கிய ஓட்டு சதவிகிதம் 2.69. ஆகவே, எங்கள் கட்சி வளர்ச்சிப் பாதையில் மேல்நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது. ஒரு முறை எங்கள் கையில் நிர்வாகத்தை ஒப்படைத்தால், எங்களின் மக்கள் பிரதிநிதிகள் தூய்மையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு கடைசி வரை அந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வோம். அதற்கு உதாரணங்கள் பல. கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளம் பஞ்சாயத்துத் தலைவராக தொடர்ந்து 10 ஆண்டுகளாக இருந்த சந்திரகுமார், இப்போது மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவராக தொடர்ந்து 15 ஆண்டுகள் இருந்த ஜெயசீலன், அங்கு நான்காவது முறையாகப் போட்டியிடுகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக 10 ஆண்டுகள் இருந்த தர்மராஜ் அங்கு மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். அதனால்தான் சொல்கிறேன், ஒரு முறை ஆட்சி பொறுப்பை கொடுத்துப் பாருங்கள். மக்கள் சேவையில் எங்கள் நேர்மையையும், அரசியலில் எங்கள் தூய்மையையும் நிரூபிக்கிறோம். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் எங்கள் கட்சி தமிழகத்தின் பிரதான கட்சியாக, திராவிட கழகங்களுக்கு மாற்று சக்தியாக பலம் பெறும்!''
''முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து உங்கள் கட்சியின் விமர்சனம் என்ன?''
''தமிழகத்துக்கு துணிச்சலான முடிவு எடுக்கக்கூடிய ஓர் அரசு தேவை. அப்படி ஓர் அரசாங்கத்தை ஜெயலலிதா சர்வ தகுதியுடன் நடத்தி வருகிறார். ஆனால், அவர் செய்த பல விஷயங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. உதாரணத்துக்கு, பெரும்பான்மையோர் விரும்புகிறார்கள் என்பதற்காக மட்டுமே சட்டசபையில் முதல் நாள் ஒன்று பேசிவிட்டு, மறுநாளே அதை மறுத்து ராஜீவ் கொலையாளிகள் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் போடுகிறார். இதை நாங்கள் ஏற்கவில்லை.''
''அப்படியானால், மூவரின் தூக்குத் தண்டனையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?''
''அப்படி சொல்லவில்லை. காங்கிரஸ் அரசு சுயநல அரசியல் காரணங்களுக்காக இவ்வளவு ஆண்டுகள் காலம் தாழ்த்திவிட்டு, இப்போது மூவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது. மத்திய அரசின் இந்தத் தவறுக்கு அந்த அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். எங்களைப் பொறுத்த வரை அப்சல்குருவை முதலில் தூக்கிலிடுங்கள். மூவரின் தூக்குத் தண்டனையைப்பற்றி அப்புறம் யோசிக்கலாம்!''
''நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க., உங்கள் கட்சியோடு கூட்டணி வைக்குமா?''
''மோடியுடன் ஜெயலலிதா நல்லுறவு பாராட்டி வருவதால், இப்படி ஓர் எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது.  காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளால் பாராட்டப்பட்ட திறமையான முதல்வர் மோடி. அப்படி ஒருவருடன் ஜெயலலிதா நல்லுறவு பேணுவது இயல்பான ஒன்றுதான். மற்றபடி கூட்டணி நிலைப்பாடு குறித்து உங்களது முதல் கேள்வியிலேயே பதில் அளித்து விட்டேன்.''
டி.எல்.சஞ்சீவிகுமார்
************************************************************************
தெற்கு சிப்ஸ்

தேம்பி அழுத வைகோ!
 
ம.தி.மு.க-வின் மதுரை மேயர் வேட்பாளரான பாஸ்கர சேதுபதிக்காக நாராயணபுரத்தில் கடந்த 3-ம் தேதி வாக்குக் கேட்டார் வைகோ. ''உங்களுக்காக உயிரையும் கொடுப்போம் என்று சிலர் நடிப்பார்கள். அவர்கள் எல்லாம் உங்களது ரத்தத்தை குடிப்பதற்காக வேஷம் போடுகிறார்கள். ஆனால், என்னுடைய தம்பிமார்கள் ஏழைகளின் உயிர் காக்க கடந்த ஓராண்டில் மட்டும் 85,000 யூனிட் ரத்தம் தானமாகக் கொடுத்திருக்கிறார்கள்!'' என்று பேசிக்கொண்டே வந்த வைகோ, திடீரென உணர்ச்சிவசப்பட்டு, ''தம்பி பாஸ்கர சேதுபதி தனது சொத்துகளை விற்று தேர்தலில் நிற்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்னு தெரியலியே!'' என்று சொல்லி தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.  பிரசார வேனுக்குள் அமர்ந்த பிறகும் அழுகையை அடக்க முடியவில்லையாம்!                          
வருதப்பா 'கொலை’!
மதுரை மாநகராட்சியின் 43-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக நிற்கிறார் ராஜு. இவருக்கு 'குலையுடன் கூடிய தென்னை மரம்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் ராஜுவுக்காக பிரசாரம் செய்கிறவர்கள், ''உங்களுக்காக உழைத்திட அண்ணன் ராஜுவுக்கு 'கொலையுடன் கூடிய தென்னை மரம்’ சின்னத்தில் வாக்களியுங்கள்!'' என்று சொல்லி மேற்கொண்டும் பீதியைக் கிளப்புகிறார்கள்!                                               
ஆணிமுத்துக்கு அம்மா கொடுத்த ஆஃபர்?
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த ஆணிமுத்து சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டார். அதனால் இவர் அம்மாவின் கோபத்தை தணிப்பதற்காக போயஸ் கார்டன் வீட்டு வாசலில் போய் தினமும் கண்ணில் படும்படியாக நின்றாராம். தினமும் இவர் நிற்பதைப் பார்த்த ஜெயலலிதா, ''எதற்காக இங்கே வந்து நிற்கிறீர்கள்? தேர்தலில் போட்டி யிட விருப்ப மனு கொடுத்திருக்கிறீர்களா?'' என்று கேட்டாராம். ''இல்லை!'' என்று ஆணிமுத்து தலையை ஆட்டவும், ''மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு
மனு குடுங்க!'' என்று சொன்னாராம் ஜெ. அதே வேகத்துடன் ஊருக்கு வந்த ஆணிமுத்து கட்சியில் மனு கொடுத்துவிட்டு இப்போது வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார். ''ஜெயிச்சு கவுன்சிலர் ஆகிட்டேன்னா அம்மா எனக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைக் குடுத்துருவாங்க!'' என்று பெருமை யடிக்கிறார் ஆணிமுத்து.
 ஈ.வி.கே.எஸ். கொடுத்த பூஸ்ட்!
காரைக்குடி நகராட்சித் தேர்தலில் தி.மு.க-விடம் காங்கிரஸை அடகுவைத்து விட்டதாக சொல்லி பிரச்னையைக் கிளப்பிய இளைஞர் காங்கிரஸ்காரர்கள், சிதம்பரம் கோஷ்டியை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருக்க வந்தார்கள். அப்போது, ''உண்ணாவிரதம் வேண்டாம். நீங்கள் ஊருக்குப் போங்கள் உங்களுக்கு கட்சியின் அங்கீகாரக் கடிதம் கொடுக்கப்படும்!'' என்று சொன்னாராம் தங்கபாலு. அப்போது இளைஞர் காங்கிரஸாருக்கு ஆதரவாக வந்து சமாதானம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ''இங்கே உண்ணாவிரதம் இருந்து எதுவும் ஆகப்போவதில்லை. நீங்கள் திட்டமிட்டபடி சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுங்கள். நான் வந்து உங்களுக்காக பிரசாரம் செய்கிறேன்!'' என்றாராம். இதனிடையே செல்வபெருந்தகை கோஷ்டியினரின் நெருக் கடியை சமாளிக்கமுடியாமல் உண்ணாவிரதத்தை கைவிட்டு காரைக்குடி திரும்பிய காங்கிரஸ் பார்ட்டிகள், வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கிவிட்டு அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் - வம்பு வளர்ப்பதற்கு!
 இலவசங்கள் என்னாச்சு அண்ணாச்சி?                   
அருப்புக்கோட்டை ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வான வைகைச் செல்வன், ''என்னை ஜெயிக்க வைத்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூவாயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை இலவசமாகத் தருவேன்!'' என்று வாக்குறுதியும் சில இடங்களில் டோக்கனும் கொடுத்திருந்தாராம். டோக்கன் சமாசாரத்தை அவர் மறந்துவிட்டாலும் மக்கள் மறக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டு கேட்டுவரும் அ.தி.மு.க-வினரிடம், ''இந்த டோக்கனுக்கு முதல்ல பதில் சொல்லுங்க...'' என்று ஏடாகூடமாய் கேள்வி கேட்கிறார்களாம். இதனை கையில் எடுத்திருக்கும் தி.மு.க-காரர்கள், 'உஷாரய்யா... உஷாரு’ என நோட்டீஸ் அடித்துக் கொடுக்கவே,  அ.தி.மு.க-வினருக்கும் தி.மு.க-வினருக்கும் மோதலாகி விஷயம் போலீஸ் வரை போயிருக்கிறது.
 ஆளும் கட்சி டி.வி. நிருபருக்கு ஆர்டர்!
தேர்தல் பிரசாரங்கள், தேர்தல் விதிமுறை மீறல்கள், வாக்குப் பதிவு உள்ளிட்ட விஷயங்கள் தேர்தல் கமிஷனால் வீடியோ எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட பி.ஆர்.ஓ-க்களிடம் இந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் பதற்றமான 200 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்து வது, வீடியோ எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒட்டுமொத்த ஆர்டரும் ஆளும் கட்சி டி.வி. நிருபருக்கு வழங்கப் பட்டுள்ளதாம். ''இந்த வேலையை ஆளும் கட்சி ஆட்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் கட்சியினர் அத்துமீறி நடப்பதை எப்படி படம் பிடிப்பார்கள்? அப்படியே படம் பிடித்தாலும் தங்கள் வசதிக்கு ஏற்ப திருத்தி விட்டால் என்ன செய்வது?'' என்று வழக்கமாக இந்த வேலைகளை செய்து கொடுக்கும் வீடியோகிராபர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
 வாய்க்கு ருசியான வாக்குறுதி
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குறுதி பட்டியல் சுவாரஸ்யமாகப் போகிறது. அருப்புக்கோட்டை அருகிலுள்ள பாலையம்பட்டி பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடும் தி.மு.க-வைச் சேர்ந்த திருமால், ''என்னை ஜெயிக்க வைத்தால் அனைத்து வீடுக ளுக்கும் மூன்று மாத கேபிள் கட்டணத்தை நானே செலுத்தி விடுகிறேன்!'' என்கிறார். அருப்புக்கோட்டை நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரான முகமது இஸ்மாயில் ''தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கிலோ ஆட்டுக்கறி வீதம் மூன்று நாட்களுக்கு இலவசமாகக் கொடுப்பேன்!'' என்று வாய்க்கு ருசியான வாக்குறுதியை கொடுத்து ஓட்டுக் கேட்டு வருகிறார்.
*********************************************************************************
கொங்கு பிட்ஸ்

உள்ளாட்சி கலாட்டா...
ஸ்டாலின் விட்ட டோஸ்! 
டந்த 10 ஆண்டுகளாக ஓசூர் நகராட்சியின் துணைத் தலைவராக இருந்த தி.மு.க-வின் மாதேஸ்வரன், உள்ளூர் உள்குத்துகளைத் தாண்டி நகராட்சித் தலைவர் பதவிக்கு ஸீட் வாங்கிவிட்டார். என்ன மாயமோ தெரியவில்லை... இதுவரை வேட்டி கிழியாத குறையாக அடித்துக்கொண்டு இருந்த அந்த ஊரின் உடன்பிறப்புகள் ஒன்று திரண்டு மாதேஸ்வரனுக்காகப் பிரசாரம் செய்து வருகிறார்கள். என்ன விசேஷம் என்று கேட்டால், ''எல்லாம் தளபதி விட்ட டோஸ்... 'இப்படி ஆளாளுக்கு தனிக் கோஷ்டி சேர்த்து ஆட்டம் போட்டதால்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் எதிர்க் கட்சியாகக்கூட உட்கார முடியாமப் போச்சு. நான் கைகாட்டுன வேட்பாளர்களை ஜெயிக்க வைக்கலைன்னா உங்க எல்லாருடைய பதவியும் காலி...’னு நேரில் கூப்பிட்டே கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். அதனாலதான் இந்த ஒற்றுமை. அதுவும் இல்லாம இங்கே மத்தக் கட்சியின் வேட்பாளருடன் ஒப்பிட்டால், எங்க வேட்பாளர்தான் சீனியர். கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் ஈஸியா ஜெயிச்சிடலாம். அதனால, வெற்றிக் கனியை பறிச்சு தளபதிகிட்ட ஒப்படைப்போம்...'' என்கிறார்கள்.
வேட்பாளர் மாதேஸ்வரனோ, 'கட்சிகளைத் தாண்டின மனுஷன் நான். கட்சியின் வண்ணங்களைப் பார்க்காதீர்... வேட்பாளரின் எண்ணங்களைப் பார்த்து ஓட்டுப் போடுங்க...’ என்று பிரசாரம் செய்து வருகிறார்!

'அம்மா’ கிஃப்ட்!
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய, அ.தி.மு.க. தலைமை பல விதிமுறைகளை  வகுத்து இருந்தது. அதில் ஒன்று, ஐந்து வருடங்களுக்கு மேல் கட்சி உறுப்பினராக இருந்து களப்பணி செய்திருக்க வேண்டும் என்பது. ஆனால், சேலம் மாநகராட்சி 17-வது வார்டு கவுன்சிலராக மணிகண்டன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் கட்சிக்கு வந்து ஏழே மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் எப்படி இந்த வாய்ப்பு என்று வாய் பிளக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
''சேலம் அ.தி.மு.க-வில் பலரும்  கடந்த ஐந்து வருடங்களாக வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தார்கள்.  சமீபத்தில்கூட, அம்மா மாதிரி ஒருத்தருக்கு சேலை கட்டிவிட்டு தி.மு.க-காரங்க கேவலமா நடந்தப்பகூட எங்க கட்சியினர் எந்த ரியாக்ஷனையும் காட்டலை. ஆனா, மணிகண்டன் கடந்த பிப்ரவரி மாதம்தான் கட்சிக்குள் வந்தார். எப்படி அரசியல் செய்தால் முன்னுக்கு வரலாம் என்பதை சரியாகக் கணித்த மணிகண்டன், வந்ததில் இருந்தே வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து அரசியல் செய்தார். பாரப்பட்டி சுரேஷ் தொடர்புடைய ஆறு பேர் கொலை வழக்கை கையில் எடுத்து பல உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்தார். இது அம்மா கவனத்துக்குச் சென்றதால்தான் இந்த வாய்ப்பு...'' என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
     'அம்மா’ பயம்!
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளரும்கூட. அந்த மாவட்ட அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் உச்சத்தில் இருக்கிறது. நமக்கேன் வம்பு என்று இதைக் கண்டும் காணாததுபோல் இருந்த அமைச்சரிடம் 'உட்கட்சிப் பிரச்னையால நம்ம கட்சி இங்கே தோற்றால் உங்க பதவிக்கு வேட்டு வெச்சுடுவாங்க அம்மா!’ என்று ரத்தத்தின் ரத்தங்கள் காதைக் கடிக்க... முனுசாமிக்கோ உதறலே வந்துவிட்டது. வார்டு கவுன்சிலர் கூப்பிட்டால்கூட பொறுப்பாக பிரசாரத்துக்குப் போகிறார் மனுஷர்!   
அட்டாக் ஆகாயத்தாமரை!
பாலிடிக்ஸ் பண்ணுவதற்கு இந்து மக்கள் கட்சிக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? கோவை மேயர் வேட்பாளர் பதவிக்கு தன் பங்குக்கு ராம்குமார் (எ) பொட்டு ராம்ஜி என்பவரை நிறுத்தி இருக்கிறது. தோள் வரை புரளும் தலைமுடி, நெற்றியில் பளீர் பொட்டுடன் தெலுங்குப் பட ஆசாமி போல நிற்கிறார் ராம்ஜி. ''உங்க தேர்தல் வாக்குறுதி என்ன பாஸ்?'' என்று கேட்டால், ''மாநகர்ல இருக்குற குளங்களை மூடியிருக்கிற ஆகாயத் தாமரைகளை அட்டாக் பண்ணி அழிப்பேன். அந்த ஆபரேஷனுக்கு பெயர் 'அட்டாக் ஆகாயத் தாமரை’. குளக்கரையில குப்பைக் கொட்டுறவங்க மேலே செம ஆக்ஷன் பாயும் வகையில சட்டம் கொண்டுவருவேன்!'' என்று விறைப்பாக தலைமுடி கோதுகிறார்!
 திட்டுனது மம்முட்டிதானா?
ஊட்டியில் உள்ளாட்சிப் பிரசாரத்தில் ஈடுபடும் அ.தி.மு.க-வினர் சிலர், 'நம்ம பிரசாரத்துக்கு ஒரு கிளாமர் அப்பீல் கொடுப்போமே!’ என்று ரகளையாக யோசிக்க... சட்டென்று மலையாள பட ஷூட்டிங்குக்காக ஊட்டி வந்திருக்கும் மம்முட்டியின் ஞாபகம் அவர்களுக்கு வந்தது. உடனே, அடித்துப்பிடித்து அவரது மொபைல் நம்பரை வாங்கி போன் போட்டு, 'எந்தானு மம்முட்டி சாரே, சுகந்தன்னே! இவிடெ உள்ளாட்சித் தேர்தல் எலெக்ஷன் பிஸியாயிட்டுப் போயி. ஒரு திவஸம் எங்களுக்கு வேண்டி பிரசாரம் செய்ய நிங்ஙளோட கால்ஷீட் கிட்டுமோ!’ என்று கெக்கேபிக்கே மலையாளத்தில் கேட்டுள்ளார்கள். எதிர்முனையில் இருந்த வந்த வசவுகள் தலைமுறைகள் தாண்டியதாம்! 'திட்டியது மம்முட்டிதானா இல்லை ராங் நம்பரா?’ என்று தலையை பிய்த்துக்கொள்கிறார்கள் கட்சியினர்!
*********************************************************************************
மிஸ்டர் கழுகு: திருச்சி ஜெயிக்கலேன்னா திரும்பி வரக்கூடாது!

கறார் ஜெ... கதறும் மந்திரிகள்
ழுகார் உள்ளே நுழைந்ததும் அவல் பொரி நீட்டினோம். ''நான்தான் பூஜையில் கலந்து கொண்டேனே... அப்புறம் என்ன?'' என்றார். ''இருந்தாலும் உமக்குப் பிடிக்குமே என்பதால் ரெண்டாவது ரவுண்ட்!'' என்று சொன்னதை ரசித்தபடி, ஒரு பிடி அள்ளி வாயில் போட்டார்.
 ''கார்டனில் கூட சரஸ்வதி பூஜையும் விஜயதசமிவைபவமும் விமரிசையாக நடந்தது. ஆனால், முதல்வர் முகத்தில்தான் லேசான வருத்த ரேகைகள்!'' என்று அவல் பொரியில் இருந்தே மேட்டரை ஆரம்பித்தார்!
''திருச்சி இடைத்தேர்தலை வைத்துதான் இந்த வருத்த ரேகைகளாம்! சில நாட்களுக்கு முன்பு, முதல்வரின் டேபிளில் தனியார் ஏஜென்சி எடுத்த சர்வே முடிவுகள், உளவுத் துறையினர் எடுத்த சர்வே விவரங்கள் எல்லாம் வைக்கப்பட்டதாம். இரண்டையும் ஆர்வமாகத் திருப்பி இருக்கிறார்.  பொதுவாகக் கிடைத்த ஒரு தகவல் -  திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் வேலை செய்யும் மந்திரிகள் பலரது நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்பதுதானாம். பெரும்படையாக அமைச்சர்களில் முக்கியமானவர்கள்  திருச்சியில் முகாம் போட்டிருக்கிறார்கள். 'வெள்ளை வேட்டி மடிப்பு கலையாமல் காரில் வலம் வருவது, ஒருசிலர் வாக்காளர்களின் கால்களில் விழுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதோடு சரி! மற்றபடி, தீவிரமாக இன்னும் பிரசாரத்தில் இறங்கவில்லை’ என்கிறதாம் அந்த அறிக்கை. இதைப் படித்ததும், முக்கிய  அமைச்சர்களை அழைத்து வறுத்தெடுத்தாராம் முதல்வர். 'நீங்கள் நுனிப்புல்தான் மேய்கிறீர்கள். இன்னும் ராஜதந்திரமாகச் செயல்படவே ஆரம்பிக்கவில்லை’ என்று கோபப்பட்டாராம். 'திருச்சித் தேர்தலில் ஜெயிக்கலேன்னா, நீங்க திரும்பி சென்னைக்கே வர வேண்டாம் என்று அம்மா சொல்லிட்டாங்க’ என்று மேல்மட்டத்தில் வலம் வருபவர்கள் ரகசியத்தை அவிழ்க்க... கேள்விப்பட்டு, மந்திரிகள் அனைவரும் கதற ஆரம்பித்து​விட்டனராம்!'' 
''ஏதோ சர்வே முடிவுகள் என்றீரே... அது என்ன?''
''கூட்டிக் கழித்துப்பார்த்தால், 'தேர்தல் கூட்டணிக் கணக்குப்படியும் நேர்மையாக வாக்குப்பதிவு நடந்தாலும், தி.மு.க. பக்கம் வெற்றிக்காற்று வீசலாம்’ என்கிறதாம் சர்வே. 'மாநிலத்தில் ஆளும் கட்சி. இங்கேயும் அதே கட்சி எம்.எல்.ஏ. இருந்தால், நன்றாக இருக்கும் என்கிற கோணத்தில் மக்கள் பார்த்தால் மட்டுமே அ.தி.மு.க-வுக்குச் சாதகம் ஆகலாம்’ என்கிறதாம் அந்த சர்வே. இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்கள், கடைசி நேரத்தில் செய்யப்போகும் பிரசார யுக்திக்கும் பலன் இருக்கும்.''
''இப்படி மையமாக ரிசல்ட் வந்தால், முதல்வருக்கு கோபம் வரத்தானே செய்யும்?''
''இடைத்தேர்தல் வியூகம் பற்றி முக்கியமான ஆலோசனைகள் நடப்பது, திருச்சியில் இருக்கும் ஒரு ஹோட்டலில். புது பஸ்ஸ்டாண்டுக்கு அருகில்தான் அது  உள்ளது. இந்த ஹோட்டலில்தான் ஓ.பன்னீர்ச்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர் மந்திரிகள் தங்கி இருக்கிறார்கள். இந்த ஹோட்டலின் உரிமையாளர், தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் நெருங்கிய உறவினர். அதாவது ஆளும் கட்சிக்கு எதிராக நிற்கும் வேட்பாளருக்கு உறவினர்.  காஞ்சனா ஹோட்டல் அபகரிப்பு புகாரில் நேருவுடன் அந்த ஹோட்டலின் உரிமையாளர் பெயரும் உண்டு. மு.க.ஸ்டாலின் எப்போது திருச்சி வந்தாலும் அந்த ஹோட்டலில் இருந்துதான் சாப்பாடு போகும். இப்படிப்பட்ட ஹோட்டலில் இவர்கள் தங்கலாமா என்று ஆளும்கட்சியினரே பொரும ஆரம்பித்துள்ளனர். அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலருக்குக்கூட இந்த ஹோட்டலில் இருந்து சாப்பாடு போவதாக உள்ளூர் கட்சிப் பிரமுகர்கள் பொருமுகிறார்கள். 'தி.மு.க-வின் நம்பிக்கையைப் பெற்ற ஹோட்டலில் அ.தி.மு.க-வின் சீனியர் அமைச்சர்கள் தங்கித் தேர்தல் ஆலோசனை நடத்து​வது எந்தவகையில் நியாயம்? விஷயம் லீக் ஆகாதா? திருச்சியில் வேறு ஹோட்டலே இல்லையா?' என்றும் வினா எழுப்புகிறார்கள்.'' 
''முக்கிய முடிவுகள் உடனுக்குடன் தி.மு.க-வுக்குப் போகும் என்று சந்தேகப்படுகிறார்களா?''
''அப்படித்தான் வைத்துக்கொள்ளும்! அ.தி.மு.க. அமைச்சர்களில் பலரும் ஜெயலலிதா பலமுறை சொல்லியும் இன்னும் காரை விட்டு இறங்கி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று ஓட்டு சேகரிப்​பதில் இறங்கவில்லையாம். காரில் இருந்தபடியே பூத் வாசலில் நிற்பவர்களிடம் சிறிது பேசிவிட்டு, விருட்டென்று கிளம்பி விடுகிறார்களாம். பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுப்பதை மட்டுமே வேலையாக செய்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, இது சம்பந்தமாகவும் சில அமைச்சர்களுக்கு டோஸ் விட்டதாகவும் சொல்கிறார்கள். 
'கடந்த தேர்தலில் நேரு தோற்றது சுமார் 7 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான். இதே தொகுதியில் அதற்கு முந்தைய முறை தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் நின்ற செந்தூரேஸ்வரன் வாங்கிய ஓட்டுகள் சுமார் 13 ஆயிரம். இந்தத் தேர்தலில் அந்த ஓட்டுகள் நமக்கு எப்படி விழும்? அதைக் கவர நாம் என்ன செய்துள்ளோம்? நமது விசுவாசிகளைக் கருவியாக வைத்து இந்த வாக்கு வங்கியை  இதுவரை ஏன்  உடைக்கவில்லை? அதேபோல், முஸ்லிம்கள் சுமார் 25 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில், நேரு மீது புகார் சொல்லும்  பிட் நோட்டீஸ்களை அதிகமாக விநியோகம் செய்தது முஸ்லிம்கள்தான். தேர்தல் நாளன்றும் வாக்காளர்களை ஓட்டுப்போட அழைத்துவந்ததும் இவர்கள்தான். இப்படி பம்பரமாக வேலை பார்த்த முஸ்லிம் அமைப்பினர், இந்த முறை நம் கூட்டணியில் இல்லை. அந்த 25 ஆயிரம் வாக்குகளைக் கவர என்ன உருப்படியான நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?’ என்றும் முதல்வர் கேட்டதாகச் சொல்கிறார்கள். அதோடு, இந்தத் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் கிறிஸ்துவர்களும் இருக்கிறார்களாம். இந்த சிறுபான்மையினர் ஓட்டுகளைக் கவரும் ஐடியா எதையும் இதுவரை எந்த அமைச்சரும் பேச முன்வராததும் ஜெயலலிதாவுக்கு எரிச்சலாம்...'' 
''ரொம்பக் கஷ்டம்தான்...''
''இதையும் கேளும்! உள்ளாட்சித் தேர்தலில் ஸீட் தரப்பட்டதில் அ.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரனுக்கும் தொகுதி எம்.பி-யான குமாருக்கும் பனிப்போர். மனோகரன் வீடுகூட மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, பரபரப்பானது. கட்சியின் சீனியரான பரஞ்சோதி ஜெயித்தால், முக்கிய பதவியில் அமர்வார் என்பதால், பரஞ்சோதியை பிடிக்காத கட்சிப் பிரமுகர்கள் பலரும் மெத்தனமாக வேலை செய்து வருவதும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 'இதைத் தெரிந்துகொண்டு அமைச்சர்கள் அதட்டி வேலை வாங்காதது ஏன்?’ என்றும் முதல்வர் வருந்தியதாகச் சொல்கிறார்கள்.
முதல்வர் கேட்ட இன்னொரு கேள்வி - 'தொகுதியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக ஓட்டுகள் உள்ளனவே... அவர்களின் ஓட்டு யாருக்குப் போகும்?' என்பதாம். வழக்கம்போலவே சரியான பதில் சொல்லமுடியவில்லையாம் அமைச்சர்களால்! பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் அமைப்பினர் இங்கே ரகசிய பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் பிரசாரத்தில் ஒரு செய்தியை லீக் செய்கிறார்களாம். 'அக்டோபர் 30 வரைக்கும் ஜான்பாண்டியனைச் செயல்பட விடாமல் போலீஸ் முடக்கி விட்டது’ என்பதுதான் அது. இப்படி ஒரு தகவலே பல அமைச்சர்களுக்குத் தெரியவில்லையாம். காங்கிரஸ் கட்சிக்கென்று சில ஆயிரம் ஓட்டுகள் இங்கே உள்ளன. யாருக்குப் போடுவது என்று இதுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை. தொகுதியில் உள்ள கோஷ்டிகளை வைத்து அந்த ஓட்டுகளை அ.தி.மு.க. பக்கம் கவரவும் எந்த நடவடிக்கையும் அமைச்சர்கள் எடுக்காததும் ஜெயலலிதாவுக்கு வருத்தமாம்.''
''தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேல் என்கிறார்களே? அவை யாருக்கு விழும்?''
''இதே கவலைதான் ஜெயலலிதாவுக்கு. அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு தரப்பிலும் முத்தரையர், ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் நிற்கிறார்கள். முக்குலத்தோரை ஒருங்கிணைக்கும் வகையில் சசிகலாவின் அண்ணி இளவரசியின் இரண்டாவது மருமகன் ராஜராஜனை பிரசாரத்தில் இறக்கியிருக்கிறார்கள். சிங்கப்பூரில் ஹோட்டல் பிசினஸ் நடத்திவருகிற இவர், இப்போது திருச்சியில் முகாம் அடித்துள்ளார். அமைச்சர்கள் தரும் பணத்தை வைத்து இவர்தான் தேர்தல் பணிக்குப் பிரித்துத் தருகிறாராம். தாடியுடன் வலம்வரும் இவரைச் சுற்றிலும் முக்குலத்தோர் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. இது மட்டும்தான் அ.தி.மு.க-வுக்கு நம்பிக்கை தருகிறது.''
''திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. பலம் எப்படி?''
''சிறைக்குள்  இருக்கும் நேருவை இங்கே மீண்டும் நிறுத்தியதற்கு பதிலாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரை நிறுத்த எதிர்க் கோஷ்டியினர் தயாரானார்கள். அதை மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை. இந்தத் தேர்தலில் நேரு ஒருவேளை ஜெயித்தால், அவரின் ஆதிக்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கொடிகட்டி பறக்கும் என்பதைக் கணித்து, அவரின் எதிர்க் கோஷ்டியினர் கொஞ்சம் அடக்கி வாசிப்பதும் தெரிகிறது. ஸ்டாலின் வருகை, கருணாநிதியின் பொதுக்கூட்டம், ஜெயலலிதாவின் பிரசாரம் இதை எல்லாம் வைத்து நிலைமை எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்!'' என்று மொத்தமும் இடைத்தேர்தல் தகவலாகவே கொட்டிவிட்டுப் பறந்தார் கழுகார்!
படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்

திடீரென நுழைந்த ரஜினி!
நீண்ட இடைவெளிக்குப் பின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ரஜினி. மகள் சௌந்தர்யாவின் மாமனார் ராம்குமார்-ஹேமா தம்பதியின் சஷ்டியப்தபூர்த்தி விழா சமீபத்தில் நடந்தது. சொந்தங்கள் அனைவரும் குழுமி இருக்க... திடீரென உள்ளே நுழைந்தார் ரஜினி. அனைவரும் பரபரப்புடன் எழ... எல்லோருக்கும் அருகில் சென்று, 'நல்லா இருக்கீங்களா?’ என்று உற்சாகத்துடன் கேட்டாராம். சிகிச்சையின் களைப்பு முழுசாக நீங்காமல், முகத்தில் மட்டும் லேசான மாற்றம் இருந்ததாம்.

அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி!
'தி.மு.க-வா? அ.தி.மு.க-வா?’ என்பதுதான் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் பரபரப்பு. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் சின்னக்கம்பாளையம் பேரூராட்சியில், இரண்டு கழகங்களும் கூட்டணி அமைத்து நாற்காலியைப் பிடித்துவிட்டன என்று குமுறுகிறார்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர்!
''15 வார்டுகள் உள்ள இந்தப் பேரூராட்சியில், அ.தி.மு.க-வுக்குத் தலைவர் பதவி - 8 வார்டுகள், தி.மு.க-வுக்கு துணைத் தலைவர் பதவி - 7 வார்டுகள் என இரு தரப்பும் உடன்பாடு செய்துகொண்டனர். மாற்று வேட்பாளர்களை வாபஸ் பெறவும் செய்துவிட்டனர். ஆனால், எங்கள் கட்சி முடியாது என சொல்லிவிட்டது. இந்த நிலையில், எங்கள் வேட்பாளர்களான சின்னகண்ணு, மகுடீஸ்வரி இருவரும் போட்டியில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு, அவர்களது கையெழுத்துகளையும் யாரோ மோசடியாகப் போட்டுள்ளனர். இதன் மூலம், அவர்களின் திட்டம் நிறைவேறிவிட்டது. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் இந்த செயல்பாட்டுக்கு அதிகாரிகளும் உடந்தை!'' என ஆவேசப்படும் தோழர்கள் - கலெக்டருக்கும், மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் புகார்களைத் தட்டிவிட்டுள்ளனர். அய்யர் என்ன செய்வாரோ?
*********************************************************************************
கழுகார் பதில்கள்

ஆர்.சுந்தரமூர்த்தி, விழுப்புரம்.
 'எனக்கு மறதி நோய் இருக்கிறது’ என்கிறாரே ப.சிதம்பரம்?
ஏற்கெனவே வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறதி உலகப் பிரசித்தம்! இப்போது உள்துறை அமைச்சருக்கும் மறதி நோய் என்றால்... இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
மத்திய அமைச்சர்கள் கபில்சிபலும் சல்மான் குர்ஷித்தும் என்ன பேசுகிறார்கள் என்றே யாருக்கும் தெரியவில்லை. போன வாரம் சொன்னதை இந்த வாரம் மறுத்துக் கொண்டு... எல்லாரையும் குழப்புகிறார்கள். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மொத்த கேபினெட்டுக்கும் ஏதாவது ஒரு முழுமையான ஹெல்த் செக் அப் செய்தால் நல்லது!
 வாசுதேவன், கும்பகோணம்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்  2,645 கோடி இழப்பு என்று மத்திய தொலைத் தொடர்புத்துறையின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்யும் தணிக்கைக் குழு அறிவித்துள்ளது.  1.76 லட்சம் கோடி என்று மத்திய தணிக்கைக் குழு ஏற்கெனவே சொன்னது தவறானதா?
எதுசரி, எது தவறு என்பதை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சொல்லட்டும். அதுவரைக்கும் காத்திருப்போம்!
ஆனால், 'முரசொலி'யில், ' 1.76 லட்சம் கோடி என்று முதலில் சொல்லிவிட்டு... இப்போது  2,645 கோடி என்று சொல்கிறார்களே' என்று சமீபத்தில் வந்த செய்தியைப் ( 29.9.11 _ பக்கம் 9) படித்தபோது எழுந்த அதிர்ச்சி இருக்கிறதே..! அதில்,
'இந்த சிறிய தொகையை மத்திய கணக்குத் தணிக்கைக் குழு  1.76 லட்சம் கோடி என்று உயர்த்தி தில்லுமுல்லு செய்துள்ளது’ என்கிறது முரசொலி.  2,645 கோடியைச் 'சிறிய தொகை’ என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் என்னமாக வளர்ந்திருக்கிறார்கள்!
 சுரேஷ்குமார், சிதம்பரம்.
பிரணாப் முகர்ஜியும் சிதம்பரமும் கட்டிப் பிடிக்காத குறையாக இணைந்து நின்று அளித்த பேட்டியை வைத்து 'சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு புகார் புஸ்வாணம் ஆகிவிட்டது’ என்று சொல்லலாமா?
பிரணாப், சிதம்பரம் ஆகியோர் இடையிலான மோதல் வேண்டுமானால் முடிந்திருக்கலாம். ஆனால், சுவாமியும் ஆ.ராசாவும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அப்படியேதான் இருக்கின்றன.
தங்கள் குடும்பத்துக்குள் ஒற்றுமை ஏற்பட்டதும், 'ஸ்பெக்ட்ரம் விவகாரம் இத்தோடு முடிந்துவிட்டது’ என்று டெல்லி சென்ற கருணாநிதி இரண்டு ஆண்டுக்கு முன்னால் சொன்னார். அப்புறம் என்ன ஆச்சு? அதேமாதிரி ஸ்டேட்மென்ட்தான் இதுவும்!
 அல்லிராஜ், கோவை-15.
சுதந்திர பாலஸ்தீனம் சாத்தியமா (அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி!)?
பாலஸ்தீனத்தின் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது பற்றி ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றி உள்ள பல தீர்மானங்களை மீறும் விதமாக உள்ளன, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய நடவடிக்கைகள். 'பாலஸ்தீனம் உருவாவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வேன்’ என்று கடந்த ஆண்டு உறுதி அளித்த ஒபாமா... இப்போது, 'வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுப்பேன்’ என்று பேசி இருப்பது அமெரிக்காவில் வரப் போகும் அதிபர் தேர்தலை மனதில் கொண்டுதான். கடுமையான பொருளாதார நெருக்கடியும் யூதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிதி மூலதனத்தின் தயவும்தான் இப்படி அவரைப் பேச வைத்துள்ளது. சுதந்திர பாலஸ்தீனம் சாத்தியம்தான். அமெரிக்காவின் எதிர்ப்பையும் சமாளிக்க இன்னும் கூடுதல் காலம் ஆகலாம்!
 என்.பாண்டித்துரை, திருவாடனை.
தமிழர்களைப் பிரிப்பது சாதியா? மதமா? அரசியலா?
கொள்கை மாறும்போது கட்சிகளை மாற்றிக் கொள்ளலாம். மனம் மாறும்போது மதங்களை மாற்றலாம். ஆனால், மாற்ற முடியாதது சாதி மட்டும்தான். தமிழர்களை பிரிப்பதிலும் சிதைப்பதிலும் முன்னால் நிற்பது சாதிகளே!
 முருகேசபூபதி, சிவகங்கை.
மரண தண்டனையை ஒழித்தால் குற்றங்கள் அதிகமாகி விடாதா?
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் கூட, 'மரண தண்டனையை ஒழிப்பதால் குற்றங்கள் அதிகமாகிவிடாது’ என்று சொல்கிறார். சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரையில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்...
'ஒரு காலத்தில் இங்கிலாந்தில் சிறு திருட்டு, பிக்பாக்கெட் குற்றங்களுக்கே மக்கள் கூட்டத்தின் முன் மரண தண்டனை விதிக்கப்பட்டன. பெரும் கூட்டத்தைத் திரட்டி, அவர்கள் கண் முன்னே அந்த மரண தண்டனை விதித்தால் அதை நேரில் பார்த்தவர்கள் திருந்துவார்கள் என்று நினைத்தார்கள். அப்படி ஒரு முறை தூக்கிலிட்ட சம்பவம் நடந்தபோது, கூட்டத்தினர் தூக்கு சம்பவத்தை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் 63 பேரிடம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதாக காவல் துறைக்கு புகார்கள் வந்தன’ என்கிறார் நீதிபதி.
மனித உரிமையாளர்கள் எதிர்ப்பது மரண தண்டனை​யைத்தான். மற்ற தண்டனைகளை அல்ல. 'குற்றவாளிகள் அனைவரையும் வெளியே திறந்துவிடுங்கள்’ என்று யாரும் சொல்லவில்லை!
 ஜெகன்.மோ, ராசிபுரம்.
நரேந்திர மோடி - ராகுல் மோதல்தான் அடுத்த மோதல் ஜோடியா? நிலைமை யாருக்குச் சாதகமாக உள்ளது?
பிரதமர் பதவியில் ஆர்வம் கூடிவிட்ட நரேந்திர மோடியைத் தடுக்கும் சக்திகள் பி.ஜே.பி-யிலேயே அதிகம் இருக்கின்றன. அந்தப் பதவியில் அதிக ஆர்வம் காட்டாத ராகுலைக் கொண்டுவரவோ, காங்கிரஸ் சக்திகள் துடிக்கின்றன. தான் மருத்துவமனையில் இருக்கும்போது கட்சியைக் கவனித்துக் கொள்ள ராகுல் தலைமையில் நால்வர் குழுவை சோனியா நியமித்தார். அந்தக் குழு ஒரு முறை கூட சந்தித்துக் கொள்ளவில்லையாம்.
எனவே, நரேந்திரமோடி_ ராகுல் மோதல் வருமா என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது!
 எம்.ஜெகன்ஜி, சென்னை-110.
ஆற்காடு வீராசாமி என்ன பண்ணுகிறார்?
அவரை ஞாபகம் வைத்துக் கேட்பதற்கு நீங்கள் ஒருவராவது இருக்கிறீர்களே? சமீபத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். முப்பெரும் விழா மேடையிலும் இருந்தார். மற்றபடி அதிகமாக வெளிவரத்து இல்லை. இப்போதைக்கு உம்மைப் போல அவரும் ஓர் அரசியல் பார்வையாளர் மட்டுமே. 45 ஆண்டுகால ஆக்டிவ் பாலிடிக்ஸை இப்படி அமைதி ஆக்கியது உடல் நிலை மட்டுமல்ல... உள்கட்சி உதாசீனமும்தான்!
*********************************************************************************
ஏழைத் தொழிலாளிகள் என்றால் இளக்காரமா?


கோவை, திருப்பூர், மாவட்டங் களைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளர்கள், கூலி உயர்வுக்காகக் கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். இதனால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சோமனூர், சூலூர், பல்லடம், அவிநாசி, தெக்கலூர் போன்ற பல இடங்களில் தொழிலாளிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அனைத்து வியாபாரிகளும் கடை அடைப்புப் போராட்டங்கள் நடத்தினார்கள். பத்திரிகைகள் ஆதரவாக எழுதுகின்றன.  ஆனால், இதுவரை அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. 'வாங்கும் கூலி வயிற்றுக்கே போதவில்லை’ என்றுதான் அவர்கள் தெருவுக்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு நியாயமாக வழங்கவேண்டிய கூலியைக் கொடுக்க, உரிமையாளர்களுக்கு ஏனோ இன்னமும் மனம் வரவில்லை.
எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அவ்வப்போது சம்பள உயர்வு பெற்றுக் கொள்கிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் சம்பள உயர்வுடன் அகவிலைப்படி உயர்வு பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், இரவு பகல் பாராது உழைத்து வாழும் இந்த மக்களுக்கு நியாயம் பெற்றுத்தர மட்டும் இதுவரை அரசு ஆக்கபூர்வமாகச் செயலாற்றவில்லை.
போராட்டம் நடத்துவது ஏழைத் தொழிலாளர்கள் என்பதால் தானே அரசு இன்னமும் தூக்கத்தில் இருக்கிறது! இனியாவது அந்தத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும்!
டி.எஸ்.ரகுநாதன், கோவை.
*********************************************************************************
சுவாமி சொல்லும் 2ஜி மர்மங்கள்!

'2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்' என்று விடாப்பிடியாகப் போர்க் குரல் கொடுத்துவரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரணியன் சுவாமி, சென்னையில் முகாமிட்டிருந்தார்.
அவரை சந்தித்தபோது, ''2008-ம் வருடம் ஏப்ரல் 21-ம் தேதியன்று, நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், 'நாம் இருவரும் விலை நிர்ணயம் தொடர்பாக ஆய்வு நடத்தி சில முடிவுகளை எடுத்துவிட்டுப் பிறகு அதை பிரதமரிடம் சமர்ப்பிக்கலாம்' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதையே, பிரதமரும் கூட ஒரு பிரஸ் மீட்டில், 'இரண்டு அமைச்சர்களும் கூட்டாக வந்து சொன்னார்கள்’ என்று பேசி இருக்கிறார். அப்படியென்றால், இருவரும் கூட்டாக உட்கார்ந்து பேசித்தான் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரே குற்றத்தை செய்த இருவரில் ஆ.ராசா ஜெயிலில் இருக்க... ப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி? இவரையும் சி.பி.ஐ. விசாரித்தால் கண்டிப்பாகப் பல உண்மைகள் வெளிவரும்...'' என்றவரிடம்,
''சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஃபைலில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் என்று புகார் கிளம்பி யுள்ளதே?''
''அதற்கு முழுப் பொறுப்பையும் சிதம்பரம் சார்ந்த துறையினர்தான் ஏற்க வேண்டும். ஏதோ சந்தேகத் தின் பேரில் நீதிமன்றம் அந்த ஃபைல்களைக் கேட்டு வாங்கிப் பார்த்தபோது, சில பக்கங்கள் மிஸ்ஸிங். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் விலை நிர்ணயம் தொடர்பாக நான்கு முறை மீட்டிங் நடத்தி இருக்கிறார்கள். அந்த மீட்டிங்குகளின் பேச்சுகள் அனைத்தும் மினிட்ஸ் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மூன்று மீட்டிங்கின் விவரங்கள் மாயமாக மறைந்துவிட்டன. ஒரே ஒரு மீட்டிங் தொடர்பான மினிட்ஸ் மட்டும் எனக்குக் கிடைத்தது. அதைத்தான் கோர்ட்டில் நான் சமர்ப்பித்து இருக்கிறேன். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் கூட்டாக விலை நிர்ணயம் செய்தார்கள் என்பதை உறுதி செய்யும் முக்கிய ஆவணம் அது!''
''நிதித் துறையின் துணை செயலாளர் ராவ், 'ஸ்பெக்ட்ரம் ஊழலை சிதம்பரம் நினைத்திருந்தால், அப்போதே தடுத்திருக் கலாம்' என்று எழுதியிருக்கிறாரே? நிதித் துறை அமைச்சர் பிரணாப்புக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லையா?''
''ராவ் பெயரில் வெளியான ஆதாரத்தைக் குறிப்பு, கருத்து, கடிதம், ஆவணம் என்றெல்லாம் குறிப்பிடக் கூடாது. அது, பக்காவான ஆபீஸ் மெமோரண்டம். பிரதமர் செயலர், கேபினெட் செயலர், தொலைத் தொடர்புத் துறை செயலர், நிதி செயலர் என்று பலரும் உட்கார்ந்து தயார் செய்து, கீழ் நிலை அதிகாரியான ராவ் பெயரில் அப்படிப் பதிவாகி இருக்கிறது. இப்படித்தான் அரசு ஃபைல்களில் வழக்க மாகப் பதிவாகும். அதுதான் இந்த விவகாரத்திலும் நடந்திருக்கிறது. பிரணாப் முகர்ஜி தரப்பில்கூட, 'அந்தக் கருத்து என்னுடையது அல்ல. ஆனால், ஆதாரங்கள் என்னுடையது' என்றுதான் சொல்லப்படுகிறது. சிதம்பரம் தடுத்திருக்கலாம் என்பது பல துறைத் தலைவர்களின் கருத்து, அது ராவின் தனிப்பட்ட கருத்து அல்ல.''
''சிதம்பரம் விவகாரத்தில் நீங்கள் மிகவும் தீவிரமாக இருப்பதற்குக் குறிப்பிட்ட, தனிப்பட்ட காரணங்கள் ஏதாவது உண்டா?''
''இதில் என்ன தனிப்பட்ட காரணம் இருந்துவிட முடியும்? ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா குற்றவாளி என்றால், சிதம்பரமும் குற்றவாளி என்கிறேன் நான். உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நான் ஒரு மணி நேரம் வாதம் பண்ணினேன். ஆனால், சிதம்பரம் தரப்பில் 16 மணி நேரம் வாதம் செய்து, மேலும் அவகாசம் கேட் டார்கள். அக்டோபர் 10-ம் தேதியுடன் வாதத்தை முடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். அடுத்து, நான் பதில் கொடுப்பேன். எனக்கு அப்போதும் அரை மணி நேரம் போதும். இதேபோல், பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சக குற்றவாளியாக ப.சிதம்பரத்தைச் சேர்க்கச் சொல்லி நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்ற வழக்கு முடிவைப் பொறுத்து, இந்த வழக்கு விசாரணை நடக்கும்.
இது தவிர, இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். 'பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கும்,  சீன ராணுவத்திடம் இருந்து தளவாடங்களை வாங்கும் பிசினஸில் ஈடுபட் டுள்ள இன்னொரு கம்பெனிக்கும்  லைசென்ஸ் தரக் கூடாது’ என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஒரு கடிதத்தை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அனுப்பியிருக்கிறார். ஆ.ராசாவிடமும் இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், இவர்கள் கேட்கவில்லை. இதையும் நான் அடித்துச் சொல்கிறேன். இது தேசத்துரோகம் அல்லவா!''
''ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தைத் தொடர்ந்து வேறு யார் சிக்குவார்கள்?''
''சோனியாவின் மருமகன் வதேரா சிக்கலாம்! அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் நான் தீவிரமாக இருப்பதால், சோனியா பொய் வழக்குகளை என் மீது ஏவப் பார்க்கிறார். கடந்த ஜூலையில் நான் ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரை, மத மோதலைத் தூண்டிவிடும் வகையில் இருப்பதாக டெல்லியில் இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொறுத்திருந்து பாருங்கள்! இந்த பொய் வழக்குகளை நான் தவிடு பொடி ஆக்குவேன்!''
ஆர்.பி.
************************************************************************
பரஞ்சோதிக்காக 17 அமைச்சர்கள்.. நேருவுக்காக 'எக்ஸ்பர்ட்' டீம்

திருச்சி செம ஹாட் மச்சி!
திருச்சி மேற்குத் தொகுதியில் அனல் பறக்கிறது.  தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு தரப்பிலும் சீனியர்கள் வந்து குவிந்திருப்பதால் எங்கு பார்த்தாலும், முன்னாள் அமைச்சரோ, இந்நாள் அமைச்சரோ... 'அன்பான வாக்காளப் பெருமக்களே’ என்று வாசலுக்கு வந்து நிற்கிறார்கள். தேர்தல் புண்ணியத்தில் தீபாவளி வருவதற்கு முன்னரே பண்டிகைக்கான கொண்டாட்டம் மக்கள் முகத்தில் இருந்தாலும் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிப்பதுதான் பரிதாபம்.
'தேர்தலில் நின்றால் ஜாமீனில் வெளியே வந்து விடலாம்’ என்று தலைமையிடம் வற்புறுத்தித்தான் ஸீட் பெற்றார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்று 'விட்டேனா பார்’ என்று அடுத்தடுத்து அவர் மீது வழக்குகளை பாய்ச்சி வருகிறார்கள் ஆட்சியாளர்கள்.
ஏற்கெனவே நேரு மீது 'கலைஞர் அறிவாலயம்’ நில அபகரிப்பு வழக்கு, ஈரோட்டைச் சேர்ந்தகருணாநிதி கொடுத்த நில அபகரிப்பு வழக்கு, காஞ்சனா ஹோட்டல் அபகரிப்பு வழக்கு, கல்லூரிக்காக ஏரி நிலத்தை ஆக்கிரமித்த வழக்கு போன்றவை இருக்கிறது. அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர்,  'தங்களது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பங்கு கேட்டு மிரட்டினார்; திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தினார்’ என்று கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த லேரோஸ் முராய்ஸ் என்பவர் கொடுத்த வழக்கு புதிதாய் முளைத்திருக்கிறது. இந்நிலையில், அக்டோபர் 4-ம் தேதி கலைஞர் அறிவாலயம் வழக்கு மற்றும் ஈரோடு கருணாநிதி வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் நேருவுக்கு ஜாமீன் வழங்கியது. மற்ற வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தால்கூட, அடுத்தடுத்து வழக்குகள் பாய்ச்சப்படும் என்பதே நிதர்சனம்.
தி.மு.க. நிர்வாகிகள் பம்பரமாக சுழன்றுதான் தேர்தல் வேலை செய்கிறார்கள். நேருவின் எதிர் கோஷ்டிகளாக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வராஜ், திருச்சி சிவா ஆகியோரும் நேருவுக்காக  வாக்குக் கேட்டு அலைகிறார்கள்.  'தேர்தல் எக்ஸ்பர்ட்’ என்று ஸ்டாலினால் சொல்லப்படும்  எ.வ.வேலு தலைமையிலான 10 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு, வீக் பாயின்ட்டைக் கண்டு பிடித்து, அங்கு களப்பணியில் ஆட்களை இறக்கி விடுகிறது.  நேரு சிறையில் இருப்பது போன்ற கிராபிக்ஸ் செய்யப்பட்ட படத்தை அச்சடித்து வீடு வீடாகக் கொடுத்து பரிதாபம் தேட நினைக்கிறார்கள். அதுவும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. 'நேரு வெளியில் வராவிட்டால்கூட பரவாயில்லை. ஜெயித்தால் சிறையில் இருந்தே வென்றார் என்று பெயர் தட்டலாம். தோற்றால் சிறையில் இருந்ததால் தோற்றார் என்று சொல்லலாம்’ என்பதாகவே தி.மு.க-வினர் மன ஓட்டம் இருக்கிறது.
அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதிக்காக 17 அமைச்சர்கள் கொண்ட பெரிய படையே தொகுதியில் வேலை செய்கிறது. இந்தப் படைக்கு தலைமை ஓ.பன்னீர்செல்வம். 21 வார்டுகளைக்கொண்ட தொகுதியில், வார்டுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 'இந்த தேர்தலில் தோல்வியுற்றால் அதைவிட பெரிய அவமானம் எதுவும் இல்லை. அம்மாவும் சும்மா விட மாட்டார்’ என்பதால், அசுரத்தனமாக வேலை செய்கிறார்கள். அமைச்சர்கள் கோகுல இந்திரா, உதயகுமார் ஆகியோரின் பிரசாரம்தான் மக்களை பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் உரிமையாக நுழைந்து குசலம் விசாரித்து கோகுல இந்திரா நடத்தும் திண்ணை பிரசாரம் பெண்கள் மத்தியில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகிறது.ஜெயலலிதா ஆட்சியின் சாதனை களை புத்தகமாகவே அடித்து பிரசாரம் செய்கிறார் உதய குமார். தளபதிகள் தொகுதிகளைக் கலக் குவது போதாது என்று தலைமைகளும் தொகுதிப் பக்கம் விரை வில் வர இருக்கிறார்கள். அக்டோபர் 9-ம் தேதி திருச்சிக்கு வருகிறார், ஜெயலலிதா. 'அவர் பேசிவிட்டுப் போனதும் பதிலடி கொடுக்கலாம்’ என்ற நினைப்பில் அதற்கு அடுத்த நாள் புத்தூர் நால் ரோட்டில் கருணாநிதி பேசுகிறார்.
ஆக, இடைத் தேர்தல் செம சூடு மச்சி!
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
 ''மேலிடத்து உத்தரவு?''
இடைத் தேர்தல் பணிக்காக திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் செல்வகணபதி அறைகளில் நடத்தப்பட்ட ரெய்டு ஏரியாவில் பரபர டாக்! அக்டோபர் 5-ம் தேதி காலையில், திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் அதிகாரியான ஆர்.டி.ஓ. சம்பத் தலைமையிலான படை இந்த சோதனையை நடத்தியது. சோதனையில் பணமோ, பொருட்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை!
ரெய்டு பற்றி எ.வ.வேலு, ''காலை 6.50-க்கு நான் தங்கி இருந்த அறைக்கதவு படபடவென்று தட்டப்பட்டது. என்னவோ ஏதோன்னு திறந்து பார்த்தேன். 10-க்கும் மேற்பட்டவர்கள் என் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்தார்கள். பாத்ரூம் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்கள். பக்கத்து அறையில் தங்கி இருந்த செல்வகணபதியின் அறையிலும் அதே போன்று சோதனை. எங்களது காரையும் விட்டு வைக்கவில்லை. 'ஏன் இந்த சோதனை?’ என்று கேட்டதற்கு மேலிடத்து உத்தரவு என்று சொன்னார்கள். இதே இடைத் தேர்தல் பணிக்காக அ.தி.மு.க. அமைச்சர்கள் 20 பேர் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் எல்லாம் சோதனை நடத்தியதாக தகவல் இல்லையே? நடப்பதைப் பார்த்தால் தேர்தல் பணிகள் நடுநிலையாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை'' என்று படபடத்தார்.
ஆர்.டி.ஓ. சம்பத் இதற்கு என்ன பதில் சொல்கிறார்? ''இன்று காலையில் எனது மொபைல் போனுக்கு, ' சங்கம் ஹோட்டல் அறை எண் 207 மற்றும் 208-ல் லட்சக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது’ என்று தகவல் வந்தது. அந்த அறையில் யார் தங்கி இருக்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. அங்கு சென்ற பின்னரே அந்த அறைகளில் எ.வ.வேலுவும், செல்வகணபதியும் தங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை'' என்று விளக்கம் சொன்னார்.                                                                     
*********************************************************************************
''செய்த தப்பை திருத்திக்க திருச்சிக்கு மட்டும் வாய்ப்பு!''

மேற்கில் முறுக்கும் குஷ்பு!
டந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் 'ஸ்டார் அட்ராக்ஷன்’ இருவர்தான். ஒருவர் வடிவேலு; இன்னொருவர் குஷ்பு. தேர்தல் தோல்வியை அடுத்து நடை பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களால், 'அந்தக் கடையை அப்பவே மூடிட்டேனே’ என்று வடிவேலு ஷட்டரை குளோஸ் பண்ண... தீவிரப் பிரசார பீரங்கியாக மீண்டும் முழங்க வந்துவிட்டார் குஷ்பு. திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேருவுக்கு ஆதரவாகத் தொகுதி முழுக்கக் கடந்த 5-ம் தேதியில் இருந்து ரவுண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டார்.
மாலை 5 மணிக்கு பஞ்சப்பூரில் இருந்து குஷ்பு பிரசாரத்தை ஆரம்பிக்க, 'குஷ்பு வர்றாங்கடோய்’ என்று கூட்டம் எகிறி அடிக்க ஆரம்பித்தது.
'' 'சின்னதம்பி’ திரைப்படம் மூலம் உங்களை சிந்திக்க வைத்தவர். 'மன்னன்’ திரைப்படம் மூலம் உங்கள் மனம் கவர்ந்தவர். கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளர் குஷ்பு உங்கள் மத்தியில் உரையாற்றப் போகிறார். அக்கா, குஷ்பு வர்றாங்கக்கா... அண்ணே, குஷ்பு வர்றாங்கண்ணே...'' என்று ஒருவர் 'மைக்’கில் கட்டியம் கூறியவாறு செல்ல... கூடி இருக்கும் மக்கள் மத்தியில் பேசத் தொடங்குகிறார் குஷ்பு. 'பளிச்’ சிரிப்போடு நிதானமாக இருக்கிறது அவரது பேச்சு.
''அனைவருக்கும் வணக்கம். அஞ்சு மாசத்துலேயே திரும்பவும் உங்களை சந்திக்க வாய்ப்பு வரும்னு நான் எதிர்பார்க்கலை. உண்மையில் துயரத்துடன்தான் உங்களை நான் சந்திக்கிறேன். தொகுதி எம்.எல்.ஏ-வா இருந்த அண்ணன்(!) மரியம்பிச்சை இறந்ததுக்கு அப்புறம் நடக்குற எலெக்ஷன்ல உங்களை சந்திக்கி றேன். அவர் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவரா இருந் தாலும், அவரது இறப்புக்காகக் கட்டாயம் இரங்கல் சொல்லணும்...'' என்று முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கிறார்.
''தேர்தல் ரிசல்ட் வந்த உடனே, 'தமிழ்நாட்டு மக்கள் என்ன தப்பு செஞ்சிருக்காங்கன்னு இந்த அஞ்சு வருஷத்துல புரிஞ்சுக்குவாங்க’ன்னு நான் சொன்னேன். அஞ்சு வருஷம் இல்ல... அஞ்சு மாசத்துலேயே புரிஞ்சுக்கிட்டாங்க. தப்பு செஞ்ச துக்கு அப்புறம் அதை திருத்திக்கிறதுதான் புத்திசாலித்தனம். நான் சினிமாவுக்கு புதுசா வரும்போது நிறையத் தப்புகள் செஞ்சேன். தமிழ் தெரியாது. தமிழ்நாட்டுக்கு ஏத்தமாதிரி எப்படி டிரெஸ் போட்டுக்கணும்னு தெரியாது. எனக்கு ஒவ்வொண்ணா சொல்லி, கத்துக்கொடுத்தாங்க. அதுபோல தமிழக வாக்காளர்கள் கடந்த தேர்தலில் ஒரு தப்பு செஞ்சுட்டாங்க. அந்தத் தப்பைத் திருத்திக்கிறதுக்கு திருச்சி மக்களுக்கு மட்டும்தான் ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.
ஜெயலலிதா அம்மா ஜெயிக்கிறதுக்கு முன்னாடி நிறைய விஷயங்கள் சொல்லி இருந் தாங்க. கரன்ட் கட்டால தமிழகம் இருட்டுல தவிக்கு துன்னு சொன்னாங்க. தி.மு.க. ஆட்சியில ஒரு மணி நேரம்தான் கரன்ட் கட். ஆனா, இப்போ? சொல்றது மூணு மணி நேரம். சொல்லாம ஐந்து மணி நேரம். எல்லாமே உங்களுக்குத் தெரியும்...'' என்றதும் கரன்ட் கட்டால் அவஸ்தைப்படும் மக்கள் கைதட்டி வரவேற்பு கொடுக்கிறார்கள்.
''இந்த அஞ்சு மாசத்துல நாம எவ்வளவு இழந் திருக்கோம். நான் ஒவ்வொண்ணா சொல்றேன். பூண்டு, புளி, பருப்பு, காய்ஞ்ச மிளகா எல்லாமே 40 ரூபா, 50 ரூபான்னு விலை ஏறி இருக்கு. அஞ்சு மாசத்துலேயே இவ்வளவு விலை ஏற்றம்னா... அஞ்சு வருஷத்துல என்ன ஆகும்?
பெரிய திட்டங்கள் எதையும் கொண்டு வரல. ஒரே ஒரு மாற்றம்தான் கொண்டு வந்திருக்காங்க. தலைவர் கலைஞர் ஆட்சியில கட்டின புதிய தலைமைச் செயலகத்துக்குப் போக மாட்டேன்னு, பழைய கோட்டைக்கே போயிருக்காங்க. இதனால மக்களோட வரிப்பணம் எத்தனை கோடி நஷ்டம்?
தினம் பேப்பரைப் பார்த்தா முன்னாள் அமைச்சர் கைது, இந்த எம்.எல்.ஏ. கைது, அந்த எம்.பி. கைதுன்னு செய்தி வருது. இந்த சாதனை தவிர வேறு எந்த சாதனையும் அ.தி.மு.க. ஆட்சியில செய்யலை. தி.மு.க. ஆட்சியில சட்டம் ஒழுங்கு இல்லை. நான் ஆட்சிக்கு வந்த உடனே எல்லாம் சரியாகும்னு சொன்னாங்க. பதவி ஏத்ததும், செயின் திருடர்களும் கொள்ளைக்காரங்களும் ஆந்திரா ஓடிட்டாங்கன்னு சொன்னாங்க. ஆனா, இந்த அஞ்சு மாசத்துல எத்தனை வீட்டுல கொள்ளை, எத்தனை கொலை நடந்திருக்குதுன்னு உங்களுக்கே தெரியும். விசாரணைக்கு கூட்டிட்டுப் போனவங்கள்ல எட்டு பேர் இறந்து போயிட்டாங்க. எம்.எல்.ஏ. வீட்டுலேயே கொள்ளை நடக்குது. அதைக்கூட கண்டுபிடிக்கலை.
தமிழ்நாட்டுல மீண்டும் தி.மு.க. ஆட்சி நிச்சயம் வரும். இப்போதைக்கு திருச்சி மேற்குத் தொகுதியில போட்டியிடுற கே.என்.நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட்டு அவரை சட்டசபைக்கு அனுப்பி வையுங்க. உங்களோட எல்லாக் குறைகளையும் அவர்கிட்ட சொல்லுங்க. சட்டசபையில உங்களுக்காக அவர் பேசுவார். ஜெயிச்சதுக்கு அப்புறமா மீண்டும் உங்களை சந்திக்கிறேன். நன்றி!'' என்று குஷ்பு பேசி முடிக்க... 'அக்கா... அக்கா...’ என்று பிரசார வேனை சூழ்ந்து கொள்கிறார்கள் பெண்கள். அவர்களுக்குப் புன்னகையுடன் கையசைத்துவிட்டு, நகர்கிறார்.
''உங்கள் சகோதரி, திராவிட இயக்கத்தின் பிரசார பீரங்கி குஷ்புவின் வேண்டுகோளை நிராகரித்து விடாதீர்கள்...'' என்று மைக் செட் அலற... அடுத்த ஸ்பாட்டை நோக்கி நகர்கிறது வேன். 'அப்படின்னா வடிவேலு வரமாட்டாரா?’ என்றபடி நகர்கிறது கூட்டம்.
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************
சஞ்சீவ் பட் சொல்வது உண்மையா?

''நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றார் முதல்வர்!''
குஜராத் மாநிலத்தில் கொலை பயத்தோடு இருப்பவர் சாதாரண மனிதர் அல்ல; ஒரு போலீஸ் அதிகாரி! 
இந்தக் கதையைப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு ப்ளாஷ்பேக்..!
குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கடந்த 2002-ம் ஆண்டு தீ வைக்கப்பட்டது. இதற்கு மத தீவிரவாத அமைப்புகள்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது. ''அவள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். நான் கத்தியை எடுத்து அவள் வயிற்றைக் குத்திக் கிழித்தேன். என் கையை உள்ளேவிட்டு சிசுவை வெளியே எடுத்து, அதன் கால்களைப் பிடித்து தரையில் ஒரே அடி போட்டேன். செத்துப் போனது. அவளும் செத்துப் போனாள்!'' என்று அந்த வன்முறையில் ஈடுபட்ட அடியாள் ஒருவன் பெருமையாக 'தெஹல்கா’ இதழுக்கு அளித்த பேட்டியே அந்த கோர தாண்டவத்தின் அதிர்ச்சி சாம்பிள்!
அந்த ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பிப்ரவரி 27, 2002-ல் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் காவல் துறையின் அனைத்து உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ''முஸ்லிம்களுக்கு எதிரான தங்களின் கோபத்தை இந்துக்கள் தீர்த்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு பாடத்தைக் கற்பிக்கட்டும்...'' என்று சொல்லி போலீஸாரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன. அப்போது மாநில உளவுப் பிரிவில் துணை ஆணையராக இருந்தார் சஞ்சீவ் பட்!
அவர்தான் இப்போது உயிர்பயத்துடன் இருக்கிறார்.
அகமதாபாத்காரர் இந்த சஞ்சீவ் பட். ஐ.ஐ.டி-யில் படித்து, ஐ.பி.எஸ். பணிக்கு நேரடியாகத் தேர்வு பெற்றவர். 1988-வது பேட்ச் ஐ.பி.எஸ். ஆன இவருக்கு இப்போது வயது 47. வேலைக்குச் சேர்ந்த காலத்தில் இருந்தே இவரின் பணி வரைபடம் சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கிறது.
1990-ல் ஜாம்நகரில் இவர் வேலையில் சேர்ந்தபோது, ஜம்ஜோத்பூர் என்ற இடத்தில் ஏற்பட்டவன்முறையைக் கட்டுப்படுத்த அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சில விவசாயிகளை இவர் அடிக்க, அதில் ஒருவர் மரணமடைந்தார். அந்த வழக்கு  நிலுவையில் இருக்கிறது. 1996-ல் ராஜஸ்தான் வழக்கறிஞர் ஒருவரை போதைப் பொருள் கடத்தலில் சிக்கவைக்க முயற்சித்ததாகவும் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. 2002-ல் நரேந்திர மோடியின் 'கௌரவ் யாத்ரா’ தொடர்பாக சில ரகசியங்களைக் கசியவிட்டு தன் உயர் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டி நின்றதாகவும், படிநிலை விசாரணைகள் முடிந்து இரண்டு மாதங்கள் சபர்மதி சிறையில் வைக்கப்பட்டார். சில காலத்துக்குப் பிறகு அதே சிறைக்கு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அப்போது, தங்கள் கைகளையும், தலையையும் சுவரில் மோதச் செய்து கைதிகள் போராடினார்கள். 'சஞ்சீவ் பட் இந்தச் சிறையில் இருந்து மாற்றப்பட வேண்டும்’ என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். கைதிகள் சிலர் தற்கொலைக்கும் முயன்றார்கள். அந்த அளவுக்கு சஞ்சீவ் பட், டார்ச்சர் செய்ததாக புகார்கள் கிளம்பின.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் சஞ்வீவ் பட் ஒரு மனு தாக்கல் செய்தார். 'குஜராத் கலவரத்தின்போது போலீஸாரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மோடி உத்தரவிட்டார்’ என்று கூறினார் சஞ்சீவ் பட். இத்தனை வருடங்கள் கழித்து இப்போது ஏன் மோடியின் மீது குற்றம் சுமத்துகிறார் என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் இந்த வழக்கில் முதல் முக்கியமான நேரடி சாட்சி இவர் மட்டுமே.
சில நாட்களுக்கு முன்னர் திடீரென இவருக்குக் கீழ் பணியாற்றிய கே.டி.பந்த் என்ற கான்ஸ்டபிள், 'குஜராத் கலவரத்தின்போது மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் நானும் இருந்தேன் என்று இந்த மனுவில் கையெழுத்திடு என்று சஞ்சீவ் பட் தன்னைக் கட்டாயப்படுத்தினார்...’ என்று போலீஸில் புகார் அளித்தார். இவராக புகார் கொடுத்தாரா அல்லது கொடுக்க வைக்கப்பட்டாரா என்பதுதான் புதிர்.
அந்தப் புகாரின் அடிப்படையில்தான் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார் சஞ்சீவ் பட். இதைத் தொடர்ந்து சஞ்சீவ் பட்டின் வீட்டில் போலீஸாரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அகமதாபாத் மாஜிஸ்திரேட், அவரை போலீஸ் காவலில் வைக்க அனுமதி மறுத்தார். அதை எதிர்த்து குஜராத் மாநில அரசு, அகமதாபாத் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய, அக்டோபர் 7-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டது நீதிமன்றம். இப்போது சஞ்சீவுக்கு ஆதரவாக குஜராத் கலவரங்களின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தர போராடிக் கொண்டிருக்கும் டீஸ்டா செடல்வாடா, மல்லிகா சாராபாய் போன்றவர்கள் களத்தில் குதித்து இருக்கிறார்கள். 'மோடி ரொம்ப நல்லவர்’ என்று முன்பு பேசிய அண்ணா ஹஜாரேவும் இப்போது சஞ்சீவுக்கு ஆதரவாக இருக்கிறார். 'என் கணவருக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு மோடிதான் பொறுப்பு’ என்று ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார் சஞ்சீவின் மனைவி ஸ்வேதா.
60 கோடி செலவழித்து மோடி நடத்திய உண்ணாவிரதம் மீதான விமர்சனம் அடங்குவதற்குள் சஞ்சீவ் பட் விவகாரம் தீப்பற்றி எரிகிறது. இந்த முறை மோடிக்கு சிக்கல்தானா?
ந.வினோத்குமார்
************************************************************************
போலீஸைப் பார்த்ததும் செல்போனைத் தேடிய எம்.ஆர்.கே.!

முட்டத்தில் நடந்த ரெய்டு!
நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நேரு, பொன்முடி என பலர் வரிசையாகக் கைதாக... தானும் கைதாகலாம் என்ற எதிர்பார்ப்புடன்தான் இருந்தார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். ஆனாலும்கூட தனது சாமர்த்தியத்தாலும், கடலூர் மாவட்ட போலீஸ் உதவியுடனும் தனக்கு எதிராக வந்த புகார்களை எல்லாம் தெரிந்துகொண்டு, சம்பந்தபட்டவர்களிடம் பேசி, அவற்றைத் தவிடு​பொடியாக்கி... கைதுப் படலத்தில் இருந்து தப்பித்து வந்ததாக தி.மு.க.வினர் சொல்லி வந்தார்கள்!
இந்த நிலையில்தான் திடீரென எம்.ஆர்.கே-யின் சொத்து விவரங்களைக் கணக்கெடுக்கத் தொடங்கினர், விஜிலென்ஸ் துறையினர். ஏற்கெனவே எம்.ஆர்.கே மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்க, இப்போது இந்த ரெய்டா என்று சிலர் ஆச்சர்யப்பட்டனர்.
கடந்த 4.10.2011 அன்று காலை சரியாக 7 மணிக்கு, எம்.ஆர்.கே-வின் சென்னை பாலவாக்கம் வீடு, மாயவரத்தில் உள்ள தங்கை கணவரான லிங்கம் வீடு, காட்டுமன்னார்கோவில் ஜவுளிக்கடை, இன்ஜினீயரிங் மற்றும் பி.எட். கல்லூரிகள், முட்டத்தில் இருக்கும் அவரது சித்தப்பா தெய்வசிகாமணி வீடு, சிதம்பரத்தில் அக்காள் மகன் செந்தில்குமார் வீடு, நண்பர்களான வடலூர் சிவக்குமார், ஸ்ரீமுஷ்ணம் தங்க ஆனந்தன் வீடு என மொத்தம் 11 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. ஒரு டீமுக்கு ஐந்து முதல் ஏழு பேர் என்று பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு டீமுக்கும் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் ரெய்டுக்கு ஏற்பாடானது. அதன்படி, முதல் நாளே சம்பந்தப்பட்ட இடங்களை நோட்டமிட்டனர்.
திருச்சி இடைத்தேர்தல் வேலையாகச் சென்று​வந்து, 4-ம் தேதி காலை 6 மணிக்கு முட்டம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் படுத்திருந்தார் எம்.ஆர்.கே.! தூங்கிக் கொண்டு இருந்த அவரை, காலை 7 மணிக்கு எழுப்பி, ''உங்கள் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம்...'' என்றது, டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைலையில் வந்த போலீஸ் டீம். ஒன்றும் புரியாமல் நின்றவர் செல்போனை தேடினார். அதுவும் போலீஸ் வசம் இருந்தது. அந்த செல்போனைக்கூட கையில் தராமல், வீட்டில் உள்ள அனைத்தையும் தங்கள் வசம் கொண்டுவந்தனர். ரெய்டு சம்பவம் மாவட்டத்தில் உள்ள கட்சிக்காரர்களுக்குக் காட்டுத் தீயாகப் பரவ... கடலூரில் இருந்து வழக்கறிஞர் அணி உடனடியாக முட்டம் கிராமத்துக்குச் சென்றது. அதற்கு எந்தப் பலனும் இல்லை. வீட்டு வாசலைத் தாண்டி யாருக்கும் அனுமதி இல்லை. அதற்குள் கட்சிக்காரர்கள் சுமார் 200 பேர் வீட்டின் முன் திரண்டுநின்று, ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர்.
பிற்பகல் 1.55 மணி வரை இந்த சோதனை தொடர்ந்தது. வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சொத்துகளின் டாக்குமென்ட்​களை எல்லாம் சோதனையிட்ட போலீஸார், அவற்றை வரிசையாக டைப் செய்து வைத்துக்கொண்டனர். சோதனை முடிந்து வெளியில் வந்தவர்கள் மேம்​போக்காக, ''எதுவும் சிக்கவில்லை!'' என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றனர்.
''லேட்டாக வந்தால் எப்படி சிக்கும்? முன்​னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராகக் கைது ஆனபோதே இங்கேயும் இதுபோல் நடக்கும் என்று தெரிந்து எல்லாத்தையும் எப்படி செய்யணுமோ அப்படி செய்துவிட்டார்! இவர் என்ன விவரம் தெரியாதவரா?'' என்று நக்கல் அடித்தனர் கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள்!
அப்போது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ''இது அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. நாங்கள் வைத்திருக்கும் சொத்துகளுக்கு சட்டப்பூர்​வமாக எங்கள் அப்பா காலத்தில் இருந்தே முறையாக வருமான வரி செலுத்தி வருகிறோம். திடீரென எதையும் நாங்கள் வாங்கவில்லை. உறவினர்கள் பெயரிலும் எதையும் வாங்கவில்லை! உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை! இது திடீர் நடவடிக்கை அல்ல... ஒரு மாதமாக 'இப்போ நடக்​கும், அப்போ நடக்கும்’ என்று இருந்ததுதான்!'' என்றும் சொன்​னார்.
வெளியில் வந்த விஜிலென்ஸ் டீம் அதிகாரி ஒருவரிடம் தனியே பேசி​னோம். ''விஜிலென்ஸ் சோதனை என்பது திடீரென செய்யப்பட்டு, ஆவணங்களைக் கைப்பற்றுவது அல்ல. குறைந்தது மூன்று மாதங்​களுக்கும் மேலாக கவனிப்போம். எங்கு சோதனை செய்யப்பட இருக்கிறதோ அந்த இடத்தையும், சம்பந்தபட்ட நபர்கள் பற்றியும் குழு அமைத்து முழுமையான தகவல்களை சேகரித்த பின்புதான் சோதனையில் இறங்குவோம். இதுவும் அப்படித்தான் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபற்றி உடனடியாக நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. மொத்தம் 11 இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. பல விவரங்கள் அதில் உள்ளன. சாதாரண மக்களுக்கே தெரியும், எம்.ஆர்.கே-வுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி வந்தது என்று. எங்களுக்கா தெரியாது? அதற்கு எல்லாம் அவர் பதில் சொல்லியே தீரவேண்டிய நிலை வரும்!'' என்றார், அந்த அதிகாரி.
க.பூபாலன்,
படங்கள்: எஸ்.தேவராஜன்
*********************************************************************************
ஈழத்தமிழர்களை விடுதலை செய்த ஜெ.!

மகிழ்ச்சியில் திளைக்கும் அகதிகள்!
செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் இருந்த இலங்கைத் தமிழர்கள் 15 பேரை விடுதலை செய்துள்ளது தமிழக அரசு. பல ஆண்டுகளாக அடைபட்டுக்கிடந்தவர்கள், கடந்த 2-ம் தேதி சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிவிட்டனர். மகிழ்ச்சியுடன் வெளியே வந்த அவர்களை வரவேற்க, உறவினர்கள் காத்திருந்தனர்.
தங்களை விடுதலை செய்யக்கோரி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் பல முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கடந்த ஜனவரி 27-ம் தேதி தொடங்கிய போராட்டத்தில் 10-வது நாளிலேயே பலருக்கு உடல்நலம் பாதிக்கப்​பட்டது. விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால், உண்ணா​விரதத்​தைக் கைவிட்டனர். ஆனால், வழக்கம்போல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. க்யூ பிரிவு போலீசுக்கும், தலைமைச் செயலகத்துக்கும் மனு அனுப்பிக்கொண்டே இருந்தனர். ஆனால், அப்போது இருந்த ஆட்சியாளர்கள் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவே இல்லை.
சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வர் ஜெயலலிதா தங்களது கோரிக்​கைகளுக்கு செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கையோடு, செப்டம்பர் 5-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். அதிகாரிகளும் வழக்கம்போல் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இலங்கைத் தமிழர்கள் இந்த முறை ஏமாறவில்லை. உடல் நிலை பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள், உயிரைப் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். பதற்றம் அடைந்த அதிகாரிகள், 'இந்தமுறை நிச்சயம் விடுதலை செய்து விடுவோம்’ என்று, எழுதிக் கொடுக்காத குறையாக உறுதி அளித்தனர். இதையடுத்து, 14-வது நாளில் போராட்டத்தைக் கைவிட்டனர்.
'இலங்கைக்குச் செல்லக் கூடாது. வழக்குகள் முடியும் வரை தமிழகத்தில் தங்கி இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள உறவினர்களின் முகவரியைக் கொடுக்க வேண்டும்’ என்ற நிபந்தனைகள் விதிக்கப்​பட்டு, 15 பேர் மட்டும் கடந்த 2-ம் தேதி விடுதலை செய்யப்​பட்டனர். இன்னும் 31 பேர் முகாமில் இருக்​கிறார்கள். 
முகாமில் இருந்து வெளியே வந்த இலங்கைத் தமிழர்களைச் சந்தித்தோம்.
''பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்தது மற்றும் சிறு குற்றத்துக்காக இந்த முகாமில் அடைக்கப்பட்டு இருந்த 15 பேருக்கு மட்டுமே இப்போது ஜாமீன் கிடைத்துள்ளது. நாங்கள் உழைத்துதான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். இங்​குள்ள பெரும்பாலோரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கையில் இருந்து முறைப்​படி இந்தியா வந்து தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கியுள்ளனர். நாங்கள் இல்லாததால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாங்கள் வெளியில் வந்தால்தான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். அதனால்தான் போராட்டத்தைத் தொடர்ந்தோம். தமிழக அரசின் கருணையால் நாங்கள் இப்போது விடுதலையாகி இருக்கிறோம்!'' என, மகிழ்ச்சியுடன் கூறினர்.
க்யூ பிரிவு அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசினார். ''இலங்கையில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 25,000 பேர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்து இருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 114 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல் செய்தவர்கள் மட்டுமே செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள்தான், தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி அடிக்கடி போராடு​கின்றனர். சிறப்பு முகாம்களில் உள்ளவர்களின் குற்றப் பின்னணி, முகாமில் அவர்களின் நடவடிக்கை, குடும்பச் சூழல் போன்றவற்றை கருத்தில்கொண்டு சிலரை விடுவிக்க அரசுக்கு பரிந்துரை செய்தோம். அதனால்தான், தமிழக அரசு அவர்களை விடுதலை செய்து உள்ளது!'' என்றார்.
சில மாதத்துக்கு முன், பூந்தமல்லி சிறப்பு முகாமில் நான்கு இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். விடுதலை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அமலன் என்பவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இப்போது, அவரும் விடுதலை ஆகிவிட்டார். செங்கல்பட்டு மற்றும்  பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருக்கும் 34 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
பா.ஜெயவேல்
************************************************************************
நுழைந்தவர் தலையைத் தட்டிய தூக்குக் கயிறு!

தூங்கா நகரில் தூங்காநிலைப் போராட்டம்!
துரை நகரம் தூங்காமல் இருப்பது புதிதல்ல. ஆனால், பிழைப்​புக்காவோ, பொழுது​போக்குக்காகவோ அல்லாமல் ஒரே ஒரு கோரிக்கைக்காக முழு இரவும் மக்கள் கொட்டக் கொட்ட விழித்திருந்தது புதுமை! முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் கோரிக்கை!
அக்டோபர் 1-ம் தேதி மாலை6 மணிக்கு ஆரம்பித்த இந்தத் தூங்கா​நிலைப் போராட்டம்மறுநாள் காலை 6 மணி வரை தொடர்ந்தது. போராட் டம் நடந்த இறையியல் கல்லூரி மைதானத்தின் நுழைவாயிலை அடைந்தபோதே அதிர்ச்சி. தூக்கு மேடையையே நுழைவாயிலாக அமைத்து, உள்ளே வரு​வோரின் தலையை லேசாக உரசியபடி பயமுறுத்திக் கொண்டிருந்தது, ஒரு பெரிய தூக்குக் கயிறு!
தூக்குத் தண்டனைக்கு எதிராக சுமார் 30 பேர் இங்கே கண்டன உரை நிகழ்த்தினர். மைதானத்தில் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பலர் திரண்டு இருந்ததைக் கண்டு, ஈழப் பிரச்னை, அமைதிப்படை, ராஜீவ் கொலை, 3 தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என சுருக்கமாக, சுருக்கென வரலாற்றைச் சொன்னார் பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன்.
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் பங்கேற்ற வெற்றி செங்கொடி என்ற பெண், 'மரண தண்டனை பெற்றவர்களைத் தூக்கிலிடாமல் விட்டால், அவர்களால் இந்த சமுதாயத்துக்கு, நாட்டுக்குக் கேடு விளையும் என்று சொல்பவர்களே! எங்கள் இயக்கத்தின் தலைவர் தியாகுவை தூக்கிலிடாததால், யாருக்கு என்ன கேடு வந்துவிட்டது? நல்ல பல நூல்கள்தானே கிடைத்தது?' என்று கேட்டார்.
'இந்தியாவில் சட்டப்படியான மரண தண்டனைகள் படிப்படியாகக் குறைந்துவிட்டன. ஆனால், சட்டவிரோத மரண தண்டனைகள் அதிகரித்துவிட்டன. சட்டத்தால் கொல்கிறது, துப்பாக்கியால் கொல்கிறது, அணு உலையாலும் கொல்கிறது. மொத்தத்தில் கொலைகார அரசு இது!' என்றார் தியாகு வேதனையாக.
'இந்தப் போராட்டத்தின் தொடக்கம் ஆகஸ்ட் 11-ம் நாள். 3 தமிழர்களின் கருணை மனுக்கள் அன்றுதான் தள்ளுபடி செய்யப்பட்டன. இப்போது உயர் நீதிமன்ற தடை உத்தரவு மற்றும் தமிழக சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் அவர்களின் தூக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரச்னை முடிந்துவிடவில்லை. இப்போதும்கூட தூக்குத் தண்டனையை எதிர்நோக்கித்தான் இருக்கிறார்கள் அவர்கள். அவர்களை மீட்கும் வரை நாம் தூங்கக்கூடாது என்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காகத்தான் இந்தத் தூங்காநிலைப் போராட்டம்!'' என்றார் கொளத்தூர் மணி.
அடுத்துப் பேசிய நாஞ்சில் சம்பத், 'ராஜீவ் கொலைக்குப் பின்னால் இருக்கிற மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படவில்லை. ஜெயின் கமிஷன் விசாரணை முற்றுப் பெறவில்லை.
ஆனால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், மனநோயாளியைப் போல பேசி வருகிறார். 'சிறைச்சாலைக்குள் சென்று இந்த 3 தமிழர்களையும் கொல்ல வேண்டும்’ என்று வெளிப்படையாகவே பேசுகிறார். காவல் துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப் பேசுவதற்கு என் கையிலும் ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. 'இவர்களை எல்லாம் கொல்ல வேண்டும்’ என்று நான் பேசினால், சட்டம் என்னைக் கைது செய்யாமல் விட்டுவிடுமா?'' என்று முடித்தார்.
உறங்காநிலைப் போராட்டம் முடித்து மக்கள் சாரை சாரையாகப் கிளம்பியபோது, கீழ் வானம் வெளுத்து இருந்தது.
கே.கே.மகேஷ்,  ரா.அண்ணாமலை
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
 தாக்கினாரா ஹென்றி டிஃபேன்?
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த வல்லரசு என்ற வாலிபரை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஹென்றி டிஃபேன் கழுத்தைப் பிடித்துத் தள்ள... பிரச்னை ஆனது. இது சம்பந்தமாக எஸ்.எஸ்.காலனி போலீஸார் ஹென்றி டிஃபேன், அவரது மகள் அனிதா, மருமகன் பிரதீப் உட்பட நான்கு பேர் மீது கொலைமுயற்சி வழக்குப் போட்டுள்ளனர்.
இதுகுறித்து வல்லரசு, ''கடந்த வாரம் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் கண்காணிப்பகம் சார்பில் ஒரு ஆர்ப்​பாட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போதே ஹென்றி டிஃபேனின் மருமகன் பிரதீப் என்​னைக் கேவலமாகத் திட்டினார். நான் ஒதுங்கி வந்துவிட்டேன். இந்த நிலையில், இந்தப் போராட்டத்துக்கு வந்தபோது பிரதீப், என் பைக்கை எட்டி உதைத்து, என்னைத் தாக்கினார். இதுபற்றி டிஃபேனிடன் புகார் செய்யச் சென்றபோது, அவரும் என்னைத் திட்டினார். அவரது மகள் அனிதா செருப்பால் அடித்தார். கூட இருந்த சிலரும் கொலைவெறியுடன் தாக்கினர்!'' என்றார்.
புகார் குறித்து ஹென்றி டிஃபேனிடம் கேட்டபோது, ''எங்கள் நிறுவனத்தில் வின்சென்ட் என்ற வக்கீலிடம் உதவியாளராக இருந்து நீக்கப்பட்டவர், வல்லரசு. நீக்கிய பிறகு எதற்காக நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கும், தூங்காநிலைப் போராட்டத்துக்கும் வருகிறார் என்றே புரியவில்லை! அவரை நான் கையைப் பிடித்து வெளியே தள்ளியது மட்டும்தான் உண்மை. தாக்கவில்லை!'' என்றார்.
*********************************************************************************
அங்கே நடந்ததை எப்போது விசாரிப்பீர்கள்!

மாதேஸ்வரன்... மேட்டூர்... பண்ணாரி...
வாச்சாத்தியைத் தொடர்ந்து அடுத்த பூகம்பம்..
வாச்சாத்தி சம்பவம் நடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே குற்றவாளி​களைக் கண்டறிய அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது, வன்முறையில் ஈடுபட்ட 269பேருடன் மேலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து நிறுத்தப்​பட்டனர். பாலியல் குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட பெண்கள் மிகச்சரியாகவே அடையாளம் காட்டினார்கள். இதற்கு 10 ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் அந்தப் பெண் துல்லியமாக அடையாளம் காட்டினார். ''இப்ப இல்லீங்கய்யா... எப்ப கேட்டீங்கன்னாலும் அடையாளம் காட்டுவோம். வாழ்க்கையை சீரழிச்சவங்களை எப்படிங்கய்யா மறக்க முடியும்?'' என்று நீதிபதி அசோக்குமாரிடம் சொன்னார் ஒரு பெண்.
ஆம். வாச்சாத்தி பயங்கரம் மற்றவர்களுக்கு ஒரு சம்பவம்; அவர்களுக்கோ வாழ்க்கையில் மறக்கவே முடியாத களங்கம்!
நீதிமன்றத் தீர்ப்பு வெளியான அன்று வாச்சாத்தி பெண்களைப் பாலியல் வன்முறைக்குஆளாக்கியவர்கள் மட்டும் தண்டனைக்கு ஆளாகவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களும் இன்னொரு முறை தண்டனைக்கு ஆளானார்கள். இப்போது அவர்கள் வயதாகி, தாய்மை ஸ்தானத்தில் இருக்கின்றனர். அவர்களுடைய பிள்ளைகள், 'தன் தாயும் மானபங்கப்படுத்தப்பட்டவள்’ என்ற உண்மையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
இன்றைய வாச்சாத்தி தீர்ப்புக்காக, அந்த மக்கள் மிகப் பெரிய விலை கொடுத்து இருக்கிறார்கள். வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த 269 அரசு அலுவலர்களை எதிர்த்து 19 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். சம்பவம் நடந்தது 1992 ஜூன் 20, 21, 22 தேதிகளில். ஆனால் விஷயம் வெளியே தெரியவே ஒரு மாதம் ஆனது.   
சந்தனக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மூன்று நாட்கள் கோரத் தாண்டவம் ஆடினார்கள் அதிகாரிகள். 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் என 133 பேர் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். சிறுமிகள் உட்பட 18 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தனர். தமிழகமே கொந்தளித்தது. ஆனால், காவல் துறையும் தமிழக அரசும் வாச்சாத்தி மக்களை முற்றிலுமாக வஞ்சித்தன. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் போராடித்தான் சி.பி.ஐ. விசாரணையைப் பெற்றார்கள். இதுவரை உள்ளூர் காவல் துறை, முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யப்படாத விசித்திரமான இந்த வழக்கில், சி.பி.ஐ. 1996-ல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல்​செய்தது. அப்போது தொடங்கி வழக்கை முறியடிக்க என்னென்ன உபாயங்கள் உண்டோ அவ்வளவையும் கையாண்டார்கள்.  ஒரு முறை நீதிபதியே தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று சி.பி.ஐ-யிடம் சொன்னார்.
''முத்துமாரப்பன் ஓர் உதாரணம். வனத் துறையைச் சேர்ந்த இவர், அடையாள அணி​வகுப்பு நடப்பதற்கு ஓரிரு நாட்கள் முன் பாதிக்​கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா இரண்டு லட்சம் என்று பேரம் பேசினார். மக்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் அவ்வளவையும் நிர்மூலமாக்கினார்கள். மக்கள் அசையவில்லை. பொய் வழக்குகள் போட்டு அலைக்கழித்தார்கள். ஆயுதங்களோடு வந்து மிரட்டினார்கள். மக்கள் அசையவில்லை!'' என்கிறார் போராட்டக் குழுவைச் சேர்ந்தவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான டில்லி பாபு.
வாச்சாத்தி வழக்கு முக்கியமான இரண்டு பலவீனங்களை சுட்டிக்​காட்டி இருக்கிறது.
இந்தியக் காடுகளில் என்ன நடக்கிறது? காடுகளில் வெளி​யாட்கள், குறிப்பாக அரசப் படைகள் புகுந்தால் என்ன ஆகும்? நம்முடைய அதிகார வர்க்கம் என்ன நினைக்கிறது என்றால், நாட்டின் எல்லா அதிகாரங்களும் தமக்கானவை என்று நினைக்கிறது. ஆனால், காட்டின் மீதான முதல் உரிமை, காட்டிலேயே வாழும் பழங்குடிகளுக்குத்தான். இந்த உரிமைகள் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்பதே முதல் விஷயம்.
அடுத்ததாக, இந்த வழக்கில் நீதி வழங்க 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் பல அதிகாரிகள் பதவி உயர்வோடு தங்கள் முழுப் பணிக் காலத்தையும் முடித்துவிட்டார்கள். 54 பேர் இறந்துவிட்டனர். பாதிக்கப்பட்டோர் 33 பேர் எந்த நியாயத்தையும் பெறாமலே இறந்து​விட்டனர்.
இதுகுறித்துப் பேசும் மனித உரிமைச் செயல்​பாட்டாளர் ச.பால முருகன், ''வீரப்பன் தேடுதல் வேட்டை நடந்த மாதேஸ்வரன் மலை முகாம், மேட்டூர் முகாம், பண்ணாரி முகாம்களில் விசார​ணைக்கு அழைக்கப்பட்ட அத்தனை பேருமே சித்ரவதையை எதிர்​கொண்டார்கள். நூற்​றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். அனேகமாக, எல்லாப் பெண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்​பட்டனர். இதற்காக ஒரு தனிநபர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை. குறைந்தபட்சம், அவர்கள் மீது வழக்குகூட பதிவு​செய்யப்படவில்லை. ஆனால், அவர்கள் அத்தனை பேரும் அரசால் கௌரவிக்கப்பட்டனர். என்ன மாதிரியான சட்ட அமைப்பில் நாம் இருக்கிறோம் என்பதற்கு ஓர் உதாரணம் இது!'' என்று ஆவேசப்படுகிறார்.
உச்ச நீதிமன்றம், 'வன்முறைகளிலேயே கொடூரமானது அரச வன்முறை’ என்று சொல்கிறது. ஆனால், அரச வன்முறையை யார், எப்படி, எவ்வளவு காலகட்டத்துக்குள் விசாரிப்பது? தண்டிக்கும் அதிகாரமிக்க ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். குடிமக்கள் மீதான அரச வன்முறையைக் கட்டவிழ்த்து​விடுபவர்கள் மீது உயர்ந்தபட்ச தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். வாச்சாத்தி அதற்கான தொடக்கப்​புள்ளியாக அமையட்டும்!
சமஸ்
************************************************************************
கத்தி ஆன ஸ்பூன்... மரம் ஏறிய கைதிகள்...

'அட்டாக்' சிறைக்குள் 'அட்டாக்'!
க்டோபர் 4-ம் தேதி... திருச்சி மத்திய சிறையில் கைதிகள் சிலர் திடீரென மரத்தின் மேல் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்த, ஒவ்வொரு நிமிடமும் அது தீவிரமாகி அடுத்த கட்டத்துக்குப் போக... 'விருமாண்டி’ படம் போல பெரும் கலவரம் மூண்டுவிடுமோ என்று 'திக்...திக்’ இதயத்துடன் தவித்தனர் கைதிகளின் உறவினர்கள். அது மட்டுமின்றி, அதே சிறையில் தி.மு.க. பிரமுகர்கள் லால்குடி எம்.எல்.ஏ-வான சௌந்தர பாண்டியன், கே.சி.பழனிசாமி, பகுதிச் செயலாளர் காஜாமலை விஜய், மாவட்டத் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், அட்டாக் பாண்டி உள்ளிட்டோர்  அடைக்கப்பட்டு இருக்க... அப்புறம் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காதா என்ன!
தண்டனை பெற்ற மற்றும் விசாரணைக் கைதிகள் 2,000-க்கும் அதிகமானோர்  அடைக்கப்பட்டு இருக்கும் திருச்சி சிறையில், 1-ம் பிளாக்கில் குண்டாஸ் கைதி களும், 6 மற்றும் 7-ம் பிளாக்கில் தண்டனைக் கைதி களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் கோரிக்கை என்ற பெயரில் களேபரப்படுத்திவிட்டனர். அன்றைய தினம் காலையில் 1-ம் பிளாக்கில் வார்டன்கள் சோதனை நடத்தியபோதே, கைதி ஒருவரது அறையில் கிடந்த ஸ்பூனை கைப்பற்றினர். அது தொடர்பாகக் கைதிகளுக்கும் வார்டன் களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கடைசியில் தடியடியில் முடிய... சில கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது. மதன் என்ற கைதிக்கு மட்டும் படுகாயம்! இதனால், ஆத்திரம் அடைந்த கைதிகள், சிறை வளாகத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தினர். 19-க்கும் மேற்பட்ட கைதிகள் மரத்தின் மீது ஏறி நின்றுகொண்டு, 'கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்று மிரட்டினர். விவரத்தைக் கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு நாம் விரைந்தோம். கைதிகளின் போராட்டத்தை பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் இருந்து நன்றாகப் பார்க்க முடிந்தது. காரணம், மரங்கள் காம்பவுண்ட் சுவரைவிட உயரமாக இருந்ததுதான். மரத்தின் மீது ஏறி நின்ற கைதிகள் தட்டு மற்றும் கரண்டிகளை தட்டி கூச்சலிட்டுக்கொண்டு இருந்தனர். நமது புகைப்படக்காரரின் கேமராவைக் கண்டதும் உற்சாகமானவர்கள், ''ஜெயிலில் சாப்பாடு சரியில்லை... காலையில் இருந்தே நாங்கள் சாப்பிடவில்லை...'' என்று கத்தினர். மேற்கொண்டு பேச முற்பட்டபோது, கண்காணிப்புக் கோபுரத்தில் இருந்த காவலர்கள், துப்பாக்கியை நீட்டிப் பிடித்தபடி, ''யாரும் அருகில் நிற்க வேண்டாம்...'' என்று எச்சரிக்கை விடுத்ததால், அங்கிருந்து அகன்றோம்.
தொடர்ந்து போராட்டம் தீவிரமாக, ஆர்.டி.ஓ-வான சம்பத், தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். துணை கமிஷனர் ஜெயபாண்டியனும் உள்ளே சென்றார். ''எங்களைத் தாக்கிய வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கோரஸாக சொன்னார்கள் கைதிகள். ''உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று அதிகாரிகள் உறுதி சொன்ன பின்னரே... கைதி கள் போராட்டத்தைக் கைவிட்டனர். சிறைக் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜுவிடம் பேசினோம். ''நான் இங்க மாற்றலாகி வந்து ரெண்டு வாரம்தான் ஆகுது. கைதிகளுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கணும். அப்பதான் நாம சொல்றதைக் காது கொடுத்து கேட்பாங்க. அதுபோல ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கணும்னு எதிர்பார்ப்பேன். குண்டாஸ் கைதிகள் எந்த ஒழுங்குக்கும் கட்டுப்படறதில்லை. முட்டை ரவியின் கூட்டாளிகள் கிட்டத்தட்ட 50 பேர் குண்டாஸ்ல இருக்காங்க. அவங் களோட ஆட்டம்தான் ஜாஸ்தி. சில சிறைகளில் சினிமா பார்க்க, தியேட்டர் அமைச்சிருப்பாங்க. மாசத்துக்கு ஒரு தடவை சினிமா போடுவாங்க. திருச்சி சிறையில் அது மாதிரி எதுவும் இல்லை. அதனால், அந்தக் கைதிகள் தங்களோட அறையில் இருக்குற டி.வி-யில் சினிமா பார்க்க அனுமதிக்கணும்னு கேட்டுக் கிட்டு இருந்தாங்க. அதில், சில பிரச் னைகள் வந்ததால், டி.வி-யை எடுக்கச் சொல்லிட்டேன். அதுபோல, எந்த ஒழுங்கும் இல்லாம அடுத்த பிளாக் பகுதிகளுக்குப் போய் சுத்திக்கிட்டு இருப்பாங்க. அதுக்கும் தடை போட் டேன். அன்னிக்கு காலையில் 1-ம் பிளாக்கில் வார்டன்கள் சோதனை செஞ்சாங்க. அப்ப ஒரு ஸ்பூனோட முனையை, கூராக்கி கத்தி மாதிரி செஞ்சு வெச்சிருந்ததைக் கண்டு பிடிச்சாங்க. அதை எடுத்துட்டு போகக் கூடாதுன்னு கைதிங்க பிரச்னை பண்ணினாங்க. மதன், சுரேஷ் உட்பட பத்து பதினைஞ்சு கைதிங்க முரட்டுத்தனமா வார்டனைகளைத் தாக்க... தற்காப்புக்காக வார்டன்களும் பதிலுக்குத் தாக்கினாங்க. இதுதான் பிரச்னை. கைதி மதனுக்கும் மத்தவங்களும் பெருசா அடி இல்லை. லேசான காயம்தான்...'' என்று விளக்கம் கொடுத்தார்.
இருப்பினும், கைதிகள் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் ரகளை யில் ஈடுபடலாம் என்பதே உண்மை நிலை!
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010