********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (24 செப்டம்பர் 2011)

Sunday, September 25, 2011



மிஸ்டர் கழுகு: ''விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது தப்பு!''

கார்டனில் கர்ஜித்த ஜெ.!
ச்சி வெயில் உலுப்பி எடுப்பதை கழுகார் முகத்தில் பார்க்க முடிந்தது. வந்ததும், ஐஸ் வாட்டரை அருந்துவதற்குப் பதிலாக தலையில் தெளித்துக்கொண்டார். சூட்டைக் குறைக்கும் ஐடியா!

''கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் ஜெய லலிதா கை கழுவுவதைத்தான் தண்ணீர் தெளித்து சிம்பாலிக்காகக் சொல்கிறீரோ?'' என்றோம். அவர், மெள்ளச் சிரித்தபடி,
''அ.தி.மு.க. அணியில் நடப் பதைச் சொல்வதற்கு முன் னால் ஒரு சுவாரஸ்யம்... அதைக் கேட்டுவிடும்!'' என்று பீடிகை போட் டார்!
''தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜயகாந்த் மனம் திறந்து பேசியதை உமது நிருபர் விலாவாரியாக எழுதி இருந்தார். இது கட்சிக்குள் பலத்த சலசலப்பைக் கிளப்பியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் விஜயகாந்த். 'கூட்டம் நடக்குறது வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது. யாரும் காரில் வர வேண்டாம். ஆட்டோவில் வாங்க. வரும் எல்லாரும் கூட்டமா வராதீங்க... தனித்தனியா வந்துடுங்க. வெளியில் யாரும் நின்னும் பேசாதீங்க!’ என்று மாவட்டச் செயலாளர்களுக்குச் சொல்லப்பட்டு இருந்ததாம். கூட்டத்தில் விஜய்காந்த் பேசும்போது, 'உங்களை காரில் வர வேண்டாம். கூட்டமா நிற்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லி இருப்பாங்க. எல்லாம் காரணமாகத்தான் சொன்னோம். நம்ம கட்சி ஆபீஸ்ல ஒரு குண்டு ஊசி கீழே விழுந்தாக்கூட, அதைப் பத்திரிகைக்காரங்களுக்கு யாராவதுசொல்றீங்க. நமக்குள் நாம் என்ன வேணும்னாலும் பேசிக்கலாம். அதை சிலர் பத்திரிகைகளுக்கு சொல்லிட்டா, அவங்களும் பரபரப்பா செய்தி வெளியிடுறாங்க. ரகசியக் கூட்டம்னு நடத்திட்டு அதை வெளியில் சொல்றது எப்படி தர்மமாக இருக்கும்? நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நிர்வாகிகள் கூட்டம் நடத்துறதையே நான் தவிர்க்க வேண்டி இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் எதுவும் நடக்கலாம். எதைப்பத்தியும் நீங்க கவலைப்பட வேண்டாம். எல்லோரும் உற்சாகமா வேலைகளைப் பாருங்க. கோவை மாநாட்டில் எல்லா விஷயங்களையும் முடிவு பண்ணிக்கலாம். நான் இப்படி எல்லாம் பேசினேன் என்று அதையும் போய் பத்திரிகைகாரங்ககிட்ட சொல்லிடாதீங்க!’ என்று கர்ஜித்து முடித்தாராம்.''
''அதையும் சொல்லீட்டாங்களா?'' என்று நாம் கேட்டதும்... சிரிப்பைச் சிந்தியபடி தொடர்ந்தார் கழுகார்.
''உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விஷயத்தில் என்ன நடக்கிறது என்கிற கதைக்கு அடுத்து வருகிறேன். விஜயகாந்த் மீது அளவில்லாத கோபத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. அதைவிட அவரை தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னவர்கள் மீதும் ஆத்திரத்தைக் கொட்டுகிறார். 'அவருக்கு அவ்வளவு செல்வாக்கு... இவ்வளவு செல்வாக்குனு சொல்லி என்ன ஏமாத்திட்டீங்க... அவரைத் தேவை இல்லாம நாமதான் வளர்த்துவிட்டுட்டோம். அப்பவே அவரைக் கூட்டணியில் வெச்சிருக்கக் கூடாது’ என்றாராம் ஜெயலலிதா. 'என்னை அவமானப்படுத்துற மாதிரி பேசினார்னு தெரிஞ்சே
கூட்டணி வைக்கக் காரணம், கருணாநிதிக்கு எதிரான ஓட்டு சிதறிடக் கூடாதுங்கற ஒரே நோக்கம்தான். ஆனால், ஜெயிச்சு வந்ததும் நம்மை அவர் மதிக்கவே இல்லை. அத்தோட அவமானப்படுத்துற மாதிரி நடந்துக்கிறார்!’ என்றாராம் ஜெயலலிதா. இந்தக் கோபமே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மொத்தமாக ரியாக்ஷன் காட்டுகிறது!''
''என்னதான் பிரச்னை?''
''உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது கணிச மான இடங்களை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஏகத்துக்கும் அடக்கி வாசித்தது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற விஷயங்களில்கூட சட்டசபையில் பெரிய அளவில் கோபத்தைக் காட்டவில்லை. ஆனால், நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் ஒவ்வொரு 'மூவ்’வும் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது. அதற்காக தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதற்காக ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தார் ஜெயலலிதா. பேருக்குதான் அது குழு. அந்த குழு மூலமாக, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் பட்டியலை தயார் செய்து காத்திருந்தார்கள். குழு மூலம் பட்டியலைக் கேட்டு ஜெயலலிதா வாங்கிப் பார்ப்பார்... என்று இலவு காத்த கிளியைப்போல கூட்டணிக் கட்சிகள் காத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்துகொண்டு இருந்தார் ஜெயலலிதா. சட்டசபைத் தேர்தலில்கூட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர்த்துதான் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போதோ மொத்தத் இடங்களையும் வெளியிட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.''
''தே.மு.தி.க.வின் நிலைமை?''
''மூன்று மேயர்கள், 30 நகராட்சித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட நினைத்தது தே.மு.தி.க. ஆனால், மேயர் பதவிகளை தர முடியாது என்று முதலிலேயே கைவிரித்துவிட்டதாம் அ.தி.மு.க. துணை மேயர் பதவிகள் மற்றும் சில நகராட்சித் தலைவர் பதவிகளை வேண்டுமானால் விட்டுக்கொடுப்பதாக சொன்னதாம். இதெல்லாம் அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரையில் அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை தே.மு.தி.க-வுடன் நடத்தவில்லை. பேருக்கு தொகுதி பங்கீட்டுக் குழுவை நியமித்து, பட்டியல்களை எல்லாம் வெளியிட்டு, தேர்தல் தேதியும் அறிவிக்கவைத்து சரியாக காய்களை நகர்த்தி, கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறது தே.மு.தி.க.''
''கம்யூனிஸ்ட்களுக்கு?''
''கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லையாம். திருவொற்றியூர், சிதம்பரம், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் இருக்கிறது. அதை வாங்கினாலே போதும் என்று போராடுகிறார்கள். இதே நிலைதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும். இவர்கள் கதியே இப்படி என்றால்... டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் சரத்குமார் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை அல்லவா!'' என்று சொல்லி மீண்டும் சிரித்தார் கழுகார்!
''கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஷாக்கானதைத் தானே உம்மிடம் சொன்னேன். இப்போது அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியைக் கேளும்!''
''சொல்லும்!''
''போயஸ் கார்டனில் இருந்து ரிலீஸ் ஆன வேட்பாளர் பட்டியலைப் பார்த்து, அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களே அரண்டுபோனார்கள். காரணம், கட்சியின் மா.செ-க்களுக்கும் ஜெ. செக் வைத்திருப்பதுதான். 'நகராட்சித் தொடங்கி ஒன்றிய கவுன்சிலர்கள் வரையிலான பதவிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துகொடுக்கும்படி கார்டனில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டது. சாதி, செல்வாக்கு உள்ளிட்ட சகல விவரங்களையும் கணக்கிட்டு, தர வாரியான மூன்று நபர்களை வரிசைப்படி ஒவ்வொரு பதவிக்கும் தேர்வு செய்து கொடுக்கும்படி கார்டன் தரப்பு சொல்லி இருந்தது. அதற்கேற்றபடி, தங்களது விசுவாசிகளை முதல் இரண்டு இடங்களிலும், ஆகாத ஆட்களை மூன்றாம் இடத்திலும் குறிப்பிட்டு பட்டியல் அனுப்பினார்கள் மாவட்டச் செயலாளர்கள். இந்த விஷயம் அம்மாவுக்கு எப்படித் தெரிந்ததோ... மாவட்டச் செய லாளர்கள் கொடுத்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர்களின் பெயர்களை மட்டுமே அவர் டிக் செய்ய, மாவட்டச் செயலாளர்கள் மிரண்டுவிட்டனர். அறிவிப்பு வந்த பிறகு ஆட்களை மாற்றச் சொல்லியும் அம்மாவிடம் பேச முடியாது. அதனால், அம்மாவின் டிக் பட்டியலில் உள்ளவர்கள் தங்களுக்கு ஆகாதவர்களாக இருந் தாலும், அவர்களின் வெற்றிக்காக மா.செ-க்கள் போராட வேண்டிய இக்கட்டு உருவாகிவிட்டது!’ எனச் சொல்லும் சீனியர் நிர்வாகிகள், ஜெயலலிதா இப்படி செய்ததற்கான பின்னணிகளையும் விளக்கினார்கள்...''
''அது என்ன?''
''சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் உள்ளாட்சித் தேர்தலில் தீவிரமாக இருக்கும் என்பதை ஜெயலலிதா தெளிவாக அறிந்து வைத்திருந்தார். சசிகலாவின் உறவினர்கள் கைகாட்டும் ஆட்களுக்குத்தான் மாவட்டச் செயலாளர்கள் முதல் இடம் கொடுத்து இருப்பார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான், மூன்றாவது இடத்தில் இருந்த ஆட்களைத் தேர்வு செய்து மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அல்லாது, சசிகலா வகையறாக்களுக்கும் அம்மா செக் வைத்தார் என்கிறார்கள். கார்டனில் இருந்து வெளியான பட்டியலில் இப்போது ஒரு சில இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்கள் மாற்றப்படுகின்றனர். அம்மாவிடம் வேறு விதமான காரணங்களைச் சொல்லி, மாற்றப்படும் பட்டியலில் உள்ள பலருமே சசிகலா உறவினர்கள்தானாம்!''
''தி.மு.க. விஷயத்துக்கு வாரும்!''
''கனிமொழி ஜாமீன்தானே இப்போதைய தி.மு.க. விஷயம்... கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்ததும், அதிக நம்பிக்கையுடன் இருந்தார்கள். இரண்டொரு நாளில் ஜாமீன் கிடைத்துவிடும் என்பதுதான் அவர்களது நினைப்பு. ஆனால், நீதிபதி சைனி, 'இந்த மனுவைப் படிக்க எனக்கு அவகாசம் தேவை. அக்டோபர் 1-ம் தேதி பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு எழுந்து சேம்பருக்குள் சென்றதும், நீதிமன்றத்தில் உட்கார்ந்திருந்த ராஜாத்தி அம்மாள் கலங்கிவிட்டாராம். அவரை ஆசுவாசப்படுத்த கனிமொழியால் முடியவில்லையாம். 'நீ சென்னைக்குப் போம்மா... நான் பார்த்துக்கிறேன்’ என்று மகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், தாய்க்கு தாளவில்லையாம். நீதிமன்ற வளாகத்துக்குள் இருக்கும் சிறு செல்லில் வைத்திருந்துவிட்டு... திகார் செல்ல வாகனம் தயாரானதும்தான் கனிமொழியை அழைத்துச் செல்வார்கள். அந்த செல்லுக்குள் உள்ளே நுழையும் வரை கனிமொழியும் தைரியமாகத்தான் இருந்துள்ளார். ஆனால், உள்ளே நடந்து போனவர் தலையைத் திருப்பி ராஜாத்தியைப் பார்த்ததும் கண்கலங்கிவிட்டாராம்.''
''வருத்தம் இருக்கத்தானே செய்யும்!''
''கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவர் குறித்தும் கவலைப்பட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை தி.மு.க-விலும், டெல்லியிலும் பலத்த சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 'ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கு ஏதோ ஒரு சம்பந்தம் இருந்தாலும் கனிமொழி, சரத்குமாருக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லையே?’ என்று கருணாநிதி அந்த அறிக்கையில் சொல்லி இருந்தார். 'ஆ.ராசாவை கருணாநிதி கழற்றிவிடுகிறாரா?’ என்று சிலர் கேட்க ஆரம்பித்துள்ளனர். கருணாநிதியின் இந்த அறிக்கையையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சோனியா கவனத்துக்கு டி.ஆர்.பாலு கொண்டுசென்றதாகவும் சொல்கிறார்கள். சோனியா ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறார். இதற்கிடையே, ஆ.ராசா மீது கருணாநிதிக்கே சில வருத்தங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்!''
''அது என்ன?''
''செப்டம்பர் 15-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்வதாக நீதிபதி சைனி சொல்லி இருந்தார். அதற்கு மறுநாள் கனிமொழி ஜாமீன் மனுத் தாக்கல் செய்ய தயாராகிக்கொண்டு இருந்தார். ஆனால், அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யவிடாமல் டிராய் அறிக்கையை முன்வைத்து ஆ.ராசா பேச ஆரம்பிக்க... அதையே மற்றவர்களும் எடுக்க, விவகாரம் நீண்டுகொண்டே போய் அக்டோபரைத் தொட்டுவிட்டது. செப்டம்பர் 30-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய இருப்பதாக நீதிபதி சொல்லி இருக்கிறார். எனவே கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் கிடைப்பது வரைக்கும் ஆ.ராசா அமைதியாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி சொல்லி அனுப்பி உள்ளாராம்!'' என்ற கழுகார் சிறிது இடைவெளிவிட்டு பேசினார்...
''செப்டம்பர் 15-ம் தேதி அன்று, நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஆர்.சௌந்திரபாண்டியனாருக்கு பிறந்தநாள் விழா. சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவரது சிலைக்கு  முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜாத்தி அம்மாள் தவறாமல் வருகை தந்தார். ஆனால், இந்தமுறை ஆப்சென்ட். 'நான் வரலை!’ என்று சொல்லிவிட்டாராம். அவர் டெல்லியிலேயே தங்கி இருப்பது கருணாநிதியை இன்னும் வருத்தமடைய வைத்துள்ளது.
கலைஞர் டி.வி-யின் மேலாளர்கள் மூவர், சமீபத்தில் டெல்லிக்குப்போய் இருந்தார்களாம். திகார் ஜெயிலுக்குப்போய் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார்களாம். சரத்குமார்தான் டல்லாக காணப்பட்டாராம். கனிமொழி உற்சாகமாய் பேசினாராம். 'இந்த மாத இறுதிக்குள் நான் பெயிலில் வெளியே வந்துவிடுவேன்... அப்பாகிட்ட சொல்லுங்க.' என்று தகவல் சொல்லி அனுப்பினாராம். இது ஒன்றுதான் கருணாநிதிக்கு ஆறுதலான விஷயம்!'' என்று கிளம்பத் தயாரான கழுகார்
''சாதித் தலைவர் ஒருவரை போலீஸ் அதிகாரி சந்தித்ததாக ஒரு செய்தியை உமக்குச் சொல்லி இருந்தேன். அந்த இடத்தில் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்றும் பரமக்குடி விவகாரத்துக்கும் அந்த அதிகாரிக்கும் அப்படி எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சிலர் அடித்துச் சொல்கிறார்கள்!'' என்றார்.
அவரிடம், ''உள்ளாட்சித் தேர்தல் தேதியைப் பார்த்தோம். அக்டோபர் 17, 19... என்று
சோ.அய்யர் அறிவித்திருக்கிறார். ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகும் அக்டோபர் 20-க்கு முன்னதாக தேர்தல் நடந்துவிடும் என்று சொன்னீர். அது மாதிரியே நடந்துள்ளதே!'' என்றோம்.
அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டவராக வானத்தில் மிதந்தபடி வணக்கம் வைத்தார் கழுகார்!
**********************************************************************************
கழுகார் பதில்கள்

கோபாலகிருஷ்ணன், ராஜபாளையம்.
   நரேந்திர மோடியைப் பாராட்டுவதைப் பார்த்தால்... தமிழகத்தை குஜராத் போல வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துவிடுவாரா ஜெயலலிதா?
  தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த இரண்டு முக்கிய மோட்டார் நிறுவனங்கள்  குஜராத்துக்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டதற்கு உண்மை யான காரணம் என்ன? இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் எப்படி முன்னேற்றத்தில் குஜராத் ஆகும்?
 கார்த்திகேயன், ஸ்ரீரங்கம்.
  பரஞ்சோதி - கே.என்.நேரு?
ஒருவர் மீது பாலியல் புகார்!
இன்னொவருவர் மீது கிரிமினல் புகார்!
சபாஷ்... சரியான போட்டி!
 சுரேஷ்குமார், காஞ்சிபுரம்.
  அரக்கோணம் ரயில் விபத்துக்கு உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் ஏன் இத்தனை குழப்பங்கள்?
  சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு ரயிலைக் கடத்திச் சென்று விபத்துக்குள்ளாக்கியவன் யார் என்று இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையே! ஒரு அரசாங்கத்துக்குப் பல்லாயிரம் கோடிப் பணத்தை ஆண்டுதோறும் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு துறை எப்படி பொறுப்பில்லாமல் இயங்குகிறது பார்த்தீர்களா?
 சுரேஷ்பாபு, உடன்குடி.
'பெட்ரோல் விலை உயர்வை நாங்கள் ஏற்கவில்லை’ என்கிறாரே தங்கபாலு?
  தமிழகத்தில் இருக்கும் 'துணிச்சலான அரசியல்வாதி' என்று தங்கபாலுவை நான் சும்மா சொல்லவில்லை என்பது இப்போதாவது தெரிகிறதா?
 பழனிச்சாமி, திருப்பூர்.
  மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச நரேந்திர மோடிக்கு அருகதை உண்டா?
  கடந்த காலத் தவறுகளில் இருந்து மோடி பாடம் கற்கக் கூடாதா? பிராயச் சித்தம் தேடுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர் திருந்தி விடக் கூடாது என்று சிலர் நினைப்பதுதான் ஏன் என்று புரியவில்லை!
 கருணாகரன், நாகர்கோவில்.
  உண்மையான இந்தியர்கள், தூக்குத் தண்டனையை ஆதரிக்கவே செய்வார்கள் என்கிறேன் நான்...?
  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கால்கோள் நாட்டியவர்களில்  இவரும் ஒருவர். சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்தபடி தனது அனுபவங்களை எழுதினார். 'சிறையில் தவம்’ என்ற தலைப்பில் அது புத்தகமாக வந்தது. அந்த டைரியில் 21.2.1922-ம் நாளைப் பற்றி அவர் எழுகிறார்..
'அப்பாத்துரை என்ற சமையல்காரரை தூக்கிலிடப் போகிறார்கள். இன்று நான் அதிகாலையில் எழுந்துவிட்டேன். அன்று தூக்கிலிடப்பட இருந்த மனிதனின் நினைவு என்னை முன்னதாக எழுப்பி இருக்க வேண்டும். என் படுக்கையில் உட்கார்ந்தவாறே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அந்த நிமிஷங்கள் ஒரு யுகம் போலத் தோன்றின. அவர்கள், துரதிர்ஷ்டம் பிடித்த அப்பாத்துரையை கைவிலங்கிட்டு அழைத்து வந்தனர். காலடி ஓசையில் இருந்து அவர்கள் வந்ததை உணர்ந்தேன். சில நிமிஷங்களில் தலைமை வார்டர் என் அறையைத் தாண்டிச் சென்றார். அதிலிருந்து அப்பாத்துரையின் வாழ்வு முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். கடவுள் கொடுத்ததை மனிதன் பகிரங்கமாகப் பறித்துக் கொண்டான். அதைச் சட்டப்படி நியாயம் என்றும் எண்ணிக் கொண்டான்!’
- இப்படி எழுதி இருப்பவர் மூதறிஞர் ராஜாஜி.
 சுந்தரமூர்த்தி, விருத்தாசலம்.
  யாரையும் கேட்காமல் பட்டியல் வெளியிட்டு விட்டாரே ஜெ.?
  யாரைக் கேட்க வேண்டும்_ இது ஜெ. வாய் திறந்து சொல்லாத பதில்!
ஒரு உண்மை மட்டும் புரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் கூட்டணிகளுடன் பேசுவதற்கு முன்னதாக ஒரு பட்டியல் வெளியாகிவிட்டது. 'அம்மாவுக்குத் தெரியாது’ என்று அப்போது சிலர் சொன்னார்கள். இன்று நடப்பதைப் பார்த்தால், அதுவும் 'அம்மாவுக்குத் தெரிந்து நடந்ததுதான்’ என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தனித்து நிற்கலாம் என்ற ஐடியா அவருக்கு இருந்திருப்பதும் தெரிகிறது.
 சகாயகுமார், திருவண்ணாமலை.
  அடுத்த மாதம் திருமணம் ஆகப் போகும் எனக்கு உங்களது அறிவுரை?
  கேள்வி கழுகாருக்குதானே.! புதுமணத்தம்பதிக்கு புத்திமதி சொல்லாதே என்கிறது சாஸ்திரம். ஆனால், வி.ஸ.காண்டேகர் தனது கதை ஒன்றில் சொன்ன வாசகம் கவனத்துக்கு வருகிறது.
'திருமணம் என்பது ஒரு போர். என்னதான் லாகவமாகச் செயல்பட்டாலும் சேதாரம் இருக்கத் தான் செய்யும்’.
 கதிரவன், கோவை.
  முதல் நாள் அணு உலைக்கு ஆதரவு... மறுநாள் எதிர்ப்பு.. என்ன ஆச்சு ஜெயலலிதாவுக்கு?
  பேரறிவாளன், சாந்தன், முருகன் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்து கொண்டார். இனிமேல் ஜெயலலிதா எந்தப் பிரச்னை தொடர்பாகவும் முதல் நாள் எழுதும் அறிக்கையை ரிலீஸ் பண்ணாமல் இருந்து... மறுநாள் யோசித்த பிறகு வெளியே விட்டால் நல்லது!
 சீர்காழி சாமா, தென்பாதி.
  ரயில் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் அடைந்தால் முன்பெல்லாம் ரயில்வே மந்திரி பதவி விலகுவார். ஆனால், தற்போதைய மந்திரி, ஆறுதல் மட்டும் கூறிவிட்டு கடமையை முடித்துக் கொள்கிறாரே?
  ஆறுதலாவது சொல்ல வருகிறாரே!  ஆறு மாதங்களுக்கு முன்னால் பீகாரில் ஒரு விபத்து ஏற்பட்டபோது மத்திய மந்திரி போகவே இல்லை. முன்பெல்லாம் எப்பவாவது விபத்து நடக்கும். அது பெரிய விஷயமாகி பதவி விலகுவார். இப்போது மாதம் தோறும் இந்தியாவில் எந்தப் பகுதியிலாவது நடக்கிறது விபத்து. பதவி விலக ஆரம்பித்தால் விலகிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!
 எஸ்.ராதாகிருஷ்ணன், கச்சனம்.
  வைகோ இன்னும் எவ்வளவு காலம்தான் மைக் பிடித்துக் கொண்டே இருக்கப் போகிறார்?
  மைக் இருக்கும் வரை!
**********************************************************************************
தரமான சிகிச்சை எப்போது?


உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டு விஞ்ஞானிகள், தாமே தயாரித்த செயற்கை கோள்களைப் பறக்க விடுகிறார்கள். கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தபால் துறை, வங்கி போன்றவை உலக நாடுகளைவிட மேம்பட்ட நிலையில் இருக்கின்றன. 88 கோடி இந்தியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக வியப்பான செய்தி தருகிறார்கள். ஆனால், மருத்துவத்தில் நம் நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகளும், தலை சிறந்த மருத்துவர்களும், புதிய தொழில்நுட்பங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் திரைப்பட நட்சத்திரங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை உடல் சரியில்லை என்றால் உடனே அந்நிய தேசத்துக்குப் படை எடுக்கிறார்கள். இதைப் பார்த்தால் இந்தியா இன்னமும் மருத்துவத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி நம் நாட்டை வழி நடத்திச் செல்லும் சோனியா காந்தி வரை வெளிநாடுகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் பணம் படைத்தவர்கள் என்பதால் வெளிநாடுகளுக்குச் சென்று உடம்பைக் கவனித்துக் கொள்கிறார்கள். இந்த ஏழை இந்திய நாட்டில் பிறந்த மற்ற குடிமக்கள் என்ன செய்வது?
உடல்நிலை சரியில்லாத அனைத்து இந்தியர்களையும் அரசு செலவிலேயே வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும், அது சாத்தியம் இல்லை என்றால் இங்கே தரமான சிகிச்சைக்கு உத்தரவாதம் தரவேண்டும்.
ஆர்.ஹரிஹரன், கோவை.
**********************************************************************************
அடுத்த இதழ் முதல்... உள்ளாட்சி ஸ்பெஷல் கலக்கல்!

**********************************************************************************
''அந்த 16 குடும்பத்தை காங்கிரஸ்காரர்கள் இதற்கு முன்னால் பாத்ததுண்டா?''

தொடங்கியது மரணதண்டனை எதிர்ப்புப் பயணம்
'மரண தண்டனைக்கு எதிராக மக்களை நோக்கிய பயணத்தைத் தொடங்கி இருக்கிறது பெரியார் திராவிடர் கழகம். 13 நாட்களில் 90 ஊர்களில், பரப்புரை நடைபயணம் மேற்கொள்ளப் போகிறார்கள். இதன் தொடக்க விழா, சென்னை ராயப்பேட்டையில் கடந்த 20-ம் தேதி மாலை நடந்தது.
 இந்த நிகழ்ச்சியில் வைகோ, கொளத்தூர் மணி, பேராசிரியர் தீரன், வன்னி அரசு, வழக்கறிஞர் பாண்டிமாதேவி என ஏராளமான தமிழ் உணர் வாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவரும் காங்கிரஸைப் பிரித்து மேய்ந்துவிட்டனர். அறிமுக உரை நிகழ்த்திய 'விடுதலை’ இராசேந்திரன், ''தமிழ் உணர்வாளர்கள் இருக்கும் வரை ஒருபோதும் தமிழ் மண்ணிலே தூக்கு நிறைவேறாது. இதனால்தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை, தமிழகத்தில் விசாரிக் காமல் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸார் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறார்கள். அவர்களிடம் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழினம் ஒன்று திரண்டு போராடிக்கொண்டு இருக்கும்போது, நீங்கள் இப்படிச் செய்தால் கடுமையான பின் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும்!'' என்று ஆவேசம் காட்டினார்.
'நாம் தமிழர் கட்சி’யின் தீரன், ''ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளாக உள்ள 141 நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. அந்த சபையில் உறுப்பு நாடாக வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டு இருக்கிற நமது நாடு, அப்பாவி மூன்று மனிதர்களுக்கு, தூக்குத் தண்டனையை நிறைவேற்ற துடிக்கிறது! இந்த விஷயத்தில் எவ்வளவு முரண்பாடுகள்... ஸ்ரீபெரும்புதூர் நிகழ்வின்போது ராஜீவோடு உயிர் நீத்த குடும்பங்களை ஒன்று திரட்டி, மூன்று அப்பாவி தமிழர்களை தூக்கில் இட வேண்டும் என்று சிலர் உண்ணாவிரதம் செய்யத் தூண்டுகிறார்கள். இதுநாள் வரையில் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்களை, காங்கிரஸ் தலைவர்கள் போய் பார்த்தார்களா? அவர்களுக்கு உதவி செய்ததா?'' என்றவுடன் கூட்டத்தில் பலத்த கைதட்டல்.
அடுத்து பேசிய கொளத்தூர் மணி, ''காங்கிரஸ் கட்சி, காந்தியின் பெயரை வைத்து போலி அரசியல் செய்துகொண்டு இருக்கிறது. ஆனால், காந்தியை அவர்கள் நினைப்பதும் இல்லை; மதிப்பதும் இல்லை. 'மரண தண்டனை என்னும் தவறை நிகழ்த்திவிட்டால் அந்தத் தவறை என்றும் நம்மால் திருத்திக்கொள்ள முடியாது. எனவே, மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்’ என காந்தியடிகளே குரல் கொடுத்தார். அவரின் பெயரை சொல்லிக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் செய்யும் தமிழின துரோகத்தை உலகத் தமிழ் சமுதாயம் மன்னிக்காது. இவர்களின் முகத்திரையைக் கிழிக்க, 'ராஜீவ் கொலை வழக்கில் மறைக்கப்படும் நீதி’ எனும் தலைப்பில் விடுதலைப் புலிகளின் நியாயமான நிலைப்பாட்டை கூடிய சீக்கிரமே புத்தகமாக வெளியிடப் போகிறோம்...'' என்று முழங்கிவிட்டு அமர்ந்தார்.
கடைசியாக பேசிய வைகோ, ''ஜனாதிபதிக்கு சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் 'நளினி, பேரறி வாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு கருணை காட்டு வதில் தனக்கு ஆட்சபேனை இல்லை’ என்று தெரிவித்துவிட்டு, இப்போது அவரின் ஒப்புதலோடுதானே இந்தக் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி என்றால் சோனியா போடும் கணக்கு என்ன? இவர் களைத் தூக்கில் இட வேண்டும் என்பதுதான் அவர் போடும் திட்டமா? சோனியாவே இதற்கு பதில் சொல்ல வேண்டும். நேற்றுகூட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை சந்தித்த போது, 'தாயகத் தமிழ் மக்களுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவியுங்கள்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர். மாநில அரசை நான் கேட்டுக்கொள்வது அமைச்சரவையைக் கூட்டி நல்ல முடிவெடுங்கள். அதை ஆளுநருக்கு அனுப்புங்கள். 'விதி 72-ன் படி ஆளுநர் அதிகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட முடியாது என இம் மூவருக்கும் தீர்ப்பளித்த நீதிபதிகள், நாட்டை அச்சுறுத்திய சம்பவமோ, மக்களுக்கு அச்சம் ஏற்படுத்திய சம்பவமோ இது அல்ல என்று சொல்லி இருக்கிறார்கள். மத்திய அரசாங்கமே ஒரு நல்ல முடிவினை தமிழர் விஷயத்தில் செயல்படுத்து... இல்லை என்றால், ஈழ விவகாரம் முதல் கூடங்குளம், முல்லைப் பெரி யாறு வரை வஞ்சிக்கப்படும் தமிழர்களை ஆழிப் பேரலையாக மாறச் செய்துவிடாதே...'' என்று கர்ஜித்து முடிக்க,
13 நாட்கள் பரப்புரை பயணம் தொடங்கியது.
**********************************************************************************
''இன்னும் ஒரு மாசம் மூக்கைப் பொத்திக்கோங்க...''

சிக்கலில் துரைப்பாக்கம் மாணவர்கள்
''எல்லா ஸ்கூல்லயும் மாணவர் கள் நல்லாப் படிச்சு, சந்தோஷமா வெளியே போவாங்க. ஆனால், எங்க ஸ்கூல்ல படிச்சு முடிச்சுட்டுப் போறவங்க நோய் நொடி ஏற்பட்டு நோயாளியாத்தான் போக வேண்டியிருக்கு!'' - என்று மாணவர்களின் வேதனைக் குரல்கள் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) பதிவாகி இருந்தது.
உடனே கதறல் குரல் பதிவான ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விசிட் அடித்தோம். விஸ்தாரமான இடத்தில் பள்ளிக் கட்டடம் இருந்தது. அப்புறம் என்ன என்ற யோசனையில் இருந்த நம்மை நோக்கி குப்புறத்தள்ளும் வேகத்தில் வந்தது துர்நாற்றம். குடலைப் புரட்டிக் கொண்டு வந்ததைத் தாங்கிக் கொண்டு, பள்ளியின் பின்புற சுற்றுச் சுவரைத் தாண்டிப் பார்வையை ஓடவிட்டோம். அங்கே... மலை போல் குவிந்து கிடந்தது குப்பை! அந்த மலையில் பன்றிகளும் மாடுகளும் சுதந்திரமாக மேய்ந்து கொண்டு இருந்தன.
சத்துணவு சாப்பிட வகுப்பு அறையில் இருந்து வெளியே வந்த மாணவர்களை ஈக்கள் படையெடுத்து விரட்டிவர, வாங்கிய உணவை வயிறுக்கு உள்ளேயும் தள்ள முடியாமல், வெளியேயும் கொட்ட முடியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டு இருந்தனர்.
பள்ளியின் இந்த அவல நிலை குறித்து, பெற்றோர் - ஆசிரியர்கள் சங்கத் தலைவர் குமாரிடம் பேசினோம். ''இந்தப் பள்ளியில் 1,800 மாணவர்கள் படிக்கிறாங்க. துரைப் பாக்கம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை மட்டுமில்லாம, இந்த ஏரியாவில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களின் உணவுக் கழிவுகளும் இங்குதான் கொட்டப்படுகிறது. அவ்வப்போது, குப்பையைக் தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார்கள். அந்த நேரத்தில் இந்தப் பகுதி முழுக்கப் புகை மூட்டமாக இருக்கும். வகுப்பறை ஜன்னல்களை மூடிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்து இருக்க முடியும்? நாற்றம் தாங்க முடியாமல் சில நாட்கள் பள்ளிக்கு விடுமுறைகூட விட்டு இருக்கிறார்கள். இந்தப் பிரச்னை குறித்து, ஊராட்சித் தலைவருக்கும், எம்.பி-க்கும் எத்தனையோ முறை மனு கொடுத்து இருக்கிறோம். ஆனால், யாரும் கண்டு கொள்ளவே இல்லை. இப்போது பொறுப்பு ஏற்றுள்ள அரசாவது, மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தி எங்கள் பள்ளிக்கு ஏற்பட்டு உள்ள இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஆனால், மாணவர்களைத் திரட்டி மறியல் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம்...'' என்று குமுறினார்.
ஆசிரியர்கள் சிலரிடம் விசாரித் தோம். ''மருத்துவக் குழு அவ்வப்போது வந்து மருந்து மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுச் செல்லும். ஆனால், இந்தக் குப்பையை அகற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை!'' என்றனர்.
தன் பிள்ளைகளை அந்தப் பள்ளியில் படிக்க வைத்திருக்கும் பழனி என்பவர், ''குப்பை நாற்றத்தோடு, புகை மூட்டம் காரணமாகவும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். காலையில் நல்லபடியாக பள்ளிக்குச் செல்லும் மாணவன் இடையிலேயே உடல் நலக் குறைவு ஏற்படும் சூழல் நிலவு கிறது. பக்கத்துலேயே ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் அங்கே மருந்து மாத்திரைகளைக் கொடுத்து விடுகிறார்கள். ஆனாலும் பசங்களுக்கு கை கால்அரிப்பு, குடைச்சல் ஏற்படுகிறது...'' என்றார்.
சமூக ஆர்வலர்கள் கண்ணன் மற்றும் ஜெய்கணேஷ், ''குப்பை கொட்டப்படுவது ஒரு தனியார் நிலத்தில்தான். 40 ஆண்டுகளுக்கு முன் 22 ஏக்கர் நிலத்தை வாங்கிய அவர்கள், அதில் சில ஏக்கர் நிலத்தை, சுடுகாடு அமைப்பதற்காக ஊராட்சிக்கு கொடுத்து உள்ளனர். ஆனால், மீதி நிலத்தில் அதற்கு சொந்தக்காரரிடம் அனுமதி வாங்காமல் குப்பை கொட்டப்படுகிறது. அந்த நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் நிலத்தைச் சுற்றி சுவர் கட்டி விட்டால் இந்தப் பிரச்னை ஓரளவு தீர்ந்து விடும்!'' என்றார்.
இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் துரைப்பாக்கம் (தி.மு.க.) ஊராட்சித் தலைவர் ஏகாம்பரத்திடம் பேசினோம். ''இந்தப் பகுதியில் உள்ள, மாநகராட்சி குப்பைக் கிடங்கில் எங்கள் ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையைக் கொட்ட அனுமதிக்கவில்லை. தனியார் நிலத்தில் குப்பையைக் கொட்டுகிறோம் என்பது உண்மைதான். எனக்கு முன் இருந்த ஊராட்சித் தலைவர்கள் கடைப்பிடித்த வழிமுறையையே நானும் தொடர்கிறேன். சோழிங்கநல்லூர் அருகே குப்பை கொட்ட இடம் ஒதுக்கித் தருவதாக கலெக்டர் கூறி உள்ளார். யாரோ வழக்குப் போட்டு அதையும் நிறுத்தி விட்டார்கள். அடுத்த மாதம் நடக்கும் உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து  இந்த ஊராட்சி, மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள்  வந்து விடும். அதன் பிறகு, மாநகராட்சியே இந்த குப்பை மலையை அகற்றி விடுவார்கள். பள்ளி மாணவர்களின் கஷ்டம் இன்னும் ஒரு மாதம்தான்!'' என்றார்.
அப்போ... இன்னும் ஒரு மாசத்துக்கு?
மு.செய்யது முகம்மது ஆசாத்
*************************************************************************
ஊழியர்களின் 'பிச்சை' போராட்டம்!

காரைக்கால் அதிர்ச்சி
சுமார் 150 பெண்கள் கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் தொனியில் காரைக்கால் வீதி களில் ஊர்வலம் செல்லவே... பார்த்த மக்கள் அதிர்ந்து விட்டார்கள்.
பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு பாலும் ரொட்டியும் கொடுக்கும் அரசுப் பள்ளி ஊழியர்கள்தான் அவர்கள். கடந்த ஆறு மாத காலமாக ஊதியம் தராத புதுவை அரசை எதிர்த்துத் தான் இந்த பிச்சை எடுக்கும் போராட்டம்!
காரைக்கால் பிரதேசப் பள்ளிகளின் ரொட்டி, பால் ஊழியர்கள் சங்கத் தலைவியான வசந்தி நம்மி டம் பேசினார். ''புதுவை மாநிலத்தில் பள்ளி மாண வர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டதுதான் இந்த ரொட்டியும் பாலும் வழங்கும் திட்டம். காலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும், மாலையில் பள்ளியை விட்டுச் செல்லும்போதும் ஐந்து பிஸ்கட்டுகளும் ஒரு டம்ளர் பாலும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அரசு பள்ளியில் 2 வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இது உண்டு. இதற்காக, கணவனால் கைவிடப் பட்டவர்கள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து, ஆட்களை பணியில் சேர்த்தார்கள். அது எங்களைப்போல் வாழ்க்கையை இழந்து நின்றவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இதற்காகத் தொகுப்பு ஊதியமாக மாதம்  4,000 எங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. காலை 5.30 மணிக்கு வரும் பால் வண்டியை எதிர்பார்த்து 5 மணிக்கே பள்ளிக்குப் போகவேண்டும். மாலையில் பால் கொடுத்ததும், பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு பள்ளியில் இருக்கும் மிச்ச வேலைகளையும் பார்த்துவிட்டு வீடு திரும்ப மாலை 5 மணியாகி விடும். இப்படி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கிறோம்.
நாங்கள் அரசு ஊழியர்கள் என்றாலும் அரசின் திட்டங்கள், சலுகை கள் எதுவும் எங்களுக்குக் கிடையாது. முன்பு நாங்கள் வாங்கிக்கொண்டு இருந்த அரசு உதவித் தொகைகூட இப்போது கிடையாது. 'சரி பரவா யில்லை... நமக்குத்தான் அரசு வேலை இருக்கிறதே’ என்று நாங்களும் விட்டு விட்டோம். ஆனால், தற்போது அதற்கும் திண்டாட்டமாகி விட்டது. கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. வேறு எந்த வழியும் இல்லாத நாங்கள், இந்த ஊதி யமும் இல்லாமல் எப்படிக் குடும்பம் நடத்த முடியும்? கிட்டத்தட்ட பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டோம். அதை அரசுக்கு உணர்த்தத்தான் தெருவில் இறங்கி இப்படியரு போராட்டத்தை நடத்தி னோம்...'' என்றார் வேதனையுடன்.
புதுவை மாநிலத்தில் மொத்தம் 828 பேர் இப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊதியம் வாங்காமல் ஏழ்மை நிலையில் தவிக்கும் இவர்களின் பரிதாப நிலை அறிந்து காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனமும் ஆதரவாகக் களமிறங்கி உள்ளது. அரசிடம் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி யும் உண்ணாவிரதம் இருந்தும் இவர்களுக்காகப் போராடி வருகிறது. இந்த வித்தியாசப் போராட்டத்தை நடத்தியவர்களும் அவர்கள்தான்.
சம்மேளனத் தலைவர் எம்.எல்.ஜெய்சிங்கிடம் பேசினோம். ''பொதுவாக அரசு ஊழியர்களுக்கு மாதக் கடைசியில் சம்பளம் வழங்குவார்கள். ஆனால், இவர்களுக்கோ வழக்கமாகவே 15 தேதிக்கு மேல் ஏதாவது ஒரு நாளில்தான் வழங்குவார்கள். முதலில் வேளாண் கூட்டுறவு நிறுவனமான பாசிக் மூலம் இந்த ராஜீவ்காந்தி சிற்றுணவு திட்டத்தை நடத்தியவர்கள், தற்போது பால் கூட்டுறவு நிறுவனமான பான்லே மூலம் நடத்துகிறார்கள். சீனி (சர்க்கரை), மண்ணெண்ணெய், பால் ஆகியவற்றையும், இவர்களுக்காக ஊதியத்தையும் அந்த நிறுவனமே வழங்கி வந்தது. இதற்கான நிதியை கல்வித்துறை பான்லேவுக்கு அளித்துவிடும். தற்போது அதில் ஏதோ சிக்கல் போலிருக்கிறது. அதனால் பான்லே நிறுவனம் ஊழியர்களுக்கான ஊதியத்தை தங்களால் வழங்க முடியாது என்று சொல்லிவிட்டது. கல்வித்துறையோ, 'இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எல்லாம் பான்லேதான்’ என்று கைவிரித்து விட்டது. ஒரு மாதம் ஊதியம் இல்லாவிட்டாலே கதை திண்டாட்டமாகிவிடுகிற நிலையில், ஐந்து மாதங்களாக ஊதியம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? அதனால் தான் அவர்களுக்காக களமிறங்கி அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டங்களை நடத்துகிறோம்...'' என்றார்.
விளக்கம் கேட்டு புதுவை அரசின் கல்வித் துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை தொடர்பு கொண்டோம். ''இந்தத் திட்டம் கல்வித் துறை மூலம் நடத்தப்படுவது இல்லை. தற்போது பான்லே நிறுவனம் டெண்டர் எடுத்து நடத்தி வருகிறது. அவர்கள் ஆறு மாத காலம் நடத்தி முடித்து பில் அனுப்பினால், அதை கல்வித் துறை கொடுக்கும். அப்படி அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பில் எதுவும் எங்களிடம் பாக்கி இல்லை. பான்லே ஐந்து மாத காலமாக ஊதியம் கொடுக்காதற்கும் கல்வித் துறைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும், பான்லேயின் நிலையை கருத்தில் கொண்டும், ஊழியர்களின் துயரத்தை மனதில் கொண்டும், ஆறு மாத காலம் முடியாத நிலையில், மூன்று மாதங்களுக்கான பில் தொகையை உடனடியாக பான்லேவுக்கு கொடுக்க, முதல்வர் சம்மதத்துடன் உத்தரவு தயாராகி விட்டது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் அது பான்லேவுக்கு கொடுக்கப்பட்டு, ஊழியர்களிடம் சேர்ந்துவிடும்!'' என்றார்.
பால் ஊட்டுகிறவர்களின் வயிறு பற்றி எரியலாமா?
**********************************************************************************
கரன்ட் ஆக்சிஜன் ரத்தம் இல்லை

கடலூரை அழவைத்த அலட்சிய மரணம்
''குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணி விடுறேன்னு செல்வியைக் கூட்டிட்டுப்போய், பொணமா திருப்பிக் கொடுக்குறாங்கய்யா...'' என்று கதறி அழுகிறார் முருகன்.
கடலூர் மாவட்டம் ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முருகனின் மனைவிதான் செல்வி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். சில வாரங்களுக்கு முன்பு நான்காவதாக ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நடந்ததைச் சொல்கிறார் முருகன்.
''போன 5-ம் தேதி வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தா யாரும் இல்லை. செல்வி, அவங்க அம்மாகூட ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறதா பக்கத்தில் இருக்கிறவங்க சொன்னாங்க. என்னமோஏதோன்னு பதறி, மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடினேன். 'உங்க மனைவிக்கு ஆபரேஷன் நடக்குது’னு சொன்னாங்க. 'என்கிட்ட எந்தக் கையெழுத்தும் வாங்கலை... கேட்கவும் இல்லை... எப்படி ஆபரேஷனுக்குக் கூட்டிக்கிட்டு போனீங்க?’ன்னு கேட்டேன். யாரும் பதில் சொல்லலை.
கொஞ்ச நேரத்தில் நர்ஸுங்க பதற்றமா அங்கியும், இங்கேயும் அலைஞ்சிகிட்டு இருந்தாங்க. என்னன்னு கேட்டப்ப, 'உன் மனைவிக்கு ஆபரேஷன் செய்துகிட்டு இருந்தப்ப கரன்ட் கட்டாயிடுச்சு. ஜெனரேட்டர் போடுறதுக்காக அவசரமா போறாங்க’ன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகு ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்து போயிடுச்சு, அதை எடுக்கப் போறோம்ன்னு சொன்னாங்க. அப்புறம், ரத்தம் கம்மியா இருக்குது. ரத்தம் வாங்க கடலூர் போயிருக்காங்கன்னு சொன்னாங்க. ஒரு வழியாஆபரேஷன் முடிஞ்சு ரூமுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. மறுநாள் சாயந்திரம், 'உங்க மனைவி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. நீங்க கடலூர் கூட்டிட்டுப் போங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.
கடலூர் ஆஸ்பத்திரிக்குப் போனா, 'கேஸ் ரொம்ப மோசமான நிலையில் இருக்குது’ன்னு சொல்லி என்கிட்ட கையெழுத்து வாங்குனாங்க. அங்க சேர்த்த அரை மணி நேரத்தில், 'இங்க முடியாது, பாண்டி ஜிப்மர் கொண்டு போங்க’ன்னு சொன்னாங்க. அங்கு சேர்த்த மறுநாள் இரவு 11 மணிக்கு இறந்துட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. நாலு புள்ளைங்களையும் வெச்சிக்கிட்டு இனிமே நான் எப்படி வாழப் போறேனோ தெரியலைங்க...'' என்று கதறினார்.
கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் சம்பத்திடம் பேசினோம். ''கடலூரில் இருந்து எடுத்து வந்து அந்தப் பெண்ணுக்கு ரத்தம் செலுத்தியது உண்மைதான். ஆபரேஷன்போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்தை அவரது உடம்பு ஏற்றுக் கொள்ளவில்லை. லட்சத் தில் ஒருத்தருக்கு இப்படி நடக்க வாய்ப்பு உண்டு. இது ஒரு விபத்துதானே தவிர, யார் மீதும் தவறும் இல்லை. அந்தக் குடும்பத்துக்கு நஷ்டஈடு கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய கணவன் கையெழுத்துத் தேவை இல்லை. பேஷன்ட் கையெழுத்தே போதும். மனைவி இறந்த துக்கத்தில் கணவர் ஏதேதோ பேசலாம். ஆனால் வேறு எதுவும் உண்மை இல்லை!'' என்று மறுத்தார். தீர விசாரித்து உண்மை அறியப்பட வேண்டும்!
**********************************************************************************
''தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க!'

Follow - up
புதுவை வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரச்னையைக் கடந்த 21.9.11 ஜூ.வி-யில் 'பந்தாடப்படும் மருத்துவ மாணவர்கள்’ என்ற கட்டுரையில் எழுதி இருந்தோம்.
 அந்த விவகாரம் தொடர்பாக, கல்லூரியின் இயக்குநர் நித்யானந்தன் நம்மை அழைத்துப் பேசினார். ''கடந்த வருடம் இந்திய மருத்துவ கவுன்சில் எங்கள் கல்லூரிக்கு ஆய்வுக்கு வந்தது. அப்போது கல்லூரியை ஆய்வு செய்துவிட்டு, இங்குள்ள பேராசிரியர்களைப் பற்றிய விவரங்களை வாங்கிக்கொண்டு போனார்கள். அதன் பிறகு, இரண்டு ஜூனியர் ரெசிடன்ட் மருத்துவர்கள் எங்கள் கல்லூரியில் இருந்து விலகி, வேறு கல்லூரிக்குச் சென்றுவிட்டனர். புதுவையில் உள்ள மற்ற கல்லூரிகளையும் மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்தபோது, எங்கள் கல்லூரியில் இருந்த இரண்டு மருத்துவர்களை வேறு கல்லூரியில் பார்த்து இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு கல்லூரியில் வேலை செய்வதாக தவறாகப் புரிந்துகொண்டு எங்கள் அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டார்கள். நாங்கள் நீதிமன்றத்துக்குப் போனோம். இப்படி ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதை மாணவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் நாங்கள் அட்மிஷன் போட்டோம். முதலாம் ஆண்டு தேர்வு எழுத நீதிமன்றம் அனுமதி தந்தும், பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. ஆகவே, மீண்டும் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம். நிச்சயம் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது!'' என்று உறுதியாகச் சொன்னார்.
ஆனாலும், மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக் கிறது.
         - ஆ.நந்தகுமார்
 
'டாஸ்மாக்கை மூடிட்டாங்க..!'
Follow - up
வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் கிராமத்தில், பொது மக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை எதிர்த்துப் பெண்களே ஒன்று திரண்டு அந்தக் கடைக்கு பூட்டுப் போட் டனர். இதை கடந்த 25.9.11 ஜூ.வி-யில் 'டாஸ்மாக் கடைக்குப் பூட்டு’ என்ற தலைப்பில் வெளி யிட்டு இருந்தோம். பொதுமக்களின் பிரச்னையை வேலூர் மாவட்ட கலெக்டர் நாகராஜனின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்.
''ஜூ.வி-யில் செய்தி வந்ததுமே அதிகா ரிங்க எங்க ஊருக்கு வந்து, மக்களிடம் விசாரிச்சாங்க. எல்லோருமே இந்த இடத்தில் டாஸ்மாக் கடை இருப்பதால் எங்களுக்கு பிரச்னையாக இருக்கிறது என்பதைச் சொன்னோம். உடனே கடையை மூடிட்டாங்க. எங்க நீண்ட நாள் பிரச்னையை தீர்த்து வைத்த உங்களுக்கும், கலெக்டருக்கும் எப்படி நன்றி சொல்ற துன்னே தெரியலை...'' என்று நெகிழ்ந்தார்கள் மேல்மொணவூர் மக்கள்.
கலெக்டர் நாகராஜனிடம் பேசினோம். ''இந்தப் பிரச்னையை நீங்கள் என்னிடம் சொன்னதுமே, அதிகாரிகளை அங்கு அனுப்பினேன். உண்மை தெரிந்தது. உடனே அந்தக் கடையை மூட உத்தரவிட்டேன். அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கு இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கும் அம்முண்டி என்ற இடத்துக்கு கடையை மாற்றலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதன்படி அனுமதி கொடுத்து இருக்கிறேன்...'' என்றார்.
நாமும் கலெக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தோம்.
**********************************************************************************
கே.சி.பழனிச்சாமியிடம் காசு வாங்கியவர்கள் லிஸ்ட்!

கரூர் கலக்கம்
''நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கரூரில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மணல் கொள்ளையில் ஈடுபட்டுவரும் தி.மு.க. எம்.பி-யான கே.சி.பழனிச்சாமியை  சிறையில் அடைப்போம்!'' - நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது அரவக்குறிச்சியில் ஜெயலலிதா இப்படித்தான் அறைகூவல் விட்டார். இப்போது கைதுப் படலத்தை நடத்திவிட்டார் முதல்வர்.
மாயனூரில் உள்ள தனது மில்லில் கே.சி.பழனிச்சாமி இருந்தபோது கடந்த 19-ம் தேதி மதியம் திடீரென அங்கு வந்த போலீஸார், அவரைக் கைது செய்து எட்டு வழக்குகள் போட்டு இருக்கிறார்கள். குளித்தலை குற்றவியல் நடுவர் எண் - 2 நீதிமன்ற நீதிபதி, செப்டம்பர் 3-ம் தேதி வரை அவரைக் காவலில் வைக்க உத்தரவு போட்டார். இதன் அடிப்படையில் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட கே.சி.பி-யின் உதவியாளர் சுந்தரேசன், மேலாளர் கிரிராஜ், செந்தில்ராஜா, சசிக்குமார், குமார் மற்றும் ராஜா ஆகிய ஆறு பேரை போலீஸ் தேடி வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் கே.சி.பழனிச்சாமி, அரவக்குறிச்சி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார்.
''மணல் அள்ளுவதில் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்துக்கும், கே.சி.பழனிச்சாமிக்கும் எப்போதும் பலத்த போட்டி நடக்கும். அழகிரி ஆதரவாளரான பழனிச்சாமி, தலைமையிடம் பேசி கரூரைச் சுற்றியுள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ள அனுமதி வாங்கினார்!'' என்று உள்ளூர் தி.மு.க-வினரே கிசுகிசுக்கிறார்கள். திமு.க-வில் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார் பழனிச்சாமி.
கரூர் மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் வாசுகியின் கணவர், தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டபோதே, கே.சி.பழனிச்சாமியும் கைது செய்யப்படுவார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அப்போது வலுவான  ஆதாரங் கள் கிடைக்காமல் போகவே, கரூர் போலீஸாரால் அவரை வளைக்க முடியவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாயனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கட்டளையில், அப்பகுதியின் வி.ஏ.ஓ-வான நீலமேகம் கொடுத்த புகாரை வைத்து, 'ஏற்கெனவே, மாயனூர் காவிரி ஆற்றுப் பகுதியில் மணல் அள்ள அரசு தடை விதித்தும், அதை மீறி 2009-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் கடந்த மே 13-ம் தேதி வரை கே.சி.பழனிச்சாமி உட்பட ஆறு பேர் மணல் அள்ளியதாக’ புகார் கொடுத்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து நேரில் விளக்கம் அளிக்க வருமாறு கடந்த 13-ம் தேதி கே.சி.பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாம். ஆனால், அதை அலட்சியம் செய்து விசாரணைக்கு வராமல் பழனிச்சாமி இழுத்தடிக்கவே, 'நீங்கள்
ஆஜராகவில்லை என்றால் உங்கள் மகனைக் கைது செய்வோம்’ என போலீஸ் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகே பழனிச்சாமி வெளியூரில் இருந்து கரூர் திரும்பினாராம். அவர் மில்லில் இருப்பதை அறிந்து விரைந்து சென்ற போலீஸ் அவரைக் கைது செய்தது. 'அவர் மீது விரைவில் குண்டர்  சட்டம் பாயவும் வாய்ப்பு இருக்கிறது’ என்கிறது போலீஸ் வட்டாரம்.
இந்தச் சூழ்நிலையில் கே.சி.பழனிச்சாமியிடம் பேச சிறிது வாய்ப்புக் கிடைத்தது. ''என் மீது என்ன வழக்குப் போட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. விசாரணைக்கு என்று அழைத்து வந்தார்கள். ஆனால், எதுவும் விசாரிக்காமலே கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன்!'' என்றார்
எஸ்.பி. நாகராஜிடம் கேட்டபோது, ''கே.சி.பழனிச்சாமி மீது பல குற்றச்சாட்டுகள் வந்தும், தகுந்த ஆதாரங்கள் வேண்டும் என்றுதான் காத்திருந்தோம். இப்போது ஆதாரங்கள் கிடைத்து இருப்பதால், அவரை கைது செய்துள்ளோம். இந்தக் கைதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதுதான் எங்கள் கடமை. அதைத்தான் செய்கிறோம்...'' என்றார்.
''ஜெயலலிதா அரசின் வழக்கமான பழிவாங்கும் படலம்தான் இது. உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் வெற்றியைத் தடுக்கவே இப்படி செய்கிறது அரசு. ஆனால், அவர்கள் கனவு பலிக்காது. நிச்சயம் மக்கள் ஆதரவோடு உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிப்போம்!'' என்றார் கரூரின் முக்கிய நிர்வாகியும், தி.மு.க-வின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளருமான பரமத்தி சண்முகம்.
கே.சி.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு இருப்பதால், தி.மு.க-வில் இருக்கும் அவரது எதிர் அணியினர் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். ஆனால், இதுநாள் வரை கே.சி.பழனிச்சாமிக்கு  துணை போன பொதுப்பணித் துறை, கனிம வளத் துறை, வருவாய்த் துறை, போலீஸ் துறை போன்றவற்றின் அதிகாரிகள் சிலர் அச்சம் அடைந்து உள்ளனர். இவரிடம் பணம் வாங்கி ஆரம்பத்தில் இருந்து துணைபோன அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரும் மற்றும் கரூர் ரத்தத்தின் ரத்தங்களும் அதிர்ச்சியில் உறைந்துகிடக்கின்றனர். கே.சி.பழனிச்சாமிக்கு துணைபோன கறுப்பு ஆடுகள் லிஸ்ட்டும் முதல்வருக்குப்  போகிறதாம். அதனால் இன்னும் சில அதிரடிகளை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
**********************************************************************************
தண்ணீர்... கண்ணீர்...!

ஆக்ஷன் ஜூ.வி. - அதிரடி கலெக்டர்!
''திரும்பிய பக்கம் எல்லாம் மழை பெய்ஞ்சு... காடு கழனி எல்லாம் செழிப்பா இருக்கு. ஆனா, எங்க கிராமத்துல மட்டும் குடிக்கவும் தண்ணி இல்லாம ஏழு வருஷமா நாய் படாத பாடுபடுறோம். அரசியல்வாதிகள் ஆரம்பிச்சு அதிகாரிங்க வரைக்கும் இதுபற்றி எல்லோரிடமும் சொல்லிப் பார்த்துட்டோம். யாரும் கண்டுக்கவே இல்லை. ஜூ.வி-தான் எங்க பிரச்னையைத் தீர்த்துவைக்கணும்...'' - நமது ஆக்ஷன் செல்லில் (044-42890005) ஒரு பெண்ணின் பரிதாபக் குரல் பதிவாகி இருந்தது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள மாரணம் பாளையம் என்ற கிராமம்தான் இப்படி தாகத்தில் தவிக்கிறது என்று அறிந்து விரைந்தோம். அங்கு தண்ணீர் இருக்கிறது; ஆனால், குடிக்க முடியாது என்பதுதான் பிரச்னை!
முதலில் நாம் சந்தித்த அஞ்சலி ரொம்பவே நொந்துபோய், ''நான் இந்த ஊருக்குக் கல்யாணம் முடிச்சு வந்து நாலு வருசம் ஆகுதுங்க. எங்க ஊரில் எல்லாக் குழாயிலும் மஞ்சள் கலரா தண்ணீர் வருது. அதைக் குடிக்கவே முடியாது. அதிகாரிங்க வந்து சோதனை செஞ்சு, 'இது குடிக்கிறதுக்கான தண்ணீர் இல்லை. அதனால் இதை குடிக்க வேண்டாம்’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. மாற்று ஏற்பாடு கேட்டு எங்க ஊருக்காரங்க பல அதிகாரிகள்கிட்ட மனு கொடுத் துட்டோம். ஆனா, எங்களுக்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்யலை. வேறு வழியே இல்லாம இதையேதான் வடி கட்டி, சுட வெச்சுக் குடிக்கிறோம். இந்தத் தண்ணீரை குடிச்சதால, கடந்த ரெண்டு வருஷத்துல மட்டும் ஏழு பேர் கிட்னி ஃபெயிலியர் ஆகி செத்துட்டாங்க. அடிக்கடி தோல் வியாதிகளும் வருது. சாப்பாடு செஞ்சா சோறு மஞ்சள் கலரா இருக்கும். இந்தத் தண்ணீருக்கு பயந்தே பலர் ஊரைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க...'' என்றார்.
பக்கத்தில் இருந்த பழனியம்மாள் என்பவர், ''இந்தத் தண்ணியைக் குடிச்சு என்னோட உடம்பெல்லாம் எப்படி ஆயிடுச்சுனு பாரு தம்பி...'' என்று காட்ட, நாம் ஆடிப்போனோம். அவர் உடம்பு முழுக்கத் தோலில் செதில்கள் போல வெடித்து இருந்தன. கண்ணம்மாள் என்பவருக்கோ கால்கள் வீங்கிப் புண் நொதித்துப் போயிருந்தது. ஈ மொய்க் காமல் இருக்க பாலீத்தின் கவரில் காலை மூடி வைத்திருந்தார்.
அந்த சமயத்தில் அங்கே வந்த ஒருவர், ''என் பேர் சுப்பிரமணிங்க...'' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ''திருப்பூர் சாயப் பட்டறை கழிவுகள், எங்க ஊருக்கு பக்கத்துல ஓடும் ஒரத்துப்பாளையம் ஆத்துலதான் கலக்குது. இதனால கிராமத்தோட நிலத்தடி நீர் கெட்டுப் போச்சு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊரில் ஆழ் துளைக் கிணறு போட்டாங்க. தண்ணீர் பிரச்னைக்கு ஒரு வழியா முடிவு வந்துடும்னு சந்தோஷப்பட்டோம். ஆனா, அதுவும் உருப் படலை. ஊராட்சி அலுவலகத்துல புகார் செஞ்சோம். அதிகாரிகளும் சரி, குடிநீர் வாரியமும், 'இந்தத் தண்ணீரையும் குடிக்கக் கூடாது’னு அறிவிச்சாங்க. ஆனா, இன்று வரை குடிநீர் பிரச்னைக்கு யாரும் எதுவும் செய்யலை. இப்படியே போயிட்டு இருந்தா... கொஞ்ச நாளில் எங்க கிராமமே அழிஞ்சிடும்!'' என்று வேதனையைக் கொட்டினார்.
இந்தப் பிரச்னையை திருப்பூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் கவனத்துக்குக் கொண்டுபோனோம். எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட் டவர், ''உடனடியாக இந்தப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுத்து, சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். அதோடு, அங்கு உள்ள மக்களுக்கு என்னென்ன நோய்கள் வருகின்றன? எதனால் வருகின்றன? என்பதையும் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை அளிக்கவும் மருத்துவக் குழுவை அனுப்பி வைக்கிறேன். அதன் பிறகு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்!'' என்று நம்பிக் கையோடு சொன்னார். சொன்னபடியே இரண்டு நாளில் கலெக்டரே நம்மைத் தொடர்புகொண்டு, ''அந்த கிராமத்துக்குப் பக்கத்து ஊரில் இருந்து காவிரி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. நிரந்தரமாகத் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.
மீண்டும் கிராமத்துக்குச் சென்றோம். ''எங்க பிரச்னையை இவ்வளவு சீக்கிரமா தீர்த்துவைத்த கலெக்டருக்கும், ஜூ.வி-க்கும் நாங்க கால காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டு இருக்கோம்!'' என்று நெகிழ்ந்துபோய் சொன்னார்கள்.
**********************************************************************************
'அட்வான்ஸாகவே ஆடு பலி!'

உள்ளாட்சி வேட்டை ஆரம்பம்
ள்ளாட்சித் தேர்தல் ஜுரம் ஆரம்பித்ததும், கட்சிக்காரர்கள் ஸீட் வாங்குவதற்காக மாவட்டச் செயலாளர்களையும், கட்சித் தலைவர்களையும் போட்டி போட்டுக்கொண்டு சந்திப்பார்கள். ஆனால், சேலம் மாவட்டத்திலோ கோயில்களில் அருள்வாக்கு சொல்பவர் களைத் தேடிச் செல்வதில் அரசியல் கட்சியினர் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
அப்பூடியா?!
சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 10-வது கிலோ மீட்டரில் கிழக்கே பிரியும் சாலையில் சென்றால், பனமரத்துபட்டியைத் தாண்டியதும் இருக்கிறது அல்லேரி முனியப்பன் கோயில். கரை வேட்டிகள் அதிகம் தென்படும் பகுதி இது. இங்கு உள்ள கோயில் பூசாரியிடம் பேச்சுக் கொடுத்தோம். ''உள்ளாட்சித் தேர்தலில் ஸீட் கிடைக்குமா? போட்டியிட்டால் ஜெயிக்க முடியுமா? என்று வாக்கு கேட்க இங்கே எல்லாக் கட்சிக்காரங்களும் வருவாங்க. சாமி மடியில் பூ போட்டுப் பார்த்து அவங்க நினைக்கிற பூ வந்துட்டா... தொட்ட காரியம் எல்லாம் ஜெயமாகும். சட்டமன்றத் தேர்தலில் நம்ம முனியப்பன் சொன்ன பல பேர் இன்னிக்கு சட்டமன்றத்தில் இருக்காங்க தெரியுமா? இதுக்கு எல்லாம் நாங்க காசு வாங்குறது கிடையாது. அவங்களா பார்த்துக் கொடுப்பாங்க...'' என்று விளக்கம் கொடுத்தார்.
மல்லூர் அருகே உள்ள அத்தனூர் அம்மன்தான் இந்த ஏரியா அரசியல் வாதிகளுக்கு ஆபத்பாந்தவன். பூசாரி கேசவனைப் பார்த்தோம். ''அம்மன் உத்தரவு கொடுத்துட்டா தொட்ட காரியம் பட்டுன்னு துலங்கும். அதனால தான், சுத்து வட்டாரத்தில் இருக்கிற அரசியல்வாதிங்க இங்கேயே வர்றாங்க. ஆறு பேப்பரில் வெள்ளை, மஞ்சள், சிவப்புனு பல கலர் பூக்களை மடிச்சு அம்மன் காலடியில் வெச்சிருப்போம். சாமிக்குப் பூஜை போட்டதும், அதில் ஒரு சீட்டை எடுக்கணும். சிவப்பு கலர் வந்தால் தேர்தலில் ஸீட் கிடைக்கும்... ஜெயிச் சிடலாம். இப்போ துணை சபாநாயகரா இருக்கும் தனபால் சட்டமன்ற தேர்தலில் அம்மன்கிட்ட வாக்கு கேட்டுட்டு, அம்மன் உத்தரவு கொடுத்த பிறகுதான் ஸீட் கேட்டார். ஜெயிச்சதும், முதலில் வந்து அம்மனை தரிசனம் பண்ணிட்டுத்தான் சென்னைக்குப் போனார். இன்னிக்கு துணை சபாநாயகரா இருக்கார்.
எங்க அம்மனோட சக்தி தெரிஞ்சு, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்கள் இங்கே வந்து பூஜை பண்ணிட்டுப் போனாங்க. போன தி.மு.க. ஆட்சியில் எம்.எல்.ஏ-க்களாக இருந்த சின்னதுரை, கே.பி.ராமசுவாமி ஆகியோருக்கும் ஸீட் கிடைச்சதே அம்மனோட உத்தரவினால்தான்.
இப்போ உள்ளாட்சித் தேர்தல் வரப்போகுது. அதனால கூட்டம் இன்னும் அதிகமாகிடுச்சு. ஸீட் கிடைக்குமான்னு கேட்க ஒரு கூட்டமும், கிடைச்சா ஜெயிக்க முடியுமான்னு கேட்க ஒரு கூட்டமும் வந்துக்கிட்டே இருக்கு. நீங்க வருவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான், அத்தனூர் பேரூராட்சிக்குப் போட்டியிடும் ராமதாஸ் அருள்வாக்கு கேட்க வந்தார். அவர் ஜெயிப்பார்னு ஆத்தா சொல்லிட்டா. இனி எந்த சக்தியாலும் அவரோட வெற்றியைத் தடுக்க முடியாது!'' என்றார் நம்பிக்கையோடு.
சேலம் - பெங்களூரு நான்கு வழிச் சாலையில் வீற்றிருக்கும் வெண்ணங்குடி முனியப்பன் கோயிலில் தினந்தோறும் கிடா விருந்து அமர்க்களப்படுகிறது. ''வெண்ணங்குடி முனியப்பன்கிட்ட நாம நினைக்கிற காரியம் ஜெயமாகணும்னு வேண்டிக்கிட்டு சூலாயுதம் வாங்கி, அதற்கு ரத்தக் காவு கொடுத்து, நட்டு வெச்சிட்டுப் போகணும். நினைக்கிற காரியம் நடந்துட்டா... அதுக்குப் பிறகு ஆடு வெட்டு வாங்க. ஆனா, இப்போ அரசியல்வாதிங்க அந்த டிரண்டையே மாத்திட்டாங்க. 'எனக்கு இந்த தேர்தலில் ஸீட் கிடைச்சே ஆகணும். அதுக்குதான் உனக்கு இந்த நேர்த்திக்கடனை செலுத்துறேன்’னு முன்கூட்டியே ஆடு பலி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. முன்பு எல்லாம் அமாவாசை, ஞாயிற்றுக் கிழமைகளில்தான் ஆடு வெட்டுவாங்க. உள்ளாட்சித் தேர்தல் சூடு பிடிச் சதில் இருந்து இங்கே தினந்தோறும் திருவிழா தான்...'' என்கிறார்கள் கோயிலுக்கு அருகே கடை வைத்திருப்பவர்கள்.
கட்சிப் பாகுபாடு இல்லாமல் இப்படிக் கோயில்களை நோக்கி ஒரு குரூப் படை எடுத்துக் கொண்டிருக்க.. சேலத்தின் தி.மு.க. பிரமுகர் ஒருவர் கடந்த வாரத்தில், அதிகாலை நேரத்தில் வாழப்பாடி அருகே உள்ள ஒரு ஜோதிடர் வீட்டுக்குப் போனாராம். பிரமுகரின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த ஜோதிடர், 'இன்னும் நாலு நாள் போலீஸில் இருந்து தப்பிச்சிட்டீங்கன்னா போதும். அதுக்குப் பிறகு உங்களை யாரும் எதுவும் பண்ணிட முடியாது. சுக்கிர திசை உச்சத்தில் வருவதால், அரசியலில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்குது...’ என்று சொன்னாராம். ஜோதிடர் வாக்குப்படி தி.மு.க. பார்ட்டியும் தலைமறைவானராம். இந்த நேரத்தில் அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துவிட்டதாம். ஜோதிடர் சொன்னது பலிக்க ஆரம்பித்திருப்பதால், 'இனி சேலமே நம்ம கையில்தான்!’ என்ற மிதப்பில் இருக்கிறாராம் அந்தப் பிரமுகர்.
என்னத்தச் சொல்ல?!
**********************************************************************************
சுமங்கலிக்கு விதவை பென்ஷன்!

ஆண்டிபட்டி மொகா மோசடி
''என் கணவர் இறந்துவிட்டதால், விவசாயத் தொழிலாளர் நலத்திட்டத்தில் எனக்கு வழங்கப்பட வேண்டிய குடும்ப நல நிதியை, வேறொரு பெண்ணுக்குக் கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டனர்...'' என ஆண்டிபட்டி தாலுக்கா அலுவலக வாசலில் ஒரு பெண் அழுது புலம்பிக்கொண்டு இருப்பதாக, ஜூ.வி. வாசகர் ஒருவர் நமக்கு போனில் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்தோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் அம்பிகா. வெள்ளிமலை அருகே பொம்மராசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் சொன்ன தகவல்கள் எல்லாமே அதிர்ச்சி ரகம். தாலுக்கா அலுவலகத்தில் கொத்துக் கொத்தாக மோசடி கள் நடந்துள்ளன என்பது தெரியவந்தது.
அதனால் அம்பிகாவுக்கு இந்த இடத்தில் நியாயம் கிடைக்காது என்பது தெரியவரவே, அவரைஅழைத்துக் கொண்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று, கலெக்டர் பழனிச்சாமி முன் நிறுத்தினோம். விசாரணை செய்த கலெக்டரும் அதிர்ச்சி அடைந்து, உடனே எஸ்.பி-யான பிரவீண் குமார் அபினபுவைத் தொடர்புகொண்டு, அம்பிகாவிடம் புகார் வாங்கி வழக்குப் பதிவு செய்ய உத்தரவு போட்டார்.
அதன்படி மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார், ஆள்மாறாட்டம், அரசு ஆவணங்களைத் திருத்தியது உள்ளிட்ட பிரிவுகளில், ஆண்டிபட்டி நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் மாதேஸ்வரன், மயிலாடும்பாறை கிராம நிர்வாக அலுவலர் குபேந்திரன், அம்பிகாவுக்குச் சேர வேண்டிய பணத்தை வாங்கிய விஜயா, புரோக்கர் ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். நான்கு நாட்களாக ஆண்டிபட்டி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வரும் போலீஸார், 'இப்படி எல்லாம் கூடவா மோசடி செய்வார்கள்!’ என மலைத்துவிட்டனர்.
போலீஸாரிடம் பேசினோம்... ''புரோக்கர்களைக் கையில் வைத்துக்கொண்டு இந்த தில்லுமுல்லு நடந்துள்ளது.  தாசில்தார் மாதேஸ்வரனின் நடவடிக்கைகள் சந்தேகமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாகப் போலி ஆவணம் தயாரித்து, 422 பேருக்கு நலத்திட்ட உதவிக்கான காசோலை கொடுத்து உள்ளார். இந்தத் திட்டத்தில் கிடைக்கும்  6,000 மனுதாரருக்கும், மீதி உள்ள  3,000-த்தை தாசில்தார் மற்றும் புரோக்கர்களும் பங்கு போட்டுள்ளனர். இது தவிர, இறந்தவர்கள் பட்டியலை தயாரித்து, யாராவது ஒரு பெண் போட்டோவை ஒட்டி 'அவர்தான் இறந்தவரின் மனைவி’ என  12,500-க்கான காசோலை கொடுத்து உள்ளனர். இந்த திட்டத்தில் 222 பேர் போலி ஆட்கள்... இப்படித்தான், அம்பிகா பெயரில் வேறு ஒரு பெண்ணுக்கு காசோலை கொடுத்து இருக்கிறார்கள். இவருக்குத் தர வேண்டிய பணத்தை, வாலிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த விஜயா என்ற பெண்ணுக்குக் கொடுத்து உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 30 மற்றும் ஆகஸ்ட் 18 ஆகிய தேதிகளில்  16 லட்சத்துக்கான காசோலைகளுக்கு ஸ்டேட் வங்கியில் பணம் பெறப்பட்டு உள்ளது. மேலும், வாலிப்பாறையைச் சேர்ந்த சேகர், ஜெயக்கொடி, முருகன் ஆகிய மூவரும் உயிருடன் இருக்கின்றனர். ஆனால், மூவரும் இறந்துவிட்டதாக, ஆவணங்கள் தயாரித்து அவர்களின் மனைவிகளை விதவை போல போட்டோ எடுத்து, விதவை பென்ஷன் கொடுத்து உள்ளனர். தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, வருஷநாடு, முத்தாலம்பாறை, கோம்பைத்தொழு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பலர் வெளியூர்களில் இருக்கின்றனர். இவர்களில் 220 பேர் பெயரில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதையும் மாத சம்பளம் போல புரோக்கர்களே பெற்றுக்கொள்கின்றனர்...'' என்று போலீஸார் மடமடவென ஒப்பித்தனர்.
எஸ்.பி-யிடம் பேசினோம் ''குற்றவாளிகள் தலைமறைவு ஆகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து உள்ளோம். இந்தக் குற்றவாளிகளுக்கு பின்புலமாக பலரும் செயல்பட்டுள்ளனர்.அவர்களையும் தேடி வருகிறோம். குற்ற வாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம்...'' என்றார்.
கலெக்டரிடம் பேசினோம். ''பாதிக் கப்பட்ட அம்பிகாவுக்கு உரிய பணத்தை வழங்க உத்தரவு இட்டுள்ளேன். பெரியகுளம் ஆர்.டி.ஓ-வான அனிதா, விசாரணை செய்து வருகிறார். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் அடையாள அணிவகுப்பு நடத்த திட்டம் இட்டுள்ளோம். தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது...'' என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்க பல வகைகளிலும் முயற்சி செய்தும் இயலவில்லை. அவர்கள் விளக்கம் கொடுத்தால் பிரசுரம் செய்யத் தயாராகவே இருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள புரோக்கர்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை மூடிமறைக்க மேல்மட்ட அளவில் இருந்து பரிந்துரை வருவதாக போலீஸார் சிலர் கூறுகின்றனர். தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டால்தான், மற்ற இடங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாது!
**********************************************************************************
சிதம்பரத்தை சீண்டும் கோஷ்டி கானம்

காரைக்குடி கலாட்டா
ள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்த நாளை, கடந்த ஒரு மாத காலமாக பாட்டுக் கச்சேரி, பட்டிமன்றம், குத்தாட்டம் என கொண்டாடி வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.  இதற்கு திருஷ்டிப் பொட்டு போல் காரைக்குடியில், கடந்த 19-ம் தேதி, 'பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!’ என்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது, காங்கிரஸின் இன்னொரு கோஷ்டி. சிதம்பர விசுவாசிகளால் புறக்கணிப் பட்ட இந்தப் போராட்டத்தில் சிதம்பர எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடியதால், ஏரியா வில் பல்ஸ் எகிறி உள்ளது.
உண்ணா விரதத்தை முன் னின்று நடத்திய காங்கிரஸ் கவுன்சிலர் மெய்யரை சந்தித்தோம். மனைவி மக்களுடன் ராஜீவ் காந்தி மகிழ்ந்திருக்கும் போட்டோவை உண்ணாவிரதப் பந்தல் அருகே ஃபிளக்ஸ் போர்டாக வைத்திருந்தார்கள். ''விடுதலைப் புலிகளுக்கு வால்பிடிக்கும் சீமான் போன்ற வர்கள், 'சிதம்பரத்தின் வேஷ்டியை உருவாமல் விடமாட்டோம்’னு இங்கு வந்து பேசிட்டுப் போறாங்க. இங்குள்ள காங்கிரஸ் பெரும் புள்ளிகளுக்கு அதைத் தட்டிக் கேட்கத் திராணி இல்லை. இந்தப் போராட்டத்தை நடத்தச் சொல்லி முன்னாள் எம்.எல்.ஏ-வான சுந்தரத் துக்குத் தகவல் குடுத்தோம். ஆனால் அவரோ, 'அதெல்லாம் வேண்டாம்; அமைச்சருக்கு (ப.சிதம்பரம்) அதில் விருப்பம் இல்லை’ன்னு சொல்லிட்டார்.
எங்களைப் போன்ற மானமுள்ள காங்கிரஸ்காரர்களால் அதைப் பொறுக்க முடியவில்லை. அதனால்தான் காங்கிரஸ் மானம் காக்க நாங்களே உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செஞ்சோம். அப்படியும், 'அமைச்சர் கோவிச்சுகுவாரு’ன்னு சொல்லி காங்கிரஸாரை உண்ணாவிரதத்துக்கு வரவிடாமல் சிலர் தடுத்தாங்க. உடனே திருவாடானை முன்னாள் எம்.எல்.ஏ-வான ராமசாமி அண்ணன்கிட்ட போய் சொன்னேன். 'நீங்க தைரியமா போங்க... நம்ம ஆளுங்க கலந்துக்குவாங்க’னு சொல்லி அனுப்புனாரு. அதுபோலவே அவரோட மகன் கருமாணிக்கம் உள்ளிட்ட அவங்க ஆதரவாளர்கள் எல்லாரும் போராட்டத்துல கலந்துக்கிட்டாங்க. எலெக்ஷன் வந்தா மட்டும்தான்சிவகங்கை மாவட்டத்துல காங்கிரஸ் கூட்டம் போடுவாங்க. கட்சி சார்பா போராட்டம் நடத்தி 15 வருஷமாச்சு. கடந்த முறை சிவகங்கை தொகுதியில மூணு எம்.எல்.ஏ-க்கள் ஒரு மத்திய அமைச்சர் இருந்தும் காங்கிரஸ் கட்சி வளரலை. இங்கே இருக்கிற சிலர் கட்சி வளரணும்னு நெனைக்கல. இந்தப் போராட் டம் குறித்து மாவட்ட, நகர தலைவர்களுக்கு தகவல் குடுத்திருந்தோம். யாருக்கோ பயந்துக்கிட்டு அவங்க யாரும் கலந்துக்கலை. இவங்களும் எதுவும் செய்யுற தில்லை; செய்யுறவங்களயும் விடுறதில்லை. இப்புடி இருந்தா கட்சி எப்புடி வெளங்கும்?'' என்றார்.
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை சிங்கம், ''தூக்குத் தண்டனை கைதிகளுக்கு வக்காலத்து வாங்கும் சீமான் போன்றவர்கள் விடுதலைப் புலிகளின் கொடிகளை ஊர் முழுக்கப் பறக்க விடுகிறார்கள். முன்பும் இப்படி அவர்களுக்கு அளவுக்கு மீறி நாட்டில் உலவ சுதந்திரம் கொடுத்த காரணத்தால்தான், ராஜீவ் காந்தியை இழந்தோம். இதெல்லாம் தெரிந்தும் உள்துறை அமைச்சர் சிதம்பரம், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு பதிலாக, போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அவரது ஆட்கள் மெனக்கெடுகிறார்கள். வேலூரிலிருந்து சீமான் நடைபயணம் போவதாக அறிவித்தார். அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் கிளர்ந்து எழுந்ததால் அவரால் நடைபயணம் போக முடியவில்லை. அதேபோல், உள்துறை அமைச்சருக்குஉண்மையிலேயே செல்வாக்கு இருந்திருந்தால்... சீமானை இந்த மாவட்டத்துக்குள் நுழைய விட்டிருக்கலாமா? இங்குதான் காங்கிரஸை குழி தோண்டி புதைச்சுட்டாங்களே!'' என்று கொதித்தார்.
நகர காங்கிரஸ் தலைவர் சிவானந்தத்திடம் புறக்கணிப்பு குறித்து கேட்டதற்கு, ''உண்ணாவிரதப் போராட்டம் குறித்து எனக்கும் மாவட்டத் தலைவருக்கும் தகவல் கொடுத்ததாகச் சொல்வது வடிகட்டிய பொய். ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்பதில் எந்த காங்கிரஸ்காரனுக்காவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? அமைச்சர் சிதம்பரத்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இருந்ததால்... அது முடிந்ததும் போராட்டம் நடத்தலாம் என்று பேசி இருந்தோம். ஆனால், அதற்குள்ளாக இவர்கள் ஓர் அணியாகத் தயாராகி உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். கட்சியின் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்து றாங்கன்னு சொல்லி நாங்கள் தடுத்திருக்க முடியும். பிரச்னை வேண்டாம் என்றுதான் இதில் தலையிடாமல் ஒதுங்கி இருந்துட்டோம்...'' என்றார்.
மாவட்டத் தலைவர் ராஜரத்தினமோ, ''உண்ணா விரதப் போராட்டம் குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. அதுவும் இல்லாமல், 'மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தது நீதிமன்றம். அதை எதிர்த்துப் போராட் டங்களை நடத்தினால், ஏதோ நாம்தான் தூக்கில் போடச் சொன்னது போல் ஆகிவிடும். அதனால் இந்தப் பிரச்னையை சட் டத்தின் நடவடிக்கைக்கு விட்டுவிட்டு அமைதியாக இருப் போம்’னு ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார். அதனால் நாங்கள் இந்த விஷயத்தை பெரிது படுத்தவில்லை...'' என்றார்.
''உள்ளாட்சித் தேர்த லில் ப.சிதம்பரத்தின் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால், இவர்களது கனவு நிறைவேறாது!'' என்கிறார்கள் உள்துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்.
எந்த ஒரு சூழ்நிலையிலும், காங்கிரஸையும் கலாட்டாவையும் பிரிக்கவே முடியாது போல் தெரிகிறதே!
**********************************************************************************
''உங்கள் மனுவில் கையெழுத்திடத் தயார்!''

கூடங்குளம் போராட்டக்காரர்களிடம் கூறிய ஜெ.!
ணு மின் நிலையங்களுக்கு எதிராக உலகெங்கிலும் எதிர்ப்புகள் வலுத்து வந்தாலும், இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள கூடங்குளத்தில் இருந்து வந்திருக்கும் எதிர்ப்பு எரிமலைக் குழம்பாகத் தகிக்கிறது. இதில் முதல்வரின் மனமாற்றம்தான் முக்கியமானது.
'கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதே. மக்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று 18-ம் தேதி ஓர் அறிக்கைவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதை எதிர்த்து, அணுமின் நிலைய ஆபத்துகளின் உண்மையைப் புரியவைக்க 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் அறிக்கை ஒன்றை முதல்வரின் கவனத்துக்கு அனுப்பினர். அது முதல்வர் பார்வைக்குச் சென்றிருக்கும் என்று நம்புகிறார்கள் அவர்கள்.
முதல்வரின் அறிக்கைக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்தது போராட்டம். பட்டினிப் போராட்​டத்தில் கலந்துகொண்ட 127 பேரில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போதும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. சிகிச்சை முடிந்து மீண்டும் போராடத் துவங்கினார்கள். பட்டினிப் போராட்டத்தின் சூடு மேலே மேலே ஏறுவதை உணர்ந்த முதல்வர், கடந்த 19-ம் தேதி, 'கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்துக’ என்று, பிரதமருக்கு தான் கடிதம் எழுதி இருப்பதாக ஓர் அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களை தன்னைச் சந்திக்க வரச் சொன்னார் முதல்வர். 21-ம் தேதி இவர்கள் சந்திப்பதற்கு முன்னதாக  அணுசக்தித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் முதல்வரைச் சந்தித்துப் பேசினார்கள். 'அனைத்து வகையிலும் அணு மின் நிலையம் பாதுகாப்பாக இருக்கிறது.’ என்று  அவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொன்னார்கள். 
அவர்கள் சென்ற பிறகு போராட்டக் குழுவில் இருந்து சுப.உதயகுமாரன், வழக்கறிஞர் சிவசுப்​பிரமணியன் உட்பட சுமார் 22 பேர் முதல்வரைச் சந்தித்தனர். முதல்வர் ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், செந்தூர்​பாண்டியன் போன்றோர் இருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்தது அந்தச் சந்திப்பு.
'மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பைகளை ஒழித்தல் என்று நீங்கள் எவ்வளவோ பசுமையான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறீர்கள். அணுசக்தி தேவை இல்லை என்று நீங்கள் முடிவெடுக்க வேண்டும். தவிர, மரபு சாரா எரிசக்தி முறைகளுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு, ஹரிபூரில் அறிமுகப்படுத்த இருந்த அணு மின் நிலையத் திட்டத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதேபோலவே, இந்தத் திட்டத்தையும் நிறுத்த நீங்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்!’ என்றும், அணு மின் நிலையங்களின் அபாயம்பற்றி தகுந்த அறிக்கைகள், ஆவணங்களுடன் முதல்வருக்கு விளக்கியும், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்கள் போராட்டக் குழுவினர்.
'சுமார்  13,000 கோடி செலவு செய்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது மத்திய அரசு. அதை திடீரென்று மூடு என்று சொன்னால், அவ்வளவு நன்றாக இருக்காது. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன். தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் அனைத்துக் கட்சிகளில் இருந்தும், போராட்டக் குழுவில் இருந்தும் பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி மனு ஒன்றை அளிப்பார்கள். நீங்கள் தயாரித்துத் தரும் கோரிக்கை மனுவில் நான் கையெழுத்து போடுகிறேன். பிரதமரைச் சந்தித்துப் பேசுவதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு அனுமதி பெற்றுத் தருகிறேன். தவிர, இதுவரை பல்வேறு திட்டங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். அவற்றை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அப்படி இருக்க, அணுசக்தி தேவையே இல்லை என்று என்னால், ஒரே இரவில் முடிவெடுத்து அதற்காகத் தீர்மானம் நிறைவேற்ற  முடியாது. வேண்டுமானால், தற்காலிகமாக இந்தத் திட்டத்தை நிறுத்திவைக்கச் சொல்லி அமைச்சரவையில் 22-ம் தேதி கூட்டம் ஒன்றை நடத்தி அதில் தீர்மானம் நிறைவேற்றுவேன். கூடவே, உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக் குழு மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறச் செய்கிறேன். மற்றபடி, நீங்கள் உங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்!’ என்று இவ்வாறு முதல்வர் போராட்டக் குழுவினருடன் பேசி இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.
முதல்வர் அளித்த இந்த உறுதியை ஏற்று, போராட்டக் குழுவினர் 'உண்ணாவிரதத்தை மட்டும் வாபஸ் பெறுகிறோம் என்றும், ஆனால் இந்தத் திட்டம் நிறுத்தப்படும் வரை மற்ற அனைத்து போராட்டங்கள் தொடரும்’ என்றும் முதல்வரிடம் சொல்லி இருக்கிறார்கள்.''உங்களது போராட்டங்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களையே அதில் நான் கலந்து கொள்ளச் செய்கிறேன்!'' என்று சொல்லும் அளவுக்கு உற்சாகம் கொடுத்தாராம் முதல்வர்.
ஆண்டனிராஜ், ந.வினோத்குமார்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
ஜெ. மனமாற்றத்துக்கு மேதா காரணமா?
போராட்டத்தை வாழ்த்திப் பேச வந்த மேதா பட்கர், ''குஜராத் முதல்வரான நரேந்திர மோடி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இரண்டு தூதுவர்களை அனுப்பிய ஜெயலலிதா, இங்கே போராடும் அபலை மக்களை சந்திக்க ஏன் வரவில்லை? அவர் நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் இங்கே வந்திருக்க முடியுமே? உயிரைப் பணயம் வைத்து போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் இந்த மக்களின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும்தான் பொறுப்பு. அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியது இருக்கும்!'' என எச்சரித்தார்.
இது முதல்வரின் கவனத்துக்குப் போன பிறகுதான் அவர் மனமாற்றம் அடைந்ததாகச் சொல்கிறார்கள்.
கேரளாவுக்குப் பரவ இருந்த போராட்டம்!
கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளை நிறுத்த வலியுறுத்தி 11 நாட்களாக மக்கள் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.  குமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் அணு உலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த திட்டத்தால் கேரளாவிலும் பாதிப்பு ஏற்படும் என்பதால், திருவனந்தபுரத்திலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஜெ. அறிவிப்பால் அந்தப் போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி விழுந்துள்ளது!
புறக்கணிக்கப்பட்ட மைக்கேல் ராயப்பன்
ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வான மைக்கேல் ராயப்பன் இந்தப் போராட்டம் பற்றி சட்டமன்றத்தில் பேசவில்லை என்று மக்கள் கோபப்பட்டார்கள். ''நான் பேசுவதற்கு அனுமதி கேட்டேன். ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை!'' என்று அவர் விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து விஜயகாந்த் இங்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார்.
இதற்கிடையே, போராட்டக் குழுவினருக்கு முதல்வரிடம் இருந்து சென்னைக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவர்களில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த 21-ம் தேதி சென்னைக்கு வந்தனர். இந்தப் பட்டியலில்  மைக்கேல் ராயப்பன் மற்றும் தி.மு.க-வினர் சிலரின் பெயர்கள் மட்டும், அரசு தரப்பில் நீக்கப்பட்டன.
**********************************************************************************
மினிட் புக் எழுதிய முதல் கம்யூனிஸ்ட்!

இழப்பு
தோழர் சி.எஸ். தனது 102-வது வயதில் மூச்சை நிறுத்திக் கொண்டார். அவருக்கு கடந்த ஜூலை 16-ம் தேதிதான் 102 வயது ஆனது. அம்பத்தூர் நியூசெஞ்சுரி மருத்துவமனை விடுதியில் கடந்த ஒன்பது மாதங்களாகத் தங்கியிருந்தார். மூத்த தோழரை வாழ்த்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ஏ.எம்.கோபு உள்ளிட்டவர்கள் சென்றார்கள். ''என்ன... எல்லாரும் சேர்ந்து வந்திருக்கீங்க?'' என்று கேட்டார் சி.எஸ். ''இன்னிக்கு உங்கள் பிறந்த நாள் தோழர். ஒரு விழா எடுக்கப்போறோம்!'' என்றார் தா.பா.
''என் பிறந்த நாள்தான் முக்கியமா? கட்சி வேலையைப் பாருங்க!'' என்று ஆரம்பத்திலேயே மறுத்திருக்கிறார். கட்சி, கொள்கைகள் சம்பந்தமாக பாண்டியனிடமும் கோபுவிடமும் பல கேள்விகளைக் கேட்டுள்ளார். அதன்பிறகு, ''இந்த விழா, பாராட்டு நடத்துவது எல்லாம் வேண்டாம்...'' என்று சொல்லிவிட்டு அவர்களை வழி அனுப்பிவைத்தார். இரண்டு மாதங்களில் - செப்டம்பர் 18-ம் தேதி இறந்து போனார்!
தேர்தல் மோதல்கள், பதவிப் போட்டிகள் நிறைந்த கார்ப்பரேட் அரசியல் உலகில் அதன் சாயல் எதுவும் அண்டாமல் வாழ்ந்து மறைந்த மனிதர்களில் ஒருவர் சி.எஸ்.சுப்பிரமணியம். 1940-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி ஆங்கில அரசாங்கம் அனைத்துப் பத்திரிகையிலும் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
'இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் தேடப்பட்டு வரும் கீழ்க்கண்ட நபர்களை கைது செய்வதற்கு உதவும் நம்பிக்கையான தகவல்களைத் தரும் எந்த ஒரு நபருக்கும் ரயில்வே துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலும் மற்றும் சென்னை சி.ஐ.டி. இலாகாவும் 100 ரூபாய் தரும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், சுரேந்திர மோகன் குமாரமங்கலம்... ஆகிய மூவரைத் தொடர்ந்து சி.எஸ். சுப்பிரமணியம் என்ற பெயரும் இருந்தது.
'நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர். ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அதிகாரி சி.எஸ்.சுந்தரம் ஐயரின் மகன். வயது 31/40 உயரம் 5 அடி 7 அங்குலம். ஒல்லியாக இருப்பார். உருண்டை முகம். மாநிறம். வாரி விடப்பட்ட தலை’ என்று அடையாளம் சொல்லப்பட்டது. 'இந்த நான்கு நபர்களையும் உபசரிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று எச்சரித்தது அந்த விளம்பரம். அப்போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு இருந்தது. தலைவர்களில் பாதிப் பேர் சிறையில் இருந்தனர். மீதிப் பேர் தலைமறைவாக இருந்தனர். தலைமறைவு மனிதர்களில் ஒருவர் சி.எஸ்.
துள்ளும் இளைஞராக இருந்த அவருக்கு ரகசிய இடங்களுக்கு மற்ற தோழர்களை அழைத்து வரும் வேலை தரப்பட்டது. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த பி.ராமமூர்த்தியை அதை மீறி வெளியே கொண்டுவந்து, சைக்கிளில் உட்கார வைத்து பல கிலோமீட்டர் தூரம் அழைத்து வந்து கும்பகோணத்தில் வாடகைக் கார் பிடித்து ஏற்றி விட்டு... சென்னையில் இவர்கள் ரகசியமாக வைத்திருந்த தியாகராய நகர் அறைக்கு கொண்டு வந்து சேர்த்த 'த்ரில்' நிறைந்த தியாக வாழ்க்கை சி.எஸ்.ஸுக்கு உண்டு. அந்தக் காலத்தில் தியாகராய நகர், பெரம்பூர் ஆகிய இரண்டு இடங்களில் இவர்களுக்கான ரகசிய அறைகள் இருந்தன. 'திருடர்கள் ரகசியமாக இரவு நேரத்தில் வந்து செல்கிறார்கள்’ என்று யாரோ தகவல் கொடுக்க... காவல்துறை கம்யூனிஸ்ட்கள் ஏழு பேரைக் கைது செய்தது. அந்த வழக்குக்கு 'சென்னை சதி வழக்கு’ என்று பெயர்.
'பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க சதி செய்தார்கள்’ என்று இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு ஆதாரமாக இரண்டு டைப்ரைட்டர் மெஷின்களைக் காட்டி னார்கள். தினமும் நீதிமன்றத்துக்கு வரும் போது 'கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத்’ என்று சி.எஸ். கத்துவார். மற்ற தோழர்கள் இதை எதிரொலிப்பார்கள். சுமார் ஓராண்டு காலம் இந்த வழக்கு நீதிபதி வி.அனுமந்தராவ் முன் நடந்தது. தினந்தோறும் 'சுதேசமித்ரன்’ பத்திரிகை இந்த விவாதங்களை பக்கம் பக்கமாக வெளியிட்டது. 'நாட்டில் கம்யூ னிஸ்ட் என்ற பெரிய கட்சி இருக்கிறது. அதற்கு ஏராளமான இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது. அவர்கள் நினைத்தால் ஆங்கில அரசாங்கத்தையே கலைத்துவிட முடியும்’ என்ற தோற்றம் அதற்குப் பிறகுதான் உருவானது. அப்படிப்பட்ட சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கியவர்களுள் ஒருவர் அவர்.
சென்னையில் பிரபலமான பின்னி மில் மற்றும் எலெக்ட்ரிக் டிராம்வே கம்பெனித் தொழிலாளர்களை வைத்து சென்னைத் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் உருவானது. அந்தத் தொழிலாளர்களையே கட்சியில் இணைத்து கம்யூனிஸ்ட் கட்சியை பி.சுந்தரய்யா, எஸ்.வி.காட்கே ஆகிய இருவரும் உருவாக்கினார்கள். அந்த வகையில் தமிழகத்தில் முதல் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை 1936-ம் ஆண்டு உதயமானது. அதில் ஒருவர் சி.எஸ்... அந்தக் கிளைக்கு செயலாளர் எல்லாம் கிடையாது. கூட்ட நிகழ்ச்சிகள் கொண்ட மினிட் புக்கை யார் எழுதுவாரோ... அவர்தான் செயலாளர். அப்படிப்பட்ட முதல் மினிட் புக் எழுதிய வகையில் 'முதல் கம்யூனிஸ்ட் செயலாளர்’ என்று இவரைத்தான் சொல்ல வேண்டும். கட்சி மீதான தடை நீக்கப்பட்ட பிறகு அமைக்கப்பட்ட புதிய மாநிலக் குழுவிலும் ஒருவராக இருந்தார். ஆனால், சுதந்திர இந்தியாவில் ஜனநாயகத் தேர்தல் பாதைக்கு கம்யூனிஸ்ட்கள் திரும்பியபோது சி.எஸ். எந்தப் பதவிக்கும் பொறுப்புக்கும் வரவில்லை. அது தேவையில்லை என்று நினைத்தார்.
மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் கோமல் என்ற கிராமத்தில் பிறந்து சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் மாணவனாகத் தேர்வாகி, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துக்கு ஐ.சி.எஸ். படிக்கச் சென்று... அங்கே இந்திய விடுதலை அமைப்புடன் சேர்ந்து.. இங்கிலாந்து கம்யூனிஸ்ட்களால் ஈர்க்கப்பட்டு, 'டெய்லி ஒர்க்கர்’ பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்து, படிப்பில் நாட்டம் குறைந்து, ஐ.சி.எஸ். மாணவர்கள் குதிரைப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு பிடிக்காமல் தமிழ்நாட்டுக்கு வந்து, தலைமறைவு வாழ்க்கைக் காலத்தில் கட்சியை வளர்த்து... அடக்குமுறைச் சூழல் முடிந்து பதவிகளை சுவை பார்க்கும் நேரத்தில்... அதை விரும்பாமல் 'தோழராக’ மட்டுமே இருந்துவிடச் சிலரால் மட்டுமே முடியும். சி.எஸ். அப்படிப்பட்ட அதிசயப் பிறவி!
'உங்களைப் பற்றி புத்தகம் எழுதப் போகிறேன்.. உங்களது வரலாற்றைச் சொல்லுங்கள்’ என்று எழுத்தாளர் ஒருவர் சென்றபோது, ''என்னைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்பதுதான் என் கொள்கை!'' என்றவர் அவர்.  அவரால் மட்டுமே அது முடியும்!
**********************************************************************************
காதலுக்கு அணை... தாய்க்குச் சிதை!

எழுத்தாளர் மாநாட்டில் வேதனைக் கதை
''தமிழகத்துக்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்தால், இங்குள்ள கலைஞர் டி.வி., ஜெயா டி.வி. செய்திகளைப் பார்த்து மண்டை குழம்பிவிடுவார்கள்... ஊடகங்களுக்கு சுதந் திரம் வேண்டும் என்று போராடிய காலம் போய், ஊடகத்தின் பிடியில் இருந்து மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடக்கூடிய  சூழ்நிலை உருவாகி இருக்கிறது...'' என்று ஆசிய ஊடக வளர்ச்சி நிறுவன இயக்குநர் சசிக்குமார் இப்படித்தான் வேதனையுடன் சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 12-வது மாநில மாநாடு, விருதுநகரில் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடந்தது. கண்காட்சி, கவிதை வாசிப்பு, கருத்தரங்கம் என்று அனைத்திலும் ஒரே உற்சாகம்... கம்யூனிஸ்ட் மூத்த தோழர் சங்கரய்யா முதல் சினிமா இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் வரை பலரும் வந்திருந்தனர். இந்த விழாவில் ஹைலைட் - இரண்டு கருத்தரங்கங்கள்!
'மௌனமாய் பெருகும் மதவாத அரசியல்’ என்ற தலைப்பில் பேசிய மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு அனைவரையும் ஈர்த்தது.
''மாற்று மதத்தினரை வளரவிடக் கூடாது என்ற விஷ சிந்தனை இப்போது நம் நாட்டில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் பரவி வருகிறது. அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை மட்டும் கொள்ளை அடிப்பது அமெரிக்காவின் எண்ணம் அல்ல. உலகில் கிறிஸ்துவ மதத்துக்கு அடுத்த படியாக விளங்கக்கூடிய இஸ்லாமிய மதத்தை ஒடுக்க வேண்டும் என்றுதான் திட்டம் போட்டுச் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் ஈராக், தாலிபன்கள் மீதான போர்கள். பெங்களூருவில் ஒரு சினிமா படப்பிடிப்பில் சார்லி சாப்ளின் கட் அவுட்டை வைத்திருந்தார்கள் என்பதற்காக ஒரு கும்பல் அங்கு சென்று, அவர் கிறிஸ்துவர் என்று சொல்லி அந்த கட் அவுட்டை மிதித்தனர். காதலர் தினத்தை எதிர்க்கும் காவிக் கும்பல்தான் அந்தத் தாக்குதலையும் நடத்தியது. காதலர் தினம் வந்தாலே, இந்துத்துவா அமைப்புகள் பதற்றமாகி விடுகிறது. ஒவ்வொரு பூங்காவாகச் சென்று அங்கிருக்கும் காதலர்களை முற்றுகையிட்டு தாலிகட்டச் சொல்கின்றனர். இல்லை என்றால் அடித்து விரட்டுகின்றனர்.
சமீபத்தில், தேனி வைகை அணையில் ஒரு காதல் ஜோடி  பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கு சென்ற காவிக் கும்பல், அவர்களை மிரட்டியது. காதலர்கள் போலீஸுக்கு போன் செய்யவும், அங்கு வந்த போலீஸிடம், 'நீங்கள் நடவடிக்கை எடுக்கு றீர்களா, நாங்கள் எடுக்கவா?’ என்று அந்தக் கும்பல் கேட்க... உடனே, போலீஸார் அந்தப் பெண்ணின் தாயாரைத் தொடர்புகொண்டு விஷயத்தை சொன்னார்கள். அதைக் கேட்டதுமே பயத்திலும் அவமானத்திலும் அந்தத் தாயார் தீக்குளித்து மாண்டுவிட்டார். நாடு இந்த நிலைமையில் போனால் என்ன ஆவது?  'பம்பாய்’ படம் போன்ற சினிமாக்களை ரிலீஸ் செய்வதற்கு முன்பு, பால் தாக்கரே போன்றவர்களைச் சென்று சினிமா இயக்குநர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. மும்பை மராட்டியர்களுக்கு மட்டும் அல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று சொன்னதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீட்டின் மீது கற்களை வீசுகின்றனர். மதவாத அரசியல் தலைதூக்குவது மனிதத் தன்மைக்கு எதிரானது!'' என்றார்.
'ஊடக அரசியலைப் புரிந்துகொள்ள’ என்ற தலைப்பில் பேசிய சசிக்குமார், ''இந்தியாவில் ஒரு கால கட்டம் வரை ஊடக சுதந்திரத்துக்காகப் போராட வேண்டியிருந்தது. இன்று எல்லாம் மாறிவிட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவில் சுதந்திர உணர்வு பரவியதில் ஊட கங்கள் முக்கியப் பங்காற்றின. ஏனென்றால், பத்திரிகையாளர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்தான். மகாத்மா காந்தி, பாரதியார் போன்றவர்களும் பத்திரிகை யாளர்கள்தான். அதனால், பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையை எதிர்த்து, கட்டுரை மற்றும் செய்திகள் அதிகம் வெளியாகின. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு இது மாறிவிட்டது. சமீபத்தில், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணா ஹஜாரே பற்றி எல்லா ஊடகங்களும் ஒரே மாதிரி செய்தி கள் வெளியிட்டன. இதே டெல்லியில், தொழிலாளர் சங்கங்கள் பல முறை லட்சக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்தின. அதுபற்றி யாரும் பெரிதாக செய்தி வெளியிடவில்லை. அதைப்பற்றிய அக்கறை இல்லை.
தமிழகத்தைப் பொறுத்த வரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் தங்களுக்கு என்று தனித்தனி டி.வி. சேனல்கள் வைத்துள்ளன. தி.மு.க. ஆட்சி நடந்தால், சன் டி.வி., கலைஞர் டி.வி-க்களில் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதாகக் காட்டப்படும். அதே நேரம், ஜெயா டி.வி-யில் தமிழகம் மோசமான நிலையில் இருப்பது போன்று செய்திகள் ஒளிபரப்பாகும். ஆட்சிகள் மாறினால்... காட்சிகளும் அப்படியே தலைகீழாகிவிடும். மொத்தத் தில், தமிழகத்தின் உண்மையான நிலை வெளி உலகத்துக்குத் தெரியாது. எனவே, மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுடன், மக்கள் இயக்கங்கள் மூலம் ஊடகங்கள் உண்மை நிலையை சொல்லக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்!'' என்றார்.
இப்படி ஆக்கபூர்வமான விமர்சனங்களோடு நடந்து முடிந்தது த.மு.எ.ச. மாநாடு!
- எம்.கார்த்தி
 ''வாசிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்துவோம்!''
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் சு.வெங்கடேசன். இதற்கு முன் செயலாளராக இருந்த ச.தமிழ்ச்செல்வன் தலைவரானதைத் தொடர்ந்து இவர் இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த இவர், ஓட்டையில்லாத புல்லாங்குழல், திசையெல்லாம் சூரியன், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதிஉள்ளார். கலாசாரத்தின் அரசியல், ஆட்சித்தமிழ்  ஒரு வரலாற்றுப் பார்வை, சமயம் கடந்த தமிழ், மனிதர்கள் உலகங்கள் நாடுகள் ஆகிய ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன. இவரது 'காவல்கோட்டம்’  என்ற நாவல் பிரபலமானது. இந்த நாவலுக்கு, கனடா தமிழ்ச் சங்க இயல் விருது உட்பட ஆறு விருதுகள் கிடைத்து உள்ளது.
''படைப்பாளர்களை ஊக்குவித்தல், படைப்புகளை கொண்டா டுதல், வாசிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்துதல், மாற்றுப் பண்பாட்டு நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் இன்னும் வீரியத்துடன் எடுத்துச் செல்வது, தமிழக மக்களின் அறச்சீற்றமாக தமுஎச-வின் குரலை எங்கும் எதிரொலிப்பது ஆகியவற்றில் அதிக அக்கறை செலுத்துவேன்!'' என்கிறார் சு.வெங்கடேசன்.
**********************************************************************************
பரஞ்சோதி கவனிக்கிறது இல்லையான்னு கேட்டார் நேரு!

திருச்சி ராணியின் அடுத்த அஸ்திரம்!
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப் பட்ட பரஞ்சோதிக்கு எதிராக, அவரின் இரண்டாவது மனைவி என்று சொல்லிய டாக்டர் ராணி என்பவர் கிளப்பிய பரபரப்பு குறித்து கடந்த இதழில் எழுதி இருந்தோம்.  'அம்மா கோர்ட் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறதோ?’ என்று கட்டுரையை முடித்திருந்தோம். கடந்த புதன்கிழமை பரஞ்சோதியை வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சொன்னதன் மூலம், அவருக்குச் சாதகமான தீர்ப்பையே அளித்திருக்கிறார் ஜெயலலிதா!
'அம்மா கோர்ட்டில்’ என்ன வாதங்களை எடுத்து வைத்தார் பரஞ்சோதி?
இரண்டாவது மனைவி என்று சொல்லிக்கொண்டு ராணி புகார் கிளப்பினார். அதற்கு பரஞ்சோதி சொன்ன விளக்கம், ''இது தி.மு.க.வினரின் தூண்டு தலில் செய்யப்படும் சதி’ என்பதுதான்.  'தி.மு.க. பிரமுகர்கள் யார் யாருடன் எல்லாம் ராணி நெருக்கமாக இருந்தார் என்பதைப்பற்றி, ராணி பணியாற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களை விசாரித்தாலே தெரியும்’ என்று பரஞ்சோதி சொல்லிக்கொண்டு இருந்தார். காரணம், தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ராமஜெயத்துக்கும் இந்த ராணியின் அறிமுகம் இருந்துள்ளதற்கான ஆதாரங்களை பரஞ்சோதி தரப்பினர் திரட்ட ஆரம்பித்தார்கள்.
''நேரு, ராமஜெயம்  கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளிலும் ராணி  பங்கேற்றிருக்கிறார். அவர்களோடு மேடையிலேயே சிரிக்கச் சிரிக்கப் பேசி தனது நெருக்கத்தைக் காட்டி இருக்கிறார். இதெல்லாம் பலர் பார்க்க நடந்த விஷயங்கள். இதை புகைப்பட ஆதாரங்களோடு அம்மாவிடம் விளக்கமாக பரஞ்சோதி எடுத்துரைத்தார். அதை அம்மாவும் ஏற்றுக்கொண்டு, 'எதைப் பற்றியும் கவலைப்படாமல் தேர்தல் பணிகளைக் கவனியுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.  எனவே, வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, அண்ணன் உற்சாகமாகத் தேர்தல் பணிகளில் பிஸியாகிவிட்டார்...'' என்கிறார்கள் பரஞ்சோதியின் ஆதரவாளர்கள்.
பரஞ்சோதியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ராணி கிளப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான விளக்கத்தை நான் சொல்லி உங்கள் பத்திரிகையில் வெளியிட்டுவிட்டீர்களே... அப்புறம் திரும்ப எதற்கு அந்த விவகாரத்தைக் கிளற வேண்டும்? அம்மாவிடம் தி.மு.க-வினர் செய்த சதி வேலைகளை எடுத்துச் சொல்லி, அவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார். தெய் வமே ஏற்றுக்கொண்ட பிறகு மற்றவர்களைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? மக்கள் மன்றத்தில் கூடிய விரைவில் ராணியின் சுயரூபம் தெரிய வரும். அப்போது அனைவரும் உண்மைகளைப் புரிந்துகொள்வார்கள்!'' என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ராணியின் பதில் என்ன?
''நான் திருச்சி அரசு மருத்துவ மனை ஏ.ஆர்.டி. சென்டரில் மெடிக்கல் ஆபீஸராக பணியாற்றினேன். 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 'ரெக்கார்டுகளை ஒழுங்காகப்பராமரிக்கவில்லை’ என்று காரணம் காட்டி என்னை சஸ்பெண்ட் செய்தார்கள். நான் தி.மு.க-வினரோடு நெருக்கமானவள் என்றால், சஸ்பெண்ட் உத்தரவுக்கு ஆளாகி இருப்பேனா? அந்த உத்தரவில் இருந்து மீள்வதற்காகத்தான் முதன் முதலில், நேருவை அவரது அலுவலகத்தில் சென்று பார்த்தேன். விவரங்களைக் கேட்டுக்கொண்டவர், அத்துறை அதிகாரிகளிடம் பேசி முயற்சி செய்வதாகச் சொன்னார். அதன்படியே செய்தும் கொடுத்தார். இது நடந்து முடிந்த பின்னர்தான் பரஞ்சோதியுடனான எனது திருமணம் நடந்தது. நானும் அவரும் கணவன் மனைவியாக வாழ்வது அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் தெரியும்.
இந்நிலையில்தான், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டேன். ஆறு மாதங்கள் அந்தப் பணியில் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில், 'எய்ட்ஸ் விழிப்பு உணர்வு’ தொடர்பான நிகழ்ச்சிகளில் அத்துறை அலுவலர் என்ற முறையில் நானும் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம். அப்படித்தான் இரண்டு முறை நேருவையும், ஒரு முறை ராமஜெயத்தையும் மேடையில் பார்த்துப் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி 'எய்ட்ஸ் விழிப்பு உணர்வு’ தொடர்பாக ஒரு குறும்படம் இயக்கினார். அதன் சி.டி. வெளியீட்டு விழா கலையரங்கம் தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றது. அப்போதைய கலெக்டர் சவுண்டையா, ராமஜெயம் ஆகியோர் அந்த விழாவில் கலந்துகொண்டார்கள். விழாவுக்குச் சென்றிருந்த நான், முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். அதை கவனித்த ராமஜெயம், 'டாக்டர் நீங்களும் வாங்க’ என்று மேடை ஏற்றினார். பரஞ்சோதியின் மனைவி என்று என்னை அறிந்து வைத்திருந்த அவர், 'பரஞ்சோதி நல்லா இருக்காரா? விசாரிச்சேன்னு சொல்லுங்க’ என்றார். இது போலவே 'எய்ட்ஸ் விழிப்பு உணர்வு’ தொடர்பான வேறு இரண்டு நிகழ்ச்சிகளில் நேருவை சந்தித்தேன். அவரும் அதுபோலவே, 'என்ன இளைச்சுப் போயிட்டீங்க? பரஞ்சோதி சரியா கவனிக்கிறதில்லையா?’ என்று விசாரித்தார். இந்த சந்தர்ப்பங்களைத் தவிர நேரு மற்றும் ராமஜெயத்தை நான் சந்தித்ததே இல்லை. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத்தான் எனக்கு எதிரான ஆதாரமாகப் பயன்படுத்தி வருகிறார் பரஞ்சோதி.
ஸ்ரீரங்கம் தொகுதிப் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்படு வதற்கு முந்தைய ஆறு மாதங்கள், அவரது செல்போன் பில்களை ஆராய்ந்து பார்த்தால், அவர் என்னுடன் எத்தனை முறை பேசி இருக்கிறார் என்பது தெரிய வரும். எந்தத் தொடர்பும் இல்லாத என்னுடன் அத்தனை முறை பரஞ்சோதி பேச வேண்டிய அவசியம் என்ன? அவரிடம் மட்டும் விசாரித்து விவரங்களைக் கேட்டுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, நான் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தால், என் தரப்பு வாதங்களையும் எடுத்து வைத்திருப்பேனே? இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. என்னை சந்திக்க முதல்வர் ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கினால் போதும். எனது தரப்பு வாதங்களை எடுத்துவைக்க வாய்ப்பாக அமையும். செய்வாரா முதல்வர்?'' என்றார் ராணி.
விவகாரம் போகும் போக்கைப் பார்த்தால், இப்போதைக்கு ஓயாதுபோல் இருக்கிறது!
**********************************************************************************
ஐ.நா.வை முற்றுகை இட்ட ஈழத் தமிழர்கள்!

''எங்களுக்கு எப்போது தீர்வு?''
ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. முற்றத்தில், கடந்த 19-ம் தேதி 10 ஆயிரம் ஈழத் தமிழர்கள் ஒன்றுதிரண்டு 'பொங்கு தமிழ்’ நிகழ்வு நடத்தி பெரும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு, புலிப்போராளிகளால் ஈழத்தில் தொடங்கிவைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, பொதுவான தரப்பினரையும் 'போராட்ட’த்தின் பக்கம் கொண்டுவந்தது. தொடர்ந்து ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா என புலம்பெயர் தமிழர்கள் வாழும் அனைத்து கண்டங்களிலும் ஆண்டுதோறும் பொங்குதமிழ் நிகழ்வு பெரும் எழுச்சியுடன் நடத்தப் பட்டு வந்தது. முள்ளிவாய்க்கால் போருக்குப் பிறகு எல்லாமே மாறிப்போனது.
இந்த சூழலில், 'இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றம்பற்றி  19-ம் தேதி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்  விவாதிக்கப்படும்’ என அறிவிக்கப்பட, அதே நாளில் 'தமிழர் ஒருங்கிணைப்புக் குழு’ பொங்குதமிழ் நிகழ்வுக்கு அழைப்புவிடுத்தது. ஈழத்தின் ஈரக்குலையை அறுத்த இறுதிப் போரை நிறுத்தக் கோரி, ஜெனீவாவில் உள்ள ஐ.நா. முற்றத்தில்தான் ஈழத் தமிழரான முருகதாசன்  உயிர்நீத்தார். அதன் பிறகு, ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அந்த  இடம் 'முருகதாசன் சதுக்கம்’.  ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 18-வது கூட்டத்தொடர் தொடங்கியநிலையில், அந்த சதுக்கத்தில் 10 ஆயிரம் ஈழத் தமிழர்கள் திரண்டனர்.
இதற்காக பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நார்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம் என ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும், பேருந்து களில் கூட்டம் கூட்டமாக சுவிஸில் மக்கள் திரண்டனர். பங்கேற்பாளர்களின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க, ஒருகட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாது என, மற்ற நாடுகளில் இருந்து வந்த பேருந்துகளை சுவிஸ் போலீஸார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இப்படி, ஜெர்மனியில் இருந்து வந்திருந்த மூன்று பேருந்துகளை நகரின் எல்லைக்குள் விடாமலேயே திருப்பி அனுப்ப, வந்தவர்களுக்கோ பெருத்த ஏமாற்றம்!
பெருங்கூட்டத்துடன் ஜெனீவா ரயில் நிலையம் அருகில் உள்ள பூங்கா முன்பு பிற்பகலில் தொடங்கிய பேரணி, ஐ.நா. முற்றத்தில் உள்ள முருகதாசன் சதுக்கத்தில் முடிவடைந்தது. 2 கி.மீ. தொலைவைக் கடப்பதற்கு ஒரு மணி நேரம் ஆனது. கொட்டிய மழையை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் முன்னோக்கிச் சென்றபடி இருந்தது தமிழர் கூட்டம். பிரிட்டன் குர்சால் உள்ளாட்சிப் பிரதிநிதி பிளைன்ராபின், பிரான்ஸில் இருந்து வந்திருந்த மேயர் ஸ்டீபன்கேட்டினன் ஆகியோர், ஈழத்துக்கான நியாயத்தைப் பேசியபோது கூடியிருந்தவர்களிடம் பெரும் உற்சாகம்! ஜெர்மனிவாழ் சிங்களரான மனித உரிமை ஆர்வலர் விராஜ் மென்டிஸின் வருகை, நிகழ்வில் நெகிழ்ச்சியை ஊட்டியது.
முத்துக்குமார், முருகதாசன், செங்கொடி உள்பட்ட 21 தமிழினத் தியாகிகளுக்கும் ஐ.நா. முற்றத்தில் ஈகச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத் தப்பட்டது. ஐ.நா. பொதுச் செயலர் பான்கிமூனின் செயலாளரைச் சந்தித்த போராட்டக் குழுவினருடன் மற்ற இனத்தவரும் உடன்சென்றது, ஐ.நா. அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நம்மிடம் பேசிய நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் நார்வே எம்.பி-யான டாக்டர் சிவகணேசன், ''அரசியல் நீதிப்படியும், ஐ.நா-வின் சட்ட திட்டப்படியும் எங்களின் ஈழத் தாயகம் மீட்டுத் தரப்பட வேண்டும். முள்ளிவாய்க்கால் கொடூரத்துக்குப் பிறகு, ஈழம்தான் எங்கள் லட்சியம் என்பதை மீண்டும் உறுதியாகக் காட்டவே இந்த நிகழ்வு!'' என்றார்.
பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை பிரதிநிதியான சிவகுரு பாலச்சந்திரன், ''பல இனங்களை ஒருங் கிணைக்க சமயங்கள் இருக்கின்றன. தமிழர்களை ஒன்றுபடுத்த மட்டும் எந்த மதமும் இல்லை. எங்களை நாங்களே ஒற்றுமைப்படுத்திக்கொள்ளும் அவசியம் இருக்கிறது. கருத்துவேறுபாடுகளைக் கடந்து, எங்களை நாங்களே சுத்தப்படுத்திக்கொள்ளவும், மீள் எழுச்சிக்கொள்ளவும் 18 ஆண்டுகளாக 'மாவீரர் வீரவணக்க’ நிகழ்வை உணர்வெழுச்சியுடன் நடத்தி வருகிறோம். இந்த நிலையில், சிங்கள இனவெறி அரசு, சில குள்ளநரிகளை உருவாக்கி, மாவீரர் வணக்க நாளை குலைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இது எங்கள் தேசிய ஆன்மாவின் மீது நடத்தப்படும் தாக்குதல். எனவே, முளையிலேயே இதைக் கிள்ளி எறிய வேண்டும் என்பதற்காகவே, பொங்குதமிழ் நிகழ்வுகளில் தீவிரமாகி இருக்கிறோம்!'' என்று அதிர்ச்சியூட்டியபடி சொன்னார்.
''ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் இந்தக் கூட்டத்தில் தீர்வு கிடைக்காதபட்சத்தில், மீண்டும் மார்ச்சில் நடக்கும் கூட்டத்தின்போதும், பொங்கு தமிழ் நிகழ்த்துவோம். போராடுவது ஒன்றுதான் ஈழத் தமிழ்ச் சமூகத்துக்கு உள்ள ஒரே வழி எனும் போது, தொடர்ந்து அதை செய்துகொண்டே இருப்போம். தாயகத்தில், தமிழகத்தில், தமிழர் வாழும் நிலங்களில் எல்லாம் இதே உணர்வுநிலை நீடிக்க வேண்டும்!'' என ஆதங்கப்பட்டார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுவிஸ் சிவ லோகநாதன். குட்டி நாடான சுவிட்சர்லாந்தில் 10 ஆயிரம் பேர் திரண்டு பொங்கிய தமிழ் நிகழ்வானது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு புதிய டானிக்.
ஈழத் தமிழர்களின் ஆன்ம பலத்தைக் காட்டும் இது போன்ற நிகழ்வுகளுக்கு பலன் கிடைக்கும் காலம் எப்போது வரும்?
**********************************************************************************
எங்க குடும்பம் அனுபவிச்சதைவிட பல மடங்கு அவங்க அனுபவிப்பாங்க!

சிறை வாசலில் சாபம் போட்ட அனிதா
தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் நில அபகரிப்பு வழக்குகளில் கைதாகி சிறைக்குப் போக... திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வான அனிதா ராதாகிருஷ்ணனும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த மாதம் 10-ம் தேதி கைது செய்யப்பட்ட அனிதாவை ஜாமீனில் வெளியில் கொண்டு வருவதற்காக மறுநாளில் இருந்தே அவர் தரப்பு வழக்கறிஞர்கள் போராடினர். ஆனால், போலீஸாரோ, அதற்கு முட்டுக்கட்டை போட்டதோடு அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தனர்.
இருந்தும், தடைகளை மீறி கடந்த 17-ம் தேதி ஒருவழியாக ஜாமீனில் வெளி வந்துவிட்டார் அனிதா ராதாகிருஷ்ணன். வெளியே வந்த கையோடு, கடந்த 19-ம் தேதி தன் 59-வது பிறந்த நாள் விழாவை சென்னையில் கொண்டாடிவிட்டு ஊர் திரும்பினார். அவரை சந்தித்தோம்.
''ஆட்சியா இது?! பழிவாங்கும் புத்தியும், அரசியல் காழ்ப்பு உணர்ச்சியும் நிறைந்தவர்களின் ஆட்சியில் வேறு என்ன நடக்கும்? அந்த வகையில்தான் என்னையும் கைது செய்தனர். இருந்​தாலும், என் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் பொய் வழக்கு என நிரூபிப்பேன்...'' என்றபடி நமது கேள்வி​களை எதிர் கொண்டார்..
''ஜெயில் அனுபவம் எப்படி இருந்தது?''
''அமைச்சராக இருந்தவர்கள், எம்.எல்.ஏ-க்​களாக இருப்பவர்கள் என்கிற மரியாதை  துளி அளவும் இல்லாமல், உள்ளே எங்களை துன்பப்படுத்தினார்கள். எங்களைப் பார்க்க வருபவர்​களைக்கூட, மற்ற கைதிகளோடு கூட்டமாக நின்றுதான் பார்த்தோம். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் எங்களைத் தாக்கி இருக்கவும் வாய்ப்பு இருந்தது. அந்த நிலைமையை போராடித்தான் மாற்றினோம். அதுபோல், முதல் வகுப்பில் இருப்போருக்கு அதற்குத் தகுந்த மேஜை நாற்காலிகளை தரவில்லை. நோய்வாய்ப்பட்டு இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம்கூட தரையில்தான் படுத்துத் தூங்கினார். மருத்துவ வசதி கிடையாது. வேண்டும் என்றே டார்ச்சர் கொடுத்தார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்காகக் கைதாகி நாங்கள் ஜெயிலில் இருந்தபோது எங்கள் குடும்பம் அனுபவித்த துன்பத்தைவிட, பல மடங்கு துன்பத்தை ஆண்டவன் 'அவர்களுக்கு’க் கொடுப்பான். மற்றவர்களைப்போல் நாங்கள் வருடக்கணக்கில் வாய்தா வாங்க மாட்டோம். மக்கள் மன்றம் இதை எல்லாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது!''
''உங்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் நிறைய சிரமங்கள் இருந்ததாகச் சொல்கிறார்களே?''
''என் மீது போடப்பட்ட வழக்கில் நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். இருந்தாலும், என்னை அதிக நாட்கள் சிறையில் வைத்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான், ஜாமீன் கிடைக்கவிடாதபடி தொடர்ந்து தடுத்து வந்தனர். கைது செய்தபிறகு புதிதாக இரண்டு வழக்கைப் பதிவு செய்த போலீஸார், இழுத்தடிக்கவே ஒரு வழக்கை பெண்டிங் வைத்து 19-ம் தேதி பதிவு செய்தார்கள். இதில் பெரிய கூத்து... பதிவு செய்யப்படாத அந்த வழக்கின் பெயரைச் சொல்லி 16-ம் தேதியே 'கஸ்டடி’ கேட்டார்கள். இதை, நீதிமன்றம் மறுத்ததோடு, கண்டித்தது. மற்றவர்களைவிட என்னை கஸ்ட​டியில் எடுத்து விசாரிக்க ரொம்பவும் அக்கறைப்பட்டார்கள். அப்படி இப்படி என்று ஏதாவது அவதூறு பரப்ப... பேப்பரில் எழுதிவைத்துக்​ ​கொண்டு என்னிடத்தில் கையெழுத்து வாங்க போலீஸார் பாடுபட்டார்கள். ஆனால், என் பக்கம் நியாயம் இருந்ததால் அவர்கள் தோற்று​விட்டனர் என்பதுதான் உண்மை.''
''அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறிய​போது உங்கள் வசம் முக்கியமான சில சொத்துகள் இருந்தன. அந்தச் சொத்துகளைப் கைப்பற்றவே போலீஸ் கஸ்டடி கேட்டார்கள், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது... என்கிறார்​களே?''
''ஆளும் கட்சி கிளப்பிவிடும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்!
குலசேகரபட்டினத்தில் 2009-ம் வருஷம், அ.தி.மு.க-வினர் கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக என் மீது வழக்கு தொடரப்படும் வாய்ப்பு உள்ளதாகவும், வழக்குப் பதிவு செய்யப்பட இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அதில் என் பெயர் கிடையாது. அதிலும் என் பெயரைச் சேர்த்தால் அதையும் தகர்த்தெறிந்து வெளியில் வருவேன்.''
''சிறையில் இருந்து வெளியே வந்தபோது தி.மு.க-வினர் யாரும் உங்களை வரவேற்க வரவில்லையே?''
''நான்தான் வரவேண்டாம் என்று சொன்​னேன். அவர்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? நமது கஷ்டம் நம்மோடு இருக்கட்டுமே!''
''சிறையில் உங்களை அழகிரி, ஸ்டாலின் உட்பட பலரும் வந்து பார்த்தார்கள். ஆனால், மாவட்டச் செயலாளர் தூத்துக்குடி பெரியசாமி வந்து பார்க்கவில்லையே... வருத்தம் இருக்கிறதா?''
''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இனிமேல் என் தொகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வறுமையில் உள்ள ஏழைக் குடும்பங்களோடு தங்கி, அவர்கள் தரும் சாப்பாட்டை சாப்பிட்டு அவர்களின் குறைகளைக் கேட்பேன். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் பாடுபடுவேன்...'' - என்று மட்டுமே உள்கட்சி குறுகுறுப்புக்கு பதிலாகக் கொடுத்துவிட்டு,  கை காட்டி நமக்கு விடை கொடுத்தார் அனிதா ராதாகிருஷ்ணன்!
**********************************************************************************
கிரானைட் கொள்ளை!

தீர்ப்பில் தெரியும் திகீர் உண்மைகள்!
துரை மாவட்டத்துக்கு சமீபத்தில் வந்தார், தொழில் துறை அமைச்சர் வேலுமணி! மேலூரை அடுத்த கீழையூர் மற்றும் கீழவளவு கிரானைட் குவாரிகளுக்கு விசிட் அடித்த அவர் அளித்த பேட்டியில், '' வெட்டி எடுத்த கிரானைட் கல்லில் 10 சதவிகிதத்தை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, பாக்கி 90 சதவிகிதத்தை மறைத்துள்ளார்கள்!'' என்று சொல்லித் திடுக்கிட வைத்தார்! இதுபற்றி மேலும் நாம் விசாரித்தபோது, ஏற்கெனவே இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு குறித்த சில விவரங்கள் கிடைத்தன. எஸ்.முருகேசன் என்பவர் தாக்கல் செய்த ஒரு மனு மீது நீதியரசர் சந்துரு தீர்ப்பு கொடுத்திருந்தார். பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் அந்தத் தீர்ப்பில்!
சுரங்கத் துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், சுரங்கத் துறை துணை இயக்குநர், மதுரை மாவட்ட பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கு எதிராகத்தான் முருகேசன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இனி, முருகேசனின் மனு விவரம்... 'மதுரை மாவட்டத்தில் 22 கிரானைட் சுரங்கம் தோண்ட பி.ஆர்.பி. நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. 2004-05-ம் ஆண்டு முதல் 2007-08 வரையில், மிக அதிக அளவில் கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். இதில்தான் முறைகேடுகள் நடப்பதாக சுரங்கத் துறை ஆணையருக்கு மனு அனுப்பினேன். இந்தப் புகார் தொடர்பாக விசாரிக்கக் கோரியும், இருப்பு உள்ள மற்றும் ஏற்றுமதி செய்யப்படுகின்ற கிரானைட் கற்கள் பற்றி விரிவான அறிக்கை ஒன்றை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், எந்தவிதமான விசாரணையும் மாவட்ட ஆட்சியரால் செய்யப்படவில்லை. அதன் பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2004-05 முதல் 2007-08 வரையிலான காலகட்டத்தில் இவர்கள் ஏற்றுமதி செய்த விவரங்களைப் பெற்றபோது, ஏற்றுமதிக் கற்களின் கனஅளவு 69490.188 கியூபிக் மீட்டர் என்று தெரிந்தது. கூடவே, சுங்கவரித் துறையில் இருந்தும் அறிக்கை பெற்றதில், மேற்சொன்ன காலகட்டத்துக்குள் ஏற்றுமதி செய்யப்பட்ட கிரானைட் கற்களின் கனஅளவு 114543.008 கியூபிக் மீட்டராக இருந்தது.
இதைத் தொடர்ந்து முதல் அமைச்சரின் குறைகேட்புப் பிரிவுக்கு ஒரு புகாரை அனுப்பினேன். சிறப்புக் குழு ஒன்றை நியமித்து, இந்தக் கணக்குகளை விசாரிக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீண்ட காலதாமதத்துக்குப் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்சொன்ன காலகட்டத்துக்கு உரிய கணக்குகளை சமர்ப்பிக்கச் சொல்லி பி.ஆர்.பி. நிறுவனத்துக்குத் தகவல் அனுப்பினார்.
கடைசியில், ஒவ்வொருவரும் கொடுத்த கியூபிக் மீட்டர் கணக்குகளில் ஏராளமான வித்தியாசங்கள்... ஏற்றுமதி செய்தது குறித்து சுரங்கத் துறையே இரு வேறு அறிக்கைகளை வழங்கி இருக்கிறது. மீண்டும் புதிய விசாரணை வேண்டும்!’ என்கிறது அந்த மனு.
இதைத் தொடர்ந்து, ''முருகேசன் மனு மீது விசாரணை செய்யப்பட்டது. அவர் சொல்வதில் உண்மை இல்லை!'' என்று மதுரை மாவட்ட ஆட்சி யர் பதில் சொன்னார். ''கியூபிக் மீட்டர்களைக் கணக்கிடுவது குறித்து மனுதாரர் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணத்தில் வடிவமைப்புத் தவறுகள் உள்ளன. சதுர அடியை கியூபிக் மீட்டராக மாற்றுவதில் தவறு உள்ளது. இந்தத் தவறுகளின் காரணமாக, உண்மையான ஏற்றுமதி குறித்த தகவல்கள் ஏய்க்கப்பட்டிருப்பதாகக் காட்டப்பட்டு இருக்கிறது...'' என்று பி.ஆர்.பி. நிறுவனமும் பதில் அளித்தது.
இது தொடர்பாக விசாரித்த நீதிபதி சந்துரு அளித்த தீர்ப்பு விவரம், இந்த விவகாரம் பற்றிய முழு பரிமாணத்தைக் காட்டுகிறது...
''இந்த வழக்கில் பி.ஆர்.பி. நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன், சதுர அடியில் இருந்து கியூபிக் மீட்டருக்கு மாற்றும் கணக்கு களின் மீதான புகாரில் இருக்கும் முரண்பாடுகளை விளக்கினார். எந்த ஓர் இழப்பும் இல்லை என்று நிரூபிக்க முயன்றார். மாவட்ட ஆட்சியரோ தன்னுடைய எதிர் உத்தரவில் இருக்கும் விளக்கத்தின் அடிப்படையிலேயே நின்று எந்த ஓர் இழப்பும் ஏற்படவில்லை என்ற கருத்தை முன்வைத்தார்.
இந்த வழக்கில், மனுதாரர் ஒரு தனிநபர். பெரிய அளவில் நடந்திருக்கும் வருமான ஏய்ப்பை வெளிக்கொண்டுவர தகுந்த அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரை மனுதாரருக்கும் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கும் இடையே உள்ள சொந்தப் பிரச்னையாக மாவட்ட ஆட்சியர் கருதி இருக்கிறார். அவரே நடுவராக அமர்ந்து இந்த வழக்கை விசாரித்திருக்கிறார். அவர் பிறப்பித்த எதிர் உத்தரவை கவனமாகப் பார்க்கும்போது, ஒவ்வொரு பத்தியும் பி.ஆர்.பி. நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே இருக்கிறது. குவாரி உள்ள இடத்துக்கே சென்று விசாரணை மேற்கொள்வது பற்றியோ மற்றும் லாபப் பங்காகச் செலுத்தப்படும் கட்டணம் பற்றியோ எந்த ஒரு சுயமான முயற்சியையும் ஆட்சியர் மேற்கொள்ளவில்லை.
சட்டத்துக்குப் புறம்பான ஒரு விஷயம் நடப்பதாக பொது அதிகாரத்திடம் ஒரு நாட்டின் குடிமகன் புகார் கொண்டுவந்தால், அதை ஒரு மதிப்பு வாய்ந்த உள்ளீடாகக் கொண்டு விசாரணை நடத்தவேண்டும். குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மையை விசாரித்து அறிந்து, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சுரங்கக் குத்தகை நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால், தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இதற்காக ஆட்சியர், வணிக வரித்துறை, உள்நாட்டு வரித்துறை மற்றும் மத்திய சுங்க வரித்துறை ஆகியவற்றின் தகவல்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்.
குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் கிரானைட் சுரங்கத் தோண்டுதல்கள் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர் விவரம் கோரியபோது, 'தங்களுடைய அலுவலகத்தில் அப்படியான விவரங்கள் எதுவும் இல்லை. அத்தகைய விவரங்களைத் தர இயலாது’ என்று தன் இயலாமையை சுரங்கத் துறை கூறியிருக்கிறது. உண்மையான ஏற்றுமதி பற்றி விளக்க, சுங்கத் துறையிடம் இருந்து பெறப்பட்ட விவரத்தில் மனுதாரர் சுட்டிக்காட்டிய பல்வேறு ஒழுங்கீனங்களுக்குத் திருப்தியான பதில் அளிக்கப்படவில்லை. சட்டத்துக்குப் புறம்பான கிரானைட் ஏற்றுமதியால், மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக எந்த ஒரு விசாரணையையும் மேற்கொள்வதில் இருந்து மாவட்ட ஆட்சியர் தவறி இருக்கிறார்...'' என்று தீர்ப்பில் நெத்தியடி வார்த்தைகளை எழுதி உள்ளார் நீதிபதி சந்துரு!
இந்த தீர்ப்பு குறித்து அப்பீல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த வழக்கு விவரங்களைத் தோண்டி, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ரெடியாகிறது, இன்றைய ஆளும் மேலிடம்.
**********************************************************************************
தேடுதல் வேட்டையில் பலியான இருவர்...

போலீஸ் மீது புதுக் குற்றச்சாட்டு...
ந்தக் கறுப்பு ஞாயிறில், பரமக்குடியில் 7 உயிர்கள் பறிபோன பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில்... போலீஸாரின் தேடுதல் வேட்டையால் மேலும் இரு உயிர்களும் பலியானதாகப் புதுப் பதற்றம்!
கடந்த 11-ம் தேதி பரமக்குடியில், இம்மானுவேல்சேகரன் குருபூஜை விழாவுக்கு வந்தவர்கள் திடீர் மறியலில் இறங்கினார்கள். 'ஜான்பாண்டியனைக் கைது செய்துவிட்டார்கள்’ என்று பரவிய செய்தியைத் தொடர்ந்து அந்தப் பரபரப்பு தொடங்கியது. கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிப் பிரயோகத்தில் இறங்கியது போலீஸ். இதில் ஆறு பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் இரு தரப்பிலும் பலருக்கும் காயம். அரசு மற்றும் தனியார் வாகனங்கள் பல தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து, 'கலவரத்தில் ஈடுபட்டார்கள்’ என 2,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ். அதில் 21 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களைத் தேடி கிராமம் கிராம​மாகச் சென்று போலீஸார் சல்லடை போட... இந்தத் தேடுதல் வேட்டையால் தொளுவளூர் வேலு, களக்குடி காளியப்பன் ஆகிய இருவர் பலியானதாக தற்போது புகார் சொல்லப்​படுகிறது!
தொளுவளூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதனை சந்தித்தோம். ''கடந்த 11-ம் தேதி ராத்திரி எங்க கிராமத்தினரைத் தேடி போலீஸ் வருதுன்னு தகவல் சொன்னாங்க. ஊருக்குள்ள இருந்த ஆம்பளைங்க எல்லாரும் பக்கத்துல இருக்குற காட்டை நோக்கி ஓடுனோம். இருட்டுல வாய்க்கா எது, வரப்பு எதுன்னுகூட பாக்காம வேகமா ஓடினதில், எங்​களோட ஓடிவந்த வேலு, கால் இடறி வரப்புல இருந்து வயலுக்குள்ள விழுந்துட்டாரு. தூக்குனப்ப, மூச்சுப் பேச்சில்லாமக் கிடந்தாரு. ஊருக்குள்ள கொண்டுபோய், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் சொல்லி, வந்து பார்த்தப்பதான் அவர் இறந்துபோயிட்டது தெரிஞ்சது. கலவரத்துக்கு சம்பந்தமே இல்லாத எங்க ஊருக்கு போலீஸ் வந்த பதற்றத்தாலதான் இப்ப வேலுவோட குடும்பம் அநாதை ஆயிருச்சி!'' என்றார் சோகமாக.
இதே போல் போலீஸ் தேடுதல் வேட்டையால், காட்டில் மறைந்திருந்த காளியப்பன் என்பவர் பாம்புகடித்துப் பலியானார். இவர் களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். நாம் அங்கே சென்றபோது, ஆண்கள் யாருமே ஊருக்குள் இல்லை. காளியப்பனின் வீட்டை அடைந்தோம். அவரது மூத்த மனைவி காளியம்மாளையும் மகள் நாகவள்ளியையும் சந்தித்தோம்.
''எங்கப்பாவுக்கு ரெண்டு சம்சாரம். மூத்தவங்க எங்கம்மா. அன்னிக்கு, 'நம்மூரு ஆம்பளைகளத் தேடி போலீஸ் வருது’ன்னு தகவல் கிடைச்சதும், காட்டுப் பக்கமா ஊர்க்காரங்க ஓடுனாங்க. எங்கப்பாவும் அவங்களோட ஓடினாரு. ஆனா, மறுநாள் வரை எங்கப்பா வீட்டுக்கு வராததால, தேடினோம். அப்பதான் அவர் ஒரு கண்மாய்க்குள்ள இறந்து கிடந்தது தெரிஞ்சுது. அவரோட கழுத்துல பாம்பு கடிச்சதுக்கான அடை​யாளம் இருந்திச்சு. எங்க குடும்பத்துல அப்பாவைத் தவிர எல்லாருமே பொம்பளைகள். கூலி வேலை செஞ்சு காப்பாத்துன அவரும் இப்ப இல்லை. ஏதாவது எங்களுக்கு உதவி செய்யுங்க...'' எனக் கதறினார், நாகவள்ளி.
இந்த சம்பவங்கள் குறித்து ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராயிடம் கேட்ட​போது, ''இந்த நியூஸை கேள்விப்​பட்டு, உடனடியா எஸ்.பி-கிட்ட கேட்டேன். போலீஸார் கிராமங்களுக்குப் போனப்ப அப்படி எதுவும் நடக்கலைங்​கறாங்க. போலீஸ்காரங்க வர்றதைக் கேள்விப்பட்டு ஓடினப்ப யதார்த்தமாக இந்த சம்பவங்​கள் நடந்திருக்கலாம். இனி போலீஸார் கிராமத்தினருக்குத் தொந்தரவு கொடுக்க​மாட்டாங்க...'' என்று வாக்குறுதி கொடுத்தார்.
கலவரத்துக்குப் பிந்தைய இருட்டு மேகங்களை விரட்டுவதில் கவனமும் பக்குவமும் காட்டட்டும் காவல் துறை!
இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி
''மதம் மாறிடுவோம்''
பரமக்குடி-மதுரை சாலையில் 10 நிமிடப் பயணத்தில் வருகிறது, எச்.பரளை கிராமம். அங்கு, கடந்த 18-ம் தேதி மாலை மூன்று வாகனங்களில் வந்த, காவல் துறையினர் நடத்திய 'ஒத்திகை’ (?) சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது!
அந்தக் கிராமத்துக்குச் சென்றபோது, மக்கள் கொதிப்புடன் இருந்தனர். நம்மிடம் பேசிய நாகவள்ளி என்பவர், ''பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு ஊரில் ஆண்கள் தங்குவது இல்லை. அன்னிக்கு வந்த போலீஸ், 'ஒத்திகை பார்க்கப் போறோம்’னுட்டு, பொம்பளைங்களை வீட்டுக்குள் அனுப்பிட்டாங்க. பிறகு ஊரில் இருந்த கொடிக்கம்பத்தில் எங்க கட்சிக் கொடிகளைக் கழட்டி, மஃப்டியில் வந்த போலீஸ்காரங்க தலையில் சுத்திக்கிட்டாங்க. ஒரு பக்கம் அவங்க... இன்னொரு பக்கம் யூனிஃபார்ம் போலீஸ்காரங்க, கையில் பெரிய பெரிய பிரம்புத் தடுப்பு வெச்சிருந்தாங்க. மஃப்டிக்காரங்க ஊருக்குள்ள நின்னு போலீஸ்காரங்களைப் பார்த்து கல் வீச... போலீஸ்காரங்க தடுப்பால தடுத்தாங்க. 'போலீஸ் ஒழிக’ன்னு சத்தமா கோஷம் போட்டுக்கிட்டே முன்னாடி பாய்ஞ்சாங்க மஃப்டிக்காரங்க. மூணு கேமராவால வீடியோ வேற எடுத்தாங்க. சந்தேகப்பட்டு சிலர் கேட்டப்ப, 'கலவரம் நடந்தால் என்ன செய்வதுன்னு ஒத்திகை பார்க்கிறோம்’னு போலீஸ் சொன்னுச்சி. அந்த வீடியோ காட்சிகளை வெச்சு, உண்மையாக எங்க கிராம மக்கள் கலவரத்தில் ஈடுபட்டாங்கன்னு சொல்றதுக்கா?!'' என்று கொதித்தார்.
''இப்படியே போனா, எங்க கிராமத்தினரும் மொத்தமா மதம் மாறிடுவோம்!'' என்றார், பாபு என்கிற கிராமவாசி.
''பாதுகாப்பு ஏற்பாடுகளில் நாங்கள் இருக்கிறோம். அதை குறை சொன்னால் எப்படி?'' என்று போலீஸ் தரப்பு கேட்கிறது!
சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கத்தானே போலீஸ் ஒத்திகை... மாறாக மக்களை மிரட்டுவதற்கா?
**********************************************************************************

********************************************************************************************


மிஸ்டர் கழுகு: ''விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது தப்பு!''

கார்டனில் கர்ஜித்த ஜெ.!
ச்சி வெயில் உலுப்பி எடுப்பதை கழுகார் முகத்தில் பார்க்க முடிந்தது. வந்ததும், ஐஸ் வாட்டரை அருந்துவதற்குப் பதிலாக தலையில் தெளித்துக்கொண்டார். சூட்டைக் குறைக்கும் ஐடியா!

''கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் ஜெய லலிதா கை கழுவுவதைத்தான் தண்ணீர் தெளித்து சிம்பாலிக்காகக் சொல்கிறீரோ?'' என்றோம். அவர், மெள்ளச் சிரித்தபடி,
''அ.தி.மு.க. அணியில் நடப் பதைச் சொல்வதற்கு முன் னால் ஒரு சுவாரஸ்யம்... அதைக் கேட்டுவிடும்!'' என்று பீடிகை போட் டார்!
''தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜயகாந்த் மனம் திறந்து பேசியதை உமது நிருபர் விலாவாரியாக எழுதி இருந்தார். இது கட்சிக்குள் பலத்த சலசலப்பைக் கிளப்பியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் விஜயகாந்த். 'கூட்டம் நடக்குறது வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது. யாரும் காரில் வர வேண்டாம். ஆட்டோவில் வாங்க. வரும் எல்லாரும் கூட்டமா வராதீங்க... தனித்தனியா வந்துடுங்க. வெளியில் யாரும் நின்னும் பேசாதீங்க!’ என்று மாவட்டச் செயலாளர்களுக்குச் சொல்லப்பட்டு இருந்ததாம். கூட்டத்தில் விஜய்காந்த் பேசும்போது, 'உங்களை காரில் வர வேண்டாம். கூட்டமா நிற்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லி இருப்பாங்க. எல்லாம் காரணமாகத்தான் சொன்னோம். நம்ம கட்சி ஆபீஸ்ல ஒரு குண்டு ஊசி கீழே விழுந்தாக்கூட, அதைப் பத்திரிகைக்காரங்களுக்கு யாராவதுசொல்றீங்க. நமக்குள் நாம் என்ன வேணும்னாலும் பேசிக்கலாம். அதை சிலர் பத்திரிகைகளுக்கு சொல்லிட்டா, அவங்களும் பரபரப்பா செய்தி வெளியிடுறாங்க. ரகசியக் கூட்டம்னு நடத்திட்டு அதை வெளியில் சொல்றது எப்படி தர்மமாக இருக்கும்? நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நிர்வாகிகள் கூட்டம் நடத்துறதையே நான் தவிர்க்க வேண்டி இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் எதுவும் நடக்கலாம். எதைப்பத்தியும் நீங்க கவலைப்பட வேண்டாம். எல்லோரும் உற்சாகமா வேலைகளைப் பாருங்க. கோவை மாநாட்டில் எல்லா விஷயங்களையும் முடிவு பண்ணிக்கலாம். நான் இப்படி எல்லாம் பேசினேன் என்று அதையும் போய் பத்திரிகைகாரங்ககிட்ட சொல்லிடாதீங்க!’ என்று கர்ஜித்து முடித்தாராம்.''
''அதையும் சொல்லீட்டாங்களா?'' என்று நாம் கேட்டதும்... சிரிப்பைச் சிந்தியபடி தொடர்ந்தார் கழுகார்.
''உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விஷயத்தில் என்ன நடக்கிறது என்கிற கதைக்கு அடுத்து வருகிறேன். விஜயகாந்த் மீது அளவில்லாத கோபத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. அதைவிட அவரை தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னவர்கள் மீதும் ஆத்திரத்தைக் கொட்டுகிறார். 'அவருக்கு அவ்வளவு செல்வாக்கு... இவ்வளவு செல்வாக்குனு சொல்லி என்ன ஏமாத்திட்டீங்க... அவரைத் தேவை இல்லாம நாமதான் வளர்த்துவிட்டுட்டோம். அப்பவே அவரைக் கூட்டணியில் வெச்சிருக்கக் கூடாது’ என்றாராம் ஜெயலலிதா. 'என்னை அவமானப்படுத்துற மாதிரி பேசினார்னு தெரிஞ்சே
கூட்டணி வைக்கக் காரணம், கருணாநிதிக்கு எதிரான ஓட்டு சிதறிடக் கூடாதுங்கற ஒரே நோக்கம்தான். ஆனால், ஜெயிச்சு வந்ததும் நம்மை அவர் மதிக்கவே இல்லை. அத்தோட அவமானப்படுத்துற மாதிரி நடந்துக்கிறார்!’ என்றாராம் ஜெயலலிதா. இந்தக் கோபமே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மொத்தமாக ரியாக்ஷன் காட்டுகிறது!''
''என்னதான் பிரச்னை?''
''உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது கணிச மான இடங்களை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஏகத்துக்கும் அடக்கி வாசித்தது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற விஷயங்களில்கூட சட்டசபையில் பெரிய அளவில் கோபத்தைக் காட்டவில்லை. ஆனால், நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் ஒவ்வொரு 'மூவ்’வும் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது. அதற்காக தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதற்காக ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தார் ஜெயலலிதா. பேருக்குதான் அது குழு. அந்த குழு மூலமாக, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் பட்டியலை தயார் செய்து காத்திருந்தார்கள். குழு மூலம் பட்டியலைக் கேட்டு ஜெயலலிதா வாங்கிப் பார்ப்பார்... என்று இலவு காத்த கிளியைப்போல கூட்டணிக் கட்சிகள் காத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்துகொண்டு இருந்தார் ஜெயலலிதா. சட்டசபைத் தேர்தலில்கூட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர்த்துதான் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போதோ மொத்தத் இடங்களையும் வெளியிட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.''
''தே.மு.தி.க.வின் நிலைமை?''
''மூன்று மேயர்கள், 30 நகராட்சித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட நினைத்தது தே.மு.தி.க. ஆனால், மேயர் பதவிகளை தர முடியாது என்று முதலிலேயே கைவிரித்துவிட்டதாம் அ.தி.மு.க. துணை மேயர் பதவிகள் மற்றும் சில நகராட்சித் தலைவர் பதவிகளை வேண்டுமானால் விட்டுக்கொடுப்பதாக சொன்னதாம். இதெல்லாம் அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரையில் அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை தே.மு.தி.க-வுடன் நடத்தவில்லை. பேருக்கு தொகுதி பங்கீட்டுக் குழுவை நியமித்து, பட்டியல்களை எல்லாம் வெளியிட்டு, தேர்தல் தேதியும் அறிவிக்கவைத்து சரியாக காய்களை நகர்த்தி, கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறது தே.மு.தி.க.''
''கம்யூனிஸ்ட்களுக்கு?''
''கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லையாம். திருவொற்றியூர், சிதம்பரம், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் இருக்கிறது. அதை வாங்கினாலே போதும் என்று போராடுகிறார்கள். இதே நிலைதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும். இவர்கள் கதியே இப்படி என்றால்... டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் சரத்குமார் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை அல்லவா!'' என்று சொல்லி மீண்டும் சிரித்தார் கழுகார்!
''கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஷாக்கானதைத் தானே உம்மிடம் சொன்னேன். இப்போது அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியைக் கேளும்!''
''சொல்லும்!''
''போயஸ் கார்டனில் இருந்து ரிலீஸ் ஆன வேட்பாளர் பட்டியலைப் பார்த்து, அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களே அரண்டுபோனார்கள். காரணம், கட்சியின் மா.செ-க்களுக்கும் ஜெ. செக் வைத்திருப்பதுதான். 'நகராட்சித் தொடங்கி ஒன்றிய கவுன்சிலர்கள் வரையிலான பதவிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துகொடுக்கும்படி கார்டனில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டது. சாதி, செல்வாக்கு உள்ளிட்ட சகல விவரங்களையும் கணக்கிட்டு, தர வாரியான மூன்று நபர்களை வரிசைப்படி ஒவ்வொரு பதவிக்கும் தேர்வு செய்து கொடுக்கும்படி கார்டன் தரப்பு சொல்லி இருந்தது. அதற்கேற்றபடி, தங்களது விசுவாசிகளை முதல் இரண்டு இடங்களிலும், ஆகாத ஆட்களை மூன்றாம் இடத்திலும் குறிப்பிட்டு பட்டியல் அனுப்பினார்கள் மாவட்டச் செயலாளர்கள். இந்த விஷயம் அம்மாவுக்கு எப்படித் தெரிந்ததோ... மாவட்டச் செய லாளர்கள் கொடுத்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர்களின் பெயர்களை மட்டுமே அவர் டிக் செய்ய, மாவட்டச் செயலாளர்கள் மிரண்டுவிட்டனர். அறிவிப்பு வந்த பிறகு ஆட்களை மாற்றச் சொல்லியும் அம்மாவிடம் பேச முடியாது. அதனால், அம்மாவின் டிக் பட்டியலில் உள்ளவர்கள் தங்களுக்கு ஆகாதவர்களாக இருந் தாலும், அவர்களின் வெற்றிக்காக மா.செ-க்கள் போராட வேண்டிய இக்கட்டு உருவாகிவிட்டது!’ எனச் சொல்லும் சீனியர் நிர்வாகிகள், ஜெயலலிதா இப்படி செய்ததற்கான பின்னணிகளையும் விளக்கினார்கள்...''
''அது என்ன?''
''சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் உள்ளாட்சித் தேர்தலில் தீவிரமாக இருக்கும் என்பதை ஜெயலலிதா தெளிவாக அறிந்து வைத்திருந்தார். சசிகலாவின் உறவினர்கள் கைகாட்டும் ஆட்களுக்குத்தான் மாவட்டச் செயலாளர்கள் முதல் இடம் கொடுத்து இருப்பார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான், மூன்றாவது இடத்தில் இருந்த ஆட்களைத் தேர்வு செய்து மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அல்லாது, சசிகலா வகையறாக்களுக்கும் அம்மா செக் வைத்தார் என்கிறார்கள். கார்டனில் இருந்து வெளியான பட்டியலில் இப்போது ஒரு சில இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்கள் மாற்றப்படுகின்றனர். அம்மாவிடம் வேறு விதமான காரணங்களைச் சொல்லி, மாற்றப்படும் பட்டியலில் உள்ள பலருமே சசிகலா உறவினர்கள்தானாம்!''
''தி.மு.க. விஷயத்துக்கு வாரும்!''
''கனிமொழி ஜாமீன்தானே இப்போதைய தி.மு.க. விஷயம்... கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்ததும், அதிக நம்பிக்கையுடன் இருந்தார்கள். இரண்டொரு நாளில் ஜாமீன் கிடைத்துவிடும் என்பதுதான் அவர்களது நினைப்பு. ஆனால், நீதிபதி சைனி, 'இந்த மனுவைப் படிக்க எனக்கு அவகாசம் தேவை. அக்டோபர் 1-ம் தேதி பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு எழுந்து சேம்பருக்குள் சென்றதும், நீதிமன்றத்தில் உட்கார்ந்திருந்த ராஜாத்தி அம்மாள் கலங்கிவிட்டாராம். அவரை ஆசுவாசப்படுத்த கனிமொழியால் முடியவில்லையாம். 'நீ சென்னைக்குப் போம்மா... நான் பார்த்துக்கிறேன்’ என்று மகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், தாய்க்கு தாளவில்லையாம். நீதிமன்ற வளாகத்துக்குள் இருக்கும் சிறு செல்லில் வைத்திருந்துவிட்டு... திகார் செல்ல வாகனம் தயாரானதும்தான் கனிமொழியை அழைத்துச் செல்வார்கள். அந்த செல்லுக்குள் உள்ளே நுழையும் வரை கனிமொழியும் தைரியமாகத்தான் இருந்துள்ளார். ஆனால், உள்ளே நடந்து போனவர் தலையைத் திருப்பி ராஜாத்தியைப் பார்த்ததும் கண்கலங்கிவிட்டாராம்.''
''வருத்தம் இருக்கத்தானே செய்யும்!''
''கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவர் குறித்தும் கவலைப்பட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை தி.மு.க-விலும், டெல்லியிலும் பலத்த சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 'ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கு ஏதோ ஒரு சம்பந்தம் இருந்தாலும் கனிமொழி, சரத்குமாருக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லையே?’ என்று கருணாநிதி அந்த அறிக்கையில் சொல்லி இருந்தார். 'ஆ.ராசாவை கருணாநிதி கழற்றிவிடுகிறாரா?’ என்று சிலர் கேட்க ஆரம்பித்துள்ளனர். கருணாநிதியின் இந்த அறிக்கையையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சோனியா கவனத்துக்கு டி.ஆர்.பாலு கொண்டுசென்றதாகவும் சொல்கிறார்கள். சோனியா ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறார். இதற்கிடையே, ஆ.ராசா மீது கருணாநிதிக்கே சில வருத்தங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்!''
''அது என்ன?''
''செப்டம்பர் 15-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்வதாக நீதிபதி சைனி சொல்லி இருந்தார். அதற்கு மறுநாள் கனிமொழி ஜாமீன் மனுத் தாக்கல் செய்ய தயாராகிக்கொண்டு இருந்தார். ஆனால், அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யவிடாமல் டிராய் அறிக்கையை முன்வைத்து ஆ.ராசா பேச ஆரம்பிக்க... அதையே மற்றவர்களும் எடுக்க, விவகாரம் நீண்டுகொண்டே போய் அக்டோபரைத் தொட்டுவிட்டது. செப்டம்பர் 30-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய இருப்பதாக நீதிபதி சொல்லி இருக்கிறார். எனவே கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் கிடைப்பது வரைக்கும் ஆ.ராசா அமைதியாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி சொல்லி அனுப்பி உள்ளாராம்!'' என்ற கழுகார் சிறிது இடைவெளிவிட்டு பேசினார்...
''செப்டம்பர் 15-ம் தேதி அன்று, நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஆர்.சௌந்திரபாண்டியனாருக்கு பிறந்தநாள் விழா. சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவரது சிலைக்கு  முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜாத்தி அம்மாள் தவறாமல் வருகை தந்தார். ஆனால், இந்தமுறை ஆப்சென்ட். 'நான் வரலை!’ என்று சொல்லிவிட்டாராம். அவர் டெல்லியிலேயே தங்கி இருப்பது கருணாநிதியை இன்னும் வருத்தமடைய வைத்துள்ளது.
கலைஞர் டி.வி-யின் மேலாளர்கள் மூவர், சமீபத்தில் டெல்லிக்குப்போய் இருந்தார்களாம். திகார் ஜெயிலுக்குப்போய் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார்களாம். சரத்குமார்தான் டல்லாக காணப்பட்டாராம். கனிமொழி உற்சாகமாய் பேசினாராம். 'இந்த மாத இறுதிக்குள் நான் பெயிலில் வெளியே வந்துவிடுவேன்... அப்பாகிட்ட சொல்லுங்க.' என்று தகவல் சொல்லி அனுப்பினாராம். இது ஒன்றுதான் கருணாநிதிக்கு ஆறுதலான விஷயம்!'' என்று கிளம்பத் தயாரான கழுகார்
''சாதித் தலைவர் ஒருவரை போலீஸ் அதிகாரி சந்தித்ததாக ஒரு செய்தியை உமக்குச் சொல்லி இருந்தேன். அந்த இடத்தில் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்றும் பரமக்குடி விவகாரத்துக்கும் அந்த அதிகாரிக்கும் அப்படி எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சிலர் அடித்துச் சொல்கிறார்கள்!'' என்றார்.
அவரிடம், ''உள்ளாட்சித் தேர்தல் தேதியைப் பார்த்தோம். அக்டோபர் 17, 19... என்று
சோ.அய்யர் அறிவித்திருக்கிறார். ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகும் அக்டோபர் 20-க்கு முன்னதாக தேர்தல் நடந்துவிடும் என்று சொன்னீர். அது மாதிரியே நடந்துள்ளதே!'' என்றோம்.
அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டவராக வானத்தில் மிதந்தபடி வணக்கம் வைத்தார் கழுகார்!
**********************************************************************************
கழுகார் பதில்கள்

கோபாலகிருஷ்ணன், ராஜபாளையம்.
   நரேந்திர மோடியைப் பாராட்டுவதைப் பார்த்தால்... தமிழகத்தை குஜராத் போல வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துவிடுவாரா ஜெயலலிதா?
  தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த இரண்டு முக்கிய மோட்டார் நிறுவனங்கள்  குஜராத்துக்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டதற்கு உண்மை யான காரணம் என்ன? இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் எப்படி முன்னேற்றத்தில் குஜராத் ஆகும்?
 கார்த்திகேயன், ஸ்ரீரங்கம்.
  பரஞ்சோதி - கே.என்.நேரு?
ஒருவர் மீது பாலியல் புகார்!
இன்னொவருவர் மீது கிரிமினல் புகார்!
சபாஷ்... சரியான போட்டி!
 சுரேஷ்குமார், காஞ்சிபுரம்.
  அரக்கோணம் ரயில் விபத்துக்கு உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் ஏன் இத்தனை குழப்பங்கள்?
  சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு ரயிலைக் கடத்திச் சென்று விபத்துக்குள்ளாக்கியவன் யார் என்று இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையே! ஒரு அரசாங்கத்துக்குப் பல்லாயிரம் கோடிப் பணத்தை ஆண்டுதோறும் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு துறை எப்படி பொறுப்பில்லாமல் இயங்குகிறது பார்த்தீர்களா?
 சுரேஷ்பாபு, உடன்குடி.
'பெட்ரோல் விலை உயர்வை நாங்கள் ஏற்கவில்லை’ என்கிறாரே தங்கபாலு?
  தமிழகத்தில் இருக்கும் 'துணிச்சலான அரசியல்வாதி' என்று தங்கபாலுவை நான் சும்மா சொல்லவில்லை என்பது இப்போதாவது தெரிகிறதா?
 பழனிச்சாமி, திருப்பூர்.
  மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச நரேந்திர மோடிக்கு அருகதை உண்டா?
  கடந்த காலத் தவறுகளில் இருந்து மோடி பாடம் கற்கக் கூடாதா? பிராயச் சித்தம் தேடுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர் திருந்தி விடக் கூடாது என்று சிலர் நினைப்பதுதான் ஏன் என்று புரியவில்லை!
 கருணாகரன், நாகர்கோவில்.
  உண்மையான இந்தியர்கள், தூக்குத் தண்டனையை ஆதரிக்கவே செய்வார்கள் என்கிறேன் நான்...?
  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கால்கோள் நாட்டியவர்களில்  இவரும் ஒருவர். சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்தபடி தனது அனுபவங்களை எழுதினார். 'சிறையில் தவம்’ என்ற தலைப்பில் அது புத்தகமாக வந்தது. அந்த டைரியில் 21.2.1922-ம் நாளைப் பற்றி அவர் எழுகிறார்..
'அப்பாத்துரை என்ற சமையல்காரரை தூக்கிலிடப் போகிறார்கள். இன்று நான் அதிகாலையில் எழுந்துவிட்டேன். அன்று தூக்கிலிடப்பட இருந்த மனிதனின் நினைவு என்னை முன்னதாக எழுப்பி இருக்க வேண்டும். என் படுக்கையில் உட்கார்ந்தவாறே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அந்த நிமிஷங்கள் ஒரு யுகம் போலத் தோன்றின. அவர்கள், துரதிர்ஷ்டம் பிடித்த அப்பாத்துரையை கைவிலங்கிட்டு அழைத்து வந்தனர். காலடி ஓசையில் இருந்து அவர்கள் வந்ததை உணர்ந்தேன். சில நிமிஷங்களில் தலைமை வார்டர் என் அறையைத் தாண்டிச் சென்றார். அதிலிருந்து அப்பாத்துரையின் வாழ்வு முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். கடவுள் கொடுத்ததை மனிதன் பகிரங்கமாகப் பறித்துக் கொண்டான். அதைச் சட்டப்படி நியாயம் என்றும் எண்ணிக் கொண்டான்!’
- இப்படி எழுதி இருப்பவர் மூதறிஞர் ராஜாஜி.
 சுந்தரமூர்த்தி, விருத்தாசலம்.
  யாரையும் கேட்காமல் பட்டியல் வெளியிட்டு விட்டாரே ஜெ.?
  யாரைக் கேட்க வேண்டும்_ இது ஜெ. வாய் திறந்து சொல்லாத பதில்!
ஒரு உண்மை மட்டும் புரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் கூட்டணிகளுடன் பேசுவதற்கு முன்னதாக ஒரு பட்டியல் வெளியாகிவிட்டது. 'அம்மாவுக்குத் தெரியாது’ என்று அப்போது சிலர் சொன்னார்கள். இன்று நடப்பதைப் பார்த்தால், அதுவும் 'அம்மாவுக்குத் தெரிந்து நடந்ததுதான்’ என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தனித்து நிற்கலாம் என்ற ஐடியா அவருக்கு இருந்திருப்பதும் தெரிகிறது.
 சகாயகுமார், திருவண்ணாமலை.
  அடுத்த மாதம் திருமணம் ஆகப் போகும் எனக்கு உங்களது அறிவுரை?
  கேள்வி கழுகாருக்குதானே.! புதுமணத்தம்பதிக்கு புத்திமதி சொல்லாதே என்கிறது சாஸ்திரம். ஆனால், வி.ஸ.காண்டேகர் தனது கதை ஒன்றில் சொன்ன வாசகம் கவனத்துக்கு வருகிறது.
'திருமணம் என்பது ஒரு போர். என்னதான் லாகவமாகச் செயல்பட்டாலும் சேதாரம் இருக்கத் தான் செய்யும்’.
 கதிரவன், கோவை.
  முதல் நாள் அணு உலைக்கு ஆதரவு... மறுநாள் எதிர்ப்பு.. என்ன ஆச்சு ஜெயலலிதாவுக்கு?
  பேரறிவாளன், சாந்தன், முருகன் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்து கொண்டார். இனிமேல் ஜெயலலிதா எந்தப் பிரச்னை தொடர்பாகவும் முதல் நாள் எழுதும் அறிக்கையை ரிலீஸ் பண்ணாமல் இருந்து... மறுநாள் யோசித்த பிறகு வெளியே விட்டால் நல்லது!
 சீர்காழி சாமா, தென்பாதி.
  ரயில் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் அடைந்தால் முன்பெல்லாம் ரயில்வே மந்திரி பதவி விலகுவார். ஆனால், தற்போதைய மந்திரி, ஆறுதல் மட்டும் கூறிவிட்டு கடமையை முடித்துக் கொள்கிறாரே?
  ஆறுதலாவது சொல்ல வருகிறாரே!  ஆறு மாதங்களுக்கு முன்னால் பீகாரில் ஒரு விபத்து ஏற்பட்டபோது மத்திய மந்திரி போகவே இல்லை. முன்பெல்லாம் எப்பவாவது விபத்து நடக்கும். அது பெரிய விஷயமாகி பதவி விலகுவார். இப்போது மாதம் தோறும் இந்தியாவில் எந்தப் பகுதியிலாவது நடக்கிறது விபத்து. பதவி விலக ஆரம்பித்தால் விலகிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!
 எஸ்.ராதாகிருஷ்ணன், கச்சனம்.
  வைகோ இன்னும் எவ்வளவு காலம்தான் மைக் பிடித்துக் கொண்டே இருக்கப் போகிறார்?
  மைக் இருக்கும் வரை!
**********************************************************************************
தரமான சிகிச்சை எப்போது?


உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டு விஞ்ஞானிகள், தாமே தயாரித்த செயற்கை கோள்களைப் பறக்க விடுகிறார்கள். கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தபால் துறை, வங்கி போன்றவை உலக நாடுகளைவிட மேம்பட்ட நிலையில் இருக்கின்றன. 88 கோடி இந்தியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக வியப்பான செய்தி தருகிறார்கள். ஆனால், மருத்துவத்தில் நம் நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகளும், தலை சிறந்த மருத்துவர்களும், புதிய தொழில்நுட்பங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் திரைப்பட நட்சத்திரங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை உடல் சரியில்லை என்றால் உடனே அந்நிய தேசத்துக்குப் படை எடுக்கிறார்கள். இதைப் பார்த்தால் இந்தியா இன்னமும் மருத்துவத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி நம் நாட்டை வழி நடத்திச் செல்லும் சோனியா காந்தி வரை வெளிநாடுகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் பணம் படைத்தவர்கள் என்பதால் வெளிநாடுகளுக்குச் சென்று உடம்பைக் கவனித்துக் கொள்கிறார்கள். இந்த ஏழை இந்திய நாட்டில் பிறந்த மற்ற குடிமக்கள் என்ன செய்வது?
உடல்நிலை சரியில்லாத அனைத்து இந்தியர்களையும் அரசு செலவிலேயே வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும், அது சாத்தியம் இல்லை என்றால் இங்கே தரமான சிகிச்சைக்கு உத்தரவாதம் தரவேண்டும்.
ஆர்.ஹரிஹரன், கோவை.
**********************************************************************************
அடுத்த இதழ் முதல்... உள்ளாட்சி ஸ்பெஷல் கலக்கல்!

**********************************************************************************
''அந்த 16 குடும்பத்தை காங்கிரஸ்காரர்கள் இதற்கு முன்னால் பாத்ததுண்டா?''

தொடங்கியது மரணதண்டனை எதிர்ப்புப் பயணம்
'மரண தண்டனைக்கு எதிராக மக்களை நோக்கிய பயணத்தைத் தொடங்கி இருக்கிறது பெரியார் திராவிடர் கழகம். 13 நாட்களில் 90 ஊர்களில், பரப்புரை நடைபயணம் மேற்கொள்ளப் போகிறார்கள். இதன் தொடக்க விழா, சென்னை ராயப்பேட்டையில் கடந்த 20-ம் தேதி மாலை நடந்தது.
 இந்த நிகழ்ச்சியில் வைகோ, கொளத்தூர் மணி, பேராசிரியர் தீரன், வன்னி அரசு, வழக்கறிஞர் பாண்டிமாதேவி என ஏராளமான தமிழ் உணர் வாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவரும் காங்கிரஸைப் பிரித்து மேய்ந்துவிட்டனர். அறிமுக உரை நிகழ்த்திய 'விடுதலை’ இராசேந்திரன், ''தமிழ் உணர்வாளர்கள் இருக்கும் வரை ஒருபோதும் தமிழ் மண்ணிலே தூக்கு நிறைவேறாது. இதனால்தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை, தமிழகத்தில் விசாரிக் காமல் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸார் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறார்கள். அவர்களிடம் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழினம் ஒன்று திரண்டு போராடிக்கொண்டு இருக்கும்போது, நீங்கள் இப்படிச் செய்தால் கடுமையான பின் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும்!'' என்று ஆவேசம் காட்டினார்.
'நாம் தமிழர் கட்சி’யின் தீரன், ''ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளாக உள்ள 141 நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. அந்த சபையில் உறுப்பு நாடாக வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டு இருக்கிற நமது நாடு, அப்பாவி மூன்று மனிதர்களுக்கு, தூக்குத் தண்டனையை நிறைவேற்ற துடிக்கிறது! இந்த விஷயத்தில் எவ்வளவு முரண்பாடுகள்... ஸ்ரீபெரும்புதூர் நிகழ்வின்போது ராஜீவோடு உயிர் நீத்த குடும்பங்களை ஒன்று திரட்டி, மூன்று அப்பாவி தமிழர்களை தூக்கில் இட வேண்டும் என்று சிலர் உண்ணாவிரதம் செய்யத் தூண்டுகிறார்கள். இதுநாள் வரையில் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்களை, காங்கிரஸ் தலைவர்கள் போய் பார்த்தார்களா? அவர்களுக்கு உதவி செய்ததா?'' என்றவுடன் கூட்டத்தில் பலத்த கைதட்டல்.
அடுத்து பேசிய கொளத்தூர் மணி, ''காங்கிரஸ் கட்சி, காந்தியின் பெயரை வைத்து போலி அரசியல் செய்துகொண்டு இருக்கிறது. ஆனால், காந்தியை அவர்கள் நினைப்பதும் இல்லை; மதிப்பதும் இல்லை. 'மரண தண்டனை என்னும் தவறை நிகழ்த்திவிட்டால் அந்தத் தவறை என்றும் நம்மால் திருத்திக்கொள்ள முடியாது. எனவே, மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்’ என காந்தியடிகளே குரல் கொடுத்தார். அவரின் பெயரை சொல்லிக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் செய்யும் தமிழின துரோகத்தை உலகத் தமிழ் சமுதாயம் மன்னிக்காது. இவர்களின் முகத்திரையைக் கிழிக்க, 'ராஜீவ் கொலை வழக்கில் மறைக்கப்படும் நீதி’ எனும் தலைப்பில் விடுதலைப் புலிகளின் நியாயமான நிலைப்பாட்டை கூடிய சீக்கிரமே புத்தகமாக வெளியிடப் போகிறோம்...'' என்று முழங்கிவிட்டு அமர்ந்தார்.
கடைசியாக பேசிய வைகோ, ''ஜனாதிபதிக்கு சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் 'நளினி, பேரறி வாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு கருணை காட்டு வதில் தனக்கு ஆட்சபேனை இல்லை’ என்று தெரிவித்துவிட்டு, இப்போது அவரின் ஒப்புதலோடுதானே இந்தக் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி என்றால் சோனியா போடும் கணக்கு என்ன? இவர் களைத் தூக்கில் இட வேண்டும் என்பதுதான் அவர் போடும் திட்டமா? சோனியாவே இதற்கு பதில் சொல்ல வேண்டும். நேற்றுகூட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை சந்தித்த போது, 'தாயகத் தமிழ் மக்களுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவியுங்கள்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர். மாநில அரசை நான் கேட்டுக்கொள்வது அமைச்சரவையைக் கூட்டி நல்ல முடிவெடுங்கள். அதை ஆளுநருக்கு அனுப்புங்கள். 'விதி 72-ன் படி ஆளுநர் அதிகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட முடியாது என இம் மூவருக்கும் தீர்ப்பளித்த நீதிபதிகள், நாட்டை அச்சுறுத்திய சம்பவமோ, மக்களுக்கு அச்சம் ஏற்படுத்திய சம்பவமோ இது அல்ல என்று சொல்லி இருக்கிறார்கள். மத்திய அரசாங்கமே ஒரு நல்ல முடிவினை தமிழர் விஷயத்தில் செயல்படுத்து... இல்லை என்றால், ஈழ விவகாரம் முதல் கூடங்குளம், முல்லைப் பெரி யாறு வரை வஞ்சிக்கப்படும் தமிழர்களை ஆழிப் பேரலையாக மாறச் செய்துவிடாதே...'' என்று கர்ஜித்து முடிக்க,
13 நாட்கள் பரப்புரை பயணம் தொடங்கியது.
**********************************************************************************
''இன்னும் ஒரு மாசம் மூக்கைப் பொத்திக்கோங்க...''

சிக்கலில் துரைப்பாக்கம் மாணவர்கள்
''எல்லா ஸ்கூல்லயும் மாணவர் கள் நல்லாப் படிச்சு, சந்தோஷமா வெளியே போவாங்க. ஆனால், எங்க ஸ்கூல்ல படிச்சு முடிச்சுட்டுப் போறவங்க நோய் நொடி ஏற்பட்டு நோயாளியாத்தான் போக வேண்டியிருக்கு!'' - என்று மாணவர்களின் வேதனைக் குரல்கள் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) பதிவாகி இருந்தது.
உடனே கதறல் குரல் பதிவான ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விசிட் அடித்தோம். விஸ்தாரமான இடத்தில் பள்ளிக் கட்டடம் இருந்தது. அப்புறம் என்ன என்ற யோசனையில் இருந்த நம்மை நோக்கி குப்புறத்தள்ளும் வேகத்தில் வந்தது துர்நாற்றம். குடலைப் புரட்டிக் கொண்டு வந்ததைத் தாங்கிக் கொண்டு, பள்ளியின் பின்புற சுற்றுச் சுவரைத் தாண்டிப் பார்வையை ஓடவிட்டோம். அங்கே... மலை போல் குவிந்து கிடந்தது குப்பை! அந்த மலையில் பன்றிகளும் மாடுகளும் சுதந்திரமாக மேய்ந்து கொண்டு இருந்தன.
சத்துணவு சாப்பிட வகுப்பு அறையில் இருந்து வெளியே வந்த மாணவர்களை ஈக்கள் படையெடுத்து விரட்டிவர, வாங்கிய உணவை வயிறுக்கு உள்ளேயும் தள்ள முடியாமல், வெளியேயும் கொட்ட முடியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டு இருந்தனர்.
பள்ளியின் இந்த அவல நிலை குறித்து, பெற்றோர் - ஆசிரியர்கள் சங்கத் தலைவர் குமாரிடம் பேசினோம். ''இந்தப் பள்ளியில் 1,800 மாணவர்கள் படிக்கிறாங்க. துரைப் பாக்கம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை மட்டுமில்லாம, இந்த ஏரியாவில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களின் உணவுக் கழிவுகளும் இங்குதான் கொட்டப்படுகிறது. அவ்வப்போது, குப்பையைக் தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார்கள். அந்த நேரத்தில் இந்தப் பகுதி முழுக்கப் புகை மூட்டமாக இருக்கும். வகுப்பறை ஜன்னல்களை மூடிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்து இருக்க முடியும்? நாற்றம் தாங்க முடியாமல் சில நாட்கள் பள்ளிக்கு விடுமுறைகூட விட்டு இருக்கிறார்கள். இந்தப் பிரச்னை குறித்து, ஊராட்சித் தலைவருக்கும், எம்.பி-க்கும் எத்தனையோ முறை மனு கொடுத்து இருக்கிறோம். ஆனால், யாரும் கண்டு கொள்ளவே இல்லை. இப்போது பொறுப்பு ஏற்றுள்ள அரசாவது, மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தி எங்கள் பள்ளிக்கு ஏற்பட்டு உள்ள இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஆனால், மாணவர்களைத் திரட்டி மறியல் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம்...'' என்று குமுறினார்.
ஆசிரியர்கள் சிலரிடம் விசாரித் தோம். ''மருத்துவக் குழு அவ்வப்போது வந்து மருந்து மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுச் செல்லும். ஆனால், இந்தக் குப்பையை அகற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை!'' என்றனர்.
தன் பிள்ளைகளை அந்தப் பள்ளியில் படிக்க வைத்திருக்கும் பழனி என்பவர், ''குப்பை நாற்றத்தோடு, புகை மூட்டம் காரணமாகவும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். காலையில் நல்லபடியாக பள்ளிக்குச் செல்லும் மாணவன் இடையிலேயே உடல் நலக் குறைவு ஏற்படும் சூழல் நிலவு கிறது. பக்கத்துலேயே ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் அங்கே மருந்து மாத்திரைகளைக் கொடுத்து விடுகிறார்கள். ஆனாலும் பசங்களுக்கு கை கால்அரிப்பு, குடைச்சல் ஏற்படுகிறது...'' என்றார்.
சமூக ஆர்வலர்கள் கண்ணன் மற்றும் ஜெய்கணேஷ், ''குப்பை கொட்டப்படுவது ஒரு தனியார் நிலத்தில்தான். 40 ஆண்டுகளுக்கு முன் 22 ஏக்கர் நிலத்தை வாங்கிய அவர்கள், அதில் சில ஏக்கர் நிலத்தை, சுடுகாடு அமைப்பதற்காக ஊராட்சிக்கு கொடுத்து உள்ளனர். ஆனால், மீதி நிலத்தில் அதற்கு சொந்தக்காரரிடம் அனுமதி வாங்காமல் குப்பை கொட்டப்படுகிறது. அந்த நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் நிலத்தைச் சுற்றி சுவர் கட்டி விட்டால் இந்தப் பிரச்னை ஓரளவு தீர்ந்து விடும்!'' என்றார்.
இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் துரைப்பாக்கம் (தி.மு.க.) ஊராட்சித் தலைவர் ஏகாம்பரத்திடம் பேசினோம். ''இந்தப் பகுதியில் உள்ள, மாநகராட்சி குப்பைக் கிடங்கில் எங்கள் ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையைக் கொட்ட அனுமதிக்கவில்லை. தனியார் நிலத்தில் குப்பையைக் கொட்டுகிறோம் என்பது உண்மைதான். எனக்கு முன் இருந்த ஊராட்சித் தலைவர்கள் கடைப்பிடித்த வழிமுறையையே நானும் தொடர்கிறேன். சோழிங்கநல்லூர் அருகே குப்பை கொட்ட இடம் ஒதுக்கித் தருவதாக கலெக்டர் கூறி உள்ளார். யாரோ வழக்குப் போட்டு அதையும் நிறுத்தி விட்டார்கள். அடுத்த மாதம் நடக்கும் உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து  இந்த ஊராட்சி, மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள்  வந்து விடும். அதன் பிறகு, மாநகராட்சியே இந்த குப்பை மலையை அகற்றி விடுவார்கள். பள்ளி மாணவர்களின் கஷ்டம் இன்னும் ஒரு மாதம்தான்!'' என்றார்.
அப்போ... இன்னும் ஒரு மாசத்துக்கு?
மு.செய்யது முகம்மது ஆசாத்
*************************************************************************
ஊழியர்களின் 'பிச்சை' போராட்டம்!

காரைக்கால் அதிர்ச்சி
சுமார் 150 பெண்கள் கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் தொனியில் காரைக்கால் வீதி களில் ஊர்வலம் செல்லவே... பார்த்த மக்கள் அதிர்ந்து விட்டார்கள்.
பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு பாலும் ரொட்டியும் கொடுக்கும் அரசுப் பள்ளி ஊழியர்கள்தான் அவர்கள். கடந்த ஆறு மாத காலமாக ஊதியம் தராத புதுவை அரசை எதிர்த்துத் தான் இந்த பிச்சை எடுக்கும் போராட்டம்!
காரைக்கால் பிரதேசப் பள்ளிகளின் ரொட்டி, பால் ஊழியர்கள் சங்கத் தலைவியான வசந்தி நம்மி டம் பேசினார். ''புதுவை மாநிலத்தில் பள்ளி மாண வர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டதுதான் இந்த ரொட்டியும் பாலும் வழங்கும் திட்டம். காலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும், மாலையில் பள்ளியை விட்டுச் செல்லும்போதும் ஐந்து பிஸ்கட்டுகளும் ஒரு டம்ளர் பாலும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அரசு பள்ளியில் 2 வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இது உண்டு. இதற்காக, கணவனால் கைவிடப் பட்டவர்கள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து, ஆட்களை பணியில் சேர்த்தார்கள். அது எங்களைப்போல் வாழ்க்கையை இழந்து நின்றவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இதற்காகத் தொகுப்பு ஊதியமாக மாதம்  4,000 எங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. காலை 5.30 மணிக்கு வரும் பால் வண்டியை எதிர்பார்த்து 5 மணிக்கே பள்ளிக்குப் போகவேண்டும். மாலையில் பால் கொடுத்ததும், பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு பள்ளியில் இருக்கும் மிச்ச வேலைகளையும் பார்த்துவிட்டு வீடு திரும்ப மாலை 5 மணியாகி விடும். இப்படி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கிறோம்.
நாங்கள் அரசு ஊழியர்கள் என்றாலும் அரசின் திட்டங்கள், சலுகை கள் எதுவும் எங்களுக்குக் கிடையாது. முன்பு நாங்கள் வாங்கிக்கொண்டு இருந்த அரசு உதவித் தொகைகூட இப்போது கிடையாது. 'சரி பரவா யில்லை... நமக்குத்தான் அரசு வேலை இருக்கிறதே’ என்று நாங்களும் விட்டு விட்டோம். ஆனால், தற்போது அதற்கும் திண்டாட்டமாகி விட்டது. கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. வேறு எந்த வழியும் இல்லாத நாங்கள், இந்த ஊதி யமும் இல்லாமல் எப்படிக் குடும்பம் நடத்த முடியும்? கிட்டத்தட்ட பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டோம். அதை அரசுக்கு உணர்த்தத்தான் தெருவில் இறங்கி இப்படியரு போராட்டத்தை நடத்தி னோம்...'' என்றார் வேதனையுடன்.
புதுவை மாநிலத்தில் மொத்தம் 828 பேர் இப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊதியம் வாங்காமல் ஏழ்மை நிலையில் தவிக்கும் இவர்களின் பரிதாப நிலை அறிந்து காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனமும் ஆதரவாகக் களமிறங்கி உள்ளது. அரசிடம் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி யும் உண்ணாவிரதம் இருந்தும் இவர்களுக்காகப் போராடி வருகிறது. இந்த வித்தியாசப் போராட்டத்தை நடத்தியவர்களும் அவர்கள்தான்.
சம்மேளனத் தலைவர் எம்.எல்.ஜெய்சிங்கிடம் பேசினோம். ''பொதுவாக அரசு ஊழியர்களுக்கு மாதக் கடைசியில் சம்பளம் வழங்குவார்கள். ஆனால், இவர்களுக்கோ வழக்கமாகவே 15 தேதிக்கு மேல் ஏதாவது ஒரு நாளில்தான் வழங்குவார்கள். முதலில் வேளாண் கூட்டுறவு நிறுவனமான பாசிக் மூலம் இந்த ராஜீவ்காந்தி சிற்றுணவு திட்டத்தை நடத்தியவர்கள், தற்போது பால் கூட்டுறவு நிறுவனமான பான்லே மூலம் நடத்துகிறார்கள். சீனி (சர்க்கரை), மண்ணெண்ணெய், பால் ஆகியவற்றையும், இவர்களுக்காக ஊதியத்தையும் அந்த நிறுவனமே வழங்கி வந்தது. இதற்கான நிதியை கல்வித்துறை பான்லேவுக்கு அளித்துவிடும். தற்போது அதில் ஏதோ சிக்கல் போலிருக்கிறது. அதனால் பான்லே நிறுவனம் ஊழியர்களுக்கான ஊதியத்தை தங்களால் வழங்க முடியாது என்று சொல்லிவிட்டது. கல்வித்துறையோ, 'இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எல்லாம் பான்லேதான்’ என்று கைவிரித்து விட்டது. ஒரு மாதம் ஊதியம் இல்லாவிட்டாலே கதை திண்டாட்டமாகிவிடுகிற நிலையில், ஐந்து மாதங்களாக ஊதியம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? அதனால் தான் அவர்களுக்காக களமிறங்கி அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டங்களை நடத்துகிறோம்...'' என்றார்.
விளக்கம் கேட்டு புதுவை அரசின் கல்வித் துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை தொடர்பு கொண்டோம். ''இந்தத் திட்டம் கல்வித் துறை மூலம் நடத்தப்படுவது இல்லை. தற்போது பான்லே நிறுவனம் டெண்டர் எடுத்து நடத்தி வருகிறது. அவர்கள் ஆறு மாத காலம் நடத்தி முடித்து பில் அனுப்பினால், அதை கல்வித் துறை கொடுக்கும். அப்படி அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பில் எதுவும் எங்களிடம் பாக்கி இல்லை. பான்லே ஐந்து மாத காலமாக ஊதியம் கொடுக்காதற்கும் கல்வித் துறைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும், பான்லேயின் நிலையை கருத்தில் கொண்டும், ஊழியர்களின் துயரத்தை மனதில் கொண்டும், ஆறு மாத காலம் முடியாத நிலையில், மூன்று மாதங்களுக்கான பில் தொகையை உடனடியாக பான்லேவுக்கு கொடுக்க, முதல்வர் சம்மதத்துடன் உத்தரவு தயாராகி விட்டது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் அது பான்லேவுக்கு கொடுக்கப்பட்டு, ஊழியர்களிடம் சேர்ந்துவிடும்!'' என்றார்.
பால் ஊட்டுகிறவர்களின் வயிறு பற்றி எரியலாமா?
**********************************************************************************
கரன்ட் ஆக்சிஜன் ரத்தம் இல்லை

கடலூரை அழவைத்த அலட்சிய மரணம்
''குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணி விடுறேன்னு செல்வியைக் கூட்டிட்டுப்போய், பொணமா திருப்பிக் கொடுக்குறாங்கய்யா...'' என்று கதறி அழுகிறார் முருகன்.
கடலூர் மாவட்டம் ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முருகனின் மனைவிதான் செல்வி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். சில வாரங்களுக்கு முன்பு நான்காவதாக ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நடந்ததைச் சொல்கிறார் முருகன்.
''போன 5-ம் தேதி வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தா யாரும் இல்லை. செல்வி, அவங்க அம்மாகூட ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறதா பக்கத்தில் இருக்கிறவங்க சொன்னாங்க. என்னமோஏதோன்னு பதறி, மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடினேன். 'உங்க மனைவிக்கு ஆபரேஷன் நடக்குது’னு சொன்னாங்க. 'என்கிட்ட எந்தக் கையெழுத்தும் வாங்கலை... கேட்கவும் இல்லை... எப்படி ஆபரேஷனுக்குக் கூட்டிக்கிட்டு போனீங்க?’ன்னு கேட்டேன். யாரும் பதில் சொல்லலை.
கொஞ்ச நேரத்தில் நர்ஸுங்க பதற்றமா அங்கியும், இங்கேயும் அலைஞ்சிகிட்டு இருந்தாங்க. என்னன்னு கேட்டப்ப, 'உன் மனைவிக்கு ஆபரேஷன் செய்துகிட்டு இருந்தப்ப கரன்ட் கட்டாயிடுச்சு. ஜெனரேட்டர் போடுறதுக்காக அவசரமா போறாங்க’ன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகு ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்து போயிடுச்சு, அதை எடுக்கப் போறோம்ன்னு சொன்னாங்க. அப்புறம், ரத்தம் கம்மியா இருக்குது. ரத்தம் வாங்க கடலூர் போயிருக்காங்கன்னு சொன்னாங்க. ஒரு வழியாஆபரேஷன் முடிஞ்சு ரூமுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. மறுநாள் சாயந்திரம், 'உங்க மனைவி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. நீங்க கடலூர் கூட்டிட்டுப் போங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.
கடலூர் ஆஸ்பத்திரிக்குப் போனா, 'கேஸ் ரொம்ப மோசமான நிலையில் இருக்குது’ன்னு சொல்லி என்கிட்ட கையெழுத்து வாங்குனாங்க. அங்க சேர்த்த அரை மணி நேரத்தில், 'இங்க முடியாது, பாண்டி ஜிப்மர் கொண்டு போங்க’ன்னு சொன்னாங்க. அங்கு சேர்த்த மறுநாள் இரவு 11 மணிக்கு இறந்துட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. நாலு புள்ளைங்களையும் வெச்சிக்கிட்டு இனிமே நான் எப்படி வாழப் போறேனோ தெரியலைங்க...'' என்று கதறினார்.
கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் சம்பத்திடம் பேசினோம். ''கடலூரில் இருந்து எடுத்து வந்து அந்தப் பெண்ணுக்கு ரத்தம் செலுத்தியது உண்மைதான். ஆபரேஷன்போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்தை அவரது உடம்பு ஏற்றுக் கொள்ளவில்லை. லட்சத் தில் ஒருத்தருக்கு இப்படி நடக்க வாய்ப்பு உண்டு. இது ஒரு விபத்துதானே தவிர, யார் மீதும் தவறும் இல்லை. அந்தக் குடும்பத்துக்கு நஷ்டஈடு கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய கணவன் கையெழுத்துத் தேவை இல்லை. பேஷன்ட் கையெழுத்தே போதும். மனைவி இறந்த துக்கத்தில் கணவர் ஏதேதோ பேசலாம். ஆனால் வேறு எதுவும் உண்மை இல்லை!'' என்று மறுத்தார். தீர விசாரித்து உண்மை அறியப்பட வேண்டும்!
**********************************************************************************
''தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க!'

Follow - up
புதுவை வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரச்னையைக் கடந்த 21.9.11 ஜூ.வி-யில் 'பந்தாடப்படும் மருத்துவ மாணவர்கள்’ என்ற கட்டுரையில் எழுதி இருந்தோம்.
 அந்த விவகாரம் தொடர்பாக, கல்லூரியின் இயக்குநர் நித்யானந்தன் நம்மை அழைத்துப் பேசினார். ''கடந்த வருடம் இந்திய மருத்துவ கவுன்சில் எங்கள் கல்லூரிக்கு ஆய்வுக்கு வந்தது. அப்போது கல்லூரியை ஆய்வு செய்துவிட்டு, இங்குள்ள பேராசிரியர்களைப் பற்றிய விவரங்களை வாங்கிக்கொண்டு போனார்கள். அதன் பிறகு, இரண்டு ஜூனியர் ரெசிடன்ட் மருத்துவர்கள் எங்கள் கல்லூரியில் இருந்து விலகி, வேறு கல்லூரிக்குச் சென்றுவிட்டனர். புதுவையில் உள்ள மற்ற கல்லூரிகளையும் மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்தபோது, எங்கள் கல்லூரியில் இருந்த இரண்டு மருத்துவர்களை வேறு கல்லூரியில் பார்த்து இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு கல்லூரியில் வேலை செய்வதாக தவறாகப் புரிந்துகொண்டு எங்கள் அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டார்கள். நாங்கள் நீதிமன்றத்துக்குப் போனோம். இப்படி ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதை மாணவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் நாங்கள் அட்மிஷன் போட்டோம். முதலாம் ஆண்டு தேர்வு எழுத நீதிமன்றம் அனுமதி தந்தும், பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. ஆகவே, மீண்டும் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம். நிச்சயம் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது!'' என்று உறுதியாகச் சொன்னார்.
ஆனாலும், மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக் கிறது.
         - ஆ.நந்தகுமார்
 
'டாஸ்மாக்கை மூடிட்டாங்க..!'
Follow - up
வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் கிராமத்தில், பொது மக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை எதிர்த்துப் பெண்களே ஒன்று திரண்டு அந்தக் கடைக்கு பூட்டுப் போட் டனர். இதை கடந்த 25.9.11 ஜூ.வி-யில் 'டாஸ்மாக் கடைக்குப் பூட்டு’ என்ற தலைப்பில் வெளி யிட்டு இருந்தோம். பொதுமக்களின் பிரச்னையை வேலூர் மாவட்ட கலெக்டர் நாகராஜனின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்.
''ஜூ.வி-யில் செய்தி வந்ததுமே அதிகா ரிங்க எங்க ஊருக்கு வந்து, மக்களிடம் விசாரிச்சாங்க. எல்லோருமே இந்த இடத்தில் டாஸ்மாக் கடை இருப்பதால் எங்களுக்கு பிரச்னையாக இருக்கிறது என்பதைச் சொன்னோம். உடனே கடையை மூடிட்டாங்க. எங்க நீண்ட நாள் பிரச்னையை தீர்த்து வைத்த உங்களுக்கும், கலெக்டருக்கும் எப்படி நன்றி சொல்ற துன்னே தெரியலை...'' என்று நெகிழ்ந்தார்கள் மேல்மொணவூர் மக்கள்.
கலெக்டர் நாகராஜனிடம் பேசினோம். ''இந்தப் பிரச்னையை நீங்கள் என்னிடம் சொன்னதுமே, அதிகாரிகளை அங்கு அனுப்பினேன். உண்மை தெரிந்தது. உடனே அந்தக் கடையை மூட உத்தரவிட்டேன். அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கு இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கும் அம்முண்டி என்ற இடத்துக்கு கடையை மாற்றலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதன்படி அனுமதி கொடுத்து இருக்கிறேன்...'' என்றார்.
நாமும் கலெக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தோம்.
**********************************************************************************
கே.சி.பழனிச்சாமியிடம் காசு வாங்கியவர்கள் லிஸ்ட்!

கரூர் கலக்கம்
''நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கரூரில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மணல் கொள்ளையில் ஈடுபட்டுவரும் தி.மு.க. எம்.பி-யான கே.சி.பழனிச்சாமியை  சிறையில் அடைப்போம்!'' - நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது அரவக்குறிச்சியில் ஜெயலலிதா இப்படித்தான் அறைகூவல் விட்டார். இப்போது கைதுப் படலத்தை நடத்திவிட்டார் முதல்வர்.
மாயனூரில் உள்ள தனது மில்லில் கே.சி.பழனிச்சாமி இருந்தபோது கடந்த 19-ம் தேதி மதியம் திடீரென அங்கு வந்த போலீஸார், அவரைக் கைது செய்து எட்டு வழக்குகள் போட்டு இருக்கிறார்கள். குளித்தலை குற்றவியல் நடுவர் எண் - 2 நீதிமன்ற நீதிபதி, செப்டம்பர் 3-ம் தேதி வரை அவரைக் காவலில் வைக்க உத்தரவு போட்டார். இதன் அடிப்படையில் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட கே.சி.பி-யின் உதவியாளர் சுந்தரேசன், மேலாளர் கிரிராஜ், செந்தில்ராஜா, சசிக்குமார், குமார் மற்றும் ராஜா ஆகிய ஆறு பேரை போலீஸ் தேடி வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் கே.சி.பழனிச்சாமி, அரவக்குறிச்சி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார்.
''மணல் அள்ளுவதில் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்துக்கும், கே.சி.பழனிச்சாமிக்கும் எப்போதும் பலத்த போட்டி நடக்கும். அழகிரி ஆதரவாளரான பழனிச்சாமி, தலைமையிடம் பேசி கரூரைச் சுற்றியுள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ள அனுமதி வாங்கினார்!'' என்று உள்ளூர் தி.மு.க-வினரே கிசுகிசுக்கிறார்கள். திமு.க-வில் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார் பழனிச்சாமி.
கரூர் மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் வாசுகியின் கணவர், தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டபோதே, கே.சி.பழனிச்சாமியும் கைது செய்யப்படுவார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அப்போது வலுவான  ஆதாரங் கள் கிடைக்காமல் போகவே, கரூர் போலீஸாரால் அவரை வளைக்க முடியவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாயனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கட்டளையில், அப்பகுதியின் வி.ஏ.ஓ-வான நீலமேகம் கொடுத்த புகாரை வைத்து, 'ஏற்கெனவே, மாயனூர் காவிரி ஆற்றுப் பகுதியில் மணல் அள்ள அரசு தடை விதித்தும், அதை மீறி 2009-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் கடந்த மே 13-ம் தேதி வரை கே.சி.பழனிச்சாமி உட்பட ஆறு பேர் மணல் அள்ளியதாக’ புகார் கொடுத்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து நேரில் விளக்கம் அளிக்க வருமாறு கடந்த 13-ம் தேதி கே.சி.பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாம். ஆனால், அதை அலட்சியம் செய்து விசாரணைக்கு வராமல் பழனிச்சாமி இழுத்தடிக்கவே, 'நீங்கள்
ஆஜராகவில்லை என்றால் உங்கள் மகனைக் கைது செய்வோம்’ என போலீஸ் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகே பழனிச்சாமி வெளியூரில் இருந்து கரூர் திரும்பினாராம். அவர் மில்லில் இருப்பதை அறிந்து விரைந்து சென்ற போலீஸ் அவரைக் கைது செய்தது. 'அவர் மீது விரைவில் குண்டர்  சட்டம் பாயவும் வாய்ப்பு இருக்கிறது’ என்கிறது போலீஸ் வட்டாரம்.
இந்தச் சூழ்நிலையில் கே.சி.பழனிச்சாமியிடம் பேச சிறிது வாய்ப்புக் கிடைத்தது. ''என் மீது என்ன வழக்குப் போட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. விசாரணைக்கு என்று அழைத்து வந்தார்கள். ஆனால், எதுவும் விசாரிக்காமலே கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன்!'' என்றார்
எஸ்.பி. நாகராஜிடம் கேட்டபோது, ''கே.சி.பழனிச்சாமி மீது பல குற்றச்சாட்டுகள் வந்தும், தகுந்த ஆதாரங்கள் வேண்டும் என்றுதான் காத்திருந்தோம். இப்போது ஆதாரங்கள் கிடைத்து இருப்பதால், அவரை கைது செய்துள்ளோம். இந்தக் கைதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதுதான் எங்கள் கடமை. அதைத்தான் செய்கிறோம்...'' என்றார்.
''ஜெயலலிதா அரசின் வழக்கமான பழிவாங்கும் படலம்தான் இது. உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் வெற்றியைத் தடுக்கவே இப்படி செய்கிறது அரசு. ஆனால், அவர்கள் கனவு பலிக்காது. நிச்சயம் மக்கள் ஆதரவோடு உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிப்போம்!'' என்றார் கரூரின் முக்கிய நிர்வாகியும், தி.மு.க-வின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளருமான பரமத்தி சண்முகம்.
கே.சி.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு இருப்பதால், தி.மு.க-வில் இருக்கும் அவரது எதிர் அணியினர் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். ஆனால், இதுநாள் வரை கே.சி.பழனிச்சாமிக்கு  துணை போன பொதுப்பணித் துறை, கனிம வளத் துறை, வருவாய்த் துறை, போலீஸ் துறை போன்றவற்றின் அதிகாரிகள் சிலர் அச்சம் அடைந்து உள்ளனர். இவரிடம் பணம் வாங்கி ஆரம்பத்தில் இருந்து துணைபோன அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரும் மற்றும் கரூர் ரத்தத்தின் ரத்தங்களும் அதிர்ச்சியில் உறைந்துகிடக்கின்றனர். கே.சி.பழனிச்சாமிக்கு துணைபோன கறுப்பு ஆடுகள் லிஸ்ட்டும் முதல்வருக்குப்  போகிறதாம். அதனால் இன்னும் சில அதிரடிகளை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
**********************************************************************************
தண்ணீர்... கண்ணீர்...!

ஆக்ஷன் ஜூ.வி. - அதிரடி கலெக்டர்!
''திரும்பிய பக்கம் எல்லாம் மழை பெய்ஞ்சு... காடு கழனி எல்லாம் செழிப்பா இருக்கு. ஆனா, எங்க கிராமத்துல மட்டும் குடிக்கவும் தண்ணி இல்லாம ஏழு வருஷமா நாய் படாத பாடுபடுறோம். அரசியல்வாதிகள் ஆரம்பிச்சு அதிகாரிங்க வரைக்கும் இதுபற்றி எல்லோரிடமும் சொல்லிப் பார்த்துட்டோம். யாரும் கண்டுக்கவே இல்லை. ஜூ.வி-தான் எங்க பிரச்னையைத் தீர்த்துவைக்கணும்...'' - நமது ஆக்ஷன் செல்லில் (044-42890005) ஒரு பெண்ணின் பரிதாபக் குரல் பதிவாகி இருந்தது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள மாரணம் பாளையம் என்ற கிராமம்தான் இப்படி தாகத்தில் தவிக்கிறது என்று அறிந்து விரைந்தோம். அங்கு தண்ணீர் இருக்கிறது; ஆனால், குடிக்க முடியாது என்பதுதான் பிரச்னை!
முதலில் நாம் சந்தித்த அஞ்சலி ரொம்பவே நொந்துபோய், ''நான் இந்த ஊருக்குக் கல்யாணம் முடிச்சு வந்து நாலு வருசம் ஆகுதுங்க. எங்க ஊரில் எல்லாக் குழாயிலும் மஞ்சள் கலரா தண்ணீர் வருது. அதைக் குடிக்கவே முடியாது. அதிகாரிங்க வந்து சோதனை செஞ்சு, 'இது குடிக்கிறதுக்கான தண்ணீர் இல்லை. அதனால் இதை குடிக்க வேண்டாம்’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. மாற்று ஏற்பாடு கேட்டு எங்க ஊருக்காரங்க பல அதிகாரிகள்கிட்ட மனு கொடுத் துட்டோம். ஆனா, எங்களுக்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்யலை. வேறு வழியே இல்லாம இதையேதான் வடி கட்டி, சுட வெச்சுக் குடிக்கிறோம். இந்தத் தண்ணீரை குடிச்சதால, கடந்த ரெண்டு வருஷத்துல மட்டும் ஏழு பேர் கிட்னி ஃபெயிலியர் ஆகி செத்துட்டாங்க. அடிக்கடி தோல் வியாதிகளும் வருது. சாப்பாடு செஞ்சா சோறு மஞ்சள் கலரா இருக்கும். இந்தத் தண்ணீருக்கு பயந்தே பலர் ஊரைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க...'' என்றார்.
பக்கத்தில் இருந்த பழனியம்மாள் என்பவர், ''இந்தத் தண்ணியைக் குடிச்சு என்னோட உடம்பெல்லாம் எப்படி ஆயிடுச்சுனு பாரு தம்பி...'' என்று காட்ட, நாம் ஆடிப்போனோம். அவர் உடம்பு முழுக்கத் தோலில் செதில்கள் போல வெடித்து இருந்தன. கண்ணம்மாள் என்பவருக்கோ கால்கள் வீங்கிப் புண் நொதித்துப் போயிருந்தது. ஈ மொய்க் காமல் இருக்க பாலீத்தின் கவரில் காலை மூடி வைத்திருந்தார்.
அந்த சமயத்தில் அங்கே வந்த ஒருவர், ''என் பேர் சுப்பிரமணிங்க...'' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ''திருப்பூர் சாயப் பட்டறை கழிவுகள், எங்க ஊருக்கு பக்கத்துல ஓடும் ஒரத்துப்பாளையம் ஆத்துலதான் கலக்குது. இதனால கிராமத்தோட நிலத்தடி நீர் கெட்டுப் போச்சு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊரில் ஆழ் துளைக் கிணறு போட்டாங்க. தண்ணீர் பிரச்னைக்கு ஒரு வழியா முடிவு வந்துடும்னு சந்தோஷப்பட்டோம். ஆனா, அதுவும் உருப் படலை. ஊராட்சி அலுவலகத்துல புகார் செஞ்சோம். அதிகாரிகளும் சரி, குடிநீர் வாரியமும், 'இந்தத் தண்ணீரையும் குடிக்கக் கூடாது’னு அறிவிச்சாங்க. ஆனா, இன்று வரை குடிநீர் பிரச்னைக்கு யாரும் எதுவும் செய்யலை. இப்படியே போயிட்டு இருந்தா... கொஞ்ச நாளில் எங்க கிராமமே அழிஞ்சிடும்!'' என்று வேதனையைக் கொட்டினார்.
இந்தப் பிரச்னையை திருப்பூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் கவனத்துக்குக் கொண்டுபோனோம். எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட் டவர், ''உடனடியாக இந்தப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுத்து, சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். அதோடு, அங்கு உள்ள மக்களுக்கு என்னென்ன நோய்கள் வருகின்றன? எதனால் வருகின்றன? என்பதையும் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை அளிக்கவும் மருத்துவக் குழுவை அனுப்பி வைக்கிறேன். அதன் பிறகு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்!'' என்று நம்பிக் கையோடு சொன்னார். சொன்னபடியே இரண்டு நாளில் கலெக்டரே நம்மைத் தொடர்புகொண்டு, ''அந்த கிராமத்துக்குப் பக்கத்து ஊரில் இருந்து காவிரி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. நிரந்தரமாகத் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.
மீண்டும் கிராமத்துக்குச் சென்றோம். ''எங்க பிரச்னையை இவ்வளவு சீக்கிரமா தீர்த்துவைத்த கலெக்டருக்கும், ஜூ.வி-க்கும் நாங்க கால காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டு இருக்கோம்!'' என்று நெகிழ்ந்துபோய் சொன்னார்கள்.
**********************************************************************************
'அட்வான்ஸாகவே ஆடு பலி!'

உள்ளாட்சி வேட்டை ஆரம்பம்
ள்ளாட்சித் தேர்தல் ஜுரம் ஆரம்பித்ததும், கட்சிக்காரர்கள் ஸீட் வாங்குவதற்காக மாவட்டச் செயலாளர்களையும், கட்சித் தலைவர்களையும் போட்டி போட்டுக்கொண்டு சந்திப்பார்கள். ஆனால், சேலம் மாவட்டத்திலோ கோயில்களில் அருள்வாக்கு சொல்பவர் களைத் தேடிச் செல்வதில் அரசியல் கட்சியினர் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
அப்பூடியா?!
சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 10-வது கிலோ மீட்டரில் கிழக்கே பிரியும் சாலையில் சென்றால், பனமரத்துபட்டியைத் தாண்டியதும் இருக்கிறது அல்லேரி முனியப்பன் கோயில். கரை வேட்டிகள் அதிகம் தென்படும் பகுதி இது. இங்கு உள்ள கோயில் பூசாரியிடம் பேச்சுக் கொடுத்தோம். ''உள்ளாட்சித் தேர்தலில் ஸீட் கிடைக்குமா? போட்டியிட்டால் ஜெயிக்க முடியுமா? என்று வாக்கு கேட்க இங்கே எல்லாக் கட்சிக்காரங்களும் வருவாங்க. சாமி மடியில் பூ போட்டுப் பார்த்து அவங்க நினைக்கிற பூ வந்துட்டா... தொட்ட காரியம் எல்லாம் ஜெயமாகும். சட்டமன்றத் தேர்தலில் நம்ம முனியப்பன் சொன்ன பல பேர் இன்னிக்கு சட்டமன்றத்தில் இருக்காங்க தெரியுமா? இதுக்கு எல்லாம் நாங்க காசு வாங்குறது கிடையாது. அவங்களா பார்த்துக் கொடுப்பாங்க...'' என்று விளக்கம் கொடுத்தார்.
மல்லூர் அருகே உள்ள அத்தனூர் அம்மன்தான் இந்த ஏரியா அரசியல் வாதிகளுக்கு ஆபத்பாந்தவன். பூசாரி கேசவனைப் பார்த்தோம். ''அம்மன் உத்தரவு கொடுத்துட்டா தொட்ட காரியம் பட்டுன்னு துலங்கும். அதனால தான், சுத்து வட்டாரத்தில் இருக்கிற அரசியல்வாதிங்க இங்கேயே வர்றாங்க. ஆறு பேப்பரில் வெள்ளை, மஞ்சள், சிவப்புனு பல கலர் பூக்களை மடிச்சு அம்மன் காலடியில் வெச்சிருப்போம். சாமிக்குப் பூஜை போட்டதும், அதில் ஒரு சீட்டை எடுக்கணும். சிவப்பு கலர் வந்தால் தேர்தலில் ஸீட் கிடைக்கும்... ஜெயிச் சிடலாம். இப்போ துணை சபாநாயகரா இருக்கும் தனபால் சட்டமன்ற தேர்தலில் அம்மன்கிட்ட வாக்கு கேட்டுட்டு, அம்மன் உத்தரவு கொடுத்த பிறகுதான் ஸீட் கேட்டார். ஜெயிச்சதும், முதலில் வந்து அம்மனை தரிசனம் பண்ணிட்டுத்தான் சென்னைக்குப் போனார். இன்னிக்கு துணை சபாநாயகரா இருக்கார்.
எங்க அம்மனோட சக்தி தெரிஞ்சு, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்கள் இங்கே வந்து பூஜை பண்ணிட்டுப் போனாங்க. போன தி.மு.க. ஆட்சியில் எம்.எல்.ஏ-க்களாக இருந்த சின்னதுரை, கே.பி.ராமசுவாமி ஆகியோருக்கும் ஸீட் கிடைச்சதே அம்மனோட உத்தரவினால்தான்.
இப்போ உள்ளாட்சித் தேர்தல் வரப்போகுது. அதனால கூட்டம் இன்னும் அதிகமாகிடுச்சு. ஸீட் கிடைக்குமான்னு கேட்க ஒரு கூட்டமும், கிடைச்சா ஜெயிக்க முடியுமான்னு கேட்க ஒரு கூட்டமும் வந்துக்கிட்டே இருக்கு. நீங்க வருவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான், அத்தனூர் பேரூராட்சிக்குப் போட்டியிடும் ராமதாஸ் அருள்வாக்கு கேட்க வந்தார். அவர் ஜெயிப்பார்னு ஆத்தா சொல்லிட்டா. இனி எந்த சக்தியாலும் அவரோட வெற்றியைத் தடுக்க முடியாது!'' என்றார் நம்பிக்கையோடு.
சேலம் - பெங்களூரு நான்கு வழிச் சாலையில் வீற்றிருக்கும் வெண்ணங்குடி முனியப்பன் கோயிலில் தினந்தோறும் கிடா விருந்து அமர்க்களப்படுகிறது. ''வெண்ணங்குடி முனியப்பன்கிட்ட நாம நினைக்கிற காரியம் ஜெயமாகணும்னு வேண்டிக்கிட்டு சூலாயுதம் வாங்கி, அதற்கு ரத்தக் காவு கொடுத்து, நட்டு வெச்சிட்டுப் போகணும். நினைக்கிற காரியம் நடந்துட்டா... அதுக்குப் பிறகு ஆடு வெட்டு வாங்க. ஆனா, இப்போ அரசியல்வாதிங்க அந்த டிரண்டையே மாத்திட்டாங்க. 'எனக்கு இந்த தேர்தலில் ஸீட் கிடைச்சே ஆகணும். அதுக்குதான் உனக்கு இந்த நேர்த்திக்கடனை செலுத்துறேன்’னு முன்கூட்டியே ஆடு பலி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. முன்பு எல்லாம் அமாவாசை, ஞாயிற்றுக் கிழமைகளில்தான் ஆடு வெட்டுவாங்க. உள்ளாட்சித் தேர்தல் சூடு பிடிச் சதில் இருந்து இங்கே தினந்தோறும் திருவிழா தான்...'' என்கிறார்கள் கோயிலுக்கு அருகே கடை வைத்திருப்பவர்கள்.
கட்சிப் பாகுபாடு இல்லாமல் இப்படிக் கோயில்களை நோக்கி ஒரு குரூப் படை எடுத்துக் கொண்டிருக்க.. சேலத்தின் தி.மு.க. பிரமுகர் ஒருவர் கடந்த வாரத்தில், அதிகாலை நேரத்தில் வாழப்பாடி அருகே உள்ள ஒரு ஜோதிடர் வீட்டுக்குப் போனாராம். பிரமுகரின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த ஜோதிடர், 'இன்னும் நாலு நாள் போலீஸில் இருந்து தப்பிச்சிட்டீங்கன்னா போதும். அதுக்குப் பிறகு உங்களை யாரும் எதுவும் பண்ணிட முடியாது. சுக்கிர திசை உச்சத்தில் வருவதால், அரசியலில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்குது...’ என்று சொன்னாராம். ஜோதிடர் வாக்குப்படி தி.மு.க. பார்ட்டியும் தலைமறைவானராம். இந்த நேரத்தில் அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துவிட்டதாம். ஜோதிடர் சொன்னது பலிக்க ஆரம்பித்திருப்பதால், 'இனி சேலமே நம்ம கையில்தான்!’ என்ற மிதப்பில் இருக்கிறாராம் அந்தப் பிரமுகர்.
என்னத்தச் சொல்ல?!
**********************************************************************************
சுமங்கலிக்கு விதவை பென்ஷன்!

ஆண்டிபட்டி மொகா மோசடி
''என் கணவர் இறந்துவிட்டதால், விவசாயத் தொழிலாளர் நலத்திட்டத்தில் எனக்கு வழங்கப்பட வேண்டிய குடும்ப நல நிதியை, வேறொரு பெண்ணுக்குக் கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டனர்...'' என ஆண்டிபட்டி தாலுக்கா அலுவலக வாசலில் ஒரு பெண் அழுது புலம்பிக்கொண்டு இருப்பதாக, ஜூ.வி. வாசகர் ஒருவர் நமக்கு போனில் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்தோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் அம்பிகா. வெள்ளிமலை அருகே பொம்மராசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் சொன்ன தகவல்கள் எல்லாமே அதிர்ச்சி ரகம். தாலுக்கா அலுவலகத்தில் கொத்துக் கொத்தாக மோசடி கள் நடந்துள்ளன என்பது தெரியவந்தது.
அதனால் அம்பிகாவுக்கு இந்த இடத்தில் நியாயம் கிடைக்காது என்பது தெரியவரவே, அவரைஅழைத்துக் கொண்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று, கலெக்டர் பழனிச்சாமி முன் நிறுத்தினோம். விசாரணை செய்த கலெக்டரும் அதிர்ச்சி அடைந்து, உடனே எஸ்.பி-யான பிரவீண் குமார் அபினபுவைத் தொடர்புகொண்டு, அம்பிகாவிடம் புகார் வாங்கி வழக்குப் பதிவு செய்ய உத்தரவு போட்டார்.
அதன்படி மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார், ஆள்மாறாட்டம், அரசு ஆவணங்களைத் திருத்தியது உள்ளிட்ட பிரிவுகளில், ஆண்டிபட்டி நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் மாதேஸ்வரன், மயிலாடும்பாறை கிராம நிர்வாக அலுவலர் குபேந்திரன், அம்பிகாவுக்குச் சேர வேண்டிய பணத்தை வாங்கிய விஜயா, புரோக்கர் ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். நான்கு நாட்களாக ஆண்டிபட்டி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வரும் போலீஸார், 'இப்படி எல்லாம் கூடவா மோசடி செய்வார்கள்!’ என மலைத்துவிட்டனர்.
போலீஸாரிடம் பேசினோம்... ''புரோக்கர்களைக் கையில் வைத்துக்கொண்டு இந்த தில்லுமுல்லு நடந்துள்ளது.  தாசில்தார் மாதேஸ்வரனின் நடவடிக்கைகள் சந்தேகமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாகப் போலி ஆவணம் தயாரித்து, 422 பேருக்கு நலத்திட்ட உதவிக்கான காசோலை கொடுத்து உள்ளார். இந்தத் திட்டத்தில் கிடைக்கும்  6,000 மனுதாரருக்கும், மீதி உள்ள  3,000-த்தை தாசில்தார் மற்றும் புரோக்கர்களும் பங்கு போட்டுள்ளனர். இது தவிர, இறந்தவர்கள் பட்டியலை தயாரித்து, யாராவது ஒரு பெண் போட்டோவை ஒட்டி 'அவர்தான் இறந்தவரின் மனைவி’ என  12,500-க்கான காசோலை கொடுத்து உள்ளனர். இந்த திட்டத்தில் 222 பேர் போலி ஆட்கள்... இப்படித்தான், அம்பிகா பெயரில் வேறு ஒரு பெண்ணுக்கு காசோலை கொடுத்து இருக்கிறார்கள். இவருக்குத் தர வேண்டிய பணத்தை, வாலிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த விஜயா என்ற பெண்ணுக்குக் கொடுத்து உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 30 மற்றும் ஆகஸ்ட் 18 ஆகிய தேதிகளில்  16 லட்சத்துக்கான காசோலைகளுக்கு ஸ்டேட் வங்கியில் பணம் பெறப்பட்டு உள்ளது. மேலும், வாலிப்பாறையைச் சேர்ந்த சேகர், ஜெயக்கொடி, முருகன் ஆகிய மூவரும் உயிருடன் இருக்கின்றனர். ஆனால், மூவரும் இறந்துவிட்டதாக, ஆவணங்கள் தயாரித்து அவர்களின் மனைவிகளை விதவை போல போட்டோ எடுத்து, விதவை பென்ஷன் கொடுத்து உள்ளனர். தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, வருஷநாடு, முத்தாலம்பாறை, கோம்பைத்தொழு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பலர் வெளியூர்களில் இருக்கின்றனர். இவர்களில் 220 பேர் பெயரில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதையும் மாத சம்பளம் போல புரோக்கர்களே பெற்றுக்கொள்கின்றனர்...'' என்று போலீஸார் மடமடவென ஒப்பித்தனர்.
எஸ்.பி-யிடம் பேசினோம் ''குற்றவாளிகள் தலைமறைவு ஆகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து உள்ளோம். இந்தக் குற்றவாளிகளுக்கு பின்புலமாக பலரும் செயல்பட்டுள்ளனர்.அவர்களையும் தேடி வருகிறோம். குற்ற வாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம்...'' என்றார்.
கலெக்டரிடம் பேசினோம். ''பாதிக் கப்பட்ட அம்பிகாவுக்கு உரிய பணத்தை வழங்க உத்தரவு இட்டுள்ளேன். பெரியகுளம் ஆர்.டி.ஓ-வான அனிதா, விசாரணை செய்து வருகிறார். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் அடையாள அணிவகுப்பு நடத்த திட்டம் இட்டுள்ளோம். தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது...'' என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்க பல வகைகளிலும் முயற்சி செய்தும் இயலவில்லை. அவர்கள் விளக்கம் கொடுத்தால் பிரசுரம் செய்யத் தயாராகவே இருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள புரோக்கர்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை மூடிமறைக்க மேல்மட்ட அளவில் இருந்து பரிந்துரை வருவதாக போலீஸார் சிலர் கூறுகின்றனர். தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டால்தான், மற்ற இடங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாது!
**********************************************************************************
சிதம்பரத்தை சீண்டும் கோஷ்டி கானம்

காரைக்குடி கலாட்டா
ள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்த நாளை, கடந்த ஒரு மாத காலமாக பாட்டுக் கச்சேரி, பட்டிமன்றம், குத்தாட்டம் என கொண்டாடி வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.  இதற்கு திருஷ்டிப் பொட்டு போல் காரைக்குடியில், கடந்த 19-ம் தேதி, 'பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!’ என்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது, காங்கிரஸின் இன்னொரு கோஷ்டி. சிதம்பர விசுவாசிகளால் புறக்கணிப் பட்ட இந்தப் போராட்டத்தில் சிதம்பர எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடியதால், ஏரியா வில் பல்ஸ் எகிறி உள்ளது.
உண்ணா விரதத்தை முன் னின்று நடத்திய காங்கிரஸ் கவுன்சிலர் மெய்யரை சந்தித்தோம். மனைவி மக்களுடன் ராஜீவ் காந்தி மகிழ்ந்திருக்கும் போட்டோவை உண்ணாவிரதப் பந்தல் அருகே ஃபிளக்ஸ் போர்டாக வைத்திருந்தார்கள். ''விடுதலைப் புலிகளுக்கு வால்பிடிக்கும் சீமான் போன்ற வர்கள், 'சிதம்பரத்தின் வேஷ்டியை உருவாமல் விடமாட்டோம்’னு இங்கு வந்து பேசிட்டுப் போறாங்க. இங்குள்ள காங்கிரஸ் பெரும் புள்ளிகளுக்கு அதைத் தட்டிக் கேட்கத் திராணி இல்லை. இந்தப் போராட்டத்தை நடத்தச் சொல்லி முன்னாள் எம்.எல்.ஏ-வான சுந்தரத் துக்குத் தகவல் குடுத்தோம். ஆனால் அவரோ, 'அதெல்லாம் வேண்டாம்; அமைச்சருக்கு (ப.சிதம்பரம்) அதில் விருப்பம் இல்லை’ன்னு சொல்லிட்டார்.
எங்களைப் போன்ற மானமுள்ள காங்கிரஸ்காரர்களால் அதைப் பொறுக்க முடியவில்லை. அதனால்தான் காங்கிரஸ் மானம் காக்க நாங்களே உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செஞ்சோம். அப்படியும், 'அமைச்சர் கோவிச்சுகுவாரு’ன்னு சொல்லி காங்கிரஸாரை உண்ணாவிரதத்துக்கு வரவிடாமல் சிலர் தடுத்தாங்க. உடனே திருவாடானை முன்னாள் எம்.எல்.ஏ-வான ராமசாமி அண்ணன்கிட்ட போய் சொன்னேன். 'நீங்க தைரியமா போங்க... நம்ம ஆளுங்க கலந்துக்குவாங்க’னு சொல்லி அனுப்புனாரு. அதுபோலவே அவரோட மகன் கருமாணிக்கம் உள்ளிட்ட அவங்க ஆதரவாளர்கள் எல்லாரும் போராட்டத்துல கலந்துக்கிட்டாங்க. எலெக்ஷன் வந்தா மட்டும்தான்சிவகங்கை மாவட்டத்துல காங்கிரஸ் கூட்டம் போடுவாங்க. கட்சி சார்பா போராட்டம் நடத்தி 15 வருஷமாச்சு. கடந்த முறை சிவகங்கை தொகுதியில மூணு எம்.எல்.ஏ-க்கள் ஒரு மத்திய அமைச்சர் இருந்தும் காங்கிரஸ் கட்சி வளரலை. இங்கே இருக்கிற சிலர் கட்சி வளரணும்னு நெனைக்கல. இந்தப் போராட் டம் குறித்து மாவட்ட, நகர தலைவர்களுக்கு தகவல் குடுத்திருந்தோம். யாருக்கோ பயந்துக்கிட்டு அவங்க யாரும் கலந்துக்கலை. இவங்களும் எதுவும் செய்யுற தில்லை; செய்யுறவங்களயும் விடுறதில்லை. இப்புடி இருந்தா கட்சி எப்புடி வெளங்கும்?'' என்றார்.
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை சிங்கம், ''தூக்குத் தண்டனை கைதிகளுக்கு வக்காலத்து வாங்கும் சீமான் போன்றவர்கள் விடுதலைப் புலிகளின் கொடிகளை ஊர் முழுக்கப் பறக்க விடுகிறார்கள். முன்பும் இப்படி அவர்களுக்கு அளவுக்கு மீறி நாட்டில் உலவ சுதந்திரம் கொடுத்த காரணத்தால்தான், ராஜீவ் காந்தியை இழந்தோம். இதெல்லாம் தெரிந்தும் உள்துறை அமைச்சர் சிதம்பரம், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு பதிலாக, போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அவரது ஆட்கள் மெனக்கெடுகிறார்கள். வேலூரிலிருந்து சீமான் நடைபயணம் போவதாக அறிவித்தார். அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் கிளர்ந்து எழுந்ததால் அவரால் நடைபயணம் போக முடியவில்லை. அதேபோல், உள்துறை அமைச்சருக்குஉண்மையிலேயே செல்வாக்கு இருந்திருந்தால்... சீமானை இந்த மாவட்டத்துக்குள் நுழைய விட்டிருக்கலாமா? இங்குதான் காங்கிரஸை குழி தோண்டி புதைச்சுட்டாங்களே!'' என்று கொதித்தார்.
நகர காங்கிரஸ் தலைவர் சிவானந்தத்திடம் புறக்கணிப்பு குறித்து கேட்டதற்கு, ''உண்ணாவிரதப் போராட்டம் குறித்து எனக்கும் மாவட்டத் தலைவருக்கும் தகவல் கொடுத்ததாகச் சொல்வது வடிகட்டிய பொய். ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்பதில் எந்த காங்கிரஸ்காரனுக்காவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? அமைச்சர் சிதம்பரத்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இருந்ததால்... அது முடிந்ததும் போராட்டம் நடத்தலாம் என்று பேசி இருந்தோம். ஆனால், அதற்குள்ளாக இவர்கள் ஓர் அணியாகத் தயாராகி உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். கட்சியின் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்து றாங்கன்னு சொல்லி நாங்கள் தடுத்திருக்க முடியும். பிரச்னை வேண்டாம் என்றுதான் இதில் தலையிடாமல் ஒதுங்கி இருந்துட்டோம்...'' என்றார்.
மாவட்டத் தலைவர் ராஜரத்தினமோ, ''உண்ணா விரதப் போராட்டம் குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. அதுவும் இல்லாமல், 'மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தது நீதிமன்றம். அதை எதிர்த்துப் போராட் டங்களை நடத்தினால், ஏதோ நாம்தான் தூக்கில் போடச் சொன்னது போல் ஆகிவிடும். அதனால் இந்தப் பிரச்னையை சட் டத்தின் நடவடிக்கைக்கு விட்டுவிட்டு அமைதியாக இருப் போம்’னு ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார். அதனால் நாங்கள் இந்த விஷயத்தை பெரிது படுத்தவில்லை...'' என்றார்.
''உள்ளாட்சித் தேர்த லில் ப.சிதம்பரத்தின் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால், இவர்களது கனவு நிறைவேறாது!'' என்கிறார்கள் உள்துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்.
எந்த ஒரு சூழ்நிலையிலும், காங்கிரஸையும் கலாட்டாவையும் பிரிக்கவே முடியாது போல் தெரிகிறதே!
**********************************************************************************
''உங்கள் மனுவில் கையெழுத்திடத் தயார்!''

கூடங்குளம் போராட்டக்காரர்களிடம் கூறிய ஜெ.!
ணு மின் நிலையங்களுக்கு எதிராக உலகெங்கிலும் எதிர்ப்புகள் வலுத்து வந்தாலும், இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள கூடங்குளத்தில் இருந்து வந்திருக்கும் எதிர்ப்பு எரிமலைக் குழம்பாகத் தகிக்கிறது. இதில் முதல்வரின் மனமாற்றம்தான் முக்கியமானது.
'கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதே. மக்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று 18-ம் தேதி ஓர் அறிக்கைவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதை எதிர்த்து, அணுமின் நிலைய ஆபத்துகளின் உண்மையைப் புரியவைக்க 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் அறிக்கை ஒன்றை முதல்வரின் கவனத்துக்கு அனுப்பினர். அது முதல்வர் பார்வைக்குச் சென்றிருக்கும் என்று நம்புகிறார்கள் அவர்கள்.
முதல்வரின் அறிக்கைக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்தது போராட்டம். பட்டினிப் போராட்​டத்தில் கலந்துகொண்ட 127 பேரில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போதும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. சிகிச்சை முடிந்து மீண்டும் போராடத் துவங்கினார்கள். பட்டினிப் போராட்டத்தின் சூடு மேலே மேலே ஏறுவதை உணர்ந்த முதல்வர், கடந்த 19-ம் தேதி, 'கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்துக’ என்று, பிரதமருக்கு தான் கடிதம் எழுதி இருப்பதாக ஓர் அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களை தன்னைச் சந்திக்க வரச் சொன்னார் முதல்வர். 21-ம் தேதி இவர்கள் சந்திப்பதற்கு முன்னதாக  அணுசக்தித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் முதல்வரைச் சந்தித்துப் பேசினார்கள். 'அனைத்து வகையிலும் அணு மின் நிலையம் பாதுகாப்பாக இருக்கிறது.’ என்று  அவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொன்னார்கள். 
அவர்கள் சென்ற பிறகு போராட்டக் குழுவில் இருந்து சுப.உதயகுமாரன், வழக்கறிஞர் சிவசுப்​பிரமணியன் உட்பட சுமார் 22 பேர் முதல்வரைச் சந்தித்தனர். முதல்வர் ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், செந்தூர்​பாண்டியன் போன்றோர் இருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்தது அந்தச் சந்திப்பு.
'மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பைகளை ஒழித்தல் என்று நீங்கள் எவ்வளவோ பசுமையான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறீர்கள். அணுசக்தி தேவை இல்லை என்று நீங்கள் முடிவெடுக்க வேண்டும். தவிர, மரபு சாரா எரிசக்தி முறைகளுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு, ஹரிபூரில் அறிமுகப்படுத்த இருந்த அணு மின் நிலையத் திட்டத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதேபோலவே, இந்தத் திட்டத்தையும் நிறுத்த நீங்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்!’ என்றும், அணு மின் நிலையங்களின் அபாயம்பற்றி தகுந்த அறிக்கைகள், ஆவணங்களுடன் முதல்வருக்கு விளக்கியும், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்கள் போராட்டக் குழுவினர்.
'சுமார்  13,000 கோடி செலவு செய்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது மத்திய அரசு. அதை திடீரென்று மூடு என்று சொன்னால், அவ்வளவு நன்றாக இருக்காது. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன். தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் அனைத்துக் கட்சிகளில் இருந்தும், போராட்டக் குழுவில் இருந்தும் பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி மனு ஒன்றை அளிப்பார்கள். நீங்கள் தயாரித்துத் தரும் கோரிக்கை மனுவில் நான் கையெழுத்து போடுகிறேன். பிரதமரைச் சந்தித்துப் பேசுவதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு அனுமதி பெற்றுத் தருகிறேன். தவிர, இதுவரை பல்வேறு திட்டங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். அவற்றை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அப்படி இருக்க, அணுசக்தி தேவையே இல்லை என்று என்னால், ஒரே இரவில் முடிவெடுத்து அதற்காகத் தீர்மானம் நிறைவேற்ற  முடியாது. வேண்டுமானால், தற்காலிகமாக இந்தத் திட்டத்தை நிறுத்திவைக்கச் சொல்லி அமைச்சரவையில் 22-ம் தேதி கூட்டம் ஒன்றை நடத்தி அதில் தீர்மானம் நிறைவேற்றுவேன். கூடவே, உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக் குழு மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறச் செய்கிறேன். மற்றபடி, நீங்கள் உங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்!’ என்று இவ்வாறு முதல்வர் போராட்டக் குழுவினருடன் பேசி இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.
முதல்வர் அளித்த இந்த உறுதியை ஏற்று, போராட்டக் குழுவினர் 'உண்ணாவிரதத்தை மட்டும் வாபஸ் பெறுகிறோம் என்றும், ஆனால் இந்தத் திட்டம் நிறுத்தப்படும் வரை மற்ற அனைத்து போராட்டங்கள் தொடரும்’ என்றும் முதல்வரிடம் சொல்லி இருக்கிறார்கள்.''உங்களது போராட்டங்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களையே அதில் நான் கலந்து கொள்ளச் செய்கிறேன்!'' என்று சொல்லும் அளவுக்கு உற்சாகம் கொடுத்தாராம் முதல்வர்.
ஆண்டனிராஜ், ந.வினோத்குமார்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
ஜெ. மனமாற்றத்துக்கு மேதா காரணமா?
போராட்டத்தை வாழ்த்திப் பேச வந்த மேதா பட்கர், ''குஜராத் முதல்வரான நரேந்திர மோடி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இரண்டு தூதுவர்களை அனுப்பிய ஜெயலலிதா, இங்கே போராடும் அபலை மக்களை சந்திக்க ஏன் வரவில்லை? அவர் நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் இங்கே வந்திருக்க முடியுமே? உயிரைப் பணயம் வைத்து போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் இந்த மக்களின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும்தான் பொறுப்பு. அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியது இருக்கும்!'' என எச்சரித்தார்.
இது முதல்வரின் கவனத்துக்குப் போன பிறகுதான் அவர் மனமாற்றம் அடைந்ததாகச் சொல்கிறார்கள்.
கேரளாவுக்குப் பரவ இருந்த போராட்டம்!
கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளை நிறுத்த வலியுறுத்தி 11 நாட்களாக மக்கள் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.  குமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் அணு உலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த திட்டத்தால் கேரளாவிலும் பாதிப்பு ஏற்படும் என்பதால், திருவனந்தபுரத்திலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஜெ. அறிவிப்பால் அந்தப் போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி விழுந்துள்ளது!
புறக்கணிக்கப்பட்ட மைக்கேல் ராயப்பன்
ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வான மைக்கேல் ராயப்பன் இந்தப் போராட்டம் பற்றி சட்டமன்றத்தில் பேசவில்லை என்று மக்கள் கோபப்பட்டார்கள். ''நான் பேசுவதற்கு அனுமதி கேட்டேன். ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை!'' என்று அவர் விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து விஜயகாந்த் இங்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார்.
இதற்கிடையே, போராட்டக் குழுவினருக்கு முதல்வரிடம் இருந்து சென்னைக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவர்களில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த 21-ம் தேதி சென்னைக்கு வந்தனர். இந்தப் பட்டியலில்  மைக்கேல் ராயப்பன் மற்றும் தி.மு.க-வினர் சிலரின் பெயர்கள் மட்டும், அரசு தரப்பில் நீக்கப்பட்டன.
**********************************************************************************
மினிட் புக் எழுதிய முதல் கம்யூனிஸ்ட்!

இழப்பு
தோழர் சி.எஸ். தனது 102-வது வயதில் மூச்சை நிறுத்திக் கொண்டார். அவருக்கு கடந்த ஜூலை 16-ம் தேதிதான் 102 வயது ஆனது. அம்பத்தூர் நியூசெஞ்சுரி மருத்துவமனை விடுதியில் கடந்த ஒன்பது மாதங்களாகத் தங்கியிருந்தார். மூத்த தோழரை வாழ்த்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ஏ.எம்.கோபு உள்ளிட்டவர்கள் சென்றார்கள். ''என்ன... எல்லாரும் சேர்ந்து வந்திருக்கீங்க?'' என்று கேட்டார் சி.எஸ். ''இன்னிக்கு உங்கள் பிறந்த நாள் தோழர். ஒரு விழா எடுக்கப்போறோம்!'' என்றார் தா.பா.
''என் பிறந்த நாள்தான் முக்கியமா? கட்சி வேலையைப் பாருங்க!'' என்று ஆரம்பத்திலேயே மறுத்திருக்கிறார். கட்சி, கொள்கைகள் சம்பந்தமாக பாண்டியனிடமும் கோபுவிடமும் பல கேள்விகளைக் கேட்டுள்ளார். அதன்பிறகு, ''இந்த விழா, பாராட்டு நடத்துவது எல்லாம் வேண்டாம்...'' என்று சொல்லிவிட்டு அவர்களை வழி அனுப்பிவைத்தார். இரண்டு மாதங்களில் - செப்டம்பர் 18-ம் தேதி இறந்து போனார்!
தேர்தல் மோதல்கள், பதவிப் போட்டிகள் நிறைந்த கார்ப்பரேட் அரசியல் உலகில் அதன் சாயல் எதுவும் அண்டாமல் வாழ்ந்து மறைந்த மனிதர்களில் ஒருவர் சி.எஸ்.சுப்பிரமணியம். 1940-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி ஆங்கில அரசாங்கம் அனைத்துப் பத்திரிகையிலும் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
'இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் தேடப்பட்டு வரும் கீழ்க்கண்ட நபர்களை கைது செய்வதற்கு உதவும் நம்பிக்கையான தகவல்களைத் தரும் எந்த ஒரு நபருக்கும் ரயில்வே துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலும் மற்றும் சென்னை சி.ஐ.டி. இலாகாவும் 100 ரூபாய் தரும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், சுரேந்திர மோகன் குமாரமங்கலம்... ஆகிய மூவரைத் தொடர்ந்து சி.எஸ். சுப்பிரமணியம் என்ற பெயரும் இருந்தது.
'நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர். ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அதிகாரி சி.எஸ்.சுந்தரம் ஐயரின் மகன். வயது 31/40 உயரம் 5 அடி 7 அங்குலம். ஒல்லியாக இருப்பார். உருண்டை முகம். மாநிறம். வாரி விடப்பட்ட தலை’ என்று அடையாளம் சொல்லப்பட்டது. 'இந்த நான்கு நபர்களையும் உபசரிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று எச்சரித்தது அந்த விளம்பரம். அப்போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு இருந்தது. தலைவர்களில் பாதிப் பேர் சிறையில் இருந்தனர். மீதிப் பேர் தலைமறைவாக இருந்தனர். தலைமறைவு மனிதர்களில் ஒருவர் சி.எஸ்.
துள்ளும் இளைஞராக இருந்த அவருக்கு ரகசிய இடங்களுக்கு மற்ற தோழர்களை அழைத்து வரும் வேலை தரப்பட்டது. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த பி.ராமமூர்த்தியை அதை மீறி வெளியே கொண்டுவந்து, சைக்கிளில் உட்கார வைத்து பல கிலோமீட்டர் தூரம் அழைத்து வந்து கும்பகோணத்தில் வாடகைக் கார் பிடித்து ஏற்றி விட்டு... சென்னையில் இவர்கள் ரகசியமாக வைத்திருந்த தியாகராய நகர் அறைக்கு கொண்டு வந்து சேர்த்த 'த்ரில்' நிறைந்த தியாக வாழ்க்கை சி.எஸ்.ஸுக்கு உண்டு. அந்தக் காலத்தில் தியாகராய நகர், பெரம்பூர் ஆகிய இரண்டு இடங்களில் இவர்களுக்கான ரகசிய அறைகள் இருந்தன. 'திருடர்கள் ரகசியமாக இரவு நேரத்தில் வந்து செல்கிறார்கள்’ என்று யாரோ தகவல் கொடுக்க... காவல்துறை கம்யூனிஸ்ட்கள் ஏழு பேரைக் கைது செய்தது. அந்த வழக்குக்கு 'சென்னை சதி வழக்கு’ என்று பெயர்.
'பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க சதி செய்தார்கள்’ என்று இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு ஆதாரமாக இரண்டு டைப்ரைட்டர் மெஷின்களைக் காட்டி னார்கள். தினமும் நீதிமன்றத்துக்கு வரும் போது 'கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத்’ என்று சி.எஸ். கத்துவார். மற்ற தோழர்கள் இதை எதிரொலிப்பார்கள். சுமார் ஓராண்டு காலம் இந்த வழக்கு நீதிபதி வி.அனுமந்தராவ் முன் நடந்தது. தினந்தோறும் 'சுதேசமித்ரன்’ பத்திரிகை இந்த விவாதங்களை பக்கம் பக்கமாக வெளியிட்டது. 'நாட்டில் கம்யூ னிஸ்ட் என்ற பெரிய கட்சி இருக்கிறது. அதற்கு ஏராளமான இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது. அவர்கள் நினைத்தால் ஆங்கில அரசாங்கத்தையே கலைத்துவிட முடியும்’ என்ற தோற்றம் அதற்குப் பிறகுதான் உருவானது. அப்படிப்பட்ட சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கியவர்களுள் ஒருவர் அவர்.
சென்னையில் பிரபலமான பின்னி மில் மற்றும் எலெக்ட்ரிக் டிராம்வே கம்பெனித் தொழிலாளர்களை வைத்து சென்னைத் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் உருவானது. அந்தத் தொழிலாளர்களையே கட்சியில் இணைத்து கம்யூனிஸ்ட் கட்சியை பி.சுந்தரய்யா, எஸ்.வி.காட்கே ஆகிய இருவரும் உருவாக்கினார்கள். அந்த வகையில் தமிழகத்தில் முதல் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை 1936-ம் ஆண்டு உதயமானது. அதில் ஒருவர் சி.எஸ்... அந்தக் கிளைக்கு செயலாளர் எல்லாம் கிடையாது. கூட்ட நிகழ்ச்சிகள் கொண்ட மினிட் புக்கை யார் எழுதுவாரோ... அவர்தான் செயலாளர். அப்படிப்பட்ட முதல் மினிட் புக் எழுதிய வகையில் 'முதல் கம்யூனிஸ்ட் செயலாளர்’ என்று இவரைத்தான் சொல்ல வேண்டும். கட்சி மீதான தடை நீக்கப்பட்ட பிறகு அமைக்கப்பட்ட புதிய மாநிலக் குழுவிலும் ஒருவராக இருந்தார். ஆனால், சுதந்திர இந்தியாவில் ஜனநாயகத் தேர்தல் பாதைக்கு கம்யூனிஸ்ட்கள் திரும்பியபோது சி.எஸ். எந்தப் பதவிக்கும் பொறுப்புக்கும் வரவில்லை. அது தேவையில்லை என்று நினைத்தார்.
மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் கோமல் என்ற கிராமத்தில் பிறந்து சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் மாணவனாகத் தேர்வாகி, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துக்கு ஐ.சி.எஸ். படிக்கச் சென்று... அங்கே இந்திய விடுதலை அமைப்புடன் சேர்ந்து.. இங்கிலாந்து கம்யூனிஸ்ட்களால் ஈர்க்கப்பட்டு, 'டெய்லி ஒர்க்கர்’ பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்து, படிப்பில் நாட்டம் குறைந்து, ஐ.சி.எஸ். மாணவர்கள் குதிரைப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு பிடிக்காமல் தமிழ்நாட்டுக்கு வந்து, தலைமறைவு வாழ்க்கைக் காலத்தில் கட்சியை வளர்த்து... அடக்குமுறைச் சூழல் முடிந்து பதவிகளை சுவை பார்க்கும் நேரத்தில்... அதை விரும்பாமல் 'தோழராக’ மட்டுமே இருந்துவிடச் சிலரால் மட்டுமே முடியும். சி.எஸ். அப்படிப்பட்ட அதிசயப் பிறவி!
'உங்களைப் பற்றி புத்தகம் எழுதப் போகிறேன்.. உங்களது வரலாற்றைச் சொல்லுங்கள்’ என்று எழுத்தாளர் ஒருவர் சென்றபோது, ''என்னைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்பதுதான் என் கொள்கை!'' என்றவர் அவர்.  அவரால் மட்டுமே அது முடியும்!
**********************************************************************************
காதலுக்கு அணை... தாய்க்குச் சிதை!

எழுத்தாளர் மாநாட்டில் வேதனைக் கதை
''தமிழகத்துக்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்தால், இங்குள்ள கலைஞர் டி.வி., ஜெயா டி.வி. செய்திகளைப் பார்த்து மண்டை குழம்பிவிடுவார்கள்... ஊடகங்களுக்கு சுதந் திரம் வேண்டும் என்று போராடிய காலம் போய், ஊடகத்தின் பிடியில் இருந்து மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடக்கூடிய  சூழ்நிலை உருவாகி இருக்கிறது...'' என்று ஆசிய ஊடக வளர்ச்சி நிறுவன இயக்குநர் சசிக்குமார் இப்படித்தான் வேதனையுடன் சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 12-வது மாநில மாநாடு, விருதுநகரில் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடந்தது. கண்காட்சி, கவிதை வாசிப்பு, கருத்தரங்கம் என்று அனைத்திலும் ஒரே உற்சாகம்... கம்யூனிஸ்ட் மூத்த தோழர் சங்கரய்யா முதல் சினிமா இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் வரை பலரும் வந்திருந்தனர். இந்த விழாவில் ஹைலைட் - இரண்டு கருத்தரங்கங்கள்!
'மௌனமாய் பெருகும் மதவாத அரசியல்’ என்ற தலைப்பில் பேசிய மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு அனைவரையும் ஈர்த்தது.
''மாற்று மதத்தினரை வளரவிடக் கூடாது என்ற விஷ சிந்தனை இப்போது நம் நாட்டில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் பரவி வருகிறது. அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை மட்டும் கொள்ளை அடிப்பது அமெரிக்காவின் எண்ணம் அல்ல. உலகில் கிறிஸ்துவ மதத்துக்கு அடுத்த படியாக விளங்கக்கூடிய இஸ்லாமிய மதத்தை ஒடுக்க வேண்டும் என்றுதான் திட்டம் போட்டுச் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் ஈராக், தாலிபன்கள் மீதான போர்கள். பெங்களூருவில் ஒரு சினிமா படப்பிடிப்பில் சார்லி சாப்ளின் கட் அவுட்டை வைத்திருந்தார்கள் என்பதற்காக ஒரு கும்பல் அங்கு சென்று, அவர் கிறிஸ்துவர் என்று சொல்லி அந்த கட் அவுட்டை மிதித்தனர். காதலர் தினத்தை எதிர்க்கும் காவிக் கும்பல்தான் அந்தத் தாக்குதலையும் நடத்தியது. காதலர் தினம் வந்தாலே, இந்துத்துவா அமைப்புகள் பதற்றமாகி விடுகிறது. ஒவ்வொரு பூங்காவாகச் சென்று அங்கிருக்கும் காதலர்களை முற்றுகையிட்டு தாலிகட்டச் சொல்கின்றனர். இல்லை என்றால் அடித்து விரட்டுகின்றனர்.
சமீபத்தில், தேனி வைகை அணையில் ஒரு காதல் ஜோடி  பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கு சென்ற காவிக் கும்பல், அவர்களை மிரட்டியது. காதலர்கள் போலீஸுக்கு போன் செய்யவும், அங்கு வந்த போலீஸிடம், 'நீங்கள் நடவடிக்கை எடுக்கு றீர்களா, நாங்கள் எடுக்கவா?’ என்று அந்தக் கும்பல் கேட்க... உடனே, போலீஸார் அந்தப் பெண்ணின் தாயாரைத் தொடர்புகொண்டு விஷயத்தை சொன்னார்கள். அதைக் கேட்டதுமே பயத்திலும் அவமானத்திலும் அந்தத் தாயார் தீக்குளித்து மாண்டுவிட்டார். நாடு இந்த நிலைமையில் போனால் என்ன ஆவது?  'பம்பாய்’ படம் போன்ற சினிமாக்களை ரிலீஸ் செய்வதற்கு முன்பு, பால் தாக்கரே போன்றவர்களைச் சென்று சினிமா இயக்குநர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. மும்பை மராட்டியர்களுக்கு மட்டும் அல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று சொன்னதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீட்டின் மீது கற்களை வீசுகின்றனர். மதவாத அரசியல் தலைதூக்குவது மனிதத் தன்மைக்கு எதிரானது!'' என்றார்.
'ஊடக அரசியலைப் புரிந்துகொள்ள’ என்ற தலைப்பில் பேசிய சசிக்குமார், ''இந்தியாவில் ஒரு கால கட்டம் வரை ஊடக சுதந்திரத்துக்காகப் போராட வேண்டியிருந்தது. இன்று எல்லாம் மாறிவிட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவில் சுதந்திர உணர்வு பரவியதில் ஊட கங்கள் முக்கியப் பங்காற்றின. ஏனென்றால், பத்திரிகையாளர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்தான். மகாத்மா காந்தி, பாரதியார் போன்றவர்களும் பத்திரிகை யாளர்கள்தான். அதனால், பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையை எதிர்த்து, கட்டுரை மற்றும் செய்திகள் அதிகம் வெளியாகின. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு இது மாறிவிட்டது. சமீபத்தில், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணா ஹஜாரே பற்றி எல்லா ஊடகங்களும் ஒரே மாதிரி செய்தி கள் வெளியிட்டன. இதே டெல்லியில், தொழிலாளர் சங்கங்கள் பல முறை லட்சக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்தின. அதுபற்றி யாரும் பெரிதாக செய்தி வெளியிடவில்லை. அதைப்பற்றிய அக்கறை இல்லை.
தமிழகத்தைப் பொறுத்த வரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் தங்களுக்கு என்று தனித்தனி டி.வி. சேனல்கள் வைத்துள்ளன. தி.மு.க. ஆட்சி நடந்தால், சன் டி.வி., கலைஞர் டி.வி-க்களில் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதாகக் காட்டப்படும். அதே நேரம், ஜெயா டி.வி-யில் தமிழகம் மோசமான நிலையில் இருப்பது போன்று செய்திகள் ஒளிபரப்பாகும். ஆட்சிகள் மாறினால்... காட்சிகளும் அப்படியே தலைகீழாகிவிடும். மொத்தத் தில், தமிழகத்தின் உண்மையான நிலை வெளி உலகத்துக்குத் தெரியாது. எனவே, மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுடன், மக்கள் இயக்கங்கள் மூலம் ஊடகங்கள் உண்மை நிலையை சொல்லக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்!'' என்றார்.
இப்படி ஆக்கபூர்வமான விமர்சனங்களோடு நடந்து முடிந்தது த.மு.எ.ச. மாநாடு!
- எம்.கார்த்தி
 ''வாசிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்துவோம்!''
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் சு.வெங்கடேசன். இதற்கு முன் செயலாளராக இருந்த ச.தமிழ்ச்செல்வன் தலைவரானதைத் தொடர்ந்து இவர் இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த இவர், ஓட்டையில்லாத புல்லாங்குழல், திசையெல்லாம் சூரியன், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதிஉள்ளார். கலாசாரத்தின் அரசியல், ஆட்சித்தமிழ்  ஒரு வரலாற்றுப் பார்வை, சமயம் கடந்த தமிழ், மனிதர்கள் உலகங்கள் நாடுகள் ஆகிய ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன. இவரது 'காவல்கோட்டம்’  என்ற நாவல் பிரபலமானது. இந்த நாவலுக்கு, கனடா தமிழ்ச் சங்க இயல் விருது உட்பட ஆறு விருதுகள் கிடைத்து உள்ளது.
''படைப்பாளர்களை ஊக்குவித்தல், படைப்புகளை கொண்டா டுதல், வாசிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்துதல், மாற்றுப் பண்பாட்டு நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் இன்னும் வீரியத்துடன் எடுத்துச் செல்வது, தமிழக மக்களின் அறச்சீற்றமாக தமுஎச-வின் குரலை எங்கும் எதிரொலிப்பது ஆகியவற்றில் அதிக அக்கறை செலுத்துவேன்!'' என்கிறார் சு.வெங்கடேசன்.
**********************************************************************************
பரஞ்சோதி கவனிக்கிறது இல்லையான்னு கேட்டார் நேரு!

திருச்சி ராணியின் அடுத்த அஸ்திரம்!
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப் பட்ட பரஞ்சோதிக்கு எதிராக, அவரின் இரண்டாவது மனைவி என்று சொல்லிய டாக்டர் ராணி என்பவர் கிளப்பிய பரபரப்பு குறித்து கடந்த இதழில் எழுதி இருந்தோம்.  'அம்மா கோர்ட் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறதோ?’ என்று கட்டுரையை முடித்திருந்தோம். கடந்த புதன்கிழமை பரஞ்சோதியை வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சொன்னதன் மூலம், அவருக்குச் சாதகமான தீர்ப்பையே அளித்திருக்கிறார் ஜெயலலிதா!
'அம்மா கோர்ட்டில்’ என்ன வாதங்களை எடுத்து வைத்தார் பரஞ்சோதி?
இரண்டாவது மனைவி என்று சொல்லிக்கொண்டு ராணி புகார் கிளப்பினார். அதற்கு பரஞ்சோதி சொன்ன விளக்கம், ''இது தி.மு.க.வினரின் தூண்டு தலில் செய்யப்படும் சதி’ என்பதுதான்.  'தி.மு.க. பிரமுகர்கள் யார் யாருடன் எல்லாம் ராணி நெருக்கமாக இருந்தார் என்பதைப்பற்றி, ராணி பணியாற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களை விசாரித்தாலே தெரியும்’ என்று பரஞ்சோதி சொல்லிக்கொண்டு இருந்தார். காரணம், தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ராமஜெயத்துக்கும் இந்த ராணியின் அறிமுகம் இருந்துள்ளதற்கான ஆதாரங்களை பரஞ்சோதி தரப்பினர் திரட்ட ஆரம்பித்தார்கள்.
''நேரு, ராமஜெயம்  கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளிலும் ராணி  பங்கேற்றிருக்கிறார். அவர்களோடு மேடையிலேயே சிரிக்கச் சிரிக்கப் பேசி தனது நெருக்கத்தைக் காட்டி இருக்கிறார். இதெல்லாம் பலர் பார்க்க நடந்த விஷயங்கள். இதை புகைப்பட ஆதாரங்களோடு அம்மாவிடம் விளக்கமாக பரஞ்சோதி எடுத்துரைத்தார். அதை அம்மாவும் ஏற்றுக்கொண்டு, 'எதைப் பற்றியும் கவலைப்படாமல் தேர்தல் பணிகளைக் கவனியுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.  எனவே, வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, அண்ணன் உற்சாகமாகத் தேர்தல் பணிகளில் பிஸியாகிவிட்டார்...'' என்கிறார்கள் பரஞ்சோதியின் ஆதரவாளர்கள்.
பரஞ்சோதியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ராணி கிளப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான விளக்கத்தை நான் சொல்லி உங்கள் பத்திரிகையில் வெளியிட்டுவிட்டீர்களே... அப்புறம் திரும்ப எதற்கு அந்த விவகாரத்தைக் கிளற வேண்டும்? அம்மாவிடம் தி.மு.க-வினர் செய்த சதி வேலைகளை எடுத்துச் சொல்லி, அவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார். தெய் வமே ஏற்றுக்கொண்ட பிறகு மற்றவர்களைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? மக்கள் மன்றத்தில் கூடிய விரைவில் ராணியின் சுயரூபம் தெரிய வரும். அப்போது அனைவரும் உண்மைகளைப் புரிந்துகொள்வார்கள்!'' என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ராணியின் பதில் என்ன?
''நான் திருச்சி அரசு மருத்துவ மனை ஏ.ஆர்.டி. சென்டரில் மெடிக்கல் ஆபீஸராக பணியாற்றினேன். 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 'ரெக்கார்டுகளை ஒழுங்காகப்பராமரிக்கவில்லை’ என்று காரணம் காட்டி என்னை சஸ்பெண்ட் செய்தார்கள். நான் தி.மு.க-வினரோடு நெருக்கமானவள் என்றால், சஸ்பெண்ட் உத்தரவுக்கு ஆளாகி இருப்பேனா? அந்த உத்தரவில் இருந்து மீள்வதற்காகத்தான் முதன் முதலில், நேருவை அவரது அலுவலகத்தில் சென்று பார்த்தேன். விவரங்களைக் கேட்டுக்கொண்டவர், அத்துறை அதிகாரிகளிடம் பேசி முயற்சி செய்வதாகச் சொன்னார். அதன்படியே செய்தும் கொடுத்தார். இது நடந்து முடிந்த பின்னர்தான் பரஞ்சோதியுடனான எனது திருமணம் நடந்தது. நானும் அவரும் கணவன் மனைவியாக வாழ்வது அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் தெரியும்.
இந்நிலையில்தான், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டேன். ஆறு மாதங்கள் அந்தப் பணியில் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில், 'எய்ட்ஸ் விழிப்பு உணர்வு’ தொடர்பான நிகழ்ச்சிகளில் அத்துறை அலுவலர் என்ற முறையில் நானும் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம். அப்படித்தான் இரண்டு முறை நேருவையும், ஒரு முறை ராமஜெயத்தையும் மேடையில் பார்த்துப் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி 'எய்ட்ஸ் விழிப்பு உணர்வு’ தொடர்பாக ஒரு குறும்படம் இயக்கினார். அதன் சி.டி. வெளியீட்டு விழா கலையரங்கம் தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றது. அப்போதைய கலெக்டர் சவுண்டையா, ராமஜெயம் ஆகியோர் அந்த விழாவில் கலந்துகொண்டார்கள். விழாவுக்குச் சென்றிருந்த நான், முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். அதை கவனித்த ராமஜெயம், 'டாக்டர் நீங்களும் வாங்க’ என்று மேடை ஏற்றினார். பரஞ்சோதியின் மனைவி என்று என்னை அறிந்து வைத்திருந்த அவர், 'பரஞ்சோதி நல்லா இருக்காரா? விசாரிச்சேன்னு சொல்லுங்க’ என்றார். இது போலவே 'எய்ட்ஸ் விழிப்பு உணர்வு’ தொடர்பான வேறு இரண்டு நிகழ்ச்சிகளில் நேருவை சந்தித்தேன். அவரும் அதுபோலவே, 'என்ன இளைச்சுப் போயிட்டீங்க? பரஞ்சோதி சரியா கவனிக்கிறதில்லையா?’ என்று விசாரித்தார். இந்த சந்தர்ப்பங்களைத் தவிர நேரு மற்றும் ராமஜெயத்தை நான் சந்தித்ததே இல்லை. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத்தான் எனக்கு எதிரான ஆதாரமாகப் பயன்படுத்தி வருகிறார் பரஞ்சோதி.
ஸ்ரீரங்கம் தொகுதிப் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்படு வதற்கு முந்தைய ஆறு மாதங்கள், அவரது செல்போன் பில்களை ஆராய்ந்து பார்த்தால், அவர் என்னுடன் எத்தனை முறை பேசி இருக்கிறார் என்பது தெரிய வரும். எந்தத் தொடர்பும் இல்லாத என்னுடன் அத்தனை முறை பரஞ்சோதி பேச வேண்டிய அவசியம் என்ன? அவரிடம் மட்டும் விசாரித்து விவரங்களைக் கேட்டுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, நான் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தால், என் தரப்பு வாதங்களையும் எடுத்து வைத்திருப்பேனே? இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. என்னை சந்திக்க முதல்வர் ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கினால் போதும். எனது தரப்பு வாதங்களை எடுத்துவைக்க வாய்ப்பாக அமையும். செய்வாரா முதல்வர்?'' என்றார் ராணி.
விவகாரம் போகும் போக்கைப் பார்த்தால், இப்போதைக்கு ஓயாதுபோல் இருக்கிறது!
**********************************************************************************
ஐ.நா.வை முற்றுகை இட்ட ஈழத் தமிழர்கள்!

''எங்களுக்கு எப்போது தீர்வு?''
ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. முற்றத்தில், கடந்த 19-ம் தேதி 10 ஆயிரம் ஈழத் தமிழர்கள் ஒன்றுதிரண்டு 'பொங்கு தமிழ்’ நிகழ்வு நடத்தி பெரும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு, புலிப்போராளிகளால் ஈழத்தில் தொடங்கிவைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, பொதுவான தரப்பினரையும் 'போராட்ட’த்தின் பக்கம் கொண்டுவந்தது. தொடர்ந்து ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா என புலம்பெயர் தமிழர்கள் வாழும் அனைத்து கண்டங்களிலும் ஆண்டுதோறும் பொங்குதமிழ் நிகழ்வு பெரும் எழுச்சியுடன் நடத்தப் பட்டு வந்தது. முள்ளிவாய்க்கால் போருக்குப் பிறகு எல்லாமே மாறிப்போனது.
இந்த சூழலில், 'இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றம்பற்றி  19-ம் தேதி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்  விவாதிக்கப்படும்’ என அறிவிக்கப்பட, அதே நாளில் 'தமிழர் ஒருங்கிணைப்புக் குழு’ பொங்குதமிழ் நிகழ்வுக்கு அழைப்புவிடுத்தது. ஈழத்தின் ஈரக்குலையை அறுத்த இறுதிப் போரை நிறுத்தக் கோரி, ஜெனீவாவில் உள்ள ஐ.நா. முற்றத்தில்தான் ஈழத் தமிழரான முருகதாசன்  உயிர்நீத்தார். அதன் பிறகு, ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அந்த  இடம் 'முருகதாசன் சதுக்கம்’.  ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 18-வது கூட்டத்தொடர் தொடங்கியநிலையில், அந்த சதுக்கத்தில் 10 ஆயிரம் ஈழத் தமிழர்கள் திரண்டனர்.
இதற்காக பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நார்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம் என ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும், பேருந்து களில் கூட்டம் கூட்டமாக சுவிஸில் மக்கள் திரண்டனர். பங்கேற்பாளர்களின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க, ஒருகட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாது என, மற்ற நாடுகளில் இருந்து வந்த பேருந்துகளை சுவிஸ் போலீஸார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இப்படி, ஜெர்மனியில் இருந்து வந்திருந்த மூன்று பேருந்துகளை நகரின் எல்லைக்குள் விடாமலேயே திருப்பி அனுப்ப, வந்தவர்களுக்கோ பெருத்த ஏமாற்றம்!
பெருங்கூட்டத்துடன் ஜெனீவா ரயில் நிலையம் அருகில் உள்ள பூங்கா முன்பு பிற்பகலில் தொடங்கிய பேரணி, ஐ.நா. முற்றத்தில் உள்ள முருகதாசன் சதுக்கத்தில் முடிவடைந்தது. 2 கி.மீ. தொலைவைக் கடப்பதற்கு ஒரு மணி நேரம் ஆனது. கொட்டிய மழையை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் முன்னோக்கிச் சென்றபடி இருந்தது தமிழர் கூட்டம். பிரிட்டன் குர்சால் உள்ளாட்சிப் பிரதிநிதி பிளைன்ராபின், பிரான்ஸில் இருந்து வந்திருந்த மேயர் ஸ்டீபன்கேட்டினன் ஆகியோர், ஈழத்துக்கான நியாயத்தைப் பேசியபோது கூடியிருந்தவர்களிடம் பெரும் உற்சாகம்! ஜெர்மனிவாழ் சிங்களரான மனித உரிமை ஆர்வலர் விராஜ் மென்டிஸின் வருகை, நிகழ்வில் நெகிழ்ச்சியை ஊட்டியது.
முத்துக்குமார், முருகதாசன், செங்கொடி உள்பட்ட 21 தமிழினத் தியாகிகளுக்கும் ஐ.நா. முற்றத்தில் ஈகச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத் தப்பட்டது. ஐ.நா. பொதுச் செயலர் பான்கிமூனின் செயலாளரைச் சந்தித்த போராட்டக் குழுவினருடன் மற்ற இனத்தவரும் உடன்சென்றது, ஐ.நா. அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நம்மிடம் பேசிய நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் நார்வே எம்.பி-யான டாக்டர் சிவகணேசன், ''அரசியல் நீதிப்படியும், ஐ.நா-வின் சட்ட திட்டப்படியும் எங்களின் ஈழத் தாயகம் மீட்டுத் தரப்பட வேண்டும். முள்ளிவாய்க்கால் கொடூரத்துக்குப் பிறகு, ஈழம்தான் எங்கள் லட்சியம் என்பதை மீண்டும் உறுதியாகக் காட்டவே இந்த நிகழ்வு!'' என்றார்.
பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை பிரதிநிதியான சிவகுரு பாலச்சந்திரன், ''பல இனங்களை ஒருங் கிணைக்க சமயங்கள் இருக்கின்றன. தமிழர்களை ஒன்றுபடுத்த மட்டும் எந்த மதமும் இல்லை. எங்களை நாங்களே ஒற்றுமைப்படுத்திக்கொள்ளும் அவசியம் இருக்கிறது. கருத்துவேறுபாடுகளைக் கடந்து, எங்களை நாங்களே சுத்தப்படுத்திக்கொள்ளவும், மீள் எழுச்சிக்கொள்ளவும் 18 ஆண்டுகளாக 'மாவீரர் வீரவணக்க’ நிகழ்வை உணர்வெழுச்சியுடன் நடத்தி வருகிறோம். இந்த நிலையில், சிங்கள இனவெறி அரசு, சில குள்ளநரிகளை உருவாக்கி, மாவீரர் வணக்க நாளை குலைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இது எங்கள் தேசிய ஆன்மாவின் மீது நடத்தப்படும் தாக்குதல். எனவே, முளையிலேயே இதைக் கிள்ளி எறிய வேண்டும் என்பதற்காகவே, பொங்குதமிழ் நிகழ்வுகளில் தீவிரமாகி இருக்கிறோம்!'' என்று அதிர்ச்சியூட்டியபடி சொன்னார்.
''ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் இந்தக் கூட்டத்தில் தீர்வு கிடைக்காதபட்சத்தில், மீண்டும் மார்ச்சில் நடக்கும் கூட்டத்தின்போதும், பொங்கு தமிழ் நிகழ்த்துவோம். போராடுவது ஒன்றுதான் ஈழத் தமிழ்ச் சமூகத்துக்கு உள்ள ஒரே வழி எனும் போது, தொடர்ந்து அதை செய்துகொண்டே இருப்போம். தாயகத்தில், தமிழகத்தில், தமிழர் வாழும் நிலங்களில் எல்லாம் இதே உணர்வுநிலை நீடிக்க வேண்டும்!'' என ஆதங்கப்பட்டார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுவிஸ் சிவ லோகநாதன். குட்டி நாடான சுவிட்சர்லாந்தில் 10 ஆயிரம் பேர் திரண்டு பொங்கிய தமிழ் நிகழ்வானது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு புதிய டானிக்.
ஈழத் தமிழர்களின் ஆன்ம பலத்தைக் காட்டும் இது போன்ற நிகழ்வுகளுக்கு பலன் கிடைக்கும் காலம் எப்போது வரும்?
**********************************************************************************
எங்க குடும்பம் அனுபவிச்சதைவிட பல மடங்கு அவங்க அனுபவிப்பாங்க!

சிறை வாசலில் சாபம் போட்ட அனிதா
தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் நில அபகரிப்பு வழக்குகளில் கைதாகி சிறைக்குப் போக... திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வான அனிதா ராதாகிருஷ்ணனும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த மாதம் 10-ம் தேதி கைது செய்யப்பட்ட அனிதாவை ஜாமீனில் வெளியில் கொண்டு வருவதற்காக மறுநாளில் இருந்தே அவர் தரப்பு வழக்கறிஞர்கள் போராடினர். ஆனால், போலீஸாரோ, அதற்கு முட்டுக்கட்டை போட்டதோடு அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தனர்.
இருந்தும், தடைகளை மீறி கடந்த 17-ம் தேதி ஒருவழியாக ஜாமீனில் வெளி வந்துவிட்டார் அனிதா ராதாகிருஷ்ணன். வெளியே வந்த கையோடு, கடந்த 19-ம் தேதி தன் 59-வது பிறந்த நாள் விழாவை சென்னையில் கொண்டாடிவிட்டு ஊர் திரும்பினார். அவரை சந்தித்தோம்.
''ஆட்சியா இது?! பழிவாங்கும் புத்தியும், அரசியல் காழ்ப்பு உணர்ச்சியும் நிறைந்தவர்களின் ஆட்சியில் வேறு என்ன நடக்கும்? அந்த வகையில்தான் என்னையும் கைது செய்தனர். இருந்​தாலும், என் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் பொய் வழக்கு என நிரூபிப்பேன்...'' என்றபடி நமது கேள்வி​களை எதிர் கொண்டார்..
''ஜெயில் அனுபவம் எப்படி இருந்தது?''
''அமைச்சராக இருந்தவர்கள், எம்.எல்.ஏ-க்​களாக இருப்பவர்கள் என்கிற மரியாதை  துளி அளவும் இல்லாமல், உள்ளே எங்களை துன்பப்படுத்தினார்கள். எங்களைப் பார்க்க வருபவர்​களைக்கூட, மற்ற கைதிகளோடு கூட்டமாக நின்றுதான் பார்த்தோம். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் எங்களைத் தாக்கி இருக்கவும் வாய்ப்பு இருந்தது. அந்த நிலைமையை போராடித்தான் மாற்றினோம். அதுபோல், முதல் வகுப்பில் இருப்போருக்கு அதற்குத் தகுந்த மேஜை நாற்காலிகளை தரவில்லை. நோய்வாய்ப்பட்டு இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம்கூட தரையில்தான் படுத்துத் தூங்கினார். மருத்துவ வசதி கிடையாது. வேண்டும் என்றே டார்ச்சர் கொடுத்தார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்காகக் கைதாகி நாங்கள் ஜெயிலில் இருந்தபோது எங்கள் குடும்பம் அனுபவித்த துன்பத்தைவிட, பல மடங்கு துன்பத்தை ஆண்டவன் 'அவர்களுக்கு’க் கொடுப்பான். மற்றவர்களைப்போல் நாங்கள் வருடக்கணக்கில் வாய்தா வாங்க மாட்டோம். மக்கள் மன்றம் இதை எல்லாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது!''
''உங்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் நிறைய சிரமங்கள் இருந்ததாகச் சொல்கிறார்களே?''
''என் மீது போடப்பட்ட வழக்கில் நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். இருந்தாலும், என்னை அதிக நாட்கள் சிறையில் வைத்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான், ஜாமீன் கிடைக்கவிடாதபடி தொடர்ந்து தடுத்து வந்தனர். கைது செய்தபிறகு புதிதாக இரண்டு வழக்கைப் பதிவு செய்த போலீஸார், இழுத்தடிக்கவே ஒரு வழக்கை பெண்டிங் வைத்து 19-ம் தேதி பதிவு செய்தார்கள். இதில் பெரிய கூத்து... பதிவு செய்யப்படாத அந்த வழக்கின் பெயரைச் சொல்லி 16-ம் தேதியே 'கஸ்டடி’ கேட்டார்கள். இதை, நீதிமன்றம் மறுத்ததோடு, கண்டித்தது. மற்றவர்களைவிட என்னை கஸ்ட​டியில் எடுத்து விசாரிக்க ரொம்பவும் அக்கறைப்பட்டார்கள். அப்படி இப்படி என்று ஏதாவது அவதூறு பரப்ப... பேப்பரில் எழுதிவைத்துக்​ ​கொண்டு என்னிடத்தில் கையெழுத்து வாங்க போலீஸார் பாடுபட்டார்கள். ஆனால், என் பக்கம் நியாயம் இருந்ததால் அவர்கள் தோற்று​விட்டனர் என்பதுதான் உண்மை.''
''அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறிய​போது உங்கள் வசம் முக்கியமான சில சொத்துகள் இருந்தன. அந்தச் சொத்துகளைப் கைப்பற்றவே போலீஸ் கஸ்டடி கேட்டார்கள், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது... என்கிறார்​களே?''
''ஆளும் கட்சி கிளப்பிவிடும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்!
குலசேகரபட்டினத்தில் 2009-ம் வருஷம், அ.தி.மு.க-வினர் கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக என் மீது வழக்கு தொடரப்படும் வாய்ப்பு உள்ளதாகவும், வழக்குப் பதிவு செய்யப்பட இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அதில் என் பெயர் கிடையாது. அதிலும் என் பெயரைச் சேர்த்தால் அதையும் தகர்த்தெறிந்து வெளியில் வருவேன்.''
''சிறையில் இருந்து வெளியே வந்தபோது தி.மு.க-வினர் யாரும் உங்களை வரவேற்க வரவில்லையே?''
''நான்தான் வரவேண்டாம் என்று சொன்​னேன். அவர்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? நமது கஷ்டம் நம்மோடு இருக்கட்டுமே!''
''சிறையில் உங்களை அழகிரி, ஸ்டாலின் உட்பட பலரும் வந்து பார்த்தார்கள். ஆனால், மாவட்டச் செயலாளர் தூத்துக்குடி பெரியசாமி வந்து பார்க்கவில்லையே... வருத்தம் இருக்கிறதா?''
''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இனிமேல் என் தொகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வறுமையில் உள்ள ஏழைக் குடும்பங்களோடு தங்கி, அவர்கள் தரும் சாப்பாட்டை சாப்பிட்டு அவர்களின் குறைகளைக் கேட்பேன். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் பாடுபடுவேன்...'' - என்று மட்டுமே உள்கட்சி குறுகுறுப்புக்கு பதிலாகக் கொடுத்துவிட்டு,  கை காட்டி நமக்கு விடை கொடுத்தார் அனிதா ராதாகிருஷ்ணன்!
**********************************************************************************
கிரானைட் கொள்ளை!

தீர்ப்பில் தெரியும் திகீர் உண்மைகள்!
துரை மாவட்டத்துக்கு சமீபத்தில் வந்தார், தொழில் துறை அமைச்சர் வேலுமணி! மேலூரை அடுத்த கீழையூர் மற்றும் கீழவளவு கிரானைட் குவாரிகளுக்கு விசிட் அடித்த அவர் அளித்த பேட்டியில், '' வெட்டி எடுத்த கிரானைட் கல்லில் 10 சதவிகிதத்தை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, பாக்கி 90 சதவிகிதத்தை மறைத்துள்ளார்கள்!'' என்று சொல்லித் திடுக்கிட வைத்தார்! இதுபற்றி மேலும் நாம் விசாரித்தபோது, ஏற்கெனவே இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு குறித்த சில விவரங்கள் கிடைத்தன. எஸ்.முருகேசன் என்பவர் தாக்கல் செய்த ஒரு மனு மீது நீதியரசர் சந்துரு தீர்ப்பு கொடுத்திருந்தார். பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் அந்தத் தீர்ப்பில்!
சுரங்கத் துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், சுரங்கத் துறை துணை இயக்குநர், மதுரை மாவட்ட பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கு எதிராகத்தான் முருகேசன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இனி, முருகேசனின் மனு விவரம்... 'மதுரை மாவட்டத்தில் 22 கிரானைட் சுரங்கம் தோண்ட பி.ஆர்.பி. நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. 2004-05-ம் ஆண்டு முதல் 2007-08 வரையில், மிக அதிக அளவில் கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். இதில்தான் முறைகேடுகள் நடப்பதாக சுரங்கத் துறை ஆணையருக்கு மனு அனுப்பினேன். இந்தப் புகார் தொடர்பாக விசாரிக்கக் கோரியும், இருப்பு உள்ள மற்றும் ஏற்றுமதி செய்யப்படுகின்ற கிரானைட் கற்கள் பற்றி விரிவான அறிக்கை ஒன்றை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், எந்தவிதமான விசாரணையும் மாவட்ட ஆட்சியரால் செய்யப்படவில்லை. அதன் பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2004-05 முதல் 2007-08 வரையிலான காலகட்டத்தில் இவர்கள் ஏற்றுமதி செய்த விவரங்களைப் பெற்றபோது, ஏற்றுமதிக் கற்களின் கனஅளவு 69490.188 கியூபிக் மீட்டர் என்று தெரிந்தது. கூடவே, சுங்கவரித் துறையில் இருந்தும் அறிக்கை பெற்றதில், மேற்சொன்ன காலகட்டத்துக்குள் ஏற்றுமதி செய்யப்பட்ட கிரானைட் கற்களின் கனஅளவு 114543.008 கியூபிக் மீட்டராக இருந்தது.
இதைத் தொடர்ந்து முதல் அமைச்சரின் குறைகேட்புப் பிரிவுக்கு ஒரு புகாரை அனுப்பினேன். சிறப்புக் குழு ஒன்றை நியமித்து, இந்தக் கணக்குகளை விசாரிக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீண்ட காலதாமதத்துக்குப் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்சொன்ன காலகட்டத்துக்கு உரிய கணக்குகளை சமர்ப்பிக்கச் சொல்லி பி.ஆர்.பி. நிறுவனத்துக்குத் தகவல் அனுப்பினார்.
கடைசியில், ஒவ்வொருவரும் கொடுத்த கியூபிக் மீட்டர் கணக்குகளில் ஏராளமான வித்தியாசங்கள்... ஏற்றுமதி செய்தது குறித்து சுரங்கத் துறையே இரு வேறு அறிக்கைகளை வழங்கி இருக்கிறது. மீண்டும் புதிய விசாரணை வேண்டும்!’ என்கிறது அந்த மனு.
இதைத் தொடர்ந்து, ''முருகேசன் மனு மீது விசாரணை செய்யப்பட்டது. அவர் சொல்வதில் உண்மை இல்லை!'' என்று மதுரை மாவட்ட ஆட்சி யர் பதில் சொன்னார். ''கியூபிக் மீட்டர்களைக் கணக்கிடுவது குறித்து மனுதாரர் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணத்தில் வடிவமைப்புத் தவறுகள் உள்ளன. சதுர அடியை கியூபிக் மீட்டராக மாற்றுவதில் தவறு உள்ளது. இந்தத் தவறுகளின் காரணமாக, உண்மையான ஏற்றுமதி குறித்த தகவல்கள் ஏய்க்கப்பட்டிருப்பதாகக் காட்டப்பட்டு இருக்கிறது...'' என்று பி.ஆர்.பி. நிறுவனமும் பதில் அளித்தது.
இது தொடர்பாக விசாரித்த நீதிபதி சந்துரு அளித்த தீர்ப்பு விவரம், இந்த விவகாரம் பற்றிய முழு பரிமாணத்தைக் காட்டுகிறது...
''இந்த வழக்கில் பி.ஆர்.பி. நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன், சதுர அடியில் இருந்து கியூபிக் மீட்டருக்கு மாற்றும் கணக்கு களின் மீதான புகாரில் இருக்கும் முரண்பாடுகளை விளக்கினார். எந்த ஓர் இழப்பும் இல்லை என்று நிரூபிக்க முயன்றார். மாவட்ட ஆட்சியரோ தன்னுடைய எதிர் உத்தரவில் இருக்கும் விளக்கத்தின் அடிப்படையிலேயே நின்று எந்த ஓர் இழப்பும் ஏற்படவில்லை என்ற கருத்தை முன்வைத்தார்.
இந்த வழக்கில், மனுதாரர் ஒரு தனிநபர். பெரிய அளவில் நடந்திருக்கும் வருமான ஏய்ப்பை வெளிக்கொண்டுவர தகுந்த அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரை மனுதாரருக்கும் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கும் இடையே உள்ள சொந்தப் பிரச்னையாக மாவட்ட ஆட்சியர் கருதி இருக்கிறார். அவரே நடுவராக அமர்ந்து இந்த வழக்கை விசாரித்திருக்கிறார். அவர் பிறப்பித்த எதிர் உத்தரவை கவனமாகப் பார்க்கும்போது, ஒவ்வொரு பத்தியும் பி.ஆர்.பி. நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே இருக்கிறது. குவாரி உள்ள இடத்துக்கே சென்று விசாரணை மேற்கொள்வது பற்றியோ மற்றும் லாபப் பங்காகச் செலுத்தப்படும் கட்டணம் பற்றியோ எந்த ஒரு சுயமான முயற்சியையும் ஆட்சியர் மேற்கொள்ளவில்லை.
சட்டத்துக்குப் புறம்பான ஒரு விஷயம் நடப்பதாக பொது அதிகாரத்திடம் ஒரு நாட்டின் குடிமகன் புகார் கொண்டுவந்தால், அதை ஒரு மதிப்பு வாய்ந்த உள்ளீடாகக் கொண்டு விசாரணை நடத்தவேண்டும். குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மையை விசாரித்து அறிந்து, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சுரங்கக் குத்தகை நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால், தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இதற்காக ஆட்சியர், வணிக வரித்துறை, உள்நாட்டு வரித்துறை மற்றும் மத்திய சுங்க வரித்துறை ஆகியவற்றின் தகவல்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்.
குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் கிரானைட் சுரங்கத் தோண்டுதல்கள் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர் விவரம் கோரியபோது, 'தங்களுடைய அலுவலகத்தில் அப்படியான விவரங்கள் எதுவும் இல்லை. அத்தகைய விவரங்களைத் தர இயலாது’ என்று தன் இயலாமையை சுரங்கத் துறை கூறியிருக்கிறது. உண்மையான ஏற்றுமதி பற்றி விளக்க, சுங்கத் துறையிடம் இருந்து பெறப்பட்ட விவரத்தில் மனுதாரர் சுட்டிக்காட்டிய பல்வேறு ஒழுங்கீனங்களுக்குத் திருப்தியான பதில் அளிக்கப்படவில்லை. சட்டத்துக்குப் புறம்பான கிரானைட் ஏற்றுமதியால், மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக எந்த ஒரு விசாரணையையும் மேற்கொள்வதில் இருந்து மாவட்ட ஆட்சியர் தவறி இருக்கிறார்...'' என்று தீர்ப்பில் நெத்தியடி வார்த்தைகளை எழுதி உள்ளார் நீதிபதி சந்துரு!
இந்த தீர்ப்பு குறித்து அப்பீல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த வழக்கு விவரங்களைத் தோண்டி, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ரெடியாகிறது, இன்றைய ஆளும் மேலிடம்.
**********************************************************************************
தேடுதல் வேட்டையில் பலியான இருவர்...

போலீஸ் மீது புதுக் குற்றச்சாட்டு...
ந்தக் கறுப்பு ஞாயிறில், பரமக்குடியில் 7 உயிர்கள் பறிபோன பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில்... போலீஸாரின் தேடுதல் வேட்டையால் மேலும் இரு உயிர்களும் பலியானதாகப் புதுப் பதற்றம்!
கடந்த 11-ம் தேதி பரமக்குடியில், இம்மானுவேல்சேகரன் குருபூஜை விழாவுக்கு வந்தவர்கள் திடீர் மறியலில் இறங்கினார்கள். 'ஜான்பாண்டியனைக் கைது செய்துவிட்டார்கள்’ என்று பரவிய செய்தியைத் தொடர்ந்து அந்தப் பரபரப்பு தொடங்கியது. கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிப் பிரயோகத்தில் இறங்கியது போலீஸ். இதில் ஆறு பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் இரு தரப்பிலும் பலருக்கும் காயம். அரசு மற்றும் தனியார் வாகனங்கள் பல தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து, 'கலவரத்தில் ஈடுபட்டார்கள்’ என 2,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ். அதில் 21 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களைத் தேடி கிராமம் கிராம​மாகச் சென்று போலீஸார் சல்லடை போட... இந்தத் தேடுதல் வேட்டையால் தொளுவளூர் வேலு, களக்குடி காளியப்பன் ஆகிய இருவர் பலியானதாக தற்போது புகார் சொல்லப்​படுகிறது!
தொளுவளூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதனை சந்தித்தோம். ''கடந்த 11-ம் தேதி ராத்திரி எங்க கிராமத்தினரைத் தேடி போலீஸ் வருதுன்னு தகவல் சொன்னாங்க. ஊருக்குள்ள இருந்த ஆம்பளைங்க எல்லாரும் பக்கத்துல இருக்குற காட்டை நோக்கி ஓடுனோம். இருட்டுல வாய்க்கா எது, வரப்பு எதுன்னுகூட பாக்காம வேகமா ஓடினதில், எங்​களோட ஓடிவந்த வேலு, கால் இடறி வரப்புல இருந்து வயலுக்குள்ள விழுந்துட்டாரு. தூக்குனப்ப, மூச்சுப் பேச்சில்லாமக் கிடந்தாரு. ஊருக்குள்ள கொண்டுபோய், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் சொல்லி, வந்து பார்த்தப்பதான் அவர் இறந்துபோயிட்டது தெரிஞ்சது. கலவரத்துக்கு சம்பந்தமே இல்லாத எங்க ஊருக்கு போலீஸ் வந்த பதற்றத்தாலதான் இப்ப வேலுவோட குடும்பம் அநாதை ஆயிருச்சி!'' என்றார் சோகமாக.
இதே போல் போலீஸ் தேடுதல் வேட்டையால், காட்டில் மறைந்திருந்த காளியப்பன் என்பவர் பாம்புகடித்துப் பலியானார். இவர் களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். நாம் அங்கே சென்றபோது, ஆண்கள் யாருமே ஊருக்குள் இல்லை. காளியப்பனின் வீட்டை அடைந்தோம். அவரது மூத்த மனைவி காளியம்மாளையும் மகள் நாகவள்ளியையும் சந்தித்தோம்.
''எங்கப்பாவுக்கு ரெண்டு சம்சாரம். மூத்தவங்க எங்கம்மா. அன்னிக்கு, 'நம்மூரு ஆம்பளைகளத் தேடி போலீஸ் வருது’ன்னு தகவல் கிடைச்சதும், காட்டுப் பக்கமா ஊர்க்காரங்க ஓடுனாங்க. எங்கப்பாவும் அவங்களோட ஓடினாரு. ஆனா, மறுநாள் வரை எங்கப்பா வீட்டுக்கு வராததால, தேடினோம். அப்பதான் அவர் ஒரு கண்மாய்க்குள்ள இறந்து கிடந்தது தெரிஞ்சுது. அவரோட கழுத்துல பாம்பு கடிச்சதுக்கான அடை​யாளம் இருந்திச்சு. எங்க குடும்பத்துல அப்பாவைத் தவிர எல்லாருமே பொம்பளைகள். கூலி வேலை செஞ்சு காப்பாத்துன அவரும் இப்ப இல்லை. ஏதாவது எங்களுக்கு உதவி செய்யுங்க...'' எனக் கதறினார், நாகவள்ளி.
இந்த சம்பவங்கள் குறித்து ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராயிடம் கேட்ட​போது, ''இந்த நியூஸை கேள்விப்​பட்டு, உடனடியா எஸ்.பி-கிட்ட கேட்டேன். போலீஸார் கிராமங்களுக்குப் போனப்ப அப்படி எதுவும் நடக்கலைங்​கறாங்க. போலீஸ்காரங்க வர்றதைக் கேள்விப்பட்டு ஓடினப்ப யதார்த்தமாக இந்த சம்பவங்​கள் நடந்திருக்கலாம். இனி போலீஸார் கிராமத்தினருக்குத் தொந்தரவு கொடுக்க​மாட்டாங்க...'' என்று வாக்குறுதி கொடுத்தார்.
கலவரத்துக்குப் பிந்தைய இருட்டு மேகங்களை விரட்டுவதில் கவனமும் பக்குவமும் காட்டட்டும் காவல் துறை!
இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி
''மதம் மாறிடுவோம்''
பரமக்குடி-மதுரை சாலையில் 10 நிமிடப் பயணத்தில் வருகிறது, எச்.பரளை கிராமம். அங்கு, கடந்த 18-ம் தேதி மாலை மூன்று வாகனங்களில் வந்த, காவல் துறையினர் நடத்திய 'ஒத்திகை’ (?) சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது!
அந்தக் கிராமத்துக்குச் சென்றபோது, மக்கள் கொதிப்புடன் இருந்தனர். நம்மிடம் பேசிய நாகவள்ளி என்பவர், ''பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு ஊரில் ஆண்கள் தங்குவது இல்லை. அன்னிக்கு வந்த போலீஸ், 'ஒத்திகை பார்க்கப் போறோம்’னுட்டு, பொம்பளைங்களை வீட்டுக்குள் அனுப்பிட்டாங்க. பிறகு ஊரில் இருந்த கொடிக்கம்பத்தில் எங்க கட்சிக் கொடிகளைக் கழட்டி, மஃப்டியில் வந்த போலீஸ்காரங்க தலையில் சுத்திக்கிட்டாங்க. ஒரு பக்கம் அவங்க... இன்னொரு பக்கம் யூனிஃபார்ம் போலீஸ்காரங்க, கையில் பெரிய பெரிய பிரம்புத் தடுப்பு வெச்சிருந்தாங்க. மஃப்டிக்காரங்க ஊருக்குள்ள நின்னு போலீஸ்காரங்களைப் பார்த்து கல் வீச... போலீஸ்காரங்க தடுப்பால தடுத்தாங்க. 'போலீஸ் ஒழிக’ன்னு சத்தமா கோஷம் போட்டுக்கிட்டே முன்னாடி பாய்ஞ்சாங்க மஃப்டிக்காரங்க. மூணு கேமராவால வீடியோ வேற எடுத்தாங்க. சந்தேகப்பட்டு சிலர் கேட்டப்ப, 'கலவரம் நடந்தால் என்ன செய்வதுன்னு ஒத்திகை பார்க்கிறோம்’னு போலீஸ் சொன்னுச்சி. அந்த வீடியோ காட்சிகளை வெச்சு, உண்மையாக எங்க கிராம மக்கள் கலவரத்தில் ஈடுபட்டாங்கன்னு சொல்றதுக்கா?!'' என்று கொதித்தார்.
''இப்படியே போனா, எங்க கிராமத்தினரும் மொத்தமா மதம் மாறிடுவோம்!'' என்றார், பாபு என்கிற கிராமவாசி.
''பாதுகாப்பு ஏற்பாடுகளில் நாங்கள் இருக்கிறோம். அதை குறை சொன்னால் எப்படி?'' என்று போலீஸ் தரப்பு கேட்கிறது!
சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கத்தானே போலீஸ் ஒத்திகை... மாறாக மக்களை மிரட்டுவதற்கா?
**********************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010