********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (15 அக்டோபர் 2011)

Friday, October 14, 2011


கல்லீரலே... இனி கலங்காதே!

வந்தாச்சு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட்

னித உடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொடுப்பதுடன்,
தேவையற்ற பொருட்களை வெளியேற்றி உடம்பைப் பாதுகாக்கும் தொழிற்சாலையாகவும் செயலாற்றுகிறது. அத்தனை முக்கியத்துவம் நிறைந்த கல்லீரலில் பரம்பரை ரீதியாக ஏற்படும் பிரச்னைகளால் உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு. இப்போது அதனைத் தடுக்கப் புதிய அறுவை சிகிச்சையான செல் டிரான்ஸ்பிளான்ட் அறிமுகமாகி விட்டது. 
இதுகுறித்து, சென்னை குளோபல் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நரேஷ் பி.சண்முகம் நம்மிடம் பேசினார். ''நமது உணவுகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. நாம் உட்கொள்ளும் உணவானது செரிக்கப்பட்டு, ஊட்டச் சத்தாக ரத்தத்தில் கலக்கின்றன. ரத்தத்தில் கலந்த இந்த ஊட்டச் சத்துக்கள் கல்லீரலுக்கு கொண்டுசெல்லப்படும். பின்பு அவை சாதாரண சர்க்கரை, அமினோ அமிலம் மற்றும் கொழுப்பாக மாற்றப்படும். இதன் மூலம் வெப்ப ஆற்றல் உருவாக்கப்படுகிறது. இப்படி உடைக்கப்பட்ட சாதாரண சர்க்கரை, அமினோ அமிலம், கொழுப்பு போன்றவை உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான காம்ப்ளக்ஸ் சர்க்கரை, புரதம் மற்றும் கொழுப்பாக மாற்றப்படும். இப்படி இவை மாற்றப்படுவதற்கு என்ஸைம்கள் தேவைப்படுகின்றன. ஏதாவது ஒரு என்ஸைம் குறைந்தால்கூட ஊட்டச்சத்தை உடைக்கும் பணி தடைபட்டு, மெட்டபாலிக் எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பிரச்னை ஏற்பட்டுவிடும். இதை மெட்டபாலிக் டிஸ்ஆர்டர் என்று கூறுவோம்.
உணவில் உள்ள சத்துக்களை உடைத்து ஊட்டச் சத்துகளாக மாற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்ஸைம்கள் நம் உடலில் இருக்கின்றன. ஒரு என்ஸைம் குறைந்தாலும் பிரச்னைதான். அதனால் நூற்றுக்கணக்கான மெட்டபாலிக் டிஸ்ஆர்டர் பரவலாகக் காணப்படுகின்றன. அதில் ஒரு சில நோய்கள் மட்டும் மிக அரிதாக இருக்கும். உதாரணமாக புரதம் உடைக்கப்படும்போது, அது அமோனியாவை உற்பத்தி செய்யும். அமோனியா என்பது மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அது மூளையைப் பாதிக்கக்கூடியது. எனவே, கல்லீரல் அந்த அமோனியாவை யூரியாவாக மாற்றி சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது. அமோனியாவை யூரியாவாக மாற்றுவதை யூரியா சைக்கிள் என்று கூறுவோம். ஐந்து கட்டங்களாக இந்தப் பணி நடைபெறும். இதற்கு ஐந்து என்ஸைம்கள் தேவைப்படுகின்றன. இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் என்ஸைம் இல்லாமல் போய்விட்டால், இந்தப் பணி தடைபட்டு அமோனியா உடலில் தங்கிவிடும். இது மூளையைத் தாக்கி கடைசியில் உயிரிழப்பில் கொண்டுபோய்விடும்.
அதிக அளவில் பரம்பரை ரீதியாக குழந்தைக்கு இந்த நோய் கடத்தப்படுகிறது. பிறந்தவுடன் இந்தக் குறைபாடு தெரியாது. அவர்கள் குறிப்பிட்ட ஏதாவது ஓர் உணவை உட்கொள்ளும்போதுதான், பிரச்னை இருப்பது தெரிய வரும். உதாரணத்துக்கு ஹெரிடிட்டி ஃப்ராக்டோஸ் இன்டாலரன்ஸ் என்ற ஒரு வியாதி உள்ளது. சில குறிப்பிட்ட பழங்களை உண்ணும்போது அதில் உள்ள சர்க்கரையை ஜீரணிக்க முடியாமல் போய்விடும். அதனால், வயிற்றுப் போக்கு அல்லது கல்லீரல் செயலிழப்பில் கொண்டு போய்விடும். குழந்தைக்கு காய்கறி அல்லது பழங்களைப் புகட்ட ஆரம்பிக்கும்போதுதான் இந்தப் பிரச்னையே பெற்றோருக்குத் தெரிய வரும்.  கல்லீரலை மாற்றினால்தான் இவர்களால் உயிர் வாழ முடியும். சிலருக்கு ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் கிருமித் தொற்று காரணமாகவும் கல்லீரல் தோல்விப் பிரச்னை வரலாம்.
சிறுநீரகப் பிரச்னைக்கு டயாலிஸிஸ் செய்யப்படு வதுபோல, இவ ர்களின் கல்லீரலில் இருந்து குறிப்பிட்ட நஞ்சை அகற்றும் டயாலிஸிஸ் முறை வந்தது. ஆனால், அந்த சிகிச்சையால் எல்லாவிதமான நஞ்சையும் அகற்ற முடியவில்லை.மேலு ம், இதற்கான சிகிச்சைக் கட்டணமும் மிக அதிகம்.
இந்த நிலையில்தான் ஆக்ஸிலரி கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வந்துள்ளது. இதில், தானமாகப் பெறப்படும் கல்லீரலை, ஏற்கெனவே உள்ள கல்லீரலுடன் சேர்த்துப் பொருத்துவோம். இதனால் நோயாளியின் கல்லீரல் குறிப்பிட்ட பிரச்னையை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும். கூடுதலாகப் பொருத்தப்பட்ட கல்லீரல், அந்தக் குறிப்பிட்ட பிரச்னையை மட்டும் கையாளும். இதனால் நோயாளி தன் வாழ் நாள் இறுதி வரை இது தொடர்பான எந்த பிரச்னையும் இன்றி வாழ முடியும். இந்த அறுவை சிகிச்சை இந்தியாவில்  இங்கு மட்டுமே செய்யப்படுகின்றது.
இந்த சிகிச்சையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட் என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது. தானமாகப் பெறப்படும் கல்லீரலில் இருந்து குறிப்பிட்ட திசுவை மட்டும் தனியே பிரித்து எடுத்து, பதப்படுத்திப் பாதுகாத்துவைக்கப்படும். தேவைப்படும்போது, கல்லீரலுக்குச் செல்லும் ரத்தத்தில் அந்த கல்லீரல் திசுவைச் செலுத்துவோம். அது நோயாளியின் கல்லீரலில் சென்று சேர்ந்து, செயல்பட ஆரம்பிக்கும். லண்டன் கிங்ஸ் காலேஜில் பணியாற்றும்போது, இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினோம். சென்னையில் இதுபோன்று சிகிச்சை மேற்கொள்வதற்கான ஆய்வகம் உள்ளிட்டவை நிறுவும் பணியில் ஈடுபட்டுவருகிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மெட்டபாலிக் டிஸார்டருக்கான சிகிச்சை முறை என்பது ஓப்பன் சர்ஜரி முறையில் இருந்து மாறி சிறு துளை திசு செலுத்தும் முறைக்கு மாறிவிடும்!'' என்றார் நம்பிக்கையாக.
மருத்துவப் புரட்சிதான்!
பா.பிரவீன்குமார்
************************************************************************
அஞ்சா நெஞ்சனாக இருந்தால், இப்ப மோதிப் பார்க்கட்டும்!

ராஜன் செல்லப்பா ரணகளப் பேட்டி

டைநில்லாப் பேருந்தாக காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை பிரசாரத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறார் அ.தி.மு.க-வின் மதுரை மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பா. ''மதுரை மாநகராட்சியில் கூடாரம் போட்டு அபகரிக்கும் கூட்டத்தைத் துரத்தாவிட்டால், இனி சொந்த வீட்டில் குடியிருக்கவே தி.மு.க-காரங்க வாடகை கேட்பாங்க...'' - வில்லாபுரம் ஏரியாவில் முழங்கிக்கொண்டு இருந்த ராஜன் செல்லப்பாவிடம் மினி  பேட்டி...     
''ஹாட்ரிக் வெற்றி கண்ட தி.மு.க-விடம் இருந்து மதுரையை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?''
''மக்கள் சக்திக்கு மிஞ்சியது எதுவும் இல்லை என்பதை சட்டமன்றத் தேர்தல் நிரூபித்து​விட்டது. அ.தி.​மு.க-வுக்கு ஆதரவான அந்த அலை இப்போதும் அப்படியே இருக்கிறது. இங்கு இருந்த தி.மு.க. மேயர்கள் மூவருமே சுதந்திரமாக செயல்படவில்லை. அழகிரி ஆட்டுவித்தபடியே ஆடினார்கள். 'அடுத்தும் நாம்தான் வருவோம்’ என்ற மமதையில் மாநகராட்சிக்குள் தொட்டது அனைத்​திலும் ஊழல் செய்தார்கள். அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இந்த விழிப்பு உணர்வும், அம்மா அறிவித்திருக்கும் நலத் திட்டங்களும் எங்களுக்கு வெற்றியை சுலபமாகத் தந்துவிடும்.''
''ஊழல்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல் ஆதாரத்துடன் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?''
''ஒன்றென்ன... ஏகப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. ஏராளமான கட்டடங்களுக்கு  கட்டணம் வசூலிக்காமல் பிளான் அப்ரூவல் கொடுத்தார்கள். அப்பாவிகளிடம் கழுத்தை நெரித்து வரி வசூல் செய்தவர்கள், பல பெரிய வர்த்தக நிறுவ​னங்களிடம் லஞ்சம் வாங்கிக்​கொண்டு 15 ஆண்டுகளாக வரியே வசூலிக்கவில்லை. மாநகராட்சிக்குச் சொந்தமான பல முக்கிய இடங்களை தி.மு.க-காரர்களே ஆக்கிரமித்தார்கள். ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனத்திலும் ஏகப்பட்ட  மோசடி. சாலையே போடாமல் போட்டதாக கணக்குக் காட்டி பல கோடிகளைச் சுருட்டினார்கள். மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் துப்புரவுப் பணியாளர்களை, ஒரு வி.ஐ.பி-க்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தைச் சுத்தப்படுத்த தினமும் அனுப்பி இருக்கிறார்கள். நாங்கள் இதை எல்லாம் கட்டாயம் தோண்டி எடுப்போம். தவறு செய்த யாரையும் தப்பிக்கவிட மாட்டோம்!''
''ஆனால், 'அண்ணன் அழகிரியின் தேர்தல் வியூகம் இந்த முறையும் எங்களை ஜெயிக்கவைக்கும்’ என்று தி.மு.க-வினர் தெம்பாக இருக்கிறார்களே!''
''அழகிரிக்குன்னு ஏதா​வது போராட்ட வர​லாறு இருக்கா? அரசியல்​ரீதியாக எதிர்த்து நிற்கத் துணிவில்​லாமல், ஆளும் கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் அவர் பருப்பு வேகும். போலீஸை வைத்துக்கொண்டு மிரட்டி அரசியல் செய்பவருக்கு பேர் அஞ்சா நெஞ்சனா?  உண்மையிலேயே அழகிரி அஞ்சா நெஞ்சனாக இருந்தால், இப்ப மோதிப் பார்க்கட்டும். தன்னைக் காப்பாத்திக்கிறதே அவருக்கு இப்பபெரும்பாடு!''
''தி.மு.க. ஆட்சியில் மதுரைக்குப் பல திட்டங்கள் வந்திருப்பதாக தி.மு.க. வேட்பாளர் பாக்யநாதன் பட்டியல் போடுகிறாரே?''
''இரண்டு முறை ஆளும் கட்சி அந்தஸ்தில் இருந்த மதுரை மேயர்கள் அவர்களுடைய முதல்வரைச் சந்தித்து மதுரைக்காக வாங்கி வந்த சிறப்புத் திட்டங்கள் ஏதாவது உண்டா? உண்மை​யைச் சொல்ல வேண்டும் என்றால், திட்டங்களுக்கு நிதி கேட்டு மதுரை மேயர்கள் கருணாநிதியை சந்திக்கவே இல்லை. ஆனால், எங்களது ஆட்சியில் மதுரை தி.மு.க. மேயராக இருந்த ராமச்சந்திரனுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து சந்தித்த அம்மா அவர்கள், இரண்டு முக்கியப் பாலங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். அந்தப் பாலங்களைக் கட்டாமல்விட்டதுதான் தி.மு.க-வின் சாதனை.''    
'நீங்கள் மேயரானால் மதுரைக்​கான சிறப்புத் திட்டங்கள்?''
''அம்மா அறிவித்த மோனோ ரயில் திட்டம் மதுரைக்கு வரும்.  குடி தண்ணீர்ப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு, விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் புதிதாகப் பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவோம்.  வன்முறைக் களமாக சித்திரிக்கப்பட்டு​விட்ட மதுரையை உண்மையான கோயில் மாநகரமாக, கல்வி மாநகரமாக, வர்த்தக மாநகரமாக, புறநகரில் தொழிற்​சாலைகளைத் தொடங்கி தொழில் மாநகரமாக மாற்று​வது​தான் எங்களின் லட்சியம்!''
''தேர்தல் முடிவு உங்களுக்கு எந்த அளவுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?''
''2 லட்சம் வாக்கு வித்தியாசத்​தில் எங்களது வெற்றி இருக்கும். இதை மமதையால் அல்ல, அடக்கத்துடன்தான் சொல்கிறேன்!'' - படபட​வென பேசிவிட்டு மீண்டும் பிரசார ஜீப்பில் ஏறுகிறார் ராஜன் செல்லப்பா.
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
*********************************************************************************

நகராட்சித் தலைவர்... முந்துவது யார்?

16 நகரங்கள் பரபர ரிப்போர்ட்!

துறையூர்
: இங்கே தி.மு.க-வின் மாவட்ட பிரதிநிதி 'மெடிக்கல்’ முரளி மற்றும் அ.தி.மு.க-வின் நகர அவைத் தலைவர் ரவிவர்மாவுக்கும் போட்டி. முரளி முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தபோது கோயில்களுக்கு செய்த பணிகள், பக்தர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. இருந்தாலும் அப்செட்டில் இருக்கும் உட்கட்சிப் பங்காளிகள் ஏதேனும் உள்ளடி வேலையில் ஈடுபடுவார்களோ என்ற கலக்கத்தில் இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளரான ரவிவர்மா கட்சியில் நீண்ட காலம் இருந்திருந்தாலும், கட்சியினர் மத்தியில் அவ்வளவாக செல்வாக்கு இல்லாதவராக இருக்கிறார். அதனால் அவரது பிரசாரம் கொஞ்சம் டல்லடிக்கவே செய்கிறது. அதோடு, துறையூர் நகரப் பகுதி எப்போதும் தி.மு.க-வுக்கு செல்வாக்கான ஏரியா என்பதால், முரளியே முந்துகிறார்!

'விடிந்தால் கல்யாணம்’ என்பது போல் கிட்டத்தட்ட பரபரப்பின் விளிம்பில் நிற்கிறது, உள்ளாட்சி தேர்தல் களேபரம். அரசியல் வானில் அடடா ஆச்சர்யங்களும், அடேங்கப்பா மாற்றங்களும் நொடிக்கு நொடி நிகழ்ந்து கொண்டு இருக்கிற நிலையில், ஒரு ரவுண்டு ஓடி... அடுத்த செட் சேர்மன் வேட்பாளர்களின் நிலையைப் பதிவு செய்து வந்தோம்!
காங்கேயம்: கடந்தமுறை பேரூராட்சித் தலைவராக இருந்த தி.மு.க-வின் சுப்பு என்கிற சுப்பிரமணிக்கும், அ.தி.மு.க-வின் வெங்கு என்கிற மணிமாறனுக்கும்தான் போட்டி. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் ஊருக்கு எதுவும் செய்யவில்லை என்ற வெறுப்பு சுப்பு மீது இருக்கிறது. கட்சிக்காரர்களும் வேண்டாவெறுப்பாகக் கடமை ஆற்றுகின்றனராம். கடைசி ஐந்து நாட்களில் தாராள செலவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முயல்கிறார். கடந்த முறைக்கு முந்தைய தடவை இந்தப் பேரூராட்சியின் தலைவராக இருந்த ஏ.சி.கோவிந்தசாமியின் மகன்தான் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு. அப்பா செய்த நலத்திட்டங்கள், அவருக்கு ஊரிலுள்ள நல்ல பெயர் போன்றவற்றால் பெருவாரியான வாக்குகள் வெங்கு பக்கம் குவியும். இதற்கிடையில் போட்டியில் மளமளவென முன்னேறி வருகிறார் ம.தி.மு.க-வின் ஏ.சி.வெங்கடேசன். இவரது 'மிஸ்டர் க்ளீன்’ இமேஜும், மிக பக்குவமான குணமும் வெங்குவை வெலவெலக்க வைத்திருப்பதும் நிஜம்.
திருத்துறைப்பூண்டி:  திருத்துறைப்பூண்டி நகராட்சியின் முதல் சேர்மனான மணிமாறனின் மனைவி மைதிலி தி.மு.க. வேட்பாளர். இன்றும் சைக்கிள் மட்டுமே பயன்படுத்துபவர் மணிமாறன் என்கிற எளிமையை மக்கள் அங்கீகரிக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் மந்தமான செயல்பாடுகள் தி.மு.க-வுக்கு எக்ஸ்ட்ரா பலத்தைக் கொடுக்கிறது. இந்த நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியதே இல்லை என்பது கூடுதல் பலம். அ.தி.மு.க. வேட்பாளரான உமாமகேஸ்வரிக்கு நகராட்சியில் உள்ள முறைகேடுகள் மற்றும் தி.மு.க-வின் அதிரடி அரசியலை வெறுக்கும் நடுநிலை மக்களின் ஓட்டுகள் பலம்.  தே.மு.தி.க. ஆதரவுடன் களம் இறங்கி உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரேவதியும் மல்லுக்கட்டுகிறார். கடும் போட்டிகளுக்கு இடையே மூச்சு திணறி தி.மு.க. முன்னேறுகிறது.
 
ஸ்ரீவில்லிபுத்து£ர்: தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மனைவி தேவகி களம் இறக்கி விடப்பட்டுள்ளார். அதுபோல் அ.தி.மு.க. சார்பில்  முத்துராஜின் மனைவி செந்தில்குமாரி போட்டியிடுகிறார். புதுமுக வேட்பாளர் செந்தில்குமாரி தேர்தல் களத்தில் கரையேறுவாரா என்ற சந்தேகம் அ.தி.மு.க-வினருக்கு முதலில் ஏற்பட்டது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். ஸ்ரீவில்லிபுத்தூரில் கணிசமான ஓட்டு வங்கியை வைத்திருக்கும் அத்தனை சமுதாயத்தினரையும் கவரும் வகையில் சில ரகசிய ஆஃபர்களை அள்ளிவிட்டுள்ளனர் அ.தி.மு.க. நிர்வாகிகள். கூடவே முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் குடும்பத்தினர் மீது உள்ள அதிருப்தியும் இப்போது அ.தி.மு.க-வுக்கு சாதகம். ஒரு வழக்கு விவகாரத்தில் தாமரைக்கனியின் மகன்கள் உள்ளே போய்வந்ததை எல்லாம் மக்கள் மறக்கவில்லை. தேவகி வெற்றி பெற்றால் அவர்  நகராட்சித் தலைவராகவும், மகன் தங்கமாங்கனி நகராட்சித் துணைத் தலைவராகவும் ஆகி விடுவார்கள். நகராட்சி நிர்வாகம் மொத்தத்தில் தாமரைக்கனியின் குடும்பத்தின் கைகளுக்குப் போய்விடுமே என உள்ளூர்வாசிகள் அஞ்சுகின்றனர். விளைவு, அ.தி.மு.க-வின் செந்தில்குமாரிக்கு சாதகமான அலை வீசுகிறது.
குளச்சல்: தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வுக்கு இடையில் போட்டி நிகழ்ந்தாலும் இவர் கள் திரும்பிப்பார்க்கும் வகையில் முன்னேறி வருகிறார் சுயேச்சை வேட்பாளர் ஜேசையா. தி.மு.க-வின் வேட்பாளராக களமிறங்கியுள்ள நசீர் ஏற்கெனவே நகராட்சித் தலைவராக இருந்தவர். தொகுதியிலுள்ள முப்பது சதவிகித இஸ்லாமிய வாக்குகளே தன்னைக் கரைசேர்த்துவிடும் என்பது இவரது கணிப்பு. அ.தி.மு.க. சார்பாக களம் இறங்கி இருப்பவர் நகர செயலாளர் பெலிக்ஸ் ராஜன். மீனவ சமுதாயத்தை சேர்ந்த இவர், கட்சி செல்வாக்கும், மீனவ மக்களின் வாக்கும் தன்னை கைதூக்கிவிடும் என்று நம்புகிறார். இருந்தாலும் வெற்றி வாய்ப்பு தி.மு.க-வுக்கே சாதகம்!
மன்னார்குடி: அ.தி.மு.க-வின் நிழல் அதிகார மையம் என அரசியல் புள்ளிகளால் விமர்சிக்கப்படும் இடம் மன்னார்குடி. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவிடம் தோல்வியைத் தழுவியது அ.தி.மு.க. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மன்னார்குடி நகராட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது ஆளும் கட்சி. மக்களிடத்தில் பெரிதும் அறிமுகமில்லாத சுதாஅன்புசெல்வன் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.  இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் மன்னை நாராயணசாமியின் பேத்தியான மகேஸ்வரி சோழராஜன் களம் இறங்கி உள்ளார். மன்னார்குடி டு சென்னை ரயில் விட்டது, டி.ஆர்.பாலு செல்வாக்கு ஆகியவை தி.மு.க-வை மன்னார்குடியில் வெற்றிகரமாகக் கரை சேர்க்கிறது.
பட்டுக்கோட்டை: பிரபலமான பண்ணவயல் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்பாபு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். ஜவஹர்பாபு அமைதியானவர் என்றாலும் அவரைச் சுற்றியுள்ள பலர் மீது அவ்வளவாக நல்ல பெயர் இல்லை.  தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் சீனி.அண்ணாதுரை போட்டியிடுகிறார். இவர்கள் குடும்பம் மட்டுமே தி.மு.க-வில் அதிகாரம் செய்வது உட்கட்சிக்குள் பலருக்கு வருத்தம். ஆனாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார் என்கிற நம்பிக்கையும் வணிக மக்களின் ஆதரவும் கை கொடுக்கிறது. ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதால் கடுமையான போட்டிக்கு இடையே நூலிழையில் யார் வேண்டுமானாலும் முந்தக்கூடும்.
சீர்காழி: தி.மு.க-வின் வசம் இருக்கும் சீர்காழி நகராட்சியில் தற்போது தி.மு.க சார்பில் களத்தில் இருக்கும் ஜெ.இறைஎழில், கட்சியினரிடமும் மக்களிடமும் மிகவும் அறிமுகமானவர். கட்சிக்காரர்கள் வீட்டு விஷேசம், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொள்வார். அதனால் கட்சியின் அனைத்துத் தரப்பினரும் அவருக்காக மிக ஆவலாக உழைக்கிறார்கள். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வளர்மதி, சத்துணவுத் திட்ட ஊழியர். தேர்தலுக்காக அரசியலுக்குள் அழைத்து வரப்பட்டிருக்கிறார். மக்களிடம் அதிகம் அறிமுகமில்லை. இவருக்கு ஆதரவாக சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்தி கட்சிக்காரர்களை விரட்டி வேலை வாங்குகிறார். இருந்தா லும் இவர்களால் தி.மு.க-வின் இறைஎழிலை எட்டிப்பிடிக்க முடியாது என்பதே இறுதி நிலவரம். 
பவானி: பவானி நகராட்சி அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடுபவர் கே.சி.கருப்பண்ணன். ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருந்ததால் பவானிவாசிகளுக்கு அறிமுகமானவர்தான். ஆனால்,  உருப்படியாக எதையும் செய்யாதது இப்போது உலைவைக்கிறது. அ.தி.மு.க-வின் செல்வாக்கு இவருக்கு கைகொடுக்கலாம்.  பவானி சிட்டிங் அ.தி.மு.க சேர்மன் எம்.ஆர்.துரை இம்முறை சுயேச்சையாகப் போட்டியிட்டு அ.தி.மு.க-வினரையே அலற வைக்கிறார். இவர் சேர்மனாக இருந்தபோது பவானியில் நல்ல மாற்றங்களை கொண்டுவந்திருப்பதால், தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியதால், குறிப்பாக அடித்தட்டு மக்களின் ஓட்டு இருப்பதால்... வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
ஜோலார்பேட்டை: அ.தி.மு.க-வின் வேட்பாளரான ஆசிரியை வசுமதி சீனிவாசனும், தி.மு.க. வேட்பாளரான வழக்கறிஞர் முத்தமிழ் செல்விக்கும் இடையேதான் பலத்த போட்டி. முத்தமிழ் செல்வி, தி.மு.க-வின் நீண்டகால விசுவாசி மட்டுமல்லாமல், மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். முத்தமிழ் செல்விக்காகக் கட்சியினர் ஒருமனதாக இறங்கி உழைக்கிறார்கள். ஆனாலும்கூட அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீரமணி முழு வீச்சில் வேலைபார்ப்பதால் வெற்றிவாய்ப்பு வசுமதிக்கே என்று தெரிகிறது.
ஆம்பூர்: முன்னாள் எம்.எல்.ஏ இ.ரா.சம்பங்கியின் மருமகள் சாந்தி ராஜி தி.மு.க சார்பாகவும், அரசிய லுக்குப் புதுமுகமான சங்கீதா பாலசுப்பிரமணி அ.தி.மு.க சார்பிலும் போட்டியிடுகிறார்கள்.  ஏற்கெனவே நகரமன்றத் தலைவர் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த சாந்திராஜி இப்போது ஆம்பூர் நகராட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார். ஆனால், திமுக கூட்டணியிலிருந்து விலகிய முஸ்லிம் லீக் ஓட்டுகள் பெருமளவில் சிதறுவதால், தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு பாதகம்தான். குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு-வின் சங்கீதாவே வெற்றி பெறுவார் என்று கொடி தூக்குகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
செங்கல்பட்டு: அ.தி.மு.க. சார்பில் முதலில் வேட் பாளராக அறிவிக்கப்பட்டவர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஆறுமுகம். 'இவருக்கு செல்வாக்கு சுத்தமாக இல்லை’ என்று உள்ளூர் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியதால், நகர அ.தி.மு.க. செயலாளர் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உள்ளூர்க்காரர், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்...என்றெல்லாம் கட்சியினரிடம் நல்ல பெயர் வாங்கி வைத்திருப்பதால் தெம்பாக இருக்கிறது அ.தி.மு.க. முகாம். இவருக்கு எதிராக களம் இறங்கி இருக்கிறார் தி.மு.க. நகரசெயலாளர் சதீஷ்பாபு (எ) அன்புச்செல்வன். பக்குவமான மனிதர் என்பதும் கட்சி செல்வாக்கும் மட்டுமே இவருக்கு கைகொடுக்கிறது. இரு கழகங்களின் வேட்பாளர்களுமே பணத்தை தாராளமாக செலவு செய்கின்றனர். இருந்தாலும் வெற்றி வெளிச்சம் குமாரசாமி மீதே படர்கிறது.
கடலூர்:  இங்கே அ.தி.மு.க வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டிருப்பவர்,  சி.கே.சுப்ரமணியன். தி.மு.க தரப்பில்  நகர இளைஞரணி செயலாளர் பழக்கடை ராஜா. சுப்ரமணியன்  கட்சி யின் சீனியர் என்பதால்,  நன்கு அறிமுகமானவராக இருக்கிறார். பொதுமக்களும் படித்தவர்களும் ஆளும் கட்சியே வந்தால் அரசின் நலத்திட்டங்கள் எதுவும் தடைபடாது என்கிறார்கள். மீனவர்கள் ஓட்டும் பக்க பலமாக உள்ளதாம். ஆனால், தி.மு.க.வி-லோ கடும் அதிருப்தி நிலவுகிறது. இருக்கும் சீனியர்களுக்கு ஸீட் கொடுக்காமல்  ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தது, கட்சியினரை கடுப்பாக்கி யுள்ளது. ஒதுங்கியே நிற்பது மட்டுமில்லாமல், உள்ளடி வேலைகளும் செய்து வருகிறார்களாம். அதனால், கடலூர் நகராட்சி கட்டாயம் அ.தி.மு.க வசம்தான் போகுமாம். 
கொடைக்கானல்:  சிட்டிங் சேர்மனான முகமது இப்ராஹிமையே வேட்பாளராக்கி இருக் கிறது தி.மு.க. இவரை முன்கூட்டியே முடக்கிப் போடுவதற்காக நிலமோசடி வழக்கில் கைது செய்தார்கள். இருப்பினும் தனது பிரசாரத்தை வேகமாக செய்து வருகிறார் முகமது இப்ராஹிம். இவரை எதிர்க்கும் அ.தி.மு.க. வேட்பாளரான நகரச் செயலாளர் கோவிந்தன் கட்சியில் சீனியர். அந்த வட்டாரத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. கொடைக்கானலின் கிராம பகுதிகளில் இருக்குமளவுக்கு நகரத்தில் தே.மு.தி.க-வுக்கு செல்வாக்கு இல்லை என்பதால், முரசுகொட்டும் அக்கட்சியின் வேட்பாளரான நகரச் செயலாளர் செல்வராஜ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படுகிறார்.
காரைக்குடி:  முன்னாள் எம்.எல்.ஏ-வான கற்பகத்தை நிறுத்தி இருக்கிறது அ.தி.மு.க.! படித்தவர், பரிச்சயமானவர் என்ற ப்ளஸ் பாயின்ட்கள் இருந்தாலும், கட்சியின் கோஷ்டி பூசல்கள் இவருக்கு சவால். தி.மு.க. சார்பாக நகர துணைச் செயலாளரான துரை.நாகராஜின் மனைவி பாண்டி மீனாள் இங்கே வேட்பாளர். கற்பகம் அளவுக்கு பரிச்சயமானவர் இல்லை என்றாலும், 'காரைக்குடி தி.மு.க. கோட்டை’ என்ற இமேஜும், காங்கிரஸ் ஆதரவு ஒப்பந்தமும் இவருக்குக் கைகொடுக்கிறது. தே.மு.தி.க. வேட்பாளராகப் போட்டியிடும் மாநில மகளிரணி செயலாளரான பர்வத ரெஜினா பாப்பா நாடாளுமன்ற தேர்தலிலேயே காரைக் குடி நகரத்தில் சுமார் ஆறாயிரம் ஓட்டுகளை வங்கியவர். படித்தவரான இவர் வாங்கும் ஓட்டுகள் ஒவ்வொன்றும் கற்பகத்தின் கனவுகளைக் கலைக்கும்.
அம்பாசமுத்திரம்:  இங்கே முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆசியுடன் களம் இறங்கி இருக்கிறார் தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வி. கட்சியினரின் தீவிர பிரசாரமும் கடந்த முறை நகராட்சிப் பகுதியில் நடந்திருக்கும் நலத்திட்டங்களும் தன்னைக் கரை சேர்க்கும் என நம்புகிறார். அ.தி.மு.க வேட்பாளர் செல்விக்கு ஆளும் கட்சி என்பதும், சிட்டிங் எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையா நேரடியாகக் களம் இறங்கித் தேர்தல் பணியாற்றுவதும் எக்ஸ்ட்ரா பலம். தொண்டர்கள் உற்சாகத்துடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்.  தே.மு.தி.க. வேட்பாளரான வேலம்மாளின் பலமே கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள்தான். இதுபோக, வேட்பாளராகி இருக்கும் மேலும் சிலரும் வாக்குகளை பிரித்து சிதறச் செய்தாலும், இந்தப் பகுதியில் அ.தி.மு.க-வுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்குக் காரணமாக அம்பாசமுத்திரம் நகராட்சி இலை வசமாகும் வாய்ப்பு அதிகம்!
ஜூ.வி. டீம்                                                     
''ஊழல் புகார் இல்லை!''
ஜூ.வி. 9.10.11 தேதியிட்ட இதழில் செங்கோட்டை நகராட்சித் தேர்தல் நிலவரம் குறித்து எழுதியிருந்தோம். அதில் தி.மு.க. வேட்பாளர் ரஹீம் பற்றி அந்தப் பகுதியில் பரவலாக பேசப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்டிருந்தோம். இது தொடர்பாக ரஹீமின் வழக்கறி ஞர் லூக் ஜெயக்குமார் நமக்கு அனுப்பியுள்ளகடிதத்தில், ''ரஹீம் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் இருப்பதாக வெளியான செய்தி எந்தவித மான ஆதாரமும் இல்லாத உண்மைக்குப் புறம்பான செய்தி ஆகும். அவர் எந்தவிதமான ஊழலும் செய்யவில்லை. கவுன்சிலர்கள் தாக்கப்பட்ட விவகாரம், செங்கோட்டை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுடன் சமரசமாக முடித்துக் கொள்ளப் பட்டது'' என்று கூறியுள்ளார். குறிப்பிட்ட அச்செய்தியை வெளியிட்டதில் நமக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள் கிறோம்.
- ஆசிரியர்
************************************************************************

முரசு ஒலிக்கும் நகராட்சிகள்!

விறுவிறு பார்வை

 விழுப்புரம்:
'சட்டமன்றத் தொகுதி களைக் கைப்பற்றிய தைப் போன்றே உள்ளாட்சியிலும் நகராட்சிகளைக் கைப்பற்றி விட வேண்டும்’ என்று அ.தி.மு.க. ஒரு பக்கமும், 'கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கைப்பற்றிய நகராட்சிகளை யாவது மீண்டும் தக்க வைக்க வேண்டும்’ என்று தி.மு.க. மறு பக்கமும் முட்டிமோதிக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையே, '29 எம்.எல்.ஏ-க்களை கைவசம் வைத்திருக்கும் நாம், இரட்டை இலக்க எண்ணிக் கையில் நகராட்சிகளைக் கைப்பற்றினால்தான் கௌரவம்’ என்று இவர்களுக்கு மத்தியில் தே.மு.தி.க. போராடுகிறது. அப்படி தே.மு.தி.க. குறிவைத்து அசுரத்தனமாக இயங்கும் நகராட்சிகளை எட்டிப் பார்த்தோம்.
விழுப்புரம் நகர தே.மு.தி.க. செயலாளராக இருக்கும் வக்கீல் துரைசாமி இங்கு சேர்மன் வேட்பாளர். மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசனின் அன்புக்குரிய நபராக இருப்பதால், தொண்டர்கள் ஓடியாடி உழைக்கிறார்கள். 'விழுப்புரம் நகரத்தை, சென்னை நகரத்தைப்போல மேன்மையாக்குவோம்!’ என்று வாக்குறுதி கொடுத்து வருகிறார். அ.தி.மு.க. வேட் பாளர் பாஸ்கருக்கு எதிராக, கட்சியில் ஸீட் கிடைக்காத நூர்முகம்மது சுயேச்சையாகப் போட்டியிடுவதால், அ.தி.மு.க. ஓட்டுகள் சிதறக்கூடும். இப்போதைக்கு தி.மு.க. வேட்பாளர் சக்கரைக்கு சாதகமாக இருக்கும் நகராட் சியை, துரைசாமி அசுர வேகத்தில் உழைத்தால் அசைத்துப் பார்க்கலாம்.
பண்ருட்டி:
தே.மு.தி.க-வின் கடலூர் மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளராக இருக்கும் டாக்டர் அறிவொளிதான் இங்கு வேட்பாளர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சைடில்  பஞ்சாயத்தும், கோஷ்டிப் பூசலும் தலைதூக்கி நிற்கிறது. தே.மு.தி.க. வேட்பாளர் மீது அப்படியரு சாயம் இல்லாததால், பொதுமக்கள் அவரை ஆர்வமாகவே பார்க்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பண்ருட்டி தே.மு.தி.க. எம்.எல்.ஏ-வான சிவகொழுந்து, வேட்பாளர் அறிவொளிக்கு பக்க பலமாக உழைக்கிறார். மற்ற கட்சிகள் தள்ளாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால், தே.மு.தி.க-வினரின் முரசு வெற்றிகரமாக ஒலிக்கலாம்.
விருத்தாசலம்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து முதன் முதலில் எம்.எல்.ஏ-வானது, இங்குதான். கட்சிக்கு ராசியான தொகுதி என்ற நம்பிக்கை நிலவுகிறது அதனால் விருத்தாசலம் நகராட்சியைக் கட்டாயம் தே.மு.தி.க. கைப்பற்ற வேண்டும் என்று வேலை செய்கிறார்கள். இங்கு வேட்பாளராக களம் இறக்கப்பட்டவர், நகரப் பொருளாளரான அனந்தகோபால். இவர் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிச்சயம் இல்லாதவர் என்பது மட்டும்தான் மைனஸ். விருத்தாசலம் நகராட்சியில் பெரிய கட்சிகளான தி.மு.க-வின் தட்சணா மூர்த்தியும், அ.தி.மு.க-வின் அரங்கநாதனும் பலமாக மோதினாலும், அனந்த கோபாலும் புஜம் உயர்த்து கிறார்.
திருவாரூர்:
தே.மு.தி.க-வில் பொறுப்புகள் ஏதும் இல்லாத எத்திராஜை வேட்பாளராக அறிவித்து இருக் கிறது கட்சித் தலைமை. மைனாரிட்டியாக உள்ள நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றா லும் தனது அணுகுமுறையால், மக்களை நெருங்கி வருகிறார். கணிசமான ஓட்டு வங்கியை வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்கள் கூட்டணியில் இருப்பது எக்ஸ்ட்ரா எனர்ஜி. திருவாரூரில் விஜயகாந்த் செய்த பிரசாரம் பெண்கள் மத்தியில் ஆதரவை அதிகப்படுத்தி உள்ளது. அதிரடி அரசியல் நடக்கும் திருவாரூரில், எத்திராஜ் அமைதிப் புரட்சி படைத்தால் ஆச்சர்யம் இல்லை.
கரூர்:
தே.மு.தி.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணனின் வேட்பு மனு கடைசி நேரத்தில் தள்ளுபடியாக... மாற்று வேட்பாளரான ஆர்.ராமநாதன் களத்தில் இருக்கிறார். இவர் கடந்த எம்.பி. தேர்தலில் 52,000 ஓட்டுகள் வாங்கியவர். பெரும்பான்மையான கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த வாக்குகள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் 'தமிழ்நாடு’ செல்வம், தி.மு.க. வேட்பாளர் 'தாந்தோணி’ ரவி ஆகியோர் மீது சொந்தக் கட்சியில் சிறிது அதிருப்தி நிலவுகிறது. அதனால், அரசியல் மாற்றம் விரும்புகிறவர்களின் வாக்குகளைக் கைப் பற்றி விடலாம் என்று கணக்குப் போடுகிறார் ராம நாதன்.
மேட்டுப்பாளையம்:
மாவட்ட மீனவரணிச் செயலாளரான ஜாஃபர் சாதிக், களத்தில் நிற்கிறார். தே.மு.தி.க-வுக்கு ஏற்கெனவே இரண்டு கவுன்சிலர்கள் இருப்பதால், சந்துபொந்துகளில் நுழைந்து எப்படி பிரசாரத்தைக் கொண்டுசெல்லலாம் என்று கணக்குப் போட்டு வேலை செய்கிறார்கள். பி.ஜே.பி. சார்பாகப் போட்டியிடும் சதீஷ்குமாருக்கு அபரிமிதமான ஆதரவு இருந்தாலும், 'அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மேல் வெறுப் பில் இருக்கும் மக்கள் தங்களுக்குத்தான் ஓட்டு அளிப் பார்கள்’ என்பது இவர்கள் எதிர்பார்ப்பு. இதைத் தாண்டி, கூட்டணித் தோழனான மார்க்சிஸ்ட்,  ஜாஃபரின் வெற்றிக்காக வியர்க்க, விறுவிறுக்க உழைப்பதைப் பார்த்து ரொம்பவும் நம்பிக்கையில் இருக்கிறது தே.மு.தி.க.
பல்லடம்:
இங்கு தே.மு.தி.க. சார்பில் பி.ஏ.சேகர் போட்டியிடு கிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வுக்கு நிகராக கவுன்சிலர் பதவிகளை தே.மு.தி.க. கைப்பற்றியது. தே.மு.தி.க. ஆதரவுடனே தி.மு.க. நகராட்சியை கைப்பற்றியது. அதனால், எளிதில் வெற்றிபெறலாம் என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள் அக்கட்சியினர். அ.தி.மு.க. நகரச் செயலாளர் ரத்தினசாமிக்கு ஸீட் கொடுக்காமல், நகர அவைத் தலைவர் தங்கவேலுவுக்கு ஸீட் கொடுத்திருப்பதால், உட்கட்சியில் சலசலப்பு. அதனால், தே.மு.தி.க. மற்றும் தி.மு.க. இடையேதான் போட்டி. கொஞ்சம் தம் கட்டி உழைத்தால் நகராட்சியை கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கிறது விஜயகாந்த் கட்சி.
உடுமலைப்பேட்டை:
இங்கு தே.மு.தி.க. மாவட்ட துணைச் செய லாளரான ராதா பாலசுப்ரமணியம் களத்தில் நிற்கிறார். டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்ஸ், காஸ் ஏஜென்சி, ரியல் எஸ்டேட் என்று பல்வேறு பிசினஸ் செய்வதால் பணத்துக்குப் பஞ்சமில்லை. தே.மு.தி.க. சார்பில் நடத்தப்படும் இலவச ஆம்புலன்ஸ் சேவையில் 600-க்கும் மேற்பட்டவர் களைக் காப்பாற்றி இருப்பதை சாதனையாகச் சொல்லி வாக்குச் சேகரிக்கிறார்கள். 33 வார்டுகளைக் கொண்ட நகராட்சியில் 31 வார்டுகளில் மட்டுமே தி.மு.க. போட்டியிடுகிறது. தே.மு.தி.க-வோ அத்தனை வார்டுகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இப்போதே வெற்றி உறுதி என்ற உற்சாகத்தில் இருக்கிறார்கள் தே.மு.தி.க-வினர்.
நரசிங்கபுரம்:
சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளர் பச்சமுத்து போட்டியிடுகிறார்.  வசதியான குடும்பத்தைச் சார்ந்தவர். தி.மு.க-வில் நகரச் செயலாளர் வேல்முருகனும், அ.தி.மு.க-வில் மணிவண்ணனும் களம் காண்கிறார்கள். தி.மு.க-வில் ஸீட் கிடைக்காத காட்டுராஜா என்கின்ற பழனிசாமி சுயேச்சையாக நிற்கிறார். இவர் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்தவர். நகராட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்த இவருக்கு மக்கள் செல்வாக்கு உண்டு. தற்போது நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காட்டுராஜா, வெளியே வந்து பிரசாரம் செய்தால்... அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஓட்டுகளைப் பிரிப்பார். இந்த வாய்ப்புக்காக தே.மு.தி.க. காத்திருக்கிறது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இந்த நகராட்சியில் தே.மு.தி.க. சார்பாக நகர வர்த்தக அணிச் செயலாளர் மாதேஸ்வரன் போட் டியிடுகிறார். வசதியான பார்ட்டி என்பதால், இவருக் காகப் பெரும் கூட்டமே வேலை செய்கிறது. தி.மு.க-வில் முன்னாள் நகரத் துணைச் செயலாளர் குணசேகரனும், அ.தி.மு.க-வில் நகரச் செயலாளர் நாகராஜும் களத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் ஸீட் கிடைக்காத குமாரபாளையம் தொகுதி இணைச் செயலாளர் சிவசக்தி தனசேகரன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். அதனை சாதகமாக்கி, நகராட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறது தே.மு.தி.க.!
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் இருக்கும் இந்த நகராட்சியில் சரிசம பலத்தில் ஒக்கலிக கவுடர்களும், முக்குலத்தோரும் இருக்கிறார் கள். கூடலூர் பேரூராட்சியாக இருந்த காலத்தில் இருந்து முக்குலத்தோர் மட்டுமே தலைவர் இருக்கையை அலங்கரித் துள்ளனர். இம்முறையும் அனைத்து அரசியல் கட்சிகளும் முக்குலத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே சேர்மன் வேட்பாளராக அறிவிக்க... தே.மு.தி.க மட்டும் கவுடர் சமூகத்தைச் சேர்ந்த அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் அருண்குமாரை அறிவித்தது. அருண்குமார் இமேஜுக்காக விழுந்திடும் இதர சமூக ஓட்டுகளோடு, ஒட்டுமொத்த கவுடர் சமூக ஓட்டுகள் அருண்குமாரை சேர்மன் இருக்கையில் உட்கார வைத்துவிடும் என்றே நம்புகிறார்கள்.
திருத்தணி:
தே.மு.தி.க-வில் மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். திருத்தணி எம்.எல்.ஏ-வான அருண்சுப்ரமணியன் கட்சிக்காரர் களை முடுக்கிவிட்டு வேலை செய்கிறார். மன்ற நிர்வாகிகளும் ஒற்றுமையோடு களப்பணி ஆற்று கிறார்கள். அ.தி.மு.க-வில் நகரச் செயலாளர் சவுந்திரராஜனும், தி.மு.க-வில் நகரச் செயலாளர் சந்திரனும் சம பலத்தோடு மோதுகிறார்கள். தீவிர களப்பணி ஆற்றுவதன் மூலம் மக்கள் மனதை மாற்றி கணிசமான வாக்குகளைப் பெற்று ஜெயிக்க தே.மு.தி.க. துடிக்கிறது.
ஜூ.வி. டீம்
************************************************************************

திருச்சி மேயர் போராட்டம்

முந்தும் ஜெயா... நெருங்கும் விஜயா!

'திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் சேர்க்கக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தீர்ப்பு தாமதமானதால், மற்ற மாநகராட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே, இங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடித்துப் பிடித்துக்கொண்டு அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து அவசரம் அவசரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில், மாநகராட்சியின் நிலவரம் யாருக்கு சாதகம் என்பதைப் பார்ப்போம். 
திருச்சி மாநகரின் முக்கியப் பிரச்னைகள் போக்குவரத்து நெரிசலும், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பும்தான். அதோடு இவ்வளவு பெரிய நகரில் விடுமுறை தினங்​களில் மக்கள் குடும்பத்தோடு பொழுதைக் கழிக்க சினிமா தியேட்டர்களைத் தவிர வேறு எந்த பொழுதுபோக்கு அம்சமும் கிடையாது. அவற்றை தீர்த்து வைப்பதையே முக்கியமான பிரசாரமாக அனைத்து கட்சியினரும் மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள். அனைவரையும் முந்திக்கொண்டு அ.தி.மு.க-வின் ஜெயாதான் முதல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கட்சிக்கு புதுமுகமான இவருக்கு ஸீட் வழங்கப்பட்டதால், அதிருப்தி கோஷ்டிகள், 'வேட்பாளரை மாத்துங்கம்மா’ என்று தலை​மைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பின. இருப்பினும், தலைமை கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை.
'ஜெயாவை ஜெயிக்க வைக்கலைன்னா... நீங்க நிர்வாகிகளா நீடிக்க முடியாது’ என்பதாக மேலிடத்தில் இருந்து தகவல் வரவே, அடித்துப் பிடித்துக்கொண்டு அனைவரும் இப்போது ஜெயாவுக்காக வேலை செய்கிறார்கள். ''குண்டும் குழியும் இல்லாத தார் சாலை, தடையில்லாத குடிநீர் வசதி, அனைத்து இடங்களிலும் தெருவிளக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வருவேன். திருச்சி மக்களுக்காக பொழுதுபோக்கு பூங்கா அமைப்பேன். வாக்கிங் செல்வதற்கு சரியான இடம் அமைத்துத் தருவேன். அம்மாவின் ஆட்சி நடப்பதால், திருச்சியின் தேவைகளை எடுத்துச் சொல்லி திட்டங்களை என்னால் உடனடியாக நிறைவேற்ற முடியும். அதனை மனதில் கொண்டு மக்கள் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்!'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜெயா.  
தி.மு.க-வின் வேட்பாளர் மாநகர் மாவட்ட துணைச் செயலாளரான விஜயா ஜெயராஜ். கட்சியில் அனை​வருக்கும் நன்கு அறிமுகமானவர். கேட்டரிங் கல்லூரி, மெட்ரிகுலேசன் பள்ளி, ஹோட்டல் நடத்தி வருகிறார் என்பதால் பணத்துக்கு பஞ்சமில்லை. கட்சியினரும் ஓடியாடி வேலை செய்கிறார்கள். ''நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணம் மையப் பகுதியில் அமைந்திருக்கும் காந்தி மார்க்கெட்டை வேறு பகுதிக்கு மாற்றுவது பற்றி பொதுமக்களின் கருத்து கேட்டு முடிவெடுப்பேன். நகரின் முக்கிய இடங்களில் குறிப்பாக தெப்பக்குளம் பகுதி, தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைப்பேன். மாநகர மக்கள் பொழுது போக்க கல்லணைக்கோ, முக்கொம்புக்கோ போக வேண்டி இருக்கிறது. அதனால், நகர எல்லைக்​குள்ளேயே அனைத்து வசதிகளுடன் கூடிய தீம் பார்க் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!'' என்கிறார் விஜயா ஜெயராஜ்.  
தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே, 'எப்போது தேர்தல் நடந்தாலும் இவர்தான் வேட்பாளர்’ என்று ம.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டவர் டாக்டர் ரொஹையா. நகரில் கணிசமான அளவில் இருக்​கும் இஸ்லாமியர் வாக்குகளும், தன்னிடம் மருத்துவம் பார்த்​தவர்களின் வாக்குகளும் தன்னைக் காப்பாற்றும் என்பது ரொஹை​யாவின் நம்பிக்கை.
தே.மு.தி.க. சார்பில் வழக்கறிஞர் சித்ரா வேட்பாளராக இருக்கிறார். ''இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க என்ன முயற்சி மேற்கொண்டார்கள்? என்னை மேயர் ஆக்கி​னால், காந்தி மார்க்​கெட்டை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றுவேன். சுற்றுச் சூழலைக் காக்க பசுமைத் திட்டம் நிறைவேற்றுவேன். மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்​பை தடுக்க நடவடிக்கை எடுப்பேன்!'' என்கிறார் சித்ரா.
மேயராக இருந்த சுஜாதாவுக்கே ஆரம்பத்தில் காங்கிரஸ் ஸீட் தந்தது. கோபத்தில் கொந்தளித்த சுஜாதா, 'யாரைக்கேட்டு என்னை வேட்பாளராக அறிவிச்சீங்க? நான் ஸீட் கேட்டு விருப்ப மனுவே கொடுக்கலையே?’ என்று பாய... விஜயா சேகர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இதுதவிர, பா.ம.க. சார்பில் லீமா சிவகுமார், பி.ஜே.பி. சார்பில் பேராசிரியை கிரிஜா, ஐ.ஜே.கே. சார்பில் டாக்டர் லதா ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இருப்பினும், தி.மு.க-வின் விஜயா ஜெயராஜ், அ.தி.மு.க-வின் ஜெயாவுக்கும் இடை​யில் போட்டி என்பதுதான் இப்போதைய நிலவரம். மூன்றாவது இடத்தை பிடிப்பதற்காக ம.தி.மு.க-வின் ரொஹையாவும், தே.மு.தி.க-வின் சித்ராவும் கடுமையாக முயற்சிக்கிறார்கள்.
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், என்.ஜி.மணிகண்டன்
*********************************************************************************
திருப்பத்தை உண்டாக்குமா திருப்பூர்?


கராட்சி என்ற நிலையில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு திருப்பூர் சந்திக்கும் முதல் உள்ளாட்சித் தேர்தல். 60 வார்டுகளில் சுமார் 4 லட்சம் மக்கள் தொகையுடன் திமிர்ந்து நிற்கும் திருப்பூர் மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்கு, மிகக் கடுமையான போட்டி நடக்கிறது. 
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற அத்தனை பெரிய கட்சிகளும் தங்கள் பிரதிநிதியை இங்கே களமிறக்கி இருக்கின்றன என்றாலும் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில்தான் கடும் மோதல். அ.தி.மு.க-வின் வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார் விசாலாட்சி. மாநில மகளிரணி துணைச்செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழகப் பேச்சாளர் என்று ஏகப்பட்ட கட்சிப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருப்பவர். கடந்த சில தேர்தல்களில் இவருக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கப்பட்டு, அதே வேகத்தில் பறிக்கவும் பட்டது. தொடர் ஏமாற்றங்களைச் சந்தித்தாலும்கூட அ.தி.மு.க-வின் விசுவாசியாகவே இருந்ததன் பலனை இந்த முறை அடைந்திருக்கிறார். திருப்பூரில் அ.தி.மு.க-வுக்குத் தனி செல்வாக்கு இருக்கிறது என்றாலும் உட்கட்சிக்குள் விசாலாட்சிக்கு  ஆகாத ஒன்றிரண்டு வில்லங்கப் புள்ளிகள் இருக்கிறார்கள். அவர்கள் விசாலாட்சிக்கு எதிராகத் தொடர்ந்து உள்ளடி வேலைகளைச் செய்து வருகிறார்கள். குறிப்பாக, விசாலாட்சியின் பர்சனல் விஷயங்களை மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக்கி, அவர் பெயரை டேமேஜ் செய்வதில் குறியாய் இருக்கிறார்கள். திருப்பூரில் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்டிராத முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பதும் விசாலாட்சியின் பலவீனம்.
''முழு ஆசீர்வாதத்தோட அம்மா என்னை களமிறக்கி விட்டிருக்காங்க. கடந்த மாநகராட்சி நிர்வாகம் இந்த ஊரோட வளர்ச்சிக்காக உருப்படியா எதையும் செய்யாததால் மக்கள் அதிருப்தியில் இருக்காங்க. எடுத்ததுக்கும், தொடுத்ததுக்கும் 'வசூல்’ வேட்டை நடத்தித் தங்களை டார்ச்சர் செய்த மாஃபியாக்கள் மீது தொழில் நிறுவன அதிபர்களும் ஆத்திரத்தில் இருக்கிறாங்க. அதனால் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கிறது!'' என்று உறுதியாகப் பேசுகிறார் விசாலாட்சி.
ஆனாலும் விசாலாட்சிக்கு கண்ணில் கலவர பயத்தை காட்டி வருகிறார், சிட்டிங் மேயரான தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ். கட்சியின் மாநகரச் செயலாளர் என்ற வகையில் இவருக்காக ஓடியாடி உழைக்கிறார்கள் உடன்பிறப்புகள். அ.தி.மு.க-வின் அத்தனை பலவீனங்களையும் நிதானமாக கவனித்து, அதை தனக்கான பலமாக்கி வருகிறார் செல்வராஜ். குறிப்பாக கம்யூனிஸ்ட் வாக்குகளை வளைப்பதைச் சொல்லியே ஆகவேண்டும். கூட்டணி முறிவால் அ.தி.மு.க-வுக்கு எதிராக வாக்களிக்கத் தயாராக இருக்கும் கம்யூனிஸ்ட் வாக்குகள் தே.மு.தி.க-வுக்குச் செல்ல வாய்ப்பு அதிகம். இங்கேதான் செக் வைக்கிறார் செல்வராஜ். கம்யூனிஸ்ட் வாக்குகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தன் கழகத்தினரை இறக்கி படுபரிவாகப் பேசி மனம் கரைய வைத்திருக்கிறார். போதாக்குறைக்கு பலமான பண விநியோகமும் நடக்கிறது என்கிறார்கள்.
குறுகிய காலத்தில் இவர் சேர்த்திருக்கும் சொத்து விவரம் குறித்து மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சிகள் எடுத்துவைக்கும் பாயின்ட்கள் பகீர் ரகம். கூடவே, மேயராக இருந்த காலத்தில் இவருக்கு நெருக்கமான நபர்கள் நிலபுலன்களை வளைத்துப்போட்டு, சமீபத்தில் கைதானதும்  இவரை பலவீனப்படுத்துகின்றன.  ''மாநகராட்சிக்கு ஏற்ற மாதிரியான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் ரொம்பவும் உழைத்திருக்கிறோம் என்பது மக்களுக்குத் தெரியும். மாநகராட்சியாக மாறிய குறுகிய காலத்தில் எவ்வளவு வசதிகளை செஞ்சு தரமுடியுமோ அதுக்கு மேலும் செஞ்சிருக்கோம். இந்த உழைப்பே என்னை வெற்றி வேட்பாளராக்கிவிடும். அதனால் குறுக்கு வழியில் பணத்தை இறைச்சு ஓட்டு வாங்கவேண்டிய அவசியமே எனக்கு இல்லை!'' என்கிறார் செல்வராஜ்.
இருபெரும் கட்சி வேட்பாளர்களும் அதிர்ந்து நோக்கும் நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறார் தே.மு.தி.க. வேட்​பாளர் தினேஷ்குமார். கட்சியில் வடக்கு மாவட்டச் செயலாள​ராக இருக்கும் இவருக்காக வியர்க்க விறுவிறுக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் தே.மு.தி.க-வினர். 'நம்ம கைக்கு வர வாய்ப்பு இருக்குப்பா’ என்று விஜயகாந்த் வட்டம் போட்டு வைத்திருக்கும் மாநகராட்சி இது. தொழிற்சங்கங்கள் நிறைந்த திருப்பூர் இயல்பாகவே கம்யூனிஸ்ட் பெல்ட். அதிலும் மார்க்சிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது விஜயகாந்த் கட்சிக்கு பலம்தான். ''மிக மோசமான ரோடுகள், 15 நாளைக்கு ஒரு தரம் குடிநீர், நிரம்பி வழியும் குப்பைகள்ன்னு கேவலப்பட்டு கிடக்குது திருப்பூர். என்னை பொறுப்பில் உட்கார வைத்தால் இதுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்னு மக்கள் நம்பிக்கையோட பார்க்கிறாங்க...'' என்கிறார் தினேஷ்குமார்.
இப்படி மூன்று வேட்பாளர்களும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டிருக்க, இடையில் தன் பங்குக்கு தடாலென வாக்குகளை பிரிக்க வந்து நிற்கிறார் வைகோவின் வேட்பாளர் நாகராஜ். வைகோ அபிமானிகளின் கவனிக்கத்தக்க வாக்குகள் இவருக்கு நிச்சயம் உண்டு. சமீபத்தில் வேறொரு நிகழ்வுக்காக திருப்பூர் வந்திருந்த தமிழருவி மணியன், நாகராஜ்க்கு ஆதரவாக ம.தி.மு.க. மேடையிலேறி பிரசாரம் செய்தது நடுநிலை வாக்காளர்களின் கவனத்தை திருப்பி... இவரது செல்வாக்கை அதிகப்படுத்தி இருக்கிறது.
பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் வெற்றிக் காற்று மாறி மாறி வீசுகிறது. எங்கே நிலை கொள்ளும் என்பது முடிவின் போது தெரிந்துவிடும்!
எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்
*********************************************************************************
மும்முனைப் போட்டியில் திணறும் வேலூர் கோட்டை...


வேலூர் மாநகராட்சியில் மும்முனைப் போட்டி என்றவுடன் வழக்கமான கட்சிகளுக்கு இடையே போட்டி என்று நினைத்துவிடாதீர்கள். அது​தான் இல்லை... கோட்டை மாநகராட்சியில் முக்கியக் கழகங்களுக்கு உள்ளேயே உட்கட்சிப் பூசல்... அடிதடி தடாலடிதான்! 
நகராட்சியாக இருந்த வேலூரை அன்றைய தி.மு.க. அரசு, 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி மாநகராட்சியாக விரிவாக்க உத்தரவிட்டது. அப்போது நகராட்சித் தலைவராக இருந்த கார்த்திகேயன் மேயராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில்,  
'தி.மு.க. கைப்பற்றி இருக்கும் அந்தப் பதவியைப் பிடித்தே தீர வேண்டும்’ என அ.தி.மு.க-வும், 'கைவசம் இருக்கும் மாநகராட்சியை எவருக்கும் கொடுக்கக் கூடாது’ என தி.மு.க-வும் வரிந்து கட்டிக்கொண்டு இருக்கின்றன. இடையே கம்யூனிஸ்ட் மற்றும் தே.மு.தி.க. கூட்டணி வேறு!
அ.தி.மு.க. புள்ளி ஒருவர் நம்மிடம் பேசினார். ''கட்சியில் உழைச்சவனுக்கு ஸீட் கொடுக்காம யார் பணம் அதிகமாத் தருகிறார்களோ அவர்களுக்கு ஏலம் போட்டு கொடுத்தா எப்படி இருக்கும்? 48 வார்டுகளாக இருந்த மாநகராட்சியில் இப்போது 60 வார்டுகள்... ஆனா, போகிற போக்கைப் பார்த்தா நாங்க 6 ஸீட்டுகூட வாங்கமாட்டோம்னு நினைக்கிறோம். மேயர் வேட்பாளரா நிக்கிற கார்த்தியாயினிக்கு  கட்சியோட சின்னம்கூட தெரியலை. போன வாரம் அமைச்சர் தலைமையில் நடந்த வேட்பாளர் கூட்டத்தில் அந்தப் பொண்ணு, 'நீங்க எல்லோரும் மறக்காம இரட்டை சின்னத்தில் வாக்குக் கேட்டு வெற்றி பெற செய்யுங்கள். நமது இரட்டை சின்னம் பெருவாரியாக வெற்றி பெரும்’னு பேசினாங்க! இரட்டை இலைனுகூட சொல்லத் தெரியாத அந்தப் பொண்ணு நாளைக்கு மக்களுக்கு என்ன பண்ணும்? ஒவ்வொரு நாளும் அமைச்சரோடு ஓட்டுக் கேட்க போறாங்க. ஆனா, காலையில் கையெடுத்துக் கும்பிட்டா சாயங்காலம்தான் கையை இறக்கி விடுறாங்க. இதுவரைக்கும் 50 வார்டுகளுக்குப் போய் பிரசாரம் பண்ணிட்டோம். இருந்தும், மக்கள்கிட்ட வெறுப்புதான் அதிகமா இருக்கு.
எங்களுக்கு எதிர்க் கட்சிகூட எதிரி இல்லை, நாங்களே​தான்! மேயர் வேட்​பாளர்கள் பட்டி​யல் கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்தில் வெளியிட்டாங்க. அப்ப எங்க அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் நான்காம் இடத்தில் இருந்தது. நாங்க கேட்டதுக்கு, 'அகர வரிசைப்படிதான் பெயர்களை வெளியிடவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது’னு அதிகாரி சொன்னார். அவர் சொல்படி வரவேண்டியதுதானே! ஆனா, எங்க கட்சிக்காரங்க சிலரே, 'நாங்க ஆளும் கட்சி... எங்ககிட்டயே சட்டம் பேசுறியா?’னு அவரை மிரட்டினாங்க. அதிகாரியும், 'இதெல்லாம தேர்தல் கமிஷன் பண்ணச் சொன்னது’னு சொல்லியும் அவரைக் கேவலமாத் திட்டிட்டாங்க. அங்கிருந்த பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் என்ன நினைப்பாங்க... மக்களுக்கு நல்லது செய்யத்தான் தி.மு.க. ஆட்சியைத் தூக்கிட்டு எங்களை உட்கார வச்சிருக்காங்க. எங்க ஆளுங்க இப்படி செஞ்சா... தங்களுக்குத் தாங்களே குழியைப் பறிச்சுக்குவாங்க’!’ என்றார் வெறுப்போடு.
தி.மு.க. நிலை, இன்னும் மோசம்... மாவட்ட உடன்பிறப்பு ஒருவர், ''முன்னாள் அமைச்சர் என்று அண்ணன் துரைமுருகனை நாங்கள் எப்போதும் பார்த்ததில்லை. எப்போதும் அவர்தான் எங்கள் அமைச்சர். அப்படிப்பட்டவர், 'வேலூர் கோட்டை தி.மு.க-வின் கோட்டை. இதை எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் விட்டுத்தர மாட்டோம்’ என்று மூன்று மாதத்துக்கு முன் வீர வசனம் பேசியவர், இப்போது தேடினால் கிடைப்பதில்லை.  கடந்த 20 வருஷங்களாக காங்கிரஸ் சார்பில் ஞானசேகரன் எம்.எல்.ஏ.வா இருந்தார். அ.தி.மு.க. சார்பில் இப்போது டாக்டர் விஜய் எம்.எல்.ஏ-வாக உள்ளார். இதுவரை இவர்களால் வேலூருக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டதா? வேட்பாளர் ராஜேஸ்வரி கட்சிக்காரங்கிட்ட சரியா பேச மாட்டேங்கிறாங்க. அப்புறம் எப்படி மக்கள் குறையைப்பற்றி அவங்க பேசுவாங்க? துரைமுருகன் அண்ணனும் வாக்கு சேகரிக்க வர மாட்டேங்கிறார். இப்படி கட்சியில் எல்லோரும் ஒவ்வொரு பக்கம் போய்கிட்டு இருந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும்? கோட்டையை நாங்க கைப்பற்றுவோமானு சந்தேகமா இருக்கு!'' என்றார் வருத்தமுடன்.
தே.மு.தி.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லதா மக்களிடையே நல்ல அறிமுகம்தான். இருந்தாலும் வாக்கு சேகரிப்பதில் தே.மு.தி.க-வினர் போதிய அக்கறை காட்டவில்லை என்று காம்ரேட்கள் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். போதாதக் குறைக்குத் தே.மு.தி.க-வில் முதலில் மேயர் வேட்பாளர் அறிவிக்கபட்டது. பிறகு நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் கம்யூனிஸ்ட்
களுக்கு வேலூர் ஒதுக்கப்பட்டுவிட, கேப்டன் விசுவாசிகள் ஏகத்துக்கும் கவலையில் உள்ளனர்.
இவர்களுக்கு நடுவே... தனி ரூட் போட்டுக்கொண்டு பா.ம.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் இருக்கின்றன. என்ன பண்ணுவது என்றே வேலூர்வாசிகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதுதான் நிஜம்!
பாவம் மக்கள்!
கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்
*********************************************************************************
மல்லுக்கட்டும் மல்லை!

மாமல்லபுரம் நிலவரம்

ரு பேரூராட்சித் தலைவர் வேட்பாளருக்காக வைகோ, பெரியார்தாசன், தமிழருவிமணியன், நாஞ்சில் சம்பத் போன்ற பெரும் தலைகள் வரிசையாக களம் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார்கள். யாருக்காகவாம்? மாமல்லபுரத்தில் ம.தி.மு.க. சார்பாக போட்டியிடும் மல்லை சத்யாவுக்காகத்தான். 
கடந்த 1996-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க வேட்பாளராக மல்லை சத்யா களம் இறங்கினார். அப்போதைய ஆளும் கட்சி யான தி.மு.க-வை எதிர்த்துப் போராட வேண்டிய நிலை. கட்சியில் முக்கிய பதவியில் இல்லாத சூழ்நிலையிலும், தனது உள்ளூர் செல்வாக்கின் மூலம் ஆளும் கட்சியை வீழ்த்திக் காட்டி னார். அடுத்த 2001-ம் ஆண்டு உள் ளாட்சித் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கைநழுவிப் போனது. இரண்டு முறை எம்.எல்.ஏ-வுக்குப் போட்டியிட்டும் தோல்வி அடைந் தார். இப்போது மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கி இருக்கிறார்.
மாமல்லபுரம் பகுதிக்கு நிலவரம் அறியச் சென்றோம். தி.மு.க-வில், நகரச் செயலாளர் விஸ்வநாதன் வேட்பாளராக உள்ளார். ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதால் வாய்ப்பு கிடைத்துள்ளது. 'அவருக்கு கட்சியில் செல்வாக்கு இருந்தாலும், உள்ளூர் செல்வாக்கு குறைவுதான்’ என்று உடன்பிறப்புகளே ஒத்துழைப்பு தராமல் ஒதுங்கி நிற்கிறார்கள்.
மாமல்லபுரத்தின் தற்போதைய பேரூராட்சித் தலைவர் யஸ்வந்த் மீது அ.தி.மு.க-வுக்கு அதிருப்திஎன்பதால் கோதண்டபாணிக்கு ஸீட் கிடைத்துள்ளது. இவருக்கு கட்சியில் இருந்து மாவட்டச் செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மட்டுமே ஆதரவு கொடுத்துச் சென்றார், மற்ற யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பதால் இங்கேயும் உள்குத்து வெகுவாக இருக்கிறது.
ம.தி.மு.க. சார்பாக போட்டியிடும் சத்யா, பேரூராட்சித் தலைவராக இருந்தபோது செய்த பணிகளையே நினைவுகூறி வாக்கு கேட்கிறார். எம்.எல்.ஏ. பதவிக்கு நின்றவர் இப்போது பேரூராட்சிக்கு நிற்கிறீர்களே என்று கேட்டோம். ''அமைச்சராக இருந்தவர்கள் கூட,  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அதனால் மக்களுக்குச் சேவை செய்வதில் பெரிய பதவி, சிறிய பதவி என்று வித்தியாசம் கிடையாது. பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் இந்த மக்களுக்கு சேவகனாக, போராளியாக வலம் வந்தவன். இந்தமுறை வெற்றி நிச்சயம்!'' என்கிறார் நம்பிக்கையாக.
முக்கிய எதிர்க்கட்சிகள் சுணங்கி நின்றாலும் மல்லை கடுமையாக மல்லுக்கட்டுவதைப்  பார்த்தால், மறுமலர்ச்சி தெரிகிறது.
பா.ஜெயவேல்
************************************************************************
அத்தனை பேரும் அன் - அப்போஸ்டு!

நாலுகோட்டை நல்லாட்சி தேர்தல்!

'பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஏலத்தில் விற்பனை, வாக்கு சேகரிப்பதில் அண்ணன் தம்பிகளுக்குள் குத்து​வெட்டு, பதற்றமான வாக்குச் சாவடி​களுக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு...’ - என எந்தக் களேபரமும் இல்லாமல், நாலுகோட்டை பஞ்சாயத்துத் தலைவரும் மற்றும் ஆறு வார்டு உறுப்பினர்களும் போட்டி இன்றித் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்! 
சிவகங்கை யூனியனில் உள்ள நாலுகோட்டை பஞ்சாயத்தில், 1965-ல் ராமநாதன் என்பவர் தலைவரானார். தனது சேவைகளால் இந்தப் பஞ்சாயத்தை ஒரு முன்மாதிரி பஞ்சாயத்தாக மாற்றிக் காட்டியதால், 2001-ம் ஆண்டு வரை தொடர்ந்து தலைவராகவே இருந்தார். 2006-ல் பஞ்சாயத்து தலைவர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால் ராமநாதனின் மனைவி காளியம்மை தலைவ​ரானார். இரண்டு வருடத்தில் அவர் இறந்ததால், அடுத்த மூன்று வருடங்​களுக்கு ராமநாத னின் மருமகள் ராஜேஸ்வரியைப் போட்டியின்றி தலைவராகக் கொண்டு​வந்தார்கள் மக்கள்.
இரண்டு முறை மாவட்டத்தின் சிறந்த ஊராட்சிக்கான விருது, அனைவருக்கும் பொது மயானம் அமைத்துத் தீண்டா​மையை ஒழித்ததற்காக சமத்துவ மயான ஊக்க விருது, முழு சுகாதாரம் பெற்ற ஊராட்சிக்கான மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருது, சிறந்த ஊராட்சித் தலைவருக்கான மாநில அரசின் உத்தமர் காந்தி விருது... என விருதுகளைக் குவித்திருக்கிறது நாலுகோட்டை பஞ்சாயத்து.
''சிட்டிங் தலைவரான எங்க அண்ணி ராஜேஸ்வரியும் என் மனைவி மாசிலாமணியும் தலைவர் பதவிக்கு மனு கொடுத்திருந்தாங்க. 'உள்ளூர்ல இருக்கிற மாசிலாமணி வரட்டுமே’னு ஊர்ப் பெரியவர்கள் கேட்டுக்கிட்டதால எங்க அண்ணி வேட்பு மனுவை வாபஸ் வாங்கிட்டாங்க. இதே மாதிரி, 'எல்லா வார்டுலயும் நீ யாரைச் சொல்றியோ அவங்களே மெம்பரா இருக்கட்டுமப்பா’னு சொல்லிட்டாங்க. இந்திரா நகரில் மட்டும் ரெண்டு பேர் போட்டிக்கு வந்தாங்க. கூட்டம் போட்டு பேசி அதையும் சரி பண்ணிட்டோம்...'' பெருமையோடு சொன்னார் ராமநாதனின் இளைய மகன் மணிகண்டன்.
''பொதுமக்களுக்கு சேவை செய்யுற​வங்க மட்டும்தான் இந்தப் பொறுப்புக்கு வரணும்னு திட்டமிட்டுத்தான் நாங்க இந்த முடிவை எடுத்திருக்கோம். நான் உள்பட யாருடைய செயல்​பாடு சரியில்லைன்னு மக்கள் நினைக்​கிறாங்​களோ... அந்த நிமிஷமே பதவியை ராஜினாமா பண்ணிட்டு மத்தவங்களுக்கு வழி விட்டுறணும்னு முடிவு எடுத்திருக்கோம்...'' என்று தெளிவாகச் சொல்கிறார் தலைவர் பதவிக்குத் தேர்வாகி இருக்கும் மாசிலாமணி.
நாலுகோட்டையின் தலைமுறை தாண்டிய இந்த நல்லாட்சி தொடரட்டும்!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்
*********************************************************************************
உள்ளாட்சி யானை... குருடர்களாக மக்கள்!


''உள்ளாட்சித் தேர்தல் என்றாலே கட்சிகளின் கூட்டணி விளையாட்டு​களும் தேர்தல் கசமுசாக்களும்தான் மக்களின் நினைவுக்கு வருகின்றன. ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் என்பது, சாதாரண மக்களுக்குக் கிடைத்திருக்கும் அசாதாரண உரிமை. யானைக்குத் தெரியாத அதன் பலத்தைப் போலத்தான் உள்ளாட்சி அதிகாரம் பற்றி மக்களுக்குத் தெரியவில்லை...'' என்று சொல்கிறார் பேராசிரியர்.க.பழனித்துரை. காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் க.பழனித்துரை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரம் குறித்து எழுதியும் பேசியும் வருபவர். சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும், புதிய பஞ்சாயத்து அரசாங்கம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம், கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு, சிற்றூராட்சி நிர்வாகத்தில் குழுக்களின் பங்கு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், அதிகாரப் பரவலின் அடிப்படைகள் என்று பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் தொடர்ந்து பேசுகிறார். 
''உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கியமான இரண்டு அம்சங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி. ஏதோ பணம் வாங்கி, சாலை போடு​வது, குடிநீர் வசதி செய்து கொடுப்பது இவைதான் உள்ளாட்சியின் பணிகள் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு கிராமத்தையே தலைகீழாகமாற்றிக்காட்டும் சாதனையை உள்ளாட்சி செய்ய முடியும். உதாரணமாக இந்தியாவில் 53 சதவிகித கிராமப் பெண்களுக்கு ரத்தசோகை இருக்கிறது. அந்தப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக இருக்கும். இதுபோன்று ஒவ்வொரு கிராமத்துக்கும் இருக்கும் பிரத்தியேகப் பிரச்னைகளை உள்ளாட்சிகளே அரசுத் துறைகளைப் பயன்படுத்தி தீர்த்துவிட முடியும்.
ஐந்து ஆண்டுகளில் ஓர் ஊராட்சி தன் நலனுக்காகக் கிட்டத்தட்ட  7 கோடி வரை செலவழிக்க முடியும். கடந்த தி.மு.க ஆட்சியில் மட்டும் 369 திட்டங்கள் இருந்தன; மத்திய அரசின் திட்டங்கள் 99. இவை அனைத்தையும் முறையாக நம் பஞ்சாயத்துகள் பயன்படுத்தியதா, பயன்படுத்துகின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
நமது உள்ளாட்சி, கிராமப் பஞ்சாயத்துகள், வட்டாரப் பஞ்சாயத்துகள், மாவட்டப் பஞ்சாயத்துகள் என்று மூன்றடுக்கு கொண்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பஞ்சாயத்தும் மாவட்டத் திட்டக்குழுவும் இருக்கும். இந்த திட்டக்குழு செம்மையாகச் செயல்பட்டது என்றால், ஊழல்களைக் குறைத்து கிராமங்களின் தேவைகளை கிராமங்களே நிறைவு செய்ய முடியும். கேரளாவில் இந்த மாவட்டப் பஞ்சாயத்துகளும் மாவட்டத் திட்டக்குழுவும் சிறப்பாகச் செயல்படுகின்றன. எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட பல நிதிகள் இந்த மாவட்டப் பஞ்சாயத்துகள் மூலம்தான் செலவழிக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் கிராமப் பஞ்சாயத்துகள், வட்டாரப் பஞ்சாயத்துகளை விரும்புகிற அளவுக்கு அரசியல் கட்சிகள் மாவட்டப் பஞ்சாயத்துகளை விரும்புவதில்லை.
73-வது அரசியல் சட்டத் திருத்தச் சட்டத்தை ஒட்டித்தான் பஞ்சாயத்துராஜ் முறை அமலாக்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் மிகத்தெளிவாக, உள்ளாட்சி என்பது சுயாட்சி பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரப்பரவல் சட்டங்களின் மூலம் நடைபெற வேண்டும் என்றும் கூறுகிறது. ஆனால், தமிழக அரசு 1994-ல் உருவாக்கிய உள்ளாட்சி சட்டமோ, உள்ளாட்சியை ஆலோசனை கூறும் அமைப்பாகவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்பாகவும், அதிகாரிகளின் கீழ் இயங்கும் அமைப்பாகவும் மாற்றிவிட்டது. பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களும்கூட, சட்டத்தின் மூலம் வழங்காமல், அரசு ஆணைகள் மூலம் வழங்கப்பட்டன. பஞ்சாயத்துத் தலைவர்களுக்குத் தேவையான பயிற்சியை அளிக்க வேண்டியதும் மாநில அரசின் கடமை. ஆனால், பஞ்சாயத்துத் தலைவர்கள் எப்படி அரசு அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றுதான் தமிழக அரசு பயிற்சி தந்தது.
ஆனால், மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டால் மாநில அரசும் அரசியல் கட்சிகளும் உருவாக்கி வைத்திருக்கும் தடைகளைத் தாண்டி உள்ளாட்சிகளால் சிறப்பாகச் செயல்பட முடியும். ஏனெனில், ஒரு கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம், அரசியல் சட்டத் திருத்தம் அளவுக்கு வலிமை வாய்ந்தது.
நம் நாட்டில், தலித் சமுதாயத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராவதோ, நாடாளுமன்ற உறுப்பினராவதோ, அமைச்சர்​களாக வருவதோ, ஜனாதிபதியாக வருவதோ, மிகப்பெரிய சாதனை அல்ல. சாதிய அதிகாரம் உறைந்துபோயுள்ள உள்ளாட்சியில் அதுவும் கிராமப் பஞ்சாயத்தில் தலைவர் பதவிக்குப் பெண்கள் வருவதும், தலித்கள் வருவதும்தான் சாதனை.
மழை நீர் சேகரிப்பானாலும் சரி, பாலிதீன் இல்லாத கிராமத்தை உருவாக்குவதானாலும் சரி; குடிசை வீடு இல்லாத கிராமமாக மாற்றுவதானாலும் சரி, கழிவறை இல்லாத வீடே இல்லை என்ற சாதனை படைப்பதானாலும் சரி; சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்வசதி செய்து தருவதானாலும் சரி; கிராமத்தில் உருவாகும் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து பஞ்சாயத்துக்கு வருமானம் சேர்த்து, கிராமத்தையும் சுத்தமாக வைத்து வரலாறு படைப்பதிலும் சரி, பஞ்சாயத்துத் தலைவர்கள்தான் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.
பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சங்கம் அமைத்து, தங்களுடைய பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் முன்வருகின்றனர். தலித் பஞ்சாயத்து தலைவர்களும் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளத் தனியான ஒரு கூட்டமைப்பை உருவாக்கிப் போராடி வருகின்றனர். ஆனால், இவர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில்தான் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது குட்டி மகாத்மாக்கள் உருவாவார்கள்.
உண்மையில் தலித் அமைப்புகள் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தல்களில்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நீதித்துறை, தேர்தல் ஆணையத்தைப் போல உள்ளாட்சி அமைப்புகளும் சுயேச்சையாக இயங்கும் நாள் வரும்போது இந்தியாவும் இந்தியாவில் வாழும் எளிய மக்களும் மகத்தான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள்!'' என்கிறார் க.பழனித்துரை.
ரீ.சிவக்குமார்,  படம்: வீ.சிவக்குமார்
*********************************************************************************
உச்சிவெயிலில் உள்ளாட்சி காமெடி!

முதல்ல டீ... அடுத்து கலரு... அடுத்து கடாபுடா!

மிழக உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவருக்கான போட்டியில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., உட்பட கிட்டத்தட்ட 10 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார் கள். அதோடு, நகராட்சி கவுன்சிலர் பதவிக்கும் ஆட்கள் களத்தில் இருக்கி றார்கள். தவிர, சுயேச்சைகளும் வேறு கச்சைக்கட்டி நிற்கிறார்கள். சரி, இருந்து விட்டுப் போகட்டுமே, அதனால் என்ன? அதில்தான் இருக்கிறது வாக்காளர் களுக்கான வேதனையே! 
காலை 6 மணியளவில் வாக்காளர் எழுந்து காலைக் கடன்களை செய்வதற்கு முன்னால்... ''அய்யா வணக்கம்யா... அம்மா வணக்கம்மா. நான்தான் நம்ம வார்டுக்கு கவுன்சிலரா நிக்கிறேன், நம்ம சின்னம் இதுதான், பாத்து செய்யுங்க!'' என்று கழுத்தில் சுற்றிய துண்டோடு பூபாளத்தை முழங்க... 'என்னய்யா கொடுமை?’ என்று யோசிப்பதற்குள்... ''அண்ணி... அண்ணன் இல்லைங் களா? நான்தான் இந்தக் கட்சி வேட் பாளர்!'' என்று அடுத்த குரல். 'அவங்க டாய்லெட்ல இருக்காங்க’ என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னால், ''இருக்கட்டும், இருக் கட்டும்... வந்ததும் பார்த்துட்டு போயிடறேன்!'' என்கிறார் அந்த வேட்பாளர். அவசர அவசரமாக வெளியில் வந்து அசடு வழிந்துவிட்டு குளிக்கப் போனால்... கூக்குரல் கொடுக்கிறது இன்னொரு குரல். குளியலையும் அரைகுறையாக முடித்துவிட்டு, வேட்பாளரையும் அனுப்பிவிட்டு சாப்பிட உட்கார்ந் தால்... ''என்னாண்ணே, சாப்பாடா? நாமளும் சாப்பிடலாமா?'' என்று வருகிறது உரிமைக் குரல்.
இந்த அமளிதுமளியால் அலுவலகத்துக்குக் கிளம்ப, பரபரத்து வெளியே வரும்போது, ''அண்ணே, உங்களை நம்பித்தான் நிற்கிறேன். நீங்கதான் இந்த தடவை மனசு வைக்கணும்!'' என்று இன்னொருவர் கெஞ்ச... 'ஐயோ, ஆபீஸில் நாம் போய் கெஞ்ச வேண்டுமே?’ என்ற நினைப்போடு பேருந்தைப் பிடிக்க ஓடுவார் மாண்புமிகு வாக்காளர். இப்படி நகரப் பகுதி வாக்காளர்களைத் துரத்தும் ஓட்டு வேட்டை ஒரு புறம் இருக்க... கிராமத்தில் நடக்கும் கூத்துகளோ நம்மை கரும்பைப்போல் பிழிந்து விடுகின்றன.
விடியற்காலை 5 மணிக்கெல்லாம் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள் வேட்பாளர்கள். தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்தால்... ''என்ன மச்சான், இன்னும் தூங்குறீங்க?'' என்று உறவைச் சொல்லி ஓட்டு கேட்பார் ஊராட்சித் தலைவர் வேட்பாளர். 'ஓஹோ, அவர் வீட்டுக்குப் போகிறாரா? சரி, நாம் தெரு முனையில் மாப்பிளையைப் பார்த்துவிடுவோம்’ என்று கும்பலோடு காத்திருக்கிறார் மற்றொரு வேட்பாளர். தெருமுனையில் அவரைச் சந்தித்துவிட்டு டீக்கடைக்குப் போனால், ''டேய், அண்ணனுக்கு ஒரு டீ சொல்லுடா. அண்ணே... நம்ம சின்னம் பூட்டு சாவி மறந்துடாதீங்க!'' என்று மற்றொரு வாக்காளர் ஓட்டு சேகரிக்கிறார். அடுத்து பெட்டிக்கடையில் போக... இன்னொரு வேட்பாளர் கலரை (கிராமத்து கூல்டிரிங்ஸ்!) உடைத்து நீட்டுவார். மறுத்தால்... ''அவர் கொடுத்தா குடிப்பீங்க, நாங்க கொடுத்தா குடிப்பீங்களா?'' என்று போட்டு வாங்குவார். அதனால், அதையும் குடித்துவிட்டு வயிறு கடாபுடா சத்தம் போட, வயக்காட்டு பக்கம் ஓட வேண்டும்.  
வயலில் வேலை செய்யும் தாய்மார்களிடம் கும்பிட்டு விழுந்து வாக்கு சேகரிக்கிறார் ஒரு வேட் பாளர். கூலியோடு சேர்த்து இன்னொரு 100 ரூபாய் உபரியாகக் கிடைக்க... ''அது நம்ம சூனாபானா கொடுக்கச் சொன்னாரு. மறந்துடாதீங்க... ஏணியில ஒரு ஓட்டைப் போட்டுடுங்க...'' என்று வழிகிறார்கள். அலுத்துப்போய் கள்ளச்சாராயக் கடைக்குப் போனால், அங்கே தயாராக நிற்கிறது ஒரு அல்லக்கை. ''வாங்க, வாங்க... இன்னிக்கு நம்ம செலவுதான். எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுங்க. எல்லாம் அண்ணன் செலவுதான். அவர் சின்னம் மூக்குக் கண்ணாடி மறந்துடாதீங்க!'' என்று தாராளம் காட்டுகிறார் அந்த அல்லக்கை. ஓசியில் கிடைத்த சாராயத்தால் மட்டையாகும் குடிமகன் வீட்டில் போய் ரகளை கட்டுகிறார். அவர் களால் வீட்டுப் பெண்கள் படும் பாடு சொல்லி முடியாது.
எந்த வேட்பாளரோடு கூட போனால், அதிக ரூபாய் கொடுப்பார்கள் என்று காலையில் கணக்குப் போட்டு கிளம்புகிறார்கள் சில வாக்காளர்கள். வாக்குக் கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு தவறாமல் ஆரத்தி எடுக்கிறது பெண்கள் கூட்டம். காரைக் காலுக்கோ, புதுவைக்கோ யாரை அனுப்பி சரக்கு வாங்கலாம், எந்தக் கடையில் குறைந்த விலைக்கு பிரியாணி வாங்கலாம் என்றெல்லாம் கணக்குப் போடுகிறது வேட்பாளர்களின் மனது.
இதைவிட பெரிய சோகம்... கிராமங்களில் நேற்று வரை தாயாய் பிள்ளையாய், மாமன் மச்சானாய் பழகிய சொந்தக்காரர்கள் இப்போது ஜென்மப் பகை ரேஞ்சுக்கு முறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவரும் மற்ற வேட்பாளர்களிடமோ அவர்களது ஆதரவாளர்களிடமோ பேசுவது இல்லை. டீக்கடைகளில் கும்பல் கும்பலாகப் பிரிந்து உட்கார்ந்து இருக்கிறார்கள். சாவு வீட்டுக்குப் போனாலும், அங்கேயும் தனி அணி. மொத்தத்தில் நகரங்கள் பரவாயில்லை, கிராமங்களோ அதன் இயல்பைத் தொலைத்துவிட்டு தேர்தல் திருவிழாவில் தொலைந்துபோன குழந்தையாய் விழிக்கின்றன!
கரு.முத்து  
ஒற்றை மனிதர் பிரசாரம்!
*********************************************************************************

தேர்தல் களத்தில் போராளி

ரு ஸ்கூட்டி... அதில் விளம்பரத் தட்டி... ஒரு மைக் மட்டும் எடுத்துக்கொண்டு, தனி ஆளாக ஓட்டுக் கேட்டு வருகிறார் கோபால கிருஷ்ணன். சென்னை மாநக ராட்சித் தேர்தலில் 131 மற்றும் 138 வார்டுகளில் சுயேச்சையாகக் களம் இறங்கி இருக்கும் கோபால கிருஷ்ணன், கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் ஏரியாக்களை தினமும் வட்டமடித்து வருகிறார். தங்கையின் ஸ்கூட்டியை இரவல் வாங்கி அதில் கார் பேட்டரியைப் பொருத்தி மைக் இணைப்பு கொடுத்திருக்கிறார். பதிவு செய்த தனது உரையை தொடர்ந்து ஒலிபரப்புகிறார். 
யார் இந்த கோபால கிருஷ்ணன்? தகவல் உரிமைப் போராளி. 'சமூக சேவகர், அப்பழுக்கற்ற அரசு ஊழியர்’ என்கிற பிரிவுகளில் வீட்டு வசதி வாரியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் முறைகேடாக வீடுகளையும் மனைகளையும் வாங்கிய விவகாரத்தை வெளிக்கொண்டுவந்து, ஜாஃபர் சேட், ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் என்று பலரையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய அதே கோபால கிருஷ்ணன். பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்த மோசடிக் குற்றச்சாட்டில் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் கைது ஆவதற்கும் காரணமாக இருந்தவர். ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடந்தபோது அதில் பங்கெடுத்தவர்.
''லோக்பால் போராட்டத்தின்போது 'நாடாளு மன்றத்துக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மட்டுமே சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு’ என்று சொன்னது மத்திய அரசு. அதனால்தான் தேர்தலில் நிற்க முடிவெடுத்தேன். எங்க ஏரியாவில் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வாங்கியவர்களுக்கு கிரையப் பத்திரம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு கொடுத்து, நயா பைசா செலவே இல்லாமல் பத்திரம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். முதியோர் உதவித் தொகையைக் கொண்டுவரும் தபால்காரர்கள் அதில் பணம் பிடித்துக்கொண்டு கொடுத்தபோது, அவர்களை சி.பி.ஐ. மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுத்தேன்.
மக்கள் மீது நம்பிக்கைவைத்து களத்தில் நிற்கிறேன். அவர்கள் விரும்பினால், என்னை மாமன்றத்துக்கு அனுப்பிவைக்கட்டும்!'' என்கிறார் நம்பிக்கையுடன் கோபாலகிருஷ்ணன்.
இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் வைரம். ஆளுக்கேத்த சின்னம்தான்!
எம். பரக்கத் அலி, படங்கள்: எம். உசேன்
*********************************************************************************
சென்னை ரவுண்ட்ஸ்

தொண்டு தோள் கொடுக்குமா? 
கடந்த மாநகராட்சித் தேர்தலின்போது, தி.மு.க-வினர் நடத்திய வன்முறையால் கடுமை யாகத் தாக்கப்பட்டு காயம் அடைந்தவர், மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் தேவி என்ற தேவகி. உயர் நீதிமன்றமே மறு தேர்தல் நடத்தச் சொன்னதற்கு தேவி மீதான தாக்குதலும் முக்கியக் காரணம். இப்போது தேவி போட்டியிடும் 74-வது வார்டு,  மார்க்சிஸ்ட் கட்சிக்கு கௌரவப் பிரச்னை போல ஆகிவிட்டது. அதனால், இங்கு தீவிரமாக சுழன்று சுழன்று வேலை செய்கின்றனர். கடந்த 10 வருடங்களாக, ஏரியாவுக்கு கவுன்சிலர் தேவி என்னென்ன செய்தார்? என்பது பற்றி, 'தொண்டுகள் தொடர, தோள் கொடுப்பீர்’ என்ற 32 பக்கப் புத்தகம் ஒன்றை வீடு வீடாகக் கொடுத்து பிரசாரம் செய்கிறார்கள். தி.மு.க. தரப்பில் போட்டி இருந் தாலும், அ.தி.மு.க. தரப்பில் பிரசாரத்தையே காணோம். அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் வீடு இதே வட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த முறை அ.தி.மு.க-வின் வன்முறை  இருக்குமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள், ஏரியாவாசிகள். இந்த முறையும், தொண்டு தோள் கொடுக்குமா?
 யாருக்காவது போடுங்க!

 டாக்டருக்கு வருத்தமா?
எப்போதும் கோஷ்டி கானம் இசைக்கும் காங்கிரஸில், சென்னை மேயர் வேட்பாளர் ஸீட்டுக்கு கடும் போட்டி என்று எதுவும் இல்லை. வாசன் ஆதரவாளர்கள் நான்கைந்து பேர் முயற்சிக்க... தற்போதைய மாநகராட்சி எதிர்க் கட்சித் தலைவரான சைதை ரவிக்கு சான்ஸ் அடித்தது. கவுன்சிலர் இடங்களிலும் 65 சதவிகிதத்துக்கும் மேல் வாசன் அணியினரே அள்ளினார்கள். ஒரே கோஷ்டியாக ஸீட் வாங்கியவர்கள், பிரசாரத்தில் புது ஆவர்த்தனம் வாசிக்கிறார்கள். 'கவுன்சிலர் ஓட்டை எனக்குப் போடுங்க, மேயருக்கு எந்த கட்சிக்காவது போட்டுக்கோங்க...’ என்பதுதான் அவர்களின் பிரசார கோஷம். காரணம் என்னவாம்? 'வைட்டமின் ப’ பரிவர்த்தனை நடைபெறவே இல்லையாம். அது சரி, காங்கிரஸில் கோஷ்டி கானம் கேட்காமல் இருந்தால்தானே ஆச்சர்யம்!
மாநில அங்கீகாரம் இல்லாத கட்சிகள்கூட மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தி, வாய்ப்புள்ள வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. ஆனால், தேசியக் கட்சியான பி.ஜே.பி-க்கு மேயர் வேட்பாளரே இல்லை. பி.ஜே.பி-யின் சார்பில் மனுத் தாக்கல் செய்த ராஜேந்திரகுமாரின் மனு, விதிமுறைப்படி இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனால், அந்தக் கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர்கள், பிரசாரத்தின்போது மேயருக்கு யாருக்கு வாக்கு கேட்பது என்பதைச் சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. மேயருக்குப் போட்டி இல்லாததால், பெரிய தலைகளின் பிரசாரமும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னையில் தனியாகப் போட்டியிட்டு, 30,000 வாக்குகளைப் பெற்றவர் டாக்டர் தமிழிசை. அவரை நிறுத்தியிருந்தால், கௌரவமான போட்டியாக இருந்திருக்கும் எனப் புலம்புகிறார்கள், காவித் தொண்டர்கள். ''தமிழிசை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாத சிலரின் திருவிளையாடல்கள்தான் இது!'' என்றும் கட்சிக்குள் புலம்பல் கேட்கிறது.
 எஸ்.எம்.எஸ். தட்டுங்க.. மெயில் பண்ணுங்க!
சென்னை மாநகராட்சியின் 81-வது வார்டில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சாபிரா யார் தெரியுமா? பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யான ஜே.எம்.ஆரூணின் அண்ணன் மகள். இது வரை அரசியல் வாசமே இல்லாமல் இருந்த சாபிரா திடீர் வேட்பாளராகி இருக்கிறார். படித்த மக்கள் அதிகம் உள்ள வார்டு என்பதால், 'கவுன்சிலராகி சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரலை. உங்களுக்கு எதாவது நல்லது செய்யத்தான் வந்திருக்கேன். உங்க குறைகள் எதுவா இருந்தாலும் எனக்கு நீங்க எஸ்.எம்.எஸ்., அல்லது மெயில் பண்ணுங்க...’ என்று ஹைடெக்காக ஓட்டு கேட்கிறார். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் தனது செல்போன் நம்பரையும், இ-மெயில் ஐ.டி-யையும் கொடுத்து வருகிறாராம். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா!
 கட்சி மீது கடுப்பு?
காஞ்சிபுரம் மாவட்டம் பாலவாக்கம் ஊராட்சி, இப்போது சென்னை மாநகராட்சியின் 185-வது வார்டாக மாறியுள்ளது. கடந்த 1996, 2001-ம் ஆண்டுகளில் ஊராட்சித் தலைவராக இருந்தவர், பாலவாக்கம் சோமு. இவர் ம.தி.மு.க-வின் காஞ்சி மாவட்டச் செயலாளரும்கூட. 2006-ம் ஆண்டு இந்த ஊராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டதும், அவர் மகளையே நிற்கவைத்து வெற்றிபெறச் செய்தார் சோமு. இப்போது, சென்னை மாநகராட்சித் தேர்தலில் அவரே போட்டியிடுகிறார். இது அல்ல சங்கதி. ம.தி.மு.க-வின் அதிகாரபூர்வமான வேட்பாளர் என்றாலும், பிரசார சுவரொட்டியில் கட்சியின் வாசனையே தென்படவில்லை. சோமுவின் பெயரும் சின்னமும் மட்டும்தான் இருப்பதைப் பார்த்து சீறுகிறார்கள் கட்சிக்காரர்கள். அட, தன்னம்பிக்கைக்கு ஒரு அளவு வேண்டாமுங்களா?
 பொட்டு... ஓட்டு...
சென்னை மாநகராட்சி 169வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் நிற்கிறார் ஜெயச்சந்திரன். 168 வது வார்டுக்கு அவரது மகனே, அ.தி.மு.க. வேட்பாளர். இவர்கள் இருவரும் வாக்குக் கேட்க வரும்போது... ஜெயலலிதா படம் போட்ட சிறு அட்டையைக் கொடுக்கிறார்கள். உள்ளே திருப்பிப் பார்த்தால் ஏராளமான கலரில் ஸ்டிக்கர் பொட்டுகள் இருக்கும். ''பொட்டைப் பார்த்த சந்தோஷத்திலயே பெண்கள் எங்களுக்கு ஓட்டு போட்டுருவாங்க'' என்று சொல்லி மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் புழுதிவாக்கம் பகுதி அ.தி.மு.க.வினர்!
- ஜூ.வி. டீம்
************************************************************************
மிஸ்டர் கழுகு: கிலி... பிடித்தார் ஹெலி!


ஜெயலலிதா மதுரையில் பேசிக்கொண்டு இருப்பதை இங்கிருந்தபடியே லைவ்​வாகக் கேட்டபடியே நம் முன் ஆஜரா​னார் கழுகார். சில இடங்களில் லேசாகச் சிரித்துக் கொண்டார். 'வணக்கம்’ போட்டு ஜெ. முடித்ததும் நம்மைப் பார்த்துப் பேசத் தயாரானவரை மறித்தோம்! 
''மூன்று சந்தேகங்களுக்குப் பதில் சொல்லிவிட்டு உம்முடைய விஷயத்​துக்குச் செல்லலாம்!'' என்றோம்.
''தோட்டக்கலைச் சங்கத்துக்கு ஜெயலலிதா அரசு பல கோடி மதிப்புள்ள நிலத்தைத் தாரை வார்த்துவிட்டது என்று கருணாநிதி சொல்கிறாரே! யார் பக்கம் தவறு?''
''சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் செம்மொழிப் பூங்கா இருக்கிறது அல்லவா? அதற்கு எதிரே  200 கோடி மதிப்பிலான இடம் இருக்கிறது. இது தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்தது. அதைப் பராமரித்து வருபவரது பெயரைச் சொன்னால், விவகாரத்தின் வீரியம் முழுமையாக விளங்கிப் போகும். போயஸ் கார்டனுக்குள் புகுந்து புறப்பட்டு வரும் அதிமுக்கிய மனிதர்​களில் அதிமுக்கியமானவர். அந்த இடத்தைத் தோட்டக்கலைச் சங்கத்துக்கு கொடுக்க முந்தைய ஆட்சியில் ஜெயலலிதா முடிவெடுத்தார். அடுத்து வந்த கருணாநிதி, இதை எதிர்த்து முடிவெடுத்தார். இது தொடர்பான ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. அவர்கள், தோட்டக்கலைச் சங்கத்தை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும், அப்படிப்பட்ட விசாரணையை சென்னை கலெக்டர் நடத்தியதாகவும், உரிய ஆவணங்களைக் காட்டியதாகவும் சொல்லிக் கடந்த வாரம், பல கோடி மதிப்பிலான அந்த இடத்தை அவருக்கே கொடுத்துவிட்டார்கள்!
அ.தி.மு.க. ஆட்சியில் தோட்டக்கலைக் கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாகத்தான் முடிவெடுப்​பார்கள். ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே முதலமைச்சர் அலுவலகத்துக்குள் ஆட்களை வைத்து... அந்த இடத்தில் வேறு எதுவும் உருவாகிவிடாதபடியான காரியங்களையும் கச்சிதமாகப் பார்த்தார்கள்.  இதெல்லாம் அன்று கருணாநிதிக்கு தெரியுமா எனத் தெரியவில்லை என்கிறார்கள். 'ஊரெல்லாம் நில அபகரிப்பு வழக்குகளைப் போடும் முதல்வர் இப்படிப்பட்ட தாரை வார்ப்பை ரகசியமாகச் செய்ய வேண்டுமா?’ என்ற விமர்சனம் அதிகாரிகள் மட்டத்தில் உள்ளது!''
''பரிதி இளம்வழுதி, அ.தி.மு.க-வுக்குப் போகப் போகிறார் என்கிறார்களே?''
''பரிதி இளம்வழுதிக்கு எதிராக தி.மு.க-வில் உள்ள மாஜி அமைச்சர்கள் சிலர் றெக்கை கட்டி வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் கிளப்பும் வதந்திதான் இது. 'இது என்னுடைய தந்தையும் நானும் வளர்த்த கட்சி. நான் எதற்கு இன்னொரு கட்சிக்குப் போக வேண்டும்?’ என்று அவர் கேட்டதாகச் சொல்கிறார்கள். 'தி.மு.க-வில் இருந்து போராடுவேன்’ என்று அவர் அறிக்கையே விட்டுள்ளாரே!''
''ஜெயலலிதாவை ஆதரித்து புத்தகம் எழுதியவர்​தான் இப்படி வதந்தியைக் கிளப்புகிறார் என்று அந்த அறிக்கையில் சொல்கிறாரே பரிதி! யாரைச் சொல்கிறார்?''
''எ.வ.வேலுவைச் சொல்கிறாராம்! '96-ம் ஆண்டு தி.மு.க-வில் சேருவதற்கு முன்னதாக ஜெயலலிதா பற்றி ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் தயாரித்தார் வேலு. பிரபல கவிஞர்  ஒருவரிடம் முன்னுரை வாங்கி... அந்த அம்மாவின் அழைப்புக்காகக் காத்திருந்தார். ஆனால், கார்டன் கதவு திறக்கவில்லை என்றதும்தான் வண்டியைத் திருப்பி கோபாலபுரம் போனார்’ என்று ஒரு தகவல் சொல்கிறார்கள். அதைத்தான் பரிதி சொல்கிறாராம். வேலு ஆட்களைக் கேட்டால், 'அப்படி எந்தப் புத்தகமும் தயாரிக்கவில்லை’ என்கிறார்கள். அது போகட்டும். அநேகமாக, இறுதிக் கட்ட பிரசாரத்தில் தனது ஆதரவாளர்களுடன் உதயசூரியனுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் பரிதியை சென்னையில் எங்காவது பார்க்கலாம்! அடுத்த சந்தேகத்தைக் கேளும்!''
''கனிமொழி ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம் என்று சி.பி.ஐ. சொன்னது உண்மையா?''
''சி.பி.ஐ. அதிகாரப்பூர்வமாக அப்படி எந்த வாக்குறுதியையும் யாரிடமும் தரவில்லை என்கிறார் எனது டெல்லி சோர்ஸ். 'இது தங்களுக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளின் வேலையா அல்லது நிருபர்களுக்குள் இருக்கும் நலம்விரும்பிகளின் கூத்தா எனத் தெரியவில்லை’ என்று சி.பி.ஐ. அதிகாரி​களுக்குள் பேச்சு இருக்கிறது. இந்த நியூஸ் வந்தது, கனிமொழி ஆதரவாளர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், நெகடிவ் ஆகிவிட்டதுதான் உண்மை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் இயக்குநர் விவேக் கோயங்கா ஆகிய இருவரும் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு கடந்த புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சிங்வி மற்றும் தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த நீதிபதிகளும் அந்தச் செய்தியைப் பார்த்திருக்கிறார்கள். 'கனி​மொழி ஜாமீனை சி.பி.ஐ. எதிர்க்காது என்று செய்தி வந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது’ என்று நீதிபதிகள் காட்டமாகச் சொல்ல... 'இப்படி சி.பி.ஐ. சொல்லவில்லை. ஜாமீனை மறுக்கும்படிதான் சி.பி.ஐ. சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது’ என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல் பதில் அளித்துள்ளார். 'ஸ்பெக்ட்ரம் வழக்குத் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அறிவுறுத்தப்பட்டுள்ளதா?’ என்றும் கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்கள் நீதிபதிகள். இதில் இருந்தே, அக்டோபர் 17 அவ்வளவு நம்பிக்கைக்கு உரியதாக இருக்காது என்பது தெரிகிறது!'' என்ற கழுகாரிடம், ''இப்போது உம்முடைய மேட்டருக்கு வாரும்!'' என்றோம்.
''சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியாக அடைந்த வெற்றியை இப்போது தனியாக அடைந்தாக வேண்டும் என்று நினைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'விஜயகாந்த், கம்யூனிஸ்ட், மற்றும் பலரையும் இணைத்த கூட்டணியால்தான் ஜெயித்தோம் என்ற பெயரை மாற்ற வேண்டும்’ என்று சொல்கிறாராம் ஜெயலலிதா. உளவுத்துறை அதிகாரிகள் கொடுக்கும் பட்டியலில் சில மாநகராட்சிகள் இழுபறி என்பதுமாதிரி ரிசல்ட் வருகிறதாம். அதனால்தான் திடீர் சுற்றுப்பயணத்தை அறிவித்து, ஹெலிகாப்டர் ஏறினார் முதல்வர். கோவை, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தே.மு.தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி அதிக வாக்குகளை வாங்கலாம் என்றும் ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மூன்றில் ம.தி.மு.க. கணிசமான வாக்குகளை அள்ளலாம் என்றும் தகவல். இவர்கள் வாக்குகளைப் பிரித்து, அதன் மூலமாக தி.மு.க. ஜெயித்துவிடுமோ என்று நினைத்துதான் இந்தச் சுற்றுப்பயணத்தை முடுக்கி விட்டுள்ளார்!''
''ஓஹோ!''
''அண்ணா அறிவாலய விவகாரம் தொடர்பாக தி.மு.க-வையும் கருணாநிதியையும் இந்த சுற்றுப்பயணத்தில் கடுமையாகச் சாடினார் முதல்வர். 'அண்ணா அறிவாலயம் தொடர்பாக நான் திருச்சியில் பேசியதற்கு கருணாநிதி சவால் விட்டிருக்கிறார். அதில், 'அந்த இடமே வெறும் 25 கிரவுண்ட் மட்டும்தான்’ என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், அந்த இடம் நான்கரை ஏக்கர். அதாவது, 90 கிரவுண்ட். அதை அவர் மறைத்து விட்டார். அது வெறும் 25 கிரவுண்ட் மட்டும்தான் என்றால் மீதி இருக்கும் இடத்தை அரசுக்குக் கொடுப்பாரா, கருணாநிதி?’ என எதிர்சவால் விட்டதைக் கூட்டம் வெகுவாக ரசித்தது''
''மதுரையிலும் இதே பேச்சுதானா?''
''மதுரைக்குத்தான் பிரத்யேகமாக இருக்கிறதே அழகிரி அட்டாக்! இந்த தேர்தலில் அழகிரி ஏனோ பயங்கர சைலன்ட். மதுரையிலேயே இருந்தார். திங்கட்கிழமை டெல்லி போனார். வியாழக்கிழமை மீண்டும் திரும்பினார். பிரசாரம் போகவில்லை. வீட்டிலேயே அமைதியாக இருக்கிறார்!'' - சிரித்தபடி பறந்தார் கழுகார்!
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.சிதம்பரம்
 
''காதலும் இல்லை... கத்தரிக்காயும் இல்லை!''
உள்ளாட்சித் தேர்தல் பரபரப்புகளில் அத்தனை அமைச்சர்களும் பிஸியாக இருக்க, 'உள்ளாட்சி’ (அதாங்க வீட்டு விவகாரம்) சிக்கலில் இருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அவர், கணவனை இழந்த பெண் ஒருவரைக் காதலித்து ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகவும், இது தெரிந்து அதிர்ந்துபோன அமைச்சரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  எக்கச்சக்க பரபரப்பு. இதுகுறித்து செந்தில் பாலாஜியிடம் கேட்ட போது, ''நான் தேர்தல் பிரசாரத்தில் இருக்கேன். என் மனைவி வீட்டில் இருக்கிறார். அமைச்சர் அந்தஸ்து கொடுத்து அம்மா என்னை மக்கள் பணிக்காக அனுப்பி இருக்கையில், காதல், கத்தரிக்காய் என்று நான் அலைவேனா? எனக்கு எதிரானவங்க கற்பனையில் கிளப்பிவிடுற கதைகள் சார் இது. எனக்கே இது சம்பந்தமா பல எஸ்.எம்.எஸ்-கள் வந்துடுச்சு!'' என்றார் பரிதாபமாக!
*********************************************************************************
கழுகார் பதில்கள்

மகேஸ்வரன், சென்னை-12.
கூடங்குளம் விஷயத்தில் தமிழக கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன?

டான ஜனசக்தியில், 'கூடங்குளம் அணு மின் உலை தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்தது. புகுஷிமாவைவிட கூடங்குளம் பாதுகாப்பானதே’ என்று ஜி.ஆர்.சீனிவாசன் கட்டுரையை ஒரு பக்கம் வெளியிடு​கிறார்கள்.  'கூடங்குளத்தில் மக்களின் அச்சத்தைப் போக்காத வரை, அணு உலைகளை இயக்கக் கூடாது. புதிய கட்டுமானங்கள் எதையும் தொடங்கக் கூடாது’ என்று இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சொல்கிறார். பிரதமரைச் சந்தித்து மனு கொடுக்கிறார் தேசியச் செயலாளர் டி.ராஜா. ஆனால், அவர்​களின் அதிகாரப்பூர்வ நாளே
கூடங்குளம் அணு உலையை  அமைப்பது ரஷ்யா என்பதால்தான், காம்ரேட்​களுக்குத் தயக்கமும் மயக் கமும். அமெரிக்காவாக இருந்திருந்தால் வரிந்து கட்டிக்​கொண்டு எதிர்த்து இருப்பார்கள்.
 காந்திலெனின், திருச்சி.
மீண்டும் மின்தடை வந்து விட்டதே?
  இதற்கு முதல்வரிடம் சரியான விடை இல்லை. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரைக்கும் காத்திருக்கச் சொல்லிவிட்டார். எதிர்காலத் திட்டமிடுதல்கள் இல்லாத அரசியல் தலைவர்களின் ஆளுகையின் கீழ் வாழும் மக்கள், இத்தகைய அவஸ்தை களை அனுபவித்தே ஆக வேண்டும்!
  சின்ன முனுசாமி, தஞ்சாவூர்.
கழுகார் சமீபத்தில் ரசித்தது?
பத்திரிகையாளர் சோ, ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். 'ஸ்ரீஸ்ரீஸ்ரீ துக்ளக் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய மனமோகன துஷ்டகவசம்’ என்று அதற்கு பெயரும் சூட்டி இருக்கிறார். திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் அந்தப் பாட்டின் சில வரிகள் மட்டும் தருகிறேன்...
ஊழல் செய்வோர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்; 
பர்ஸில் பதிப்போர்க்குச் செல்வம் நிலைத்து 
கதித்து ஓங்கும் - பதவியும் கைகூடும்; டெல்லி 
அருள் மனமோகன கவசந்தனை.
 அடியேன் ஊழலை, டர்பன் காக்க 
கண்ணாடி இரண்டும் கறுப்புப் பணம் காக்க 
பேசும் பொய்தனை, ப்ராண்ட் நேம் காக்க 
தகவல் சட்டம் தாக்காமல் தாடியும் காக்க 
ஸ்விஸ் பேங்க் கணக்கை மீசை காக்க 
பொருள் அனைத்தும் பொருளாதார மேதை காக்க 
பினாமி சொத்தை பிரதமர் காக்க,
 காக்க காக்க கண் மூடி சாமி காக்க 
நோக்க நோக்க நோ ஃபைல் நோக்க 
தாக்க தாக்கத் தாடிக்காரர் தாக்க 
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட......
 விநாயகம், தூத்துக்குடி.
உள்ளாட்சித் தேர்தலுக்காக சுற்றுப் பயணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த ஜெயலலிதா, திடீரென எல்லா ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டாரே?
உள்ளாட்சித் தேர்தல் ஏற்படுத்திய உள்காய்ச்சல்தான் காரணம்!
திருச்சி இடைத் தேர்தலுக்கே முதலில் 6 பேர் குழு... அதன் பிறகு 12 பேர்... அடுத்து 16 பேர்கொண்ட குழு அமைத்தார். அது மாதிரித்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளிலும் அவருக்குப் பரவலான சந்தேகம் இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்தி வெளியில் அனுப்பியது, சொந்தக் கட்சி வேட்பாளர் தேர்வில் நடந்த குளறுபடிகள், ஏராளமான இடங்களில் இரட்டை இலையை எதிர்த்து அ.தி.மு.க-வினரே போட்டி இடுவது போன்று எத்தனையோ மைனஸ்கள். எனவேதான் இந்த திடீர் சுற்றுப் பயணம்!
 தமிழேசன், திருப்பூர்.
இலங்கை செல்லும் முன் இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தாரே... இருவரும் என்ன பேசினார்கள்?
தமிழக மீனவர்களை, சிங்களக் கடற்படை தொடர்ந்து தாக்குவதை சொல்லித்தான் முதல்வர் வருத்தப்பட்டார். அவர் ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 16 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. 'தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குவதை இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக நினைக்க வேண்டும். இதைத் தமிழகப் பிரச்னையாகப் பார்க்காமல் தேசியப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும்’ என்றும் முதல்வர் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டுவிட்டு ரஞ்சன் மத்தாய், இலங்கை சென்றார். அன்றைய தினமே, மண்டபம் பகுதி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது சிங்கள கடற்படை. மகிந்த ராஜபக்ஷேவிடம் மத்தாய் என்ன சொன்னார் என்று தெரியவில்லை!
 திருவேங்கடம், திண்டிவனம்.
'தி.மு.க. எங்களை வஞ்சித்துவிட்டது’ என்கிறாரே திருமாவளவன்?
அதையே எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டு இருப்பார் திருமா? இனியாவது கருணாநிதியைத் திருப்திப்படுத்த கட்சி நடத்தாமல், சிறுத்தைத் தொண் டனுக்காக அவர் கட்சி நடத்தட்டும்!
 சுரேஷ்குமார், ஈரோடு.
'காங்கிரஸார் நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்றார்கள். ஆனால், தி.மு.க-வினர் நில அபகரிப்பு ஊழல்களுக்காகச் சிறை சென்றுள்ளனர்’ என்று குற்றம் சாட்டுகிறாரே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?
ஆதர்ஷ் ஊழலில் பதவி விலகிய மகாராஷ்டிரா முதல்வர் எந்தக் கட்சி? காமன் வெல்த் ஊழலில் கைது செய்யப்பட்ட கல்மாடி எந்தக் கட்சி? இவை எல்லாம் நாட்டுக்காக நடந்தவையா? சொந்த வீட்டுக்காக நடந்தவையா என்று இளங்கோவன்தான் விளக்க வேண்டும்!
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தபோது ஆ.ராசா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். ஆனால் யாருடைய அமைச்சரவையில் நடந்தது இந்த ஊழல்? காங்கிரஸ் ஆளும்போதுதானே?
 மு.கல்யாண்சுந்தரம், மேட்டுப்பாளையம்.
க.அன்பழகன், ஓ.பன்னீர் செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன்... இந்த 'நம்பர் டூ’-க்களில் முதல் இடம் யாருக்கு?
  இந்த மூவருமே 'நம்பர் டூ’ அல்ல என்பதுதான் முழு உண்மை!
கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், ஜெயலலிதாவை அடுத்து சசிகலா, விஜயகாந்த்தை அடுத்து பிரேமலதா... ஆகியோர்தான் அந்த ஸ்தானத்தில் இருக்கிறார்கள். நீங்கள் சொல்பவர்களே, தாங்கள்தான் 'நம்பர் டூ’ என்பதை நம்ப மாட்டார்கள்!
 முருகேஷ், திருச்சி.
கே.என்.நேருவை நினைத்தால்?
நேரு மீதான வழக்குகளின் உண்மைத் தன்மைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அவரை வெளியே விடக் கூடாது என்பதில் அரசாங்கமும் போலீஸும் செய்த காரியங்கள் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகள்தான்!
 ரேவதிப்ரியன், ஈரோடு.
விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது என்கிறாரே நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி?
பிரணாப் கவலைப்படுவதால் மட்டும், பருப்பு விலை குறைந்துவிடாது!
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
ஆப்பிள்’ ஸ்டீவ் ஜாப்ஸ்... மரணத்தைத் தெரிந்தே வாழ்ந்தது அபூர்வம்தானே?
  அவரது ஆப்பிள் இல்லாமல் இனி எவரும் வாழ முடியாது என்பது அதைவிட அபூர்வம்தானே!
*********************************************************************************
45 நாள் நீயும் ஜெயில்ல இரு... அப்பத் தெரியும்!

நிருபரை கலாய்த்த கே.என்.நேரு

க்டோபர் 10-ம் தேதி நள்ளிரவில் ஜாமீனில் வந்த நேரு, அடுத்த நாள் முழுவதும் தொகுதியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தொண் டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க... அவரோ, தொகுதிப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை! 
ஜாமீனில் விடுவிக்கப்பட்டதும், நேராக சென்னைக்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்த நேரு, பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் வந்து கையெ ழுத்துப் போட்டுவிட்டு, தனது சொந்த ஊரான கானக்கிளியநல்லூருக்குச் சென்றுவிட்டார். பிரசாரம் செய்ய ஒரே ஒரு நாள் வாய்ப்பு கிடைத்தும் அதை நேரு பயன்படுத்திக்கொள்ளாதது ஏன் என்று தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம்.
''நேரு பிரசாரக் களத்துக்கு வரும்பட்சத்தில், 'கட்சி அலுவலகத்தில் பணம் வைத்திருந்தார்... வாக் காளர்களுக்குப் பணம் விநியோகித்தார்’ என்று ஏதாவது பொய் வழக்குகளைப் போட காவல் துறைதிட்டம் தீட்டி இருந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறைக்கு நாமே வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கக் கூடாது என்பதால்தான், அவர் பிரசாரம் செய்யவில்லை.
அடுத்து, தொகுதிக்குள் நேரு வந்தால், இது நாள் வரையில் அமைதியாகத் தேர்தல் பணியாற்றிய அவரது தீவிர அபிமானிகள், அவரைப் பார்க்க வேண்டும், தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக கூடுதல் உற்சாகத்துடன் திரள்வார்கள். இதையும் ஆளும் கட்சி தனக்கு சாதக மாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதே!
மூன்றாவதுதான் மிக முக்கியமானது. இந்த இடைத்தேர்தலில் நேரு ஜெயித்தால், களத்துக்கே வராமல் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும். தி.மு.க. வரலாற்றில் இது மிகவும் முக்கியம் இல்லையா! கடைசி ஒரு நாள் பிரசாரம் செய்வதன் மூலம் அந்தப் பெருமையை நாமே ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்?'' என்று காரணங்களை அடுக்கினார்கள்
தேர்தல் நாளன்று காலை தினசரிகளிலும், அதற்கு முந்தைய தினம் மாலை தினசரிகளிலும் தனக்கு வாக்குகள் கேட்டு நேரு கொடுத்திருந்த விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
'நான் சிறையில் இருந்த காரணத்தால், உடல்நிலை சரியில்லாத நிலையில், உங்களை நேரில் சந்திக்க இயலவில்லை. தேர்தலுக்குப் பின் நிச்சயம் உங்க ளுக்கு நன்றி தெரிவிக்க வீடு வீடாக வருவேன்’ என்று சொல்லியிருக்கும் நேரு, 'இடைத்தேர்தல் களத்தில் இருக்கும் என் மீது அவதூறான பொய் பிரசாரத்தை பத்திரிகைகள் வாயிலாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் பரப்புகிறார்கள். நான் கோடிக் கோடியாகப் பணம் மற்றும் ஏகப்பட்ட நிலங்கள் வைத்திருப்பதாகவும் பிரசாரம் செய்கிறார்கள். நான் 12 ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றி இருக்கிறேன். அமைச் சராக இல்லாத நேரத்திலும், எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் யாருடைய சொத்தையும் அபகரித்ததும் இல்லை; யாருடைய பணத்துக்கும் ஆசைப்பட்டதும் இல்லை. என் மீது பரப்பப்படும் பொய் பிரசாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டுசென்று அது உண்மையாக இருக்குமானால், நீதிமன்றம் வழங்கு கின்ற தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்!'' என்றும் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் 13-ம் தேதி காலை 8.30 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்ய வந்தார் நேரு. அவரிடம் ''என்னண்ணே? உங்க முகத்துல பழைய சிரிப்பைக் காணோம்?'' என்று நிருபர் ஒருவர் கேட்க... ''45 நாள் நீயும் ஜெயில்ல இருந்து பாரு. முகத்துல சிரிப்பு இருக்குமா... இல்லையான்னு தெரியும்!'' என்று ஜாலி யாக கமென்ட் அடித்தார். ஜாமீனில் வந்திருந்த மாநகர் மாவட்டச் செயலாளர் அன்பழகன் மெலிந்து இருந்ததைப் பார்த்துவிட்டு, ''என்னய்யா.. வயித்தை சேலம் ஜெயில்லேயே விட்டுட்டு, உடம்பை மட்டும் தூக்கிட்டு திருச்சிக்கு வந்துட்டியா?'' என்று அடுத்த கமென்ட் பாஸ் செய்தார் நேரு.  சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வெடித்து சிரிக்க... அந்த இடமே கலகலப்பானது.
நேருவிடம் பேசினோம். ''மொத்தம் 45 நாட்கள் ஜெயிலில் இருந்தேன். ஒரு வழக்கில் போராடி ஜாமீன் வாங்கிட்டு வந்தா... இன்னொரு வழக்குப்போட்டு வெளியில் வர முடியாமப் பண்ணிடுவாங்க. என் எதிரிக்குக்கூட இப்படி ஒரு நிலை வரக் கூடாது!'' என்று வருத்தம் காட்டியவர், ''என் மேல் போட்ட அஞ்சு வழக்குகளில், கலைஞர் அறிவாலய வழக்குப் போட்ட சீனிவாசனைத் தவிர, மத்த வழக்குகள் போட்டவங்க யாருன்னே எனக்குத் தெரியாது. அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சீனிவாசன்கிட்ட இருந்தும் நிலத்தை முறைப்படித்தான் வாங்கி னோம். அவரை மிரட்டி நிலத்தை அபகரிச்சு இருந்தா... அறிவாலய அடிக்கல் நாட்டு விழா வுக்கும், திறப்பு விழாவுக்கும் சீனிவாசன் வந்து இருப்பாரா?  அவரோட மகன் கல்யாணத்தைக் கூட இதே அறிவாலயத்தில்தான் நடத்தினார். நடந்த சம்பவங்களை எல்லாம் உயிலா எழுதிவைச்சிருந்ததா சொல்ற சீனிவாசன், அப்பவே நீதிமன்றத்தை நாடி இருக்கலாமே? ஏன் செய்யலை? ஏன்னா... எல்லாமே அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஜோடிக்கப்பட்ட விஷயங் கள்தான்...'' என்று கடுகாய் வெடித்தார்.
அனுதாபம் வெற்றி தருமா என்பதையும் பார்த்துவிடலாம்!    
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************
உள்ளாட்சித் தேர்தல்... ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே!


ஜூ.வி. நிருபர் படையில் இருந்து 80 பேர் தமிழகம் முழுவதும் களம் இறங்கினார்கள். நகரம், கிராமம், ஆண், பெண் என்று அனைத்துத் தரப்பு களில் இருந்தும் 3,698 பேரை நேரில் சந்தித்தார்கள். இதில் பெண்கள் மட்டும் 1,183 பேர்.மச்சீர்க் கல்விச் சறுக்கல், பரமக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட தலைவலிகளில் ஆளும் அ.தி.மு.க-வும் தேர்தல் தோல்​வியால் துவண்டிருக்கும் தி.மு.க-வும் தங்கள் செல்வாக்கைக் காட்ட முட்டி மோதுகின்றன இந்த உள்ளாட்சித் தேர்தலில். கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. போட்டியிடுகிறது. ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தனித்து நிற்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் மனசை நம் ஜூ.வி. நாடி பிடித்துப் பார்க்காவிட்டால் எப்படி? 
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பல ஆச்சர்ய முடிவுகளை அளித்தது. எதிர்க் கட்சி அந்தஸ்​​தைக்கூட கொடுக்காமல் தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்பினார்கள் வாக்காளர்கள். அதன் பிறகு பதவியேற்ற ஜெயலலிதா ஆட்சி எப்படி இருக்கிறது? எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் செயல்பாடு எப்படி? உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? கேள்விகளுடன் சர்வே தாள்களை நீட்டியபோது உற்சாகத்தோடு பூர்த்தி செய்து கொடுத்​தார்கள்.
உள்ளூர் வேட்பாளர்களின் செல்வாக்குதான் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்பது வரலாறு. அதையேதான் சர்வே முடிவும் காட்டுகிறது. சட்ட​சபைத் தேர்தல் தோல்வியைவிட உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வின் நிலை மாறும் என்று அதிகம் பேர் சொல்லி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்குப் பிரச்னை இருக்காது என்பார்கள். ஆனால், பரமக்குடி துப்பாக்கிச் சூடு மக்களின் மனதில் பாதிப்பை உண்டாக்கியதால், 'சட்டம் - ஒழுங்கு சுமாராகத்​தான் இருக்கிறது’ என்று அதிகம் பேர் சொல்லி இருக்கிறார்கள். தி.மு.க-வினர் மீதான நில அபகரிப்பு நடவடிக்கை நியாயமானதுதான் என்று மிக அதிகமான மக்கள் நம்புகிறார்கள்.  கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடும்போது ஜெயலலிதா மீதான நம்பிக்கையில் சிறு சரிவு தெரிகிறது. இந்தப் பக்கம் தி.மு.க-வின் மீதும் பெரிய நம்பிக்கை ஏற்படவில்லை. மொத்தத்தில் 'மக்கள் மனசு’ என்ன என்பதை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறோம்!
*********************************************************************************
பிரசாந்த் பூஷண் தாக்குதல் பின்னணி!

பேஸ்புக்கில் மெசேஜ்... அதுக்குப் பிறகு அட்டாக்...

ழலுக்கு எதிரான போராளியும், 2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்கு வித்திட்டவருமான பிரபல வழக்​கறிஞர் பிரசாந்த் பூஷண், இப்போது செய்திகளில் 'அடி’ படுகிறார்! 
டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே உள்ள வழக்கறிஞர்கள் சேம்பரில் இருக்கிறது, பூஷணின் அலுவலகம். கடந்த 12-ம் தேதி அவர் 'டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக்கொண்டு இருந்த நேரத்தில் மூன்று வாலிபர்கள் அவரைப் பார்க்க வந்தனர். அவர்கள் பூஷணிடம் ஏற்கெனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கியவர்கள் என்பதால் அவர்களை காத்திருக்கச் சொன்னார் பூஷண். அந்த இளைஞர்களில் ஒருவர் மட்டும் பேட்டி நடந்துகொண்டிருந்த அறைக்குள் திடீரென நுழைந்த மாத்திரத்தில், பூஷணைத் தாக்கத் தொடங்கினார். முதலில் கன்னத்தில் பளார், பளார் என்று  அறைந்தவர்  நாற்காலியில் இருந்து கீழே இழுத்துப் போட்டும் சரமாரியாகத் தாக்கினார்.
வெளியே இருந்த பிரசாந்த் பூஷணின் ஜூனியர் பிரணவ் சச்சிதேவா, பதறி அடித்து ஓடி வந்தார். அந்த இளைஞனைத் தடுக்க முனைந்தார். அவராலும் சமாளிக்க முடியாதபடி தாக்குதல் நடந்தது. பின்னர், பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து தாக்கிய இளை​ஞரைச் சுற்றி வளைத்து நையப்புடைக்கவே, அவருடன் வந்த இருவரும் சில துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு தப்பி விட்டனர்.
பிடிபட்டவர், தன்னுடைய பெயர் இந்தர் வர்மா என்றும் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த டெல்லி பிரிவின் தலைவர் என்றும் கூறினார். ஆனால் துண்டுப் பிரசுரங்களில் 'பகத்சிங் புரட்சிப் படை’ என்று இருந்தது. தன்னுடன் வந்த தேஜிந்தர் பால் சிங் பேகா மற்றும் விஷ்ணு குப்தா போன்றவர்களைப் பற்றி வர்மாவே தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களுக்கு முன்பே தேஜிந்தர் பால், தன்னுடைய ஃபேஸ் புக்கில், 'நாங்கள்தான் பூஷணைத் தாக்கினோம். இந்தியாவை உடைக்க (பிரிக்க) நினைத்தால் உன்னுடைய (பூஷண்) மண்டையை உடைப்போம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விவகாரத்தின் பின்னணி படிப்படியாகத் தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு வாரணாசி சென்ற பூஷண், ''காஷ்மீரில் ஓட்டெடுப்பு நடத்தி அந்த மாநில மக்களின் விருப்பத்தை அறியவேண்டும்.  மக்கள் விரும்பினால் காஷ்மீரை பாகிஸ்தானுக்குப் பிரித்துக் கொடுக்கலாம்'' என்ற ரீதியில் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இந்த இளைஞர் படை திரண்டு வந்து  தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் இந்த சம்பவத் துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. 'தன்னைத் தாக்கியவர்கள் மீது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து உள்ளார் பூஷண். அடுத்தநாள்  தேஜிந்தர் பால் சிங் பேகா மற்றும் விஷ்ணு குப்தா ஆகிய இருவரும்  நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
பூஷணை தாக்கிய இந்தர் வர்மா முதலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீராம் சேனாவில் இருந்தாகவும் பின்னர் அங்கிருந்து பிரிந்து பகத்சிங் புரட்சிப் படையை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான்,  காஷ்மீரில் மனித உரிமைகளுக்கான குரல் கொடுக்கும் அருந்ததிராய் போன்றவர்​களுக்கு எதிராகவும் முன்பு ஆர்ப்பாட்​டங்களை நடத்தியவர்கள்.  நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் விடுதலையான கிலானியின் மீது செருப்பு வீசியதும் இவர்கள்தானாம்.  சமீபத்தில் சுப்பிரமணியன் சுவாமியை சில முஸ்லிம் அமைப்பினர் தாக்க முயன்றதாகச் செய்தி வெளியானது அல்லவா? அப்போது, தேஜிந்தர் பால் சிங் பேகா தலைமையிலான பகத்சிங் புரட்சிப் படையினர்தான் சுவாமிக்கு ஆதரவாக ஆர்ப்பாட் டங்களை நடத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீராம் சேனாவின் இயக்கத் தலைவர் பிரமோத் முத்தாலிக், ''இந்தர் வர்மாவுக்கும் எங்களுடைய இயக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே சமயத்தில் மனித உரிமைக்கு குரல் கொடுக்கிறேன் என்று இஷ்டத்​துக்குப் பேசுபவர்களை இந்த நாட்டில் கண்டிக்க யாரும் இல்லை. மனித உரிமைகளைப் பேசும் பூஷண் போன்றவர்களிடம் நான் கேட்கும் கேள்வி, 'நாலு லட்சம் இந்துக்கள் காஷ்மீரை விட்டு விரட்டப்பட்டபோது  அவர்களுக்கான மனித உரிமை குறித்து ஏன் பேசவில்லை? ஏற்கெனவே கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இதே மாதிரி மற்றொரு தீவு பங்களாதேஷ§க்கு கொடுக்கப்பட்டது. இப்போது காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க இவர்கள்ஆதரவு தேடுகின்றனர்... இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்...'' என்று சொன்னார்.  
பூஷணைத் தாக்கியவர்களை போலீஸார் கைது செய்து, பட்டாலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது ஸ்ரீராம் சேனா மற்றும் அண்ணா ஹஜாரே ஆதரவாளர்களுக்கும் இவர்களுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு களேபரமானது. காஷ்மீர் விவகாரத்துக்காகத்தான் தாக்கு​தல் நடத்தினார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது. 2ஜி விவகாரத்தில் பிரதமர், ப.சிதம்பரம் ஆகியோருக்கு எதிராகவும் வலுவாக வாதாடி வரும் பிரசாந்த் பூஷணுக்கு எச்சரிக்கை செய்ய இந்தத்  தாக்குதல் நடந்ததா என்றும் சிலர் சந்தேகம் கிளப்பி வருகிறார்கள்!
சரோஜ் கண்பத்
படங்கள்: சிவராமகிருஷ்ணன், முகேஷ்  
*********************************************************************************
மூவர் தூக்கு மத்திய கேபினெட்டில் ஏற்கப்பட்டதா?

அம்பலப்படுத்தும் ஆதாரக் கடிதம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த எட்டு வார இடைக்காலத் தடை சீக்கிரமே முடியப்போகிறது. மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிமுக்கிய விவகாரத்துக்கு விடை கண்டு இருக்கிறார் காங்கிரஸ் புள்ளியான திருச்சி வேலுசாமி. 'இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தது ஏன்? மத்திய அமைச்சர்கள் யார் யார் கலந்து பேசி கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்தார்கள்?’ எனப் பல கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் வேலுசாமி. பலத்த  இழுத்தடிப்புக்குப் பிறகு, இப்போது பதில் வந்துள்ளது. மூவர் தூக்கு விவகார விசாரணை நெருங்கி வரும் நிலையில், உள்துறையின் பதில் குறித்து வேலுசாமியிடம் பேசினோம். 
''ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆரம்பத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான குழப்பங்கள்... இந்தியாவின் மாபெரும் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சில விஷமிகளைத் தப்ப வைப்​பதற்காகவே பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விசாரணை அதிகாரிகள் பலிகடா ஆக்கினார்கள். ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தை விசாரிக்கும் பல்​முனை​நோக்கு விசாரணைக் குழுவிடம் நான் ஆரம்பம்தொட்டே பலவிதமான சந்தேகங்களையும் சொல்லி வருகிறேன். ஆனால், விசாரணை முற்றுப்பெறாத நிலையிலேயே இம்மூவரையும் தூக்கு மேடையை நோக்கித் துரத்தும் விதமாக, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதன் பின்னணியில், யாருடைய கைங்கர்யம் இருந்தது என்பதை வெட்டவெளிச்சமாக்க நினைத்தே என் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 13.8.11 அன்று மத்திய அரசுக்கு அனுப்பினேன். மூன்று பேருடைய தூக்குக்கு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அது சம்பந்தமான கேள்விகளுக்கு விரைந்து பதில் அளித்திருக்கவேண்டிய மத்திய அரசு, திட்டமிட்டுத் தாமதம் செய்தது. அதனால், 'உரிய பதில் வராவிட்டால், நீதிமன்றத்துக்குச் செல்வோம்’ என நாங்கள் நினைவூட்டுக் கடிதம் அனுப்பிய பிறகே கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பதில் வந்துள்ளது. (பதில் வந்த நகலை நம்மிடம் காட்டுகிறார்) அதில், உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகு கருணை காட்டுங்கள் எனச் சொல்வது சரியான அணுகுமுறை அல்ல என்றும், மூவருடைய தூக்கு குறித்து பலவிதமான ஆலோசனைகளை நடத்திய பிறகே, உள்துறை அமைச்சகம் கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இதில், மிக முக்கியமான தகவல், மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம், கருணை மனு நிராகரிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் யாரிடமும் கலந்து பேசவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து பேசித்தான் கருணை மனு நிராகரிப்பு குறித்து குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்ய முடியும். ஆனால், தன்னிச்சையாகவே ப.சிதம்பரம், கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்து இருக்கிறார். மத்திய அமைச்சரவையில் உள்ள வேறு யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இப்படி அவர் செய்ததே தவறு. மூன்று பேர் தூக்கு குறித்த நீதிமன்ற விசாரணைகள் வேகமாகி வரும் நிலையில், உள்துறை செய்த இந்தக் குளறுபடியை மிக முக்கிய ஆவணமாகப் பதிவு செய்யலாம்!'' என்று சொல்கிறார் வேலுசாமி.
''தூக்குத் தண்டனைக் கைதிகள் குறித்த கருணை மனுக்களை மத்திய அமைச்சரவை கூடி விவாதித்து தன்னுடைய கருத்தை குடியரசுத் தலைவருக்குச் சொல்லவேண்டும். அந்த அடிப்படையில் அவர் முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால் அப்படிப்பட்ட ஆலோசனைகள் நடக்கவில்லை என்பது வேலுசாமிக்கு வந்துள்ள கடிதத்தின் மூலம் தெரிந்துவிட்டது. தனிப்பட்ட முறையில் உள்துறை அமைச்சரது ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். எனவே இந்த உத்தரவே செல்லாது!'' என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.  
மூவருக்குமான தூக்கு குறித்த அடுத்த கட்ட விசாரணைகளில்  வேலுசாமிக்கு வந்திருக்கும் கடிதத்தையும் முக்கிய ஆவணமாகக் கையில் எடுத்திருக்கிறார்கள். பார்க்கலாம்..!
இரா.சரவணன்
************************************************************************
பழங்காலப் பேரரசி ஜெயலலிதா!

தடதடக்கும் தமிழருவி மணியன்

வைகோவுக்காக ஊர் ஊராகப் போய் தனது காந்திய மக்கள் இயக்கம் சார்பாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் தமிழருவி மணியன். கடந்த 10-ம் தேதி இரவு திருப்பூர், அரிசிக் கடை வீதியில் ம.தி.மு.க. மேயர் வேட்பாளர் நாகராஜனை ஆதரித்துப் பிரசாரக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தமிழருவி மணியன் பொளந்து கட்டிவிட்டார். 
''நண்பர்களே... திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எனக்கொன்றும் பகைமை கிடையாது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எனக்கொன்றும் காதலும் கிடையாது. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என நான் விரும்பினேன். சமூக நலன் சார்ந்து சரி என்றால், இயம்புவது என் தொழில். தவறு என்றால், எதிர்ப்பது என் வேலை. எனக்காக இந்த மேடையில் வந்து நான் நிற்கவில்லை. உங்களுக்காக... மக்களுக்காக வந்து நிற்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த ஐந்து வருடங்களில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் கபளீகரம் செய்தது. இன்றைக்கு நில அபகரிப்பு வழக்குகளை முன்னாள் அமைச்சர்கள் மீது ஜெயலலிதா தொடுக்கும்​போது, எந்த அதிர்வலைகளும் இல்லை. ஆட்சி நடத்தியதில் செலுத்திய கவனத்தைவிட அடுத்தவன் சொத்தை அபகரிப்பதில்தான் தி.மு.க. அதிகக் கவனம் செலுத்தி இருக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கலைஞருக்கு மாற்று ஜெயலலிதா என்பது தவிர்க்க முடியாத உண்மை. தீமைதான்... ஆனாலும் தவிர்க்க முடியாத தீமை!
நன்மையும் தீமையும் கலந்ததுதான் அரசியல். குறைந்த தீமை எது... அதிகப்பட்சத் தீமை எது என்பதைக் கண்டறிந்து குறைந்த தீமையைக் கட்டித் தழுவி.... அதிகம் பரவி இருக்கும் தீமையை அழித்தொழிக்க வேண்டும். அதைத்தான் கடந்த தேர்தலில் நாம் செய்தோம்.
கொள்கை பரப்புச் செயலாளரைப் போல அ.தி.மு.க-வுக்​காக ஐந்து ஆண்டு காலம் இயங்கிய மனிதன் வைகோ. நான் வைகோவிடமே ஒரு முறை சொன்னேன். 'எம்.ஜி.ஆரைத் தி.மு.க-வில் இருந்து கருணாநிதி தூக்கி எறிந்தார். அந்தக் காலத்தில் இருந்து சாகும் வரை கருணாநிதியைக் கடுமையாக எதிர்த்தே வந்தார். உங்களையும் அதே போலத்தான் கருணாநிதி தூக்கி எறிந்தார். ஆனால், நீங்கள் எம்.ஜி.ஆரைப் போல கருணாநிதியை எதிர்க்கவில்லை. நீங்கள் அன்பு சார்ந்த மனிதர். அதுதான் உங்களது பிரச்னை’ என்று சொன்னேன்.  தவறுகளில் இருந்து பாடங்களைப் பெறுபவன்தான் மனிதன். வைகோவுக்கு இப்போது காலம் வழங்கிய வரம் என்ன தெரியுமா? அவருக்குப் பக்கத்தில் இருந்த அத்தனை சந்தர்ப்பவாதிகளும் காலத்தால் கழட்டி வீசப்பட்டுவிட்டார்கள். இன்று வைகோவின் தலைமையைக் கேள்வி கேட்க எவரும் இல்லை.
தேர்தலுக்கு முன்பு வரை ஜெயலலிதா எல்லோரையும் தேடி வருவார். தேர்தல் முடிந்த பிறகு ஜெயலலிதாவை நீங்கள் தேடிப் போக வேண்டும். போனாலும் பார்க்க முடியாது. ஜெயலலிதா என்பவர் யார்? அவர் பழங்காலத்துப் பேரரசியின் மறு வடிவம். ஒரு பேரரசிக்கு உரிய சர்வலட்சணத்தோடுதான் அவர் அரசியல் நடத்துவார். அதற்கு உட்பட்டுத்தான் நீங்கள் அவரோடு இருக்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி. கருணாநிதிக்கு கணுக்காலில் இருந்து தலை வரை மூளை. அவ்வளவு மூளையும் தன்னைப்பற்றியே சிந்திக்குமே தவிர, இந்த மண்ணைப்பற்றி சிந்திக்காது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டையும் மறுதலித்து​விட்டு நீங்கள் வாக்களிக்கப் புறப்பட வேண்டும். அதே நேரத்தில் திருச்சி இடைத் தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும். என்னடா மணியன் முரண்பாடாகப் பேசுறானே என்று நினைக்காதீங்க.
தி.மு.க. கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. அதற்கு நீங்கள் மீண்டும் ஆக்சிஜன் கொடுத்து​விட்டால், அது விஸ்வரூபம் எடுத்துவிடும். கலைஞர் எழுந்தால் அவரை வீழ்த்துவது சிரமம். ஜெயலலிதாவை வீழ்த்த யாரும் புறப்படத் தேவை இல்லை. அவரே வீழ்ந்துவிடுவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைசி அத்தியாயத்தை எழுதுவது​தான் பெரியார் வளர்த்தெடுத்த திராவிட இயக்கத்துக்கு நல்லது. அப்போதுதான் திராவிட இயக்கத்தின் எச்சமான வைகோ விஸ்வரூபம் எடுப்பார். இந்த இனத்தின் எதிரிகள் இரண்டு பேர். ஒன்று கருணாநிதி. இன்னொன்று கதர்ச் சட்டை அணிந்த காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொருவரும்.
நான் சாகும் வரை எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். அதே நேரத்தில் அரசியலில் சக்தி மிக்க... ஆளுமை மிக்க ஒரு கட்சி உருவாக வேண்டும் என்று நான் விரும்புகிற நேரத்தில், என் கண் முன் தெரிகிற மனிதர் வைகோ.
கூலிக்காகப் பேசும் பேச்சாளர் இல்லை நான். ஆனால், திருப்பூர் ம.தி.மு.க. வேட்பாளர் நாகராஜனுக்காக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். எதற்காக? நாகராஜன் நல்ல மனிதர். அதோடு அகத்திலும் புறத்திலும் தூய்மையான வைகோ என்ற மனிதனுக்காக!
அரசியலில் 40 ஆண்டு காலமாகப் பார்த்துப் பார்த்து கருமியின் கவனத்தோடு நான் சேர்த்துவைத்திருக்கும் என் நம்பகத்தன்மையை மூலதனமாக வைத்து மண்டியிட்டு மன்றாடி வேண்டுகிறேன். வைகோ என்ற ஒரு நல்ல மனிதனுக்குப் பின்னால் வந்து சேருங்கள். ம.தி.மு.க. எங்கெல்லாம் போட்டி இடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுக்கு வாக்களித்து அரசியல் மாற்றத்தை உருவாக்குங்கள்!'' என்று இடியாக முழங்கி முடித்தார்!
கே.ராஜாதிருவேங்கடம்
படம்: வி.ராஜேஷ்
*********************************************************************************
ஸீட்டுக்காக... நோட்டுக்காக பாராட்டவில்லை!

சீறுகிறார் சீமான்!

றுபடியும் ஜெயலலிதாவைப் பாராட்டி இருக்கிறார் சீமான்! 'தமிழக மீனவர் களை இந்திய மீனவர்களாகப் பார்க்கச் சொல்லி மத்திய அரசுக்கு பொட்டில் அடித்தாற்போல் புரியவைத்து இருக்கிறார் ஜெயலலிதா’ என்பதுதான் சீமானின் பாராட்டு. குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், 'ஜெயலலிதாவைப் பாராட்டிக்கிட்டே இருக்கார்’, 'வைகோவோடு மோதுகிறார்’, 'வேலூர் சிறையில் உள்ள முருகனை மிரட்டுகிறார்’ என சீமானை மொய்க்கும் சர்ச்சைகளுக்கு மட்டும் அளவே இல்லை. தையல் பிரிக்காத நிலையில் அவரது தடால் பேட்டி... 
''நீங்கள் ஜெ-யைப் பாராட்டினாலே விமர்சனங்கள் காதை மொய்க்கத் தொடங்கிவிடுகிறதே?''
''ஸீட்டுக்காகவோ நோட்டுக்காகவோ நான் பாராட்டவில்லை. இனத்தின் நலனுக்காக தமிழக முதல்வர் மேற்கொள்ளும் நடவடிக்கை களைத்தான் நாங்கள் பாராட்டுகிறோம். தேர்தல் நேரத்திலேயே இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த தீர்மானம் இயற்றக் கோரி னோம். முதல்வராக அமர்ந்த உடனேயே அந்தத் தீர்மானத்தை இயற்றினார் ஜெயலலிதா. மூவர் உயிரைக் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது சாதாரண செயலா? முன்னாள் முதல்வரை தமிழினத் தலைவராகக் கருதி நாம் என்னென்ன நடவடிக்கைகளை எல்லாம் எதிர்பார்த்தோமோ... எதற்கும் அசையாத கருங்கல்லாக கடந்த அரசு இருந்ததோ... அதற்கு எல்லாம் இந்த ஆட்சியில் விடிவு கிடைக்கிறது. அதைப் பாராட்டுவதில் என்ன தவறு? தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு கவனம்கொள்ள வேண்டும் என முழங்கியதன் மூலம், பிராந்தியப் பிரச்னையாகப் பார்க்கப்படும் இந்த விவகாரத்தைத் தேசியப் பிரச்னையாக முன்னெடுத்திருக்கிறார் முதல்வர். இதே கருத்தை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சொல்கிறோம். ஆனால், முதல்வரின் கருத்தாக ஒலிக்கும்போது அந்தக் கருத்து வலிமை பெறுகிறது. நல்லது நிகழ்ந்தால் நன்றி சொல்வதுதானே நம் மரபு!
'விமர்சனம் என்பது வெறும் சொற்கள்தான். அவை நம்மைக் காயப்படுத்தும் கற்கள் அல்ல!’ எனச் சொன்ன தலைவர் பிரபாகரனின் வழிநடக்கும் என்னை எத்தகைய விமர்சனத்தாலும் சிதைக்க முடியாது. 'கலைஞரின் செல்லப்பிள்ளைதான் சீமான்’ எனக் கிளப்பிவிட்ட வாய்களைக்கூட நான் இன்னும் மறக்கவில்லை. இந்த வெற்று விமர்சனங்களுக்கு எல்லாம் நான் இற்று வீழ்வேனா என்ன?''
''பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது, ஆளும் அரசின் ஆதரவாளராக எண்ணி உங்களுக்கு ஏக எதிர்ப்பு கிளம்பியதாமே?''
''பரமக்குடி கொடூரத்துக்குக் காவல் துறைதான் முழுப்பொறுப்பு என முதலிலேயே அறிக்கை வெளியிட்டேன். மருத்துவமனைக்கு சென்று காயம் பட்டவர்களைப் பார்த்தேன். முடிந்த உதவிகளைச் செய்தேன். எச்சரிக்கை அறிவிப்பு, போலி குண்டுகள் மூலமாகச் சுடுதல், தண்ணீர் பீய்ச்சி அடித்தல், முட்டிக்கு கீழ் சுடுதல் எனப் படிப்படியான கலைப்பு நடவடிக்கைகளைச் செய்யாமல், குருவி கணக்காக அப்பாவிகளை காவல் துறை சுட்டு வீழ்த்தி இருக்கிறது. பரமக்குடிக்குச் சென்றபோது, 'நாங்களும் தமிழர்கள்தானே அண்ணே’ எனவும், 'நீங்க சொன்னதாலதானே இலைக்கு ஓட்டுப் போட்டோம்’ எனவும் உரிமையோடு மக்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அவர்களோடு சேர்ந்து அழ மட்டுமே என்னால் முடிந்தது. மூன்று பேரைக் காப்பாற்ற ஒருமித்த தமிழகமே போராடிய நிலையில், 6 தமிழர்களை சர்வசாதாரணமாக சுட்டுக் கொன்றது சகிக்கக்கூடிய ஒன்றா? சுட்டுக் கொல்லப்பட்டவர்களை ஓணான்களைத் தூக்கி வீசுவதுபோல் காவல் துறை வீசியது. சேனல் 4-ல் பார்த்த கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைவு இல்லாததுதானே இதுவும். 'கடலுக்குப் போனால் சிங்களவன் சுடுகிறான். இந்தப் பக்கம் காவல் துறை சுடுகிறது என்றால், நாங்க எங்கேதான் வாழ்வது?’ எனக் கேட்கிற குரலுக்குப் பதில் உண்டா?  ஐந்து மாடுகளைச் சுட்டுப் போட்டிருந்தால்கூட பற்றி எரியக்கூடியப் பிரச்னை, அப்பாவிகளின் மரணத்தில் அப்படியே அடங்கிவிட்டது. அந்த மக்களின் ஆற்றாமை மிகுந்த இந்த வடு என்றைக்கும் ஆறாது!''
''வைகோவுக்கும் உங்களுக்கும் இடையே மனக் கசப்பு என செய்திகள் பரவுகின்றனவே?''
''இந்த சீமான் ஆகாயத்தில் இருந்து குதித்தவன் அல்ல. அய்யா நெடுமாறன், அண்ணன்கள் வைகோ, கொளத்தூர் மணி, சுபவீ, அறிவுமதி, அய்யா வீரமணி, ராமதாசு, திருமாவளவன் என ஆக்கப் பூர்வமானவர்களைத் தொடர்ந்து வந்தவன்தான் நான். திரை உலகுக்கு வந்தபோதே செல்வபாரதி, விடுதலை, ராவணன், கவிதாபாரதி ஆகியோருடன் அண்ணன் வைகோ-வின் கூட்டங்களில் ஓடி ஓடிக் கலந்து கொண்டவன். நான் அவர் மீது கொண்டிருக்கும் அன்பும் மரியாதையும் அவருக்கே தெரியும். அப்படி இருக்க, மனக்கசப்பு நிகழாதா என ஏங்குபவர்களுக்கு எல்லாம் என் இதயக்கூட்டைத் திறந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை!
வதந்திகளைக் கிளப்புபவர்களுக்கு வாய் மட்டும்தான் மூலதனம். அந்த வெறும் வாய்களுக்கு விடை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சிறையில் இருக்கும் முருகனை நான் மிரட்டியதாகக்கூட அவதூறு கிளப்பினார்கள். மரணத்தின் நிழலில் நிற்பவர்களை நான் என்ன சொல்லி மிரட்ட முடியும்? 'கொன்றுவிடுவேன்’ என்றா? அண்ணன் வைகோவும் நானும் அரசியல் நிலைப்பாட்டில் பிரிந்தவர்களே தவிர, நெஞ்சத்து நிலைப்பாட்டில் ஒருமித்து நிற்பவர்கள். இருவரும் ஒருமித்து பயணிக்கக்கூடிய சூழல் இப்போது இல்லை என்பது மட்டும்தான் உண்மை. இன்னும் உடைத்துச் சொல்வதானால்... என் எதிரி யார் என்பதை நான் ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருக்கிறேன். அந்த இடத்துக்கு ஆள் தேடும் வேலையை வேறு எவரும் செய்ய வேண்டாம்!'' - சீற்றம் குறையாமலே விடை கொடுக்கிறார் சீமான்.
இரா.சரவணன், படம்: கே.குணசீலன்
*********************************************************************************
தவறான ஆபரேஷன் செய்தாரா சுகாதார அமைச்சர்?

விஜய் மீது திடுக் புகார்!

சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்-க்கு இது போதாத காலம். அதனால்தான், அவர் மீது புகார்கள் குவிகின்றன. அ.தி.மு.க-வில் உள்ள சீனியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்காமல், கட்சிக்குப் புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளதாக, அமைச்சர் விஜய் மீது ஏற்கெனவே எழுந்த புகார் இன்னும் ஓயவில்லை. அதற்குள், 'அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தவறாக நடத்தப்பட்டது. இதனால் ஒரு ஏழைக் குடும்பம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறது’ என்று ஒரு பூதம் கிளம்பி இருக்கிறது! 
அமைச்சர் மீது புகார் கூறியுள்ள சுரேஷை சந்தித்தோம். ''காட்பாடிக்குப் பக்கத்தில் இருக்கும் தாமரைக்குளத்தில் குடியிருக்கிறோம். என் அப்பா கிருஷ்ண சாமி, தெருக்கூத்துக் கலைஞர். எனக்கு இரண்டு தம்பிகள், மூன்று தங்கைகள். வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து நடத்தி எங்களைக் காப்பாற்றி வந்தார் அப்பா. அவரை நம்பி 20 குடும்பங்கள் இருக்கு. ஒரு கூத்து நடத்தினால்,
 10,000 முதல்  15,000 வரை கிடைக்கும். மாதம் ஐந்து கூத்துகளாவது நடக்கும். இந்த நிலையில்தான், 2005-ம் ஆண்டு அவருக்கு முதுகு தண்டுவடத்தில் கடும் வலி. வேலூரில் அருண் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். (இது, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்க்கு சொந்தமானது) பரிசோதனை செய்த டாக்டர் விஜய், 'உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்.  30,000 கட்டுங்கள்’ என்றார். பணத்தைச் செலுத்தினோம். ஆபரேஷன் முடிந்து ஒரு வாரத்துக்குப் பின்னர், வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனாலும், தண்டுவடத்தில் வலி இன்னும் அதிகமாகிவிட்டது. இடுப்புக்கு கீழ் எந்த பாகமும் செயல்படவில்லை. சிறுநீர் இடைவிடாமல் வந்துகொண்டே இருந்தது. அப்பாவால் நடக்கக்கூட முடியவில்லை. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு டாக்டரைப் பார்த்தோம். 'ஆபரேஷனை மாற்றிச் செய்து​விட்​டார்கள், அதனால்தான் கால் இப்படி ஆகிவிட்டது. மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்தால், காலை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட டாக்டரையே பாருங்க’ என்று சொல்லிவிட்டார். டாக்டர் விஜய்யிடம் மறுபடியும் போய்க் கேட்டோம். அவரோ, 'ஆபரேஷன் செய்ததோட என் வேலை முடிந்துவிட்டது. உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள். எனக்கு பயம் இல்லை’னு பொறுப்பே இல்லாமல் பேசினார். அதுக்குப் பிறகுதான்,  20 லட்சம் நஷ்டஈடு கேட்டு, நுகர்வோர் நீதிமன்றத்தில் 2007-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தோம். டாக்டரின் தவறான ஆபரேஷனால், எங்க குடும்பம் மட்டும் இல்லாம, எங்க அப்பாவை நம்பி இருந்த 20 குடும்பங்களும் நடுத்தெருவுல நிற்கின்றன. நாங்கள் வழக்குப் போடும்போது சாதாரண டாக்டராக இருந்த விஜய், இப்போது சுகாதாரத் துறை அமைச்சராகிவிட்டார். எங்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. தவறான சிகிச்சை செய்த ஒரு டாக்டர், சுகாதாரத் துறைக்கு அமைச்சராக இருந்தால், எங்களைப்போல் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படும்? இந்தப் பிரச்னை குறித்து, முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளோம். நியாயமான நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கிறோம்!'' என்றார் தழுதழுத்த குரலில்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விஜய்யிடம் பேசினோம். ''அந்த பேஷன்ட் 2005-ல் என் மருத்துவமனைக்கு வந்தது உண்மைதான். அவருக்கு ஆபரேஷன் செய்ததும் உண்மைதான். ஆனால், அந்த ஆபரேஷனை நான் செய்யவில்லை; எங்க மருத்துவமனையில் வேலை செய்யும் டாக்டர்கள்தான் செய்தார்கள். அதை நான் கண்காணித்தேன். நாங்கள் செய்த ஆபரேஷனால் அவருக்கு கால்கள் செயலிழக்க வாய்ப்பு இல்லை. அதற்கான சர்ட்டிஃபிகேட் எல்லாம் என்னிடம் இருக்கிறது. அதை மீறி இவர் புகார் சொல்வதற்குக் காரணம், முன்னாள் அமைச்சர் துரைமுருகன்தான். மேடையில் அவரை நான் திட்டுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தவறான ஆட்களை இப்படித் தூண்டிவிடுகிறார். நான் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பேன்!'' என்று பதற்றத்துடன் பேசினார்.
யார் சொல்வது உண்மை என்று விசாரணையில் தெரிந்துவிடும்!
கே.ஏ.சசிகுமார்
படங்கள் : ச.வெங்கடேசன்
*********************************************************************************
''நான் அப்படிப் பேசவில்லை!''


புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் நமக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ''எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் திரு. கன்சிராம் அவர்களது நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினேன். பரமக்குடிக் கலவரத்தில் என்னைத் தொடர்புப்படுத்தி 'உண்மை அறியும் குழு’வினர் என்ற பெயரில் வெளியிட்ட செய்திக்கு அப்போது மறுப்புத் தெரிவித்துப் பேசினேன். 'சம்பவம் நடந்த நாளில் நான் சிங்கப்பூரில் இருந்தேன். பரமக்குடிப் பாதுகாப்புக்கு சென்னை மாநகரக் காவல் துறை அதிகாரியை யார் அனுப்பியது? ஏன் அனுப்பப்பட்டார்?’ என்றுதான் கேள்வி கேட்டேன். 'நான் சொல்வதைத்தான் அரசு கேட்க வேண்டும்’ என்று பேசவில்லை!'' என்று அந்தக் கடிதத்தில் நடராசன் குறிப்பிட்டுள்ளார்.
*********************************************************************************
குற்றவாளியை விடுவித்தாரா ஆளும் கட்சி எம்.எல்.ஏ.?

முகப்பேர் கலாட்டா!

நில அபகரிப்பு புகாரில் இது ரத்தத்தின் ரத்தங்கள் சம்பந்தப்பட்டது! 
சென்னை முகப்பேரில் வசிக்கும் தியாகராஜன் என்பவர் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவரை சந்தித்தோம்.
''1981-ல் என் அம்மா லட்சுமிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குலுக்கல் முறை ஒதுக்கீட்டின் கீழ் சென்னை முகப்பேரில் காலி மனை ஒதுக்கீடு செய்யப்​பட்டது. அதில் வீடு கட்டி 14 ஆண்டுகளாக குடியிருந்தோம். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அம்மாவைப் பார்த்துக்கொள்ள சரஸ்​வதி என்பவரை வேலைக்காரியாக நியமித்தோம். 2005-ல் அம்மா இறந்து​போனாலும், தொடர்ந்து சரஸ்வதி வேலை செய்துவந்தார்.
கடந்த ஆண்டு எனது வீட்டுக்கு அருகில் குடியிருந்த ஆட்டோ டிரைவர் அருள் எனக்கு போன் செய்து, 'உங்களோட நாகப்பட்டினம், முகப்​பேர் வீட்டுப் பத்தி​ரங்கள் எங்கிட்டத்தான் இருக்கு. நாங்க கொடுக்கிற காசை வாங்கிட்டு, கையெழுத்துப் போடு’ன்னு மிரட்டினார்.  முகப்பேர் 89-வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் 'ரவுண்ட் பில்டிங்’ குமார், சரஸ்வதி, அருள், கண்ணன் போன்றோர் கூட்டுச் சதி செய்து எனது சொத்து ஆவணங்களைத் திருடிவிட்டார்கள். உடனே ஜெ.ஜெ. நகர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்தபோது, எந்த நடவடிக்கையும் இல்லை.  அடுத்​தடுத்து இன்ஸ்பெக்டர்கள் மாறியும் இதே நிலைதான். கடைசியில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். கடந்த 11-ம் தேதி ரவுண்ட் பில்டிங் குமார், சரஸ்வதி உள்ளிட்ட அனை​வரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அடுத்த சில மணி நேரத்தில் அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வான வேதாச்சலம் அங்கு வந்து, 'ரவுண்ட் பில்டிங்’ குமாரை அழைத்துச் சென்றுவிட்டார். 'குமார் தலைமறைவாகிவிட்டார். மற்றவர்களைக் கைது செய்துவிட்​டோம்’ என்று போலீஸார் சொல்​கிறார்கள். நில அபகரிப்பு புகாரில் தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா, சொந்தக் கட்சிக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என கண்ணீர் வடித்தார்.
'ரவுண்ட் பில்டிங்’ குமாரை பல முறை தொடர்புகொள்ள முயன்றும், முடியவில்லை.  ஜெ.ஜெ. நகர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சிங்கராஜிடம் கேட்டோம். ''நான் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறேன். விரைவில் பத்திரங்களை கைப்பற்றி அனைவரையும் கைது செய்வோம்...'' என்றார்.
எம்.எல்.ஏ. வேதாச்சலமோ, ''எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் மீது தி.மு.க-வினர் தேர்தல் தொடர்பான புகார் கொடுத்திருந்தனர். அதற்காகத்தான் ஸ்டேஷனுக்குச் சென்று வாக்குவாதம் செய்தேன். மற்றபடி நிலம், வீடு கொள்ளை அடித்தவர்களுக்கு நான் எப்போதுமே துணை போகமாட்டேன்!'' என்று படபடப்போடு சொன்னார்.
தி.கோபிவிஜய், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
*********************************************************************************
கயிறே, என் கதை கேள்!

பொட்டு அம்மான் பேசினாரா? 

மேஜர் சபர்வால் என்பவர் இந்திய ராணுவத்தின் ஓர் உயர் அதிகாரி. வெடிகுண்டு, வெடி மருந்துத் துறையில் முக்கிய வல்லுனரும்கூட. இவர் தனது அறிக்கையில், 'ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கிவந்தன’ என்றும், 'ராஜீவ்காந்தியைப் புலிகள்தான் கொன்றனர் என முடிவு செய்துகொள்ள இதுவும் ஒரு காரணம்’ எனவும் குறிப்பிட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் என்பது வனத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிய பகுதி என்று அவர் நினைத்திருப்பார் போலும்!
ஆனால், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளரும், இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்தவருமான மதுரம் என்பவர், 'ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒருபோதும் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது கிடையாது!’ என உறுதியாக எனது குறுக்கு விசாரணையில் கூறி இருக்கிறார்.
தவறான சாட்சியங்களை வழங்கிய மருத்துவர் கிளாட் பெர்னாண்டஸ், தடயவியல் பேராசிரியர் திருநாவுக்கரசு, மேஜர் சபர்வால் ஆகிய மூன்று நபர்களுமே சாதாரண அந்தஸ்தில் உள்ளவர்கள் அல்ல. யாருக்கும் பயப்படக்கூடியவர்களும் அல்ல. இவர்களுக்கு எம்மீது தனிப்பட்ட விரோதம் ஏதும் கிடையாது. அப்படி இருந்தும், எமக்கு எதிராக இவர்கள் ஏன் அப்பட்டமான பொய் சாட்சியம் சொல்ல வேண்டும்? சட்டத்தின் மாண்பு அறிந்த இத்தகைய உயரிய புள்ளிகளையே எமக்கு எதிராகப் பொய் சாட்சியம் சொல்லவைக்க அதிகாரிகளால் முடிகிறது என்றால், ஏழைகளையும், அறியாமையில் உள்ளவர்களையும், பயந்த சுபாவம்கொண்டவர்களையும், பணம், பதவிகளுக்கு ஆசைப்​படுபவர்​களையும் ஏன் எமக்கு எதிராக சாட்சியம் சொல்ல​வைக்க இயலாது? எமக்கு எதிரான சித்திரிப்புகள் எவ்வளவு குரூரமாக நடத்தப்பட்டன என்பதற்​கான சாட்சியமாகவே இந்த உதாரணங்களை உங்​களிடம் சொல்கிறேன். எந்த சாட்சியத்​தையும் குற்றம் சொல்வது என் நோக்கம் அல்ல; எத்தகைய புள்ளிகளையும் எமக்கு எதிராக நிற்கவைக்கிற சக்தி அதிகாரிகளுக்கு இருந்​தது என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சாட்சியங்களில் மட்டும் அல்ல... நாங்கள் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஒப்புதல் வாக்கு​மூலங்களிலும் நிறையக் குளறுபடிகள்! எதிரிகளிடம் இருந்து பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களில் உள்ள முக்கியமான விடயங்கள் அனைத்தும் மற்ற சான்றுகளுடன் ஒத்துப்போக வேண்டும். முரண்பாடுகள்கொண்டதாக இருந்தால், அந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கிய சட்ட விதி. என்னுடைய வாக்குமூலத்திலும் நளினியின் வாக்குமூலத்திலும் சுமார் 35 முக்கிய முரண்பாடுகள் உள்ளன.
23.5.91 அன்று ராயப்பேட்டை வீட்டில் (என் மாமியார் பத்மா அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருந்த வீடு) நான் தங்கி இருந்ததாகவும், மறுநாள் நானும் நளினியும் வில்லிவாக்கம் வீட்டுக்கு (நளினி வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த வீடு) சென்று தங்கியதாகவும், 25.05.91 அன்று திருப்பதி போனதாகவும் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அரசு சாட்சிகளில் ஒருவரான ராணி என்பவர், 23.05.91 அன்று நானும் நளினியும் வில்லிவாக்கம் வீட்டில் தங்கி இருந்ததாகச் சொல்லி இருக்கிறார். 96-வது அரசு சாட்சி சுஜா என்பவர், '24.05.91 அன்று நளினி வழக்கம் போல் அலுவலகம் வந்து வேலை செய்துவிட்டு மாலை வீட்டுக்குத் திரும்பினார்’ என்று சொல்லி இருக்கிறார். எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள்.
18.5.91 அன்று சென்னை திரும்பி நளினியின் அலுவலகத் தொலைபேசி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு நான் பேசியதாகவும், அன்று இரவு அவரது வில்லிவாக்கம் வீட்டில் தங்கியதாகவும், மறுநாள் 19.5.91 அன்று ராயப்பேட்டை வீட்டுக்கு, சிவராசன், சுபா, தணு ஆகியோர் வருவதாக இருந்ததால், நான் அங்கு போன​தாகவும் எழுதப்பட்டு உள்ளது.
18.5.91 அன்று மாதத்தின் 3-வது சனிக்கிழமை ஆகும். அன்றும் முதலாவது சனிக்கிழமையும் அலுவலக விடுமுறை என்பது அந்த அலுவலக நடைமுறை விதி. அப்படி இருக்க, நான் எப்படி அவருடன் அலுவலகத் தொலைபேசியில் பேசியிருக்க முடியும்? எப்படி அவருடைய வீட்டுக்கு நான் போயிருக்க முடியும்?
18.2.91 அன்று நளினி, வில்லி​வாக்கம் வீட்டில் தங்கி இருந்ததாகவும், அங்கு சிவராசன், சுபா, தணு ஆகியோர் வந்ததாகவும், அன்று மாலை சுபா, தணுவுடன் சினிமா பார்க்கப் போனதாகவும், இரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் (19.5.91) மூவரும் மகாபலிபுரம் போனதாகவும், மாலை வில்லிவாக்கம் வீட்டுக்கே  திரும்பியதாகவும் அரசுத் தரப்பு ஆவணங்களில் எழுதப்பட்டு உள்ளது.
மேற்படி உள்ளவற்றில் நான் (மட்டும்) 18.5.91 அன்று இரவு முதல் நளினியுடன் தங்கி இருந்தேன் என்பது உண்மையா? அல்லது நளினியுடன் அன்று நான் இல்லாது சுபா, தணு மட்டும் தங்கிஇருந்தார்கள் என்பது உண்மையா? அடுத்து 18.5.91 அன்று நளினி அலுவலகத்தில் இருந்தார் என்பது உண்மையா? அல்லது அன்று அவர் சுபா, தணுவுடன் தனது வீட்டில் இருந்து சினிமாவுக்குப் போய் வந்தார் என்பது உண்மையா? 19.5.91 அன்று சுபா, தணு ஆகியோர் வில்லிவாக்கம் வீட்டில் இருந்தார்கள் என்பது உண்மையா? அல்லது அன்று வேறு இடத்தில் இருந்து ராயப்பேட்டை வீட்டுக்கு சுபா, தணு, சிவராசன் ஆகியோர் வந்தார்கள் என்பது உண்மையா?
அரசுத் தரப்பு சித்திரிப்புகள் சிலவற்றைப் படிக்கும்போதே எத்தனை விதமான குழப்பங்கள் வருகின்றன பார்த்தீர்களா? ஒரே தேதியில் ஒன்பது விதமான நிகழ்வுகளை அதிகாரிகள் சித்திரித்தார்கள். அத்தனையும் லாஜிக்கே இல்லாத சித்திரிப்புகள் .
என் விவகாரத்தில் மட்டும் அல்ல... தம்பி பேரறிவாளனும் இத்தகைய சித்திரிப்புகளுக்குத் தப்பவில்லை. அரசுத் தரப்பு ஆவணங்களில், '21.5.91 அன்று சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய அறிவு, தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கிப் பார்த்தார்’ என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால், அதே வீட்டில் தங்கி இருந்த அரசாங்க சாட்சியான பாரதி என்பவர், '21.5.91 அன்று இரவு வீடு திரும்பிய அறிவும் பாக்கியநாதனும் மின் விளக்கினை அணைத்துவிட்டுப் படுத்துவிட்டார்கள்’ என எழுதப்பட்டு உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த விஷயத்தில் அதிக முரண்பாடு ஏதும் இல்லை என்றுதான் தோன்றும். ஆனால், மேற்படியான சூழ்நிலையைவைத்தே, எனக்கு எதிரான சில விளையாடல்களை அரசுத் தரப்பு செய்தது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்களே... அதேபோல் சிறுசிறு சித்திரிப்புகளும் ஒருவனைச் சிதைக்க உதவும் என நம்பியது அரசுத் தரப்பு.
வேலூர் கோட்டைச் சிறையின் கட்டமைப்பு மற்றும் இட அமைவு ஆகியவற்றின் வரைபடங்களை வயர்லெஸ் தகவல் ஊடாக பொட்டு அம்மானுக்கு நான்  அனுப்பியதாக அரசுத் தரப்பு எழுதி உள்ளது. ஆனால், இன்னோர் இடத்தில் வேலூரில் எனக்கு எவ்வித வேலையும் தரப்படவில்லை என்றும், அங்கு நான் எந்த வேலையும் செய்யக் கூடாது என பொட்டு அம்மான் எனக்கு கட்டளை இட்டதாகவும் எழுதப்பட்டு உள்ளது. இதில் எது உண்மை? பொட்டு அம்மான் அப்படி ஓர் உத்தரவை எனக்குப் பிறப்பித்து இருந்தால், வேலூர் கோட்டை சிறையின் கட்டமைப்பு குறித்து நான் ஏன் அவருக்குத் தகவல் அனுப்ப வேண்டும்? இதில், பெரிய வேடிக்கை என்னவென்றால், வயர்லெஸ் மூலமாக சிறையின் படங்களை நான் அனுப்பியதாக போலீஸ் தரப்பு சொல்கிறது. வயர்லெஸ் என்கிற கருவி மூலமாக தகவல்களை மட்டும்தான் சொல்ல முடியுமே தவிர, எந்த விதமான படங்களையும் அனுப்ப முடியாது. இந்த விஷயத்தைக்கூட போராடித்தான் என்னால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடிந்தது.
அரசுத் தரப்பு வழக்கின்படி சிவராசன் எனக்கு மிகவும் மூத்த உறுப்பினர் என்றும் இங்கு அவர் எனக்கு கமாண்டராகவும் பாஸ் ஆகவும் இருந்தார் எனக் கூறப்பட்டு உள்ளது. ஆனால், அரசுத் தரப்பு ஆவணம் 81-ல் சிவராசனைப் பற்றி குறிப்பு வருகிற இடங்களில் எல்லாம் 'அவன்’, 'அவன்’ எனப் பல இடங்களில் நான் சொன்னதாக எழுதப்பட்டு உள்ளது. உண்மையில், சிவராசன் எனக்கு பாஸாகவோ அல்லது கமாண்டராகவோ இருந்திருந்தால், அவரை நான் எப்படி அவன் எனக் குறிப்பிட்டு இருப்பேன்?

********************************************************************************************

கல்லீரலே... இனி கலங்காதே!

வந்தாச்சு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட்

னித உடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொடுப்பதுடன்,
தேவையற்ற பொருட்களை வெளியேற்றி உடம்பைப் பாதுகாக்கும் தொழிற்சாலையாகவும் செயலாற்றுகிறது. அத்தனை முக்கியத்துவம் நிறைந்த கல்லீரலில் பரம்பரை ரீதியாக ஏற்படும் பிரச்னைகளால் உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு. இப்போது அதனைத் தடுக்கப் புதிய அறுவை சிகிச்சையான செல் டிரான்ஸ்பிளான்ட் அறிமுகமாகி விட்டது. 
இதுகுறித்து, சென்னை குளோபல் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நரேஷ் பி.சண்முகம் நம்மிடம் பேசினார். ''நமது உணவுகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. நாம் உட்கொள்ளும் உணவானது செரிக்கப்பட்டு, ஊட்டச் சத்தாக ரத்தத்தில் கலக்கின்றன. ரத்தத்தில் கலந்த இந்த ஊட்டச் சத்துக்கள் கல்லீரலுக்கு கொண்டுசெல்லப்படும். பின்பு அவை சாதாரண சர்க்கரை, அமினோ அமிலம் மற்றும் கொழுப்பாக மாற்றப்படும். இதன் மூலம் வெப்ப ஆற்றல் உருவாக்கப்படுகிறது. இப்படி உடைக்கப்பட்ட சாதாரண சர்க்கரை, அமினோ அமிலம், கொழுப்பு போன்றவை உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான காம்ப்ளக்ஸ் சர்க்கரை, புரதம் மற்றும் கொழுப்பாக மாற்றப்படும். இப்படி இவை மாற்றப்படுவதற்கு என்ஸைம்கள் தேவைப்படுகின்றன. ஏதாவது ஒரு என்ஸைம் குறைந்தால்கூட ஊட்டச்சத்தை உடைக்கும் பணி தடைபட்டு, மெட்டபாலிக் எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பிரச்னை ஏற்பட்டுவிடும். இதை மெட்டபாலிக் டிஸ்ஆர்டர் என்று கூறுவோம்.
உணவில் உள்ள சத்துக்களை உடைத்து ஊட்டச் சத்துகளாக மாற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்ஸைம்கள் நம் உடலில் இருக்கின்றன. ஒரு என்ஸைம் குறைந்தாலும் பிரச்னைதான். அதனால் நூற்றுக்கணக்கான மெட்டபாலிக் டிஸ்ஆர்டர் பரவலாகக் காணப்படுகின்றன. அதில் ஒரு சில நோய்கள் மட்டும் மிக அரிதாக இருக்கும். உதாரணமாக புரதம் உடைக்கப்படும்போது, அது அமோனியாவை உற்பத்தி செய்யும். அமோனியா என்பது மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அது மூளையைப் பாதிக்கக்கூடியது. எனவே, கல்லீரல் அந்த அமோனியாவை யூரியாவாக மாற்றி சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது. அமோனியாவை யூரியாவாக மாற்றுவதை யூரியா சைக்கிள் என்று கூறுவோம். ஐந்து கட்டங்களாக இந்தப் பணி நடைபெறும். இதற்கு ஐந்து என்ஸைம்கள் தேவைப்படுகின்றன. இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் என்ஸைம் இல்லாமல் போய்விட்டால், இந்தப் பணி தடைபட்டு அமோனியா உடலில் தங்கிவிடும். இது மூளையைத் தாக்கி கடைசியில் உயிரிழப்பில் கொண்டுபோய்விடும்.
அதிக அளவில் பரம்பரை ரீதியாக குழந்தைக்கு இந்த நோய் கடத்தப்படுகிறது. பிறந்தவுடன் இந்தக் குறைபாடு தெரியாது. அவர்கள் குறிப்பிட்ட ஏதாவது ஓர் உணவை உட்கொள்ளும்போதுதான், பிரச்னை இருப்பது தெரிய வரும். உதாரணத்துக்கு ஹெரிடிட்டி ஃப்ராக்டோஸ் இன்டாலரன்ஸ் என்ற ஒரு வியாதி உள்ளது. சில குறிப்பிட்ட பழங்களை உண்ணும்போது அதில் உள்ள சர்க்கரையை ஜீரணிக்க முடியாமல் போய்விடும். அதனால், வயிற்றுப் போக்கு அல்லது கல்லீரல் செயலிழப்பில் கொண்டு போய்விடும். குழந்தைக்கு காய்கறி அல்லது பழங்களைப் புகட்ட ஆரம்பிக்கும்போதுதான் இந்தப் பிரச்னையே பெற்றோருக்குத் தெரிய வரும்.  கல்லீரலை மாற்றினால்தான் இவர்களால் உயிர் வாழ முடியும். சிலருக்கு ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் கிருமித் தொற்று காரணமாகவும் கல்லீரல் தோல்விப் பிரச்னை வரலாம்.
சிறுநீரகப் பிரச்னைக்கு டயாலிஸிஸ் செய்யப்படு வதுபோல, இவ ர்களின் கல்லீரலில் இருந்து குறிப்பிட்ட நஞ்சை அகற்றும் டயாலிஸிஸ் முறை வந்தது. ஆனால், அந்த சிகிச்சையால் எல்லாவிதமான நஞ்சையும் அகற்ற முடியவில்லை.மேலு ம், இதற்கான சிகிச்சைக் கட்டணமும் மிக அதிகம்.
இந்த நிலையில்தான் ஆக்ஸிலரி கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வந்துள்ளது. இதில், தானமாகப் பெறப்படும் கல்லீரலை, ஏற்கெனவே உள்ள கல்லீரலுடன் சேர்த்துப் பொருத்துவோம். இதனால் நோயாளியின் கல்லீரல் குறிப்பிட்ட பிரச்னையை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும். கூடுதலாகப் பொருத்தப்பட்ட கல்லீரல், அந்தக் குறிப்பிட்ட பிரச்னையை மட்டும் கையாளும். இதனால் நோயாளி தன் வாழ் நாள் இறுதி வரை இது தொடர்பான எந்த பிரச்னையும் இன்றி வாழ முடியும். இந்த அறுவை சிகிச்சை இந்தியாவில்  இங்கு மட்டுமே செய்யப்படுகின்றது.
இந்த சிகிச்சையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட் என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது. தானமாகப் பெறப்படும் கல்லீரலில் இருந்து குறிப்பிட்ட திசுவை மட்டும் தனியே பிரித்து எடுத்து, பதப்படுத்திப் பாதுகாத்துவைக்கப்படும். தேவைப்படும்போது, கல்லீரலுக்குச் செல்லும் ரத்தத்தில் அந்த கல்லீரல் திசுவைச் செலுத்துவோம். அது நோயாளியின் கல்லீரலில் சென்று சேர்ந்து, செயல்பட ஆரம்பிக்கும். லண்டன் கிங்ஸ் காலேஜில் பணியாற்றும்போது, இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினோம். சென்னையில் இதுபோன்று சிகிச்சை மேற்கொள்வதற்கான ஆய்வகம் உள்ளிட்டவை நிறுவும் பணியில் ஈடுபட்டுவருகிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மெட்டபாலிக் டிஸார்டருக்கான சிகிச்சை முறை என்பது ஓப்பன் சர்ஜரி முறையில் இருந்து மாறி சிறு துளை திசு செலுத்தும் முறைக்கு மாறிவிடும்!'' என்றார் நம்பிக்கையாக.
மருத்துவப் புரட்சிதான்!
பா.பிரவீன்குமார்
************************************************************************
அஞ்சா நெஞ்சனாக இருந்தால், இப்ப மோதிப் பார்க்கட்டும்!

ராஜன் செல்லப்பா ரணகளப் பேட்டி

டைநில்லாப் பேருந்தாக காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை பிரசாரத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறார் அ.தி.மு.க-வின் மதுரை மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பா. ''மதுரை மாநகராட்சியில் கூடாரம் போட்டு அபகரிக்கும் கூட்டத்தைத் துரத்தாவிட்டால், இனி சொந்த வீட்டில் குடியிருக்கவே தி.மு.க-காரங்க வாடகை கேட்பாங்க...'' - வில்லாபுரம் ஏரியாவில் முழங்கிக்கொண்டு இருந்த ராஜன் செல்லப்பாவிடம் மினி  பேட்டி...     
''ஹாட்ரிக் வெற்றி கண்ட தி.மு.க-விடம் இருந்து மதுரையை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?''
''மக்கள் சக்திக்கு மிஞ்சியது எதுவும் இல்லை என்பதை சட்டமன்றத் தேர்தல் நிரூபித்து​விட்டது. அ.தி.​மு.க-வுக்கு ஆதரவான அந்த அலை இப்போதும் அப்படியே இருக்கிறது. இங்கு இருந்த தி.மு.க. மேயர்கள் மூவருமே சுதந்திரமாக செயல்படவில்லை. அழகிரி ஆட்டுவித்தபடியே ஆடினார்கள். 'அடுத்தும் நாம்தான் வருவோம்’ என்ற மமதையில் மாநகராட்சிக்குள் தொட்டது அனைத்​திலும் ஊழல் செய்தார்கள். அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இந்த விழிப்பு உணர்வும், அம்மா அறிவித்திருக்கும் நலத் திட்டங்களும் எங்களுக்கு வெற்றியை சுலபமாகத் தந்துவிடும்.''
''ஊழல்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல் ஆதாரத்துடன் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?''
''ஒன்றென்ன... ஏகப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. ஏராளமான கட்டடங்களுக்கு  கட்டணம் வசூலிக்காமல் பிளான் அப்ரூவல் கொடுத்தார்கள். அப்பாவிகளிடம் கழுத்தை நெரித்து வரி வசூல் செய்தவர்கள், பல பெரிய வர்த்தக நிறுவ​னங்களிடம் லஞ்சம் வாங்கிக்​கொண்டு 15 ஆண்டுகளாக வரியே வசூலிக்கவில்லை. மாநகராட்சிக்குச் சொந்தமான பல முக்கிய இடங்களை தி.மு.க-காரர்களே ஆக்கிரமித்தார்கள். ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனத்திலும் ஏகப்பட்ட  மோசடி. சாலையே போடாமல் போட்டதாக கணக்குக் காட்டி பல கோடிகளைச் சுருட்டினார்கள். மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் துப்புரவுப் பணியாளர்களை, ஒரு வி.ஐ.பி-க்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தைச் சுத்தப்படுத்த தினமும் அனுப்பி இருக்கிறார்கள். நாங்கள் இதை எல்லாம் கட்டாயம் தோண்டி எடுப்போம். தவறு செய்த யாரையும் தப்பிக்கவிட மாட்டோம்!''
''ஆனால், 'அண்ணன் அழகிரியின் தேர்தல் வியூகம் இந்த முறையும் எங்களை ஜெயிக்கவைக்கும்’ என்று தி.மு.க-வினர் தெம்பாக இருக்கிறார்களே!''
''அழகிரிக்குன்னு ஏதா​வது போராட்ட வர​லாறு இருக்கா? அரசியல்​ரீதியாக எதிர்த்து நிற்கத் துணிவில்​லாமல், ஆளும் கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் அவர் பருப்பு வேகும். போலீஸை வைத்துக்கொண்டு மிரட்டி அரசியல் செய்பவருக்கு பேர் அஞ்சா நெஞ்சனா?  உண்மையிலேயே அழகிரி அஞ்சா நெஞ்சனாக இருந்தால், இப்ப மோதிப் பார்க்கட்டும். தன்னைக் காப்பாத்திக்கிறதே அவருக்கு இப்பபெரும்பாடு!''
''தி.மு.க. ஆட்சியில் மதுரைக்குப் பல திட்டங்கள் வந்திருப்பதாக தி.மு.க. வேட்பாளர் பாக்யநாதன் பட்டியல் போடுகிறாரே?''
''இரண்டு முறை ஆளும் கட்சி அந்தஸ்தில் இருந்த மதுரை மேயர்கள் அவர்களுடைய முதல்வரைச் சந்தித்து மதுரைக்காக வாங்கி வந்த சிறப்புத் திட்டங்கள் ஏதாவது உண்டா? உண்மை​யைச் சொல்ல வேண்டும் என்றால், திட்டங்களுக்கு நிதி கேட்டு மதுரை மேயர்கள் கருணாநிதியை சந்திக்கவே இல்லை. ஆனால், எங்களது ஆட்சியில் மதுரை தி.மு.க. மேயராக இருந்த ராமச்சந்திரனுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து சந்தித்த அம்மா அவர்கள், இரண்டு முக்கியப் பாலங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். அந்தப் பாலங்களைக் கட்டாமல்விட்டதுதான் தி.மு.க-வின் சாதனை.''    
'நீங்கள் மேயரானால் மதுரைக்​கான சிறப்புத் திட்டங்கள்?''
''அம்மா அறிவித்த மோனோ ரயில் திட்டம் மதுரைக்கு வரும்.  குடி தண்ணீர்ப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு, விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் புதிதாகப் பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவோம்.  வன்முறைக் களமாக சித்திரிக்கப்பட்டு​விட்ட மதுரையை உண்மையான கோயில் மாநகரமாக, கல்வி மாநகரமாக, வர்த்தக மாநகரமாக, புறநகரில் தொழிற்​சாலைகளைத் தொடங்கி தொழில் மாநகரமாக மாற்று​வது​தான் எங்களின் லட்சியம்!''
''தேர்தல் முடிவு உங்களுக்கு எந்த அளவுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?''
''2 லட்சம் வாக்கு வித்தியாசத்​தில் எங்களது வெற்றி இருக்கும். இதை மமதையால் அல்ல, அடக்கத்துடன்தான் சொல்கிறேன்!'' - படபட​வென பேசிவிட்டு மீண்டும் பிரசார ஜீப்பில் ஏறுகிறார் ராஜன் செல்லப்பா.
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
*********************************************************************************

நகராட்சித் தலைவர்... முந்துவது யார்?

16 நகரங்கள் பரபர ரிப்போர்ட்!

துறையூர்
: இங்கே தி.மு.க-வின் மாவட்ட பிரதிநிதி 'மெடிக்கல்’ முரளி மற்றும் அ.தி.மு.க-வின் நகர அவைத் தலைவர் ரவிவர்மாவுக்கும் போட்டி. முரளி முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தபோது கோயில்களுக்கு செய்த பணிகள், பக்தர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. இருந்தாலும் அப்செட்டில் இருக்கும் உட்கட்சிப் பங்காளிகள் ஏதேனும் உள்ளடி வேலையில் ஈடுபடுவார்களோ என்ற கலக்கத்தில் இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளரான ரவிவர்மா கட்சியில் நீண்ட காலம் இருந்திருந்தாலும், கட்சியினர் மத்தியில் அவ்வளவாக செல்வாக்கு இல்லாதவராக இருக்கிறார். அதனால் அவரது பிரசாரம் கொஞ்சம் டல்லடிக்கவே செய்கிறது. அதோடு, துறையூர் நகரப் பகுதி எப்போதும் தி.மு.க-வுக்கு செல்வாக்கான ஏரியா என்பதால், முரளியே முந்துகிறார்!

'விடிந்தால் கல்யாணம்’ என்பது போல் கிட்டத்தட்ட பரபரப்பின் விளிம்பில் நிற்கிறது, உள்ளாட்சி தேர்தல் களேபரம். அரசியல் வானில் அடடா ஆச்சர்யங்களும், அடேங்கப்பா மாற்றங்களும் நொடிக்கு நொடி நிகழ்ந்து கொண்டு இருக்கிற நிலையில், ஒரு ரவுண்டு ஓடி... அடுத்த செட் சேர்மன் வேட்பாளர்களின் நிலையைப் பதிவு செய்து வந்தோம்!
காங்கேயம்: கடந்தமுறை பேரூராட்சித் தலைவராக இருந்த தி.மு.க-வின் சுப்பு என்கிற சுப்பிரமணிக்கும், அ.தி.மு.க-வின் வெங்கு என்கிற மணிமாறனுக்கும்தான் போட்டி. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் ஊருக்கு எதுவும் செய்யவில்லை என்ற வெறுப்பு சுப்பு மீது இருக்கிறது. கட்சிக்காரர்களும் வேண்டாவெறுப்பாகக் கடமை ஆற்றுகின்றனராம். கடைசி ஐந்து நாட்களில் தாராள செலவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முயல்கிறார். கடந்த முறைக்கு முந்தைய தடவை இந்தப் பேரூராட்சியின் தலைவராக இருந்த ஏ.சி.கோவிந்தசாமியின் மகன்தான் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு. அப்பா செய்த நலத்திட்டங்கள், அவருக்கு ஊரிலுள்ள நல்ல பெயர் போன்றவற்றால் பெருவாரியான வாக்குகள் வெங்கு பக்கம் குவியும். இதற்கிடையில் போட்டியில் மளமளவென முன்னேறி வருகிறார் ம.தி.மு.க-வின் ஏ.சி.வெங்கடேசன். இவரது 'மிஸ்டர் க்ளீன்’ இமேஜும், மிக பக்குவமான குணமும் வெங்குவை வெலவெலக்க வைத்திருப்பதும் நிஜம்.
திருத்துறைப்பூண்டி:  திருத்துறைப்பூண்டி நகராட்சியின் முதல் சேர்மனான மணிமாறனின் மனைவி மைதிலி தி.மு.க. வேட்பாளர். இன்றும் சைக்கிள் மட்டுமே பயன்படுத்துபவர் மணிமாறன் என்கிற எளிமையை மக்கள் அங்கீகரிக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் மந்தமான செயல்பாடுகள் தி.மு.க-வுக்கு எக்ஸ்ட்ரா பலத்தைக் கொடுக்கிறது. இந்த நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியதே இல்லை என்பது கூடுதல் பலம். அ.தி.மு.க. வேட்பாளரான உமாமகேஸ்வரிக்கு நகராட்சியில் உள்ள முறைகேடுகள் மற்றும் தி.மு.க-வின் அதிரடி அரசியலை வெறுக்கும் நடுநிலை மக்களின் ஓட்டுகள் பலம்.  தே.மு.தி.க. ஆதரவுடன் களம் இறங்கி உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரேவதியும் மல்லுக்கட்டுகிறார். கடும் போட்டிகளுக்கு இடையே மூச்சு திணறி தி.மு.க. முன்னேறுகிறது.
 
ஸ்ரீவில்லிபுத்து£ர்: தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மனைவி தேவகி களம் இறக்கி விடப்பட்டுள்ளார். அதுபோல் அ.தி.மு.க. சார்பில்  முத்துராஜின் மனைவி செந்தில்குமாரி போட்டியிடுகிறார். புதுமுக வேட்பாளர் செந்தில்குமாரி தேர்தல் களத்தில் கரையேறுவாரா என்ற சந்தேகம் அ.தி.மு.க-வினருக்கு முதலில் ஏற்பட்டது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். ஸ்ரீவில்லிபுத்தூரில் கணிசமான ஓட்டு வங்கியை வைத்திருக்கும் அத்தனை சமுதாயத்தினரையும் கவரும் வகையில் சில ரகசிய ஆஃபர்களை அள்ளிவிட்டுள்ளனர் அ.தி.மு.க. நிர்வாகிகள். கூடவே முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் குடும்பத்தினர் மீது உள்ள அதிருப்தியும் இப்போது அ.தி.மு.க-வுக்கு சாதகம். ஒரு வழக்கு விவகாரத்தில் தாமரைக்கனியின் மகன்கள் உள்ளே போய்வந்ததை எல்லாம் மக்கள் மறக்கவில்லை. தேவகி வெற்றி பெற்றால் அவர்  நகராட்சித் தலைவராகவும், மகன் தங்கமாங்கனி நகராட்சித் துணைத் தலைவராகவும் ஆகி விடுவார்கள். நகராட்சி நிர்வாகம் மொத்தத்தில் தாமரைக்கனியின் குடும்பத்தின் கைகளுக்குப் போய்விடுமே என உள்ளூர்வாசிகள் அஞ்சுகின்றனர். விளைவு, அ.தி.மு.க-வின் செந்தில்குமாரிக்கு சாதகமான அலை வீசுகிறது.
குளச்சல்: தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வுக்கு இடையில் போட்டி நிகழ்ந்தாலும் இவர் கள் திரும்பிப்பார்க்கும் வகையில் முன்னேறி வருகிறார் சுயேச்சை வேட்பாளர் ஜேசையா. தி.மு.க-வின் வேட்பாளராக களமிறங்கியுள்ள நசீர் ஏற்கெனவே நகராட்சித் தலைவராக இருந்தவர். தொகுதியிலுள்ள முப்பது சதவிகித இஸ்லாமிய வாக்குகளே தன்னைக் கரைசேர்த்துவிடும் என்பது இவரது கணிப்பு. அ.தி.மு.க. சார்பாக களம் இறங்கி இருப்பவர் நகர செயலாளர் பெலிக்ஸ் ராஜன். மீனவ சமுதாயத்தை சேர்ந்த இவர், கட்சி செல்வாக்கும், மீனவ மக்களின் வாக்கும் தன்னை கைதூக்கிவிடும் என்று நம்புகிறார். இருந்தாலும் வெற்றி வாய்ப்பு தி.மு.க-வுக்கே சாதகம்!
மன்னார்குடி: அ.தி.மு.க-வின் நிழல் அதிகார மையம் என அரசியல் புள்ளிகளால் விமர்சிக்கப்படும் இடம் மன்னார்குடி. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவிடம் தோல்வியைத் தழுவியது அ.தி.மு.க. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மன்னார்குடி நகராட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது ஆளும் கட்சி. மக்களிடத்தில் பெரிதும் அறிமுகமில்லாத சுதாஅன்புசெல்வன் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.  இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் மன்னை நாராயணசாமியின் பேத்தியான மகேஸ்வரி சோழராஜன் களம் இறங்கி உள்ளார். மன்னார்குடி டு சென்னை ரயில் விட்டது, டி.ஆர்.பாலு செல்வாக்கு ஆகியவை தி.மு.க-வை மன்னார்குடியில் வெற்றிகரமாகக் கரை சேர்க்கிறது.
பட்டுக்கோட்டை: பிரபலமான பண்ணவயல் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்பாபு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். ஜவஹர்பாபு அமைதியானவர் என்றாலும் அவரைச் சுற்றியுள்ள பலர் மீது அவ்வளவாக நல்ல பெயர் இல்லை.  தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் சீனி.அண்ணாதுரை போட்டியிடுகிறார். இவர்கள் குடும்பம் மட்டுமே தி.மு.க-வில் அதிகாரம் செய்வது உட்கட்சிக்குள் பலருக்கு வருத்தம். ஆனாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார் என்கிற நம்பிக்கையும் வணிக மக்களின் ஆதரவும் கை கொடுக்கிறது. ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதால் கடுமையான போட்டிக்கு இடையே நூலிழையில் யார் வேண்டுமானாலும் முந்தக்கூடும்.
சீர்காழி: தி.மு.க-வின் வசம் இருக்கும் சீர்காழி நகராட்சியில் தற்போது தி.மு.க சார்பில் களத்தில் இருக்கும் ஜெ.இறைஎழில், கட்சியினரிடமும் மக்களிடமும் மிகவும் அறிமுகமானவர். கட்சிக்காரர்கள் வீட்டு விஷேசம், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொள்வார். அதனால் கட்சியின் அனைத்துத் தரப்பினரும் அவருக்காக மிக ஆவலாக உழைக்கிறார்கள். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வளர்மதி, சத்துணவுத் திட்ட ஊழியர். தேர்தலுக்காக அரசியலுக்குள் அழைத்து வரப்பட்டிருக்கிறார். மக்களிடம் அதிகம் அறிமுகமில்லை. இவருக்கு ஆதரவாக சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்தி கட்சிக்காரர்களை விரட்டி வேலை வாங்குகிறார். இருந்தா லும் இவர்களால் தி.மு.க-வின் இறைஎழிலை எட்டிப்பிடிக்க முடியாது என்பதே இறுதி நிலவரம். 
பவானி: பவானி நகராட்சி அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடுபவர் கே.சி.கருப்பண்ணன். ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருந்ததால் பவானிவாசிகளுக்கு அறிமுகமானவர்தான். ஆனால்,  உருப்படியாக எதையும் செய்யாதது இப்போது உலைவைக்கிறது. அ.தி.மு.க-வின் செல்வாக்கு இவருக்கு கைகொடுக்கலாம்.  பவானி சிட்டிங் அ.தி.மு.க சேர்மன் எம்.ஆர்.துரை இம்முறை சுயேச்சையாகப் போட்டியிட்டு அ.தி.மு.க-வினரையே அலற வைக்கிறார். இவர் சேர்மனாக இருந்தபோது பவானியில் நல்ல மாற்றங்களை கொண்டுவந்திருப்பதால், தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியதால், குறிப்பாக அடித்தட்டு மக்களின் ஓட்டு இருப்பதால்... வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
ஜோலார்பேட்டை: அ.தி.மு.க-வின் வேட்பாளரான ஆசிரியை வசுமதி சீனிவாசனும், தி.மு.க. வேட்பாளரான வழக்கறிஞர் முத்தமிழ் செல்விக்கும் இடையேதான் பலத்த போட்டி. முத்தமிழ் செல்வி, தி.மு.க-வின் நீண்டகால விசுவாசி மட்டுமல்லாமல், மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். முத்தமிழ் செல்விக்காகக் கட்சியினர் ஒருமனதாக இறங்கி உழைக்கிறார்கள். ஆனாலும்கூட அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீரமணி முழு வீச்சில் வேலைபார்ப்பதால் வெற்றிவாய்ப்பு வசுமதிக்கே என்று தெரிகிறது.
ஆம்பூர்: முன்னாள் எம்.எல்.ஏ இ.ரா.சம்பங்கியின் மருமகள் சாந்தி ராஜி தி.மு.க சார்பாகவும், அரசிய லுக்குப் புதுமுகமான சங்கீதா பாலசுப்பிரமணி அ.தி.மு.க சார்பிலும் போட்டியிடுகிறார்கள்.  ஏற்கெனவே நகரமன்றத் தலைவர் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த சாந்திராஜி இப்போது ஆம்பூர் நகராட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார். ஆனால், திமுக கூட்டணியிலிருந்து விலகிய முஸ்லிம் லீக் ஓட்டுகள் பெருமளவில் சிதறுவதால், தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு பாதகம்தான். குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு-வின் சங்கீதாவே வெற்றி பெறுவார் என்று கொடி தூக்குகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
செங்கல்பட்டு: அ.தி.மு.க. சார்பில் முதலில் வேட் பாளராக அறிவிக்கப்பட்டவர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஆறுமுகம். 'இவருக்கு செல்வாக்கு சுத்தமாக இல்லை’ என்று உள்ளூர் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியதால், நகர அ.தி.மு.க. செயலாளர் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உள்ளூர்க்காரர், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்...என்றெல்லாம் கட்சியினரிடம் நல்ல பெயர் வாங்கி வைத்திருப்பதால் தெம்பாக இருக்கிறது அ.தி.மு.க. முகாம். இவருக்கு எதிராக களம் இறங்கி இருக்கிறார் தி.மு.க. நகரசெயலாளர் சதீஷ்பாபு (எ) அன்புச்செல்வன். பக்குவமான மனிதர் என்பதும் கட்சி செல்வாக்கும் மட்டுமே இவருக்கு கைகொடுக்கிறது. இரு கழகங்களின் வேட்பாளர்களுமே பணத்தை தாராளமாக செலவு செய்கின்றனர். இருந்தாலும் வெற்றி வெளிச்சம் குமாரசாமி மீதே படர்கிறது.
கடலூர்:  இங்கே அ.தி.மு.க வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டிருப்பவர்,  சி.கே.சுப்ரமணியன். தி.மு.க தரப்பில்  நகர இளைஞரணி செயலாளர் பழக்கடை ராஜா. சுப்ரமணியன்  கட்சி யின் சீனியர் என்பதால்,  நன்கு அறிமுகமானவராக இருக்கிறார். பொதுமக்களும் படித்தவர்களும் ஆளும் கட்சியே வந்தால் அரசின் நலத்திட்டங்கள் எதுவும் தடைபடாது என்கிறார்கள். மீனவர்கள் ஓட்டும் பக்க பலமாக உள்ளதாம். ஆனால், தி.மு.க.வி-லோ கடும் அதிருப்தி நிலவுகிறது. இருக்கும் சீனியர்களுக்கு ஸீட் கொடுக்காமல்  ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தது, கட்சியினரை கடுப்பாக்கி யுள்ளது. ஒதுங்கியே நிற்பது மட்டுமில்லாமல், உள்ளடி வேலைகளும் செய்து வருகிறார்களாம். அதனால், கடலூர் நகராட்சி கட்டாயம் அ.தி.மு.க வசம்தான் போகுமாம். 
கொடைக்கானல்:  சிட்டிங் சேர்மனான முகமது இப்ராஹிமையே வேட்பாளராக்கி இருக் கிறது தி.மு.க. இவரை முன்கூட்டியே முடக்கிப் போடுவதற்காக நிலமோசடி வழக்கில் கைது செய்தார்கள். இருப்பினும் தனது பிரசாரத்தை வேகமாக செய்து வருகிறார் முகமது இப்ராஹிம். இவரை எதிர்க்கும் அ.தி.மு.க. வேட்பாளரான நகரச் செயலாளர் கோவிந்தன் கட்சியில் சீனியர். அந்த வட்டாரத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. கொடைக்கானலின் கிராம பகுதிகளில் இருக்குமளவுக்கு நகரத்தில் தே.மு.தி.க-வுக்கு செல்வாக்கு இல்லை என்பதால், முரசுகொட்டும் அக்கட்சியின் வேட்பாளரான நகரச் செயலாளர் செல்வராஜ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படுகிறார்.
காரைக்குடி:  முன்னாள் எம்.எல்.ஏ-வான கற்பகத்தை நிறுத்தி இருக்கிறது அ.தி.மு.க.! படித்தவர், பரிச்சயமானவர் என்ற ப்ளஸ் பாயின்ட்கள் இருந்தாலும், கட்சியின் கோஷ்டி பூசல்கள் இவருக்கு சவால். தி.மு.க. சார்பாக நகர துணைச் செயலாளரான துரை.நாகராஜின் மனைவி பாண்டி மீனாள் இங்கே வேட்பாளர். கற்பகம் அளவுக்கு பரிச்சயமானவர் இல்லை என்றாலும், 'காரைக்குடி தி.மு.க. கோட்டை’ என்ற இமேஜும், காங்கிரஸ் ஆதரவு ஒப்பந்தமும் இவருக்குக் கைகொடுக்கிறது. தே.மு.தி.க. வேட்பாளராகப் போட்டியிடும் மாநில மகளிரணி செயலாளரான பர்வத ரெஜினா பாப்பா நாடாளுமன்ற தேர்தலிலேயே காரைக் குடி நகரத்தில் சுமார் ஆறாயிரம் ஓட்டுகளை வங்கியவர். படித்தவரான இவர் வாங்கும் ஓட்டுகள் ஒவ்வொன்றும் கற்பகத்தின் கனவுகளைக் கலைக்கும்.
அம்பாசமுத்திரம்:  இங்கே முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆசியுடன் களம் இறங்கி இருக்கிறார் தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வி. கட்சியினரின் தீவிர பிரசாரமும் கடந்த முறை நகராட்சிப் பகுதியில் நடந்திருக்கும் நலத்திட்டங்களும் தன்னைக் கரை சேர்க்கும் என நம்புகிறார். அ.தி.மு.க வேட்பாளர் செல்விக்கு ஆளும் கட்சி என்பதும், சிட்டிங் எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையா நேரடியாகக் களம் இறங்கித் தேர்தல் பணியாற்றுவதும் எக்ஸ்ட்ரா பலம். தொண்டர்கள் உற்சாகத்துடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்.  தே.மு.தி.க. வேட்பாளரான வேலம்மாளின் பலமே கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள்தான். இதுபோக, வேட்பாளராகி இருக்கும் மேலும் சிலரும் வாக்குகளை பிரித்து சிதறச் செய்தாலும், இந்தப் பகுதியில் அ.தி.மு.க-வுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்குக் காரணமாக அம்பாசமுத்திரம் நகராட்சி இலை வசமாகும் வாய்ப்பு அதிகம்!
ஜூ.வி. டீம்                                                     
''ஊழல் புகார் இல்லை!''
ஜூ.வி. 9.10.11 தேதியிட்ட இதழில் செங்கோட்டை நகராட்சித் தேர்தல் நிலவரம் குறித்து எழுதியிருந்தோம். அதில் தி.மு.க. வேட்பாளர் ரஹீம் பற்றி அந்தப் பகுதியில் பரவலாக பேசப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்டிருந்தோம். இது தொடர்பாக ரஹீமின் வழக்கறி ஞர் லூக் ஜெயக்குமார் நமக்கு அனுப்பியுள்ளகடிதத்தில், ''ரஹீம் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் இருப்பதாக வெளியான செய்தி எந்தவித மான ஆதாரமும் இல்லாத உண்மைக்குப் புறம்பான செய்தி ஆகும். அவர் எந்தவிதமான ஊழலும் செய்யவில்லை. கவுன்சிலர்கள் தாக்கப்பட்ட விவகாரம், செங்கோட்டை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுடன் சமரசமாக முடித்துக் கொள்ளப் பட்டது'' என்று கூறியுள்ளார். குறிப்பிட்ட அச்செய்தியை வெளியிட்டதில் நமக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள் கிறோம்.
- ஆசிரியர்
************************************************************************

முரசு ஒலிக்கும் நகராட்சிகள்!

விறுவிறு பார்வை

 விழுப்புரம்:
'சட்டமன்றத் தொகுதி களைக் கைப்பற்றிய தைப் போன்றே உள்ளாட்சியிலும் நகராட்சிகளைக் கைப்பற்றி விட வேண்டும்’ என்று அ.தி.மு.க. ஒரு பக்கமும், 'கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கைப்பற்றிய நகராட்சிகளை யாவது மீண்டும் தக்க வைக்க வேண்டும்’ என்று தி.மு.க. மறு பக்கமும் முட்டிமோதிக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையே, '29 எம்.எல்.ஏ-க்களை கைவசம் வைத்திருக்கும் நாம், இரட்டை இலக்க எண்ணிக் கையில் நகராட்சிகளைக் கைப்பற்றினால்தான் கௌரவம்’ என்று இவர்களுக்கு மத்தியில் தே.மு.தி.க. போராடுகிறது. அப்படி தே.மு.தி.க. குறிவைத்து அசுரத்தனமாக இயங்கும் நகராட்சிகளை எட்டிப் பார்த்தோம்.
விழுப்புரம் நகர தே.மு.தி.க. செயலாளராக இருக்கும் வக்கீல் துரைசாமி இங்கு சேர்மன் வேட்பாளர். மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசனின் அன்புக்குரிய நபராக இருப்பதால், தொண்டர்கள் ஓடியாடி உழைக்கிறார்கள். 'விழுப்புரம் நகரத்தை, சென்னை நகரத்தைப்போல மேன்மையாக்குவோம்!’ என்று வாக்குறுதி கொடுத்து வருகிறார். அ.தி.மு.க. வேட் பாளர் பாஸ்கருக்கு எதிராக, கட்சியில் ஸீட் கிடைக்காத நூர்முகம்மது சுயேச்சையாகப் போட்டியிடுவதால், அ.தி.மு.க. ஓட்டுகள் சிதறக்கூடும். இப்போதைக்கு தி.மு.க. வேட்பாளர் சக்கரைக்கு சாதகமாக இருக்கும் நகராட் சியை, துரைசாமி அசுர வேகத்தில் உழைத்தால் அசைத்துப் பார்க்கலாம்.
பண்ருட்டி:
தே.மு.தி.க-வின் கடலூர் மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளராக இருக்கும் டாக்டர் அறிவொளிதான் இங்கு வேட்பாளர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சைடில்  பஞ்சாயத்தும், கோஷ்டிப் பூசலும் தலைதூக்கி நிற்கிறது. தே.மு.தி.க. வேட்பாளர் மீது அப்படியரு சாயம் இல்லாததால், பொதுமக்கள் அவரை ஆர்வமாகவே பார்க்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பண்ருட்டி தே.மு.தி.க. எம்.எல்.ஏ-வான சிவகொழுந்து, வேட்பாளர் அறிவொளிக்கு பக்க பலமாக உழைக்கிறார். மற்ற கட்சிகள் தள்ளாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால், தே.மு.தி.க-வினரின் முரசு வெற்றிகரமாக ஒலிக்கலாம்.
விருத்தாசலம்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து முதன் முதலில் எம்.எல்.ஏ-வானது, இங்குதான். கட்சிக்கு ராசியான தொகுதி என்ற நம்பிக்கை நிலவுகிறது அதனால் விருத்தாசலம் நகராட்சியைக் கட்டாயம் தே.மு.தி.க. கைப்பற்ற வேண்டும் என்று வேலை செய்கிறார்கள். இங்கு வேட்பாளராக களம் இறக்கப்பட்டவர், நகரப் பொருளாளரான அனந்தகோபால். இவர் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிச்சயம் இல்லாதவர் என்பது மட்டும்தான் மைனஸ். விருத்தாசலம் நகராட்சியில் பெரிய கட்சிகளான தி.மு.க-வின் தட்சணா மூர்த்தியும், அ.தி.மு.க-வின் அரங்கநாதனும் பலமாக மோதினாலும், அனந்த கோபாலும் புஜம் உயர்த்து கிறார்.
திருவாரூர்:
தே.மு.தி.க-வில் பொறுப்புகள் ஏதும் இல்லாத எத்திராஜை வேட்பாளராக அறிவித்து இருக் கிறது கட்சித் தலைமை. மைனாரிட்டியாக உள்ள நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றா லும் தனது அணுகுமுறையால், மக்களை நெருங்கி வருகிறார். கணிசமான ஓட்டு வங்கியை வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்கள் கூட்டணியில் இருப்பது எக்ஸ்ட்ரா எனர்ஜி. திருவாரூரில் விஜயகாந்த் செய்த பிரசாரம் பெண்கள் மத்தியில் ஆதரவை அதிகப்படுத்தி உள்ளது. அதிரடி அரசியல் நடக்கும் திருவாரூரில், எத்திராஜ் அமைதிப் புரட்சி படைத்தால் ஆச்சர்யம் இல்லை.
கரூர்:
தே.மு.தி.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணனின் வேட்பு மனு கடைசி நேரத்தில் தள்ளுபடியாக... மாற்று வேட்பாளரான ஆர்.ராமநாதன் களத்தில் இருக்கிறார். இவர் கடந்த எம்.பி. தேர்தலில் 52,000 ஓட்டுகள் வாங்கியவர். பெரும்பான்மையான கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த வாக்குகள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் 'தமிழ்நாடு’ செல்வம், தி.மு.க. வேட்பாளர் 'தாந்தோணி’ ரவி ஆகியோர் மீது சொந்தக் கட்சியில் சிறிது அதிருப்தி நிலவுகிறது. அதனால், அரசியல் மாற்றம் விரும்புகிறவர்களின் வாக்குகளைக் கைப் பற்றி விடலாம் என்று கணக்குப் போடுகிறார் ராம நாதன்.
மேட்டுப்பாளையம்:
மாவட்ட மீனவரணிச் செயலாளரான ஜாஃபர் சாதிக், களத்தில் நிற்கிறார். தே.மு.தி.க-வுக்கு ஏற்கெனவே இரண்டு கவுன்சிலர்கள் இருப்பதால், சந்துபொந்துகளில் நுழைந்து எப்படி பிரசாரத்தைக் கொண்டுசெல்லலாம் என்று கணக்குப் போட்டு வேலை செய்கிறார்கள். பி.ஜே.பி. சார்பாகப் போட்டியிடும் சதீஷ்குமாருக்கு அபரிமிதமான ஆதரவு இருந்தாலும், 'அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மேல் வெறுப் பில் இருக்கும் மக்கள் தங்களுக்குத்தான் ஓட்டு அளிப் பார்கள்’ என்பது இவர்கள் எதிர்பார்ப்பு. இதைத் தாண்டி, கூட்டணித் தோழனான மார்க்சிஸ்ட்,  ஜாஃபரின் வெற்றிக்காக வியர்க்க, விறுவிறுக்க உழைப்பதைப் பார்த்து ரொம்பவும் நம்பிக்கையில் இருக்கிறது தே.மு.தி.க.
பல்லடம்:
இங்கு தே.மு.தி.க. சார்பில் பி.ஏ.சேகர் போட்டியிடு கிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வுக்கு நிகராக கவுன்சிலர் பதவிகளை தே.மு.தி.க. கைப்பற்றியது. தே.மு.தி.க. ஆதரவுடனே தி.மு.க. நகராட்சியை கைப்பற்றியது. அதனால், எளிதில் வெற்றிபெறலாம் என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள் அக்கட்சியினர். அ.தி.மு.க. நகரச் செயலாளர் ரத்தினசாமிக்கு ஸீட் கொடுக்காமல், நகர அவைத் தலைவர் தங்கவேலுவுக்கு ஸீட் கொடுத்திருப்பதால், உட்கட்சியில் சலசலப்பு. அதனால், தே.மு.தி.க. மற்றும் தி.மு.க. இடையேதான் போட்டி. கொஞ்சம் தம் கட்டி உழைத்தால் நகராட்சியை கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கிறது விஜயகாந்த் கட்சி.
உடுமலைப்பேட்டை:
இங்கு தே.மு.தி.க. மாவட்ட துணைச் செய லாளரான ராதா பாலசுப்ரமணியம் களத்தில் நிற்கிறார். டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்ஸ், காஸ் ஏஜென்சி, ரியல் எஸ்டேட் என்று பல்வேறு பிசினஸ் செய்வதால் பணத்துக்குப் பஞ்சமில்லை. தே.மு.தி.க. சார்பில் நடத்தப்படும் இலவச ஆம்புலன்ஸ் சேவையில் 600-க்கும் மேற்பட்டவர் களைக் காப்பாற்றி இருப்பதை சாதனையாகச் சொல்லி வாக்குச் சேகரிக்கிறார்கள். 33 வார்டுகளைக் கொண்ட நகராட்சியில் 31 வார்டுகளில் மட்டுமே தி.மு.க. போட்டியிடுகிறது. தே.மு.தி.க-வோ அத்தனை வார்டுகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இப்போதே வெற்றி உறுதி என்ற உற்சாகத்தில் இருக்கிறார்கள் தே.மு.தி.க-வினர்.
நரசிங்கபுரம்:
சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளர் பச்சமுத்து போட்டியிடுகிறார்.  வசதியான குடும்பத்தைச் சார்ந்தவர். தி.மு.க-வில் நகரச் செயலாளர் வேல்முருகனும், அ.தி.மு.க-வில் மணிவண்ணனும் களம் காண்கிறார்கள். தி.மு.க-வில் ஸீட் கிடைக்காத காட்டுராஜா என்கின்ற பழனிசாமி சுயேச்சையாக நிற்கிறார். இவர் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்தவர். நகராட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்த இவருக்கு மக்கள் செல்வாக்கு உண்டு. தற்போது நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காட்டுராஜா, வெளியே வந்து பிரசாரம் செய்தால்... அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஓட்டுகளைப் பிரிப்பார். இந்த வாய்ப்புக்காக தே.மு.தி.க. காத்திருக்கிறது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இந்த நகராட்சியில் தே.மு.தி.க. சார்பாக நகர வர்த்தக அணிச் செயலாளர் மாதேஸ்வரன் போட் டியிடுகிறார். வசதியான பார்ட்டி என்பதால், இவருக் காகப் பெரும் கூட்டமே வேலை செய்கிறது. தி.மு.க-வில் முன்னாள் நகரத் துணைச் செயலாளர் குணசேகரனும், அ.தி.மு.க-வில் நகரச் செயலாளர் நாகராஜும் களத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் ஸீட் கிடைக்காத குமாரபாளையம் தொகுதி இணைச் செயலாளர் சிவசக்தி தனசேகரன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். அதனை சாதகமாக்கி, நகராட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறது தே.மு.தி.க.!
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் இருக்கும் இந்த நகராட்சியில் சரிசம பலத்தில் ஒக்கலிக கவுடர்களும், முக்குலத்தோரும் இருக்கிறார் கள். கூடலூர் பேரூராட்சியாக இருந்த காலத்தில் இருந்து முக்குலத்தோர் மட்டுமே தலைவர் இருக்கையை அலங்கரித் துள்ளனர். இம்முறையும் அனைத்து அரசியல் கட்சிகளும் முக்குலத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே சேர்மன் வேட்பாளராக அறிவிக்க... தே.மு.தி.க மட்டும் கவுடர் சமூகத்தைச் சேர்ந்த அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் அருண்குமாரை அறிவித்தது. அருண்குமார் இமேஜுக்காக விழுந்திடும் இதர சமூக ஓட்டுகளோடு, ஒட்டுமொத்த கவுடர் சமூக ஓட்டுகள் அருண்குமாரை சேர்மன் இருக்கையில் உட்கார வைத்துவிடும் என்றே நம்புகிறார்கள்.
திருத்தணி:
தே.மு.தி.க-வில் மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். திருத்தணி எம்.எல்.ஏ-வான அருண்சுப்ரமணியன் கட்சிக்காரர் களை முடுக்கிவிட்டு வேலை செய்கிறார். மன்ற நிர்வாகிகளும் ஒற்றுமையோடு களப்பணி ஆற்று கிறார்கள். அ.தி.மு.க-வில் நகரச் செயலாளர் சவுந்திரராஜனும், தி.மு.க-வில் நகரச் செயலாளர் சந்திரனும் சம பலத்தோடு மோதுகிறார்கள். தீவிர களப்பணி ஆற்றுவதன் மூலம் மக்கள் மனதை மாற்றி கணிசமான வாக்குகளைப் பெற்று ஜெயிக்க தே.மு.தி.க. துடிக்கிறது.
ஜூ.வி. டீம்
************************************************************************

திருச்சி மேயர் போராட்டம்

முந்தும் ஜெயா... நெருங்கும் விஜயா!

'திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் சேர்க்கக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தீர்ப்பு தாமதமானதால், மற்ற மாநகராட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே, இங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடித்துப் பிடித்துக்கொண்டு அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து அவசரம் அவசரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில், மாநகராட்சியின் நிலவரம் யாருக்கு சாதகம் என்பதைப் பார்ப்போம். 
திருச்சி மாநகரின் முக்கியப் பிரச்னைகள் போக்குவரத்து நெரிசலும், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பும்தான். அதோடு இவ்வளவு பெரிய நகரில் விடுமுறை தினங்​களில் மக்கள் குடும்பத்தோடு பொழுதைக் கழிக்க சினிமா தியேட்டர்களைத் தவிர வேறு எந்த பொழுதுபோக்கு அம்சமும் கிடையாது. அவற்றை தீர்த்து வைப்பதையே முக்கியமான பிரசாரமாக அனைத்து கட்சியினரும் மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள். அனைவரையும் முந்திக்கொண்டு அ.தி.மு.க-வின் ஜெயாதான் முதல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கட்சிக்கு புதுமுகமான இவருக்கு ஸீட் வழங்கப்பட்டதால், அதிருப்தி கோஷ்டிகள், 'வேட்பாளரை மாத்துங்கம்மா’ என்று தலை​மைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பின. இருப்பினும், தலைமை கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை.
'ஜெயாவை ஜெயிக்க வைக்கலைன்னா... நீங்க நிர்வாகிகளா நீடிக்க முடியாது’ என்பதாக மேலிடத்தில் இருந்து தகவல் வரவே, அடித்துப் பிடித்துக்கொண்டு அனைவரும் இப்போது ஜெயாவுக்காக வேலை செய்கிறார்கள். ''குண்டும் குழியும் இல்லாத தார் சாலை, தடையில்லாத குடிநீர் வசதி, அனைத்து இடங்களிலும் தெருவிளக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வருவேன். திருச்சி மக்களுக்காக பொழுதுபோக்கு பூங்கா அமைப்பேன். வாக்கிங் செல்வதற்கு சரியான இடம் அமைத்துத் தருவேன். அம்மாவின் ஆட்சி நடப்பதால், திருச்சியின் தேவைகளை எடுத்துச் சொல்லி திட்டங்களை என்னால் உடனடியாக நிறைவேற்ற முடியும். அதனை மனதில் கொண்டு மக்கள் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்!'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜெயா.  
தி.மு.க-வின் வேட்பாளர் மாநகர் மாவட்ட துணைச் செயலாளரான விஜயா ஜெயராஜ். கட்சியில் அனை​வருக்கும் நன்கு அறிமுகமானவர். கேட்டரிங் கல்லூரி, மெட்ரிகுலேசன் பள்ளி, ஹோட்டல் நடத்தி வருகிறார் என்பதால் பணத்துக்கு பஞ்சமில்லை. கட்சியினரும் ஓடியாடி வேலை செய்கிறார்கள். ''நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணம் மையப் பகுதியில் அமைந்திருக்கும் காந்தி மார்க்கெட்டை வேறு பகுதிக்கு மாற்றுவது பற்றி பொதுமக்களின் கருத்து கேட்டு முடிவெடுப்பேன். நகரின் முக்கிய இடங்களில் குறிப்பாக தெப்பக்குளம் பகுதி, தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைப்பேன். மாநகர மக்கள் பொழுது போக்க கல்லணைக்கோ, முக்கொம்புக்கோ போக வேண்டி இருக்கிறது. அதனால், நகர எல்லைக்​குள்ளேயே அனைத்து வசதிகளுடன் கூடிய தீம் பார்க் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!'' என்கிறார் விஜயா ஜெயராஜ்.  
தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே, 'எப்போது தேர்தல் நடந்தாலும் இவர்தான் வேட்பாளர்’ என்று ம.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டவர் டாக்டர் ரொஹையா. நகரில் கணிசமான அளவில் இருக்​கும் இஸ்லாமியர் வாக்குகளும், தன்னிடம் மருத்துவம் பார்த்​தவர்களின் வாக்குகளும் தன்னைக் காப்பாற்றும் என்பது ரொஹை​யாவின் நம்பிக்கை.
தே.மு.தி.க. சார்பில் வழக்கறிஞர் சித்ரா வேட்பாளராக இருக்கிறார். ''இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க என்ன முயற்சி மேற்கொண்டார்கள்? என்னை மேயர் ஆக்கி​னால், காந்தி மார்க்​கெட்டை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றுவேன். சுற்றுச் சூழலைக் காக்க பசுமைத் திட்டம் நிறைவேற்றுவேன். மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்​பை தடுக்க நடவடிக்கை எடுப்பேன்!'' என்கிறார் சித்ரா.
மேயராக இருந்த சுஜாதாவுக்கே ஆரம்பத்தில் காங்கிரஸ் ஸீட் தந்தது. கோபத்தில் கொந்தளித்த சுஜாதா, 'யாரைக்கேட்டு என்னை வேட்பாளராக அறிவிச்சீங்க? நான் ஸீட் கேட்டு விருப்ப மனுவே கொடுக்கலையே?’ என்று பாய... விஜயா சேகர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இதுதவிர, பா.ம.க. சார்பில் லீமா சிவகுமார், பி.ஜே.பி. சார்பில் பேராசிரியை கிரிஜா, ஐ.ஜே.கே. சார்பில் டாக்டர் லதா ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இருப்பினும், தி.மு.க-வின் விஜயா ஜெயராஜ், அ.தி.மு.க-வின் ஜெயாவுக்கும் இடை​யில் போட்டி என்பதுதான் இப்போதைய நிலவரம். மூன்றாவது இடத்தை பிடிப்பதற்காக ம.தி.மு.க-வின் ரொஹையாவும், தே.மு.தி.க-வின் சித்ராவும் கடுமையாக முயற்சிக்கிறார்கள்.
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், என்.ஜி.மணிகண்டன்
*********************************************************************************
திருப்பத்தை உண்டாக்குமா திருப்பூர்?


கராட்சி என்ற நிலையில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு திருப்பூர் சந்திக்கும் முதல் உள்ளாட்சித் தேர்தல். 60 வார்டுகளில் சுமார் 4 லட்சம் மக்கள் தொகையுடன் திமிர்ந்து நிற்கும் திருப்பூர் மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்கு, மிகக் கடுமையான போட்டி நடக்கிறது. 
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற அத்தனை பெரிய கட்சிகளும் தங்கள் பிரதிநிதியை இங்கே களமிறக்கி இருக்கின்றன என்றாலும் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில்தான் கடும் மோதல். அ.தி.மு.க-வின் வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார் விசாலாட்சி. மாநில மகளிரணி துணைச்செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழகப் பேச்சாளர் என்று ஏகப்பட்ட கட்சிப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருப்பவர். கடந்த சில தேர்தல்களில் இவருக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கப்பட்டு, அதே வேகத்தில் பறிக்கவும் பட்டது. தொடர் ஏமாற்றங்களைச் சந்தித்தாலும்கூட அ.தி.மு.க-வின் விசுவாசியாகவே இருந்ததன் பலனை இந்த முறை அடைந்திருக்கிறார். திருப்பூரில் அ.தி.மு.க-வுக்குத் தனி செல்வாக்கு இருக்கிறது என்றாலும் உட்கட்சிக்குள் விசாலாட்சிக்கு  ஆகாத ஒன்றிரண்டு வில்லங்கப் புள்ளிகள் இருக்கிறார்கள். அவர்கள் விசாலாட்சிக்கு எதிராகத் தொடர்ந்து உள்ளடி வேலைகளைச் செய்து வருகிறார்கள். குறிப்பாக, விசாலாட்சியின் பர்சனல் விஷயங்களை மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக்கி, அவர் பெயரை டேமேஜ் செய்வதில் குறியாய் இருக்கிறார்கள். திருப்பூரில் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்டிராத முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பதும் விசாலாட்சியின் பலவீனம்.
''முழு ஆசீர்வாதத்தோட அம்மா என்னை களமிறக்கி விட்டிருக்காங்க. கடந்த மாநகராட்சி நிர்வாகம் இந்த ஊரோட வளர்ச்சிக்காக உருப்படியா எதையும் செய்யாததால் மக்கள் அதிருப்தியில் இருக்காங்க. எடுத்ததுக்கும், தொடுத்ததுக்கும் 'வசூல்’ வேட்டை நடத்தித் தங்களை டார்ச்சர் செய்த மாஃபியாக்கள் மீது தொழில் நிறுவன அதிபர்களும் ஆத்திரத்தில் இருக்கிறாங்க. அதனால் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கிறது!'' என்று உறுதியாகப் பேசுகிறார் விசாலாட்சி.
ஆனாலும் விசாலாட்சிக்கு கண்ணில் கலவர பயத்தை காட்டி வருகிறார், சிட்டிங் மேயரான தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ். கட்சியின் மாநகரச் செயலாளர் என்ற வகையில் இவருக்காக ஓடியாடி உழைக்கிறார்கள் உடன்பிறப்புகள். அ.தி.மு.க-வின் அத்தனை பலவீனங்களையும் நிதானமாக கவனித்து, அதை தனக்கான பலமாக்கி வருகிறார் செல்வராஜ். குறிப்பாக கம்யூனிஸ்ட் வாக்குகளை வளைப்பதைச் சொல்லியே ஆகவேண்டும். கூட்டணி முறிவால் அ.தி.மு.க-வுக்கு எதிராக வாக்களிக்கத் தயாராக இருக்கும் கம்யூனிஸ்ட் வாக்குகள் தே.மு.தி.க-வுக்குச் செல்ல வாய்ப்பு அதிகம். இங்கேதான் செக் வைக்கிறார் செல்வராஜ். கம்யூனிஸ்ட் வாக்குகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தன் கழகத்தினரை இறக்கி படுபரிவாகப் பேசி மனம் கரைய வைத்திருக்கிறார். போதாக்குறைக்கு பலமான பண விநியோகமும் நடக்கிறது என்கிறார்கள்.
குறுகிய காலத்தில் இவர் சேர்த்திருக்கும் சொத்து விவரம் குறித்து மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சிகள் எடுத்துவைக்கும் பாயின்ட்கள் பகீர் ரகம். கூடவே, மேயராக இருந்த காலத்தில் இவருக்கு நெருக்கமான நபர்கள் நிலபுலன்களை வளைத்துப்போட்டு, சமீபத்தில் கைதானதும்  இவரை பலவீனப்படுத்துகின்றன.  ''மாநகராட்சிக்கு ஏற்ற மாதிரியான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் ரொம்பவும் உழைத்திருக்கிறோம் என்பது மக்களுக்குத் தெரியும். மாநகராட்சியாக மாறிய குறுகிய காலத்தில் எவ்வளவு வசதிகளை செஞ்சு தரமுடியுமோ அதுக்கு மேலும் செஞ்சிருக்கோம். இந்த உழைப்பே என்னை வெற்றி வேட்பாளராக்கிவிடும். அதனால் குறுக்கு வழியில் பணத்தை இறைச்சு ஓட்டு வாங்கவேண்டிய அவசியமே எனக்கு இல்லை!'' என்கிறார் செல்வராஜ்.
இருபெரும் கட்சி வேட்பாளர்களும் அதிர்ந்து நோக்கும் நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறார் தே.மு.தி.க. வேட்​பாளர் தினேஷ்குமார். கட்சியில் வடக்கு மாவட்டச் செயலாள​ராக இருக்கும் இவருக்காக வியர்க்க விறுவிறுக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் தே.மு.தி.க-வினர். 'நம்ம கைக்கு வர வாய்ப்பு இருக்குப்பா’ என்று விஜயகாந்த் வட்டம் போட்டு வைத்திருக்கும் மாநகராட்சி இது. தொழிற்சங்கங்கள் நிறைந்த திருப்பூர் இயல்பாகவே கம்யூனிஸ்ட் பெல்ட். அதிலும் மார்க்சிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது விஜயகாந்த் கட்சிக்கு பலம்தான். ''மிக மோசமான ரோடுகள், 15 நாளைக்கு ஒரு தரம் குடிநீர், நிரம்பி வழியும் குப்பைகள்ன்னு கேவலப்பட்டு கிடக்குது திருப்பூர். என்னை பொறுப்பில் உட்கார வைத்தால் இதுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்னு மக்கள் நம்பிக்கையோட பார்க்கிறாங்க...'' என்கிறார் தினேஷ்குமார்.
இப்படி மூன்று வேட்பாளர்களும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டிருக்க, இடையில் தன் பங்குக்கு தடாலென வாக்குகளை பிரிக்க வந்து நிற்கிறார் வைகோவின் வேட்பாளர் நாகராஜ். வைகோ அபிமானிகளின் கவனிக்கத்தக்க வாக்குகள் இவருக்கு நிச்சயம் உண்டு. சமீபத்தில் வேறொரு நிகழ்வுக்காக திருப்பூர் வந்திருந்த தமிழருவி மணியன், நாகராஜ்க்கு ஆதரவாக ம.தி.மு.க. மேடையிலேறி பிரசாரம் செய்தது நடுநிலை வாக்காளர்களின் கவனத்தை திருப்பி... இவரது செல்வாக்கை அதிகப்படுத்தி இருக்கிறது.
பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் வெற்றிக் காற்று மாறி மாறி வீசுகிறது. எங்கே நிலை கொள்ளும் என்பது முடிவின் போது தெரிந்துவிடும்!
எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்
*********************************************************************************
மும்முனைப் போட்டியில் திணறும் வேலூர் கோட்டை...


வேலூர் மாநகராட்சியில் மும்முனைப் போட்டி என்றவுடன் வழக்கமான கட்சிகளுக்கு இடையே போட்டி என்று நினைத்துவிடாதீர்கள். அது​தான் இல்லை... கோட்டை மாநகராட்சியில் முக்கியக் கழகங்களுக்கு உள்ளேயே உட்கட்சிப் பூசல்... அடிதடி தடாலடிதான்! 
நகராட்சியாக இருந்த வேலூரை அன்றைய தி.மு.க. அரசு, 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி மாநகராட்சியாக விரிவாக்க உத்தரவிட்டது. அப்போது நகராட்சித் தலைவராக இருந்த கார்த்திகேயன் மேயராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில்,  
'தி.மு.க. கைப்பற்றி இருக்கும் அந்தப் பதவியைப் பிடித்தே தீர வேண்டும்’ என அ.தி.மு.க-வும், 'கைவசம் இருக்கும் மாநகராட்சியை எவருக்கும் கொடுக்கக் கூடாது’ என தி.மு.க-வும் வரிந்து கட்டிக்கொண்டு இருக்கின்றன. இடையே கம்யூனிஸ்ட் மற்றும் தே.மு.தி.க. கூட்டணி வேறு!
அ.தி.மு.க. புள்ளி ஒருவர் நம்மிடம் பேசினார். ''கட்சியில் உழைச்சவனுக்கு ஸீட் கொடுக்காம யார் பணம் அதிகமாத் தருகிறார்களோ அவர்களுக்கு ஏலம் போட்டு கொடுத்தா எப்படி இருக்கும்? 48 வார்டுகளாக இருந்த மாநகராட்சியில் இப்போது 60 வார்டுகள்... ஆனா, போகிற போக்கைப் பார்த்தா நாங்க 6 ஸீட்டுகூட வாங்கமாட்டோம்னு நினைக்கிறோம். மேயர் வேட்பாளரா நிக்கிற கார்த்தியாயினிக்கு  கட்சியோட சின்னம்கூட தெரியலை. போன வாரம் அமைச்சர் தலைமையில் நடந்த வேட்பாளர் கூட்டத்தில் அந்தப் பொண்ணு, 'நீங்க எல்லோரும் மறக்காம இரட்டை சின்னத்தில் வாக்குக் கேட்டு வெற்றி பெற செய்யுங்கள். நமது இரட்டை சின்னம் பெருவாரியாக வெற்றி பெரும்’னு பேசினாங்க! இரட்டை இலைனுகூட சொல்லத் தெரியாத அந்தப் பொண்ணு நாளைக்கு மக்களுக்கு என்ன பண்ணும்? ஒவ்வொரு நாளும் அமைச்சரோடு ஓட்டுக் கேட்க போறாங்க. ஆனா, காலையில் கையெடுத்துக் கும்பிட்டா சாயங்காலம்தான் கையை இறக்கி விடுறாங்க. இதுவரைக்கும் 50 வார்டுகளுக்குப் போய் பிரசாரம் பண்ணிட்டோம். இருந்தும், மக்கள்கிட்ட வெறுப்புதான் அதிகமா இருக்கு.
எங்களுக்கு எதிர்க் கட்சிகூட எதிரி இல்லை, நாங்களே​தான்! மேயர் வேட்​பாளர்கள் பட்டி​யல் கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்தில் வெளியிட்டாங்க. அப்ப எங்க அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் நான்காம் இடத்தில் இருந்தது. நாங்க கேட்டதுக்கு, 'அகர வரிசைப்படிதான் பெயர்களை வெளியிடவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது’னு அதிகாரி சொன்னார். அவர் சொல்படி வரவேண்டியதுதானே! ஆனா, எங்க கட்சிக்காரங்க சிலரே, 'நாங்க ஆளும் கட்சி... எங்ககிட்டயே சட்டம் பேசுறியா?’னு அவரை மிரட்டினாங்க. அதிகாரியும், 'இதெல்லாம தேர்தல் கமிஷன் பண்ணச் சொன்னது’னு சொல்லியும் அவரைக் கேவலமாத் திட்டிட்டாங்க. அங்கிருந்த பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் என்ன நினைப்பாங்க... மக்களுக்கு நல்லது செய்யத்தான் தி.மு.க. ஆட்சியைத் தூக்கிட்டு எங்களை உட்கார வச்சிருக்காங்க. எங்க ஆளுங்க இப்படி செஞ்சா... தங்களுக்குத் தாங்களே குழியைப் பறிச்சுக்குவாங்க’!’ என்றார் வெறுப்போடு.
தி.மு.க. நிலை, இன்னும் மோசம்... மாவட்ட உடன்பிறப்பு ஒருவர், ''முன்னாள் அமைச்சர் என்று அண்ணன் துரைமுருகனை நாங்கள் எப்போதும் பார்த்ததில்லை. எப்போதும் அவர்தான் எங்கள் அமைச்சர். அப்படிப்பட்டவர், 'வேலூர் கோட்டை தி.மு.க-வின் கோட்டை. இதை எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் விட்டுத்தர மாட்டோம்’ என்று மூன்று மாதத்துக்கு முன் வீர வசனம் பேசியவர், இப்போது தேடினால் கிடைப்பதில்லை.  கடந்த 20 வருஷங்களாக காங்கிரஸ் சார்பில் ஞானசேகரன் எம்.எல்.ஏ.வா இருந்தார். அ.தி.மு.க. சார்பில் இப்போது டாக்டர் விஜய் எம்.எல்.ஏ-வாக உள்ளார். இதுவரை இவர்களால் வேலூருக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டதா? வேட்பாளர் ராஜேஸ்வரி கட்சிக்காரங்கிட்ட சரியா பேச மாட்டேங்கிறாங்க. அப்புறம் எப்படி மக்கள் குறையைப்பற்றி அவங்க பேசுவாங்க? துரைமுருகன் அண்ணனும் வாக்கு சேகரிக்க வர மாட்டேங்கிறார். இப்படி கட்சியில் எல்லோரும் ஒவ்வொரு பக்கம் போய்கிட்டு இருந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும்? கோட்டையை நாங்க கைப்பற்றுவோமானு சந்தேகமா இருக்கு!'' என்றார் வருத்தமுடன்.
தே.மு.தி.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லதா மக்களிடையே நல்ல அறிமுகம்தான். இருந்தாலும் வாக்கு சேகரிப்பதில் தே.மு.தி.க-வினர் போதிய அக்கறை காட்டவில்லை என்று காம்ரேட்கள் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். போதாதக் குறைக்குத் தே.மு.தி.க-வில் முதலில் மேயர் வேட்பாளர் அறிவிக்கபட்டது. பிறகு நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் கம்யூனிஸ்ட்
களுக்கு வேலூர் ஒதுக்கப்பட்டுவிட, கேப்டன் விசுவாசிகள் ஏகத்துக்கும் கவலையில் உள்ளனர்.
இவர்களுக்கு நடுவே... தனி ரூட் போட்டுக்கொண்டு பா.ம.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் இருக்கின்றன. என்ன பண்ணுவது என்றே வேலூர்வாசிகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதுதான் நிஜம்!
பாவம் மக்கள்!
கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்
*********************************************************************************
மல்லுக்கட்டும் மல்லை!

மாமல்லபுரம் நிலவரம்

ரு பேரூராட்சித் தலைவர் வேட்பாளருக்காக வைகோ, பெரியார்தாசன், தமிழருவிமணியன், நாஞ்சில் சம்பத் போன்ற பெரும் தலைகள் வரிசையாக களம் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார்கள். யாருக்காகவாம்? மாமல்லபுரத்தில் ம.தி.மு.க. சார்பாக போட்டியிடும் மல்லை சத்யாவுக்காகத்தான். 
கடந்த 1996-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க வேட்பாளராக மல்லை சத்யா களம் இறங்கினார். அப்போதைய ஆளும் கட்சி யான தி.மு.க-வை எதிர்த்துப் போராட வேண்டிய நிலை. கட்சியில் முக்கிய பதவியில் இல்லாத சூழ்நிலையிலும், தனது உள்ளூர் செல்வாக்கின் மூலம் ஆளும் கட்சியை வீழ்த்திக் காட்டி னார். அடுத்த 2001-ம் ஆண்டு உள் ளாட்சித் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கைநழுவிப் போனது. இரண்டு முறை எம்.எல்.ஏ-வுக்குப் போட்டியிட்டும் தோல்வி அடைந் தார். இப்போது மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கி இருக்கிறார்.
மாமல்லபுரம் பகுதிக்கு நிலவரம் அறியச் சென்றோம். தி.மு.க-வில், நகரச் செயலாளர் விஸ்வநாதன் வேட்பாளராக உள்ளார். ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதால் வாய்ப்பு கிடைத்துள்ளது. 'அவருக்கு கட்சியில் செல்வாக்கு இருந்தாலும், உள்ளூர் செல்வாக்கு குறைவுதான்’ என்று உடன்பிறப்புகளே ஒத்துழைப்பு தராமல் ஒதுங்கி நிற்கிறார்கள்.
மாமல்லபுரத்தின் தற்போதைய பேரூராட்சித் தலைவர் யஸ்வந்த் மீது அ.தி.மு.க-வுக்கு அதிருப்திஎன்பதால் கோதண்டபாணிக்கு ஸீட் கிடைத்துள்ளது. இவருக்கு கட்சியில் இருந்து மாவட்டச் செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மட்டுமே ஆதரவு கொடுத்துச் சென்றார், மற்ற யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பதால் இங்கேயும் உள்குத்து வெகுவாக இருக்கிறது.
ம.தி.மு.க. சார்பாக போட்டியிடும் சத்யா, பேரூராட்சித் தலைவராக இருந்தபோது செய்த பணிகளையே நினைவுகூறி வாக்கு கேட்கிறார். எம்.எல்.ஏ. பதவிக்கு நின்றவர் இப்போது பேரூராட்சிக்கு நிற்கிறீர்களே என்று கேட்டோம். ''அமைச்சராக இருந்தவர்கள் கூட,  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அதனால் மக்களுக்குச் சேவை செய்வதில் பெரிய பதவி, சிறிய பதவி என்று வித்தியாசம் கிடையாது. பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் இந்த மக்களுக்கு சேவகனாக, போராளியாக வலம் வந்தவன். இந்தமுறை வெற்றி நிச்சயம்!'' என்கிறார் நம்பிக்கையாக.
முக்கிய எதிர்க்கட்சிகள் சுணங்கி நின்றாலும் மல்லை கடுமையாக மல்லுக்கட்டுவதைப்  பார்த்தால், மறுமலர்ச்சி தெரிகிறது.
பா.ஜெயவேல்
************************************************************************
அத்தனை பேரும் அன் - அப்போஸ்டு!

நாலுகோட்டை நல்லாட்சி தேர்தல்!

'பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஏலத்தில் விற்பனை, வாக்கு சேகரிப்பதில் அண்ணன் தம்பிகளுக்குள் குத்து​வெட்டு, பதற்றமான வாக்குச் சாவடி​களுக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு...’ - என எந்தக் களேபரமும் இல்லாமல், நாலுகோட்டை பஞ்சாயத்துத் தலைவரும் மற்றும் ஆறு வார்டு உறுப்பினர்களும் போட்டி இன்றித் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்! 
சிவகங்கை யூனியனில் உள்ள நாலுகோட்டை பஞ்சாயத்தில், 1965-ல் ராமநாதன் என்பவர் தலைவரானார். தனது சேவைகளால் இந்தப் பஞ்சாயத்தை ஒரு முன்மாதிரி பஞ்சாயத்தாக மாற்றிக் காட்டியதால், 2001-ம் ஆண்டு வரை தொடர்ந்து தலைவராகவே இருந்தார். 2006-ல் பஞ்சாயத்து தலைவர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால் ராமநாதனின் மனைவி காளியம்மை தலைவ​ரானார். இரண்டு வருடத்தில் அவர் இறந்ததால், அடுத்த மூன்று வருடங்​களுக்கு ராமநாத னின் மருமகள் ராஜேஸ்வரியைப் போட்டியின்றி தலைவராகக் கொண்டு​வந்தார்கள் மக்கள்.
இரண்டு முறை மாவட்டத்தின் சிறந்த ஊராட்சிக்கான விருது, அனைவருக்கும் பொது மயானம் அமைத்துத் தீண்டா​மையை ஒழித்ததற்காக சமத்துவ மயான ஊக்க விருது, முழு சுகாதாரம் பெற்ற ஊராட்சிக்கான மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருது, சிறந்த ஊராட்சித் தலைவருக்கான மாநில அரசின் உத்தமர் காந்தி விருது... என விருதுகளைக் குவித்திருக்கிறது நாலுகோட்டை பஞ்சாயத்து.
''சிட்டிங் தலைவரான எங்க அண்ணி ராஜேஸ்வரியும் என் மனைவி மாசிலாமணியும் தலைவர் பதவிக்கு மனு கொடுத்திருந்தாங்க. 'உள்ளூர்ல இருக்கிற மாசிலாமணி வரட்டுமே’னு ஊர்ப் பெரியவர்கள் கேட்டுக்கிட்டதால எங்க அண்ணி வேட்பு மனுவை வாபஸ் வாங்கிட்டாங்க. இதே மாதிரி, 'எல்லா வார்டுலயும் நீ யாரைச் சொல்றியோ அவங்களே மெம்பரா இருக்கட்டுமப்பா’னு சொல்லிட்டாங்க. இந்திரா நகரில் மட்டும் ரெண்டு பேர் போட்டிக்கு வந்தாங்க. கூட்டம் போட்டு பேசி அதையும் சரி பண்ணிட்டோம்...'' பெருமையோடு சொன்னார் ராமநாதனின் இளைய மகன் மணிகண்டன்.
''பொதுமக்களுக்கு சேவை செய்யுற​வங்க மட்டும்தான் இந்தப் பொறுப்புக்கு வரணும்னு திட்டமிட்டுத்தான் நாங்க இந்த முடிவை எடுத்திருக்கோம். நான் உள்பட யாருடைய செயல்​பாடு சரியில்லைன்னு மக்கள் நினைக்​கிறாங்​களோ... அந்த நிமிஷமே பதவியை ராஜினாமா பண்ணிட்டு மத்தவங்களுக்கு வழி விட்டுறணும்னு முடிவு எடுத்திருக்கோம்...'' என்று தெளிவாகச் சொல்கிறார் தலைவர் பதவிக்குத் தேர்வாகி இருக்கும் மாசிலாமணி.
நாலுகோட்டையின் தலைமுறை தாண்டிய இந்த நல்லாட்சி தொடரட்டும்!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்
*********************************************************************************
உள்ளாட்சி யானை... குருடர்களாக மக்கள்!


''உள்ளாட்சித் தேர்தல் என்றாலே கட்சிகளின் கூட்டணி விளையாட்டு​களும் தேர்தல் கசமுசாக்களும்தான் மக்களின் நினைவுக்கு வருகின்றன. ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் என்பது, சாதாரண மக்களுக்குக் கிடைத்திருக்கும் அசாதாரண உரிமை. யானைக்குத் தெரியாத அதன் பலத்தைப் போலத்தான் உள்ளாட்சி அதிகாரம் பற்றி மக்களுக்குத் தெரியவில்லை...'' என்று சொல்கிறார் பேராசிரியர்.க.பழனித்துரை. காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் க.பழனித்துரை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரம் குறித்து எழுதியும் பேசியும் வருபவர். சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும், புதிய பஞ்சாயத்து அரசாங்கம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம், கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு, சிற்றூராட்சி நிர்வாகத்தில் குழுக்களின் பங்கு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், அதிகாரப் பரவலின் அடிப்படைகள் என்று பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் தொடர்ந்து பேசுகிறார். 
''உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கியமான இரண்டு அம்சங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி. ஏதோ பணம் வாங்கி, சாலை போடு​வது, குடிநீர் வசதி செய்து கொடுப்பது இவைதான் உள்ளாட்சியின் பணிகள் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு கிராமத்தையே தலைகீழாகமாற்றிக்காட்டும் சாதனையை உள்ளாட்சி செய்ய முடியும். உதாரணமாக இந்தியாவில் 53 சதவிகித கிராமப் பெண்களுக்கு ரத்தசோகை இருக்கிறது. அந்தப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக இருக்கும். இதுபோன்று ஒவ்வொரு கிராமத்துக்கும் இருக்கும் பிரத்தியேகப் பிரச்னைகளை உள்ளாட்சிகளே அரசுத் துறைகளைப் பயன்படுத்தி தீர்த்துவிட முடியும்.
ஐந்து ஆண்டுகளில் ஓர் ஊராட்சி தன் நலனுக்காகக் கிட்டத்தட்ட  7 கோடி வரை செலவழிக்க முடியும். கடந்த தி.மு.க ஆட்சியில் மட்டும் 369 திட்டங்கள் இருந்தன; மத்திய அரசின் திட்டங்கள் 99. இவை அனைத்தையும் முறையாக நம் பஞ்சாயத்துகள் பயன்படுத்தியதா, பயன்படுத்துகின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
நமது உள்ளாட்சி, கிராமப் பஞ்சாயத்துகள், வட்டாரப் பஞ்சாயத்துகள், மாவட்டப் பஞ்சாயத்துகள் என்று மூன்றடுக்கு கொண்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பஞ்சாயத்தும் மாவட்டத் திட்டக்குழுவும் இருக்கும். இந்த திட்டக்குழு செம்மையாகச் செயல்பட்டது என்றால், ஊழல்களைக் குறைத்து கிராமங்களின் தேவைகளை கிராமங்களே நிறைவு செய்ய முடியும். கேரளாவில் இந்த மாவட்டப் பஞ்சாயத்துகளும் மாவட்டத் திட்டக்குழுவும் சிறப்பாகச் செயல்படுகின்றன. எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட பல நிதிகள் இந்த மாவட்டப் பஞ்சாயத்துகள் மூலம்தான் செலவழிக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் கிராமப் பஞ்சாயத்துகள், வட்டாரப் பஞ்சாயத்துகளை விரும்புகிற அளவுக்கு அரசியல் கட்சிகள் மாவட்டப் பஞ்சாயத்துகளை விரும்புவதில்லை.
73-வது அரசியல் சட்டத் திருத்தச் சட்டத்தை ஒட்டித்தான் பஞ்சாயத்துராஜ் முறை அமலாக்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் மிகத்தெளிவாக, உள்ளாட்சி என்பது சுயாட்சி பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரப்பரவல் சட்டங்களின் மூலம் நடைபெற வேண்டும் என்றும் கூறுகிறது. ஆனால், தமிழக அரசு 1994-ல் உருவாக்கிய உள்ளாட்சி சட்டமோ, உள்ளாட்சியை ஆலோசனை கூறும் அமைப்பாகவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்பாகவும், அதிகாரிகளின் கீழ் இயங்கும் அமைப்பாகவும் மாற்றிவிட்டது. பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களும்கூட, சட்டத்தின் மூலம் வழங்காமல், அரசு ஆணைகள் மூலம் வழங்கப்பட்டன. பஞ்சாயத்துத் தலைவர்களுக்குத் தேவையான பயிற்சியை அளிக்க வேண்டியதும் மாநில அரசின் கடமை. ஆனால், பஞ்சாயத்துத் தலைவர்கள் எப்படி அரசு அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றுதான் தமிழக அரசு பயிற்சி தந்தது.
ஆனால், மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டால் மாநில அரசும் அரசியல் கட்சிகளும் உருவாக்கி வைத்திருக்கும் தடைகளைத் தாண்டி உள்ளாட்சிகளால் சிறப்பாகச் செயல்பட முடியும். ஏனெனில், ஒரு கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம், அரசியல் சட்டத் திருத்தம் அளவுக்கு வலிமை வாய்ந்தது.
நம் நாட்டில், தலித் சமுதாயத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராவதோ, நாடாளுமன்ற உறுப்பினராவதோ, அமைச்சர்​களாக வருவதோ, ஜனாதிபதியாக வருவதோ, மிகப்பெரிய சாதனை அல்ல. சாதிய அதிகாரம் உறைந்துபோயுள்ள உள்ளாட்சியில் அதுவும் கிராமப் பஞ்சாயத்தில் தலைவர் பதவிக்குப் பெண்கள் வருவதும், தலித்கள் வருவதும்தான் சாதனை.
மழை நீர் சேகரிப்பானாலும் சரி, பாலிதீன் இல்லாத கிராமத்தை உருவாக்குவதானாலும் சரி; குடிசை வீடு இல்லாத கிராமமாக மாற்றுவதானாலும் சரி, கழிவறை இல்லாத வீடே இல்லை என்ற சாதனை படைப்பதானாலும் சரி; சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்வசதி செய்து தருவதானாலும் சரி; கிராமத்தில் உருவாகும் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து பஞ்சாயத்துக்கு வருமானம் சேர்த்து, கிராமத்தையும் சுத்தமாக வைத்து வரலாறு படைப்பதிலும் சரி, பஞ்சாயத்துத் தலைவர்கள்தான் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.
பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சங்கம் அமைத்து, தங்களுடைய பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் முன்வருகின்றனர். தலித் பஞ்சாயத்து தலைவர்களும் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளத் தனியான ஒரு கூட்டமைப்பை உருவாக்கிப் போராடி வருகின்றனர். ஆனால், இவர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில்தான் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது குட்டி மகாத்மாக்கள் உருவாவார்கள்.
உண்மையில் தலித் அமைப்புகள் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தல்களில்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நீதித்துறை, தேர்தல் ஆணையத்தைப் போல உள்ளாட்சி அமைப்புகளும் சுயேச்சையாக இயங்கும் நாள் வரும்போது இந்தியாவும் இந்தியாவில் வாழும் எளிய மக்களும் மகத்தான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள்!'' என்கிறார் க.பழனித்துரை.
ரீ.சிவக்குமார்,  படம்: வீ.சிவக்குமார்
*********************************************************************************
உச்சிவெயிலில் உள்ளாட்சி காமெடி!

முதல்ல டீ... அடுத்து கலரு... அடுத்து கடாபுடா!

மிழக உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவருக்கான போட்டியில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., உட்பட கிட்டத்தட்ட 10 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார் கள். அதோடு, நகராட்சி கவுன்சிலர் பதவிக்கும் ஆட்கள் களத்தில் இருக்கி றார்கள். தவிர, சுயேச்சைகளும் வேறு கச்சைக்கட்டி நிற்கிறார்கள். சரி, இருந்து விட்டுப் போகட்டுமே, அதனால் என்ன? அதில்தான் இருக்கிறது வாக்காளர் களுக்கான வேதனையே! 
காலை 6 மணியளவில் வாக்காளர் எழுந்து காலைக் கடன்களை செய்வதற்கு முன்னால்... ''அய்யா வணக்கம்யா... அம்மா வணக்கம்மா. நான்தான் நம்ம வார்டுக்கு கவுன்சிலரா நிக்கிறேன், நம்ம சின்னம் இதுதான், பாத்து செய்யுங்க!'' என்று கழுத்தில் சுற்றிய துண்டோடு பூபாளத்தை முழங்க... 'என்னய்யா கொடுமை?’ என்று யோசிப்பதற்குள்... ''அண்ணி... அண்ணன் இல்லைங் களா? நான்தான் இந்தக் கட்சி வேட் பாளர்!'' என்று அடுத்த குரல். 'அவங்க டாய்லெட்ல இருக்காங்க’ என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னால், ''இருக்கட்டும், இருக் கட்டும்... வந்ததும் பார்த்துட்டு போயிடறேன்!'' என்கிறார் அந்த வேட்பாளர். அவசர அவசரமாக வெளியில் வந்து அசடு வழிந்துவிட்டு குளிக்கப் போனால்... கூக்குரல் கொடுக்கிறது இன்னொரு குரல். குளியலையும் அரைகுறையாக முடித்துவிட்டு, வேட்பாளரையும் அனுப்பிவிட்டு சாப்பிட உட்கார்ந் தால்... ''என்னாண்ணே, சாப்பாடா? நாமளும் சாப்பிடலாமா?'' என்று வருகிறது உரிமைக் குரல்.
இந்த அமளிதுமளியால் அலுவலகத்துக்குக் கிளம்ப, பரபரத்து வெளியே வரும்போது, ''அண்ணே, உங்களை நம்பித்தான் நிற்கிறேன். நீங்கதான் இந்த தடவை மனசு வைக்கணும்!'' என்று இன்னொருவர் கெஞ்ச... 'ஐயோ, ஆபீஸில் நாம் போய் கெஞ்ச வேண்டுமே?’ என்ற நினைப்போடு பேருந்தைப் பிடிக்க ஓடுவார் மாண்புமிகு வாக்காளர். இப்படி நகரப் பகுதி வாக்காளர்களைத் துரத்தும் ஓட்டு வேட்டை ஒரு புறம் இருக்க... கிராமத்தில் நடக்கும் கூத்துகளோ நம்மை கரும்பைப்போல் பிழிந்து விடுகின்றன.
விடியற்காலை 5 மணிக்கெல்லாம் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள் வேட்பாளர்கள். தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்தால்... ''என்ன மச்சான், இன்னும் தூங்குறீங்க?'' என்று உறவைச் சொல்லி ஓட்டு கேட்பார் ஊராட்சித் தலைவர் வேட்பாளர். 'ஓஹோ, அவர் வீட்டுக்குப் போகிறாரா? சரி, நாம் தெரு முனையில் மாப்பிளையைப் பார்த்துவிடுவோம்’ என்று கும்பலோடு காத்திருக்கிறார் மற்றொரு வேட்பாளர். தெருமுனையில் அவரைச் சந்தித்துவிட்டு டீக்கடைக்குப் போனால், ''டேய், அண்ணனுக்கு ஒரு டீ சொல்லுடா. அண்ணே... நம்ம சின்னம் பூட்டு சாவி மறந்துடாதீங்க!'' என்று மற்றொரு வாக்காளர் ஓட்டு சேகரிக்கிறார். அடுத்து பெட்டிக்கடையில் போக... இன்னொரு வேட்பாளர் கலரை (கிராமத்து கூல்டிரிங்ஸ்!) உடைத்து நீட்டுவார். மறுத்தால்... ''அவர் கொடுத்தா குடிப்பீங்க, நாங்க கொடுத்தா குடிப்பீங்களா?'' என்று போட்டு வாங்குவார். அதனால், அதையும் குடித்துவிட்டு வயிறு கடாபுடா சத்தம் போட, வயக்காட்டு பக்கம் ஓட வேண்டும்.  
வயலில் வேலை செய்யும் தாய்மார்களிடம் கும்பிட்டு விழுந்து வாக்கு சேகரிக்கிறார் ஒரு வேட் பாளர். கூலியோடு சேர்த்து இன்னொரு 100 ரூபாய் உபரியாகக் கிடைக்க... ''அது நம்ம சூனாபானா கொடுக்கச் சொன்னாரு. மறந்துடாதீங்க... ஏணியில ஒரு ஓட்டைப் போட்டுடுங்க...'' என்று வழிகிறார்கள். அலுத்துப்போய் கள்ளச்சாராயக் கடைக்குப் போனால், அங்கே தயாராக நிற்கிறது ஒரு அல்லக்கை. ''வாங்க, வாங்க... இன்னிக்கு நம்ம செலவுதான். எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுங்க. எல்லாம் அண்ணன் செலவுதான். அவர் சின்னம் மூக்குக் கண்ணாடி மறந்துடாதீங்க!'' என்று தாராளம் காட்டுகிறார் அந்த அல்லக்கை. ஓசியில் கிடைத்த சாராயத்தால் மட்டையாகும் குடிமகன் வீட்டில் போய் ரகளை கட்டுகிறார். அவர் களால் வீட்டுப் பெண்கள் படும் பாடு சொல்லி முடியாது.
எந்த வேட்பாளரோடு கூட போனால், அதிக ரூபாய் கொடுப்பார்கள் என்று காலையில் கணக்குப் போட்டு கிளம்புகிறார்கள் சில வாக்காளர்கள். வாக்குக் கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு தவறாமல் ஆரத்தி எடுக்கிறது பெண்கள் கூட்டம். காரைக் காலுக்கோ, புதுவைக்கோ யாரை அனுப்பி சரக்கு வாங்கலாம், எந்தக் கடையில் குறைந்த விலைக்கு பிரியாணி வாங்கலாம் என்றெல்லாம் கணக்குப் போடுகிறது வேட்பாளர்களின் மனது.
இதைவிட பெரிய சோகம்... கிராமங்களில் நேற்று வரை தாயாய் பிள்ளையாய், மாமன் மச்சானாய் பழகிய சொந்தக்காரர்கள் இப்போது ஜென்மப் பகை ரேஞ்சுக்கு முறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவரும் மற்ற வேட்பாளர்களிடமோ அவர்களது ஆதரவாளர்களிடமோ பேசுவது இல்லை. டீக்கடைகளில் கும்பல் கும்பலாகப் பிரிந்து உட்கார்ந்து இருக்கிறார்கள். சாவு வீட்டுக்குப் போனாலும், அங்கேயும் தனி அணி. மொத்தத்தில் நகரங்கள் பரவாயில்லை, கிராமங்களோ அதன் இயல்பைத் தொலைத்துவிட்டு தேர்தல் திருவிழாவில் தொலைந்துபோன குழந்தையாய் விழிக்கின்றன!
கரு.முத்து  
ஒற்றை மனிதர் பிரசாரம்!
*********************************************************************************

தேர்தல் களத்தில் போராளி

ரு ஸ்கூட்டி... அதில் விளம்பரத் தட்டி... ஒரு மைக் மட்டும் எடுத்துக்கொண்டு, தனி ஆளாக ஓட்டுக் கேட்டு வருகிறார் கோபால கிருஷ்ணன். சென்னை மாநக ராட்சித் தேர்தலில் 131 மற்றும் 138 வார்டுகளில் சுயேச்சையாகக் களம் இறங்கி இருக்கும் கோபால கிருஷ்ணன், கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் ஏரியாக்களை தினமும் வட்டமடித்து வருகிறார். தங்கையின் ஸ்கூட்டியை இரவல் வாங்கி அதில் கார் பேட்டரியைப் பொருத்தி மைக் இணைப்பு கொடுத்திருக்கிறார். பதிவு செய்த தனது உரையை தொடர்ந்து ஒலிபரப்புகிறார். 
யார் இந்த கோபால கிருஷ்ணன்? தகவல் உரிமைப் போராளி. 'சமூக சேவகர், அப்பழுக்கற்ற அரசு ஊழியர்’ என்கிற பிரிவுகளில் வீட்டு வசதி வாரியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் முறைகேடாக வீடுகளையும் மனைகளையும் வாங்கிய விவகாரத்தை வெளிக்கொண்டுவந்து, ஜாஃபர் சேட், ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் என்று பலரையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய அதே கோபால கிருஷ்ணன். பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்த மோசடிக் குற்றச்சாட்டில் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் கைது ஆவதற்கும் காரணமாக இருந்தவர். ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடந்தபோது அதில் பங்கெடுத்தவர்.
''லோக்பால் போராட்டத்தின்போது 'நாடாளு மன்றத்துக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மட்டுமே சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு’ என்று சொன்னது மத்திய அரசு. அதனால்தான் தேர்தலில் நிற்க முடிவெடுத்தேன். எங்க ஏரியாவில் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வாங்கியவர்களுக்கு கிரையப் பத்திரம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு கொடுத்து, நயா பைசா செலவே இல்லாமல் பத்திரம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். முதியோர் உதவித் தொகையைக் கொண்டுவரும் தபால்காரர்கள் அதில் பணம் பிடித்துக்கொண்டு கொடுத்தபோது, அவர்களை சி.பி.ஐ. மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுத்தேன்.
மக்கள் மீது நம்பிக்கைவைத்து களத்தில் நிற்கிறேன். அவர்கள் விரும்பினால், என்னை மாமன்றத்துக்கு அனுப்பிவைக்கட்டும்!'' என்கிறார் நம்பிக்கையுடன் கோபாலகிருஷ்ணன்.
இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் வைரம். ஆளுக்கேத்த சின்னம்தான்!
எம். பரக்கத் அலி, படங்கள்: எம். உசேன்
*********************************************************************************
சென்னை ரவுண்ட்ஸ்

தொண்டு தோள் கொடுக்குமா? 
கடந்த மாநகராட்சித் தேர்தலின்போது, தி.மு.க-வினர் நடத்திய வன்முறையால் கடுமை யாகத் தாக்கப்பட்டு காயம் அடைந்தவர், மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் தேவி என்ற தேவகி. உயர் நீதிமன்றமே மறு தேர்தல் நடத்தச் சொன்னதற்கு தேவி மீதான தாக்குதலும் முக்கியக் காரணம். இப்போது தேவி போட்டியிடும் 74-வது வார்டு,  மார்க்சிஸ்ட் கட்சிக்கு கௌரவப் பிரச்னை போல ஆகிவிட்டது. அதனால், இங்கு தீவிரமாக சுழன்று சுழன்று வேலை செய்கின்றனர். கடந்த 10 வருடங்களாக, ஏரியாவுக்கு கவுன்சிலர் தேவி என்னென்ன செய்தார்? என்பது பற்றி, 'தொண்டுகள் தொடர, தோள் கொடுப்பீர்’ என்ற 32 பக்கப் புத்தகம் ஒன்றை வீடு வீடாகக் கொடுத்து பிரசாரம் செய்கிறார்கள். தி.மு.க. தரப்பில் போட்டி இருந் தாலும், அ.தி.மு.க. தரப்பில் பிரசாரத்தையே காணோம். அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் வீடு இதே வட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த முறை அ.தி.மு.க-வின் வன்முறை  இருக்குமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள், ஏரியாவாசிகள். இந்த முறையும், தொண்டு தோள் கொடுக்குமா?
 யாருக்காவது போடுங்க!

 டாக்டருக்கு வருத்தமா?
எப்போதும் கோஷ்டி கானம் இசைக்கும் காங்கிரஸில், சென்னை மேயர் வேட்பாளர் ஸீட்டுக்கு கடும் போட்டி என்று எதுவும் இல்லை. வாசன் ஆதரவாளர்கள் நான்கைந்து பேர் முயற்சிக்க... தற்போதைய மாநகராட்சி எதிர்க் கட்சித் தலைவரான சைதை ரவிக்கு சான்ஸ் அடித்தது. கவுன்சிலர் இடங்களிலும் 65 சதவிகிதத்துக்கும் மேல் வாசன் அணியினரே அள்ளினார்கள். ஒரே கோஷ்டியாக ஸீட் வாங்கியவர்கள், பிரசாரத்தில் புது ஆவர்த்தனம் வாசிக்கிறார்கள். 'கவுன்சிலர் ஓட்டை எனக்குப் போடுங்க, மேயருக்கு எந்த கட்சிக்காவது போட்டுக்கோங்க...’ என்பதுதான் அவர்களின் பிரசார கோஷம். காரணம் என்னவாம்? 'வைட்டமின் ப’ பரிவர்த்தனை நடைபெறவே இல்லையாம். அது சரி, காங்கிரஸில் கோஷ்டி கானம் கேட்காமல் இருந்தால்தானே ஆச்சர்யம்!
மாநில அங்கீகாரம் இல்லாத கட்சிகள்கூட மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தி, வாய்ப்புள்ள வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. ஆனால், தேசியக் கட்சியான பி.ஜே.பி-க்கு மேயர் வேட்பாளரே இல்லை. பி.ஜே.பி-யின் சார்பில் மனுத் தாக்கல் செய்த ராஜேந்திரகுமாரின் மனு, விதிமுறைப்படி இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனால், அந்தக் கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர்கள், பிரசாரத்தின்போது மேயருக்கு யாருக்கு வாக்கு கேட்பது என்பதைச் சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. மேயருக்குப் போட்டி இல்லாததால், பெரிய தலைகளின் பிரசாரமும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னையில் தனியாகப் போட்டியிட்டு, 30,000 வாக்குகளைப் பெற்றவர் டாக்டர் தமிழிசை. அவரை நிறுத்தியிருந்தால், கௌரவமான போட்டியாக இருந்திருக்கும் எனப் புலம்புகிறார்கள், காவித் தொண்டர்கள். ''தமிழிசை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாத சிலரின் திருவிளையாடல்கள்தான் இது!'' என்றும் கட்சிக்குள் புலம்பல் கேட்கிறது.
 எஸ்.எம்.எஸ். தட்டுங்க.. மெயில் பண்ணுங்க!
சென்னை மாநகராட்சியின் 81-வது வார்டில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சாபிரா யார் தெரியுமா? பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யான ஜே.எம்.ஆரூணின் அண்ணன் மகள். இது வரை அரசியல் வாசமே இல்லாமல் இருந்த சாபிரா திடீர் வேட்பாளராகி இருக்கிறார். படித்த மக்கள் அதிகம் உள்ள வார்டு என்பதால், 'கவுன்சிலராகி சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரலை. உங்களுக்கு எதாவது நல்லது செய்யத்தான் வந்திருக்கேன். உங்க குறைகள் எதுவா இருந்தாலும் எனக்கு நீங்க எஸ்.எம்.எஸ்., அல்லது மெயில் பண்ணுங்க...’ என்று ஹைடெக்காக ஓட்டு கேட்கிறார். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் தனது செல்போன் நம்பரையும், இ-மெயில் ஐ.டி-யையும் கொடுத்து வருகிறாராம். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா!
 கட்சி மீது கடுப்பு?
காஞ்சிபுரம் மாவட்டம் பாலவாக்கம் ஊராட்சி, இப்போது சென்னை மாநகராட்சியின் 185-வது வார்டாக மாறியுள்ளது. கடந்த 1996, 2001-ம் ஆண்டுகளில் ஊராட்சித் தலைவராக இருந்தவர், பாலவாக்கம் சோமு. இவர் ம.தி.மு.க-வின் காஞ்சி மாவட்டச் செயலாளரும்கூட. 2006-ம் ஆண்டு இந்த ஊராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டதும், அவர் மகளையே நிற்கவைத்து வெற்றிபெறச் செய்தார் சோமு. இப்போது, சென்னை மாநகராட்சித் தேர்தலில் அவரே போட்டியிடுகிறார். இது அல்ல சங்கதி. ம.தி.மு.க-வின் அதிகாரபூர்வமான வேட்பாளர் என்றாலும், பிரசார சுவரொட்டியில் கட்சியின் வாசனையே தென்படவில்லை. சோமுவின் பெயரும் சின்னமும் மட்டும்தான் இருப்பதைப் பார்த்து சீறுகிறார்கள் கட்சிக்காரர்கள். அட, தன்னம்பிக்கைக்கு ஒரு அளவு வேண்டாமுங்களா?
 பொட்டு... ஓட்டு...
சென்னை மாநகராட்சி 169வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் நிற்கிறார் ஜெயச்சந்திரன். 168 வது வார்டுக்கு அவரது மகனே, அ.தி.மு.க. வேட்பாளர். இவர்கள் இருவரும் வாக்குக் கேட்க வரும்போது... ஜெயலலிதா படம் போட்ட சிறு அட்டையைக் கொடுக்கிறார்கள். உள்ளே திருப்பிப் பார்த்தால் ஏராளமான கலரில் ஸ்டிக்கர் பொட்டுகள் இருக்கும். ''பொட்டைப் பார்த்த சந்தோஷத்திலயே பெண்கள் எங்களுக்கு ஓட்டு போட்டுருவாங்க'' என்று சொல்லி மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் புழுதிவாக்கம் பகுதி அ.தி.மு.க.வினர்!
- ஜூ.வி. டீம்
************************************************************************
மிஸ்டர் கழுகு: கிலி... பிடித்தார் ஹெலி!


ஜெயலலிதா மதுரையில் பேசிக்கொண்டு இருப்பதை இங்கிருந்தபடியே லைவ்​வாகக் கேட்டபடியே நம் முன் ஆஜரா​னார் கழுகார். சில இடங்களில் லேசாகச் சிரித்துக் கொண்டார். 'வணக்கம்’ போட்டு ஜெ. முடித்ததும் நம்மைப் பார்த்துப் பேசத் தயாரானவரை மறித்தோம்! 
''மூன்று சந்தேகங்களுக்குப் பதில் சொல்லிவிட்டு உம்முடைய விஷயத்​துக்குச் செல்லலாம்!'' என்றோம்.
''தோட்டக்கலைச் சங்கத்துக்கு ஜெயலலிதா அரசு பல கோடி மதிப்புள்ள நிலத்தைத் தாரை வார்த்துவிட்டது என்று கருணாநிதி சொல்கிறாரே! யார் பக்கம் தவறு?''
''சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் செம்மொழிப் பூங்கா இருக்கிறது அல்லவா? அதற்கு எதிரே  200 கோடி மதிப்பிலான இடம் இருக்கிறது. இது தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்தது. அதைப் பராமரித்து வருபவரது பெயரைச் சொன்னால், விவகாரத்தின் வீரியம் முழுமையாக விளங்கிப் போகும். போயஸ் கார்டனுக்குள் புகுந்து புறப்பட்டு வரும் அதிமுக்கிய மனிதர்​களில் அதிமுக்கியமானவர். அந்த இடத்தைத் தோட்டக்கலைச் சங்கத்துக்கு கொடுக்க முந்தைய ஆட்சியில் ஜெயலலிதா முடிவெடுத்தார். அடுத்து வந்த கருணாநிதி, இதை எதிர்த்து முடிவெடுத்தார். இது தொடர்பான ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. அவர்கள், தோட்டக்கலைச் சங்கத்தை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும், அப்படிப்பட்ட விசாரணையை சென்னை கலெக்டர் நடத்தியதாகவும், உரிய ஆவணங்களைக் காட்டியதாகவும் சொல்லிக் கடந்த வாரம், பல கோடி மதிப்பிலான அந்த இடத்தை அவருக்கே கொடுத்துவிட்டார்கள்!
அ.தி.மு.க. ஆட்சியில் தோட்டக்கலைக் கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாகத்தான் முடிவெடுப்​பார்கள். ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே முதலமைச்சர் அலுவலகத்துக்குள் ஆட்களை வைத்து... அந்த இடத்தில் வேறு எதுவும் உருவாகிவிடாதபடியான காரியங்களையும் கச்சிதமாகப் பார்த்தார்கள்.  இதெல்லாம் அன்று கருணாநிதிக்கு தெரியுமா எனத் தெரியவில்லை என்கிறார்கள். 'ஊரெல்லாம் நில அபகரிப்பு வழக்குகளைப் போடும் முதல்வர் இப்படிப்பட்ட தாரை வார்ப்பை ரகசியமாகச் செய்ய வேண்டுமா?’ என்ற விமர்சனம் அதிகாரிகள் மட்டத்தில் உள்ளது!''
''பரிதி இளம்வழுதி, அ.தி.மு.க-வுக்குப் போகப் போகிறார் என்கிறார்களே?''
''பரிதி இளம்வழுதிக்கு எதிராக தி.மு.க-வில் உள்ள மாஜி அமைச்சர்கள் சிலர் றெக்கை கட்டி வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் கிளப்பும் வதந்திதான் இது. 'இது என்னுடைய தந்தையும் நானும் வளர்த்த கட்சி. நான் எதற்கு இன்னொரு கட்சிக்குப் போக வேண்டும்?’ என்று அவர் கேட்டதாகச் சொல்கிறார்கள். 'தி.மு.க-வில் இருந்து போராடுவேன்’ என்று அவர் அறிக்கையே விட்டுள்ளாரே!''
''ஜெயலலிதாவை ஆதரித்து புத்தகம் எழுதியவர்​தான் இப்படி வதந்தியைக் கிளப்புகிறார் என்று அந்த அறிக்கையில் சொல்கிறாரே பரிதி! யாரைச் சொல்கிறார்?''
''எ.வ.வேலுவைச் சொல்கிறாராம்! '96-ம் ஆண்டு தி.மு.க-வில் சேருவதற்கு முன்னதாக ஜெயலலிதா பற்றி ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் தயாரித்தார் வேலு. பிரபல கவிஞர்  ஒருவரிடம் முன்னுரை வாங்கி... அந்த அம்மாவின் அழைப்புக்காகக் காத்திருந்தார். ஆனால், கார்டன் கதவு திறக்கவில்லை என்றதும்தான் வண்டியைத் திருப்பி கோபாலபுரம் போனார்’ என்று ஒரு தகவல் சொல்கிறார்கள். அதைத்தான் பரிதி சொல்கிறாராம். வேலு ஆட்களைக் கேட்டால், 'அப்படி எந்தப் புத்தகமும் தயாரிக்கவில்லை’ என்கிறார்கள். அது போகட்டும். அநேகமாக, இறுதிக் கட்ட பிரசாரத்தில் தனது ஆதரவாளர்களுடன் உதயசூரியனுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் பரிதியை சென்னையில் எங்காவது பார்க்கலாம்! அடுத்த சந்தேகத்தைக் கேளும்!''
''கனிமொழி ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம் என்று சி.பி.ஐ. சொன்னது உண்மையா?''
''சி.பி.ஐ. அதிகாரப்பூர்வமாக அப்படி எந்த வாக்குறுதியையும் யாரிடமும் தரவில்லை என்கிறார் எனது டெல்லி சோர்ஸ். 'இது தங்களுக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளின் வேலையா அல்லது நிருபர்களுக்குள் இருக்கும் நலம்விரும்பிகளின் கூத்தா எனத் தெரியவில்லை’ என்று சி.பி.ஐ. அதிகாரி​களுக்குள் பேச்சு இருக்கிறது. இந்த நியூஸ் வந்தது, கனிமொழி ஆதரவாளர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், நெகடிவ் ஆகிவிட்டதுதான் உண்மை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் இயக்குநர் விவேக் கோயங்கா ஆகிய இருவரும் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு கடந்த புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சிங்வி மற்றும் தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த நீதிபதிகளும் அந்தச் செய்தியைப் பார்த்திருக்கிறார்கள். 'கனி​மொழி ஜாமீனை சி.பி.ஐ. எதிர்க்காது என்று செய்தி வந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது’ என்று நீதிபதிகள் காட்டமாகச் சொல்ல... 'இப்படி சி.பி.ஐ. சொல்லவில்லை. ஜாமீனை மறுக்கும்படிதான் சி.பி.ஐ. சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது’ என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல் பதில் அளித்துள்ளார். 'ஸ்பெக்ட்ரம் வழக்குத் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அறிவுறுத்தப்பட்டுள்ளதா?’ என்றும் கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்கள் நீதிபதிகள். இதில் இருந்தே, அக்டோபர் 17 அவ்வளவு நம்பிக்கைக்கு உரியதாக இருக்காது என்பது தெரிகிறது!'' என்ற கழுகாரிடம், ''இப்போது உம்முடைய மேட்டருக்கு வாரும்!'' என்றோம்.
''சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியாக அடைந்த வெற்றியை இப்போது தனியாக அடைந்தாக வேண்டும் என்று நினைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'விஜயகாந்த், கம்யூனிஸ்ட், மற்றும் பலரையும் இணைத்த கூட்டணியால்தான் ஜெயித்தோம் என்ற பெயரை மாற்ற வேண்டும்’ என்று சொல்கிறாராம் ஜெயலலிதா. உளவுத்துறை அதிகாரிகள் கொடுக்கும் பட்டியலில் சில மாநகராட்சிகள் இழுபறி என்பதுமாதிரி ரிசல்ட் வருகிறதாம். அதனால்தான் திடீர் சுற்றுப்பயணத்தை அறிவித்து, ஹெலிகாப்டர் ஏறினார் முதல்வர். கோவை, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தே.மு.தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி அதிக வாக்குகளை வாங்கலாம் என்றும் ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மூன்றில் ம.தி.மு.க. கணிசமான வாக்குகளை அள்ளலாம் என்றும் தகவல். இவர்கள் வாக்குகளைப் பிரித்து, அதன் மூலமாக தி.மு.க. ஜெயித்துவிடுமோ என்று நினைத்துதான் இந்தச் சுற்றுப்பயணத்தை முடுக்கி விட்டுள்ளார்!''
''ஓஹோ!''
''அண்ணா அறிவாலய விவகாரம் தொடர்பாக தி.மு.க-வையும் கருணாநிதியையும் இந்த சுற்றுப்பயணத்தில் கடுமையாகச் சாடினார் முதல்வர். 'அண்ணா அறிவாலயம் தொடர்பாக நான் திருச்சியில் பேசியதற்கு கருணாநிதி சவால் விட்டிருக்கிறார். அதில், 'அந்த இடமே வெறும் 25 கிரவுண்ட் மட்டும்தான்’ என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், அந்த இடம் நான்கரை ஏக்கர். அதாவது, 90 கிரவுண்ட். அதை அவர் மறைத்து விட்டார். அது வெறும் 25 கிரவுண்ட் மட்டும்தான் என்றால் மீதி இருக்கும் இடத்தை அரசுக்குக் கொடுப்பாரா, கருணாநிதி?’ என எதிர்சவால் விட்டதைக் கூட்டம் வெகுவாக ரசித்தது''
''மதுரையிலும் இதே பேச்சுதானா?''
''மதுரைக்குத்தான் பிரத்யேகமாக இருக்கிறதே அழகிரி அட்டாக்! இந்த தேர்தலில் அழகிரி ஏனோ பயங்கர சைலன்ட். மதுரையிலேயே இருந்தார். திங்கட்கிழமை டெல்லி போனார். வியாழக்கிழமை மீண்டும் திரும்பினார். பிரசாரம் போகவில்லை. வீட்டிலேயே அமைதியாக இருக்கிறார்!'' - சிரித்தபடி பறந்தார் கழுகார்!
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.சிதம்பரம்
 
''காதலும் இல்லை... கத்தரிக்காயும் இல்லை!''
உள்ளாட்சித் தேர்தல் பரபரப்புகளில் அத்தனை அமைச்சர்களும் பிஸியாக இருக்க, 'உள்ளாட்சி’ (அதாங்க வீட்டு விவகாரம்) சிக்கலில் இருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அவர், கணவனை இழந்த பெண் ஒருவரைக் காதலித்து ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகவும், இது தெரிந்து அதிர்ந்துபோன அமைச்சரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  எக்கச்சக்க பரபரப்பு. இதுகுறித்து செந்தில் பாலாஜியிடம் கேட்ட போது, ''நான் தேர்தல் பிரசாரத்தில் இருக்கேன். என் மனைவி வீட்டில் இருக்கிறார். அமைச்சர் அந்தஸ்து கொடுத்து அம்மா என்னை மக்கள் பணிக்காக அனுப்பி இருக்கையில், காதல், கத்தரிக்காய் என்று நான் அலைவேனா? எனக்கு எதிரானவங்க கற்பனையில் கிளப்பிவிடுற கதைகள் சார் இது. எனக்கே இது சம்பந்தமா பல எஸ்.எம்.எஸ்-கள் வந்துடுச்சு!'' என்றார் பரிதாபமாக!
*********************************************************************************
கழுகார் பதில்கள்

மகேஸ்வரன், சென்னை-12.
கூடங்குளம் விஷயத்தில் தமிழக கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன?

டான ஜனசக்தியில், 'கூடங்குளம் அணு மின் உலை தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்தது. புகுஷிமாவைவிட கூடங்குளம் பாதுகாப்பானதே’ என்று ஜி.ஆர்.சீனிவாசன் கட்டுரையை ஒரு பக்கம் வெளியிடு​கிறார்கள்.  'கூடங்குளத்தில் மக்களின் அச்சத்தைப் போக்காத வரை, அணு உலைகளை இயக்கக் கூடாது. புதிய கட்டுமானங்கள் எதையும் தொடங்கக் கூடாது’ என்று இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சொல்கிறார். பிரதமரைச் சந்தித்து மனு கொடுக்கிறார் தேசியச் செயலாளர் டி.ராஜா. ஆனால், அவர்​களின் அதிகாரப்பூர்வ நாளே
கூடங்குளம் அணு உலையை  அமைப்பது ரஷ்யா என்பதால்தான், காம்ரேட்​களுக்குத் தயக்கமும் மயக் கமும். அமெரிக்காவாக இருந்திருந்தால் வரிந்து கட்டிக்​கொண்டு எதிர்த்து இருப்பார்கள்.
 காந்திலெனின், திருச்சி.
மீண்டும் மின்தடை வந்து விட்டதே?
  இதற்கு முதல்வரிடம் சரியான விடை இல்லை. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரைக்கும் காத்திருக்கச் சொல்லிவிட்டார். எதிர்காலத் திட்டமிடுதல்கள் இல்லாத அரசியல் தலைவர்களின் ஆளுகையின் கீழ் வாழும் மக்கள், இத்தகைய அவஸ்தை களை அனுபவித்தே ஆக வேண்டும்!
  சின்ன முனுசாமி, தஞ்சாவூர்.
கழுகார் சமீபத்தில் ரசித்தது?
பத்திரிகையாளர் சோ, ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். 'ஸ்ரீஸ்ரீஸ்ரீ துக்ளக் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய மனமோகன துஷ்டகவசம்’ என்று அதற்கு பெயரும் சூட்டி இருக்கிறார். திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் அந்தப் பாட்டின் சில வரிகள் மட்டும் தருகிறேன்...
ஊழல் செய்வோர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்; 
பர்ஸில் பதிப்போர்க்குச் செல்வம் நிலைத்து 
கதித்து ஓங்கும் - பதவியும் கைகூடும்; டெல்லி 
அருள் மனமோகன கவசந்தனை.
 அடியேன் ஊழலை, டர்பன் காக்க 
கண்ணாடி இரண்டும் கறுப்புப் பணம் காக்க 
பேசும் பொய்தனை, ப்ராண்ட் நேம் காக்க 
தகவல் சட்டம் தாக்காமல் தாடியும் காக்க 
ஸ்விஸ் பேங்க் கணக்கை மீசை காக்க 
பொருள் அனைத்தும் பொருளாதார மேதை காக்க 
பினாமி சொத்தை பிரதமர் காக்க,
 காக்க காக்க கண் மூடி சாமி காக்க 
நோக்க நோக்க நோ ஃபைல் நோக்க 
தாக்க தாக்கத் தாடிக்காரர் தாக்க 
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட......
 விநாயகம், தூத்துக்குடி.
உள்ளாட்சித் தேர்தலுக்காக சுற்றுப் பயணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த ஜெயலலிதா, திடீரென எல்லா ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டாரே?
உள்ளாட்சித் தேர்தல் ஏற்படுத்திய உள்காய்ச்சல்தான் காரணம்!
திருச்சி இடைத் தேர்தலுக்கே முதலில் 6 பேர் குழு... அதன் பிறகு 12 பேர்... அடுத்து 16 பேர்கொண்ட குழு அமைத்தார். அது மாதிரித்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளிலும் அவருக்குப் பரவலான சந்தேகம் இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்தி வெளியில் அனுப்பியது, சொந்தக் கட்சி வேட்பாளர் தேர்வில் நடந்த குளறுபடிகள், ஏராளமான இடங்களில் இரட்டை இலையை எதிர்த்து அ.தி.மு.க-வினரே போட்டி இடுவது போன்று எத்தனையோ மைனஸ்கள். எனவேதான் இந்த திடீர் சுற்றுப் பயணம்!
 தமிழேசன், திருப்பூர்.
இலங்கை செல்லும் முன் இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தாரே... இருவரும் என்ன பேசினார்கள்?
தமிழக மீனவர்களை, சிங்களக் கடற்படை தொடர்ந்து தாக்குவதை சொல்லித்தான் முதல்வர் வருத்தப்பட்டார். அவர் ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 16 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. 'தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குவதை இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக நினைக்க வேண்டும். இதைத் தமிழகப் பிரச்னையாகப் பார்க்காமல் தேசியப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும்’ என்றும் முதல்வர் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டுவிட்டு ரஞ்சன் மத்தாய், இலங்கை சென்றார். அன்றைய தினமே, மண்டபம் பகுதி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது சிங்கள கடற்படை. மகிந்த ராஜபக்ஷேவிடம் மத்தாய் என்ன சொன்னார் என்று தெரியவில்லை!
 திருவேங்கடம், திண்டிவனம்.
'தி.மு.க. எங்களை வஞ்சித்துவிட்டது’ என்கிறாரே திருமாவளவன்?
அதையே எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டு இருப்பார் திருமா? இனியாவது கருணாநிதியைத் திருப்திப்படுத்த கட்சி நடத்தாமல், சிறுத்தைத் தொண் டனுக்காக அவர் கட்சி நடத்தட்டும்!
 சுரேஷ்குமார், ஈரோடு.
'காங்கிரஸார் நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்றார்கள். ஆனால், தி.மு.க-வினர் நில அபகரிப்பு ஊழல்களுக்காகச் சிறை சென்றுள்ளனர்’ என்று குற்றம் சாட்டுகிறாரே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?
ஆதர்ஷ் ஊழலில் பதவி விலகிய மகாராஷ்டிரா முதல்வர் எந்தக் கட்சி? காமன் வெல்த் ஊழலில் கைது செய்யப்பட்ட கல்மாடி எந்தக் கட்சி? இவை எல்லாம் நாட்டுக்காக நடந்தவையா? சொந்த வீட்டுக்காக நடந்தவையா என்று இளங்கோவன்தான் விளக்க வேண்டும்!
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தபோது ஆ.ராசா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். ஆனால் யாருடைய அமைச்சரவையில் நடந்தது இந்த ஊழல்? காங்கிரஸ் ஆளும்போதுதானே?
 மு.கல்யாண்சுந்தரம், மேட்டுப்பாளையம்.
க.அன்பழகன், ஓ.பன்னீர் செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன்... இந்த 'நம்பர் டூ’-க்களில் முதல் இடம் யாருக்கு?
  இந்த மூவருமே 'நம்பர் டூ’ அல்ல என்பதுதான் முழு உண்மை!
கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், ஜெயலலிதாவை அடுத்து சசிகலா, விஜயகாந்த்தை அடுத்து பிரேமலதா... ஆகியோர்தான் அந்த ஸ்தானத்தில் இருக்கிறார்கள். நீங்கள் சொல்பவர்களே, தாங்கள்தான் 'நம்பர் டூ’ என்பதை நம்ப மாட்டார்கள்!
 முருகேஷ், திருச்சி.
கே.என்.நேருவை நினைத்தால்?
நேரு மீதான வழக்குகளின் உண்மைத் தன்மைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அவரை வெளியே விடக் கூடாது என்பதில் அரசாங்கமும் போலீஸும் செய்த காரியங்கள் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகள்தான்!
 ரேவதிப்ரியன், ஈரோடு.
விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது என்கிறாரே நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி?
பிரணாப் கவலைப்படுவதால் மட்டும், பருப்பு விலை குறைந்துவிடாது!
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
ஆப்பிள்’ ஸ்டீவ் ஜாப்ஸ்... மரணத்தைத் தெரிந்தே வாழ்ந்தது அபூர்வம்தானே?
  அவரது ஆப்பிள் இல்லாமல் இனி எவரும் வாழ முடியாது என்பது அதைவிட அபூர்வம்தானே!
*********************************************************************************
45 நாள் நீயும் ஜெயில்ல இரு... அப்பத் தெரியும்!

நிருபரை கலாய்த்த கே.என்.நேரு

க்டோபர் 10-ம் தேதி நள்ளிரவில் ஜாமீனில் வந்த நேரு, அடுத்த நாள் முழுவதும் தொகுதியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தொண் டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க... அவரோ, தொகுதிப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை! 
ஜாமீனில் விடுவிக்கப்பட்டதும், நேராக சென்னைக்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்த நேரு, பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் வந்து கையெ ழுத்துப் போட்டுவிட்டு, தனது சொந்த ஊரான கானக்கிளியநல்லூருக்குச் சென்றுவிட்டார். பிரசாரம் செய்ய ஒரே ஒரு நாள் வாய்ப்பு கிடைத்தும் அதை நேரு பயன்படுத்திக்கொள்ளாதது ஏன் என்று தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம்.
''நேரு பிரசாரக் களத்துக்கு வரும்பட்சத்தில், 'கட்சி அலுவலகத்தில் பணம் வைத்திருந்தார்... வாக் காளர்களுக்குப் பணம் விநியோகித்தார்’ என்று ஏதாவது பொய் வழக்குகளைப் போட காவல் துறைதிட்டம் தீட்டி இருந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறைக்கு நாமே வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கக் கூடாது என்பதால்தான், அவர் பிரசாரம் செய்யவில்லை.
அடுத்து, தொகுதிக்குள் நேரு வந்தால், இது நாள் வரையில் அமைதியாகத் தேர்தல் பணியாற்றிய அவரது தீவிர அபிமானிகள், அவரைப் பார்க்க வேண்டும், தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக கூடுதல் உற்சாகத்துடன் திரள்வார்கள். இதையும் ஆளும் கட்சி தனக்கு சாதக மாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதே!
மூன்றாவதுதான் மிக முக்கியமானது. இந்த இடைத்தேர்தலில் நேரு ஜெயித்தால், களத்துக்கே வராமல் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும். தி.மு.க. வரலாற்றில் இது மிகவும் முக்கியம் இல்லையா! கடைசி ஒரு நாள் பிரசாரம் செய்வதன் மூலம் அந்தப் பெருமையை நாமே ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்?'' என்று காரணங்களை அடுக்கினார்கள்
தேர்தல் நாளன்று காலை தினசரிகளிலும், அதற்கு முந்தைய தினம் மாலை தினசரிகளிலும் தனக்கு வாக்குகள் கேட்டு நேரு கொடுத்திருந்த விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
'நான் சிறையில் இருந்த காரணத்தால், உடல்நிலை சரியில்லாத நிலையில், உங்களை நேரில் சந்திக்க இயலவில்லை. தேர்தலுக்குப் பின் நிச்சயம் உங்க ளுக்கு நன்றி தெரிவிக்க வீடு வீடாக வருவேன்’ என்று சொல்லியிருக்கும் நேரு, 'இடைத்தேர்தல் களத்தில் இருக்கும் என் மீது அவதூறான பொய் பிரசாரத்தை பத்திரிகைகள் வாயிலாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் பரப்புகிறார்கள். நான் கோடிக் கோடியாகப் பணம் மற்றும் ஏகப்பட்ட நிலங்கள் வைத்திருப்பதாகவும் பிரசாரம் செய்கிறார்கள். நான் 12 ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றி இருக்கிறேன். அமைச் சராக இல்லாத நேரத்திலும், எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் யாருடைய சொத்தையும் அபகரித்ததும் இல்லை; யாருடைய பணத்துக்கும் ஆசைப்பட்டதும் இல்லை. என் மீது பரப்பப்படும் பொய் பிரசாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டுசென்று அது உண்மையாக இருக்குமானால், நீதிமன்றம் வழங்கு கின்ற தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்!'' என்றும் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் 13-ம் தேதி காலை 8.30 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்ய வந்தார் நேரு. அவரிடம் ''என்னண்ணே? உங்க முகத்துல பழைய சிரிப்பைக் காணோம்?'' என்று நிருபர் ஒருவர் கேட்க... ''45 நாள் நீயும் ஜெயில்ல இருந்து பாரு. முகத்துல சிரிப்பு இருக்குமா... இல்லையான்னு தெரியும்!'' என்று ஜாலி யாக கமென்ட் அடித்தார். ஜாமீனில் வந்திருந்த மாநகர் மாவட்டச் செயலாளர் அன்பழகன் மெலிந்து இருந்ததைப் பார்த்துவிட்டு, ''என்னய்யா.. வயித்தை சேலம் ஜெயில்லேயே விட்டுட்டு, உடம்பை மட்டும் தூக்கிட்டு திருச்சிக்கு வந்துட்டியா?'' என்று அடுத்த கமென்ட் பாஸ் செய்தார் நேரு.  சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வெடித்து சிரிக்க... அந்த இடமே கலகலப்பானது.
நேருவிடம் பேசினோம். ''மொத்தம் 45 நாட்கள் ஜெயிலில் இருந்தேன். ஒரு வழக்கில் போராடி ஜாமீன் வாங்கிட்டு வந்தா... இன்னொரு வழக்குப்போட்டு வெளியில் வர முடியாமப் பண்ணிடுவாங்க. என் எதிரிக்குக்கூட இப்படி ஒரு நிலை வரக் கூடாது!'' என்று வருத்தம் காட்டியவர், ''என் மேல் போட்ட அஞ்சு வழக்குகளில், கலைஞர் அறிவாலய வழக்குப் போட்ட சீனிவாசனைத் தவிர, மத்த வழக்குகள் போட்டவங்க யாருன்னே எனக்குத் தெரியாது. அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சீனிவாசன்கிட்ட இருந்தும் நிலத்தை முறைப்படித்தான் வாங்கி னோம். அவரை மிரட்டி நிலத்தை அபகரிச்சு இருந்தா... அறிவாலய அடிக்கல் நாட்டு விழா வுக்கும், திறப்பு விழாவுக்கும் சீனிவாசன் வந்து இருப்பாரா?  அவரோட மகன் கல்யாணத்தைக் கூட இதே அறிவாலயத்தில்தான் நடத்தினார். நடந்த சம்பவங்களை எல்லாம் உயிலா எழுதிவைச்சிருந்ததா சொல்ற சீனிவாசன், அப்பவே நீதிமன்றத்தை நாடி இருக்கலாமே? ஏன் செய்யலை? ஏன்னா... எல்லாமே அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஜோடிக்கப்பட்ட விஷயங் கள்தான்...'' என்று கடுகாய் வெடித்தார்.
அனுதாபம் வெற்றி தருமா என்பதையும் பார்த்துவிடலாம்!    
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************
உள்ளாட்சித் தேர்தல்... ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே!


ஜூ.வி. நிருபர் படையில் இருந்து 80 பேர் தமிழகம் முழுவதும் களம் இறங்கினார்கள். நகரம், கிராமம், ஆண், பெண் என்று அனைத்துத் தரப்பு களில் இருந்தும் 3,698 பேரை நேரில் சந்தித்தார்கள். இதில் பெண்கள் மட்டும் 1,183 பேர்.மச்சீர்க் கல்விச் சறுக்கல், பரமக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட தலைவலிகளில் ஆளும் அ.தி.மு.க-வும் தேர்தல் தோல்​வியால் துவண்டிருக்கும் தி.மு.க-வும் தங்கள் செல்வாக்கைக் காட்ட முட்டி மோதுகின்றன இந்த உள்ளாட்சித் தேர்தலில். கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. போட்டியிடுகிறது. ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தனித்து நிற்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் மனசை நம் ஜூ.வி. நாடி பிடித்துப் பார்க்காவிட்டால் எப்படி? 
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பல ஆச்சர்ய முடிவுகளை அளித்தது. எதிர்க் கட்சி அந்தஸ்​​தைக்கூட கொடுக்காமல் தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்பினார்கள் வாக்காளர்கள். அதன் பிறகு பதவியேற்ற ஜெயலலிதா ஆட்சி எப்படி இருக்கிறது? எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் செயல்பாடு எப்படி? உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? கேள்விகளுடன் சர்வே தாள்களை நீட்டியபோது உற்சாகத்தோடு பூர்த்தி செய்து கொடுத்​தார்கள்.
உள்ளூர் வேட்பாளர்களின் செல்வாக்குதான் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்பது வரலாறு. அதையேதான் சர்வே முடிவும் காட்டுகிறது. சட்ட​சபைத் தேர்தல் தோல்வியைவிட உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வின் நிலை மாறும் என்று அதிகம் பேர் சொல்லி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்குப் பிரச்னை இருக்காது என்பார்கள். ஆனால், பரமக்குடி துப்பாக்கிச் சூடு மக்களின் மனதில் பாதிப்பை உண்டாக்கியதால், 'சட்டம் - ஒழுங்கு சுமாராகத்​தான் இருக்கிறது’ என்று அதிகம் பேர் சொல்லி இருக்கிறார்கள். தி.மு.க-வினர் மீதான நில அபகரிப்பு நடவடிக்கை நியாயமானதுதான் என்று மிக அதிகமான மக்கள் நம்புகிறார்கள்.  கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடும்போது ஜெயலலிதா மீதான நம்பிக்கையில் சிறு சரிவு தெரிகிறது. இந்தப் பக்கம் தி.மு.க-வின் மீதும் பெரிய நம்பிக்கை ஏற்படவில்லை. மொத்தத்தில் 'மக்கள் மனசு’ என்ன என்பதை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறோம்!
*********************************************************************************
பிரசாந்த் பூஷண் தாக்குதல் பின்னணி!

பேஸ்புக்கில் மெசேஜ்... அதுக்குப் பிறகு அட்டாக்...

ழலுக்கு எதிரான போராளியும், 2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்கு வித்திட்டவருமான பிரபல வழக்​கறிஞர் பிரசாந்த் பூஷண், இப்போது செய்திகளில் 'அடி’ படுகிறார்! 
டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே உள்ள வழக்கறிஞர்கள் சேம்பரில் இருக்கிறது, பூஷணின் அலுவலகம். கடந்த 12-ம் தேதி அவர் 'டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக்கொண்டு இருந்த நேரத்தில் மூன்று வாலிபர்கள் அவரைப் பார்க்க வந்தனர். அவர்கள் பூஷணிடம் ஏற்கெனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கியவர்கள் என்பதால் அவர்களை காத்திருக்கச் சொன்னார் பூஷண். அந்த இளைஞர்களில் ஒருவர் மட்டும் பேட்டி நடந்துகொண்டிருந்த அறைக்குள் திடீரென நுழைந்த மாத்திரத்தில், பூஷணைத் தாக்கத் தொடங்கினார். முதலில் கன்னத்தில் பளார், பளார் என்று  அறைந்தவர்  நாற்காலியில் இருந்து கீழே இழுத்துப் போட்டும் சரமாரியாகத் தாக்கினார்.
வெளியே இருந்த பிரசாந்த் பூஷணின் ஜூனியர் பிரணவ் சச்சிதேவா, பதறி அடித்து ஓடி வந்தார். அந்த இளைஞனைத் தடுக்க முனைந்தார். அவராலும் சமாளிக்க முடியாதபடி தாக்குதல் நடந்தது. பின்னர், பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து தாக்கிய இளை​ஞரைச் சுற்றி வளைத்து நையப்புடைக்கவே, அவருடன் வந்த இருவரும் சில துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு தப்பி விட்டனர்.
பிடிபட்டவர், தன்னுடைய பெயர் இந்தர் வர்மா என்றும் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த டெல்லி பிரிவின் தலைவர் என்றும் கூறினார். ஆனால் துண்டுப் பிரசுரங்களில் 'பகத்சிங் புரட்சிப் படை’ என்று இருந்தது. தன்னுடன் வந்த தேஜிந்தர் பால் சிங் பேகா மற்றும் விஷ்ணு குப்தா போன்றவர்களைப் பற்றி வர்மாவே தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களுக்கு முன்பே தேஜிந்தர் பால், தன்னுடைய ஃபேஸ் புக்கில், 'நாங்கள்தான் பூஷணைத் தாக்கினோம். இந்தியாவை உடைக்க (பிரிக்க) நினைத்தால் உன்னுடைய (பூஷண்) மண்டையை உடைப்போம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விவகாரத்தின் பின்னணி படிப்படியாகத் தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு வாரணாசி சென்ற பூஷண், ''காஷ்மீரில் ஓட்டெடுப்பு நடத்தி அந்த மாநில மக்களின் விருப்பத்தை அறியவேண்டும்.  மக்கள் விரும்பினால் காஷ்மீரை பாகிஸ்தானுக்குப் பிரித்துக் கொடுக்கலாம்'' என்ற ரீதியில் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இந்த இளைஞர் படை திரண்டு வந்து  தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் இந்த சம்பவத் துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. 'தன்னைத் தாக்கியவர்கள் மீது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து உள்ளார் பூஷண். அடுத்தநாள்  தேஜிந்தர் பால் சிங் பேகா மற்றும் விஷ்ணு குப்தா ஆகிய இருவரும்  நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
பூஷணை தாக்கிய இந்தர் வர்மா முதலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீராம் சேனாவில் இருந்தாகவும் பின்னர் அங்கிருந்து பிரிந்து பகத்சிங் புரட்சிப் படையை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான்,  காஷ்மீரில் மனித உரிமைகளுக்கான குரல் கொடுக்கும் அருந்ததிராய் போன்றவர்​களுக்கு எதிராகவும் முன்பு ஆர்ப்பாட்​டங்களை நடத்தியவர்கள்.  நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் விடுதலையான கிலானியின் மீது செருப்பு வீசியதும் இவர்கள்தானாம்.  சமீபத்தில் சுப்பிரமணியன் சுவாமியை சில முஸ்லிம் அமைப்பினர் தாக்க முயன்றதாகச் செய்தி வெளியானது அல்லவா? அப்போது, தேஜிந்தர் பால் சிங் பேகா தலைமையிலான பகத்சிங் புரட்சிப் படையினர்தான் சுவாமிக்கு ஆதரவாக ஆர்ப்பாட் டங்களை நடத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீராம் சேனாவின் இயக்கத் தலைவர் பிரமோத் முத்தாலிக், ''இந்தர் வர்மாவுக்கும் எங்களுடைய இயக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே சமயத்தில் மனித உரிமைக்கு குரல் கொடுக்கிறேன் என்று இஷ்டத்​துக்குப் பேசுபவர்களை இந்த நாட்டில் கண்டிக்க யாரும் இல்லை. மனித உரிமைகளைப் பேசும் பூஷண் போன்றவர்களிடம் நான் கேட்கும் கேள்வி, 'நாலு லட்சம் இந்துக்கள் காஷ்மீரை விட்டு விரட்டப்பட்டபோது  அவர்களுக்கான மனித உரிமை குறித்து ஏன் பேசவில்லை? ஏற்கெனவே கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இதே மாதிரி மற்றொரு தீவு பங்களாதேஷ§க்கு கொடுக்கப்பட்டது. இப்போது காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க இவர்கள்ஆதரவு தேடுகின்றனர்... இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்...'' என்று சொன்னார்.  
பூஷணைத் தாக்கியவர்களை போலீஸார் கைது செய்து, பட்டாலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது ஸ்ரீராம் சேனா மற்றும் அண்ணா ஹஜாரே ஆதரவாளர்களுக்கும் இவர்களுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு களேபரமானது. காஷ்மீர் விவகாரத்துக்காகத்தான் தாக்கு​தல் நடத்தினார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது. 2ஜி விவகாரத்தில் பிரதமர், ப.சிதம்பரம் ஆகியோருக்கு எதிராகவும் வலுவாக வாதாடி வரும் பிரசாந்த் பூஷணுக்கு எச்சரிக்கை செய்ய இந்தத்  தாக்குதல் நடந்ததா என்றும் சிலர் சந்தேகம் கிளப்பி வருகிறார்கள்!
சரோஜ் கண்பத்
படங்கள்: சிவராமகிருஷ்ணன், முகேஷ்  
*********************************************************************************
மூவர் தூக்கு மத்திய கேபினெட்டில் ஏற்கப்பட்டதா?

அம்பலப்படுத்தும் ஆதாரக் கடிதம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த எட்டு வார இடைக்காலத் தடை சீக்கிரமே முடியப்போகிறது. மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிமுக்கிய விவகாரத்துக்கு விடை கண்டு இருக்கிறார் காங்கிரஸ் புள்ளியான திருச்சி வேலுசாமி. 'இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தது ஏன்? மத்திய அமைச்சர்கள் யார் யார் கலந்து பேசி கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்தார்கள்?’ எனப் பல கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் வேலுசாமி. பலத்த  இழுத்தடிப்புக்குப் பிறகு, இப்போது பதில் வந்துள்ளது. மூவர் தூக்கு விவகார விசாரணை நெருங்கி வரும் நிலையில், உள்துறையின் பதில் குறித்து வேலுசாமியிடம் பேசினோம். 
''ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆரம்பத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான குழப்பங்கள்... இந்தியாவின் மாபெரும் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சில விஷமிகளைத் தப்ப வைப்​பதற்காகவே பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விசாரணை அதிகாரிகள் பலிகடா ஆக்கினார்கள். ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தை விசாரிக்கும் பல்​முனை​நோக்கு விசாரணைக் குழுவிடம் நான் ஆரம்பம்தொட்டே பலவிதமான சந்தேகங்களையும் சொல்லி வருகிறேன். ஆனால், விசாரணை முற்றுப்பெறாத நிலையிலேயே இம்மூவரையும் தூக்கு மேடையை நோக்கித் துரத்தும் விதமாக, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதன் பின்னணியில், யாருடைய கைங்கர்யம் இருந்தது என்பதை வெட்டவெளிச்சமாக்க நினைத்தே என் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 13.8.11 அன்று மத்திய அரசுக்கு அனுப்பினேன். மூன்று பேருடைய தூக்குக்கு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அது சம்பந்தமான கேள்விகளுக்கு விரைந்து பதில் அளித்திருக்கவேண்டிய மத்திய அரசு, திட்டமிட்டுத் தாமதம் செய்தது. அதனால், 'உரிய பதில் வராவிட்டால், நீதிமன்றத்துக்குச் செல்வோம்’ என நாங்கள் நினைவூட்டுக் கடிதம் அனுப்பிய பிறகே கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பதில் வந்துள்ளது. (பதில் வந்த நகலை நம்மிடம் காட்டுகிறார்) அதில், உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகு கருணை காட்டுங்கள் எனச் சொல்வது சரியான அணுகுமுறை அல்ல என்றும், மூவருடைய தூக்கு குறித்து பலவிதமான ஆலோசனைகளை நடத்திய பிறகே, உள்துறை அமைச்சகம் கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இதில், மிக முக்கியமான தகவல், மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம், கருணை மனு நிராகரிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் யாரிடமும் கலந்து பேசவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து பேசித்தான் கருணை மனு நிராகரிப்பு குறித்து குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்ய முடியும். ஆனால், தன்னிச்சையாகவே ப.சிதம்பரம், கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்து இருக்கிறார். மத்திய அமைச்சரவையில் உள்ள வேறு யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இப்படி அவர் செய்ததே தவறு. மூன்று பேர் தூக்கு குறித்த நீதிமன்ற விசாரணைகள் வேகமாகி வரும் நிலையில், உள்துறை செய்த இந்தக் குளறுபடியை மிக முக்கிய ஆவணமாகப் பதிவு செய்யலாம்!'' என்று சொல்கிறார் வேலுசாமி.
''தூக்குத் தண்டனைக் கைதிகள் குறித்த கருணை மனுக்களை மத்திய அமைச்சரவை கூடி விவாதித்து தன்னுடைய கருத்தை குடியரசுத் தலைவருக்குச் சொல்லவேண்டும். அந்த அடிப்படையில் அவர் முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால் அப்படிப்பட்ட ஆலோசனைகள் நடக்கவில்லை என்பது வேலுசாமிக்கு வந்துள்ள கடிதத்தின் மூலம் தெரிந்துவிட்டது. தனிப்பட்ட முறையில் உள்துறை அமைச்சரது ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். எனவே இந்த உத்தரவே செல்லாது!'' என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.  
மூவருக்குமான தூக்கு குறித்த அடுத்த கட்ட விசாரணைகளில்  வேலுசாமிக்கு வந்திருக்கும் கடிதத்தையும் முக்கிய ஆவணமாகக் கையில் எடுத்திருக்கிறார்கள். பார்க்கலாம்..!
இரா.சரவணன்
************************************************************************
பழங்காலப் பேரரசி ஜெயலலிதா!

தடதடக்கும் தமிழருவி மணியன்

வைகோவுக்காக ஊர் ஊராகப் போய் தனது காந்திய மக்கள் இயக்கம் சார்பாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் தமிழருவி மணியன். கடந்த 10-ம் தேதி இரவு திருப்பூர், அரிசிக் கடை வீதியில் ம.தி.மு.க. மேயர் வேட்பாளர் நாகராஜனை ஆதரித்துப் பிரசாரக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தமிழருவி மணியன் பொளந்து கட்டிவிட்டார். 
''நண்பர்களே... திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எனக்கொன்றும் பகைமை கிடையாது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எனக்கொன்றும் காதலும் கிடையாது. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என நான் விரும்பினேன். சமூக நலன் சார்ந்து சரி என்றால், இயம்புவது என் தொழில். தவறு என்றால், எதிர்ப்பது என் வேலை. எனக்காக இந்த மேடையில் வந்து நான் நிற்கவில்லை. உங்களுக்காக... மக்களுக்காக வந்து நிற்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த ஐந்து வருடங்களில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் கபளீகரம் செய்தது. இன்றைக்கு நில அபகரிப்பு வழக்குகளை முன்னாள் அமைச்சர்கள் மீது ஜெயலலிதா தொடுக்கும்​போது, எந்த அதிர்வலைகளும் இல்லை. ஆட்சி நடத்தியதில் செலுத்திய கவனத்தைவிட அடுத்தவன் சொத்தை அபகரிப்பதில்தான் தி.மு.க. அதிகக் கவனம் செலுத்தி இருக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கலைஞருக்கு மாற்று ஜெயலலிதா என்பது தவிர்க்க முடியாத உண்மை. தீமைதான்... ஆனாலும் தவிர்க்க முடியாத தீமை!
நன்மையும் தீமையும் கலந்ததுதான் அரசியல். குறைந்த தீமை எது... அதிகப்பட்சத் தீமை எது என்பதைக் கண்டறிந்து குறைந்த தீமையைக் கட்டித் தழுவி.... அதிகம் பரவி இருக்கும் தீமையை அழித்தொழிக்க வேண்டும். அதைத்தான் கடந்த தேர்தலில் நாம் செய்தோம்.
கொள்கை பரப்புச் செயலாளரைப் போல அ.தி.மு.க-வுக்​காக ஐந்து ஆண்டு காலம் இயங்கிய மனிதன் வைகோ. நான் வைகோவிடமே ஒரு முறை சொன்னேன். 'எம்.ஜி.ஆரைத் தி.மு.க-வில் இருந்து கருணாநிதி தூக்கி எறிந்தார். அந்தக் காலத்தில் இருந்து சாகும் வரை கருணாநிதியைக் கடுமையாக எதிர்த்தே வந்தார். உங்களையும் அதே போலத்தான் கருணாநிதி தூக்கி எறிந்தார். ஆனால், நீங்கள் எம்.ஜி.ஆரைப் போல கருணாநிதியை எதிர்க்கவில்லை. நீங்கள் அன்பு சார்ந்த மனிதர். அதுதான் உங்களது பிரச்னை’ என்று சொன்னேன்.  தவறுகளில் இருந்து பாடங்களைப் பெறுபவன்தான் மனிதன். வைகோவுக்கு இப்போது காலம் வழங்கிய வரம் என்ன தெரியுமா? அவருக்குப் பக்கத்தில் இருந்த அத்தனை சந்தர்ப்பவாதிகளும் காலத்தால் கழட்டி வீசப்பட்டுவிட்டார்கள். இன்று வைகோவின் தலைமையைக் கேள்வி கேட்க எவரும் இல்லை.
தேர்தலுக்கு முன்பு வரை ஜெயலலிதா எல்லோரையும் தேடி வருவார். தேர்தல் முடிந்த பிறகு ஜெயலலிதாவை நீங்கள் தேடிப் போக வேண்டும். போனாலும் பார்க்க முடியாது. ஜெயலலிதா என்பவர் யார்? அவர் பழங்காலத்துப் பேரரசியின் மறு வடிவம். ஒரு பேரரசிக்கு உரிய சர்வலட்சணத்தோடுதான் அவர் அரசியல் நடத்துவார். அதற்கு உட்பட்டுத்தான் நீங்கள் அவரோடு இருக்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி. கருணாநிதிக்கு கணுக்காலில் இருந்து தலை வரை மூளை. அவ்வளவு மூளையும் தன்னைப்பற்றியே சிந்திக்குமே தவிர, இந்த மண்ணைப்பற்றி சிந்திக்காது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டையும் மறுதலித்து​விட்டு நீங்கள் வாக்களிக்கப் புறப்பட வேண்டும். அதே நேரத்தில் திருச்சி இடைத் தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும். என்னடா மணியன் முரண்பாடாகப் பேசுறானே என்று நினைக்காதீங்க.
தி.மு.க. கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. அதற்கு நீங்கள் மீண்டும் ஆக்சிஜன் கொடுத்து​விட்டால், அது விஸ்வரூபம் எடுத்துவிடும். கலைஞர் எழுந்தால் அவரை வீழ்த்துவது சிரமம். ஜெயலலிதாவை வீழ்த்த யாரும் புறப்படத் தேவை இல்லை. அவரே வீழ்ந்துவிடுவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைசி அத்தியாயத்தை எழுதுவது​தான் பெரியார் வளர்த்தெடுத்த திராவிட இயக்கத்துக்கு நல்லது. அப்போதுதான் திராவிட இயக்கத்தின் எச்சமான வைகோ விஸ்வரூபம் எடுப்பார். இந்த இனத்தின் எதிரிகள் இரண்டு பேர். ஒன்று கருணாநிதி. இன்னொன்று கதர்ச் சட்டை அணிந்த காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொருவரும்.
நான் சாகும் வரை எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். அதே நேரத்தில் அரசியலில் சக்தி மிக்க... ஆளுமை மிக்க ஒரு கட்சி உருவாக வேண்டும் என்று நான் விரும்புகிற நேரத்தில், என் கண் முன் தெரிகிற மனிதர் வைகோ.
கூலிக்காகப் பேசும் பேச்சாளர் இல்லை நான். ஆனால், திருப்பூர் ம.தி.மு.க. வேட்பாளர் நாகராஜனுக்காக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். எதற்காக? நாகராஜன் நல்ல மனிதர். அதோடு அகத்திலும் புறத்திலும் தூய்மையான வைகோ என்ற மனிதனுக்காக!
அரசியலில் 40 ஆண்டு காலமாகப் பார்த்துப் பார்த்து கருமியின் கவனத்தோடு நான் சேர்த்துவைத்திருக்கும் என் நம்பகத்தன்மையை மூலதனமாக வைத்து மண்டியிட்டு மன்றாடி வேண்டுகிறேன். வைகோ என்ற ஒரு நல்ல மனிதனுக்குப் பின்னால் வந்து சேருங்கள். ம.தி.மு.க. எங்கெல்லாம் போட்டி இடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுக்கு வாக்களித்து அரசியல் மாற்றத்தை உருவாக்குங்கள்!'' என்று இடியாக முழங்கி முடித்தார்!
கே.ராஜாதிருவேங்கடம்
படம்: வி.ராஜேஷ்
*********************************************************************************
ஸீட்டுக்காக... நோட்டுக்காக பாராட்டவில்லை!

சீறுகிறார் சீமான்!

றுபடியும் ஜெயலலிதாவைப் பாராட்டி இருக்கிறார் சீமான்! 'தமிழக மீனவர் களை இந்திய மீனவர்களாகப் பார்க்கச் சொல்லி மத்திய அரசுக்கு பொட்டில் அடித்தாற்போல் புரியவைத்து இருக்கிறார் ஜெயலலிதா’ என்பதுதான் சீமானின் பாராட்டு. குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், 'ஜெயலலிதாவைப் பாராட்டிக்கிட்டே இருக்கார்’, 'வைகோவோடு மோதுகிறார்’, 'வேலூர் சிறையில் உள்ள முருகனை மிரட்டுகிறார்’ என சீமானை மொய்க்கும் சர்ச்சைகளுக்கு மட்டும் அளவே இல்லை. தையல் பிரிக்காத நிலையில் அவரது தடால் பேட்டி... 
''நீங்கள் ஜெ-யைப் பாராட்டினாலே விமர்சனங்கள் காதை மொய்க்கத் தொடங்கிவிடுகிறதே?''
''ஸீட்டுக்காகவோ நோட்டுக்காகவோ நான் பாராட்டவில்லை. இனத்தின் நலனுக்காக தமிழக முதல்வர் மேற்கொள்ளும் நடவடிக்கை களைத்தான் நாங்கள் பாராட்டுகிறோம். தேர்தல் நேரத்திலேயே இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த தீர்மானம் இயற்றக் கோரி னோம். முதல்வராக அமர்ந்த உடனேயே அந்தத் தீர்மானத்தை இயற்றினார் ஜெயலலிதா. மூவர் உயிரைக் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது சாதாரண செயலா? முன்னாள் முதல்வரை தமிழினத் தலைவராகக் கருதி நாம் என்னென்ன நடவடிக்கைகளை எல்லாம் எதிர்பார்த்தோமோ... எதற்கும் அசையாத கருங்கல்லாக கடந்த அரசு இருந்ததோ... அதற்கு எல்லாம் இந்த ஆட்சியில் விடிவு கிடைக்கிறது. அதைப் பாராட்டுவதில் என்ன தவறு? தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு கவனம்கொள்ள வேண்டும் என முழங்கியதன் மூலம், பிராந்தியப் பிரச்னையாகப் பார்க்கப்படும் இந்த விவகாரத்தைத் தேசியப் பிரச்னையாக முன்னெடுத்திருக்கிறார் முதல்வர். இதே கருத்தை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சொல்கிறோம். ஆனால், முதல்வரின் கருத்தாக ஒலிக்கும்போது அந்தக் கருத்து வலிமை பெறுகிறது. நல்லது நிகழ்ந்தால் நன்றி சொல்வதுதானே நம் மரபு!
'விமர்சனம் என்பது வெறும் சொற்கள்தான். அவை நம்மைக் காயப்படுத்தும் கற்கள் அல்ல!’ எனச் சொன்ன தலைவர் பிரபாகரனின் வழிநடக்கும் என்னை எத்தகைய விமர்சனத்தாலும் சிதைக்க முடியாது. 'கலைஞரின் செல்லப்பிள்ளைதான் சீமான்’ எனக் கிளப்பிவிட்ட வாய்களைக்கூட நான் இன்னும் மறக்கவில்லை. இந்த வெற்று விமர்சனங்களுக்கு எல்லாம் நான் இற்று வீழ்வேனா என்ன?''
''பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது, ஆளும் அரசின் ஆதரவாளராக எண்ணி உங்களுக்கு ஏக எதிர்ப்பு கிளம்பியதாமே?''
''பரமக்குடி கொடூரத்துக்குக் காவல் துறைதான் முழுப்பொறுப்பு என முதலிலேயே அறிக்கை வெளியிட்டேன். மருத்துவமனைக்கு சென்று காயம் பட்டவர்களைப் பார்த்தேன். முடிந்த உதவிகளைச் செய்தேன். எச்சரிக்கை அறிவிப்பு, போலி குண்டுகள் மூலமாகச் சுடுதல், தண்ணீர் பீய்ச்சி அடித்தல், முட்டிக்கு கீழ் சுடுதல் எனப் படிப்படியான கலைப்பு நடவடிக்கைகளைச் செய்யாமல், குருவி கணக்காக அப்பாவிகளை காவல் துறை சுட்டு வீழ்த்தி இருக்கிறது. பரமக்குடிக்குச் சென்றபோது, 'நாங்களும் தமிழர்கள்தானே அண்ணே’ எனவும், 'நீங்க சொன்னதாலதானே இலைக்கு ஓட்டுப் போட்டோம்’ எனவும் உரிமையோடு மக்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அவர்களோடு சேர்ந்து அழ மட்டுமே என்னால் முடிந்தது. மூன்று பேரைக் காப்பாற்ற ஒருமித்த தமிழகமே போராடிய நிலையில், 6 தமிழர்களை சர்வசாதாரணமாக சுட்டுக் கொன்றது சகிக்கக்கூடிய ஒன்றா? சுட்டுக் கொல்லப்பட்டவர்களை ஓணான்களைத் தூக்கி வீசுவதுபோல் காவல் துறை வீசியது. சேனல் 4-ல் பார்த்த கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைவு இல்லாததுதானே இதுவும். 'கடலுக்குப் போனால் சிங்களவன் சுடுகிறான். இந்தப் பக்கம் காவல் துறை சுடுகிறது என்றால், நாங்க எங்கேதான் வாழ்வது?’ எனக் கேட்கிற குரலுக்குப் பதில் உண்டா?  ஐந்து மாடுகளைச் சுட்டுப் போட்டிருந்தால்கூட பற்றி எரியக்கூடியப் பிரச்னை, அப்பாவிகளின் மரணத்தில் அப்படியே அடங்கிவிட்டது. அந்த மக்களின் ஆற்றாமை மிகுந்த இந்த வடு என்றைக்கும் ஆறாது!''
''வைகோவுக்கும் உங்களுக்கும் இடையே மனக் கசப்பு என செய்திகள் பரவுகின்றனவே?''
''இந்த சீமான் ஆகாயத்தில் இருந்து குதித்தவன் அல்ல. அய்யா நெடுமாறன், அண்ணன்கள் வைகோ, கொளத்தூர் மணி, சுபவீ, அறிவுமதி, அய்யா வீரமணி, ராமதாசு, திருமாவளவன் என ஆக்கப் பூர்வமானவர்களைத் தொடர்ந்து வந்தவன்தான் நான். திரை உலகுக்கு வந்தபோதே செல்வபாரதி, விடுதலை, ராவணன், கவிதாபாரதி ஆகியோருடன் அண்ணன் வைகோ-வின் கூட்டங்களில் ஓடி ஓடிக் கலந்து கொண்டவன். நான் அவர் மீது கொண்டிருக்கும் அன்பும் மரியாதையும் அவருக்கே தெரியும். அப்படி இருக்க, மனக்கசப்பு நிகழாதா என ஏங்குபவர்களுக்கு எல்லாம் என் இதயக்கூட்டைத் திறந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை!
வதந்திகளைக் கிளப்புபவர்களுக்கு வாய் மட்டும்தான் மூலதனம். அந்த வெறும் வாய்களுக்கு விடை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சிறையில் இருக்கும் முருகனை நான் மிரட்டியதாகக்கூட அவதூறு கிளப்பினார்கள். மரணத்தின் நிழலில் நிற்பவர்களை நான் என்ன சொல்லி மிரட்ட முடியும்? 'கொன்றுவிடுவேன்’ என்றா? அண்ணன் வைகோவும் நானும் அரசியல் நிலைப்பாட்டில் பிரிந்தவர்களே தவிர, நெஞ்சத்து நிலைப்பாட்டில் ஒருமித்து நிற்பவர்கள். இருவரும் ஒருமித்து பயணிக்கக்கூடிய சூழல் இப்போது இல்லை என்பது மட்டும்தான் உண்மை. இன்னும் உடைத்துச் சொல்வதானால்... என் எதிரி யார் என்பதை நான் ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருக்கிறேன். அந்த இடத்துக்கு ஆள் தேடும் வேலையை வேறு எவரும் செய்ய வேண்டாம்!'' - சீற்றம் குறையாமலே விடை கொடுக்கிறார் சீமான்.
இரா.சரவணன், படம்: கே.குணசீலன்
*********************************************************************************
தவறான ஆபரேஷன் செய்தாரா சுகாதார அமைச்சர்?

விஜய் மீது திடுக் புகார்!

சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்-க்கு இது போதாத காலம். அதனால்தான், அவர் மீது புகார்கள் குவிகின்றன. அ.தி.மு.க-வில் உள்ள சீனியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்காமல், கட்சிக்குப் புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளதாக, அமைச்சர் விஜய் மீது ஏற்கெனவே எழுந்த புகார் இன்னும் ஓயவில்லை. அதற்குள், 'அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தவறாக நடத்தப்பட்டது. இதனால் ஒரு ஏழைக் குடும்பம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறது’ என்று ஒரு பூதம் கிளம்பி இருக்கிறது! 
அமைச்சர் மீது புகார் கூறியுள்ள சுரேஷை சந்தித்தோம். ''காட்பாடிக்குப் பக்கத்தில் இருக்கும் தாமரைக்குளத்தில் குடியிருக்கிறோம். என் அப்பா கிருஷ்ண சாமி, தெருக்கூத்துக் கலைஞர். எனக்கு இரண்டு தம்பிகள், மூன்று தங்கைகள். வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து நடத்தி எங்களைக் காப்பாற்றி வந்தார் அப்பா. அவரை நம்பி 20 குடும்பங்கள் இருக்கு. ஒரு கூத்து நடத்தினால்,
 10,000 முதல்  15,000 வரை கிடைக்கும். மாதம் ஐந்து கூத்துகளாவது நடக்கும். இந்த நிலையில்தான், 2005-ம் ஆண்டு அவருக்கு முதுகு தண்டுவடத்தில் கடும் வலி. வேலூரில் அருண் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். (இது, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்க்கு சொந்தமானது) பரிசோதனை செய்த டாக்டர் விஜய், 'உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்.  30,000 கட்டுங்கள்’ என்றார். பணத்தைச் செலுத்தினோம். ஆபரேஷன் முடிந்து ஒரு வாரத்துக்குப் பின்னர், வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனாலும், தண்டுவடத்தில் வலி இன்னும் அதிகமாகிவிட்டது. இடுப்புக்கு கீழ் எந்த பாகமும் செயல்படவில்லை. சிறுநீர் இடைவிடாமல் வந்துகொண்டே இருந்தது. அப்பாவால் நடக்கக்கூட முடியவில்லை. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு டாக்டரைப் பார்த்தோம். 'ஆபரேஷனை மாற்றிச் செய்து​விட்​டார்கள், அதனால்தான் கால் இப்படி ஆகிவிட்டது. மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்தால், காலை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட டாக்டரையே பாருங்க’ என்று சொல்லிவிட்டார். டாக்டர் விஜய்யிடம் மறுபடியும் போய்க் கேட்டோம். அவரோ, 'ஆபரேஷன் செய்ததோட என் வேலை முடிந்துவிட்டது. உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள். எனக்கு பயம் இல்லை’னு பொறுப்பே இல்லாமல் பேசினார். அதுக்குப் பிறகுதான்,  20 லட்சம் நஷ்டஈடு கேட்டு, நுகர்வோர் நீதிமன்றத்தில் 2007-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தோம். டாக்டரின் தவறான ஆபரேஷனால், எங்க குடும்பம் மட்டும் இல்லாம, எங்க அப்பாவை நம்பி இருந்த 20 குடும்பங்களும் நடுத்தெருவுல நிற்கின்றன. நாங்கள் வழக்குப் போடும்போது சாதாரண டாக்டராக இருந்த விஜய், இப்போது சுகாதாரத் துறை அமைச்சராகிவிட்டார். எங்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. தவறான சிகிச்சை செய்த ஒரு டாக்டர், சுகாதாரத் துறைக்கு அமைச்சராக இருந்தால், எங்களைப்போல் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படும்? இந்தப் பிரச்னை குறித்து, முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளோம். நியாயமான நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கிறோம்!'' என்றார் தழுதழுத்த குரலில்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விஜய்யிடம் பேசினோம். ''அந்த பேஷன்ட் 2005-ல் என் மருத்துவமனைக்கு வந்தது உண்மைதான். அவருக்கு ஆபரேஷன் செய்ததும் உண்மைதான். ஆனால், அந்த ஆபரேஷனை நான் செய்யவில்லை; எங்க மருத்துவமனையில் வேலை செய்யும் டாக்டர்கள்தான் செய்தார்கள். அதை நான் கண்காணித்தேன். நாங்கள் செய்த ஆபரேஷனால் அவருக்கு கால்கள் செயலிழக்க வாய்ப்பு இல்லை. அதற்கான சர்ட்டிஃபிகேட் எல்லாம் என்னிடம் இருக்கிறது. அதை மீறி இவர் புகார் சொல்வதற்குக் காரணம், முன்னாள் அமைச்சர் துரைமுருகன்தான். மேடையில் அவரை நான் திட்டுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தவறான ஆட்களை இப்படித் தூண்டிவிடுகிறார். நான் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பேன்!'' என்று பதற்றத்துடன் பேசினார்.
யார் சொல்வது உண்மை என்று விசாரணையில் தெரிந்துவிடும்!
கே.ஏ.சசிகுமார்
படங்கள் : ச.வெங்கடேசன்
*********************************************************************************
''நான் அப்படிப் பேசவில்லை!''


புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் நமக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ''எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் திரு. கன்சிராம் அவர்களது நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினேன். பரமக்குடிக் கலவரத்தில் என்னைத் தொடர்புப்படுத்தி 'உண்மை அறியும் குழு’வினர் என்ற பெயரில் வெளியிட்ட செய்திக்கு அப்போது மறுப்புத் தெரிவித்துப் பேசினேன். 'சம்பவம் நடந்த நாளில் நான் சிங்கப்பூரில் இருந்தேன். பரமக்குடிப் பாதுகாப்புக்கு சென்னை மாநகரக் காவல் துறை அதிகாரியை யார் அனுப்பியது? ஏன் அனுப்பப்பட்டார்?’ என்றுதான் கேள்வி கேட்டேன். 'நான் சொல்வதைத்தான் அரசு கேட்க வேண்டும்’ என்று பேசவில்லை!'' என்று அந்தக் கடிதத்தில் நடராசன் குறிப்பிட்டுள்ளார்.
*********************************************************************************
குற்றவாளியை விடுவித்தாரா ஆளும் கட்சி எம்.எல்.ஏ.?

முகப்பேர் கலாட்டா!

நில அபகரிப்பு புகாரில் இது ரத்தத்தின் ரத்தங்கள் சம்பந்தப்பட்டது! 
சென்னை முகப்பேரில் வசிக்கும் தியாகராஜன் என்பவர் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவரை சந்தித்தோம்.
''1981-ல் என் அம்மா லட்சுமிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குலுக்கல் முறை ஒதுக்கீட்டின் கீழ் சென்னை முகப்பேரில் காலி மனை ஒதுக்கீடு செய்யப்​பட்டது. அதில் வீடு கட்டி 14 ஆண்டுகளாக குடியிருந்தோம். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அம்மாவைப் பார்த்துக்கொள்ள சரஸ்​வதி என்பவரை வேலைக்காரியாக நியமித்தோம். 2005-ல் அம்மா இறந்து​போனாலும், தொடர்ந்து சரஸ்வதி வேலை செய்துவந்தார்.
கடந்த ஆண்டு எனது வீட்டுக்கு அருகில் குடியிருந்த ஆட்டோ டிரைவர் அருள் எனக்கு போன் செய்து, 'உங்களோட நாகப்பட்டினம், முகப்​பேர் வீட்டுப் பத்தி​ரங்கள் எங்கிட்டத்தான் இருக்கு. நாங்க கொடுக்கிற காசை வாங்கிட்டு, கையெழுத்துப் போடு’ன்னு மிரட்டினார்.  முகப்பேர் 89-வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் 'ரவுண்ட் பில்டிங்’ குமார், சரஸ்வதி, அருள், கண்ணன் போன்றோர் கூட்டுச் சதி செய்து எனது சொத்து ஆவணங்களைத் திருடிவிட்டார்கள். உடனே ஜெ.ஜெ. நகர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்தபோது, எந்த நடவடிக்கையும் இல்லை.  அடுத்​தடுத்து இன்ஸ்பெக்டர்கள் மாறியும் இதே நிலைதான். கடைசியில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். கடந்த 11-ம் தேதி ரவுண்ட் பில்டிங் குமார், சரஸ்வதி உள்ளிட்ட அனை​வரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அடுத்த சில மணி நேரத்தில் அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வான வேதாச்சலம் அங்கு வந்து, 'ரவுண்ட் பில்டிங்’ குமாரை அழைத்துச் சென்றுவிட்டார். 'குமார் தலைமறைவாகிவிட்டார். மற்றவர்களைக் கைது செய்துவிட்​டோம்’ என்று போலீஸார் சொல்​கிறார்கள். நில அபகரிப்பு புகாரில் தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா, சொந்தக் கட்சிக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என கண்ணீர் வடித்தார்.
'ரவுண்ட் பில்டிங்’ குமாரை பல முறை தொடர்புகொள்ள முயன்றும், முடியவில்லை.  ஜெ.ஜெ. நகர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சிங்கராஜிடம் கேட்டோம். ''நான் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறேன். விரைவில் பத்திரங்களை கைப்பற்றி அனைவரையும் கைது செய்வோம்...'' என்றார்.
எம்.எல்.ஏ. வேதாச்சலமோ, ''எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் மீது தி.மு.க-வினர் தேர்தல் தொடர்பான புகார் கொடுத்திருந்தனர். அதற்காகத்தான் ஸ்டேஷனுக்குச் சென்று வாக்குவாதம் செய்தேன். மற்றபடி நிலம், வீடு கொள்ளை அடித்தவர்களுக்கு நான் எப்போதுமே துணை போகமாட்டேன்!'' என்று படபடப்போடு சொன்னார்.
தி.கோபிவிஜய், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
*********************************************************************************
கயிறே, என் கதை கேள்!

பொட்டு அம்மான் பேசினாரா? 

மேஜர் சபர்வால் என்பவர் இந்திய ராணுவத்தின் ஓர் உயர் அதிகாரி. வெடிகுண்டு, வெடி மருந்துத் துறையில் முக்கிய வல்லுனரும்கூட. இவர் தனது அறிக்கையில், 'ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கிவந்தன’ என்றும், 'ராஜீவ்காந்தியைப் புலிகள்தான் கொன்றனர் என முடிவு செய்துகொள்ள இதுவும் ஒரு காரணம்’ எனவும் குறிப்பிட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் என்பது வனத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிய பகுதி என்று அவர் நினைத்திருப்பார் போலும்!
ஆனால், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளரும், இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்தவருமான மதுரம் என்பவர், 'ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒருபோதும் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது கிடையாது!’ என உறுதியாக எனது குறுக்கு விசாரணையில் கூறி இருக்கிறார்.
தவறான சாட்சியங்களை வழங்கிய மருத்துவர் கிளாட் பெர்னாண்டஸ், தடயவியல் பேராசிரியர் திருநாவுக்கரசு, மேஜர் சபர்வால் ஆகிய மூன்று நபர்களுமே சாதாரண அந்தஸ்தில் உள்ளவர்கள் அல்ல. யாருக்கும் பயப்படக்கூடியவர்களும் அல்ல. இவர்களுக்கு எம்மீது தனிப்பட்ட விரோதம் ஏதும் கிடையாது. அப்படி இருந்தும், எமக்கு எதிராக இவர்கள் ஏன் அப்பட்டமான பொய் சாட்சியம் சொல்ல வேண்டும்? சட்டத்தின் மாண்பு அறிந்த இத்தகைய உயரிய புள்ளிகளையே எமக்கு எதிராகப் பொய் சாட்சியம் சொல்லவைக்க அதிகாரிகளால் முடிகிறது என்றால், ஏழைகளையும், அறியாமையில் உள்ளவர்களையும், பயந்த சுபாவம்கொண்டவர்களையும், பணம், பதவிகளுக்கு ஆசைப்​படுபவர்​களையும் ஏன் எமக்கு எதிராக சாட்சியம் சொல்ல​வைக்க இயலாது? எமக்கு எதிரான சித்திரிப்புகள் எவ்வளவு குரூரமாக நடத்தப்பட்டன என்பதற்​கான சாட்சியமாகவே இந்த உதாரணங்களை உங்​களிடம் சொல்கிறேன். எந்த சாட்சியத்​தையும் குற்றம் சொல்வது என் நோக்கம் அல்ல; எத்தகைய புள்ளிகளையும் எமக்கு எதிராக நிற்கவைக்கிற சக்தி அதிகாரிகளுக்கு இருந்​தது என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சாட்சியங்களில் மட்டும் அல்ல... நாங்கள் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஒப்புதல் வாக்கு​மூலங்களிலும் நிறையக் குளறுபடிகள்! எதிரிகளிடம் இருந்து பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களில் உள்ள முக்கியமான விடயங்கள் அனைத்தும் மற்ற சான்றுகளுடன் ஒத்துப்போக வேண்டும். முரண்பாடுகள்கொண்டதாக இருந்தால், அந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கிய சட்ட விதி. என்னுடைய வாக்குமூலத்திலும் நளினியின் வாக்குமூலத்திலும் சுமார் 35 முக்கிய முரண்பாடுகள் உள்ளன.
23.5.91 அன்று ராயப்பேட்டை வீட்டில் (என் மாமியார் பத்மா அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருந்த வீடு) நான் தங்கி இருந்ததாகவும், மறுநாள் நானும் நளினியும் வில்லிவாக்கம் வீட்டுக்கு (நளினி வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த வீடு) சென்று தங்கியதாகவும், 25.05.91 அன்று திருப்பதி போனதாகவும் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அரசு சாட்சிகளில் ஒருவரான ராணி என்பவர், 23.05.91 அன்று நானும் நளினியும் வில்லிவாக்கம் வீட்டில் தங்கி இருந்ததாகச் சொல்லி இருக்கிறார். 96-வது அரசு சாட்சி சுஜா என்பவர், '24.05.91 அன்று நளினி வழக்கம் போல் அலுவலகம் வந்து வேலை செய்துவிட்டு மாலை வீட்டுக்குத் திரும்பினார்’ என்று சொல்லி இருக்கிறார். எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள்.
18.5.91 அன்று சென்னை திரும்பி நளினியின் அலுவலகத் தொலைபேசி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு நான் பேசியதாகவும், அன்று இரவு அவரது வில்லிவாக்கம் வீட்டில் தங்கியதாகவும், மறுநாள் 19.5.91 அன்று ராயப்பேட்டை வீட்டுக்கு, சிவராசன், சுபா, தணு ஆகியோர் வருவதாக இருந்ததால், நான் அங்கு போன​தாகவும் எழுதப்பட்டு உள்ளது.
18.5.91 அன்று மாதத்தின் 3-வது சனிக்கிழமை ஆகும். அன்றும் முதலாவது சனிக்கிழமையும் அலுவலக விடுமுறை என்பது அந்த அலுவலக நடைமுறை விதி. அப்படி இருக்க, நான் எப்படி அவருடன் அலுவலகத் தொலைபேசியில் பேசியிருக்க முடியும்? எப்படி அவருடைய வீட்டுக்கு நான் போயிருக்க முடியும்?
18.2.91 அன்று நளினி, வில்லி​வாக்கம் வீட்டில் தங்கி இருந்ததாகவும், அங்கு சிவராசன், சுபா, தணு ஆகியோர் வந்ததாகவும், அன்று மாலை சுபா, தணுவுடன் சினிமா பார்க்கப் போனதாகவும், இரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் (19.5.91) மூவரும் மகாபலிபுரம் போனதாகவும், மாலை வில்லிவாக்கம் வீட்டுக்கே  திரும்பியதாகவும் அரசுத் தரப்பு ஆவணங்களில் எழுதப்பட்டு உள்ளது.
மேற்படி உள்ளவற்றில் நான் (மட்டும்) 18.5.91 அன்று இரவு முதல் நளினியுடன் தங்கி இருந்தேன் என்பது உண்மையா? அல்லது நளினியுடன் அன்று நான் இல்லாது சுபா, தணு மட்டும் தங்கிஇருந்தார்கள் என்பது உண்மையா? அடுத்து 18.5.91 அன்று நளினி அலுவலகத்தில் இருந்தார் என்பது உண்மையா? அல்லது அன்று அவர் சுபா, தணுவுடன் தனது வீட்டில் இருந்து சினிமாவுக்குப் போய் வந்தார் என்பது உண்மையா? 19.5.91 அன்று சுபா, தணு ஆகியோர் வில்லிவாக்கம் வீட்டில் இருந்தார்கள் என்பது உண்மையா? அல்லது அன்று வேறு இடத்தில் இருந்து ராயப்பேட்டை வீட்டுக்கு சுபா, தணு, சிவராசன் ஆகியோர் வந்தார்கள் என்பது உண்மையா?
அரசுத் தரப்பு சித்திரிப்புகள் சிலவற்றைப் படிக்கும்போதே எத்தனை விதமான குழப்பங்கள் வருகின்றன பார்த்தீர்களா? ஒரே தேதியில் ஒன்பது விதமான நிகழ்வுகளை அதிகாரிகள் சித்திரித்தார்கள். அத்தனையும் லாஜிக்கே இல்லாத சித்திரிப்புகள் .
என் விவகாரத்தில் மட்டும் அல்ல... தம்பி பேரறிவாளனும் இத்தகைய சித்திரிப்புகளுக்குத் தப்பவில்லை. அரசுத் தரப்பு ஆவணங்களில், '21.5.91 அன்று சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய அறிவு, தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கிப் பார்த்தார்’ என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால், அதே வீட்டில் தங்கி இருந்த அரசாங்க சாட்சியான பாரதி என்பவர், '21.5.91 அன்று இரவு வீடு திரும்பிய அறிவும் பாக்கியநாதனும் மின் விளக்கினை அணைத்துவிட்டுப் படுத்துவிட்டார்கள்’ என எழுதப்பட்டு உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த விஷயத்தில் அதிக முரண்பாடு ஏதும் இல்லை என்றுதான் தோன்றும். ஆனால், மேற்படியான சூழ்நிலையைவைத்தே, எனக்கு எதிரான சில விளையாடல்களை அரசுத் தரப்பு செய்தது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்களே... அதேபோல் சிறுசிறு சித்திரிப்புகளும் ஒருவனைச் சிதைக்க உதவும் என நம்பியது அரசுத் தரப்பு.
வேலூர் கோட்டைச் சிறையின் கட்டமைப்பு மற்றும் இட அமைவு ஆகியவற்றின் வரைபடங்களை வயர்லெஸ் தகவல் ஊடாக பொட்டு அம்மானுக்கு நான்  அனுப்பியதாக அரசுத் தரப்பு எழுதி உள்ளது. ஆனால், இன்னோர் இடத்தில் வேலூரில் எனக்கு எவ்வித வேலையும் தரப்படவில்லை என்றும், அங்கு நான் எந்த வேலையும் செய்யக் கூடாது என பொட்டு அம்மான் எனக்கு கட்டளை இட்டதாகவும் எழுதப்பட்டு உள்ளது. இதில் எது உண்மை? பொட்டு அம்மான் அப்படி ஓர் உத்தரவை எனக்குப் பிறப்பித்து இருந்தால், வேலூர் கோட்டை சிறையின் கட்டமைப்பு குறித்து நான் ஏன் அவருக்குத் தகவல் அனுப்ப வேண்டும்? இதில், பெரிய வேடிக்கை என்னவென்றால், வயர்லெஸ் மூலமாக சிறையின் படங்களை நான் அனுப்பியதாக போலீஸ் தரப்பு சொல்கிறது. வயர்லெஸ் என்கிற கருவி மூலமாக தகவல்களை மட்டும்தான் சொல்ல முடியுமே தவிர, எந்த விதமான படங்களையும் அனுப்ப முடியாது. இந்த விஷயத்தைக்கூட போராடித்தான் என்னால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடிந்தது.
அரசுத் தரப்பு வழக்கின்படி சிவராசன் எனக்கு மிகவும் மூத்த உறுப்பினர் என்றும் இங்கு அவர் எனக்கு கமாண்டராகவும் பாஸ் ஆகவும் இருந்தார் எனக் கூறப்பட்டு உள்ளது. ஆனால், அரசுத் தரப்பு ஆவணம் 81-ல் சிவராசனைப் பற்றி குறிப்பு வருகிற இடங்களில் எல்லாம் 'அவன்’, 'அவன்’ எனப் பல இடங்களில் நான் சொன்னதாக எழுதப்பட்டு உள்ளது. உண்மையில், சிவராசன் எனக்கு பாஸாகவோ அல்லது கமாண்டராகவோ இருந்திருந்தால், அவரை நான் எப்படி அவன் எனக் குறிப்பிட்டு இருப்பேன்?

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010